Blog

  • படக்கவிதைப் போட்டி – 241

    படக்கவிதைப் போட்டி – 241

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.01.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

    வெண்ணெய் உண்ண விழையும் கண்ணனைத் தன் படப்பெட்டிக்குள் பதுக்கி வந்திருக்கின்றார் திரு. கோபி சங்கர். வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் போட்டிக்கு வழங்கியுள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் சென்றுசேரட்டும்!

    பானை வெண்ணெயைத் துழாவும் பச்சிளங் குழந்தையைப் பார்க்கையில்,

    படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
    உடைப்பெரும் செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே
    (புறம் – 188) எனும் பாண்டியன் அறிவுடைநம்பியின் அறிவுசால் பாடலே நெஞ்சில் நிழலாடுகின்றது.

    தவழும் கண்ணனுக்குத் தமிழ்ப்பா பாடக் காத்திருக்கும் கவிஞர்களுக்கு இனி வாய்ப்பை வழங்குவோம்.

    *****

    கண்ணன் செய்யும் களவுக் குறும்பையெல்லாம் நிஜவாழ்வில் செய்வோரை யாரும் பாராட்டுவதில்லை. எனவே விளையாட்டுக்கும் வேண்டாம் களவுப் பழக்கம் என்று நல்லுரை நவிலுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பழக்குங்கள் பண்பை…

    வெண்ணெய் திருடும் கண்ணனாக
    வேடம திட்டுப் பிள்ளைக்கு,
    கண்ணன் வந்தான் வீட்டுக்கென
    களிப்பு மிகவே வாழ்த்துகிறோம்,
    உண்மையில் திருட வந்தாலோ
    உதவாக் கரையென ஒதுக்குகிறோம்,
    பண்பை அன்பைப் பழக்கிடுங்கள்
    பால வயதிலே பெரியோரே…!

    *****

    மழலையில்லா மங்கை ஒருத்தியின் மனக்குறையையும் அவளை அரக்கமனமும் அநாகரிகமும் படைத்த சுற்றமும் நட்பும் தகாத வார்த்தைகளால் திட்டும் அவலத்தையும் யதார்த்தமாகப் படம் பிடித்துள்ளார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ் இக்கவிதையில்.

    வா கண்ணா வா!

    உன் வாசல் வந்து வேண்டி நின்றேன்
    வறுமை என்று…. வசதி தந்தாய்
    என் தனிமை தீர்ந்திட வேண்டி நின்றேன்
    துணையோடு வாழ்க்கை தந்தாய்
    வீட்டு விளக்கேற்ற வந்தவள்
    வாரிசை இன்னும் சுமக்கவில்லை என்று வையும் அத்தை
    என்றும் ஏளனமாய்ப் பேசி எள்ளி நகையாடும்
    குழந்தைப்பேறு இல்லை என்று
    சுற்றமும் நட்பும்
    வீட்டில் மழலையாய்
    தவழ்ந்து வந்த மருமகனைக்
    கண்ணன் வேடமிட்டு அழகு பார்த்தேன்
    பானை நிறைய பஞ்சை
    பொய்யாய் வெண்ணெய் எனக்
    கண்ணா உனக்குப் படையல் வைத்தேன்
    என் பிராத்தனைகள் பொய்யில்லை
    வெண்ணெய் திருடிய வாயில்
    யசோதைக்குச் சுற்றும் உலகைக் காட்டிய
    களிப்பூட்டும் கதைகள் சொல்லி மகிழ்ந்திருந்தேன்
    வயிற்றில் கரு ஒன்று உருவாகி
    மழலைச் செல்வமாய் அது பிறந்து
    மலடியெனும் பட்டம் நீக்கி
    அன்பை பொழிந்திடும்
    அன்னையாய் என்னை மாற்றிட
    வா கண்ணா வா

    *****

    மனைமாட்சியின் நன்கலமான மழலையின் வரவை மாதவனிடம் வேண்டும் கவிதையிது. இரசாயன மருந்துகளின் நுகர்வாலே கருவுறுதல் இக்காலத்தில் பிரச்சினை ஆனதோ எனும் கவிஞர் திரு. ராவணா சுந்தரின் வினா சிந்திக்க வைக்கின்றது.

    மழலையின் வருகை

    கருமை நிறக் கண்ணா
    கோகுலத்தின் மைந்தா
    லீலைகளின் மன்னா
    உன் பொற்பாதம்
    குடியானோரின் குடிகளில்
    குழந்தையாய்க் குதித்தோடி
    நீ விரும்பும் வெண்ணெயை
    எங்கள் அனுமதியில்லாது
    உன் குறும்புத்தனத்தில்
    நீ உண்டு மகிழ
    எங்களின் மாயோனே
    உன் கருணைக் கடலில்
    சிறு துளியளித்துப்
    பிள்ளை வரத்தை இந்நாளில்
    அருள்வாயா கண்ணா…?
    கலியுகப் பெண்களில்
    பல பேர் கண்ணீரில் கலங்குவதேனோ?
    விண்ணைமுட்டும் விஞ்ஞானமிருந்தும்
    தாய்மை மரித்துப்போனதேனோ?
    இரசாயன மருந்துகளின் ஊடுருவல்
    கருவுறுதலைக் குறைத்ததோ?
    குறைதீர்க்கும் கண்ணா
    எங்கள் எல்லோர் குலங்களையும்
    தழைக்க வழிசெய்வாயாக!

    *****

    குழந்தையை வைத்துக் குவலயத்துக்கு நீதியையும் பல சேதியையும் சொல்லியிருக்கும் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்.

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தேர்வுசெய்திருப்பது….

    எதிர்காலப் பொங்கல்!

    விளை நிலங்கள் தமையெல்லாம்
    விலை கொடுத்து வாங்கி,
    வீடுகட்டிப் பார்க்க எண்ணும் ஒரு
    வித்தகரின் கூட்டம்!

    சோறு போடும் நிலங்களையே
    கூறுபோட்டுப் பார்த்து – எரி
    வேதிப்பொருள் தேடத் தினம்
    விழைந்திடுமோர் அரசு!

    பாடுபட்டு உழைத்துச் செங்கதிர்
    பயிர்வளர்த்து வந்த மண்ணில் – வேறு
    நாட்டதனின் கூட்டம் தினம்
    செய்யும் பல ஆய்வு!

    நிலைதிருத்தி விதிமாற்ற
    வழியேதும் எண்ணிடாமல்
    வெள்ளித்திரை வழியே தலைவனைத்
    தேடும் மக்கள் கூட்டம்!

    மகிழ்ச்சி கொண்டு குடும்பத்துடன் கொண்டாடக்
    கதிர், கரும்பு எழிற்கோலம் ஏதுமின்றி
    நெகிழிப் பானையில் பஞ்சுப் பொங்கல் வைத்து
    கொண்டாடும் நம் எதிர்காலச் சமுதாயம்!

    சோறுபோடும் விளைநிலங்களையெல்லாம் கூறுபோட்டு விலை நிலங்களாக்கி விற்றுவிட்டு, வெள்ளித்திரையில் தலைவனைத் தேடும் மக்கள் சமூகத்தின் எதிர்காலப் பொங்கல் இவ்வாறு நெகிழிப்பானையில் வைக்கப்படும் பஞ்சுப் பொங்கலாகத்தான் இருக்கும் என்று நெஞ்சுவெந்து பேசும் இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • தமிழர் திருநாள் வாழ்த்து!

    ஏறன் சிவா

    வீடெலாம் தோரணங்கள்!
           வியத்தகு கோலம் கொள்ள!
    மாடெலாம் அணிகள் பூண்டு
           மகிழ்ச்சியில் எம்பித் துள்ளக்
    காடெலாம் கழனி எல்லாம்
            காய்,கனி குலுங்கித் தள்ளப்
    பாடலாம் வாரீர் என்றே
            பைந்தமிழ் வாழ்த்தைச் சொல்வோம்!
     
    ஏடெலாம் இழந்த தாலே
             இழந்தநம் சிறப்பை மீட்கக்,
    கூடலாம்! புதிதாய்ச் செம்மைக்
            கொள்கைகள் வகுத்து இந்த
    நாடெலாம் அறிஞர் கூட்டி
             நம்முடை வேரின் ஆழம்
    தேடலாம்! வாரீர் என்றே
             தீந்தமிழ் வாழ்த்தைச் சொல்வோம்!
     
    கலைபல வளர்ப்ப தற்குக்
             கலைமன்றம் செய்வோம்! வீழ்ந்த
    நிலைதனை உயர்த்து தற்கு
             நெறிமுறை வகுப்போம்! நம்மின்
    தலைமுறை வாழு தற்குத்
             தமிழ்முறை செய்வோம் என்றே
    தலைதனைத் தாழ்த்திச் சொல்வோம்
             தமிழரின் திருநாள் வாழ்த்தை!
              
    பழித்திரை போக்கு தற்குப்
              பல்துறை அறிவு வேண்டும்!
    விழித்திரை போக்கு தற்கு
              விழிப்புடன் வாழ வேண்டும்!
    வழித்திரை போக்கு  தற்கு
              வல்லமை பெறவும் வேண்டும்!
    மொழித்திரை போக்க மூச்சை
               மொழியுடன் கலக்கச் சொல்வோம்!
    Share
  • உழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்

    உழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்

    சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 

    தைத்திங்கள் பிறக்கிறது
    தைப்பொங்கல் வருகிறது
    தை, தை எனக் குதித்து 
    ‘தை’ மகளை வரவேற்போம்.

    உலகோர் பசி தீர்க்க 
    உழைக்கின்ற உழவர்க்கு 
    உற்சாகம் தருகின்ற 
    உன்னத விழாவன்றோ!

    ஏரோட்டி, சால் அமைத்து 
    நீர் பாய்ச்சி, நாற்றுநட்டு,
    களையெடுத்து, எரு இட்டு, 
    தலையெடுத்த பயிரை

    அறுவடை செய்தடுக்கி,
    அறுவடை முடித்த வயலில் 
    புத்தடுப்பு தானமைத்து  
    புதுப்பானைப்  பொங்கலிட்டு 
    புத்தாடை தானுடுத்து 
    பொங்கிவரும் பால்கண்டு
    பொங்கலோ பொங்கலெனக்    
    குலவையிட்டுக் கொண்டாடி,
    ஆதவனைக் கும்பிட்டு 
    ஆவினத்தைச் சீராட்டி ,
    நன்றி நவிலும்  நாளே 
    பொங்கல் எனும் நன்னாள் – இது   .
    உழவர்களின் திருநாள் .     

    ஊரார் பசிதீர்க்கும் 
    உழவர்தம் துயர்தீர்க்க
    உரிய விலைகொடுத்து 
    உயர்த்திடுவோம் அவர்நிலையை .

    இடைத்தரகர் எனும் 
    ஈனப்பிறவிகளின்  
    கொட்டத்தைத் தானடக்கி 
    கொள்ளையைத் தடுத்திடுவோம். 

    நீர்நிலைகள் புனரமைத்து 
    நீர்வளம் பெருக்கிப் பயிர் 
    வீணாகும் நிலையை 
    விரைந்து சரிசெய்வோம் .
    இயற்கைப் பேரிடரால் 
    இன்னல் விளைந்தக்கால் 
    நம் கை கொடுத்து அவர்க்கு 
    நம்பிக்கை அளித்திடுவோம் .

    வில்லேருழவர்க்கும்,
    சொல்லேருழவர்க்கும்,
    எல்லோர் வயிற்றுக்கும்
    நல்லேர்தான் ஆதாரம்.   

    உழவுக்கும் உழவர்க்கும் 
    உழைப்புக்கும் வந்தனம்.

    Share
  • மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!

    மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    “தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். புலம் பெயர்ந்த நாட்டினில் வாழுகின்ற எங்களின் பிள்ளைகளுக்கு இந்த மொழியின் அர்த்தம் என்னவென்று தெரியவே மாட்டாது. அவர்கள் தையைப் பற்றியோ அல்லது தையில் வருகின்ற பொங்கலைப் பற்றியோ எண்ணிப் பார்ப்பதே இல்லை. வயது வந்தவர்களான நாங்கள்தான் வருஷா வருஷம் தவறாமல் பொங்கலைப் பொங்கி வருகின்றோம். நாங்கள் பொங்கலைப் பொங்கி மகிழ்வது முக்கியம் தான். அதே வேளை எங்களின் பிள்ளைகளுக்கும் பொங்கலைப் பற்றி நாங்கள் தெளிவு படுத்துதலும் முக்கியமானது என்பதை நாங்கள் அனைவரும் மனத்தில் இருத்துவது மிகவும் அவசிய மானதே.

    புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற பிள்ளைகள் அங்குள்ள சூழலுக்கு ஏற்பவே தங்களை மாற்றிக்கொள்ளுகிறார்கள். அவ்வாறு மாறும் வேளை என்பது மிகவும் முக்கியமானதாகும். உணவில் மாறலாம். உடையில் மாறலாம். உழைப்பில் மாறலாம். ஆனால் உள்ளத்தில் தங்களின் பண்பாடு, கலாசாரம் பற்றிய எண்ணங்களை மட்டும் மாற்றாமல் அவர்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியமாகும். பண்பாடு, கலாசாரம், இவற்றினை உணர்த்துபவையே எங்களின் விழாக்களும் கொண்டாட்டங்களும். பண்பாட்டினை நிலைநிறுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக அமைவதுதான் “தைப்பொங்கல்” எனலாம். 

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன? இவையெல்லாம் புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற எங்கள் பிள்ளைகளுக்குச் சரிவரத் தெரியாது. நாங்களும் அதைப்பற்றி விளக்கிச் சொல்லுவதும் கிடையாது. பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும்.

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளபடுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்று எங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங் காலமாக இருந்து வருகிறது என்பதை எங்கள் பிள்ளைகளின் மனதில் இருத்துவதும் முக்கியமான பொறுப்பாகும். இவையாவும் தைப்பொங்கலுடன் இணைகின்றன என்பதுதான் இங்கு சுட்டப்பட வேண்டிய அவசியமான அம்சம் எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தைச் செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா என்பதை நாங்கள் எங்களின் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

    நகரத்தில், புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் செய்யப்படும் விவசாயமோ, அதன் முறைகளோ, அங்கு விலங்குகள் விவசாயத்துக்கு உதவும் விதமோ, விவசாயத்துக்குப் பயன் படுத்தப்படும் ஏர் போன்ற கருவிகளோ தெரிவதற்கு உரிய வாய்ப்பு இல்லைதான். அவர்களுக்கு அவற்றினைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கும் பொழுதுதான் தைப்பொங்கலின் போது செய்யப்படும் மரபார்ந்த விஷயங்களை அவர்களின் மனத்தில் பதியச் செய்யக் கூடியதாக இருக்கும்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து, மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து, குடும்பத்தில் உள்ளவர்கள் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாதது.

    கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவை தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை என்பதை எங்களின் பிள்ளைகளை உணரச் செய்யவேண்டும்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக்கொள்ளலாம். வருடத்தின் தொடக்கமாய் வரும் தையினை மங்கலகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணிப் பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனத்தில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்துப் பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனத்திலுள்ள பொறாமை வஞ்சகம், பொய், கபடு, சூது, வாது, இவற்றையெல்லாம் ஞானம் என்னும் தீயில் பொசுக்கி மனத்தைத் தூய்மை ஆக்கி, புத்தாடை உடுத்து, புதுப்பொங்கலைச் சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாத்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த்தினை, ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப் பொங்கல், போகித் திருநாள், காணும் பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரத்தில் வாழ்கின்றவர்களுக்கோ,  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி, தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைத்தான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடியிருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாகவே இருக்கும்.

    உழைப்பினை மையமாக்கி, தொழிலினை மையமாக்கி, அந்தஸ்தினை மையமாக்கி அன்னிய நாட்டினில் வாழும் எங்கள் தமிழர்களின் தைப்பொங்கல் சற்று சறுக்கிய தைப்பொங்கலாகவே அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. சொந்த ஊரினில் தைப்பொங்கல் கொண்டாடுவதற்கும்  குடியேறிய அன்னிய நாட்டில் தைப்பொங்கல்  கொண்டாடுவதற்கும் வித்தியாசங்கள் காணப்பட்ட போதிலும் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்வதில் தமிழர்கள் பின்னிற்கவில்லை என நினைக்கையில் பெருமிதம் கொள்ளத்தான் வேண்டும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறிஸ்தவராயினும், இந்துக்களாயினும், தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச் சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய் தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!

    நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மதபேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள் !

    Share
  • தைப் பொங்கல் வைப்போம்!

    தைப் பொங்கல் வைப்போம்!

    சி. ஜெயபாரதன், கனடா
     
    பொங்கல் வைப்போம்
    புத்தரிசிப்
    பொங்கல் வைப்போம்
    சர்க்கரைப்
    பொங்கல் வைப்போம்
    வீட்டு வாசலில்
    மாட்டுப்
    பொங்கல் வைப்போம்
    முன் வாசலில்
    கோலமிட்டு, பெண்டிர்
    கும்மி அடித்து
    செங்கரும்புப் பந்தலிட்டு
    சீராய்த் தோரணம் கட்டிப்
    பால் பொங்கல் வைப்போம் !
    புத்தாடை அணிந்து
    பூரிப்போடு
    பொங்கல் வைப்போம்.
    பொழுது புலர்ந்ததும்
    வெய்யோன் விழித்ததும்
    வெண்பொங்கல் வைப்போம்.
    கூட்டாகத் தமிழர்
    கொண்டாடும் அறுவடைத் திருவிழா
    கோலகலமாகப்
    பொங்கலோ பொங்கல் என்று
    மங்கையர் பாடிக்
    கோலடித்து
    பொங்கல் வைப்போம்.
    தைப் பொங்கல் வைப்போம்.
    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-14

    குழவி மருங்கினும் கிழவதாகும்-14

    மீனாட்சி பாலகணேஷ்

    (மொழி பயிலல்)

    பிள்ளைப்பருவத்தின் ஆடல்களும் செயல்களும் நிகழ்வுகளும் இலக்கணத்தால் வரையறுக்கப்பட்ட பத்துப்பருவங்களுக்கு மட்டுமே உட்பட்டனவன்று. எண்ணற்ற விளையாட்டுகளும், தாய்தந்தையரும், குடும்பத்தினரும் குழந்தையின் நலன்கருதிச் செய்யும் கண்ணேறு கழித்தல், காது குத்துதல் ஆகிய சில சடங்குகளும் இன்னபிறவும் குழந்தைப் பருவத்திற்கு மட்டுமே உரியனவாம். இவற்றுள் பல அரிதாகப் பாடப்பட்டும் பல பாடப்படாமலேயும் உள்ளன.

    இப்பருவங்களுள் பல ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் தனித்தனியாகப் பாடப்பட்டுள்ளன. சிற்றில் பருவம் ஒன்றே இருபாலருக்கும் பொதுவாக அமைந்துள்ளது. ஆண்மக்களின் வளர்ச்சிப் பருவத்தில் நிகழும் சில நிகழ்ச்சிகளும் சடங்குகளும் பிங்கலந்தை நிகண்டுவில் இலக்கணமாக வரையறுக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.

           ‘ஆறாந் திங்களிற் கூறுதற் கற்றலோ
             டேழாந் திங்களி னின்னமு தூட்டலும்
             ………………………………………….
             பத்திற் பூணணி பன்னீ ராண்டினிற்
             கச்சொடு சுரிகை காமுறப் புனைதலென்
             றின்னிவை1 ……………………….,‘ என்பன பாடல்வரிகள்.

    இருப்பினும் பிங்கல நிகண்டு குறிப்பிடும் இப்பருவங்கள் கதிர்காமப்பிள்ளைத்தமிழ் எனும் ஒரேயொரு பிள்ளைத்தமிழ் நூலில் மட்டுமே பாடப்பட்டுள்ளது வியப்பிற்குரியதாகும்.

    சிவங். கருணாலய பாண்டியப்புலவர் இயற்றிய இந்நூல் இலங்கையிலுள்ள கதிர்காமம் எனும் பதியில் உறையும் முருகப்பிரானைப் பற்றியதாம். பதினான்கு பருவங்களைக் கொண்டமைந்த இந்நூலின் பருவங்கள் ஒவ்வொன்றும் மூன்று பாடல்களைக் கொண்டே அமைந்தவையாகும் என்பதும் இதன் இன்னொரு சிறப்பாகும். காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, நிலாவழைத்தல், சிறுபறை முழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், ஆகிய பத்துப்பருவங்களுடன் மொழிபயிலல், உணவூட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் ஆகிய நான்கு பருவங்களும் சேர்த்து மொத்தம் பதினான்கு பருவங்களால் கவினுறப் பாடப்பட்டுள்ளது.

    மொழிபயிலல் பருவமானது இப்பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்திற்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ளது. மகவு, தன் தாய், சுற்றியுள்ளோர் ஆகியோர் பேசுவதனைக் கண்டு தானும் தனது தாய்மொழியின் வழக்குகளை அறிந்து பேசக் கற்றுக்கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம். குழந்தையின் வளர்ச்சியில் இதுவும் மிக இன்றியமையாததொரு பருவமாகும். மொழியினைத் தன் தாயிடமிருந்தே அவள் தனக்குத் தாலாட்டுப் பாடும்போது கேட்டுக் குழந்தை கற்றறிகிறது. உறவுமுறைகள், உணர்வுகள், உணவு பற்றிய சொற்கள், காகம், நாய், பூனை முதலான விளையாட்டுத் தோழர்கள் ஆகியனவற்றைத் தாய் இப்பருவத்தில் குழந்தைக்குச் சிறுசொற்களாலும் சொற்றொடர்களாலும் அறிமுகப்படுத்துகிறாள்.

    இது ஆண், பெண் ஆகிய இருபருவத்துக் குழந்தைகளுக்கும் பொருந்துமாயினும் ஆண்பால் பிள்ளைப்பருவமாக ஒரேயொரு பிள்ளைத்தமிழில் மட்டுமே பாடப்பட்டுள்ளது. ‘ஆறாம் திங்களில் கூறுதற்கற்றல்’ என பிங்கல நிகண்டு இதனைக் குறிப்பிடுகிறது. இப்பருவத்திற்கான பாடல்கள் மூன்றே மூன்று ஆனவையாதலால் அனைத்தின்  சிறப்பையுமே நோக்கலாம்.

    முதற்பாடலின் மூலம் தமிழின் சிறப்பையும் அதைப் பயிலும் குழந்தை முருகனையும் புலவர் ஏத்துகின்றார். அங்கயற்கண்ணியம்மையின் மகனாகித் தமிழைப் பயிலும் மகனே! எமது குலத்தோரின் குடியினை ஆளவந்து மகவாய் உதித்து விளையாடல்களைப் புரிந்த இன்பவெள்ளமே!

    துரியாவத்தைக்கு மேலான துரியாதீதாவத்தை, கேவலாவத்தை, சகலாவத்தை, சுத்தாவத்தை ஆகியவை தொடராது பேசாமல் வாளவிருந்தவன் நீ ஆவாய்! நீ வெண்குன்றமெனப்படும் கயிலாயத்தில் பகல்பொழுது இரவுப்பொழுதென விளங்கும் பச்சை நிறங்கொண்ட பார்வதியம்மை இடப்புறமிருக்க, வெண்மைநிறங்கொண்ட சிவபெருமானும் வலப்புறமிருக்க, இவர்களுக்கிடையே சிவந்த செக்கர்வானம்போல விளங்கும் முருகப்பிரானாகிய குழவியே! (இவ்வரிகள் சோமாஸ்கந்த வடிவினை நமக்கு நினைவுபடுத்தி மகிழ்விக்கின்றன).

    முருகப்பெருமானே! அன்று நீ அன்னை, அத்தன் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு பேசும் ‘அம்மா, அப்பா, எனும் இனிய சொற்களை அடியேம் யாம் கேட்க ஆவலாக உள்ளோம்,’ எனும் கருத்திலமைந்த பாடலிதுவாகும். அம்மையே அப்பா எனும் சொற்களே அருமறையாகும் என உலகிற்கு உணர்த்தியவன் முருகப்பெருமான் என உட்பொருளாகக் கொள்ளலாம்.

      இகலுமிணை அங்கயற் கண்ணிமக வாய்த்தமிழி
             யன்றுபயி லஞ்ஞைசெம்மால்!
        எம்மனோர் குடியாள வந்துமக வாய்க்கூத்தி
             யற்றின்ப வெள்ளமே!
        …………………………………………………………………..
      பகலிரவு மாறப்ப சுந்தபச் சைக்குமறு
             பாலின்வெள் ளைக்குநடுவட்
        படர்செக்கர் வானன்ன செம்மையே யன்றவர்ப்
             பகர்மொழிப கர்ந்தவாற்றை
        ……………………………………………………………………………….
         வம்ம! வப்பாவென்னு மருமறைப் பாயிரம
             கத்தலர வாய்மலர்கவே2!

    மொழிபயிலல் பருவத்தின் இரண்டாவது பாடல்:

    ‘குறுகிய மதக்கொள்கையுடையோர் அறம் என எமக்கு உரைத்த பொருந்தாச் சொற்களைக் கேட்டதனாலும், ஈயாதார் இரப்போரைக் கடிந்துரைத்த கொடுஞ்சொற்களைக் கேட்டும், சிறுமை மிகுந்த குடியில் பிறந்த செல்வர் வறிய புலவர்களைச் செருக்கினால் இழித்துப் பேசக்கேட்டதனாலும் நல்ல அமிழ்தம் போலும் தமிழில் கேடுவிளைவிக்கும் வேறுசொற்களைச் சேர்த்துக் கூறுவதனைப் பலகாறும் கேட்டதனாலும் சீழ்வடியுமாறு உண்டான செவிப்புண் அழிந்து மறையுமாறு, கதிரமலையழகனே! அமிழ்தம் பொழிவாயாக! ‘அம்மா! அப்பா! எனும் சொல்லமிழ்தம் பொழிகவே!’ எனத் தாய்தந்தையர் வேண்டும் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.

                ‘குறிய மதத்த ரறமெம்பாற்
                       கூறக் கேட்ட செவிப்புண்ணும்
                  ………………. கதிரமலை
                       யழகே! யமிழ்தம் பொழிகவே!
                 யம்மா! வப்பா! வென்னுஞ்சொல்
                       லமிழ்தம் பொழிக பொழிகவே3!’

    என்பன பாடல்வரிகள்.

    அம்மா அப்பா எனத் தாய்தந்தையரை அழைக்க அன்னை பயிற்றுவிக்கும் பருவம் இது எனவும் காண்கிறோம். கருத்திலும் கற்பனையிலும் வேறுபட்டு விளங்கும் இப்பாடல் தமிழின் பெருமையையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லியல்புகளையும் இணைத்தும் கூறுகிறது.

    மூன்றாவதாகக் காணும் இப்பருவத்தின் கடைசிப்பாடலானது தமிழின் உயர்வைப் போற்றுகிறது. அதனை முருகன் பேசும் மழலையினோடு இணைத்தும் பாடுகின்றதனைக் கண்டு மகிழலாம். தாமரைமலரிலமர்ந்த பிரமன் மறைகளை ஓதவும், கல்லால மரத்தின் நிழலிலமர்ந்த தட்சிணாமூர்த்தியாகிய சிவபிரான் (தெற்குநோக்கியமர்ந்ததனால் இவனைத் தென்னன் என்கிறார்) உண்மைப்பொருளை சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும் ஓதுகின்றான். இவர்கள் இவ்வாறு ஓதிட இவர்களுக்கு முன்பு அதனை உரைத்த பேராசிரியனே! (பிரமனுக்கும், தந்தை சிவபிரானுக்கும் மறைப்பொருளை உணர்த்தியவன் முருகன் எனும் தொன்மத்தை இதில் காணலாம்)

    புலர்காலைப்பொழுதினில் தேவர்கள் (தேவர்கள் கண்ணிமைக்காதவர்களாதலால் இமையோர் என்று குறிப்பிட்டார்) தொழுதிடும் கதிர்காமனே! நீ சொல்லிப்பழக வேண்டிய சொற்களை நாங்கள் உனக்குச் சொல்லிக்கொடுக்கவில்லை; (காலையில் துயிலெழுந்து படித்தால், கற்றால், அது உள்ளத்தில் பசுமரத்தாணி போற்பதியுமென்பது ஆன்றோர் வாக்காகும் அதனையே இங்கு கூறியுள்ளார் புலவனார்) நீ கூறி நாங்கள் கேட்டு இன்புற வேண்டியவற்றைக் கேட்கக் காத்துள்ளோம், ஊமைப்பிள்ளையே, என முருகனை விளிக்கிறார். இதுவும் ஒரு தொன்மத்தின்பாற்பட்டதே! (உப்பூரிகுடிகிழான் மகன் உருத்திரசன்மனெனும் ஊமைப்பிள்ளையாகி முருகன் வந்ததனைக் குறிப்பிடுகிறார்).

    உலகினில் மற்ற உயிர்கள் மெய்ப்புளகம் அடையுமாறு உரலினிடைக் கட்டப்பட்டவனாகிய கண்ணன் ஊதும் குழலிசையும் யாழிசையும் கசந்துபோகவும், உலர்ந்த மரங்களும் உயிருள்ளவை போன்று குழைந்திடவும் நீ மொழி பேசிட வேண்டும். நாவரசரான அப்பர் பெருமானை நீ ‘அப்பா’ என (ஆளுடைப் பிள்ளையாராகி) அழைத்ததெவ்வாறு? தம்மை அணுகிய பேயம்மையாகிய காரைக்காலம்மையாரை உன் தந்தை சிவபிரான் ‘அம்மையே’ என அழைத்தது எங்ஙனம் என விளக்கியருளுவாயாக என வேண்டுகிறார்.

            மலரவ னான்மறை யோதக் கல்லான்
                       மரநிழ லமர்தென்னன்
                 வாய்மையை நால்வர்க் கோத……
             ……………………………………………………………….
             உலகினி லேனைய வுயிர்மெய் யுயிர்ப்ப
                       உரலிடை யாப்புண்டோ
                 னூதுங் குழலிசை யாழிசை கைப்ப
                       உலர்மர முங்குழைய
             வலரன செந்நா வரசைய ழைத்தா
                       யஃதெங் கனமருளே4
    ………………………………………………………………..

    மொழிபயிலக் கற்ற சிறுமுருகன் ‘அம்மா, அப்பா’ எனப் பெற்றோரை அழைப்பதனைப் பலவிதமான உவமைகளால் மூன்று பாடல்களிலும் விளக்கியுள்ள நயம் போற்றத்தக்கது. மொழியில் அமையும் உரையாடல்களுக்குத் தொடர்புடைய கருத்துக்களையும் தொன்மங்களையும் கூறியுள்ளமையும் அழகாக அமைந்து சிந்தையைக் கொள்ளை கொள்கின்றது.
                                                                                                                                                                                                                      (வளரும்)

     பார்வை நூல்கள்:

    1. பிங்கல நிகண்டு
    2, 3, 4. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 6

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 6

    தி. இரா. மீனா 

    அக்கம்மா

    அக்கம்மா ஏலேஸ்வரத்தில் [ஏலேரி] பிறந்து கல்யாணில் ஐக்கியமானவர். இராமலிங்கேஸ்வர லிங்கா இவரது அடையாளம். வசன எண்ணிகையைப் பொறுத்த வரையில் அக்கமகாதேவி, நீலம்மா ஆகிய இருவருக்கும் அடுத்தபடியாக அதிக அளவு வசனங்களைப் படைத்தவர். நோன்பு முறைகள், முன்னோர் மரபு ஆகியவற்றை முதன்மையாக வைத்தே இவரது வசனங்கள் அமைகின்றன. மக்களின் பழக்க வழக்கம், வாழ்க்கை நம்பிக்கைகள் ஆகியவையும் வசனங்களினூடே வெளிப்படுகின்றன. அது அக்காலச் சமுதாய நிலையை அறிய உதவுகின்றது.

    1. “குருவாயிருப்பனும் ஒழுக்கமற்றவரை பின்பற்ற முடியாது
    இலிங்கமாயிருப்பினும் ஒழுக்கத்திற்கு மாறானால் பின்பற்ற
    முடியாது
    ஜங்கமனாயினும் ஆசாரமில்லையெனில் போற்ற முடியாது
    ஒழுக்கமே சாரம்
    விரதமே உயிர்
    செயலே அறிவு
    அறிவே பொருள்
    ஆச்சாரமே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்.”

    2. “பக்தனுக்கு ஆசையுண்டா?
    சிரஞ்சீவிக்கு இறப்புண்டா?
    அடியவர்க்குப் பொய்  உண்டா?
    கர்த்தன் சேவகனாகும்போது செயல் மறுத்தல் ஒழுக்கமாகுமா?
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் ஆணை.”

    3. “ஐயமுள்ள வரையில் தவமிருப்பவனில்லை
    வாளுக்கு அஞ்சும் வரையில் வீரனில்லை
    மூவகை உடலுள்ளவரையில் இலிங்க அங்கமுடையவனில்லை
    பழிக்கு உயிர் விடவில்லையெனில் ஒழுக்கமுடையோனில்லை
    இத்தகையவனுக்கு அச்சமெதுவுமில்லை
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்.”

    அஜகண்ண தந்தே

    பெண் வசனக்காரான முக்தாயக்காவின் சகோதரன் அஜகண்ண தந்தே. லக்குண்டியிலுள்ள சோமேஸ்வரர் இவனது அடையாளம்.   இஷ்ட இலிங்கத்தை வாயில்  வைத்துக் கொண்டு சிவனை வழிபட்டவன். உணர்வுகள் மூலமாக இறைவனை வழிபடுவதென்பது இவனது பாவனை. ஐக்கியஸ்தலத்தின் பிரதிநிதியென்று வசனகாரர்கள் இவனைக் குறிப்பிடுகின்றனர். குருவின் பண்பு, சரணரின் தனித்துவம் ஆகியவற்றை இவன் வசனங்கள் வெளிப்படுத்துகின்றன.

     “சூரியனைக் கண்ட இருள் போலானது என் குருவின் சொற்கள்
    காற்றின் கரத்திலுள்ள தீபம் போலானது என் குருவின் சொற்கள்
    நெருப்பின்முகமான கற்பூரம் போலானது என்குருவின் சொற்கள்
    மஹாகன சௌராஸ்டிரசோமேஸ்வரன் என் கரத்திற்கு
    வந்ததால் தீமைகள் என்னை விட்டகன்றன.”

     அக்கநாகம்மா:

    நாகம்மா, அக்கநாகம்மா, நாகலாம்பிகே என்ற பெயர்களில் அழைக்கப்படும் இவர் பசவேசரின் சகோதரி. பாகேவாடியிலுள்ள இங்களேஸ்வராவில் பிறந்தவர். கல்யாண் நகரின் மகாமனையிலும், அனுபவ மண்டபத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர்.  ’பசவண்ண பிரிய சென்ன சங்கையா ’ இவரது அடையாளம். கல்யாண் நகரில் புரட்சி வெடிக்கும் போது சரணர் பிரிவிற்குத்  தலைமையேற்று உளுவி என்னுமிடத்திற்குச் சென்றவர். பிஜ்ஜள  சிப்பாய்களுடன் போராடி வசன சாகித்யத்தைக் காப்பாற்றியவர்.

    ’மனத்தின் தலைவன் மகாதேவனின் மனதைக் கண்டேனென
    ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொள்வேன்
    இதனால் மனமே கலங்காதே உடலே நீ பதறாதே
    உண்மையை மறவாதிருத்தல் வேண்டும்
    மலை போன்ற குற்றங்களையும்
    பசவண்ணப் பிரிய செங்கைய்யன்
    விரலொன்றால் நீக்குவான்.”

    அல்லமாபிரபு

    அல்லமாபிரபு கர்நாடக மாநிலம். சிமோகா மாவட்டம், பனவாசி அருகேயுள்ள பெல்லகாவி கிராமத்தில் சுஜ்னனி—நிரசங்கரா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். சிவபெருமானருளால் பிறந்த மகனுக்கு பெற்றோரிட்ட பெயர் பிரபுவாகும். நடன ஆசிரியரான தந்தையின் கலையுணர்வு அழகும் அறிவும் நிறைந்தவராக விளங்கிய பிரபு வையும் ஆட்கொண்டது. அதனால் கோயிலில் முரசு இசைக்கும் பணியை மேற்கொண்டார். கமலாத்தே என்ற பெண்ணின் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கவே பிறந்தவர்கள் என்பது போல் இணைபிரியாமல் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். திடீரென கமலாத்தே கடும்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனாள். அவள் இல்லாத வாழ்வு அல்லமா பிரபுவுக்கு வெறுமையானது. தன்னை மறந்து பித்துப்பிடித்தவராக காடுமேடுகளில் அலைந்தார். ஒரு நாள் காட்டில் உட்கார்ந்திருந்த போது மேடு போன்ற மண்குவியலைச் சாதாரணமாக சுரண்டியபோது புதுமையான ஓர் உணர்வு ஏற்பட்டது. அந்த இடத்தை மேலும் தோண்டும் போது மூடிய கதவு போன்ற அமைப்பு தெரிந்தது. அதை வேகத்தோடு உதைக்க கதவு திறந்தது. உள்ளே ஒரு யோகி தன் கையில் இருக்கும் இலிங்கத்தை பார்த்தபடி இருந்தார். அல்லமாபிரபு அவரைக் கண்டு வியந்து நின்றபோது அவர் கையில் உள்ள இலிங்கத்தை பிரபுவிடம் தந்துவிட்டுச் சாய்ந்தார். அந்தக் கணத்தில் அல்ல மாபிரபுவின் எண்ணமும், செயல்பாடுகளும் முழுவதும் மாறிவிட்டன. ஞானம் பெற்றவர் போலானார். அதையடுத்து இறையருளால் பல இடங்களுக்கும் சென்றார். அறிவின் சிறப்பும், கருத்துறுதியும், மெய்ஞ் ஞானமும் அவரை மிகச்சிறந்த குருவாக்கியது. வீரசைவத்தின் கொள்கைகளை மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பசவேசரால் உருவாக்கப்பட்ட அனுபவ  மண்டபத்தின் குருவாக அல்லமாபிரபு விளங்கினார். அக்கமாதேவியை எல்லோரின் முன்பாகவும் பல விதமான கேள்விகளைக்கேட்டு அவள் அறிவுக் கூர்மையை எல்லோருக்கும் வெளிப்படுத்தியவர். ஸ்ரீசைலத்தின் கதளிவனம் சென்று இறைவனுடன் பிரபு கலந்ததாக அவர் வரலாறு  அமைகிறது. குகேஸ்வரன் என்பது சிவனின் யோகப் பெருமையை விளக்கும் பெயராக அமைவதால் ’குகேஸ்வரா’ என்பது அவரது வசனங்களின் முத்திரையாகிறது. இறைவனோடு இணைவதும், உணர்வதுமான பாவனையிலேயே அவருடைய வசனங்கள் அமைகின்றன.

    1. “மலைகள் குளிரில் நடுங்குமானால்
    எதை வைத்து அவைகளைப் போர்த்த முடியும்?
    விண்வெளியே நிர்வாணமானால்
    எதை  அதற்கு ஆடையாக்க முடியும்?
    கடவுளின் மனிதர்கள்  உலகப்பற்று உடையவர்களானால்
    நான்  உருவகத்தை எங்கே தேடுவது?
    ஓ  குகேஸ்வரா”

    2.“இந்த உடலில்
    முழு ஆலயம் உள்ளபோது
    வேறு எங்கோஅதைத் தேட
    என்ன தேவை?
    யாரும் இரண்டைக் கேட்பதில்லை
    ஓ குகேஸ்வரா..
    நீ கல்லென்றால் நான் என்ன?

    3.“ஓடும் ஆறுகள் எல்லாம் கால்கள்
    எரியும் நெருப்பு எல்லாம் வாய்கள்
    வீசும் காற்று எல்லாம் கைகள்
    ஓ  குகேஸ்வரா
    உன் மனிதர்களுக்கு
    ஒவ்வொரு அவயமும் அடையாளம்தான்”.

    4.“இங்கே பார் கால்கள் இரு சக்கர வண்டி
    உடல் ஒரு பாரவண்டி
    ஐவர் அதை இயக்குகின்றனர்
    ஒருவரைப் போல் ஒருவரில்லை
    முழுச்சிந்தனையோடு இயக்காவிட்டால்
    அச்சுமுறிந்துவிடும் குகேஸ்வரா!”

    5.“ என்ன விந்தை
    தேனி வந்தபோது மணம் தப்பியோடியதைப் பார்த்தேன்
    மனம் வந்தவுடன் அறிவு தப்பியோடியதைப் பார்த்தேன்
    கடவுள் வந்தபோது கோவில் ஓடுவதைப் பார்த்தேன்
    ஓ..குகேஸ்வரா! “

    6. “குயில் எங்கே  மாமரம் எங்கே?
    எப்போது அவர்கள் உறவினரானார்கள்?
    மலை நெல்லி எங்கே கடலின்  உப்பெங்கே?
    எப்போது அவர்கள் உறவினரானார்கள்?
    எப்போது நான்
    குகேஸ்வரனின் உறவினனானேன் ?”

    7. “நான் ஒன்றென நினைத்தால்
    அது இரண்டாகத் தெரிகிறது
    நான் இரண்டென நினைத்தால்
    அது ஒன்றாகத் தெரிகிறது
    இது என்ன மாயை?
    ஒன்று மற்றும் இரண்டின் பொருளென்ன?
    பிரிக்க முடியாத இணைவுக்கு
    அருளான உலகம் இன்றியமையாதது.
    ஓ.. குகேஸ்வரா! “

    8. “தீயாக மழை பெய்யுமானால்
    நீ தண்ணீராக இருக்கவேண்டும்
    பெருமழைப் பிரளயம் என்றால்
    நீ காற்றாக இருக்கவேண்டும்
    மிதமிஞ்சிய வெள்ளமெனில்
    நீ வானமாக இருக்கவேண்டும்
    உலகங்களின்’ ஊழி’வெள்ளமெனில்
    நீ ’உன்னை’ விட்டு கடவுளாக வேண்டும்
    ஓ..குகேஸ்வரா!”

    9. “எத்தனை முயன்றும்  எத்தனை தேடினாலும்
    அவர்களால்  கண்ணாடியில்
    மனப்படிமத்தைப் பார்க்கமுடியாது.
    புருவங்களின் இடையே
    வட்டத்தில் அது சுடராகிறது
    யாருக்குத் தெரியும்
    இதுதான் கடவுளென்று?
    ஓ..குகேஸ்வரா!”

    10. “அறிந்தோம் அறிந்தோமென்பீர் அறிந்தவிதம் சொல்வீரோ?
    அறிந்தவர்கள் அறிந்தோம் என்பாரோ?
    அறிய முடியாத மேன்மையை அறிந்தவர்
    அறியாதவர் போலிருப்பர் குகேஸ்வரா!”

    11. ’அனைத்தும் கண்டு தன்னைக் காணாதவன் குருடன்
    அனைத்தும் கேட்டு தன் குரல் கேளாதவன் செவிடன்
    அனைத்தும் பேசி தன்னைப் பேசாதவன் ஊமை
    உண்மையோடு தன்னைத் தான் காணவேண்டும்
    உண்மையோடு தன்னுள்ளே தான் கேட்க வேண்டும்
    உண்மையோடு தன்னுள்ளே தான் பேசவேண்டும்
    இதுவே தன் நிலையாம் ,இருப்பிடமாம் உருவாம்
    பாராய் குகேஸ்வரா!”

    12. “மாயையின் தலையைக் களையாத வரையில்
    உடலின் கவலையை வென்றென்ன?
    ஞானத்தின் நிலையை அறியாத வரையில்
    மாயையின் தலையை வெட்டியென்ன?
    தான் தானாகாத வரையில்
    ஞானத்தின் நிலையை அறிந்தென்ன?
    தானே தானேயான அடியானின் நிலைக்கு
    எந்தக் கட்டுப்பாடுமில்லை குகேஸ்வரா!”

    13. “உடலுள் கோயிலிருக்க
    வேறொரு கோயிலெதற்கு?
    இரண்டெனும் பேச்சுக்கிடமில்லை
    குகேஸ்வரா,நீங்கள் கல்லெனின்
    என் நிலையென்ன?”

    14. “நான் தெய்வமன்றி நீ தெய்வமா?
    நீ தெய்வமெனில் எனையேன் புரக்கவில்லை?
    ஒரு மிடறு நீர் கொடுப்பேன் அன்பாய்
    பசித்தால் ஒரு கவளம் படையலிடுவேன்,
    தெய்வம் நான் காணாய் குகேஸ்வரா!”

    15.  “பாத்திரத்திலுள்ள வெண்ணெயைச் சூடுபடுத்த
    கரைந்தது பாத்திரம் மிஞ்சியது வெண்ணெய்
    வண்டிருந்தது மணமில்லை; மணமிருந்தது வண்டில்லை
    இருந்தான் அவன் இல்லை அவனுருவம்
    இருந்தான் குகையீசன் அங்கே இலிங்கமில்லை.”

    பெரிய ஞானி என்றே தன் சமகாலத்தவர்களால் போற்றப்படும் அவருக்கு அல்லமா, அல்லையா, பிரபுதேவர் என்று பல பெயர்கள் உண்டு. கன்னட பக்தி உலகம் பசவேசரை அண்ணனாகவும் [பசவண்ணா], அக்கமகாதேவியை அக்காவாகவும் [அக்கா என்றே சொல்லுதல்] அல்லமாபிரபுவை [பிரபு தேவரு] பிரபுவாகவும் காண்கிறது. இலிங்காயத்துவத்தின் மும்மூர்த்திகளாக அல்லமாபிரபு, பசவேசர், அக்கமாதேவி ஆகியோர் போற்றப்படுகின்றனர்.

    (தொடரும்)

    Share
  • சேக்கிழார் பா நயம் – 63 (பெருமையால்)

    சேக்கிழார் பா நயம் – 63 (பெருமையால்)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    திருவாரூர்த் திருக்கோயில் முன் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்கள் கூடி இருந்தனர். அவர்களைக் கண்ட சுந்தரர், ‘’இச்சிவனடியார்களுடன் சேரும் திருவருள் எப்போது கிட்டுமோ என்றெண்ணி திருக்கோயில் வாயிலை அடைந்தார். அவர் முன்னே எதிரே காட்சியளித்த சிவபிரானின்  திருவடிகளைக் கண்டமையால் பெற்ற ஞானத்தால், திருவடிப் புகழ்ச்சியை நான்கு திருப்பாடல்களில் பாடி மகிழ்ந்தார். அப்போது சிவபிரான் அடியார்களின் தன்மையைச் சுந்தரருக்கு  உணர்த்தியருளினார்.

    அடியார்களின் எழுவகைச் சிறப்புக்களை ஆண்டவனே உணர்த்திய அழகை இத்திருப்பாடல் வழங்குகிறது. இப்பாடலில்,

    1. “பெருமையினாலே தமக்குத்  தாமே ஒப்பாவார்கள்;
    2. பேணுதல் தன்மையினாலே எம்மைத் தமக்கே உரிமையாகப் பெற்றார்கள்;
    3. எம்மோடு  ஒன்றித்து நின்ற நிலையினாலே உலகத்தை வெல்வார்;
    4. அதனால் மேலே  வரக்கடவன  வாகிய ஊனங்கள் ஒன்றுமில்லாதவர்;
    5. பிறர் எவரும் நிற்றற்கு   அரிய நிலையிலே நின்றவர்கள்;
    6. அன்பு நிறைதலினாலே இன்பத்தையே நிறையத் துய்ப்பவர்கள்;
    7. இம்மை மறுமைகளைக் கடந்த நிலை பெற்றவர்கள்

    இத்தகையினராகிய இந்த அடியவர்களை நீ சேர்வாயாக“ என்று,இறைவன்  கூறியருளுகின்றார்.

    விளக்கம்: பிறர் யாரும் செய்தற்கு அரிய செயல்களைச் செய்தவர்கள் என்பதே இவர்களின் பெருமையாகும். இதனைத் திருவள்ளுவர், ‘’செயற்கரிய செய்வார் பெரியர்‘’ என்று போற்றுகின்றார். இப்பெருமை எய்தற்கு அரியது. இதனை எய்திய அடியார்களைப் பற்றித் திருக்களிற்றுப் படியார் என்ற சாத்திர நூல்,

    ‘’செய்தற்   கரிய  செயல்பலவும்   செய்துசிலர்
    எய்தற்    கரியதனை   எய்தினர்கள்’’

    என்று கூறுகின்றது. பசித்து வருந்திய எல்லா உயிர்களுக்கும், தாம் வருந்தாமல் பெரிய அளவில் உணவு வழங்கி உதவுதலே பெருமையாகும்.

    பஞ்சம் வந்து உலகமெல்லாம் வருந்துங் காலத்தும் தாம் அஞ்சாது பெருஞ் சோற்று மலை ஈந்து உயிர்களைக் காத்ததும், “பிறந்தார் பெறும்பயன் இரண்டில் அடியார்க் கமுதுசெய்வித்தல் ஒன்றாமாயின் நீவா“ எனச் சூளுரைத்து ஒரு பாட்டுப்பாடிய அளவில்,  எலும்பு உயிரும் வடிவமும் பெற்றெழச் செய்ததும், இன்னோரன்ன பிறவும் இவர்களது பெருமையாம். இவற்றை முன்னர்த் திருக்கூட்டச்சிறப்பிலே,

    “பூதமைந்தும்  நிலையில்   கலங்கினும்,
    மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்“

    என்பது முதலாக வடித்தெடுத்து வகுத்தருளினமை பின்னர் ஒவ்வொரு  வரலாற்றிலும்  காண்க.

    தம்மை ஒப்பார் – தம்மையே தமக்கு ஒப்பாகப் பெற்றார். பிறர் இவருக்கு  இணையாகார். “தனக்கு உவமை யில்லாதான்“ என்பது எமது தன்மை; “எம்மை அடைந்த அடியார்களாகிய இவர்களுக்கும் அதுவே தன்மை“ என்று இறைவன் அறிவித்தவடியாம். இப்பெருமைகளை இப்புராணத்திலே ஒவ்வொரு  நாயன்மார் சரிதத்திலும் தனித்தனி விரிவாகக் கண்டுணர்ந்துகொள்க.

    பேணலால் எம்மைப் பெற்றார் – பேணுதல் – குழவியைத் தாய் பேணுமாறு போற்றுதல்; என்றும் இடைவிடாது சிந்தித்து வாழ்தல். “வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண்“ என்ற காரைக்காலம்மையார் புராணம் காண்க. பசிக்குமே  என்றெண்ணி இறைவனுக்கே உணவூட்டியவர் கண்ணப்பர். எம்மைப் பெறுதலாவது – எம்மைத் தமக்கே உரிய உரிமைப் பொருளாகப் பெறுதல். நாம் அவர்களது அன்புக்குள்ளாவோம்; எம்மை அடைய வேண்டுபவர்கள் அவர்களை அடைந்து, அவர்கள் வழிப்படுத்த எம்மை வழிபட்டு, அவர்கள்தர எம்மை அடையக்கடவர் என்றபடி. “படமாடக் கோயிற் பரமர் – நடமாடக் கோயில் நம்பர்“ என்ற திருமூலர் திருமந்திரங்காண்க. அடியார்களைப் பேணலால் அடியடைந்த சிறுத்தொண்டர், அப்பூதியார், குலச்சிறையார் முதலிய நாயன்மார் சரிதங்கள் காண்க. பேணுதல் – உவப்பன செய்து வழிபடுதல். ‘பெரியாரைப் பேணி ‘ என்ற திருக்குறள்  உரையில் காண்க!

    ஒருமையால் உலகை வெல்வார் – ஒருமை உணர்ச்சியினால் இறைவனோடு ஒற்றித்திருத்தல். “ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல்கணத்தார்“ என்பது தேவாரம். இதனையே “மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதம்“ என்றார் தாயுமானார். இறைவனோடு ஒன்றிய இடத்து உலகம் அவ்வுயிரைப் பற்றாது அருளுள் அடங்கி நிற்கும்; ஆதலின், உலகைவெல்வார் என்றார். உலக பாசக்கோடுகளின் பற்றிலிருந்து விடுபட இது ஒன்றே வழி என்று ஒருமையால் என இரட்டுற மொழிந்துள்ளார்.

    ஊனம் மேல் ஒன்றுமில்லார் – ஊனம் – குறித்ததொன் றாகமாட்டாக் குறைவு. யாதுங்குறைவிலார் என்றதும் அது. ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்பது திருக்குறள் ஆணை. உடம்பே ஊனம் என்றெண்ணும்போது, ஏனை ஊனங்கள் உடம்பில்  ஒடுங்குவன. உடம்பெடுத்தலே – பிறவியே – ஊனங்கட்கெல்லாம் காரணமும் தாயகமுமாவது. உயிருக்கு வரும் ஊனமாவது உடம்பெடுக்கும் பிறவி. இவர்கள் பேணலால் எம்மைப் பெற்றாராதலின் பிறவி வாராமற் செய்துகொண்டார். ஆதலின் மேல் ஊனம் ஒன்றுமில்லாராயினர்.

    அருமையாம் நிலை – பிறரால் அடைதற்கரிய நிலை.

    அன்பினால் இன்பம் ஆழ்வார் – அன்பு காரணமாக இன்பம் உளதாம். “இன்பமே யென்னுடை யன்பே“,  “இறவாத வின்ப அன்பு வேண்டி“ முதலிய திருவாக்குக்களால்  புலப்படும்.

    இருமையும் கடந்து நின்றார் – இருமை – இம்மை மறுமை என்பன. அவை இம்மை என்னும் இவ்வுலகப்பிறப்பு நிலையும், மறுமை என்னும் சுவர்க்க நரகப்பிறப்பு நிலையும் ஆம். இறைவனைப் பற்றிநின்ற நிலையினாலே இவ்வுலக நிலையையும், சுவர்க்காதி போகங்களைப் பொருளல்ல வென்றொதுக்கியதால் மறுமையும் கடந்தவர். “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு“, “போகம் வேண்டிலேன்பு ரந்த ராதி யின்பமும்“ “சுவர்க்கங்கள் பொருளளவே“, “உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன்  பேர்வேண்டேன்“. என்ற வாக்குகள்  இதனை உணர்த்தும்.

    “நின், திருவடி பிடித்து வெருவரல் விட்டு
    மக்களும்  மனைவியும்  ஒக்கலுந் திருவும்
    பொருளென நினையா துஉ ன்னரு ளினைநினைந்து
    இந்திரச் செல்வமும்  எட்டுச் சித்தியும்
    வந்துழி வந்துழி மறுத்தனர்  ஒதுக்கிச்
    சின்னச் சீரை துன்னல்  கோவணம்
    அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
    சிதவ லோடு ஒன்று  உதவுழி எடுத்தாங்கு
    இடுவோர்  உளரெனின்  நிலையில் நின் றயின்று
    படுதரைப் பாயலில்  பள்ளி மேவி ஓவாத்
    தகவெனும்  அரிவையைத் தழீஇ மகவெனப்
    பல்லுயிர்  அனைத்தையும்  ஒக்கப் பார்க்கும் நின்
    தெய்வக் கடவுள்   தொண்டர்“

    என்று திருவிடை மருதூர்  மும்மணிக் கோவை  கூறுகிறது.bஇத்தகைய திருவாக்குகளிற் கண்ட இலக்கணங்களும், அவற்றிற் கிலக்கியமாய் விளங்கும் சிறுத்தொண்டர், இயற்பகையார் முதலிய நாயன்மார் சரிதங்களும் காண்க.

    இருமை – “இருமை வகை தெரிந்து“ என்ற குறளிற் பரிமேலழகர் இருமை   யென்பதற்குப் பிறப்பு வீடென்று உரைகண்டார். வீட்டைக் கடந்த நிலை வேறின்மையாலும், இங்கு இருமையுங்கடந்து என்றமையாலும் ஈண்டு மேலே கண்டவாறுரைக்கப் பெற்றது. இருமை – எண் குறித்ததாகக் கொண்டு பிறப்பும் இறப்புங் கடந்த  பேராவியற்கை பெற்றார்  என்பதை அறிக.

    “பெத்தத்தும்   தன்பணி யில்லை பிறத்தலான்
    முத்தத்தும்  தன்பணி யில்லை முறைமையால்
    அத்தற்கு  இரண்டும்  அருளால்  அளித்தலால்
    பத்திப் பட்டோர்க்குப் பணியொன்று மில்லையே“

    என்ற திருமூலர் திருமந்திரக் கருத்தினைக்கொண்டு இவர் நிலையினை  இவ்வாறு உரைத்தலும் ஒருவகையாற் பொருந்துவதாம்.

    “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“ என்றதும் காண்க. இவ்வாறன்றி இதற்கு இருவினைகளையும், இன்ப துன்பங்களையும், பிறப்பிறப்புக் களையும், ஒழித்தவர் என்று கூருவாருமுண்டு.

    இவரை – அண்மைச் சுட்டு. இதோ இங்கு முன்னர்த் தேவாசிரியனிற் கூடியிருக்கும் இவர் எனக் காட்டிக் குறித்தபடியாம்.

    அடைதல் – அடிமையாகச் சேர்ந்து அவர்களோடணைதல். ஆகவே அடியார்களை  ஆண்டவனோடு ஒருங்கு வைத்துப் போற்றும்  சேக்கிழாரின் வாக்குச் சிறப்பை எண்ணி எண்ணி, மகிழ்கிறோம்! இனி மீண்டும் பாடலைப்  படித்துப் பயில்வோம் .

    பெருமையால்   தம்மை  ஒப்பார் ; பேணலால்  எம்மைப்  பெற்றார்;
    ஒருமையால்   உலகை  வெல்வார்;   ஊனம்  மேல் ஒன்றும்  இல்லார்;
    அருமை ஆம்  நிலையில்  நின்றார்; அன்பினால்   இன்பம் ஆர்வார்;
    சிறுமையும்   கடந்து  நின்றார் , இவரை நீ  அடைவாய்!’’ என்றார்!

    இப்பாடலால்,  இறைவன்   நமக்கும்  அடியாரை அடையும் தேவையை  வலியுறுத்துகிறார்!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 100

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 100

    நாங்குநேரி வாசஸ்ரீ

    100. பண்புடைமை

    குறள் 991

    எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு

    யாராயிருந்தாலும் அவுக கூட எளிமையாப் பழகுனோம்னா அதுவே பண்புடைமைங்குத நல்ல ஒழுக்குத பெறுததுக்கான சிறந்த வழியா அமையும்.

    குறள் 992

    அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு

    நேசமானவரா இருக்கது ஒசந்த குடியில பொறந்த தன்ம அமைஞ்சிருக்கது இந்த ரெண்டும் பண்புடையவரா வாழுத நல்ல வழியாவும்.

    குறள் 993

    உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
    பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

    பாக்குத உடல் உறுப்புக்கள் ஒண்ணுபோல இருக்கதனால ஒத்துப்போகுதது ஆவாது. நல்ல பண்பால மத்தவுகளோட ஒத்துப்போவுததே ஒத்துப்போவுதது ஆவும்.

    குறள் 994

    நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
    பண்புள ராட்டும் உலகு

    நியாயத்துக்கு கேடு இல்லாம நல்ல காரியங்களச் செய்து மத்தவுகளுக்கு ஒபயோகமா வாழுத பெருமக்களோட நல்ல கொணத்த ஒலகம் பாராட்டும்.

    குறள் 995

    நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு

    விளையாட்டுக்குக்கூட ஒருத்தங்கள எளக்காரமா பேசினோம்னா கேடு உண்டாவும். புத்தியுள்ள பெருமக்க பகையாளிக்கிட்ட கூட கொணங்கெட்டு நடந்துக்கிட மாட்டாக.

    குறள் 996

    பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
    மண்புக்கு மாய்வது மன்

    கொணமுள்ளவுக இருக்கதாலதான் ஒலகம் நெலைச்சி இருக்கு. அவுக இல்லாமப் போனாகன்னா மனுச வாழ்க்க மண்ணுக்குள்ள பொதைஞ்சு அழிஞ்சு போவும்.

    குறள் 997

    அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண் பில்லா தவர்

    அரம் கணக்கா கூர்மையான புத்தியுள்ளவுகளா இருந்தாலும் மனுசத்தன்ம இல்லாதவுக ஓரரிவு இருக்க மரத்துக்குச் சமம் தான். ‘

    குறள் 998

    நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
    பண்பாற்றார் ஆதல் கடை

    சேக்காளியா இருக்க ஏலாம தீம செய்யுத கொணம் இருக்கவங்ககிட்ட கூட நல்லவுகளா நடந்துக்கிடாம இருக்கது தாழ்ச்சிதான்.

    குறள் 999

    நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
    பகலும்பாற் பட்டன் றிருள்

    மத்தவுகளோட கலந்து பழகி சந்தோசமா இருக்க ஏலாதவுகளுக்கு வெளிச்சமான பகலும் கருக்கல் கணக்கா இருட்டாத்தான் தோணும்.

    குறள் 1000

    பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யால்திரிந் தற்று

    கொணங்கெட்டவங்கிட்ட இருக்க சொத்து சுத்தமில்லாத ஏனத்துல ஊத்திவச்ச பால் திரிஞ்சிபோவுதது கணக்கா அழிஞ்சு போவும்.

    Share
  • இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு

    இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எங்கள் நண்பர் ஒருவர் லக்னோவில் பிறந்து வளர்ந்தவர்.  ஒரு முஸ்லீம்.  அங்கேயே படிப்பை முடித்துக்கொண்டு 1958-இல் வேலைபார்க்க அமெரிக்காவுக்கு வந்தார்.  குடும்பம், குழந்தைகள் என்று அமெரிக்காவிலேயே தங்கிவிட்டாலும் இந்தியாவுக்கு சில வருடங்களுக்கு ஒரு முறையாவது போவார். பத்து வருடங்களுக்குச் செல்லுபடியாகும் இந்திய விசாவை மூன்று முறை பெற்று பல முறை தாய்நாட்டுக்குச் சென்றிருக்கிறார். முப்பது ஆண்டுகள் இந்தியாவுக்குப் போய்வந்து கொண்டிருந்தவர் சென்ற மாதம் இந்தியாவுக்குச் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்தபோது இந்திய அரசு அவருக்கு விசா கொடுக்க மறுத்திருக்கிறது. புதிய பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்தபின் அவர் விசாவுக்கு விண்ணப்பிப்பது இது முதல் தடவை. தூதர் அலுவலகம் கேட்ட ஒரே கேள்வி எந்த ஆண்டு பிறந்தீர்கள் என்பதே. அவர் சுதந்திரம் வருவதற்கு முன்னரே – நாடு பிளவுபடுவதற்கு முன்னரே- லக்னோவில் பிறந்து இந்தியாவில் இருக்க முடிவு செய்தவர். என்ன கொடுமை! அவர் இந்தியக் குடிமகனாக இருந்தவர், இப்போது அமெரிக்கக் குடிமகன். பிறந்த நாட்டின் பந்தத்தை விட விரும்பவில்லை. அவ்வப்போது இந்தியாவுக்கு வர விரும்புகிறார். அங்கிருக்கும் உறவினர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார்.  1947-இல் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியத் தாய்நாட்டில் இருக்க முடிவுசெய்த காரணத்தால் இப்போது இந்தியாவுக்குப் போக முடியவில்லை. என்ன அநியாயம்.

    1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இன்னும் சில மதத்தவர்களும் வாழ்ந்துவந்தனர்.  பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு முஸ்லிம்கள் சிறுபான்மையராகிவிடலாம் என்றும் அவர்களுக்கு பெரும்பான்மையராக இருந்த இந்துக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போகலாம் என்றும் கருதிய ஜின்னா முஸ்லீம் லீக் கட்சியை ஆரம்பித்து முஸ்லீம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று பிரிட்டிஷாரிடம் வேண்டுகோள் வைத்தார்.

    இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இருக்கும் முஸ்லீம்களுக்கென்று தனி நாடு எப்படி அமைப்பது என்ற கேள்வி எழுந்தபோது எந்தப் பகுதியில் அவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்தப் பகுதி அவர்களுக்கான நாடாக பிரகடனப்படுத்தப்படும் என்று முடிவாகியது. இப்போதுள்ள பாகிஸ்தான் பகுதியிலும் பங்களாதேஷ் பகுதியிலும் முஸ்லீம்கள் அதிகமாக இருந்ததால் அந்தப் பகுதிகள் தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தாலும் அவை இரண்டும் முஸ்லீம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாடாக ஆனது.  மற்றப் பகுதிகள் இந்தியா ஆனது.  பாகிஸ்தான் பகுதியிலுள்ள இந்துக்களுக்கு விரும்பினால் இந்தியாவுக்கு வந்து குடியேறவும், இந்தியப் பகுதியிலுள்ள முஸ்லீம்களுக்கு விரும்பினால் பாகிஸ்தானுக்குச் சென்று குடியேறவும் அனுமதி வழங்கப்பட்டது.

    முஸ்லீம் லீக் தலைவர்கள் பாகிஸ்தானை முஸ்லீம் நாடு என்று பிரகடனப்படுத்திக்கொண்டனர்.  ஆனால் இந்தியத் தலைவர்களோ இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக விளங்கும் என்றும் அங்கு எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். இந்தியாவைத் தங்கள் தாய்நாடாக வரித்துக்கொண்ட முஸ்லீம்கள் இந்தியாவிலேயே தங்க முடிவுசெய்தனர்.  இந்தியாவில் அவர்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் எந்தவிதப் பங்கமும் வராது என்று இந்திய அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி இந்தியாவிலேயே வாழ்ந்துவந்தனர்.  அவர்கள் இந்தியப் பிரஜைகளாக, இந்தியாவுக்கு விசுவாசமாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள் என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வாசகங்களே சாட்சி.

    ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை 1941-இல் உருவாக்கியவர் ஆபித் ஹஸன் சப்ராணி;

    இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை உருவாக்கியவர் ஹஸ்ரத் மொஹானி;

    பாரத் மாதா கி ஜெய் என்னும் முழக்கத்தை உருவாக்கியவர் அஸி முல்லாகான்;

    சாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்ற பாட்டைத் தந்தவர் முக்கம்மது இக்பால்.

    இவர்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள்.  இந்த வரலாற்றை நமக்கு நினைவுபடுத்துபவர் மும்மது ரஃபி, ‘காகிதம்’ என்னும் இதழில்.

    உண்மை அப்படியிருக்க இப்போது பி.ஜே.பி. அரசு இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள் என்று கூறி அவர்களை இந்தியாவை விட்டு வெளியே அனுப்ப முயற்சி செய்கிறது. அவர்கள் இந்தியத் துணைக்கண்டம் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்று இரண்டு நாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோதே பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்திருக்க வேண்டும் என்று பூடகமாகக் கூறுகிறது.

    பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது ஒன்றாகயிருந்த வங்காளத்திலிருந்து பலரை அரசு அஸ்ஸாமில் குடியேற்றியது. அஸ்ஸாமில் இருந்த நிலங்களில் விவசாயம் செய்து உணவுப் பொருள்களைக் கல்கத்தாவிற்கு அனுப்புவதற்காக இந்த ஏற்பாடு.  இப்படிக் குடியேறியவர்களில் முஸ்லீம்களும் உண்டு. இவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டதற்குப் பத்திரங்கள் எதுவும் இல்லை. அதனால் இவர்கள் கள்ளத்தனமாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்று சொல்லி அவர்களுடைய குடியுரிமையைப் பறித்துச் சிறையில் அடைப்பதற்காக பி.ஜே.பி. அரசு கௌஹாத்திக்கு அருகில் சிறைச்சாலை கட்டிக்கொண்டிருக்கிறது.

    தேசிய மக்கள் பதிவேட்டில் புதிதாகத் தந்தையின் பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி ஆகியவற்றைக் கேட்கிறார்கள். இபோது உள்ளவர்களின் பெற்றோர்கள் சுதந்திரத்திற்கு முன் எங்கு பிறந்தார்கள் என்று பார்ப்பதற்குத்தானே இந்தக் கேள்வி?  இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்து பிரிவினையின்போது இந்தியாவிலேயே தங்க முடிவுசெய்து அதன் பிறகு இந்தியக் குடிமக்களாக வாழ்ந்துவருபவர்களை இந்தியாவை விட்டுப் போகச் சொல்வது எந்த நியாயத்தில் சேர்த்தி?

    Share
  • தேவகோட்டைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

    தேவகோட்டைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

    லெ. சொக்கலிங்கம்

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா, உற்சாகமாக நடைபெற்றது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக, நன்மையுடன் வாழ வேண்டி நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகம் நிறைய மகிழ்ச்சி, மனத்தில் உற்சாக வெள்ளம், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட்டம் எனக் கைகளில் கரும்புகளை ஏந்தி, சமத்துவப் பொங்கலை மாணவ, மாணவிகள் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் .

    பொங்கல் பானை, இனிப்பு, கரும்பு, வண்ண வண்ணக் கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள் எனப் பாரம்பரியம் மாறாமல் பள்ளித் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.

    சமத்துவப் பொங்கல் விழாவை ஒட்டி, கோலம், விளையாட்டு, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகளுடன் மாணவர்களும் இணைந்து கோலம் போட்டு அசத்தினார்கள். இதில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட.

    மண்மக்க பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கருப்பையா செய்து இருந்தார். நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார். மாணவர்கள் அனைவரும் ‘பொங்கலோ பொங்கல்’ எனப் பாடி இறைவனை வழிபட்டனர். பின்னர், சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    Share
  • போகியின் அர்த்தம்!

    போகியின் அர்த்தம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பழையன கழிதல் வேண்டும்
    புதியன புகுதல் வேண்டும்
    போகியின் அர்த்தம் என்று
    போதனை இருக்கு நன்றாய்
    வேண்டாத பொருளை எல்லாம்
    தீயிலே போட்டு விட்டு
    வெற்றியாய்ச் சிரித்து நிற்றல்
    போகியின் நோக்கம் இல்லை!

    வீட்டிலே உள்ள குப்பை
    வெளியிலே போட்டு விட்டோம்
    காட்டாத குப்பை எல்லாம்
    மனக் கூட்டிலே நிறைந்திருக்கே
    அகமதன் அழுக்கைப் போக்கல்
    போகியின் அர்த்தம் என்று
    அனைவரும் உணரும் வேளை
    போகியே புகழ்ந்து நிற்கும்!

    Share
  • எமக்கும் தொழில் எழுத்து

    எமக்கும் தொழில் எழுத்து

    பாஸ்கர் சேஷாத்ரி

    எழுதுவது சிந்திப்பின் பெரிய வெளிப்பாடு. உணர்வுகளை வெளிப்படுத்த எவ்வளவு வகையான ஜன்னல்கள் இருப்பினும் எழுத்தின் மூலம் வெளியாகும் விஷயத்திற்குத் தனித்துவம் உண்டு. பெரும் கோபத்தையும், அழகுணர்ச்சியையும் வேதனைகளையும் ஆச்சர்யங்களையும் அவஸ்தையையும் சொல்ல, எழுத்தைத் தாண்டிய வலிமை எதற்குமில்லை. இதர கலைஞர்கள் என் கருத்தில் இருந்து மாறுபடலாம். ஆனாலும் இந்த உணர்ச்சி, வலியை, ஆழ்மனச் சிந்தனையை வார்த்தைகளில் வடிக்கும் போது அது போக வேண்டிய இடத்திற்கு மிகச் சரியாய்ப் போய்ச் சேருகிறது.

    எழுத்து என்ன செய்யும்? 

    படிப்பவன் மனசைப் பிசைய வைக்கும். அவன் மனத்தின் ஆழத்திற்கு இட்டுச் செல்லும். மனத்தின் விகாரங்கள் எழுத்தால் பதறும். ஆச்சரியங்களையும் அவஸ்தைகளையும் படிப்பவர் மனத்தில் ஊடுருவச் செய்து, அவரோடு இணைய முடியும். இந்த இணைதல்தான் வெற்றிக் கனி.

    எனக்குத் தெரிந்து ஒரு விஷயத்தை எதிராளியிடம் பகிரும்போது வரும் நிறைவும் மனத்தெளிவும் எழுதிய கருத்தில் மேலும் நாட்டம் கொள்ள வைக்கும். எழுதுவதற்கு அனுபவங்களைத் தேடவே வேண்டாம். நிஜமான எழுத்தில் படைப்பாளியின் சத்தியம் பிரகாசிக்கிறது .

    எழுதுங்கள். தினசரி எழுதங்கள். இந்த மனம், மனிதர்கள், குழந்தைகள் என எல்லாவற்றிலும் வாழ்க்கை ஒளிந்துகொண்டு இருக்கிறது.

    எழுதும் சிந்திப்பை விட்டு, நிகழ்வுகளை இயல்பாய்ப் பார்க்க முடியுமா? முடியும். அப்படியே பாதிப்பு இருப்பினும் அது பாதகமில்லை.

    எழுத்து வாழ்வை தேட… தேடுவது எது எனப் புரியாமலே தேடுவது தான் வாழ்க்கையின் சிறப்பு. தேடினால் கிடைக்காமல் போகும் விஷயங்கள் பலவுண்டு. தேடுபவன் முடிவில் காணாமல் போக வேண்டும். காணாமல் போய் நிற்பது இங்கு இலக்கு. காணாமல் போன பின், எழுத்து வேறு எழுத்தாளன் வேறு இல்லை.

    Share
  • ஒருநாள் ஈரானியத் திரைப்பட விழா

    ஒருநாள் ஈரானியத் திரைப்பட விழா

    ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா

    ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா திருப்பூரில் சேவ் அலுவலகம், (கலைஞர் அறிவாலயம் அருகில்) 5, அய்ஸ்வர்யா நகர், அரசு பொது மருத்துவமனை அருகில். தாராபுரம் சாலையில் 12/1/2020 அன்று நடைபெற்றது. திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, (Federation of Film Societies of India) ,  கனவு –  “ சேவ்  “ இணைந்து நடத்தின.

    விழாவில் திரைக்கதையாசிரியர் கதிர் பேசுகையில்: ஒரு திரைப்படத்திற்கு நூறு சதவீதம் அடிப்படை பலமாக விளங்குவது திரைக்கதையாகும். திரைக்கதையை பயிலும் இளைஞர்கள் நல்ல புத்தகங்களை, நாவல்களை, இலக்கியப்படிப்புகளை தொடர்ந்து வசிக்க வேண்டியது அவசியம்.

    துவக்க உரை யாற்றிய ஆவணப்பட இயக்குனர் சந்தோஷ் கிருஷ்ணன்: ஈரானில் இப்போது போர் சூழல் நிலவுகிறது. பலமுறை போர் சூழலால் பாதிக்கப்பட்ட ஈரானின்  பல திரைப்படங்கள் போருக்கு எதிரான ஆவணங்களாக அமைந்துள்ளன. ஈரான் சமூகவியலை சரியாக பிரதிப்லிக்கிற கண்ணாடிகளாக அவை விளங்குகின்றன.

    எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் உரையில்: ஈரானிய அரசியல் சிரமங்கள் , மதக் கட்டுப்பாடுகள், கடுமையான தணிக்கைமுறை, போன்ற சாவல்களைத் தாண்டி தனித்துவம் கொண்டவை ஈரானிய திரைப்படங்கள். உலக அளவில் பெரும் கவனிப்பையும், பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருபவவை .

    சாமானிய மக்கள் சார்ந்த எளிமையான கதைக் கருக்களை வலிமையாய் பயன்படுத்தி தீவிரமாய் எடுக்கப்படுகின்றன.

    இடம் பெற்ற சில படங்கள் பற்றி…

    1. டுடே ( Today/ Reza Mirkarimi)

    இந்தப்படம் ஒரு டாக்சி டிரைவரின் ஏறத்தாழ ஒரு நாள் பயணத்தை முன்வைத்து கதை சொல்கிறது. அவரின் முகம் இறுக்கமாக இருக்கிறது. ஒருபெரும் வழக்கறிஞர் அந்த வண்டியில் பயணம் செய்யும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. சாப்பாட்டு நேரம் என்பதால் வண்டியை ஒரு இடத்திற்கு மேல் கொண்டு செல்ல இயலாது என்று அந்த வழக்கறிஞரை இறக்கிவிட்டு விடுகிறார். அவரின் கடுமையான போக்கு வழக்கறிஞருக்கு அதிர்ச்சி தருகிறது. பின்னால் அந்த வண்டியில் ஏறும் ஒரு கர்ப்பிணி பெண் ஒரு மருத்துவமனைக்கு தன்னை கொண்டு செல்ல கேட்கிறாள். பல இடங்களில் அலைந்து அந்த மருத்துவமனையை கண்டுபிடிக்கும் போது உள்ளே தனியாளாக தான் செல்வதை விரும்பவில்லை என்று கூட கைத்தாங்கலாக அவளை விட்டுச் செல்லும்படி அந்த கர்ப்பிணிப்பெண் கேட்கிறாள். அவரும் அப்படியே செய்கிறார். உள்ளே சென்ற பின்பு அவள் குறித்த விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தருமாறு மருத்துவமனையில் கேட்கிறார்கள் அவரும் முயல்கிறார். ஆனால் அவள் அங்கு அனுமதிக்கப்படுகிறார். அவளுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வந்து தருகிறார். இடையில் ஒரு சிறு பயணம் அமைகிறது. அதை முடித்து விட்டு மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து அந்தப் பெண் ரத்தப்போக்காலும் பிரசவம் வலியாலும் அலறுவதை பார்க்கிறார். மருத்துவ சிகிச்சை சார்ந்த விண்ணப்பங்களில் அவர் கையெழுத்து இடுகிறார். அவரின் அதிகம் பேசாத தன்மையும் ஒருவகை அலட்சியத் தன்மையைக் காட்டும் முகமும் மருத்துமனையில் இருப்பவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. ஆனால் ஒரு மருத்துவர் டாக்ஸி டிரைவர் எந்த வகையிலும் அந்தப் பெண்ணுக்கு உறவு அல்லாதவர் என்பதை தெரிந்து கொள்கிறாள். அவள் அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். குழந்தை பிறந்த பின் அவள் இறந்துபோகிறாள் அந்த குழந்தையை அவர் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு அந்த குழந்தை சம்பந்தமான கோப்பையும் எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறார். அவ்வப்போது அவரின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டபடி இருக்கிறார். அந்த டாக்சி டிரைவர் காலில் ஏதோ வரை வலி இருப்பதை காட்டுவதற்காக முழங்காலை தொட்டுத் தடவிக் கொண்டிருக்கிறார் அவ்வப்போது. முன்பு அந்த பகுதியில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனை பற்றிய குறிப்புகளும் வசனத்தில் வருகின்றன. போரில் அந்த மருத்துவமனை சிதைக்கப்பட்டிருக்கிறது. பலர் தங்கள் உடலுறுப்புகளை சிதைத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. அதுவும் தெரியவருகிறது. அவரை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு மருத்துவர் அவரின் அறையில் அவரின் பெண் குழந்தையை ஓவியம் தீட்டச் சொல்லியும் கொஞ்சம் விளையாட சொல்லியும் நேரத்தை கழிக்க வைக்கிறார். அந்த மருத்துவர் ஒரு பெண் ஆவார். அந்த குழந்தையுடன் இவர் இடையில் பேசுவதும் அந்தக் குழந்தை ஓவியம் வரைவதற்கான ஊக்கம் செய்வதும் பிறகு தூங்கிப் போகிறபோது அதை சரியாக தூங்கப் பண்ணுவது என்று செய்வதை பெண் மருத்துவரும் கவனிக்கிறார், அவருக்கு குழந்தை இல்லை என்பது ஓரிடத்தில் ஒரு வரி வசனம் ஆக வந்து போகிறது. இறந்து போன பெண்ணின் பிணத்தை பார்க்க மறுத்து குழந்தையை நன்கு கவனிக்கிறார். அது சம்பந்தமான கோப்புகளில் கையெழுத்திட மறுக்கிறார். ஆனால் மறைமுக வழியாக அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு போகிறார். அந்தப் பெண் மருத்துவரும் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். போர் முடிந்த சூழலில்  பலரின் வாழ்க்கை சித்திரங்கள் இதில் காணக் கிடைக்கின்றன. அந்த கர்ப்பிணி பெண்ணின் வாழ்க்கை குறித்த பல்வேறு சித்திரங்களும் உருவாகின்றன. அவள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் டாக்சி டிரைவர் உடன் அருகில் உட்கார்ந்து உரையாடும்  காட்சி மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அமைதியாக இருக்கும் மருத்துவமனை. எதிரில் இருக்கும் குழந்தைகளின் படங்கள். அதில் ஏதாவது ஒரு குழந்தையின் அழகு  தனக்குப்  பிறக்கப்போகும் குழந்தைக்கு இருக்கும் என்று உரையாடுவது. பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் பற்றி அவர்கள் பகிர்ந்து கொள்வது என்பது அந்த காட்சி அமைப்பாகும். ஆனாலும் அதிலும் டேக்சி டிரைவர் மிக குறைவாகவே பேசுகிறார். ஓரிரு வார்த்தைகள் மட்டும். இந்த படம் ஒருவகையில் டாக்சி டிரைவரை மையமாகக் கொண்டிருந்தாலும் போரும் பாதிக்கப்பட்ட அவரும் வேறு வகையில் பாதிப்புக்குண்டான கர்ப்பிணிப் பெண்ணும் பற்றிய சித்திரங்கள் முழுமையடைகிறது. ஈரானிய சமூகம், போர் சூழல் முடிந்த காலம் பற்றிய பல்வேறு நுணுக்கமானக் கூறுகளை இந்த படம் கொண்டிருக்கிறது.

    2. பெயிண்டிங் பூல்.. ( The Painting Pool/ Maziar Miri)

    ஒரு குழந்தையை மையமாக கொண்ட சிறந்த படம் இது. அவனின் பெற்றோர்கள் ஓரளவு மனநலம் குன்றியவர்கள் போல பேச்சிலும் உடல் மொழியிலும் நடத்தையிலும் தென்படுகிறார்கள். அவர்கள் ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் தினந்தோறும் அந்தப் பையனை பள்ளிக்கு அனுப்புகிற ஆயத்தங்களில் தாமதமாகி நிறுவன வண்டியை பிடிக்க ஓடுபவர்கள். அந்தப் பையனின் வருத்தமும் மகிழ்ச்சியும் அவர்களின் உணர்வுகளாக இருக்கிறது. அவனை பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். அவனின் ஆறுதலுக்கு மாடியில் இருக்கும் புறாக்களும் வீட்டில் இருக்கும் செடிகொடிகளும் ஒத்திசைவாக இருக்கின்றன. ஒரு நாள் வெளியில் செல்கிறபோது பல்வேறு ராட்டினங்களில் அவன் ஆட ஆசைப்படுகிறான். சுற்ற ஆசைப்படுகிறான் ஆனால் பெற்றோர் சற்று பயந்து அவனை வீட்டிற்கு அழைத்து வர அவன் முரண்டு பிடிக்கிறார். எல்லாவற்றையும் ஒதுக்கி உதைக்கிறான். அவன் அவ்வப்போது போடும் சித்திரங்களின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு அவன் அம்மா போட்ட ஓவிய புத்தகத்தை அவன் கிழித்து நாசமாக்குகிறான் .இது அப்பாவை பாதித்து அறைந்து விடுகிறார் அடுத்த நாள் பள்ளிக்கு போகும் அவன் அவனின் வகுப்பாசிரியை வீட்டிற்கு பாடம் படிக்க செல்கிறான். அங்கேயே தங்கி விடுகிறான். அவனின் பெற்றோர்கள் பயந்துபோய் தங்கள் இயலாமையை எண்ணியும் மிகவும் வருத்தப் படுகிறார்கள். அவனின் இருப்பு அங்கு என்பது அவர்களை பொருத்தவரை உறுத்தச் செய்கிறது. இந்த சமயத்தில் அந்த மருந்து கம்பெனியில் வேலை இழப்பும் நடக்கிறது. அவன் அப்பா உணவுப் பொருள் போன்று பீட்சா விநியோகிக்கும் ஒரு இடத்தில் வேலைக்கு சேர்கிறார். அவருக்கு இரட்டை சக்கர வாகனம் ஓட்ட சரியாகத் தெரியாது என்பதை சொல்லாமல் அது அப்படி இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்பதால் பொய் சொல்லி ஒரு இரட்டைச் சக்கர வாகனத்தை பல இடங்களுக்கு தள்ளியபடி ஓடி அந்த பீட்சாவை விநியோகம் செய்கிறான். அவன் கால்களில் புண்கள் வெடித்துச் சிரமப்படுத்துகிறது. உடம்பும் சிரமப்படுத்துகிறது. ஆசிரியை வீட்டில் இருக்கும் தன் மகனை பார்க்க போகிறார்கள். அவர்கள் வீட்டினுள் செல்லாமல் வெளியில் ஆசிரியை வரும்போது அவன் பற்றிக் கேட்டும் கண்ணீர் மல்கவும் பதில்களை சொல்லியும் திரும்புகிறார்கள். இது சில நாட்கள் தொடர்கிறது. ஆசிரியை இவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து ஆறுதல் சொல்கிறாள் தயாரிப்பில் வீட்டில் பீட்சா செய்ய அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அது கருகி போகிறபோது அது கருகி விட்டதால் தன் மகன் வீட்டிற்கு திரும்ப மாட்டான் என்று அம்மா அழுகையோடு சொல்கிறாள். எந்த முயற்சிகளும் பலிக்கவில்லை. பையன் அவர்களுடன் தொலைபேசியில் பேசுவது இல்லை. ஒரு நாள் தட்டுத்தடுமாறி அம்மா தன்னையே  அவனைப் பார்க்க சென்று விட்டு திரும்பி வந்து விடுகிறாள். பள்ளிக்குச் செல்கிற இருவரில் அப்பா மட்டும் அவனை ஜன்னல் வழியாக பார்த்து அவரின் மன்னிப்பையும் சங்கடங்களையும் சொல்லிவிட்டு திரும்புகிறார். சில நாட்கள் செல்ல அந்தப் பையன் அம்மா தன்னை பார்க்க தனியே  வந்தது, அப்பா பள்ளி வந்தது போன்றவற்றை நினைத்து தூக்கம் வராமல் சிரமப்படுகிறான். ஆசிரியையின்  கணவரும் அது போல ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் இருவரும் உரையாட ஆரம்பிக்கிறார்கள். பிறகு அவன் தன் வீட்டிற்கு ஆசிரியை உதவியுடன் இரவு திரும்பி வருவதும் பின் அது அந்தவீட்டில் மீன்டும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. குழந்தை சார்ந்த அனுபவங்கள் என்பதால் அதன் வெளிகுளித்தனமும் இயல்பும் சரியாக சொல்லப்பட்ட ஒரு படம்.

    ஒவ்வொரு படத்திலும் வெவ்வெறு வகையான மையங்களும் அணுகுமுறையும் ஈரான் படங்கள் மீதான ஈர்ப்பைத் தக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன.

    (கனவு திரைப்பட இயக்கம் / இலக்கிய இதழ் & ”சேவ்“ SAVE சமூக சேவை நிறுவனம் )

    Share