சென்னைப் புத்தகக் காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்

2021 ஆம் ஆண்டிற்கான 44 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியானது, இந்தியா, சென்னை YMCA நந்தனம் வளாகத்தில் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 09ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. உலகம் முழுவதிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் இலங்கை எழுத்தாளரான எம். ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் இரண்டு எனப் புதிய ஐந்து நூல்கள் வெளியாகவிருக்கின்றன.
எம். ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள ‘கிகோர்’ (சோவியத் ரஷ்ய இலக்கியம்), ‘தரணி’ ஆகிய புதிய நாவல்களையும், ‘திருமதி பெரேரா’, ‘அந்திமக் காலத்தின் இறுதி நேசம்’ ‘சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்’ ஆகிய புதிய சிறுகதைத் தொகுப்புகளையும் இந்தக் கண்காட்சியில் பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு, இதுவரை வெளியாகியுள்ள எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வம்சி, காலச்சுவடு, டிஸ்கவரி புக்பேலஸ், பாரதி புத்தகாலயம், பரிசல் புத்தக நிலையம் ஆகிய அரங்குகளில் கிடைக்கும்.
எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையில் மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் தனது நூல்களுக்காக இதுவரை இலங்கை அரச சாகித்திய விருது, கனடா இயல் விருது, இந்தியா வம்சி மற்றும் வாசகசாலை விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.