என் கதைமாந்தர்கள்…
காத்திருந்து காத்திருந்து
களைத்துப்போயிருக்கலாம்
என் கதைமாந்தர்கள்!
ஆட்டுவிக்கும் கர்வத்தில் நான்!
அலைக்கழிக்கப்படும் கலவரத்தில் அவர்கள்!
விதியை மாற்றுவதும் வீணே இழுத்தடிப்பதும்
இன்னாருடன் இன்னாருக்கு
இணக்கமா பிணக்கா என்பதை
இடைக்கிடை நிர்ணயிப்பதும்
நிர்ணயித்ததை நிராகரிப்பதும்
இடைச்செருகல்களாய்…
இன்னுஞ்சிலரை இணைப்பதும்,
இணைந்தோரை வலிந்து பிரிப்பதுமாய்
ஒரு பொம்மை விளையாட்டுப்போல்தான்
ஆரம்பித்தது அது…
துல்லியமாய் கணக்கிடவியலா
துளிப்பொழுதொன்றில்
நானும் அங்கோர் அங்கமாகிவிட
நகரமறுக்கிறது கதைக்களம்!
அம்மாந்தரோடு நாளெல்லாம்
செம்மாந்து திரியும் எனக்கு
நாட்பட நாட்பட…
புற உலகம் என்பது
புளித்துதான் போய்விட்டது!
படத்துக்கு நன்றி: http://completejoy.files.wordpress.com/2012/12/people-in-shadow.jpg