Blog

  • பழகத் தெரிய வேணும் – 56

    பழகத் தெரிய வேணும் – 56

    நிர்மலா ராகவன்

    கற்பனையும் தசைநார்களும்

    `ஆனாலும், நீ ஒரே உணர்ச்சிக் குவியல்!’

    சிலர் இப்படியொரு கண்டனத்திற்கு ஆளாவார்கள். உணர்ச்சியே இல்லாதிருக்க மனிதர்களென்ன மரக்கட்டைகளா?

    நான்கு வயதுச் சிறுவன் தானே பேசிக்கொள்வது ஓயாது எழும் கற்பனைக்கு வடிகால். மற்றும் சில குழந்தைகள் சுவற்றிலோ, காலிலோ கிறுக்கித் தள்ளுவார்கள்.

    சில குழந்தைகள் தானே பேசிக்கொள்வார்கள்.

    இம்மாதிரியான குழந்தைகளைக் கேலியாகப் பார்ப்பவர்களுக்குத்தான் குழந்தைகளின் சுபாவம் புரியவில்லை. எழுதவோ, படிக்கவோ தெரியாத அவ்வயதில் தமக்குத் தோன்றியதைத் தெரிந்தவிதத்தில், பிடித்தவகையில்,  வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

    ஏளனம் செய்யாது வளர்க்கப்பட்டால், பெரியவர்களானதும், `இவர்களது கற்பனைக்கு எல்லையே கிடையாதோ!’ என்ற பிரமிப்பு எழும். குழந்தைகளைப்போல் புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வம் என்றென்றும் குறையாது நிலைத்திருக்கும்.

    பேச்சைக் குறை

    நம் ஒவ்வொருவருக்கும் கற்பனைத்திறன் இயற்கையாக அமைந்திருக்கும். ஆனால் அதில் திளைத்திருக்க தனிமையும், சந்தடியற்ற  அமைதியும் அவசியம்.

    தனிமை வேண்டாத எண்ணங்களுக்கு இடம்கொடுக்கிறது என்று அஞ்சி, பிறருடன் ஓயாமல் பேசுகிறவர்கள் தம் கற்பனைத்திறனைப் பயன்படுத்துவது குறைவு. எதிரில் எவரும் இல்லாவிட்டால், தொலைபேசி. அதுவும் முடியாவிட்டால், இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி.

    ஒரு முறை, பரீட்சை முடிந்த உற்சாகத்தில் நான் பேசினேன், பேசினேன், பேசிக்கொண்டே இருந்தேன். வீட்டில் மற்றவர்களுக்குதான் தலைவலி. `என்ன இப்படிப் பேசறா!’ என்று சலித்துக்கொண்டார்கள்.

    “அவ கையிலே ஒரு புத்தகத்தைக் குடு,” என்று அம்மா ஒரு வழி சொன்னாள்.

    அதன்பின் ஏன் பேசுகிறேன்! கற்பனையில் பல உலகத்திற்குப் போய், பலதரப்பட்ட மனிதர்களுடன் உலா வந்தேன்.

    படிக்கும் பழக்கம்

    சிலர் பொழுதைக் கழிக்க எப்போதாவது படிப்பார்கள். சிலருக்கு தூக்கத்தை வரவழைக்க இது ஒரு உத்தி. அவ்வளவுதான்.

    இடைநிலைப் பள்ளியில் விஞ்ஞானம் போதித்த ஆசிரியை எங்களுக்கு ஏதாவது எழுத்துவேலை அளித்துவிட்டு, ஆங்கில நாவலில் ஆழ்ந்திருப்பது வழக்கம். அவ்வப்போது நாங்கள் ஆசிரியை பக்கம் பார்த்துவிட்டு, ஒருவருக்கொருவர் சமிக்ஞை செய்துகொள்வோம்.

    எப்போதும் சிடுசிடுவென்றிருக்கும் முகத்தில் படிக்கும்போது மட்டும் இதழ்கள் புன்னகையால் விரிவது ஆச்சரியத்தை அளிக்காதா?

    இவ்வாறு புத்தகத்திலுள்ள கதாபாத்திரங்களுடன் ஒன்றிவிடுபவர்களுக்குக் கற்பனைத்திறன் மிகுதியாக இருக்கும்.

    கதாநாயகியின் காதல் நிறைவேறவில்லையா? அதற்கு வருத்தம். பிடித்த பாத்திரத்தை எழுத்தாளர் சித்திரவதை செய்து, கொன்றே விட்டாரா? அதற்கு அழுகை. `கற்பனைதானே!’ என்று அலட்சியமாக இருந்துவிடமாட்டார்கள்.

    மற்றவரைப்பற்றிச் சொல்வானேன்! நானே அப்படித்தான்.

    ஒரு முறை, நான் தனித்திருந்தபோது உரக்கச் சிரிக்கும் ஒலியைக் கேட்டு, என் தாய், “எதுக்கு இப்படித் தானே சிரிச்சுக்கறா? பைத்தியம் பிடிச்சுடுத்தா?” என்று உள்ளேயிருந்து கேட்டது காதில் விழுந்தது.

    தொடர்ந்து, “எதையாவது படிச்சிருப்பா!” என்று என் தங்கையின் அலட்சியக்குரல்.

    “பைத்தியம்தான்!” என்றாள் அம்மா முடிவாக.

    நான் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. பிறருக்காக என் இயற்கையை மாற்றிக்கொள்வானேன்!

    எழுத்தாளரின் கற்பனை

    கதை என்பது எழுத்தாளரின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் எழவேண்டும். அப்போதுதான் படிப்பவர்களையும் உணர்ச்சிவசப்படுத்த முடியும். கதையும் சிறப்பாக அமையும்.

    சிலருக்கு உடற்குறை இருக்கலாம். ஆனாலும், இயற்கையாக அமைந்த கற்பனைத்திறனை வளர்த்துக்கொண்டார்கள்.

    கதை

    ஆக்டேவியா பட்லர் (Octavia Butler) என்ற பெண்மணிக்கு டிஸ்லெக்ஸியா (Dyslexia) என்ற குறைபாடு இருந்ததால், சரியாகப் படிக்க முடியாது. எழுத்துகள் நாட்டியமாடுவதைப்போல் காட்சியளிக்கும். இதனால் உச்சரிப்பும் பிழையாக இருக்கும்.

    பள்ளியில் படிக்கும்போது, சக வயதினரின் கேலி பொறுக்காது கற்பனை உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள் ஆக்டேவியா.

    பத்து வயதிலேயே கதைகள் எழுத ஆரம்பித்தவள், 2006-ல் இறப்பதற்குமுன் அறிவியல் புனைக்கதைகளை எழுதிக் குவித்துப் புகழ்பெற்றாள்.

    படித்தால் கற்பனை வளருமா?

    `நான் புத்தகங்களைப் படித்து, பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன்!’ என்று பெருமை ஏற்பட்டாலும், கற்பனை வேறு, அறிவு வேறு.

    உபயோகமான புத்தகங்களைப் படித்தால் அறிவு வளரலாம். ஆனால், இன்னொருவருடைய கற்பனையில் எழுந்ததைத்தானே ஏற்கிறோம்?

    இடைநிலைப்பள்ளிக்குள் நுழைந்த என் மாணவிகள், “புத்தகத்தில் படமே இல்லையே!” என்றார்கள், குறையுடன்!

    “ஏன் படிக்கப் படிக்கவில்லை?” என்று நான் கேட்டதற்குப் பதில் அது.

    தொலைக்காட்சிமுன் உட்கார்ந்து, நேரத்தைக் கழித்தால், பிறரது கற்பனையில் ஊறியவற்றை நாம் ஏற்கிறோம். ஓசை, அமைதியின்மை ஆகியவற்றால் படிக்கும் பருவத்தில் கற்பனை வரட்சி ஏற்பட்டுவிடும். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் பார்க்கும் மாணவ மாணவியருக்கு புத்தகங்களில் படங்கள் போட்டிருந்தால்தான் படிப்பது புரியும். வகுப்பிலோ, கரும்பலகைதான் படம் காட்டும் திரை.

    `எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்,’ என்று அதிகம் யோசியாது தம் வயதையொத்த பிறரைத் தொடர்ந்து செல்கிறவர்கள் ஒரே இடத்தில்தான் வளைய வந்துகொண்டு இருப்பார்கள். நாளடைவில், `ஏன் இந்த அலுப்பு!’ என்ற குழப்பம் எழாது என்ன செய்யும்?

    நிறைய யோசி

    ஒன்றைச் செய்தாகவேண்டும் என்ற எண்ணத்துடன், அதைப்பற்றியே தனிமையில் யோசித்தால் அதைச் செயலாக்க முடியும்.

    நல்லது, கெட்டது ஆகிய இரண்டில் எதை அடைய வேண்டுமானாலும் இந்த ஒரே வழிதான்.

    கற்பனை என்றால், புதிய கருவிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமில்லை. புதியவகைப் பலகாரங்களை எப்படிச் செய்வது என்று கண்டுபிடிப்போர் மட்டுமென்ன! பிறருக்குத் தோன்றாதது அவர்களுக்குப் புலப்பட்டு இருக்கிறதே!

    வாழ்க்கை ஒரே சீராக இருந்தால் சலிப்பைத் தரும். கற்பனையில் திளைக்கும்போது அலுப்பு தெரியாது.

    ஆனால், யோசித்துக்கொண்டே இருந்தாற்போல் எதையும் அடைந்துவிட முடியாது. இலக்கை எப்படி அடைவது என்று திட்டம் வகுக்க வேண்டும். மூளை நம்மையும் அறியாமல் சரியான திசையில் நம்மைச் செலுத்தும்.

    புதிது புதிதாக நிறைய சாதனங்களைக் கண்டுபிடிப்பவர்களின் ரகசியம் என்ன?

    பிறருக்குப் புலப்படாததை இவர்கள் ஊகித்தே அறிகிறார்கள்.

    கேலிக்கோ, பழிப்புக்கோ அஞ்சாது, தாம் ஆரம்பித்ததை முடிப்பார்கள். ஏனெனில், அச்சம் கற்பனையை அழித்துவிடும்.

    பல தோல்விகள் கிடைத்தாலும் மனம் தளரமாட்டார்கள். சில வெற்றிகளே அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப் போதுமானது.

    “கற்பனை தசைநார்களுக்கு ஒப்பானது. பயன்படுத்திக்கொண்டே இருந்தால்தான் விரிவடையும்!” என்கிறார் திரு. அனுபவசாலி.

    மனிதன் நாகரிகமாக ஆனதற்கு கற்பனைத்திறன் கொண்டவர்கள் முக்கிய காரணம். (இல்லாவிட்டால், இறைச்சியைக் குடிசையில் வைத்து, பின் அந்தக் குடிசையையே எரித்தால்தான் சுவையாக இருக்கும் என்று முன்னோர் செய்ததையே இன்றும் செய்துகொண்டிருப்பான். அடுப்பு என்று ஒன்று புழக்கத்திற்கு வந்திராது).

    கதை

    என் அத்தை ஒருவருக்குச் சிறுவயதிலிருந்தே, `பெண்குழந்தைகள் குனிந்து, இடுப்பை வளைத்து வேலை செய்யவேண்டும்!’ என்று போதிக்கப்பட்டது.

    அதற்காக, அம்மியில் அரைக்கும்போது கூடவா!

    பெரியவர்கள் சொற்படி நடந்ததன் விளைவு, தலை குனிந்தபடி இருக்கும் — அடக்கத்தால் அல்ல.

    அத்தையின் முதுகு நிரந்தரமாக வளைந்துவிட்டது. வலிக்கும் இடுப்பைப் பிடித்தபடிதான் எப்போதும் நடக்க முடியும்.

    நல்லவேளை, யாரோ ஒரு புண்ணியவான் மின்சாரத்தால் இயங்கும் கிரைண்டரைக் கண்டுபிடித்தார். பெண்களின் முதுகு பிழைத்தது. சமையல் செய்வதால் இடுப்பிலோ, தோளிலோ அதிக வலி கிடையாது. நேரமும் மிச்சம்.

    மாற மறுப்பவர்கள்

    வேலைப்பளுவைக் குறைக்க சாதனங்கள் வந்துவிட்டாலும், சிலர் பழைமையை விடாது பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு, வீட்டு வேலைசெய்யும் ஒரு மராத்திய மாதுவை புனேயில் பார்த்தேன். அவளுக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும். நின்ற நிலையில், இடுப்பை வளைத்து, தரையை மெழுகுவாள். பல வீடுகளிலும் இப்படித்தான் செய்வதாக அறிந்தேன்.

    அப்போதுதான் அவளுக்கு வேலையைத் திறம்படச் செய்த திருப்தி கிடைக்கிறதாம்.

    வயது முதிர்ந்த காலத்தில் எப்படி அவதிப்படப்போகிறாளோ என்ற பச்சாதாபம் எழுந்தது எனக்குள்.

    ஒருவளை, `மாற்றம் என்றாலே கெடுதல்!’ என்ற அச்சமாக இருக்குமோ?

    நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A

  • படக்கவிதைப் போட்டி 296இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 296இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    புகைப்படக்கலைஞர் திரு. மாரியப்பன் கோவிந்தன் எடுத்திருக்கும் இந்தப் படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து  தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 296க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவரும் என் நன்றிக்கு உரியர்!

    கூடைகளை ஏற்றிக்கொண்டு வேகாத வெயிலில் உடல்நோக வண்டிமிதித்துச் செல்லும் இந்தத் தோழரின் உழைப்பை வந்தனை செய்வோம்; உழைக்காது வீணில் சோம்பியிருப்போரை நிந்தனை செய்வோம்!

    உழைப்பின் மகத்துவம் சொல்லும் இந்தப் படத்திற்குச் சகத்திலுள்ள கவிஞரெல்லாம் கவியெழுத வாருங்கள்! நற்சிந்தனைகளைத் தாருங்கள்! என்று அன்புபாராட்டி அழைக்கின்றேன்.

    *****

    ”சிறுதிவலைகள் பலசேர்ந்து பெருவெள்ளம் ஆவதுபோல் எடைகுறைந்த கூடைகளும் அளவில் அதிகமானால் தள்ளுவண்டி தடம் மாறும்!” எனும் அரிய கருத்தை எளிய சொற்களில் விளக்கியிருக்கின்றார் திருமிகு. இராதா.

    அவரே தம்முடைய இரண்டாவது கவிதையில் இப்படத்தை வேறொரு கோணத்தில் அணுகி, ”வண்டிமிதித்து வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டும் அவலப் பிழைப்பு இவரோடு போகட்டும்; இவரின் அடுத்த தலைமுறையாவது பசியின்றி நல்வாழ்வு வாழட்டும்!” என்றுரைத்து மனிதவாழ்வைத் தன் விருப்பப்படி எழுதிச்செல்லும் விதியின் போக்கையும் வியக்கின்றார். 

    வண்டி கூறும் வாழ்க்கைப் பாடம்

    சிறு திவலைகள் சேர்ந்து
    சிறு துளிகளாய் மாறி
    பெருவெள்ளமாகிறது போல

    எளிதான எடை கொண்ட
    கூடைகள் குவியலாய்ப்
    பலதாய்ப் பெருகிப் பாரமாகத்
    தள்ளுவண்டிகூடத் தடம் மாறும்

    அதுபோலத்தான்…
    நம் வாழ்க்கையும்

    அமிர்தமே ஆனாலும் அளவிற்கு மிஞ்ச
    நஞ்சாகி விடும்
    எதற்கும் அளவீடு உண்டு
    எவை தேவையோ அதனைக் கொண்டு
    எளிமை வாழ்க்கை கண்ட
    மா மனிதர் நம் மண்ணில் வாழ்ந்தவர்கள்
    எண்ணில் அடங்கார்…

    இக் கருத்தினை
    ஏட்டில் வடித்துத் தந்த நீதி நூல்கள்
    எங்கோ முடங்கிக் கிடக்கிறது
    ஏராளமாய் முதிர் கனிகளாய்ப்
    பரிசங்கள் படாமல் இன்னும்…

    தேடி எடுத்து
    இளைய இத்தலைமுறைக்குக்
    கொடுக்கும் கடமை நமதே!

    *****

    விதியா இல்லை வினையா?

    விதியை வெல்ல முயன்ற இவனது
    மதிகூடச் சதி செய்துவிட
    வயிற்றை நிரப்ப வழி தேடி
    வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட…
    சோர்வடைந்தாலும் சோற்றுக்காகப்
    பசியுடன் தன் பிள்ளைகளுக்காக
    மிதிக்கிறான் மிதிவண்டிச் சக்கரத்தை!

    இவனது விதி இவனோடு போகட்டும்!
    இவனது தலைமுறையாவது வாழட்டும் பசியில்லாமல்….

    இதற்கு விடை இன்னும்
    வினாக்களாகவே நிற்கின்றன!
    விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள்
    விண்ணைத் தொட்டாலும்….

    வெல்ல முடியவில்லை இவ்விதியை
    விடையையும் தேடித் தர முடியவில்லை
    விஞ்ஞானிகளால் அரசியல் தலைவர்களால்

    இது விதியின் சதியா இல்லை
    இது மதியின் கதியா அல்லது
    இவனது வினையின் பயனா?

    இன்னும் இங்கு இருக்கிறார்கள்
    இவ்வறுமைக் கோட்டின் கீழே
    இல்லை இதற்கு விடை ஏட்டினிலே
    இருப்பவரின் இதயங்களில் தான்
    இருக்கிறது இதற்கு விடை…

    அதுவரை மிதிவண்டிகள் ஓடும்
    ஆறு வழிச் சாலையிலும்
    அகல வழிச் சாலையிலும்…

    *****

    ”இந்த வண்டிக்காரர் தம் வாழ்க்கை பாரத்தைக் குறைக்க வண்டியில் ஏற்றுகின்றார் அதிக பாரம்! இவர் போன்றோருக்கு இரங்குங்கள்; இவ்வண்டியில் ஏறாது இறங்குங்கள்!” என்று கவிநயத்தோடு வேண்டுகோள் விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பாரம்…

    வண்டிப் பயணங்கள்
    வந்திடும் வாழ்க்கையில் பலவாய்,
    வண்டியோட்டிக்கு
    வாழ்க்கைப் பயணமே
    வண்டியானது…

    வாழ்க்கை பாரத்தைக் குறைக்க
    வண்டியில் ஏற்றுகிறார்
    அதிக பாரம்…

    மிதிக்கும் கால்களுக்கு
    வலுவில்லாதபோதும்
    வலு வந்துவிடுகிறது,
    வாழ்க்கை வண்டியும்
    சேர்த்து ஓட்டுவதால்…

    இவர் போன்றவர்களுக்கு
    இரங்குங்கள்,
    ஏறிவிடாதீர்கள் வண்டியில்-
    இறங்குங்கள்…!

    *****

    ”சந்தேகத்தின் பாரம் நம்பிக்கையின் அச்சை முறிக்காதவண்ணம் நம்பிக்கையோடும் நேரிய எண்ணங்களோடும் நம் பயணத்தைத் தொடர்வோம்!” என்று பொருத்தமான உவமைகளோடு திருத்தமாகக் கவி வடித்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பயணம் தொடர்!

    எதிர்பார்த்துக் காத்திருந்து
    ஏங்கித் தவித்து ஏமாறி,
    காயத்தின் வடுக்களைக்
    காலமெலாம் சுமந்து
    மயங்கித் தவித்து
    மனமொடிந்து மாள்கின்றோம்

    மெய்யன்புத் தேடலிலே
    துரோகத்தின் தாக்கத்தால்
    தூக்கி எறியப்படும் நேரம்
    சந்தேகத்தின் பாரம்
    நம்பிக்கையின் அச்சை
    முறிக்காமல் காத்திருப்போம்!

    நடக்காதவற்றை நீக்கி
    நம்பிக்கை மனதிருத்தி
    நேர்மறை நல்லெண்ணம்
    நமதாக்கித் தொடர்ந்திருந்து
    நாளைய பொழுதை நமதாக்கி
    நம் பயணம் நாம் தொடர்வோம்!

    *****

    சிந்தனை நாரிலே சீரிய சொன்மலர்களால் கவிஞர்கள் தொடுத்துத் தந்திருக்கும் மணமிகு பாமாலைகளை மனமாரப் பாராட்டுகின்றேன்.

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…

    வாழ்வென்னும் பாதையில் ஓடும் எங்கள் வண்டி
    வயிறுதனைக் காக்கவே வலி்களையும் தாண்டி

    ஏற்றப்படும் சுமைகளோ இங்கே பலவாகும்
    ஏற்றுக்கொண்டு சுமப்பதே எங்கள் வாழ்வாகும்

    கூலி பெறும்பொழுது குடும்பமது நினைவில் வரும்
    குண்டு குழிச் சாலைகளும் குதூகலத்தைத் தரும்

    பாவி எங்கள் பாதையிலே அந்த டாஸ்மாக் வரும்
    பாதிப் பணம் செலவழியப் பள்ளங்கள் பெரிதாகும்

    புயல்மழை வரும்பொழுது ஒதுங்குவதற்கும் இடமில்லை
    பொந்துக்குள் வாழும் எலிபோன்றதே எங்கள் நிலை

    உழைத்து உழைத்து வியர்த்தாலும் உறக்கம் வருவதில்லை
    உண்பதற்கு மூன்று வேளை உணவுகூடக் கிடைப்பதில்லை

    இலவச அரிசியெல்லாம் எதற்கென்று ஏசுகின்றார் பலர்
    அதுகூட இல்லையெனில் என்னவாகும் எங்கள் நிலை?

    வாக்குத் தந்து வாக்குக் கேட்டு எத்தனையோ தேர்தல்கள் வரும்
    எங்கள் வாழ்க்கையில் என்றுதான் நல்லதொரு மாற்றம் வரும்?

    கூடைகூடைகளாய் சுமைகள்தான் தினம் பெருகிவிடும்
    விடைதெரியா வினாவுடன் பயணமும் தொடர்ந்துவிடும்!

    ”உழைத்துழைத்து வியர்த்தாலும் உறக்கமது வருவதில்லை; உண்பதற்கு மூன்றுவேளை உணவுகூடக் கிடைப்பதில்லை. இலவச அரிசி எதற்கென்று ஏ(பே)சுவோரே! அதுகூட இல்லையெனில் எங்கள் நிலை என்னாகும்?” என்று ஏழைபடும் பாட்டைத் தம் பாட்டில் நேர்த்தியாய்ப் பதிவுசெய்திருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கோகீ கோகீ | வால்காக்கையின் குரல்

    கோகீ கோகீ | வால்காக்கையின் குரல்

    வால்காக்கை, கோகீ கோகீ எனக் குரலெழுப்பும். படமெடுக்கப் போனால் பறந்துவிடும். இன்று தேன்சிட்டு ஒன்றைப் படமெடுக்கையில், பின்னணியில் வால்காக்கையின் குரல் பதிவானது. இந்தக் கோகீ கோகீயைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செந்தமிழின் சிறப்பினைச் சகத்துக்கு உணர்த்திய அறிஞர்

    செந்தமிழின் சிறப்பினைச் சகத்துக்கு உணர்த்திய அறிஞர்

    -மேகலா இராமமூர்த்தி

    நம் அன்னைத் தமிழுக்கு தமிழ்நாட்டு அறிஞர்களேயன்றி அயல்நாட்டைச் சேர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அறிஞர் பலருங்கூட அருந்தொண்டாற்றியிருக்கின்றனர். இராபர்ட் கால்டுவெல், வீரமாமுனிவர், பிரான்சிஸ் வைட் எல்லிஸ், ஜி.யூ.போப் என்று நீளும் இவ்வரிசையில் செக் நாட்டைச் சேர்ந்த கமில் சுவெலபில்லும் (Kamil Václav Zvelebil) குறிப்பிடத்தகுந்த ஒருவராவார்.

    அண்மைக் காலம்வரை நம்மிடையே வாழ்ந்துமறைந்த அந்த மொழியியல் அறிஞர், தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் அரும்பணிகள் பல. அவை குறித்துச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

    செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டில் பிராக் (Prague) மாநகரில் 1927ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் நாள் பிறந்த கமில் வாஸ்லாவ் சுவெலபில், அங்குள்ள சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் (Charles University) 1946ஆம் ஆண்டு தொடங்கி 1952 வரை ஆறு ஆண்டுகள் கல்வி பயின்றார். இந்தியவியல், ஆங்கில இலக்கியம், தத்துவம், சமஸ்கிருதம், திராவிட மொழியியல் என்று பலவற்றைப் பயின்ற அவர், 1952இல் சமஸ்கிருதத்தில் முனைவர்ப் பட்டம் பெற்றார். பின்னர் திராவிட மொழியியலில் இராண்டாவது முனைவர்ப் பட்டத்தை 1959இல் பெற்றார்.

    1952 முதல் 1970 வரை செக்கோஸ்லோவாக்கியாவில் அமைந்துள்ள கீழையியல் துறையில் (Oriental Institute of the Czechoslovak Academy of Sciences) தமிழ் மற்றும் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். கிரேக்கம், இலத்தீன், செருமன், ஆங்கிலம், உருசியன், சமஸ்கிருதம், தமிழ் முதலிய மொழிகளைக் கற்றிருந்த அவர் அவற்றோடு மலையாளம், இந்தி, பிரெஞ்சு, இத்தாலியன், போலிஷ் உள்ளிட்ட மொழிகளையும் அறிந்திருந்தார் என அறிகின்றோம்.

    1965-66இல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்திலும் (The University of Chicago), 1967-68இல் செருமனியிலுள்ள ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் (Heidelberg University) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

    திராவிடமொழித் துறையின் தலைவராய்ச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிலகாலம் பணியாற்றிய சுவெலபில், பின்னர் அங்கிருந்து வெளியேறி 1970இல் பிரான்சில் இருந்த காலேஜ் டி பிரான்ஸ் (college de France) என்ற புகழ்வாய்ந்த கல்லூரியில் வருகைதரு பேராசிரியராய்ப் பணிபுரிந்தார். நெதர்லாந்திலுள்ள லெய்டன் பல்கலைக்கழகத்திலும் (Leiden University, The Netherlands) சில காலம் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நெதர்லாந்திலுள்ள யூட்ரெக்ட் பல்கலைக்கழகத்தில் (Utrecht University)1992ஆம் ஆண்டுவரை திராவிட மொழிகள், தென்னிந்திய இலக்கியம் மற்றும் நாகரிகம் குறித்த துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

    முதலில் செக் நாட்டுத் தூதரகத்தில் பணிபுரிந்த தமிழன்பர் ஒருவர் வாயிலாகத் தமிழ்கற்கத் தொடங்கிய சுவெலபில், அதில் ஈடுபாடுகொண்டு வானொலி வழியாகவும், நூல்கள் வழியாகவும் தமிழை முனைந்து கற்றிருக்கின்றார்.

    பிரான்சு நாட்டைச் சேர்ந்த பியர் மீலா (Perre Meile) என்ற மொழியியல் அறிஞர் தமிழ் குறித்துப் பிரஞ்சு மொழியில் எழுதிய ’Introduction au Tamoul’ (An introduction to Tamil) என்ற நூல் வழியாகவும் சுவெலபில்லுக்குத் தமிழின் அறிமுகம் கிடைத்தது.

    தமிழை மேலும் செம்மையாகவும் சிறப்பாகவும் கற்க விழைந்த அவர், தமிழகத்திற்கு வருகைபுரிந்து பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பேராசிரியர் மு. வரதராசனார் முதலியோரிடம் தமிழ் பயின்றார்.’தமிழ் இலக்கணத் தாத்தா’ என்று சிறப்பிக்கப்பெற்ற மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்பயின்ற அனுபவம் உடையவர் கமில் சுவெலபில்.

    தமிழகச் சித்தர்கள் குறித்து தாம் எழுதிய ’The Poets of the Powers’ என்னும் நூலில் தம் ஆசிரியர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டு “எனது குரு” என்று சுவெலபில் குறிப்பிட்டிருப்பது அவரது நன்றியறிதலையும் வேணுகோபாலப் பிள்ளைபால் அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பினையும் புலப்படுத்துகின்றது.

    சிறந்த தமிழறிஞர்கள் பலரிடம் பயின்றதன் விளைவாய் நல்ல தமிழிலக்கண, இலக்கியப் புலமை வாய்க்கப் பெற்றவரானார் சுவெலபில். தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது பாராட்டுக்குரிய செயலாகும். சுவெலபில் மொழிபெயர்த்த தொல்காப்பியம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பிய உரைவளத்தில் எடுத்தாளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

    தென்னிந்தியாவிற்குப் பலமுறை களப்பணி ஆய்வுக்காக வந்திருக்கின்றார் கமில் சுவெலபில். அவர் சென்னைக்கு வருகை தந்தபொழுதெல்லாம் நம் தமிழகத்து அறிஞர்கள் அவருக்கு வரவேற்பும் பாராட்டும் அளித்துச் சிறப்பித்துள்ளனர். சென்னை மாநிலக் கல்லூரியில் சென்னைத் தமிழ்க்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் 1962ஆம் ஆண்டு செப்டம்பர் 7இல் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழறிஞர்கள் பலர் கமில் சுவெலபில்லைப் பாராட்டிப் பேசியிருக்கின்றார்கள்.

    பேராசிரியர் மு.வரதராசனார் அவர்கள், கமில் சுவெலபில் பற்றிக் குறிப்பிடும்பொழுது ” இவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்ற போப்; நம்மிடையே வாழ்ந்து வருகின்ற கால்டுவெல், தமிழ்மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்டிருக்கிறார். நற்றிணை, புறநானூறு நன்கு கற்றவர். சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்து வருகின்றார். கல்கியின் நாவல்களையும் மொழிபெயர்த்து வருகின்றார். தாமே முயன்று தமிழ் கற்றவர். தமிழ் ஒலியே கேட்காத நாட்டில் இருந்துகொண்டு தமிழ் கற்றவர்.” என்று பாராட்டிப் பேசியுள்ளார் என்பதைச் செந்தமிழ்ச் செல்வி இதழ் வாயிலாய் அறியமுடிகின்றது. (செந்தமிழ்ச்செல்வி 37:1. பக்கம் 33).

    தமிழ் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதோடு மட்டுமன்றி, மொழியியல் நோக்கிலும் தமிழை ஆய்வுக்கு உட்படுத்தியவர் சுவெலபில்.

    குறிஞ்சிக் கிழவனென்றும், தமிழர்களின் முப்பாட்டன் என்றும் நாம் சிறப்பிக்கின்ற முருகனிடத்துத் தனித்த ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்திருக்கின்றார் என்ற செய்தி நமக்குப் பெருவியப்பினைத் தருகின்றது. முருகனைப் பற்றி ஆங்கிலத்தில் ’திருமுருகன்’ (Tiru Murugan) எனும் நூலெழுதியிருக்கின்றார் சுவெலபில்.

    வள்ளியின் பிறப்பு வளர்ப்பு திருமண நிகழ்வுகளைக் கச்சியப்ப சிவாசாரியார் எழுதியுள்ள கந்தபுராணத்தின் அடிப்படையில் இந்நூலில் விவரித்துள்ள அவர், வள்ளி முருகன் என்பவர்கள் தெய்வங்களாய்ப் புராணங்களில் சித்திரிக்கப்பட்டாலும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்தவை அனைத்தும் தமிழ் மரபில் இடம்பெற்றிருக்கும் களவு மற்றும் கற்பு வாழ்க்கை சார்ந்தவையாகவே இருக்கின்றன என்பதையும் ஆய்வுநோக்கில் வெளிப்படுத்தியுள்ளார்.

    ’The introduction to Tamil Literature’ என்ற தம்முடைய ஆங்கில நூலில், சங்கநூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களின் மொழிநடை, பாடுபொருள் ஆகியவற்றில் ஒத்த தன்மையைக் காணமுடிகின்றது. அரசவையில் பாடப்பட்ட சங்கப் பாடல்களின் தொடக்கமாக நாம் வாய்மொழிப் பாடல்களைக் கருதலாம் என்று குறிப்பிடுகின்ற சுவலபில்,

    சங்க நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, சாதிமுறை அன்றைய தமிழ்நிலத்துக்குப் பழக்கப்படாத அந்நியத்தன்மை கொண்ட ஒன்றாகவே இருக்கின்றது. தமிழ்நிலத்தில் அதிக செல்வாக்குப் பெற்ற குடியினராக வணிகர்களும் வேளாளர்களும் அன்று இருந்தார்களே தவிர பார்ப்பனர்களும் அரசர்களும் அல்லர் என்று குறிப்பிடுகின்றார்.

    தென்னிந்தியாவின் இலக்கிய வரலாற்றை எழுதிய சுவெலபில், அதற்குச் சூட்டிய பெயர் ‘முருகனின் புன்னகை’ (The Smile of Murugan: On Tamil Literature of South India) என்பதாகும். முருகன்பால் அவருக்கிருந்த ஈடுபாட்டிற்கு இதனினும் சிறந்த சான்றுண்டோ?

    இந்நூலில் தமிழர்கள் குறித்தும் தமிழ்மரபுச் செல்வங்கள் குறித்தும் சுவெலபில் முன்வைக்கும் கருத்துக்கள் தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியவையாகும். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.

    ”திராவிடர்கள்…குறிப்பாகத் தமிழர்கள் உலகின் பண்பாட்டு வளத்துக்கு ஆற்றிய பங்கு மகத்தானதாகும். பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களின் வடிவமைப்பு, சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட செப்புச் சிற்பங்கள், பரதக்கலை, கர்நாடக இசை போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்திற்கும் மேலான பங்களிப்பாகத் தமிழர்கள் உலகிற்குத் தந்திருப்பது தமிழிலக்கியம் எனும் வளமாகும். அதன் செழுமையும் சிறப்பும் தமிழறியாத மக்கள் உணர்ந்தும் படித்தும் இன்புறவேண்டிய தமிழ்மரபுச் செல்வமாகும்.

    தமிழர் பண்பாட்டைப் பொறுத்தவரை, அது ஒரு பண்பாட்டு வெற்றிடத்தை நிரப்புவதற்காகவோ, இரண்டு நாகரிகங்களின் கலப்பினாலோ உருவான ஒன்று அன்று; தானாகவே முகிழ்த்த ஒன்று.

    இந்தியாவின் இரு முக்கிய மொழிகளாகக் கருதப்படுபவை தமிழும் சமஸ்கிருதமும். இவற்றில் தமிழ்மொழியானது சமஸ்கிருதத்திற்குக் காலத்தால் முற்பட்டதும் அதனைச் சாராமல் தனித்து இயங்கக்கூடியதும் ஆகும்.

    அதுமட்டுமன்று! பழங்காலம் தற்காலம் எனும் இரண்டு காலங்களுக்கும் பொருந்தக்கூடிய இலக்கிய வளமும் தமிழில் மட்டுமே இருக்கின்றது. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய நவீன இலக்கியங்கள் வரை தமிழில் காணக்கிடைப்பது, சமஸ்கிருதத்திற்கு இல்லாத தமிழின் தனித்தன்மையை புலப்படுத்தக்கூடியதாகும். எனவே அன்றுமுதல் இன்றுவரை அறுபடாத தொடர்ச்சியுடைய மொழியென்றால் அது தமிழ் மட்டுமே.” என்கிறார்.

    தமிழர்களாகிய நாம் பெருமைகொள்ளத்தக்க செய்திகள் அல்லவா இவை?

    தமிழறிஞர் சிதம்பரநாதன் செட்டியார் அவர்களின் தொடர்பினால் தமிழ் யாப்பின்மீது ஈடுபாடு வரப்பெற்ற கமில் சுவெலபில், தமிழ்யாப்பு பற்றியும் விரிவாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். யாப்பு குறித்த சுவெலபில்லின் நூல்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பைப் பெற்ற முனைவர் பொற்கோ (பொன் கோதண்டராமன்) அவர்கள், கமில் சுவெலபில் தமிழ்யாப்பு பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கமில் சுவெலபில்லைக் கண்டு பழகுதற்குத் தமக்கு ஒரு கிழமை வாய்ப்புக் கிடைத்ததை மகிழ்ச்சியுடன் நினைவுகூரும் தமிழறிஞரான தமிழண்ணல் அவர்கள், “தமிழ் இலக்கணத்தையும், சங்க இலக்கியத்தையும், தமிழ் இலக்கிய வரலாற்றையும் வரன்முறைப்படுத்தி ஆங்கிலமொழி வழியாக உலகிற்கு வெளிப்படுத்தியவர்களில் கமில் சுவெலபில் குறிப்பிடத்தக்கவர்” என்கிறார். அதுபோல் தமிழுக்கு அமைந்த செவ்வியல் பண்புகளைத் தொடக்கத்தில் சான்றுகள்வழி விளக்கியவரும் அவரே எனக் கருதுகிறார் தமிழண்ணல்.

    அறிஞர் நா. வானமாமலை அவர்கள் தமிழில் எழுதிய நாட்டுப்புறவியல் சார்ந்த பல கட்டுரைகளை ஆங்கிலத்திலும் செக் மொழியிலும் மொழிபெயர்த்துள்ளார் சுவெலபில். குறிப்பாக ’முத்துப்பட்டன் கதை’ பற்றி வானமாமலை அவர்கள் சரசுவதி ஏட்டில் எழுதிய கட்டுரைகளைக் கண்ட கமில் சுவெலபில், அக்கதையை உலகின் மிகச்சிறந்த கதைப்பாடல்களுள் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மதன காமராசன் கதை, மயில் இராவணன் கதை இரண்டையும் ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். 1987இல் வெளிவந்துள்ள இந்நூல், நம் நாட்டுப்புறக் கதைப்பாடல்களையும் இதிகாசங்கள், புராணங்களையும் உலகுக்கு நன்கு அறியத்தரும் வகையில் அமைந்திருக்கின்றது. இருளர் மொழியில் வழங்கும் கதைப்பாடல்களையும் இக்கதையுடன் இணைத்து ஆராய்ந்துள்ள சுவெலபில், தமிழ் சமஸ்கிருத மொழிகளில் கிடைக்கும் விக்கிரமாதித்தியன் கதையையும் ஆய்வுசெய்துள்ளதை அறியமுடிகின்றது.

    பாரதியார் பாடல்களில் சுவெலபில்லுக்கு நல்ல பயிற்சியும் ஈடுபாடும் இருந்திருக்கின்றது. பாரதியின் இளமைக்காலம், கல்வி, காசிநகர் வாழ்க்கை, பாரதிகால இந்தியாவின் நிலை, தமிழக நிலை, பாரதியின் விடுதலை உணர்வு போன்றவற்றையும், பாரதியின் பாடல்களையும் விரிவாய் ஆராய்ந்து ’தமிழ் கல்சர்’ (Tamil culture) என்ற இதழில் சுவெலபில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரைகள் உலக மக்களுக்கு பாரதி குறித்த நல்லதோர் அறிமுகத்தைத் தந்தன.

    தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ’என் சரித்திரம்’ என்னும் நூலை, ’The Story of My Life’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் சுவெலபில். இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ள இந்நூல் வெளிநாட்டினருக்கு உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணிகளை அறிவிக்கும் ஆவணமாகத் திகழ்கின்றது. திராவிட மொழிகளின் ஒப்பீட்டு ஒலியியல் (Comparative Dravidian Phonology), நீலகிரிப் பழங்குடி மக்களான இருளர்களின் மொழி உள்ளிட்ட நூல்கள் அவருக்கு நிலைத்த புகழைத் தேடித்தந்தன.

    தமிழர்களின் பெருமிதமாகத் திகழும் வள்ளுவர்செய் திருக்குறளைச் செக் மொழியில் மொழிபெயர்த்துள்ளார் கமில் சுவெலபில் என்பது எண்ணி மகிழத்தக்கது.

    இவ்வாறு நூல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 500-க்கும் மேற்பட்ட படைப்புகளை வழங்கிய சாதனையாளர் சுவெலபில். சாகித்திய அகாதெமியின் சிறப்புக் கருத்துரையாளரகவும் அவர் இருந்துள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்விதழ் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்ற பெருமைக்குரியவர் அவர்.

    சுவெலபில் என்ற அவரது பெயருக்கு செக் மொழியில் ‘எதையும் சிறப்பாகச் செய்பவர்’ என்று பொருளாம். அதனை அழகுத்தமிழில் மொழியாக்கம் செய்து, ‘நிரம்ப அழகியர்’ என்ற பெயரை சுவெலபில்லுச் சூட்டினார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரான வ. சுப்பையா பிள்ளையவர்கள்.

    எதையும் சிறப்பாகச் செய்பவர் எனும் தம் பெயருக்கேற்பத் தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றி உலக அரங்கில் தமிழின் மேன்மையையும் தமிழர் பண்பாட்டின் பெருமையினையும் வெளிச்சமிட்டுக் காட்டிய செக் நாட்டு நல்லறிஞரான கமில் சுவெலபில்லின் பணிகள் தமிழராகிய நாம் அறிந்து போற்றத்தக்கவையாகும்.

    இவரைப் போன்ற மேனாட்டு அறிஞர்கள் தமிழுக்குச் செய்திருக்கும் தொண்டுகளில் ஒரு சிறிதேனும் தமிழராகிய நாமும் நந்தமிழுக்கு – செந்தமிழுக்குச் செய்யவேண்டும் எனும் ஊக்கத்தை இப்பெருமகனாரின் வாழ்க்கைவழி நாம் பெறவேண்டும்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    https://en.wikipedia.org/wiki/Kamil_Zvelebil
    https://web.archive.org/web/20090317061559/http://marketaz.co.uk/Zveleb1.html
    https://tamilnation.org/literature/zvelebil.htm
    http://muelangovan.blogspot.com/2008/11/17-11-1927.html
    http://murugan.org/research/zvelebil.htm
    https://tamilnation.org/books/literature/smileofmurugan

    Share
  • ஏஷியன் பெயின்ட்ஸ் விளம்பரக் குளறுபடிகள்

    ஏஷியன் பெயின்ட்ஸ் விளம்பரக் குளறுபடிகள்

    யூடியூப் தளத்தில் ஏஷியன் பெயின்ட்ஸ் வெளியிட்டுள்ள விளம்பரத்தின் மீதான எனது மதிப்பாய்வு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 118 (பொன்மலை)

    சேக்கிழார் பாடல் நயம் – 118 (பொன்மலை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்று
    மந்நெறி வழியே   யாக    வயல்வழி   யடைத்த   சோழன்
    மன்னிய   வநபா    யன்சீர்    மரபின்மா  நகர   மாகுந்
    தொன்னெடுங்   கருவூ ரென்னுஞ்   சுடர்மணி   வீதி   மூதூர்.

    பொருள் 

    பழைமையாகிய நெடிய கருவூர் என்று சொல்லப்பெறும் ஒளியும் அழகுமுடைய வீதிகளோடு கூடிய பழைய ஊர், வெற்றியின் அடையாளமாக இமயமலையினுச்சியில் புலிக்கொடி ஓங்கி நிற்க, அம்மலையினை இடித்துக் காவல் பொருந்தும்படி அமைத்த புதிய வழியே வழியாய் வழங்க ஏனை வழிகளை யடைத்த, கரிகாற் சோழர் முதல் அநபாயச் சோழர் வரை சிறப்பில் நிலைபெற்ற முடிசூட்டு மரபின்வரும் தலைநகரங்களில் ஒன்றாகும்.

    கருவூர் என்னும் மூதூர் – சோழன் – அநபாயன் – சீர்மன்னிய – மரபின் மாநகரமாகும்.

    பொன்மலை – இமயமலையையும் பொன்மலை என்பர்.

    “பொன்னின் வெண்டிரு நீறுபுனைந்தெனப், பன்னு நீள் பனி மால்வரை” (11) என்று உவமை முகத்தால் முன்னர் உரைத்தார்.

    இமயத்து உச்சி வரை சோழர்கள் தமது அரசு நடாத்தி இமயத்துஉச்சியிற் புலிக்கொடி நாட்டிய செய்தி நம் பழந்தமிழ் நூல்களானும், பிற சரித்திர ஆதரவுகளானும் பெறப்பட்ட செய்தியாம். இதுபற்றிக் “கோட்டுயர் பனிவரைக் குன்றின்  உச்சியிற் சூட்டிய வளர்புலிச் சோழர்”  என்ற இடத்துக் கூறியவையுங் காண்க. இவ்வாறு முதலிற் செய்தவர் கரிகாற்சோழர் என்ப.

    “பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன்
    வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்”

    என்று சிலப்பதிகாரம்  பாடுகிறது.

    சோழன் அநபாயன் சீர்மன்னிய என்றது புலிக்கொடி பொறித்த சோழர் முதல் நீடித்து நிகழ்காலத்து அநபாயர்வரை சிறப்பால் நிலைபெற்று வருகின்ற என்றதாம். மரபின் முந்தையோர் புகழொடு புணர்த்திப் பின்வருவாரைக் கூறுதல் கவியியல்பென்க.

    “துலையிற் புறவி னிறையளித்த சோழர்” என்பதும் பிறவும் காண்க. இவ்வாறன்றி மூதாதையர்செயலை அநபாயருக்கே ஏற்றிப் புகழ்ந்தார் என்றுரைகொள்வாருமுளர். முன்னர் வளர்புலிச் சோழர் என்றபடி இங்கும் சீர்மன்னிய என்று கூறியது காண்க. சீரால் மன்னிய என்று விரித்துரைக்க.

    வென்று பொன்மலை புலி ஓங்க என்க. வென்று – வென்றதனாலே. புலி பொன்மலையில் ஓங்குதற் குளதாய காரணங் கூறியவாறு. புலிநின் றோங்க என்று பாடங்கொண்டு நிகழ்காலத்தும் நிலைபெற்று விளங்க என ஆசிக் குறிப்புப்பெற உரை கொள்வாருமுண்டு. ஏனைய விற்கயல்களை வென்று ஒங்க என்பாருமுண்டு.

    மலையிடித்துப் போற்றும் அப்புது நெறியே வழியாக எனக் கொண்டு கூட்டியுரைத்துக்கொள்க.

    அயல்வழி அடைத்த – தான் செய்த புதுவழியே யன்றி அதன்முன் அந்நாள் வழங்கிய வேறு பிற வழிகளை வழங்காது அடைத்த; வழியன்றாகுமாறு மலைகளை இடித்துப் புதிய நேர்வழி உண்டாக்குதல் மன்னர்களின் வழக்கமென்பாருமுண்டு. இது வழக்கமன்று. இங்குக் குறித்தது புதுநாடுவென்ற அரசன் அந்நாட்டின் பாதுகாவலின் பொருட்டுச் செய்த அரணாம். நாட்டிற்குரிய அரச அங்கங்கள் ஆறினுள் அரண் ஒன்று.
    “படைகுடி கூழமைச்சு நட்பரண், ஆறும்
    உடையா னரசரு ளேறு”

    “மணிநீரு மண்ணுமலையு மணிநிழற்,
    காடு முடைய தரண்”

    என்ற திருக்குறட் பாக்கள்  இதனைக் கூறுகின்றன.  இமயமலை நமது பரதநாட்டிற்கு வடக்கு மதில்போல அமைந்தது. அதிற் பல வழிகளிருப்பின் நாடு காவல் பெறாது  என்று  அறிந்தவராய், நாட்டின் காவலழியும்படி முன்வழங்கிய பல வழிகளையும் ஆள் வழங்காது  அடைத்து ஒரு புது வழி யுண்டாக்கி அயற்புலத்தார் நுழையாதவாறு அதனைக் காவல்புரிந்தது பேரரசராய் விளங்கிய கரிகாற் சோழரின் இராச தந்திர காரியப் பெருஞ் செயலாம். அமைச்சராய் விளங்கிய ஆசிரியர் இதன் பெருமையை அறிந்து இதனைத் தேற்றம் பெற  முன்னர்க் கூறியதுமன்றி, இங்கும் எடுத்துக் காட்டியவாறு. அன்றியும் இப்புராணத்துள் வரும் புகழ்ச்சோழரும் அதுபோலவே முரணிய அயலானுடைய மலையரணை வென்று அவனைத் துரத்திய செய்தி அவர் புராணத்துக் காணப்படுவதும் நோக்குக. அயல் வழிகளை அடைக்க, இந்நாட் பிரஞ்சு அரசாங்கத்தாரது புதுவை, காரைக்கால் நகரங்களைச் சுற்றி வேலியிட எண்ணுஞ் செய்திகளையும் இங்கு உன்னுக.

    இடித்துப் போற்றும் – இடித்து – மலையினை இடித்தலால் குறுக்கிடாதபடி யுண்டாகச் செய்து. போற்றும் – காவல் புரியும். இவ்வழியினை அரணாகக் கொண்ட தன்மை கூறியபடி. புறநாட்டார் தம் நாட்டில் நுழையும் வாயில்களைக் காவல் செய்தல் அரசகாரிய முறைகளில் ஒன்று. அரண் என முன்னோர் வழங்கியது இதுவே.

    புறநானூற்றில் கள்ளில்  ஆத்திரையனார்  ஆதனுங்கனைப் பாடிய பாடலில்  இமயத்தில் மோரியர் உலக இடைகழியில் வழிநடை வருத்தம்  தீர இருபுறமும் வருவோருக்கு உணவும் உறைவிடமும்  வழங்கும்  அறத்துறை  ஓன்றனை மலையை  அறுத்து அமைத்த செய்தியை ,

    விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர்
    திண் கதிர் திகிரி திரிதர குறைத்த
    உலக இடைகழி அறை வாய் நிலைஇய
    மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும்
    பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே’’ 

    என்று புறநானூறு  கூறுகிறது!

    இந்நாளிலும் நமது ஆங்கில மன்னரும் பிறரும் தத்தம் நாடுகளில்அயல் நாட்டார் நீர்வழியாலும் நிலவழியாலும் தம் காவலினுள் அமைந்தன்றி நுழையாது செய்யும் காவல் வகைகளை இங்கு வைத்துக் காண்க. எல்லைப்புறப் பாதுகாவல் (Frontier Defence) என்று இமயச் சாரல் முழுதினும் இந்நாள் நமது அரசர் அரும்பாடுபட்டு அமைத்துள்ள அரண் முறைகளையும், அவற்றையுங் கடந்து எல்லைப்புற நாடுகள் படும் தொல்லைகளையும் இங்கு வைத்து உணர்ந்தால் இக்கூறிய சோழர் செய்தியின் பெருமை தேற்றம்பெற நன்கு விளங்கும். அயல் வழி – அதுவரை அயற்புலத்தோர் வந்துகொண்டிருந்த வழி எனவும், புதுவழியல்லாத பிறவழி என்றும் இருவகையுங் கொள்க.

    அநபாயன் – இப்புராணம் பாடுவித்துச் சைவவுலகத்துக்குச் செய்த பெருந்தொண்டு கருதித் தம் அரசரை ஆசிரியர் பாராட்டி வைத்த பதினோ ரிடங்களில் இது ஒன்று. சோழமன்னரையும், சோழர் தலைநகரையும் பற்றிய புராணங்களில் இவ்வாறு குறித்திருத்தல் மரபின் றொடர்ச்சி பற்றிய முறையுமாம். மரபின் மா நகரம் – முடிசூட்டும் மரபின் வந்த தலைநகரம். மாநகர் – தலைநகர். இவைபுகார் (காவிரிப்பூம்பட்டினம்), திருவாரூர், உறையூர், சேய்ஞலூர், கருவூர் என்பன.

    “அநபாயன் வருந்தொன் மரபின் முடிசூட்டுந் தன்மை நிலவு பதி ஐந்தின்” என்பது சண்டீசர் புராணம்.

    கருவூர் என்னும் மூதூர் மாநகரமாகும் என முடிக்க. தொன்னெடும்- தொன்மையும் நெடுமையும் கொண்ட. நெடுமை – பெருமை. தொன்மையில் நீண்ட – வழிவழி வந்த என்றலுமாம். சுடர்மணி வீதி – இதுபற்றி முன்னர்த் திருநகரச் சிறப்பிலும் பிற இடங்களிலும்  உரைத்தவை காண்க.

    இப்பாடலில்  சோழ மன்னனின் பழங்கால நகராகிய கருவூரின் சிறப்பும் , அவ்வூரில்  இப்புராண  அடியார்  வாழ்ந்த சிறப்பும் கூறப்பட்டது!

    Share
  • (Peer Reviewed) கரும்பனூர் கிழான் அளித்த  விருந்து

    (Peer Reviewed) கரும்பனூர் கிழான் அளித்த விருந்து

    ச. கண்மணி கணேசன் (ப.நி.)

    முன்னுரை

    தொகைநூல்களில்  பண்டைத் தமிழர் உண்ட உணவு, உண்ணுமுறை குறித்த பல தகவல்கள்  உள்ளன. கரும்பனூர் கிழான் பொருநர்க்கு என்னென்ன  விருந்தளித்தான் என விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். விளக்க முறை ஆய்வாக அமையும் இக்கட்டுரையில் புறம்.381, 384 ஆகிய இருபாடல்கள் முதனிலைத் தரவுகளாகவும்; பிற தொகைநூற் பாடல்கள் இரண்டாம்நிலைத் தரவுகளாகவும்  அமைகின்றன.

    கரும்பனூர் கிழான்; ஓர் அறிமுகம்

    கரும்பனூர் கிழான் வேங்கடப் பகுதியில் இருந்த தன் பெயருக்குரிய ஊரில் புன்செய் வேளாண்மையும் நன்செய் வேளாண்மையும் செய்த முல்லைநிலத் தலைவன் ஆவான். அவனது ஊர் இருந்த பகுதி வேங்கடம் என்பது;

    “ஒலிவெள்ளருவி வேங்கட”ம் (புறநானூறு பகுதி ll, 2007, ப.390-394, பா.381) என்ற அடியால் விளக்கம் பெறுகிறது.

    “வன்பாலாற் கருங்கால் வரகின்
    அரிகால்” (புறம்.384)

    உடையதென்றும் வருணிக்கப்படுகிறது. ‘வன்பால்’ புன்செயைக் குறிக்கும். தொடர்ந்து அரிகாலின்கண் வாழும் எலியைப் பிடிக்க முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆரவாரமும், அதன் காரணமாக அஞ்சி ஓடும் முயலும், அந்த ஓட்டத்தில் இருப்பை மரத்துப் பூக்கள் உதிர்வதும் இடம் பெறுகின்றன. இவை அவனது புன்செயாகிய காட்டு வளத்தை  உணர்த்துகின்றன.

    தம்மை  உழுவித்த நாடனுக்காக வயலில் இறங்கி நெல் வேளாண்மை செய்த உழவரின் தலைவனாகக்  கரும்பனூர் கிழான் விளங்கினான்.

    “மென்பாலான் உடன் அணைஇ
    வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை
    அறைக் கரும்பின் பூவருந்தும்” (மேற்.)

    காட்சியும் அவனது ஊரின் வருணனையே ஆகும். ‘மென்பால்’ நன்செய் ஆகும். நன்செயில் இரை தேரிய நாரை வஞ்சிக்கோட்டில் உறங்குமுன் கணுவுள்ள கரும்பின் பூவை உண்டமை; அவனது நன்செய் வேளாண்மையின்  செழிப்பைக் காட்டுகிறது. அவனது ஊரில் விழாக்காலம் அல்லாத போதும்; உழவரின் உண்கலத்தில் பெரிய கெளிற்றுமீனோடு இஞ்சிப்பூவுடன் கள் நிறைந்து  இருக்கும்.

    “விழவின் றாயினும் உழவர் மண்டை
    இருங்கெடிற்று மிசையோடு பூங்கள் வைகுந்து”

    (மேற்.) எனப் பகர்வது; அவனது மேலாண்மையின் கீழ் உழுவோரின் உணவுமுறை ஆகும்.

    விருந்து வகைகள்

    இரவலர்க்கு ஊன் கலந்த நெல்லரிசி உணவோடு; பாலிற் பெய்து, பாகிற் கொண்டு கலந்த உணவையும் விருந்தாக அளித்தான்.

    “நிணம் பெருத்த கொழுஞ்சோற்றிடை. …
    நீர்நாண நெய் பெய்து” (மேற்.)

    விருந்துண்டமை பற்றிப் புலவர் பாடியுள்ளார். நெய்யை நீர்போல ஊற்றி நிணம் கலந்த நெல்லரிசிச் சோற்றை உண்ணக் கொடுத்தான் என்பது பொருள்.  புறத்திணை நன்னாகனார் ஊன்கலந்த சோறுண்டு தெவிட்டிய போது; பாலிலும் பாகிலும் அளவோடு கலந்து கரைத்த உணவைப்  பருகியதாகக் கூறுகிறார். அதாவது அவனிடத்தில் நெல்லரிசிச் சோறு மட்டுமின்றிப் பிற உணவு  வகைகளும்  கிடைத்தன என்கிறார்.

    “ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
    பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
    அளவுபு கலந்து மெல்லிது பருகி
    விருந்து உறுத்து ஆற்றி இருந்தனெம்” (புறம்.381)

    என்பது புலவரின் அறிக்கை ஆகும். பண்டைத் தமிழர் பாலிற் பெய்து உண்டவை எவை என்பதையும்; பாகொடு சேர்த்துண்டது எது என்பதையும்    தொகையிலக்கியம் காட்டுகிறது.

    பாலிற் பெய்த உணவு 

    பாலிற் பெய்த உணவாகக் கரும்பனூர் கிழான் அளித்த  விருந்தில் இடம் பெற்றவை;  பாலுடன் கூடிய வரகுக்கூழும் தினைக்கூழும் ஆகும். ஆலத்தூர் கிழார் புன்செயில் விளைந்த வரகைப் பாலோடு சேர்த்துக் குடிப்பதை;

    “…………………………..புன்புல வரகின்
    பாற்பெய்…………………………………..
    அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்”

    (புறநானூறு பகுதி l, 2007, ப.94-98, பா.34) என்று விரிவாகப் பாடியுள்ளார். மிகுதியாகப் பால் கலந்து  இருந்ததால் தான் ‘ஆர்ந்த’ என்கிறார்.  ‘மெல்லிது பருகி’ என்ற உண்ணுமுறைக்குப் பொருந்தி வரும் உணவு இதுவே. இதே போன்று தினைச்சோறும் பாலும் சேர்த்து உண்டதை;

    “பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்” (பத்துப் பாட்டு தொகுதி l, 2007, பெரும்பாணாற்றுப்படை, ப.92-94, அடி168) என முல்லைநிலக் கோவலர் குடியிருப்பில் கிடைக்கும் உணவைக் கூறிக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆற்றுப்படுத்துவது காண்கிறோம்.   எனவே கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் தினைப் பால்சோறும் வரகுப்பால்சோறும் இடம் பெற்றமை  உறுதி.

    கரும்பனூர் கிழானது புன்செய் வேளாண்மை வளம் பற்றி முன்னர்க் கண்ட செய்தியும் அவனளித்த விருந்தில் வரகுப்பால்சோறு இடம்பெற்றமைக்கு  ஆதாரமாகிறது.

    நெல்லரிசிச் சோற்றில் பாலூற்றி உண்பது இந்த உண்ணுமுறைக்குப் பொருந்தி வரவில்லை. ஏனெனில்;

    “… … …பால்விட்டு

    அயினியும் இன்று அயின்றனனே” (புறம்.77)

    என்று இடைக்குன்றூர் கிழார் பாண்டிய வேந்தனைப் பாடும் போது ‘கலந்து பருகு’வதாகச்  சொல்லவில்லை. ‘அயிலுதல்’ என்ற  வினை எடுத்து உண்பதையே குறிக்கும். எனவே கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் நெல்லரிசிப் பால்சோறு இடம்பெறவில்லை என்பது உறுதி.

    பாகிற் கொண்ட உணவு

    ‘பாகிற் கொண்ட’ உணவாவது உழுந்தங்களி என்பது நல்லாவூர் கிழார் மூலம் தெளிவாகிறது. திருமண விருந்தைப் பற்றிப் பேசும் போது;

    “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை” (அகநானூறு களிற்றியானை நிரை, 2009, ப.221, பா.86) என்கிறார். ‘உழுந்து தலைப்பெய்த’ என்னும் தொடர்; இவ்வுணவுப் பொருளில்  உழுந்தே முதன்மைப் பொருள் என உணர்த்தும். ‘கொழுங்களி’ என்னும் தொடர் அவ்வுணவுப் பண்டத்தின் பதம் பற்றியும், அதை வளமாக எண்ணெய் சேர்த்துச் சமைப்பதையும் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. மிதவை எனும் சொல் உணவுடன் சேர்க்கும் நீர்மப் பொருளைக் குறிக்கும். பாகு நீர்மப் பொருள் ஆகையால்; அதைச் சேர்த்து உண்பதைக்  ‘களிமிதவை’ என்று பாடியுள்ளார். ‘கொழுங்களி’ என்று அழைத்த காரணம்;

    “நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன”

    (ஐங்குறுநூறு, 2009, ப.328-329, பா.221) என்னும் பாடல் தொடர் மூலம் தெளிவாகிறது. ‘நெய்யோடு மயக்கிய’ செய்முறை; மிதமிஞ்சிய நெய் சேர்த்தமையைச் சுட்டி நிற்கிறது. இங்கு நெய் எள்ளிலிருந்து எடுக்கப்படுவதாகும். உழுந்தங்களி கிண்டும் போது அளவிறந்த நல்லெண்ணெயைக் குடிக்கும் என்பது நடைமுறை உண்மை.

    பொ.வே.சோமசுந்தரனார் மேற்சுட்டிய பாடலுக்கு உரை எழுதுங்கால்; அதை உழுந்தங்களி என்று சுட்டவில்லை; மாறாக உழுந்தினின்று செய்யப்படும் வடகம் என்கிறார். இது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. ஏனெனில்; அப்பாடலில் ‘நூற்றுப் போவதைப் போல’ என்னும் உவமை இடம் பெறுகிறது. வடகம் என்னும் உணவு வகை வெய்யிலில் காயவைத்துச் செய்யப்படும். அது நூற்றுப் போக வழியில்லை. ஆனால் உழுந்தில் செய்த பிற உணவுப்பண்டங்கள் நூற்றுப்போகும் வாய்ப்பு மிகுதி. ‘ஊசிப் போதல்’ என்ற இக்கால வழக்கே பாடலில் நூற்றுப்போதல் எனச் சொல்லப்படுகிறது. ஊசிப்போன உழுந்துப் பலகாரத்தில் இருந்து கெட்ட வாடையுடன் நூல்போன்ற கசிவு ஏற்படும். இந்த அனுபவ அறிவுடன் கபிலர் பாடியிருக்கிறார். உழுந்தங்களி உண்ணக் காலம் தாழ்த்தினால் நூற்றுப் போய் உண்ணத் தகுதியற்றுப்   போய் விடும்; அதுபோல் தலைவன் தந்த தழையாடையை ஏற்றுக்கொண்டு உடுத்தாது இருப்பின்; வாடிப்போய் அணியும் தகுதியை இழந்துவிடும் என்பதே பாடலின் பொருளாகும்.

    இதனால் கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் பாகுடன் சேர்த்து உண்ணக்கூடிய உழுந்தங்களி இடம் பெற்று இருந்தமை உறுதியாகிறது. இன்றும் கருப்பட்டிப்பாகு என அழைக்கப்படும் பனம்பாகை உழுந்தங்களிக்கு நடுவில் குழித்து; ஊற்றிச் சுவைக்கும் வழக்கம் உளது.

    விருந்தின் காலமும் காரணமும்

    எவ்வளவு தொலைவில் இருந்தாலும்; வறட்சிக்  காலத்தில்  என்னிடம் வந்து வயிறார உண்க என்கிறான்.

    “இருநிலம் கூலம் பாறக் கோடை
    வருமழை முழக்கிசைக்கு ஓடிய பின்றைச்
    சேயை யாயினும் இவணை யாயினும்
    இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ”

    (புறம்.381) எனக் கிணைப்பறை இசைக்கும் கலைஞனை அழைத்துக்; ‘கடுமையான கோடையில் கூலமே இன்றிப் பஞ்சம் ஏற்படினும்; ஒரு மழை பொழிந்தவுடன் புன்செய்ப் பயன்கள் தப்பாது ஆதலால்; இங்கு வாருங்கள்’ என்கிறான். நன்செயின் விளைச்சலுக்கு மிகுந்த நீர் தேவைப்படும்; ஆனால் புன்செயில் விளைச்சலுக்குச் சிறிதளவு நீரே போதும் என்ற காரணத்தைக் கூறி அழைக்கிறான்.

    சிறுகுடி கிழான் பண்ணனைக் கிள்ளி வளவன் ‘பசிப்பிணி மருத்துவன்’ (புறம்.173) என்று போற்றுகிறான். வறட்சி மிகுந்து நெல் விளையாத காலத்தில் பொதுமக்களுக்குப் புன்செயால் தானம் அளித்தான் என்பது

    “வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்
    பள்ளம் வாடிய பயனில் காலை…
    வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
    பெயர்க்கும் பண்ணன்” (புறம்.388)

    எனப் புகழப்படுகிறது. கரும்பனூர் கிழான் சொன்ன காரணமும் பண்ணன் பெருமையும் ஒரே அடிப்படையில் உருவான கருத்துகளாக உள்ளன. தொல்தமிழகத்துக் குடிகள் நான்கையும்; உணவு நான்கையும் வரிசைப்படுத்தும் மாங்குடி கிழார்;

    “கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையோடு
    இந்நான்கு அல்லது உணாவும் இல்லை” (புறம்.335)

    எனத் தன் பட்டியலில் வரகு, தினை, அவரை என்ற மூன்றனுக்கும் இடம் கொடுத்து இருக்கிறார். இவற்றுள் அவரை பயறுவகைகளுக்கு உரிய பொதுப்பெயர் ஆகும். இம்மூன்று உணவு வகையும் பாரம்பரியமானவை என்ற கருத்து வலுப்படுகிறது. கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் பாரம்பரியம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

    முடிவுரை

    கிழார் உழவர் தலைவராய் இருந்து புன்செயிலும் நன்செயிலும் வேளாண்மை செய்ததால் வறட்சிக்காலத்தில் அவர்கள் பாரம்பரியமான புன்செய்ப் பயன்களால் விருந்து அயர்ந்தனர். கரும்பனூர் கிழான் நெய்யும் ஊனும் கலந்த நெல்லரிசிச் சோறு மட்டுமின்றி; வரகு, தினை ஆகிய கூழொடு பால் கலந்து பருகக் கொடுத்தான். கருப்பட்டிப் பாகோடு உழுந்தங் களியை வழங்கினான்.

    துணைநூற் பட்டியல்
    1. அகநானூறு களிற்றியானை நிரை, (2009), கழக வெளியீடு, சென்னை.
    2. ஐங்குறுநூறு, (2009), கழக வெளியீடு, சென்னை.
    3. பத்துப்பாட்டு தொகுதி l, (2007), கழக வெளியீடு, சென்னை.
    4. புறநானூறு பகுதி l, 2007, கழக வெளியீடு, சென்னை.
    5. புறநானூறு பகுதி ll, 2007, கழக வெளியீடு, சென்னை.
    Brief note on author

    Dr.(Mrs)S.Kanmani Ganesanl published ‘chilappathikaaram kaattum naadum nakaramum’- her Ph.D thesis in 1992. She has also translated the traumatology section of the book; An Introduction to Orthopaedics and Traumatology authored by Dr.M.Natarajan as ‘kaaya aruvaiyiyal maruththuvam’ which was published by the Madurai Kamaraj University; sponsored by the Text Book Society of Tamilnadu, Chennai. The booklet makalir udalnalach chikkalkal was published by her as the proceedings of a symposium sponsored by the UGC, New Delhi. She retired as a principal and HOD in Tamil of an autonomous institution Srikaliswari College, Sivakasi.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):
    

    ‘கரும்பனூர் கிழான் அளித்த விருந்து’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு

    • ‘வன்பால்’ புன்செய் எனவும் ‘மென்பால்’ நன்செய் எனவும் எளிமையாக விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
    • நீர் நாண நெய்பெய்து என்னுந் தொடரில் ‘நாண’ என்பதை உவம உருபாகக் கொண்டது கட்டுரையாசிரியர்தம் இலக்கிய முதிர்சசியைக் காட்டுகிறது.
    • ‘நெய்யொடு மயங்கிய உழுந்து நூற்றன்ன’ என்னும்  கபிலரின்  தொடருக்கு ‘உழுத்தங்களி’ என உரைகாண்பதும் அதற்குப் பெருமழைப் புலவரின் வடகம் என்னும் உரை பொருந்தாது என்பதற்குச்  சங்க இலக்கியப் பகுதிகளைச் சான்றாக்குவதும் கட்டுரையாசிரியர்தம் பரந்துபட்ட இலக்கியப் பார்வையை வெளிப்படுத்துகின்றன.
    • மாங்குடிகிழார் பாடடில் “சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணாவும் இல்லை” என்ற வரிகளைத் தனிமைப்படுத்தி உரை காண்பது கட்டுரையாசிரியர் எடுத்துக்கொண்ட பொருளுக்கு வலிமை சேர்க்கலாம். ஆனால் பாட்டின் முழுமை சிதலமடைகிறது என்பதைக் நோக்குதல்  வேண்டும். ‘நான்கல்லது பூவுமில்லை’ ‘நான்கல்லது உணாவுமில்லை’ நான்கல்லது குடியுமில்லை’  என்னும் தொடர்களெல்லாம் பாட்டின்  இறுதி வரியான ‘கல்லே பரவின் ; அல்லது……கடவுளும் இலவே’ என்பதோடு முடிதல் வேண்டும். எனவே ‘நான்கு’ என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையைக் குறிக்காது ‘நாலு பேர் புகழ வாழ்! என்பதுபோல உலக வழக்காகி நின்றது. இல்லையெனின் பூ நான்கல்லது பிற பூக்கள் இலலையென்பதாகிவிடும்
    • இனி, ‘அயிலுதல்’’ என்ற  வினை, எடுத்து உண்பதையே குறிக்கும்’ என்னும் கட்டுரையாளர் கருத்து “வேறுவினைப் பொதுச்சொல் (தொல்.சொல் 46) என்னும் தொல்காப்பிய விதிக்கு முரணானது.
    • ‘தெவிட்டிய’  என்னும் வழக்கு இலக்கிய வழக்காகாது. ஆதலின் ‘உவட்டுதல்’ என்றிருந்தால் நன்று. ‘உவட்டாமல் இனிப்பதுவே’ என்பது திருவருட்பா!
    • ‘கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்” என்னும் ஆலத்தூரார் பாடல் வரியில் பயின்றுள்ள ஆர்ந்த பாணர் என்பது கொழுஞ்சோறு உண்டதால் வயிறு நிறைந்த பாணர் என்பதே சரியாக இருக்க முடியும்.’ ‘பெய் புன்கம்’ என்பது வினைத்தொகை. ‘பால் பெய் ஆர்ந்த’ எனத் தொடர் அமையாது. ஆர்தல் – நிறைதல். பிணித்தல் ‘நீராரும் கடல் உடுத்த’ ‘ஆர்த்த பிறவி துயர்கெட’ என்பன காண்க.
    • ‘நான்கு உணவு’ என வராது. ‘நான்கையும் உணவுப் பொருளாகக் கொண்டனர்’ என்பதே நேரிது.

    சுட்டப்பட்டிருக்கும் மதிப்பீட்டுப் பகுதிகள்  கட்டுரைப் பகுதிக்கான கூடுதல் விளக்கங்களே தவிர குறையெனக் கருதுதல் வேண்டா. கட்டுரைப் பொருள் தேர்விலும், தரவு மற்றும் சான்றுகளைத் தொகுத்தலிலும் மொழிநடையிலும் இக்கட்டுரை சிறந்திருக்கிறது. ஆய்வாளரைப் பாராட்டுகிறோம்.

    Share
  • நைஜீரியாவில் ஒரு பயணம்

    நைஜீரியாவில் ஒரு பயணம்

    ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களை அடுத்து, இப்போது ஆப்பிரிக்கக் கண்டத்தையும் நம் யூடியூப் அலைவரிசை வழியே நீங்கள் கண்டுகளிக்கலாம். இதோ, நைஜீரியாவின் லாகோஸ் நகரச் சாலைகளில் நாம் பயணிக்கலாம், வாருங்கள். நம் ஊரைப் போலவே இருக்கின்ற இந்தப் பகுதிகளைப் பார்த்துவிட்டுச் சொல்வோம், யாதும் ஊரே யாவரும் கேளிர். படமெடுத்து தமிழில் வர்ணனையுடன் அனுப்பிய தம்பிக்கு நன்றி. நைஜீரியாவிலிருந்து மேலும் பல பதிவுகள் வர இருக்கின்றன, தொடர்ந்து இணைந்திருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 4

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 4

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தொல்காப்பிய நோக்கில் ‘உவமம்’ 

    முன்னுரை

    தமிழிலக்கியத்திலோ இலக்கணத்திலோ இயல், படலம் என்பன போன்ற  பகுப்புக்கள் பொருள் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டவையாகும். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனவும்,  புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் எனவும் அமையும் இலக்கியப் பாகுபாடானாலும், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் எனவும், உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனவும் அமையும் இலக்கணப் பாகுபாடானாலும் அவையெல்லாம் தொடர்புடைய நூற்பொருள் பாகுபாடே. இலக்கியத்தில் முன்னோக்கு, பின்னோக்கு உத்திகள் அமைவதும் இலக்கணத்தில் ‘மாட்டேறு’ முதலிய உத்திகள் அமைவதும் அத்தகையதே! ஆனால் உள்ளடக்கத்தால் வேறுபட்ட இயல்களில், குறிப்பிட்டதொரு பொருளை நுட்பமாகவும் தெளிவாகவும் சுட்டிச் செல்கிற மரபு தொல்காப்பியத்தில் அமைந்திருப்பதை அறியமுடிகிறது. இது பற்றிய சிந்தனையைச் சுருக்கமாக இப்பகுதி முன்னெடுக்கிறது.

    உவமம் பொருளிலக்கணத்தைச் சார்ந்ததே

    தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களையும் தனித்தனி பொருள் கட்டுமானம் கொண்ட இயல்களாக அமைத்திருக்கிறார்.  உவமவியலையும் அவ்வாறே உவமம் பற்றிய செய்திகளுக்காக ஒதுக்கியிருக்கிறார். ஆனால் உவமம் பற்றிய சிந்தனைகளைப் பொருளதிகாரத்தின் ஏனைய சில இயல்களிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

    “உள்ளுறை உவமம் ஏனை உவமமெனத்
    தள்ளா தாகும் திணையுணர்  வகையே”

    “உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்
    கொள்ளும் என்ப குறியறிந் தோரே”

    “உள்ளுறுத் திதனோடு ஒத்துப்பொருள் முடிகென
    உள்ளுறுத் திறுவது உள்ளுறை உவமம்”

    “ஏனை யுவமம் தானுணர் வகைத்தே”

    என்னும் நூற்பாக்கள் அகத்திணையியலில் காணக்கிடக்கின்றன. அதாவது உவமவியலில் ஆராய்ந்திருக்கும் உவமம் பற்றிய சிந்தனைகள், அகத்திணை அமைக்கிற பொழுதும் தொல்காப்பியருக்குத் தோன்றியிருக்கின்றன என்பது கருத்து. மேலும்,

    “நோயும் இன்பமும் இருவகை நிலையிற்
    காமங் கண்ணிய மரபிடை தெரிய
    ……………………………………………………….
    இருபெயர் மூன்றும் உரியவாக
    உவம வாயிற் படுத்தலும் உவமம்
    ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி”

    “இறைச்சி தானே உரிப்புறத் ததுவே”

    “இறைச்சியிற் பிறக்கும் பொருளு மாருளவே
    திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே”

    “அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்
    வன்புறை யாகும் வருந்திய பொழுதே”

    “உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பென
    கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே”

    என்னும் நூற்பாக்கள் பொருளியலில் காணக்கிடக்கின்றன. பொருளியல் என்பது சொல்லதிகாரத்துக் கண்டறியப்பட்ட சொற்கள், அகப்பொருள் மாந்தர்கள் வழியாக வெளிப்படும் போது எத்தகைய பொருளைத் தருகின்றன என்பது பற்றி ஆராயும் இயல்புடையது. மேற்கண்ட அகச்சான்றுகளால் உவமம் பற்றிய தொல்காப்பியர் கருத்துக்கள் பின்வருமாறு நிரல்படுத்தப்படலாம்.

    1. தொல்காப்பியர் உவமத்தைத் தனியானதொரு இயலில் ஆராய்ந்திருக்கிறார்.
    1. செய்யுளைப் பற்றி ஆராயும் செய்யுளியலில் உவமத்தைச் செய்யுளுறுப்பாகவோ வேறு வகையாகவோ அவர் சுட்டவில்லை.
    1. உவமவியலில் எட்டு நூற்பாக்களில் அகப்பொருள் மாந்தர்களின் உவமக் கோட்பாட்டை ஆராய்கின்றன.
    1. உவமவியல் நூற்பாக்கள் அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாக அமைந்து, பொருட்புலப்பாட்டையே தம் நோக்கமாகக் கொண்டிலங்குவதை அறியமுடிகிறது.
    1. உவமவியலில் மட்டும் ஆராயப்பட வேண்டிய உவமம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியர் அகத்திணையியல், பொருளியல் என்னும் ஏனைய இயல்களிலும் ஆராய்ந்திருக்கிறார். .

     தொல்காப்பியமும் உள்ளுறை உவமமும்

    இதுகாறும் சுட்டிக்காட்டிய எடுத்துக்காட்டுக்களால் தொல்காப்பியர்   உவமத்தை உவமவியல் தவிர ஏனைய இயல்களிலும் ஆராய்ந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது. ஆகவே அவர் உவமத்தைப் பொருளதிகாரத்தின் பகுதியாகவே கருதியிருக்கிறார் எனக் கருத இடமேற்படுகிறது. தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பது பிற்கால வழக்கு.

    “எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி”

    என்பதே தொல்காப்பியப் பாயிர வழக்கு. மேலும்,

    “தள்ளாதாகும் திணையுணர் வகையே”

    என்றதனால், உள்ளுறை உவமத்தையும் வெளிப்பட நின்ற ஏனைய உவமத்தையும் திணையை உணர்வதற்குரிய கருவிகளாகவே அவர் கருதியிருக்கிறார் எனவும் எண்ண முடியும். ‘கவிதைக்கு அழகு உவமம்’ என்னும் கருத்து தொல்காப்பியருக்கு இருந்ததற்கான சான்று தொல்காப்பியத்துள் கிட்டுமாறில்லையாயினும் உவமத்தை அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியாகவும் உள்ளுறை உவமத்தைத் திணையுணர் கருவியாகவும் சுட்டிச் செல்கிறார் என்பதை அறியமுடிகிறது.

    நிறைவுரை

    மேற்கண்ட சில பத்திகளில் தரவுகளின் அடிப்படையில் விளக்கப்பட்ட கருத்துக்களால் ‘உவமம்’ என்பது தற்காலத்தில் கருதப்படுவதுபோலக் கவிதைக்குரிய அழகியல் பகுதி அன்று என்பதும் பொருள் விளக்கத்திற்கானதே என்பதும் பெறப்படும்.  உவமத்தைப் பயன்படுத்துதற்குரியார் அகப்பொருள் மாந்தர் என்பதாலும், அவரும் குறிப்பிட்ட இடத்திலேயே சூழலிலேயே வரையறைக்கு உட்பட்டே உவமம் கூறுதல் வேண்டும் என்னும் கடப்பாடு காணப்படுவதாலும் அதனை அகப்பொருள் பகுதியென்றும் துணியலாம். இதற்கும் பிற்காலத்தில் செய்யுளணியாகக் கருதப்படும் தண்டியலங்காரத்தின் கருத்தியலுக்கும் எள்ளின் முனையளவும் தொடர்பில்லை என்பதும் ஆனால் தமிழ்க் கவிதைகளின் பெரும்பரப்பு தண்டியின் அழகியல் சார்ந்த உவமத்தாலேயே சூழப்பட்டிருக்கிறது என்பதும் பின்னர் விளக்கப்படும்.

    (தொடரும்…)

    Share
  • Let’s Learn English

    Let’s Learn English

    Baskar Seshadri

    We may be aware of Many institutes offering English speaking courses today and many of them are expensive too. There are few corporate companies which do the teaching like the One Veta which is now gone. And those days it was only Rapidex English book the only source to learn the spoken English.

    The main issue in the learning is the shyness and hesitation which some institutes could attend well but what needed now is a private class with a comfortable environment and feel free mind. That is now being offered by Mr. Chandramouli of Mylapore. This gentleman an engineer is proficient in six languages which includes German and French too. He is such a soft spoken person and was too kind enough to spare a little time few days ago when i met him. He is residing in the traditional house in a street where a stalwart of Carnatic Music world lived a decade back. Yes, you guessed it right. He is the son in law of Sri S Rajam Iyer. With such a wide experience in business and having toured most of the countries he preferred to settle in the home town after eventful years. Now in his late sixties he had decided to devote his time to teach people of all age the Spoken English. Please feel free to share a word about this gentleman to your known circles and whoever is interested on this can reach Sri Chandra Mouli on Numbers

    93826 99246 or 78240 27011.

    He takes classes in the morning between nine am and one and after a break he resumes the classes from four pm to eight pm. Please do not worry about the fees. It’s too moderate and his address is Number 46, Nadu Street, Mylapore the lane opposite to the Kapaleeswarar Temple.

    The photo shows Mr Chandramouli in the traditional house of Rajam Iyer. Please enlarge the Photos to have a better view. Let’s support this enterprising man with good deeds in mind.

    Share
  • குறளின் கதிர்களாய்…(339)

    குறளின் கதிர்களாய்…(339)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(339)

    உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
    சேரா தியல்வது நாடு.

    – திருக்குறள் – 734 (நாடு)

    புதுக் கவிதையில்...

    கொடிய பசியும்
    உடலில் வந்தபின்
    நீங்கிடா நோய்களும்,
    அழிவைத் தந்திடும்
    அடுத்தவர் பகையும்
    இல்லாமல் மக்கள்
    இனிதே கவலையின்றி
    இருப்பதுதான் நாடு…!

    குறும்பாவில்...

    கொடும்பசி கொல்லும் நோயுடன்
    கெடுத்திடும் அடுத்த நாட்டுப் பகையிவை
    இலாதே மக்கள் இனிதிருப்பதே நாடு…!

    மரபுக் கவிதையில்...

    வறுமையி லுளோரை வாட்டுகின்ற
    வலிமை மிக்கக் கொடும்பசியும்,
    பொறுக்க முடியா வலியுடனே
    போக்கிட வழிய தறியாத
    வெறுத்திடத் தக்தாய்த் தொடர்நோயும்
    வேந்தன் ஆட்சியில் வாராதே,
    சிறுமைப் பகைகளும் இலாதிருப்பதே
    சிறந்த நாடெனச் செப்புவரே…!

    லிமரைக்கூ..

    கொடும்பசி என்னும் கேடு,
    கொல்லும் நோயுடன் பிறர்பகை இவையெலாம்
    இல்லா திருப்பதே நாடு…!

    கிராமிய பாணியில்...

    நாடு நாடு
    நல்ல நாடு,
    நாட்டு மக்களுக்குக்
    கேடு வராமயிருந்தாத்தான்
    அது
    நல்ல நாடு..

    வறும வந்து
    மக்கள வாட்டுற
    கொடிய பசியும்,
    ஒடம்பு மனசு எல்லாத்தையும்
    ஒண்ணாப் பாதிச்சிக்
    கொணப்படாத நோயும்,
    உள்ளிருந்தும் வெளியயிருந்தும்
    நாட்டுக்கு வந்து மக்கள
    வாட்டுற பகயும்
    இல்லாம மக்கள்
    மகிழ்ச்சியா
    இருக்கிறதுதான் நல்ல நாடு..

    அதுதான்,
    நாடு நாடு
    நல்ல நாடு,
    நாட்டு மக்களுக்குக்
    கேடு வராமயிருந்தாத்தான்
    அது
    நல்ல நாடு…!

    Share
  • அண்ணாகண்ணன் யூடியூப் – ஆயிரம் காணொலிகள்

    அண்ணாகண்ணன் யூடியூப் – ஆயிரம் காணொலிகள்

    அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் ஆயிரம் காணொலிகளை ஏற்றியுள்ளேன். இவற்றுள் பெரும்பாலானவை, கடந்த ஒரே ஆண்டில் உருப்பெற்றவை. பொது முடக்கக் காலத்திலும் செயல்வேகத்துடன் கிளர்ந்து எழுந்தவை. எந்தத் திசையிலும் கிளைவிரிக்கும் சுதந்திரத்துடன் விரிந்தவை. பல்வேறு பிரிவுகளில், தலைப்புகளில், சுவைகளில் அமைந்தவை. அன்பர்கள் இவற்றைப் பார்த்து, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.

    உங்களுக்குப் பிடித்திருந்தால், நேயர் குழுவில் இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    https://www.youtube.com/user/annakannan

    Share
  • நித்திலாவின் கலைப்பொருள்கள்

    நித்திலாவின் கலைப்பொருள்கள்

    நித்திலா புதிது புதிதாக நிறையக் கற்றும் செய்து பார்த்தும் வருகிறார். அவற்றுள் ஓவியங்கள், கலைப்பொருள்கள், பாடல்கள், விளையாட்டுகள் எனப் பலவும் உண்டு. இந்தப் பதிவில் நித்திலா, தமது கலைப்பொருள்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இது, நமது அலைவரிசையின் 1000ஆவது பதிவு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மதுமிதாவின் பயணங்கள் – ஜெயந்தி சங்கர் நேர்காணல் – 1

    மதுமிதாவின் பயணங்கள் – ஜெயந்தி சங்கர் நேர்காணல் – 1

    சந்திப்பு: ஜெயந்தி சங்கர்

    கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மதுமிதா, அண்மையில் அமெரிக்கா, இலங்கை நாடுகளுக்குச் சென்றுவந்தார். அவருடைய பயண அனுபவங்களை எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அப்பா

    அப்பா

    பாஸ்கர் சேஷாத்ரி

    கொஞ்சம் கொஞ்சமாக அப்பா போலாகிக்கொண்டு இருக்கிறேன் .
    அவரைப் போல, வருவோர் போவோரை ஓரக்கண்ணால்
    பார்க்கிறேன்
    சம்பந்தமில்லாமல் அவ்வப்போது ம்ம் கொட்டுகிறேன்
    எட்டாங்கிளாஸ் இங்கிலீஷ் எவனுக்கு வருமென்கிறேன்
    பேரனிடம் அவன் அப்பனை வளர்த்த கதை சொல்கிறேன்
    மருமகள் எனினும் தம்பெண் போலுண்டா என்கிறேன்.
    அவரைப்போலக் காபி குடித்து டபராவை வைக்கிறேன்
    ஒரு காதைக் கூர்ப்பாக்கி, தலை சாய்த்துக் கேட்கிறேன்
    இட்ட உணவை அவர் போல மிச்சமின்றி வைக்கிறேன்
    பலமிழிந்த கால்களுடன் அவர் போல நடக்கிறேன்
    வெற்றிலையும் பாக்கும் வாழ்க்கை என நினைக்கிறேன்
    சுவரோர மூலையைச் சொர்க்கமென நினைக்கிறேன்
    போதுமிந்த வாழ்வுன விடுதலைக்கு ஏங்குகிறேன்
    ஆனாலும் என்ன செய்ய-தூங்கிய பின் விழிக்கிறேன்.

    Share