Blog

  • திருமால் திருப்புகழ் (29)

    கிரேசி மோகன்

    vishnu-garuda-847x1024

    தனன தனதான தனன தனதான
    தனன தனதான தனன தனதான -தனதான….

    ————————————————————————————————————————
    “பிளிரும் கஜம்வாழ பறவை முதுகேறி mother_child_PH71_l
    ஒளிரும் சுடரேந்தி முதலை தலைசாய -விரைவோனே
    தளர இடையாடை திலக நுதல்கூன
    தலையின் மயில்பீலி சரிய படையோடு -மெதுவாக
    துயில இடையாயர் தளிகை அறைதாவி
    உறியில் தயிர்பாலை திருட வரும்போது -விரைவோனே
    குளிர குளமாடும் மகளிர் அணிசேலை
    உருவி கரைமேவி மருத மரமேறி -மெதுவாக
    அலறி ஒருநாளில் அழுத மகள்சோகம்
    விலக துணிசேர்க்க விரையும் மெதுவான -பெருமாளே
    —————————————————————————————–

     

     

     

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 9

    இவள் பாரதி

    கூடடையப் பறக்கும்

    பறவையின் வேகமொத்து

    பறக்கின்றனயென் கால்கள்

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த

    இப்பெருநகரத்தில்

     

    தாய்ப்பறவையை

    எதிர்நோக்கிக் காத்திருக்கும்

    குஞ்சுப்பறவையின்

    கண்களும் காதுகளும்

    படபடக்கின்றன

    நொடிக்கொருமுறை

    ——

    வாடிக்கிடந்த

    பூவொன்றையெடுத்து

    சிறுவாயில் வைத்து

    எச்சில்படுத்துகிறாள்

    அம்மாகுட்டி

     

    மழைத்துளிபட்டதென

    மணக்கத் துவங்குகிறது

    பூவிதழ்

    ——-

    ஒரே பாடலைத்

    திரும்பத் திரும்பப்

    பாடுகிறேன்..

    முகம்பார்த்து

    முலைப்பாலருந்தும் குழந்தைக்கு

     

    பாடலை நிறுத்துகிறேன்

    குடிப்பதை நிறுத்திவிட்டு

    உன்னிப்பாய் கவனிக்கிறாள்

     

    மீண்டும்

    அதே பாடலைப் பாடுகிறேன்

    பாலைக்குடிக்கிறது குழந்தை

    சிவந்த மென்கால்களை அசைத்துக்கொண்டே

    ——-

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    Subashini_Thirumalaiஇந்த வாரம் வல்லமையில் வந்த கட்டுரைகளில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எழுத்தாளர் தி.சுபாஷிணியின் ‘வாசிப்புகளின் வாசல்’ கட்டுரை என்று சொல்லவேண்டும்தான். வித்தியாசத்துக்குக் காரணம் எழுத்தாளர் கோவை ஞானியின் ஒரு புத்தகத்தைக் குறிப்பிடும்போது –

    ”(கோவை ஞானி) தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது. முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த அளவு எனக்கு அறிவு உண்டா? படித்து புரிந்துகொள்ள முடியுமா? என்ற அச்சம். ஆனால் படிக்கப் படிக்க என் அச்சம் விலகியது! வெயிலிடப்பட்ட பனியாய் மறைந்தது. அறிவின் வாசல் திறந்துகொண்டது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்” – என்று திருமதி சுபாஷிணி குறிப்பிட்டு பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றிய தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    பொதுவாகவே மனிதர்கள் பல விதானங்களில் சிந்திக்கிறார்கள். இது உலக மாந்தர்களுக்குண்டான சிறப்பு. பல சிந்தனைகள் சித்தாந்தங்களாக மாறுகிறதுதான். அந்த சித்தாந்தங்களில் சில காலத்தின் கோலத்திற்கேற்ப மிக அதிக அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதே சமயத்தில் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களால் அதற்கு மாறாக உள்ள இன்னொரு சித்தாந்தத்தை மனதாலும் ஏற்றுக் கொள்ளமுடியாதுதான்.

    அதே சமயத்தில் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றினாலும் மாற்றார் கருத்தையும் நாம் படித்து அறிய வேண்டும். இதற்கு பொதுவாக மனது இடம் கொடுக்காது. மறுக்கும்.. சில சமயம் அலட்சியப்படுத்தும், சிலசமயம் பயப்படுத்தும் ஆனால் படித்தபின்னர், அதுவும் முடிந்தவரை பொறுமையாக ஒரு திறந்த மனதில் படிக்கப்படும்போது அந்த சித்தாந்தத்தில் உள்ள பல நல்ல கருத்துகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்தான். இப்படிப்பட்ட கருத்து நம் மனதுள் வந்தவுடன் நமக்குள் முதலில் தோன்றுவது மாற்று சித்தாந்தத்தில் உள்ள நல்ல கருத்துகளும் நல்ல மதிப்பும் உண்டாகும்., இதனால் நம் எண்ணங்களையும் செம்மையாக்கிக்கொள்ள உதவுகிறது. மாற்று சித்தாந்தங்களையும் மதிக்கத் தோன்றுகிறது. நம்முள் உள்ள ஒரு எதிர்மறையை நீக்கிக் கொள்ள சந்தர்ப்பமும் தருகின்றது.

    அப்படிப்பட்ட ஒரு கருத்தை நம்முன் நிறுத்தி வாசகர்களுக்கும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும் வண்ணம் கருத்துரையைப் பதிப்பித்த திருமதி சுபாஷிணி அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் நல்வாழ்த்துகள். அவர் கட்டுரையை முழுதும் படிக்க இதோ அவரது இணைப்பு – http://www.vallamai.com/?p=42999

    கடைசி பாரா: பிச்சினிக்காடு இளங்கோ’வின் சொல்லும் சொல்லும் கவிதை.

    சொற்களெல்லாம்

    சிக்கிமுக்கிக் கற்கள்

    விருட்சமாய்

    விளையும் விதைகள்

    ஒவ்வொரு சொல்லும்

    வாமன வடிவம்

    ஒவ்வொரு சொல்லும்

    சுரங்கம்

    ஒவ்வொரு சொல்லும்

    ஒரு

    சூத்திரம்

    சூத்திரம் விரிந்தால்

    சூட்சுமம் விளங்கும்

    Share
  • “தாய்மொழி வழிக் கல்வியை உயர்த்திப் பிடியுங்கள்…..”

    தொகுப்பு: எஸ். வி. வேணுகோபாலன்

    முனைவர் ம. திருமலை,

    துணைவேந்தர்,

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

    “கிராமத்தில் மாட்டுக் கொட்டகை போன்ற இடத்தில் நடத்தப்பட்டுவந்த  பள்ளியில் தொடக்கக் கல்வி முடித்த என்னை சோழவந்தான் உயர்நிலைப் பள்ளியில் கொண்டுவந்து போட்டார்கள். இங்கே சொல்லத் தக்க மதிப்பெண்கள் எதையும் நான் பெற்றிருக்கவில்லை. நான் தேற மாட்டேன் என்றார்கள். எனினும் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட்டேன். முழுக்க முழுக்கத் தாய்மொழிவழியிலேயே கல்வி பயின்றவன். இப்போது உங்கள் முன் ஒரு பல்கலைக் கழகத் துணை வேந்தராக நிற்கிறேன்…..எனவே பெற்றோரைக் கேட்டுக் கொள்கிறேன்… மதிப்பெண்களை வைத்துக் குழந்தைகளை எடை போடாதீர்கள்… குறைந்த மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் நல்ல சாதனையாளர்களாக வர வாய்ப்பு உண்டு.

    “காலனி ஆதிக்கம் இருந்த நாட்களில், அர்பட்நாட் என்ற ஆங்கிலேயர் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகப் போனபோது, அவரது வங்கியில்  பணம் போட்டிருந்தவர்கள் பட்ட பாடுகளை மகாகவி பாரதி தமது கட்டுரையில் எழுதினார். நாமே ஒரு சுதேசி வங்கி தொடங்கினால் என்ன என்று அவர் விடுத்த வேண்டுகோளில் இருந்து பிறந்ததுதான் இந்தியன் வங்கி. பின்னர் அதே அர்பட்நாட்டின் கட்ட்டடத்தையும் வாங்கி அங்கேயே இந்த வங்கி இயங்கத் தொடங்கியது. அதன் ஊழியர்கள் எங்களுக்குச் சமூக அக்கறை உண்டு என்று கம்பீரமாக நடத்தும் இந்தத் தொழிற்சங்க சேவை போற்றுதலுக்குரியது. இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்துதலுக்கு உரியவர்கள்.

    இங்கே தலைமை ஆசிரியை வாசித்த ஆண்டறிக்கையில், இந்தப் பள்ளியில்  பிரம்படி இல்லை. ரேங்க் கார்டு இல்லை என்றார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரேங்க் கார்டு கொடுத்ததும் இந்த அம்மாக்கள் உடனே அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு ஒப்பிடுவார்கள். இது எங்கே கொண்டுபோய் விடும் தெரியுமா? முதல் முறை அடிபட்ட  பிள்ளை, அடுத்த முறை  அப்பா கையெழுத்தை அவனே போட்டுக் கொண்டுபோய்விடுவான். பிள்ளைகள் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உண்டு.  ஒரே வீட்டில் அண்ணனும், தம்பியும் இருப்பார்கள். ஒருவன் நிறைய மதிப்பெண்கள் வாங்கியிருப்பான். அவன் தனது ரேங்க் கார்டைப் பெற்றோரிடம் கொண்டு காட்டுவான். அடுத்தவன் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பான். அவனால் அப்படிக்காட்ட முடியாது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே இப்படிப்பட்ட நிலையில் பெற்றோர்கள் மிக்க் கவனமாகவும் திறமையாகவும் செயற்படவேண்டும். இருவரையும்  பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

    முனைவர் ம. திருமலை, துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
    முனைவர் ம. திருமலை,
    துணைவேந்தர்,
    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

    ஒருமுறை நான் விமான நிலையத்தில் காத்திருந்தேன். எனக்குப் பின்புற வரிசையில் செப்புச் சிலை போல் ஒரு பெண் குழந்தை. மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கும் பெற்றோர் அந்தக் குழந்தையை அவள் சரியாகப் படிப்பதில்லை என்று யார் யாரோடோ ஒப்பிட்டவண்ணம் அத்தனை திட்டு திட்டிக் கொண்டிருந்தனர். என்னிடம் கொடுத்தால் அந்தக் குழந்தையை மடிமீது ஏந்திக் கொண்டாடி இருப்பேன். அவ்வளவு உயர்கல்வி படித்திருந்தும் அந்தப் பெற்றோர் இப்படி மூடத்தனமாகக் குழந்தையை நடத்தும் விதம் என்னை மிகவும் பாதித்தது.

    பெற்றோரே, உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், உங்கள் குழந்தைகள் எத்தனை மதிப்பெண்கள் வாங்குகின்றனர் என்பதை வைத்து அவர்களை மதிப்பிடாதீர்கள். அவர்களிடம் காணும் திறன்களை ஊக்குவித்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள். பள்ளியில் மிக அதிக மதிப்பெண்களைப் பள்ளியில் பெற்ற  குழந்தைகள் சிலர் மேற்படிப்பில் சமாளிக்க முடியாமல் நொறுங்குவதைப் பார்க்கிறோம். வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ மனிதர்கள் தங்களது பள்ளிக் கல்வியில் அதிகம் மதிப்பெண் பெறாதவர்கள் என்பதை அன்பு கூர்ந்து கவனியுங்கள்.

    பள்ளிக்கூடப் படிப்பில், எங்களுக்குக் கணக்குப் பாடம், கணக்கு ஆசிரியர்  என்றாலே வயிற்றைக் கலக்கும். ஆனால் அவர் வராத அன்றைக்கு, கருப்பையா வாத்தியார் என்பவரை அந்த பாட வேளையில் ஏதாவது சொல்லிக் கொடு என்று எங்கள் வகுப்புக்கு அனுப்பி வைப்பார்கள். அவர் படித்தவர் இல்லை. கைநாட்டு மனிதர்தான். ஆனால் அவர் வந்தால் அப்படி உற்சாகம் கொள்ளும் வகுப்பறை. பஞ்ச தந்திரக் கதைகளைச் சொல்வார். நல்ல சுவாரசியமாகக் கதை போய்க்கொண்டிருக்கையில் சட்டென்று விறுவிறுப்பான ஒரு கட்டத்தில் கதையை நிறுத்திவிட்டு,இடுப்பிலிருந்து மூக்குப்பொடிப் பட்டையை எடுத்து அதில் ஒரு சிட்டிகை எடுத்து நிதானமாகப் பொடியை உறிஞ்சுவதில் ஈடுபடுவார். நாங்களோ கதையின் அடுத்த கட்டம் என்ன என்று அறியத் துடிப்போம். இப்படியாக எங்களை வசீகரித்து, வாழ்க்கை குறித்த புரிதல்களையும் எங்களுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தவர் அவர். பள்ளிக் கல்வியைக் காட்டிலும் கருப்பையா கற்றுக் கொடுத்த நுட்பங்களே வாழ்க்கையில் சோதனைக் காலங்களில் – சவாலான தருணங்களில் பிரச்சினைகளைத் துணிவோடு சந்திக்கும் நெஞ்சுரத்தை வளர்த்துக் கொடுத்திருக்கிறது.

    இன்றைக்கு இப்படியான சூழல் இல்லாததால், மாணவர்கள் எப்படித் திணறுகின்றனர் என்று பார்க்கிறோம். ஒரு கல்லூரி முதல்வரை மாணவர்கள் வழிமறித்துக் கொல்லும் அளவுக்குப் போயிருக்கிறது நிலைமை. இன்னொரு மாணவர் ஒரு பெண் ஆசிரியரையே குத்திக் கொன்றுள்ள கொடூரம் நடந்துள்ளதைப் பார்க்கிறோம். இது ஆரோக்கியமான சூழல் இல்லை.

    கற்றலின் இனிமை பற்றிக் குறிப்பிட்டார்களே… மாணவர்-ஆசிரியர் உறவு இணக்கமாக இருக்க வேண்டும். தாய்மொழியைக் கேவலமாக நினைக்காதீர்கள்…உலகில் அதிகம் பேசப்படும் மொழி சீன மொழி.  ஆங்கிலம் அல்ல. ஆங்கில மோகம் கொண்டு அலைவது தேவையற்றது. மகாகவி பாரதியே,ஆங்கிலக் கல்வி பற்றி வருத்தமுற்றுத் தனது சுயசரிதையில், “செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது, தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தது” என்று சொல்வார். இதனால் ஓர் எள்ளின் முனையளவு  நலமும் பெற முடியவில்லை என்றார். இதை எந்தக் கோயிலிலும் வந்து சத்தியம் செய்வேன் என்றும் சொன்னார். நானும் தமிழ் வழிக் கல்வி படித்துத்தான் இன்று துணைவேந்தராக உயர்ந்திருக்கிறேன். ஒன்றும் விளங்காமல் எல்லாம் போய்விடவில்லை. தமிழ் கற்றால் நல்ல நிலை ஏற்படும் என்பதற்கு வேறு ஒரு நிரூபணம் தேவையில்லை.

    இந்தப் பள்ளி தாய்மொழிவழிக் கல்வியைத் தொடர்ந்து நடத்துவது அருமையான விஷயம். 6சதவீதம் பேர் பேசும் ஆங்கிலத்தின்பின் ஓட வேண்டாம். நான் முழுக்க முழுக்கத் தமிழ்மொழி வழியிலேயே படித்து – அரசுப் பள்ளிகளிலேயே படித்து உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அரசாங்க வேலைகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உண்டு. எனவே உற்சாகமாகத் தாய்மொழியில் படிக்க வையுங்கள்..

    இந்தப் பள்ளி மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்..”

    (இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குறிச்சி கிராமத்தில் நடத்திவரும் ஐ பி இ ஏ பள்ளியில்  பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற 12ஆவது ஆண்டுவிழாவில் ஆற்றிய சிறப்புரையிலிருந்து…)

    நன்றி: வண்ணக்கதிர்

    Share
  • திருமால் திருப்புகழ் (28)

    கிரேசி மோகன்

    800px-Darasuram_lord_Shiva_and_Parvathi_on_Bull
    தந்த தத்த தானதா னனா
    தந்த தத்த தானதா னனா
    தந்த தத்த தானதா னனா-தனதான….

    ———————————————————————————————
    “எங்கு துச்சம் தூய்மையா குதோ 10006373_503143549790679_58366536_n
    எங்கு மிச்சம் பூர்ணமா குதோ
    எங்கு பிக்‌ஷை சேரஆ குதோ -பிரசாதம்;
    எங்கு சுத்தம் சோறுபோ டுதோ
    எங்கு பித்தம் ஆலவா யனார்
    நெஞ்சின் நச்சு பாகமா குதோ -அதனாலே
    எங்கு சித்தம் ஏகமா குதோ
    எங்கு சத்தம் கீதையா குதோ
    எங்கு பக்தி யோகமா குதோ -அதைநாட
    பொங்கு வெற்பு சோணைமீ திலே
    தங்கி சுத்த நானில்மூழ் கியே
    நின்ற நிட்டை ஞானநா யனார் -ரமணேசர்
    முங்கு புத்த வாவிவா சனாய்
    இங்கி ருக்க காளைவா கனார்
    பங்கு சக்தி சோதரா விடா -தருள்வாயே
    சங்கு சக்ர வாளும்கோ லுமாய்
    அம்பு விற்கை ஆளும்மா லனே
    பொன்பு விக்கு மாதுசே ரவே -புளிலேறி
    இங்கெ னக்கு யாவுமா கநீ,
    என்ப தைப்பு ஓயவே கமாய்
    மண்ப றித்த ஏனரூ பனே-வருவாயே
    வெஞ்சி றைக்குள் வாசுதே வனாய்
    வந்து தித்து வாழஆ யனாய்
    மண்கு தித்த நீலமே கமே -பெருமாளே”
    —————————————————————————————————————————–

    படத்திற்கு நன்றி

    http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Darasuram_lord_Shiva_and_Parvathi_on_Bull.JPG

    Share
  • மாற்றம் ஏற்படவேண்டும்!

    எம்.ஜெயராமசர்மா

    திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது. பைபிளும் வந்தது. பகவத்கீதையும் வந்தது. அந்த நாள் முதல் இந்த நாள்வரை ஆன்மீகத் தலைவர்களும், அறிஞர்களும் — மனித குலம், மண்ணில் நல்லவண்ணம் வாழ, எண்ணில்லாதவற்றை எல்லாம் – பாட்டாகவும், பயனாகவும் சொன்னார்கள். சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லியபடி இருக்க — மற்றவர்களோ மனம்போனபோக்கிலே தாம் விரும்பியபடியே போய்க்கொண்டு இருப்பதையே இப்போது காணமுடிகின்றது.

    மனித வாழ்வில் மாற்றம் அதாவது நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் எல்லாம் வந்தார்கள்.அறிவுரைகளை எல்லாம் தந்தார்கள்.அவர்கள் எண்ணிய மாற்றம் ஏற்பட்டதா என்றால் அது – கேள்விக்குறியாகவே இன்று அமைந்து விட்டது எனலாம்.

    சமயம் என்றால் என்ன? மனிதனை புனிதனாக்குவது சமயம் என்றும், ஒழுக்க நெறியுடன் வாழப் பழக்குவது சமயம் என்றும், சமத்துவ மனப்பங்கை வளர்ப்பது சமயம் என்றும்,இறை உணர்வோடு அன்புமயமாக வாழவைப்பது சமயம் என்றும், சமயத்துக்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

    ஆனால் சமயம் என்பது தன்னிலை இழந்து நிற்பதையே எங்கும் காணமுடிகிறது. சமயத்தை ” மதம் ” என்றும் அழைத்தனர். அதாவது மனிதனிடம் நான் என்னும் ஆணவமதம் பிடிக்காது அவனை நல்வழிப்படுத்தும் காரணத்தால் தான் மதம் என்று பெயரிட்டு அழைத்தனர். இந்தச் சொல் மிகப் பொருத்தமாக அமைந்து விட்டதென்றே சொல்லலாம்.ஆனால் அதனை எடுத்துக் கொண்டவர்களோ அர்த்தம் புரியாது, தமக்கேற்றபடி மாற்றிக்கொண்டு மதவெறியர்களாகவே மாறிநிற்பதைக் காண்கிறோம்.

    இந்த மதவெறியால் எத்தனை கலவரங்கள் ? எத்தனை உயிர்கள் மடிந்தன? எவ்வளவு சொத்துக்கள் அழிந்தன? எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் இல்லாது போயின? சாந்தி, சமாதானம், அனைத்தும் செல்லாக் காசுகளாகி நிற்கின்றன்!

    மதத்தின் பெயரால் நூறு ஆண்டுகள் உலகில் நடைபெற்ற சிலுவைப் போரை வரலாற்றிலிருந்து எடுத்துவிட முடியாது. எத்தனை கோரத்தனங்கள் அதனால் உலகில் ஏற்பட்டது என்பதை வரலாற்றைப் படிப்பவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ளுவார்கள்.

    இதன் பின்பும் மதவெறி அடங்கியதா என்றால் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது.உலகினெங்கோ ஒரு பகுதியில் இன்றும் மதத்தின் பெயரால் கோரங்கள் அரங்கேறிய படியேதான் இருக்கிறது.

    மதத்தோடு சண்டை நின்ற பாடில்லை.மொழிக்காகவும் பல இடங்களில் பல சண்டைகள். இதனாலும் பல கோரங்கள்.

    மதமும் ,மொழியும், கலவரங்களுக்கு வித்திட்டதென்ற வகையில்,  இனத்தாலும் பல கோரங்கள் நிகழ்ந்து விட்டன. இன்றும் நிகழ்ந்த வண்ணமே இருப்பதையும் காணமுடிகிறது.

    இவற்றை உற்று நோக்கும் பொழுது — இனமும், மதமும், மொழியும், தேவையா? என்கின்ற வினா எழுகிறதல்லவா? இவை மூன்றும் இல்லாவிட்டால் மனிதன் இந்த உலகில் வாழவே முடியாதவன் ஆகிவிடுவானா? இவை கட்டாயம் மனித வாழ்வுக்குத் தேவைதானா?

    சிக்கலானதும் சிந்திக்க வேண்டிய விடயமுமாக இருக்கிறதல்லவா? மதமும் பாதுகாக்கப் படவேண்டும். மொழியும் பாது காக்கப்பட வேண்டும். அதே வேளை இனமும் பாதுகாக்கப் படவேண்டும்.

    என்ன ஆச்சரியமாகப் படுகிறதா?ஆம்! இம் மூன்றும் இல்லை என்றால் மனித இனம் இருந்தென்ன இல்லா விட்டால் என்ன? இவை இல்லையேல் மனித இனம் விலங்கினத்தோடுதான் சேரும் கட்டாயம் வந்துவிடும்.

    புத்தர், ஜேசு, சங்கரர், பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி, இவர்களின் வருகையும், இவர்களின் உபதேச மொழிகளும் எங்கே? அவை என்னவாயின? நாம் அனைவரும் எம்முள்ளே கேட்க வேண்டிய கேள்வியாகும்!

    புத்தரின் போதிமரத்தின் அடியிலேயே அவரின் கொள்கைகள் புதைக்கப்படுகிறது. ஜேசு போதித்த நெறி நீத்துப் போவதைப் பார்க்கின்றோம்.காந்தியின் அஹிம்சை படும்பாடோ சொல்ல முடியாத நிலை! ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், எம்மத்தியிலா வாழ்ந்தார்கள்? என்று எண்ணும் நிலைதான் காணப்படுகிறது.

    கீதை , உபநிடதம், அதற்கான பல விளக்க உரைகள், வேதங்கள், மந்திரங்கள் , தத்துவ சாஸ்த்திரங்கள் இவை எல்லாம் இருக்கின்றனவா? என்ற சந்தேகமே ஏற்படுகிறது.அந்த அளவுக்கு விபரீதங்கள் நடப்பதை கண்கூடாக காண்கின்றோமல்லவா?

    ஆண்டவநின் சன்னிதானமான கோவில்களிலே சண்டைகள். அறிவினை ஊட்டும் கல்விக்கூடங்களில் எல்லாம் அறிவினைப் புறந்தள்ளி விட்டு விட்டு பணத்தை பிடிங்கி விடும் நிலையங்கள் ஆகிவிட்ட கொடுமை. உயிர் காக்கும் என்று எண்ணி நிற்கும் வைத்திய நிலையங்களோ உயிர் பற்றிய கரிசனையை விட்டு விட்டு காசை எவ்வளவு கறக்கலாம் என்று நிற்பதையும் காண்கின்றோம். அரசியல் பற்றி நினைக்கவே அருவருக்கிறது. ஊழல்களின் உறைவிடமாகி விட்டது. எங்கும் கலப்படம். எதைப் பார்த்தாலும் பயப்பட வேண்டிய நிலை.

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, வெளியில் செல்லவே அஞ்சும் நிலை. நாட்டில் இருகிறோமா? அல்லது அடர்ந்த காட்டில் கொடிய விலங்குகளின் மத்தியில் இருக்கிறோமா என்று எண்ணும் பயங்கரம்!

    இவை தேவைதானா? இதற்காகவா எமது முன்னோர் பலர் பல தியாகங்களைச் செய்தார்கள்? இதற்காகவா எமது வழிகாட்டிகளான் பெரியவர்கள் பல் அறிவுரைகளை விட்டுச்சென்றார்கள்?

    ” கற்றதனால் ஆய பயன்தான் என்ன? வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டாமா?

    குறளும், குரானும், பைபிளும் . பகவத்கீதையும் சொல்லியதை விட வேறு எதுவுமே எதையும் சொல்லிவிட முடியாது.

    அவற்றை எல்லாம் நாம் வைத்திருந்தும் — எம்மிடத்து நல்ல மாற்றம் ஏற்படாது இருப்பது எவ்வளவு மடமை என்பதை நாம் அனைவரும் கட்டாயம் உணரவேண்டும்.

    எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்று நல்லவற்றை  மனத்திருத்தி வாழ்வதுதான் வாழ்க்கை.

    அற்புதமான அமிர்தம் போன்ற இந்தப் பொக்கிஷங்களை நல்ல முறையில் பயன் படுத்தினால் நல்ல மாற்றம் ஏற்படும். வாழ்வும் வளம் பெறுவதோடு மண்ணில் நல்ல வண்ணமும் வாழலாம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 112 (17.03.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    உறையூர் சென்று சேர்தல்

    சாப விமோசனம் தந்தபின்
    தவத்தில் சிறந்த கவுந்தியடிகளும்
    கோவலனும் கண்ணகியும்
    அச்சோலையை விட்டுப் புறப்பட்டனர்.

    முன்பு ஒரு முறை
    முறம் போன்ற காதையுடைய யானை ஒன்றைப்
    போரிட்டு வென்ற கோழியின் பெயரைத் தாங்கி,
    கோழியூர் எனவும் அழைக்கப்பட்ட
    உறையூருக்குள் சென்றனர்.

    கட்டுரை

    முடியுடை வேந்தர் மூவருள்
    வீரவளை அணிந்த பெரிய கைகளையுடைய
    சோழமரபில் பிறந்தவர்கள்,
    அறம், மறம், ஆற்றல் மற்றும்
    அவர் பழம் பெரும் புகாரின் பண்பு,
    இந்திரவிழாச் சிறப்பு, விண்ணவர் வரவு,
    குடிமக்களின் மாண்பு, உணவுப்பொருள் பெருக்கம்,
    தெய்வத்தை ஒத்த காவிரி நீரின் சிறப்பு,

    பொய்க்காத வானம், புனல் பொழியும் சிறப்பு,
    ஆடலரங்கின் அமைப்பு,
    தூக்கு, வரி, பதினோரு வகை ஆடல்கள்,
    திணைநிலை வரி, இணைநிலை வரி..இவற்றின் தன்மை
    இவை எல்லாம் பொருந்த அமைந்த யாழின் இயல்பு,
    அவற்றுள் சிறந்த பதினான்கு வகை
    இசைக்கோவையாகிய யாழின் சிறப்பு,
    இடைநிலைப் பாலைப்பண்ணின் சிறப்பு,
    அதன் வழித் தோன்றிய இசையின் ஆக்கம்,
    புகாரின் பொலிவு, ஒளியுடைப்பாணி

    மேலும் இங்கு சொல்லப்படாத
    இன்னும் பல சிறப்புகளுடன்
    ஒருமித்துப் பொருந்தி விளங்கும்
    புகார்க் காண்டம் முற்றிற்று.

    வெண்பா

    கடலை வேலியெனக் கொண்டமைந்ததும்
    இப்பூமிமகள் தன் நெஞ்சில் அணிந்த
    முத்துமாலை போன்றதுமான
    புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினம்…

    காலை நேரம் உதித்து ஒளிபரப்பும் சூரியன் போலவும்
    மாலை நேரம் உதித்து வளரும் இயல்புடைய திங்கள் போலவும்
    வாழ்வாங்கு வாழ்வதாக!

    புகார்க் காண்டம் முற்றிற்று.
    அடுத்து வருவது  மதுரைக் காண்டம்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  245 – 271

    Share
  • குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?

    ராஜலக்ஷ்மி பரமசிவம்

    “என் பிரென்ட்  நாளை சர்க்கஸ் போகிறாள். நீ எப்பொழுது என்னை அழைத்துப் போகிறாய்? “

    “எனக்கு அந்த பொம்மை வேணும்.”

    நீங்கள்  யூகித்தது சரியே.  இது ஒரு சின்னஞ்சிறு குழந்தையின்  சிறிய ஆசைகள்.

    எத்தனை அழகான சந்தோஷமான   உலகம் இந்தக் குழந்தைகளுடையது. பேராசைகள் அற்ற, கள்ளம் கபடமில்லாத, பொறாமைகள் இல்லாத உலகம் அவர்களுடையது.

    அவர்களுடைய ஆசைகள் எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் தான். நாம் அதையெல்லாம் நிறைவேற்றி  வைக்கிறோமா என்பது கேள்விக்குறியே . ஆசைகள் நிறைவேற்றுவதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.அவர்களைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும் என்று தோன்ற வைக்கிறது இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் எல்லாம்.

    ஆசிரியரே, தன மாணவியிடம், தவறாக நடந்து கொள்வது,  சில சமயங்களில்,  அப்பாவே தன பெண்ணிடம்  முறை தவறி நடப்பது , என்று அவ்வப்பொழுது கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் நம்மால் என்ன செய்ய முடிகிறது  என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை  மறுக்க முடியாது.பெரும்பாலும்  பெண் குழந்தைகள் தான் இதில் பலியாகிறார்கள். இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆண் குழந்தைகளும் இப்படி பாதிக்கப் படுவதுண்டு. அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல உளரீதியாகவும்  பாதிக்கப் படுகிறார்கள்.

    இதற்கெல்லாம் என்ன காரணம்? நம்மால் இந்த சமுதாயத்தை திருத்த முடியுமா? எல்லோருக்கும் நம்மால் பாடம் எடுக்க முடியுமா என்ன? அதெல்லாம் நடவாதக்  காரியம் தான்.ஆனால் நம் வீட்டுக் குழந்தைகளைக்  காப்பாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவர்களுக்கு எது நல்லது என்பதை எவ்வளவுக்கெவ்வளவு  ஜாக்கிரதையாக தேர்வு  செய்கிறோமோ ,அதைவிடவும் அதி ஜாக்கிரதையாக  அவர்களுக்கு எது கெடுதல் விளைவிக்கக் டியது என்பதை ஆய்ந்தறிந்து, அதிலிருந்து அவர்களை காப்பாற்றுவது  மிக மிக  அவசியம்.

    அந்தக் காலத்தில், பெண்பிள்ளைகளும், ஆண்களும் தனித்தனியாக  படித்து வந்தகாலம். இப்பொழுது காலம் மாறி விட்டது எனலாம்.ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பது  என்பது காலத்தின் கட்டாயம்.  பல சமயங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களை தாக்க வரும் மனித மிருகங்களிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதை நாம் தானே அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.இதில் பெற்றோர்களின் பங்கு மிகப் பெரியது என்று சொல்லலாம். அதே சமயத்தில், ஆசிரியர்களின் பங்கும்  முக்கியமானதே! இருவரும், ஒருவரைஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதை நிறுத்திவிட்டு   தங்கள் கடமையை சரிவர  செய்தோமானால் , நம் குழந்தைகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றி விடலாம்.

    இதென்ன பிரமாதம் என்று தோன்றலாம்.”  குட் டச் ”  “பேட்  டச் ” என்று சொல்லிக் கொடுத்து விட்டால் ஆச்சு. அது எவ்வளவு கடினம் என்பது பல பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும்.

    அந்தக் கால்த்தில்,  நம் பாட்டிகள் சொல்வதுண்டு,  சொந்த சகோதரனேயானாலும்  பத்து , பன்னிரெண்டு வயதிற்கு மேல் தன்  சகோதரியை அடிப்பதோ, தொட்டு விளையாடுவதோ கூடாது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை எத்தனை உண்மை அதில் அடங்கியிருக்கிறது என்று தெரியும்.

    ஆனால் அதையெல்லாம்  எங்கே கேட்கிறோம் நாம். அதெல்லாம் பத்தாம் பசலித் தனம் என்று நினைத்து நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வது தான் இப்பொழுது நடந்தேறுகிறது.

    பெற்றோர்களும்  இப்பொழுது தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்கிற பெயரில்  அவர்களை  பலவித ஆபத்துகளில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் படித்தது நினைவிற்கு வருகிறது. தன தோழியின்  வீட்டிற்குப்  போய் விளையாடிவிட்டு அங்கேயே  தோழியுடன்  இரவைக் கழித்து விட்டு வரும்(Sleep Over), ஒரு பதின்மூன்று வயதுப் பெண்ணை , தோழியின் தந்தையே  சீரழித்து கர்ப்பமாக்கி விட்டது நினைவிற்கு வந்து வேதனைப் படுத்துகிறது. இது நடந்தது நம் நாட்டில் இல்லை என்று பெரு  மூச்சு விடலாம் . ஆனால்  அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்காது. இந்த sleep over மேற்கத்தியக் கலாசாரம் நம் நாட்டிலும் இப்போது   புகுந்து விட்டது என்பது  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  குழந்தைகள் பேசுவதிலிருந்துத் தெரிய வருகிறது. எதைத்தான் மேலை நாட்டிலிருந்து காப்பியடிப்பது என்கிற விவஸ்தை வேண்டாமா? இதைப் பெற்றோர்கள் முளையிலேயே கிள்ளி  எரிந்து விட்டால் நலம்.

    “good touch, bad touch   ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பதில் இருக்கும்  சங்கடங்கள்  ஏராளம் . குழந்தைகள்  கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லி மாளாது. ஆனாலும் நாசுக்காக சொல்லித் தான் தீர வேண்டும்.

    பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்  உதவுவதற்காக  உங்களுடன் ஒரு காணொளியைப் பகிர்கிறேன். இதைத் தைரியமாக குழந்தைகளுக்கு  போட்டுக் காட்டலாம். எந்த சங்கடமான  காட்சிகளும்  இல்லாதப் படம். குழந்தைகள், அவர்களின் பெற்றோர்   ஆகியோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய காணொளி.

    Child Line India வெளியிட்டுள்ள  காணொளி இது.

    உங்கள் நண்பர்களுடனும், உறவுனர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

    link  www.youtube.com/watch?v=4xQCauzPzY4

    காணொளி  நன்றி: Child Line Foundation India.

    Share
  • வார ராசி பலன் 17.0314-23.03.14

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் இந்த வாரம் அதிக தொகை செலவு செய்ய வேண்டி இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர் கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை- இரண்டையும் கட்டுக்குள் வைத்து விட லாம். பணியில் இருப்பவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் இல்லாமல் இருக்கு மாறு பார்த்துக் கொண்டால் அலுவலக உறவுகள் சீராகத் திகழும். வியாபாரி கள் செலவுகளை அதிகபடுத்தாம லிருப்பது அவசியம். சுயதொழில் புரிபவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தால்,வேலைகள் தேங்காமலிருக்கும். கலைஞர்கள் எந்த சூழலிலும், பதற்றத்திற்கு இடமின்றி நடந்து கொள்வது அவசியம்.
    ரிஷபம்: பணியில் இருப்பவர்கள் தங்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி பிறர் நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு போக விடாமல் விழிப்புடன் செயல்படுதல் அவசியம். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவால்,புதிய கிளைகளைத் திறக்கும் வாய்ப்பு மலரும். பெண்கள் இந்த வாரம் கட்டட பராமரிப்பிற்கென்று அதிக பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.கலைஞர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்குவாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல் பாட்டை கடைபிடியுங்கள்.நல்ல பெயர் நிலைத்திருக்கும். சுய தொழில் புரிபவர்கள்
    பண விஷயங்களில் அவசரமான போக்கைக் கடைபிடிக்க வேண்டாம்.
    மிதுனம்: . பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். அலுவலக ரீதியில் பதவிக்கேற்றவாறு பொறுப்பு கூடும். இந்த வாரம் மாணவர்கள் அதிக பயணங்களை மேற்கொள்வார்கள். பொது வாழ்வில் இருப்பவர்க ளுக்கு உறவுகளுக்கு உதவி மகிழும் வாய்ப்பு கிட்டும். நினைத்த காரியம் கைகூட, பேச்சு வார்த்தைகளில் இனிமையின் சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் நினைவில் வைப்பது நல்லது. சுயதொழில் புரிபவர் க கள் ஆரோக்கியத்தை நன்கு பாராமரித்து வருவது அவசியம். கலைஞர்கள் தொழில் ரீதியாக போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    கடகம்: மறைமுகப்போட்டிகளால், பொறுப்பான பணியில் இருப்பவர்கள், தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால், நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள். இந்த வாரம் தூக்கமின்மை, சோர்வு ஆகியவை பொது வாழ்வில் இருப்பவர்கள் செய்யும் பணிகளின் வேகத்தைக் குறைக்கலாம். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது அவசியம். கலைஞர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். மாணவர்கள் கேளிக்கைக்கக நேரம் செலவழிப்பதை குறைப்பது நல்லது.
    .
    சிம்மம்: கலைஞர்களுக்கு மனதிற்கு பிடித்த ஆபரண வகைகளை வாங்கி மகிழும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டால், நன்மைகள் பல உண்டு. இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப் பாக பணிபுரிதாலும், சில நேரம் சில்லறைத் தொந்தரவுகள் வந்து போகும். வியாபாரிகள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமல்,இருந்தாலே பாதி கவலை குறைந்து விடும். கலைஞர்களுக்கு உங்கள் கலைத் திறமைக்குக்குரிய கௌரவம் கிடைத்தாலும், சில நேரங்களில் திட்டமிட்டபடி வேலைகள் நடக்காமல் சற்றே இழுத்தடிக்கலாம்.
    கன்னி: கலைஞர்கள் தாழ்வு மனப் பான்மைக்கு இடம் தராமல் செயல்பட்டால்,ஒளிந்திருந்த திறமைகள் மீண்டும் சுடர்விட ஆரம்பிக்கும். வியாபாரி களுக்கு உங்கள் உழைப்பிற்குரிய பலனோடு உரிய தொகையும் சேர்ந்து கிடைப்பதால், மனதில் சந்தோஷம் பூக்கும். சுயதொழில் புரிபவர் கள் சரக்குத் தட்டுப்பாடு இல்லாதவண்ணம் பார்த்துக் கொண்டால், வாடிக்கையாளர்களின் தேவை எளிதில் நிறைவேறும். இந்த வாரம் விரும்பத்தகாத விஷயங்களால் பொது வாழ்வில் இருப்பவர் களின் மன அமைதி குறையலாம். பொறுப்பில் இருப்பவர்கள் ஊழியரிடம் வீண் வாக்குவாதம், சச்சரவு போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் அவசியம்.
    துலாம்: பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளா மல் அளவாகப் பழகிவருவது நல்லது.. காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் மாண வர்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். கலைஞர்கள் இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். பொதுவாழ்வில் இயங்கி கொண்டிருப்பவர்கள் தம்முடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். வியாபாரிகள் ஆரோக்கியமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்
    .
    விருச்சிகம்: கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் .சுறுசுறுப்புடன் திகழலாம் போட்டிகள்மூலம் உங்கள் திறமை வெளிப்படும் வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்னைகளின் தீவிரம் குறையும். இந்த வாரம் பொருளாதார சிரமங்கள் குறைவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் . முதியவர்கள் சிறு உடல் உபாதைகளால், கள் அவதிப்பட நேரிடும். .சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல் படுவர்.
    தனுசு: வியாபாரிகள் பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல்பட்டால், லாபத்தின் வரவில் குறைவிராது. ம ாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். கணக்கு வழக்கு துறைகளில் உள்ளவர்கள், சில சங்கடங்களை சமாளிக்க சந்திக்க நேர்ந்தாலும், தன் திறமையால் அனைத்தையும் சமாளித்து விடுவார்கள். ெப்ாது வாழ்வில் இருப்பவர்கள் எவரையும் எடுத்தெறிந்து பேசாமலிருந்தால், மன அமைதி கெடாமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை சற்று ஆறப் போடுங்கள். வீண் சிரமம் குறையும்.
    மகரம்: இந்த வாரம் மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு வியாபாரிகள் கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் இருக்கும் ஏற்றமும், இறக்கத்திற்கேற்ப வியாபாரிகள் செயல்படுவது அவசியம் . பெண்கள் பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களை கட்டுக்குள் வைத்துவிடலாம்.. வேலையில் இருப்போர்கள், பல சமயம் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் . ெப்ாது வாழ்வில் இருப்பவர்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும்.
    கும்பம்: மாணவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருந்தால் பொருளாதார இழப்புக்களைத் தவிர்த்து விடலாம். சோம்பலின்றி சுறுசுறுப்பாக பாடுபடும் கலைஞர்களை புகழ், அந்தஸ்து பதவி அனைத்தும் தேடிவரும். வியாபாரிகள் .எதிர்பர்த்த இடங்களிலிருந்து பணவரவு தாராளமாக இருக்கும். சிலசமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றபெண்கள் கடுமையாக உழைக்க நேரிடும்.
    மீனம்: பெண்கள் முன்கோபம், பதற்றம் ஆகியவற்றிற்கு இடம் தராமல், நிதானமாக செயலாற்றி வந்தால், உறவுகள் உங்கள் அருகிலேயே இருக்கும் . இந்த வாரம் வியா பா ரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும்.. மாணவர்கள்,கல்வித் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாய் அமையும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் சார்ந்த விஷ்யங்களில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள் ெப்ாது வாழ்வில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வாருங்கள், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும்.

    Share
  • நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா – கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. ஏ.சி.திருலோகச்சந்தர்.. ஏவிஎம்…

    கவிஞர் காவிரி மைந்தன்

    தலைவன் – தலைவியின் உறவும் பிரிவும் சமூக வாழ்க்கைத் தொடங்கிய காலம் முதல் தொடர்கிறது.

    தலைவன் – தலைவியின் உறவும் பிரிவும் சமூக வாழ்க்கைத் தொடங்கிய காலம் முதல் தொடர்கிறது. சங்க காலப் புலவர்களும் சளைக்காமல் இதுபற்றிப் பாடிக் குவித்துள்ளார்கள். அகவியல் சார்ந்த காதலில் உறவது தருவது இனிமையென்றால் பிரிவது தருவது கொடுமையன்றோ?

    விதவிதமாக விளக்கங்கள், புதுவிதமான கற்பனைகள், கவிஞர்களுக்கு கைகொடுத்துக் கொண்டேதான் வருகிறது. இதற்கான வரவேற்பும் பொது மக்களிடம் என்றுமே குறைவதில்லை. அண்மையில் கவிஞர் யுகபாரதி அவர்களுடன் ஏற்பட்ட சத்திப்பின்போது.. கவிதை.. இலக்கியம் பற்றி உரையாடியபோது.. அவர் குறிப்பிட்ட சேதியில்தான் எத்தனை உண்மைகள் உறைந்திருந்தன தெரியுமா?

    ஆம்.. இதுவரை.. உலகின் எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற இலக்கியங்கள் எவை தெரியுமா? Romance or Pathos அதாவது.. காதலின்பம் அல்லது சோகம் இவை தழுவி எழுதப்படாத எந்த ஒரு படைப்பும் அல்லது நூலும் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை என்றார்.

    பால் போலவே வான் மீதிலே
    யார் காணவே நீ காய்கிறாய்

    நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
    இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
    தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

    வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
    எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
    கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
    பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்

    சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
    சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
    மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
    மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

    படம்: உயர்ந்த மனிதன்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்: வாலி
    பாடியவர்: பி.சுசீலா

    பாடலைப் பாடிய திருமதி.பி.சுசீலாவிற்கு தேசிய விருது பெற்றுத்தந்த பாடல். காதலில் பிரிவும் கூட துன்பமான இன்பமானது என்பதைச் சொல்லும் பாடல். மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த உயர்ந்த மனிதன் பாடல் இது!

    Share
  • இது என் கண்ணீரே

    ராதா விஸ்வநாதன்images

    அன்று
    உன் முன் கோபம்
    என்னைக் கொன்று விட்டது
    உயிர் போகும் முன்
    கொடுத்தேன் தானமாய்
    என் கண்களை
    இன்று
    என் புகைப் படம் முன்
    கண்ணீர் விடுவது …
    நீ அல்ல
    அன்று
    நான் கொடுத்த
    என் கண்களே
    கண்ணீர் விடுகிறது  எனக்காக
    அனுப்புனர்
    நந்திதா

    http://sahzu.wordpress.com/2013/12/22/a-good-cry/ 

    Share
  • திருமால் திருப்புகழ் (27)

      கிரேசி மோகன் images (4)


    ’’என் குலதெய்வம் திருவிண் நகர் உப்பிலி அப்பன் திருப்புகழ்’’….
    ———————————————————————————————————

    தனதந்தன தத்தன தத்ததன தனதந்தன தத்தன தத்ததன
    தனதந்தன தத்தன தத்ததன -தனதான….
    ——————————————————————————————————————–
    “மனமுய்ந்துப ரத்தினில் சித்தமென உறவைந்துயெ ழுத்தவன் வெற்பருணைp66
    குடிவந்ததி ருட்சுழி சுத்தமன -ரமணேசர்
    புகல்கின்றஅ வித்தையை பற்றிவளர் புலனைந்தைய டக்கிவுயர் நிச்சலன
    சுகமங்கள நிட்டையில் நிற்கவருள் -புரிவாயே

    சினம்பொங்கநு தற்கனல் ருத்திரனை மதனம்பும யக்கிட விட்டகணம்
    ஒருசம்பவ புத்திரன் ,முத்தமிழின் -முதலாளி
    குடம்வந்தஅ கத்தியன் சத்குருவின், குறமங்கையும் அத்தியும் பத்தினிகள்
    எனசெந்தில்க டற்க்கரை நிர்பயனின் -முறைமாம

    பனைமஞ்சனை இட்டழ மக்கள்மனை பறைசங்கொலி சத்தம தற்க்கிடையில்
    பிணிமுந்திட தெற்க்கெமன் தொட்டிடுமுன் -வருவாயே
    மணலுண்டக ணத்திலி டைச்சிதொழ விசுவந்தனை சொப்பிதழ் சிற்றறையில்
    முனிபுங்கவர் மட்டிலும் எட்டியதை -அருள்வோயே

    கனகம்பொழி பத்தினி பக்கமுற இணைதன்நிக ரற்றிட இத்தரையில்
    திருவிண்நகர் உப்பிலி அப்பனென -திருநாமம்
    திகழ்சங்குசு டர்ச்சுழல் சக்கிரமும் சரணம்புகு பக்தரின் பக்கமென
    அபயம்தரு நிச்சய நட்புடைய -பெருமாளே

     

     

    Share
  • 2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]

     
     

    Pluto

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ

    http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE

    http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html

    (கட்டுரை -3)


    (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto)

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

     

    புதுத் தொடுவான் விண்கப்பல்
    பூதக்கோள்
    வியாழனைச் சுற்றி
    ஈர்ப்பு வீச்சில்
    வேகம் மிகையாகி
    விரைவாய் உளவப் போகுது
    புளுடோ வையும்
    சேரன் என்னும்
    துணைக் கோளையும் !
    முதலிரு வாயேஜர்
    விண் கப்பல்கள் காணாத
    புதுமைகள் காணும் !
    புளுடோ வுக்கும் அப்பால் பறந்து
    கியூப்பர் வளையத்தின்
    கோள்களை
    உளவச் செல்லும் !
    வால்மீன் மந்தை தோற்ற
    வளர்ப்பிடத்தை
    தெளிவாக
    ஆய்வுகள்  செய்யும் !
    வாயேஜர் விண்ணூர்தி போல்
    பரிதி மண்டல
    வரம்பைத் தாண்டி
    வரலாற்றிலே அடுத்த
    புதிய மைல் கல்
    நடும் நாசாவின்
    அதிசயத் தொடுவான் கப்பல் !

    +++++++++++

    நியூ ஹொரைசன் விண்ணுளவி புளுடோவின் புதிய சந்திரன்களையும், வளையங்களையும் கண்டுபிடிக்கும் என்று மெய்யான ஓர் எதிர்பார்ப்பு  உள்ளது.  புளுடோவுக்கு ஏற்கனவே  அறிந்த ஐந்து சந்திரன்கள் [சேரன், நிக்ஸ், ஸ்டைக்ஸ்,  ஹைடிரா & கெர்பெரோஸ்].  கணனி எண்ணியல் உருவாக்கத்தில் [Numerical Simulations] விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தூளான துணுக்குகள் புளுடோவை வளைங்களாய்ச் சுற்றி வருவதாகத் தெரிகின்றன !  அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன.  புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் !   பயணத்தில் என்ன காணப் போகிறோம் என்று அறியோம்.   அந்த எதிர்ப்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருக்கும் !

    அலன் ஸ்டெர்ன் [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    ஹப்பிள் விண்ணோக்கியில் மங்கலாகத் தெரியும்  புளுடோவின் தளவியல் முற்றிலும் இதுவரைத் தேர்வு செய்யப் படாதது ! வானியல் விஞ்ஞானிகள் புளுடோவைக் குள்ளக் கோள் என்று ஒதுக்கினும், தள இயக்கங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல.   ஒரு கார் புளுடோவின் மத்திய ரேகையில் சுற்றி வந்தால் 5000 மைல் தாரம் என்று தொலைக் கருவி [Odometer] காட்டிவிடும்.    அது நியூயார்க் மன்ஹாட்டன் -மாஸ்கோ தூரம் ஆகும்.   அந்தப் பயணத்தில் ஒரு பயணி குளிர்ந்த நீரெழுச்சிகள், பள்ளக் குழிகள், முகில்கள் [Icy Geysers, Craters, Clouds] காண நேரிடலாம்.

    அலன் ஸ்டெர்ன்  [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    New Horizon Approac to Pluto

    குள்ளக் கோள் புளுடோவில் கடல் இருக்க வாய்ப்புள்ளதற்கு இரண்டு சார்பு அளவுகள் முக்கியம்  : முதலாவது அதன் பாறை உட்கருவில்  உள்ள கதிரியக்கப் பொட்டாசியம் அளவு [Radioactive Potassium Quantity] [75 parts per billion]. இரண்டாவது  அதை மூடியுள்ள பனிக்கட்டியின் உஷ்ண அளவு [-230 டிகிரி C].  புளுடோவின் திணிவு [Density] கணிப்புப்படி 40% பாறைக் கொள்ளளவு.  தேவையான அளவு கதிரியக்கப் பொட்டாசியம் இருந்தால், தேய்வு வெப்பமே பனிக்கட்டி [Mixure of Nitrogen & Water] நீராக உருகத் தகுதி அளிக்கும்.

    கியில்லமேம் ரோபூச்சன் & ஃபிரான்சிஸ் நிம்மோ [காலிஃபோர்னியா பல்கலை கழகம்]

    நாசாவின் விண்ணுளவி புது தொடுவான் இப்போது எங்கே பயணம் செய்கிறது ?

    2006 ஜனவரியில் ஏவப்பட்ட நாசாவின் விண்கப்பல் “நியூ ஹொரைசன்” இப்போது [மார்ச்சு 15, 2014] சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளான நெப்டியூன்  புறக்கோளைத் தாண்டப் போகிறது.  நாளொன்றுக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் பயணம் செய்து,  சுமார் 3 பில்லியன் மைல் கடந்து, அடுத்து 2015 ஜனவரியில் முதன் முதலாய்க் குள்ளக் கோள் புளுடோவை நெருங்கிப் படமெடுக்கும்.  பிறகு 2015 ஜூலை 15  புளுடோவை 6000 மைல் [10,000 கி.மீ] தூரத்தில் உளவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

    இதுவரை குள்ளக் கோள் புளுடோ ஆழ்ந்து ஆராயப்பட வில்லை.  முன்பு நெருங்கிச் சென்ற வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] இத்துணை அருகில் புளுடோவை நோக்கிச் செல்லவில்லை.  குள்ளக் கோள் புளுடோவில் பல மர்மங்கள் / புதிர்கள் உள்ளன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.   புளுடோவின் பனிக்கடியில் கடல் ஒன்று இருக்கலாம் என்றும் நீரெழுச்சிகள் [Geysers] பல  இருக்கலாம் என்றும் யூகிக்கப் படுகின்றன.  இப்போது ஐந்து சந்திரன்களை [Charon, Styx, Nix, Kerberos & Hydra] புளுடோ கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.   மேலும் புதிதாகச் சந்திரன்கள் கண்டுபிடிக்கப் படலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.   பல்லாண்டுகளாக, விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தெறித்த துணுக்குகள், தூசிகள் புளுடோவை வளையங்களாகச் சுற்றி வரலாம் என்றும் யூகிக்கப் படுகிறது !  2015-2016 ஆண்டுக்குப் பிறகு நாசாவின் நியூ ஹொரைசன் விண்ணுளவி வால்மீன்கள் தோன்றும் கியூப்பர் வளையத்தைப் படமெடுத்துக் கடந்து செல்லும்.   இறுதியாக 2020 ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி, முந்தி அனுப்பிய வாயேஜர் விண்கப்பல்கள் போல், புது சூரிய மண்டலத்தின் ஊடே பயணம் செய்யும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

     

    New Horizon Travel Path

    இந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம்  வெற்றிக் கதை சொல்வது.   நியூ ஹொரைஸன்  விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ  உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை.   முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால்  புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு.   இரண்டாவது  பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி.   அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்”  (Certification of  Hibernation Cruise Science).   புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”

    அலன் ஸ்டெர்ன்  (Alan Stern, New Horizons Principal Investigator)

    “சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல்  அனுப்பும்.  இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும்.   அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”

    ஜேம்ஸ் ஷாலே  (James Szalay, University of Colorado Graduate Student & SDC Instrument Leader )

     

    “சனிக்கோளுக்கு அப்பால் தீரச் சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப்  புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”

    “இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது.   சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது  அவசியப் படுகிறது.”

    மாத்யூ ஹில்  (New Horizon PEPSSI Instrument Scientist, Johns Hopkins University, Md)

    “பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது.  அது நமது புதுத் தொடுவான் விண்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்தியதோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது.  இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே !  மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”

    அலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.

     

    “இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம்.  வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது.  புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”

    ஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா

    நியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன

    2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.    தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65  AU) (1 AU =  One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles]  கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல்  புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது.    விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன.   இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன.   இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும்.   அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.

    சூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere]  என்பது, அதி வேகச் சூரியப் புயல்  அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே.    தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்கப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும்  ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன.    அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது.   அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.

     

     

    முதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது.   அந்த SDC  கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே.  முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது.   ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது  SDC  கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை  எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு  அனுப்புகிறது.   பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    விண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto  &  PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11,  வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை,  சிறப்பானவை.  இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும்.    விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும் பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும்.  2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP &  PEPSSI  ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.

     

    New Horizon Spaceship

     

    புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்

    1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல்களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக்  கடந்து விட்டது.  2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது.  அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீனக் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது.  நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது.  விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.

     

    Current position of spacecraft

    2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான்.  சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது.  விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது.  விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது.  இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும்.  வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது.  அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

     

    புதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன ?

    புதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர்.  இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும்.  புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது.  ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.கி (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது.  சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது.  இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.

    அடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும்.  அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும்.  2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும்.  2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும்.  பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் !

     

     

    பூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    முதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது.  அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர்ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது.  சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது.  ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமியிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது.  அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.

    வியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன.  கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது.  வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது.  2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது.  மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது.  அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.

    Project Details

    வியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    புதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது.  விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது.  அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது.  அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.

    புதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன.  முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது.  அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது.  இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத்தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது.  அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது ! பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் !  வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் !

     

     

    (தொடரும்)

    படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html (Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html  (Uranus & Neptune)

    d)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=41005231&format=html (Voyager 1 & 2 Travel Beyond the Solar System.

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2019)

    7.  NASA Report – Pluto-Bound New Horizon Spacecraft Sees Changes in Jupiter System (September 10, 2007)

    8.  Wikipedia Report : New Horizons Spacecraft (May 26, 2010)

    9.  Astronomy Magazine :  How We Will Explore Pluto ?  NASA’s New Horizon Probe By : Richard Talcott (July 2010)

    10.  Pluto-Bound NASA Spacecraft to Collect More Data When Hibernating During Travel  (July 9, 2012)

    11.  Outer Planets :  New Horizons Doing Science in its Sleep (July 10, 2012)

    12.  http://www.decodedscience.com/new-horizons-nasas-pluto-bound-spacecraft-keeps-going-going/39941  [December 4, 2013]

    13. http://www.redorbit.com/news/space/1113047356/new-horizons-approaching-pluto-011514/  [January 13, 2014]

    14.  www.dailygalaxy.com/my_weblog/2014/01/the-unexplored-planet-nasas-fastest-spaceship-on-approach-to-pluto-1.html?  [January 18, 2014]

    15.  http://en.wikipedia.org/wiki/New_Horizons  [March 12, 2014]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) March 15, 2014

    Launch of NASA’s New Horizons Spacecraft

    ScienceCasts: Countdown to Pluto

    Dr. Alan Stern: “New Horizons to Planet Pluto: Exploring the Frontier of Our Solar System”
    Share
  • திருமால் திருப்புகழ் (26)

     

    தசாவதாரத் திருப்புகழ்….
    ———————————————

    images (5)
    ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று’’ மெட்டில்
    ஏழு மலையேறி எமையாளும் முகமொன்று….

    ——————————————————————————————————————-
    “மீனமென வந்துமறை மீட்டமுகம் ஒன்றுImage4
    மேருமலை தாங்கவரும் ஆமைமுகம் ஒன்று
    ஏனமென பூமிதனை ஏந்துமுகம் ஒன்று
    தூணதிர சீயமென தோன்றுமுகம் ஒன்று
    தானமுற மாபலிமுன் ஓங்குமுகம் ஒன்று
    மூணுவித ராமனென மூண்டமுகம் ஒன்று
    கானமுர ளீதரமு ராரிமுகம் ஒன்று
    ஞாலபரி பாலதச மானபெரு மாளே”….
    ——————————————————————————————————–

     

     

     

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (25)

     
    கிரேசி மோகன்

    1rama
    தாத்தன தத்த தனந்த தாத்தன தத்த தனந்த
    தாத்தன தத்த தனந்த -தனதான….

    ——————————————————————————————————————–
    “சாப்பிடும் சக்தி இழந்து, பேச்சில்பி தற்றல் மிகுந்து Ramana11
    மூப்பினில் புத்தி மழுங்க -எமனேள
    காப்பிடு பத்னி கலங்க , தீக்கிட மக்கள் நெருங்க
    ஆப்பதில்சிக்கு குரங்கின் -கதையாவாய்

    கேட்பதை விட்டு ணவின்றி ,மாற்றுடை யற்று, குளிர்ந்த
    காற்றினில் வெப்பில் திரிந்த -ரமணேசர்
    மூச்சைய டக்கி மடிந்து கூற்றைவி ருப்பில் கலந்து
    வேற்றுரு வுற்று விரைந்து -அருணேசர்

    கூப்பிட அப்ப திசென்று சேர்த்த சுகத்தி னில்பங்கு
    வாய்க்கயெ னக்கு வழங்க -அருள்வாயே
    சூர்பகை யுச்சம் விளங்க வேற்படை வெற்பி லெறிந்த
    தீக்கண்பி றப்பு குகன்தன் -முறைமாம

    சூர்ப்பண கைக்கு வலிந்து மூக்கைய றுத்தவ் விலங்கை
    ராக்கத னுக்குள் புகுந்த -அவதார
    வீற்றுப டுத்து நிமிர்ந்து ஆற்றடி,வெற்பில் அமைந்த
    நூற்றொடு யெட்டில் இலங்கு -பெருமாளே”

    Share