Photo poetry contest 242

அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

அய்மான் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (26.01.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி – 242

  1. மனிதன் மட்டும்…

    குரங்கி லிருந்து பிறந்தவன்தான்
    குணமதில் மனிதன் மாறிவிட்டான்,
    மரத்தை உறைவிடம் ஆக்கியேதான்
    மனம்போல் வாழ்ந்திடும் குரங்கினமே,
    மரத்தின் கிளையி லிருந்தாலும்
    மரத்தை யழிக்க நினைப்பதில்லை,
    தரத்தி லுயர்வாம் மனிதனவன்
    தாழ்கிறான் மரங்கள் தனையழித்தே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. குறிஞ்சிப் பண்

    வண்டு சுழன்றிடும் சோலைமிடை காதல்
    கண்டு உயிர்வாழ்ந்துப் பரிணமிப்பாய்
    வெட்கங் கொண்ட கொடிச்சியினை – கடுவனே
    வேட்கையுடனேச் சேர்ந்திருப்பாய்

    கொட்டும் சாரல் வெட்கைத் தவிர்க்க
    கானவன் தோள்களில் சாய்ந்திடுவாய் – அது
    வானவர் உலகையே காட்டுமென்ற
    வள்ளுவன் வாக்கை மெய்பிப்பாய்

    நேற்று இன்று நாளையின்றி
    நித்தமும் நிலைக்க வைத்திடுவாய்
    காற்றிடை நுழையாக் காதல் கொண்டு – குறிஞ்சிக்
    காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.