யாரிசைக்க வருகுவதோ? – சில கேள்விகள்

அண்ணாகண்ணன்
யாரிசைக்க வருகுவதோ? – ஒலி யாழினின்று வருகுவதோ? என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். 2022ஆம் ஆண்டு வெளியான ஹே சினாமிகா படத்தில் கோவிந்த் வசந்தா இசையில், மதன் கார்க்கி வரிகளில், பாம்பே ஜெயஸ்ரீ குரலில் வெளிவந்துள்ளது. மிக இனிய இசை, நெகிழச் செய்யும் வரிகள்.
பாரதியாரின் எங்கிருந்து வருகுவதோ – ஒலி யாவர் செய்குவதோ? என்ற பாடலின் தாக்கம், இந்தப் பாடல் முழுவதும் வெளிப்படுகிறது.
குன்றினின்றும் வருகுவதோ எனப் பாரதி கேட்பதை, மாமலையின் மீதிருந்தோ? என மதன் கார்க்கி கேட்கிறார். காற்றைக் கொண்டு தருகுவதோ எனப் பாரதி கேட்பதை, காற்றிலேறி வருகுவதோ? என மதன் கார்க்கி கேட்கிறார். யமுனை அலை பற்றிப் பாரதி கேட்க, கடல் அலை பற்றி மதன் கார்க்கி கேட்கிறார். ஆயினும் நாணறுந்த இன்பமெலாம் நானருந்த வருகுவதோ? என்ற மதன் கார்க்கியின் வரியை நான் மிகவும் ரசித்தேன்.
இதன் பல்லவியில் ஒலி எங்கிருந்து வருகிறது என்று கேட்ட பிறகு, மாமலையின் மீதிருந்தோ? – வெள்ளி மாகமதன் மீதிருந்தோ? எனக் கேட்கிறார். வெள்ளி மாகம் என்பது எதைக் குறிக்கிறது? மாகம் என்பதற்கு மேலிடம், ஆகாயம், சுவர்க்கம், திக்கு, மேகம் எனச் சில பொருள்கள் அகராதியில் உள்ளன. மேகம் எனக் குறிப்பிட விரும்பினால் நேரடியாக வெள்ளி மேகமதன் மீதிருந்தா என்றே கேட்டிருக்கலாம். மாகம் என முற்றிலும் புதிய சொல் தேவையில்லை. வெள்ளி என்பதுடன் இணைத்துப் பார்த்தால், வெள்ளி ஆகாயம் என்பதே பொருளமைதியுடன் உள்ளது. இதைத்தான் மதன் கார்க்கி சொல்ல விரும்புகிறாரா?