வந்த எல்லார்க்கும் இடம் கொடுத்து ஏமாந்த நாடு!
ஜோதிர்லதா கிரிஜா
‘ஓ….ஓ ….ஓ …ஓ … ஓ… ஓ… ஓ … அழகு நாடு, அருமை நாடு, இது எங்க நாடு, இது எங்க நாடு, எங்கும் புகழ் தங்கும் நாடு, வளம் பொங்கும் நாடு, வந்த எல்லார்க்கும் எடங் குடுத்து ஏமாந்த நாடு!’ – இது அறிஞர் அண்ணாவின் – 1951இல் வெளிவந்த – ஓர் இரவு திரைப்படப் பாடலாகும். இதை இயற்றியவர் அவ்வை டி.கே. ஷண்முகம் ஆவார். இதன் மற்ற நிறுத்தங்களும் முறையே இன்றைய நம் மக்களுடையவும் நம் நாட்டுடையவும் மனப்பான்மையையும் நிலைமையையும் எடுத்துக் காட்டுபவையாக உள்ளன.
சுமார் எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களால் துன்புறுத்தித் துரத்தவும் பட்ட யூதர் இனத்தினர் – இந்தியாவில் பார்சிகள் எனப் பின்னாளில் பெயர் பெற்றோர் – அடைக்கலம் தேடி முதலில் இந்தியாவுக்குத்தான் சுமார் பதினெட்டாயிரம் பேர் கப்பலில் வந்திறங்கினர். அப்போது குஜராத் மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த மகாராஜா ஜதி ராணாவை அவர்களின் தலைவர் சந்தித்துப் பேசினார். தமது இராஜ்ஜியத்திலேயே மக்கள்தொகை நிறைய இருப்பதாய்ச் சொல்லி அதை அடையாளப் படுத்தும் முறையில் ஜதி ராணா ஒரு கோப்பையில் அதன் விளிம்பு வரை ததும்புகிறாற்போல் பாலை ஊற்றி அவரிடம் கொடுத்தாராம். அதைப் புரிந்துகொண்ட பார்சிகளின் தலைவர் அந்தக் கோப்பையில் சிறிது தேனை ஊற்றி அந்தப் பாலில் கலந்து உறையச் செய்தாராம். [சர்க்கரை என்றும் சொல்லுவதுண்டு.] அப்படிச் செய்ததன் வாயிலாக ‘நாங்கள் உங்களோடு ஒன்று கலந்து விடுவோம். நண்பர்களாக இருப்போம். எங்களால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது, எங்கள் வருகை உங்களுக்கு நல்லதே செய்யும்’ என்று உணர்த்தினாராம். மன்னர் ஜதி ராணாவும் அவர்களை அன்புடன் ஏற்றுத் தம் இராஜ்ஜியத்தில் தங்க ஒப்புதல் அளித்தாராம். அந்தக் காலத்திலேயே இந்தியா வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் நாடு என்பதை அன்னியர்கள் புரிந்துகொண்டவர்களாக இருந்தார்கள் என்பதைத் தானே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது?
இந்த ஈவிரக்கத்தை அன்னியர்கள் சிலர், தங்களுக்குச் சாதகப்படுத்திக் கொண்டதன் விளைவாகத்தான் இன்று இந்தியா பல தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளது. இந்திய இராஜ்ஜியங்களின் மன்னர்கள் ஒற்றுமையின்றி இருந்ததும் அன்னியர்க்கு வசதியாக இருந்த உண்மையை நாம் மறுக்க முடியாது. ஆனால், பார்சியரைப் பொறுத்த மட்டில், அவர்களின் தலைவர் கொடுத்த வாக்குறுதியை அவருடன் வந்த அனைவருமே சிரமேற்கொண்டு ஒழுகி வந்துள்ளனர் என்கிற போற்றத்தக்க நிலையையும் நாம் நன்றியுடன் நினைவுகூர்ந்தே ஆக வேண்டும்.
பார்சி இனத்தினர் தம் தலைவரது வாக்குறுதிப்படி நட்புணர்வுடன் நடந்து வந்துள்ளதோடு, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக உழைத்தும் வந்துள்ளார்கள். டாடா, பிர்லா, கோத்ரெஜ், மிஸ்திரி, இரானி, வாடியா, பூனாவாலா போன்ற குடும்பப் பெயர்களை உள்ள பார்சிகளால் இந்தியா விஞ்ஞானம், தொழில், வணிகம் போன்ற பல்வேறு துறைகளிலும் வியத்தகு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் மற்ற பலரும் பார்சிகளைப் போல் இருந்து வந்துள்ளார்களா என்றால் இல்லை என்றே சொல்லும்படி இருக்கிறது. பலரும் இந்துக்களை மதமாற்றம் செய்வதிலும் இந்திய நாட்டின் சட்டங்களை மீறுவதிலுமே குறியாக இருந்து வந்துள்ளார்கள்.
மிக அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஓர் இஸ்லாமிய அன்பர் அதன் நிருபருக்கு அனுப்பியிருந்த சேதியைச் செவிமடுக்க வாய்த்தது. ஷாஹின் பாக் பகுதியில் ஆயிரக்கணக்கில் குழுமியிருந்த இஸ்லாமியப் பெண்மணிகள், பொதுமக்கள் பலருக்கும் தாங்கள் விளைவித்துக்கொண்டிருக்கும் தொல்லைகள் பற்றி நினைத்துப் பார்க்கத் தூண்டும் செய்தியாகும் அது. வணக்கத்துக்குரிய முகம்மது நபி அவர்கள் கூறியுள்ளது. ஒரு நாட்டில் தொற்று நோய் பரவிக்கொண்டிருக்கும் வேளையில் பொதுமக்கள் தத்தம் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென்றும் பொது இடங்களில் கும்பலாய்க் கூடி இருக்கக் கூடாதென்றும் நபிகள் நாயகம் திருக்குரானில் கூறியுள்ளதை அந்த இஸ்லாமியர் ஆதாரத்துடன் அந்தச் சேனலுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
தம்மோடு பேச்சுவார்த்தைக்குத் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு ஷாஹின் பாகில் குழுமிக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராய்க் குரலெழுப்பிக்கொண்டிருந்த இஸ்லாமியப் பெண்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லிய பிறகு – உச்ச நீதி மன்றமும் இரண்டு வக்கீல்களை அனுப்பி அவர்களோடு பேசச் செய்ததன் பிறகும் – அசைந்து கொடுக்க மறுத்துக்கொண்டிருந்தவர்கள் கடைசியில் ஒரு வழியாய்க் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார்கள். அப்படியும் பிடிவாதம் பிடித்து நீங்க மறுத்த ஒன்பது பெண்களைக் காவல் துறை கைது செய்யும்படி ஆயிற்று.
பெண்கள் எனும் காரணத்தால் அரசு கண்ணியமாகவும், மென்மையாகவும் நடந்து வந்துள்ளதுதானே இவர்களின் அழிச்சாட்டியத்துக்குக் காரணம்? தொடக்கத்திலேயே அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கூடுமாறு அரசு கட்டாயப்படுத்தத் தவறியதுதான் முதல் கோணலாகும். அந்த மென்போக்கை இந்தப் பெண்கள் ஆதாயப்படுத்திக் கொண்டுள்ளதோடு, சின்னஞ்சிறு குழந்தைகளையெல்லாம் கூட அங்கே அழைத்து வந்துள்ளார்கள். விவரமறியாக் குழந்தைகளையெல்லாம் பிரதமர் மோதியின் பெயரைச் சொல்லி அவருக்கு எதிராய்க் கூச்சலிட வைத்துக்கொண்டிருந்தார்கள். நான்கு மாதக் குழந்தையொன்று இறந்த பிறகும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததுதான் உச்சக்கட்ட சோகம்.
கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகு தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கப் போவதாய் அந்தப் பெண்கள் கூறிவிட்டுத்தான் கலைந்து சென்றுள்ளார்கள்!
அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டங்களில் சில பாதகங்கள் இருப்பின் பிறர்க்குத் தொந்தரவற்ற முறைகளில் போராடலாமே. பாதகங்கள் இருப்பின் அவை நீக்கப்பட வேண்டும்தான். ஆனால், அது இஸ்லாமியர்க்கு எதிரானது என்கிற வாதம் துளியும் சரியன்று.
முத்தலாக் விஷயத்தில் பிரதமர் மோதி அவர்கள் இயற்றிய பெண்ணாதரவுச் சட்டத்தை விரும்பாததால்தான் முஸ்லிம் ஆண்கள் மோதிக்கு எதிராய்ப் போராடத் தங்கள் வீட்டுப் பெண்களைத் தூண்டியுள்ளார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை! இதை அந்தப் பெண்கள் புரிந்துகொள்ளாமல் தங்களுக்கு நல்லது செய்த மோதிக்கு எதிராய்க் கூச்சல் போடுவது வியப்புக்கு உரியதே.
சில ஆண்டுகளுக்கு முன் ஓர் இஸ்லாமிய நண்பர், எனக்கு எழுதிய கடிதத்தில் முஸ்லிம்களுக்குத் தாய்நாடு என்பதே கிடையாது என்றும் அவர்கள் இஸ்லாமுக்கு மட்டுமே விசுவாசமுள்ளவர்களாய் இருக்க வேண்டுமென்றும் திருக்குரான் சொல்லுவதாய்க் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்படி நபிகள் நாயகம் கூறவே இல்லை. எந்த நாட்டில் ஒரு முஸ்லிம் வாழ்கிறாரோ, அந்த நாடே அவரது தாய் நாடு என்று திருக்குரானில் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இன்னொன்றையும் தெரிந்துகொள்ள வாய்த்தது. அதாவது அந்த நாட்டு மன்னர் (அதாவது ஆட்சியாளர்) இயற்றும் சட்டம் எதுவானாலும் – அது தங்களுக்கு உடன்பாடானதாக இல்லாவிட்டாலும் – அதை அங்கு வாழும் இஸ்லாமியர்கள் ஏற்க வேண்டுமென்றும் அவர் அறிவித்துள்ளார்! (சந்தேகப்படுபவர்கள், இணையத்தில் தேடி, கேள்வி எழுப்பித் தெரிந்துகொள்ளலாம்.)
இந்துக்களிலும், முஸ்லிம்களிலும் உள்ள பெரும்பான்மையினர் கலகக்காரர்கள் அல்லர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் நட்புடன் பழகி வருபவர்கள். இவர்களின் நெஞ்சங்களில் நஞ்சைக் கலப்பவர்கள் குறுகிய மனப்போக்குள்ள மதத் தீவிரவாதிகளும் அரசியல்வாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் மட்டுமே.
‘கோலி மாரோ’ என்று சொல்லுவதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம்தான். அப்படி ஓர் இந்து சொன்னதற்கும் முன்னால், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூச்சலிட்டவர்களிடமும், ‘ ஒரு மணி நேரத்துக்குள் என்னால் ஒரு லட்சம் இந்துக்களைக் கொன்று விட முடியும்’ என்று ஹைதராபாத்தில் அறைகூவல் விடுத்தவர்களிடமும் அதிகமான குரூரம் உள்ளதல்லவா? காஷ்மீரிலிருந்து இங்கு வந்து படித்துக்கொண்டிருப்பவர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று சொல்லுவதைக் கண்டிப்பது தவறாகுமா?
எது எப்படி இருந்தாலும், இஸ்லாமியர்கள் தூண்டிவிடவே பட்டிருப்பினும், அவர்களது அச்சத்தை அரசு போக்கத்தான் வேண்டும். ஆயினும் அமித் ஷாவோ, பிரதமரோ ஷாஹின் பாகுக்கு வந்து தங்களைச் சந்திக்கவேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்துக்கொண்டிருந்த தெல்லாம் ரொம்பவும் அதிகப்படி.
இறுதியாய், ‘கடவுளே! இந்தியாவைக் காப்பாற்று’ என்று வேண்டிக்கொள்ளுவதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?