Blog

  • “தர்மாம்பாள் குறம்”

    தஞ்சை வெ.கோபாலன்

     

    குறவஞ்சி இலக்கியம் நமக்கெல்லாம் புதியது அல்ல. அவற்றில் மிகப் பிரபலமானது “திருக்குற்றாலக் குறவஞ்சி”. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் சரபோஜி மீது பாடப்பட்ட “சரபோஜி பூபால குறவஞ்சி” இன்னொன்று. இவைகள் எல்லாம் காலத்தால் பிற்பட்டவை. மொழி நடையும் சற்று கொச்சையாக நாட்டுப் புற வாடையுடன் இருக்கும். இந்த வகையில் இன்னொரு குறவஞ்சியும் திருவையாற்றில் கோயில் கொண்டுள்ள தர்மசம்வர்த்தினி எனப்படும் அறம்வளர்த்த நாயகி மீதான குறவஞ்சி ஒன்று உண்டு.

    இந்த குறவஞ்சிக்கு “தர்மாம்பாள் குறம்” என்று பெயர். தர்மசம்வர்த்தினியைத்தான் தர்மாம்பாள் என்பார்கள். திருவையாற்றுப் பகுதியில் பிறந்த பல பெண்களுக்கு இந்தப் பெயர் வைப்பார்கள். இந்த குறம் பற்றி திருவையாறு இசைக் கல்லூரி முதல்வராக இருந்த முனைவர் இராம கெளசல்யா அவர்கள் ஒரு தீபாவளி மலரில் கட்டுரையொன்று எழுதியிருந்தார். திருவையாற்றை அடுத்த தில்லைஸ்தானம் தான் அவருடைய ஊர். அவரிடம் கேட்டபோது தன்னுடைய இளம் வயதில் அந்த ஊரில் சில பெண்மணிகள் இந்த குறம் பாடல்களைப் பாடிக் கேட்டிருப்பதாகவும், அது சுமார் 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது என்றும் சொன்னார். அதைத் தேடிக் கண்டுபிடித்து திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் – தர்மசம்வர்த்தினி அம்பாள் ஆலய குடமுழுக்கு விழாவையொட்டி மறுபதிப்பு செய்தால் என்ன என்று ஆலயத்தின் கட்டளை விசாரணை முனைவர் குமாரசாமி தம்பிரான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, முனைவர் கெளசல்யா அவர்கள் பல இடங்களில் தேடி பழைய பிரதியொன்றைக் கண்டுபிடித்து அதை புதிதாக மறுபதிப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நூலை அவர் ஆர்வமுள்ளவர்களுக்கு விலையில்லாமல் கொடுக்கவும் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. முனைவர் இராம கெளசல்யா அவர்கள் தில்லைஸ்தானத்தில் “மரபு ஃபவுண்டேஷன்” எனும் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதற்காக அதே ஊரில் ஒரு வீட்டையும் வாங்கி அங்கு சிறுவர் சிறுமியருக்கு நமது பாரம்பரியக் கலைகள், இலக்கியங்கள், இசை, நாடகம், நடனம் போன்றவற்றைக் கற்பித்து வருகிறார்கள். தேவார வகுப்புகளும், வெளிவராத பல அரிய இசை நூல்களையும் வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். ஊத்துக்காடு வேங்கடகவியின் பல அரிய வெளிவராத பாடல்களை ஒருவார காலம் பயிற்சி வகுப்பு எடுத்து இசை ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். இளம் குழந்தைகளுக்கு கோலாட்டம், கும்மி, பூத்தொடுத்தல், கையால் துணி தைத்தல், சமையல் செய்தல், கோலம் போடுதல், அகராதி பார்க்கும் முறை, ஆங்கிலப் பயிற்சி, தமிழில் பிழையின்றி பேசுதல் போன்ற பல தலைப்பில் வகுப்புகள் இங்கே எடுக்கப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் பயிற்சிகளுக்கு தங்கவும், உணவும் இங்கேயே தந்து விடுகிறார். இவை அனைத்தும் அவருடைய சொந்த செலவில் நடைபெறுவதுதான் முக்கிய அம்சம். இவருடைய தாயார் ருக்மிணி அம்மாள், தங்கை மீனாட்சி, மீனாட்சியின் மகள் ஆகியோர் இந்தப் பணியில் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

    இப்போது அந்த “தர்மாம்பாள் குறம்” பற்றி சிறிது பார்க்கலாம். காவிரி நதியானது சமுத்திர ராஜனைத் தேடி கிழக்காக ஓடிவரும் சமயம் திருவையாற்றை அடைந்த போது அங்கு கோயில் கொண்ட தர்மசம்வர்த்தினி அவளைத் தடுத்து நிறுத்தி அங்கேயே இருக்கும்படியும் சமுத்திரராஜனை இங்கே வரவழைப்பதாகவும் குறத்தியாக வந்து குறி சொல்வதாக அமைந்தது இந்த இலக்கியம்.

     

    தர்மாம்பாள் குறம்

    கடவுள் வணக்கம்

    (கண்ணிகள்)

    1. சரணமய்யா கணபதியே சரஸ்வதியே முன்னடவாய்
    ஆறுமுக வேலவனே அன்புடனே துணை வருவாய்
    2. பார்வதியாள் குறவடிவை பக்தியுடன் நான்பாட
    அறம் வளர்த்த நாயகியின் அழகான குறம்பாட
    3. காவேரிக்குக் குறிகள்சொன்ன கதையைநானும் எடுத்துரைக்க
    விக்கினங்களில்லாதே விநாயகரே முன்வருவீர்!

    லோபாமுத்திரை காவேரி நதியாக வருதல்

    4. ஸஹ்யமலை தனில்பிறந்து சமுத்திரரை மாலையிட
    அகஸ்தியரை பிரிந்துமவள் அரியபெரும் நதியாகி
    5. தட்சணத்தின் கங்கையென்னும் ஜலரூபந் தனையடைந்து
    ஜலமரூபியாய் காவேரி யென்னும் திருநாமத்துடனே வந்தாள்
    6. குடகுமலை தன்னைவிட்டு காடுசெடி மலைதாண்டி
    பர்வதத்தைப் பிளந்துகொண்டு பாம்புகளைச் சேர்த்துக் கொண்டு
    7. மலையைப் பிளந்துகொண்டு மரங்களெல்லாம் பேர்த்துக் கொண்டு
    செடிகொடியைப் பிடுங்கிக் கொண்டு தோழிமாரைக் கூட்டிக் கொண்டு
    8. ஆப்தமான தோழிமார்கள் ஐந்துபேரைச் சேர்த்துக் கொண்டு
    அமராவதி யென்னுமொரு அன்புடைய தோழியையும்
    9. பவானி யென்னுமொரு பிரசித்தமான தோழியையும்
    லக்ஷுமணா நதியான லக்ஷணமாந் தோழியையும்
    10. ஹேமவதி யென்னுமொரு இஷ்டமான தோழியையும்
    காஞ்சனா நதியென்னுமொரு களிப்புடைய தோழியையும்
    11. தோழிமாரைக் காவேரியம்மன் துணையாகச் சேர்த்துக் கொண்டு
    பரவியெங்கும் நிறைந்துகொண்டு பார்வையாக வந்துவிட்டாள்
    12. உயர்ந்து வரும் நுரையழகும் உத்ஸாக கொந்தளிப்பும்
    பெருகியந்தக் காவேரிநதி அலைமோத வந்துவிட்டாள்
    13. குயில்கூவி குதூகலிக்க குள்ர்ந்தகாற்று வீசிவர
    சோனைதூரத் தென்றல்வீச சிறந்த நதியாக வந்தாள்
    14. கனத்தசெடி குடிசைகளும் காட்டுமிருகம் பலவகையும்
    வாழையுடன் கமுகுதென்னை வாரிக்கொண்டு வந்துவிட்டாள்
    15. சாமுண்டி மலையருகில் ஸ்தலங்களெல்லாம் சுற்றிக் கொண்டு
    மைசூரு ராஜ்ஜியத்தில் வைபோகமாய் நிறைந்து கொண்டு
    16. சிவசமுத்திரந் தன்னில் வந்து சிலபிரிவாய்க் கீழிறங்கி
    ஸ்ரீரங்கப் பட்டணத்தில் ரங்கருக்கு மாலையாகி
    17. ஈரோடு கொடுமுடியின் எல்லைவழி யாக வந்து
    அகண்டமென்னும் காவேரியாய் அழகுடனே பரவிவந்தாள்
    18. ஜம்புநாதர் ஸ்ரீரங்கர்க்கு திருமாலையாக வந்தாள்
    பாற்கடல்போல் அலைமோத படுகையெங்கும் நிறைந்துவந்தாள்
    19. வயல்களெல்லாம் நிரப்பிக் கொண்டு வேகமாக வந்துவிட்டாள்
    அறம்வளர்த்தாள் படித்துறைக்கு ஐந்துமுகத் தோடு வந்தாள்
    20. பஞ்சநத க்ஷேத்திரத்தில் காவேரியும் வந்தவுடன்
    ஆள்கொண்ட சுவாமிசென்று அறம்வளர்த்தாளுக்கு அறிக்கையிட்டார்
    21. அம்பிகையாள் தானெழுந்து ஆபரணஞ் சோதிவிட
    பாக்குடனே வெற்றிலையும் பழத்துடனே தேங்காயும்
    22. மஞ்சளுடன் குங்குமமும் மணமுடைய சந்தனமும்
    புஷ்பவகை யுள்ளதெல்லாம் தட்டினிலே எடுத்துக் கொண்டு
    23. காவேரியை வரவேற்று காணிக்கையும் தான்கொடுத்தாள்
    வாங்கிக் கொண்டு காவேரி வணங்கி நமஸ்கரித்தாள்
    24. வாழ்த்தியப்போ அம்பிகையும் நதியைக் கண்டு மனமகிழ்ந்தாள்
    சமுத்திரரை நானடைய சந்தோஷமா யனுப்புமென்று
    25. காவேரி கேட்கலுமே கல்யாணிதேவி சொல்வாள்
    சமுத்திரரை இங்கழைப்பேன் சந்தோஷமா யிருப்பாயென்றாள்
    26. காவேரி கேட்டுமதைக் கலங்கியவள் தன்மனதில்
    சரீரமெல்லாம் அங்கேவைத்து சாக்ஷியாக ஒருரூபம்
    27. சாக்ஷியான காவேரி சாகரத்தை நோக்கிச் சென்றாள்
    அம்மனுட ஆக்ஞையினால் சமுத்திரரும் அக்ஷணமே
    28. உத்ஸாகத் துடனேவந்தால் உலகமெல்லாம் முழுகுமென்று
    பாதாளத்தில் மறைந்துகொண்டு பட்டணத்தின் நடுவேவந்தார்
    29. ஸ்தலத்தினுட மகிமைதன்னை சமுத்திரருந் தான்பார்த்தார்
    ஸப்தஸ்தல சுவாமிகளும் சமுத்திரரை வரவேற்று
    30. பழங்களுடன் தாம்பூலம் பிரஸாதங்களும் தான்கொடுத்தார்
    வாங்கிக்கொண்டு சந்தோஷமாய் சமுத்திரரும் போய்மறைந்தார்
    31. சாக்ஷியென்னும் காவேரிநதி சாகரத்தில் தேடிவிட்டு
    திரும்பிவந்து காவேரி தயங்கி மனந்தளர்ந்து
    32. சமுத்திரரை யடையவென்று தர்மாம்பாளை நினைந்து
    கன்னிகையாய் திருவையாற்றில் காவேரி தவமிருந்தாள்
    33. பார்வதியாள் காவேரியை பரிஹாஸம் பண்ணவென்று
    அறம்வளர்த்தாள் குறவடிவை அழகாகத் தானடைந்தாள்.

    தர்மாம்பிகை குறத்தி வடிவெடுத்தல்
    (2ஆவது வேறு மெட்டு)

    1. பாடகந் தண்டையும் பாதஸரமும்
    பத்து விரலுக்குப் பீலிமெட்டியும்
    அடுக்குமோதிரம் சங்குவளையும்
    அஸ்தகடகமும் தோள்வளையும்
    2. குண்டும் பவழமும் குடமணித் தாழ்வடம்
    கோத்தமுத்துடன் வஜ்ஜிரமாலையும்
    சங்கு மணியும் பச்சை மணியும்
    சரப்பளி உத்தண்டா மோகனமாலையும்
    3. கொப்புடன் நல்ல முத்துவாளியும்
    குந்தளஓலையும் குடைக்கடுக்கனும்
    மின்னல் ஒளிபோல மூக்குத்தியும்
    முத்துக்கட்டின வஜ்ஜிரக்கல்லும்
    4. பல்லொளியும் புன் சிரிப்பும்
    பவழம்போல சிவந்த வாயும்
    கண் மலரும் மையழகும் இரு
    கண்ணிடையில் பச்சிலைப்பொட்டும்
    5. கஸ்தூரிப்பொட்டும் நெற்றியின் பட்டமும்
    கல்லிழைத்த சுட்டியாழ்வானும்
    மல்லிகை முல்லை மலர்கள்சூடி
    மயிரைவாரி முடிந்த அழகும்
    6. கறுப்பு ரவிக்கையும் பட்டுப்புடவையும்
    கச்சிதமாகவே உடுத்தவழகும்
    பாலகனை மார்புடனே
    பட்டுத் தலைப்பாலே அரவணைத்து
    7. குஞ்சுகளைக் குறத்தியம்மை
    கூடத்தன்னுடன் கூட்டிக்கொண்டு
    கொடிபோல இடையும் துவளக்
    கூடையெடுத்து இடுப்பினில் வைத்து
    8. பாக்குப்பையும் இடுப்பில் சொருகி
    பாவனையாகவே சாய்ந்துநடந்தாள்
    காதுவரையில் நீண்ட கண்ணும்
    கனிவாயும் புன்சிரிப்பும்
    9. செண்பகம் போல் மேனிவர்ணமும்
    செந்தாமரை போல் முகமும்
    தாழைமடல் போன்ற காதுகளும்
    சந்திரன்போல வளைந்த நெற்றியும்
    10. பஞ்சநதி திருவையாற்றின்
    பெரியதொரு வீதியிலே
    தையலந்த வண்ணக் குறத்தி
    தானும் வந்தாள் குறிபார்க்க.

    ஸ்திரி ஜனங்கள் குறத்தியிடம் குறிகேட்டல்

    11. செம்பொன் கொடிபோல் மெல்லநடந்து
    தெருவீதி சுற்றி வந்தாள்
    தேர்மூட்டியினருகே நின்று
    சிவதெரிசனம் பண்ணிக்கொண்டு
    12. சிங்காரமாகவே வண்ணக் குறத்தி
    தென்னண்டைவீதித் தெருவில் வந்தாள்
    அம்பிகையென்னுங் குறத்தியிடத்தில்
    ஆதரவாய் வந்து மாந்தரெல்லாம்
    13. கூட்டமாய்க் கூடியே கொம்பனைமாரெல்லாம்
    குறத்தியைப்பார்த்து கேட்கத் துவங்கினார்
    பெண்களிரண்டுபேர் புத்தியறியல்லை
    இங்கழைத்துவந்தேன் பாராய் குறத்தி
    14. மூத்தபிள்ளைக்கு வேட்க வகையில்லை
    சாஸ்திரம் பாரென்று சொன்னாளொருத்தி
    இளையபிள்ளையும் என்னுடன் பேசவில்லை
    எனக்குச் சொல்லென்று கேட்டாளொருத்தி
    15. கைக்குழந்தைக்கு காச்சலடிக்குது
    காட்டவந்தேனென்று சொன்னாளொருத்தி
    நாத்தானாருக்கு ஆத்துப் புருஷன்
    நலமில்லையென்று கேட்டாளொருத்தி
    16. கொழுந்தனாரொத்தன் கூத்தியார் வீட்டிலே
    குடியாய்க் கிடக்கின்றான் என்றாளொருத்தி
    தோழியொருத்தி துர்க்கனா காண்கிறாள்
    திருநீறுதாவென்று கேட்டாளொருத்தி
    17. மாமனாருக்கு மண்டையிடிக்குது
    மாத்திரை தாவென்று கேட்டாளொருத்தி
    நாட்டுப் பெண்ணுக்கு பேய்பிடித் தாட்டுது
    நல்ல மருந்துதா வென்றாளொருத்தி
    18. இப்படிப் பெண்டுகள் எல்லாருங் கேட்கவே
    இங்கிதமாகக் குறிகளுஞ் சொல்லி
    கலாஸநாதரை ஆலயஞ் சென்று
    கண்டுபின் வந்து குறிகளுஞ் சொல்வேன்
    19. என்று சொல்லியந்தப் பெண்டுகளுடனே
    ஈச்வரியாகிய வண்ணக்குறத்தி
    அம்பிகை என்னும் வண்ணக்குறத்தி
    ஆள்கொண்டார் கோவிலைக் கண்டுதொழுது
    20. ஆள்கொண்ட சுவாமியின் கோயிலைவிட்டு
    அய்யாரப்பரின் சந்நதிவந்தாள்
    சூர்யபுஷ்கரணி ஜலத்தை யெடுத்து
    ஸிரஸின் மேலே தெளித்துக் கொண்டாள்
    21. தென்கைலாஸம் வடகைலாஸம்
    சுற்றிப்ரதக்ஷணம் பண்ணிவந்தாள்
    சுவாமியுடைய சந்நதித் தூணில்
    சாய்ந்திருந்தாள் வண்ணக்குறத்தி
    22. சந்நதியிலே யிருந்த குறத்தி
    வடிவைக்கண்டு சங்கரரும்
    கயல்மீன் போன்ற கண்ணழகும்
    கஸ்தூரிப்பொட்டும் முகஒளியும்
    23. புன்சிரிப்பும் பல்லொளியும்
    புவனேச்வரி வடவழகும்
    ராஜேச்வரி அழகைக் கண்டு
    நாலுநாழி பிரமித்திருந்தார்
    24. இந்நெடு நாளிதுவரைக்கும்
    இந்த வடிவை நாம் கண்டதில்லை
    மன்மதனை யெரித்த சிவன்
    மயங்கியே தன் மனதிற்குள்ளே
    25. காமனைநீறா யெரித்த சிவன்
    கலங்கியே தன் மனதிற்குள்ளே
    அந்தக் குறத்தி வடிவைக்கண்டு
    ஆசையுடன் மோகங் கொண்டார்.

    பஞ்சநதீசர் சுந்தரவடிவுடன் குறத்தியிடம் வந்து
    சம்பாஷித்தல். (3ஆவது வேறு மெட்டு)

    1. கைவளையும் சங்கிலியும் கணையாழி மோதிரமும் (சுவாமி)
    கடுக்கனுடன் பதக்கம்கண்டி சரப்பளியும் தரித்தார்
    2. சாயக்கம்பி வேஷ்டிகட்டி சரிகைச்சால்வை யணிந்து
    தலைப்பாகையும் உருமாலை சங்கரரு மணிந்தார்
    3. சந்தனக் குறுக்குமிட்டு ஜவ்வாதுப் பொட்டுமிட்டு
    தங்கரைஞாண் தாழித்தும் கந்தம் புனுகணிந்தார்
    4. கொழுந்து வெட்டிவேர் மல்லிகை குடமல்லிகைப் புஷ்பம்
    குமுகுமுன்னு பரிமளிக்க குடுமியிலே அணிந்தார்
    5. வாயிலே பாக்கடக்கி வெண்பட்டுப் பைபிடித்து
    மடித்ததொரு வெற்றிலையை விரல்நடுவி லிடுக்கி
    6. கந்தர்வ வேஷத்துடன் குறத்தியிடம் வரவே (சுமாமி)
    கூர்விழியால் மயக்கியந்தக் குறத்தி மெள்ளச் சிரித்தாள்
    7. ஈச்வரரைக் கண்டவுடன் எழுந்திருந்து குறத்தி (அம்மை)
    இருகையினா லுங்கூப்பி அடிவணங்கி நின்றாள்
    8. வாரும்பெண்ணே குறத்தியேயுன் வடிவைக்கண்டு வந்தேன்
    மாலையிட்ட உன்கணவன் வந்தானோகூட
    9. தாய்தகப்பன் உனக்குமுண்டோ சகோதரர்கள் உண்டோ
    ஜாதிகுலம் நாமந்தன்னை தனித்தனியாய் சொல்வாய்
    10. எந்தநாடு எந்ததேசம் எங்கேவந்தாய் குறத்தி
    இந்நெடுநாள் உன்போல் வடிவைக்கண்டது நானில்லை
    11. சித்திரைத் திருநாளுக்கு ஜனங்கள் மெத்த வருவார் (ஆனால்)
    சுந்தரிஉன் வடிவைப்போல கண்டது நானில்லை
    12. வைகாசி வஸந்தனுக்கு மனுஷ்யாள் இங்கு வருவார் (ஆனால்)
    வையகத்தில் உன்னைப்போன்ற வடிவைக் கண்டதில்லை
    13. செல்லத்துடன் சிவனாரும் சுந்தரியைக் கேட்க
    வண்ணக் குறத்திகேட்டு மயக்கியவ ளுரைப்பாள்
    14. ஜாதிகுலங் கேட்டீரே சுவாமியென்னை யிப்போ – நான்
    தனித்தனியா யெடுத்துச் சொல்வேன் சலியாமல் கேளும்
    15. ஜாதியும் நான் குறச்சாதி தனிவழியும் வருவோம் – நாங்கள்
    சாம்பபர மேசருக்கும் சம்பந்தங்களுண்டு
    16. அப்பன் ஆயி என்னை அம்பிகையென் றழைப்பார்
    என் அண்ணன் பெயர் சக்ரபாணி ஆறுமுகனென் பிள்ளை
    17. குச்சுக்கு காவலாயென் கிழவனாரும் இருப்பார்
    கூடைமுறங் கட்டிநாங்கள் குறிபார்த்துச் சொல்வோம்
    18. குஞ்சுகளின் பசியார அன்னமது கொடுத்து
    கொழித்தமுத்தும் முறத்தில் வைத்தால் குறிபார்த்துச் சொல்வேன்
    19. வண்ணக் குறத்தியிந்த வக்கணைகள் படிக்க
    கேட்டுமந்தப் பரமேசருங் கம்பீரமாய்ச் சொல்வர்
    20. பட்டுச்சீலை படியரிசி பாக்குடன் வெற்றிலையும்
    பசியடங்கப் பட்டைசாதம் பணமுங்காசுந் தருவேன்
    21. உன்கணவன் கிழவனென்று சொன்னாயேநீ பெண்ணே
    கந்தருவன் போன்றநானே உன்னழகுக் கேர்வை
    22. செல்லத்துடன் சிவனாரும் சிரித்துக்கொண்டே சொல்ல
    வண்ணக்குறத்தி சினந்து மறுத்திதனைச் சொல்வாள்
    23. என்கணவன் குறவனெங்கள் கிழவனிதைக் கேட்டால்
    ஈட்டியினாலே குத்தி என்னை இழுத்தெறிவார்
    24. ஆசைபெரிதென்று சொல்லி உம்மை நானுமடைந்தால்
    அறம்வளர்த்த நாயகியும் அக்கினியால் தகிப்பள்
    25. வேலைசெய்யத் தாதியுண்டு பாக்கியமெனக் குண்டு
    விதம்விதமாய் பட்டுமுண்டு வெகுபணதி யுண்டு
    26. கட்டிலுண்டு மெத்தையுண்டு கிழவனரு கிருப்பேன்
    களஞ்சியத்தில் அரிசியுண்டு கவலை கெடயிருப்பேன்.

    குறத்தி ஈசருக்குதன் பெருமையுரைத்தல்
    (2ஆவது மெட்டுப்போல் பாடலாம்)

    1. கோத்தமுத்து மாலையுடன் கொப்புடனே வாளிமின்ன
    ஏற்றமுள்ள ஈச்வரியாள் எடுத்துச்சொல்வள் தன் பெருமை
    2. பூத்திருக்கும் சோலைகளும் புஷ்கரணி தீர்த்தங்களும்
    காஞ்சனத்தால் ஆலயமும் கடைத்தெருவும் வீதிகளும்
    3. பார்வையுள்ள வீதிகளும் படித்துறையும் காவேரியும்
    ஏழுநிலைக் கோபுரமும் எட்டவொண்ணாத் திருமதிலும்
    4. பத்துநிலைக் கோபுரமும் என் பள்ளியரை சேர்வைகளும்
    யாகம்வேள்வி செய்யும் நல்ல அந்தணர்கள் கூட்டங்களும்
    5. வேத பாராயணத்தழகும் நான் வீதிவரும் வைபவமும்
    பஞ்சநதி மகத்துவமும் எந்தன் பரிபூர்ண நதியழகும்
    6. இன்னமுண்டு என்பெருமை ஜதீசரேநீர் கேளுமென்று
    தையலந்த உமையவளும் தன்பெருமை பின்னுஞ்சொல்வள்.

    குறத்தி ஈசருக்கு மலைவளமை யுரைத்தல்
    (2வது மெட்டுப்போல் பாடலாம்)

    1. கைலாஸத்தினில் வஹிப்பவரே காளவிஷத்தை புனித்தவரே
    எந்தனுட மலைகள்தன்னை ஈச்வரரே நீர்கேளும்
    2. கொங்குகுடகு சொல்லிமலை வங்கம் மலையாளதேசம்
    கஞ்சிகாள ஹஸ்தியுடன் காசியிலும் நானிருப்பேன்
    3. அங்குமிருப்பேன் சுவாமிமலையில் அடர்ந்தசோலைக் குடைந்தையிலும்
    இங்குமிருப்பேன் பஞ்சநதியிலும் ஏழூஉரும் சுற்றிவருவேன்
    4. வைத்தீச்வரன் கோவிலிலும் மனமகிழ்ந்துநான் வஸித்திடுவேன்
    அறம்வளர்த்தாள் சந்நதியில் அனுதினமும் நானிருப்பேன்
    5. சங்கமுகம் மாயவரமும் சபாநாதரைக் கண்டுவருவேன்
    மங்கள நாயகரே மஹானுபாவா நாடுகேளும்

    குறத்தி ஈசருக்கு நாட்டுவளமுரைத்தல்
    (3ஆவது மெட்டுப் போல பாடலாம்)

    1. எந்தனுட நாடுதன்னை கேளுமையா சுவாமி
    ஏற்றமுள்ள ஈச்வரனார் வாழுமெங்கள் நாடு
    2. பொங்குப் புகழ்காவேரி உள்ளதெங்கள் நாடு
    புண்ணியராம் மானிடர்கள் புகழ்ந்தேற்றும் நாடு
    3. சந்திரரும் சூரியரும் வஸிப்பதெங்கள் நாடு
    சாரங்கபாணியனார் பள்ளிகொண்ட நாடு
    4. அகிலாண்ட ஈச்வரியாள் வாழுமெந்தன் நாடு
    அப்பருக்கு அருள் புரிந்த நாடுமெந்தன் நாடு
    5. அஞ்சுநதியோடி வரும் பஞ்சநதம் நாடு
    அன்னை பரமேச்வரியாள் அறம் வளர்த்தாள் நாடு
    6. மாத்ரு பூதேச்வரனார் மலையுமெந்தன் நாடு
    மலையின் மேலேவாழும் ஒரு மகனுமுண்டு எனக்கு
    7. ஜம்புநாத ஸ்வாமியுடைய தீர்த்தமெந்தன் நாடு
    ஸ்வயம்புவன பிக்ஷாண்டார் கோவிலுமென் நாடு
    8. குத்தாலம் பாபவிநாசம் கோவில்மலை நாடு
    முத்தான திருஅனந்தர் நாடுமெந்தன் நாடு
    9. திருச்செந்தில் திருக்குன்றம் திருத்தணியும் நாடு
    திருப்பதி யென்னும் அந்தத் திருமலை என் நாடு
    10. வண்ணக் குறத்தியும் தன் பெருமையை வர்ணிக்க
    கூட்டங்கூடி தேவரெல்லாம் சுவாமியுடன் கேட்க
    11. சரஸ்வதியும் லக்ஷுமியும் சந்தோஷமாய்க் கேட்டு
    குறத்தியுடமகிமை தன்னைக் காவேரிக்குச் சொன்னார்
    12. காவேரியுங் கேட்டவுடன் தன் கவலைநீங்கி
    சகியைவிட்டுக் குறத்திதன்னை அழைத்துவரச் சொன்னாள்

    குறத்தி காவேரிக்குக் குறிசொல்ல வருகுதல்
    (2ஆவது மெட்டுப் போல் பாடலாம்)

    1. (அடி) கொங்கையழகி குறத்தியம்மே நீ
    குறி சொல்லுகின்ற மகத்துவத்தை
    2. எங்கள் நாயகி காவேரி கேட்டு
    அழைக்கச் சொன்னாள் குறத்தியே யுன்னை
    3. செம்பொன் கொடிபோல் குறத்தியெழுந்து
    திருக்காவேரிக் கரையில் வந்தாள்
    4. வீற்றிருந்து தவம் செய்யுமந்த
    மெல்லி நல்லாள் காவேரி யம்மனும்
    5. கண்டவுடன் குறத்தி வரவைக்
    காவேரி யம்மனுங் கண்ணைவிழித்து
    6. கயல்மீன் போன்ற கண்மலரும்
    கஸ்தூரிப் பொட்டும் முகஒளியும்
    7. நகைத் திடுமந்தப் பல்லொளியும்
    ராஜேச்வரியின் வடிவழகும்
    8. கண்டவுடனே குறத்தி வடிவை
    காவேரி யம்மனும் மனந்திகைத்து
    9. (அடி) ஸஹ்யமலைக்கும் சமுத்திரத்துக்கும்
    சாய்ந்த வண்ணமாய் நானிருப்பேன்
    10. இந்நெடு நாளாய்க் கண்டதில்லை
    உந்தன் வடிவைப்போல குறத்தி
    11. எந்த நாடடி குறத்தி யுனக்கு
    எனக்குச் சொல்வாய் எமக்குறத்தி
    12. என்றவுடன் மந்தஹாஸமாய்
    உமையுமப்போ எடுத்துரைப்பள்
    13. இந்த நாடெல்லாம் எந்தன் நாடுதான்
    இன்னமுண்டெந்தன் நாடுகளும்
    14. பொங்கித் தளும்பும் நாலுகடலும்
    புவனேந்திரக் குறவருடன்
    15. அங்கங்கிருந்து நான் வசிப்பேன்
    அய்யா றப்பன் குறத்தியென்பேர்

    குறத்தி காவேரிக்குக் குறி சொல்லுதல்
    (3ஆவது மெட்டுப்போல் பாடலாம்)

    1. எந்தனுட நாடுகளும் சொல்லித் துலையாது
    ஏற்றமுள்ள ஈச்வரனார் ஆள்வதெங்கள் நாடு
    2. சொல்லுவேண்டி உன் குறையை தயவெனக்குண்டாக
    சொர்ணங்களையுங் கொணர்ந்து வைத்தால் தகுந்த குறிசொல்வேன்
    3. நேர்த்தியான முத்துரத்னம் பவழங்களுங் கொணர்ந்தால்
    (உன்) நெஞ்சிலுள்ள குறைகளை நான் நிவர்த்தியாகச் சொல்வேன்
    4. வஜ்ஜிரமும் பச்சையுடன் வைடூர்யமுங் கொணர்ந்தால்
    (உன்) மனதிலுள்ள குறையை நானும் மாற்றும்படி சொல்வேன்
    5. சந்நியாசி வேஷங்கொண்ட தபஸியுந்தன் கணவன்
    தலைமயிரை ஜடைதரித்து தபஸுபண்ணும் முனிவன்
    6. கெளபீனம் கடுசூத்ரம் கமண்டலமும் தரித்த
    அமைந்த கிருஷ்ணாஜினந்தரித்த அகஸ்தியருமவரே
    7. அகஸ்தியரை மாலையிட்டு லோபாமுத்திரை நீயும்
    அகண்டகாவேரியாகி அவரைவிட்டுப் பிரிந்தாய்
    8. சமுத்திர ராஜனுடன் சங்க முகமாகி
    சமுத்திரத்தப் போயடைய தபஸு பண்ணியிருக்காய்
    9. மார்கழி மாதத்தினில் மணல்மேடு இடுவாய்
    மடுக்களிலும் ஜலம் வற்றி வெகு நாற்றம் நாறும்
    10. ஆற்றின் ஜலம் வற்றிவிட அனைவர்களுந்தவித்து
    ஊற்றின் ஜலந்தனையெடுத்து உலகிலுள்ளோர் உழல்வார்
    11. வைகாசி வஸந்தகாலம் வருவாய் வெள்ளம் பெருகி
    வையகத்து மனிதரெல்லாம் முழுகிக் கதிபெறுவார்
    12. ஆடிமாதம் பெருக்கெடுத்து அணைகரையில் போட்டால்
    அப்போ நீயும் சமுத்திரரை அடைந்து மனமகிழ்வாய்
    13. கொஞ்சுங்கிளிபோல் குறத்தி குறிகள் சொல்லிச்சிரிக்க
    கூட்டங்கூடி சகலபேரும்கூடி நின்று கேட்டார்

    குறத்தி ஈசருடன் சம்பாஷித்தல்
    (4ஆவது வேறு மெட்டு)

    1. குறத்தி முகத்தையும் குறிசொல்லும் நேர்த்தியும்
    குறிப்புடனே பார்த்து
    க்ஷணப் பொழுதாகொலும் கண்ணை மூடாமல்
    சங்கரர் பார்த்திருந்தார்
    2. (அடி) கொங்கையழகி குறப்பெண்ணே நீயும்
    குறிசொன்னது போதும்
    (என்) ஆலயம் புகுந்து அன்னம் புஜித்து
    அணைவாய் நீ என்னையென்றார்
    3. சிறுபிள்ளைப் புத்திபோல் சிவனுமுரைக்கவே
    சிவகாமி தான் கேட்டு
    சித்தத்திற்குள்ளே சிரித்து மகிழ்ந்து
    சீறியே ஏதுசொல்வள்
    4. பஞ்சாப கேசரின் பாததெரிசனம்
    பண்ணவே நானும் வந்தேன்
    ஆசைபெரிதென்று உம்மையும் நானும்
    அணையவும் நீதியுண்டோ
    5. அறம்வளர்த்த உம்மநாயகி யாளுமக்
    கனுக்ஞை கொடுத்தாளோ
    ஆகட்டுமிப்போ தவளுடன் சொல்லியே
    ஆக்கினை பண்ணிவைப்பேன்

    ஈசர் அம்பிகையைக் காணாமல் வருந்துதல்

    6. சிரித்த முகத்தையும் துடுக்கான வார்த்தையும்
    சிவசங்கரர்தான் கேட்டு
    (நம்ம) சுந்தரிதேவியும் வந்தாளோ வென்றவர்
    சுற்று முற்றும் பார்த்தார்
    7. சரஸ்வதி லக்ஷுமி இருவருமாகச்
    சரேலென் றெழுந்திருந்து
    சங்கரியாளை அழைத்திட நாமும்
    அறிவழிந்து போனோம்
    8. ஆலயத்திற்சென்று அம்பிகையைத் தேடி
    ஆராய்ந்து பார்த்துமவாள்
    மூலை முடுக்கெல்லாம் தேடிக்காணாமல்
    விசாரமுந் தானடைந்தார்
    9. சிவசுந்தரியாளைக் காணாமலேயந்தச்
    சங்கரர்தாம் புலம்பி
    நந்திகேசரைவிட்டு எங்குந் தேடச்சொல்லி
    (சிவ)நாதன் தவித்தழுதார்
    10. சித்திவிநாயகா சங்கரியாளைக்
    காணோமே என்னசெய்வேன்
    சுந்தரிதேவியைக் காணாவிட்டால்நான்
    ஜீவனிழப்பேன் என்றார்
    11. சிவசுப்ரமண்யா உன்னுட அன்னையைக்
    காணோமே என்ன செய்வேன்
    அம்பிகையாளை நான் கண்ணிற் காணாவிட்டால்
    ஆவி யிழந்திடுவேன்
    12. கெளரீவல்லபர் என்று பிரபஞ்சத்தில்
    கீர்த்தியாய் சொல்லிடுவர்
    வாமபாகத்தினில் தேவியில்லாவிட்டால்
    வாகன மேறுவரோ
    13. பார்வதி சங்கரர் என்று பிரபஞ்சத்தில்
    பக்தியாய்ச் சொல்லுவார்கள்
    பத்தினியு மில்லாவிட்டால் பத்னிஹீனனுக்கு
    பூஜையும் பண்ணுவாரோ
    14. அம்பிகையாள் வந்து சேராவிட்டலெனக்
    கன்னபானங்கள் வேண்டாம்
    அபிஷேகம் வேண்டாம் அலங்காரம் வேண்டாம்
    அர்ச்சனையும் வேண்டாம்
    15. சுந்தரி சுந்தரி என்று எல்லோருமாய்
    சேர்ந்து அலத்தலுற்றார்
    சிவகாம சுந்தரிதேவியுங் கேட்டு
    சிரித்தாள் மனதிற்குள்ளே
    16. சபையிலுள்ள பேரைக் கடைக்கண்ணாலே பார்த்துச்
    சங்கரி தானிருக்க
    ஸரஸ்வதி லக்ஷுமி குறத்தியுடைய
    சமிபத்திலோடு வந்து
    17. சங்கரியாளைக் குறத்தி நீயும்
    க்ஷணத்தில ழைத்தாயானால்
    செம்பொன்னும் முத்தும் ரத்தினங்க ளெல்லாம்
    சொர்ணத் தட்டிற் கொடுப்போம்
    18. அம்பிகையாளை அழைப்பித்தா லிக்ஷணம்
    யானை சேனை குதிரை
    வெண்கலத் தேருடன் தங்கப் பல்லாக்கும்
    வெகுமானந் தாரோமென்றார்
    19. சேனை பரிவாரம் யானைகளுண்டென்று
    துடுக்காகப் பேசுகின்றீர்
    (என்)சித்தத் தினிலிப்போ கோபம் வந்துதானால்
    தகித்து விடுவேன் நானும்
    20. சினத்துடனே யந்தக் குறத்தியுரைத்திட
    சரஸ்வதி லக்ஷுமியும்
    குறத்தியை நாமும் அதட்டிப் பேசினது
    குற்றமாய் நேர்ந்த திப்போ
    21. குறத்திக்கு கோபம் வந்துவிட்டதானால்
    குத்திவிடுவல் நம்மை
    குறவரெல்லாருமாய் கூட்டமாய்க்கூடி
    கொன்றுவிடுவார் நம்மை
    22. என்று சொல்லிக்கொண்டு தேவியைக் காணாமல்
    ஏக்கமடைந்திருந்தார்
    தையல் குறத்தி சரஸ்வதியை நோக்கி
    சாந்தமாய் தானுரைப்பாள்

    அம்பிகை தன்னை அறிவித்து ஈசருடன் ஆலயம் சேர்தல்

    23. சபையுள்ளோர் ஏக்கமும் சங்கரர் வாட்டமும்
    சங்கரி கண்டிரங்கி
    சந்தோஷமாகச் சபையோர்களைப் பார்த்து
    தயவாகத் தூனுரைப்பாள்
    24. கோடிநவரத்தினம் கொண்டு வந்தாலிப்போ
    குறிபார்த்து நானுமுங்கள்
    அம்பிகையாளை அரைநாழிக்குள்ளாக
    அழைப்பித்துத் தாரேனென்றாள்
    25. முப்பத்து முக்கோடி தேவர் ரிஷிகளும்
    முன்னே நிறைந்திருக்க
    ஆதிசிவனுட அண்டையில் சென்றவள்
    அவர் கரத்தைப் பிடித்தாள்
    26. தையல் குறத்தியும் கையைப் பிடிக்கவே
    சங்கரர் தான் பயந்து
    நெஞ்சந் துடிக்க சரீரம் பறக்கத்
    திடுக்கிட்டுத்தான் திகைத்தார்
    27. குறத்தியைக் கண்டாசைப் பட்டீரே
    கூசாமல் கையை காட்டும்
    வெட்டவெளியான பிரம்மம் உமக்கிந்த
    வெட்கமுந் தானுமுண்டோ
    28. விழுத்து எறிவீர் எடுத்து உடுப்பீர்
    வித்தைகள் செய்திடுவீர்
    சதாசிவப் பிரும்மம் நானென்று சொல்வீர்
    சந்யாசி போலிருப்பீர்
    29. பதிவிரதைமார்களைப் பங்கம் குலைப்பீர்
    பரம்பிரம்ம மூர்த்தி என்பீர்
    ரிஷிபத்தினிமாரண்டை நிர்வாணத்துடனே
    நின்றது வெட்க மன்னோ
    30. அறிவிலியாகிய அஸுரனுக்கு
    அவன் கேட்ட வரங்கொடுத்து
    அண்டம் பதினாலும் ஓடியலைந்து நீர்
    ஐவேலிக்காயினி லொளித்தீர்
    31. மூர்த்தியில் சமர்த்தராம் விஷ்ணுவுமப்போது
    மோஹினி வேஷங்கொண்டு
    அஸுரனைக் கபடத்தால் வதைசெய்த விஷ்ணுவை
    அணைந்தது வெட்கமன்றோ
    32. வண்ணக் குறத்தி பரிஹாஸம் பண்ணவே
    மஹாதேவர் தான் கேட்டு
    குறத்தியைக் கண்டு நாமிச்சையடைந்தது
    குற்றந் தானென் றுணர்ந்தார்
    33. சுவாமி தளர்ந்திடும் மேனியும் சங்கரர்
    வாட்டமும் சங்கரி கண்டிரங்கி
    க்ஷமிக்க வேணுமென்று சங்கரர் பாதத்தில்
    சரண மென்றே பணிந்தாள்
    34. தையல் குறத்தி பணிந்தவுடனே
    சபையோர்கல் தான் பார்த்து
    அம்பிகை தானிவள் என்றறிந்தவுடன்
    ஆனந்த மாயிருந்தார்
    35. ஆதி சிவனாரும் அம்பிகையுடனே
    ஆலயந் தன்னிற் சென்று
    குறத்தி வடிவான அம்பிகையாளைக்
    கூசாமலே யணைந்தார்
    36. அம்பிகையுடனே அபிஷேகமாடி
    அமுதமும் தான் புஜித்து
    வாமபாகத்தினில் தேவியுடன் சிவன்
    மந்தஹாஸமாய் வீற்றிருந்தார்
    37. பக்தியாய் சொன்னவர் சிரத்தையாய்க் கேட்டவர்
    கற்றுக் கொடுத்தவர்க்கும்
    அஷ்டபோகத்துடன் புத்திரபாக்கியமும்
    அறம்வளர்த்தாள் கொடுப்பாள்
    38. அறம் வளர்த்த பரதேவியின் பாதத்தை
    அனுதினமும் ஸ்மரித்தால்
    அம்பிகையும் திருப்பாதார விந்த
    ஐக்கியமுந் தான் கொடுப்பள்
    39. அம்பிகை யருளால் காவேரி பெருகி
    ஆற்றினில் வெள்ளம் வந்து
    சந்தோஷமாகிச் சமுத்திரத் தைக்கண்டு
    சங்க முகமடைந்தாள்
    40. மங்களம் மங்களம் தர்மாம்பிகையுடன்
    பஞ்சநதீச்வரர்க்கும்
    மங்களம் திருக்காவேரி நதிக்கும்
    மண்ணில் வாழும் மாந்தருக்கும்

    ==========

    காவேரியம்மன் கப்பல்
    (விநாயகர்துதி கப்பல்)

    நமோமஹா கணபதியே – சம்போ – நமோமஹா குணநிதியே
    நமோஉமா ஸ்கந்தாய – சம்போ – நமோஹரன் ஆநந்தாய

    (முடுகு)

    விக்நராஜாய வெகு விக்னஹரணாய
    லம்போதராய ஹேரம்பாய மஹதே
    ரம்பாபலகராய அம்பா ஸுதாய
    அபயவர கரதாய ஏகதந்தாய
    சுபமுக வரதாய லம்போதராய
    கபிலமுக வர்ணாய கஜகர்ணிகாய
    விகடதந்தாய ஸுர கணபூஜிதாய
    தூமகேதாய யக்ஷ கணஸேவிதாய
    பாலசந்திராய ஹரஸ்கந்த ஜேஷ்டாய
    சரவண பவாயநம கருணாரஸாய

    ஏலேலோ கணராஜா — ஐயா
    ஏலேலோ சர்வேசா

    மண்டல மெல்லாம் புகழும் – பொன்னி
    மங்களக் காவேரி கப்பல்
    தென்கிழக்காய் காவேரி – அம்மன்
    செல்லுகின்ற ஸ்தலங்கள் சொல்வாம்

    (முடுகு)

    விண்ணவர்கள் புகழும் ஸ்ஹ்யகிரி தனைவிடுத்து
    மின்னொத்த குடகுகிரி காட்டின் வழிவந்து
    உன்னத கிரிகடந்து கண்காணாம லோடி
    தென்னலுடன் சிவசமுத்திர சிகரம்விட்டு இழிந்து
    சேர்த்துவந்த கபிலையுடன் சந்தோஷமாய்ச் சேர்ந்து
    திருமுக்கூ டென்னுமந்தத் திருநகரைத் தாண்டி
    ஸ்ரீரங்க பட்டணத்தில் சடுதியாக வந்து
    ஸ்ரீரங்க நாதருக்குத் திருமாலையாய் வளைந்து’
    சீருடைய கெளமுகியும் சேலம் நகர் சேர்ந்து
    க்ஷேத்திரமாம் பிரம்மகிரி சேர்வைமலை தாண்டி
    அந்தமாய் பவானிநதி அன்புடனே கூட
    ஆனைக்குந்தி மலையைவிட்டு அமராவதி சேர
    சொந்தமாய் ஈரோடு விட்டு கொடுமுடியைச் சேர்ந்து
    திருமூர்த்திகள் வஸிக்குமந்த ஸ்தலத்தைக் கண்டு மகிழ்ந்து
    அந்த முள்ள சேரனுட அரசாட்சியில் அமைந்த
    அழகான ஊர்களெல்லாம் அன்புடனே பரவி
    பாச்சலூர் கருவூர் குழித்தலையும் பார்த்து
    பெருகமணி சிருகமணி (திருப்) பளாத்துறையு மோடி
    அகண்ட காவேரியாகி அடியார்களைக் காத்து
    தலைமகளாய் கொள்ளிடத்தை வடபுரத்தில் செலுத்தி
    திருச்சினாப் பள்ளிமலை ஈசனையும் ஸ்துதித்து
    ஜம்புநாதர் ஸ்ரீரங்கர்க்கு திருமாலையுந் தரித்து
    சிந்தாமணி தன்னைவிட்டுத் திருவானைக்கா நடந்து
    கொண்டல்கண்டு மயிலாடும் கோவிலடி யடைந்து
    கொக்கரசம்பேட்டை திருமழப்பாடி கடந்து
    வண்டலுடன் பெருகி மகராஜபுரம் வந்து
    தில்லைஸ்தானம் திருக்கண்டியூர் திருவையாற்றில் தங்கி
    கணபதி அக்கிரகாரம் கபிஸ்தலமுங் கண்டு
    வளமையான சுவாமிமலை கும்பகோணம் வந்து
    பேரான மருதூரின் பரமரையும் பணிந்து
    பேர்பெற்ற கோவிந்தபுரம் வஞ்சிநாடு புகுந்து
    குத்தாலும் ஆடுதுறை உச்சிதமாய் கடந்து
    கோனேரி ராஜபுரம் நரசிங்கன்பேட்டை வந்து
    கெளரீ மாயூரநாதன் சந்நதியைக் கண்டு
    களிப்புடன் துலாமாதக் கடசீ மட்டுமிருந்து
    கண்டவுடன் ஜீவர்களின் கர்மங்களை யொழித்து
    அன்புடனே கெளரீநாதன் அனுக்கிரக மடைந்து
    சந்தோஷமாய் காவேரி சாயாவனந்தாண்டி
    சங்கமுகத் துறையடைந்து சமுத்திரைச் சேர்ந்தாள்

    அன்புடனே கூடி அலையுடன் போராடி
    கண்கலங்கி வாடி கணவரிடம் ஓடி
    களிக்கக் கடல் கொந்தளிக்க
    முத்தைக் கொழிக்கத் தண்ணி சிவக்கச் சேர்ந்து
    காதலுடன் கடல்மன்னனும்
    காவேரியுங் கலந்துவிட

    ஏலேலோ – ஏலேலோ – காவேரி
    கடலுடனே கலந்த கப்பல்

    காவேரியம்மன் ஊஞ்சல்

    இருபுறமும் சோலைதன்னில் குயில்கள்கூவ
    எத்திசையும் பக்ஷியினம் இசைந்து பாட
    தோழியராம் நதிகூடத் தென்றல் வீச
    திருக்காவேரி கணவருடன் ஆடிலூஞ்சல்.

    ஓம் சுபம்!

     

    Share
  • வார ராசி பலன்!…23-09-13 – 29-09-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்:  சில நேரங்களில் கண் மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்வைப் பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து விடுங்கள். கலைஞர்கள் விழா, விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப்பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழுப் பொறுப்பை அளிக்காமல், உங்கள் கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பணியில் இருப்போர் வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும் வாய்ப்பு உங்களை நாடி வரும்.

    ரிஷபம்: பணத்தை வங்கியில் செலுத்தும் போது தகுந்த முன்னெச்சரிக்கையாய் இருப்பது அவசியம்.அக்கம் பக்கத்தாரிடம் அளவாகப் பழகி வாருங்கள். நேரடி கவனம் செலுத்தும் எதுவும் வியாபாரிகளுக்கு லாபகரமாக அமையும். உறவுகளிடம் அன்பாகப் பேசி வாருங்கள். வம்பான ஆட்களும் வாய் மூடிக் கொள்வார்கள். கலைஞர்கள் நிதானமான வளர்ச்சிதான் நிலைக்கும் என்பதை நினைவில் வைத்து செயல்படுவது நல்லது. மறதியால் பொருட்களை இழக்க வேண்டி வரலாம். கூட்டுத் தொழிலில், இருப்போர்கள் சந்தேகம், மற்றும் வாக்குவாதம் தோன்றாதவாறு விழிப்பாய் செயலாற்றுவது நல்லது. சிறிய மனத்தாங்கலால் நட்பில் உரசல் தோன்றி மறையலாம்.

    மிதுனம்: பெண்கள் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி கவனமாய் இருந்தால், வேண் டிய பணப் புழக்கம் கையில் இருக்கும். வேலை கிடைக்க வில்லையே என ஏங்கிக் கொண்டிரு ந்தவர்கள் மனதுக்கு பிடித்த வேலையில் அமர்வார்கள். கலைஞர்களுக்கு பெரிய மனிதர்களின் நட்பும் அதன் மூலம் ஆதாயமும் கிட்டும். வியாபாரிகள் வீண் தம்பட்டத்தைத் தவிருங்கள். புதிய முயற்சிகளால் புகழ் தானே கிட்டும். முக்கிய பொறுப்பில் இருப்போர்கள் , உங்கள் கடமையை தள்ளிப் போடாது அவ்வப்போது முடித்து வந்தால், நற்பெயருக்கு களங்கம் ஏதும் இராது. மாணவர்கள் எந்த சூழலிலும் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து சிக்கலை வரவேற்காதீர்கள் .

    கடகம்: பெண்கள் தேவையில்லாமல் குடும்ப ரகசியங்களைபிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பது அவசியம். வியாபாரிகள் அதிகமாய் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பிருப்பதால், ஆரோக்கிய பராமரிப்பில் விசேஷ கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் அவசியமான நேரங்களில் மட்டும் வாகன பயணத்தை மேற்கொள்ளுங்கள். மேலும் நட்பு வட்டத்தில் தீய சகவாசத்தை தவிர்த்தல்,புத்திசாலித்தனம். கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகாது.

    சிம்மம்: வருத்தப் பட வைத்தவர்கள், வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்வார்கள். உங்கள் திறமையை பிறர் அறிய, புதிய முயற்சிகள் கை கொடுக்கும். சொந்த பந்தங்களின் வரவு மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும். அலுவலக வட்டத்தில் பேச்சில் கடுமை கூடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்..தள்ளிப் போட்டு வந்த காரியங்கள் உடன் முடியும். பெண்கள் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வததற்கு முதலிடம் கொடுப்பது நல்லது. வியாபார்கள் புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருங்கள் .மறைமுகமான நஷ்டங்களைக் குறைக்க தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெற தீவிரமாக உழைப்பீர்கள்.

    கன்னி: பெற்றோர்கள் பிள்ளைகளின் தேவைக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உயர் மட்ட கூட்டங்களில், தேவையற்ற வாக்குவாதத் தில் ஈடுபடுவதைத் தவிர்த்து விடவும். வியாபாரிகள் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய உரிமங்களை, தாமதமின்றி புதிப்பித்தல் அவசியம். உறவினர் ஒருவரால், தொழிலில் புதிய திருப்பம் ஏற்படும். பழைய நட்பை புதிப்பித்து கொள்ள இது ஏற்ற வாரம். குடும்பத்தில் நிலவி வந்த மனக் கசப்பு விலகி, நிலைமை பழையபடி சுமூகமாகும். அதிகம் உழைத்தாலும், சுய தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த லாபம் வருவதற்கு சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.

    துலாம்: உங்கள் உழைப்பால் உயரதிகாரிகளின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். பெண்கள் பண விஷயங்களில் புதியவர்களை நம்ப வேண்டாம் . வியாபாரிகள் வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்தாலும் ஒப்பந்தங்கள் கைக்கு வர சற்றே காத்திருக்கும் சூழலுக்குத் தள்ளப்படலாம். மாணவர்கள் வேண்டாத பிரச்னைகளிலிருந்து விலகி இருப்பது அவசியம். கடன் அட்டை மூலம் பொருட்கள் பெறுவதில் கவனமாய் இருக்கவும். பங்குதாரர்கள் நடுவே காரசாரமான விவாதங்கள் வந்து போகும் வாய்ப் பிருப்பதால், எதனையும் ஆலோசனைக்குப்பின் செய்வது நல்லது. உடனிருக்கும் உறவுகளாலும் ஊழியராலும் மனச் சங்கடம் நேரிடலாம்.

    விருச்சிகம்: பெண்கள் தங்கள் சேமிப்பை கரைத்து, வீட்டுப் பொருள்களை வாங்குவர். பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் உங்கள் கவனம் இருந்தால், அவர்களின் பாதை நேராகவே இருக்கும். குடும்பச் சொத்துக்காக, கருத்து மோதல்கள் உருவாகும். அகால போஜனம், தூக்கக் குறைவு ஆகியவற்றால் பணி புரிபவ ர்களுக்கு சிறு உபாதைகள் ஏற்படலாம். வியாபாரிகள் பணியாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனித்து விட்டால், அவர்க அவர்களின் ஒத்துழைப்பு உங்களோடு தங்கும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் குறைவாகவே இருக்கும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளுக்காக கடன் வாங்க நேரிடும்.

    தனுசு: பெண்கள் பல சந்தோஷ நிகழ்வுகளில் பங்கு கொள்வதால் குடும்பச் செலவுகள் வரவுக்கு மேல் செல்லும். எந்த சூழலிலும் இங்கிதமாகப் பேசுங்கள் . சச்சரவுகள் தானே சுமூகமாகிவிடும்.வியாபாரிகள் கொடுத்த வாக்கை ,குறித்த காலத்தில் நிறைவேற்றி விடுவீர்கள். பங்குச் சந்தையில் ஒருவித நிச்சியமற்ற நிலைமை நிலவுவதால், பண முதலீட்டில் அதிக அவசரம் வேண்டாம். மாணவர்கள் வேண்டாத எண்ணங்களை வளரவிடாமல், நல்ல பொழுது போக்குகளில் உங்கள் கவனத்தை திசைத் திருப்புங்கள். மனம் தெளிவடையும். விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள் புதிய சாதனை படைப் பார்கள்.

    மகரம்: கணினித் துறையில் உள்ளவர்கள் தங்களின் ஆற்றலின் உதவியால் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்வார்கள் . கூட்டுத்தொழிலில் முன்பு இருந்த முன்பு இருந்த இறுக்கம் விலகுவதால், துணிவுடன் செயல்படுவீர்கள். பணியில் உள்ளவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் வரும். வியாபாரிகள் சிறிது அலைக்கழிப்பிற்குப் பின் வரவேண்டிய பணத்தை பெறுவார்கள். கலைஞர்கள் மேற்கொள்ளும் வெளி நாட்டு பயணங்கள் லாபகரமாய் அமையும். உடல் நலனில் அக்கறை காட்டினால், மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். நட்பு எப்போதும் இனிக்கும்.

    கும்பம்: முக்கியமான முடிவெடுக்குமுன் மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள். நீங்கள் பெறும் நன்மைகள் இரட்டிப்பாகும். பிறர் செய்யும் தவறுகளை இதமாகச் சுட்டிக் காட்டினால், குடும்ப உறவுகளின் இனிமை மாறாமலிருக்கும். வியாபாரிகள் கவனமாய் இருந்தால், கணக்கு வழக்குகளில் குளறுபடிகள் எழாதவாறு பார்த்துக் கொள்ளலாம். பெண்கள் நிதி நிலைக்கேற்றவாறு செலவுகள் செய்தால், கடன் பட வேண்டியிராது. சக கலைஞர்களின் ஆலோசனைப்படி நிகழ்ச்சிகளில் புதிய மாற்றங்களை புகுத்தினால் நல்ல வரவேற்பிருக்கும்.மாணவர்கள் சோம்பேறித்னத்துக்கு இடம் தராமல், கருத்தூன்றி படிப்பது நல்லது.

    மீனம்: மாணவர்கள் திறமை என்னும் மூலதனத்தை சேமிப்பாய் வைப்பதோடு, வேகம் என்பது பேச்சில் இல்லாமல் செயலில் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பர்க்கும் உயர்வும் உங்கள் வாழ்வில் கை கோர்த்துக் கொள்ளும். பெண்கள் வதந்திகளை நம்பி அவசர முடிவெடுக்க வேண்டாம். வழக்குகளில் மட்டுமல்லாது வருங்கால நலன் கருதி எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்ட, யோசித்து செயல்படுங்கள். சொந்த பந்தங்களிடையே பகையை வளர்க்காமல் பார்த்துக் கொண்டால், உறவுகளின் அனுசரணை அனைத்திலும் கிடைக்கும். வேலையில் சிலருக்கு பொறுப்புக்கள் கூடும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடலாம்

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 1

    தஞ்சை வெ.கோபாலன்

    நான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கே உட்கார்ந்திருந்த போது ஒரு ஜோடி மண்டபத்துக்குள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவரில் ஆணுக்கு வயது எழுபது இருக்கலாம், பக்கத்தில் அவரது மனைவி அறுபது வயதைத் தாண்டியவர். கன்னங்கரேலென்ற நிறம். தேர் அசைவது போல ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் பக்கவாட்டில் சாய்ந்து சாய்ந்து நடை. பெரியவருக்கு வயதானதாலோ அல்லது காலில் ஏதாவது ரிப்பேரோ தெரியவில்லை ஒரு கைத்தடியை ஊன்றிக் கொண்டு வந்தார். அவரை கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு அந்த அம்மையார் குழந்தையை நடத்தி வருவது போல மெல்ல அழைத்து வந்து கொண்டிருந்தார்.

    ‘மெதுவா வாங்கோ. பார்த்து காலடியை எடுத்து வையுங்கோ. கீழேயெல்லாம் டைல்ஸ், வழவழன்னு இருக்கு. வழுக்கிவிட்டுடப் போறது. இதுல தண்ணியை ஊத்தி வைச்சாக்கூட கண்ணுக்குத் தெரியாது. வழுக்கிவிட்டுட்டா என்ன பண்றது. பாருங்கோ, அங்கே குழந்தைங்க ஓடிப்பிடிச்சு விளையாடறதை. ஓடிவந்து ஒங்க மேல விழுந்துட்டா என்ன பண்றது. மெதுவா, என்னைப் பிடிச்சுண்டு வாங்கோ’ என்று ராஜோபசாரம் செய்தபடி அந்தப் பெண்மணி உள்ளே நுழைந்தாள்.

    ‘வரேன், வரேன், நன்னா கையைப் பிடிச்சுக்கோ! நான் தான் சொன்னேனே, இந்த மாதிரி கல்யாண மண்டபத்துக்கெல்லாம் போறது அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னு, நீ கேட்டியா, ஒன்னோடு அத்தங்கா பொண்ணு கல்யாணம்னு என்னையும் இழுத்துண்டு வந்து நிக்கறே’ என்றார்.

    ‘வரலைன்னா, அவா ​கோவிச்சுக்குவா, நாம வந்து பெரியவாளா லட்சணமா கல்யாணத்தைப் பண்ணி வச்சாதான் அவாளுக்குத் திருப்தி. வேற யாரு இருக்கா, பெரியவாளா அவாளுக்கு இதைச்செய் அதைச்செய்னு சொல்றதுக்கு. பேசாம வாங்கோ, வந்து ஒரு இடத்துலே ஒக்காந்துக்கோங்கோ’ என்று அவரைப் பிடித்துக் கொண்டு போய் அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள் அந்தப் பெண்மணி.

    எனக்கும் பொழுது போகவேண்டாமா? இந்த முதிய காதல் ஜோடியின் ராசக்கிரீடையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

    கல்யாண வீட்டுக்காரர்கள் இந்த ஜோடியைப் பார்த்துவிட்டுப் பரவசமாய் ஓடிவந்து, ‘வாங்கோ, வாங்கோ, என்னடாது, இதுவரை மாமா மாமியைக் காணலியேன்னு கவலையா பேசிண்டு இருந்தோம். நீங்க வந்துட்டேள். நீங்கதான் எங்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் சொல்லித் தரணும். எங்காத்துல இதுதான் மொத கல்யாணம் இல்லியா, எதையும் தவற விடாம நன்னா நடத்தணும். உள்ளே வாங்கோ, டேய்! அங்க யாரப்பா, அந்த பரிசாரகர்கிட்டே சொல்லி ரெண்டு டம்ளர் காப்பி கொண்டு வரச் சொல்லு” என்றார் அதில் ஒருவர்.

    ‘அதெல்லாம் வேண்டாம். அவருக்கு ஷுகர், காப்பியெல்லாம் சாப்பிட மாட்டார், மாத்திரை சாப்பிடணும் கொஞ்சம் வெந்நீர் இருந்தா போட்டுக் கொண்டு வரச் சொல்லுங்கோ, நான் வந்து டிபன் சாப்பிட்டுக்கறேன்’ என்றாள் அந்த அம்மாள்.

    ‘பரவாயில்லே, எனக்கும் ஒரு காப்பி கொண்டு வரச்சொல்லுங்கோ, ஆனா, அதுல சக்கரை போட வேணாம்’ என்றார் அந்தப் பெரியவர்.

    ‘பாத்தேளா! இப்படித்தான் வாயைக் கட்டாம எதையாவது சாப்பிட்டுடறது, பின்னாலே மயக்கம் வரது, தலையைச் சுத்தறது அப்படிம்பேள், சொன்னா கேக்கவா போறேள்’ என்று சொல்லிவிட்டு அந்த கல்யாண வீட்டு அம்மாளிடம், ‘சரி மாமி, அவருக்கும் சக்கரை இல்லாம ஒரு காப்பி கொடுத்துடச் சொல்லுங்கோ’ என்றாள்.

    ‘எங்கே ஒங்க புள்ளை மாட்டுப்பெண் எல்லாம் வரலியா?’ என்றாள் கல்யாண வீட்டு அம்மாள்.

    ‘அவனுக்கு எங்கே ஒழியறது, ஆபீஸ் ஆபீஸ்னு ஆபீசை கட்டிண்டு அழறான். காலைல போனா ராத்திரி பத்தோ பதினொண்ணோ எப்போ வரானோ அப்போதான். மாட்டுப்பெண்ணுக்கு இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு. அவளும் வேலைக்கு போறாளா, வந்து டயர்டா இருக்குன்னு படுத்துண்டுடறா, கல்யாணம் கார்த்தின்னு நாலு இடத்துக்குப் போனாதானே, நம்மாத்துக்கும் மத்தவா வருவான்னு அவாளுக்குப் புரியல. அது கெடக்கு விடுங்கோ, நானும் மாமாவும்தான் வந்துட்டோமே’ என்றாள் மாமி.

    ‘சரி உட்காருங்கோ, காப்பி கொண்டு வரச்சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு கல்யாண வீட்டு அம்மாள் உள்ளே சென்றாள். உடனே ஜோடிப் பெண்மணி கணவரிடம் “வந்த இடத்திலே ஏன் மானத்தை வாங்கறேள். அவா காபி வேணுமா, டிபன் சாப்பிடறேளான்னு கேட்கத்தான் கேட்பா. வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறமா சாப்பிட்டாதான் கவுரமா இருக்கும். அல்பம் மாதிரி சரி சரி கொண்டாங்கோம்பாளா, உங்களோட எனக்கு மானம் போறது’ என்றாள்.

    அப்போது கல்யாணப் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு கல்யாண வீட்டு அம்மாள் வந்து பெண்ணை அந்த வயதான தம்பதியருக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னாள். அந்தப் பெண்ணும் மிக நளினமாகத் தன் பட்டுப்புடவை கலையாமல் குனிந்து மண்டியிட்டு நமஸ்காரம் செய்து எழுந்தாள்.

    உடனே பெரியவர் கையைத் தூக்கி ‘மகாராஜியா நன்னா இரும்மா’ என்று சொல்லிவிட்டு தன் மனைவியை நோக்கி ‘ஊம், நீயும் குழந்தையை ஆசீர்வாதம் பண்ணு’ என்றார். அந்த அம்மாளும் அந்த மணப்பெண்ணை ஆசீர்வாதம் செய்த பின் அந்தப் பெண்ணும், அவள் அம்மாவும் உள்ளே சென்று விட்டனர். இந்த தம்பதியர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

    அப்போது கல்யாண வீட்டுக்காரர் ஒருவர் அந்தப் பக்கம் வந்தார். அவரை இந்தத் தம்பதியருக்குத் தெரியாது என்றாலும் அந்த அம்மாள் அவரை அழைத்தாள். அவரும் ‘என்ன மாமி, என்ன வேணும்’ என்று அருகில் வந்தார்.

    அந்த அம்மா சொன்னாள், ‘மாமாவுக்கு ஒடம்பு சரியில்லே. கொஞ்சம் ஓரமா ரெண்டு பெஞ்சை புடிச்சுப் போட்டுட்டேள்னா, படுத்துப்பார்’ என்றாள்.

    அவரும் அதுக்கென்ன போட்டுடறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு பெஞ்சுகளைக் கொண்டு வந்து போட்டு அதில் ஜமக்காளம் விரித்து தலையணை வைத்துக் கொடுத்தார். மாமி மறுபடி அவரைக் கூப்பிட்டு, ‘ஒரு பெடஸ்டல் ஃபேன் இருந்தா கொண்டு வந்து வச்சுடுங்கோ, மாமாக்கு காத்து வேணும்’ என்றாள். அதையும் அவர் செய்து கொடுத்தார். இப்போது பெரியவர் மிகவும் செளக்கியமாக பெஞ்சில் படுத்துக் கொண்டு ஓய்வு எடுத்தார். மாமி மெல்ல உள்ளே சென்றாள்.

    மணமகள் வீட்டார் இருக்கும் பகுதிக்குச் செல்லாமல் அந்த அம்மாள் சமையலறை நோக்கிச் சென்றாள். அங்கு சமையலுக்காக ஊழியர்கள் காய் நறுக்கிக் கொண்டும், மாவு அரைத்துக் கொண்டும் தேங்காய் துறுவிக்கொண்டும் இருந்தார்கள். அந்த அம்மாள் அங்கிருந்த ஒருவரை அழைத்து ‘யார் சமையல்?’ என்றாள்.

    அங்கிருந்த ஒருவர், ‘கிடாரங்கொண்டான் கிச்சாதான் சமையல், அதோ சாம்பார் அண்டாண்டே நிக்கறார் பாருங்கோ’ என்றான்.

    மாமி உடனே அவரிடம் சென்றாள். அவரும் இவரை வரவேற்று, ‘என்ன மாமி, என்ன வேணும், ஏதாவது சாப்பிடறேளா?’ என்றார், இந்த அம்மாளை யாரென்று தெரியாவிட்டாலும், மரியாதைக்காக அவர் அப்படிக் கேட்டார். இந்த அம்மாள் வந்த சந்தர்ப்பத்தை விடுவாளா?

    ‘நாங்க வெங்காயம் சேத்துக்க மாட்டோம். நானும் மாமாவும் காசிக்குப் போயிட்டு வந்துட்டோமா, அங்க பொடலங்கா சாப்பிடறதை விட்டுட்டோம், அதனால நீங்க சமையல்ல வெங்காயம் சேக்காதீங்கோ, பொடலங்காயை எதுலேயும் போட்டுடாதீங்கோ’ என்றாள்.

    நளபாகம் கிடாரங்கொண்டான் கிச்சா திகைத்துப் போனார்.

    ‘ஏம்மா! வெங்காயம், புடலங்கா சேக்காம பின்ன நாங்க எதைத்தான் வச்சு சமைக்கறது. கல்யாண வீட்டுல ஆயிரக்கணக்குல சாப்பிடுவா. அவா ஒவ்வொருத்தரும் எனக்கு இது பிடிக்காது, நான் இதை காசில விட்டுட்டேன்னு சொல்லிண்டிருந்தா, எதைச் சமைக்கறதுன்னு கொஞ்சம் கல்யாண வீட்டுக்காராகிட்டே கேட்டுச் சொல்லிடுங்கோ. இன்னொண்ணு மாமி, வீட்டுக்காரா என்ன சொல்றாளோ அதைத்தான் நாங்க செய்யணும், நீங்க அவாளுக்கு என்ன உறவோ தெரியாது. எதுன்னாலும் அவா கிட்டே சொல்லி எங்ககிட்டே இதெல்லாம் பண்ணலாம், இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லச் சொல்லிடுங்கோ, அதுபடி செஞ்சுடறோம்’ என்றார் கிச்சா.

    ‘அப்போ நாங்க சாப்பிட வேணாமா, என்ன இப்படி பேசறேள். காசில பொடலங்கா விட்டுட்டோம்னு சொல்றேன், அதைத்தான் பண்ணுவேன்றேளே’ என்றாள் மாமி உரத்த குரலில்.

    அப்போது அங்கே வந்த கல்யாண வீட்டுக்காரர் இவர்கள் பேசுவதைக் கவனித்து விட்டுச் சொன்னார், ‘மாமி, நீங்கா காசில பொடலங்காயைத்தான் விட்டேளோ, வாழைக்காயைத்தான் விட்டேளோ தெரியாது. பொது இடத்துல ஆயிரக்கணக்கான பேருக்குச் சமையல் செய்யற இடத்துல வந்து, எனக்கு அது பிடிக்காது, அதை விட்டுட்டேன் இதை விட்டுட்டேன் அப்பிடின்னெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்குப் பிடிக்கலையா, பேசாம அதை ஒதுக்கிட்டுப் பிடிச்சதை சாப்பிட்டுட்டு போகணும். நீங்க சமையல்காரங்க கிட்டே தனியா உத்தரவு போடறதெல்லாம் நன்னா இல்லை’ என்றார்.

    அந்த மாமிக்கு கோபம், விறுவிறுவென்று ஹாலுக்கு வந்தாள். அனந்த சயனத்திலிருந்த தன் கணவர் பெருமானை எழுப்பினார். ‘வாங்கோன்னா, நாம ஆத்துக்குப் போகலாம். சாப்பாட்டுல வெங்காயம் புடலங்கா சேக்காதீங்கோன்னு சமையல்காரர் கிட்டே சொல்றேன். ஒருத்தர் வந்து உங்களுக்கு வேணும்னா சாப்பிட வேண்டாம். மத்தவாளுக்குப் போடப்படாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாருங்கறார். வாங்கோ, நாம ஆத்துக்குப் போகலாம்’ என்றாள்.

    அவர் சாவகாசமாக எழுந்து உட்கார்ந்து கொண்டு ‘என்னடீ இப்படிச் சொன்னா ராத்திரி சாப்பாட்டுக்கு என்னடீ பண்றது. அங்கே ஆத்துல உன் அருமை மாட்டுப் பொண்ணு புருஷனைக் கூட்டிண்டு ஓட்டலுக்கு போயிடுவா, நாம போய் என்னத்தைச் சாப்பிடறது. ராத்திரிக்குத்தான் நாம கல்யாணத்துல சாப்பிடப்போறோம், இது மிச்சம் வைக்க வேணாம்னு காலைல பண்ணின வத்தக் குழம்பையும்தான் நீ மத்தியானமே சாப்பிட்டுட்டியே’ என்றார்.

    ‘சரி சரி, நீங்க பேசாம படுத்துக்கோங்க, பந்தி பரிமாறினவுடனே பார்த்துண்டு வந்து உங்களை அழைச்சுண்டு போறேன். முதல்ல சாப்பிட்டுட்டு நாம ஆத்துக்குப் போயிடலாம், என்ன?’ என்று கேட்டுவிட்டு சமையல் கட்டுக்குள் மறுபடியும் நுழைந்து விட்டாள்.

    அவள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், கல்யாண வீட்டுக்காரர் ஒருவரை அழைத்து அந்த தம்பதி யார் என்று கேட்டேன். அவர் சொன்னார்: ‘அவங்க ஏதோ தூரத்துச் சொந்தம். தெரிஞ்சவங்க வீட்டுக் கல்யாணம்னா தவறாம ஆஜராயிடுவாங்க. இப்படித்தான் அங்கே போயி இவங்க இஷ்டத்துக்கு உத்தரவு போடுவாங்க. சில இடங்கள்ளே செல்லுபடியாகும், சிலபேர் துரத்திவிட்டுடுவாங்க. இவங்க அதுக்கெல்லாம் மான அவமானம் பாக்க மாட்டாங்க” என்றார்.

    அது சரி அவங்க பேர் என்ன? என்று கேட்டேன்.

    அதற்கு அவர் “அவங்களோட உண்மையான பேர் என்னன்னு தெரியலை. ஆனால் எல்லோரும் அவரை ‘தில்’ அப்படின்னும், அந்த அம்மாவை ‘திவானா’ ன்னும் கூப்பிடுவாங்க.

    ‘தில், திவானா’ நல்லா இருக்கே பெயர் என்று சிரித்துக் கொண்டேன்.

    (​தொடரும்)

    Share
  • கடவுள் என்பவர் யார்?

    ​கோ. ஆலாசியம்

    Untitled

    கடவுள் தத்துவம் பற்றிய விவேகானந்தரின் சிந்தனைகளை, நான் புரிந்துக் கொண்டவைகளை, இங்கே உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

    கடவுள் தத்துவம்

    கடவுள் என்பவர் யார்?

    ‘ஜன்மாத்யஸ்ய யத: யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ’1

    அவரே கடவுள். அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவானவர், குருவிற்கெல்லாம் குருவானவர்

    எல்லாவற்றிற்கும் மேலாக

    ‘ஸ ஈச்வர: அநிர்வசனீய ப்ரேம ஸ்வரூப:

    அந்த இறைவன் சொல்லுக்குள் அடங்காத அன்பு வடிவினன்.’2

    இந்த விளக்கங்கள் நிச்சயமாக சகுணக் கடவுளுக்கானவை.

    (அனைவரும் வணங்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உருவத்தை செய்துக் கொண்டு வணங்கும், அந்த உருவக் கடவுள்)

    அப்படி என்றால் இரண்டுக் கடவுள்கள் இருக்கிறார்களா?

    தத்துவ ஞானியின் ‘இதுவல்ல, இதுவல்ல’ என்ற சச்சிதானந்தக் கடவுள், பக்தனின் அன்பே வடிவான கடவுள் என்று இரண்டு கடவுளரா?

    இல்லை, இல்லை, இல்லை.

    சச்சிதானந்தப் பொருள் எதுவோ அதுவே அன்புமூர்த்தியும்.

    நிர்குணமும், சகுணமும் ஒருவரே. அப்படியானால் பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்திலிருந்து வேறானவரா?

    அதுவும் இல்லை.

    இந்த பிரபஞ்சம் (நாம் பூதக் கண்களால் காணும் இந்த உலகம், வெளி, கோள்கள், நட்சத்திரங்கள் என்று யாவும்) பிரமத்தில் இருந்து தோன்றியது, தோன்றியது என்றால் மறையவும் செய்யும். எங்கே மறையும். என்றக் கேள்வி வரும்.

    எங்கிருந்து தோன்றியதோ அதனுள்ளேச் சென்று மறையும். பிறகு அது மீண்டும் தோன்றும். இது படைப்பின் சுழற்சி. இதை இங்கே தற்காலிகமாக நிறுத்தி விசயத்திற்கு செல்வோம்.

    சகுணக் கடவுள் என்பவர் மாயையின் வழியாக காணப் படும் பரம் பொருளே அதாவது பரம்பொருள் என்பது தான்; நிர்குணக் கடவுள் / சச்சினானந்தம் / பிரபஞ்சத்தின் ஆதி மூலம்.

    (இங்கே மாயை என்பது என்ன என்று விளக்க / புரிய / ஞாபகப் படுத்த வேண்டும். பிரபஞ்சப் பொருள்கள் யாவும் ஜடப் பொருள்கள் என்றுக் கொள்வோம், அப்படி இருக்கும் போது அதனுள் ஒரு இயக்கம் வேண்டும் அல்லவா? அந்த இயக்கம் பெறுவதற்கு, இந்த சக்தி / இயற்கை /அதாவது மாயை தான் காரணம். இதை பிராணன் என்றும் கூறுவோம். )

    ஆக,

    அந்த பரம் பொருள், அந்த ஒரேக் கடவுள், இயற்கையின் ஆதிக்கத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் போது “ஜீவன்” எனப்படுகிறார்.

    இயற்கையை தான் ஆளும் போது “ஈசுவரன்” அல்லது சகுணக் கடவுள் எனப்படுகிறார்.

    நிர்குணமும், சகுணமும் ஒருவரே. பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்தில் இருந்து வேரானதோ, வேறுபாடு உள்ளதோ இல்லை.

    எல்லாமே இரண்டற்ற ஒன்றே தான். ஒன்றேயானப் பிரம்மம் தான்.

    மனத்தால் உணர முடியாதபடி மிகமிக நுண்ணியதாக இருப்பதால் நம்மால் அன்பு செலுத்தவோ, வழிபடவோ இயலாதபடி விளங்குகிறது. எனவே பக்தன் பிரமத்தை, குணங்களோடு  கூடிய நிலையில், அதாவது உலகங்கள் அனைத்தையும் ஆள்பவராகிய நிலையில்; அதாவது இயற்கையை ஆளும் ஈசுவரனாக, இறைவனைக் கொண்டு வழிபடுகிறான்.

    சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்.

    ஒருப் பொருள் கொண்டு பல பொம்மைகள் செய்கிறோம் என்றுக் கொள்வோம். அது களிமண்ணாகவோ, மரமாகவோ, கல்லாகவோ, கண்ணாடியாகவோ இருக்கலாம். அப்படி செய்யும் போது, அந்த செய்யப்பட்டப் பொருள் உருவத்தில் மாறுபாடு கொண்டு அதற்கு எலி என்றும் புலி என்றும் பெயர் வைக்கிறோம் என்றுக் கொள்வோம்.

    இப்போது எலியைப் புலியாகவோ, புலியை எலியாகவோ மாற்ற முடியாது. ஆனால் அந்த இரண்டும் உருவான மூலப் பொருள் ஒன்றே.

    அந்த மூலப் பொருள் இந்த பொம்மைகளை செய்வதற்கு முன்பே இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆனால் அது உருவமும், நாமகரணமும் (பெயரும்) கொண்டு இருக்கிறது.

    இவை இரண்டும் வேறு வேறானவை என்றுக் கொள்கிறோம். எதிலிருந்து எதுவரை என்றால், அந்த மூலப் பொருளில் இருந்து இவைகள் உருவம் பெற்றதிலிருந்தும், அந்த உருவம் அழியும் வரை.

    உருவம் பெறாத மூலப் பொருளாக இருந்தவரையில் அவை இரண்டும் ஒன்றே.

    அதுபோன்றே, அறுதி உண்மையான பிரமத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடே இறைவன். இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், பிரமத்தைப் பற்றி மனித மனத்தால் உணரமுடிந்த மிக உயர்ந்தக் கருத்து இறைவன்.

    படைப்பு அநாதி காலந்தொட்டு (நிர்ணயிக்க முடியாதக் காலம் தொட்டு) இருந்து வருகிறது. ஆக இறைவனும் அப்படியே.

    ***

    தமிழின் அருமருந்தாம் திருமூலம்!

    அதனின் காணும் கடவுள் வாழ்த்தை அடிகோடிட்டு சிந்தனைக்கு விருந்தாக்கி முடிக்கிறேன்.

    கடவுள் வாழ்த்து

    ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்

    நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

    சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

    பொழிப்புரை:

    ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான் கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான்.

    செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.

    (இதில் மறக்கருணை என்பது, அவதாரங்களாக வந்து தீமையின் மொத்த உருவமாக இருக்கும் ‘அகங்கார மமகாரத்தை’ அழித்து நற்கதியுரச் செய்வது)

    ——————————————————————————

    1. பிரம்ம சூத்திரம்,

    2. சாண்டில்யப் பக்தி சூத்திரங்கள்

    நன்றி:

    ஞான தீபம் சுடர் 4.

    http://thevaaram.org

    Share
  • மூப்பு

    ஆர்.எஸ். மணி

    (வீடியோ கவிதை)

    இந்தக் கவிதை வீடியோவிற்காக எழுதப்பட்டது. குளிர்காலம் முடிகிற நாட்கள். மரங்கள் மொட்டையாய். நின்று கொண்டிருந்தன. என் வீட்டருகிலும், எங்கள் தோட்டத்திலும் இருந்த சில மரங்களையும், செடிகளையும் வீடியோ எடுத்து, தொகுத்து, அதற்கேற்றவாறு இந்தக் கவிதையை எழுதிப் பதிவு செய்தேன்.கவிதை படிக்கும்போது “இளமை” என்னும் சொல்லை “இளைமை” என்று தவறாக உச்சரித்து விட்டேன். மறுபடி பதிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.

    அன்புடன்,
    ஆர்.எஸ்.மணி
    ( கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா )

    மூப்பு

    இளமை என்னும் பருவம் ஏனோ
    எப்போதும் நிலைப்பதில்லை
    இளமையாய் இருந்தபோது – அதை
    நாமும் ஏனோ நினைப்பதில்லை
    மூப்பு வந்து முதுகை அழுத்த
    மூச்சிரைத்து மார்பும் வலிக்க
    முட்டாள் மனது ஏக்கத்தோடு
    வானைப் பார்த்து கலங்குகிறது

    மங்கி மறையும் மாலை ஒளியில்
    நெஞ்சும் நடந்த காட்சியெல்லாம்
    திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து
    காலை வேளைக்குக் காத்து நிற்கிறது

    இருள் சூழ இன்னும் எத்தனைக் கணங்களோ?
    இமைகள் மூட இன்னும் எத்தனை நாட்களோ?
    பசுமை நிறைந்த காலமும் போய் – இன்று
    மொட்டை மரமாய் நான் நிற்கின்றேன்

    எண்ணங்களுக்கோ குறைவேயில்லை – அவை
    எல்லா திசைகளிலும் தாவுகின்றன
    நேற்று, இன்று, நாளை என்று – மனம்
    எல்லா காலத்தையும் நாடுகின்றது
    எங்கெங்கோ சென்றுவிட்டு
    கிடைத்ததையே மீண்டும் தேடுகின்றது

    மலர்கள் பூத்துக் குலுங்கிய நாளும்
    வண்டாய்ப் பறந்த நேரமும் எங்கே?
    அன்புக்காக ஏங்கும் நெஞ்சில்
    முட்களே வந்து குத்துகின்றன
    சென்ற நாட்களும் திரும்புவதில்லை
    உடைந்த இதயம் சேர்வதுமில்லை

    உடலும் உலர்ந்து ஓய்ந்துவிட்டது – இன்று
    உயிரும் பசையின்றி காய்ந்துவிட்டது
    மீண்டும் பசுமை எட்டாக் கனவோ
    என்றே உள்ளம் வாடும்போது
    “உண்டு வாழ்க்கை” என்று யாரோ
    காதில் சொல்வது கேட்கிறது – அது
    மொட்டாய் முளைத்து வெளியே வந்து
    மெல்ல சிரித்து என்னைப் பார்க்கிறது

    இன்று போனால் போகட்டும் நெஞ்சே
    நாளை என்பது வரத்தான் செய்யும்
    இந்த உடல் இன்று மக்கி விழுந்தால்
    நாளை இன்னொரு உடலுடன் பிறப்பேன்
    மறுபடி உலகில் தவழ்ந்து ஒருநாள் – நான்
    இளமையை மீண்டும் தீண்டி மகிழ்வேன்

     

    —ஆர்.எஸ்.மணி

    Share
  • வலி

    ராசை கண்மணி ராசா 

     

    சாணிப்பால் ஊற்றி
    சவுக்கால் அடித்தான்
    என் பூட்டனை உன் பூட்டன்.

    காலில் செருப்பணிந்தால்
    கட்டி வைத்து உதைத்தான்
    என் பாட்டனை உன் பாட்டன்

    பறைக்கு எதுக்குடா படிப்பு என
    பகடி செய்து ஏசினான்
    என் அப்பனை உன் அப்பன்

    ‘உங்களுக்கென்னப்பா?
    சர்க்காரு வேலையெல்லாம்
    உங்க சாதிக்குத்தானே’-என
    சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!

    ஒன்று செய்
    உன்னை அறியாத ஊரில் போய்
    உன்னைப் பறையனென்று சொல்!
    அப்போது புரியும் என் வலி !

     

    Share
  • குறவன் பாட்டு – 11

    
    சச்சிதானந்தம்
    
    குறத்தியின் பயணம் 
                              
                              அறிமுகம் 
    
    

    கண்ணகிக்குக் கற்கோயில் எடுக்கவைத்த குலத்தில்,

    தென்னகத்துக் கொற்றவையை வணங்கும் இனத்தில்,

    புன்னகையும் நற்குணமும் கொண்ட குறத்தி,

    தன்னலமே அற்றளாய்த் தோன்றி னாளே!                                                                              84

     

     

                   குறத்தியின் வருகை 
    
    

    அந்தி வானச் சிவப்புடன், ஒளி

    மஞ்சள் கலந்த நிறத்துடன், எழில்

    அங்கம் கொண்டு சிறப்புடன், குற

    மங்கை மலர்ந்த முகத்துடன் வருகிறாள்!                                                                               85

     

    நாவல் பழமெடுத்து மண்ணூதித் தின்றுவிட்டு,

    சேவல் சிறகெடுத்து காதின் மெழுகெடுத்து,

    பூவின் தேனெடுத்து இதழிரண்டில் இளித்துவிட்டு,

    இனிக்கும் சாயமிட்டு, இடையாட்டிக் குறத்தி வந்தாள்!                                                 86

     

    கழுத்தில் கண்கவரும் வண்ணவண்ண மாலையிட்டு,

    வழுக்கும் தோளிரண்டை வாடாமல் மூடிவைத்து,

    இழுக்கும் கண்ணிரண்டை இங்குமங்கும் அலையவிட்டு,

    செழிக்கும் கானகத்தைச் சீராகச் சுற்றி வந்தாள்!                                                               87

     

    தேன் நிறத்தில் தேகங்கொண்டு, நீல

    வான் நிறத்தில் விழிகள் கொண்டு, நீண்ட

    கான் கொடுத்த கவினைக் கொண்டு, நல்ல

    மேன்மக்கள் குணங்கொண்டு குறத்தி வந்தாள்!                                                                       88

     

    பச்சைக் காய்கனிகள் தினமும் உண்டு,

    இச்சை என்பதை அளவாகக் கொண்டு,

    கச்சையில் பற்பல வண்ணங் கொண்டு,

    உச்ச அழகுடன் குறத்தி நடந்தாள்!                                                                                              89

    Share
  • வெங்கடேச அட்சரமாலை

    சு. கோபாலன்


    புனிதமான புரட்டாசி மாதத்தில்,  திருமலை வாசன் திருப்பதி வெங்கடேசனுக்கு

    மிக உகந்த முதல் சனிக்கிழமையன்று அவன் திருப்பாதத்தில் ஒரு சிறிய பாமாலை

    சமர்ப்பணம்.

     

    திகாலைப் பொழுது விடியுமுன்பே

    தவன் வானில் உதிக்குமுன்பே

    னிய சுப்ரபாத இசையால்

    ர்க்கப்பட்டு துயில் எழுந்து

    னைக் காண வரும் பக்தருக்கு

    க்கமாய் நடுநிசி வரை

    ன்றும் தரிசனம் தந்திடும்

    காந்தமாய் எழுந்தருளிய எம்பிரானே!

    யமின்றி நீ கருணைக் கடலே!

    ப்பிலாத தெய்வமே மலையப்பா!

    டி வருவோம் உன்னருள் நாடி

    ஒளடதமாய் கலி தீர்க்கும் உந்தாள் தேடி!

     

    படத்துக்கு நன்றி: http://www.starsai.com/sri-venkateswara-tirumala-tirupati-darshan/

     

    Share
  • வாழ்க்கை நலம் – 27

    குன்றக்குடி அடிகள்

    27.  பொறாமை

    பிறருடைய செல்வம், புகழ் முதலியன கண்டு மகிழ முடியாத குணம் பொறாமை எனப்பெறும். பொறாமையைத் திருக்குறள் அழுக்காறு என்று கூறுகிறது. அதாவது அழுக்கு நிறைந்த வழி. நமது நாட்டில் அறிந்தும் அறியாமலும் நல்லவைகளின் அடிப்படையில் அழுக்காறு கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

    ஆயினும் அழுக்காறு கொள்ளுதல் எந்த நிலையிலும் தீதே. அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. அழுக்காறு நெஞ்சமுடையார் நல்லவைகளையும் கூடத்தாம் பெற முயற்சி செய்ய மாட்டார்கள். நல்லவைகளைப் பெற்றிருப்பவர்கள் மாட்டு அழுக்காறு கொண்டு அவர்களுக்குக் குற்றங் குறைகளைக் கற்பித்துப் புழுக்கங் கொள்வர்! பழி தூற்றுவர்.

    அதனால் அழுகாறுடையார் மாட்டு உயர்வு தோன்றவும் இயலாது. உலக மகாகவி ஷேக்ஸ்பியர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்! எதற்கு? அழுக்காற்றிடம் சிக்கிச் சீரழியாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக!

    “O Beware My Lord of Jealousy”  என்று கூறுகிறார். “அழுக்காறு நெஞ்சம் பெறுதல் சாதலுக்கு நேரானது” என்பார் காட்டன்.  “Envy will sting it self to death”  என்பது அவர் கூற்று. அழுக்காறு உடையார் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை.  சான்றாக ஒரு முடவன் (நொண்டி) தன்னுடைய  காலைப் பழுது நீக்கிச் சீரமைத்துக் கொள்ள விரும்புவதில்லை, முயற்சி செய்வதில்லை. அடுத்தவன் கால் முடமாகி விட்டால் தான் நடக்க இயலும் என்று நினைப்பான். இதற்கே அழுக்காறு என்று பெயர்.

    தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. “தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபசகுனமாக வேண்டும் என்று நினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்” என்பர். இத்தகைய அழுக்காறு தீமைகளின் பிறப்பிடம்.

    நற்குணம் இம்மியும் இல்லாத இழி பிறவிகளே அழுக்காறுடையராய் இருப்பர். அழுக்காற்றினைத் திருக்குறள் ‘பாவி’ என்றே திட்டுகிறது. இன்று எங்கும் பரவிக் கிடப்பது அழுக்காறேயாம்.

    அழுக்காறில்லாத நெஞ்சம் பெறுதல் நல்லொழுக்கத்தின் இயல்பாகும். அழுக்காற்றினை எங்கனம் அகற்றுவது? அழுக்காறு வந்தபின் அகற்றுவது கடினம். அழுக்காறு வராமல் பாதுகாத்துக் கொள்வதே நல்லது. வருமுன் பாதுகாப்பு வேண்டும்.

    பிறருடைய செல்வத்தை, செல்வாக்கைக் கண்டால், கேட்டால் மகிழும் இயல்பினைப் பெறுதல் வேண்டும். மகிழ்ந்தால் மட்டும் போதாது. அவர்களுடைய செல்வம், செல்வாக்கைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள நாம் துணையாக இருக்க வேண்டும்.

    அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
    பேணாது அழுக்கறுப் பான்.

    (குறள்  –  163)

    அதாவது, மற்றவர்களுடைய செல்வம், செல்வாக்குகளைக் கண்டபொழுது மகிழ்ச்சியடையும் உள்ளத்தினைப் பெறுதல் வேண்டும். பாராட்டுகின்ற குணம் பெற்றிருத்தல் வேண்டும். அப்போதுதான் அழுக்காறு நம்மைத் தீண்டாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும்.

    எப்போதும் செல்வம், செல்வாக்கில் தம்மில் உயர்ந்திருப்பாரை நோக்கி அண்ணாந்து பார்க்கக் கூடாது. அதற்கு மாறாகத் தம்மில் கீழிருப்பாரை எண்ணி அமைதி பெறும் இயல்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும், இத்தகைய பழக்கங்களில் அழுக்காறு வந்து பற்றாது.

    அழுக்காறு தீது! அழுக்காற்றினின்று விலகுக! முற்றிலும் விலகுக! பிறர் வாழ்வு நலன்கள் கண்டு மகிழ்க! ஊன் உருக உளம் உருகப் பாராட்டுக! அவற்றை இழக்காது துய்க்கும் வண்ணம் பாதுகாத்திடுக, பெறாததைப் பெற முயலுக! பெற்றவர்மீது புழுக்கம் கொள்ளற்க! உளம் குளிரப் பாராட்டுக! வளரும் வழி இது! அழுக்காறு இல்லாத வாழ்வே சிறப்புடைய வாழ்வு.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (75)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பினிய உங்களோடு அடுத்தொரு மடலில் இ​ணைவதில் மகிழ்கிறேன்.

    பசி, பஞ்சம், பட்டினி என்பன எமது பின்புல நாடுகளிலே அன்றாடம் ஒலிக்கும் அவலக்குரல்கள்.

    வறுமையின் நிமித்தம் அன்றாடம் உண்ண வழியின்றி உயிர் துறப்போர் எமது தாய்நாடுகளில் ஏராளம்.

    ஆனால் இன்று நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மேலைநாடுகளில் இப்பசி, பஞ்சம், பட்டினி எனும் வார்த்தைகளைக் கேட்பது மிகவும் அருமை.

    வாழ வழியின்றித் தவிப்போரை வாழ வைக்க அரசாங்கம் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிப்பணத்தை வழங்கி வருவது ஒரு சாதாரண நிகழ்வாகி விட்டது.

    ஆனால் இத்தகைய ஒரு சமூகத்திலே அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளை வழங்க அரசாங்கம் இருக்கிறது எனும் காரணம் அவர்களின் தாய் தந்தையரின் கடமைகளிலிருந்து அவர்களுக்கு விதி விலக்களிக்கிறதா?

    எம்முடைய தாய் மண்ணிலே ஒரு குழந்தை இம்மண்ணில் விழுந்த நாள் முதல் அக்குழந்தை மண்ணோடு மண்ணாகிப் போகும் காலம் வரை அக்குழந்​தையின் பாதுகாப்பு ஒன்றே அக்குழந்தையின் பெற்​றோரின் கடமைகளில் முன்நிற்கிறது..

    ஆனால் அதற்காக மேலைநாடுகளில் பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளைப் பராமரிக்கும் தமது கடமைகளில் இருந்து வழுவி நிற்கிறார்கள் என்று பொருளல்ல. தமது குழந்தைகளுக்காக தமது உயிரைக்கூட தியாகம் செய்யக்கூடிய உணர்வு படைத்த பெற்றோர்களே பெரும்பான்மையாக காணக்கூடியதாக உள்ளது.

    ஆனால் சமூகத்தில் சமயங்களில் நடைபெறும் மனிதாபிமானமற்ற நிகழ்வுகளினால் எம் சமுதாய மக்களின் நடவடிக்கைகள் மனிதர்களின் குணாபாவங்களைப் பற்றிய அச்சத்தை உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகிறது என்பதும் உண்மையே.

    சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு வழக்கொன்றின் சாரம் எம்மை இத்தகைய மனக்குழப்பத்தினுள் ஆழ்த்தி விட்டது.

    இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள கவென்ரி (Coventry) எனும் இடத்தில் வசிக்கும் மக்டெலினா லூசாக் ( Magdelena Luczak ) என்பவருக்கும் எரிக் பெல்க்கா (Eryk Pelka) என்பவருக்கும் பிறந்த குழந்தை டானியெல் எனும் மூன்று வயதுக் குழந்தையாகும்.

    _69049801_pelka

    இவரது தந்தையான எரிக் பெல்க்கா இவர்களை விட்டுப் பிரிந்து தனது நாடான போலந்துக்குப் போய் விட்டார்.

    தாயாரான மக்டெலினா லூசாக் என்பவர் மரியூஸ் கிரிஸ்லொக் (Mariusz Krezolek ) என்பவரோடு வாழ்ந்து வந்தார்.

    இவ்வருடம் மார்ச் மாதம் மூன்றாம் ​தேதி இக்குழந்தை வைத்தியசாலையில் மரணமடைந்தது.

    மரண விசாரணையின் போது இக்குழந்தையின் உடலில் பல காயங்கள் காணப்பட்டது. அத்துடன் இக்குழந்தை சரியான முறையில் உணவு ஊட்டப்படாமலும் பராமரிக்கப்படாமலும் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

    பெற்றோரினால் பலவகையான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டதும் தெரிய வந்தது.

    இக்குழந்தையின் தாயோடு வசித்திருந்த அம்மனிதன் மிகவும் வன்மு​றைகளுக்குட்படுத்தக்கூடிய மனோநிலை படைத்திருந்தான் என்பதும் தெரிய வந்தது.

    _69871485_dpelkaபல தடவைகள் அயலவர்களின் முறையீட்டைத் தொடர்ந்து ​போலீசாரும், குழந்தை நலன்களைக் கவனிக்கும் அரசாங்க இலாகாவைச் சேர்ந்தவர்களும் விசாரணைகள் மேற்கொண்டதும் தெரிய வந்தது.

    இதைத்தவிர இக்குழந்தை சென்று வந்த குழந்தைகளுக்கான பாடசாலை அதிபர் பல தடவைகள் இக்குழந்தை வளர்ச்சி குறைந்த நிலையில் காணப்படுவதை அவதானித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

    இத்தகைய பொருளாதார வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் இத்தனை அறிகுறிகள் தென்பட்ட போதும் இக்குழந்தையை அரசாங்கத் திணைக்களங்களினால் ஏன் காப்பாற்ற முடியாமல் போனது எனும் ​கேள்வி ஒரு பக்கம் மிகவும் பலமாக எழுந்துள்ளது.

    அதே சமயம் அரசாங்கத் திணைக்களங்கள் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்தெடுப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்கள் எனும் பரவலான கருத்து விளங்கிய காரணத்தினால் இத்திணைக்களங்கள் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டின எனும் விளக்கம் மறுபுறத்திலிருந்து வருகிறது.

    பசி, பஞ்சம், பட்டினி என்பனவற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பது மட்டும் ஒரு அரசாங்கத்தின் கடமையல்ல. அக்குழந்தைகளை முறையற்ற வகையில் நடத்தும் உறவினர்கள் அவர்கள் பெற்றோர்களாயிருந்தாலும் அவர்களிடமிருந்து காப்பதும் அவர்களது கடமை என்பதை மறக்காமல் செயற்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

    Share
  • பாப்பா படும் பாடு!

    குரு பிரசாத்

    இன்றைய தினசரிகளில் தவறாது இடம் பிடிக்கும் செய்திகள் சிறுமி பாலியல் பலாத்காரம்… மற்றொன்று பள்ளி பேருந்தில் விபத்து – சிறுவர்கள் பலி!

    இளைய தலைமுறை, நாளைய இந்தியா, இவர்கள் வருங்காலத் தூண்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் குழந்தைகள் படும் பாட்டை யாரேனும் உணர்கிறோமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

    பெற்றோர்களின் கட்டாயத்தாலும் வற்புறுத்துதலாலும் தனது ஆசைகளை துறந்து விருப்பங்களை விடுத்து சர்க்கஸ்/மிருகக்காட்சிசாலை விலங்குகளை போல வாழும் இவர்கள் எவ்வளவு பரிதாபத்துக்கு உரியவர்கள்?

    school-busதினசரி காலை நடைப்பயிற்சியின்போது 6.30 மணிக்கு வரிசையாக செல்லும் பள்ளி வாகனங்களை பார்க்க பகீர் என்றிருக்கிறது. கடைசி குழந்தையை எட்டு மணிக்கு ஏற்ற வேண்டிய பேருந்து ஆறரை மணி முதல் குழந்தைக​ளை ஏற்றவேண்டி இருக்கிறது.

    பெரிய பள்ளி/சிறந்த பள்ளி/ தரமான கல்வி என்று ஒரு அளவுகோலை கொண்டு நாம் சேர்க்கும் பள்ளி  இருபது இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் கொடுமையே… மாநகரங்களில் அனைத்து வசதியும் கொண்ட தனியார் பள்ளி அமைய பல ஏக்கர் நிலம் தேவை; அது நிச்சயம் புற நகர்களில் தான் வாங்க முடியும். ஒரு சின்னஞ்சிறு குழந்தை ஒரு நாளைக்கு சுமார் ஐம்பது கிலோ மீட்டர்கள் பயணிப்பது எந்த விதத்தில் நியாயமோ தெரியவில்லை. இருபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட சாஃப்டுவேர் ஊழியனே இந்தப் பயணத்தில் களைத்துபோகும்போது பாவம் இந்தக் குழந்தை எப்படி தாங்கும் என்பதை எந்த பெற்றோராவது யோசிக்கிறார்களா?

    ஆறரை மணி பஸ்ஸை பிடிக்க ஒவ்வொரு குழந்தையும் காலை நாலரை மணிக்கு எழுந்து டாய்லெட் போயி, குளித்து ஏதோ ஒன்றை வயிற்றில் அந்த விடியற்காலையில் அடைத்து, யூனிபார்ம், ஷூ, சாக்ஸ் என்று அடித்து பிடித்து பஸ்ஸை பிடிக்கிறது. ஒவ்வொரு குழந்தையாக ஏற்றி அந்த பஸ் எட்டரை மணிக்கு பள்ளி சேர்கிறது. ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் பணி மூன்றரை நாலு மணிக்கு முடிகிறது. அதன்பின் மீண்டும் ஒரு மணிநேர பேருந்து  பயணம். ஆறு மணிக்கு அந்த குழந்தை மீண்டு ஹோம்-ஒர்க், ப்ராஜெக்ட் ஒர்க், அசைன்மென்ட் ஒர்க் என்று எல்லா வேலைகளையும் முடிக்கும்போதே மணி நிச்சயம் பத்தை நெருங்கும். தூக்கம் சொக்கும். எப்போது படிக்கும்? இதில் சனிக்கிழமை வேறு பாதி நாள் பள்ளிக்கூடம் சிலர் முழு நாள் வேறு!

    ஸ்ட்ரெஸ், ஹைபர்டென்ஷன், ப்ரெஷர் எல்லாம் ஏதோ ஐ.டி. ஃபீல்ட் சமாச்சாரம் என்று நினைத்திருப்பவர்களே. அதெல்லாம் இப்போ​தே எத்தனை மடங்கு அனுபவிக்கிறார்கள் இந்த குழந்தைகள் என்று தெரியுமா?

    எவ்வளவுக்கு எவ்வளவு இத்தனை அதிக சுமை/துக்கம்/டார்ச்சர் எல்லாம் இருக்கிற​தோ அந்த அளவு சிறப்பான பள்ளி/உயர்ந்த பள்ளி என பெற்றோர்கள் நினைப்பது தான் இந்த குழந்தைகளை மேலும் வதைக்க உதவுகிறது.

    நாமக்கல் புகழ் ப்ராய்லர் கோழி மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களை முன்மாதிரியாக வைத்து தமிழகம் முழுவதும் வளர்கின்ற மாணவர்கள் வெறும் மதிப்பெண் சார்ந்த கல்வியை பெற்று மனப்பாடம் செய்து வாங்கும் மார்க் மூலம் கவுன்ஸ்லிங்கிலோ அல்லது தந்தை தரும் காசிலோ பொறியியல் (பி.ஈ) சேர்ந்த பின் தான்,  தான் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பதையே உணர்கிறான். ஆனால் அப்போதும் இதை அவன் தந்தை உணர்வதில்லை. மீண்டும் அதே பாணி படிப்பில் (வேறு வழி…பாதி புரியாதபோது!…) எப்படியோ டிகிரி முடித்து கரூர் வைசியா பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் என வங்கி குமாஸ்தாவாகிறான்.

    கணக்குப் பிள்ளையாகவா தன் இளமையை தொலைத்து கனவை விற்று இத்தனை சித்ரவதை, வசை எல்லாம் அனுபவிக்கணும்?

    ஒரு காலத்தில் “ப்ரஃபஷனல்” கோர்ஸில் சேர்வது பெருமை. ஏனென்றால் அவர்கள் வேலைக்குத்தான் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை. தனியாக ஆலோசனை (கன்சல்டிங்) வழங்கும் விதம் சம்பாதிக்கலாம். டாக்டர், வக்கீல், ஆடிட்டர் மற்றும் எஞ்சினியர்.

    இப்போது எஞ்சினியர் பெரும்பாலும் ஏதாவது ஒரு வேலைக்கு போவதால் பி.ஈ படிப்பு “ப்ரஃபஷனல் கோர்ஸ்” என்னும் தகுதியை இழந்துவிட்டது.

    சயின்டிஸ்ட் சிதம்பரம், சிவதாணுப்பிள்ளை, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை எல்லாம் கிராம பள்ளிகளில் தரையில் அமர்ந்து படித்த சாதாரணக் கல்வியில் அதுவும் தமிழ் மீடியத்தில் படித்து அணுவிஞ்ஞானி ஆனார்கள். ஆனால் இன்றைய இந்த போந்தாகோழி படிப்பில் எத்தனை சயின்டிஸ்ட் உருவாகி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

    சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிகள்,  துள்ளித் திரியும் பள்ளி பருவங்கள் எல்லாம் ஏட்டில் படிக்கும் வரிகள் ஆகிவிட்டன. சிறு வயதில் நானெல்லாம் காலை 9.30 மணி பிரேயருக்கு தான் செல்வேன். நாலு மணிக்கு வீட்டில் இருப்பேன். ஆறரை மணி வரை கபடி, கில்லிதாண்டு, கொ-கொ என சவுகிரியத்துக்கு ஆட்டம் போட்டு விட்டு ஏழு மணிக்கு கை கால் கழுவிக்கொண்டு படிக்க உட்காருவேன்.நன்றாகத்தான் படித்தோம். நன்றாகத்தான் வாழ்கிறோம்.

    வாழ்க்கை என்றால் அது விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள், சந்தோஷம் என்றால் விலை உயர்ந்த கைப்பேசி, செக்யூரிட்டி என்றால் கடனோ உடனோ வாங்கி கட்டும் அபார்ட்மென்ட் வீடு என்று எப்போது ஆக்கிக்கொண்டோமோ அப்போதே நம் குழந்தையின் சுதந்திரத்தை, சந்தோஷத்தை அடமானம் வைத்துவிட்டோம்!

    வாழும் கலாச்சாரம் என்பது ஈ.எம்.ஐ. கலாச்சாரம் ஆகி விட்டது. நம் குழந்தைகளுக்கு மெத்தையை வாங்கிக் கொடுத்துவிட்டோம்! அவை தமது தூக்கத்தை தொலைத்து விட்டன!

    படத்திற்கு நன்றி: http://hairstyle-pictures.feedio.net/32-school-bus-clip-art-school-bus-clip-art-2-best-clip-art-blog/ofsd.k12.mo.us*esites*agoessling*Clip%20Art*school%20bus.png/

    Share
  • நீத்தல் விண்ணப்பம்

     

    சு.கோதண்டராமன்

     

          திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. இறையருள் பெற்ற அடியார் பலருண்டு, அவர்கள் பாடிய பனுவல்களும் பல உண்டு. இத்தனைக்கும் இல்லாத சிறப்பு திருவாசகத்திற்கு எப்படி வந்தது?

    எல்லா அடியார்களும் இறைவனைப் போற்றுவர். அவனது பேராற்றலைப் புகழ்வர். அவனது கருணையைப் பரவுவர். மணிவாசகரோ ஒவ்வொரு பாடலிலும் தன் சிறுமைகளை விரிவாகக் கூறி, இத்தனை தாழ்ந்த எனக்கும் அருள் புரிந்தாயே என்று வியக்கும் போது, இறைவனின் கருணையின் பெருமை மிகுதிப்படுகிறது. தன் சீவபோதம் ஒடுங்கும் வகையில் மாணிக்க வாசகர் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும் சிறுமைகள் மானிட குலம் முழுமைக்கும் பொருத்தமானதாக உள்ளன. நம் சார்பில் அவர் பேசுவதாகவே தோன்றுகிறது.

    வாழ்க்கையில் தவறு செய்யாதவர் நம்மில் யார்? நாம் தவறு செய்து விட்டோம், நமக்கு உய்யும் வழி இல்லை என்று விரக்தி அடைந்த நிலையில் இருப்போர்க்கு, ‘எந்த நிலையிலும் மனம் திருந்தி இறை நாட்டம் கொண்டால் அவன் நம்மைக் கடைத்தேற்றக் காத்து இருக்கும் கருணை வள்ளலாக விளங்குகிறான்’ என்ற ஆறுதல் ஏற்பட்டு, திருவாசகம் படிக்கும் பொழுது வெளிப்படும் கண்ணீரில், செய்த பாவங்கள் கரைந்து மனம் பக்குவப்படுவது பலருடைய அனுபவம்.

    இப்படிப்பட்ட திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியிலிருந்து சில முத்துகளைச் சுவைப்போம், வாருங்கள்.

    பெயர் நீத்தல் விண்ணப்பம் என்று இருந்தாலும் அதில் கூறப்பட்ட விஷயம்- இறைவன் தன்னை விட்டு நீங்காது இருக்க வேண்டும் என்ற விண்ணப்பம் தான். அனைத்துப் பாடல்களிலும் வரும் ஒரு பொதுவான தொடர், விட்டிடுதி கண்டாய் என்பது. ‘என்னை விட்டு விடாதே’ என்பது பொருள்.

    நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டது. அந்தாதி முறையில் அமைந்தது. இதன் முதல் பாட்டின் முதல் சொல் ‘கடையவன்’ என்பது. அந்தாதி இலக்கணப்படி, கடைசிப் பாட்டின் கடைசிச் சொல்லும் இதுவே. முதலில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கீழ்த்தரமானவன்’ என்ற பொருளில் தன்னைக் குறிக்குமாறும், கடைசியில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கடைசித் தொழிலான சம்காரம் செய்பவன்’ என்ற பொருளில் சிவனைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது.

    தத்துவரீதியாகப் பார்க்குமிடத்து, வாழ்க்கையை மும்மலங்களுடன் துவக்கும் சீவன் படிப்படியாகச் சீவபோதம் நீங்கி இறுதியில் சிவபோதம் அடைவதை இது குறிக்கிறது.

    மணிவாசகர் கூறுகிறார், “நான் கடையவன். காமத்தின் வசப்பட்டுக் கடவுளை மறந்தவன். ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் வேரடி மண், ஓடும் நீரால் அரிக்கப்பட்ட நிலையில் அந்த மரம் பார்வைக்கு நேராக நின்றாலும் எந்த நேரத்திலும் விழுந்து விடக் கூடிய நிலையில் இருப்பது போல, என் ஐம்பொறிகள் காம நீரால் அரிப்புண்டு என்னை நிலையற்றவனாக்கி விட்டன. இறைவா, நீ என்னை வளைத்துப் பிடிக்க வந்தாய். நானோ உன் கையில் பிடிபடாமல் புலனின்பமே பெரிது என்று மயங்கி இன்னமும் உலகாயதச் சேற்றில் உழல்கின்றேன். தீயினைப் பழம் என்று நினைத்து அதைச் சுற்றி வட்டமிட்டு இறுதியில் தன்னை அதில் மாய்த்துக் கொள்ளும் விட்டில் போல, நான் இந்த உலக வாழ்வே இன்பம் என்று கருதி அதையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். நீ உன் அருள் அமுதை என் வாயில் ஊட்ட வந்தாய். நான் அதை ஏற்காமல் மறுத்து விட்டேன். என்னே என் அறியாமை” என்று நொந்து கொள்கிறார்.

    செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள்

    விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாய்அறுகால்

    உழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசே

    வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே.

    “என் ஐம்புலன்கள் எனக்கு வஞ்சனையைச் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையான இன்பம் எது என்று நான் உணர அவை வாய்ப்பு அளிக்கவில்லை. அதனால் நான் உன் மணி மலர்த் தாள் குறுகாமல் வேறுபட்டேன். எறும்புகள் நெய்க்குடத்தை மோப்பத்தால் அறிந்து நாடுவது போல என் புலன்கள் உலக இன்பத்தையே நாடிக் கொண்டிருக்கின்றன. உண்மையான மெய்ப்பொருள் நீ இருக்க, நான் பொய்மை செய்து வீண் பேச்சைப் பெருக்கிக் கொண்டிருக்கிறேன். கடைகின்ற மத்துப் பொருந்திய உடனே, தயிர் சுழல்வது போல என்னைப் பற்றிய பாசங்கள் ஐந்தினால் நான் அலைப்புண்டு வருந்துகிறேன். இவ்வாறாக, மீண்டும் ஒரு பிறவிக்கு உரியவனாக என்னை ஆக்கிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு புலன் வசப்பட்டு வாழ்ந்தது கூடப் பெரிதில்லை. அதை விடப் பெரிய தவறு ஒன்றும் செய்து கொண்டிருக்கிறேன். இறைவனை அடைய வேண்டும்  என்ற குதுகுதுப்பு (ஆர்வம்) என்னிடத்தில் எள்ளளவும் இல்லை. என் மனம் போன வழியில் சென்று கொண்டு இது தான் இறைவனின் குறிப்பு என்று தவறாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறேன். இது மன்னிக்கப்படக் கூடிய குற்றமா?”

    குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில்

    விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்

    “உன்னோடு ஒன்றுபடும் வழியும் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பாடவில்லை. உனக்குப் பணி செய்யவில்லை. சிவன் யார் எங்குளான் என்று தேடவில்லை. ஓடிப் பார்க்கவில்லை. ஸ்தம்பித்து மனம் உருகவில்லை. அது மட்டுமல்ல, உன்னைப் பழிக்கவும் துணிந்தேன்.”

    திருவாசகத்தில் தோய்ந்து கிடந்த அருட் பிரகாச வள்ளலார் இதே கருத்தை எதிரொலிக்கிறார்.

    அல்லார்க்கும் குழலார் மேல் ஆசை வைப்பேன்

    ஐயா நின் திருத்தாள் மேல் அன்பு வையேன்.

    செல்லார்க்கும் பொழில் தணிகை எங்கே என்று

    தேடிடேன் நின் புகழைச் சிந்தை செய்யேன்

    கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்கண்ணினேன் புன்

    கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்

    எல்லார்க்கும் உதவாத பாவியேன் யான்

    ஏன் பிறந்தேன் புவிச் சுமையாய் இருக்கின்றேனே.

    “இத்துணை நாள் இப்படி வாழ்ந்தது போதும். இனி புலால் நாற்றமுடைய, நோய்களுக்கு இருப்பிடமான இந்த உடலை நான் தாங்கி இருக்க மாட்டேன். நான் தளர்ந்து விட்டேன். என்னைத் தாங்கிக் கொள்வாயாக” என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்.

    தன் சிறுமைகளை எல்லாம் பட்டியலிட்ட மணிவாசகர் ஆங்காங்கு இறைவனின் கருணையையும் புகழ்ந்து பாடுகிறார். இறைவன் பேராற்றலும் பெருங் கருணையும் உடையவன் என்பது முன்னரே தெரிந்தது தான். ஆனால் இவ்வளவு குறை உடைய எனக்கும் அவன் கருணை செய்துள்ளான் என்பது அவனது கருணைக்கு எல்லையில்லை என்பதை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

    கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட

    விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்

    உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே

    சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.

    “நான் கள்ளன் என்பது உனக்குத் தெரியும். அப்படியும் என்னை ஆண்டு கொண்டாயே அப்பா, அது என்ன காரணம் பற்றி?” என வினவுகிறார்.

    கள்ளேன் ஒழியவும் ஆண்டு கொண்டதெக் காரணமே

    “என்னை ஆண்டு கொண்டது மட்டுமல்லாமல் என் குறையை நிறையாக்கி என் பிறவிப் பிணியைத் தீர்த்தாயே இறைவா. முன்பு பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விடத்தை அமுதமாக்கி  உண்டாயே அது போன்ற விந்தைச் செயல் அல்லவா நீ என்னிடம் செய்து விட்டாய்!”

    பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட

    மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று

    மையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே

    செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே

    “சுடர் விடும் பொருள்களுக்கு எல்லாம் ஒளி தந்த மூலப் பொருள் நீ. அதே நேரத்தில் எளிமையின் எல்லையைத் தொட்டவன். அதனால் அன்றோ, உன்னோடு கலந்து விட நான் வெளிவராத போதும் நீயாக வந்து என்னை ஆட்கொண்டாய்.”

    களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலந்தருள

    வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம்

    ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே

    எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடைய என்னப்பனே

    “சிவனே, உன்னிடத்தே ஒன்றுக்கொன்று பகையான நிலவும் பாம்பும் இசைந்து வாழ்கின்றன. அது போலப் பண்பில் மேம்பட்ட பழ அடியார் பலரோடு கூட படிறு {பொய்} ஒழுக்கம் கொண்ட என்னையும் இசைத்தாயே, இந்த வித்தையை எப்படிப் புகழ்வேன்? பிறவி என்னும் ஐவாய் அரவத்துக்கு அஞ்சி என் மனம் பொந்தில் ஒடுங்குகிறது. என்னைக் கைவிட்டு விடாதே.”

    பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு

    விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின்

    அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ வாயரவம்

    பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே.

    “நான் உன்னை ஏசினாலும் ஏத்தினாலும் பிழைகளை எண்ணி மனம் குழைகின்ற என்னை விட்டு விடாதே” என்று நீத்தல் விண்ணப்பத்தை நிறைவு செய்கிறார்.

    தாழ்மை உணர்வோடு பாடிக் கொண்டு வந்த மாணிக்க வாசகர் தோழமை உரிமையோடு பாடிய பாடல் ஒன்றும் நீத்தல் விண்ணப்பத்தின் இறுதிப் பகுதியில் உண்டு.

    “இறைவா, நீ கபால மாலை அணிந்து தீயை ஏந்தி அரவு பூண்டு வீரத்தின் நிலைக் களனாக விளங்குகிறாய். நீ என்னைக் கைவிட்டு விட்டால், நீ யாருடைய அடியவன் என்று ஊரார் என்னைக் கேட்கும்போது உத்தரகோசமங்கைக்கு அரசின் அடியார்க்கு அடியேன் என்று பதில் அளிப்பேன். என் கீழ்மையைப் பார்க்கும் அவர்கள் உன்னைப் பரிகசிப்பர். இது உனக்குத் தேவையா? உன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது நீ என்னைக் கடைத்தேற்ற வேண்டும்” என்கிறார்.

    அடுத்த பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் நிந்தா ஸ்துதியாக மிரட்டுகிறார்.

    “நான் பிழை செய்தவன் என்று என்னை நீ வெறுத்துப் புறக்கணித்தால் உன் செயல்கள் சரியல்ல என்று ஊரார் சிரிக்கும்படி செய்து விடுவேன். அப்படியும் நீ என்னை ஒதுக்குவாய் ஆயின் நீ யானைத் தோலைப் போர்த்த பித்தன், புலித் தோலை உடுத்த பித்தன், நஞ்சு உண்ட பித்தன், சுடுகாட்டுத் தீயில் விளையாடும் பித்தன், என்னை ஆண்டு கொண்டு பின்பு புறக்கணித்த பித்தன் என்றெல்லாம் ஏசி உன்னைப் பழிக்கு ஆளாக்குவேன்” என்கிறார்.

    கற்றுப் புலமை தேர்ந்து தன் அறிவுத் திறம் விளங்கப் பாடிய பாடல்கள் அல்ல இவை. பக்திச் சுவையில் தோய்ந்து கிடந்து பழுத்த மனத்திலிருந்து பீறிட்டு எழுந்தவை இவை. ஆயினும் இவற்றில் இலக்கியச் சுவைக்கும் பஞ்சமில்லை.

    மணிவாசகரின் உவமை நயம் சிறப்பு மிக்கது. புலனின்பமே மேலானது என்று கருதி வாழ்பவன் சிறப்புற வாழ்வது போலத் தோன்றினாலும் அவன் ஒரு நாள் வீழ்ந்து படுவது திண்ணம் என்பதைக் காட்ட வேரடி மண் அரிக்கப்பட்டும் நிமிர்ந்து நிற்கின்ற ஆற்றங்கரை மரத்தை உவமையாக்கியதை முதலில் பார்த்தோம்.

    புலனின்பம் தனக்கு அழிவு தர வல்லது என்பதை உணராமல் அதைத் தேடி அலைகின்ற மானிடரை தீப்புகு விட்டிலாகவும் நெய்க்குடம் மொய்க்கும் எறும்பாகவும் சித்தரித்ததையும் பார்த்தோம்.

    இறை நாட்டம் ஒரு புறமும் புலன் நாட்டம் ஒரு புறமுமாக இருப்பவர்களை இருதலைக் கொள்ளி எறும்புக்கு உவமிக்கிறார்.

    இறையருள் வெள்ளமாகப் பெருகிக் கொண்டிருந்தும் அதைப் பருக முடியாமல் தடுமாறும் மனிதக் கூட்டத்தை வெள்ளத்தில் மிதந்து கொண்டே தாகத்தால் நா வறண்டு துன்புறும் பேதை என வர்ணிக்கிறார்.

    யானைப் படை கொண்டு புரிகின்ற போரில் சிறு செடிகள் மிதியுண்டு மாய்வது போல, ஐம்புலன்கள் இன்பம் நாடிச் செல்லும் வேளையில் ஆன்மா நாசமடைகிறது என்கிறார்.

    நாங்கூழ்ப் புழுவைச் சுற்றி எறும்புகள் கூட்டமாக் மொய்த்து அதைக் கடித்து உண்ணும் வேளையில் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் புழு துடிப்பது போல், ஐம்புலன்கள் துன்புறுத்த, என் மனம் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் துடிக்கிறது என்கிறார்.

    இறைவனை அடைய வேண்டும் என்கிற இதய தாகத்துக்கு அவர் கொடுக்கும் உவமை, ‘பெரு நீர் அறச் சிறு மீன் துவண்டாங்கு.’ வெள்ளம் வற்றிய இடத்தில் உள்ள மீன் துடிப்பது போல இறைவனின் பிரிவாற்றாமையால் தான் துடிப்பதாகக் கூறுகிறார்.

    வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை

    நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

    தேன் கலந்து பால் கலந்து செழுங் கமலத்தின் சுவை கலந்து

    ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

    என்று வள்ளலார் பாடியது பொருத்தமானதே என்று உணர்கிறோம்.

     

    படத்துக்கு நன்றி: http://swarnaboomi.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

     

    Share
  • கே.ஜெ வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும் – 3

     

    கோ.ஆலாசியம்

     

    val7

    குறுக்கும் நெடுக்குமான

    மரச் சட்டம்…

    அதன்மேலே அழகாய்

    அடுக்கிப் பரப்பிய

    மரச் சட்டம்…

     

    மனிதன் செய்தது

    மலைக்க வில்லை….

    மலைத்துப் போனேன்

    மரப் பாலத்தின் கீழே பார்க்க.

     

    குட்டிச் சங்குகள்

    கூட்டம் கூடமாய்….

    அந்த

    கொத்து மஞ்சரிகள்

    பூத்துக் கிடந்தன

    அம்மரச்

    சட்டங்களின் மேலே…

     

    யான் அறியேன்

    அவைகள்

    தத்தம் பாசையில்

    சந்தபா பாடினவோ…

     

    செங்கனிவாய்

    முத்தம் தந்து

    அவை மொத்தமும்

    தத்தம் பேடையுடன்

    காதலில் கூடினவோ என்றே.

    val8

    ஆகா!….. அருமையிலும் அருமை

    இப்போது

    இந்த கடலின் பரப்பு…

     

    தகரமும் போய்

    தாமிரமும் போய்

    தகதகக்கும்

    தங்கமானது…

     

    காணும் போதிலே

    கதகதப்புடன் அது என்

    சிந்தையில் பூத்த

    செவ்வந்திப் பூக்களாய் …

     

    பனியில் குளித்து

    பளபளக்கும்

    பவள மஞ்சள் மலர்களாய் …

    பரவசப் படுத்தின.

     

    குளிரில் காய்ச்சிய பொன் நீரோ

    இல்லை யந்த

    குபேரன் கூரையிலிருந்து

    கொட்டிப் பெருகி உருகியத்

    தங்கக் கடல் நீரோ ….

     

    இன்பக் காட்சி அது

    கொள்ளை போகிய என்

    நெஞ்சில் தெளித்தது பன்னீரே …

    val9

    சொர்க்கம் என்பதும் இது தானோ

    அல்லது அதுவும்

    இதற்கு நகல் தானோ

    என்று வியந்தே

    ஏறிட முயன்றேன் மரப் பாலத்தே…

     

    மறுப்பேதும் கூறாது

    அதுவரை வந்த நண்பனோ

    மறுக்கலானான்…

     

    மறுபடியும் நீ

    திரும்பும் வரை

    நானிங்கு இருக்கிறேன் என்று

    மண்டியிட்டான்….

     

    மறுப்பேனா

    மறுப்பது உன் உரிமை

    பொறுப்பது என் கடனென்று…

    முன்னே சென்றேன்

    நான் மட்டும்…

     

    மஞ்சள் பூத்து மகிழ்ந்த வானம்

    தனது கொழுநன்

    கொஞ்சிக் குலாவ

     

    மஞ்சம் வராது

    மறைந்து போக…

    கோபத்தில் சிவந்தாள்

    கொழுந்திடை வைத்த பொன்போல

     

     

    நல்ல வேலை…

    அப்போது அங்கே

    அன்பெனும் குளிர்கலந்த

    வாடைக் காற்று

    கோபமான வான மகளின்

    கேசம் வருடி

    ஆறுதல் கூறியது ….

     

    அன்னையின் பாசத்தில்

    நனைந்த நீளவானம்

    சில்லென நீலம் பூத்தது…

    val10

    இப்படி

    ஒவ்வொரு தருணமும்

    உருமாறும் போது

    அப்படியே நானும்

    அத்தனை யையும்

    படம் பிடித்தேன்

    அழகழகாய்…

     

    ‘என் இனியத் தமிழ் மக்களே’

    நான் படம் பிடிக்கப்

    போகும் போதெல்லாம்

    எனது காமிராவை யல்ல ….

     

    எனது கண்மணியின் இருக்

    கண்களைத் தான்

    எடுத்துச் செல்வேன்

    அந்தக் கண்களுக்கு மாத்திரமே

    குறைகானாப் படங்களை

    எடுக்கத் தெரியும்… J

     

    வால்நீண்ட மீன்

    முளைக்கும்

    என்று

    ஏங்கி காத்து இருந்த

    எந்தன்

    காதுகளுக்குள்ளே ….

     

    சிறகுகள் வலிக்க

    பறந்து வந்தக்

    குளிர் காற்றுகளும்…

     

    சிறு குகையினைக்

    கண்டோம் என்றோ

    கொஞ்சம்

    இளைப்பாற

    குடிபுகுந்துக் கொண்டன…

     

    உதடுகள் துடிக்க

    இணையாக

    பற்கள் பறை அடிக்க

    உடம்பு முழுவதும் ரோமங்கள்

    எழுந்து புது நர்த்தனம் ஆட….

     

    பயமுறுத்த

    பாம்பொன்றும் இல்லாமல்

    படபடக்க நான் மட்டும்

    படமெடுத்தேன்

    பயந்துப் போனப்

    பாம்பைப் போல…..

     

    பொழுது சாய்ந்து

    புதுப் பெண்ணென வால்மீனவள்

    புறப்பட்டு வருவாள் என்று

    பொறுமையுடன்

    காத்து இருந்த நான்….

     

    இனி பொறுப்பது

    ஒரு போதும் பயனில்லை

    என்றே

    இரவுகவ்விய

    இனிய பொழுதின்

    நீலவானத்தை ஒரு

    நிழல்படம் எடுத்தேன்….

    val11

    வாடை காத்து

    எனை…

    வருத்தி தின்னும் முன்னே

     

    வால்முளைத்த

    மீனைக் காணாது

    வால் சுருண்ட நண்பனுடன்

    வந்து சேர்ந்தேன்

    நான் தங்கி வசித்த வீட்டிற்கே!

     

    “திரும்பி வருகையில், எதோ

    ஒன்றுக்காக காத்திருப்பதுதான்

    வாழ்க்கையோ

    என்று தோன்றியது”

     

    ///அண்ணாகண்ணன் wrote on 24 March, 2013, 22:51

    அழகிய அனுபவம். அந்தந்தத் தருணங்களை அசல் படங்களுடன் விளக்கியதால், கார்கில் ஜெய் கூடவே பயணித்த உணர்வு எழுகிறது. இந்தக் காட்சிகளுக்குள் கவிதை ஒளிந்திருக்கிறது. ///

     

    திருவாளர். கார்கில் ஜெய் அவர்களின் படங்களில் ஒளிருந்தக் கவிதையை; திருவாளர். அண்ணாகண்ணன் அவர்கள் அனுபவித்த அந்த அழகிய கவிதையை; இதுவாக இருக்குமோ! என்றிங்கே இயம்ப வந்தேன்.

     

    நன்றி: திரு. கார்கில் ஜெய்.

     

    Share
  • நிலவின் மறுபக்கத்தை நம்மால் ஏன் காணமுடிவதில்லை?

    தேமொழி

    மனித இனம் தோன்றியது முதல் நிலவினைப் பார்த்து வியந்து வந்திருக்கிறது. நிலவைப் பற்றியத் தெளிவான உண்மைகள் அறிந்திராத பொழுதும் புனைக்கதைகள் பல புனைந்து வந்திருக்கிறது, அக்கதைகளைப் புராணங்களில் ஏற்றி கடவுளர்களின் வரிசையில் நிலவினை இடம்பெறவும் செய்துள்ளது.  மேலும் மனித இனம் நிலவின் அழகில் மயங்கி சில நேரங்களில் நிலவைப் பெண்ணாகவும் பாவித்து கவிதைகள் பலப் பாடிப் போற்றியுள்ளது, நிலவையே காதலுக்குத் தூதகவும் அனுப்பியிருக்கிறது.

    காலம் உருண்டோட, அறிவியல் வளர, நிலவைப் பற்றிய உண்மைகள் அறிவியல் மூலமாக நிரூபிக்கப்பட்ட பொழுது கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் அந்த உண்மைகளையும் எடுத்தாண்டனர்.

    ஜூலை 21, 1969 அன்று அமெரிக்க விண்வெளி வீரர் ‘நீல் ஆர்ம்ஸ்ட்ராங்’ (Neil Armstrong) நிலவில் காலடி வைத்த பிறகு, அதுவும் கவிதைகளில் வெளிப்பட்டது.

    “நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
    இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
    வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்”
    என்று கவியரசர் புதிய உலகம் நோக்கி நம்பிக்கைத்  தொனிக்கும் கருத்தைப் பாடினார்.

    அத்துடன் நில்லாது, காதலன் தன் காதலியிடம் கேட்பதாக,
    “உறவின் ஒருபக்கம் நீயறிவாய்,
    இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்?”

    என்றும் கவியரசர் கண்ணதாசன் மற்றுமொரு கவிதை வரிகளிலும் ஓர் அறிவியல் உண்மையைப் புகுத்திப் பாடல் வழங்கியிருப்பார்.

    பூமியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நிலவைக் காலம் காலமாக அண்ணாந்து நோக்கினாலும் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து வருகிறோம். நிலவின் மறு பக்கத்தைப் பார்க்க முடிந்ததில்லை. இதுவரை நிலவைச் சுற்றிய விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே நிலவின் மறுபக்கத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    நாம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது நம் கண்களுக்குப் புலப்படாவிட்டாலும் உண்மையில் நிலவு சுழல்கிறது. பூமியைப் போலவே நிலவுக்கும் தன் அச்சிலேயே (own axis) சுழற்சி உண்டு, ஆனால் நம் கண்களால் அறிந்து கொள்ளும் வண்ணம் அச்சுழற்சி அமையவில்லை.

    நிலவு அவ்வாறு சுழலும் பொழுது நிலவின் மறுபக்கம் நமக்குத் தெரிந்துதானே ஆகவேண்டும், பின் ஏன் நிலவின் மறுபக்கத்தை நம்மால் காண இயலவில்லை?

    இதற்கு புவியின் சுழற்சியும் நிலவின் சுழற்சியும் ‘ஒத்த சுழற்சிப்பிணைப்பு’ (Tidal locking or captured rotation) என்ற வகையில் அமைந்திருப்பதே காரணம்.  இந்த ஒத்த சுழற்சிப் பிணைப்பு என்ற பண்பினால் நிலவின் ஒருபக்கம் மட்டுமே எப்போதும் புவியை நோக்கி அமைகிறது. இதனைக் கீழ்வரும் படம் விளக்குகிறது.  இடது பக்கம் உள்ள சுழற்சி ஓர் ஒத்த சுழற்சிப்பிணைப்பு. நிலவு புவியைச் சுற்றும் பொழுது கரும்புள்ளிகள் அமைந்த பகுதி புவியை எப்பொழுதும் நோக்கிய வண்ணமே உள்ளது.  புவியும் நிலவும் சுழல்கின்றன.  ஆனால் அவற்றின் சுழற்சி ஒத்திருக்கிறது.  மாறாக வலது பக்கம் உள்ள படம், ஒத்த சுழற்சிப்பிணைப்பு அமைந்திராவிட்டால் எவ்வாறு நிலவின் கரும்புள்ளிகள் அற்ற மறுபக்கமும் புவியை நோக்கித் திரும்பும் என்று விளக்குகிறது.

    ஒத்த சுழற்சிப்பிணைப்பு

    இந்த ஒத்த சுழற்சிப் பிணைப்பிற்குக் காரணம், நிலவு தன்னைத் தானே முழுமையாக ஒருமுறை சுற்றிவரும் காலமும், புவியை அது முழுமையாக ஒருமுறை சுற்றிவரும் கால அளவும் ஒன்றாகவே இருப்பதால் அமைகிறது.   நிலவு தன் அச்சில் ஒரு முழுமையான சுழற்சியை முடிக்கும் கால அளவு 27 நாட்கள். அதேபோல, நிலவு புவியை ஒருமுறை முழுமையாகச் சுற்றிவரும் கால அளவும் 27 நாட்களே. இவ்வாறான ஒத்த சுழற்சியினால் (synchronous rotation) நிலவின் ஒரே பக்கமே புவியை நோக்கி இருக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

    புவியின் நிலா அதனுடன் ஒத்தசுழற்சிப்பிணைப்பில் இருப்பது போலவே, சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களான செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களின் நிலவுகளும் அந்தந்தக் கோள்களுடன் ஒத்த சுழ்ற்சிப்பிணைப்பிலேயே சுழன்று வருகின்றன.

    கடந்த நான்கு ஆண்டுகளாக, ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் (The National Aeronautics and Space Administration / NASA) செலுத்திய ‘நிலவு ஆய்வு விண்கலம்’ (Lunar Reconnaissance Orbiter / LRO) நிலவைச்சுற்றி வந்து,அதனைப் படங்கள் பல எடுத்து, அத்துடன் இன்றியமையாதத் தகவல்கள் பலவற்றையும் நாசாவிற்கு அனுப்பி வருகிறது.

    ‘நிலவு ஆய்வு விண்கலம்’ (Lunar Reconnaissance Orbiter / LRO)

    விண்வெளி ஆய்வு மையம் இத்தரவுகளையும் படங்களையும் ஆராய்ந்து,  நிலவின் ஒவ்வொரு கோணத்தின் படத்தையும் பொருத்தி இணைத்து “நிலவின் சுழற்சி”யை ஒரு காணொளியாக  சென்ற வாரம் (செப்டம்பர்  11, 2013 அன்று) வழங்கியுள்ளது.  இருபத்தியைந்து நொடிகளே கொண்ட இக்காணொளி மூலம் நாம் இன்று நிலவின் மறுபக்கத்தையும் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  உண்மையில் எப்பக்கம் பார்த்தாலும் நிலவின் அழகு மனத்தைக் கவரும் வண்ணமே அமைந்துள்ளது.

    காணொளி: நாசா விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய நிலவின் சுழற்சிப் படம்

     

     

    References:
    [1]
    Amazing NASA video shows the moon like you’ve never seen it before, September 16, 2013, Scott Sutherland, Geekquinox, YAHOO News, http://news.yahoo.com/blogs/geekquinox/amazing-nasa-video-shows-moon-ve-never-seen-164200739.html?vp=1

    [2]
    Lunar Reconnaissance Orbiter – http://www.nasa.gov/mission_pages/LRO/main/index.html#.UjtQVRD9UQp & http://lro.gsfc.nasa.gov/

    [3]
    A Unique View Of The Moon – http://lroc.sese.asu.edu/news/index.php?/archives/790-A-Unique-View-Of-The-Moon.html

    [4]
    Tidal locking – http://en.wikipedia.org/wiki/Tidal_locking

    Videos:
    Rotating Moon from LRO – http://youtu.be/sNUNB6CMnE8

     

    Pictures:
    Tidal locking of the Moon with the Earth – http://en.wikipedia.org/wiki/File:Tidal_locking_of_the_Moon_with_the_Earth.gif
    Lunar Reconnaissance Orbiter  – http://www.nasa.gov/sites/default/files/styles/466×248/public/screen_shot_2013-06-12_at_10.42.00_am.png?itok=nwO6p8x-

     

     

     

    Share
  • தாது மணலும் சுத்தீகரிக்கப்பட்ட நீரும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    செப்டம்பர் 15, அண்ணா பிறந்த நாளில் சுத்தீகரிக்கப்பட்ட நீர் தமிழக விரைவுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி. தாது மணல், இயற்கை வளங்கள் அனைத்தும் மக்களுக்கு உரிமையானது என்பதில் மாநில, மத்திய அரசுகளும் உறுதியாக இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டங்களில் கிடைக்கக்கூடிய தாது மணல்களை பல லட்சம் டன் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறகு இப்பொழுதாவது விழித்துள்ளோம். இரும்பு தாதுப் பொருட்களும், நிலக்கரிச் சுரங்களும் கொள்ளையடிப்பதைப் பார்த்து மனம் வெதும்பி போராடக்கூடிய சூழலில் இருக்கிறோம். இது போலவே இந்த சுத்தீகரிக்கப்பட்ட நீரும், இயற்கை வளங்கள்தான். இவைகளுக்கு உரிமையுடையவர்கள் மக்களும், மத்திய மாநில அரசுகளும்தானே. முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது லிட்டர் 10 ரூபாய், 2 லிட்டர் 16 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இப்போது ஒரு லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட நீர் 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் விலையை நிர்ணயிப்பவர்கள் யார். இதனையும் அரசாங்கம் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கேன் 25 முதல் 30ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படியென்றால் சுத்தீகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தன்ணீர் அவர்களுடைய லாபத்துடன் சேர்த்து ஒரு ரூபாய்தான் ஆகிறது. அப்படியிருக்க எதற்கு இவ்வளவு விலை. செலவினங்களைச் சேர்த்துக் கொண்டாலும் அதிக பட்சமாக லிட்டர் 5 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்னும்போது எதற்கு மக்களை கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். நிலத்தினடியிலிருந்து கிடைக்கும் அனைத்தும் அரசிற்கும், பொது மக்களுக்கும் சொந்தமானது. சுத்தீகரிப்பிற்கான செலவும், அதற்குண்டான லாபமும் வழங்க வேண்டியது மட்டுமே நியாயமல்லவா.. ஒன்றுக்கு 1000 சதவிகிதம் லாபம் வாழ்வாதாரமான குடி நீருக்கு விதிப்பது அநியாயம் அல்லவா.. மாதத்திற்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவது போல ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் மாதத்திற்கு குறைந்த பட்சமாக 100 லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க வேண்டும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தாது மணல் கொள்ளையை தடுத்தது போல அரசு இதிலும் கவனம் செலுத்துமா? தாது மணலிலிருந்து என்னென்ன பொருட்கள் தயார் செய்ய முடியும் என்பதற்கான ஆய்வரங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக வெளிநாடுகளில் அவர்கள் இதனை மூலப் பொருளாகக்கொண்டு என்னென்ன பொருட்கள் தயார் செய்கிறார்களோ அதை நாமும் நம் நாட்டில் தயார் செய்யும்பட்சத்தில் வேலைவாய்ப்பும், நாட்டின் வளமும் பெருகும் இல்லையா?

    Share