Blog

  • ராம்லீலா மைதானத்தில் ஒரு வெற்றி விழா!

    பவள சங்கரி

    தலையங்கம்

    images (1)சிறுபான்மை அரசின் முதல்வராகப் பதவி வகித்த, அரவிந்த் கேஜரிவால் அவர்கள் 6-ஆவது தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, நம் இந்தியச் சரித்திரத்தில் நிலையான ஓரிடத்தைப் பெற்றுள்ளார். ‘ஆம் ஆத்மி’ என்றால் மக்களுக்கான கட்சி என்ற பொருளுக்கேற்ப மக்களால் பெருவாரியாக வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியில் உள்ள 67 சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 43 என்ற வகையில் எப்போதும் வயதானவர்களே அரசியலில் இருக்கிறார்கள் என்ற நிலையில் மாற்றம். அடுத்ததாக 67 சட்ட மன்ற உறுப்பினர்களில் 43 பேர் பட்டதாரியாகவும், அதற்கு மேலும் படித்தவர்கள். 24 பேர் மட்டும் 12ம் வகுப்பு வரை படித்தவர்களாக உள்ளார்கள். 67 சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் மிகப்பெரிய குற்றப்பின்புலம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். கேஜரிவால் உள்பட பலர் மீது கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்ட போதும் அந்தக் குற்றங்கள் மக்களுக்காகப் போராடியதற்காகச் சுமத்தப்பட்டவையே. மேலும் ரூ18,000 மட்டுமே சொத்து உள்ளவரும் இன்று சட்ட மன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டுள்ளார். பலருடைய சொத்து மதிப்பு 2 கோடி ரூபாயும், அதற்கு சற்று அதிகமாகவும் உள்ளது. ஒரே ஒருவரின் சொத்து மதிப்பு மட்டும் 80 கோடியாக உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கருத்து என்னவென்றால், 2013 -2015,இல் இவர்களுடைய சொத்து மதிப்பும், வருமானமும் 4 சதவிகித வளர்ச்சியே கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் அறிக்கை – 2013இல் குறிப்பிட்டதை தங்களுடைய 49 நாட்கள் ஆட்சியிலேயே நிறைவேற்ற முயன்றார்கள். பொது விநியோகத்தில் மேம்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம், உணவு எண்ணை மற்றும் பருப்பு இணைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன, தினசரி ஒவ்வொரு இணைப்பிற்கும் 700 லிட்டர் இலவச குடிநீர் வழங்குதலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். குறைக்கப்பட்ட அல்லது மானிய விலையில் தட்டுப்பாடற்ற யூரியா மற்றும் உரங்களும், விவசாயப் பெருமக்களுக்குக் கிடைக்க வழி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். பேருந்துகளுக்கு, இயற்கை எரிவாயுவை உபயோகப்படுத்துவதை நடைமுறைப்படுத்துவது, அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளை ஒழுங்குபடுத்துவது என்று அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டால், தில்லி மட்டுமன்றி நாடே வளமான ஆட்சியை மகிழ்ந்து கொண்டாடலாம். இதேநேரத்தில் மாநில உரிமை பெறாத சமயத்தில் இந்திய அரசின் ஒன்றியமாக இருக்கும்பொழுது ஆட்சியில் அமர இருக்கும் இக் கட்சி எதிர்கொள்ள இருக்கும் சவால்களை சந்தித்து களைந்து வெற்றி பெறும் என்று நம்புவோம். வெல்க பாரதம்!

    Share
  • வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 28-ஆம் ஆண்டு விழா – அழைப்பிதழ்

     வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும்
    வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும்
    இணைந்து வழங்கும் 

    பேரவையின் தமிழ் விழா 

    FeTNA 2015
    City National Civic Auditorium,
    San Jose, California

    July 2 – 5, 2015

    வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

     

     

    www.fetna2015.org / www.fetna.org

     

    காணொளி: தமிழ் மன்றம் வரவேற்பு

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    பவள சங்கரி

    சுட்டும் விழி
    தாய்மையைக் கொண்டாடுவோம்!

    தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு வரம். ஒரு பெண்ணின் வாழ்க்கை பூரணத்துவம் பெறுவதே அவளுடைய தாய்மைக்குப் பிறகுதான். இன்றைய சூழலில் பெண்களுக்கு தாய்மைப் பேறு கிடைப்பதில் பல இடர்பாடுகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. குழந்தை உருவானவுடன் அது நல்லபடியாகப் பிறக்க வேண்டுமே என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முதல் மூன்று மாதக் காலங்களிலிருந்தே தாயின் எண்ணங்கள் குழந்தைக்கும் செல்கிறது. தாய்மைக் காலத்தில் தாய் மன அழுத்தத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் அதன் பாதிப்பு இருக்கலாம் என்கிறது ஆய்வுகள். குழந்தை உருவானவுடன் தாய், தந்தை, குழந்தை என அம்மூவருக்குமான தொடர்பு ஏற்படுவதை நம்மால் மனப்பூர்வமாக உணர முடியும்.

    சமீபத்திய ஆய்வுகள், மகப்பேறு காலங்களில் பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றன. ஏழு நாடுகளில், பத்தொன்பது மையங்களில், ஆய்வு செய்ததில் 8,200 க்கும் அதிகமான பெண்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பிரசவ நேரத்தில், முன்சூல் வலிப்பு, கர்ப்பகால நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம் என்கின்றனர். 10 முதல் 20 சதவிகித தாய்மார்கள், மன அழுத்தம், பதட்டம், இறுமுனை கோளாறு ஆகியவைகள் பிரசவ காலத்திலும்,அதன் பிறகு ஓராண்டிற்கும், பலவிதமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் சரிவும் இதற்குக் காரணமாகலாம் என்கின்றனர் வல்லுநர்கள். பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும் இந்த நோய்க்கான காரணமும் அதன் தீர்வும் குறித்து சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.

    அபிமன்யு, பிரகலாதன் கதைகள் நாம் அறிந்ததே.

    கண்ண பரமாத்மாவின் சகோதரி சுபத்திரையின் கர்பத்தில் உருவான குழந்தை அபிமன்யு. இத்தருணத்தில் தம் சகோதரனிடம், யுத்த தர்மங்கள் குறித்து அறிய விரும்பினாள் சுபத்திரை. அப்போது கண்ணன், போர்க்களத்தில், வீரர்களின் அணிவகுப்பை வகைப்படுத்தி வியூகமாக அமைத்து, எதிரியை வெல்லும் முறைகளைத் தெளிவாக விளக்குகிறார். குறிப்பாக, பத்ம வியூகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவர், அதனை உடைத்து உள்ளே நுழையும் முறையையும் விவரித்துக் கொண்டிருந்தபோது, இடையில் சிறிது நிறுத்துகிறார். அப்போது, ‘உம்… அப்புறம்?’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. அது சுபத்திரையின் கர்ப்ப வாசத்திலிருந்த அபிமன்யுவின் ஆர்வக் குரல் என்பது கண்ணனுக்குத் தெரியும். ஆனால் அதற்கு மேல் அவன் கதையைத் தொடரவில்லை. அதற்கான காரணமும் இருந்தது. தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகும் வழிமுறையைப் புரிந்துகொண்டதால், பிற்காலத்தில் தைரியமாகப் போர்க்களம் வந்துவிட்டான் அபிமன்யு. பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் ரகசியம் மட்டும்தான் அபிமன்யுவுக்குத் தெரியும். அதிலிருந்து வெளியே வரும் உத்தி தெரியாது என்பதால், அவனைப் பாதுகாப்பாக வெளியே மீட்டுக் கொண்டுவருவதற்கு உதவியாக வந்திருந்தான் பீமன். ஆனால், போர்க்களத்தில் சயத்ரதன் செய்த மாய வேலைகளால், உள்ளே நுழைந்துவிட்ட அபிமன்யு, அங்கேயே சிக்கிக்கொண்டான். பீமனின் பக்கபலமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. இப்படிப் போகிறது பாரதப் போரின் 13 ஆம் நாளில், கௌரவர்களின் சேனாதிபதி துரோணர் அமைத்த பத்ம வியூகத்தை உடைத்தெறியும் நோக்கில் வீரதீரப் போர் புரிந்துகொண்டிருந்த அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் கதை….

    அதே போன்று இரணியன் என்னும் அசுரனின் மனைவி கருவுற்றிருந்த காலத்தில், முனிவரின் போதனைகளை, பக்திக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, கருக்குழந்தையான பிரகலாதன், பக்தப் பிரகலாதனாக, திருமாலடியானாக மாறிய கதையும் நாமறிவோம்.

    இவற்றையெல்லாம், பகுத்தறிவாளர்கள் பலவாறாக எள்ளி நகையாடினாலும், கர்ப்ப காலத்தில் தாயின் மன நிலையின் தொடர்பாகத்தான் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் அமைகிறது என்பது நாம் யதார்த்த வாழ்வில் காணும் நிலை. இன்று குழந்தைகளை அதிகமாக ஆட்டிப்படைக்கும், ஆட்டிசம் போன்ற கொடிய பிரச்சனைகளுக்கான காரணமாக தாயின் மன அழுத்தமாகவும் இருக்கலாம் என்பதைச் சில ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் கருவுற்றிருக்கும் ஒரு பெண் நல்ல அமைதியான சூழலில், நிம்மதியான மன நிலையில் இருக்கும்போது குழந்தை அதேபோன்று எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். ஆனால் கூட்டுக் குடும்பப் பாரம்பரியம் சிதைந்துவிட்ட இன்றைய சூழலில், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு குழந்தைப் பேறு ஒரு சவாலாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே பலர் குழந்தை பெற்றுக்கொள்வதை முடிந்த வரை தள்ளிப் போட்டுவிடுகின்றனர். இதனாலேயே பலருக்கு கரு உருவாகுவதில் பல பிரச்சனைகள் வந்துவிடுகிறது. கர்ப்ப காலத்தில் உடல் நலம் பேணுவதில் பெரும் சிரமமும் ஏற்படுகிறது.

    imagesமுதல் மூன்று மாதங்களில் இருக்கும் தாயின் சிந்தனை குழந்தைக்கும்செல்கிறது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே அந்தக் குழந்தையின் மீதான அன்பை சிந்தனையில் வெளிப்படுத்துதல் நலம் என்கின்றனர். முதல் மூன்று மாதத்தில் மசக்கையால், வாந்தி, மயக்கம், உணவு ஏற்றுக்கொள்ளாமை போன்றவைகள் பாடாய்ப்படுத்தும்போது, வீட்டில் பெரியவர்கள் உடனிருந்தால், வாய்க்குப் பிடித்த சத்தான உணவை சமைத்துக்கொடுப்பதோடு, ஓய்வெடுக்கவும் வழியமைத்துக்கொடுப்பார்கள். ஆனால் பணிக்குச் செல்லும் பெண்களோ, ஓய்வெடுக்கவும் வழியில்லாமல், சரியான உணவும் உட்கொள்ள இயலாமல் உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்துவிடுகிறார்கள். இது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கிறது. மென்மையான இசையையும், நல்ல சொற்பொழிவுகள் அல்லது கதைகள் போன்றவற்றைக் கேட்பதால் குழந்தைக்கும் அமைதியான மனோநிலை இயல்பாகிவிடுவதோடு, தீய பழக்கங்களுக்கும் அக்குழந்தை ஆட்படுவதில்லை. ஆனால் சதாசர்வமும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டு, மன அழுத்தத்திற்கும் ஆளாகும் பெண்களால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் சிரமங்கள் ஏற்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தான் விரும்பும் சூழலில் இருப்பதோடு, பிடித்த உணவு வகைகளை உண்பது என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதும் அவசியம். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் படபடப்பை இது போன்ற இதமான சூழல்களால் மட்டுமே சரிசெய்ய முடியும். ஏனைய புற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து, குழந்தையைப் பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். ஆனால் சதாசர்வ காலமும் பணியைப் பற்றிய சிந்தையிலேயே ஊறிக்கிடக்க வேண்டிய சூழலில் இருக்கும் பெண்களுக்கு வெகு எளிதாகவே சலிப்பு தட்டி விடுகிறது.

    கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று அறியும் ஆவல் தவிர்க்கபட முடியாதது என்றாலும், அதுவே ஒரு மனப்பாரமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது நலம். பெற்றோர் பிரசவ நேரத்தில் வந்தால் போதும். குழந்தை பிறந்தவுடன், குழந்தையைப் பராமரிக்கத் தேவையாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் கர்ப்ப காலத்தில் உதவியின்றி சிரமம் மேற்கொள்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் காலையில் சீக்கிரம் உணவு உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமல் இருப்பதால் அடிக்கடி மயக்கம் வருவதும் கட்டுப்படும். அத்தோடு வீட்டில் தயாரிக்கப்படும் பழச்சாறு, முளை கட்டிய பயறுகள் போன்றவற்றை அன்றாடம் எடுத்துக்கொள்வதும் அவசியம். ஆனால் வீட்டில் தயாரிக்க நேரமின்மையால் பலர் இன்று கடையில் தயாரித்த, கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பொருட்கள் கலந்த பழச்சாறுகள் மற்றும் துரித உணவு வகைகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியம் கெட்டுவிடுவதால், மன ரீதியான பிரச்சனைகளுக்கும் வழிவகுத்துவிடுவதோடு மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

    நம் இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களில் 15 விழுக்காட்டினர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பக்காலத்தில் இரத்தச் சோகை ஏற்பட்டால் குறைப்பிரசவம் நிகழவோ, குழந்தை நோய்வாய்ப்படவோ வாய்ப்பாகிவிடும். இரத்த சோகையால் இதயத் துடிப்பில் மாற்றம் மற்றும் எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும். சரியான ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிட்டால் இந்தப் பிரச்சனை சரியாகும்.

    ஒரு பெண்ணைத் தன் கர்ப்ப காலத்தில் தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பது நம் பாரம்பரிய வழக்கம். காரணம், அந்த நேரத்தில் அவளுக்கு தாயின் அரவணைப்பு கட்டாயம் தேவைப்படுவதால்தான். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் பணி நிமித்தம் தூர தேசங்களுக்கோ அல்லது வேற்று மாநிலங்களுக்கோச் சென்று தங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது, உடல் ஆரோக்கியம் இரண்டாம்பட்சமாகப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இன்று பெரும்பாலானவர்கள் அதிகபட்சமாக இரண்டு அல்லது ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்கிறார்கள். அந்தக் குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல சமுதாயத்தை உருவாக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டியது அவசியம். இதற்கான முழு பொறுப்பும் அக்குழந்தையின் பெற்றோரையேச் சாரும். அந்த வகையில் ஒரு தாய் தன் கர்ப்ப காலத்தில் அக்குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்காக எந்த விதமான ஒரு சில தியாகங்களையும் செய்யத் தயங்க வேண்டியதில்லை. மனமும், உடலும் முழு ஆரோக்கியமாக உள்ள நல்ல தாய்மார்களால் மட்டுமே நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும். நல்ல சமுதாயம் மலர வேண்டுமென்றால் அதற்கு தாய்மார்களின் பங்கு இன்றியமையாதது என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டியது அவசியம்! தாய்மையைக் கொண்டாடுவோம்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
    சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -பாருய்யா(என்னைப் பார் அய்யா!),
    தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்னைக்கேள்,
    நூறை ஒடுக்க நிமிர்… கிரேசி மோகன்….

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சப் பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ?

     
     

    jay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப்பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவ தில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி) 

    பிரபஞ்சப் பெரு வெடிப்பை விளக்கிய ரஷிய விஞ்ஞானி

    பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பெரு வெடிப்பு நியதியை ‘ [Big Bang Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள் முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.

    பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும், விரிந்து குமிழி போல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்! அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்! பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம்,  பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்!

    1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜார்ஜ் காமாவின் மிக்க விஞ்ஞானச் சாதனைகள் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும், விண்மீன்களின் பிறப்பு, வளர்ச்சியைப் பற்றியும் சார்ந்திருந்தன. 1939 இல் விரியும் பிரபஞ்சத்தின் மாதிரிக் [Model of the Expanding Universe] கோட்பாட்டை ஆதரித்து அதை அபிவிருத்தி செய்தார். அத்துடன் நெபுளாக்களின் பிறப்பு [Origin of Nebulae], ராட்சதச் செம்மீன்கள் [Red Giant Stars] சக்தியை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்தார். விண்மீன்கள் வெடிக்கும் போது, அவற்றிலிருந்து நியூட்ரினோ துகள்கள் [Neutrino Particles] வெளியேறுவதை 1940 இல் ஆய்வு செய்து, தான் ஆக்கிய பூதநோவாவின் நியூட்ரினோ நியதியை [Neutrino Theory of Supernova] வெளியீடு செய்தார்.

    ஜார்ஜ் காமாவின் விஞ்ஞானச் சாதனைகள்

    1948 இல் விஞ்ஞானி ரால்·ப் ஆல்·பருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலை வெப்பவீச்சு [Residual Microwave Radiation] இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப்படுத்தினர்!

    விண்வெளியை வில்லாய் வளைக்க முடியுமா ? பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக் கோட்பாடு எனப்படும் ‘என்ட்ராப்பி நியதிக்கும் ‘ [Theory of Entropy] என்ன தொடர்பு ? அண்ட வெளியில் ஊடுறுவிச் செல்லும் ராக்கெட் ஏன் சுருங்குகிறது ? விண்மீன்கள் வெடிப்பதற்கு ஆதி அடிப்படையும், அவற்றுக்குக் காரணங்கள் என்னவென்று நாம் அறிந்து கொண்டதின் விளைவென்ன ? சந்ததியின் மூலவிகள் [Genes] புரியும் விந்தைப் புதிர்களைப் பற்றி நவீன விஞ்ஞானம் கண்டு பிடித்தவை என்ன ? உலகத்தைப் பற்றி நாம் அறிந்ததை, ‘இலக்கங்களின் விதிப் பிரச்சனைகள் ‘ [Problems in Laws of Numbers] எவ்விதத்தில் பாதிக்கின்றன ? இத்தனை வினாக்களையும் தான் எழுதிய ‘ஒன்று, இரண்டு, மூன்று…முடிவின்மை ‘ [One, Two, Three…Infinity] என்னும் நூலில் எழுப்பியவர், ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow]! ரஷ்யாவிலே பிறந்து அமெரிக்கக் குடியினராகிய ஜார்ஜ் காமாவ் அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], பிரபஞ்சவியல் [Cosmology] பெளதிகம், மூலக்கூறு உயிரியல் ரசாயனம் [Molecular Biochemistry] ஆகிய முப்பெரும் பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற் சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Fprce], மின் காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் பிரபஞ்சம்

    விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திரவியலையும் [Quantum Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு பொது நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டு பிடிக்க முடிய வில்லை! புதிதான ‘இழை நியதி ‘ [String Theory]. அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் ‘இழை நியதி ‘ முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி ‘ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும் மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்! பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றி பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

    பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டீஃபன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்! பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும் இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித்திருக்கலாம்! ஆகவே பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று எழும் கேள்விகளுக்கு ஒருகாலத்தில் பதில் கிடைக்கலாம் !

    பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

    பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின! விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

    பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும் சேர்ந்து ¨ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்ளுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன. இந்த மாறுதல் வெப்பவீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த ‘அகிலவியல் பின்புல வெப்பவீச்சு ‘ [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல் அகிலவியல் பின்புல வெப்பவீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

    பெரு வெடிப்புக்குப் பிறகு பின்புல வெப்ப வீச்சு

    1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] ‘அகிலப் பின்புல உளவி ‘ [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல வெப்பவீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு ‘பெரு வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல வெப்ப வீச்சு அடர்த்தியை [Intensity of the Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல வெப்பவீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப் படுகின்றன!

    பின்புல வெப்பவீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு! ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck ‘s Radiation Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘ மாக்ஸ் பிளான்க் வளைகோடு முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/-450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத் தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும் ‘சம வெப்பநிலை ‘ [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.

    ஆழ்வெளியில் ஒளிவீசும் பால்மய காலக்ஸி, நெபுளாக்கள்

    ஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன! பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை! அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன! ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.

    fig-1f-the-forces-of-nature.jpg

    ஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது! அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி! நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன! காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம்! நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது! [Light Years -Distance light covers in a year at the rate of 186000 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும்! ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.

    பிரபஞ்ச விரிவு பற்றி மாறான ஐன்ஸ்டைன் கருத்து.

    1915 ஆம் ஆண்டில் ஒப்பியல் நியதியை ஆக்கிய ஆரம்ப சமயத்தில் ஐன்ஸ்டைன் பிரபஞ்சம் நிலையானது என்று நம்பினார்! பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார்! அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு[Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன! நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில்,  ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின! பின்னால் பிரபஞ்சம் விரிகிறது என்ற கருத்துக்கள் உறுதியான போது, அகில நிலை யிலக்கத்தைச் [Cosmological Contant] இடையில் நுழைத்தது, ‘தனது மாபெரும் தவறு ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொண்டார்!

    Big Bang Events -1

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    7.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html (பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)
    8.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!
    9.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html (பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) November 15, 2007

    Share
  • சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..- கவியரசு கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..

    மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்கள் கொண்ட மனிதன் அவைகளை அடக்கியாளுகின்றானா? அல்லது அவைகளுக்குள் அடங்கிப் போகின்றானா? ஆறறவில் ஆறாம் அறிவாம் பகுத்துணர்வால் இன்னும் பக்குவப்படுகின்றானா? இல்லை.. ஆசையென்னும் தீயால் அவனே அவதிப் படுகின்றானா? இவை அனைத்தும் கலந்த கலவையே மனித வாழ்க்கை என்று இறைவன் எழுதி வைத்தானா?

    தன்னைச் சுற்றியிருக்கும் தாவரங்கள்.. மரம், செடி, கொடி என பசுமை நிறம்காட்டி வண்ணவண்ணப் பூக்களுடன் காட்சிதரும் இயற்கை தன் அழகையெல்லாம் இதமாக அள்ளி வழங்க.. சோலைவனங்களும், நிழல்தரும் மரங்களும்.. அவற்றுள் கூடுகட்டி வாழும் பறவைகளும்.. பச்சைக்கிளிகளும்.. குழலோசை போல் குரல்கொடுக்கும் குயில்களும் வசந்தகால வரவல்லவா?

    kav

    விண்ணோக்கிப் பார்க்கும்போது எண்ணிலா இயற்கையின்பம்.. மேகக்கூட்டங்களும் – வானவில் தோற்றங்களும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களும், கவிதை சொல்ல உலா வரும் நிலவும், கட்டுக்கடங்காத கனலைக் கொட்டியபடியே இவ்வுலகம் இயங்கிட கடமையாற்றும் கதிரவனும் – சற்றே விண்ணிலிருந்து மண்ணுலகு நோக்கி வந்துவிழும் மழைத்துளியும் – எல்லாம் இயற்கையின் சீதனமா? நாம் இன்புறவே நலம்பாடும் செல்வங்களா? உயர்ந்துநிற்கும் மலைத்தொடர்கள்.. அவற்றினிடையே கொட்டுகின்ற வெள்ளிநீர்வீழ்ச்சிகள்.. துள்ளிக்குதித்து வரும் நதிமகள்கள்.. பாயும் இடமெல்லாம் பச்சைவயல்களென வரிசை வரிசையாய் அழகு ஒய்யாரமாய் பவனி வரும் – இவ்வுலகை மூன்று மடங்காக விஸ்வரூபம் எடுத்து தாங்கிநிற்கும் கடல் அன்னையும், கடற்கரையோரமெல்லாம் பாடும் அலைகளென நுரை சிந்தும் நூதனமும் எழுதப்படிக்கத் தெரியாதவரையும் ரசித்து மகிழச் செய்துவிடும் இயற்கை வளங்கள் அல்லவா?

    ஒரு கவிஞன் தான் எழுதும் பாடலில் இந்த அழகையெல்லாம் தான் ரசித்ததோடு மட்டுமின்றி கவிதைமொழிபெயர்ப்பும் தந்துவிடுகிறான். அப்படி கண்ணதாசன் காட்டும் திரைப்பாடலிது.. பி.சுசீலாவின் குரலில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் புதிய பறவைக்காக .. இந்த மந்தகாருசப் பாடல் நம் மனதைத் தடவிக்கொண்டே இருக்கிறது!

    இந்த மண்ணின் மரபுமாறாமல்.. பெண் தன் ஆசைகளை உவமைநயம் காட்டித்தான் உணர்த்துவாள்.. என்னும் உன்னதத்தையும் உள்ளடக்கிய பாடல்!

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..
    கதாநாயகி தான் பாடும் இப்பாடலில் கவிஞரின் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறந்து வழங்கியிருக்கும் சொற்கோலங்களில் கொஞ்சம் சொக்கிப் போகலாமே! அற்புத இசைக்கோர்வையில் பல்லவிமுதல் சரணங்கள் எல்லாம் உற்சாக மழை பொழிகிறது!

    எல்லாம் சரி.. எத்தனையோ பறவைகளிருக்க.. பச்சைக்கிளிகளைக்கூட விட்டுவிட்டு சிட்டுக்குருவியை பல்லவியில் ஏன் தேர்ந்தெடுத்தார் கண்ணதாசன் என்கிற கேள்விக்கு பதில் என்ன? தன் அலகுகளால் ஒன்றையொன்று அழகாய் முத்தமிட்டுக்கொள்ளும் பேரழகை.. அதுவும் தவிர.. அத்தகு எண்ணிக்கையம் மற்ற பறவைகளிலிருந்து சிட்டுக்குருவியை முன்னிலைப்படுகிறது! அட.. சிட்டுக்குருவி லேகியம் என்றுகூட விற்பனை செய்கிறார்களே! கண்ணதாசனே.. உனது பாடலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்?

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
    மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    ஆ..ஆ..ஆ..ஹாஹா…ஹா..ஹா..
    பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
    பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
    பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
    பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
    எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
    என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    ஆ..ஆ..ஆ..ஹாஹா…ஹா..ஹா..
    ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
    ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
    இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
    இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    திரைப்படம் – புதிய பறவை..
    பாடல் – கண்ணதாசன்
    இசை – விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் – பி. சுசீலா


    என்றும் அன்புடன்,
    காவிரிமைந்தன்
    (மு.இரவிச்சந்திரன்)
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    சென்னை 600 075
    தற்போது – ருவைஸ், அபுதாபி..
    00971 50 2519693

    Share
  • ஒரு மரத்தின் சாபம்!

    -றியாஸ்முஹமட், கத்தார்

    ஓட்டமாவடியின்
    வரலாற்றைத் தேட
    ஏடுகளைப்
    புரட்டாதீர்கள்
    என் முதுகுப்
    பட்டையைப் புரட்டுங்கள்!                    tree

    பல நூற்றாண்டுகளாகத்
    தீபவம்சம் போல்
    வாழ்ந்தேன்!

    தீ வைத்தீர்
    குழி பறித்தீர்
    வழி மறித்தீர்
    கோஷமிட்டீர்
    கதை முடித்தீர்!

    நீங்கள்
    பதுங்கு குழிகளிலும்
    பள்ளிகளிலும்
    படுத்திருக்கும் போது
    நான்தானே
    தன்னந்தனியாக
    முச்சந்தியில்
    தனித்திருந்து
    விழித்திருந்தவன்!

    உங்கள் பாதுகாப்புக்கு
    முதல் ‘ஊர்காவற்படை’
    வீரன்
    நானல்லவா….?!

    திறந்து பாருங்கள்
    என்
    இதயக் கிளைகளை
    அது பல
    துப்பாக்கி ரவைகளுக்கும்
    குண்டுகளுக்கும்
    பதில் சொல்லியிருக்கும்!

    இலங்கை முதல்
    இந்திய இராணுவம் வரை
    குண்டடித்துப்
    பந்தடித்தார்கள்.
    விட்டு கொடுத்தேனா..?

    இல்லை
    உங்கள் ஊரைக்
    காட்டிக் கொடுத்தேனா..?

    ஏன் கொடுத்தீர்கள்
    இத் தண்டனையை?
    தூக்குக் கிடைத்தாலும்
    ஒரே நாளில்
    போயிருக்கும்
    என் உயிர்!

    கூலிப் படை
    வைத்துக்
    கொலை வெறியோடு
    வெட்டி வீழ்த்தினாய்!

    என்
    எச்சிக் கொட்டையை
    விழுங்கித்தானே
    உங்கள் பிரதேசம்
    பசுமை பெற்றது
    எழில் கொஞ்சும்
    அழகைப் பெற்றது!

    அரசியல் என்கிறாய்
    அபிவிருத்தி என்கிறாய்
    நிறுத்து
    உன் பேச்சை!

    இல்லை
    நிறுத்தி விடுவேன்
    உன் மூச்சை!

    நன்றி
    உள்ளவன் நான்!
    நன்றி மறந்தவர்கள்
    நீங்கள்!

    சாபம்
    விடுகின்றேன்
    உங்கள்
    அரசியல்வாதிகளுக்கு!

    உங்கள்
    மரணத்திலும்
    எடுத்து விடாதீர்கள்
    என் மரக்
    கட்டையை!

     

    Share
  • மனமாற்றம் வேண்டும்…!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    எழுத்தாளர் என்கின்றார் எழுதுவோருள்
    இவர்தானாம் மாமன்னர் செப்புகின்றார்
    “பழுத்தபழம்” போற்பேசும் இவரோயிங்கு
    படைத்தவையின் பட்டியலோ பூஜ்ஜியம்தான்!
    அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக….?
    அசலுண்மை கடல் நீரா உப்பு என்றார்
    வெளுத்த நிறம் பாலென்றார்  வானில் நீந்தும்
    வெண்ணிலாவின் ஒளி தண்மை என்று சொல்வார்….!

    “நா” மெத்தத் தடித்ததனால் “நான்” நானென்று
    நலங்கெட்டவார்த்தைகளைக் கொட்டுகின்றார்!
    “பா” மெத்தப்படைத்தளித்த பாவாணர் போல்
    பல மேடைகண்டவர் போல் பகருகின்றார்!
    காமத்தைக் கருவாக கொண்டு ஏதோ
    கண்டபடி நாலைந்தைக் கிறுக்கியுள்ளார்
    நாமத்தை அச்சினிலே “பெரிதாய்ப்” போட
    நாய்படாப் பாடுபல படுகின்றாரே…..!

    பெண்ணழகைக் கவி செய்வார் பெண்களே இப்
    பெருவுலகில் பேறென்றும் சாற்றி நிற்பார்!
    பெண்ணொருத்தி எழுத்துலகில் முன்னே நிற்கப்
    பித்தரிவர் “பெருமனது” இடங் கொடாது
    வண்டமிழைக் கொண்டு இவர்வசைகள் பாடி
    வருத்தமுறச் செய்திடுவார் வார்த்தையாலே
    மண்டைதனில் கனம் கொண்டார் அறிவைத்தீட்டி
    மனமாற்றம் பெற்றுய்ய வேண்டுகிறேன்…..!

     

    Share
  • வசந்த காலங்கள்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    சிந்தனைச் சுழல்கள் என் இதயத்தை வலம் வந்து கொண்டிருந்தன. கடந்து போன என் வாழ்க்கையிலே நடந்து முடிந்த சம்பவங்கள் எத்தனையோ! நான் அநாதையாய் ஆகி விட்ட பின்னும் அன்போடு பராமரிக்கப்பட்டேன். பெற்றோரின் அரவணைப்பைக் காண முடியாத பாவியாகி விட்ட போதிலும் அந்த சுகங்களைக் காணும் பாக்கியத்தை இறைவன் அளித்திருந்தான்.

    ஆமாம்! எனது மாமியினதும் மாமாவினதும் பாசப்பிணைப்பில் நான் பராமரிக்கப்பட்டேன். அன்பை, ஆதரவை ஏன் அனைத்தையும் பெற்றேன். குறைகளின்றியே இன்று  குமரிப் பருவத்தையும் அடைந்து விட்டேன். அந்த மாமி மாமாவின் அன்பை நினைக்கையிலே என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறையும். என் மாமிக்கு ஒரே ஒரு மகன் தான் இருந்தான். அழகும் அறிவும் கொண்ட என் மச்சான் ருவைஸ் மிகவும் கெட்டிக்காரன். என்னோடு போட்டி போட்டுக் கொண்டே எந்நேரமும் படிப்பான். படிப்பில் மட்டும் தான் போட்டி. மற்றபடி நானும் அவனும் மிக அன்பாகவே இருந்தோம். பாடசாலையில் கூட ஜெபரீன், ருவைஸ் என்றால் எல்லோருக்குமே தெரியும். படிப்பிலே எம்மைத் தவிர யாரும் முந்திக் கொண்டதேயில்லை. மாமிக்கும், மாமாவுக்கும் சந்தோஷம் நிறைந்து வழியும். கண்ணை இமை காப்பது போலக் காத்து வந்தார்கள். இறைவனருளால் நானும் மச்சானும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே பல்கலைக்கழகம் சென்று ஒன்றாகவே டாக்டர்களாக வெளியேறினோம்!

    “என்ன ஜெபரீன் யோசிக்கிறீங்க ?” என்று கேட்டவாறே மச்சான் என்னருகில் வந்தததும் நான் யோசனைகளில் இருந்து விடுபட்டேன். “இல்ல….அடுத்த மாசம் களுத்துறைக்கு மாற்றம் கிடைச்சிருக்கு. அதுதான் யோசிக்கிறேன்” என்றேன். “உம்மா கூடச் சொன்னாங்க… என்னையும் உங்களோட  துணைக்குப் போகட்டாம்” என்றார் மச்சான். ஒரு நாளும் இல்லாதவாறு மச்சான் என்னை உற்று நோக்கி அவ்வார்த்தைகளைச் சொன்னதும் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இவ்வளவு நாட்களாக இப்படி வெட்கம் வந்ததில்லை. ஆனால் நேற்றில் இருந்து மனமெங்கும் ஒரே பரபரப்பாகவே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. எனக்கு களுத்துறைக்கு இடமாற்றம் கிடைத்ததையிட்டு மாமியும் மாமாவும் முடிவு ஒன்றை எடுத்திருந்தார்கள்.

    ஆமாம்! என்னை மச்சானுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு ஒன்றாகவே களுத்துறையில் குடியிருத்தவே அவர்கள் நினைத்தார்கள். இதை என்னிடம் மாமி சொல்லிய போது …நான் பதில் சொல்லாமலே  தலை குனிந்தேன். மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே ! மாமி சிரித்து  விட்டு போய் விட்டார். மச்சானிடமும் அதைச் சொல்லித்தானே இருப்பார்கள். அதுதான் மச்சான் ஒரு நாளும் இல்லாதவாறு இப்படி பார்க்கிறார்! எனக்கு வழமை போல உட்கார்ந்து மச்சானுடன் கதைக்க முடியவில்லை….எழுந்து நிற்கிறேன்.

    “என்ன நான் துணைக்கு வருவது ஜெபரீனுக்கு விருப்பமில்லையா…? இன்னும் யோசிக்கிறீங்களே!” என்றார் மச்சான்.எனக்கு வெட்கத்தில்  வார்த்தை வரவில்லை. நான் ரூமிற்குள் ஓடி விட்டேன். இதைக் கண்ட மாமி சிரித்துக் கொண்டே எமக்கு திருமணம் செய்யும் நாள் பற்றி ஆலோசித்தார்கள். இறைவன் நாட்டம் வேறு மாதிரி இருந்தது! விரைவில் மச்சானை லண்டனுக்கு வரும் படி அழைப்பு வந்திருந்தது. புலமைப் பரிசிலில் அவர் எடுபட்டிருந்தார். மேற்படிப்புக்காக லண்டன் செல்ல அவர் சின்ன வயதில் இருந்தே ஆசைப்பட்டார். அவரின் ஆசைகள் எனக்குத் தெரியும். மாமிக்கு எப்படியும் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்கிற ஆசை! ஆனால் மச்சானுக்கோ திருமணம் முடிந்தவுடன் என்னைப் பிரிய வேண்டுமே என்ற துயரம். அதனால் நான் தான் சொன்னேன் “மச்சான் படித்து விட்டு வரட்டுமே ” என்று. அது ஒருவாறு தீர்மானமாகி முடிவாகியது. மச்சான் லண்டனுக்குப் புறப்படும் போது என் விழிகள் ஏனோ குளமாகின. என் ரூமிற்குள் வந்த மச்சான் நான் அழுவதைக் கண்டு துடித்து விட்டார். “ஜெபரீன் …! படிக்கத்தானே போறேன்.மூணே மூணு  வருஷம். அப்புறம் வந்து இந்த ஜெபரீனோடேயே இருப்பேன்! ” என்று என் கைகளைப் பற்றி முத்தமிட்டார். அந்த அரவணைப்பும் ஆறுதலும் அப்போது எனக்குத் தேவைப்பட்டது. சிறுபிள்ளை போல நான் மச்சானின் மார்பில் முகம் புதைந்து அழுதேன். நேரம் போனதே தெரியாமல் நான் மச்சானோடு பேசிக்கொண்டு இருந்தேன். மனம் தைரியம் பெற்றது! அவர் லண்டனுக்குப் போய்விட்டார். காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே!

    இன்று வீடு மிகவும் கோலமாக இருந்தது. ருவைஸ் வந்ததும் திருமணம் தான்! எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். ருவைஸ் மச்சான் நாளைக் காலை கொழும்பு வந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு ரயிலில் வருவதாக அறிவித்திருந்தார். எப்போது விடியும் என்று நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு விடிந்த பின் அசந்து தூங்கி விட்டேன்! வீட்டிலே பெரிய சலசலப்புக் கேட்டு துடித்து எழும்பிய போது தான் அந்தக் கோரச் சத்தம் எனக்கு எட்டியது! மட்டக்களப்பிற்கு வந்த புகையிரதம் பொலன்னறுவைக்கு  அண்மையில் தடம் புரண்டதால் பல பிரயாணிகள் இறந்ததாகச் செய்தி கிடைத்தது! எனக்கு  எதுவுமே தெரியவில்லை. மயங்கிச் சாய்ந்தேன். நான் விழித்துப் பார்த்த போது புதிய இடத்திலிருப்பது எனக்கு தெரிந்தது. என்னைச் சுற்றிலும் பல ஆட்கள் நிறைந்து நின்றனர்.நடந்தது நினைவுக்கு வந்தது. என் விழிகள் மச்சானைத் தேடின. “உன் மச்சானுக்கு ஒன்னும்மில்ல ஜெபரீன். அவன் பஸ்ஸில தான் வந்திருக்கான்” என்று சொல்லவும் மச்சான் என்னருகில் வரவும்  சரியாக இருந்தது. அழுகையை அடக்க முடியாமல் நான் மீண்டும் மச்சானைக் கண்டு அழத் தொடங்கினேன். என்னை எல்லோரும் தேற்றினார்கள்.வீட்டிற்கு வந்த போது அந்த இனிய நாளை எண்ணி நான் புதிய ஜெபரீனானேன்! மச்சான்  என்னை குறும்புடன் நோக்கினார். நான் இப்போது வெட்கப்படவில்லை! வசந்த காலங்கள் தொடர்ந்தும் என் வாழ்வில் வீசுவதை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே தொழுவதற்கு ஆயத்தமானேன்.

    Share
  • கொங்குநாட்டுப் பெண்களின் மரபும் மாற்றங்களும்

    ஆர்.ச.வின் பார்வையில்

    ஆர்.சண்முக சுந்தரம்

    வாழ்க்கைப் போராட்டம் என்பது தென் மாவட்டங்களில் கடலோடும் கரையோடும், நதியோடும் வயலோடும் தொடர்புடையதாய் அமைந்தது. ஆங்காங்கே பெற்ற வெற்றி தோல்விகளின் விளைவாய்,அந்தந்தப் பகுதி மக்கள் வாணிகத்திற்கும் உடல் உழைப்பிற்கு விலை பேசும் இலங்கை, ,மலேசியா பர்மா , இந்தோனேஷியா என்று குடிபெயர்ந்து போகும் கொடுமைகளுமாய் மாறியது.

    ஆனால் கொங்கு நாட்டில் வாழ்க்கைப் போராட்டம் மண்ணோடு நடக்கும் போராட்டமாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. கொங்கு மண்ணில் பிறந்தவர் கண் முன் தரிசாகவோ விளைநிலமாகவோ இருக்கிற பூமியைக் காண்கிறார். அது அவரிடம் ஆயிரம் கதைகள் பேசுகிறது. எங்கே உன் ஆற்றல் என்று கேள்வி கேட்டு அவரை உலுக்கி எழுப்புகிறது. அதல பாதாளமாயினும் நீரைக் காணாமல் ஓயமாட்டேன் என்று கிணற்றோடு நடத்தும் போராகிறது

    கடலும் மனிதனும் என்ற தென் மாவட்ட வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்கிற மனிதனை, அவன் துயர்களை மட்டுமே உருவாக்கிக் காட்ட முடிகிறது. அது இயற்கை மனிதனுக்கு விதித்திருக்கும் வரம்பு. ஆனால் கொங்கு நாட்டில் போராட்டம் மண்ணோடு. அதில் ஆற்றல் உள்ளவன் ஜெயிக்கிறான். மண்ணை வென்ற மாட்சிமை மனிதனுக்குள் தனிப் பெருமிதத்தை உருவாக்குகிறது.

    நேரிய பார்வையும்,நிமிர்ந்த போக்கும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத பெருமிதத்தையும் அவனுக்கு வழங்குகிறது. அந்த மானுடப் பெருமிதத்தின் ஒளியும் நிழலுமான அம்சங்கள் கூடவே உண்டு. எல்லாவற்றிகும் காரணமாவது மண் மீது அவன் காணும் வெற்றி

    அதை வெளிக்கொணர்வதில் ஆர் .ஷண்முக சுந்தரம் வெகு இயல்பான வெற்றி கண்டவர். வட்டார வழக்கை வைத்து நாவல் எழுதிய சிலரில் பலர் வழக்கு மொழியைக் கையாண்டாலாயே போதும். வட்டாரச்சித்திரப்பை தந்து விட்டதாகத் திருப்தி காண்பர். ஆனால் அந்தப் பகுதியின் வித்தும் வேரு விழுதுகளுமான பண்புகளை, இயல்புகளை சிருஷ்டிப்பவர் விரல் விட்டு எண்ணுமளவு கூட இல்லை. அவர்களில் இடம் மான ஆர் .ஷண்முக சுந்தரம் தனிச் சிறப்பானது

    புனைவு, நாவலில் என் திறமையைப்பார் என்று காட்டிக்கொள்ளாத பண்பு ஒரு வட்டாரம் யுகம் யுகமாய்ச் சுமந்த சோகம், மகிழ்ச்சி, ஏக்கம், வெற்றிச்செருக்கு இவற்றை முழுவதும் கணித்துணர்ந்து வெளிக்காட்டும் நடை அவருக்கு கை வந்தது.

    மிடுக்கு, இடக்கு, மேதைமையை புலப்படுத்தும் செருக்கு இவை உண்மைக்கு புறம்பானவை என்று மௌனமாக அவர் வைக்கும் விமர்சனம் அது.அவர் ஒரு பகுதி மக்களின் உண்மையான வாழ்க்கை ஓட்டத்தைக் காட்ட முனைந்தவர். அவர்கள் இதயத்துடிப்பு என்ன வென்பதை அறிய மிகவும் உழைத்தவர்.

    கொங்கு நாட்டு மனிதர்களின் பின்னணி கொங்கு நாட்டுப் பெண்கள். அவர்களே அந்தப் பகுதியின் முதுகெலும்பானவர்கள். அவர்களை வெகு எளிமையான கலை நேர்த்தியுடன் கண் முன் நடமாடும் உயிரோவியங்களாக அவர் சித்தரித்த பாங்கைத தமது ஆய்வியல் பார்வையோடு அணுகுகிறார் துணைப் பேராசிரியர்.டாக்டர்.ஜவாஹர் பிரேமா லதா அவர்கள்.விரைவில் தாரிணி பதிப்பகத்தில் வெளியாக உள்ள அந்தப் படைப்பின் சில அறிமுகப் பக்கங்கள் இவை.

    கொங்குநாட்டுப் பெண்களின் மரபும் மாற்றங்களும்

    டாக்டர் ஜவாஹர் பிரேமலதா

    doc jawa

    கொங்கு நாட்டில் சிறு விவசாயிகள் கையகல நிலத்தைக் கொண்டு வாழ்வின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில், குடும்பத்தைக் கரையேற்றப் படாதபாடு படுகிறார்கள். அவர்களோடு சேர்ந்து அவர்களது பெண்களும் மண்ணில் சரிக்குச் சமமாகப் பாடுபடுகிறார்கள். மனித வாழ்க்கை அவர்கள் வாழும் மண்ணில் வேர்கொண்டிருக்கிறது. மண்ணின் தன்மையோடு தன்னை இணைத்துக்கொண்ட கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை அவர்களுக்குரிய பின்னணியைக் கொண்டு ஆர்.ச. படைத்துச் சென்றுள்ளார்.ஆடுமாடு மேய்த்தல், விவசாயம் செய்தல், கூலி வேலைக்குச் செல்லல், குடும்பத்தை நிர்வகித்தல் எனப் பெண்கள் ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.

    இச்சூழலில் கொங்கு கிராமத்தைச் சார்ந்த நகரப்பகுதியான கோவையின் தொழில் வளர்ச்சி, பிற மக்களின் வருகை, புதுத் தொழில்கள், நகரத்துக்குச் சென்று பணிபுரியும் மக்களின் பொருளாதாரப் பின்னணி, பல நிலைகளிலிருந்து ஏழை எளிய கிராம மக்களின் வாழ்வை நெருக்குதலுக்கு உள்ளாக்குகின்றன. எனினும், கொங்குப் பெண்கள் மண்ணையும், உழைப்பையும் உயிர் மூச்சாகக் கருதிப் போராடுகின்றனர். மண்ணில் காலூன்றிப் பாடுபட்டு, அம்மண்ணையே தெய்வமாகக் கருதி, அம்மண்ணிற்கே உரமாகிப் போகும் மானுடவாழ்வில் மண்ணுக்கும் மனிதனுக்கும் இடையே பாலமாக நின்று பெண்கள் நிலைத்திருத்தலுக்காகப் பாடுபடுகிறார்கள்.

    காலங்கள் கடந்து போனாலும், நாகரிகம் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் உள்ளே நுழைந்தாலும் கொங்குப் பெண்களிடம் உடலுழைப்பும், மனஉறுதியும், கற்புநெறியும் கனன்று கொண்டிருக்கிறது. கொங்குப் பெண்கள் குடிப்பெருமையைக் கட்டிக் காக்கும் வல்லமை உடையவர்களாகத் திகழ்கின்றனர். நடுவு நிலைமை பழிக்கும் அஞ்சும் குணம், கடின உழைப்பு, மரபைக் காக்கும் மேன்மை, சுயமாகச் சிந்திக்கும் தன்மை, நியாயமென்று தோன்றிவிட்டால் எதையும் யாரையும் எதிர்க்கும் துணிவு, வெற்றி தோல்வி கருதாது இறுதிவரை போராடும் மாண்பு போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த வடிவமாக ஒவ்வொரு கொங்குப் பெண்ணும் திகழ்வதை ஆர்.ச. துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். கொங்கு மண் கடினத்தன்மை உடையது.

    வானம் பார்த்த பூமியாதலால் காலந்தோறும் உழைக்க வேண்டியசூழல் உள்ளது. இதனால், பொருளாதாரத் தேவையை நிர்வகிக்கும் பெண்கள் சற்றுக் கறாராகவே நடந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே ஆம் மண்ணைப் போலவே அவர்களின் மனமும் இறுகிப் போயிருக்கிறது. உழைக்கும் வர்க்கத்துப் பெண்களாதாதலால் தன்மானம் உடையவர்களாக யாருக்கும் தலைவணங்காதவர்களாகத் திகழ்கிறார்கள். எனவே, கற்பு நிலையில் மிக உறுதி படைத்தவர்களாக, நெஞ்சுறுதி மிக்கவர்களாக, குடும்ப மானம் தன் கையில் என்ற உணர்வுடையவர்களாகத் தென்படுகின்றனர்.

    உழைப்பே அவர்களின் மூச்சு. மண்ணில் காலூன்றப் பாடுபட்டு, அம்மண்ணையே தெய்வமாகக் கருதி அம்மண்ணிற்கே உரமாகிப் போகும் மானுட வாழ்வில் மண்ணுக்கும் மனிதனுக்குமிடையே பெண்கள் பாலமாகத் திகழ்கின்றனர். உடல் உழைப்பு, மன உறுதி, அலட்சியப் போக்கு, நியாயமென்று தோன்றிவிட்டால் எவரையும் எதிர்க்கும் துணிவு, வெற்றி தோல்வி கருதாது இறுதிவரை போராடும் துணிவு போன்ற குணங்களின் ஒட்டுமொத்த வடிவம்தான் கொங்குப் பெண்கள். ஆணுக்குப் பின்னிருந்து செயல்படுபவர்கள் அல்லர் இவர்கள். சுயமாகச் சிந்தித்து செயல்படும் வல்லமை உடையவர்கள்.

    கிராமங்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்து பரிமாறிக் கொள்ளும் நிலை உள்ளது. நான்குபேர் சேர்ந்தால் மற்றவர்களைப் பற்றி கவலைப் படுகின்றனர். ஆனால், நகர்ப்புறத்தில் இதைக் காண முடிவதில்லை. கள்ளங்கபடமற்ற, எதிர்பார்ப்புத் தன்மையற்ற உறவுகளை ஆர்.ச. புதினம் அன்பினை அடித்தளமாகக் கொண்டு, தனது சுற்றங்களை அரவணைத்துச் செல்லும் பெண்களை மிகுதி. உறவுகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி தனது சுயநலத்திற்கு அவர்களை மூலதனமாக்கிக் கொள்ளும் போலித்தனமான மாந்தர்கள் இல்லை. அறிவியலின் ஆக்கமும், கல்வி நாகரிக வளர்ச்சி போன்றவை பல தாக்கங்களை மாற்றங்களை கொங்குமக்கள் வாழ்வில் ஏற்படுத்தியிருந்தாலும், கொங்கு மண்ணிற்கே உரித்தான கற்பு உறுதியும், துணிச்சலும், தனித்த ஆளுமையும் உடையவர்களாகப் கொங்குப் பெண்கள் திகழ்கின்றனர்.

    கொங்கு மண் கடினத்தன்மையுடையது. இதில் உழைத்து உழைத்து உரமேறிய பெண்கள், மண்ணைப் போலவே நெஞ்சுறுதி மிக்கவர்கள். குடும்ப மானத்தைக் காக்க தயங்காதவர்கள். பழிக்கும் அஞ்சும் குணம் படைத்தவர்கள். சகமனிதர்கள் மீது கரிசனம் உடையவர்கள். அதேசமயம், உறவுகளைப் பகடைக் காய்களாகத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், போலித்தனம் அற்றவர்கள், கற்பில் உறுதியும், துணிச்சலும், தனித்த ஆளுமையும் உடையவர்கள்.

    ஆர்.ச. தன் நாவலுக்கானப் பாத்திரங்களைக் கொங்கு மக்களின் வாழ்க்கையிலிருந்தே எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பாத்திரங்கள் கற்பனை மாந்தர்கள் அல்லர். அச்சு அசலான உண்மை மாந்தர்கள்.வெளிநாட்டிலிருந்து இந்தியாவிந்கு பணி புரிய வந்த தாமஸ்மன்றோ தான் பார்த்த கொங்குப் பெண்களைப் பதிவு செய்திருக்கிறார்.

    கி.பி.1800ல் கொங்குநாட்டை ஆட்சிபுரிந்த தாமஸ் மன்றோ அவர்கள் கொங்குநாட்டுப் பெண்களைப் பற்றி இவ்வாறு வர்ணிக்கிறார். தமிழ்நாட்டுப் பெண், அதுவும் கொங்குநாட்டின் ஒரு பகுதியான சேலத்திலுள்ள ஓமலூரிலுள்ள ஒரு பெண்ணைப் பற்றிய நிகழ்ச்சியைக் குறித்துத் தன் தந்தைக்குக் கடிதம் எழுதுகிறார் மன்றோ (1796 மே,10).

    ‘. . . இந்தப் பகுதி மக்களின் வறுமைக்குக் காரணம் அரசாங்கம்தான். அவர்களின் சோம்பலோ, கொளுத்தும் வெயிலோ அல்ல. அவர்களிடையே பல சாதிப் பிரிவுகள் உள்ளன; வேலையில் ஈடுபடும் ஊக்கம், வெவ்வேறு சாதி மக்களிடம் வெவ்வேறு அளவில் உள்ளது; தீர்வையை நிர்ணயிக்கும்போது நிலத்தின் திறனையும் கணக்கில் கொள்ள வேண்டும். பிராமணர்கள் எல்லா வகையான விவசாய வேலைகளையும் செய்யலாகார். ஏர் உழுவதைத் தவிர; அவர்களுடைய பெண்கள் வயல் வேலைகளில் ஈடுபடுவதில்லை. எனவே அவர்களுக்குப் பாதியளவு அல்லது முக்கால்வாசித் தீர்வைதான்……………..‘சில சாதிகளைச் சார்ந்த பெண்கள், ஆண்கள் செய்யும் அனைத்து (விவசாய) வேலைகளையும் செய்கிறார்கள்; மற்ற சாதிப் பெண்கள் ஏர் உழுவதைத் தவிர பிற வேலைகளைச் செய்வார்கள்; வேறு சில சாதிப் பெண்கள் எந்த வகையான விவசாய வேலைகளிலும் ஈடுபடுவதில்லை.

    இதில் நல்லதொரு அம்சம் என்னவென்றால் ஆண்-பெண் என்று இருவகையினரும் ஊக்கமுடன் வேலை செய்யும் சாதியினர்தான் எண்ணிக்கையில் அதிகம். இந்த சாதியில் பெண்கள்தான் எல்லா நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்கின்றனர்; அவர்களின் உத்தரவுகளை ஆண்கள் மறுத்துச் சொல்வதில்லை. பெண்கள்தான் வாங்குவது, விற்பது, கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்ற சமாச்சாரங்களைக் கவனிக்கிறார்கள். தீர்வை சம்பந்தமாகக் கச்சேரிக்கு வரும் ஆண், வீட்டிலிருந்து கிளம்பும் முன், தன் மனைவியிடமிருந்து உத்தரவுகளை வாங்கிக் கொண்டுதான் வருகிறான். கச்சேரிக்கு வந்து, தனது முறையீட்டில் காரியம் ஆகவில்லை என்றால், அது எவ்வளவு சிறிய சங்கதியாக இருந்தாலும், வீட்டிற்கு வந்தபின் அவனுக்குக் ‘கச்சேரி’ இருக்கும்.

    ‘அடுத்த நாள் அந்தப் பெண் என்ன செய்கிறாள். ? கணவனை வீட்டில் இருக்கச் சொல்கிறாள்; சீற்றத்துடன் கச்சேரிக்குக் கிளம்புவாள் அங்கிருந்தே வருவாய்த் துறையின் அனைத்து அலுவலர்களையும் திட்டிக்கொண்டு வருவாள். கச்சேரிக்கு வந்ததும் ஒரு மணி நேரத்திற்கு நாடக பாணியில் ஏற்ற இறக்கத்துடன் பேச ஆரம்பிப்பாள். தன் புருஷன் மீது இந்த ‘ராஸ்கோல்’ ஆட்கள் அநியாயமாகத் தீர்வையை ஏற்றிவிட்டார்கள் என்று பேசுவாள். முடிவுரையாகச் சொல்லுவாள்: ‘மாடுங்க இல்லாம நான் ஏர் உழ முடியுமா? எப்படித் தங்கம் வாங்க முடியும்? இந்தப் புடவையை விற்றா வாங்க முடியும்?’- அரைகுறையாக உடுத்தியிருக்கும் அழுக்கடைந்த புடவையைச் சுட்டிக் காட்டுவாள்.

    ‘அவள் வேண்டுகோள் என்னவோ, அது நிறைவேறினால் முகத்தில் சிரிப்புடன் அங்கிருந்து கிளம்புவாள். இல்லாவிட்டால் அவள் குரல் ஓங்கி ஒலிக்கும். நீண்ட நாள் பழக்கத்தால், அந்தச் சமயங்களில் அவளுடைய குரல் ஆண் குரலைவிட வேகமாக ஒலிக்கும். கச்சேரியில் இருப்பவர்கள் கேலியாகச் சிரிப்பார்கள்.

    ‘வீட்டிற்கு வந்ததும் ராசியில்லாத கணவனைப் பார்ப்பாள். அவள் வாதம் சரியோ தப்போ, தன் ஆதங்கத்தைக் கொட்டுவாள். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் – அன்றிரவு அவள் வழக்கம் போலத் தூங்குவாள். அடுத்த நாள் விடியற்காலையில் அவள் வீட்டுப்பக்கம் யாராவது போனால் அவளைக் காண முடியும். முன்தினம் எதுவும் நடக்காதது போல நுhல் நூற்றுக் கொண்டிருப்பாள்.

    நான் பார்க்கவில்லையானாலும், கேள்விப்பட்டிருக்கிறேன். பாதையில் சரியாக வழி புலப்படாத அந்த இருட்டு நேரத்தில் அவள் நூற்றுக் கொண்டிருப்பாள். இப்படிப்பட்ட விவசாயக்குடிப் பெண்கள்தான் இந்தியாவில் உற்பத்தியாகும் துணிகளுக்கு நூல் நூற்றுத் தருபவர்கள்.’”

    Share
  • சிறந்த எழுத்தாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு!

    ஒரு முக்கிய செய்தி – சிறந்த எழுத்தாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு

    வாதினி இதழும் அதன் கௌவர ஆசிரியரும் இணைந்து எழுத்தாளர்களை கௌரவிக்க திருமதி.சாரதாம்பாள் விருது வழங்க முன் வந்துள்ளோம்.

    2013 ஜனவரியிலிருந்து 2014 டிசம்பர் 31 வரை வெளியான சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்களின் ஐந்து படிகளை எழுத்தாளர்கள் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    சுப்ரஜா
    மேற்பார்வை வாதினி
    19/29,ராணி அண்ணா நகர்,
    கே.கே.நகர்,
    சென்னை 600 078.

    உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் தமிழ் எழுத்தாளரும் கலந்து கொள்ளலாம்.

    விதிமுறைகள்;

    1.விருதுக்கு அனுப்பப் படும் ஆசிரியர் பற்றிய தன் விவரக் குறிப்பு அவசியம்.

    2.அவர் முழு நேர எழுத்தாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    3.நாவலோ, சிறுகதைத் தொகுப்போ வேறு எந்த ஒரு உள் நாட்டு அமைப்பிலும் வெளி நாட்டு அமைப்பிலும் பரிசு வாங்கியிருக்க கூடாது.

    4.நாவல் அல்லது சிறுகதைத் தொகுப்பு குறைந்தது 160 பக்கம் இருக்க வேண்டும்.

    5. ஒருவரே எத்தனை நாவல்கள் அல்லது சிறுகதைத் தொகுதியும் அனுப்பலாம்.

    6. அந்த நூல் தனது சொந்தக் கற்பனையில் எழுதப்பட்டது எனவும்,வேறு எந்த மொழியில் அல்லது திரைப்படத்தில் வந்த கதையின் பாதிப்பில் எழுதியது இல்லை என்கிற உறுதி மொழி கடிதம் அனுப்ப வேண்டும்.

    7. போட்டிக்கு என்றே எழுதுபவர்கள் சாஃப்ட் காபி அனுப்பினாலும் டைப் செய்யப்பட்ட அல்லது கையெழுத்தில் எழுதிய நாவல் அல்லது சிறுகதைத் தொகுதியை அனுப்ப வேண்டும்.

    8. எந்த நாட்டில் வசிப்பவராய் இருந்தாலும் அவரது விலாச அடையாள அட்டையின் நகலை இணைக்க வேண்டும்.

    9. எந்த காரணம் கொண்டும் நேரடி தொடர்பு கொள்ளக் கூடாது.

    10. புத்தகமாக வராத நாவலோ சிறுகதைத் தொகுப்போ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அதன் முதல் அச்சு உரிமை மட்டும் ‘வாதினி’யைச் சாரும்.

    11. வருடா வருடம் தரப் போகும் இந்த விருது போட்டியில் முதல் முறை பரிசு பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.

    12. போட்டியில் கலந்து கொள்பவர்கள் முக்கியமாக ‘வாதினி’ இதழின் சந்தாதாரர் எண்ணை குறிப்பிட வேண்டும்.

    13 . முதல் இதழில் பிற விவரங்களும் தரப்படும்.

    14. மேலும் விருதுத் தொகை நேரிடையாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    15.போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தையும் அதற்குரிய இடத்தில் குறிப்பிட வேண்டும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 9, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு மு​னைவர் சி.​சேதுராமன் அவர்கள்

     

    S. Sethuraman of Tamil Department of H. H. Rajahs College2

     

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக, வல்லமைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாராட்டப்படுபவர் புதுக்​கோட்​டை -மாட்சி​மை தங்கிய மன்னர்    கல்லூரியின் தமிழாய்வுத்து​றை தலைவரான மு​னைவர் சி.​சேதுராமன் அவர்கள். சென்ற வெள்ளியன்று வல்லமை இதழில் இவர் வெளியிட்ட “கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு”  என்ற ஒப்பாய்வுக் கட்டுரையின் சிறப்பு கண்டு இவரை வல்லமையாளர் என்று பாராட்டி மகிழ்ச்சி அடைகிறோம்.

    இணையத்தமிழ் இதழ்களின் வாசகர்களுக்கு மு​னைவர் சி.​சேதுராமன் அவர்கள் நன்கு அறிமுகமானவர். வல்லமை, திண்ணை, தமிழ்முரசு, முத்துக்கமலம் ஆகிய இதழ்களில் தொடர்ந்து பல கதை, கவிதை, நூல்மதிப்புரை போன்றவற்றை எழுதி வருகிறார். குறிப்பாக, தமிழ் இலக்கியக் கட்டுரைகளை அதிகம் எழுதி வருபவர் மு​னைவர் சி.​சேதுராமன் (இவரது பிற படைப்புகளின் பட்டியலை இத்தளத்தில் காணலாம்).

    S. Sethuraman of Tamil Department of H. H. Rajahs College

    “கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு” ஒப்பாய்வுக் கட்டுரையில், உரையாசிரியர்களால் அதிகளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையதும்… தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்டதும்… பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகள் பெருமளவில் இடம் பெற்றதால் குடிமக்கள் காப்பியம் என்ற சிறப்பு கொண்ட சிலப்பதிகாரம், காலங்கள் பல கடந்தாலும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் ​பெரும்தாக்கத்​தை ஏற்படுத்துவதில் முதன்​மையான இடத்தை வகிப்பதை கட்டுரை ஆசிரியர் பாராட்டிச் செல்கிறார். சிலம்பின் தாக்கத்தின் விளைவாக பிற்காலத்தில், சிலம்பை ஒட்டி தோன்றிய, புகழ்​பெற்ற புலவர் புக​ழேந்தியாரின் ​’பெயரில்’ “பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ்” பதிப்பகதாரால் வெளியிடப்பட்ட “பெரிய எழுத்து ​கோவலன் க​தை” என்ற நாடக நூலை சிலம்புடன் ஒப்பிட்டு ஆராய்கிறார். ஒப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெரிய எழுத்து ​கோவலன் க​தை நாட்டுப்புற உடுக்கடிக் கதைப்பாடல் அ​மைப்பி​ல் இயற்றப்பட்ட நூலாகும்.

    ஆய்வுக்கட்டுரையில் இவ்விரு நூலிலும் வேறுபட்டுள்ள கடவுளர்களின் துதி துவக்கம் பற்றி விளக்குகிறார். மங்கல வாழ்த்துப் பாடலில் ​கோவலன் கண்ணகி திருமண நிகழ்விலிருந்து சிலப்பதிகாரத்தின் க​தையானது ​​தொடங்குவதும், ஆனால் அது போலன்றி கோவலன் கதை நூலானது கண்ணகி, ​கோவலன், மாதவி, வசந்தமா​லை உள்ளி​ட்டோரின் முற்பிறப்பு வரலாற்​றைக் கூறுவதிலிருந்து ​தொடங்கும் வேறுபாடுகளை ஒப்பிடுகிறார். அத்துடன் இரு நூல்களிலும் கதை மாந்தர்க்களை அறிமுகப்படுத்தும் முறையையும் ஒப்பிடுகிறார்.

    new-kovalan

    சிலம்பி​ல் கண்ணகி தெய்வமான பின்​பே கதை நி​றைவுறும் முறையையும், ஆனால் கோவலன் கதையின் ​தொடக்கத்தில் இருந்தே கண்ணகி காளி​தேவியாகவே காட்டப்படும் வேற்றுமையை சுட்டுகிறார். பரத்​தைய​ரை நாடினால் எவ்வா​றெல்லாம் துன்புற ​நேரிடும் என்பதை மாதகி வசந்தமா​லை ஆகி​யோரின் வழி வலியுறுத்துவது புக​ழேந்தியாரின் முக்கியமான நோக்கமாக அமைந்ததையும், சிலம்பில் இடம்பெறாது கோவலன் கதையில் மட்டுமே அமைந்துள்ள பல காட்சிகளையும் அறியத் தருகிறார்.

    அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே கூற்றுவன், பெருமை மிக்க பத்தினியைப் பெரியோர் தொழுவார், ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும் என்ற மூன்று நீதிகளை வலியுறுத்த இயற்றப்பட்ட சிலம்பின் நீதிகளை கோவலன் கதை எவ்வாறு கையாள்கிறது என்று ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர். சிலம்பின் நீதிகளுள் ஒன்றான “ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்” என்பது அதன் பின்வந்த அ​னைத்து இலக்கியங்களிலும் ​பெருந்தாக்கத்​தை ஏற்படுத்தியது என்பதைச் சுட்டிக்காட்டி, “பெரிய எழுத்து ​கோவலன் க​தை”யிலும் ஊழ்வி​னை கோட்பாடு முக்கியத்துவம் வகிப்பதைக் காட்டுகிறார். பின்னால் நடக்கப் ​போவ​தை முன்ன​ரே கூறுதல், அரசியல் பி​ழைத்தவ​ரை அறம் அழிக்கும் என்பது போன்ற நிகழ்வுகளை இரு நூல்களிலும் ஒப்பிட்டு விளக்குவது இலக்கியச் சுவை மிகுந்த வகையில் அமைந்துள்ளது.

    இலக்கிய நயம் பாராட்டும் பல கட்டுரைகளை வல்லமை வாசகர்களுக்கு மேலும் இவர் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், சிறந்த கட்டுரையைத் தந்தமைக்குப் பாராட்டி, வல்லமையாளர் மு​னைவர் சி.​சேதுராமன்  அவர்களை வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு:
    மின்னஞ்சல்: malar.sethu@gmail.com
    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,
    புதுக்​கோட்​டை.

     

    தரவுகள் தந்துதவிய தளங்கள்:
    Dr. S. Sethuraman of Tamil Department of H. H. Rajahs College, Pudukkottai –
    http://www.hhrajahs.com/mech.html#11
    http://www.muthukamalam.com/writer/sethuramandr.html
    http://munaivaramani.blogspot.com/2014/03/300114.html

     

    குறிப்பு:
    பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகதாரால் வெளியிடப்பட்ட “பெரிய எழுத்து ​கோவலன் க​தை” என்ற நாடக நூலினைப் படிக்க விரும்புபவர், தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் இருந்து அதனை தரவிறக்கிக் கொள்ளலாம் – http://www.tamilheritage.org/old/text/ebook/kovalan/index.html.

    Share
  • தொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்

    –முனைவர் மு.பழனியப்பன்.

    பொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம், புறம் ஆகிய பொருள்களை வெளிப்படுத்தும் கருவியாக யாப்பு விளங்குகின்றது. யாப்பில் உணர்வைக் கூட்டுவது மெய்ப்பாடாகின்றது. யாப்பில் அணிநலம் சேர்ப்பது அணியாகின்றது. யாப்பில் மரபினை மாறாமல் காப்பது மரபாகின்றது. எனவே பொருள் இலக்கணம் செய்யுளின் வடிவம், அழகு, வெளிப்பாட்டுத்திறன் ஆகியவற்றின் இலக்கணமாக விளங்குகின்றது.

    tolkapiyamதொல்காப்பியர் இலக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சிகளை மெய்ப்பாட்டியல் என்ற இயலில் தனித்து விளக்குகின்றார். இவருக்குப் பின்வந்த புத்தமித்திரனார் தன் இலக்கண நூலான வீரசோழியத்தில் மெய்ப்பாட்டு இலக்கணத்தைச் சுட்டியுள்ளார்.

    புத்தமித்திரனார் தன் வீரசோழிய நூலினை ஐந்திலக்கண நூலாகப் படைக்கின்றார். இந்நூல் எழுத்ததிகாரப் பிரிவில் சந்திப்படலம், சொல்லதிகாரப்பிரிவில் வேற்றுமைப்படலம், தொகைப்படலம், தத்திதப்படலம், தாதுப்படலம், கிரியாபதப்படலம், பொருளதிகாரப் பிரிவில் பொருள்படலம், யாப்பதிகாரப் பிரிவில் யாப்புப்படலம், அலங்காரப் பிரிவில் அலங்காரப்படலம் ஆகிய உட்பகுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இதனுள் உள்ள பொருளதிகாரப் பிரிவில், பொருட்படலத்தில் அகம், புறம், அகப்புறம் ஆகியன பற்றிய இலக்கணங்கள் எடுத்துரைக்கப்பெறுகின்றன.

    அகப்பாடல்களில் இருபத்தேழு உரைமுறைகள் உள்ளனவாக வீரசோழியம் குறிக்கின்றது. சட்டகம், திணை, கைகோள், நடை, சுட்டு, இடம், கிளவி, கேள்வி, மொழி, கோள், உட்பெறுபொருள் (உள்ளுறை), சொற்பொருள், எச்சம். இறைச்சி, பயன், குறிப்பு, மெய்ப்பாடு, காரணம், காலம், கருத்து, இயல்பு, விளைவு, உவமம், இலக்கணம், புடையுரை, மொழிசேர்தன்மை, பொருளடைவு என்பன அவ்விருபத்தேழும் ஆகும். இவ்விருபத்தேழில் ஒன்றாகக் குறிக்கத்தக்கது மெய்ப்பாடு ஆகும்.இவ்வகையில் இரு   நூல்களிலும் குறிக்கத்தக்க இடத்தை மெய்ப்பாடு பெற்றுள்ளது. தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டு இயல்புடன், வீரசோழிய மெய்ப்பாட்டு இயல்புகளை ஒப்பு நோக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    மெய்ப்பாடு விளக்கம்:

    தொல்காப்பியம்

    ‘‘கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

    உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்

    நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’’[1]

    என்று மெய்ப்பாட்டிற்கு இலக்கணம் வகுக்கின்றது. இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படும் மெய்ப்பாடு என்பது நுண்ணிய உணர்வுடையாரால் மட்டுமே அறியத்தக்கது. கண்களாலும், செவிகளாலும் மெய்ப்பாடுகள் உணரத்தக்கனவாக இருக்க வேண்டும் என்பன தொல்காப்பியம் தரும் மெய்ப்பாட்டிற்கான வரையறைகள் ஆகும். மெய்யின்கண் படும் பாடு மெய்ப்பாடு என்று பொதுவில் மெய்ப்பாடு என்பதற்குப் பொருள் கொள்ளலாம்.

    வீரசோழியம் மெய்ப்பாடு என்பதை ‘‘மெய்க்கட் பட்டு விளங்கிய தோற்றம் செவ்விதின் தெரிந்து செப்பல்’’ [2] என்று விளக்கம் கொள்கின்றது. தொல்காப்பியம் உரைத்த அதே விளக்கத்தினை ஏற்றுத் தாமும் வழிமொழிவதாக வீரசோழியம் விளக்கம் தருகின்றது.

    மெய்பாட்டின் வகைகள்:

    மெய்ப்பாட்டினைத் தொல்காப்பியர் பொதுவான மெய்ப்பாடுகள், அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் எனப் பிரிக்கின்றார்.

    வீரசோழிய ஆசிரியர் அகத்திற்கான மெய்ப்பாடுகள், புறத்திற்கான மெய்ப்பாடுகள் எனப் பகுத்துரைக்கின்றார்.

    தொல்காப்பியர் சுட்டும் அகமெய்ப்பாடுகள் வீரசோழியம் காட்டும் அக மெய்ப்பாடுகளுடன் பொருந்தத் தக்கன. தொல்காப்பியர் காட்டும் பொதுவான மெய்ப்பாடுகள் புற மெய்ப்பாடுகளுடன் பொருந்தத்தக்கன.

    அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் ஐந்து நிலைகளாக் கொள்ளப்படுவதாகக் குறிக்கிறார் புத்தமித்திரனார். மன்மதனின் ஐந்து கணைகள் போல அது ஐந்து என்பது அவரின் கணக்கீடு. ‘‘ ஐவகை கணையுளாக்கிய காமம்’’[3] என்று இதனைப் புத்தமித்திரனார் மொழிகின்றார். இந்த ஐவகை பின்பு முப்பதியிரண்டுத் துறைகளாகப் பகுக்கப்பெறுகின்றன.

    ஐந்து கணைகள்:

    சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்னும் ஐந்தும் அக மெய்ப்பாட்டின் பிரிவுகளாகப் புத்தமித்திரனரால் கொள்ளப்பெறுகின்றன. இவற்றுக்கான விளக்கங்களையும் புத்தமித்திரன் வழங்கியுள்ளார்.

    சுப்பிரயோகம் – காதலர் குறித்த சொல்லும் நினைப்புமாக இருப்பது

    விப்பிரயோகம்- வெய்துயிர்ப்பு உறுதல்

    சோகம்– உடலில் வெம்மை ஏற்படலும், சோறுண்ணாமல் இருத்தலும்

    மோகம் – மயக்கமும் மொழி பல பிதற்றலும்

    மரணம்- அணங்கலும் வருந்தலும்[4]

    என்று ஐவகைக் கணைகளுக்கும் விளக்கம் தருகின்றார் புத்தமித்திரனார். இச்செய்தி தொல்காப்பியத்தில் காணப்படாத செய்தியாகும்.

    துறைகள் முப்பத்தியிரண்டு:

          இவ்வைங்கணைகள் முப்பத்தியிரண்டின் வழிப்படுகின்றன. அவை தொல்காப்பிய அக மெய்ப்பாடுகளுடன் ஒப்பு வைக்கத்தக்கன. தொல்காப்பியர் சுட்டும் அக மெய்ப்பாடுகள் அவத்தைகள் என அழைக்கப்படுகின்றன.[5]

    mm1

    விளர்ப்பேமேற்காண் பட்டியலில் தொல்காப்பிய அக மெய்ப்பாடுகளுடன் பொருந்தும் வீரசோழிய மெய்ப்பாடுகள் காட்டப்பெற்றுள்ளன. பொருந்தாத மெய்ப்பாடுகள் பின்வருமாறு.

    1. பசப்பே
    2. மெலிவே
    3. விதிர்ப்பே
    4. துளக்கந் துயர்தல்
    5. தும்மல்
    6. சோர்தல்
    7. வெருவுதல்
    8. விரும்புதல்
    9. ஒப்பிலாமை
    10. உருகுதல்
    11. மயங்குதல்
    12. மூரி உயிர்ப்பு
    13. மூர்ச்சனை
    14. முறுவல்
    15. காரிகை கடத்தல்
    16. இருந்துழியிராமை
    17. இராகம் இகழ்தல்
    18. சேர் துயிலின்மை
    19. காட்சி விரும்பல்
    20. உண்டி விரும்பாமை
    21. உரைத்தது மறுத்தல்
    22. கண்ணீர் வழிதல்
    23. கனவு நனி காண்டல்[6]

    ஆகியன தொல்காப்பியத்தில் இல்லாத புதிய அக மெய்ப்பாட்டுத் துறைகளாக வீரசோழிய ஆசிரியரால் கண்டுகொள்ளப்பெற்றுள்ளன.

    புறமெய்ப்பாடுகள்:

    தொல்காப்பியர் பொதுவான மெய்ப்பாடுகள் எனச் சுட்டிய நகை முதலான எட்டையும் ஏறக்குறைய புற மெய்ப்பாடுகளாகக் கருதுகின்றார் வீரசோழியம் இயற்றிய புத்தமித்தினரார். அவற்றின் பட்டியல் பின்வருமாறு.

    mm2

    இப்பட்டியல் தொல்காப்பிய மெய்ப்பாடுகளுடன் வடமொழி மெய்ப்பாடுகளையும், வீரசோழிய மெய்ப்பாடுகளையும் ஒப்பிட்டு நோக்குகின்றது. இவற்றில் வெகுளி என்ற மெய்ப்பாடு வீரசோழியத்தில் இடம்பெறவில்லை. உட்கோள் என்பது புதிதாக இடம்பெற்றுள்ளது. சிருங்காரம் என்பது வடமொழிக்கும், வீரசோழியத்திற்கும் பொருந்துகிறது. இப்பொருத்தம் வீரசோழியம் வடமொழிச் சார்பினது என்பதைத் தெரிவிப்பதாக உள்ளது. வடமொழியின் சாந்தம் தமிழ் மரபில் தனித்த நிலையில் ஏற்கப்பெறவில்லை என்பதற்குத் தொல்காப்பியமும் வீரசோழியமும் அதனை விடுத்தது கருதித் தெரியவருகின்றது.

    இவ்வெண்வகை மெய்ப்பாடுகளும் தோன்றும் களங்கள் நான்காகும். இதனைத் தொல்காப்பியமும் ஏற்கின்றது. வீரசோழியமும் ஏற்கின்றது. அவற்றையும் இங்குப் பொருத்திப் பார்ப்பது மெய்ப்பாடு குறித்த முழுமையான புரிதலை உண்டாக்கும்.

    நகை:

    நகை தோன்றும் இடங்களாகத் தொல்காப்பியம்,

    எள்ளல், இளமை, பேதமை, மடனென்று

    உள்ளப்பட்ட நகை நான் கென்க[7]

    என்ற நான்கினைக் காட்டுகின்றது. வீரசோழியம்

    மயக்கம்,பெயர்ப்பே, இகழ்வே, நோக்க

    நயப்பத் தோன்றும் நகையது நலனே[8]

    என்ற நான்கினைக் காட்டுகின்றது. இவற்றை ஒப்பிட்டுப் பின்வரும் பட்டியல விளக்குகின்றது.

    mm3


    அழுகை:
    நகைக்காக களங்கள் ஏறக்குறைய இரு நூல்களிலும் பொருந்துவதாக அமைகின்றது. இளமை என்ற ஒன்று தொல்காப்பியத்திலும், பெயர்ப்பு என்ற ஒன்று வீரசோழியத்திலும் தனித்து் விளங்குகின்றன. எனவே நகை தோன்றும் இடங்கள் நான்கில் இருந்து ஐந்தாக வளர்ச்சி பெற்றுள்ளது எனக் கொள்ள இயலும். எள்ளல், இளமை, பேதமை, மடன், பெயர்ப்பு நகை தோன்றுவதற்கான இடங்களாகின்றன.

    அழுகை என்ற மெய்ப்பாட்டினைத் தொல்காப்பியர் காட்ட அதற்கு இரக்கம் என்ற மெய்ப்பாட்டை இணையாக வைக்கின்றார் வீரசோழிய ஆசிரியர்.

    இழிவே, இழவே, அசைவே வறுமையென

    விளிவில் கொள்கை அழுகை நான்கே[9]

    என்பது தொல்காப்பியம்

    வருத்தம் இகழ்வே விலியின்மை, பெருமை

    இரக்கந் தோன்றும் இந்நாலிடத்தே[10]

    என்பது இரக்கம் மெய்ப்பாடு தோன்றும் நான்கு களங்கள் என்கிறது வீரசோழியம். இதன் பொருத்தப்பாடு பின்வருமாறு.

    mm4


    இளிவரல்:
    அழுகைக்கான களங்களில் இழவிற்குத் தொல்காப்பியத்தில் இடம் தரப்பெற்றுள்ளது. வீரசோழியத்தில் பெருமைக்கு இடம் தரப்பெற்றுள்ளது. மற்ற மூன்றும் பொருந்துகின்றன. எனவே இதுவும் ஐந்தாக வளர்ச்சி கொள்ளுகின்றது. இழிவே, இழவு, அசைவு, வறுமை, பெருமை ஆகியன அழுகைக்கான களங்கள் ஆகும்.

    தொல்காப்பியம் சுட்டும் இளிவரலை, இழிப்பு எனக் கொள்கின்றது வீரசோழியம்.

    இளிவரல் மெய்ப்பாட்டின் தோற்றக் களங்கள் பின்வருமாறு.

    ‘‘மூப்போ பிணியே வருத்த மென்மையொடு

    யாப்புற வந்த இளிவரல் நான்கே’’[11]

    இழிப்பு பற்றிய வீரசோழிய நூற்பா பின்வருமாறு

    நாற்றஞ் சுவையே தோற்றம் ஊறு என்று

    இந்நால் வழித்தாம் இழிப்பு எனப்படுமே[12]

    இவ்விரு நூற்பாக்களின் வழி பெறப்படும் பகுப்புகள் பின்வரும் நிலையில் ஒப்பு நோக்கத்தக்கனவாகும்.

    mm5


    மருட்கை:
    தொல்காப்பியம் இளிவரல் எனச் சுட்டுவது, இழிப்பு என்ற வீரசோழியம் காட்டும் மெய்ப்பாடுடன் ஒத்துப்போகின்றது. இளிவரல் தோன்றும் களங்களில் மூப்பு, பிணி ஆகிய இரண்டும் பொருந்துகின்றன. மற்ற இரண்டான வருத்தம், மென்மை ஆகியன பொருந்தவில்லை. வீரசோழியத்தால் புதிதாகக் காட்டப்பெற்றுள்ள நாற்றம்,சுவை ஆகியவற்றால் இழிப்புத் தோன்றும் என்பது உறுதி. எனவே இது இழிப்பின் மெய்ப்பாட்டின் வளர்ச்சி நிலை எனக் கருதலாம். இதனடிப்படையில் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை, நாற்றம்,சுவை ஆகிய ஆறாக இளிவரல் மெய்ப்பாடு தோன்றும் இடங்கள் அமைகின்றன.

    வியப்பு என வீரசோழியத்தால் குறிக்கப்படும் தொல்காப்பிய மருட்கை நான்கு தோற்றக் களன்களை உடையது.

    தொல்காப்பியம்,

    புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு

    மதிமை சாலா மருட்கை நான்கே[13]

    என்று மருட்கை தோன்றும் இடங்களைக் காட்டுகின்றது.

    வீரசோழியம்

    தறுகண்மை, புலமை, பொருளே, பண்பே

    பெறுவழித் தோன்றும் பெருந்தகு வியப்பே[14]

    என்று வியப்பு பிறக்கும் களங்களைச் சுட்டுகின்றது. இதன் ஒப்பீடு பின்வருமாறு.

    mm6

    தொல்காப்பியம் சுட்டும் வியப்பிற்கான களங்கள் மூன்றும் பண்பு என்ற வீரசோழியப் பகுப்பில் உள்ளடங்கி விடுகின்றன. ஆக்கம் என்பதற்குப் பொருள் என்பதை ஒப்பாக வைக்கலாம். இவை தவிர தறுகண், புலமை காரணமாக வியப்பு மேலிடலாம் என்றுப் புதிதாக முடிகின்றது வீரசோழியம். ஆகவே புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம், தறுகண், புலமை ஆகியன வியப்பின் பிறப்பிடங்களாக அமைகின்றன.

    அச்சம்:

    அச்சம் என்ற மெய்ப்பாடு இரு நூல்களாலும் அதே பெயரெில் அழைக்கப்படுகின்றது. இது பிறக்குமிடம் நான்கு என்கிறது தொல்காப்பியம்.

    ‘‘அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்

    பிணங்கல் சாலா அச்சம் நான்கே’’[15]

    ‘‘மாற்றலர், விலங்கல், மற்றவர் சேருத

    லாற்றத் தோன்றும் அச்சத்து விளைவே’’[16]

    என்பது வீரசோழியம் காட்டும் அச்ச மெய்ப்பாட்டுக்கான பிறப்பிடங்கள் ஆகும்.

    அச்சம் என்ற மெய்ப்பாடு பொருந்தும் நிலையைப் பின்வரும் பட்டியல் விளக்குகின்றது.

    mm7


    பெருமிதம்:
    அச்சத்தில் இரு களங்கள் ஒத்தமைகின்றன. மற்றவர் என்ற களம் வீரசோழியத்தில் உள்ளது. தம் இறை, அணங்கு ஆகியன தொல்காப்பியத்தில் உள்ளன. இவற்றை வீரசோழியம் மற்றவர்கள் எனக் குறிப்பதாகக் கொள்ளலாம். அணங்கு, விலங்கு, கள்வர், இறை, மற்றவர் என்ற நிலையில் அச்சம் அமையலாம். வீரசோழியத்தில் அச்சம் தோன்றும் மூன்று இடங்கள் மட்டும் சுட்டப்பெற்றுள்ளன.

    தொல்காப்பியம் சுட்டும் அடுத்த சுவை பெருமிதம் என்பதாகும். இந்தப் பெருமிதத்திற்கும் பிறக்கும் களன் நான்காகும்.

    கல்வி தறுகண் இசைமை கொடை யெனச்

    சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே[17]

    வீரசோழியம் பெருமிதம் என்பதை வீரம் என்ற மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றது. அம்மெய்ப்பாடு பிறக்கும் நான்கு இடங்கள் பின்வருமாறு.

    ‘‘பகையே செருவே இகலே முனிவே

    மிகுவழித் தோன்றும் வீரத்து விளைவே’’[18]

    இவ்வகையில் ஓரளவிற்கு இணையும் இம்மெய்ப்பாடுகளைப் பின்வரும் நிலையில் அதன் பிறப்பிடங்களை நோக்கி ஒப்புக் காண முடிகின்றது.

    mm8


    வெகுளி:
    தொல்காப்பியம் பெருமிதம் என்பதை மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றது. அதன் களங்கள் கல்வி, தறுகண், இசைமை, கொடை என்பதாகச் சுட்டுகின்றது. இவற்றுள் தறுகண் என்பதை வீரமாகக் கொண்டு வீரத்தை மெய்ப்பாடாக வீரசோழியம் கருதுகின்றது. வீரம் என்ற மெய்ப்பாடு வடமொழியிலும் உள்ளது, வடமொழியின் சார்பினால் வீரசோழியம் வீரத்தை மெய்ப்பாடாகக் கருதுகின்றது எனக் கொள்ளலாம்.

    வெகுளி என்ற மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் மட்டும் காணப்படுகின்றது. இதனை ரௌத்திரம் என்று வடமொழி குறிக்கின்றது. வீரசோழியம் இதற்கு இணையாக மெய்ப்பாடு எதனையும் கொள்ளவில்லை.தொல்காப்பியம் உறுப்பறை, குடி, அலை, கொலை ஆகியனவற்றை வெகுளி மெய்ப்பாடு பிறக்கும் களங்களாகச் சுட்டுகின்றது.

    தொல்காப்பியம் காட்டும் வெகுளி மெய்ப்பாட்டின் பிறப்பிடங்களை உணர்த்தும் நூற்பா பின்வருமாறு.

    ‘‘உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன

    வெறுப்ப வந்த வெகுளி நான்கே’’[19]

    இம்மெய்ப்பாட்டினைப் புத்தமித்திரர் தன்னுடைய நூலான வீரசோழியத்தில் விடுத்ததற்கான காரணம் உண்டு. உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்பன நான்கும் ஒருவரை வருத்தும் துயரங்கள் ஆகும். இதனை பௌத்த சமயம் ஏற்காது. பௌத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கையே அகிம்சையாகும். இதன் காரணமாக புத்தமித்திரனார் இந்த மெய்ப்பாட்டை விடுத்துள்ளார்.

    இதற்குப் பதிலாக உட்கோள் என்ற ஒன்றைப் புதிதாகப் புத்தமித்திரன் உருவாக்கி எண்வகை மெய்ப்பாடாக ஆக்கிக்கொள்கிறார்.

    உவகை:

    சிருங்காரம் என்பது வடமொழியில் உள்ள முதல் மெய்ப்பாடு ஆகும். இதனை அப்படியே வீரசோழியம் ஏற்கின்றது. இதனைத் தொல்காப்பியம் சுட்டும் உவகை என்ற மெய்ப்பாடுடன் ஒத்து வைத்து எண்ணமுடியும்.

    செல்வம் புலனே புணர்வு விளையாட்டென

    அல்லல் நீத்த உவகை நான்கே[20]

    என்ற தொல்காப்பிய நூற்பா உவகையின் பிறப்பிடங்கள் நான்கினைக் காட்டுவதாக உள்ளது,

    இளமையும் வனப்பும் வளமையும் கலவியும்

    களனாகத் திரிதருஞ் சிருங்காரம்மே[21]

    என்ற வீரசோழிய நூற்பா சிருங்காரரசம் பிறக்கும்.இடங்களைக் காட்டுகின்றது. இவற்றின் ஒப்புநிலை பின்வருமாறு.

    mm9


    உட்கோள்:
    சிருங்கார ரசத்திற்கான தோற்றக் களங்களில் தொல்காப்பியத்திற்கும், வீரசோழியத்திற்கும் இரண்டு என்ற அளவில் பொருந்துகின்றன. இரண்டு பொருந்தவில்லை. ஆகவே செல்வம்,புணர்வு, விளையாட்டு, புணர்வு, இளமை, வனப்பு ஆகியன நகைக்கான பிறப்பிடங்களாக அமைகின்றன.

    வெகுளி என்ற மெய்ப்பாட்டினை ஏற்காத வீரசோழியம் அதனிடத்தில் உட்கொள் என்ற ஒன்றை அமைத்துக்கொண்டுள்ளது. உட்கோள் தோன்றும் நிலைக்கலன்களாக ஐவகைக் குரவர்(தாய், தந்தை, குரு, தெய்வம், மூத்தோர்), தேவர், மன்னர் ஆகியோரின் எய்தாது எய்திய இயல்பு உட்கோள் என்கிறது வீரசோழியம்.

    ‘‘ஐவகைக் குரவர் தேவர் மன்னர்

    எய்தா தெய்திய வியல்பவை உட்கோள்’’[22]

    என்பது உட்கோளை விளக்கும் வீரசோழிய நூற்பாவாகும்.

    மேற்கண்ட ஒப்பீடுகளில் இருந்துப் பின்வரும் கருத்துகள் அறியத்தக்கனவாகின்றன..

    நகையும் அழுகையும் ஆகிய இரு மெய்ப்பாடுகள் தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய இரண்டு இலக்கண நூல்களிலும் பெரிதும் பொருந்துவனவாகத் திகழ்கின்றன. இவை தோன்றும் களங்களாக காட்டப்படும் நான்கில் மூன்று பொருந்தி வருகின்றன.

    இளிவரல், வியப்பு, அச்சம், சிருங்காரம் ஆகிய நான்கும் தொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் தோற்றக் களங்கள் இரண்டினால் ஒன்று படுகின்றன. இரண்டால் வேறுபடுகின்றன.

    பெருமிதம் என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரம் என்பதாக வீரசோழியத்தால் கொள்ளப்படுகின்றது. பெருமிதத்தின் தோற்றக்களன்களுள் ஒன்றாக வீரத்தைத் தொல்காப்பியம் காண வீரத்தையே தனியான மெய்ப்பாடாக வடமொழியினுடன் ஒத்து வீரசோழியம் கொள்ளுகின்றது.

    வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரசோழியத்தில் இல்லை. உட்கோள் என்ற வீரசோழிய மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் இல்லாதப் புதுமையது.

    நகை, மருட்கை, அச்சம் போன்ற மெய்ப்பாடுகள் பெயர் நிலையில் அப்படியே இரு நூல்களில் ஒத்து அமைகின்றன. அழுகை என்பதற்கு இரக்கம் என்பதும், இளிவரல் என்பதற்கு இழிப்பு என்பதும் கொள்ளப்படுகின்றது. சிருங்காரம், வீரம் ஆகிய வீரசோழிய மெய்ப்பாடுகள் தொல்காப்பிய மெய்ப்பாடுகளான உவகை, பெருமிதம் ஆகியவற்றோடு பெயரளவில் ஒத்துச் செல்லவில்லை என்றாலும் பொருள் அளவில் ஓரளவிற்கு ஒத்து் அமைகின்றன.

    வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாட்டை வீரசோழியத்தால் ஏற்க முடியவில்லை. உட்கோள் என்ற வீரசோழியம் காட்டும் மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் பெயரளவிலும் பொருள் அளவிலும் காணப்படவில்லை.

    இவ்வாறு புற மெய்ப்பாடுகளில் ஒற்றுமை, வேற்றுமைகளை ஒப்பிட்டு அறியமுடிகின்றது.

    முடிவுகள்:

    தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய இரண்டிலும் மெய்ப்பாடுகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் அகம் சார்ந்த மெய்ப்பாடுகளாக இருபத்துநான்கினைக் காட்ட, வீரசோழியம் அகம் சார்ந்த மெய்ப்பாடுகளாக ஐந்து கணைகள், முப்பத்தியிரண்டுத் துறைகள் ஆகியனவற்றைக் காட்டுகின்றது. இவையிரண்டையும் பொருத்திப் பார்க்கையில் எட்டு இரண்டு நூல்களுக்கும் பொருந்தி அமைகின்றன. மற்றவை பொருந்தவில்லை. அவ்வகையில் தொல்காப்பிய அகமெய்ப்பாடுகளில் பதினாறும், வீரசோழியத்தில் இருபத்துநான்கும் பொருத்தமில்லாமல் தனித்து விளங்குவனவாகும்.

    புறமெய்ப்பாடுகள் என்று தொல்காப்பியம் சுட்டும் வெகுளி முதலான எண்வகை மெய்ப்பாடுகளை ஒட்டி எட்டினை வீசோழியம் குறிக்கின்றது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம்,பெருமிதம், உவகை ஆகிய ஏழும் பகுப்பு, பொருள் அளவில் பொருந்தி அமைகின்றன.

    வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரசோழியத்தால் பின்பற்றப்படவில்லை. உட்கோள் என்ற ஒன்று குறிக்கப்படுகிறது. இது ஐவகைக் குரவர் போன்றோர் மீது ஏற்படும் மதிப்பால் விளையும் உடல் மெய்ப்பாடுகள் ஆகும்.

    வடமொழியில் உள்ள சாந்தம் என்ற மெய்ப்பாடு தொல்காப்பியத்தாலும் வீரசோழியத்தாலும் தனித்த ஒன்றாக ஏற்கப்படவில்லை. வடமொழியின் சா்ர்பின் காரணமாக சிருங்கார ரசம், வீர ரசம் ஆகியன வீரசோழியத்தினால் எடுத்தாளப்பெற்று அவை மெய்ப்பாடுகளாக ஆக்கப்பெற்றுள்ளன.

    தொல்காப்பியர் காட்டிய மெய்ப்பாடுகள் வீரசோழிய காலத்தில் தேய்வும், வளர்ச்சியும் பெற்றுள்ளளன என்று முடியலாம்.

     

     


     

    பயன் கொண்ட நூல்கள்:

    1. இளம்பூரணர்(உ.ஆ) தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை, 2010
    2. சுப்பிரமணியம்.ச.வே., வீரசோழியம் திறனாய்வு, மூலமும் கருத்தும், தமிழ்ப்பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1979
    3. தாமோதரம் பிள்ளை,(சி.வை.), வீரசோழியம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 2008

     

    [1] தொல்காப்பியம்,மெய்ப்பாட்டியல், நூற்பா,27

    [2] வீரசோழியம்.பக் 77-78

    [3] வீரசோழியம், ப.79

    [4] வீரசோழியம்,ப. 79

    [5] தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூற்பாக்கள் 13,14,15,16,17,18 ஆகியவற்றின் சுருக்கம்

    [6] வீரசோழியம், ப.79

    [7] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்,நூ.4

    [8] வீரசோழியம், ப. 80

    [9] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.5

    [10] வீரசோழியம், ப. 80

    [11] தொல்காப்பியம்,மெய்ப்பாட்டியல், நூ.6

    [12] வீரசோழியம், ப. 80

    [13] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.7

    [14] வீரசோழியம், ப. 80

    [15] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்,நூ.8

    [16] வீரசோழியம், ப. 80

    [17] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.9

    [18] வீரசோழியம், ப. 80

    [19] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.10

    [20] தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூ.11

    [21] வீரசோழியம், ப. 80

    [22] வீரசோழியம், ப. 80

     

    ____________________________

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    திருவாடனை, 623407
    இராமநாதபுர மாவட்டம்
    muppalam2006@gmail.com

    Share
  • நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு

    jay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++

    http://www.space.com/10357-water-moon.html#ooid=0xYXd4cDoFnQ3VPwpDZ0WoT9A4Xmf8ZB

    http://www.space.com/10039-water-moon-hydrogen-oxygen-energy.html#ooid=JrMXV4cDrahMCGJgqFYxfPJR0v-hbI_6

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BlrVA9i7AjM

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=T-mHE6Tjs6o

    https://www.youtube.com/watch?v=ehyHRjR5844&list=PLAD5ED8FF53A4FC5A&feature=player_embedded

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=DGk43fn51x4

    ++++++++++

    Water on Moon

    நிலவின் துருவச் சரிவுகளில்
    நீர்ப்பனி வாயு மிகுதியாய்
    இருப்பதை நாசா விண்ணுளவி
    தெரிவிக்கும் !
    குடிநீர்க் குவளைகளைக்
    கொண்டு செல்வது விண்கப்பலில்
    கோடான கோடிச் செலவு !
    மறைந்து நீர்ப்பனிச் சரிவுகள்
    பல யுகமாய்
    உறைந்து கிடக்கும் பாறையாய்
    பரிதி ஒளி படாமல் !
    எரிசக்தி உண்டாக்கும்
    அரிய ஹைடிரஜன் வாயு
    சோதனை மோதலில் வெளியேறும் !
    செவ்வாய்க் கோள் செல்லும்
    பயணிகட்குத்
    தங்கு தளம் அமைக்க
    வெண்ணிலவில் உள்ளது
    தண்ணீர் வசதி !
    எரிசக்தி ஹீலிய வாயுவும்
    பிராண வாயுவும் சேகரிக்கலாம் !
    மீதேன், மெர்குரி, மெக்னீசியம்
    வெள்ளி அம்மோனியா
    உள்ளன நிலவில் !
    வரண்டு போன
    துருவப் பகுதி நிலவில்
    பசுஞ் சோலைச் குழிகளில்
    நீர்ப் பாறைகள்
    நிரந்தரமான தெப்படி ?
    பரிதி ஒளிபுகா பாதாளத்தில்
    பனி நீரைத் திரவ மாக்கி
    மேற்தளத் துக்கு பம்ப்பில்லாமல்
    ஏற்றுவ தெப்படி ?

    +++++++++

    Water found on the Moon

    நிலவின் தென்துருவச் சரிவுப் பகுதியில் மத்திய ரேகைப் பகுதியை விட 23 ppm [Parts per million] ஹைடிரஜன் வாயு மிகையாக இருப்பதை அறிந்தோம்.  அந்த ஹைடிரஜன் வாயுவைக் கொண்டிருக்கும் மூலக்கூறு நிலைத்திராது சீக்கிரம் ஆவியாகும்;  ஹைடிரஜனும், ஆக்ஸிஜனும் செர்ந்து நீர் மூலக்கூறு ஆகலாம்   [Volatile, but easily vaporised as water ].  பூமியில் வெப்பக் குளிர்ப் பகுதிகளில் சூரியக் கதிர்கள் நீரிருப்பை வெவ்வேறு நிலையில் ஆவியாக்குவதுபோல் நிலவிலும் நேர்ந்துள்ளது.  வட கோளத் துருவச் சரிவுகளிலும் சூரிய ஒளி படாத பகுதிகளில் மிகுதியாய் நீர்ப்பனிப் பாறைகளைக் காணலாம்.  மேலும் வடதுருவச் சரிவுப் பகுதிகளில்  மிகுதியாக  ஹைடிரஜன் வாயுத் திரட்சி [45 ppm] இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

    டிம்மதி மெக்கிலாநகன்  [நாசா கோடார்டு விண்வெளிப் பயண மையம்]

    நிலவில் நீர் இருக்கிறதா என்ற ஓர் ஐயம் அறவே நீங்கியது

    பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் நிலவில் நீர் உள்ளதா வென்று தர்க்கம் செய்து வந்தனர்.   சமீபத்தைய கண்டுபிடிப்புகள் பாலைவனத்தை விட வறட்சியான நிலவில் நீர் இருப்பதை உறுதிப் படுத்தி உள்ளன.   செவ்வாய்க் கோளுக்கும், அதைத் தாண்டிச் செல்லவும் திட்டமிடும் நாசாவின் விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்குச்  சந்திரனில் தங்கு தளம் அமைக்க நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு  கண்டுபிடிப்புகள் பேராதரவு தந்துள்ளது.  ஹைடிரஜன் வாயு ராக்கெட்டு எஞ்சின்கள் இயங்க எரிசக்தி அளிப்பது.  பல கோடி டாலர் செலவாகக் குடிநீர்க் குவளைகளை விண்கப்பல்களில் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை.

    இந்த நீரிருப்பு நிலவில் எப்படி நேர்ந்தது,  நீர்க்கோளான நமது பூமியில் பேரளவு நீர் வளம் எவ்விதம் நிரம்பியது, இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற கேள்விகள்  எழுகின்றன.   இவற்றுக்கு ஒரு பதில் நீர்மயமுள்ள வால்மீன்கள், எறிகற்கள் [Meteorites] ஆகியவை, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி, நிலவைப் பன்முறைத் தாக்கி  நேர்ந்திருக்கலாம் என்பது.  அடுத்த கோட்பாடு : நிலவிலும், புவியிலும் சூரியப் புயல் அடித்து, உயர்ச்சக்தித் துகள்கள் [High Energy Particles from Solar Wind] வீசி, பாறைக்குள் அடைபட்ட ஆக்ஸிஜனும், ஹைடிரஜனும் சேர்ந்திருக்கலாம் என்பது.

    நிலவுக்குப் பயணம் செய்த நாசாவின் அப்பொல்லோ விண்கப்பல்கள்

    1969-1970 ஆண்டுகளில் நிலவில் அள்ளி வந்த நாசா அப்பொல்லோ 16 & 17 விண்வெளித் தீரர்களின் 45 மாதிரி மண்கட்டித் தூசிகளை ஆய்வு செய்ததில் ஹைடிரஜன், டிட்டீரியம் [Hydrogen – Deuterium Ratio] பின்னம் சோதிக்கப்பட்டது. டிட்டீரியம் வாயு, ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலம் [Deuterium is an isotope of Hydrogen].  ஹைடிரஜனில் இருப்பது ஒரு புரோட்டான் மட்டுமே.  டிட்டீரியத்தில் உள்ளவை ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான்.  ஆகவே டிட்டீரியம் வாயு கன ஹைடிரஜன்  [Heavy Hydrogen] என்று அழைக்கப் படுகிறது.

    சூரியனில் எரிந்து விடுவதால் டிட்டீரிய வாயுவின் அளவு மிகக் குறைவு. ஆனால் பரிதி மண்டலக் கோள்களில்  உள்ள டிட்டீரிய அளவு மிகையானது.   அகிலவெளி நிபுளா வாயுத் தூசிகளே [Nebula Gas & Dust]  அண்டக் கோள்கள் ஆயின.  டிட்டீரியம். ஹைடிரஜன் விகிதத்தைக் [D2/H2 Ratio] கணக்கிட்டு நீர் நிலவிலும், புவியிலும் சேர்ந்திடச் சூரியன் காரணமா அல்லது எறிகற்கலா, வால்மீன்களா என்று அறிய முடியும்.  குறிப்பாக அகிலக்கதிர்கள் [Cosmic Rays] வீழ்ச்சி நிலவில் டிட்டீரியம் அளவைக் கூட்டப் பாதிப்பு செய்யும் என்பது தெரிகிறது.

    “நிலவின் ஆழ்குழிப் பனிப் பாறையிலிருந்து நீரை எப்படி வெளியேற்றுவது என்பதே முக்கியப் பிரச்சனை !  இது பொறிநுணுக்க நிபுணருக்கு முதலில் தீர்க்க வேண்டிய ஒரு சவாலாக இருக்கும்.  நிலவின் நீரை அறுவடை செய்து பயன்படுத்த இன்னும் நீண்ட காலம் ஆகலாம்.  முதலில் நீர் நிலவில் எப்படித் சேர்ந்தது என்பதை அறிவதே அதைச் சேமிக்க ஏறும் முதற்படி.

    டெட்லெஃப் கோஸ்சினி (ESA Chandrayaan -1 Project Scientist)

    “நிலாவில் நீர் இருப்பதாக நாசா உறுதி செய்திருக்கிறது.  விண்வெளித் தேடலுக்கு வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.”

    மைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)

    “வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ?  நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது.  ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன.  அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C).  அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.”

    டோனி கொலாபிரீட் லகிராஸ் திட்ட விஞ்ஞானி.

    “நிலவில் கண்ட (LCROSS Spacecraft) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.”

    கிரேக் டெலோரி (Greg Delory Senior Fellow Space Sciences Lab & Center)


    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) (ஜனவரி 26, 2008)


    நிலவின் இருதுருவங்களிலும் பனிநீர் ஏரிகள் இருப்பது உறுதியானது

    2010 அக்டோபர் 22 தேதி மலர்ந்த ஆங்கில விஞ்ஞான வெளியீட்டில் (Journal of Science) பதிவாகியுள்ள ஆறு தனித்தனி அறிக்கைகள் நாசாவின் சோதனை விளைவுகளை மீளாய்வு செய்ததில் தென் துருவத்தில் இருக்கும் காபியஸ் ஆழ்குழியில்  (Cabeus Crater) மட்டும் பில்லியன் காலன் அளவு நீர் இருப்பதாக கணித்துள்ளன.  நாசா ரேடார் கருவி மூலம் இப்போது நிலவின் வட துருவ ஆழ்குழிகளிலும் பனிநீர் ஏரிகள் இருப்பதாக உறுதிப் படுத்தியுள்ளது.  ஓராண்டுக்கு முன் (அக்டோபர் 9, 2009) நாசா லகிராஸ் விண்ணுளவி (LCROSS – Lunar Crater Observation & Sensing Satellite) நிலவில் மோத விடப்பட்டு பரிதி ஒளிபுகாத ஆழ்குழிகளில் பனிநீர் ஏரிகளும் மற்ற உலோக மூலக்கூறுகளும் இருப்பது உறுதி செய்யப் பட்டது.  முதல் சோதிப்பில் நாசா, மோதலில் எழுந்த தூசி, துணுக்குகளில் நீரோடு மற்றும் சிறிதளவு ஹைடிரஜன், கார்பன் மானாக்சைடு, அம்மோனியா, மீதேன், மெர்குரி, கந்தகம், வெள்ளி, மெக்னீசியம், சோடியம் ஆகிய உலோகக் கூட்டுகளையும் கண்டுள்ளது.  மோதலில் வெளியேறிய தூசி, துணுக்குகளில் குறிப்பாக பனிநீர் மட்டும் 5.6% பகுதி என்று நாசா அறிவித்துள்ளது.  2009 அக்டோபரில் வெளியான முதல் அறிவிப்பில் நாசா 200 பவுண்டு நீர் வெளியேறியது என்று கூறியது.  இப்போது (2010 அக்டோபர்) வந்த விஞ்ஞான வெளியீட்டில் நாசா துல்லியமாக 341 பவுண்டு என்று தன் அளவை மிகைப் படுத்தியுள்ளது.

    நிலவில் ஓரளவு நீர் இருப்பதாக வந்த முதல் நாசா அறிக்கை இப்போது நிலவில் உறைந்து கிடக்கும் நீர் ஏரிகள் பற்பல இருப்பாதாக மிகைப்படுத்தி, விஞ்ஞான வெளியீட்டில் ஆறு அறிக்கைகள் புதிய தகவலை எழுதியுள்ளன. இந்த அறிவிப்பு நிலவுக்குப் படையெடுக்கும் பல நாடுகளுக்கு (அமெரிக்கா, ரஷ்யா, ஈசா, சைனா, ஜப்பான், இந்தியா) மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்ச்சி.  1960 -1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் அமெரிக்க அபொல்லோ விமானிகளுக்கு விண்கப்பலில் ஒரு பவுண்டு நீர் சுமந்து செல்ல 50,000 டாலர் செலவானது.  இப்போது நீர்ச் சுமக்கும் நிர்ப்பந்தம், பணச் செலவு அதிகமில்லை என்பதாகி விட்டது ! ஹைடிரஜன், ஹீலிய-3 எரிவாயு நிலவில் கிடைப்பதால் விண்கப்பலுக்கு எரிசக்தியும் கிடைக்கிறது.  அதாவது செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டுகளில் செல்லும் உலக நாடுகளுக்கு நிலவு ஓர் ஒப்பற்ற ஓய்வுத் தளமாக இருக்கக் எல்லாத் தகுதியும் பெறுகிறது.  1960 -1970 ஆண்டுகளில் உலவிய அமெரிக்க விமானிகள் சுகத் தளங்களில் மட்டும் ஆய்வு செய்து, வெகு பயன் அளிக்கும் ஆழ்குழிகளை ஆராயத் தவறி விட்டனர் !


    2009 ஆகஸ்டில் நிலவுக்குப் பயணம் செய்த சந்திரயான் -1 இந்திய விண்ணுளவியில் அமைக்கப் பட்ட “சாரா” கருவி (SARA -Sub-keV Atom Reflecting Analyzer) நிலவுத் தளத்தில் மனித வசிப்புக்குத் தேவையான நீரிருப்பதைக் காட்ட வழி வகுத்துள்ளது.

    நிலவின் துருவ ஆழ்குழிகளில் நீர் எப்படி உண்டானது ?

    சமீபத்தில்தான் வானியல் விஞ்ஞானிகள் நிலவில் எப்படி நீர் தோன்றியது என்பதற்கு விளக்கம் அறிவித்துள்ளார்.  சந்திரன் ஒருவித “உறிஞ்சு சேமிப்பியாக” (Sponge) இயங்குகிறது. நிலவின் மேற்தளம் “ரிகோலித்” என்னும் “தூசிப் பரல்கள்” (Dust Grains Called Regolith) தாறுமாறாக மேவிய தளப்பகுதி.  ரிகோலித் பரல்கள் பொதுவாக பரிதியிலிருந்து வெளியேறும் மின்னேற்றத் துகள்களை (Electrically Charged Particles) உறிஞ்சும்.  அந்தத் துகள்கள் ஏற்கனவே நிலவுத் தூசியில் (Dust & Voila) கலந்துள்ள ஆக்சிஜனோடு இணைந்து நீர் உண்டாக்குகின்றன.  தூசிப் பரல்களில் பரிதியின் புரோட்டான்கள் பிடிபட்டு ரிகோலித்தில் உள்ள ஆக்சிஜனோடு இணைத்து ஹைடிராக்சியல் (HO) மற்றும் நீர் (H2O) உருவாகின்றன.
    சந்திரயான் -1 இல் அமைக்கப் பட்ட சாரா கருவி நமது பரிதி மண்டலக் கோள்களைச் சீராக அறிய உதவுகிறது.  பரிதியிலிருந்து வரும் புரோட்டான்கள், விண்வெளியில் திரியும் எலக்டிரான்களுடன் சேர்ந்து ஹைடிரஜன் வாயுவாக மாறுகின்றன.  அதை நிலவின் ரிகோலித் பரல்கள் பிடித்து வைத்துக் கொள்கின்றன.

    நிலவில் இப்படித்தான் ஹைடிரஜன், ஹைடிராக்சியல், நீர் ஆகியவை உருவாகின்றன.  சாரா கருவி மூலம் நிலவின் மேற்தளத்தில் உள்ள மூலகங்களையும், மூலக் கூறுகளையும் நேரிடையாக அறிய முடிகிறது.  சந்திரயான் -1 இல் பணிசெய்த சாரா கருவி அமைப்பில் பன்னாட்டுக் கூட்டுழைப்பு (சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், இந்தியா) உள்ளது.  சமீபத்தில் நாசாவின் சந்திரயான் ரேடார் கருவி நிலவின் வடதுருவக் குழிகளில் குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன் பனிநீர்க் கட்டி இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளது.

    வால்மீன்கள் நிலவில் மோதி நீரைக் கொட்டி இருக்கலாம் என்னும் ஒரு கோட்பாடு இருப்பினும், தற்போது விஞ்ஞானிகள் நிலவின் நீர் “உள்நாட்டுச் சரக்கு” தவிர புற அண்டப் பொழிவில்லை என்று ஊகிக்கிறார்.  வானியல் ஆய்வாளி டாக்டர் யாங் லியூ இதைத்தான் மேலும் வலியுறுத்துகிறார் : “வால்மீன் போன்ற பிற அண்டங்கள் நீரை வாரி நிலவில் இறைத்திருந்தால் இப்போது காணப்படும் நிலவின் நீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எளிதில் ஆவியாகாத மூலகங்கள் (Less Volatile Elements) ஏன் மிகவும் சுருங்கிப் (Strongly Depleted) போயிருக்க வேண்டும் ?” என்று கேட்கிறார்.

    காபியஸ் போன்ற நிரந்தரமாய் பரிதி ஒளி பாயாத ஆழ்குழிகளின் உஷ்ணம் – 387  F (-233 C).  இந்தக் கடுங்குளிரில் நீர் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேர்ந்து திண்ணிய பனிப்பாறையாகப் படிந்துள்ளது.  சூரிய மண்டலத்தில் நிலவின் ஒளிமறைவுக் குழிகள் கடுங்குளிர்ப் பகுதிகளாக மாறிவிட்டன !  இந்தப் படுபாதாளக் பனிப் பாறைகளை இருட்டில் உருக்கி நீரை மேலேற்றிக் கொண்டு வருவது 21 நூற்றாண்டின் பெரும் சவாலான அசுர சாதனையாக இருக்கும் !

    வெண்ணிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியது

    2009 நவம்பர் 13 ஆம் தேதி நிலவின் நிரந்தர நிழல் ஆழ்குழிகளில் (Shadow Craters) கணிச அளவு நீர் இருப்பதை சமீபத்தில் நாசா ஏவிய லகிராஸ் விண்ணுளவியை (LCROSS Spaceship – Lunar Crater Observation & Sensing Satellite) வெகு வேகமாக மோத விட்டு முதன்முதல் உறுதிப்படுத்தியது.  லகிராஸ் விண்ணுளவி தெரிந்த பூமி நீரின் நெருங்கிய உட்சிவப்பு ஒளி முத்திரையை (Known Near-Infrared Light Signature of Water) கைவசம் வைத்துக் கொண்டு மோதிய சிதறலில் வெளியேறிய ஒளிப்பட்டைப் பதிவை ஒப்புநோக்கித் தெளிவாக நீரிருப்பதை நிரூபித்தது.  உட்சிவப்பு ஒளிப்பட்டைமானி (Infrared Spectrometer) வெளியே சிதறிய துகள்கள் உமிழும் அல்லது விழுங்கும் ஒளியலைகளின் நீளங்களை உளவிக் கனிமங்களில் உள்ள உட்பொருட்களை (Composition of Materials) ஆராய்ந்தது.

    அத்துடன் இரண்டாவது சோதனை உளவாக லகிராஸின் புறவூதா ஒளிப்பட்டை மானி (LCROSS Ultraviolet Spectrometer) பரிதி ஒளி நீரைப் பிரித்து விளைவிக்கும் ஹைடிராக்சியல் அயனிகளின் சக்தி முத்திரையை (Energy Signature of OH Ions) அளந்து மேலும் நீர் இருப்பை உறுதிப் படுத்தியது.  லகிராஸ் ஏவுகணை நிலவைத் தாக்கி வெளியேறிய நீர் மயம் சுமார் 24 காலன் (7.6 லிட்டர்) என்று கணிக்கப் படுகிறது.  நிலவு மோதல் சோதனையை நடத்த நாசா முன்பே தேர்ந்தெடுத்த இருட்பள்ளம் தென் துருவத்தில் உள்ள “காபியஸ் -ஏ” (Shadow Crater Cabeus -A).  25 மைல் (40 கி.மீடர்) அகண்ட இந்தக் குழி சூரிய வெளிச்சம் படாத ஒரு பள்ளம். இதில் படிந்துள்ள பனிநீர்ப் படிவு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.

    இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து செய்த நிலவுச் சோதனை

    2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன.  அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !  முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது !  அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

    அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment).  நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பியுள்ளன.  இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் !  மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும்.  இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும்.  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓர் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !

    நிலவில் பனிநீர்க் கண்டுபிடிப்பில் எதிர்காலப் பிரச்சனைகள்

    நாசா லாகிராஸ் விண்ணுளவியை அனுப்பி நிலவில் மோதவிட்டு நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதிப் படுத்தியது ஒரு முதற்படி வெற்றியே !  அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களைத் தற்போது அமைக்க வேண்டும்.  இப்போது விஞ்ஞானிகளுக்கு எழும் வினாக்கள் இவை :  பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற்குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று ஆராய்வது முதல் கேள்வி !  அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது கேள்வி !  அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத்துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி !  அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன.  அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரியசக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவை யாவும் உலக நாடுகள் செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகளாக இருக்கும் !  இதற்கு அமெரிக்க அரசாங்கம் இப்போது போதிய நிதித் தொகை ஒதுக்குமா என்பது விடை அறிய முடியாத வினா !

    தகவல்:

    Picture Credits : NASA & ESA The Hindu, ISRO & other Science Websites

    1. Indian Space Program By: Wikipedia

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

    3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

    4. Times Now  India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

    5. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

    6 Cosmos Magazine  The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

    7.  Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

    8.  Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

    9  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

    10. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

    11 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

    12 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

    13 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

    14 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

    15 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

    16. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

    17 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO-NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

    18 ESA Moon Water Report – Hydrogen Offers a New Way to Study the Moon & The Moon Seen By Chandrayaan -1 (Oct 16, 2009)

    19. National Geographic News – Moon Crash, New Maps to Aid Search for Lunar Water By : Anne Minard (June 17, 2009)

    20.  Space Flight Now : NASA’s Smashing Way of Answering a Watery Question (June 17, 2009)

    21. National Geographic News – Moon Crash to Put All Eyes on the Crater Cabeus A (Sep 11, 2009)

    22  Water Found on the Moon By : Andrea Thompson (Sep 23, 2009)

    23. Scientific American :  LCROSS Impact Plumes Containing Moon Water By : John Matson (Nov 13, 2009)

    24 LCROSS Impact Data Indicates Water on the Moon By : Jonas Dina NASA Ames Research Center (Nov 11, 2009)

    25.  National Geographic News – Water on the Moon Confirmed By NASA Crashes By : Ker Than (November 13. 2009)

    26.  International – NASA Finds Water on the Moon (Nov 14, 2009)

    27 Daily Galaxy : Moon Water : Will Lunar-Base Humans be Able to Drink it ? (Nov 14, 2009)

    28 Wired Science : Lunar Impacter Finds Clear Evidence of Water Ice on the Moon (Nov 17, 2009)

    29 https://jayabarathan.wordpress.com/2009/08/27/chandrayaan-1-and-nasa-lro-find-ice/ (இந்தியாவும் நாசாவும் நிலவின் துருவப் பகுதியில் நீர்க்கட்டி கண்டுபிடிப்பு) (ஆகஸ்டு 27, 2009)

    30. ESA News – Hydrogen Offers a New Way to Study the Moon, Detlef Koschny, ESA Chandrayaan -1 Project Scientist (October 16, 2009)

    31 Space.com – Moon Craters Could Be Coldest Place in Solar System By Andrea Thompson (September 18, 2010)

    32. Daily Mail – Scientists Find Even More Evidence of Water on the Moon (July 22, 2010)

    33. Space.com – Tons of Water Ice Found on Moon’s North Pole By Tarq Malik (March 1, 2010)

    34. Space.com – Moon Crater Has More Water than Parts of Earth By Mike Wall (October 21. 2010)

    35. Daily Galaxy – Craters of the Moon – Huge Reservoirs Discovered By Casey Kazan & Rebecca Sato (October 25, 2010)

    36. http://www.sciencedaily.com/releases/2013/05/130509142054.htm  [May 9, 2013]

    37. http://www.smithsonianmag.com/science-nature/the-water-on-the-moon-probably-came-from-earth-56638271/?no-ist  [May 9, 2013]

    38  http://www.space.com/22553-moon-water-mystery-source.html   [August 27, 2013]

    39.  http://www.space.com/25305-water-moon-earth-common-origin.html  [April 1, 2014]

    40.  http://www.space.com/27377-moon-water-origin-solar-wind.html  [October 8, 2014]

    41. http://www.moondaily.com/reports/NASAs_LRO_Discovers_Lunar_Hydrogen_More_Abundant_on_Moons_Pole_Facing_Slopes_999.html  [February 5, 2015]

    42. http://www.dailygalaxy.com/my_weblog/2015/02/new-water-sources-observed-on-the-moon-could-facilitate-future-manned-bases.html  [February 5, 2015]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (February 8, 2015)

    Attachments area
    Preview YouTube video New discovery Moon could have as much water by volume as Earth

    New discovery Moon could have as much water by volume as Earth

    Preview YouTube video Nasa Found Water on Moon Rachel Maddow

    Nasa Found Water on Moon Rachel Maddow

    Preview YouTube video India Moon Mission Chandrayaan – 1 ISRO official Documentary 1/3

    India Moon Mission Chandrayaan – 1 ISRO official Documentary 1/3

    Preview YouTube video India’s own probe found water on moon

    India’s own probe found water on moon
    Share
  • காதல் நாற்பது – 32 நேசிப்பதாய் உறுதி அளித்தாய்

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’   

    image

    நேசிப்பதாய் நீ எனக்கு

    உறுதி சொல்லிச் சூரியன்

    முதல் நாள்

    உதய மான போது

    நிலவின் வருகைக்கு நான்

    காத்திருந்தேன் !

    சீக்கிரம் உறுவு பூண்டு

    நிரந்தரம்

    ஆக்கவரும் பந்தங்களை எல்லாம்

    நீக்க வேண்டும் !

    துரிதமாய்க் காதல் புரியும்

    இதயங்கள்

    வெறுப்பைக் காட்டும் விரைவில் !

    அவ்வித மனிதக் காதலை

    விரும்பிலேன்

    என் நலத்தைக் கருதி !

    இசைப் பண் முரணாக

    எழும்பும்

    தேய்ந்த வயோலின் நான் !

    சிறந்த பாடகர்  அதன் மீது

    சினம் கொள்வார்,

    தனது பாடல் நாசமாகு மென்று !

    அவசரமாய் ஆக்கும்

    தாளம்

    தப்பிய சுதிப் பாடல்

    தள்ளப்படும் கீழே !

    எனது தவறெனத் தோன்றாது

    உனக்குத்தான்

    ஒரு தவறிழைத்தேன் !

    முறிந்த பண்ணிசைக் கருவியிலும்

    முழுமை யான கானம்

    எழுப்பும்

    வல்லவர் கரங்கள் !

    மேலும்

    உன்னத ஆத்மாக்கள்

    பேராவலோ டதைப் புரிந்திடலாம்

    ஓரடியிலே !

    ************

    Poem -32

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

     

    The first time that the sun rose on thine oath

    To love me, I looked forward to the moon

    To slacken all those bonds which seemed too soon

    And quickly tied to make a lasting troth.

    Quick-loving hearts, I thought, may quickly loathe;

    And, looking on myself, I seemed not one

    For such man’s love!–more like an out-of-tune

    Worn viol, a good singer would be wroth

    To spoil his song with, and which, snatched in haste,

    Is laid down at the first ill-sounding note.

    I did not wrong myself so, but I placed

    A wrong on thee. For perfect strains may float

    ‘Neath master-hands, from instruments defaced,–

    And great souls, at one stroke, may do and dote.

    Share