இந்த வார வல்லமையாளர்!
பிப்ரவரி 9, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு முனைவர் சி.சேதுராமன் அவர்கள்
வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக, வல்லமைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாராட்டப்படுபவர் புதுக்கோட்டை -மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை தலைவரான முனைவர் சி.சேதுராமன் அவர்கள். சென்ற வெள்ளியன்று வல்லமை இதழில் இவர் வெளியிட்ட “கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு” என்ற ஒப்பாய்வுக் கட்டுரையின் சிறப்பு கண்டு இவரை வல்லமையாளர் என்று பாராட்டி மகிழ்ச்சி அடைகிறோம்.
இணையத்தமிழ் இதழ்களின் வாசகர்களுக்கு முனைவர் சி.சேதுராமன் அவர்கள் நன்கு அறிமுகமானவர். வல்லமை, திண்ணை, தமிழ்முரசு, முத்துக்கமலம் ஆகிய இதழ்களில் தொடர்ந்து பல கதை, கவிதை, நூல்மதிப்புரை போன்றவற்றை எழுதி வருகிறார். குறிப்பாக, தமிழ் இலக்கியக் கட்டுரைகளை அதிகம் எழுதி வருபவர் முனைவர் சி.சேதுராமன் (இவரது பிற படைப்புகளின் பட்டியலை இத்தளத்தில் காணலாம்).
“கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு” ஒப்பாய்வுக் கட்டுரையில், உரையாசிரியர்களால் அதிகளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையதும்… தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்டதும்… பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகள் பெருமளவில் இடம் பெற்றதால் குடிமக்கள் காப்பியம் என்ற சிறப்பு கொண்ட சிலப்பதிகாரம், காலங்கள் பல கடந்தாலும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான இடத்தை வகிப்பதை கட்டுரை ஆசிரியர் பாராட்டிச் செல்கிறார். சிலம்பின் தாக்கத்தின் விளைவாக பிற்காலத்தில், சிலம்பை ஒட்டி தோன்றிய, புகழ்பெற்ற புலவர் புகழேந்தியாரின் ’பெயரில்’ “பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ்” பதிப்பகதாரால் வெளியிடப்பட்ட “பெரிய எழுத்து கோவலன் கதை” என்ற நாடக நூலை சிலம்புடன் ஒப்பிட்டு ஆராய்கிறார். ஒப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெரிய எழுத்து கோவலன் கதை நாட்டுப்புற உடுக்கடிக் கதைப்பாடல் அமைப்பில் இயற்றப்பட்ட நூலாகும்.
ஆய்வுக்கட்டுரையில் இவ்விரு நூலிலும் வேறுபட்டுள்ள கடவுளர்களின் துதி துவக்கம் பற்றி விளக்குகிறார். மங்கல வாழ்த்துப் பாடலில் கோவலன் கண்ணகி திருமண நிகழ்விலிருந்து சிலப்பதிகாரத்தின் கதையானது தொடங்குவதும், ஆனால் அது போலன்றி கோவலன் கதை நூலானது கண்ணகி, கோவலன், மாதவி, வசந்தமாலை உள்ளிட்டோரின் முற்பிறப்பு வரலாற்றைக் கூறுவதிலிருந்து தொடங்கும் வேறுபாடுகளை ஒப்பிடுகிறார். அத்துடன் இரு நூல்களிலும் கதை மாந்தர்க்களை அறிமுகப்படுத்தும் முறையையும் ஒப்பிடுகிறார்.
சிலம்பில் கண்ணகி தெய்வமான பின்பே கதை நிறைவுறும் முறையையும், ஆனால் கோவலன் கதையின் தொடக்கத்தில் இருந்தே கண்ணகி காளிதேவியாகவே காட்டப்படும் வேற்றுமையை சுட்டுகிறார். பரத்தையரை நாடினால் எவ்வாறெல்லாம் துன்புற நேரிடும் என்பதை மாதகி வசந்தமாலை ஆகியோரின் வழி வலியுறுத்துவது புகழேந்தியாரின் முக்கியமான நோக்கமாக அமைந்ததையும், சிலம்பில் இடம்பெறாது கோவலன் கதையில் மட்டுமே அமைந்துள்ள பல காட்சிகளையும் அறியத் தருகிறார்.
அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே கூற்றுவன், பெருமை மிக்க பத்தினியைப் பெரியோர் தொழுவார், ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும் என்ற மூன்று நீதிகளை வலியுறுத்த இயற்றப்பட்ட சிலம்பின் நீதிகளை கோவலன் கதை எவ்வாறு கையாள்கிறது என்று ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர். சிலம்பின் நீதிகளுள் ஒன்றான “ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்” என்பது அதன் பின்வந்த அனைத்து இலக்கியங்களிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைச் சுட்டிக்காட்டி, “பெரிய எழுத்து கோவலன் கதை”யிலும் ஊழ்வினை கோட்பாடு முக்கியத்துவம் வகிப்பதைக் காட்டுகிறார். பின்னால் நடக்கப் போவதை முன்னரே கூறுதல், அரசியல் பிழைத்தவரை அறம் அழிக்கும் என்பது போன்ற நிகழ்வுகளை இரு நூல்களிலும் ஒப்பிட்டு விளக்குவது இலக்கியச் சுவை மிகுந்த வகையில் அமைந்துள்ளது.
இலக்கிய நயம் பாராட்டும் பல கட்டுரைகளை வல்லமை வாசகர்களுக்கு மேலும் இவர் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், சிறந்த கட்டுரையைத் தந்தமைக்குப் பாராட்டி, வல்லமையாளர் முனைவர் சி.சேதுராமன் அவர்களை வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
தொடர்புக்கு:
மின்னஞ்சல்: malar.sethu@gmail.com
முனைவர் சி.சேதுராமன்,
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை.
தரவுகள் தந்துதவிய தளங்கள்:
Dr. S. Sethuraman of Tamil Department of H. H. Rajahs College, Pudukkottai –
http://www.hhrajahs.com/mech.html#11
http://www.muthukamalam.com/writer/sethuramandr.html
http://munaivaramani.blogspot.com/2014/03/300114.html
குறிப்பு:
பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகதாரால் வெளியிடப்பட்ட “பெரிய எழுத்து கோவலன் கதை” என்ற நாடக நூலினைப் படிக்க விரும்புபவர், தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் இருந்து அதனை தரவிறக்கிக் கொள்ளலாம் – http://www.tamilheritage.org/old/text/ebook/kovalan/index.html.
உள்ளமெலாம் உந்தும் தமிழ் உயர்வடையும் என்பதற்கு
மன்னர்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சாட்சியாகிறார்!
ஒப்புமை இலக்கியத்திற்கு உதாரணமாய்த் திகழ்கின்ற
நற்றமிழ் நாவலர் முனைவர் சேதுராமன் வாழ்க! வாழ்கவே!
அற்புதத் திறத்தினால் அருந்தமிழ் வளர்த்திடும்…
அன்பரைப் போற்றியே வல்லமையாளர் விருது வழங்கிடும்
உள்ளங்கள் அனைத்தையும் ஒருசேர வாழ்த்துகிறேன்!
அன்புடன்..
காவிரிமைந்தன்