Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 105

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 105

    நாங்குநேரி வாசஸ்ரீ

    105. நல்குரவு

    குறள் 1041

    இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது

    வறுமை ங்கதக் காட்டிலும் கொடும எது னு கேட்டா, வறும கணக்கா சங்கடம் வறும ஒண்ணுதான்.

    குறள் 1042

    இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இம்மையும் இன்றி வரும்

    வறுமை னு சொல்லப்படுத பாவி ஒருத்தன அண்டிச்சின்னா அவனுக்கு இப்பமும் வருங்காலத்திலும் சந்தோசமும் நிம்மதியும் இல்லாமப் போவும்.

    குறள் 1043

    தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
    நல்குர வென்னும் நசை

    வறுமைனு சொல்லப்படுத பேராசை ஒருத்தனுக்கு ஏற்பட்டிச்சின்னா அது அவன் பரம்பரப் பெருமையையும் புகழையும் சேந்தாப்ல அழிச்சிப்போடும்.

    குறள் 1044

    இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
    சொற்பிறக்கும் சோர்வு தரும்

    இல்லாமை ங்குத கொடும நல்ல குடியில பொறந்தவுக கிட்டேந்தும் கெட்டவார்த்த வெளிப்படுத அளவு தளர்ச்சிய உண்டாக்கிப் போடும்.

    குறள் 1045

    நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
    துன்பங்கள் சென்று படும்

    வறுமைங்குத சங்கடத்துக்குள்ளாரேந்து வெவ்வேற பல சங்கடங்கள் வெளஞ்சி வெளிவரும்.

    குறள் 1046

    நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
    சொற்பொருள் சோர்வு படும்

    நல்ல பல நூல்கள் சொல்லுதத அறிஞ்சிக்கிட்டு சொன்னாலும், அவன் ஏழையா இருந்தாம்னா சொல்லு எடுபடாது.

    குறள் 1047

    அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
    பிறன்போல நோக்கப் படும்

    வறுமை அண்டிச்சின்னு காரணங்காட்டி நியாயங்கெட்டு நடக்கவன அவனப் பெத்த ஆத்தா கூட அசல் மனுசன் கணக்கா தான் பார்ப்பா.

    குறள் 1048

    இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
    கொன்றது போலும் நிரப்பு

    நேத்தைக்கு கொன்னு போடுதது கணக்கா வந்த வறும இன்னிக்கும் எங்கிட்ட வருமோ? (அப்டின்னு நெனைச்சி இல்லாதவன் தெனைக்கும் வருத்தப்படுவான்).

    குறள் 1049

    நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
    யாதொன்றும் கண்பா டரிது

    நெருப்புக்குள்ளார கூட படுத்து ஒறங்க முடியும். ஆனா வறுமையில கண்ணு பொதைச்சி ஒறங்குதது ஏலாத ஒண்ணு.

    குறள் 1050

    துப்புர வில்லார் துவரத் துறவாமை
    உப்பிற்கும் காடிக்கும் கூற்று

    ஒழுக்கங்கெட்டதால  வறுமையானவுக மொத்தத்தையும் துறக்காம உயிர் வாழுதது உப்புக்கும் கஞ்சிக்கும் தான் கேடு.

    Share
  • வெறுமை

    வெறுமை

    பாஸ்கர் சேஷாத்ரி

    ஓடிப்போய் திறந்த கதவால் கொஞ்சம் காற்று எட்டி பார்த்தது
    அழைப்பு மணி சப்தமெல்லாம் எதிர் இல்லத்தில்
    தவறி வந்த தபாலும் கடைசியில் அண்டை வீட்டுக்கு
    சிணுங்கும் தொலைபேசி எடுக்கும் முன் அடங்கி விடுகிறது
    ஊஞ்சலை ஆட்டி விட்டு காற்றில் கரைந்தாலும்
    கடிகாரம் மட்டும் என்னை சப்தத்தால் உயிர்ப்பிக்கிறது
    ஜன்னல் விளிம்பு மைனாவுக்கு தான் இது தெரியும்

    Share
  • குறளின் கதிர்களாய்…(285)

    குறளின் கதிர்களாய்…(285)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(285)

    குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட வுஞற்றி லவர்க்கு.
    -திருக்குறள் -604(மடியின்மை)

    புதுக் கவிதையில்…

    சாக வைத்திடும்
    சோம்பலில் சிக்குண்டு
    சிறப்புறு முயற்சியேதும்
    மேற்கொள்ளாதவர்தம்
    குடியழிந்து
    குற்றம்தான் பெருகும்…!

    குறும்பாவில்…

    அழிவுதரும் சோம்பலில் சிக்கி
    ஆற்றல்மிகு முயற்சி மேற்கொள்ளாதவரின்
    குடியழிந்து குற்றம்தான் மிகும்…!

    மரபுக் கவிதையில்…

     அல்லல் தந்தே அழியவைக்கும்
    ஆழியாம் சோம்பலில் சிக்குண்டு
    வெல்ல வைத்திடும் முயற்சியேதும்
    வேண்டியே ஏற்று கொள்ளாத
    புல்லர் தங்கள் குடியதுவும்,
    பூண்டு மின்றி அழிவதுடன்
    சொல்ல வியலாக் குற்றமெலாம்
    சேர்ந்து மிகுமிவ் வுலகினிலே…!

    லிமரைக்கூ..

    சோம்பல் தந்திடும் அழிவு,
    அத்துடன் சிறப்புறு முயற்சி மேற்கொள்ளாதார்
    குடியழிந்து வருமே இழிவு…!

    கிராமிய பாணியில்…

    கொள்ளாத கொள்ளாத
    சோம்பல் கொள்ளாத,
    குடியக் கெடுக்கும்
    சோம்பல் கொள்ளாத..

    சாகவைக்கிற சோம்பலுல
    சிக்கிக் கெடந்து,
    செறப்பு தருற
    மொயற்சி எதுவும் செய்யாம
    மொடங்கிக் கெடக்கிறவன்
    குடியழிஞ்சி போவும்
    பெரிய
    குத்தமாகிப் போவும்..

    அதால
    கொள்ளாத கொள்ளாத
    சோம்பல் கொள்ளாத,
    குடியக் கெடுக்கும்
    சோம்பல் கொள்ளாத…!

    Share
  • குடமுழுக்கின் நோக்கமும் பயனும்!

    குடமுழுக்கின் நோக்கமும் பயனும்!

     -மேகலா இராமமூர்த்தி

    பிற்காலச் சோழமன்னர்களில் பேரோடும் புகழோடும் விளங்கியவன் மாமன்னன் முதலாம் இராசராசன். இவன் காலத்திலும் இவனைத் தொடர்ந்துவந்த இவனுடைய மகனான முதலாம் இராசேந்திரன் காலத்திலும் தமிழரின் மறமும் மாண்பும் பண்பாட்டுச் சிறப்பும் கடல்கடந்த நாடுகளிலும் விளக்கமுற்றன. போராற்றலோடு கலைகளைப் பேணும் பேராற்றலும், சைவசமயப் பற்றும் மிக்கவனாய்த் திகழ்ந்திருக்கின்றான் இராசராசன். அவனுடைய சைவப் பற்றுக்குச் சான்றாக வானளாவி நிற்கின்றது தன்னுடைய தலைநகரான தஞ்சை மண்ணில் அவன் எழுப்பியிருக்கும் இராசராசேச்சுரம் எனப்படும் பெருவுடையார் கோயில்.

    ஆறடி உயரமும் ஐம்பத்து நான்கடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார் (பீடம்), இருபத்துமூன்றரை அடி உயரம் கொண்ட இலிங்கம் ஆகியன தனித்தனியாகக் கருங்கற்களால் செதுக்கப்பட்டுப் பெருவுடையார் கோயிலின் கருவறையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே மிகப்பெரிய இலிங்கத் திருமேனி இக்கோயிலிலுள்ள இலிங்கத் திருமேனியே ஆகும். இதற்கடுத்த பெரிய இலிங்கத் திருமேனி முதலாம் இராசேந்திர சோழன் எடுப்பித்த கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ளது. பெருவுடையார் கோயிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஒரே கல்லாலான நந்தி 19 அடி நீளமும், 12 அடி உயரமும் கொண்டதாகப் பெருவுடையாருக்கேற்ற பெருநந்தியாய்த் திகழ்கின்றது. இந்நந்தி பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாகத் தெரிகின்றது. சோழர்காலத்தில் அமைக்கப்பட்ட நந்தி தற்போது திருச்சுற்று மாளிகையில் உள்ளது.

    கோயில்களுக்கென்று ஆகம விதிகள் வகுக்கப்பட்டு அவற்றின்படியே கோயில் நிகழ்வுகள், பூசனைகள் நடைபெறுவது  வழக்கமாயிருந்துவருகின்றது. தஞ்சைக் கோயிலைப் பொறுத்தவரை அது மகுடாகமத்தின்படிக் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

    மகுடாகமம் என்றால் என்ன?

    சிவன் கோயில்களைப் பொறுத்தவரை, முதலில் கோயிலின் வெளிக்கட்டமைப்பை நிறுவி அதன் பின்னரே கருவறையில் இலிங்கத் திருமேனியைப் பிரதிட்டை செய்து இறைசக்தியை நிறுவுவது வழக்கம். இதற்கு மாறாக இலிங்கத் திருமேனியை முதலில் பிரதிட்டைசெய்து பின்னர்க் கோயிலின் வெளி அமைப்பை உருவாக்குவது மகுடாகம முறை எனப்படும். தில்லை நடராசர் திருக்கோயில், திருவாரூர் தியாகேசப் பெருமான் திருக்கோயில் போன்றவை மகுடாகம முறையில் கட்டப்பட்டவை என்றும் இவற்றைக் கண்ட மாமன்னன் இராசராசனும் இதே அமைப்பில் தன்னுடைய பெருவுடையார் கோயிலை அமைத்தான் என்றும் கூறப்படுகின்றது. கல்வெட்டாய்வாளரும் எழுத்தாளருமான குடவாயில் திரு. பாலசுப்பிரமணியன், வரலாற்றார்வலரான முனைவர் க. சங்கரநாராயணன் போன்றோர் பெருவுடையார் கோயில் மகுடாகமத்தின் அடிப்படையில் கட்டப்பட்டதே என்று  உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

    இத்துணைச் சிறப்புவாய்ந்த பெருவுடையார் கோயிலுக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் நாள் திருக்குடமுழுக்கு நிகழவிருக்கின்றது. 1997க்குப் பிறகு இருபத்துமூன்று ஆண்டுகள் கழித்து நிகழவிருக்கும் குடமுழுக்கு இஃது என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தருணத்தில் கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்படுவதன் நோக்கமென்ன என்பதை நாம் சிந்தித்துப்பார்ப்பது பொருத்தமாயிருக்குமெனக் கருதுகின்றேன். அதற்கு முன்னதாக இறை வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்ற மந்திரங்கள் குறித்தும் அவற்றின் மகிமை குறித்தும் சிறிது அறிந்துகொள்வோம்.

    ஒலியிலிருந்தே இந்நிலவுலகம் தோன்றியிருக்கின்றது. உலகின் தோற்றத்துக்கு ஆதாரமாக அறிவியல் சுட்டும் பெருவெடிப்பே (big bang) பேரொலியுடன் நிகழ்ந்ததுதானே? ஆதியில் தோன்றிய அவ்வொலியை (Primordial sound) ’ஓம்’ என்ற பிரணவ ஒலியாக அடையாளப்படுத்துகின்றது இந்திய ஆன்மிகம்.

    ஒலிக்கூட்டங்களால் உருவானவையே ஆற்றல் வாய்ந்தவையாகக் கருதப்படும் மந்திரங்கள். நாம் பயன்படுத்தும் எல்லாச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் அதிர்வெண்கள் (frequencies) உண்டு. வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட எழுத்துக்களை இணைத்துச் சொற்களாக்கும்போது அவை மிகுஅதிர்வொலியின் (ultrasonic sound) பயனை அளிக்கும் மந்திரங்களாக மாறுகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்டவையே ஓம் நமச்சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் சரவணபவ, புத்தம் சரணம் கச்சாமி போன்ற மந்திரங்கள்.

    எல்லா எழுத்துக்களுக்கும் அதிர்வெண்கள் இருக்கும்போது நாம் ஏன் எல்லாச் சொற்களையும் மந்திரங்களாகக் கருதாமல் ஒருசிலவற்றை மட்டும் மந்திரங்கள் என்கிறோம் என்றோர் ஐயம் நம்முள் இப்போது எழலாம்.

    எல்லா எழுத்துக்களும் அதிர்வெண்கள் உடையவையே எனினும் ’நிறைமொழி மாந்தர்’ என்று தொல்காப்பியரும் வள்ளுவரும் குறிப்பிடும் சான்றோர்கள் தம் பேராற்றலால் சில சொற்களை உருவாக்கி இவை மந்திரங்கள் ஆகக்கடவன என்று ஆணையிட்டு அவற்றை அத்தகுதிக்கு உரியனவாக்கியிருக்கின்றார்கள். இவற்றையே நாம் தமிழில் மறைமொழிகள் என்கிறோம்.

    நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
    மறைமொழி தானே மந்திரம் என்ப
    . (தொல் – 1484) என்பது தொல்காப்பியம்.

    இம்மறைமொழிகளில் அந்நிறைமொழி மாந்தர்கள் தம் அருளாற்றலையும் சேர்த்தே செலுத்துவதால் அவை கூடுதல் பலம் பொருந்தியவையாக மாறிவிடுகின்றன. இவற்றை நாம் மறைமொழிகள் என்றுரைக்கக் காரணம், சாதாரணமாகப் பார்க்கும்போது இவற்றின் ஆற்றல் நமக்குப் புலப்படுவதுமில்லை; புரிவதுமில்லை என்பதனாலேயே.

    திருக்கோயில்களின் அடிப்படைத் தத்துவமும் இதுபோன்றதே!

    கோயில் கருவறையில் நிறுவப்பட்டிருக்கும் தெய்வப் படிமங்கள், ஏதோ தேவலோகத்திலிருந்து ’ஸ்பெஷலாக’த் தருவிக்கப்பட்ட கற்களால் செய்யப்பட்டவை அல்ல! அவையும் பூலோகத்தில் கிடைக்கும் சாதாரணக் (கருங்)கற்களினால் செய்யப்பட்டவையே!

    அப்படியாயின் கோயிலின் வாயிலில் கிடக்கும் படிக்கல்லும் கருவறைக்குள் இருக்கும் தெய்வப் படிமக் கல்லும் ஒன்றுதானே? பின்பு ஏன் நாம் படிக் கல்லை மிதிக்கிறோம்? தெய்வப்படிமக் கல்லை  மதிக்கிறோம்; துதிக்கிறோம் என்றொரு வினா எழுவது இயல்பே!

    மனிதர்கள்கூட வெளித்தோற்றத்துக்கு இரு கால்கள், இரு கைகள், இரு கண்கள், ஒரு முகம் என ஒத்த அமைப்புடையவர்களாகத்தான் தோன்றுகிறார்கள். அதற்காக அறிவில், ஆற்றலில், பண்பில், பயனில் அனைவரும் ஒன்று என்று கூறிவிடமுடியுமா? முடியாதே! அதுபோல், வெளியிலிருக்கும் படிக்கல்லும் உள்ளேயிருக்கும் படிமக்கல்லும் நம் ஊனப்பார்வைக்குக் கற்களாகவே தெரிந்தாலும் அவையிரண்டும் ஆற்றலில் ஒன்றல்ல!  

    ஆம், கருவறைக்குள் தெய்வப் படிமங்களைப் பிரதிட்டை செய்வதற்கு முன்பாக அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்கள் அடங்கிய சக்கரங்களை எழுதி அடியில் புதைப்பார்கள்; அவற்றின் மீதுதான் அத்தெய்வப் படிமங்களை நிறுவுவார்கள். [சக்கரங்களின் சிறப்பை – ஆற்றலைத் திருமந்திரத்தின் நான்காம் தந்திரம் விரிவாகப் பேசுகின்றது; அதனைப் படித்தால் அவை குறித்த தெளிவு கிடைக்கும்.] இவ்வாறுதான் கல்லாலான கருவறைப் படிமங்கள், அருளாற்றல் மிகுந்த தெய்வங்களாக மாறுகின்றன.

    இவற்றின் தெய்வீக ஆற்றலை மேலும் கூட்டுவதற்குத்தான் பன்னிரு ஆண்டுகட்கு ஒருமுறை திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றொரு விதியை வகுத்திருக்கின்றார்கள். [இவ்விதி பல கோயில்களில், பெருவுடையார் கோயில் உட்பட, பின்பற்றப்படுவதில்லை என்பது வேறு விஷயம்.]

    குடமுழுக்கிற்கு முன்னதாக வேள்விச்சாலை அமைத்து அதில் கோயிலிலுள்ள ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு கடம்(குடம்) வைத்து, அதனுள் நீர் நிரப்பி, மாவிலைத் தோரணம் கட்டி, தர்ப்பைப்புல், தேங்காய் முதலியன வைத்து அத்தெய்வத்தை எழுந்தருளச் செய்வதற்கு (ஆவாஹனம்) மந்திரங்கள் செபிப்பார்கள். ஐந்துநாள், ஏழுநாள் என்று இவ்வாறு தொடர்ந்து மந்திரங்களைச் செபித்து அந்நீரை இறையாற்றல் பெற்ற மங்கல நீராக மாற்றுவார்கள். இவ்வாறு இறையாற்றல் ஏற்றப்பட்ட நீரைக் குடமுழுக்கன்று கருவறையிலுள்ள மூலவர் படிமத்துக்கும், அம்மூலவர் அமர்ந்திருக்கும் கோயில் கலசத்துக்கும் அபிடேகம் செய்வார்கள். இதனால் கருவறையில் இருக்கும் தெய்வப் படிவத்தின் ஆற்றல் மேலும் கூடும் என்பது அருளாளர்களின் கருத்து.

    மந்திரம் செபிக்கப்பட்ட மங்கல நீரைத் தெய்வப் படிவங்களின்மீது விடுவதால் அவற்றின் இறையாற்றல் அதிகரிப்பதனை நாம் கார்களின் மின்கலத்துக்கு மின்னாற்றல் ஏற்றும் செயலோடு (charging the car battery) ஒப்பிடலாம்.  கார்களின் மின்கலமானது உலோகத் தகடுகள், அமிலம் (sulfuric acid) மற்றும் தண்ணீர் சேர்ந்த கலவையில் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதனால் மின்கலத்துக்கு மின்னாற்றல் கிடைத்துவிடுமா என்றால் இல்லை. அது இயங்கும் தன்மையற்ற dead batteryயாகத்தான் இருக்கும். மின்கலத்துக்கு மின்னாற்றல் வரவேண்டுமானால் அதனைப் பல மணிநேரங்கள் (at least 24 hours) மின்சாரத்தில் வைத்து மின்னாற்றலை ஏற்ற வேண்டும்.

    இதுபோன்றதுதான் வலிமைவாய்ந்த மந்திரங்களைப் பல மணிநேரங்கள் செபித்துக் க(கு)டத்து நீருக்குள் இறையாற்றலை ஏற்றி அந்த ஆற்றலைத் தெய்வப் படிமங்களுக்குக் குடமுழுக்கின் வாயிலாகக் கடத்துவதும்! மின்கலம் மின்னாற்றல் பெற மின்சாரம் தேவை! சாதாரண நீர் இறையாற்றல் செறிந்த மங்கல நீராக மாற நிறைமொழி மாந்தர்கள் உருவாக்கிய மந்திரமொழிகள் தேவை!

    கோயில் கோபுரங்களின் அழகைக் கூட்டுபவை அவற்றின் மீதிருக்கும் கலசங்கள். அந்தக் கலசங்களில் பல்வகை தானியங்களையும் நிரப்பி வைப்பர்.  ஒவ்வொரு குடமுழுக்கின்போதும் பழைய தானியங்கள் அகற்றப்பட்டுப் புதியவை நிரப்பப்படும். பஞ்சம் வரும் காலங்களில் இத்தானியங்களை எடுத்து விதைக்கப் பயன்படுத்தும் வழக்கங்கூட நம் மக்களிடையே இருந்திருக்கின்றது எனும் செய்தி வியப்பளிப்பதோடு நம் முன்னோர்களின் புத்திக்கூர்மையையும் புலப்படுத்துவதாயுள்ளது.

    இக்கோபுரக் கலசங்கள் தூல வடிவில் இறைவனைக் குறிக்கின்றன என்பது மூத்தோர் வாக்கு.  ஆக, தூல வடிவாய் இருக்கின்ற கோபுரங்களுக்கும், சூக்கும வடிவாய் இருக்கின்ற தெய்வப் படிமங்களுக்கும் மங்கல நன்னீராட்டி அவற்றின் ஆற்றலை அதிகப்படுத்துவதே  குடமுழுக்கின் அடிப்படை நோக்கமாகும்.

    நிறைவாக ஒன்று! மந்திரங்கள் மகத்தான ஆற்றல் வாய்ந்தவை. இவற்றில் வடமொழி தென்மொழி என்ற பேதமில்லை. வடமொழி மந்திரங்களுக்கு மட்டுமே இருப்பதாக நம்மில் சிலர் நம்பும் தெய்வீக ஆற்றல் தென்மொழியாகிய தமிழுக்கும் உண்டு!

    அதனாலன்றோ… 

    ”காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
    ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே.”
      என்று நமச்சிவாய மந்திரத்தின் மகிமையை விதந்தோதினார் காழிப்பிள்ளையார்.

    எனவே தமிழ்நாட்டுக் கோயில்களுக்குக் குடமுழுக்குச் செய்யும்போது தமிழில் மந்திரங்களை ஓதுவதே சிறப்பாக இருக்கும்; கடவுளர்க்கும் உவப்பாக இருக்கும்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. TVA_BOK_0010769_இராசராசேச்சுரம்.pdf

    2. https://ta.wikipedia.org/wiki/குடமுழுக்கு

    3. மந்திரங்கள் – பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் – கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017

    4. https://shaivam.org/thirumurai/third-thirumrai/999/thirugnanasambandar-thevaram-namashivaya-pathigam-kadhalaki-kasinthu

    5. http://tamil.webdunia.com/article/special-astro-predictions/in-the-cgopura-kalasam-putting-grains-reason-for-using-it-118062800016_1.html

     

    Share
  • நெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா

    நெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா

    அண்ணாகண்ணன்

    ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இலட்ச தீபம், 24.01.2020 அன்று திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது.  இதனைக் கண்டுகளிக்கும் வாய்ப்பினை இன்று பெற்றேன். இதோ  சில காட்சிகள், உங்கள் பார்வைக்கு.

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தங்கத் தமிழ்நாடு

    தங்கத் தமிழ்நாடு

    சி. ஜெயபாரதன் & இராம. மேகலா

    தங்கத் தமிழ்நாடு!  எங்கள் தாய்நாடு!
    சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!
    சிங்கத் தமிழர் உதித்த செந்நாடு!
    மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு!
    எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
    முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!
    வங்கக் கடலெழு செங்கதிர் ஒளிபடும்
    தென்குமரி முனையில் வள்ளுவர் வழிகாட்ட
    ஆத்திசூடி ஓளவை, திருப்பாவை ஆண்டாள்,
    வான்புகழ் வள்ளுவர், தேன்கவி இளங்கோ,
    கவிச்செல்வர் கம்பர், கவிக்கோ சேக்கிழார்
    புது யுகக்கவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன்,
    கடவுளை உணர்த்திய திரைக்கவி கண்ணதாசன்,
    அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர் அணியில்
    கவிக்கோ, கவிப்பேரரசு, கண்ணதாசன்
    யாவரும் உனது  மாதவ  மக்கள்!
    யாதும் நாடே யாவரும் கேளிர்!
    மேதினியில்  உனைப் பாதுகாத் திடுவோம்!
    காசினி மீதில் நேசமாய்த் திகழும்
    மாசிலா நாடே! மைந்தர்கள்  ஒன்றாய்
    வாழ்த்துவம் உனையே! உயர்த்துவம் உனையே!
    பாரதத் தாயின் தவத்திரு நாடே!
    பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்
    பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!

    Share
  • மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு

    மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    நீரும் நீர் சார்ந்த நெய்தல் திணை வாழ் மக்களான மீனவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் தமது இயலுமைக்கு தகுந்தபடி கோயில் தொண்டு புரிந்துள்ளனர் என்பதற்கு சில கல்வெட்டுச் சான்றுகள் உள. இக்கல்வெட்டுகளில் மீனவர் ‘சிவன்படவர்’ என்று குறிக்கப்படுகின்றனர். இதன் மற்றொரு வடிவம் தான் ‘செம்படவர்’ என்பது. மீனவர் தீண்டத்தகாத மக்கள் பிரிவினர் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. 63 நாயன்மாருள் ஒருவரான அரிபத்த நாயனார் ஒரு சிறந்த சிவபக்தர். இவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த ஒரு மீனவத் தலைவர். இவருக்காக திருக்குவளை சிவன் கோவிலில் சிலை நிறுவி அமுதுபடி செய்வதற்காக ஆலன் என்ற மீனவர் காசு கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது. இனி கல்வெட்டும் அதன் விளக்கமும் கீழே.

    நாகபட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், தியாகராச சுவாமி கோவிலின் மகாமண்டப வடக்கு, மேற்கு ஜகதிப்படை வெட்டப்பட்ட 19 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள்

    2. ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 4

    3. வது மார்கழி மாதத்தொரு நாள் உ

    4. டையார் திருக்கோளிலி உடை

    5. யார் கோயிலில் முன்னாளில் சிவ[ன்]

    6. படவரில் ஆலன் எழுந்தருளிவித்த

    7. அதிபத்த நாயனார்க்கு திருப்படி மா

    8. ற்றுக்கு இவன் தன் சாதியார் பக்க

    9. ல் இரந்து பெற்ற காசாய்

    10. காலசேரி ஐய்யனையப் பட்டன்

    11. மகன் தாமோதரபட்டன் பக்கல்

    12. நெல் பொலிசைக்கு குடுத்த காசாய்

    13. இவன் ஒடுக்கின காசு 2100. இக்கா

    14. சு இரண்டாயிரத்தொரு நூறும்

    15. கைக்கொண்டு திருப்படி மாற்றுக்

    16. கு நாள் ஒன்றுக்கு இருநாழி அரிசி

    17. அமுதபடிக்கு அளப்போமாகவு

    18. ம் நாங்கள் இப்படி செய்வோ

    19. மாக ஸம்மதித்தோம்.

    திருப்படி மாற்றுக்கு – படையல் சோறு ஆக்குவதற்கான பண்டம்; பக்கல் – இடம், ஐந்தாம் வேற்றுமை; இரந்து – கெஞ்சி கேட்டுப் பெற்ற அல்லது பிச்சை எடுத்துப் பெற்ற; ஒடுக்கின – கட்டிய, paid

    விளக்கம்: சோழவேந்தன் மூன்றாம் ராசராசனின் 4-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1219) நாகை மாவட்டம் திருக்கோளிலி என்னும் திருக்குவளை தியாகராச சுவாமி கோவிலில் ஆலன் என்ற மீனவன் சில ஆண்டுகள் முன்பு மார்கழி மாதத்தே ஒரு நாள் தான் எழுந்தருளச் செய்த அதிபத்த நாயனார் படிமைக்கு படையல் செய்வதற்கான அரிசிக்கு வேண்டிய நெல்லைப் நாள்தோறும் பெறும் ஏற்பாடாக தன் சாதி மீனவர்களிடம் பிச்சை எடுத்துப் பெற்ற 2100 காசுகளை வட்டிக்குவிட்டு அந்த வட்டிப்பணத்தில் (பொலிசை) இதனை மேற்கொள்ளும் வகையில் காலசேரி ஐய்யனையப் பட்டன் மகன் தாமோதரப் பட்டனிடம் கொடுத்தான். இந்த 2100 காசுகளைப் பெற்றுக் கொண்டு நாள் ஒன்றுக்கு இருநாழி அளவு அரிசியை அளந்து அமுதுபடிக்காக இட்டு படையல் ஆக்கி படையல் காட்டுவோம் என்று ஒப்புக் கொண்டார்அவர். இது கோவில் சிவபிராமணர் சார்பில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஆகும். இதில் இடம்பெறும் சிவன்படவர் ஆலன் அகநாட்டு மீனவராஅல்லது கடற்கரை மீனவரா என்று தெரியவில்லை.

    பார்வை நூல்: நாகபட்டின மாவட்டக் கல்வெட்டுகள், பக்கம் 93 – 94, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    கரூர் மாவட்டம், கரூர் வட்டம், திருமுக்கூடலில் உள்ள 36 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோராசகேசரி பன்மரான

    2. திரிபுவனச் சக்கரவத்திகள்

    3. ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு

    4. யாண்டு 15-வது தட்டையூர்நாட்டு

    5. திருமுக்கூடல் ஆளுடைய நாயனார்க்கு

    6. இரண்டுகரைநாட்டு சிவன்படவரோம்

    7. தென்கரை அல்லூர்

    8. பெருவழிக்கு மேற்குள்ள

    9. சிவன்படவரோம். மேற்கு முடிகொண்டத்துக்கு

    10. கிழக்கு உள்ள சிவன்படவரும்

    11. வடகரை சென்னகர் முறியான

    12. பெரியவளவன் பரத்தலைக்கு

    13. மேற்குள்பட்ட சிவன்படவரும்

    14. மேற்கு மணப்பள்ளி உள்பட கிழக்குள்ள

    15. சிவன்படவரோம் இந்நாட்டு

    16. உள்ப்பட்ட சிவன்படவரோம்

    17. இத்திருமுக்கூடல் ஆளுடைய நாயனாற்க்கு

    18. ஆறாம் திருநாளுக்கும்

    19. ஆளுடைய பிள்ளையாரை எழுந்தருள

    20. பன்னவும் சாத்துப்படிக்குப் பூச்சுப்படி

    21. அமுதுபடி கறியமுது உப்பமுது

    22. மிளகமுது நெய்யமுது பால் அமுது

    23. அடைக்காய் அமுது இலையமுது

    24. பந்தம் திருவிளக்கெண்ணை திருப்பள்ளித்தாம

    25. உள்ளிட்ட வற்கத்துக்கு பணம் 20. இப்பணம் இருபதும்

    26. திருநாள்கள்தோறும் குடுக்கக்கடவோமாகவும்

    27. தூபம் தீபம் கொம்பு திருச்சின்னம் இவையும் எங்கள்

    28. தன்மமாக இடக்கடவோமாகவும் இவை தாழ்வுபட்டால்

    29. மண்கலந்தும் வெண்கலம் எடுவித்தும் தடுத்துவந்த்தும்

    30. வீரபத்திரர்கள் வெட்டிக் கொண்டும் தண்டக்கடவார்களாகவும்

    31. இத்தண்டவந்தவர்களுக்கு சோறு பாக்கு இட்டு உபசரிக்கக்கடவோமாகவும்

    32. இன்நாட்டில் சிவன்படவர் ஒருகுடி இருக்கிலும்

    33. நாடு சோறு போட்டுப் பணம் தண்டி வந்து ஒருகடவோமாகவும்

    34. இப்படி சம்மதித்து கல்வெட்டிக் குடுத்தோம்

    35. உடையார் திருமுக்கூடல் ஆளுடைய நாயனார்க்கு இரண்டுகரை நாட்டு

    36. சிவன்படவரோம். இந்த தன்மம் மாற்றினார் உண்டாகில் வழி எழுச்சமறுவான்.

    பெருவழி – நெடுஞ்சாலை, highway; முறி – நகர்பகுதிஅல்லது சேரி; சாத்துப்படி – திருமேனி அலங்காரம்; திருப்பள்ளித் தாமம் – திருமேனிக்கு சாற்றும் மாலை; திருச்சின்னம் – ஊதுகுழலுள்ள இசைக்கருவி; அச்சம் – வாரிசு.

    விளக்கம்: கொங்கு பாண்டியனான வீரபாண்டியனின் 15-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1280) தட்டையூர் நாட்டில் அமைந்த திருமுக்கூடல் இறைவர்க்கு இரண்டுகரை ஊர்களிலும் வாழும் மீனவரான சிவன்படவர் இதாவது, தென்கரையிலுள்ள அல்லூர் நெடுஞ்சாலைக்கு மேற்கில் வாழும் சிவன்படவரும் மேற்கே முடிகொண்டத்துக்கு கிழக்கில் வாழும் சிவன்படவரும் அதேபோல் வடகரையில் சென்னகர் பகுதியான பெரியவளவன் பரத்தலைக்கு மேற்கில் அடங்கிய சிவன்படவரும் அதேபோல் மேற்கு மணப்பள்ளிக்கு உட்பட்ட கிழக்குப்பகுதியில் வாழும் சிவன்படவரும் ஆகியோர் உள்ளிட்ட இந்த நாட்டுச் சிவன்படவர் யாவருமாக இத்திருமுக்கூடல் இறைவர்க்கு ஆறாம் உற்சவ நாளில் ஆளுடையபிள்ளையாரை (ஞானசம்பந்தர்) எழுந்தருளச் செய்து திருமேனி அலங்காரத்திற்கும், பூசனைப்படி, அமுது படையல், பொறியல், உப்புச்சோறு, மிளகுச்சோறு, நெய்ச்சோறு, பால்சோறு, பாக்குச் சோறு, வெற்றிலை, தீப்பந்தம், விளக்கேற்ற எண்ணெய், திருமேனிக்கு சாற்றப்படும் மாலை ஆகிய செலவினங்களுக்கு இருபது பணம் ஒவ்வொரு ஆண்டின் உற்சவத்தின் போதும் கொடுப்போம் என்றும, இஃது அல்லாமல் தூபம், தீபம், கொம்புஊதல், திருச்சின்னம் எனும் ஊதுகுழல் இசைக்கருவியை ஆர்த்தல் ஆகியனவும் எங்கள் தர்மமாகச் செய்வோம் என்றும் இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால் வீரபத்திரர்கள் வெட்டிக் கொண்டும், மண்கலந்தும், வெண்கலம் எடுத்தும், தடுத்து வந்தும் அப்பணத்தை திரட்டிக் கொள்ளலாம் என்றும், இப்படி திரட்டுபவர்களுக்கு சோறுபோட்டு வெற்றிலைப் பாக்கு கொடுத்து உபசரிப்போம் என்றும் இந்நாட்டில் ஒரேஒரு சிவன்படவர் வாழ்ந்தாலும் சோறுபோட்டு பணத்தை திரட்டி வந்து செலுத்துவோம் என்றும் இரண்டுகரைநாட்டு வாழ் சிவன்படவரும் திருமுக்கூடல் இறைவர்க்கு கல்வெட்டி உறுதி அளித்தோம். இந்த தர்மத்தை மாற்றுகின்றவன் ஏழு தலைமுறைக்கு பிள்ளை இல்லாமல் போகுவானாக என்று கூறுகின்றனர். இவர்கள் அகநாட்டு மீனவர்கள் ஆவர்.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 301. A.R.I.E.p 1917. B.No. 197 ஆசிரியர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்

    Share
  • பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு

    பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு

    திருநெல்வேலி அருகில் உள்ள பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற உள்ள தமிழிணையப் பயிலரங்கில் பங்கேற்கிறேன். அழைப்பிதழ் காண்க. வாய்ப்புள்ளோர் வருக.

     

    Share
  • விட்டு விடுதலையாகி

    விட்டு விடுதலையாகி

    பாஸ்கர் சேஷாத்ரி

    கணக்கில்லா காலை மாத்திரை
    தினசரியின் அபிச்வரி
    பெட்டிக்கடைகாரன் கடன்
    அடுக்கிய பழைய பால் கவர்
    வங்கியின் வட்டி விகிதம்
    மணியார்டர் வரும் நாள்
    அவ்வப்போது பார்க்க அப்பாவின் புகைப்படம்
    ஓரத்தில் கிடக்கும் மிதிவண்டி
    ஒரு கால் உடைந்த கைக்குச்சி
    உறக்கம் துரத்தாத இரவுகள் – எனக்கு
    இருட்டில் தான் கண்கள் தெரிகின்றன.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 104

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 104

    நாங்குநேரி வாசஸ்ரீ

    104. உழவு

    குறள் 1031

    சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை

    பல பொழைப்பு இருந்திச்சின்னாலும் இந்த ஒலகம் வெள்ளாமைய நம்பிதான் சுத்திக்கிட்டுருக்கு. அதனால எம்புட்டு சங்கடம் இருந்தாலும் விவசாயந்தான் ஒசந்தது.

    குறள் 1032

    உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
    தெழுவாரை எல்லாம் பொறுத்து

    வெள்ளாம பாக்காம மத்த சோலி பாக்கவங்க எல்லாரையும் விவசாயி தாங்குததால அவுக இந்த ஒலகத்தோட அச்சாணி ஆவாக.

    குறள் 1033

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்

    வெள்ளாம பாத்து கெடச்சத சாப்பிட்டு வாழுதவங்க தான் உரிமையோட ஒசந்த வாழ்க்க வாழுதாங்க. ஏம்னா மத்தவுக எல்லாரும் யாரையாவது கும்பிட்டு வருததுல சாப்பிட்டு அவுக பொறத்தாலயே சுத்துதவுகதான்.

    குறள் 1034

    பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர்

    நெறைய ராசாவோட குடை நிழல தன் குடைக்குக் கீழ கொண்டு வருத வலிம விவசாயிக்கு உண்டு.

    குறள் 1035

    இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்

    தன் கையால சோலிபாத்து பொழைக்கவங்க மத்தவுககிட்ட கையேந்தி நிக்க மாட்டாக. தங்கிட்ட கேட்டு வந்தவுகளுக்கு இல்லன்னு சொல்லாம குடுக்கவும் செய்வாக.

    குறள் 1036

    உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேமென் பார்க்கும் நிலை

    வெள்ளாம பாக்கவன் சொணங்கி இருந்தாம்னா எல்லாத்திலயும் ஆசய விட்டதா சொல்லுத துறவிங்க கூட வாழ ஏலாது.

    குறள் 1037

    தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும்

    ஒரு பலம் புழுதி மண்ணு கால் பலம் ஆகுத அளவு பல தடவ உழுது காயவிட்டாம்னா பொறவு ஒரு பிடி எரு இடாமக்கூட பயிர் செழுமையா வெளையும்.

    குறள் 1038

    ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
    நீரினும் நன்றதன் காப்பு

    உழுததக் காட்டிலும் உரம் இடுதது நல்லது. இந்த ரெண்டும் செஞ்சு களை புடுங்கின பொறவு தண்ணி பாய்ச்சுததக் காட்டிலும் பயிரக் காவல் செய்யுதது நல்லது.

    குறள் 1039

    செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
    தில்லாளின் ஊடி விடும்

    நெலத்துக்கு உரியவன் தெனைக்கும் நெலத்தப் போய்ப் பாக்காம சொணங்கி இருந்தாம்னா அது அவன்மேல இருக்க வெறுப்பால வெலகிப் போன பொஞ்சாதி கணக்கா வாடி வெளச்சலில்லாமப் போவும்.

    குறள் 1040

    இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்

    பொழைக்க வழியில்ல னு நெனைச்சு சடவா இருக்கவனப் பாத்து பூமித்தாய் தனக்குள்ளார எளக்காரமா சிரிச்சிக்கிடுவா.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 242

    படக்கவிதைப் போட்டி – 242

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அய்மான் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (26.01.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சிறு குழந்தைகள் மணல்வீடு கட்டி விளையாடுவதைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 241க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றன.

    மணல் மாளிகையிலேயே மனநிறைவு கொள்ளும் மழலையருக்கும், எத்தனை வசதி வாய்ப்புகள் வந்தாலும் நிறைவின்றி அத்தனைக்கும் ஆசைப்படும் பெரியோருக்கும் இடையில்தான் எத்துணை வேறுபாடு?!

    செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” எனும் குமரகுருபரப் பெருமானின் வார்த்தையை மந்திரச் சொல்லாய்க் கொண்டால் இன்றைய எந்திர வாழ்விலும் நிலைத்த இன்பத்தைக் காணலாம்!

    இனி, இப்படத்துக்கு ஏற்றதாய்க் கவிதைகள் வடித்துத்தர வாருங்கள் என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!

    *****

    ”புதிய உலகுக்குப் பிள்ளைகளைத் தயார்ப்படுத்துவது பதின்மப் பருவம். அதில் பதியம் போடும் பண்புவிதைகள் நற்பலன்களை நல்கும்” என்கிறார் திரு. கே. மகேந்திரன்.

    பதின்மம்
    =========
    பதின்ம வயதினிலே
    புதுமைக் கிளர்ந்து எழும்
    மதிக்கு ஒப்புகின்ற
    பதிலைத் தேடி எழும்

    புதிய உலகமொன்று
    உதயம் ஆவததே
    பதியம் போடும் விதை
    பண்பு விதை களெனில்

    மகிழ்வைக் கெடுக்காதே
    மாண்பைப் பயிற்றிடலாம்
    மனம் நல்நிலமாமே
    குணத்தை வளர்த்திடலாம்

    இதிலே கோட்டை விட்டால்
    இனியும் வாய்ப்பு இல்லை
    இகத்தை மாற்றுதற்கு
    இவரே அடித்தளமாம்

    *****

    ”கணினி விளையாடல் நிறுத்திக் களத்திலே ஆட வேண்டும்; ஏட்டுப்படிப்பு மட்டுமன்றி எல்லாந்தெரிய வேண்டும். கூடிவாழ்ந்து கோடிநன்மை பெற்றிடவும் வேண்டும்” என்று சிறுபிள்ளைகளுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்கியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மனிதம் பழக்கு!

    அலை வீசும் கடற்கரையின் அழகை ரசிக்க வேண்டும்
    அலைபேசிச் சத்தம் இன்றி அமைதி கொள்ள வேண்டும்
    கணினியிலே விளையாடல் நிறுத்தி வைக்க வேண்டும்
    களத்தினிலே ஆட வைத்துக் களித்திருக்க வேண்டும்

    மணல்வீடு கட்டி மழலை மகிழ்ந்திருக்க வேண்டும்
    புனல்தோறும் ஆடி நாளும் பொலிந்திருக்க வேண்டும்
    சோர்வளிக்கும் தனிமையினைத் தூரந்தள்ள வேண்டும்
    கூடிவாழ்ந்து கோடிநன்மை பெற்றுவாழ வேண்டும்

    வீட்டினிலே அடைந்திடாமல் வெளியில் பார்க்க வேண்டும்
    ஏட்டுப் படிப்பு மட்டுமன்றி எல்லாந் தெரிய வேண்டும்
    கிணற்றுத் தவளையல்ல உலகஅறிவு கைக்கொள்ள வேண்டும்
    சுற்றத்தோடு வாழவைத்து மனிதம் பழக்க வேண்டும்!

    *****

    மணல்வீடு கட்டும் பிள்ளைகளை வைத்து மனங் கொள்ளத்தக்க நல்லுரைகளை நவின்றிருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    அடித்தளமாய்…

    மணலில் வீடு கட்டியேதான்
    மனம்போ லாடிய காலமெல்லாம்
    மணல்போல் மறைந்தே போயினவே
    மனதில் நினைவை விட்டுவிட்டே,
    கணமிதில் பிள்ளைகள் ஆடட்டும்
    களிப்பை நெஞ்சில் சேர்க்கட்டும்,
    பிணக்குடன் அவரைத் தடுக்காதே
    பிறகவர் உயர்வுக் கடித்தளமே…!

    மணல்வீடு கட்டிப் பிள்ளைகள் மனம்போல விளையாடிய காலமெல்லாம் மெல்ல மறைந்து வருகின்றன. (படத்தில் காணும்) இப்பிள்ளைகளேனும் அவ்வின்பத்தை அனுபவிக்கட்டும்! தடுக்காதீர்! என்று பெரியவர்களுக்குப் பொருளுரை புகலும் இக்கவிதையினை இயற்றியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • உள்நோக்கத்திற்கு ஆதாரமா?

    உள்நோக்கத்திற்கு ஆதாரமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஒரு வாரத்திற்கு முன்னால் இப்போதைய இந்திய அரசு மதத்தின் அடிப்படையில் குடிமக்களை வேறுபடுத்துகிறது என்ற கருத்தைக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் சொன்னேன். நான் சொன்னதற்கு ஆதாரம் இல்லை; இது பொய்யான செய்தியைப் (fake news) பரப்புவது என்று வாசகர்கள் சிலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.  உள்நோக்கத்திற்கு ஆவண ஆதாரம் தேட முடியாது. ஆவண ஆதாரத்தில் உள்நோக்கம் வெளிப்படாது.  செயல்களைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் உள்நோக்கம் வெளிப்படும்.  பா.ஜ.க. அரசின் செயல்களை – மௌனங்களையும்தான் – வைத்தே என் கருத்தைச் சொன்னேன்.  இந்தக் கருத்து என்னைப்போல் சமூகச் சிந்தனை, தார்மீக உணர்வு உள்ளவர்களுக்கும் உடன்பாடே.  மற்றவர்களுக்காக என் கருத்துக்கு ஆதாரமாக இருப்பவற்றை – இது பலவாக இருந்தாலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை வைத்து மட்டும் – சொல்கிறேன்.

    குடிமக்கள் யார் என்பது ஒரு நாட்டின் தன்மையை, ஆன்மாவை விளக்கும் கேள்வி.  இதனால்தான் ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தில் இந்தக் கேள்விக்குப் பதில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. 1950 ஜனவரி 26இல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திலும் குடிமக்களை வரையறுப்பதைக் காணலாம். இந்திய நாடு பல மதம், இனம், குடியேற்றம் ஆகியவற்றை அடக்கிய மக்களைக் கொண்ட, பன்மைத்தன்மை கொண்ட நாடு என்று நம் அரசியல் சட்டம் வரையறுக்கிறது.  அதன் வாசகம் கீழே.

    Every person who was at the commencement of the Constitution (26 January 1950) domiciled in the territory of India, and (a) who was born in India, or (b) either of whose parents was born in India, or (c) who has been ordinarily resident in India for not less than five years, became a citizen of India.

    இந்தச் சட்டம் அவ்வப்போது மாறிய அரசியல் கொள்கைகள், சட்டப் பிரச்சினைகளைப் பொறுத்துத் திருத்தம் செய்யப்பட்டது.  திருத்தங்களின் விபரம் இதோ:

    The legislation related to this matter is The Citizenship Act, 1955, which has been amended by the Citizenship (Amendment) Acts of 1986, 1992, 2003, 2005, 2015 and 2019. The 1986 amendment restricted citizenship by birth to require that at least one parent had to be an Indian citizen. The 2003 amendment further restricted that aspect by requiring that a parent could not be an illegal immigrant. The 2003 amendment also mandated the Government of India to construct a National Register of Citizens. The 2019 amendment provided an easier path to citizenship for persecuted selected minorities, i.e. Hindus, Sikhs, Buddhists, Jains, Paris and Christians from the neighbouring Muslim-majority countries of Bangladesh, Pakistan, and Afghanistan who entered India before December 2014. (2003-இல் ஆண்டது வாஜ்பாயி தலைமையில் இருந்த பா.ஜ.க. கூட்டணி)

    2019-ஆம் ஆண்டுத் திருத்தத்தை பா.ஜ. க. ஆட்சி  பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றயது.  இது எப்படி குடிமக்களை வேறுபடுத்தி ஒதுக்குகிறது என்று பார்க்கலாம்.  இது எப்படி இந்தியாவின் ஆன்மாவையே காயப்படுத்துகிறது என்றும் காணலாம்.  குடிமக்களை வேறுபடுத்துவது, சட்டத்தின் உள்நோக்கம் பற்றியது;  சட்டத்தில் இது வெளிப்படையாக இல்லை; இருக்க முடியாது. வலதுசாரி அரசியல்வாதிகள் இந்தச் சட்டத்தின் நோக்கம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவியவர்களைக் களைய வேண்டும் என்பதே என்று சொல்கிறார்கள்.  அண்மைப் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இவர்களைக் கறையான்கள் என்றார்.  கறையானைப்போல நாட்டை அரிக்கிறார்கள் என்று சூசகமாகச் சொன்னார்.  இதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை.  கறையான்களை அழிப்பதுபோல் இவர்களை ஒழிக்க வேண்டும் என்பது சொல்லாமல் விட்ட நோக்கம். எப்படி ஒழிப்பார்கள் என்பதை இப்போது மத்திய அரசு அஸ்ஸாமிலும் மற்ற மாநிலங்களிலும் கட்டிக்கொண்டிருக்கும் சிறைச்சாலைகளிலிருந்து ஊகிக்கலாம்.

    சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் என்று சொல்லும்போது, அவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷிலிருந்து எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்ற பிம்பத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.  இவர்கள் இஸ்லாமியர்கள் என்று குறிப்பால் உணர்த்துகிறார்கள்.  அதோடு இவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். குடியுரிமைச் சட்டத்தின் நோக்கம் பயங்கரவாதிகளைச் சிறையில் தள்ளி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று நாடகம் போடுகிறார்கள்.  மோதி, நாட்டின் காவல் நாயகன் என்னும் பிம்பத்தை வளர்க்க இந்தச் சட்டம் ஒரு கருவி.

    ஊடுருவியவர்கள் பற்றிய இந்தக் கருத்தாடலுக்கு வரலாற்றுச் சான்று இல்லை.  திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு முன்னோடியாக அஸ்ஸாம் மாநிலத்தில் குடிமக்களைக் கண்டுபிடித்தல் என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்தார்கள்.  அஸ்ஸாமில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று அங்குள்ள இந்துக்கள் சிலருக்கு சில காலமாக வருத்தம்.  இந்த இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகோ பங்களாதேஷ் தனிநாடாக ஆன பிறகோ வந்தவர்கள் அல்லர்.  காலனி ஆட்சியில் அஸ்ஸாமில் விவசாயத்தை வளர்த்து கல்கத்தாவுக்கு உணவு சப்ளை செய்வதற்காக காலனிய அரசு அன்றைய பிரிபடாத வங்காளத்திலிருந்து மக்கள் அஸ்ஸாமில் குடியேற ஊக்கப்படுத்தியது.  அப்படிக் குடியேறியவர்களில் இஸ்லாமியர்களும் உண்டு (ஆதாரம் New York Review  of Books என்ற புகழ்பெற்ற இதழில் (ஜனவரி 6, 2020) வெளியான Why Hindu Nationalists Trialed India’s Citizenship Law in Assam என்னும் கட்டுரை; இதை எழுதியவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ள Many Rivers, One Sea: Bangladesh and the Challenge of Islamist Militancy என்னும் ஆய்வு நூலின் ஆசிரியர் ஜோசப் ஆல்ச்சின்.   இந்த இஸ்லாமியர்களைத்தான் பா.ஜ.க. அரசு, இவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் குடிமக்கள்; இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் என்று நம்மை நம்பவைக்க முயல்கிறது. இவர்கள் காலனிய காலத்திலிருந்து பல தலைமுறைகளாக அஸ்ஸாமில் வாழ்பவர்கள் என்னும் வரலாற்று உண்மையை நம் கண்ணிலிருந்து மறைக்கிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ்,  இந்தியக் குடியுரிமைக்கு ஆவணம் காட்ட இயலாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட மக்களில் பலர் இந்துக்கள். இந்த விளைவை பா.ஜ.க அரசு எதிர்பார்க்கவில்லை.  இவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற குடியுரிமைச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று ஒரு மாயையைத் தோற்றுவிப்பதற்காக, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையராக உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை மட்டும் – இந்தச் சிறுபான்மையினரில் 90 சதவிகிதத்தினருக்கு மேல் இந்துக்கள் – இந்தியா அரவணைத்துக்கொள்கிறது என்று நம் கண்ணில் மண்ணைத் தூவப் பார்க்கிறது. இந்தச் சட்டத்தால், இந்தியக் குடியுரிமை கிடைக்காமல் போகிறவர்களில் காலனிய காலத்திலிருந்து அஸ்ஸாமில் குடியிருக்கும் இஸ்லாமியர்களே அதிகம்.  பா.ஜ.க. இந்தச் சட்டத்தின் நோக்கத்தைப் பற்றித் தரும் விளக்கத்தில் ஏராளமான ஓட்டைகள். மதக் கொடுமைக்கு ஆளான சிறுபான்மையினரே, இந்தியக் குடிமக்களாகத் தகுதி பெறுவார்கள் என்றால், இஸ்லாமியர்களுக்குள்ளேயே மேற்சொன்ன நாடுகளில் சிறுபான்மையராக இருந்து அவதிப்படும் அகமதியர்கள் போன்ற பல இஸ்லாமியச் சிறுபான்மையருக்கும் இந்தியா அடைக்கலம் கொடுக்க வேண்டும்; ஆனால், கொடுக்கவில்லை.  மியான்மாரிலிருந்துவிரட்டப்படும் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டும்; செய்யவில்லை  இவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் என்பதாலேயே இந்தச் சட்டத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. மேலும் மேற்சொன்ன இஸ்லாமிய நாடுகளையே குறிவைப்பதால், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள அகதிகளுக்குக் குடியுரிமை கொடுப்பது பற்றி இந்தச் சட்டம் பேசவில்லை. (தமிழ் இனத்தைக் காப்போம் என்று மார்தட்டும் அ.தி.மு.க. இந்தச் சட்டத்திற்கு வாக்களிக்காதிருந்திருந்தால் இந்தச் சட்டம் ராஜ்ய சபையில் நிறைவேறியிருக்காது.) இவற்றால் இந்தச் சட்டத்தின் நோக்கம் பிற நாடுகளில் மதத்தின் சார்பில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தருகிறது; இந்தப் பெருந்தன்மையைக் காட்டுவதுதான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்று சொல்லித்திரிவது ஏமாற்று வேலை.

    அடுத்தது, இந்திய ஜனத்தொகைப் பதிவேடு (National Population Register). இது காங்கிரஸ் ஆட்சியிலேயே (ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி) கொண்டுவரப்பட்டது.  ஆதார் அடையாள அட்டை அமலுக்கு வந்தபோது அரசின் ஏழைகளுக்கான உதவி திட்டங்களில் இருந்த ஊழல்களை ஒழிப்பதற்காக – ஒரே நபர் இரண்டு மூன்று தடவை இடம்பெறுவதைத் தடுப்பதற்காக – ஆதார் அட்டை தேவை என்று சொல்லப்பட்டது.  இதற்கான எதிர்ப்புகள் தனிப் பிரச்சினை; அதைப் பற்றி இங்கு சொல்லவில்லை.  ஆதார் அட்டையில் உள்ள குறுகிய அளவுத் தகவல்களை வலுப்படுத்த அதிகத் தகவல்களைச் சேர்ப்பதற்கு இந்தப் பதிவேடு.  இது தற்சமயம் ஒரு இடத்தில் வசிக்கும் மக்களைப் பற்றிய விபரம் தேடுவதற்கு என்று அப்போது சொல்லப்பட்டது.  இன்று இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே மக்கள் வேலைக்காக அதிக அளவில் இடம்பெயர்வதால் அவர்களைப் பற்றிய கணிப்பு தேவை என்று சொல்லப்பட்டது. இந்த வகையில் இது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஜனத்தொகைக் கணிப்பிலிருந்து (Census) வேறுபட்டது என்று வாதிடப்பட்டது.  பா.ஜ.க. அரசு காங்கிரஸ் செய்ததைத்தான் தாங்கள் தொடர்ந்து செய்கிறோம் என்பது பாதி உண்மையை மறைப்பதாகும்.  பழைய பதிவேட்டில் இல்லாத இரண்டு கேள்விகளை பா.ஜ.க. அரசு சேர்த்திருக்கிறது.  அவை குடிமகனின் தந்தை பிறந்த இடமும் தேதியும் பற்றியவை.  இவற்றைக் கேட்பதன் காரணம் தந்தை பாகிஸ்தானிலோ பங்களாதேஷிலோ பிறந்தவரா என்று தெரிந்துகொள்ளத்தான் என்று ஊகிக்க முடியும். பா.ஜ.க. தலைவர்கள் சட்டத்தில் இது இல்லை என்று திருப்பித் திருப்பிச் சொன்னாலும், பா.ஜ.க. அரசின் இஸ்லாமிய விரோதக் கொள்கையின் மூலம் (இதைப் பற்றி ஆதாரம் வேண்டுமென்றால் ஒரு புத்தகமே எழுதலாம்) இப்படி ஊகிப்பது பிரம்மவித்தை அல்ல.  முன்னோர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று இனம் கண்ட பிறகு அவர்களுக்கு என்ன நேரும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

    இந்தப் புதிய கேள்விகள் எதற்கு என்று எதிர்ப்பு எழுந்தவுடன் பா.ஜ.க. அரசு முதலில் இந்தத் தகவலுக்கு ஆவணம் காட்டத் தேவையில்லை என்று பின்வாங்கியது; அடுத்து இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வது கட்டாயமில்லை என்று பல்டி அடித்தது. எதிர்ப்பு வந்தால் பின்வாங்குவது உள்நோக்கத்தைச் சந்தேகப்பட வைக்கிறது அல்லவா? கால் விரலைத் தண்ணீருக்குள் விட்டுப் பார்த்து, சுட்டால் எடுத்துவிடுவோம்; இல்லையென்றால் குட்டையைக் குழப்புவோம் என்பதைப் போன்றது இந்த நடிப்பு.

    தந்தையின் பிறந்த இடம், தேதியைக் கேட்பதற்கு மேல் சென்று, தாத்தாவின் பிறந்த ஊரையும் தேதியையும் விசாவின் விண்ணப்பத்தில் இப்போதைய பா.ஜ.க. அரசு சேர்த்த்திருக்கிறது. அதாவது, வெளிநாட்டுப் பிரஜைகளாக வெளிநாடுகளில் இருக்கும் இந்திய வம்சாவளியினர் இந்தியப் பயணத்துக்காக வெளிநாட்டுத் தூதரகங்களில் விண்ணப்பித்தால் அப்பா, தாத்தா பிறந்த இடம், தேதி கொடுக்க வேண்டும்.  (ஆதாரம் புதிய விசா விண்ணப்பப் படிவம்).  இந்தத் தகவல்களைத் தருவதற்கு ஆவண ஆதாரமும் காட்ட வேண்டும்.  இவை எத்தனை பேரிடம் இருக்கும்?  ஆவணம் இல்லாவிட்டால் விசா கிடைக்காது.  இந்திய வம்சாவளியினர் ஒருவர் இஸ்லாமியராக இருந்தால் அவருடைய தந்தை, தாத்தா பாகிஸ்தானில் பிறந்திருந்தால் விசா கிடைக்கும் வாய்ப்புக் குறைவு; ஆவணச் சான்று காட்ட முடியவில்லையென்றால் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்பு அதிகம்.  இதைத்தான் என் கட்டுரையில் நண்பர் ஒருவரின் அனுபவத்தைக் வைத்து எழுதியிருந்தேன்.

    இஸ்லாமிய எதிர்ப்பில் உள்ள ஒரு அம்சம் நாடு பிரிவினையானபோது இந்தியாவின் மதச்சார்பின்மையை ஏற்று இந்தியாவில் தங்க முடிவு செய்தவர்களின் நாட்டுப்பற்றைப் பற்றிய சந்தேகம்.  இவர்கள் இந்தியாவுக்குத் துரோகம் செய்யக் கூடியவர்கள் என்று ஒரு பிம்பம்.  இது எவ்வளவு மோசமானது, ஆதாரமற்றது என்று காட்டத்தான் இந்தியப் பற்றை வெளிப்படுத்தும் சில முழக்கங்கள் இஸ்லாமியர்களால் எழுதப்பட்டவை என்று எழுதினேன். இவற்றில் ஒன்றுக்கு ஆதாரம் இது.  ஜெய்ஹிந்த என்ற முழக்கம் சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்டது என்ற எண்ணம் பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அதை உருவாக்கியவர் ஹைதராபாத்தில் பிறந்து ஜெர்மனியில் பொறியியல் படிக்கும்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து மேஜராக உயர்ந்து போரிட்ட ஒரு இஸ்லாமியர்.  அவர் பெயர் ஸைன் உல் அபிதீன் ஹாஸன் (Zain -ul Abideen Hasan). இதற்கு ஆதாரம் நரேந்திர லூதர் எழுதிய  Lengendotes of Hyderabad என்னும் ஆராய்ச்சி நூல்.  இதை நேதாஜி ஏற்றுக்கொண்டு பயன்படுத்தினார்.

    பா.ஜ.க. எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதாரம் கேட்பவர்கள் மோதியிலிருந்து பா.ஜ.க.வினர் சொல்லும் பொய்களுக்கு என்ன ஆதாரம் தருகிறார்கள்? பிரதம மந்திரி சொல்வதனாலேயே அவை உண்மை என்று நினைக்கிறார்களா? “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பது குறள். இது எல்லாருக்கும் பொருந்தும். நான் சொல்வதற்கு மட்டுமல்ல; மோதியும் அமித் ஷாவும் சொல்வதற்கும்தான்.

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 103

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 103

    நாங்குநேரி வாசஸ்ரீ

    103. குடி செயல்வகை

    குறள் 1021

    கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
    பெருமையிற் பீடுடைய தில்

    கடமையச் செய்யுததுக்கு ஒருத்தன் சொணங்காம மொனயுததக் காட்டிலும் வேற ஒசத்தியான பெரும னு  ஒண்ணுமில்ல.

    குறள் 1022

    ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
    நீள்வினையான் நீளும் குடி

    மொனைப்பு நெறைஞ்ச புத்தி ரெண்டோடையும் ஓயாத காரியஞ்செய்யுதவனோட குடும்பமும் சுத்துவட்டாரமும் ஒசத்தியடையும்.

    குறள் 1023

    குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும்

    தன் குடும்பத்தையும் நாட்டையும் ஒசத்துத நெனைப்புல ஓயாம மொனயுதவுனக்கு  உடுப்ப வரிஞ்சு கட்டிக்கிட்டு தெய்வம் முன்ன வந்து தொணையா நிக்கும்.

    குறள் 1024

    சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
    தாழா துஞற்று பவர்க்கு

    தம் மக்கள் ஒசரணுங்குத நெனைப்புல வெரசலா காரியம் செய்யுதவனுக்கு முடிக்குத தெறம தன்னத்தானே வந்துபோடும்.

    குறள் 1025

    குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
    சுற்றமாச் சுற்றும் உலகு

    குத்தங்கொற இல்லாம மக்கள் நல்லா இருக்கணும்னு பாடுபடுதவன ஒலகத்தார் சொந்தக்காரனா நெனச்சி சுத்தி இருப்பாக.

    குறள் 1026

    நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
    இல்லாண்மை ஆக்கிக் கொளல்

    நல்ல ஆண்மை ங்கது தான் பொறந்த வீட்டையும் நாட்டையும் சிறப்பா ஆளுத தன்மைய உண்டாக்கிக்கிடுததுதான்.

    குறள் 1027

    அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை

    போர்க்களத்துல பொறுப்ப ஏத்துக்கிட்டு எதித்து நின்னு வழிநடத்துத வீரன் கணக்கா குடிமக்களத் தாங்குத சக்தி இருக்கவனுக்கு தான் அவுகள ஒசத்துத பொறுப்பு இருக்கு.

    குறள் 1028

    குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
    மானங் கருதக் கெடும்

    குடிமக்கள ஒசத்த நெனைக்கவனுக்கு நேரங்காலம் ஒண்ணும் கெடையாது. சொணங்கி தன் பெருமய நெனச்சி சடவா இருந்தாம்னா எல்லாம் கெட்டுப்போவும்.

    குறள் 1030

    இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
    நல்லாள் இலாத குடி

    சங்கடம் வருத சமயம் கூட இருந்து தாங்குதவுக இல்லாத வீட்டையும் நாட்டையும் அந்தச் சங்கடம் வெட்டி சாச்சிப்போடும்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7

    தி. இரா. மீனா 

    அமரகுண்டத மல்லிகார்ச்சுனா

    கர்நாடக மாநிலம் தும்கூரிலுள்ள தற்போதைய ’குப்பி [அமரகுண்டா]’ மல்லிகார்ச்சுனனின் ஊராகும். ’மாகுடத மல்லிகார்ச்சுனா’ என்பது இவரது முத்திரையாகும். இலிங்கப் பெருமையை உணர்த்துவது இவர் வசனத்தின் சிறப்பாகும்.

    1.“உடலென்னும் நகரத்திற்கு உண்மை என்பது கோட்டையாம்
    அறம் பொருள் இன்பம் வீடு என்ற காவலர்களே விழித்தெழுங்கள்
    அச்சம் பெரியது ,அச்சம் பெரியது.
    அறியாமையெனும் இருள் மிகப் பெரியது!
    ஒன்பது வாயில்களை கவனத்தில் கொள்ளுங்கள்
    ஞான விளக்கை பிரகாசமாய் எரிய விடுங்கள்
    ஐந்து திருடர்கள் ஊடுருவ முயல்கின்றனர்.
    கவனம், கவனம்
    வாழ்க்கைச்  செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்
    மூலத்தின் வாயில் திறந்து
    சிறந்த வழியில் நடப்பது நன்று
    மகாமகிமை மாகுட மல்லிகார்ச்சுனனிடமான
    அறிவுணர்வை ஒரு போதும் தவறவிடக் கூடாது”

    அம்பிகர சௌடய்யா

    கல்யாண் நகரத்தின் மிகச் சிறந்த மனிதர் என்று மதிப்பிடப்படும் சௌடய்யா ஹவேரி மாவட்டம் சௌடாடனபுரா கிராமத்தைச் சேர்ந்தவர். தோணி ஓட்டும் பணி இவருடையது. பெயருக்கு முன்புள்ள அடைமொழியும், எழுதியுள்ள வசனங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. மிக வெளிப்படையான பேச்சாலும், அச்சமற்ற தன்மையாலும் சரணர்கள்  மத்தியில் குறிப்பிடத் தக்கவராக இருந்தார். இலிங்காய தர்மங்களைப் பின்பற்றி அதன் தத்துவங்களை வாழ்ந்து காட்டியவர். அம்பிக சௌடய்யா அவரது  முத்திரை. சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் சாதிப்பிரிவினைகள், கொடுமையான ஆசாரங்கள் ஆகியவற்றை கடுமையாக எதிர்ப்பதாக அவர் வசனங்கள் உள்ளன. துங்கபத்திரா ஆற்றின் கரையோரம் அவருக்கு அமைக்கப்பட்ட நினைவிடம் தற்போது வழிபாட்டு மையமாக உள்ளது.

    1. “படகோட்டி படகோட்டி என்று குறை சொல்ல வேண்டாம்
    நம்பிக்கை வைத்தால் ஒரே பிறப்பில் [துடுப்பு வலிப்பு]
    கரை  சேர்ப்பவன் அம்பிக சௌடய்யன்”
    ”அங்க அழகைப் பெரிதென நினைக்கும்
    மாசுடையவர்களே கேளுங்கள்;
    எது அங்க அழகு?
    குருவுக்கு உடல் கொடுப்பது அழகு,
    இலிங்கத்திற்கு மனம் கொடுப்பது அழகு,
    ஜங்கமத்துக்குப் பொருள் கொடுப்பதழகு,
    சேவை விருப்பமோடு பக்திக் கடலில் நீந்துவது அழகு,
    சிவனடி அடைவதே பேரழகு.
    இதை விட்டுச் சம்சாரம் பெரிதென
    மனைவி மக்கள் செல்வம்
    என்றும் நிலையென எண்ணி
    ஒரு காசும் பிறருக்குக் கொடுக்காமல்
    தானே உண்டு புதைத்து வைத்து
    இறுதியில் எமன்வாய் விழுந்து
    நரகின் நெருப்பில் அழிவதுறுதி
    இப்படி அழகற்றோர் முகம் பார்க்கலாகாதென்றான்
    உண்மையான அடியானென்னும் நம் அம்பிக சௌடய்யா”

    2. “நெருப்பு உண்மையெனில் அது பொய்யாம்
    விறகில்லையெனில் அதிலடங்கிய  நெருப்பு
    சுட்டெரிக்காதென அறிந்தவனே பிராணலிங்கியென்றான்
    அம்பிக சௌடய்யா”

    3.  “ஐயனே ,கற்களுக்காக மலைகள் தேய்ந்தன,
    இலைகளுக்காக மரங்கள் தேய்ந்தன,
    நீராடுவதற்காக எழுகடல்கள் தேய்ந்தன,
    தூபத்திற்கு நெருப்பு தேய்ந்தது,
    நறுமணத்திற்கு தென்றல் தேய்ந்தது,
    வாழ்க எனும் வாழ்த்துதலில் சொற்கள் தேய்ந்தன.
    எனக்கு எது? சரணர்கள்
    மாமனையின் வழிபாட்டிற்கு அமர்ந்தால்
    அவர்தம் காலணிகளுக்கு காவலனாவேன் என்றான்
    அம்பிக சௌடய்யா”

    4.  “எவரோ பயிரிட்ட செடியிலிருந்து மலர்பறித்து
    ஊரார் உருவாக்கிய ஏரியின் நீரெடுத்து
    உலகத்தீரே பாருங்கள் என வழிபாடு செய்தால்
    வழிபாட்டின் பலன் மலருக்கா? நீருக்கா?
    உலகிற்கா?வழிபட்டவனுக்கா?
    நானறியேன் ,நீங்கள் உரைப்பீரென்றான்
    அம்பிக சௌடய்யா”

     5. “ உடலிலணிந்த இலிங்கம் சிறுமை உடையதென்பார்
    மலையின் மீதுள்ள இலிங்கம் போற்றுதலுக்குரியது
    என்பவரைப் பாராய்!
    தலையில் எதுவுமற்ற இவர்களைக் கண்டால்
    கனமான காலணியால் “ பட பட” வென்று அடிப்பாயென்றான்
    நம் அம்பிக சௌடய்யா”

    6. “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளய்ய
    காற்று உன் வசமானதல்ல
    நாளை  தூற்றிக் கொள்வேனெனில் இயலாது
    சரணர் காற்றாக வரும்போது
    உன்னைத் தூற்றிக் கொள்வாயென்றான்
    நம் அம்பிக சௌடய்யா”

    7.  “வெல்லத்திற்கு வடிவமுண்டு இனிப்பிற்கு வடிவமுண்டோ?
    அடையாளத்திற்கு வழிபாடுண்டு அறிவிற்குண்டோ வழிபாடு?
    அறிவு உறுதியானால் கையிலுள்ள அடையாளம்
    மறையுமென்றான்  நம் அம்பிக சௌடய்யா”

    8. “பூசை செய்வதேன்? கையில் வைத்துப் பூசிப்பதெதற்கு ?
    ஆலயத்திற்குச் செல்வதெதற்கு ?
    வறுமையான அந்தகனுக்கு அன்னமிட்டால்
    மூவுலமும் போற்றும்
    வறுமையால் வாடும் அந்தகனுக்கு அன்னமிடவில்லையெனில்
    பூசை செய்வதால் என்ன பயனென்றான்
    நம் அம்பிக சௌடய்யா”

    அமுகி தேவய்யா:

    சோலாப்பூரைச் சேர்ந்த தேவய்யாவின் தொழில் ஆடை நெய்வதாகும் இவர் மனைவி பெயர் வரதாணி. ”சித்த சோமநாதா” என்பது  இவரது முத்திரையாகும். சரண தத்துவ வர்ணனை, இஷ்ட இலிங்க வழிபாடு ஆகியவற்றை இவர்  வசனங்கள் பேசுகின்றன.

    1.“ஞானத்தின் வழி அறிந்தென்ன செயல்படாத வரையில்
    செயலின்றி நினைவால் மட்டும் நிறைவேறுமா?
    அந்தகன் பாதையறிதான்,முடவர் நடப்பதற்கரியார்
    ஒன்றில்லாமல் மற்றொன்றால் பயனில்லை
    அறிவற்ற செயல் உயிரில்லாதது,செயலற்ற அறிவு
    வார்த்தைகளின் வெற்றுக் கூடு
    சித்த சோமநாதனோடு இணையும் சரணனுக்கு
    இரண்டும் வேண்டும் “

    2. ’தூசு படியாத காற்றைப் போல
    மை தீண்டாத கண்மணி போல
    நெய்யின் சுவையறியாத நாக்கு போல
    மண் ஒட்டாத மண்வண்டு போல
    சித்த சோமநாதனே!
    இன்பம் பல அனுபவித்தாலும் உன் சரணர் தனித்திருப்பர்”
                                                                                                                                                                                    [ தொடரும்]

    Share