Blog

  • குறளின் கதிர்களாய்…(3)


      செண்பக ஜெகதீசன்

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்        தம்மை

    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

          -திருக்குறள் -151(பொறையுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    தோண்டினாலும் நிலம்

    துன்பப்படுவதில்லை, தாங்கிக்கொள்ளும்..

     

    பாடம் இது உனக்கு

    படித்து உயர,

    மனிதா

    பொறுத்துக்கொள் உன்னை

    வெறுத்து இகழ்வோரையும்…!

     

    குறும்பாவில்…

     

    பூமியாயிரு பொறுமையில்,

    மனிதா உன்னை

    இகழ்பவரையும் மறந்து…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வெட்டியும் குத்தியும் அகழ்ந்தாலும்

    வேலி போட்டே அடைத்தாலும்,

    கெட்ட செயலே செய்தாலும்

    கோபம் ஏதும் கொள்ளாமல்,

    சுட்டிப் பிள்ளையின் தாயவள்போல்

    சுமந்து காப்பாள் நிலமகள்தான்,

    திட்டும் மாந்தர் இகழ்ச்சியையும்

    தாங்கியே உயர்வாய் அதுபோலே…!

     

    புதுப்பாவில்…

     

    தீண்டப்படுகிறது

    தோண்டப்படுகிறது

    நிலமகளின் மேனி..

     

    பொறுமையின் உருவம் அவள்-

    போகட்டும் என்று

    பெருந்தன்மையில் தாங்கிக்கொள்கிறாள்..

     

    இந்த குணம்தான் வேண்டும்

    மனிதா

    இகழ்ந்தாலும் பிறர் உன்னை-

    இதுதான் முதல் படி உயர்வுக்கே…!

     

    கிராமிய பாணியில்…

     

    மலயத் தாங்கிடும்

    மரத்தத் தாங்கிடும் பூமியம்மா- ஒன்

    மனத்தப் பாத்தா சாமியம்மா..

     

    தோண்டிஒன்ன எடுத்தாலும்

    தொல்ல யெல்லாந் தந்தாலும்- அத

    எல்லாம் பொறுத்திடுந் தாயம்மா

    எங்களத் தாங்கிடும் நீயம்மா..

     

    அடுத்தவன் ஒன்ன வெறுத்தாலும்

    ஆங்காரத்தில் பழிச்சாலும்- அத

    எல்லாம் பொறுத்திரு நெலம்போல

    நல்லா வாழலாம் மனம்போல…!

     படத்துக்கு நன்றி

     http://www.ebibleteacher.com/node/323  

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 74

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
    இளவேனிலின் வருகை
    திருவேங்கடப் பெருமாள் எழுந்தருளிய
    வேங்கடமலையை வடக்கேயும்
    குமரிக் கடலைத் தெற்கேயும்
    எல்லையெனக் கொண்டது தமிழ்நாடு.

    மாடமாளிகைகள் நிறைந்த ஊரானது மதுரை;
    பெருமையில் சிறந்த ஊரானது உறையூர்;
    ஆரவாரம் நிறைந்த நகரானது வஞ்சி;
    ஒலிக்கின்ற கடலும் காவிரியும் உடையது புகார்.

    இந்நான்கு நகரங்களிலும் ஆட்சி செய்தனன்
    புகழும் சிறப்புமுடைய மன்மதராசன்.
    அவனுக்குத் துணையெனவே
    வந்துவிட்டனன் இளவேனில் என்பவனும்.
    இச்செய்தியை குயிலோனுக்குத் தூது கூறினன்
    வளத்தில் சிறந்த பொதிகை மலையில்
    அகத்தியர் பெற்றெடுத்த தென்றல் என்பவன்.

    ஆதலின்,
    “மீன்கொடி மைந்தன்
    மன்மதனின் படையிலுள்ள
    மகளிர் அனைவரும்
    நல் அலங்காரங்கள் செய்திடுங்கள்”
    என்றேதான் சொல்லும் வண்ணம்
    தென்றல் தூதுவன் இட்ட கட்டளையதனை
    பூங்கொடிகள் நிறைந்த
    சோலைப் பாசறையிலிருந்து
    கொம்பு ஊதும் குயிலோன்
    அறிவித்தனன் கூவியே.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 14
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:
    http://www.indiamart.com/forum-art-gallery/abstract-paintings.html

    Share
  • மதுரையம்பதியில் கால்மாற்றி ஆடும் நடராஜப் பெருமான்

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

    பாண்டிய மன்னனுக்காக, மதுரையம்பதியில் கால்மாற்றி, வலதுகால் தூக்கி ஆடும்

    நடராஜப் பெருமான்

    பார்க்க, படிக்க, ரசிக்க….

    ஆலவாய் அழகா, ஈசா!

    ஆடலுக் கரசே!கையில்

    சூலமும் தழலும் ஏந்தும்

    சுந்தரா!அகிலம் வாழ

    ஆலமுண் டமர்ந்த தேவா!

    அடியவர் உயிரைக் காத்துக்

    காலனைக் கடிந்தாய் அன்று!

    கழலிணை பணிந்தேன் இன்று!

    வானுயர்   மதில்கள் சூழும்

    மதுரையின் வேந்தே!கையில்

    மானொடு மழுவும் தாங்கி

    மன்றினில் ஆடும் ஈசா!

    மீன்விழி  மங்கை நேசா!

    ம்ருத்யுவை உதைத்த பாதா!

    நானுனை வேண்டிக் கொள்வேன்

    நலமெலாம் பொழிந்து காப்பாய்

    அமரரும் அஞ்சும் நேரம்

    அஞ்சலென் றபயம் தந்தோய்!

    டமருகம் கையில் தாங்கித்

    தாண்டவம் ஆடும் தேவா!

    நமனணு  காமல் அன்று

    நம்பியைக் காத்தாய்! மீனாள்

    உமையொரு பாகா, காப்பாய்!

    உனதடி சரணம் ஐயா!

    வைகையின் அலைகள் சூழும்

    வளமிகு மதுரை ஆளும்

    மைவிழி மீனாள் மேவும்

    மன்னனே, சொக்க நாதா!

    கையினால் பாசம் வீசும்

    காலனிங் கணுகா  வண்ணம்

    செய்கைகள் ஓயும் போது

    சடுதியில் காப்பாய் அப்பா!

    வலதுகால் தூக்கி ஆடும்

    வண்ணமே! வார்சடைமேல்

    நிலவொடு கங்கை பொங்க

    நிர்த்தனம் செய்யும் தேவா!

    புலனெலாம் ஒடுங்கும் நேரம்

    புகல் எமக் காரும் இல்லை!

    நலம் காக்க வேண்டும் உனையே

    நம்பினோம் அம்மையப்பா!!

     

    Share
  • இன்னும் மாயை இருக்கிறது

     

    -சு.ரவி

     

    இன்னும் மாயை இருக்கிறது- அது

    என்னில் என்னை மறைக்கிறது!

    மின்னல் கீற்றாய் மெய்யுணர்(வு) அந்தோ!

    எப்பொழுதாகிலும் ஸ்புரிக்கிறது.                           ( இன்னும்)

     

    புலன் உணர்வெல்லாம் பொய்மைஎன்றே ஒரு

    பொறிபறந்தாற்போல் புரிகிறது;

    நிலத்தில் இவ்வாழ்வும் நிலைகிடையாதெனும்

    நிச்சய உண்மை தெரிகிறது- மனம்

    சிலபோதேனோ இனிப்பை அவாவும்

    சிறுமதலை போல் அலைகிறது-உடல்

    பலமிழந்தோய்ந்தால் பயந்து நடுங்கிப்

    பரிதவித்தேங்கிக் குலைகிறது!                            ( இன்னும்)

     

    ‘மனநிறை(வு) என்பதோர் மாரீசம் – அது

    மயக்கி இழுத்துனைச் செயும் மோசம்

    இனம் குலம் என்பவை வெளிவேஷம் “- என

    இன்னும் பலப்பல கதை பேசும்= உடன்

    தனயன், தாய், மனை இவர் முகம் பார்த்திடில்

    தயங்கும், தடுக்கும், தவறி விழும்!

    கனவும் நனவும் கடந்த பின்னாலும்

    கணப்பொழுதாசையில் கவிழ்ந்து விடும்!  ( இன்னும்)

     

    விண்ணியல் கண்டு தெளிந்தாலும்- மறை

    ஓதிய பண்டிதன் ஆனாலும்

    எண்ணிய மட்டினில் ‘யான்’ ,‘என(து)’ எனும் இவை

    எங்கோ பாதலம் ஆழ்த்திவிடும்

    திண்ணிய நெஞ்சுரம் வைராக்யம் இவை

    திரும்பவும் இடிந்து பொடியாகும்

    நுண்ணிய நூலிழைதான் பாசம்- அது

    நோற்ற தவங்களை விலைபேசும்            ( இன்னும்)

     

     

    ஓட்டம் இதற்கோர் இலக்கில்லை

    ஓடாதிருக்க விலக்கில்லை

    ஓட்டுவ தாரோ, ஓடுவ தேனோ

    ஓடும் எவர்க்கும் தெரிவதில்லை

    ஓட்டம் முடிந்தபின் ஓடு கழன்றால்

    ஓய்வுண்டோ எனில் அதுவுமிலை

    ஓட்டத்தின் ஊடே ஓராயிரம் தடை!

    ஓட்டத்தில் நாட்டம் குறையவில்லை    ( இன்னும்)

     

    Share
  • என் கதைமாந்தர்கள்…

     

    -கீதா மதிவாணன்

     

    காத்திருந்து காத்திருந்து

    களைத்துப்போயிருக்கலாம்

    என் கதைமாந்தர்கள்!

    ஆட்டுவிக்கும் கர்வத்தில் நான்!

    அலைக்கழிக்கப்படும் கலவரத்தில் அவர்கள்!

    விதியை மாற்றுவதும் வீணே இழுத்தடிப்பதும்

    இன்னாருடன் இன்னாருக்கு

    இணக்கமா பிணக்கா என்பதை

    இடைக்கிடை நிர்ணயிப்பதும்

    நிர்ணயித்ததை நிராகரிப்பதும்

    இடைச்செருகல்களாய்…

    இன்னுஞ்சிலரை இணைப்பதும்,

    இணைந்தோரை வலிந்து பிரிப்பதுமாய்

    ஒரு பொம்மை விளையாட்டுப்போல்தான்

    ஆரம்பித்தது அது…

    துல்லியமாய் கணக்கிடவியலா

    துளிப்பொழுதொன்றில்

    நானும் அங்கோர் அங்கமாகிவிட

    நகரமறுக்கிறது கதைக்களம்!

    அம்மாந்தரோடு நாளெல்லாம்

    செம்மாந்து திரியும் எனக்கு

    நாட்பட நாட்பட…

    புற உலகம் என்பது

    புளித்துதான் போய்விட்டது!

     

    படத்துக்கு நன்றி: http://completejoy.files.wordpress.com/2012/12/people-in-shadow.jpg

     

    Share
  • வார ராசி பலன்!….03-06-13 – 09-06-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்:  மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும், திறமையையும் வீணடிக்காததிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில்வெற்றி பெற,உங்களின் அனுபவ அறிவு கை கொடுக்கும். முக்கியமான பொறுப்புக்களை கையாள்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வது சிறந்தது. வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய நேரிடும். பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத் தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில் பணி புரிவோர் இரும்பு உபகர ணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம்

    ரிஷபம்: .நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள் நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம். இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில் இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும் வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும். பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை, தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

    கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும். அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய் முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களை கண்காணிப்பது அவசியம். இது வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில் அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

    சிம்மம்: உயரதிகாரிகள் காட்டும் ஆதரவு புதிய உற்சாகத்தை அளிப்பதோடு, உங்களின் ஆர்வத்திற்கு உரிய வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் படிப்புக்கு முக்கியத்துவம் தந்தால், பாடங்கள் கரும்பாய் இனிக்கும். பொது வாழ்வில் இருப்போர் ஆவேசமான பேச்சு, மற்றும் செயல் பாடு இரண்டும் எல்லா நேரங்களிலும் விரும்பிய பலனைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். வேலையில் இருக்கும் பெண்கள் சில மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து, தங்களின் திறமையைத் தக்க வைத்துக் கொள்வர். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருந்து வந்தால், மன அமைதி குறையாமலிருக்கும்.

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள். இல்லறம் நல்லறமாய் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம் கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே செலவுப் பட்டியலை குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் , சிரமங்களுக்கிடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை
    முழுமையாய் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

    துலாம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால்,வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன் செயல்படலாம்.

    விருச்சிகம்: பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம் செலுத்தி வந்தால், இல்லப் பணிகள் தடையின்றி தொடரும். மாணவர்கள் சோர்வை விரட்டியடி க்கும் சத்தான பானங்களை குடித்து வந்தால், சிந்தனை வளம் மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதை தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துக்களை இதமான முறையில் எடுத்துச் சொன்னால்,அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.

    தனுசு:குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிரச்னைகள் சுமுகமாக முடியும். வெளி இடங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களை தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள் கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும் உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்துவிடவும்.

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன் வருவார்கள். பங்குச்சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும் கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப உறவுகள் சுமூகமாக இருக்கும்.வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகளை கவனமாக சரிசெய்தால், அபராதம் செலுத்தவதை தவிர்த்துவிடலாம். வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது.
    பொறுப்புக்களில் உள்ளவர்கள் கோப்பு களை நன்கு படித்தபின், கையெழுத்திடுவது அவசியம்.

    கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல்சம்பந்தமான உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்வை பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து விடுங்கள். கலைஞர்கள் விழா விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழு பொறுப்பை அளிக்காமல், உங்கள் கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.பணியில் இருப்போர் வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும் வாய்ப்பு உங்களை நாடி வரும்.

    மீனம்:நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை தவிர்த்தால், நட்பு கெடாமல் இருக்கும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற வேண்டி யிருக்காது. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன் அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சிலருக்கு புதிய மனை மற்றும் இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். அலுவலக விழா விருந்து ஆகியவற்றிற்கு கணிசமான பணம் செலவழியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களை நண்பர்கள் இனிமையாய் மாற்றிடு வார்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும்.

    Share
  • அரசியல் கொக்குகள்

     

    -வே.ம.அருச்சுணன் – மலேசியா

    அழகிய நாடு
    அற்புத வளங்கள்
    கல்வி குறைவென்றாலும்
    அறிவான மக்கள்
    பேதம் அறியா
    அன்பு தெய்வங்கள்
    மாறா குணங்கள்
    அமைதியான வாழ்க்கை
    பொது நலம்
    கடந்து நூற்றாண்டில்……!

    புதிய மனிதர்கள்
    விநோத சிந்தனைகள்
    சுய கௌரவம்
    பொது வாழ்வில்
    சுரங்கம் அமைத்து
    நாட்டை மறந்து
    வீட்டை வளர்க்க
    சித்து விளையாட்டு
    சுயநலம்
    இந்த நூற்றாண்டில்……!
    மகாத்மாக்கள்
    சென்ற நூற்றாண்டு முதலே
    பயணித்துவிட்டார்கள்……!

    இன்று,
    அரசியல் வானில்
    அநீதிகளுக்கு மகுடம்
    அறப்போர்
    ஓரமாய் ஒதுங்கிக் கொண்டது
    அடாவடிகள்
    தலையெடுப்பால்
    நதிகள் நாசமாயின
    நீர்வாழ் அழிந்தன…….!

    பொய்யான
    அரசியல் சுனாமியால்
    மக்கள் சிரச்சேதம்
    கூடி வாழ்ந்த மூவினம்
    மண்ணாகியது
    வம்பும் வழக்கும்
    தொடராகின…..!

    நாட்டின் அமைதி
    அவர்கள் விரும்பாதது
    கலங்கி குட்டையில்
    மீன் பிடிக்கும்
    அரசியல் கொக்குகள்……!
    மக்களை
    மாக்களாக்கும்
    அரசியலாரிடம் எச்சரிக்கை
    துஸ்டனைக் கண்டால் தூரவிலகு
    பெரியோர் சொன்னது தப்பாகா……!

    நாட்டு நலம்
    முன்னெடுத்து
    சபதம் எடுத்திடு
    மக்கள்
    அரசியலாரிடமிருந்து
    நாட்டைக் காக்திடு……!

    நாடு
    இடுகாடாய் மாறு முன்னே
    சுதந்திரத்தைக் காத்திடு
    சிம்மாசனத்தில் அமர்ந்து
    எக்காளமிடும் அரசியலார்
    திமிரினை அடியோடு
    வீழ்த்திடுவீர்……!

    நாட்டைக் காக்கும்
    வீரத்திருமகனே
    நாளைய பொழுது
    நலமாய் இருக்கட்டும்
    வெற்றிமுரசு வேகமாய் ஒலிக்கட்டும்………!

    Share
  • குருவி கத்துகிறதா…சிக்கட்டி பாடுகிறதா

    எஸ்.வி.வேணுகோபாலன்

    பேரன்பின் அ முத்துலிங்கம் அவர்களுக்கு

    தீராநதி மே இதழை நேற்று தான் வாங்கினேன்…(அது நேற்றுதான் வந்திருக்கும் என்று கருதுகிறேன்…வியாழன் அன்று எங்களது பள்ளிக்கூட நிகழ்வு ஒன்றுக்காக பட்டுக்கோட்டை சென்றிருந்தேன்)…

    இது தான் நாள் என்ற தலைப்பில் உங்களது கதை காத்திருந்தது, 18ம் பக்கத்தில்…

    புலம் பெயர் வாழ்க்கையின் நிச்சயமற்ற தருணங்கள், எல்லை கடத்தலின் எல்லையற்ற அபாயங்கள், உயிரைக் கையில் பிடித்தபடி அலைவுறும் நேரங்கள்….இவற்றின் மற்றுமொரு அழுத்தமிக்க பதிவாக இந்தக் கதை…

    இந்த உலகு யாருக்காக இயங்குகிறது…யாருக்கானது என்ற கேள்விகள் எனக்குள் அடிக்கடி நிகழும்…. எஜமானர்கள், அடியாட்கள், அரசுகள், அதிகாரிகள், விதிமுறைகள், தண்டனைகள்…என்று பொருத்துக அட்டவணையில் இடம்பெற வேண்டிய ஜோடி ஜோடியான வன்முறை சொற்கள் எவ்விதம் மனித வாழ்விற்குள் நுழைந்தது….

    தூக்கு மேடை குறிப்புகள் (ஜூலியஸ் பூசிக்) என்ற மகத்தான உண்மைக் கதையில், நாசிச சித்திரவதைக்கு உள்ளாகும் போது அவர் தமக்குத் தாமே சொல்லிக் கொள்ளும் இடம் ஒன்று வரும்: என்னை என் இத்தனை வலுவுள்ளவனாகப் பெற்றீர்….? மானசீகமாகத் தனது பெற்றோரிடம் முன் வைக்கப்படும் இந்தக் கேள்வி, முடிவற்ற துயரத் தாக்குதலை எதிர்கொள்ளும் அரசியல் உரம் பெற்ற கம்யூனிஸ்ட் ஒருவரது உளத் திண்மையை சோதிக்கும் உச்சகட்ட தாக்குதலின் போது அவரது வெளிப்பாட்டு மொழியாக வெளிவரும்…

    சம காலத்தில், இலங்கைத் தமிழர் சொந்த மண்ணிலும், வெளி தேசங்களிலும் படும் இன்னல், இழிவு, அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை விவரிப்புக்கு அப்பாற்பட்டது…

    இது தான் நான் கதை, இந்த வேதனையின் பாடுகளை, இத்தனை இடர்மிகுந்த சூழலிலும் பரஸ்பரம் துளிர்க்கும் கரிசனத்தை, அடுத்தவர்க்காக உதிர்க்கப்படும் கண்ணீர்த் துளிகளை, அடிப்படை மனித நேயத்தை எந்த மிகையுமற்ற குரலில் பேசுகிறது…வெடி மருந்துகளின் வேதியல் நெடிக்கிடையே நம்பிக்கையை மூச்சுத் திணராது பொத்திக் காப்பது இத்தகைய உணர்வுகளன்றி வேறென்ன…

    கதையில் வரும் சந்திரா மாமி ஓர் இயற்கை கொண்டாடி…பறவைகளின் பெயர்கள் மட்டுமல்ல,, அவற்றின் சஞ்சாரம், வாசஸ்தலம், பறத்தலின் திசையை வைத்து நீர்ப்பரப்பு அறிதல் இன்னோரன்ன விஷயங்களில் கொண்டிருக்கும் தேர்ச்சி அருமையான அம்சம்….

    கதையை நீங்கள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற இலக்கணத்தில் கொண்டு வர தேர்வு செய்யும் வடிவம் எப்போதுமே சிறப்பானது…இந்தக் கதை அதில் இன்னோர் புதிய உயரத்தைத் தொடுகிறது….

    குருவி கத்துகிறது என்று சொல்வதே, சந்திரா மாமியை கோபப்படுத்துகிறது…சிக்கட்டி பாடுகிறது என்று சொல்லவேண்டும் என்று கற்பிக்கிறார்…இயற்கையோடு ஒத்திசைவாக வாழப் பழகும் மனிதர்களால் இயற்கையோடு சென்று மீண்டும் கலக்கும் தருணத்தையும் அறிந்திருக்க முடிவது உங்களது அற்புதக் கதை சொல்லும் நேர்த்தி. இலக்கியமயமாகும் வாழ்வியல் தரிசனம்…

    முன் பின் பார்த்திராத மனிதர்களுக்காக வாசக உள்ளங்களை அலைமோத வைக்கிறீர்கள்….
    குலுங்கி அழ வைக்கிறீர்கள்….ஏக்கப் பெருமூச்சோடு இறுக்கமாக விழி மூடி சிந்திக்கத் தூண்டுகிறீர்கள்….

    வணக்கங்கள் அ மு…
    எஸ் வி வேணுகோபாலன்

    Share
  • இசையும் கோயிலும்-3 !…

    விசாலம்

    இசையும் கோயிலும் 3      

    தமிழ் நாட்டின் சில கோயில்களில் கற்தூண்களும் இசை பாடும் திறமையைக்கொண்டுள்ளன என்பதை மிகவும் பெருமையுடன் நான் இங்கு கூறிக்கொள்கிறேன் .எல்லாம் மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டிய கோயில்கள். மிகப்பழமை வாய்ந்த கோயில்கள். ஒவ்வொரு கோயிலிலும் அமைந்திருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தின் அழகுதான் என்ன ! அதில் மிக நுணுக்கமாக வடித்திருக்கும் தூணகள் தான் என்ன ! பார்க்கப்பார்க்க வியந்து போகிறோம் இதில் இசை எழுப்பும் தூண்களை அழகர் கோயில், ஆழ்வார்திருநகரி, குற்றாலம், தாராசுரம்,  செம்பகநல்லூர், சுசீந்திரம் திருவேந்திரம், தாடிக்கொம்பு,  மதுரை சிம்மாசலம், திருநெல்வேலி போன்ற கோயில்களில் காணமுடிகிறது. கும்பகோணத்தில் அருகில் இருக்கும் தாராசுரம் கோயிலில் பலி பீடம் இருக்கும் இடத்தைத் தட்ட அங்கு ஒருவிதமான ஒலி எழும்புகிறது என்ற தகவலும் கிட்டியது.அதைத்தவிர இங்கிருக்கும் ஏழு படிகள் ஏழ ஸ்வரங்களை எழுப்புகின்றன.

    சிம்ஹாசலத்தில் பெரியப்பெரிய தூண்களுக்கு மேல் இசைத்திருக்கும் இலைகள், பூக்கள் இசையை எழுப்புகின்றதாம்.,

    நான் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் போயிருந்தேன் அங்கிருந்த மண்டபத்தில் இருக்கும்  சில கற்தூண்களை  வேகமாகத்தட்ட அங்கு இசை பிறக்கிறது. இவைகளை இசை பாடும் கற்தூண்கள் என்றே சொல்லலாம் இதைப்பார்த்து என்ன architectural wonders என்று பல வெளிநாட்டவர்கள் வியந்து போகிறார்கள்.என் கூட வந்த உதவியாளர் என்னை அந்தத்தூணை தட்டச்சொன்னார் .நானும் தட்டினேன் ஒரு சத்தமும் வரவில்லை. என் கையில் தேவையான பலமில்லை பின் அவர் கராட்டே கலையில் செங்கலை உடைக்க கையை வைக்கும் போஸில் அந்தத் தூணின் மத்தியில் தட்டினார், நானும் தூணின் அருகில் காதை வைத்துக்கொண்ட்டேன் ஆஹா… அருமையான சத்தம் அதிலிருந்து எழும்பியது .சிலர் கனமான குச்சியாலும் தட்டிக்காண்பிக்கின்றனர். எல்லா தூண்களும் ஒரே சுருதியில் அமைந்திருப்பது மிகவும் வியப்பைத்தருகிறது. இதைக்கட்டியவர் கட்டிடகலையில் எவ்வளவு நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டும் இதில் ஒரு ஐந்து தூண்களிலிருந்து ஐந்து வித சுரங்கள் வெளிவர அங்கு “நவரோஜ்” என்ற ராகம் பிறக்கிறது.இவை மொட்டைக்கோபுரம் அருகில் பார்க்கலாம். இசை மேதை ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இந்த ஐந்து ஸ்வரங்களைக்கொண்டு “நவரோஜ்’ராகத்தில் பாடல் இயற்றியிருக்கிறார். .

    ஆழ்வார்திருநகர் கோயிலில் அமைந்த வசந்த மண்டபத்தில் இருக்கும் தூண்களைத்தட்டினால் “ச ரி க ம ப த நி  என்ற சப்த சுரங்கள் வெளி வருகின்றன. தவிர ஒரு சன்னதியின் எதிரே இருக்கும் தூணைத்தட்ட சங்கின் ஒலி கேட்கிறதாம். இங்கு கல்லால் ஆன நாயனமும் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் தூண்கள் கிரானைட் கற்களால் ஆனவை இவைகளில் நடு நடுவே துளைகள் குடையப்பட்டு இருப்பதால் இந்த இடங்களில் ஊத மிக அழகான இசை ஒலித்து கேட்க மிக இன்பமாக இருக்கிறது இங்கிருக்கும் தூண்கள் வட்ட வடிவமாகவும்  சதுர வடிவ அமைப்பிலும் ஐந்துமுகமான நட்சத்திர வடிவத்திலும் மிக மிக கலை வண்ணத்தோடு அதிநுட்பமாக  செதுக்கப்பட்டுள்ளன.

    சுசீந்திரம் கோயிலில் பைரவர் மண்டபம் எதிரில் நான்கு இசை தூண்கள் உள்ளன. தாடிக்கொம்பு என்ற இடத்தின் கோயிலில் இருக்கும் தூண்கள் வேதங்களின் ஸ்வரங்களை எழுப்புகின்றன. ஹம்பி கோயிலில் இருக்கும் தூண்களில் அடிப்பாகத்தில் ஒரு ஸ்வரமும், நடுப்பாகத்தைத்தட்ட வேறு ஸ்வரமும் தூணின் மேல் பாகத்தைத் தட்ட வேறு ஒருஸ்வரமும் கேட்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.மூன்று பாகங்களையும்  ஒரே நேரத்தில் அடிக்க அங்கு மூன்று ஒலிகளும் சேர்ந்து ஒரு புதுமையான ஒலி பிறந்து நம்மைப்பரவசப்படுத்துகிறது.  கும்பகோணத்தில் இருக்கும் கும்பேஸ்வர கோயிலில் கற்களால் செய்த இரண்டு நாதஸ்வரங்கள் சுவரில் வைக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி பூஜையின் போது இவைகளை எடுத்து பூஜிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது தென்காசியில் இருக்கும் கோயிலில் முக்கிய பிரகாரத்தில் அருள் மிகு ஸ்ரீ விசுவநாத சன்னதியின் முன்னும் அருள் மிகு சுப்பிரமண்யர் சன்னதி முன்னும் இசை எழுப்பும் தூண்கள் இருக்கின்றன. திருநெல்வேலியில் நெல்லையப்பர் ஆலயத்தில் தேவி சன்னதி முன் இருக்கும் இரு தூண்கள்  இரு ஸ்வரங்களை எழுப்புகின்றன. ஒன்று மத்தியமம் மற்றொன்று பஞ்சமம்.

    இசை கடவுளிடம் செல்ல ஒரு பாலமாக அமைகிறது. பழங்குடி மக்கள் தங்கள் திருவிழாவில் பலவிதமான வாத்தியங்களை உபயோகித்து வந்திருக்கின்றனர். ஆன்மீக வழிப்பாட்டின் போது தாரை தம்பட்டை ,மேளம் என உபயோகித்து இயற்கையைப் பூசித்திருக்கின்றனர் தேவாலயங்களிலும் பியானோ வாசிக்கப்பட்டு கரோல் என்ற இசை பாடப்படுகிறது.  ஆன்மாவை உயர்ந்த நிலைக்கு அழைத்துப்போகும் சக்தி இசைக்கு உண்டு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட உண்மை.. இன்னும் நான் பார்க்காத பல கோயில்கள் இதில் இருக்கலாம்.எல்லாமே நாட்டின் பொக்கிஷங்கள்.அவைகளை கண்ணின் இமைப்போல் காப்பது நம் தலையாய கடமை அல்லவா?

    பின் குறிப்பு இதை ஒரு நாலு பேர் படித்தாலும் நான் எழுதிய குறிக்கோள் ஈடேறும் நம் கோயில்களின் சிறப்புக்களை பலரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதே என் அவா  கோயிலின் இசையைப்பற்றி மேலும் பல புது தகவல்களைக்கொடுத்து உதவிய என் தம்பி  திரு வெங்கட் பெரிய இசை மேதை ,சங்கீத வித்துவான்

    ஊத்துக்காடு ஸ்பெஷல், அவருக்கு என் மனமார்ந்த நன்றி

    Share
  • சோழர்களின் ஆட்சியில் பிராமணர்களின் குற்றங்கள் மற்றும் தண்டனைகள்

    டாக்டர்.எஸ். சாந்தினிபீ ஒரு அறிமுகம்

    சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருமதி. எஸ்.சாந்தினிபீ, தமிழகத்தைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்டு முதல் உ.பி.யிலுள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் உயர் ஆராய்ச்சி வரலாற்று துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 1984-ல் வன்னியர் வரலாற்றை தினமலரில் தொடராக எழுதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான இவர் வட இந்தியாவில் பணியாற்றும் தமிழ் பத்திரிகையாளர் ஆர்.ஷபி முன்னா என்பவரின் மனைவி.

    கடந்த 15 ஆண்டுகளாக சோழர் காலம் பற்றிய ஆய்வைத் தொடர்ந்து வரும் இவரது கட்டுரைகள் தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்வேடுகளில் வெளியாகி உள்ளன. இவரது பேட்டி மற்றும் கட்டுரைகள் ஜுனியர் விகடன், அவள் விகடன், குமுதம், தினமணி, புதிய பார்வை, Indian Express, News today, Rising sun உட்பட பல தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.

    எட்டு வருடங்களுக்கு முன் இவர் எழுதிய பாண்டிச்சேரியின் தொல்லியல் வரலாறு குறித்த ஆங்கில நூலும், தமிழில் எழுதிய அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் நிறுவனர் சர் சையது அகமதுகான் வாழ்க்கை வரலாறும் மிக பிரபலமானவை. தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிக்கும் வட இந்திய வரலாற்றாளர்களுக்கிடையே தமிழகத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவரும் திருமதி. சாந்தினிபீயின் பல கட்டுரைகளில் ஒன்றுதான் இது.

    ஆங்கில மூலம் – முனைவர் சாந்தினி பீ

    தமிழாக்கம் – பவள சங்கரி

    சோழர் காலத்தில்தான் மனுவின் ஆதிக்கம் தமிழகத்தில் ஆணித்தரமாக வேரூன்றி வளர்ந்தது எனும் எண்ணம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.மனுவும் நீதியும் தமிழக மக்களால் பிரித்துப் பார்க்க இயலவில்லை.சோழர் ஆட்சியில் தமிழ்நாட்டில், மனு ஸ்மிரிதியின் பங்கை சோதிக்கக்கூடிய நேர்மையான முயற்சிதான் இது.

    ஒரு குறிப்பிட்ட சாதியின் அடிப்படையில் இக்கட்டுரை அமைந்திருப்பது ஏன் என்ற ஆச்சரியம் ஒருவருக்கு எழலாம். சகிப்புத்தன்மையும், பொறுமையும் இல்லாததோர் நிலை வளர்ந்து வரும் இந்நாட்களில், இத்தலைப்பு மற்றும் ஆய்விற்கான நோக்கம் குறித்த சிறிய விளக்கம் தேவைப்படுகிறது. குறிப்பாக அந்த சட்டப் புத்தகம், சட்டத்திற்கு சாதிப்பற்றை ஊட்டுவதால் தற்போதைய ஆய்வும் அதையே பின்பற்றுகிறது

    இந்த ஆய்வறிக்கையில், சோழர் காலத்தில் பிராமணர்களால் இழைக்கப்பட்ட பல்வேறு குற்றங்களை, அக்காலத்திய கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வாளர், வகை குற்றத்திற்கு,ஒரு கல்வெட்டை ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளார். அதே சமயம், அனைத்து கல்வெட்டுகளும் பயன்படுத்தப்பட்டு எதுவும் விடுபட்டுப் போகவில்லை என்பதையும் உறுதியாகக் கூற முடியாது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

    குற்றங்கள் அனைத்தும், ஆலயங்கள் சம்பந்தப்பட்டவை, மற்றவை என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலில் ஆலயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விளக்கப்படும்.

    1. முதலாம் ராஜராஜனின் ( கி.பி. 985 – 1014 ) அரசாங்க அதிகாரி, பிரபலமான மதுராந்தகன் க ந்த ராதித்தன், திருவல்லத்தின் (வட ஆற்காடு) ஆலயமான பில்வநாதேஷ்வராரை தரிசிக்க சென்றிருக்கிறான். அந்தக் கோவிலின் விளக்குகள் மங்கிப்போய், பிரகாசமாக எரியாததால் கோவிலின் சொத்து மற்றும் நன்கொடைகள் பற்றிய விவரங்களைக் கேட்டான். அது இரவு நேரமாக இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, அவருடைய கண்டுபிடிப்பில் ஆலயத்தின் மேலாளர்களான சிவபிராமணர்கள் அந்தக் கோவில் சொத்தை அபகரித்துக் கொண்டதை கண்டுபிடித்தார். அந்தப் பூசாரிகள் அதற்கு ஈடாக 74 களஞ்சு பொன்னை ஆலய கருவூலத்திற்கு வழங்க வேண்டும் என்று தண்டனை அளிக்கப் பட்டது .

    2. திருப்பனந்தாளில் உள்ள ஓர் குறிப்பிட்ட கோவிலில், கி.பி. 1070, 1078 மற்றும் 1091க்கு இடைப்பட்ட இருபத்தியொரு ஆண்டுகளில் மூன்று முறை கணக்குகள் கண்காணிக்கப்பட்டன. முதல் சோதனை ராஜராஜ மூவேந்த வேளார் (கி.பி.1070) என்ற அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இரண்டாவதாக சேனாபதி பல்லவராஜா (கி.பி.1078) என்ற அதிகாரி விசாரணையை மேற்கொண்டார். மூன்றாவது அதிகாரியாக சேனாபதி நந்தியராஜா (கி.பி.1091) என்பவர் கணக்குகளைச் சோதித்தார்.

    இந்த மூன்று காலங்களிலும் கோவில் பூசாரிகள் கோவில் சொத்துகளை அபகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் இரண்டு நிகழ்வுகளில் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடியாவிட்டாலும், அந்த மூன்றாவது நிகழ்வில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், அந்தக் கல்வெட்டுகள் அது பற்றி சொல்லாதலால் அதன் தன்மை அறியப்படவில்லை. ஆனால், தவறிழைத்து தண்டனை பெற்ற பூசாரிகள் அரசரிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்கள்.

    ஆனால் அரசர் அவர்களின் வேண்டுதலை மறுத்து, தண்டனையும் வழங்கினார். அரசரின் ஆணைப்படி, சூறையாடப்பட்ட சொத்தின் மதிப்புத் தொகையான 540 காசுகள் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்டது. இப்படித்தான் முதலாம் குலோத்துங்க அரசனின் ஆணை இருந்தது. இந்த அரசாணைக்குப் பிறகும் குற்றமிழைத்த பூசாரிகளில் ஒருவரான, பட்டன் குமாரசாமி என்பவர், ஆலயத்தின் மகேசுவரரிடம், கடவுளுக்கு பூசிக்கும் உரிமையை விற்று தனக்கான தண்டனை தொகையை வசூலிக்கும்படி கேட்டுக்கொண்டான். அதுவும் தவணை முறை மீட்பாக, மாதத்தில் நான்கரை நாட்கள் மட்டும் வேலை செய்யும் உரிமையை விற்குமாறு வேண்டினார். மகேசுவரர்கள் அரசு ஆணைகளில் தலையிட்டு மாற்றங்கள் செய்யக்கூடுமா? அரசு ஆணையில் தலையிட்டு மாற்றங்கள் ஏற்படுத்துவது இயலாத காரியம் என்பது எவராலும் உணர முடியும். சில உயரதிகாரிகளின் மூலமாக குறிப்பிட்ட பூசாரிகளின் இந்த வேண்டுதல்களை மகேசுவரர்கள் முன்னெடுத்துச் சென்றிருக்கக்கூடும்; இத்தகைய செயல் நன்கொடைகளின் புதிய மற்றும் விரிவாக்கங்களில் பொதுவாக காணக்கூடியதே. தண்டனைப் பணம் எவ்வகையிலேனும் மீட்கப்பட்டது என்பதுதான் இக்கல்வெட்டின் செய்தி.

    3. ஸ்ரீரங்கத்திலுள்ள பிரபலமான வைஷ்ணவக் கோவிலின் கல்வெட்டு, ஒரு அரசு அதிகாரியான, ராஜேந்திர சோழ மூவேந்த வேளார், சம்பந்தப்பட்ட அபராத நிலுவைத் தொகையான 940 காசுகள், ஸ்ரீ கிருஷ்ண ஆழ்வான் பண்டாரம் என்பவருக்கு ஏதோ காரணத்திற்காக தண்டனையாக கோவில் கருவூலத்திற்குக் கட்டுவதற்கான விசாரணைக்காக அனுப்பப்பட்டதாகச் சொல்கிறது.

    இந்தப் பிரச்சனை எவ்வாறு கையாளப்பட்டது என்பதை நம்மால் அறிய முடியாவிட்டாலும், முழுமையற்ற மற்றும் பழுதடைந்த கல்வெட்டுக்களில் உள்ள ஆச்சரியமான செய்தி, தொகையைச் செலுத்த வேண்டிய ஒரு குறிப்பிட்ட நபர் ஏற்கனவே ஒரு முறை சிறைத்தண்டனை பெற்றதுதான். இந்த கல்வெட்டும் முதலாம் குலோத்துங்கனின் காலத்தைச் சார்ந்தது. அதனால் சோழ அரசர்கள் பிராமணர்கள் குற்றமிழைத்தபோது சிறைப்படுத்தத் தயங்கவில்லை என்பது தெளிவாகிறது.

    4. கி.பி. 1152இல் இரண்டாம் ராஜராஜா ஆட்சியின்போது ஒரு ஆலயத்தின் சிவபிராமணர்கள் தெயவத்திற்கு ஆபரணம் செய்யும் பொருட்டு கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதியை களவாடிவிட்டனர். அதற்கு தண்டனையாக அவர்கள் ஆலயத் திருப்பணி செய்யும் உரிமையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு அது மற்றவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இப்படியாக வாழ்வாதாரமாக இருந்த சக்தி வாய்ந்த மற்றும் கௌரவமான தொழிலை அவர்கள் இழக்க வேண்டிவந்தது. இவ்வாறு முடிவெடுக்கப்பட்டு அந்த தண்டனைத் தொகையான 180 காசுகள் கோவிலுக்கு வழங்கப்பட்டது. இந்த தண்டனையையும் கடந்து, அவர்களும் மற்றும் அவர்தம் சந்ததியினரும் இந்த குறிப்பிட்ட ஆலயத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதோடு விக்ரம சோழவர்முடையார் மற்றும் குலோத்துங்க சோழேசுவரமுடையார் என்ற தெய்வங்கள் இருந்த சன்னதிகளுக்கும் செல்ல தடை விதித்தனர். குற்றம் செய்தவர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தாரும் மற்றும் வருங்காலச் சந்ததியினரும்கூட அவர்களுடைய குற்றம் காரணமாக தங்கள் சொந்த மண்ணில் தங்கள் முன்னோர்களின் ஆன்மீகச் சேவைகளை தொடர்வதற்குத் தடை செய்யும் அளவிற்கு அந்தத் தண்டனை அதீதமாக இருந்ததை எளிதாக உணர முடிகிறது.

    5. கி.பி. 1213ல் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலான மற்றொரு சம்பவம்; திருக்கழுக்குன்றத்தில் உள்ள கோவிலின், மடைவிளாகத்தில் நமிநந்தி அடிகள் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு அவருடைய மகனின் தவறுக்காக பறிமுதல் செய்து, விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த நமிநந்தியின் மகன் திருக்கழுக்குன்றம் உடையார் ஆலயத்தின் ஒரு தெய்வ சிற்பத்தின் முன் நெற்றியில் உள்ள தங்கத் தகட்டை திருடிவிட்டான். அரசாணையின்படி அந்தக் குற்றவாளி மட்டும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டபொழுது ஏனைய குடும்ப உறுப்பினர்கள் அதே கிராமத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    கோவில் சம்பந்தப்பட்டவைகள் மட்டுமல்லாது ஏனைய குற்றங்களிலும் பிராமணர்கள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்ததே நமது இரண்டாவது அலசல்

    கி.பி. 988இல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தின் இரண்டாம் ஆண்டில், உடையர்குடியிலிருந்து ஒரு கல்வெட்டு, சோமன்…., ரவிதாசன் என்கிற பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரன் என்கிற இருமுடிச் சோழ பிரேமாதிராஜன் ஆகியோர்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரர் ஆதித்ய கரிகாலனைக் கொலை செய்த குற்றத்தை விளம்புகிறது. அதன்படி ராஜராஜன் இந்தக் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஆணையிட்டிருந்தான். அரசனின் அந்த ஆணையின்படி குற்றத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபர்களின் சொத்தைத் தவிர அவருடைய சகோதரர்களின் மகன்களோ, அவர்களின் மனைவியரோ, அவர்களின் தந்தையின் மூத்த சகோதரன் மற்றும் அவருடைய குழந்தைகள் , அவர்களுடைய தாய்வழி சகோதரர்களின் மாமன்மார்களின் மாமனார், அவர்களுடைய சகோதரிகளை மணந்தவர்கள் மற்றும் அவர்களின் மருமகன்கள் போன்ற எல்லோருடையதும் பறிமுதல் செய்யப்படவேண்டும். இந்த ஆணையை நிறைவேற்றும் வகையில் மலையமுரன் என்கிற ரவிதாச கிரமபட்டன், அவருடைய மகன் மற்றும் அவருடைய தாய் பெரியநங்கைச்சானி ஆகியோர் இந்த பிரேமதேயம் வீரநாராயண சதுர்வேதி மங்களம் கிராமத்தில் வைத்திருந்த சில வீடுகளையும் மற்றும் வீட்டு மனைகளையும் அந்த கிராமச்சபை மூலம் பறிமுதல் செய்தனர். இப்பொழுது இந்த சொத்துக்களெல்லாம் அரையன் பரதன் என்கிற வியலகஜமல்லா பல்லவராயன் என்பவரால் வாங்கப்பட்டு அதே கிராமத்தின் அனந்தேசுவர சுவாமி கோவிலுக்காக விடப்பட்டது. இந்த நன்கொடை மூலம் ஐந்து சிவயோகிகள் உட்பட 16 பிராமணர்கள் தினந்தோறும் உணவு அளிக்கப் பெற்றார்கள். அந்த மண்டபத்திற்கும், தண்ணீர் பந்தலுக்கும் தண்ணீர் பட்டுவாடா செய்த அந்த 16 பிராமணர்களில் ஒருவருக்கும் தினமும் ஒரு அளவு நெல்லும் மற்றும் வருடத்திற்கு ஒரு காசும் வழங்கப்பட வேண்டும். (அந்த தண்ணீர் பந்தல் அந்த நன்கொடையாளரால் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது)

    மிகப் பெரிய இராஜ துரோகமான பட்டத்து இளவரசனைக் கொல்வது போன்றவற்றிற்கு, அந்தக் குற்றவாளிகள் மற்றும் மற்ற அனைத்து உறவினர்களின் மொத்த அசையாச் சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில் தண்டிக்கப்பட்டார்கள்.

    காமக்கன்னி சோமாசி என்ற பிராமணர் ஒரு பெரிய இராஜ துரோகக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருடைய நிலங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டாலும், அவைகளனைத்தும் மற்றொருவரால் வாங்கப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது முதலாம் ராஜாதிராஜன் ஆட்சிக் காலமான கி.பி. 1024இல்.

    சில குற்றங்களுக்காக அபராதம் பெற்ற பலர் துணிச்சலாக தப்பித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அதனால் முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 – 1120) இது போன்ற குற்றவாளிகளின் சொத்துகள் எந்த விலைக்கேனும் விற்று அந்தப் பணத்திற்கு இரசீது பெற்றுக்கொண்டு கச்சிப்பேடில் (இன்றைய காஞ்சீபுரம்) உள்ள கருவூலத்தில் வரவு வைக்க வேண்டும். அதன்படி, திருநாராயணச் சேரியில் இருந்த சில பிராமணர்கள், கிட்டக்கில் என்ற உத்திரமேரூரின் ஒரு குக்கிராமத்தில் வசித்த அவனிப் பட்டன் தன்னுடைய தான நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, அந்த நிலம் அரசாணைப்படி மகாசாஸ்தா (ஜைன) கோவிலுக்கு விற்கப்பட்டது. ஒரு பிராமணர் (அவருடைய அரைகுறை பெயர் பரதய்யன் திரு ) சில பதிவிடப்படாத குற்றத்திற்காக சிறைத்தண்டனையும், அபராதமும் பெற்றிருக்கிறார்.

    இங்கு, “ஒரு சிறந்த அரசன்,கொலைக்குற்றத்தைச் (பெரிய குற்றம்) செய்த குற்றவாளியின் சொத்தை தனக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுபோன்ற அபராதத்தை வருண பகவானுக்கு அர்ப்பணிக்கும் விதமாக நீரில் எரிந்து விடுவானாக அல்லது பண்டிதரான ஒரு சிறந்த பிராமணனுக்கு அளிக்க வேண்டியது” என்ற மனுவின் சொற்களை கவனம் கொள்ளும் போது சாலப்பொருத்தமாகிறது.

    “பேராசையால் கடவுளின் சொத்தையோ அல்லது பிராமணனின் சொத்தையோ கைப்பற்றும் அந்த பாவப்பட்ட மனிதன் மறு உலகில் இராஜாளியின் எச்சத்தை உண்பான்”

    பிராமணர்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக தலைக் குடுமி வைக்க விதிக்கப்பட்டது, ஆனால் வேற்று சாதி ஆண்கள் மரண தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒரு பிராமணன் எத்துனை குற்றமிழைத்தாலும் அந்த அரசன் அவனை ஒருக்காலும் கொல்லாமல் விட்டு அவனுடைய சொத்து மற்றும் உடலும் பாதிக்கப்படாது அவனை நாடு மட்டுமே கடத்தலாம் என்பதே பிராமணர்களுக்கு மனு அளித்த தண்டனை.

    எனவே சோழ ஆட்சியாளர்கள் மனு ஸ்மிரிதியின் சட்டப் புத்தகத்தின் விதிகளை முழுமையாகப் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. உண்மையில் சோழர் ஆட்சியில் பிராமணச் சமூகம் மனு நிர்ணயித்த முழு சலுகைகளையும் பெற முடியவில்லை. அவர்கள் சமுதாயத்தின் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களைத் தண்டிக்கும் முன்பு அரசர்கள் இரண்டாம் முறை யோசிக்கவில்லை என்றே தெரிகிறது. அவர்களும் மற்ற சாதாரண மனிதர்களைப் போன்றே தங்கள் குற்றங்களுக்கு ஏற்றவாரு தண்டிக்கப்பட்டார்கள். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, பறிமுதல், பொது ஏலம், புனிதத் தொழில் உரிமை நீக்கம், தொழில்முறை உரிமைகள் விற்பனை மற்றும் நில ஒதுக்கீடு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்யப்பட்டது. இதைத் தவிர, குற்றவாளிகளை ஒதுக்கிவைத்தல், சில நேரங்களில் எதிர்கால சந்ததியினர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். குற்றவாளிகளை குறிப்பிட்ட ஆலயம் மற்றும் சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆலயங்களிலிருந்தும் விலக்கி வைப்பதும் நடைமுறையில் இருந்தது. அந்த பிராமணர்கள் சிறைத்தண்டனையும் பெற்றதை கல்வெட்டு ஆய்வுகளிலிருந்து அறிய முடிகிறது. கடவுட் பணிகளில் சம்பந்தப்பட்டிருந்த இந்த குறிப்பிட்ட சமூகத்தினர் கடவுள் பயமற்றவர்களாக இருந்திருப்பதும் அனுமானிக்க முடிகிறது. எல்லோருக்கும் கடவுள், மதம் பூசை நல்லவை கெட்டவை குற்றம் தண்டனை பரிகாரம் என பலவற்றையும் போதித்த இவர்கள் தங்களின் போதனைகளை தானே நம்பவில்லை . உபதேசம் ஊருக்கு மட்டும் தான் .

    சோழ நிர்வாகத்தின் பல துறைகளிலும் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொண்டால் தமிழகத்தில் மனுவின் ஆதிக்கத்திற்கு சோழர்கள் ஆட்சி எந்த அளவிற்கு காரணம் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிய முடியும்

    [ பிப்ரவரி 15, 16, 17 , (2013) ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடந்த தென் இந்திய வரலாற்று சபையின் 33 வது ஆண்டு கூட்டத்தில் சமர்ப்பித்த ஆய்வறிக்கை]

    Share
  • 9வது முறையாக 10ம் வகுப்பில் 100% தேர்ச்சி! சேவாலயா மாணவர்களின் சாதனை!

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    F B1, First Floor, Pld no 10. New no 24, Kesava perumal Westward street, Mylapore, Chennai 600004.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    Vadanallur Village, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India

    Phone: 044-24950204, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayaprm@sevalaya.org,   Visit us at: www.Sevalaya.org.

    ———————————————————————————————————-

                                                31st May. 2013

    Press Release

    சேவாலயாவின் தொடர் சாதனை பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி

    சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி 10ஆம்வகுப்புப் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய 94 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10 மாணவர்கள் 450க்கு மேற்பட்ட மதிப்பெண்களும் 25 மாணவர்கள்  400க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும் 82 பேர் 300க்கும் மேறப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளானர்.

    முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ள மாணவர்களின்  விவரம் வருமாறு:

    இடம் பெயர் மதிப்பெண்கள் (500க்கு)
    I V.பிரவீனா 482
    II R.நந்தினி 473
    III  C.மகேஷ்வரி 470
    III P.கஸ்தூரி 470

    V.பிரவீனா:

    மேலப்பேடு கிராமத்தைச் சேர்ந்த V.பிரவீனா  500க்கு 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார். இவரது தந்தை விவசாய கூலித் தொழிலாளி. மருத்துவராக வேண்டும் என்ற இலக்கைக் கொண்ட பிரவீனா பள்ளியில் பல்வேறு போட்டிகளிலும் உற்சாகமாகப் பங்கேற்கும் துடிப்பான மாணவி.

    R.நந்தினி:

        

    473 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள நந்தினி சேவாலயாவில் பால்வாடியிலிருந்தே கல்வி பயின்று வருகிறார். இவரது தந்தை வாடகை வண்டி ஓட்டுனராக உள்ளார். இவரது தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்குரைஞராக வேண்டும் என்ற இலக்கைக் கொண்ட நந்தினி பள்ளியில் பல்வேறு போட்டிகளிலும் உற்சாகமாகப் பங்கேற்கும் துடிப்பான மாணவி.

    C.மகேஷ்வரி

    500க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள மகேஷ்வரி கசுவா கிராமத்தைச் சார்ந்த மாணவி. இவரது தந்தை விவசாயக் கூலியாக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை தையல் கூலியாக பணிபுரிந்து வருகிறார். மருத்துவராக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளார்.

    P.கஸ்தூரி:

       

    500க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள கஸ்தூரி பூசாலிமேடு கிராமத்தைச் சார்ந்த மாணவி. ஆசிரியையாக வேண்டும் என்பதை கனவாகக் கொண்டுள்ளார்.

    சேவாலயாவுக்காக

    வி.முரளிதரன்

    (நிறுவனர்  மற்றும் நிர்வாக அறங்காவலர்)

    ————————————————————————————

    Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory Committee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd)  Mr.R.Nataraj IPS (Retd),  Mr. Amarchand Jain,  Dr. Malavika Vinothkumar

    Hony, Co-Ordinator:                                                                   Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                  Mrs. Bhuvaneshwari Muralidharan

    Share
  • கல்வி என்பது வியாபாரமா அன்றி வளர்ச்சியா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    இன்று காலை வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி 89% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 9 பேர் முதலிடம் பெற்றனர். அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 500க்கு 498. ஒன்பது பேரும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேறியிருக்கிறார்கள்.

    மனதை நெகிழ வைத்த மற்றொரு விசயம், ராஜாராம் என்ற மாணவர் 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்ததுதான். ஆம், பிறவியிலேயே மாற்றுத் திறனாளியான ராஜாராமனால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. இயற்கையாகவே எலும்பு அடிக்கடி உடையும் தன்மையுடைய. 16 வயதாகும் ராஜாராமனுக்கு இதுவரை 150 முறை எலும்பு உடைந்திருக்கிறதாம். சிகிச்சை பெற்று வரும் இந்த நிலையிலும், விடாது முயன்று படித்து 500க்கு 481 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ள இவரின் தன்னம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    எஸ்.எஸ்.எல்.சி. என்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். காலை எழுந்தவுடன் வானொலியைத் திருப்பினாலோ, தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தாலோ கல்வி எனும் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிற காலமாக இருக்கிறது. அறிவுக் கண்களை திறக்கக்கூடிய கல்வியை வியாபாரமாக ஆக்கிக் கொண்டிருக்கிற சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர்களைப் பார்த்து வேதனைப்படுவதா அல்லது இதற்கு துணை போகின்ற ஆட்சியாளர்களைப் பார்த்து வெட்கப்படுவதா என்று தெரியவில்லை. வியாபாரத் தளங்களில் தங்கள் பொருட்களை போட்டி போட்டுக்கொண்டு கூவிக்கூவி விற்பனை செய்வதைப்போல கல்வித் தளங்களை நடத்தக்கூடிய வியாபாரிகள், மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட உழைப்பினால் எட்டிப்பறித்த வெற்றிக் கனியைக்கூட தங்கள் வியாபாரத்திற்கு சாதகமாக்கிக் கொள்ளும் காட்சியைக் காணமுடிகிறது. முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள் எங்கள் பள்ளியைச் சேர்ந்தவர்கள். அதனால் எங்கள் பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்த்துங்கள் என்று விளம்பரப்படுத்தி ஒரு மாணவருக்கு இத்தனை ஆயிரம் ரூபாய் என்று நன்கொடை வசூலிப்பது சர்வ சாதாரணமாகியுள்ளது. இவ்வாறு விளம்பரப்படுத்தக்கூடிய நிர்வாகத்தினர், புதிதாகச் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் அதே வெற்றியைத் தேடித்தர முடியும் என்பதற்கு உத்திரவாதம் தர முடியுமா. கற்பிக்கும் முறையாலும், சில ஆசிரியர்களின் நேர்மையான கடுமையான உழைப்பினாலும் ஒரு சில பள்ளிகளில், ஒரு சில மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறக்கூடும். அனைத்து மாணவர்களும் இதே போல உயர்வான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற முடிவது சாத்தியமாகுமா? தேவையற்ற இது போன்ற விளம்பரங்களைத் தவிர்த்து கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது . அரசு பள்ளிகள் அனைத்தும் இந்த ஜூன் மாதம் 10 ம்தேதி திறக்கிறது. ஆனால் பல தனியார் பள்ளிகளில் அந்த 10ம் தேதிக்குள்ளாகவே, அந்த ஆண்டின் பாடத்திட்டத்தில் பெரும் பகுதியை நடத்தி முடித்து விடுகின்றனர். சிறுவர்களுக்கு பொறுமையாக கற்பிக்க வேண்டிய காலங்களில் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இளம் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுவது உறுதி. முந்தைய கல்வியாளர்கள் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை என்று வைத்ததன் காரணம் பற்றியும் யோசிக்க வேண்டும். மாணவர்கள் அந்த விடுமுறை காலங்களில் ஓய்வெடுத்து, புத்துணர்வுடன் திரும்பி வந்து மனத் தெளிவுடன் படிப்பதற்காகத்தானே. ஆனால் அதை விட்டுவிட்டு துரித உணவுகளையும், உணவகங்களையும் நாடுவது போல இந்த துரித கல்விச்சாலைகளையும் மட்டுமே நம்பி இருக்க வேண்டுமா. ஆக்கப்பூர்வமான அறிவு வளர்ச்சியை சிந்திப்பவர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது துரித உணவைப்போலவே இந்த துரிதக் கல்வி அமைப்பும் உள்ளத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியது என்பதில் ஐயமில்லை

    தற்போதைய கல்வி அமைப்பானது அறிவு வளர்ச்சியை ஊக்குவிப்பதைக்காட்டிலும் மனப்பாடம் செய்து எழுதுவதற்கேற்றவாரு இருப்பது, மாணவர்களின் சுயசிந்தனை மற்றும் சுய அறிவு வளர்ச்சியை தடை செய்யக்கூடியதாகவே உள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வழிவகுத்தால் மட்டுமே அவர்களால் தங்களுக்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளிலும் ஈடுபடமுடியும். வியாபாரத்திற்கான தளங்கள் எத்தனையோ ஆயிரங்கள் இருக்கும் போது , மழலைச் செல்வங்கள் மற்றும் வருங்கால இந்தியத் தூண்களின் அடிப்படை ஆதாரத்தை வியாபாரத் தளமாக்க வேண்டாமே .. மனிதம் காப்போம்!

    Share
  • அறுமுகநூறு (16)

     

    சச்சிதானந்தம்

    நாநில மெங்கும் பேதங்கள் இன்றி,
    அறுபடை வீடுகள் அமைத்து நின்று,
    நாவள மிக்க சான்றோர் சொல்லைக்
    காவல னாகக் காத்திடு வான்!                                                76

    அகவல்கள் படைத்து அறுமுகனைப் பணிந்து,
    அகவை மாறா அவனெழிலில் திளைந்து,
    அகவும்மயில் வாகனன் அருளை அடைந்தால்,
    அகமும்மயில் தோகையென அழகாய் விரியும்!        77

    அருகில் வரவர ஆற்றல் பெருகி,
    அலையென அரகர ஓசை பரவி,
    அறுமுகத் தருதரு அருளைப் பருகி,
    அன்பர்கள் சிரமிரு தாளைப் பணியும்!                               78

    கோடிட்ட இதழ்களும், மேடிட்ட கன்னங்களும்,
    நீறிட்ட நெற்றியும், வேலுற்ற கரமும்,
    நாவுற்ற தமிழும், நிறைவுறக் கண்டு,
    நீருற்றுக் கண்களில் நாதனைத் தொழுவோம்!             79

    வெஞ்சினம் கொண்டு, வெண்டெனத் தனக்குள்,
    வெற்றிடம் கண்டு வீழ்ந்திடும் நெஞ்சின்
    வன்மமும், வாட்டிடும் துன்பமும் நீங்கும்,
    வெண்முகில் வேலனின் இன்னடி பணிந்தால்!             80

    Share
  • வாழ்க்கை நலம் – 11

    குன்றக்குடி அடிகள்

    11. அன்பு செய்க!

    இறைவன் உயிர்க்குலதிற்குக் கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்க்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று; அன்பே உயிர்க்குலத்தின் பாதுகாப்புக் கவசம், மானுடத்தில் உயிரியல் அடிப்பண்பு விரிந்து, வளர்ந்து வாழ்வது விரிவன எல்லாம் வாழும். சுருங்குவன எல்லாம் அழியும்.

    தன்னலம் ஆக்கம் போலத் தோன்றும். தன்னலம் இன்பம் போலத் தோன்றும். ஆனால் இதனிலும் துன்பம் மற்றொன்று இல்லை. ஆதலால் அன்புடையவராக விளங்க, காண்பவர்கள் அனைவரையும் நேசித்த பிறகு கடைசியாக நம்மை நேசித்துக் கொள்ள வேண்டும். அதுவும் வாழ்தலுக்காகவேயாம். அன்பு இல்லையேல் பிறதுறைகளில் பெற்றவை அதாவது அறிவு யோகம் முதலியன கூட பயனற்றுப் போகின்றன.

    அன்பு இயற்கையாக அமைந்த ஒரு நியதி. நல் வாழ்க்கையின் வரிச்சட்டம், தாவரங்கள், விலங்குகள் இந்த அன்பு என்ற அடிப்படைச் சட்டதினின்று விலக இயலாமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் மானுடசாதி அன்பு என்ற வரிச்சட்டதினின்று விலக இயலாமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் மானுடசாதி அன்பு என்ற வரிச்சட்டத்திலிருந்து விலகிச் செல்கிறது. இது முற்றிலும் தவறு. பகுத்தறிவு நன்மையை வளர்க்கவே; தீமையை அகற்றவேயாம். மேலும் வாழ்க்கைப் போக்கை வளர்ப்பதற்கே பகுத்தறிவு. அணு ஆயுதங்களால் உலகை அழிப்பது எங்கனம் பகுத்தறிவு ஆகும்?

    இன்று இயற்கை உலகம் விரிந்து கிடக்கிறது. மனிதன் படைத்துள்ள கருவிகள், விரிந்த உலகை இணைக்கின்றன. ஆனால் மனிதன் சுருங்குகிறான். தன் வீடு, தன் நாடு, தன் மொழி, தன் மதம் என்று சுருங்கி விடுகின்றான். அதன் காரணமாகக் கெட்ட போரிடும் உலகமே தோன்றியுள்ளது. கெட்ட போரிடும் உலகத்தை மாற்றி அமைத்திடுதல் வேண்டும்.

    வீட்டிற்கும் வீட்டிற்கும் இடையே வைத்த சுவர்களை இடித்துவிட வேண்டும். வீதிகளுக்கு இடையே உள்ள திரைகளை அகற்ற வேண்டும், நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைகளை அகற்றிவிட வேண்டும். இவர் தேவர் அவர் தேவர் என்று சண்டை போடும் உலகத்தை அறவே தவிர்த்திடுதல் வேண்டும். ஆன்ம நேய ஒருமைப் பாட்டைக் காணல் வேண்டும். ஒரு குலமாக வேண்டும். இதற்கு அன்பு செய்தலே வழி! ஆதலால், வையத்தீர் அன்பு செய்வீர்!

    கதிரொளி பரவுகிறது. காய்கிற கதிரொளியாக மாறுகிறது. குளிர்க்காய்தலுக்காக வெயிலில் படுத்திருந்த புழு, காய்கிற கதிரோளியால் சுடப்பட்டு இறந்து போகிறது; அழிந்து போகிறது. வெயிலின் வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் புழுக்களுக்கு இல்லை. ஏன் எலும்பு இல்லாததால்! மனிதன், எலும்பு உள்ள மனிதன்! அதிலும் முதுகெலும்பு உள்ள மனிதன். வலிமையான படைப்பு. ஆயினும் ஏன்? அன்பில்லாத மனிதன் அழிவான்! அறக்கடவுள் அன்பில்லாத மனிதனைச் சுடும். வாழ்வு பாழாகும்!

    “என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்”

    இதனால் பெறப்படுவது, மானுடத்திற்கு உண்மையான வலிமை அன்பினால் மட்டுமே என்பது. அன்பில்லையேல் மானுடம் வாழ்தல் அரிது. ஆதலால் அன்பு செய்வீர்! அன்பே இந்த உலகத்தினை இன்ப உலகமாக்க உள்ள ஒரே வழி!

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

    Share
  • நீயும், நானும், விஞ்ஞானமும் -1

    இன்னம்பூரான்

    கல்விக்கடலின் விசாலம் பெரிது; ஆழம் அதிகம்; அலை ஓசை ஓயாது. திகைத்து ஓடி விடுவது எளிது; அப்படி ஓடினால், அது அறியாமையின், சோம்பலின், அசட்டையின் விளைவே. அக்கடலின் மூலாதாரமோ ஒரு சிறுதுளி தான். தலைக்காவேரி; கங்கோத்ரி, சிறுதுளி பெருவெள்ளம். கல்விக்கடலை கடக்கத் தோணிகள் உண்டு பல. கலங்கரை விளக்குகளும் ஒளி வீசி இருளையும், மருளையும் விலக்கும். தமிழில் விஞ்ஞானத்தை விளக்கும் நூல்கள் சொற்பம். வழக்கறிஞர் பெ.நா. அப்புசாமி அவர்கள் இந்த வகையில் ஒரு முன்னோடி. இடைவிடாமல் 70 வருடங்களுக்கு மேல், பாமர விஞ்ஞானம் படைத்தார்.

    ‘…படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கு ஏற்படாத ஒரு கஷ்டம் அறிவியல் எழுத்தாளர்களுக்கு உண்டு. படைப்பாளிகளுக்கு நினைவும் எழுத்தும் ஏதாவது காலத்தில் உறைந்து போனாலும் தப்பு இல்லை. அதை எழுத்துக்கு வலிமை தரும் அம்சமாகக் கூடப் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அறிவியல் எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்புசுவாமி இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது…’(திரு. இரா. முருகன் இந்தியா டுடே 2001)

    படைப்புகளும், படைப்பாளர்களும் வித விதமான மெய்ப்பாடுகளை முன்னிறுத்தினாலும், சராசரி தமிழன் வாழ்நாள் முழுதும் விஞ்ஞானத்தின் அருமையான போக்குவரத்துக்களை எளிதில், ஆர்வத்துடன் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுபவர்கள் அரிது, அரிது. பெ.நா. அ. அவர்களும் மறைந்து விட்டார். மேலும் தேடி அறிந்துகொள்ளும் திறனை, நாம் வளர்த்துக்கொள்ளமுடியும். அதன் துணைகொண்டு அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். வாரிசுகளின் முன்னேற்றத்தை வசதியாக அமைத்துக்கொள்ள இயலும். இத்தகைய சிந்தனைகள் என்னை ஆட்டிப்படைத்த வண்ணம். அதனால் தான், நோபல் பரிசு, விஞ்ஞானிகள், என்றெல்லாம் எழுதிய யத்தனங்கள் விழலுக்கு இறைத்த நீர் என்றாலும், அத்தகைய ஆர்வங்கள் மடிந்து போகவில்லை. சாக்ஷி, இந்த தொடர்.

    நேற்று (29 05 2013) லண்டனில் ஒரு மருத்துவ ஆய்வாளர் ராயல் சொஸைட்டி எனப்படும் மையத்தில் ஒரு உரையாற்றினார். இலவசம். க்யூ கட்டாயம். காணொளி பிறகு கிடைக்கும். முதலில் அதனுடைய பூர்விகம் கேளும். வில்லியம் க்ரூன் (1633-1684) என்ற அங்கத்தினரின் நன்கொடை இந்த க்ரூனியன் பிரசங்கத்தை 1738 லிருந்து வருடாவருடம் நடத்த உதவுகிறது.

    இவ்வருடம் : ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர் ப்ரான்செஸ் ஆஷ்க்ராஃப்ட் (Professor Frances Ashcroft FRS) நேற்று மாலை 6 30லிருந்து 7 30 வரை அளித்த ‘சிசுவை பாதிக்கும் டயப்பிட்டீஸ்’ என்ற பிரசங்கத்தின் சாராம்சம்:

    “… ஒரு பெட்டி சாக்லெட்டை ஒரு பிடி பிடித்தாலும் சரி, கொலைப்பட்டினி போட்டாலும் சரி, நமது மண்ணீரல் (பாங்கிரியாஸ்) தனக்குத்தானே, சுரக்கும் இன்சுலினை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தில் இருக்கும் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்கும். இந்த இயற்கை வரைமுறை தடுமாறினால், இன்சுலின் சுரப்பதில் தகராறு. சர்க்கரை ஏறும். அது தான் டயபிட்டீஸ். ஒரு நுட்பமான புரத அமைப்பு (ATP-sensitive potassium (KATP) channel) எப்படி இந்த இன்சுலின் ஆளுமையை துல்லியமாகவும், அனாயசமாகவும், தடுமாறாமல் கையாளுகிறது என்பது பற்றிய ஆய்வு விவரங்களை யாவருக்கும் புரியுமாறு, ஆதாரங்களுடன் கூறுவது தான் இந்த பிரசங்கத்தின் முதல் படி. அடுத்தது, மரபு அணு முரண் காரணமாக, பிறந்தவுடன் சில சிசுக்களுக்கு, அபூர்வமாக, இந்த வரைமுறை தடுமாறும் சிக்கல் இருப்பதை கண்டறிந்து, புதிய சிகிச்சை பற்றி விழிப்புணர்ச்சி அளிப்பது. இந்த துறையில் அவர் செய்த ஆய்வுகளின் பயனாக, மருத்துவ உலகத்துக்குக் கிடைத்த புதிய பாதையை பாராட்டி, அவருக்கு இந்த கெளரதை அளிக்கப்பட்டது.

    சில உபரி செய்திகள். ராயல் சொஸைட்டியில் நான் முதலில் தேடியது பூகோள சாத்திரம், தீர்க்க ரேகைகள் பற்றி; நோபலை விட அதிகமாக மதிக்கப்படும் கோப்லி என்ற சிறிய ஆனால் பெரிய பரிசு. அது எடுத்துச் சென்ற இடம், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் என்ற பிரபல அரசியல்வாதி / விஞ்ஞானியின் ‘மின்சாரக்கனவுக்கு’ அளிக்கப்பட்ட கோப்லி மெடல். அது எடுத்து சென்றவிடம், பேராசிரியர் ப்ரான்செஸ் ஆஷ்க்ராஃப்ட். ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை. இந்தியாவிலேயே சிறந்த விஞ்ஞானக்கூடங்களும், விஞ்ஞானிகளும் உண்டு. ஆனால், விஞ்ஞான விழிப்புணர்ச்சி, மிகக் குறைவு. எது எப்படி இருந்தாலும், வாசகர்களின் விருப்பம் தான் ராஜா. ராணியும் அதுவே.

    உசாத்துணை:

    http://royalsociety.org/events/2013/croonian-lecture/

    Notes Rec. R. Soc. Lond. 1960 15, doi: 10.1098/rsnr.1960.0020, published July 1, 1960:Downloaded from rsnr.royalsocietypublishing.org on May 30, 2013

    சித்திரத்துக்கு நன்றி: http://www.york.ac.uk/media/news-and-events/publiclectures/Frances%20Ashcroft.jpg


    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share