நான் அறிந்த சிலம்பு – 74
புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
இளவேனிலின் வருகை
திருவேங்கடப் பெருமாள் எழுந்தருளிய
வேங்கடமலையை வடக்கேயும்
குமரிக் கடலைத் தெற்கேயும்
எல்லையெனக் கொண்டது தமிழ்நாடு.
மாடமாளிகைகள் நிறைந்த ஊரானது மதுரை;
பெருமையில் சிறந்த ஊரானது உறையூர்;
ஆரவாரம் நிறைந்த நகரானது வஞ்சி;
ஒலிக்கின்ற கடலும் காவிரியும் உடையது புகார்.
இந்நான்கு நகரங்களிலும் ஆட்சி செய்தனன்
புகழும் சிறப்புமுடைய மன்மதராசன்.
அவனுக்குத் துணையெனவே
வந்துவிட்டனன் இளவேனில் என்பவனும்.
இச்செய்தியை குயிலோனுக்குத் தூது கூறினன்
வளத்தில் சிறந்த பொதிகை மலையில்
அகத்தியர் பெற்றெடுத்த தென்றல் என்பவன்.
ஆதலின்,
“மீன்கொடி மைந்தன்
மன்மதனின் படையிலுள்ள
மகளிர் அனைவரும்
நல் அலங்காரங்கள் செய்திடுங்கள்”
என்றேதான் சொல்லும் வண்ணம்
தென்றல் தூதுவன் இட்ட கட்டளையதனை
பூங்கொடிகள் நிறைந்த
சோலைப் பாசறையிலிருந்து
கொம்பு ஊதும் குயிலோன்
அறிவித்தனன் கூவியே.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 14
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html
படத்துக்கு நன்றி:
http://www.indiamart.com/forum-art-gallery/abstract-paintings.html