Blog

  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 26

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 26

    -மேகலா இராமமூர்த்தி

    பம்பை எனும் பொய்கையின் அழகு காண்போரைக் கவரவல்லது. அந்தப் பொய்கையில் முகங்காட்டிய மணமலி தாமரையும் வாசமிகு குவளை மலர்களும் இராமனுக்குச் சீதையின் திருமுகமாகவும் கண்களாகவும் காட்சியளித்து, அவளின் பிரிவுத்துயரால் புண்பட்ட அவன் மனத்திற்கு மருந்து தடவியதுபோல் சிறிது ஆறுதலளித்தன. அந்தப் பொய்கையை ஆழ்ந்துநோக்கிய இராமன், ”என் சீதையின் கண்களையும் முகத்தையும் காட்டிய பொய்கையே! அவளின் முழுவடிவத்தையும் காட்டமாட்டாயா? தம்மால் இயன்றதைச் செய்யாமல் உலோபம் செய்பவர்கள் உயர்ந்தவர்கள் ஆகமாட்டார்கள்!” என்றான்.

    வண்ண நறுந் தாமரை மலரும்
         வாசக் குவளை நாள்மலரும்
    புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும்
         மருந்தின் தரும் பொய்காய்
    கண்ணும் முகமும் காட்டுவாய்
         வடிவும் ஒருகால் காட்டாயோ
    ஒண்ணும் என்னின் அஃது
         உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ. (கம்ப: பம்பை வாவிப் படலம்  – 3834)

    அன்றைய இரவை பம்பைக்கு அருகிலிருந்த சோலையில் கழித்துவிட்டு, மறுநாள் சூரியன் உதித்ததும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர் இராமலக்குவர். காடும் மலையும் கடந்து சவரி குறிப்பிட்ட உருசியமுக மலையை அடைந்து அதன்மீது விரைவாய் ஏறினர்.

    அம்மலைமீது வசித்துவந்த குரக்கினத்தரசனான சுக்கிரீவன் அப்போது அவர்களைக் கண்டான். அவர்கள் இருவரும் தன் தமையன் வாலி ஏவலால் தன்னைக் கொல்லவருகின்ற பகைவர்களே என்றெண்ணி அச்சம் கொண்டான். விரைந்தோடி அங்குள்ள குகை ஒன்றினுள் புகுந்தான். அங்கிருந்தோரும் சுக்கிரீவன் மூலமாக இந்தப் புதியவர்களின் வரவையறிந்து அச்சமுற்று ஒளிந்தனர். குரக்கினத்தாரின் அச்சத்தையும் மருட்சியையும் கண்ட அஞ்சனை மைந்தனும் சுக்கிரீவனின் அமைச்சனுமான அனுமன், அவர்களைப் பார்த்து, ”யாரும் அஞ்சற்க!
    நான்போய் அவர்கள் யாரென அறிந்துவருகின்றேன்” எனக்கூறிப் புறப்பட்டான்.

    தன் சொந்த உருவோடு செல்லாமல் ஒரு மாணவ பிரமசாரிபோல் மானுட வடிவெடுத்துச் சென்ற அனுமன், இராமனும் இலக்குவனும் வருகின்ற வழியில் சற்றே மறைவாக நின்று அவர்களைக் கூர்ந்து கவனித்தான்.

    பிறரின் முகக்குறிப்பு க(கொ)ண்டே அவர்களின் அகத்தைப் படிக்கும் ஆற்றலாளனான அனுமன், “அறமும் நல்லொழுக்கமுமன்றிப் பிறிதொன்றையும் தம் செல்வமாகக் கொள்ளாதவராய்த் தோன்றும் இவர்கள், பெறற்கரும் அமிழ்தனைய தம் பொருளொன்றுக்கு அழிவு வந்துற்றதால் அதனையே இருமருங்கும் தேடித் துழாவுகின்றவர்களைப் போலல்லவா தோன்றுகின்றனர்!” என்று தன்னுள் எண்ணினான்.

    தருமமும் தகவும் இவர் தனம்
         எனும் தகையர் இவர்
    கருமமும் பிறிது ஓர் பொருள் கருதி
         அன்று அது கருதின்
    அரு மருந்து அனையது இடை
         அழிவு வந்துளது அதனை
    இருமருங்கினும் நெடிது
         துருவுகின்றனர் இவர்கள். (கம்ப: அனுமப் படலம் – 3859)

    அவர்களையே நோக்கிக் கொண்டிருந்த அனுமனுக்கு அவர்கள்மீது இனம்புரியாத அன்பு பெருகிற்று; தம்மிடம் நேயம்கொண்டவர்களை நெடுநாட்களுக்குமுன்பு பிரிந்து மீண்டும் சந்திப்பதைப் போன்றதோர் உணர்ச்சி ஏற்பட்டு உள்ளம் உருகிற்று. அதற்குக் காரணம் விளங்காதவனாய் அவர்கள் எதிரில்சென்று நின்றான் அவன். அவர்கள் அருகில் வந்ததும் “உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று அவர்களை வரவேற்றான்.

    அனுமனைக் கண்ட இராமன், ”நீ யார்? எவ்விடத்திலிருந்து வருகிறாய்?” என்று கேட்கவும், ”நீலநிறத்துக் கோல மேனியனே! செந்தாமரைக் கண்ணனே! யான் வாயுதேவனுக்கு அஞ்சனை வயிற்றில் பிறந்த மைந்தன்; என் பெயர் அனுமன்! இந்த உருசியமுக மலையில் எரிகதிர்ச்செல்வன் மைந்தனான சுக்கிரீவனுக்கு ஏவல்செய்து வாழ்ந்துவருகின்றேன். என் தலைவன் உங்களிருவரையும் யாரென அறிந்துவரச் சொன்னதால் இங்கு வந்தேன்” என்று தன்னைப் பற்றியும் தான் அங்குவந்த நோக்கத்தையும் இராமலக்குவருக்கு அறியத் தந்தான்.

    ‘புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம்’ எனும் பழமொழிக்கேற்ப அனுமனின் நயத்தகு மொழிகளால் அவனின் அறிவுக்கூர்மையை உணர்ந்த இராமன் இளவல் இலக்குவனைப் பார்த்து,

    ”வில்சுமந்த தோளனே! இவன் கல்லாத கலைகளும், வேதக் கடலும் உலகில் இல்லை எனும்படியாக இவனது சொல்லாற்றல் வெளிப்பட்டதல்லவா? இச்சொல்லின் செல்வன் யார்? நான்முகனா? விடைவலானான சிவனா?” என்று அனுமனை வியந்தும் நயந்தும் உரைத்தான்.

    இல்லாத உலகத்து எங்கும் இங்கு
         இவன் இசைகள் கூரக்
    கல்லாத கலையும் வேதக் கடலுமே
         என்னும் காட்சி
    சொல்லாலே தோன்றிற்று அன்றே
         யார்கொல் இச் சொல்லின்செல்வன்
    வில் ஆர்தோள் இளைய
         வீர விரிஞ்சனோ விடைவலானோ. (கம்ப: அனுமப் படலம் – 3870)

    பின்னர் அனுமனிடம், ”நீ குறிப்பிட்ட கவிக்குலத்து அரசனை (சுக்கிரீவன்) காணவே நாங்கள் வந்திருக்கின்றோம்; அவனிடம் எம்மை அழைத்துச் செல்வாயாக” என்றான். அதுகேட்ட அனுமன், உம்மையொத்த உத்தமர்கள் சுக்கிரீவனைக் காணவிரும்புதல் அவனுடைய செய்தவமே!” என்று மகிழ்ந்துரைத்துவிட்டு,

    ”இரவியின் புதல்வனான சுக்கிரீவன், இந்திரன் புதல்வனாகிய இரக்கமற்ற வாலி துரத்தியதால் அஞ்சி இந்த மலையில் தஞ்சம் புகுந்திருக்கின்றான்; நீங்கள் இங்கு வந்தமையால் அவன் இழந்த செல்வத்தை மீண்டும் அடைவான்” என்றான் நம்பிக்கையோடு. வாலிக்கும் சுக்கிரீவனுக்குமிடையே இருக்கும் மனவேறுபாட்டை நுட்பமாய் வெளிப்படுத்தும் வகையில் வாலியைச் சுக்கிரீவனின் அண்ணன் என்றுரைக்காது இந்திரன் புதல்வன் என்றுரைக்கின்றான் அனுமன்.  

    தொடர்ந்தவன்…”ஐயன்மீர்! எம் தலைவன் சுக்கிரீவனிடம் உங்கள் இருவரையும் பற்றிச் சொல்ல விழைகின்றேன். உங்களை யார் என்று நான் அவனிடம் விளம்பவேண்டும்? சொல்லுங்கள்! என்று பணிவோடு வினவித் தன் மதிநுட்பத்தை மீண்டும் நிரூபித்தான். 

    அப்போது இலக்குவன் இராமனின் வரலாற்றை அனுமனிடம் உரைக்கலானான். ”அறிவும் செங்கோல்திறமும் உடைய அயோத்தி மன்னன் தயரதனின் புதல்வன் இந்த ஆண்தகை. அன்னையின் ஏவலால் தனக்கு உரிமையான அரசச் செல்வத்தைத் தம்பிக்கு நல்கிவிட்டுக் கானம்சேர்ந்த இவன்பெயர் இராமன். நான் இவனுக்கு ஏவல் செய்யும் அடியவன்” என இராமனின் பிறப்புத் தொடங்கி இராவணனின் கீழ்த்தரமான புன்செயலால் அவன் மனைவி சீதை காணாமற்போனது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான் இலக்குவன்.

    செப்பருங்குணத்து இராமனின் பெருந்தன்மையையும் நல்லொழுக்கத்தையும் அறிந்து அவன் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் மாணி உருவில் இருந்த மாருதி (அனுமன்). நீ என் காலில் வீழ்தல் முறையில்லை என்று தடுத்த இராமனிடம், நானும் அரிக்குலத்தை (குரக்கினம்) சேர்ந்தவனே என்றுரைத்த அனுமன், தன் சொற்களை மெய்ப்பிக்கும் வகையில் மின்னலைப் போன்ற ஒளிமிகு தோற்றத்தினராகிய தயரத புதல்வர்கள் வியப்புறும்வண்ணம், வேத முதலாகிய சாத்திரங்களே வடிவெடுத்தது வந்ததோ எனும்படியாகவும் பொன்மயமான மேருமலையும் தன் தோள்களுக்கு ஒப்பாகாது எனும்வகையிலும் பேருருக்கொண்டு (விஸ்வரூபம்) நின்றான்.

    மின்உருக் கொண்ட வில்லோர்
         வியப்புற வேத நல் நூல்
    பின் உருக்கொண்டது என்னும் பெருமை
         ஆம் பொருளும் தாழ
    பொன் உருக் கொண்ட மேரு
         புயத்திற்கும் உவமை போதாத்
    தன் உருக்கொண்டு நின்றான்
         தருமத்தின் தனிமை தீர்ப்பான். (கம்ப: அனுமப் படலம் – 3883)

    தருமத்தின் வடிவினராய்த் திகழுகின்ற இராமலக்குவரின் தனிமையைத் தீர்க்கவந்தவன் ஆகையால் அனுமனைத் ’தருமத்தின் தனிமை தீர்ப்பான்’ என்று ஈண்டு விதந்தோதுகின்றார் கம்பநாடர்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

     

    Share
  • வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு!

    வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு!

    ஜோதிர்லதா கிரிஜா

    ‘ஓ….ஓ ….ஓ  …ஓ … ஓ… ஓ… ஓ … அழகு நாடு, அருமை நாடு, இது எங்க நாடு, இது எங்க நாடு, எங்கும் புகழ் தங்கும் நாடு, வளம் பொங்கும் நாடு, வந்த எல்லார்க்கும் எடங் குடுத்து ஏமாந்த நாடு!’ – இது அறிஞர் அண்ணாவின் – 1951இல் வெளிவந்த – ஓர் இரவு திரைப்படப் பாடலாகும். இதை இயற்றியவர் அவ்வை டி.கே. ஷண்முகம் ஆவார். இதன் மற்ற நிறுத்தங்களும் முறையே இன்றைய நம் மக்களுடையவும் நம் நாட்டுடையவும் மனப்பான்மையையும் நிலைமையையும் எடுத்துக் காட்டுபவையாக உள்ளன.

    சுமார் எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களால் துன்புறுத்தித் துரத்தவும் பட்ட யூதர் இனத்தினர் – இந்தியாவில் பார்சிகள் எனப் பின்னாளில் பெயர் பெற்றோர் – அடைக்கலம் தேடி முதலில் இந்தியாவுக்குத்தான் சுமார் பதினெட்டாயிரம் பேர் கப்பலில் வந்திறங்கினர்.   அப்போது குஜராத் மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த மகாராஜா ஜதி ராணாவை அவர்களின் தலைவர் சந்தித்துப் பேசினார். தமது இராஜ்ஜியத்திலேயே மக்கள்தொகை நிறைய இருப்பதாய்ச் சொல்லி அதை அடையாளப் படுத்தும் முறையில் ஜதி ராணா ஒரு கோப்பையில் அதன் விளிம்பு வரை ததும்புகிறாற்போல் பாலை ஊற்றி அவரிடம் கொடுத்தாராம். அதைப் புரிந்துகொண்ட பார்சிகளின் தலைவர் அந்தக் கோப்பையில் சிறிது தேனை ஊற்றி அந்தப் பாலில் கலந்து உறையச் செய்தாராம். [சர்க்கரை என்றும் சொல்லுவதுண்டு.] அப்படிச் செய்ததன் வாயிலாக ‘நாங்கள் உங்களோடு ஒன்று கலந்து விடுவோம். நண்பர்களாக இருப்போம். எங்களால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது, எங்கள் வருகை உங்களுக்கு நல்லதே செய்யும்’ என்று உணர்த்தினாராம். மன்னர் ஜதி ராணாவும் அவர்களை அன்புடன் ஏற்றுத் தம் இராஜ்ஜியத்தில் தங்க ஒப்புதல் அளித்தாராம். அந்தக் காலத்திலேயே இந்தியா வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் நாடு என்பதை அன்னியர்கள் புரிந்துகொண்டவர்களாக இருந்தார்கள் என்பதைத் தானே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது?

    இந்த ஈவிரக்கத்தை அன்னியர்கள் சிலர், தங்களுக்குச் சாதகப்படுத்திக் கொண்டதன் விளைவாகத்தான் இன்று இந்தியா பல தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளது. இந்திய இராஜ்ஜியங்களின் மன்னர்கள் ஒற்றுமையின்றி இருந்ததும் அன்னியர்க்கு வசதியாக இருந்த உண்மையை நாம் மறுக்க முடியாது. ஆனால், பார்சியரைப் பொறுத்த மட்டில், அவர்களின் தலைவர் கொடுத்த வாக்குறுதியை அவருடன் வந்த அனைவருமே சிரமேற்கொண்டு ஒழுகி வந்துள்ளனர் என்கிற போற்றத்தக்க நிலையையும் நாம் நன்றியுடன் நினைவுகூர்ந்தே ஆக வேண்டும்.

    பார்சி இனத்தினர் தம் தலைவரது வாக்குறுதிப்படி நட்புணர்வுடன் நடந்து வந்துள்ளதோடு, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக உழைத்தும் வந்துள்ளார்கள். டாடா, பிர்லா, கோத்ரெஜ், மிஸ்திரி, இரானி, வாடியா, பூனாவாலா போன்ற குடும்பப்  பெயர்களை உள்ள பார்சிகளால் இந்தியா விஞ்ஞானம், தொழில், வணிகம் போன்ற பல்வேறு துறைகளிலும் வியத்தகு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் மற்ற பலரும் பார்சிகளைப் போல் இருந்து வந்துள்ளார்களா என்றால் இல்லை என்றே சொல்லும்படி இருக்கிறது. பலரும் இந்துக்களை மதமாற்றம் செய்வதிலும் இந்திய நாட்டின் சட்டங்களை மீறுவதிலுமே குறியாக இருந்து வந்துள்ளார்கள்.

    மிக அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஓர் இஸ்லாமிய அன்பர் அதன்  நிருபருக்கு அனுப்பியிருந்த சேதியைச் செவிமடுக்க வாய்த்தது. ஷாஹின் பாக் பகுதியில் ஆயிரக்கணக்கில் குழுமியிருந்த இஸ்லாமியப் பெண்மணிகள், பொதுமக்கள் பலருக்கும் தாங்கள் விளைவித்துக்கொண்டிருக்கும் தொல்லைகள் பற்றி  நினைத்துப் பார்க்கத் தூண்டும் செய்தியாகும் அது. வணக்கத்துக்குரிய முகம்மது நபி அவர்கள் கூறியுள்ளது. ஒரு நாட்டில் தொற்று நோய் பரவிக்கொண்டிருக்கும் வேளையில் பொதுமக்கள் தத்தம் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென்றும் பொது இடங்களில் கும்பலாய்க் கூடி இருக்கக் கூடாதென்றும் நபிகள் நாயகம் திருக்குரானில் கூறியுள்ளதை அந்த இஸ்லாமியர் ஆதாரத்துடன் அந்தச் சேனலுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

    தம்மோடு பேச்சுவார்த்தைக்குத் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு ஷாஹின் பாகில் குழுமிக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராய்க் குரலெழுப்பிக்கொண்டிருந்த இஸ்லாமியப் பெண்களுக்கு  உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லிய பிறகு – உச்ச நீதி மன்றமும் இரண்டு வக்கீல்களை அனுப்பி அவர்களோடு பேசச் செய்ததன் பிறகும் – அசைந்து கொடுக்க  மறுத்துக்கொண்டிருந்தவர்கள் கடைசியில் ஒரு வழியாய்க் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார்கள். அப்படியும் பிடிவாதம் பிடித்து நீங்க மறுத்த ஒன்பது பெண்களைக் காவல் துறை கைது செய்யும்படி ஆயிற்று.

    பெண்கள் எனும் காரணத்தால் அரசு கண்ணியமாகவும், மென்மையாகவும் நடந்து வந்துள்ளதுதானே இவர்களின் அழிச்சாட்டியத்துக்குக் காரணம்? தொடக்கத்திலேயே அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கூடுமாறு அரசு கட்டாயப்படுத்தத் தவறியதுதான் முதல் கோணலாகும். அந்த மென்போக்கை இந்தப் பெண்கள் ஆதாயப்படுத்திக் கொண்டுள்ளதோடு, சின்னஞ்சிறு குழந்தைகளையெல்லாம் கூட அங்கே அழைத்து வந்துள்ளார்கள். விவரமறியாக் குழந்தைகளையெல்லாம் பிரதமர் மோதியின் பெயரைச் சொல்லி அவருக்கு எதிராய்க் கூச்சலிட வைத்துக்கொண்டிருந்தார்கள். நான்கு மாதக் குழந்தையொன்று இறந்த பிறகும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததுதான் உச்சக்கட்ட சோகம்.

    கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகு தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கப் போவதாய் அந்தப் பெண்கள் கூறிவிட்டுத்தான் கலைந்து சென்றுள்ளார்கள்!

    அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டங்களில் சில பாதகங்கள் இருப்பின் பிறர்க்குத் தொந்தரவற்ற முறைகளில் போராடலாமே. பாதகங்கள் இருப்பின் அவை நீக்கப்பட வேண்டும்தான். ஆனால், அது இஸ்லாமியர்க்கு எதிரானது என்கிற வாதம் துளியும் சரியன்று.

    முத்தலாக் விஷயத்தில் பிரதமர் மோதி அவர்கள் இயற்றிய பெண்ணாதரவுச் சட்டத்தை விரும்பாததால்தான் முஸ்லிம் ஆண்கள் மோதிக்கு எதிராய்ப் போராடத் தங்கள் வீட்டுப் பெண்களைத் தூண்டியுள்ளார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை! இதை அந்தப் பெண்கள் புரிந்துகொள்ளாமல் தங்களுக்கு நல்லது செய்த மோதிக்கு எதிராய்க் கூச்சல் போடுவது வியப்புக்கு உரியதே.

    சில ஆண்டுகளுக்கு முன் ஓர் இஸ்லாமிய நண்பர், எனக்கு எழுதிய கடிதத்தில் முஸ்லிம்களுக்குத் தாய்நாடு என்பதே கிடையாது என்றும் அவர்கள் இஸ்லாமுக்கு மட்டுமே விசுவாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்றும் திருக்குரான் சொல்லுவதாய்க் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்படி நபிகள் நாயகம் கூறவே இல்லை. எந்த நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்கிறாரோ, அந்த நாடே அவரது தாய் நாடு என்று திருக்குரானில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இன்னொன்றையும் தெரிந்துகொள்ள வாய்த்தது. அதாவது அந்த நாட்டு மன்னர் (அதாவது ஆட்சியாளர்) இயற்றும் சட்டம் எதுவானாலும்அது தங்களுக்கு உடன்பாடானதாக இல்லாவிட்டாலும்அதை அங்கு வாழும் இஸ்லாமியர்கள் ஏற்க வேண்டுமென்றும் அவர் அறிவித்துள்ளார்! (சந்தேகப்படுபவர்கள், இணையத்தில் தேடி, கேள்வி எழுப்பித் தெரிந்துகொள்ளலாம்.)

    இந்துக்களிலும், முஸ்லிம்களிலும் உள்ள பெரும்பான்மையினர் கலகக்காரர்கள் அல்லர்.  நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் நட்புடன் பழகி வருபவர்கள். இவர்களின் நெஞ்சங்களில் நஞ்சைக் கலப்பவர்கள் குறுகிய மனப்போக்குள்ள மதத் தீவிரவாதிகளும் அரசியல்வாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் மட்டுமே.

    ‘கோலி மாரோ’ என்று சொல்லுவதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்தான். அப்படி ஓர் இந்து சொன்னதற்கும் முன்னால், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூச்சலிட்டவர்களிடமும்,  ‘ ஒரு மணி நேரத்துக்குள் என்னால் ஒரு லட்சம் இந்துக்களைக் கொன்று விட முடியும்’ என்று ஹைதராபாத்தில் அறைகூவல் விடுத்தவர்களிடமும் அதிகமான குரூரம் உள்ளதல்லவா? காஷ்மீரிலிருந்து இங்கு வந்து படித்துக்கொண்டிருப்பவர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று சொல்லுவதைக் கண்டிப்பது தவறாகுமா?

    எது எப்படி இருந்தாலும், இஸ்லாமியர்கள் தூண்டிவிடவே பட்டிருப்பினும், அவர்களது அச்சத்தை அரசு போக்கத்தான் வேண்டும். ஆயினும் அமித் ஷாவோ, பிரதமரோ ஷாஹின் பாகுக்கு வந்து தங்களைச் சந்திக்கவேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்துக்கொண்டிருந்த தெல்லாம் ரொம்பவும் அதிகப்படி.

    இறுதியாய், ‘கடவுளே! இந்தியாவைக் காப்பாற்று’ என்று வேண்டிக்கொள்ளுவதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 55

    பழகத் தெரிய வேணும் – 55

    நிர்மலா ராகவன்

    திட்டம் போடுங்களேன்!

    `அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்!’

    எந்தமாதிரியான கோலம் போடுவது என்று யோசியாது, எதையோ செய்துவைப்போம் என்று செய்தால் இப்படித்தான் ஆகும்.

    முன் திட்டமில்லாது, பேச்சாளரோ, பாடகரோ மேடையில் ஏறியபின் என்ன செய்வது என்று புரியாது விழித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?

    உரையாற்ற அழைத்து, நிர்வாகிகள் தலைப்பை அளித்துவிட்டால், உடனடியாக என்ன பேசுவது என்று தோன்ற ஆரம்பிக்கும். குறித்துக்கொள்ளாவிட்டால் மறக்கும் அபாயம் உண்டு.

    நான் உரையாற்ற அவைக்குமுன் நின்று, சில வினாடிகள் சுற்றுமுற்றும் பார்ப்பேன்.

    லேசான சிரிப்பு எழும்.

    `என் பேச்சால் உங்களைக் கவரப்போகிறேன். மனம்விட்டுச் சிரிக்கப்போகிறீர்கள்!’ என்று அவர்களுக்கு மானசீகமாக ஒரு செய்தியை இப்படி அனுப்புகிறேன்.

    எங்கோ படித்த இம்முறையை நான் கையாள, பத்து வினாடிகளுக்குள் அவையினர் எனக்குக் கட்டுப்படுவார்கள். சிரிப்பு தானாக எழும்.

    நான் எப்போதோ படித்தது: “தினமும் ஒரே நேரத்தில் காகிதத்தை எதிரில் வைத்துக்கொண்டு, பேனாவைப் பிடியுங்கள். தானே கதை எழுதமுடியும்!”

    இது எப்படி இருக்கிறது தெரியுமா? எங்கே போகவேண்டும் என்ற முன்யோசனை இல்லாது, கால்போன போக்கில் செல்வதுபோல்தான். எங்காவது கொண்டு விட்டுவிடும்.

    ஒரு கதை எழுத ஆரம்பிக்குமுன் கருவை யோசித்தாலே போதும். அதன்பின், பாத்திரங்கள். இவற்றை வைத்து ஆரம்பித்தாலே போதும். முடிவு எழுத்தாளர் கையில் இல்லை. கதை தானே நகரும் — பாத்திரங்கள் சொல்லிக்கொடுப்பார்கள்.

    தினசரி திட்டமிடு

    கதை

    “ஒவ்வொரு நாளும் சமைக்க உனக்கு எத்தனை மணிநேரம் ஆகும்?” என்று என் சக ஆசிரியை கேட்டாள். அத்தனை வேலைப்பளுவிலும் என்னால் எப்படி எழுதவும் முடிகிறது என்று அவளுக்கு ஆச்சரியம்.

    என் பதிலைக் கேட்டு, “என்ன சமைப்பது என்று யோசிக்க வேண்டாமா?” என்று கேட்டாள்.

    “வாங்கும்போதே நிச்சயித்துவிடுவேன், எந்தக் கறிகாயை எப்படி ஆக்குவது என்று”.

    “அதற்கே எனக்கு ஒரு மணி ஆகும்,” என்று பெருமூச்சு விட்டாள்.

    என் பாட்டி முதல் நாள் இரவே சின்ன வெங்காயத்தின் இரு முனைகளிலும் நறுக்கி, தண்ணீரில் ஊற வைத்து விடுவார்கள். மறுநாள் சற்றே கசக்கினால் தோல் எளிதாக அகன்றுவிடும்.

    `நல்ல வெயில் அடிக்கிறது! அப்பளம் இடவேண்டும்!’ என்று குடும்பத் தலைவிகள் திட்டமிடுவார்கள்.

    பலரும் முன்யோசனை இல்லாது ஏதாவது செய்துவிட்டு, `இப்படிச் செய்திருக்கலாமே!’ என்று வருந்துவார்கள். மழைகாலத்தில் அப்பளம் இடத் திட்டம் போடுவதுபோல்தான்.

    கதை

    ஒருவர் நீண்ட காலம் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர். உடல்நிலை மிகக் கெட்டு, `இப்பழக்கத்தை அறவே ஒழிக்காவிட்டால் இறந்து போவீர்கள்!’ என்று மருத்துவர்கள் எச்சரிக்க, அதை விட்டார்.

    உற்றவர்களிடமெல்லாம், “நான் குடிக்காமல் இருந்திருந்தால், ஐயாயிரம் வெள்ளியை மிச்சப்படுத்தி இருப்பேன்! ருசியான எந்த ஆகாரத்தைச் சாப்பிடவும் முடிவில்லை. மருந்தே உணவாகிவிட்டது. இப்படியாவது உயிர் வாழ வேண்டுமா?” என்று புலம்பினார்.

    காலம் கடந்தபின் புத்தி வந்து என்ன பயன்?

    செய்த தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருக்கலாமே!

    என் மாணவன் ஒருவன் உழைத்துப் படிப்பான். ஏனோ, பிறகு படிப்பில் மனம் போகவில்லை.

    நான் அவனை விசாரித்தபோது, “எனக்கு நிறைய கெட்ட பழக்கங்கள், டீச்சர்,” என்று ஒப்புக்கொண்டான் — அலட்சியமாக.

    “தப்பு என்றுதான் உனக்குத் தெரிகிறதே! அவற்றை விடுவதுதானே!” என்றேன்.

    “எப்படி முடியும்? என் நண்பர்கள் எல்லாரும் விஷம்!” என்றான்.

    குறுகிய காலத்தில் எப்படி உல்லாசமாகக் கழிக்கலாம் என்று நண்பர்கள் வழிகாட்டியதை ஏற்றான். அவர்கள் தன்னைக் கெடுக்கிறார்கள் என்று புரிந்தும், அவர்களிடமிருந்து விலக முடியவில்லை.

    `நான் பெரிய ஆளாவேன்!’ என்று கனவு கண்டால் மட்டும் போதுமா? அதற்கான முயற்சிகள் வேண்டாமா?

    “ஆறு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டுமானால், நான் முதல் ஒரு மணியைக் கோடரியைத் தீட்டுவதற்காகச் செலவழிப்பேன்!” என்று முன்னுக்கு வரும் வழியைக் காட்டுகிறார் மாஜி அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன்.

    பள்ளிப் பரீட்சைக்கு ஆயத்தம்

    `சிறந்த கல்விக்கூடம்’ என்று பெயரெடுத்தவைகளில் ஒவ்வொரு வாரமும் முதல் வாரத்தில் நடந்த பாடங்களில் ஒரு சிறு பரீட்சை வைப்பார்கள். அதன்பின், மாதாந்திர பரீட்சை. நீண்ட விடுமுறைக்காலத்திற்குமுன் பெரிய பரீட்சைகள். அவைகளை எதிர்கொள்ள `படிப்புக்காக’ என்று ஒரு மாத விடுப்பு அளிப்பதும் உண்டு.

    இல்லாவிட்டால், `இவ்வளவு பக்கங்களா! எப்படி படித்து முடிப்பது!’ என்று மலைப்பாக இருக்கும். ஓயாமல் படிக்க நேரிடும்போது, அவ்வப்போது வயிற்றையும் கொஞ்சம் கவனித்து, பழவகைகள் சாப்பிட்டால், உடல்சோர்வைத் தவிர்க்கலாம்.

    அதிகாலையில் அவ்வளவாக கவனம் சிதறாது. ஆகையால், கணக்கு, விஞ்ஞானம் போன்றவற்றை அப்போது படித்தால் தெளிவாக விளங்கும். இவை இரண்டிலும் உள்ள கணக்குகளை எழுதிப் பழக வேண்டும். விஞ்ஞானப்பாடத்தில் வரும் படங்களையும் வரைந்து பழகவேண்டும்.

    கால்மணி நேர ஓய்வுக்குப்பின், சரித்திரம், பூகோளம். இறுதியில் மொழி.

    முதலிலேயே, ஒவ்வொரு பாடத்திலும் எங்கு ஆரம்பித்து, எதுவரை படிக்கவேண்டும் என்றெல்லாம் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும்.

    வருட ஆரம்பத்திலேயே மாணவர்களுக்குத் தெரியப்படுத்திவிடுவதால், அவர்கள் தயாராக இருப்பார்கள். மாநிலங்களில் சில பள்ளி மாணவர்களே முதன்மையாக வரும் ரகசியம் இதுதான்.

    இப்படியில்லாது, கடைசி நிமிடத்தில் டீ, காப்பி என்று மணிக்கொரு தடவை குடித்து, கண்விழித்துப் படித்தால் தலை கனத்துப்போகும். வயிற்றைப் புரட்டும். புத்தகம் படிப்பது என்பது வெறுக்கத்தக்க காரியம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.

    செய்ய முடியாத காரியத்தை வீம்புக்காகச் செய்வதைவிட, திறமையும் ஆர்வமும் உள்ளவற்றில் ஈடுபடுவது மேல்.

    கதை

    ரூபாவுக்குப் பதினைந்து வயதாக இருந்தபோது, அவளுடைய ஆசிரியை வருந்திக் கூறினாள்: “நீ என் பாடத்தில் எப்படித் தேர்ச்சி பெறுவாய்? என் சதவிகிதம் உன்னால் குறைந்துவிடப்போகிறது!”

    அந்த மாணவியின் கைகளில் ஐந்து வயதுக்குரிய ஆற்றல்தான் இருந்தன. படங்கள் வரைய முடியாது.

    ஆனால், அவள் மொழிகளில் கெட்டிக்காரி.

    இது புரிந்து, ரூபாவின் பெற்றோர் அவள் ஓர் அந்நிய மொழி கற்க ஏற்பாடு செய்தார்கள். அதற்காகக் கூடுதலாகச் செலவு. இருந்தாலும், அவளால் முடிந்த காரியத்தைச் செய்தபோது, மகிழ்வுடன் பெரும் வெற்றியும் கிடைத்தது.

    பயணத் திட்டம்

    “எனக்கு வெளியூர் போகவே பிடிக்காது. போகுமுன் நிறைய சாமான்களை எடுத்துக்கொள்ள வேண்டும். திரும்பியபின், அவைகளை சுத்தப்படுத்தி ஒழித்துவைக்க இன்னும் வேலை!” என்று முகம் சுளித்தாள் என் சக ஆசிரியை.

    என்னைப் பொறுத்தவரை, உல்லாசமாக ஓரிடத்திற்குப் போவதற்குமுன் அதற்கான திட்டங்கள் வகுப்பதுதான் மகிழ்ச்சி தரும் காரியம்.

    குளிர் ஊரானால், அதற்குத் தகுந்த ஆடைகள் எடுத்துப்போக வேண்டும். வெளியூர் எங்கு போவதானாலும் தலைவலி, காய்ச்சல், வயிற்று உபாதைகள் எல்லாவற்றிற்கும் மருந்துகள். அவை தேவைப்படாது, திரும்பக் கொண்டுவந்திருக்கிறேன்.

    அதனால் என்ன! மருந்துக் கடைகளைத் தேடிப் போகும் அசௌகரியத்தை தவிர்க்கலாமே!

    புதிய இடங்களைச் சுற்றிப்பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சலும் எழாது.

    வீடு திரும்பியதும், உடல் சோர்வாக இருந்தாலும், மனம் உற்சாகமாக இருக்கும். வழக்கம்போல் செய்யும் காரியங்களில் எப்போதும் ஏற்படும் அலுப்பு மறைந்திருக்கும்.

    நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A

    Share
  • படக்கவிதைப் போட்டி – 296

    படக்கவிதைப் போட்டி – 296

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் மாரியப்பன் கோவிந்தன் எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.02.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • தமிழ், ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியா?

    தமிழ், ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியா?

    தமிழ், ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியா? இதோ, ஓர் அலசல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்னைப் புத்தகக் காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

    சென்னைப் புத்தகக் காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

    2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம். ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு எனப் புதிய ஐந்து நூல்கள் வெளியாகவிருக்கின்றன.

    எம். ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள ‘கிகோர்’ (சோவியத் ரஷ்ய இலக்கியம்), ‘தரணி’ ஆகிய புதிய நாவல்களையும், ‘திருமதி பெரேரா’, ‘அந்திமக் காலத்தின் இறுதி நேசம்’ ‘சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்’ ஆகிய புதிய சிறுகதைத் தொகுப்புகளையும் இந்தக் கண்காட்சியில் பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு, இதுவரை வெளியாகியுள்ள எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வம்சி, காலச்சுவடு, டிஸ்கவரி புக்பேலஸ், பாரதி புத்தகாலயம், பரிசல் புத்தக நிலையம் ஆகிய அரங்குகளில் கிடைக்கும்.

    எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையில் மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் தனது நூல்களுக்காக இதுவரை இலங்கை அரச சாகித்திய விருது, கனடா இயல் விருது, இந்தியா வம்சி மற்றும் வாசகசாலை விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Share
  • நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது

    நாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P. Eng (Nuclear) கனடா

    1. https://www.fastcompany.com/90448176/inside-nasas-2-5-billion-mission-to-find-evidence-of-life-on-mars
    2. https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7563
    3. https://youtu.be/s595S1Vf3PE

    Image result for mars 2020 mission"

    olympus-mons-volcano-5

    செவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை

    +++++++++++++

    2021 ஆண்டு பிப்ரவரி 18 இல் நாசா மீண்டும் செவ்வாய்க் கோளில் புதுத் தளவூர்தி ஒன்றை இறக்கியது..

    நாசா 2020 இல் ஏவிய விடாமுயற்சி புதுத் தளவுர்தி [MARS 2020 LANDER /ROVER PERSEVERANCE] செந்நிறக் கோள் செவ்வாயிக்கு மீண்டும் பயணம் செய்யக் குறிவைத்து, 2021 பிப்ரவரி 18 இல் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கி வெற்றி அடைந்துள்ளது. நாசா விஞ்ஞானி களின் பிரதம குறிக்கோள் மனிதர் இயக்கும் புதிய விண்கப்பல் செவ்வாய்க் கோளைச் சுற்றுவது, தளவூர்தியை இறக்குவது, மனிதர் இயக்கும் தளவூர்தி மூலம் செவ்வாய்க் கோளை ஆராய்வது.  அந்த புதிய தளவூர்தி  காலிஃபோர்னியா பசடீனா ஜெட் உந்துகணை ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது.  2020 ஜூலை  நாசாவின் செவ்வாய்க் கோள் பயணம் துவங்கி.  விண்கப்பல் 7 மாதங்கள் பயணம் செய்து, 2021 ஆண்டு பிப்ரவரி 18 இல், செவ்வாய்க் கோளை நெருங்கி, தளவூர்தி இறக்கிம் என்பது திட்டம்.

    Image result for mars 2020 mission"

    நாசாவின் மற்ற குறிப்பணிகளில் ஒன்று:  செவ்வாயில் நீர்ச் செழிப்பும், வாயுச் சூழ்வெளியும் இருந்த துவக்க காலத்தில் பூர்வ உயிர்மூலவிகள் இருந்தனவா  என்று உளவும் கருவிகள் அமைக்கப்படும்.  நாசாவின் புதிய தளவூர்தியில் 23 காமிராக்கள், இரு காதுகள் இருக்கும்.  செவ்வாய்ப் புயல் ஓசையை காதுகள் கேட்கும்.  தளவூர்தி ஒரு கார் அளவு  ஆறு சக்கர வாகனம்.  ஒரு செவ்வாய் நாளில் ஆமைபோல் 600 அடிதான் நகரும்.  அதை இயக்குவது ஓர் சிறிய அணு மின்சக்தி உலை. தளவூர்தியில் ஏழடி நீளும் ஏழு கரங்கள் உள்ளன.  ஒரு துளை தோண்டி [Drill] பாறையைத் தோண்டி உளவ உதவும்.  மாதிரிகள் சேமிக்கப்பட்டு வைக்கப் படும்.  அவற்றை அள்ளிக் கொண்டுவர, 2026  இல் அடுத்த விண்கப்பல் அனுப்பப்படும்.  தளவூர்தி இறங்கப் போகும் பெருங்குழி 1500 ஆழம், சுமார் 300 மைல் அகலம் கொண்ட ஒரு பூர்வீக நீர் இருந்த ஏரி.  3.5 – 3.9 மில்லியன் ஆண்டுகட்கு முன் செவ்வாய்க் கோளில் நீர் ஆறுகள், ஏரிகள், சூழ்வாயு மண்டலம் இருந்து பின்னால் அவை யாவும் வற்றி விட்டன என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  நாசா 2012 இல் ஏவிய  முதல் தளவுளவி “கியூரியாசிட்டி”  இன்னும் செவ்வாய்த் தளத்தில் இயங்கிக் கொண்டு வருகிறது.

    ++++++++++++++++++++

    அது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100 விண்கற்கள் [Meteorites] செவ்வாய்க் கோள் விண்கற்களாய்த் தீர்மானிக்கப் பட்டுள்ளன.  விண்வெளித் தீரர் இதுவரைச் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க விட்டாலும், இந்த 100 விண்கற்கள்  அவற்றின் எறிகற்களாய்க் கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. இந்த மாதிரி எறிகற்கள் [Meteorites] வடமேற்கு ஆஃபிரிக்கா [North West Africa (NWA) 7635] எனப் பெயரிடப்பட்டு, செவ்வாய்க் கோள் மாதிரிகளாக அறியப் படுகின்றன.  NWA 7635 எறிகற்கள் 1.1 மில்லியன் ஆண்டுகள் அகிலக் கதிர்களால் [Cosmic Rays] தாக்கப்பட்டுச் செவ்வாய்க் கோளிலிருந்து வீழ்ந்தவை என்று ஆராயப் பட்டுள்ளன.  எறிகற்கள் 500 மில்லியன் ஆண்டுகட்கு முற்பட்டவை என்று அறிந்தோம்.  அதாவது செவ்வாய்க் கோளில் 2 பில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து எரிமலைப் பாறைக் குழம்பு [Magma] ஒரே தளத்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது.  அதுபோல் பூமியில் எங்கும் எரிமலையில் நிகழ்ந்ததில்லை.

    மார்க்  காஃப்ஃபி [Marc Caffee, Professor of Astronomy, Purdue University, USA]

    செவ்வாய்க் கோளில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை.

    2019 பிப்ரவரி 12 இல் அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் தென் துருவத் தளத்துக்கு அடியில் சமீபத்தில் [A few hundred thousand years] எரிந்து தணிந்த ஓர் எரிமலை இருந்திருக்கக் கூடும் என்று ஏஜியு  [American Geophysical Union (AGU) JOURNAL]  விஞ்ஞான இதழில்  அறிவித்துள்ளார். 2018 இல் வெளியான இதழில் தென் துருவப் பனித் தொப்பியின் கீழ் திரவ நீர் உள்ளது என்று அறிவிக் கப்பட்டிருந்தது.   புதிதாக வந்து செய்தியில், செவ்வாயில் அவ்விதம் திரவ நீர் இருக்க அடித்தள வெப்பம் தரும் ஓர் மூல காரணி இருந்திருக்க வேண்டும் உறுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.

    விஞ்ஞானிகள் குறிப்பாகச் சொல்வது, ஒரு சில நூறாயிர ஆண்டு களில் செவ்வாய்க் கோளின் தென் துருவ அடித்தளத்தில் சமீபத்திய எரிமலைக் குழம்புக் குழி இயக்கம்  [Magmatic Activity] 1.5  கி.மீடர் [9 மைல்[ ஆழத்தில் நேர்ந்திருக்க வேண்டும்.  அவ்விதம் நிகழ்ந்து வெப்பம் சூடாக்கா விட்டால், திரவ நீர் இருந்திருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறார்.   செவ்வாய்க் கோளில் அடித்தளத் திரவ நீர் இருந்தால் அதில் உயிரினம் சூரியக் கதிர்கள் தாக்காது விருத்தியாக முடியும் என்று கருதுகிறார்.

    mars-volcano-olympus-mons
    olympus-mons-volcano-8

    olympus-mons-volcano-10

    செவ்வாய்க் கோளிலிருந்த வீழ்ந்த ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலைக் கற்கள்

    2012 ஆண்டில் அல்ஜீரியா நாட்டில் ஓர் அபூர்வ விண்கல் [Meteorite] கண்டு எடுக்கப்பட்டது.  அந்த எறிகல்தான் செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகள் இருந்திருப்பதை விஞ்ஞானிகளுக்கு உறுதி செய்துள்ளது. அந்த மாதிரி விண்கல் இதுவரைப் பூமியில் காணப்பட வில்லை.  6.9 அவுன்ஸ் எடையுள்ள அந்த எறிகல்லை அகில உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, செவ்வாய்க் கோளில் ஒரு பூத எரிமலை 2 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாய் தொடர்ந்து பொங்கி எழுந்துள்ள நிகழ்ச்சி தெரிய வருகிறது.

    ஓவ்வோர் ஆண்டும் 1000 மேற்பட்ட எறிகற்கள் அண்டார்க்டிகா, மற்றும் பாலைவனங்களில் செவ்வாய்க் கோளிலிருந்தோ, நிலவிலிருந்தோ விழுகின்றன. அவற்றில் சாதாரண மாதிரி விண்கற்கள் ஆய்வுக்காக ஸ்மித்சோனியன் ஆய்வுக் கூடத்துக்கும், அபூர்வமானவை நாசா விண்வெளி ஆணையகத்துக்கும் அனுப்பப் படுகின்றன.  அவற்றில் 100 எறிகற்கள் செவ்வாய்க் கோளிலிருந்து விழுந்துள்ளதாக அறியப் பட்டுள்ளன.  அவற்றுக்கு வடமேற்கு ஆஃபிரிக்க [North West Africa NWA 7635] மாதிரிகள் என்று பெயர் இட்டுள்ளார்.  2012 இல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த 11 எறிகற்கள் ஒரே மாதிரி இரசாயனத் தாதுக்கள் பெற்று செர்கோட்டைட் [Shergottite] என்னும் எரிமலைப் பாறையைச் சேர்ந்தவை என்று அறியப்பட்டது.

    olympus-mons-volcano-4

    ஒலிம்பிக் மான்ஸ் எரிமலை வாய்

    செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசை மிகவும் தணிவானது.  அத்துடன் அதன் மேற்தளத்து மெல்லிய வாயுச் சூழ்வெளியால், கோள் மீது தாக்கி எறியப்படும், துண்டு துணுக்குகள் வெகு எளிதில் வெளியேற ஏதுவாகிறது. மேலும் அந்த எறிகற்கள் நேரடியாகப் பூமிமேல் பாய்ந்து விழுவதில்லை. செவ்வாய்க் கோளின் எறிகற்கள் விண்வெளியில் பல மில்லியன் ஆண்டு களாய்ப் பாதைகளில் சுற்றிவந்து, ஏதோ ஒரு மாற்றத்தில் நம் பூமி மீது பாய்ந்து விழுந்துள்ளன.

    olympus-mons-meteorite

    விஞ்ஞானி மார்க் காஃப்ஃபி காணப்பட்ட 100 எறிகற்களில் 30 மாதிரிகளை பர்தேவ் அரிய ஏகமூலப் பரிமாண ஆய்வுக்கூட  [Purdue Rare Isotope Measurement Laboratory] [PRIME LAB] ஆய்வுக்காகக் கொண்டுவந்தார். அவை செவ்வாய்க் கோளில் நேர்ந்த பூர்வீக நிகழ்ச்சிகளால் எறியப் பட்டவை என்று முடிவில் தீர்மானித்தார்.  அவற்றில் 11 மாதிரிகள் ஒரே சமயத்தில் செவ்வாய்க் கோளிலிருந்து எறியப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டார். அவற்றில் 10 மாதிரிகள் சுமார் 500 மில்லியன் முன்பு, எரிமலைக் குழம்பு [Magma] வெப்பம் தணிந்து வீழ்ந்தவை என்று ஆய்வில் கண்டுபிடித்தார். அவை செவ்வாய்க் கோளில் காணப்பட்ட எரிமலையின் [NWA 7635] எறிகற்கள் என்றும், எரிமலை 2.4 பில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை என்றும் ஆய்வில் கண்டு தெரிவித்தார்.

    அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தின் பூதளவியல் பேராசியர் டாம் லேபன் [ Tom Lapen] 2017 பிப்ரவரி முதல் தேதி விஞ்ஞான முன்னேற்ற வெளியீட்டில்  [Journal Science Advances] செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகளின் வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, எவ்விதம் கோளானது தோன்றியது என்று புதிய கருத்துக்களைக் கூறுகிறார்.

    olympus-mons-volcano

    நமது சூரிய மண்டலத்தில் செவ்வாய்க் கோளில் மட்டும்தான் மகத்தான பெருநிறை எரிமலைகள் இருந்திருப்பதாக அறியப்படுகின்றன.  காரணம் செவ்வாய்க் கோளில் பூமிபோல் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Activities] இல்லை. ஈர்ப்பு விசை தணிவானதால், செவ்வாய்க் கோளில் எரிமலைக் குழம்பு ஓட்டம் நெடுங்காலம் நீடித்துள்ளது. எல்லாவற்றிலும் மிகப் பெரியது“ஒலிம்பஸ் மான்ஸ்” [Olympus Mons] என்னும் பூத எரிமலை.  அது ஒரு “கவச எரிமலை”  [Shield Volcano] என்று அழைக்கப்படுகிறது. ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலை 16 மைல் [25 கி.மீ.] உயரம் உள்ளது. பீட  விட்டம் 374 மைல் [624 கி.மீ.].  அமெரிக்காவின் அரிசோனா மாநிலப் பரப்பளவு உள்ளது.  ஏறக்குறைய பிரான்ஸ் பரப்பளவுக்கு ஒப்பானது.  அது 4 மைல் [6 கி.மீ.] உயரப் பட்டை [Rim] கொண்டது. சிகரத்தில் எரிமலை வாய் [Caldera] 50 மைல் [80 கி.மீ.]  அகண்டது.  பூமியில் ஹாவாயித் தீவுகளில் ஒன்றான “மௌனா லோவா” [Mauna Loa] மலையை விட 100 மடங்கு பெரியது.

    olympus-mons-volcano-9

    Ocean of Mars

    செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து.  அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்..

    கடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும்.

    விண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த அளவில் பல்லாயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பில் பெரும்பாறைகள் கிடப்பதற்குக் காரணம், கடல் வெள்ளச் சரிவைத் தவிர வேறென்ன  இருக்க முடியும்?  மேலும் பெரிதளவு குழிகளும் [Craters] பாறைகளின் அருகில் காணப் படவில்லை.

    லொரினா மஸ்கார்டெல்லி [பூதள நிபுணர், ஆஸ்டின், டெக்ஸஸ் பல்கலைக் கழகம்]

    Mars Ocean

    நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது.  அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில்  உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில்  இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள்ளது.

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]

    செவ்வாய்க் கோளில் உள்ள இவ்விதப் பாறைத் தோற்றங்கள், கடந்த காலத்தில் வெப்பச் சூழ்நிலை இருந்து, தளத்தின் ஈரடிப்புப் பகுதிகள் நெடுந்தூரம் ஓடும் நீரோட்டத் தகுதியை ஏற்படுத்தி யுள்ளன.   இவ்விதம் பூர்வீக ஆற்றுப் படிவுகளைக் கண்டு பிடித்தது, செவ்வாய்க் கோள் தளத்தில் நெடுந்தூரம் ஓடி நீடித்த நீரோட்டம் நிலவி, உயிரின விருத்திக்கு வசதி அளித்திருக்க முடியும் என்று நாம் கருத இடமளிக்கிறது.

    லிண்டா கா [Linda Kah, Associate Professor of Earth & Planetary Science, University of Tennessee, Knoxville]

    Clues for water in Mars

    1980 ஆண்டுகளில் வைக்கிங் விண்வெளிச் சுற்றி [NASA’ S Viking Orbiter] செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யத் துவங்கிக் கடந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் சூடான தர்க்கத்துக்குள் விவாதிக்கப் படுவது இந்தப் பாறைகள் கண்டுபிடிப்புதான்: அதாவது செவ்வாய்க் கோளின் துருவப் பகுதிகளில் பூர்வீகக் கடற்கரைகள் தென்பட்டன! முதலில் சரியான விளக்கம் தரப்படா விடினும், தற்போது ஆங்கே பூர்வீகக் கடல் ஒன்று [பொரியாலிஸ் கடல் — Oceanus Borealis] இருந்திருக்க வேண்டும் என்று ஓர் புது விளக்கம் அளிக்கப் படுகிறது !

    தற்போதைய விண்ணுளவித் தகவல் படங்களில், வட பகுதிச் சமவெளித் தளங்களில் பெரும் பாறைகள் பல ஆயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பளவில் காணப் படுகின்றன. இவற்றைப் படமெடுத்து அனுப்பிய நாசாவின் விண்ணுளவி : செவ்வாய்க் கோள் விண்ணுளவுச் சுற்றி [Mars Reconnaissance Orbiter]. இது ஒன்றும் புதிய கண்டு பிடிப்பில்லை. பழைய கண்டு பிடிப்புக்கு அளிக்கப் படும் ஒரு புது விளக்கமே இந்த கடல் இருப்புக் கோட்பாடு.

    Water flow in Mars -1

    சிற்றாறு நீரோட்டத்தின் வேகம் சுமாராக மனித நடை அளவே என்பதுதான் எங்களுடைய ஊகிப்பு.   இவற்றை மீளியக்க முறையில் செய்து காட்ட முடியாது.   ஒரு கண்ணோட்ட ஒப்பளவில்தான் நாங்கள் குறைந்த அளவாகச் சொல்ல முடியும்.

    பேராசிரியர் சஞ்சீவ் குப்தா [லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து]

    நெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள்  உருவாக ஏதுவாகும்.  அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும்.  பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது. இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம். அவற்றின்   அறிகுறிகளை வைத்து, பூதளவியல் நிபுணர்கள் நீரோட்டத்தின் கொள்ளளவு, நீரின் ஆழம், ஓடும் வேகத் தையும் கணித்துக் கொள்கிறார். தற்போது உறுதிப் படுத்தப் பட்ட சிற்றாறின் நீரோட்ட வேகம் குறைந்த அளவு : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3 அடி தூரம்], [நீரோட்டம் முழங்கால் ஆழம் அல்லது இடுப்பளவு உயரம்.]

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ்.

    Pebbles in Mars

    நீரோட்டக் கூழாங்கற்கள் கண்டுபிடிப்பு  செவ்வாய்க் கோள் பூர்வீக காலத்தில் நீர்வளமாய் இருந்ததை நிரூபிக்கிறது

    ஜூன் மாதம் 4 ஆம் தேதி விஞ்ஞான அறிவிப்பில் நாசாவின் செவ்வாய்த் தளவுளவி [MSL Curiosity Rover] [MSL : Mars Science Laboratory]  150 கி.மீ. அகண்ட  (90 மைல்) கேல் பள்ளத்தாக்கில் [Gale Crater] ஓடி உலர்ந்த சிற்றாறும்,  அதனில் உருண்டையான கூழாங்கற்கள் பற்கலவைப் படிவுகளில் [Rounded Pebbles within Sedimentary Conglomerate] இருந்ததை முதன்முறை காட்டிச் செவ்வாய்க் கோள் தளம் பூர்வ காலத்தில் நீர் வளமாய் இருந்திருப்பதை நிரூபிக்கிறது.  கேல் பள்ளத் தாக்கு 2012 செப்டம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. உலர்ந்த இந்தப் புழுதிப் படிவில் கிடக்கும் கற்களின் அளவு, வடிவு, படிமப் பதிவுகளைப் பார்த்தால் கால்ஃப் [Golf] பந்தளவில் சப்பையாக உருண்டு, திரண்டு நீரோட்டம் உருவாக்கியது போல் தெரிகின்றன. கற்களின் நெளிவு, சுழிவுகள் நீரோட்டம் பன்முறை மோதிச் செதுக்கிய வடிவில் உருண்டது போல் காட்சி தருகின்றன.   அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி ஐலீன் இங்ஸ்ட் [Aileen Yingst]  தற்போது கண்டுள்ள கூழாங்கற்கள் முன்பு கண்டவற்றை விட உருட்டி இருந்ததாக அறிவித்தார்.   இந்த வியப்பான விளைவுத் தகவல் தளவுளவி 275 மீடர் [900 அடி தூரம்] பயணம் செய்து, மூன்று படிமப் பாறைகளைச் சோதித்ததின் பலாபலனே.

    Martian water

    செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

    ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical Team]

    “செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”

    டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA Headquarters)

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)

    Water flow in Mars -2

    தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

    ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

    (2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுளவியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

    ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o  

    [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

    “நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம்.  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு. “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    “ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

    ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

    “ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”

    ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பல்கலைக் கழகம்

    “பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது.

    ‘ ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]

    செவ்வாய்க் கோளில் இம்மி உயிர்கள் வாழ மீதேன் வாயு இருக்கிறதா? 

    கடந்த பத்தாண்டு செய்த செவ்வாய்க் கோள் தள ஆராய்ச்சிகள் மூலம் மிகச் சிறு கால வேளையில் மீதேன் முகில் கோடை காலத்தில் செவ்வாய்ச் சூழ்வெளியில் தோன்றுகிறது என்பது தெரிய வருகிறது. விந்தையான இந்த மீதேன் நிகழ்ச்சி வானியல் விஞ்ஞானிகளை பெரு வியப்பில் ஆழ்த்தி உள்ளது.    இந்தப் புதிர் செவ்வாய்க் கோளின் எந்த வித சூழ்வெளி மாடலுக்கும் ஒத்து வரவில்லை. முதலாண்டு நோக்கிச் செவ்வாய்க் கோள் சூழ்நிலை ஆய்வு செய்த விளைவுகளில் ஏற்பட்ட தர்க்க வினாக்களுக்கு நாசாவின் கியூரியாசிட்டி தளவுளவி பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   உற்பத்தியாகும் மீதேன் வாயு சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்க வேண்டும்.   2010 டிசம்பர் வெளியீட்டில் நாசா அமெஸ் ஆய்வு மைய விஞ்ஞானி கெவின் ஸாநெல் [Kevin Zajnle] செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு இருப்பது பற்றி மிகவும் ஐயப்பாடு தெரிவித்தார். ஆனால் அதே சமயத்தில் எதிர்பாரத விதமாக மெக்ஸிகோ ஆய்வாளர்கள் வேறோர் நியதியுடன் செவ்வாய்க் கோளில் மீதேன் உற்பத்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    Methane Detection in Mars

    அதாவது செந்நிறக் கோளில் நிகழும் “தூசிப் புயல்களே ” [Dust Storms & Dust Devilsச்] மீதேன் உருவாகக் காரணமாகி வருபவை.   மெக்ஸிகோ ஆய்வுக் குழுவினர் மீதேன் உண்டாவதற்கு ஒரு புது முறையை வகுத்துக் காட்டினர்.   செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறை களின் மேற் தளங்களில் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுவதாகக் கூறினர்.   ஆய்வுக் கூடத்தில் நிரூபித்துக் காட்ட பனிக்கட்டி மீது மின்னியல் தாக்கல் செய்து, போலி இயக்கத்தைப் [Laboratory Simulation] புரிந்த போது மீதேன் மூலக்கூறுகள் [1.41 x 1016 molecule of Methane per joule] தோன்றின.  40 ஆண்டுகளாக  செவ்வாய்க் கோளில் மீதேன் சிறிதளவு இருப்பது பற்றிப் பேசப் பட்ட வருகிறது.  மீதேன் இருப்பு உயிரின ஜீவிகள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும்.   நமது பூமியில் உள்ள உயிரின ஜீவிகளே பெரும்பான்மை மீதேன் வாயு உண்டாகக் காரணமாகின்றன. நாசாவின் செவ்வாய்த் தளவுளவி “கியூரியாசிட்டி” செவ்வாய்க் கோள் எப்படித் தன் வாயுச் சூழ்வெளி   இழந்தது என்பதை அறியத் திட்டமிடப் பட்டுள்ளது.   தற்போதைய செவ்வாய்க் கோள் சூழ்வெளி அழுத்தம் பூமியை விட [100 இல் 1 ஆக] நலிவாக உள்ளது.

    Kasei Valles Maps of Mars

    நாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு

    2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது !  அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும்.  மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.  நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம்.  1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்தியதால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது !

    fig-1b-maven-spacecraft-instruments

    செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும்,  இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை !  ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது.  திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது ! பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள்.  மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும்.  செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்கலாம் என்று  ஊகிக்கிறார்கள் !

    fig-1c-climate-orbiter-equipment

    மேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன?

    2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும்.  மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு,  உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும்.  மேலும்

    1.  செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள்.  அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற் றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.

    2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாயுச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவு களை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.

    3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது. 4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.

    மேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்

    செவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும்.  அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங் களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை).  அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும்.  அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப் படும். நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன !  அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாயனத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன.  தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.

    Flood waters on Mars -1

    புதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது !  அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள  சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும்.  அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    மேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தாக்கும் பாதிப்புகளையும் ஆராயும். அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :

    1. (Particles & Field Package PAF) – துகள்கள், காந்தத் தளம் அளப்பது.

    2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.

    Kasei Valles of Mars

    3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.

    4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.

    5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.

    6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும்.  தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு.  (Solar EUV Input to Atmosphere)

    7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.

    8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.

    9. (Imaging Ultraviolet Spectrometer IUVS) – மேற்தள & அயனிக் கோள பொதுப் பண்பாடு அளப்பது.

    10. (Natural Gas & Ion Mass Spectrometer NGIMS) – அயனிகள், வெப்ப முடக்கிகள் ஆகியற்றின் ஏகமூங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத் தனிமங்களை அளப்பது. (Measures the Composition & Isotopes of Thermal Neutrals & Ions).

    fig-1g-climate-orbiter-details

    முதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு !

    பீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது.  தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கி லிருந்து ஆணை அனுப்பப்பட்டது.  தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன.  முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :

    . . . வானம் வெறுமையாக இருந்தது.  அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.

    . . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)

    . . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)

    . . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)

    . . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.

    fig-2-mars-earth-atmospheres

    ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம்!

    செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது!  இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன.  துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன!  தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே 1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது!

    அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது!  அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது!  இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது.  அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !

    Mars Exploration

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்

    Picture Credits: ESA, NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace  By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002) 12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    ++++++++++++++++++++++++++

    https://www.nasa.gov/press-release/nasa-s-perseverance-rover-sends-sneak-peek-of-mars-landinghttps://www.nasa.gov/content/perseverance-mars-rovers-first-imageshttps://www.space.com/news/live/mars-perseverance-rover-updateshttps://www.graphicnews.com/en/pages/40364/space-nasas-mars-2020-missionhttps://www.cnn.com/2021/02/18/world/mars-perseverance-rover-landing-scn-trnd/index.html

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 117 (மல்லல்)

    சேக்கிழார் பாடல் நயம் – 117 (மல்லல்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    1. இலைமலிந்தசருக்கம்

    1. எறிபத்தநாயனார்

    திருத்தொண்டர் வரிசையில் ஒன்பதாமவராக வருபவர் எறிபத்தநாயனார். அவருடைய அருள்வரலாறு திருத்தொண்டர்புராணத்தின் மூன்றாம் சருக்கமாகிய  இலைமலிந்தசருக்கம் என்றபகுதியில் அமைகிறது.

    சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகை பதின்மூன்று எண்சீர் விருத்தங்களால் ஆனது. இந்நூலின் முதல்சருக்கம் திருமலைச்சருக்கம் ஆகும். அடுத்து   இரண்டாம் பாடல் தில்லைவாழ் எனத் தொடங்குகிறது. அதனையே சேக்கிழார் பெருமான்  தம் திருத்தொண்டர் புராணத்தின் இரண்டாம்  சருக்கமாகக்  கொண்டு ‘’தில்லைவாழந்தணர்  சருக்க’’த்தில்  அடியார்கள் எண்மரின் வரலாற்றைப் பாடினார். அவ்வாறே பதின்மூன்று சருக்கங்களுடன்  இப்புராணம்  அமைந்தது.

    இரண்டாம் விருத்தத்தின் முதலடி ‘’இலைமலிந்த சீர்நம்பி’’  எனத்  தொடங்குவதால் இரண்டாம் சருக்கம், ‘’இலைமலிந்த சருக்கம்’’ ஆயிற்று. இதில் ஒன்பதாம் அடியாராகிய எறிபத்த நாயனார் அருள்வரலாறு முதலில் அமைந்தது! அந்நாயனார் அவதரித்த கருவூர்பற்றி  முதலில்  சேக்கிழார் கூறத்  தொடங்குகிறார்.

    பாடல்

    பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்று
    மந்நெறி வழியே யாக வயல்வழி யடைத்த சோழன்
    மன்னிய வநபா யன்சீர் மரபின்மா நகர மாகுந்
    தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதி முதூர்.

    பொருள்

    பழைமையாகிய   நெடிய   கருவூர்  என்று  சொல்லப்பெற்றது இவ்வூர். இவ்வூர்  ஒளியும் அழகும்  உடைய  வீதிகள் நிறைந்த  பழைய ஊராகும்.  வெற்றியின் அடையாளமாக  சோழர் மரபின் முன்னோர் இமயமலையின்  உச்சியில்  புலிக்கொடி ஏற்றினர். பின்னர் தம் நாட்டுக்கு  வரும் பல வழிகளையும் அடைத்து , ஒரு பெரும் வாயிலை அமைத்தனர். கரிகாற் சோழர்  முதல் அநபாயச்  சோழர் வரை ஆண்ட சோழர்கள்  இமய மலையிலும்,  தம் நாட்டிலும் காவல் பொருந்திய  புதிய  வழிகளை அமைத்தனர். அத்தகைய காவல் மிக்க ஊரே கருவூர் . இது சோழர் தலைநகரங்களில் ஒன்று!

    நம் பழந்தமிழ்  நூல்கள்  இமய மலையில் சோழர்  புலிக்கொடியையும் , சேரர்  விற்கொடியையும், பாண்டியர்  மீன் கொடியையும்  ஏற்றி  அரசாண்டனர் என்பதை ஆதாரங்களோடு  கூறுகின்றன.

    ‘’பொன்மலைப் புலிவென் றோங்கப் புதுமலை யிடித்துப் போற்று
    மந்நெறி வழியே யாக வயல்வழி யடைத்த சோழன்’’

    என்ற தொடர்  பொன்மலையாகிய  இமயத்தைப் புலி வென்றோங்கிய காலத்திலிருந்து தம்நாட்டிற்குள்   நுழையும் பெருவழியைத் தவிர வேறு வழிகளை  அடைத்து வைப்பது பாதுகாப்பு நெறியாகும். இக்காலத்திலும் எல்லைப்புறப்   பாதுகாப்பு என்றபெயரில் நீர், நில எல்லைகளை அரண் நிறுவிப் பாதுகாத்தலைக் காண்கிறோம்.

    ‘’மன்னிய  அநபாயன் சீர் மரபின்’’ என்ற தொடரால் சேக்கிழார் தம்காலத்தில்  தம்மைக்காத்த அநபாயச் சோழன் மரபின், முன்னோர்களையும் கருதிப் போற்றிய செயலைக் குறித்தது. அநபாயன் – இப்புராணம் பாடுவித்துச் சைவ வுலகத்துக்குச் செய்த பெருந்தொண்டு கருதித் தம் அரசரைச்  சேக்கிழார்  நன்றியுடன் பாராட்டி வைத்த பதினோரிடங்களில்  ஒன்றாகும்.

    இவ்வாறு தம் காலத்து மன்னரை முன்னோருடன் இணைத்துப் போற்றுதலைக் கம்பராமாயணத்தில் ‘’சடையன்  வன்மை மரபுளோர்  கொடுக்க  வாங்கி   வசிட்டனே புனைந்தான் மௌலி‘’  என்ற பகுதியில் சடையப்ப வள்ளலின் முன்னோர்கள் கொடுக்க, வசிட்டர்  வாங்கி இராமனுக்கு  முடி சூட்டினார் என்ற நன்றி பாராட்டும்  கவிஞரியல்பு  புலனாகிறது.

    ‘’சீர் மரபின்மா நகர மாகும் தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதி  முதூர்.’’

    என்ற தொடர்,  சோழர் மரபில் முடிசூட்டும் மரபில்  வந்த கருவூரைக்  குறித்தது. புகார், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர், கருவூர் ஆகியவை  முடிசூடியும்  பழமையான  ஐந்து பதிகள் என்பது இப்புராணத்தில் உள்ள சான்றாகும். அவ்வூரின் வீதிகள் சுடர்மணிபோல்  ஒளிவீசும்  என்பது அவ்வீதி இந்த வரலாற்றில் சிறப்பிக்கப் பெறுவது கருதியே.

    இப்பாடலில்  எறிபத்த நாயனாரின் சிறந்த குண நலன்களுக்கு அவர் தோன்றிய நகரமும் துணையான சூழலைப்  புலவர் பெருமான் காட்டுகிறார்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 295இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 295இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    குட்டிப் பூனையைத் தாய்ப்பூனை கவ்விச் செல்லும் இக்காட்சியை அழகாய்ப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. கிஷோர் குமார். இப்படத்தை அவரின் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    பூனை தன் குட்டியை வாயால் கவ்விச் செல்வதை ஆன்மிகத்தோடு தொடர்புபடுத்தி ’மார்ச்சால நியாயம்’ என்று கூறுவர்.

    இதன் விளக்கமாவது, பூனை தன் குட்டிகளைத் தானே தூக்கிச்சென்று பல இடங்களிலும் வைத்துப் பாதுகாப்பதைப் போல ஆண்டவனே வந்து நம்மைக் காப்பாற்றிப் பரமபதத்தை அளிப்பான் என்பது தென்கலை வைணவரின் நம்பிக்கை. எனவே இதற்கு மார்ச்சால நியாயம் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்த ஒளிப்படத்துக்கு நம் கவிஞர்கள் எத்தகைய கவிதைகளை வழங்கி ஒளியூட்டப்போகிறார்கள் என்பதை அறிந்துவருவோம் வாருங்கள்!

    *****

    “மந்தியானது தாய் மந்தியைக் கவ்வுவதுபோல் நானுன்னைப் பற்றவேண்டும் (மர்க்கட நியாயம்) என எண்ணாமல், பூனை தன் குட்டியைக் கவ்விக் காப்பதுபோல் (மார்ச்சால நியாயம்) நீ என்னைப் பற்றிக் காப்பாய்” என்று பிறைசூடிய பெம்மானை அன்புருக வேண்டுகின்றார் திருமிகு. இராதா.

    பிறை சூடிய பெம்மானே எனது
    பிணிகளுக் கெல்லாம் அரு மருந்தே
    ஆறறிவு இருந்தும் அறிந்திலேன்
    அடியார் மனத்துள் வாழ்பவனே

    கண்ணுக்குக் கண்ணாக இருக்கும்
    கருப்பொருளே காலாதீதனே!
    விண்ணவருக்கும் எட்டா
    வேத விழுப்பொருளே! பழமையனே!

    நின்னை அடையவே நீலகண்டனே
    நீள்கழல் காட்டியும் நின்னை மறந்து
    நெஞ்சமோ எனது வஞ்சகமே செய்ய
    பஞ்சமா பாதக வழி நடக்கின்றேனே!

    செய்வதறியாது பிறவி தோறும்
    பிறந்து உனை மறந்து திரிந்தேனை
    மந்தி தாய் மந்தியைக் கவ்வுதல் போல
    நான் நின் கழல் பற்றுவது முறையோ?

    ஆதலினாலே ஆலமுண்ட அரசே
    நீயே நின்னருள் கரம் கொண்டு
    பூனை தன் மகவினைக் கவ்விக்
    காப்பது போலக் காத்தருள்வாயே!

    *****

    ”தாக்கும் புலிக்குமுண்டு தாய்ப்பாசம்; இதனை மனிதர்கள் மறந்துவிடலாகாது என்பதற்கு இக்காட்சியொரு பாடம்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பாடமாய்…

    தாய்மை என்பது மிகவுயர்வே
    தாக்கும் புலிக்கும் வேறில்லை,
    ஓய்வு யென்பதே அதற்கில்லை
    ஓடிச் சேயிரை தேடிடவே
    பாய்ந்து செல்லும் வரையினிலே
    பற்றியே வாயில் தூக்கிடுமே,
    தாய்மை மறந்த மனிதருண்டு
    தவிக்க விடுவோர்க் கிதுபாடமே…!

    ******
    ”பால் வைத்துப் பரிவுகாட்டி வளர்த்தாலும் மனிதர்களை நம்பாது குட்டியைத் தூக்கிச் செல்லும் சந்தேகப் பிராணியான இப்பூனையைப் போலவே மனிதர்களாகிய நாமும் உண்மைக்கும் பொய்ம்மைக்கும் வேற்றுமை அறியாது மூடர்களாய்த் தவிக்கின்றோம்” என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    குருட்டுப் பூனை

    பால் வைத்துப் பரிவுகாட்டி
    மடிமீது தானமார்த்தி,
    தாலாட்டித் தூங்கவைத்து
    அன்பு காட்டி வளர்த்தாலும்
    முழுவதுமாய் நம்பவில்லை
    மதிலமர்ந்த பூனையிது!

    தாவிச்சென்று சட்டென்று கவ்வித்
    தூரமாய்த் தூக்கிச் சென்று
    கண்ணில் காட்டாமல்
    மறைத்துப் பதுக்கிவைத்துச்
    சந்தேகத்தின் சாரலில் நனைந்திருக்கும்
    முக்காடிட்ட சைவப் பூனை!

    உள்ளுக்குள் வஞ்சம் வைத்து
    வெளியிலே வேடமிட்டுக்
    கள்ளத்தின் நாற்றத்தை
    வார்த்தைப் புனுகுபூசி
    தினந்தோறும் மறைத்ததினால்
    உண்மைக்கும் பொய்மைக்கும்
    வேற்றுமையை அறியாமல்
    தன் பிம்பக் காட்சியினை
    பிறர்மீது ஏற்றிவைத்து
    இருண்டு போன உலகமென்று
    கண்மூடி அழுகின்றோம்!

    *****

    ”இப்புவி இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பது தாய்ப்பாசமெனும் உணர்வினாலே; தாய்மையைப் போற்றுவோர் போற்றப்படுவர்; தூற்றுவோர் துன்பப்படுவர்” என்று தாய்மையின் தூய்மையைப் பாவில் போற்றியிருக்கின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    புலி என்றாலும்
    பூனை என்றாலும்
    தாய்மை என்பது
    தன்னிகரில்லாதது

    கடிவதெல்லாம்
    காப்பாற்ற அன்றி
    கண்டிப்பதற்கல்ல!

    கொடும் புலியின் கண்கள்
    கருணை பொழிவது
    பாலூட்டிக் குட்டிகளை
    அரவணைக்கும் பொழுது மட்டுமே!

    பண்பான பசுவின்
    கண்களில் கனல் தெறிப்பது
    கன்றுகளை எவரேனும்
    காயப்படுத்தும் பொழுது மட்டுமே!

    எதிர்பாரா அன்பே
    தாய்மையின் அடையாளம்
    இப்புவி இன்னமும் இயங்குவது
    அதனால்தான்!

    காந்தியின் அன்னையும்
    கோட்சேயின் தாயும்
    மகன்மீது காட்டிய அன்பு
    மாறுபட்டதல்ல
    அதுவே அன்னைகளின்
    பலமும் பலவீனமும்!

    தாய்மையைப் போற்றுவோர்
    போற்றப்படுகிறார்கள்
    தூற்றுவோர் துன்பப்படுகிறார்கள்!

     *****

    தாய்ப்பாசத்தின் அருமையை இப்படத்தில் கண்டு நெகிழ்ந்து, அதனைத் தம் கவிதைகளில் உணர்வுபூர்வமாய் விவரித்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள்; அவர்களை உளமாரப் பாராட்டுவோம்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது… 

    தாய்மை

    எத்தனை இயற்கைச் சீற்றங்கள்
    கீறிவிட்டது இப்பூமியை…
    இருந்தும்
    இன்றும் நிறுத்தவில்லை
    சுற்றுவதை இந்த பூமி!
    காரணம்…

    பூமிக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்
    அதன் பெயர்தான் தாய்மை!

    பூமியில் தாயான ஜீவராசிகளும்
    தன் குழந்தைகளைக் காக்கிறது
    பூமியைப்போல…
    எதிரிகளிடமிருந்து காக்கும் போது
    வருவதுண்டு சிறு துன்பங்கள்

    கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகாது!
    பூனை தன் வாயால் கவ்வக் குட்டியும் சாவதில்லை
    இதைப்போலத் தாய் தந்தை ஏசுவதும்
    பிள்ளைகளின் நலனுக்கே

    இதனை உணர்ந்த பிள்ளைகளே
    உயர்வார்கள் உலகம் மெச்ச
    உணராத பிள்ளைகள் உயர்வதில்லை!

    கோழி மிதித்துக் குஞ்சு முடமாவதில்லை; பூனை கவ்வி அதன் குட்டி சாவதில்லை. ஈதொப்ப, தாய்தந்தையரின் ஏச்சு பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பதற்கேயன்றிச் சீரழிவதற்கில்லை என்பதையுணர்ந்த பிள்ளைகள் வாழ்வில் சிறப்பர்” எனும் நல்ல கருத்தை நவின்றிருக்கும் திருமிகு. இராதாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • தேர்தல் நேரப் பட்சிகள்

    தேர்தல் நேரப் பட்சிகள்

    ஆ. கிஷோர் குமார்

    எத்துணை கூட்டம்
    எத்துணை கட்சிகள்
    அத்துணை கட்சிகளும்
    தேர்தல் நேரப் பட்சிகள்..

    தவறியும் வருந்துவதில்லை
    தவறுக்குத் துணிந்த மனிதன்..

    மறந்தும் மண்ணில் விழாத நெடுவானம் போல…
    கட்சிகளே காகங்களாய் மாறி ..
    சில இரையும்
    சில கரையும்
    சில நம் இருப்பிடம் சுற்றியே உறையும்..

    ஓட்டு எனும் இரை கொத்தச் சில,
    சுற்றிச் சுற்றி வட்டமிடும்..
    மூளைச் சலவையைச் சில
    நெற்றிப்பொட்டு தொட்டே செய்ய முனையும்…

    இன்று நம்மிடம் முதலீடு செய்பவன்
    நாளை மொத்தத்தையும் வட்டியுடன் உறிவான்..
    சற்றே விழித்திருப்போம்

    அழுத்தும் ஆள்காட்டி விரல்
    அன்றொரு நாள்
    நல்லவனுக்காக மட்டுமே நீளட்டும்..
    நல்லோனே நாட்டை ஆளட்டும்…

    Share
  • குறளின் கதிர்களாய்…(338)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(338)

    மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ்
    சொல்லினால் தேறற்பாற் றன்று.

    – திருக்குறள் – 825 (கூடா நட்பு)

    புதுக் கவிதையில்...

    மனதினால் நம்மோடு
    ஒன்றி அமையாத
    ஒருவரை,
    அவர் சொல்லும்
    சொற்களை வைத்து
    யாதொரு செயலிலும்
    தேர்ந்து தெளிதல்
    முறையானதல்ல…!

    குறும்பாவில்...

    மனதால் ஒன்றா ஒருவரை
    அவர்பேசும் பேச்சை வைத்துச் செயலெதிலும்
    தேர்ந்து தெளிதல் முறையன்று…!

    மரபுக் கவிதையில்...

    மனதது பொருந்த வரும்நட்பே
    மன்னும் என்றும் வாழ்வினிலே,
    நினைவில் கொண்டிடு மனமொன்றாய்
    நெருங்கா நிலையில் ஒருவர்தன்
    இனிதாய்ப் பேசிடும் பேச்சினிலே
    ஈர்ப்பது கொண்டே அதைநம்பி
    இனியவர் செயலில் தேர்ந்துதெளிதல்
    இன்னா தருவதால் முறையிலையே…!

    லிமரைக்கூ..

    மனம்பொருந்தல் நட்பில் நிறை,
    அதிலாதொருவர் பேச்சால் செயலில் தேர்ந்தெடுத்தல்
    ஆக்கமிலாததால் ஆகாது முறை…!

    கிராமிய பாணியில்...

    பொருந்தணும் பொருந்தணும்
    மனமது பொருந்தணும்,
    நல்ல நட்புக்கு
    மனமது பொருந்திவரணும்..

    நண்பனத் தேர்தெடுக்கையில
    மனசு பொருந்தி வராதபோது
    ஒருவன
    அவன் பேச்சமட்டும் வச்சி
    அவன நம்பிச்
    செயல்படத் தேர்ந்தெடுத்தா
    அது மொறயே இல்ல,
    கெடுதல்தான் வரும்..

    அதால
    பொருந்தணும் பொருந்தணும்
    மனமது பொருந்தணும்,
    நல்ல நட்புக்கு
    மனமது பொருந்திவரணும்…!

    Share
  • மருத்துவமனை இயங்கிய கோவில்கள்

    மருத்துவமனை இயங்கிய கோவில்கள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    ஒரு நோயாளி தங்கிப் பண்டுவம் மேற்கொள்ளும் இடம் தான் ஆதுலர் சாலை என்பது. ஆதுலர் என்றால் நோயாளி சாலை என்றால் ஆதரவு விடுதி எனப் பொருள். முடியாட்சியின் போது கோவில் மண்டபங்களே இத்தகு மருத்துவமனைகளாக இருந்தன. இப்படியான மருத்துவமனைகள் பல ஊர்களில் செயற்பட்டன. அதற்கான கல்வெட்டுச் சான்றுகள் நமக்கு சில கோவில்களில் காணக் கிடைக்கின்றன. கோவில்கள் பண்டு வழிபாட்டு இடம் என்பதோடு அல்லாமல் ஆடல் பாடல் இசைக் களமாக, வேதக் கல்விக் கூடமாக, சரசுவதி பண்டாரம் எனும் நூலகமாக, மருத்துவகமாக செயற்படும்படியாக வேந்தர், மன்னர், அரைசர், கிழார்களின் பெரும் நிதி ஆதரவினால் கட்டியெழுப்பப்பட்டன. இத்தகு மருத்துவகங்களில் சமஸ்கிருதம் அறிந்த பிராமணர் ஆயுர்வேத மருத்துவத்தையும், மங்கலக் குலத்தார் என்ற அம்பட்டர் தமிழ் மருத்துவத்தையும், அறுவை மருத்துவத்தையும் மேற்கொண்டனர். இங்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாகுபாடின்றி இலவசமாகவே மருத்துவம் அளிக்கப்பட்டது. அந்நாளில் பிணம் கையாளும் வெட்டியான்கள் தவிர்த்து வேறு எவரும் தீண்டாமைக்கு ஆட்படவில்லை. மருத்துவத்தில் ஈடுபட்டோருக்கு வைத்தியபோகம், மருத்துவக்காணி என்ற பெயரில் விளை நிலமும் வீட்டு மனையும் மானியமாகப் பலரால், ஊர்ச்சபையால் வழங்கப்பட்டன. இது பற்றிய கொடையாளர் பெயர்கள், மானியம் பெற்ற மருத்துவர் பெயர்கள் போன்றன கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அக்கால மருத்துவர் தமக்கு கொடையாக விளைநிலமும், வீட்டு மனையும் பெற்றுக் கொண்டு வாழ்க்கை முழுவதும் கட்டணம் பெறாமல் அனைவருக்கும் இலவச மருத்துவம் செய்து மக்கள் தொண்டு புரிந்தனர். ஆனால் இன்று மருத்துவம் பணம் கொழிக்கும் ஒரு முதலாளியத் தொழிலாகவே ஆகிவிட்டது. மக்கள் தம் பிள்ளைகளை பணம் சம்பாதிப்பதற்காகவே மருத்துவம் படிக்கச் வைக்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி > கீரக்களூர், திருவரங்கம், திருவாவடுதுறை, கும்பகோணம் > வேம்பத்தூர், நன்னிலம் > திருப்புகலூர், பழனி > அம்பிலிகை, கோயில் தேவராயன் பேட்டை > கும்பகோணம், திருப்பத்தூர், கூகூர், கடத்தூர், குன்றத்தூர், சிறுவாக்கம், சிதம்பரம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் ஆதுரர் சாலை பற்றிய கல்வெட்டுகள் உள்ளன. திருமுக்கூடல் கல்வெட்டு மருத்துவப்  பணியாளருக்கு வழங்கப்பட வேண்டிய நாள் கூலி, அதன் செயற்பாட்டை பற்றி விவரமாக பதிவு செய்கின்றது. அவற்றில் சில கல்வெட்டுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

    நங்கை எட்டிக்கூறு “காஸ்யபன் அரையன் அரைசான ராஜகேஸரி மங்கலப் பெரையன்” உடைய மருத்துவம் செய்வதற்காக அளிக்கப்பட்ட ‘வைத்தியக் காணி’ நிலம் தவறானது எனவே காணி நிலமும், வீடும் செல்லாது எனச் சபையோரால் அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் அவனுக்கு மாற்றீடாக நிலம் கிடைக்க நடந்த வழக்கைப் பற்றி திருத்துறைப்பூண்டி கீரக்களூர் கிராம அகத்தீஸ்வரர் கோயிலுள்ள இரண்டாம் இராசேந்திரனின் 11-ஆம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பண்டு பறையரே ஊரில் மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்கு நாகஸ்வரம், தவில் இசைத்தனர். இதனால் மங்கலப் பறையன் எனப்பட்டனர். இவர்கள் மயிர் மழிக்கும் தொழிலுக்கு கத்தியைக் கையாள்வதால் அறுவை மருத்துவமும் செய்தனர். நங்கை எட்டிக்கூறில் வாழ்பவனும் காசியபன் எனும் பிராமண அறுவை மருத்துவனின் (அரைசு) அறுவைமனைக் கூடமான ‘ராஜகேசரி’யில் பயின்றவனுமான மங்கலப் பறையன் என்பதே இக்கல்வெட்டுத் தொடருக்கான சரியான பொருள். இதை விளக்கியோர் தப்பும் தவறுமாக படித்துப் பொருள் கூறி உள்ளனர். இதில் புழங்கும் அரையன் என்ற சொல்லை அரச பட்டமாகத் தவறாகப் பொருள் கொண்டதால் பெறையன் என படிக்க வேண்டிய இடத்தில் பே(ர)ரையன் என்று படித்துவிட்டனர். பேரரையன் என்ற சொல் அரைசனை விட பதவியில் உயர்ந்த மன்னனைக் குறிப்பது. மன்னன் இப்படி மெய்க்காவல், மருத்துவப் பணி செய்வானா? என்று சிந்திக்கவில்லை. சோழர் கால எழுத்தில் ஏகார ஓகார நெடில் குறிகளுக்கு இப்போது உள்ளது போல் இரட்டைக் கொம்பு முன் துணைக் குறி கிடையாது. அதனால் பெறையன் என்பதை பேரையன் என்று படித்துள்ளனர். இக்கல்வெட்டுக் குறிப்பு பறையர் ஊரிலும், கோவிலிலும் தீண்டாமைத் தடை ஏதுமின்றிப் போய் வந்ததற்கு ஒரு சான்று.

    கோவில்களில் இப்படிப் பல்எண்ணிக்கையில் பிராமணர்களை போற்றியதால் தான் வருணாசிரமத்தில் பிராமணர் என்ற பிரிவே உண்டாகியது. இப் பிரிவையும் மற்ற மூன்று வருணப் பிரிவையும் உண்டாக்கியவர்கள் அதிகாரமும், பெரும் படையும், செல்வக் குவையும் பெற்ற ஆட்சியாளர்களே அன்றி பிராமணர் அல்லர் என்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் நால் வருணாத்தை பிராமணரே உருவாக்கியதாக ஆங்கிலர் ஆட்சியில் பொய்ப் பரப்புரை செய்யப்பட்டு இன்று வரை பரவலாக நம்பப்பட்டு வருகின்றது. ஆனால் கல்வெட்டுச் சான்றுகள் அந்தக் கருத்தை உடைத்து எறிந்து நமக்கு உண்மையைத் தெளிவிக்கின்றன.

    சோழர், பாண்டியர் ஆட்சியில் கல்வெட்டு செப்பேடு எழுதும் ஆசாரிகள், தமிழ் மருத்துவர்கள், ஜோசியர்கள், வணிகர்கள், வரி மதிப்பீடு செய்பவர்கள் ஆகியோர் தம் தொழிலை மேற்கொள்ள எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்ற வகையில் தமிழகத்தில் கல்வி கற்றோர் எண்ணிக்கை, வாழ்க்கைத்தரம் தமிழ் வேந்தர் ஆட்சியில் மிகுந்து இருந்தது. ஆனால் பிற்பட்டு வந்த நாயக்கர் ஆட்சியில் இதன் விழுக்காடு குறைந்தது என்றால் அதற்கு தெலுங்கு ஆட்சியாளர் தானே பொறுப்பு?  ஆனால் பிராமணர் தான் பிறர் கல்வி கற்பதை தடுத்துவிட்டனர் என்று பொய் பரப்பினர். இப் பொய்களையும் கல்வெட்டுகள் பொய்யாக்கின.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் திருமுக்கூடல் வேங்கடேச பெருமாள் கோவில் 55 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ (மெய்க்கீர்த்தி உள்ளது)

    வீரத்தனிக்கொடி தியாகக்கொடி மேற்பவர் வருகென்று நிற்ப கோத்தொழிலுரிமையிநெய்தி   அரைசு வீற்றிருந்து மேவருமனுநெறி விளக்கிய கோவி ராஜகேசரிவர்மரான முடையார் ஸ்ரீ வீரராஜேந்திர தேவர்க்கு  யாண்டு அஞ்சாவது கங்கைகொண்ட சோழபுரத்துச் சோழகேரளத் திருமாளிகையில் ராஜேந்திரசோழ மாவலி வாணராஜநில்  எழுந்தருளியிருந்து ஜயங்கொண்ட

    சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர் ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் திருமுக்கூடல் மஹாவிஷ்ணுக்கள் தேவதானமாய் வருகின்ற காலியூர்க் கோட்டத்துத் தேரோடு பருவூர் நாட்டு வயலைக்காவூர(க)கள் சாலைக் கிறுத்து வருகின்ற பொந் எழுபத்தைங் கழஞ்சும் இச்சாலைக்குச் சாலபோகமாய் வருகின்றபடி  (இதன் பின் இரண்டு திருவிழாவும் ஒரு வேதபாடசாலை அதன் விடுதியும் பற்றிய 7 பக்கத்திற்கு நீண்ட கல்வெட்டு இடம்பெறுகின்றது)

    _ _ _ ஆதுல சாலைக்கு வேண்டுங் கலமிருங் குசவனுக்கு  நாளொன்றுக்கு நெல் குறுணியுங்  ஆழ்வாற்குப் பரிசட்டமுஞ் ஜனனாதன் மண்டபத்திலோது _ _ _ _  ஓத்துக் கேட்பாற்கும் ஆதுலற்கும் ஒலிக்கும் ஈரங்கொல்லிக்கு(ம்) நாளொன்றுக்கு நெல் நானாழியும், ஜனனாதன் மண்டபமும் ஆதுலசாலையும் நிமந்த _ _ _ _ குந் திருமெய்காவலே திருமுக்கூடற் பெறையனுக்கு நாளொன்றுக்கு நெல் நானாழியுங் காசொன்றும், திருச்சுற்று மாளிகை புதுக்குப்புறத்துக்கு நெல் நாற்பதின் கலமுஞ்ச _ _ _

    இம்மண்டபத் துண்ணுஞ் சாத்திரர்க்குங் கிடைகளுக்கும் பணி செய்யும் பெண்டுக(ளிருவர்க்கு)ப் பேரால் நெல்லு நாநாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேறாற் காசொன்றாகக் காசிரண்டும் சாத்திரர்குங் கிடைகளுக்கும் ஆதுலர்க்கும் கிடக்கப் பாயெழுபத்தைந்துக்குக் காசிரண்டும் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் தலைக்கட்டச் சனியொன்றுக் கெண்ணெயிரு நாழியாக ஆண்டொன்றிற் சனி ஐம்பத்தொன்றுக் (கெண்ணை) னூற்றிரு நாழிக்கும் ஜநநாதன் மண்டபத்தோத்துக் கேட்பார்க்கு இராயெரியும் விளக்கொன்றுக் கெண்ணை உழக்காக ஆண்டொன்றுக் கெண்ணை தொண்ணூற்று நாழியும் இவ்வெண்ணை நூற்றுத் தொண்ணூற்றிரு நாழிக்குக் காசொன்றுக் கெண்ணை யிருபதி நாழியாக காசொன்பதைரையே யரைக்காலு ஜந நாதன் மண்டபத்(துக்கு) புதுக்குப் புறத்துக்கு  நெல் நாற்பதின் க(லமு)ம்

    ஆது(ல)ர் சாலை வீரசோழநில் வ்யாதிபட்டுக் கிடப்பார் பதிநைவர்க்குப் பேராலரிசி நாழியாக அரிசி குறுணியெழு நாழிக்கு நெல் (தூணி ஐ) ஞ் ஞாழியுரியும் வ்யாதிபட்டுக் கிடப்பார்க்கும் பலபணி நிவந்தகாறர்க்கும் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும்    வைத்தியஞ் சொல்லக் காணியாகத் தநக்குந் தந் வர்க்கத்தார்க்கும் பெற்றுடைய ஆலப்பாக்கத்து சவர்ண்ணந் கோதண்டராமந் அஸ்வத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியும் காசெட்டும் சல்லியக்கிரியை பண்ணுவா(னொருவ)னுக்கு நாளொன்றுக்கு நெல் குறுணியும் ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும் மருந்து பறித்தும் விறகிட்டும்  பரியாரம் பண்ணுவா ரிரு(வரு)க்குப் (பேரால்) நாளொன்றுக்கு நெல் குறுணியாக நெல் பதக்கும் பேரால் காசொன்றாகக் காசிரண்டும் ஆதுலர்க்கு வேண்டும் பரியாரம் பண்ணி மருந்தடும்  பெண்டுகளிருவர்க்குப் பேரால(ரிசி  நா)  நாழியாக நாளொன்றுக்கு நெல் குறுணியும் பேறாற் காசரையாகக் காசொன்றும் ஆதுலர்க்குங் கிடைகளுக்குஞ் சாத்திரர்க்கும் வேண்டும் பணி செய்(யும் நா)விசனொருவனுக்கு நாளொன்றுக்கு நெல் நா நாழியும்

    ஆதுரசாலை வீரசோழனில் ஆண்டொன்றில்லிடு(ம்) மருந்து பிராம்யம் கடும்பூரி யொன்றும், கருங்காய் நீங்க இப்படி _ _ _ டும், வாசா ஹரீதகிப் படியிரண்டும், தசமூல ஹரீதகி படியொன்றும், பல்லாத ஹரீதகி படியொன்றும், கண்டீரம் (படி) யொன்றும், பலாகேரண்ட தைலந் தூணியும், லஸுநாகயேரண்ட தைலந் தூணியும், உத்தம கர்ணாதி தைலந் தூணியும், உ_ _ _(ப)தக்குஞ் சுக்_ _ _சா க்ருதம் பதக்கு(ம்), பில்வாதி க்ருதம் பதக்கும், மண்டூ(க)ர வடகம் இரண்டாயிரமும், த்ரவத்தி நாழியும்,  விமலை இரண்டாயிரமும், சுனெற்றி யிரண்டாயிரமும், தம்ராதி யிரண்டாயிரமும், வஜ்ர கல்பந் தூணிப் பதக்கும், கல்யாண லவணந் தூணிப் பதக்கும், இவை யடுகைக்கு வேண்டும் மருத்(து)களுக்கு நெ_ __(ரையும்) தெ_ _ _யும் உள்ளிட்டன கொள்ளவும் ஆண்டுதோறும் புராணசர்ப்பி புதைக்கப் பசுவி(ந்) நெய் பதக்கும் கொள்ளவும்(க்) காசு நாற்பதும்

    ஆதுரசாலையில் இராயெரியும் விளக்கொன்றுக் கெண்ணை யாழாக்காக நாள் முந்னூற்றறுபதுக் கெண்ணை நாற்பத்தைஞ் ஞாழிக்கு காசிரண்டே காலும் ஜந நாதன் ம_ _ _ன்பில் தன்_ _யனுக்குப் பங்குனியுத்திரந் துடங்கிப் புரட்டாதிந் திருவோணத் தளவும் பரம்பாலூறத் தண்ணீர் கொடுவந்து வை(த்துச் சாய்ப்)பான் ஒருவனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் குறுணியாக நாள் நூற்றென்பதுக்கு நெல் பதிநைங் கலமும் ஏலத்துக்கும் இலாமச்சத்துக்கும் நெல்லிரு_ _ _ பதக்கும் த_ _ _ _ண்யாகம் பண்ணின பிராமணர்க்குத் தக்ஷிணைக்கும் வெற்றிலை வெறுங்காய்க்கும் நெல் கலநே தூணியிரு நாழி முழக்(கே முச்)செவிடும் வயலைக்காவூர் காணியுடைய மாதவன் தாமயன் வர்க்கத்தார்க்குப்  புரட்டாதித் திருவோணத் திநால் குடுக்கும் பரிசட்டம் இர(ண்டு)க்குக்  காசொன்றெ யெழுமா _ _ _மூவாயிரத்திரு நூற்று நாற்பத்து முக்கலனே யிரு தூணிப்பதக்கரு நாழியுழக்கே முச்செவிட்டுக்கும் காசிருனூற் றொருபத்தரையே யிரண்டு மாவுக்கும் இக்காசுதராவிடில் காசொன்றுத் தண்டவாணியோ டொக்கும் பொன் காசு நிறைக்கால் இடுவதாகவும்

    இப்படி யாண்டு ஆறாவது நிமந்தஞ் செய்தபடி இன் – – – – – லுமிடத்து சாத்திரக் கண்காணியோடும் கிடைக் கண்காணியோடும் செல்லக்கடவதாக நிவந்தம் செய்தபடிக்கு கல்லு வெட்டுவித்தார் இன்நாடு கூறு செய்த ஆதிகாரிகள் சோழமண்டலத்து விஜைய ராஜேந்த்ர வளநாட்டு இடையள நாட்டு மீனற்குடையான்

    பசுவதி திருவரங்க தேவநாரான  ராஜேந்த்ர  மூவேந்த வேளார். பாண – – – – – ஏவக் கல்லு வெட்டுவித்தான்  ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப்  புழற் கோட்டத்  தாகுடிநாட்டு அயண்டம் பாக்கத்து இறைவேட்டிந் குமரபாசூர்க்கத்தநான வீரராஜேந்த்ர செம்பியதரையன். இந்த தந்மம் செய்வித்த தாமயனார் மகன் தாமயன் கங்கை கொண்ட சோழனான சேனாதிபதிகள் கங்கைகொண்ட சோழ தன்மபாலற்க்கும், இவர் தம்பியார் தா – – – – – – நான சேனாதிபதிகள்   வீரராஜேந்திர தன்மபாலற்குமாய்.  இது கல்லுவெட்டுவித்தான் ஜயங்கொண்ட சோழமண்டலத்து புழல் கோட்டத்து – – – – – நாட்டு ஸதுவேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு பிரம்ம மாராயன். இ தர்மம் ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து மஹாசபையார் ரக்ஷை ஸ்ரீ.

    சாலாபோகம் – உணவுச் சாலைக்கு கொடுத்த நிலம்; ஆதுலர் – நோயாளி, வறியவர்; ஆதுலர் சாலை – உணவும் தங்கும் வசதியும் கொடுத்து பண்டுவம் செய்யும் மருத்துவகம்; பரிசட்டம் – சிலைக்கு சாற்றும் ஆடை; ஓத்து கேள் – வேதபாடம் கேள்; ஒலிக்கும் – துப்புரவாக்கும்; ஈரங்கொல்லி – வண்ணான்; நிமந்த – செலவு திட்டம்; புதுக்குப்புறம் – கட்டடம் புதுப்பிக்க வைத்த நிலம்; சாத்திரர் – வேதம் முதலான வடமொழிக் கல்வி ஆசிரியர்; கிடைகள் – வேதம் பயிலும் மாணவர் குழாம்; கிடக்கப் பாய் – உறங்கப் பாய்; தலைகட்ட – நீராட; நிவந்தக்காரர் – கோவில் ஊழியரில் அவரவர்க்கு உரிய பணிகொண்டோர்; சவர்ணன் –   எல்லா மருத்துவப் பிரிவிலும் வல்லவன், பெரு மருத்துவன், medical expert;  சல்லியக் கிரியை – கூர் ஆயுத காயத்தை ஆற்றும் மருத்துவம்; பரியாரம் – நோய்விடுபாடு, relief; நாவிதன் – மயிர் திருத்துவோன்; சாய்ப்பான் – ஊற்றுவான், இடுவான்; வர்க்கத்தார் – சார்ந்தோர், வழிவந்தோர்; முச்செவிட்டு – ஒரு முகத்தல் அளவை; தண்டவாணி – பொன்னின் மாற்று அறியும் ஆணி; கூறு செய் – வேலையை வகை செய்து நிர்வகி; மஹாசபை – பிராமண ஊர்களில் சபையின் முழுக் கூட்டம்; ரக்ஷை – பாதுகாப்பு.

    விளக்கம்:  இக்கல்வெட்டு வீரராசேந்திரனின் 5-ம் ஆட்சி ஆண்டில் (1068 AD) வெட்டப்பட்டது. மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்தில் அடங்கிய திருமுக்கூடல் பெருமாளுக்கு தேவதானமாய் காலியூர்க் கோட்டத்தின் வயலைக்காவூரார் உணவுச் சாலைக்கு தேவதானமாய் கொடுத்து வந்த 75 கழஞ்சு பொன்னை வீரராசேந்திரனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு முதல் கொடுக்காமல் போகவே தன் 5 – ம் ஆட்சி ஆண்டு முதல் 75 கழஞ்சு பொன்னையும் இவ்வூரால் வந்த வரியையும் இறையிலியாக வீரராசேந்திரன் வழங்கினான்.  இதன் மதிப்பு 147 கழஞ்சும்  216 -1/2 காசும் 2 மாவும் ஆகும். இது கோவிலின் பல்வேறு பணிகளுக்கும், ஆவணியில் ஒரு திருவிழாவும் கார்த்திகையில் ஒரு திருவிழாவும் கொண்டாடுதற்கும், கோவிலில் உண்டு உறைவிட வேத பாடசாலையை நடத்தவும், கோவிலின் ஜனநாதன் மண்டபத்தில் 15 படுக்கையுடன் செயற்பட்டு வந்த மருத்துவமனையை தடையின்றி நடத்திச் செல்லவும் தரப்பட்டது. வேத பாடசாலையில் 14 ஆசிரியரும் 50 மாணவரும் இருந்துள்ளனர். அவர்களுக்கு     அன்றாடப் படியாக தரவேண்டிய நெல்லின் அளவு குறிக்கப்பட்டுள்ளது.

    இம் மருத்துவமனைக்கு தேவையான கலம் வணையும் இரு குயவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு குறுணி நெல்லும், சிலையின்  உடுப்பை, ஜனனாதன் மண்டபத்தில் வேதபாடம் கேட்கும் மாணவர், நோயாளிகள் துணியை துவைக்கும் வண்ணானுக்கு நாள் ஒன்றுக்கு நெல் நான்கு நாழியும், ஜனனாதன் மண்டபத்துக்கும், அதில் இயங்கும் மருத்துவமனைக்கும், கோவிலில் திட்டச் செலவை மேற்கொள்வோருக்கும் மெய்க்காவல் புரியும் திருமுக்கூடல் பறையனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் நான்கு நாழியும் ஒரு காசும் தரப்பட வேண்டும். இதுகாறும் பறையர்கள் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக ஊருக்குள்ளும் கோவிலுக்குள்ளும் செல்ல முடியாமல் தீண்டாமை பாராட்டி தடுத்து வைக்கப் பட்டனர் என்ற தலித்திய, பெரியாரியப் பொய்க் கூற்றை இந்தக் கல்வெட்டுவரி தகர்த்துத் தவிடு பொடியாய் ஆக்கிவிடுகின்றது. பாடிகாவல் எனும் ஊர்காவல் பணியை மேற்கொண்டோர் பெரும்பாலும் பறையரே. ஊரினுள் நுழையாமல் இப்பணியை மேற்கொள்ள இயலாது. தமிழகத்தில் சோழர், பாண்டியர் ஆட்சியில் தீண்டாமை நிலவவில்லை. அது நாயக்கர் ஆட்சியில் புதிதாக ஏற்பட்ட சமூகச் சீர்கேடு ஆகும். ஆனால் தெலுங்கர் இதற்கு பொறுப்பு ஏற்காமல் பழியை தமிழ் பிராமணர் மீது சாற்றுகின்றனர்.

    கோவிலின் திருச்சுற்றை புதுப்பித்துக் கட்ட நெல் 40 கலம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த மண்டபத்தில் உண்ணும் வேத ஆசிரியர்க்கும், வேதம் பயிலும் மாணவருக்கும், பணிப் பெண்கள் இருவருக்கும் ஆள் ஒருவருக்கு நெல் நான்கு நாழியாக நாள் ஒன்றுக்கு குறுணி அளவும் இருவருக்கும் ஒரு காசு என்ற வகையில் இரு காசும் தரப்பட வேண்டும். வேத ஆசிரியர், மாணவர், நோயாளிகள் படுத்து உறங்கப் பாய் 75 ஐ வாங்க 2 காசும், வேத ஆசிரியர், மாணவர் தலைக்கு தேய்க்க ஒவ்வொரு சனிக் கிழமையும் எண்ணெய் இரு நாழி என்ற கணக்கில் ஒரு ஆண்டிற்கு  51 சனிக் கிழமைக்கும் நூற்றியிரு நாழியும், ஜனனாதன் மண்டபத்தில் வேதம் கேட்கும் மாணவர்க்கு இரவில் எரியும் விளக்கு ஒன்றுக்கு எண்ணெய் உழக்கு அளவு ஆண்டு ஒன்றுக்கு 90 நாழியும், இந்த எண்ணெய் 192 நாழிக்கு  ஒரு காசிற்கு 20 நாழி என்ற மேனியில் 9-1/2 1/8 காசும், ஜனனாதன் மண்டபத்தை புதுப்பித்துக் கட்ட 40 கலம் நெல்லும் ஒதுக்கப்பட வேண்டும்.

    இம் மருத்துவமனைக்கு வீரசோழன் எனப் பெயர். இதில் நோயுற்றுக் கிடக்கும் 15 நோயாளிகளுக்கு தலைக்கு அரிசி நாழியாக குறுணி ஏழு நாழிக்கு நெல் தூணி ஐந்து நாழியும் உரியும் நோயுற்றார்க்கும், பலபணி கோவில் பணியாளருக்கும், மாணவர்க்கும், வேத ஆசிரியருக்கும், மருத்துவம் செய்யக் காணியாக தனக்கும் தன் வழிவந்தோருக்கும் பெறுவதற்கு ஆலப்பாக்கத்து பெரு மருத்துவன் கோதண்ட ராமன் அஸ்வத்தாம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியும் 8 காசும், ஒரு அறுவை சிகிச்சை செய்பவனுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நெல்லும், நோயாளியர் மருந்துகளுக்கு தேவையான பச்சிலைகளை பறித்து வந்து அடுப்பெரித்து மருந்து ஆக்கி நோய்விடுபட  இருவருக்கு தலைக்கு நாள் ஒன்றுக்கு நெல் குறுணியாக நெல் பதக்கு அளவும் தலைக்கு ஒரு காசு என இரு காசும் தரப்பட வேண்டும். நோயாளியர்க்கு தேவைப்படும் நோய்விடுபாடு மருந்திடும் இரு செவிலிப் பெண்களுக்கு தலைக்கு நான்கு நாழியாக நாள் ஒன்றுக்கு குறுணி நெல்லும் தலைக்கு 1/2 காசு என்ற மேனியில் ஒரு காசும், வேத ஆசிரியர் மாணவர்க்கு மழித்துவிடும் நாவிதனுக்கு நாள் ஒன்றுக்கு நான்கு நாழி நெல்லும் தரப்பட வேண்டும்.

    வீரசோழன் மருத்துவமனையில் ஆண்டு ஒன்றில் இடும் மருந்தின் அளவு 1) பிராமியம் கடும்பூரி – 1 எண்ணம் 2) வாசா ஹரீதகி -2 படி 3) தச மூல ஹரீதகி – 1 படி 4) பல்லாதக ஹரீதகி – 1 படி 5) கண்டீரம் – 1 படி 6) பலாகேரண்ட தைலம் – 1 தூணி 7) லசுநாக ஏரண்ட தைலம் – 1 தூணி 8) உத்தம கர்ணாதி தைலம் – 1 தூணி 9) _ _ _ கிருதம் – 1 பதக்கு 10) பில்வாதி கிருதம் – 1 பதக்கு 11) மண்டூகர வடகம் – 2000 எண்ணம் 12) திரவத்தி – 1 நாழி 13) விமலை – 2000 எண்ணம் 14) சுனெற்றி – 2000 எண்ணம் 15) தம்ராதி – 2000 எண்ணம் 16) வஜ்ர கல்பம் – 1 தூணி 1 பதக்கு 17) கல்யாண லவணம் – 1 தூணி 1 பதக்கு தவிர இவற்றின் மேல் பூச்சு மருந்திற்கும் தேவையானவை வாங்கவும், ஆண்டுதோறும் புராண சர்ப்பி புதைப்பதற்கு பசுநெய் பதக்கு அளவு வாங்க 40 காசும் மருத்துவமனையில் இரவில் எரியும் விளக்கு ஒன்றினுக்கு எண்ணெய் ஆழாக்கு என்ற மேனி 360 நாளுக்கு எண்ணெய் 45 நாழிக்கு காசு 2-1/4 தரவேண்டும். ஜனனாதன் மண்டபத்தில் பங்குனி உத்திரம் தொடங்கி புரட்டாசித் திருவோணம் வரை பரம்பால் ஊறுவதற்கு தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் ஒருவனுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நெல் என்ற அளவில் 49 நாளுக்கு 15 கலம் நெல்லும், ஏலக்காய்க்கும் இலாமச்ச வேருக்கும் நெல் இரண்டு பதக்கும், த_ _ண்யாகம் செய்த பிராமணர் தட்சணையாக வெற்றிலை பாக்கிற்கு நெல் ஒரு கலனும் தூணி இரு நாழி முழக்கு மூன்று செவிடு வயலைக்காவூரில் பரம்பரை நிலம் (முதுசொம்) உள்ள மாதவன் தாமயன் வழிவந்தோர்க்கு புரட்டாசி திருவோணத்து நாளில் கொடுக்கின்ற இறைவன் ஆடைக்கு 2 காசு 7 மா _ _ _ _ 3243 கலன் 2 தூணிப் பதக்கு  6 நாழி உழக்கு 3 செவிட்டுக்கும் 210 -1/2 இரண்டு மாவிற்கு தரவேண்டும். இக் காசைத் தராவிடில் காசு ஒன்றுக்கு பொன்னின் மாற்று அறியும் ஆணியை ஒத்த அளவிற்கு பொற்காசை எடைபோட்டுத் தருவதாக ஒத்துக் கொண்டோம்.

    இப்படியே 6-ம் ஆண்டும் செலவுத் திட்டம் வகுத்தபடி செய்து _ _ _ வேதஆசிரியக் கண்காணியுடனும், மாணவர் கண்காணியுடனும் செல்வதாக கோவில் நிர்வாகத் திட்டம் செய்தவாறு கல்வெட்டு வெட்டுவித்தார் இந்நாட்டு வேலையை பகுத்து நிர்வகிக்கும் அதிகாரியான சோழமண்டலத்து விஜய ராஜேந்திர வளநாட்டின் இடையள நாடனான மீனக்குடையான் பசுபதி திருவரங்க தேவனார் ராஜேந்திர மூவேந்த வேளார். _ _ _ ஏவல் ஏற்று கல்லில் வெட்டி வைத்தான் ஜெயங் கொண்ட சோழமண்டலத்து புழற் கோட்டத்தை சேர்ந்த தாகுடி நாட்டின் அயண்டம் பாக்கத்தின் இறைவேட்டின் குமரபாசூர்க் கத்தன் வீரராஜேந்திர செம்பியதரையன். இந்த அறத்தை செய்வித்த தாமயனார் மகன் தாமயன் கங்கை கொண்ட சோழனான சேனாதிபதிகள் கங்கை கொண்ட சோழ தர்மபாலர், இவன் தம்பி தாமயனார் மகன் சேனாதிபதிகள் வீரராஜேந்திர தர்மபாலர் சார்பில் இதைக் கல்லில் எழுதினான் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் புழல் கோட்டத்து _ _ _ நாட்டு சதுர்வேதி மங்கலத்து பிராமணன் மாங்களூர் நமச்சிவாய தேவன் மகன் தழுவக் குழைந்தானான அபிமான மேரு பிரம்ம மாராயன். இவ் அறம் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து ஊர் சபையோரின் பாதுகாப்பிற்கு உட்பட்டது.

    பெரு மருத்துவர் அஸ்வத்தாம பட்டன் தனது மாணவர், உறவுகள் போன்றோருடன் பணியாற்றுவதால் அவருக்கு நெல் முக்குறுணியும் 8 காசும் தரப்படுகின்றது. அறுவை மருத்துவன் சேவை சிலருக்கு மட்டுமே தேவைப்படும் என்பதால் ஒரு குறுணி நெல்லும், மருந்து ஆக்குவோருக்கு நெல் குறுணியாக ஒரு பதக்கும் ஒரு காசும் தரப்படுகின்றது. செவிலிகள் ஒரு குறுணி நெல்லும் 1/2 காசும் பெறுவது ஆகியன அவரவர் வேலைக்கு தக்கபடியே ஆகும். இதில் பாகுபாடு ஒன்றும் இல்லை.

    (பார்வை நூல் Select Inscriptions of Tamil Nadu p. (137 – 152), Tamilnadu  State Dept of Archaeology, 2006) 

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோயில் தேவராயன் பேட்டை மச்சபுரீசுவரர் கோவில் 23 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னிவளர இருநிலமடந்தையும் பொற்ச் செயற் பாவையும் சீர்த்தனிச் செல்வியும் _ _ _ (மெய்கீர்த்தி முழுதும் உள்ளது)
    2. கோப்பரகேசரி பர்ம்மராகிய ஸ்ரீ இராசேந்திர சோழ தேவற்கு
    3. யாண்டு ஏழாவது ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் ஸ்ரீகுந்தவைப் பிராட்டியார் அருளிச்செய்த திருமுகத்தின் வாசகமாவது அருளிச் செய்க நித்தவினோத வளநாட்டு நல்லூர்நாட்டு பிரம்மதேயம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து சவையார்க்கு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் சுந்தரசோழ விண்ணகர ஆதுலர் சாலைக்கு வைத்தியஞ் செய்ய முன்பு இவ்வாதுலர் சாலையில் நிவந்தஞ் செய்த நிவந்தம் இராசகேசரியால் நெல்லுப் பதக்கு நானாழியும் ஆண்டுவரை
    4. பொன் நாற்கழஞ்சும் பற்றாவிட இவை ஜயபோகத்துக்கு பற்றும் வண்ணம்
    5. இந்த ராசகேசரி சதுர்வேதி
    6. மங்கலத்து கலகரச்சேரி
    7. இராயூர் எச்சபோக கிரமவித்தநேன்
    8. ஆழ்வார் ஸ்ரீபாதம்
    9. தாங்கிகள் குந்தவைப் பிராட்டியார்
    10. பக்கல் காசுக் கொண்டு
    11. வைத்திய போகத்துக்கு மனையாக இவ்வாண்டே விற்றுக்குடுத்த மனையாவது
    12. இவ்வூர் ஸ்ரீகண்டச்சேரி மேற்கு நின்றும் எட்டாம் சட்டத்துக்குத்
    13. தெற்கு நின்றும் அஞ்சாமனையில் வடக்கடைய அரையமனையும்
    14. ஆறாம் மனையில் தெற்கடைய முக்கால்
    15. மனையும் விற்றுக் குடுத்தேன் எச்சக்கிரமவித்தனேன். ஆழ்வார்
    16. ஸ்ரீபராந்தகன் ஸ்ரீ குந்தவைப் பிராட்டியார்_ _ _ கோயிலில் மாளிகை
    17. ஆதிபூமியில் எழுந்தருளி இருந்து நம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து தன்மத்துக்கு வைத்தியபோகம் வைக்க கொண்ட நிலம்
    18. ஒன்பது மாவும் ஒன்றேகால் மனையும் சத்திரிய சிகாமணி  வளநாட்டு மருகல்நாட்டு மருகல் ஸவர்ணன் அரையன் மதுராந்தகனுக்கும் இவன்
    19. அனுவயத்தாற்கும் ராசேந்திர சோழர்க்கு யாண்டு மூன்றாவது முதல் இறையிலியே சந்திராதித்தல் வரை வைத்தியபோக காணியாகக் குடுத்தோம்
    20. என்று அருளிச் செய்யப் பெற்றான் என்று அரையன் அம்பலநான நெழுத்திநால் அரையன் மதுராந்தகனுக்கும் இவன் அன்வயத்தாற்க்கும்
    21. நாம் குடுத்தபடியும் நம்முடைய பிராமணப் படிகளும் கெல் மேல் வெட்டிவிக்க என்று அருளிச்செய்து ஆழ்வார் ஸ்ரீமுகம் வந்தமையில்
    22. கல்வெட்டுவிச்சோம் ராசகேசரி சதுர்வேதி மங்கலத்து மஹாசபையோம். பணியால் இச்சாதனம் வெட்டினேன்
    23. மதுராந்தகப் பெருந்தச்சனேன். இவை என் எழுத்து.

    திருமுகம் – அரசாணை; பற்றாகவிட – உரிமையாக அனுபவிக்க; ஜயபோகத்துக்கு –  ; எச்சபோகம் – முதுசொம், சந்ததியாக அனுபவி, ancestral property; வைத்தியபோகம் – மருத்துவம் செய்பவருக்கு ஒதுக்கப்பட்ட மானிய நிலம்; சட்டம் –  ; அருளிச் செய்- மனம்இரங்கிக் கொடு; ஆழ்வார் – இறைப் பற்றாளரை குறிக்கும் மதிப்புச் சொல்; மாளிகை ஆதிபூமியில் – கருவறை முதற் தளம்; மருகல் – குடியோன், செல்வம்; அரையன் –  அறுவை மருத்துவன்; அனுவயத்தார் – பின்வரும் கால்வழியர்; பக்கல் – இடத்து, 7ஆம் வேற்றுமையான கண்; படிகள் – நாட்செலவு பொருள்கள்; பணி -கட்டளை; சாசனம் – கல்வெட்டு ஆவணம்.

    விளக்கம்:  இது முதலாம் இராசேந்திரச் சோழனின் ஏழாம் ஆட்சிஆண்டில் (1020 AD) வெட்டப்பட்ட கல்வெட்டு. இங்கு இராசராசன் தமக்கை குந்தவைப் பிராட்டியார் தந்தை இரண்டாம் பராந்தகன் பெயரை முன்னொட்டாக பெற்று குறிக்கப்படுகிறார். குந்தவை மனம் இரங்கிக் கொடுத்த போது சொன்ன சொல் யாதெனில், “நித்தவினோத வளநாட்டின் நல்லூர் நாட்டில் அமைந்த பிரம்மதேயமான இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் ஊர் சபையோர்க்கு தரும் செய்தியாவது, தஞ்சாவூர் கூற்றத்தில் உள்ள தஞ்சாவூர் சுந்தரச்சோழ விண்ணகரத்தில் அமைந்த மருத்துவகத்தில் மருத்துவம் செய்வதற்கு கூலியாக முன்பு இந்த மருத்துவகத்தில் ஏற்பாடான திட்டப்படி ‘இராசகேசரி’ என்னும் அளவையால் நாள்தோறும் நெல் பதக்கு நானாழி அளவும் ஆண்டிற்கு பொன் நான்கு கழஞ்சும் உரிமையாக அனுபவிக்கத் தரப்பட்டிருந்தது. இவை இப்போது ஜெயபோகத்திற்கு உரிமையாகும் வண்ணம் விடப்பட்டதால் அதற்கு மாற்றீடாக, “இந்த இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் கலகரச்சேரி இராயூரில் முதுசொம் உள்ள கிரமவித்தன் என்பான் இறைவனடி பற்றும் இறையடியாரான ஆழ்வார் குந்தவை பிராட்டியிடம் காசு பெற்றுக் கொண்டு மருத்துவர் காலம் முழுதும் ஆண்டு அனுபவித்தற் பொருட்டு இவ்வாண்டு விற்ற மனையானது இந்த ஊர் ஸ்ரீ கண்டச்சேரிக்கு மேற்கில் இருந்து எட்டாவது சட்டத்துக்கு தெற்கில் இருந்து ஐந்தாம் மனையில் வடக்கே அரை மனையும், ஆறாம் மனையில் தெற்கில் முக்கால் மனையும் விற்றுள்ளான் இந்த எச்சக் கிரவித்தன் என்ற பிராமணன்”. இறையடியாரான குந்தவை பிராட்டியார் கோயிலின் கருவறைக்கு முன்னுள்ள முதல் தளத்தில் வந்திருந்து நம் இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் அறக்கொடையாக மருத்துவரின் உரிமையாகத் தருவதற்கு வாங்கிக் கொண்ட நிலம் ஒன்பது மாவையும் (1/2 + 3/4 =1-1/4) ஒன்றேகால் மனையையும், சத்திரிய சிகாமணி வளநாட்டின் மருகல் நாட்டுச் செல்வமான பெரு மருத்துவன் அரையன் மதுராந்தகனுக்கும் இவன் வழிவந்தோருக்கும் இராசேந்திரச் சோழனின் மூன்றாம் ஆட்சிஆண்டு (1016 AD) முதற்கொண்டே இறையிலியாக நிலவும் ஞாயிறும் நின்று நிலைக்கும் காலம் வரை மருத்துவர் உரிமைக் காணியாக மனமிரங்கிக் கொடுத்தேன் என்று சொல்லி கொடுக்கப்பட்டான் என்று அரையன் அம்பலன் ஓலை எழுத்தினால் அறுவை மருத்துவன் மதுராந்தகனுக்கும் அவன் வழிவருவோருக்கும் கொடுக்கப்பட்டது. அதோடு பிராமணர்களுக்கு கொடுத்த நாட்செலவுப் பொருள்கள் பற்றியும் கல்மேல் கல்வெட்டு ஆக்கி வைக்க வேண்டும் என்று இறையடியார் குந்தவைப் பிராட்டியாரிடம் இருந்து ஆணை வந்தமையால் கல்வெட்டாக்கி வைத்தோம் இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தின் ஊர்ச் சபையோம். கட்டளைக் கடமைக்கு இந்த ஆவணத்தை வெட்டுவித்தேன் மதுராந்தகப் பெருந்தச்சன். இது என் கையொப்பம். ஊர்ச் சபையோர் வேண்டுகோள் விடுத்ததால் இந்த மருத்துவர் கொடையை குந்தவை பிராட்டியார் தந்திருக்க வேண்டும். அதனால் கல்வெட்டில் ஊர்ச்சபையோர் குறிக்கப்படுகின்றனர். அப்போது குந்தவைக்கு 75 அகவை கடந்திருக்கும் என ஊகிக்க முடிகின்றது.

    இதே போல் குந்தவையார் 1016 A.D. இல் சவர்ணன் அரையன் சந்திரசேகரன் ஆன பாரத்துவாசி அரையன் சண்டேசுவர கருணாகர உத்தம சோழ அசலண் என்ற பெருமருத்துவனுக்கு வீடும், மருத்துவக் காணியும் கொடையாக நல்கிய செய்தி திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவிலின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. (காண்க ARIEp 1923 B No 112)

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (பொ.ஆ. 300 – 1800), பக்.287- 288. ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம். (ARIEp 1923, B No 249).

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் நாலாம் திருச்சுற்றில் உள்ள தந்வந்திரி கோயில் முன் உள்ள கற்பலகையில் உள்ள 118 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் 1415 ந் மேல் செல்லா நின்ற ப்ரமாதி ஸம்வத்ஸரத்து ருஷப நாயற்று பூறுவ பக்ஷத்து பஞ்சமியும் ஸோம வாரமும் பெற்ற பூசத்து நாள் திருவரங்கன் திருப்பதி இறந்த காலம் எடுத்த பெருமாள் கூடல் சக்ரவாள நம்பி ஆன உத்தமநம்பி பிள்ளை காலத்திலே பட்டாள் கொத்து அழகிய மணவாள மங்களாதராயர் புத்ரந் ஸ்ரீ நிவாஸந் ஆன ஸ்ரீரங்க கருடவாஹன பட்டர் கயிங்கரியம் ஆக ஸ்ரீ சந்த்ரபுஷ்கரணிக்கு மேல்புறமாக முன்னாள் ப்ரதாப சக்ரவத்தி காலம் துடங்கி இவருடைய பூர்வாள் கருடவாஹந பட்டர் நடத்தி வந்த ஆரோக்ய ஸாலை வாணத்திலே பிலமாகையில். இப்பொழுது ஆரோக்ய ஸாலையும் சமைப்பித்து தந்வந்தரி எம்பெருமானையும் ஏறி அருளப்பண்ணுகையில் நாள்தோறும் பெருமாள் குடினீர்அமுது செய்தருளுகிற கட்டளைக்கும் தந்வந்தரி எம்பெருமான் திருவாராதந கட்டளைக்கும் நடக்கும்படி முன்னாள் கருடவாஹந பட்டர் பெருமாளுக்கு ரங்கபோஷனை ப்ரபந்தம் பண்ணி பெருமாள் திருவுள்ளம் உகந்து திருக்கை வழக்கம் ஆகப் பல்லக்கு மான்னியம்மாகத் திருவுள்ளம் பற்றின திருமுகப்படியிலே அனுபவித்து வந்த தென்கரை திருவிடை ஆட்டம் (பா)ண்ட மங்கலத்து இராஜவிபாடன் நிலம் இருவேலியும் நாளது பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்து தந்வந்தரி எம்பெருமானுக்கு திருவிடை ஆட்டமாக ஸமர்ப்பிக்கையில் இந்த நிலம் இருவேலியும் தந்வந்தரி எம்பெருமானுக்கு திருவாராதநக் கட்டளைக்கும் குடினீர் அமுதுக்கும் கருடவாஹன பட்டர் அதிஷ்டானம் ஆக புத்ர பௌத்ர பரம்பரையாக ஆசாஞ்ரார்க்கு ஸ்தாயி ஆக நடத்தக் கடவதாவும் இந்த தர்ம்மத்துக்கு அஹிதம் நினைத்தவர்கள் கங்கைக் கரையில் கபிலயை வதைத்தவர்கள் பாபத்திலே போகக் கடவர்களாகவும் ஸுபமஸ்து.

    ஆரோக்கிய சாலை – மருத்துவகம்; கொத்து – ஊழியர் தொகுதி; கைங்கர்யம் – அறத்தொண்டு, தர்ம சேவை, இறைத் தொண்டு; பூர்வாள் – முன்னோன்; வாணம் – தீ, வேட்டு; பிலம் – குகை போல் பள்ளம்; சமைப்பித்து – உண்டாக்கி; ஏறிஅருள- எழுந்தருள, பிரதிஷ்டை செய்; குடிநீர் அமுது – மூலிகை நீர், தீர்த்தம்; கட்டளை – கோயில் சிறப்பு நடைமுறை, பூசை ஏற்பாடு; திருமுகம் – ஆணைஓலை; அதிஷ்டானம் – நிலைக்களம், location; ஆசாஞ்சரார் – வந்து போவோர்; ஸ்தாயி – விடுதி; சுபமஸ்து – நன்மையே உண்டாகுக.

    விளக்கம்: சக ஆண்டு 1415 (1493 AD) பிரமாதி ஆண்டில் திருவரங்கன் திருவரங்கத்தில் இறந்த காலம் எடுத்த பெருமாள் கூடல் சக்ரவாள நம்பி எனும் உத்தமநம்பி நிர்வகிக்கும் காலத்தில் பட்டர்களின் ஊழியர் குழுவைச் சேர்ந்த ஒருவரான அழகிய மணவாள மங்களாதராயர் மகன் சீறினிவாசன் எனும் ஸ்ரீரங்க கருடவாகன பட்டரின் அறத்தொண்டாக சந்திரன் எனப் பெயரிட்ட தாமரைக் குளத்திற்கு மேற்கே முன்னாளில் போசளன் சோமேசுவரனின் இரண்டாம் மகன் பிரதாப சக்ரவர்த்தியான வீரராமநாதன் ஆட்சிக் காலம் முதல் இவருடைய முன்னோன் கருடவாகன பட்டர் வழிவந்தோர் நடத்தி வந்த மருத்துவகம் பின்னாளில் தீக்கோளினால் பள்ளமாகி அழிந்தது. இப்பொழுது மீண்டும் இந்த ஸ்ரீரங்க கருடவாகன பட்டர் ஒரு மருத்துவகத்தை உண்டாக்கி அதில் தந்வந்தரி பெருமானை எழுந்தருளச் செய்து நாள்தோறும் பெருமாளுக்கு மஞ்சனநீரை உருவாக்குகிற கோயில் நடைமுறைக்கும், தந்வந்தரி பெருமான் பூசையை நடத்துவதற்கும், முன்னாளில் கருடவாகன பட்டர் பெருமாளுக்கு ரங்கபோஷனை பிரபந்தம் செய்து பெருமாளின் திருவுள்ளத்தை மகிழ்வித்து பிரசாதமாக, பல்லக்கு மானியமாக கொடுத்தாற் போல இறைவன் உள்ளத்தை பிடித்த போது கிடைத்த ஆணையால் தான் அனுபவித்து வந்த தென்கரையில் அமைந்த வைணவக் கோயில் மானிய நிலம் உள்ள பாண்ட மங்கலத்து இராசவிபாடன் நிலம் இரண்டு வேலியை இன்று பெருமாளுக்கு வேண்டுதல் வைத்து தந்வந்தரி பெருமானுக்கு திருவிடையாட்டமாக விட்டார். இந்நிலம் இரண்டு வேலியைக் கொண்டு தந்வந்தரி பெருமானின் பூசை நடைமுறைக்கும், தீர்த்தத்திற்கும், கருடவாகன பட்டர் நிலையென அறியப்பட்டு அவர் பிள்ளை, பேரப்பிள்ளை பரம்பரையோர் மற்றும் வந்துபோவோர்க்கு தங்கும் விடுதியாக நடத்திச் செல்லவேண்டும். இந்த அறத்தை அழிக்க நினைப்போர் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்றவர் அடைந்த பாவத்தை அடைவதாகுக. நன்மை உண்டாகட்டும்.

    ஸ்ரீரங்க கருடவாகன பட்டர் தொழிலால் அர்ச்சகர் தான் மருத்துவர் அல்லர். ஆனால் மூதாதை கருடவாகன பட்டர் மீது கொண்ட மதிப்பால் மீண்டும் மருத்துவகம் இயங்கச் செய்கிறார். போசளன் வீரராமனாதன் (1253-1295) 3-ம் ஆட்சி ஆண்டில் அவன் படைத் தலைவன் சிங்கதேவ சிங்கண்ணன் ஒரு மருத்துவகத்தை இக்கோயிலில் உண்டாக்கி 1100 வராகன் பொன் கொடுத்து விளைநிலத்தை வாங்க வைத்து அதில் மருத்துவர் கூலி, மருந்து செலவுகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான். தனக்கு மருத்துவரும் இந்த மருத்துவகத்தின் தலைவருமான மூதாதை கருடவாகன பட்டருக்கும் பிறருக்கும் தர வேண்டிய கூலி பற்றியும் குறிப்பிடுகிறான். கொடையளிக்கும் வேந்தர் நேரடியாகத் தனது பெயரை குறிப்பிடும் மரபை கடைபிடிக்காததால் படைத்தலைவரை பணித்து இவ்வாறு நன்கொடை வழங்கச் சொல்வதை மரபாகக் கடைபிடித்தனர். பூலாங்குறிச்சி கல்வெட்டு இதற்கு ஒரு சான்று. இச் செய்தி S.I.I. 24 பக்.286-288 எண். 266 ம் கல்வெட்டில் உள்ளது. இரண்டு கருடவாகன பட்டருக்கும் உள்ள கால இடைவெளி 238 ஆண்டுகள் எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள் – 24, பக். 352-353 எண். 353

    நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் கோட்டை முனியப்பன் கோவில் பரந்த பாறையில் பொறிக்கப்பட்ட இரு கல்வெட்டுகள். முதல் கல்வெட்டு 15 வரியும் இரண்டாம் கல்வெட்டு 8 வரியும் கொண்டவை.  

    ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனநச் சக்ரவத்தி கோனேரின்மை கொண்டான் அங்கவைத்யரில் ஸவனந்  பா / ரா ஸ்ரீயன் ஆதித்ததேவன் திருவம்பலப் பெருமாளான வைத்யபுரந்தரற்கு வ / ட கொங்கு ஏழூர்நாட்டு வானவன் மாதேவி  நான்கெல்லைக்குட்பட்ட  நஞ்(சை) புன்செயும் / நத்தமும் நத்தப்பாடும் வாஸ்துவும்  வாஸ்துஷேமமு(ம்) குளமும் குளப்பரிப்பும் தோட்டமும் தோ  / ட்டக்கூறும் ஆற்றங்காலும் துரவும் காடும் மலையு(ம்) மற்ரு மெப்பெற்பட்ட ஸமஸ்த ப்ரா / ப்திகளிலும் (ப)ழந் தேவதானந் திருவிடையாட்டம் பள்ளிச்சந்தம் பட்டர் களிறையி(லி) நீ / க்கியுள்ள ஸம(ஸ்த ப்ரா)ப்திகளும் எட்டாவது புரட்டாதி  மாதமுதல் உதகப்பூர்வ்வ தர்மதாந இரையிலியா / கத் தந்தோம். இத்தால் வரும் கடமை, பொந் வரி, கற்பூர வினியோகம், மரவடை, புன் பயிர், தறி இறை,செக்கிறை, தட் / டொலி, தட்டார்ப் பாட்டம், ஏர் வரி, இனவரி, இடைவரி, எரிமீன் பாட்டம், காணிக்கை, காத்திகைப்பட்டை நல்லெத்து, / நற்பசுப், பஞ்சு பிலி, ஓலை எழுத்து வினியோகம், வாசல்பேறு, இலாஞ்சினைப்பேறு, வெட்டி ஆள் தேவை, தச்சுத் தே / வை ஆனைச்சாலை, குதிரைப்பந்தி  மற்றும் எப்பேர்ப்பட்ட இறைகளும்  இன்னாள்முதல் வரியிலார் கணக் / கிலும்  கழித்து முன்னுடையாரையும் பழம்பேரையும் முதலறத் தவிர்த்துத் தமக்கு முதலடங்கலும்  / இறையிலி ஆகவும் தாநாயமந விக்கிரயங்களுக்  குரித்தாகவும் தந்தோம். இப்படிக்கு  சந்திராதித்தவற் செல்வதாகக் / கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொண்டு அனுபவித்துக் கொள்ளவும் பார்க்க. இவை இலைநல்லூருடையான் / எழுத்து. இவை சுந்தர பாண்டியப் பல்லவராயன் எழுத்து அளவு 16.  

    ஸ்வஸ்திஸ்ரீ ஏழூர்நாட்டு ஸபையாரும் நாட்டாரும் நகரத்தாரும் நாங்கூர் ஸவர்ண்ணந் / பாராஸ்ரீயன் ஆதித்ததேவன் திருவம்பல பெருமாளான வைத்ய புரந்தரர்க்கு எங்கள் / நாட்டு வானவன்மாதேவி நான்கெல்லைக்குள்பட்ட  ஸகல ப்ராப்திகளும் எட்டாவது / புரட்டாதி  மாதமுதல் பண்டுடைய்யாரையும்  பழம் பேரையும் முதலறத் தவிர்த்து இவ்வூர் ஸகல / ப்ராப்திகளும் தமக்கு உதகபூர்வ்வ தர்ம்மதானமாக ஸர்வ்வ  மாந்யமும் இறையிலி ஆகப் பெருமாள் / சுந்தரபாண்டிய தேவர் தந்தருளின திருமுகப்படியே நாங்களும் தமக்கு உதகம் பண்ணி / இறையிலி ஆகத் தந்தோம். இப்படிக்குப் பணியால் நாட்டுக்கணக்குச் (சூரிய) தேவன் / எழுத்து.         

    அங்கம் – வெட்டுகை, chopping; சவர்ணன் – பெரு மருத்துவன்; பிராப்தி – உரிமை; வைத்தியபுரந்தரன்- மருத்துவரில் இந்திரன் போன்றவன்; திருமுகம் -வேந்தனின் ஆணை.

    விளக்கம்:  வேந்தன் சுந்தர பாண்டியனின் ஆணைப்படி அவனது எட்டாம் ஆட்சி ஆண்டில் அவனிடம் பணிபுரியும் அறுவை மருத்துவர்களில் ஒருவரான நாங்கூரைச் சேர்ந்த பெருமருத்துவன் பராசர கோத்திரத்தவன் ஆதித்த தேவன் திருவம்பலப் பெருமாளான மருத்துவரில்  இந்திரன் போன்றவனுக்கு வடகொங்கின் ஏழூர் நாடான இன்றைய நாமக்கல் நகரமாம் வானவன்மாதேவியில் வைணவ, சைவ, சமண கோவில்களின் கொடைநிலங்கள், பிராமண பட்டர்கள் பெற்றுள்ள இறையிலி நிலங்கள் மற்றும் ஏற்கனவே நிலம் உடையோர், பழைய ஆள்கள் ஆகியோர் பெயரைத் தவிர்த்து பிற எல்லா நிலத்தின் உரிமையையும் தர்ம தானம் செய்யத்தக்க இறையிலியாக நீரட்டித் தந்தோம். இந்த நிலங்களில் இருந்துவரும் எல்லா வகை வரிகளும் அரசருக்கு தரவேண்டாத இறையிலியாக வரியிலார் கணக்கில்  கழித்துத் தந்தோம். இதை கல்லிலும் செப்பிலும் வெட்டிக்கொள்க என்று ஊர்சபையாரும், ஊராரும், நகரத்தாரும் ஒப்புக்கொள்ள ஊர்க்கணக்கன் இந்த ஆணையை கையெழுத்திட்டான்.

    ஒரு அறுவை மருத்துவனுக்கு ஒரு ஊரும், ஊரின் வரிவருவாயும் இறையிலியாக கொடுக்கப்படுகிறது என்றால் ஆதித்த தேவன் செய்யும்  சேவை, தொண்டு மிகப் பெரியதாகவே இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது. யானைச் சாலை, குதிரைப்பந்தி ஆகிய சொற்களை நோக்க இவ்வூரில் சுந்தர பாண்டியனின் நிலைப் படை (reserve army) நிலை கொண்டிருந்திருக்க வேண்டும் என்று தெரிகின்றது.  இந்த படையினருக்கும்  படை விலங்குகளுக்கும் போரில், போர்ப் பயிற்சியில் காயமுறும் போது சிதைந்த உறுப்புகளை  வெட்டிஅகற்ற, தைக்க ஆதித்த தேவன் அறுவை மருத்துவம் செய்யவேண்டி இருப்பதால் இப்பெருங்கொடை பெற்றான் எனத்  தெரிக்கின்றது. பொது மக்களை விட படைப்பிரிவில் தான் அறுவை மருத்துவரின் சேவை அதிகம் தேவை.

    பார்வை நூல்: சேலம் நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுகள், தஞ்சைப் தமிழ்ப் பல்கலை வெளியீடு,  ஆசிரியர் அ. கிருஷ்ணன், எண். 250-251, பக். 198-200  

    மயிலாடுதுறை மாவட்டம்  திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் தென் சுவரில் உள்ள  14 வரிக் கல்வெட்டு.

    I III. ஸ்வஸ்திஸ்ரீ [||*] பூமாலைமிடைந்து பொன் மாலைத் [திகழப் பாமாலை] மலிந்த படுமணித்திரள் புயத்திரு நிலமடந்தையொடு ஜயமகள்ளிருப்ப கநவரை மாரவன்தன[ப்பெற்]றுத் திருமகள்ளொடு தநி இருப்ப கலை மகள் சொற்றிறம் புணந்து கற்பினளாகி விருப்பொடு நாவக[த் திருப்ப திசை] தொறும் திகிரி யொடு[ஞ்] செங்கொல் நடப்ப அகில புவனமுழுதுங் கவிப்பதொரு புதுமதி போல வெண்குடை[அடி]மிசை நிழற்றக் கருங்கலி
    யொளித்து வந்பிலத்திடைக் கிடப்ப குளத்திடைத் தெலுங்க விமனநடு விலங்கல் மிசை எறவும் கலிங்க பூமியைக் கநன எரிபருகவும் ஐம்படைப் பருவத்து வெம்படை- 

    2.தாங்கி வேங்கை மண்டலத் தாங்கிநிதிருந்து வடதிசை யடிப்படுத்த[ருளி]… ழமும்… தானமுந்தழைத்து வேதமும் மெய்மை… லைசிறப்ப தநித் தநி சிற[ந்]து வந்தருளி வெற்கரும் பொற்புலி ஆனைபா… … முறைமையில் சூடி மந்நூயிர்க்கெல்லாம் மிந்நுயித்தாய் போலத் தந்நொளி பரப்பித் தநித்து   நிபரந்து மண்முழுதுங்கவிப்ப மநு நெறி வளரத் தன் கோயில் கொற்றவாசல்ப் புறத்து மணிநாவொடுங்க முரைசுகள் முழங்க விஜயமும் புகழும் மேல்மேலோங்க செழியர் வெஞ்சுரம் புக சேரலர் கடல் புக வழி தரு சி-

    3.ங்கணரஞ்சி கங்கர் திறையிட கந்நடர் வெழ்கிட கொங்கர் பொது… தந்துமககரனெ …றஞ்சி தொல்லை எழுலகுந் தொழுதெழத் தோன்றி முல்லை வா…..சங்கர இமையத்திருந்தெனப் பொருந்தி உடநிருப்பக் கங்கையொப்பாகிய தெரிவயர் திலதந தியாகபதாகை புரிகுழல் மடந்தை புநிதகுணவநிதை திருபுவனமுடையா… வரு திருவிளத்திருள்ள முழுதுமுடையாள் உடநிருப்பச் செம்பொற் வீரஸிம்ஹாஸனத்து முக்கோக்கிழாநடிகளொ

    4.டும் விற்றிருந்தருளிய கோப்பரகேசரி பற்மரான த்ரிபுவநச் சக்கிரவத்திகள் ………… ஆவது த 4 நு நாயற்று சுவ……..ரியும் த்ரயோத 3 ஸியும் திங்கட்கிழமையும் பெற்ற மூலத்து நாள் விருதராஜ [பயங்கரவளநாட்டு] மண்ணிநாட்டுப் ப் 3 ரதே 3 யம்விருதராஜபயங்கர சருப்பேதி மங்கலத்து  மஹா ஸஹையோம்  நம்மூர்த் திருப்பாற்கடலாழ்வார் கோயிலிலே தன்மி செய்து கூட்டங்குறைவறக் கூடி இருந்து உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார் திருவாவடுதுறை உடையார் மூலப்ருத்தியராகிய ஆதி சண்டேச் 0 வரவர தேவர்க்-

    5.கு நாங்கள் இறையிலி செய்து குடுத்த நிலமாவது இவ்விருத ராஜபயங்கர சதுர்… … குடியில் உய்யக்கொண்டார் … …[சே] நாபதிகள் இளங்கா… … இளங்காரி[க்குடையாந்] சங்கரந் அம்பலங் கோயில் கொண்டாநான அனந்தபாலர் நம்மூர்க் குடிமக்கள் பக்கல் விலை கொண்டுடையராய் இவருதாயிருந்த நிலம் சளுக்கி குலகால வாய்க்காலுக்கு மேற்கும் வடக்கு நின்றும் மூன்றாங் கண்ணாற்று திருவுலகளந்தருளினபடி நீறா 2 ப 1 ம் நாலாங் கண்ணாற்றுத் திருவுலகளந்தருளினபடி நீ2 ப 2 ம் ஐஞ்சாங் கண்ணாற்றுத் திருவுலகளந்தருளினபடி நீ 2 ம .. ஆக திரு

    6. வுலகளதெருளினபடி நீ 5 4 ப இந்நிலம் ஐஞ்செய் நாந்மாவரைக்கும் கிழ்பாற்…க்காலுக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை ஆறாங்….. ற்கெல்லை திரு….முடையார் த…. நிலத்துக்கும் துவேதை கோமபுரத்துத்து மாதவபட்டந் நிலத்துக்கும் கழுமலவாய் நீரோடு காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை செந்திறத்து காளிதாஸ பட்டந் நிலத்துக்கும் சேஞலூர்க் கவணியந் திருவரங்கதேவன் சிவந் நிலத்துக்கு தெற்கும் ஆன இவ்விசைந்த பெருநாந்கெல்லையுள் நடுபட்ட திருவுலகளதெருளினபடி நீ …… ஆக நிலம் ஐஞ்செய் நா-

    7.ன்மாவரையும் இந்நிலம் … … வாரவும் பெறுவதாகவும் இந்நிலத்துக்கு வந்த … … ரி யெச்சோறு கூற்[றரிசி] வெள்ளாந்வெட்டி வெலா… மற்றும் திருவாசலில் போந்த குடிமை எப்பேர்ப்பட்டதும் செய்ய … … ஸம்மதித்து இந்நிலம் இறையிலி செய்து குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப் பொருளன்றாடு நற்காசு 425 இக்காசு நாநூற்றிறுபத்தை

    8. ஞ்சுங்கொண்டு இந்நிலம் ஐஞ்… … காசு கொள்ளா இறையிலியாக இறையிலி செய்து குடுத்[தோம்] உடையார் திருவாவடுதுறை உடையார் மூலலவரத்துராகிய ஆதிசண்டேச் 0 வர தேவக்கு மஹாஸபை 4 யார் இன்நிலத்தில் உய்யக்கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார் திருவாவடுறையுடையார் கோயிலில் சிவலோக நாயகன் திருவாசலின் [முன்பால்ச்] சங்கர தேவந் அறச்சாலை ப் 3 ராஹ்மணர்க்கும் தவஸியற்க்கும் அநாதி கிரிசர்க்கும் வயிஜ்யா சா 0 ஸ்த்ரமும் ப்3ரஹடமும் ச் 0 ரகமும் வ்யாகரணமும் உருபாவதாரமும் படிப்பாக்குச் சோ[றிடவும்] திருநா-

    9. ளில் சோறிடவும் மடப்புறமாக இறையிலி செய்த நீ 34 இந்நிலம் முன்றே நா…………டக்குத் திருச்சாக்காட்டுப்பிச்சர் எடுப்பித்த அம்பலங்கோயில் கொண்டான் அனந்தபாலர் மடத்துக்கும் மடப்புறமாக இறையிலி செய்த நீ2 லி இன்நிலம் இருவேலியும் ஆக நீ5 4 பஇ இந்நிலம் ஐஞ்சே நாந்மாவரையு மிகிதிக்குறைவுள்ளடங்க இக்காசுநானூற்று இருபத்தைஞ்சுங் கொண்டு காசுகொள்ளா இறையிலியாகச் சந்த்ராதி 3 த்யவர் சா 0 ச் 0 வதிகமாக.. திகமாகச் செம்பிலுங் கல்லிலும் எழுத்து வெட்டிக் கொள்ளப் பெறுவராக இறையிலி செ-

    10.ய்து குடுத்தோம் உடையார் திருவாவடுதுறை யுடையார் முலவ்ருத்யராகிய ஆதி … … … ஸபை 4 யோம்.. இப்படி ஸபை 4 யுள்ளிருந்து பணி[த்தாந்] பிராந்தகர்சீராம பட்டர் பணியாலும் வங்கிப்புறத்துக் கோவிந்த பட்டர் பணியாலும் செந்திறத்து காலாதிர பட்[ட*]ர் பணியாலும் திருக்கடவூர் காச் 0 யபந் ஸ்ரீவைகுந்தன் திருக்கதவ பட்[ட*]ர் பணியாலும் கிராஞ்சிகிள்ளை போந்த திருநம்பிபட்[டர்*]பணியாலும் செந்திறத்து கருணாகர பட்[ட*][ர்*] பணியாலும் ஆபசரிச் சீராம பட்டர் பணியாலும் குண்டுர் முத்த ஸ்ரீபல தேவர் பட்டர் பணியாலும் குண்டூர்த் தாமோதிர பட்டர்

    11. பணியாலும் துவேதை கோவிந்த சீராமபட்டர் பணியாலும் நட[லூ]ர் திருச்சிற்ற … … … யாலும் துவேதை கொந்த அக்கிதவ பட்டர் பணியாலும் துவேதை கொதைமாத கொந்த அக்கிதவபட்டர் பணியாலும் துவேதை கோதைமாதவ பட்டர் பணியாலும் குண்டுர் இளய ஸ்ரீவாஸக தேவ பட்டர் பணியாலும் சாந்தூர் திருநம்பி பட்டர் பணியாலும் சிராஞ்சி ஸ்ரீதின் காபோந்த இளைய திருநம்பி பட்டர் பணியாலும் காரம்பிச் சேட்டு இளைய நாராயண பட்டர் பணியாலும் பணிப்பணியால் பணிகேட்டு இவ்விறையிலிப் பிராமணம் எழுதிநேன் இவ்வூர்
    கரணத்தான் கஞ்சனூருடையாந் சக்கர-

    12. க்கைய்யன் சிரீளங்கோவிநேன். இவை என்நெழுத்து இப்படிக்கு இவை … …நெழுத்து இப்படிக்கு இவைகுண்டூர் ஸ்ரீவாஸுதேவ பட்டநெழுத்து. இப்படிக்கு இவை இப்படிக்கு இவை சி….தை கோமபுறத்து நாராயணபட்டன் நெழுத்து. இப்படிக்கு இவை திருக்கடவூர் காசிபன் ஸ்ரீவைய்குந்தம் திருக்கதவபட்டநேன், இவை என்நெழுத்து. இப்படிக்கு இவை குண்டுர் ஸ்ரீ வாஸுதெவபட்டன் நெழுத்து. இப்படிக்கு இவை நடாதூர்த் திரிச் சிற்றம்பல பட்டன் நெழுத்து. இப்படிக்கு அறிவேந் துவேதை கோமபுறத்து…..ம பட்டநேன். இப்படிக்கு 

    13. இவை துவேதை கோமபுறத்து அங்ஙிதவபட்டநேந். இப்படிக்கு அறிவேன் வங்கி … … றத்து தாமோதிரபட்டந் ஸயிஞ்ஞையாதமைக்கு

    14. [இவை] கருவூருடையாந்நெழுத்து. இப்படிக்கு கிராஞ்சி இளைய திருநம்பிபட்ட … … … மோதிர பட்டநெழுத்து. இது நடாதூர் சீராம பட்டர் ஸயிஞ்ஞையாதாமைக்கு இவை கருவூருடையாந் எழுத்து. செந்திறத்து காளாதிருபட்டர் ஸ்யிஞ்ஞையாதாமைக்கு துவேதை கோமபுறத்து சீராமபட்டநெழுத்து||-

    விளக்கம்: விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தி முதல் மூன்று வரிகளில் இடம்பெறுகிறது. விக்கிரம சோழனின் 3 ம் ஆட்சி ஆண்டில் விருதராஜபயங்கர சருப்பேதி மங்கலத்து ஊர்  சபையர் அவ்வூர் திருப்பாற்கடலாழ்வார் கோயிலில் கூடி இருந்து உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு உடையார்  திருவாவடுதுறை உடையார் மூலவரான ஆதி சண்டேச்வர தேவர்க்கு இறையிலி செய்து கொடுத்த நிலமாவது, “உய்யக் கொண்டார் வளநாட்டு  சேனாபதி இளங்காரிக்குடியான் சங்கரன் அம்பலன் கோயில்கொண்டான் ஆன அனந்தபாலன் முன்னம் இவ்வூர் குடிமக்களிடம் வாங்கியிருந்த 5 செய் 4 மாவரை  நிலத்தின் நான்கு எல்லைகள்  குறிக்கப்படுகின்றன. இந்நிலத்திற்கான  வரியை நீக்கி இறையிலியாக்கி அதற்கு  விலையாக  அன்றாட்டு நற்காசு 425 பெற்றுக்கொள்ளப்பட்டது. இனி இந்நிலத்தில் வரும் வருவாயைக் கொண்டு திருவாவடுதுறை இறைவன் கோயிலில் சிவலோக நாயகன் திருவாசலின் முன்புள்ள  சங்கர தேவன்  அறச்சாலை பிராமணருக்கும், தவசியருக்கும், அநாதி கிரிசர்க்கும் (கவனிப்பாரற்ற இழிந்தோர்), இவர் தவிர வைத்திய சாஸ்திரமும் பிரகடமும் சரகமும் இலக்கணமும் உருபாவதாரமும் படிக்கும் மருத்துவ மாணவருக்குச் சோறிடவும், இதுதவிர திருநாளில் சோறிடவும் மடப்புறமாக இறையிலி  நிலம் மூன்றே நாலுமா நிலம் கொடுக்கப்பட்டது.  இந்நிலம் முன்றே நாலுமாவொடு திருச்சாக்காட்டுப் பிச்சர் எடுப்பித்த அம்பலங்கோயில் கொண்டான் அனந்தபாலர் மடத்துக்கும் மடப்புறமாக இறையிலி செய்த நிலம் 2 வேலி. இந்நிலம் இருவேலியும் சேர்த்து ஆக நிலம் 5 செய்  4 மாவரை ஆகும். இந்நிலம் ஐஞ்சே நாந் மாவரையும் மிகுதிக் குறைவுள்ளடங்க அன்றாட்டு காசு நானூற்று இருபத்தை பெற்றுக் கொண்டு காசுகொள்ளா இறையிலியாகவே நிலவும் ஞாயிறும் உள்ள அளவும் நிலைப்பதாக செம்பிலும் கல்லிலும் எழுத்து வெட்டிக் கொள்க” என்று பலர் கையொப்பமிட்டது குறிக்கப்பட்டுள்ளது.  ஆக அனந்தபாலர் தந்த கொடை சோறிடுவதற்கும் அனந்தபாலர் மடத்திற்குமாக இரண்டு பகுப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. இறையிலிக்கு இழப்பீடாக 425 அன்றாட்டு நற்காசு பெறப்பட்டது ஏன் என்றால் சில ஆண்டுகளுக்கான வரி வருவாயை முன்கூட்டியே பெற்று அதற்கு வட்டி கணக்கிட்டால் வரிவருவாய் இழப்பு ஈடு செய்யப்பட்டதாகிறது.

    பிரகடம், சரகம், உருபாவதாரம் ஆகியன ஆயுர்வேத மருத்துவ நூல்கள் ஆகும். இதன் மூலம் திருவாவடுதுறையின் இக்கோவிலில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையும் மருத்துவக் கல்விக்கூடமும் இயங்கிய செய்தி புலனாகிறது.

    பார்வை நூல்:  Annual report of Indian epigraphy 159 of 1925.

    இக்கல்வெட்டின் மைப்படியை தந்த இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் மைசூர்க் கிளை தொல்லெழுத் துறைக்கும், கல்வெட்டை படித்து சரிபார்த்துத் தந்த திரு. இராஜகோபால் சுப்பையாவிற்கும் நன்றிகள் பல.

    Share
  • கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம்

    கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம்

    பாஸ்கர்

    கமல் ஹாசனின் கட்சி வளர்ந்து வருகின்றது. அவர் பேச்சு, அரசியல் சூழல் புரிந்துள்ள நிலை மிக தெளிவாக இருக்கிறது. லஞ்ச லாவண்ய அரசியல் எதிர்ப்பாளர் என்ற ஒரு ஆயுதமே இன்று அவருக்குப் பெரும்பலம். அவருக்கு நல்ல உடல் நிலை உள்ளது. தமிழக அரசியலைத் தேசிய அரசியலை ஊன்றிப் பார்த்த அவர், நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பலாம்.

    பணத்துக்கு ஆசைப்படும் வயதெல்லாம் தாண்டிவிட்டார். புகழ் போதை தவிர்க்க முடியாது. அதுவும் கடந்து போகும். நல்ல இலக்கிய, கலை அறிவு அவருக்கு உண்டு. நல்ல மொழிப் பரிச்சயம் அவருக்கு. டில்லி சென்றால் இந்தியில் பேசலாம். அடுத்த மாநிலங்களுக்குச் சென்றால் அவர்கள் பாஷையில் உரையாடலாம் . முடிவுகளைச் சட்டென எடுக்கிறார்.

    இன்னும் கொஞ்சம் மக்களுடன் நெருங்கி அவர்கள் உயரத்தில் இருந்து பேசினால் நெருக்கம் அதிகமாகும். நடிப்பதில்லை என முடிவும் எடுத்துவிட்டார். அவரின் சில சாமர்த்திய முடிவுகள், ஒரு திட்டமிடலைச் சொல்கின். வசீகரம் மாறவில்லை. அவர் நாத்திகர் எனச் சிலர் கிண்டல் செய்வதை ஒப்புக்கொள்ள முடியாது. நாத்திகன் நல்லது செய்யக் கூடாதா? அல்லது நாத்திகன் நல்லவனாக இருக்கக் கூடாதா என்ன?

    எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று சிந்தனை அவருக்கு உண்டு. விஞ்ஞானம் புரிந்து, தொழில்நுட்பம் தெரிந்த, தன்னை மாற்றிச் சம காலத்திற்கு உயர்த்திக்கொண்டு உள்ள அவரது புரிதல், நிச்சயம் தேசத்திற்கு நல்லது. அவர் மற்றவர்கள் போல இயல்புத் தமிழில் பேசி, மிகுந்து யோசித்துப் பதில் கொடுத்து, தன்னை மையப்படுத்திக் கொள்ளாமல் இயல்பாய் இருப்பின், மிகுந்து சாதிப்பார்.

    வாழ்க மக்கள் நீதி மையம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என யோசிப்பவர்கள் நிச்சயம் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் சில காலத்தில் அவர் கட்சி இங்கு நிச்சயம் வேரூன்றும்.

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 3

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 3

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘தொல்காப்பியத்தில் உவம உருபுகள்’ ஒரு பார்வை

    முன்னுரை

    பயிர்களுக்கு ‘வளர்ச்சி’ என்பது தனி. ‘காப்பு’ என்பது தனி. ஆனால் மொழிகளுக்கு வளர்ச்சியே காப்பு. வீக்கம் வளர்ச்சி ஆகாது. மரபாகிய அடிச்சட்டகம் எந்த நிலையிலும் மாறக்கூடாது. ‘மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்’. உவம மரபு என்பது தமிழின் ஆழமான மரபு. பொருள், உவமம் பொதுத்தன்மை, உவமச்சொல் என்பன பற்றிய ஆராய்ச்சி தமிழில் செழித்தோங்கிய காலம் ஒன்று இருந்திருக்கிறது. படைப்பாளனின் உள்ளக் கருத்திற்கேற்ப உவம உருபுகள் பயன்பாட்டுக்கு வர அவற்றை வகைதொகைப்படுத்தும் பணியில் அறிஞர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அவருள் தொல்காப்பியரும் ஒருவர். இதுபற்றிய கருத்துக்கள் இந்தப் பகுதியில் சுருக்கமாக ஆராயப்படுகின்றன.

    தொல்காப்பிய அகத்தும் புறத்தும் உவம உருபுகள்

    தொல்காப்பிய உவமவியல், அகத்திணை மாந்தர்களின் கூற்றுப்பகுதியில் உவமை அமையும் திறத்தினை ஆராய்கிறது. அவ்வாராய்ச்சியில் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில் உவமங்கள் அமையலாம் என வரையறுக்கிறது. அவ்வாறு அந்நான்கு தளத்துள் அமைகின்ற உவமைகளுக்கும் அவை விளக்கும் பொருண்மைகளுக்கும் இடையில் அமைய வேண்டிய உவம உருபுகளைப் பற்றியும் தொல்காப்பியம் கருத்துரைக்கின்றது. உவம உருபுகளை ‘உவமச்சொல்’ எனவும் வழங்குவர். தொல்காப்பியத்துள் இவ்வுவம உருபுகளைத் தொகுத்துச் சுட்டுங்கால் ஓரியல்பாகவும் வகுத்துக் காட்டுங்கால் வேறொரு இயல்பாகவும் அமைந்துள்ளன என்பதை அறியமுடிகிறது.

    தொகுத்துச் சுட்டலும் வகுத்துக் காட்டலும்

    தொல்காப்பியத்துள் உவம உருபுகள் எண்ணிக்கையால் இருவகையாகக் கூறப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகையாக அமையும் உவமத் தொடர்களில் பயன்படுத்தப்படும் உவம உருபுகளைத் தொகுத்தும் வகுத்தும் தொல்காப்பியர் சுட்டியுள்ளார். இவ்வாறு கூறப்படும் இருவகை நிலையிலும் மெல்லிய வேறுபாடு தென்படுகிறது.

    தொகுத்துச் சுட்டல்

    ‘அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, இறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய’ என்னும் முப்பத்தாறு உவம உருபுகள் தொகுத்துச் சுட்டும் நூற்பாவில் காணக்கிடக்கின்றன.

    வகுத்துக் காட்டல்

    தொகுத்துச் சுட்டிய உவம உருபுகளை இன்ன உவமத்திற்கு இன்ன உருபு என வகுத்துக் காட்டும் நூற்பாக்கள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

    வினையுவம உருபுகள்

    “அன்ன ஆங்க மான இறப்ப
    என்ன உறழத் தகைய நோக்கொடு
    கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்”

    பயனுவம உருபுகள்

    “எள்ள, விழையப், புல்லப், பொருவக்,
    கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ
    என்றாங்கு எட்டே பயனிலை உவமம்”

    மெய்யுவம உருபுகள்

    “கடுப்ப, ஏய்ப்ப, மருளப், புரைய,
    ஒட்ட, ஒடுங்க, ஓட, நிகர்ப்ப என்று
    அப்பால் எட்டே மெய்ப்பால் உவமம்”

    உருவுவம உருபுகள்

    “போல, மறுப்ப, ஒப்பக், காய்ந்த,
    நேர, வியப்ப, நளிய, நந்த என்று
    ஒத்துவரு கிளவி உருவின் உவமம்”

    தொகை நூற்பாவையும் வகைநூற்பாக்களையும் உறழ்ந்து நோக்கினால் பெறக்கூடிய உண்மைகளைப் பின்வருமாறு நிரல்படுத்தலாம்.

    1. தொகை நூற்பாவில் உவம உருபுகளின் எண்ணிக்கை முப்பத்தாறு (36) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
    2. வகைநூற்பாக்களில் கூறப்பட்டிருக்கும் உவம உருபுகளின் எண்ணிக்கையோ முப்பத்திரண்டு மட்டுமே. (32)
    3. தொகை நூற்பாவில் கூறப்பட்ட உருபுகளில் ஆறு உருபுகள் (ஒன்ற, என்ற, மாற்ற, பொற்ப, நாட, நடுங்க) வகைநூற்பாக்களில் கூறப்படவில்லை. (36-6=30)
    4. தொகை நூற்பாவில் சொல்லப்படாத நேர, நோக்க என்னும் இரண்டு உருபுகளும் வகை நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன. (36+2=38)
    5. மேற்சுட்டிய அனைத்தையும் நோக்கத் தொல்காப்பியரால் கூறப்பட்டிருக்கும் உவம உருபுகள் முப்பத்தெட்டாகும். (38)

    வினையுவம உருபுகளுள் ஒன்றாகக் குறிக்கப்பட்டிருக்கும் ‘நோக்க’ என்பதும் உருவுவம உருபுகளுள் ஒன்றாகக் குறிக்கப்பட்டிருக்கும் ‘நேர’ என்பதும் தொகை நூற்பாவில் குறிக்கப்படவில்லை. வகைநூற்பாக்களில் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ள இவற்றையும் சேர்த்துத் தொல்காப்பியம் கூறும் உவம உருபுகளின் எண்ணிக்கை முப்பத்தெட்டாகும். (36+2 =38)

    ‘இன்ன உவமத்திற்கு இன்ன உருபுதான் வருதல் வேண்டும்’ என்னும் தொல்காப்பியத்தின் கட்டுப்பாடு இலக்கிய ஆய்வில் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படலாம். இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதற்கான காரணம் சிற்றறிவால் எளிதாகப் புரிந்து கொள்ளுமாறு அமையவில்லை.

    (தொடரும்…)

    Share
  • மாவு மிஷின் (சிறுகதை)

    மாவு மிஷின் (சிறுகதை)

    பாஸ்கர்

    நிஜார் போட்டிருந்த நாட்களில் நான் குந்துமணி பங்களாவில் மாடிப்படி மாது. கடைக்கு ஏதேனும் வாங்கவேண்டும் என்றால் எல்லோரும் என்னைத் தான் அழைப்பார்கள். மங்களம் மாமி பில்லை காபிபொடி கேட்பாள். ஆராவமுது அய்யங்கார் கேட்பது மைதீன் புகையிலை. அதுவும் மாமிக்கு தெரியாமல் கொடுக்க வேண்டும். பார்த்துவிட்டால் மாமி எனக்கு புரியாதபடி மாமாவை வைவாள். புகையிலை மயக்கத்தில் வாயை குதப்பிக் கொண்டு மாமா இன்றெல்லாம் உட்கார்ந்திருப்பார். வாயைத் திறக்க மாட்டார். திறந்துவிட்டு பேசினால் அந்த குதப்பலை முழுங்க வேண்டி வரும். வாந்தியும் எடுத்து பார்த்து இருக்கிறேன். மாமி பயந்து கொண்டு எண்ணண்ணா என்பாள். பித்தம்டி என்பார். எனக்கு தான் தெரியும். மாமாவை உற்றுப் பார்த்தால் படவா என்பார்.

    இதில் விஷேசம் இந்திரா அக்காதான். அக்காவுக்கு வேண்டியது புஸ்தகங்கள்தான். இந்த புஸ்தகங்கள் எனக்குப் புரியாது. ஆனாலும் ஒவ்வொரு புஸ்தகத்திலும் ஒரு வாசனை உண்டு. அதனைப் பிரித்து முகர்ந்து கொண்டு நடந்து வருவது ஒரு பெரிய சந்தோஷம். எல்லோரும் வேலை முடிந்ததும் இரண்டு பைசா கொடுப்பார்கள். என்ன ஒற்றுமை? அலுமினியக் காசு. தினம் கொஞ்சம் பைசா சேரும். சாயந்தரம் பொரிகடலை பபுல்கம்முக்கு உதவும். இந்த சந்தோஷம் எல்லாம் பூமா மாமி கூப்பிட்டால் போய்விடும். காரணம் என்னை மாமி அனுப்புமிடம் – மாவு மிஷின்.

    வழுமூன அரைச்சிண்டு வா என்பாள். இந்த வழுமூனன்னா என்ன என்று மிஷின் காரரைக் கேட்டேன். ஐயரம்மாவைக் கேள் என்றான். அவன் கோபக்காரன். அவனைப் பார்த்தால் மீசையைச் கண்டால் லேசாக கால்கள் நடுங்கும். இப்போது மீசை எல்லாம் ஒரே மாவு, பார்க்க இன்னும் பயங்கரமாக இருந்தான். அவன் பின்னால் உள்ள மிஷினை நோண்டிக் கொண்டிருக்க நான் முதலில் முடித்துவிட்டு ஓடி விடுவேன். அடுத்த முறை அங்கு சென்றபோது அந்த இரைச்சல் ஜிவ்வென்றிருந்தது. கால்கள் தடதடத்தன. பெரிய நடுக்கம். ஒரு அதிர்வு. எனக்கு சத்தம் என்றால் ஒத்துப் போவதில்லை. நிஜாரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மாவு பாத்திரம் கொடுத்தேன். எல்லோரும் என்னைப் போல் அரை டிராயர். உடம்பெல்லாம் ஒரே கருப்பு கீல். மாவு படாத இடமில்லை. அவன் உடம்பில் எங்கு தட்டினாலும் வெண்புகை கிளம்பும். இதில் ஒரு பெரிய மகிழ்ச்சி உண்டு. இந்த இரைச்சலான ஓட்டத்தில் இடையே சில சமயம் எல்லா இயந்திரங்களும் பட்டென நிற்கும். அந்த பேரமைதி அடடா.. என்ன எழுச்சியான மனம் அப்போது.

    அவ்வயதில் பள்ளி விடுமுறை துவங்கி எல்லோரும் ஊருக்குப் போய்க் கொண்டிருப்பார்கள். எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. இந்த விடுமுறை நாட்களில் நிறைய பேர் என்னை கடைக்கு அனுப்பி பெரிய மாதுவாக்குவார்கள். ஆனால் மாறாத அதே இரண்டு பைசா. சில சமயம் பித்தளை கருப்பு மஞ்சளில் கிடைக்கும். பைசாவைக் கொடுக்கும்போதே வேர்க்கடலை உரிக்கும் ஞாபகம் வரும்.

    இந்தாடா கோதுமை டேய் பஞ்சாப் கோதுமை.. பாத்து அரை. தூக்கிக் கொண்டு போனேன். போகும் வழியில் கோதுமையை அளைந்துகொண்டு கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டேன். பபுல்கம் மாதிரி முடியாமல் போக அதற்குள் மாவு மிஷினே வந்துவிட்டது. லுங்கிக் கட்டிக் கொண்டு ஒருவர் எவ்வளவு என்றார். என் கூலியா. அவர் கூலியா தெரியவில்லை. அப்படியே பீடியோடு அவர் போய்விட்டார். கோதுமை அரைத்து கையில் வைத்துக்கொண்டு இளம்சூட்டில் இருக்க முதுகில் தட்டி பத்து பைசா என்றார்.

    ஜோபியை துழவினேன். எங்கும் இல்லை. கொஞ்சம் அழுகை வந்தது.

    என்ன முட்டாய் வாங்கித் தின்னியா? இல்லை தலையாட்டினேன்.

    சரிசரி குந்துமணி பங்களா தானே எந்த ஐயர் வீடு எனக் கேட்டான். சொன்னேன்.

    மாமியிடம் மாவு கொடுத்தாகி விட்டது. தலையைக் கோதிவிட்டாள். மோர்குடிடா கொஞ்சம்.. இந்தா அய்யா..

    இந்த பேப்பரை பெரிசா விரித்து மாவெல்லாம் கொட்டு என்றாள். செய்தேன். நல்லா கையால அளைந்துவிடு என்றாள். சூடு தாங்கவில்லை. செய்தேன். வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் அளைக்கையில் ஒரு பொருள் தட்டுப்பட எடுத்துப் பார்த்தால் பித்தளை பத்து பைசா. நாலாபக்கமும் நசுங்கி உருத் தெரியாமல் எல்லாப் புறமும் கீரலாக இருந்தது.

    கோதுமையுடன் கலந்து காசும் அரைபட்டு சிதிலம். அப்போது கூட அந்த காசு நசுங்கின விதம் பற்றி தான் யோசித்து கொண்டிருந்தேனே தவிர பணம் போன கவலை இல்லை .

    Share