-மேகலா இராமமூர்த்தி

சிறு குழந்தைகள் மணல்வீடு கட்டி விளையாடுவதைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 241க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றன.

மணல் மாளிகையிலேயே மனநிறைவு கொள்ளும் மழலையருக்கும், எத்தனை வசதி வாய்ப்புகள் வந்தாலும் நிறைவின்றி அத்தனைக்கும் ஆசைப்படும் பெரியோருக்கும் இடையில்தான் எத்துணை வேறுபாடு?!

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” எனும் குமரகுருபரப் பெருமானின் வார்த்தையை மந்திரச் சொல்லாய்க் கொண்டால் இன்றைய எந்திர வாழ்விலும் நிலைத்த இன்பத்தைக் காணலாம்!

இனி, இப்படத்துக்கு ஏற்றதாய்க் கவிதைகள் வடித்துத்தர வாருங்கள் என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!

*****

”புதிய உலகுக்குப் பிள்ளைகளைத் தயார்ப்படுத்துவது பதின்மப் பருவம். அதில் பதியம் போடும் பண்புவிதைகள் நற்பலன்களை நல்கும்” என்கிறார் திரு. கே. மகேந்திரன்.

பதின்மம்
=========
பதின்ம வயதினிலே
புதுமைக் கிளர்ந்து எழும்
மதிக்கு ஒப்புகின்ற
பதிலைத் தேடி எழும்

புதிய உலகமொன்று
உதயம் ஆவததே
பதியம் போடும் விதை
பண்பு விதை களெனில்

மகிழ்வைக் கெடுக்காதே
மாண்பைப் பயிற்றிடலாம்
மனம் நல்நிலமாமே
குணத்தை வளர்த்திடலாம்

இதிலே கோட்டை விட்டால்
இனியும் வாய்ப்பு இல்லை
இகத்தை மாற்றுதற்கு
இவரே அடித்தளமாம்

*****

”கணினி விளையாடல் நிறுத்திக் களத்திலே ஆட வேண்டும்; ஏட்டுப்படிப்பு மட்டுமன்றி எல்லாந்தெரிய வேண்டும். கூடிவாழ்ந்து கோடிநன்மை பெற்றிடவும் வேண்டும்” என்று சிறுபிள்ளைகளுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்கியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

மனிதம் பழக்கு!

அலை வீசும் கடற்கரையின் அழகை ரசிக்க வேண்டும்
அலைபேசிச் சத்தம் இன்றி அமைதி கொள்ள வேண்டும்
கணினியிலே விளையாடல் நிறுத்தி வைக்க வேண்டும்
களத்தினிலே ஆட வைத்துக் களித்திருக்க வேண்டும்

மணல்வீடு கட்டி மழலை மகிழ்ந்திருக்க வேண்டும்
புனல்தோறும் ஆடி நாளும் பொலிந்திருக்க வேண்டும்
சோர்வளிக்கும் தனிமையினைத் தூரந்தள்ள வேண்டும்
கூடிவாழ்ந்து கோடிநன்மை பெற்றுவாழ வேண்டும்

வீட்டினிலே அடைந்திடாமல் வெளியில் பார்க்க வேண்டும்
ஏட்டுப் படிப்பு மட்டுமன்றி எல்லாந் தெரிய வேண்டும்
கிணற்றுத் தவளையல்ல உலகஅறிவு கைக்கொள்ள வேண்டும்
சுற்றத்தோடு வாழவைத்து மனிதம் பழக்க வேண்டும்!

*****

மணல்வீடு கட்டும் பிள்ளைகளை வைத்து மனங் கொள்ளத்தக்க நல்லுரைகளை நவின்றிருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

அடித்தளமாய்…

மணலில் வீடு கட்டியேதான்
மனம்போ லாடிய காலமெல்லாம்
மணல்போல் மறைந்தே போயினவே
மனதில் நினைவை விட்டுவிட்டே,
கணமிதில் பிள்ளைகள் ஆடட்டும்
களிப்பை நெஞ்சில் சேர்க்கட்டும்,
பிணக்குடன் அவரைத் தடுக்காதே
பிறகவர் உயர்வுக் கடித்தளமே…!

மணல்வீடு கட்டிப் பிள்ளைகள் மனம்போல விளையாடிய காலமெல்லாம் மெல்ல மறைந்து வருகின்றன. (படத்தில் காணும்) இப்பிள்ளைகளேனும் அவ்வின்பத்தை அனுபவிக்கட்டும்! தடுக்காதீர்! என்று பெரியவர்களுக்குப் பொருளுரை புகலும் இக்கவிதையினை இயற்றியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *