Blog

  • அவர் ஏன் பெருந்தலைவர்?

    பவள சங்கரி

    இன்று பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள். அவர் ஏன் பெருந்தலைவர்?

    kamaraj-lalbahardur

    தன் தாய்க்கு மாதம் 120 ரூபாய் சாப்பாட்டு செலவிற்குக் கொடுப்பாராம். ஒரு முறை அவருடைய தாயார், மகனிடம், செலவிற்கு பணம் போதவில்லை கொஞ்சம் சேர்த்து கொடுக்கும்படி கேட்டாராம். ஆனால் நம் தலைவரோ முடியாது என்று மறுத்துவிட்டாராம். முதல் அமைச்சரின் தாயார் என்பதால் அடிக்கடி அவரைக் காண வருபவர்களுக்கு காபி, தேநீர் கூட கொடுக்க முடியவில்லையே என்று அன்னை வருந்தியிருக்கிறார். அப்போது காமராஜரைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர், ‘நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்க, அவரும் உடனே, ‘என் தாயாருக்கு சாப்பாட்டு செலவுக்கு பணம் அனுப்பி வைக்கிறேன். என்னுடைய சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிக்குப் போவதால், சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் மட்டும்தான் அரசாங்கச் செலவு. நம் கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருகிறேன்’ என்று பதில் வந்துள்ளது. எத்தனை பெருந்தன்மை! இவரல்லவோ சிறந்த தலைவர்!

    Share
  • கர்மவீரர் காமராஜர்

    தஞ்சை வெ.கோபாலன்

    kamarajr13

    ஒவ்வோராண்டும் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாளை மறவாமல் இருக்கும்படி, இறைவன் என்னையும் அதே நாள், அதே மாதத்தில் பிறக்க வைத்துவிட்டான். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் இருந்தும், ஒரு தனித்துவம் மிக்கத் தலைவராக மிளிர்ந்தவர் காமராஜர்.

    நான் 1952இல் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து கர்மவீரர் காமராஜரைப் பற்றி தெரிந்து வைத்திருந்தேன். 1952ஆம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது. அப்போதெல்லாம் காங்கிரசில் ராஜாஜி கோஷ்டியென்றும் காமராஜ் கோஷ்டியென்றும் இரு பிரிவாகச் சொல்வார்கள். ஆனால் வெளிப்பார்வைக்கு அப்படி எதுவும் வெளிவராமல் ஒன்றுபட்ட கட்சியாகத்தான் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் மலபார் ஆகியவை உள்ளடங்கியதுதான் சென்னை மாகாணம். அப்போது ஆந்திரப் பகுதியிலிருந்து அதிகமான கம்யூனிஸ்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்கு வந்திருந்தார்கள்; காமராஜர் டெல்லி நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

    அப்போது காங்கிரசைவிட எதிர்கட்சியினர் மெஜாரிடி பலம் பெற்றிருந்த காரணத்தால் காங்கிரஸ் அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரசில் சிலர், குறிப்பாக சி.சுப்பிரமனியம், பொள்ளாச்சி மகாலிங்கம் போன்றோர் ராஜாஜியை முதலமைச்சராகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். முன்பே சொன்னது போல காங்கிரசில் ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் இருந்ததால் ராஜாஜி முதல்வராக வருவதை காமராஜ் அவர்கள் விரும்புவாரா என்ற பேச்சும் இருந்தது. அந்த நிலையில் திரு சி.சுப்பிரமணியமும், பொள்ளாச்சி நா.மகாலிங்கமும் பிரதமர் நேருவைச் சந்தித்து இதுகுறித்து அவருடைய கருத்தை அறிய முற்பட்டனர். ராஜாஜி முதல்வராக வருவதற்கு காமராஜரின் கருத்தைக் கேட்டீர்களா என்று நேரு கேட்டார். அவருடைய சம்மதத்துடன் தான் தாங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தனர், பிறகு ராஜாஜி சென்னை மாகாண சட்டமன்ற காங்கிரஸ் கூட்டத்தில் முதல்வராக முன்மொழியப்பட்டார். முன்மொழிந்தவர் திரு காமராஜர் அவர்கள். இதுதான் அரசியல் நாகரிகம். இன்றைய அரசியலில் கோஷ்டிகள் குறித்துப் பேசுவோர் இதுபோன்ற தலைவர்களின் கண்ணியத்தை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

    பெருந்தலைவர் காமராஜர் குறித்து அனைவருமே ஒருமித்த குரலில் சொல்வது அவர் “கல்விக் கண்ணைத் திறந்தவர்” என்பதுதான். அது முழுவதும் சரி; ஆனால் அது மட்டுமே அவர் பெருமைக்குக் காரணமல்ல, பல்வேறு பிற செயல்களும் அவரது தலைமைப் பண்புக்கும், மனிதாபிமானத்துக்கும், உயர்ந்த குணாதிசயங்களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. அவைகளை ஒருசில தலைப்புகளில் அடக்க வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அவை, அவருடைய ராஜ தந்திரம், சட்டத்தை மதித்தல், எதிர்க்கருத்துடையவர்களாக இருந்தபோதும் மரியாதை அளிக்கும் பண்பாடு, காலத்தைப் பொன்போலக் கருதுதல், முகத்துக்கு நேராக புகழ்ச்சி சொல்வோரை உடனடியாக கண்டித்து உட்காரவைக்கும் குணம், பேச்சில் நாகரிகம், ஜனநாயகப் பண்புகள், இப்படி பல விஷயங்களிலும் அவர் தனது தலைமைப் பண்புக்ளைக் வெளிக் காட்டியிருக்கிறார். அவற்றை, அதே வரிசையில் இந்த கட்டுரையில் காட்டவேண்டுமென்பது எனது அவா!

    1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேறு என ஒரு தீர்மானம் நிறைவேறியது. அடுத்த சில மணிகளில் மகாத்மா உட்பட பலரும் கைது செய்யப்பட்டு எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதுக்கூட தெரிவிக்காமல் கொண்டுசென்று சிறையில் அடைத்தனர். பல தலைவர்கள் ஊர் திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டனர். தீரர் சத்தியமூர்த்தியும் கைதானார். பெருந்தலைவர் காமராஜர் பம்பாயிலிருந்து ரயில் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவர் ரேணிகுண்டா வந்தபோது அவரைக் கைது செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் காத்திருக்கின்றனர் எனும் செய்தி கேள்விப்பட்டார். ஆனால் அவர் சிறைப்படுமுன் செய்ய வேண்டிய சில காரியங்கள் இருந்தன; அவைகளை முடித்துவிட்டுக் கைதாகலாம் என்று எண்ணி அவர் சென்னை வரும் வழியில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கினார். தலையில் ஒரு முண்டாசு கட்டிக்கொண்டு, தன்னுடைய உடைமைகளை ஒரு மூட்டையாகக் கட்டி தலைமீது வைத்துக் கொண்டு, ஒரு கிராமத்து விவசாயியைப் போல ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தார். வெளியே வந்தவுடன் அவ்வூர் கடைத்தெரு, அங்கு தேவராஜ ஐயங்கார் எனும் தியாகி ஒரு உணவு விடுதி நடத்தி வந்தார். காமராஜ் நேரே அவரிடம் சென்றார். மாறுவேடத்திலிருக்கும் காமராஜை ஐயங்கார் அடையாளம் கண்டு கொண்டார். அங்கிருந்து இருவரும் பஸ் ஏறி ராணிப்பேட்டை சென்றனர். அங்கு தீனபந்து ஆசிரமம் என்று ஒன்றை நடத்தி வந்த கே.ஆர்.கலியாணராம அய்யரைச் சந்தித்துவிட்டு, அவர் வீட்டில் போலீஸ் கண்காணிப்பு இருந்தமையால் அருகில் இருந்த ஒரு காங்கிரஸ்காரரின் தோட்டவீட்டில் இரவு தங்கிவிட்டு, மறுநாள், வேலூர், கடலூர், தஞ்சை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்று காங்கிரஸ் தொண்டர்களைச் சந்தித்து சில நோட்டீஸ்களை விநியோகித்துவிட்டு விருதுநகர் சென்றார். வீடு திரும்பிய காமராஜ் குளித்து உடை மாற்றிக் கொண்டபோது அவ்வூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் காமராஜ் இல்லம் வந்தார். உடனே தலைவர் தன்னை கைது செய்துகொள்ளலாம் என்று அவரிடம் சொல்ல, அவர் சொன்னார், “தாங்கள் வேலூரில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்து, இங்கிருந்து சில போலீசார் அங்கு சென்றிருக்கிறனர்; அவர்கள் திரும்பி வர ஓரிரு நாட்கள் ஆகலாம், அதுவரை தலைவர் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு கைதாகலாம்” என்றார். தலைவர் அதற்கு சம்மதிக்காமல் உடனடியாக காவல் நிலையம் சென்று கைதானார். இதுதான் தலைவருடைய கடமையுணர்வு அவரது நாணயம்.

    காங்கிரசில் ராஜாஜியும் காமராஜரும் இருவேறு கோஷ்டியை வைத்திருந்தனர் என்பர். ஆனால் ஒரு நிகழ்ச்சி இவ்விரு தலைவர்களும் எப்படி நடந்து கொண்டனர் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. ராஜாஜி பதவி விலகி அப்போது காமராஜ் முதலமைச்சராக ஆனார். ஒரு நாள் திருமலைப் பிள்ளை சாலையில் காமராஜ் இல்லத்தில் மாடியில் தலைவரும் திருப்பூர் வின்செண்ட் என்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தலைவரின் உதவியாளர் ஓடிவந்து ராஜாஜி தலைவர் இல்லத்துக்கு வருவதாக ஒரு செய்தியைச் சொன்னார். உடனே காமராஜ், அடடா! அவர் எதற்காக இத்தனை சிரமப்பட்டுக்கொண்டு இங்கு வரவேண்டும், சொல்லியிருந்தால் நானே அவரைப் பார்க்கப் போயிருப்பேனே என்று சொல்லிவிட்டு அவசரமாக இரண்டிரண்டு படிகளாக மாடிப்படிகளைக் கடந்து கீழே வந்து போர்ட்டிகோவுக்கு வரவும் ராஜாஜியின் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவரை காமராஜ் மிகவும் மரியாதையுடன் அழைத்துச் சென்று, தாங்கள் இத்தனை சிரமப்பட வேண்டுமா, சொல்லியிருந்தால் நான் தங்கள் இல்லம் வந்திருக்க மாட்டேனா என்று சொல்லிக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு அவ்விருவரும் அரை மணி நேரம் தனியாக ஏதோ பேசிவிட்டு ராஜாஜி வீடு திரும்ப வாசலுக்கு வந்தபோது தலைவரும் உடன் வந்து ராஜாஜியைக் காரில் ஏற்றிவிட்டு, கார் புறப்பட்டுப் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு திருப்பூர் வின்செண்டிடம் சொன்னார், “பாவம், பெரியவர், மிகவும் தளர்ந்து போய் காணப்படுகிறார்” என்று சொல்லிவிட்டு மெளனமாக அவர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாராம். இதுதான் அவரது பண்பாடு.

    திருமுருக கிருபானந்த வாரியார் சொல்வார், யானையைக் குழி தோண்டி பிடிக்க வேண்டும், பறவைகளை வலைவிரித்துப் பிடிக்க வேண்டும், மீனைத் தூண்டில் போட்டுப் பிடிக்க வேண்டும், மனிதனை முகஸ்துதி செய்து பிடிக்க வேண்டும் என்பார். அப்படி முகஸ்துதிக்கு மயங்காதார் யார்? ஒரு மேடையில் ஒருவரை வைத்துக் கொண்டே அவரை இந்திரன் சந்திரன், உப்பில்லாமல் ஒரு கலம் கஞ்சி குடிப்பார், வானத்தை வில்லாக வளைப்பார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அந்த நபர் உச்சி குளிர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார் அல்லவா? ஆனால் பெருந்தலைவர் காமராஜர் எப்படிப்பட்டவர், இங்கு ஒரு நிகழ்ச்சி. சென்னை திருவான்மியூரில் மகாத்மா காந்தியடிகள் சிலை திறப்பு விழா. திறந்து வைத்துப் பேசப்போகிறவர் தலைவர் காமராஜ். அப்போது பெரு மழை வரும்போல வானம் இருண்டு கருத்துக் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் வானம் பொத்துக்கொண்டு மழை ஊற்றலாம். அப்போது ஒருவர் மேடையில் பெருந்தலைவரைப் பற்றி வானளாவ புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். பார்த்தார் தலைவர், அவர் சட்டையைப் பின்புறமிருந்து இழுத்து போதும் நிறுத்து, உட்காருன்னேன் என்றார். அவர் உட்காரவில்லை. உடனே தலைவர் எழுந்து அந்த நபரை உட்கார வைத்துவிட்டு தானே மைக்கைப் பிடித்துப் பேசத் தொடங்கினார். அவர் சொன்னார், “என்னைப் பற்றி பேசவா இந்தக் கூட்டம். காந்தியடிகள் சிலை திறக்க இந்த கூட்டம், காந்தியடிகளைப் பற்றி பேசுன்னேன். என்னைப் பற்றி பேசினது போதும், இனி காந்தி பற்றி பேசலாம்” என்று சொல்லி சிலையைத் திறந்து வைத்து காந்தியடிகள் பற்றி பேசினார். அதுதான் பெருந்தன்மை. தற்புகழ்ச்சியை விரும்பாத மேதமை.

    1967 பொதுத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டது, தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதைவிட பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் விருதுநகர் தொகுதியில் மாணவர் தலைவர் ஒருவரிடம் தோற்றுப் போனார். ஆட்சியை இழந்ததும் தலைவர் எதிர்க்கட்சியினர் ஆளட்டும், அடுத்த ஓராண்டுக்கு அவர்களைப் பற்றி நான் எந்த விமர்சனமும் செய்யப்போவதில்லை. ஓராண்டுக்குப் பிறகு நான் பேசுவேன் என்றார். அப்படி ஒரு ஆண்டு முடிந்த பிறகு அவர் தஞ்சாவூர் திலகர் திடலில்தான் முதன்முதலாகப் பேசினார். அழுத்தம் திருத்தமான பேச்சு, காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள், அவர்கள் கட்டி வைத்த அணைக்கட்டுகள், மின்சார உற்பத்திக்கு அவர்கள் செய்த பணிகள், நீர்ப்பாசன வசதிகளின் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்வு போன்றவற்றையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு நிறைவாகச் சொன்னார். “நானும் கடந்த ஒரு வருஷ காலமாக இவர்கள் ஆட்சியைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இவர்கள் இது வரை என்னதான் செய்தார்கள்? நாம் அணைகளைக் கட்டினோம், மின்சாரம் உற்பத்தி செய்தோம், விவசாயத்துக்கு உதவி செய்தோம், இவர்கள் என்ன செய்தார்கள்? “வந்து கம்பியை நீட்டினார்கள்” என்றார். கூட்டம் ஆர்ப்பரித்து கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தது. அவர் சொன்னது, மின்சாரத்தை உற்பத்தி செய்தது நாம், இவர்கள் கம்பி இழுத்து அதனை விநியோகம் செய்தார்கள் என்ற பொருளில். அதை அவர் சொன்ன விதம் அவருடைய ஓராண்டு மெளனத்துக்குப் பின் அவர் எடுத்த விஸ்வரூபத்தைக் காட்டியது.

    நிறைவாக இந்த கட்டுரையாளனுக்கு ஏற்பட்ட ஒரு தனி அனுபவம். தஞ்சையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலகத்தில் விருதுநகரைச் சேர்ந்த ஐ.எஸ்.ராஜ்குமார் என்பவரின் மகன் ரவிக்குமார் என்பவர் என்னுடன் பணியாற்றி வந்தார். ஒரு நாள் அவர், நான் உட்பட சில நண்பர்களிடம், “அப்பச்சி தஞ்சாவூர் வந்திருக்கிறார். சர்க்யூட் ஹவுசில் தங்கியிருக்கிறார். என் தந்தைக்கு அவர் மிக நெருங்கிய பழக்கமுடையவர். வாருங்கள், உணவு இடைவேளையில் அவரைப் போய் பார்த்துவிட்டு வரலாம்” என்றார். எங்களுக்கும் மகிழ்ச்சி உடனே கிளம்பினோம். தலைவர் தங்கியிருந்த இடம் எங்கள் அலுவலகத்துக்கு மிக அருகில் என்பதால் உணவு இடைவேளையில் அங்கு சென்றோம். வாசலில் சில காங்கிரசார் நின்று பேசிக் கொண்டிருந்தனர். சிலர் உள்ளே போய்க்கொண்டும், சிலர் வெளியே வந்து கொண்டும் இருந்தனர். நாங்கள் ஐந்து பேர் உள்ளே சென்றோம். தூரத்தில் மரத்தடியில் சில போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். எங்களை எவரும் தடுக்கவில்லை. முன் அறையையும், அங்கிருந்த பலரையும் கடந்து தலைவர் உட்கார்ந்திருந்த அறைவாசலுக்குச் சென்றோம். அங்கும் எங்களை யாரும் தடுக்கவில்லை. அங்கு பலரும் நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும் தலைவருடன் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விலக்கிக்கொண்டு, இளைஞர்களாகிய நாங்கள் கதர் வேட்டி சட்டைகளுக்கு மத்தியில் பேண்ட் சட்டை அணிந்து கொண்டு போய் நின்றதும் தலைவர் திரும்பிப் பார்த்தார். யாரு? என்றார். நண்பர் ரவிக்குமார் நான் ஐ.எஸ்.ராஜ்குமாரின் மகன் ரவிகுமார், “அப்பச்சி வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்” என்றார். “அப்படியா, ராஜ்குமார் எப்படி இருக்கார், உடல் நலமாக இருக்காரா” என்று விசாரித்துவிட்டு, சும்மா பார்க்கத்தானே வந்தீங்க, பார்த்துட்டீங்கல்ல, சரி நீங்க போகலாம் என்று முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டு, சுற்றி இருந்தவர்களிடம் பேசத் தொடங்கினார். வீண் பேச்சு பேசவோ, தேவையற்ற கூட்டத்தைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு பந்தா செய்வதையோ தலைவர் விரும்பியதில்லை. காரியம் இருந்தால் பேசு, இல்லையேல் நடையைக் கட்டு என்பது அவரது கொள்கை. அது நமக்குச் சற்று வருத்தமாக இருந்தாலும், என்ன கடமை உணர்வு என்றல்லவோ அவரைப் பாராட்டத் தோன்றுகிறது.

    தலைவரைப் பற்றி எத்தனையோ செய்திகள். அவை ஒவ்வொன்றும் அவருடைய குணாதிசயங்களையும், அவரது பன்முகப் பரிமாணங்களையும் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. காலத்தால் அழிக்கமுடியாத அற்புதமான குணங்கள், தலைமைப் பண்புகள், பெருந்தன்மை, இரக்க குணம், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்கிற ஆற்றமாட்டாத தாகம் இவைகள்தான் மக்கள் தலைவர் காமராஜ்! அவர் புகழ் வாழ்க!

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வித்து இன்றிச் சம்பிரதம் இல்

     

    நாணின்றி ஆகாது பெண்மை. நயமிகு
    ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை – பேணுங்கால்
    கைத்தின்றி ஆகா கருமங்கள். காரிகையாய்!
    வித்தின்றிச் சம்பிரத மில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    நாண் இன்றி ஆகாது பெண்மை; நயமிகு
    ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,
    கைத்து இன்றி ஆகா கருமங்கள்;-காரிகையாய்!
    வித்து இன்றிச் சம்பிரதம் இல்.

    பொருள் விளக்கம்:
    நாணம் என்ற பண்பு இல்லாமல் பெண்மை என்ற குணம் அமைவதில்லை. நலம்தரும் உணவை உண்ணாமல் உயிர் வாழ்வது இயலாது. ஆய்ந்து நோக்கும்பொழுது கைப்பொருள் இன்றி நமக்குத் தேவையான செயல்களை நடத்திக்கொள்ள முடியாது. அழகிய பெண்ணே! விதைகள் இல்லாவிட்டால் விளைச்சலைக் காண்பதும் இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: கையில் பொருளின்றிக் காரியங்களைச் செய்து முடிக்க முடியாது. இக்கருத்து உண்ண உணவின்றி உயிர் வாழ்தலும் முடியாது, விதைக்க விதைகளின்றி விளைச்சலும் காண முடியாது என்ற உண்மைகள் மூலம் புலப்படுத்தப் படுகிறது. இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் தேவைப்படும் இன்றியமையாமையை விளக்க விரும்பிய வள்ளுவரும்,

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (குறள்: 247)

    பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை சிறப்பாக அமையாதிருப்பது போல கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமைய வழியில்லை என்று எடுத்துரைக்கிறார்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”காசிக்குப் போனாலும், காலை விடாதபசு,
    நேசிப்பைக் கண்டு நெகிழ்ந்ததால், -ஸ்வாசிப்பை,
    வேடனம்பு கொண்டவுடன், வைகுண்டம் செல்கையில்
    மாடணைந்து செல்கின்றான் மால்’’….கிரேசி மோகன்….

    வேடன் அம்பு -ஜரா வேடன் அம்பு மாடு வருடும் அதே
    பாதத்தில் பட்டு கிருஷ்ணாவதாரம் முடிகிறது….
    பாதம் வருடும் பாதசாரி மாடு பார்த்தசாரதியோடு
    பரமபதம் பயணிக்கிறது….சபாஷ் கேசவ்…. 

    Share
  • கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி!

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி

    kamarajar

    வணக்கம். அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும்.

    நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது. எளிமைக்கு இவர், இனிய எடுத்துக்காட்டு! கருப்புத் தங்கம்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் மாநிலத் தலைவர் – இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்…. இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரிகளை நிர்மாணித்த கிங் மேக்கர்! தன்னிகரில்லாப் பெருந்தலைவர்! ஈடில்லா உழைப்பாளி! மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே தியாக வாழ்வேற்று மறைந்த மா மனிதர் இவர் என்பதை இவரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் சாட்சி சொன்னது!

    அந்த நன்றிப் பெருக்கோடு உளம் கனிந்து அத்திருமகனாரை நினைவில் நிறுத்தும் பொருட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கர்மவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகள், வல்லமை மின்னிதழில் வெளியாகும். வெற்றி பெறும் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு உண்டு. தேர்வு பெறும் கட்டுரைகள், நூல் வடிவம் பெறும்.

    இக்கட்டுரைப் போட்டியின் நடுவர் பொறுப்பினைத் தமிழறிஞரும் சிறந்த சொற்பொழிவாளரும் காமராசர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவரும் பண்பட்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் ஏற்றுள்ளார். தமிழருவி மணியன் அவர்களுக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியை முன்மொழிந்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கும் நமது நன்றிகள்.

    15.07.2015, காமராசர் பிறந்த இந்த நன்னாளில் இந்தக் கட்டுரைப் போட்டியை நடத்துவதில் பெருமை கொள்கிறோம். படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்று, பரிசுகளை வெல்ல அழைக்கிறோம்.

    உங்கள் கட்டுரையை யூனிகோடில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, 15.08.2015க்குள் vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

    பரிசுத் தொகை – முதல் பரிசுகள் மூன்று …. ரூ.1000 வீதமும்

    இரண்டாம் பரிசுகள் இரண்டு ரூ.750 வீதமும் மற்றும் மூன்றாம் பரிசுகளாய் மூன்று ரூ.500 வீதமும் வழங்கப்படும்! (மொத்தப் பரிசுகள் – ரூ.6 ஆயிரம்)

    மேற்கண்ட பரிசுகளைத் தவிர, பங்கேற்கும் அனைத்துக் கட்டுரைகளும் பரிசீலித்து, தகுதியுள்ள படைப்புகள் நூல் வடிவம் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்!

    ஒருவரே ஒரு கட்டுரைக்கு மேல் அனுப்பலாம்; எந்தத் தடையும் இல்லை..

    கட்டுரைப் போட்டி முடிவுகளைப் பொறுத்தவரை, நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

    போட்டியில் அனைவரும் பங்கேற்று, பரிசுகளை வெல்லுமாறு அன்போடு அழைக்கிறோம். வாழ்த்துகள் நண்பர்களே.

    Share
  • எப்பொழுதும் நீ என்னை ஆதரி!

    -மன்னை சரஸ்வதி ராசேந்திரன்

    புள்ளி           மயில்         வாகனா
    வள்ளி         மனம்          கொண்டவா                muruga
    துள்ளி          வரும்         வேலுடன்
    அள்ளித்      தருவாய்      அருளையே!

    சந்த            இசை            ஷண்முகா
    கந்த            மலைக்           கடம்பனே
    வந்தெ        னெக்குக்         காட்சிதா
    சந்தம்         இசைத்துப்      பாடறேன்

    வள்ளிக்         கணவா         வடிவேலா
    உள்ளங்           கவர்        அழகனே
    தள்ளி           நின்றது       போதுமய்யா
    அள்ளி         அணைத்துக்    காத்திடு

    அப்பனுக்குப்    பாடம்       சொன்ன
    சுப்பையா      சாமிமலை   முருகா
    தப்பெதுவும்   செய்யாமல்   காத்திடு
    எப்பொழுதும்   என்னை      நீஆதரி

     

    Share
  • ஜாதி இரண்டல்ல, வேறும் உண்டு

    நாகேஸ்வரி அண்ணாமலை.

    மனித இனத்தில் ஆண், பெண் என்ற பாகுபாட்டைத் தவிர வேறு ஜாதிப் பிரிவுகள் இல்லை என்ற கருத்து தொன்றுதொட்டு வழக்கில் இருப்பது. ஆனால் இப்போது முன்னர் குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளைத் தவிர இன்னும் ஐந்து பிரிவுகள் (LGBTQ) வந்துவிட்டன. இவர்கள் ஆண் இனத்திலும் சேர முடியாதவர்கள்; பெண் இனத்திலும் சேர முடியாதவர்கள். இதைக் காலத்தின் கோலம் என்பதா அல்லது மனிதன் செய்த தவறுகளால் வந்த விளைவுகள் என்பதா? எது எப்படியாயினும் இவர்கள் தங்கள் உரிமைகளுக்காக வெகுவாகப் பாடுபட வேண்டியதாயிருக்கிறது.

    தன்பால் ஈர்ப்பினர்களுக்கு இப்போது அமெரிக்காவில் அவர்களுக்குரிய உரிமைகள் கிடைத்திருக்கின்றன. ஒரு வழியாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தன்பால் ஈர்ப்ப்பினர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்வதைச் சட்டமாக்கியிருக்கிறது. பல தசாப்தங்களாக இதற்குத் தீர்வு வேண்டியும் இத்தகைய திருமணங்களை எதிர்த்தும் அமெரிக்கர்கள் போராடி வந்தனர். உச்சநீதிமன்றம் வரை இந்தப் போராட்டம் சென்றது. இப்போது உச்ச்நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேர் தன்பால் ஈர்ப்பினர்கள் திருமணம் என்ற பந்தத்தில் இணையலாம் என்று கூறியிருப்பதால் இம்மாதிரியான சேர்க்கையை அமெரிக்கா சட்டப்படி ஒப்புக்கொண்டுள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.

    எத்தனை போராட்டங்களுக்குப் பிறகு தன்பால் ஈர்ப்பினர்கள் தங்களுக்குரிய உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்! இரண்டாவது உலக யுத்தத்தின்போது ஜெர்மானியப் படைகளின் நடமாட்டத்தைக் கண்டறிய பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் டூரிங் (Alan Turing) என்னும் பெரிய கணித மேதை ‘ஜெர்மானியர்களின் சங்கேத மொழியை உடைத்தார். இதற்கென்று ஒரு எந்திரத்தை உருவாக்கினார். இவருடைய இந்த முயற்சியால்தான் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற நேச நாடுகள் ஜெர்மன் படைகளின் முன்னேற்றத்தை முறியடிக்க முடிந்தது. இவருடைய இந்தக் கருவிதான் பின்னால் கணினியை விஞ்ஞானிகள் உருவாக்கக் கருவாக அமைந்தது. இவர் மனித குலத்திற்கு இவ்வளவு பெரிய சேவை செய்திருந்தாலும் அரசு இவர் ஒரு தன்பால் ஈர்ப்பினராக இருந்ததால் இவர் சாதனையை அங்கீகரிக்கவில்லை. அது மட்டுமல்ல, இவரை சிறையில் அடைப்பதற்கும் தயாராக இருந்தது. அவர் சிறை செல்வதைத் தவிர்க்க வேண்டுமென்றால் ஹார்மோன் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தது.

    ஹார்மோன் சிகிச்சையினால் அவருக்கு நிறையப் பக்க விளைவுகள் உண்டாயின. இவற்றின் துன்பம் தாங்காமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். என்ன கொடுமை பாருங்கள் (ஒரு ஆப்பிள் பழத்தில் விஷத்தைத் தட்விச் சாப்பிட்டு இறந்தார்; இதனாலேயே கடிபட்ட ஆப்பிளை ஆப்பிள் கம்பெனி தன் சின்னமாக வைத்துக்கொண்டது என்று யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேன்). மனித குலத்திற்கு அவர் செய்த சேவைக்கு அவருக்குக் கிடைத்த வெகுமதி சிறைவாசம் அல்லது கட்டாய ஹார்மோன் சிகிச்சை. அப்போதுள்ள மனிதர்களுக்கிருந்த இந்த விஷயங்கள் பற்றிய குறைந்த அளவு அறிவால் ஆலன் டூரிங் போன்றவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாயினர். ‘பூமியை சூரியன் சுற்றவில்லை. பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது’ என்ற மகத்தான கண்டுபிடிப்பை உலகுக்கு வழங்கிய கோப்பர்னிகஸுக்குக் கிடைத்த தண்டனை பற்றி நம் எல்லோருக்கும் தெரியுமல்லவா?

    ஆழமான மதநம்பிக்கை உள்ள பல அமெரிக்கர்களுக்கு திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடப்பதான உறவே தவிர இரு ஆண்களுக்கும் இரு பெண்களுக்கும் இடையே நடக்கும் உறவல்ல என்பது வேதவாக்கு. ஏனென்றால் கிறிஸ்தவர்களின் வேதப் புத்தகமான பைபிளில் இப்படிக் கூறப்பட்டிருக்கிறதாம். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஏன் மனிதன் நினைப்பதில்லை? முதலில் பைபிளில் கூறப்பட்டிருப்பதெல்லாம் இறைவன் இட்ட கட்டளைகள் என்று ஏற்றுக்கொள்வதற்கில்லை. இயேசு காலத்திற்குப் பிறகு அவருடைய சிஷ்யர்கள் எழுதியவற்றின் தொகுப்புதான் பைபிள். இந்த வரலாற்று உண்மையை ஏற்க மறுப்பவர்களும் காலத்திற்கேற்ப மனிதன் மாற வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டேயாக வேண்டும். அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்புகள், அரசுகள், உணவு முறைகள் இப்போது இல்லை. அந்தக் காலத்திலும் தன்பால் ஈர்ப்பினர்கள் ஒரு சிலர் இருந்திருக்கலாம். இப்போது பெரிய சதவிகிதத்தினர் தன்பால் ஈர்ப்பினர்களாக இருக்கிறார்கள். இதற்கு மனிதன் இப்போது உபயோகப்படுத்தும் பல ரசாயனப் பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று நான் திடமாக நம்புகிறேன்.

    இதற்கு விஞ்ஞான ரீதியாக இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை ஆயினும் பலர் இதில் உண்மை இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் நிறைய வேதியல் பொருள்கள் கலந்திருப்பதால் மனித உடம்பில் ஹார்மோன்களின் விகிதம் வேறுபடுகிறது. இதுதான் ஆண், பெண் என்ற பாகுபாட்டிற்கு மேலும் சில பாகுபாடுகள் தோன்றக் காரணமாக இருக்கிறது.

    தன்பால் ஈர்ப்பினர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி அவர்கள் பல உரிமைகளைப் பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. மனிதன் ஒரு சமூகமாக வாழ விரும்புவதற்கு மனிதன் தனி மரமல்ல என்பார்கள். அதுபோல் அவன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போவதற்கும் துணை தேவைப்படுகிறது. இதை ஏன் சமூகம் அவர்களுக்கு மறுக்க வேண்டும்? அவர்களால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாதாகையால் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்க்கிறார்கள். இரண்டு ஆண்களே அல்லது இரண்டு பெண்களே பெற்றோர்களாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் சிறப்பாக வளர முடியாது என்பது சிலரின் வாதம். ஆணான தந்தையும் பெண்ணான தாயும் பெற்றோர்களாக இருக்கும் குடும்பங்களில் வளரும் குழந்தைகளில் எத்தனை பேர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுகிறார்கள்? ஆண் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்கள் பலவற்றில் குழந்தைகள் திசைமாறிப் போகின்றனவே. பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து அன்போடும் பாசத்தோடும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    தன்பால் ஈர்ப்பினர்கள் தங்களுக்கென்று ஒரு துணையைத் தேடிக்கொள்வதால் அவர்களுக்கு வாழ்க்கையில் பலவிதத்தில் தார்மீக ஆதரவு கிடைக்கிறது. வாழ்க்கையில் சோதனைகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றைத் தாங்கிக்கொள்ள, அவற்றைப் பகிர்ந்துகொள்ள ஒரு துணை இருக்கிறது. கடைசிக் காலத்தில் அவர்களின் வயோதிகத்தில் பங்கு பெற ஒரு துணை இருக்கிறது. தன்பால் ஈர்ப்பினர்களின் திருமணங்களை எதிர்ப்பவர்கள் இதை எல்லாம் ஏன் எண்ணிப் பார்ப்பதில்லை? அவர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தானே. நமக்கிருக்கும் இந்த உரிமைகளை அவர்களுக்கு ஏன் மறுக்க வேண்டும்?

    அமெரிக்க உச்சநீதிமன்றம் காட்டிய பாதையை மற்ற நாடுகளும் – இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடுகள் உட்பட – பின்பற்றும் என்று மனமார நம்புவோம்.

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (22)

    வையவன்

    எங்கே போவாய் சிவா? அந்தக் கேள்வி கூடவே அவனுடன் நடந்து வந்தது.
    அதிகாலையில் சிவா மெரீனாவிற்குப் போனான். ‘வாக்கிங்’ பயிற்சிக்கும் ஓட்டப் பயிற்சிக்கும் ஆண்களும் பெண்களும் கடற்கரைச் சாலையில் சுறுசுறுப்பாக நடந்தார்கள். ஓடினார்கள்.

    அவன் மைலாப்பூரில் நர்ஸிங் ஹோமிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டான்.
    புறப்படும் போது பிரீதா கேட்டாள்.

    “தெரியலே…எங்கேயோ போகணும் போலிருக்கு!”
    “டிபன் சாப்பிட வந்துடு. எனக்கு காலைலே டூட்டி புட்டு செஞ்சு வச்சுட்டுப் போறேன். வந்து சாப்பிடு. இந்தா டூப்ளிகேட் சாவி!”
    பிரீதா நீட்டியபோது வாங்க மனமில்லை.

    “எங்க போறேண்ணே தெரியலே. எப்ப வருவேண்ணும் தெரியாது.”
    “பரவால்லே. எங்கிட்டே வேறே ‘கீ’ இருக்கு”
    “ஒருவேளை நான் ஊருக்குப் போய்ட்டா…?”
    “நானும் ஊருக்கு வருவேன்”
    அவன் பிரீதாவை நிமிர்ந்து பார்த்தான்.

    “யூ நோ! எனக்கு எப்படி இருக்கும்ணு நீ யோசிச்சியா?”
    அவள் கண்கள் கலங்கின. தளும்பி நின்ற அந்த கறுப்பு ஊற்றுக்களின் கீழே சமுத்திரம் குமுறிக் கொண்டிருக்கிறது.

    “என்னைப் பத்தி யோசிக்கவே மறந்துட்டே இல்லை?”
    மெய்தான். சிவா யாரைப் பற்றியும் யோசிக்க மறந்து விட்டான். விழுந்த அடி அவன் முதல் அனுபவம்.வழங்கப்படுகிற எந்த பாதுகாப்பும் எந்த ஆறுதலும் எந்த உறவும் எப்போதும் எந்த வினாடியிலும் ரத்து செய்யப்படும் என்ற கொடூரமான உண்மை தான் எல்லாவற்றிற்கும் அஸ்திவாரமாக நிற்கிறது.

    அது அவனைச் சந்தித்துப் போயிற்று. அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட பின்னால் அவனுக்கு யாரைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை.

    “எங்கே போவாய் சிவா?”
    அதே கேள்வியை திஷ்யாவும் கேட்டாள்.

    ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் தாமுவின் உடமைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு, தாமுவின் மாமா வீட்டைக் காலி செய்த பின்பு தனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கேட்டாள்.
    “இப்ப பிரீதா க்வார்ட்டர்ஸிலே தங்கப் போறேன். அப்புறம் எங்க போவேண்ணு தெரியலே.”

    “மறந்துடுவீங்களா?”
    சிரித்துக் கொண்டே தான் கேட்டாள். நெஞ்சைக் குத்தும் சிரிப்பு. கண்ணீரை ரஸவாதம் செய்து வாக்குறுதிகளின் மெருகேற்றிக் கேட்ட சிரிப்பு.

    “வேணும்னா சொல்லு! ஐ வில் ட்ரை!
    புண்ணியகோடியின் தற்கொலை முயற்சி பற்றிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அவர் பல்லாவரத்திற்கு மாறுதல் வாங்கியிருந்தார்.

    குடும்பத்தை அனகாபுத்தூருக்கு மாற்ற வீடு பார்த்துக் கொண்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டி அவன் சொன்னான்.

    “நினைப்பு இருந்தா சரி!” அவள் மீண்டும் இடக்கு பேசினாள்.

    அவனுக்கு வேடிக்கை பேச மனசில் பசுமையில்லை.

    “திஷ்யா… இதை நீ உங்க அப்பாகிட்டே சொல்லு.”
    “ஏன்?”
    “இப்ப அவர் என்னைப் பார்க்கவே இஷ்டமில்லாதவர் போல போறார்… வர்றார்”
    தாமுவின் மரணத்திற்குப் பின்னர் புண்ணியகோட்டி விலகி விலகித்தான் நடந்தார். தாமு என்ற பின்னணி தகர்ந்து போனதும் அவன் தலையீடுகளெல்லாம் பெரும் பிழைகள் என்று அவருக்குத் தோன்றியிருக்குமோ!
    ராயப்பேட்டை வாசம் அவரை மனக்கோட்டைகள் இடிந்த மைதான வாசம் மாதிரி மாற்றியிருக்கக் கூடும்.

    பாவம்… துரத்துகின்ற நிழலுக்குப் பயந்து எட்டாத கானலுக்கு ஓடித் தோற்றவர்! அவர் மீது அவனுக்கு அனுதாபம் தான் வந்தது.

    “கொஞ்சம் இரு சிவா!” திஷ்யா உள்ளே போய் ஒரு வெள்ளைத் தாளில் விலாசம் எழுதிக் கொண்டு வந்தாள்.

    “வீடு கெடைச்சுட்டுது. இதான் புது அட்ரஸ். தபால் போடு”
    “தபால் தானே… எழுதறேன். எனக்கு விலாசம் கெடைக்கற வரைக்கும் நீ பதில் எழுத வேண்டாம். நான் தபால் எழுதிக்கிட்டே இருப்பேன்.”
    “சரி” அவள் நம்பிக்கையோடு சிரித்தாள்.

    “எங்கே போவாய் சிவா?” அப்புறமும் கேட்டாள்.
    அவன் கைகளை விரித்துக் காட்டி விட்டு வெளியேறினான்.
    எங்கே போவாய் சிவா?
    அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

    மெரீனாவிலிருந்து கரையோரமாக வெயிலை எதிர்பார்த்து விரிந்த வலைகளையும் கட்டுமரங்களையும் கடந்து நடந்தான்.

    அலைகள் கரையை விட்டுக் கொஞ்சம் பின் வாங்கியிருந்தன.
    கிழக்கே உதயத்தின் முதலாவது முலாம் பூசப்பட்டிருந்தது. இன்னொரு நாள் விடிவதை எதிர்பார்த்துக் கொண்டு மீனவர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர்.

    அவன் அலைகள் ஓயாத அந்த ஜீவ இயக்கத்தில் போக்கிடமற்ற ஒரு பயணி போன்று பார்வையாளனாக குறியற்று, நோக்கற்று நடந்தான்.

    லைட் அவுஸுக்குப் பின்புறம் உயர உயரமாக நின்ற கயிற்றுக் கருணைகள் வந்ததும் உட்கார் என்று யாரோ உத்திரவிட்ட மாதிரி உட்கார்ந்தான்.
    உதயமாயிற்று.

    மாணிக்கப் பசும்பொன் போன்று அந்த சிவப்பு வட்டம் கடல் விளிம்பிலிருந்து மெதுமெதுவே விடுதலையாகி சாண் உயர்ந்தது. முழம் உயர்ந்தது. மார் உயர்ந்தது.

    இது நேற்றும் வந்தது. உண்டோம். உறங்கினோம். மீண்டும் உதயமாகியிருக்கிறது.
    எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்…என்ற தாயுமானவர் பாடல் சரேலென்று நினைவுக்கு வந்தது.

    அதே இடத்தில் அமர்ந்து ஒரு சந்திரோதயத்தைத் தரிசித்ததை எண்ணினான் சிவா. அப்போது நினைவில் ஒரு தோணி போல் மிதந்து வந்த வாசகம் ஞாபகமாயிற்று.

    விடுதலை பெறுக!
    அம்மா, திஷ்யா, பிரீதா.

    பெண்களின் பந்தங்கள் தான் தன்னை இறுக்கி யிருந்தன என்று நினைத்திருந்தான் அதுவரை. தாமுவின் மரணம் ஒரே வீச்சில் அந்த நினைப்பை வெட்டி வீழ்த்தி விட்டது. உருவாக்கியது தெரியாமல் அவனை தாமு உருவாக்கியிருந்தான். அந்தக் கரம் வீழ்ந்ததும் தனக்குள் சுற்றிய சக்கரம் நின்று போனதை ஒரு சூன்ய உணர்வோடு அவன் உற்றுக் கவனித்தான்.

    தூரத்தில் முதலாவது கட்டுமரம் அன்றைய தினத்தை வரவேற்க கரைக்கு வந்து கொண்டிருந்தது. மீனவப் பெண்களும் குழந்தைகளும் அலைகளுக்கு அஞ்சாமல் அதனருகே ஓடினர்.

    இரவைக் கடலின் மடியில் கட்டுச் சோற்றுடன் கழித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.

    பசி தீர உண்பதுவும் உறங்குவதுமாக மட்டுமா வாழ்க்கை முடிகிறது?
    வேதாந்திகளுக்கும் வாழ்க்கையை உதறிய துறவிகளுக்கும் ஒருவேளை யோசிக்கும் வேளையில் அப்படி முடியலாம்.

    ஓர் அலை எதிரில் வந்த கட்டுமரத்தை உந்தி கரைக்குத் தள்ளிற்று.

    அதோ பசி தீர உண்பதற்கும் உறங்குவதற்கும் கூட இயற்கையை எதிர்த்து, அலைகளோடும் சுறாக்களோடும் யுத்தம் செய்து நடக்கும் அந்த முயற்சியில் என்ன வேகம்! என்ன விளையாட்டு!

    கரையேறுவதற்குச் சாடி வந்த அலை ஒன்று சிலீரென்று அரைந்து தன் நுரைப் பாவாடையை விரித்துச் சிரித்தது. அதற்கு அது தோல்வியோ. அது மீண்டும் வரும். அதற்கு வெற்றியுமில்லே. தோல்வியுமில்லை.

    விடுதலை பெறுக.

    அவனுக்கு அந்த வாசகம் மீண்டும் ஞாபகம் வந்தது.
    அதற்கு அவனுக்கு இப்போது புதுப் பொருள் புரிந்தது.

    சார்பு நிலையிலிருந்து விடுதலை பெறுக…நீ எழுந்து உன் சொந்தக் கால்களில் நட… சிவாவுக்கு உடம்பு விறுவிறுத்தது.

    தன்னைக் கவிந்திருந்த முட்டையின் கூடு நொறுங்கி வெப்பமும் கடினமும் வாய்ந்த நிலப்பரப்பில் வந்து விழுந்த ஒரு சிலிர்ப்பு தோன்றியது.
    திஷ்யா, நான் விடுதலையாய் விட்டேன்.

    பிரீதா நான் விடுதலையாகிறேன்.
    அம்மா எனக்கு விடுதலை.

    தாமு உங்களுக்கு நன்றி. அரவணைத்தீர்கள். ஆதரவளித்தீர்கள். மேலே ஏறு என்று பொறுப்பளித்தீர்கள். அப்பாலே போ என்று அகன்று போய் விட்டீர்கள். நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி.
    சிவா வெய்யில் உறைக்கவே எழுந்தான்.

    கூழ் மாதிரி ஜெல்லி மீன் மாதிரி நெகிழ்ந்து குழைந்து வந்து அங்கே உட்கார்ந்திருந்து விட்டு மீள எழுந்தபோது எஃகு மாதிரி உறுதியோடு நிமிர்வதை நினைத்தான்.

    பதினெட்டு நாட்கள் கழித்து அவனுக்குப் புன்னகை வந்தது.
    தான் அப்படி இருந்ததை தாமு ரசித்திருப்பானா?

    இல்லை. யார் ரசிக்கிறார்கள்… யார் ரசிக்கவில்லை என்பது இனி எனக்கு அளவுகோல் இல்லை. நான் அப்படி இருந்தது எனக்கு ஒரு தேவை. இந்த விடுதலைக்காக என்னை உதறி என் கட்டுகளை வெட்டியெறிவதற்கு ஒரு தேவை!
    அவன் மணலில் வேகமாக நடந்தான்.

    கயிற்றுக் கருணை நின்ற அந்த கடற்கரை மூலையிலிருந்து நடக்க நடக்க ஒரு நதி மூலம் உதித்த மாதிரி யோசனைகள் வந்தன. திடமான, ஆண்மை பொருந்திய யோசனைகள் – தீர்மானங்கள்.
    இப்போது அவனுக்குப் பசித்தது.

    பிரீதா க்வார்ட்டர்ஸுக்குப் போக வேண்டும் போல் தோன்றியது. அவன் வேகமாக நடந்தான்.
    அங்கிருந்து புறப்பட்ட சிவா வேறு சிவா. அவனுக்கு மரணம் வழங்கிய அதிர்ச்சி தீர்ந்து வாழ்க்கை வழங்கிய உத்வேகம் நிரம்பிய சிவா.

    யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடிந்தாலும் இந்த நாடக அரங்கில் தன் பாத்திரம் என்ன என்று உணர்ந்த சிவா.

    அம்மா… வெற்றிவேல்… தாமு… திஷ்யா… பிரீதா எல்லோருமே தனித்தனியாக இதைத்தான் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தார்கள். உணர வேண்டுமென்று ஊதி ஊதி ஓதிக் கொண்டிருந்தார்கள்.
    புரிந்து கொள்வதற்கு தாமதமாகி விட்டது.

    அவனுக்கு அந்த கடற்கரைக் காற்றைப் போல் மனசு பரிசுத்தமாயிருந்தது. லேசாயிருந்தது.
    ஜனனத்தைத் தனியே சந்தித்தேன். மரணமே உன்னையும் தனியே சந்திக்க வேண்டும்! நல்லது; காத்திரு… இந்த இடைவேளையில் எனக்கு ஒரு வேலை இருக்கிறது.

    இதோ உருவழிகிற இந்த காலடிச் சுவடுகள் போன்று என் வேலைக்கு எனக்கு அப்புறம் எந்த அடையாளமும் இல்லாமற் போகலாம்! நல்லது. வேலை…வேலை தான் அடையாளம் பதிந்தாலென்ன? அழிந்தாலென்ன?

    ஆயிரம் மனப் பிரமைகளுக்கு நடுவில் நேர்கிறது இந்த ஜனனம் என்ற விபத்து. இதற்கு ஆளான கோடிக்கணக்கானவரிடம் எனக்கு ஒரு வேலை உண்டு. என்னிடம் ஒரு பேனா உண்டு.

    இயற்கையாகவோ செயற்கையாகவோ இந்த மனிதர்கள் கலைத்துப் பிரித்து ஏற்படுத்தியிருக்கும் சிக்கலில் ஓர் இழையையாவது நேராக்குகிற வேலை கதை சொல்லும் வேலை. சிந்தித்து என் பிரார்த்தனைகளைப் பகிர்ந்து கொள்கிற வேலை.

    அக்கரையில் – இல்லை – அடுத்த அசைவிலேயே மரணம் காத்திருக்கிறது. ஆல்ரைட்.
    எப்போது வேண்டுமானாலும் அது வந்து என பந்தங்களில் எதை வேண்டுமானாலும் அது பறித்துச் செல்லட்டும். இந்த நிமிஷம்…இந்த வினாடி யெனினும் அதற்கு நானும் தயார்.

    அது விட்டு வைக்கிற வரை நான் என் வேலையைச் செய்வேன். சிந்திப்பேன். எழுதுவேன். என்னை வெளிப்படுத்துவேன்.

    பிரீதாவின் குவார்ட்டர்ஸுக்கு வெளியே ஒரு கார் நின்றிருந்தது.
    யார் வந்திருப்பது?
    அவன் படியேறும் போதே கணீரென்ற ஒரு குரல் அவனை வரவேற்றது.
    “வா சிவா”
    வெற்றிவேல்.

    பளபளவென்று கலையாத தலையோடு, இன் பண்ணிய உடையும் பாலீஷ் மின்னும் ஷûவுமாக மின்னிக் கொண்டு கையில் சிகரெட் புகைய அவன் வெளி வராந்தாவில் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.

    “எப்போ வந்தே?”
    “வழக்கப்படி ஐயாவுக்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன். ஒரு மணி நேரம் ஆச்சு”இந்த அட்ரஸ்?”
    “திஷ்யா சொன்னா”
    திஷ்யா என்ற பெயரையும் சொன்னாள் என்ற ஒருமையையும் ஒரு சுதந்திரத்தோடு பிரயோகித்ததை சிவா கவனித்தான்.

    “நர்ஸம்மா வந்து இங்கே வெய்ட் பண்ணிகிட்டிருங்க. வந்துடுவார்ணு சொல்லிட்டுப் போனாங்க”
    “நீ சாப்பிட்டியா… எனக்குப் பசிக்குது” என்று வெறுமனே மூடியிருந்த கதவைத் திறந்து கொண்டே கேட்டான்.

    “நான் சாப்பிடல்லே. வா ரெண்டுபேரும் ஒரு ஹோட்டலுக்குப் போவோம். ஒனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கேன்.”

    “வெற்றி… எனக்கு ஹோட்டலுக்கு வர்ற அளவு பொறுமை ல்லே. பசி… உயிர் போவுது… உள்ள வா! பிரீதா புட்டு பண்ணி வச்சிருப்பா. உள்ளே பிரெட் பிஸ்கெட் எதாவது இருக்கும். ஷேர் பண்ணிப்போம்.”
    “ஆல்ரைட்”
    வெற்றிவேல் உள்ளே எழுந்து வந்தான்.

    புட்டு வைத்திருந்த பாத்திர மூடியைத் தூக்கிப் பார்த்தான். இரண்டு பேருக்கும் காணாது. அரை லோஃப் ரொட்டி இருந்தது. தொட்டுக் கொள்ள ஜாமோ சாஸோ இல்லை. அது போன வாரமே தீர்ந்துவிட்டது.

    புட்டு ஆறி வறவற வென்றிருக்கும். எங்கிருந்தோ தேடி வந்திருப்பவனுக்கு இந்தத் தண்டனை எதற்கு?
    சிவா சட்டென்று ஸ்டவ் ஸ்விச்சை “ப்ளக்”கில் செருகினான்.

    “என்னடா செய்யப்போறே… சமையலா?”
    “பத்து நிமிஷம் உட்காரு. ஒரு டொமாடோ சூப் வச்சுடறேன்.”
    “ஹோட்டலுக்கே போயிருக்கலாம்.”

    “அங்கே புட்டும் டொமாட்டோ ஸுப்பும் சேந்து கெடைக்காது” என்று முட்டை வைத்திருக்கும் பெட்டியைத் தூக்கிப் பார்த்தான். நல்ல காலம் நாலு முட்டைகள் இருந்தன. வெற்றிவேலுக்கு ஆம்லெட் பிடிக்கும்.

    “எங்கிருந்து வந்தே? ஏன் வந்தே?”
    “இதான் விருந்தாளிக்கிட்டே பேசற மானர்ஸா?”
    “நீ விருந்தாளியில்லே. ஒனக்கு மானர்ஸ் எதுக்கு?”
    “சிங்காரப் பேட்டையிலிருந்து புறப்பட்டு வர்றேன். ரிஷிகேஷிற்குப் போய்க்கிட்டிருக்கேன்… ஐம் ஸாரி, போகப் போறோம்.”
    “ரிஷிகேஷ்?” சிவா நெற்றியைச் சுருக்கியவாறே திரும்பிப் பார்த்தான்.

    “எஸ்…ரிஷிகேஷ்” என்று மீண்டும் வெற்றிவேல் வலியுறுத்தினான்.
    “நான் கூடவா?”
    “ஆமாம்; நீ கூட”
    “அங்கே என்ன விசேஷம்?”
    “பாபா ஓம்கார்நாத் கைலாச யாத்திரை தொடங்கப் போறார். அங்கே நண்பன் ஒருவன் கடிதம் எழுதியிருந்தான்.”

    பாபா ஓம்கார்நாத் என்ற சொல் ஜிவ்வென்று ரத்த ஓட்டத்தில் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கிற்று. அடுத்த கணமே தன்னை சிவா சுதாரித்துக் கொண்டான்.

    “பாபாக்கள் கிட்டேயிருந்தும் ஸ்வாமிஜிகள் கிட்டேயிருந்தும் ஒனக்கு இன்னும் விடுதலை கிடைக்கலியா?”
    “பாபாவுக்கு பந்தமில்லை. அவர் கடிதம் எழுதவில்லை. ஒரு ஜெர்மன் நண்பன் எழுதியிருந்தான்.”

    “கைலாசத்துக்குப் போறது அவர் பிஸினஸ். அங்கே ஒனக்கு என்ன பிஸினஸ்?”
    “ஒனக்குண்ணு சொல்லாதே. நமக்குண்ணு சொல்லு”
    “ஆல்ரைட், நமக்கு என்ன பிஸினஸ்.”
    “ஒருவேளை அவர் திரும்பாமல் போயிடலாம்.”

    “கடவுள் சித்தம். நான் என்ன பண்ண முடியும்? போய்த் தடுக்கலாம்கறியா?”
    “முட்டாள்! கடைசியாக.. ஐம் ஸாரி… வழியனுப்புவதற்கு ஒருமுறை போய்ட்டு வருவோம். நீ அவர் மகன்.”
    “அது பழைய கதை! மகான்களுக்கு மகன்கள் இல்லை.”
    “மகன்களுக்கு தந்தை உண்டு.”

    தந்தைக்கும் மகனுக்குமிடையே இல்லாத உறவுக்கு, பொருளிழந்து போன பந்தத்திற்கு வெற்றிவேல் பாலம் போடுவது இது இரண்டாவது முறை. இதில் என்ன இவனுக்கு இப்படி ஒரு சிரத்தை?
    “வெற்றிவேல்…” என்று தட்டிய முட்டையை நிறுத்தி அவனை விளித்தான் சிவா.

    “ஒனக்கு ஏண்டா இந்த வீண் வேலை?என்ன கண்டுட்டே அந்த பாபா ஓம்கார்நாத்கிட்டே?”
    “விடுதலை. அவர் அதோ அந்தப் பறவை மாதிரி… இப்ப பறந்தது பாரு அந்த திக்கு மாதிரி விடுதலையடைந்தவர். ஹி லிபரேடட் மீ… அவர் என்னை விடுதலை செய்தார்.”

    “எதிலிருந்து?”
    “என் சிறையிலிருந்து…”
    “இந்தப் பரிபாஷை வேண்டாம்… பீ பிளெய்ன்…”

    “என்னோட அகந்தையிலிருந்து… என் அட்வென் சரிஸத்திலிருந்து…என் வேட்கைகளிலிருந்து”
    “நீ விடுதலை ஆயிட்டதா நெனைக்கிறியா?”
    “எஸ்… பெருமளவு”
    “மீதிக் கொஞ்சம் இருக்கு… இல்லையா?”
    “ஆமாம்”

    “மை டியர் வெற்றி… இது ஒரு கற்பனை…உன் விடுதலையும் கற்பனை…உன் தளைகளும் கற்பனை. நீ இந்த வெளிநாட்டுப் பேர் வழிகளோடே பழகிப் பழகி அவர்கள் மாதிரி கற்பனையிலேயே காணாமற் போய் கற்பனையிலேயே ஒன்னை மறுபடியும் கண்டுபிடிச்சுகிட்டிருக்கே. அதுக்கு ஒன்னை நீயே கட்டுப்பாடு பண்ணிகிட்டிருக்கே. நீ இழந்திருப்பது உன் சுதந்திரம்.”

    புத்திக் கூர்மையோடு சிவா அவனை மடக்குவதைப் புரிந்து கொண்ட மாதிரி வெற்றிவேல் சிரித்தான். சிவா மேலும் தொடர்ந்தான்.

    “விடுதலைக்கு விலை சுதந்திரம் அல்ல”
    “நீ ‘இன்டெலச்சுவல்’ மாதிரி பேசறே. நான் ஸாலிடா இருக்கேன்.”
    சூப் கொதிக்கும் ஓசை கேட்டது.

    “சிவா…நான் விடுபட்டது எதிலிருந்துண்ணு எனக்கு தெளிவாத் தெரியும். அந்த முட்டையிலேருந்து நீ வெளியே எடுத்த கரு மாதிரி எனக்குத் தெரியும். என் முட்டை ஓடு நொறுங்கியது என் காதில் விழுந்தது. டோன்ட் டாக் லைக் எ ப்ளடி மெடீரியலிஸ்ட்”
    சிவா சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தான்.

    வெற்றிவேல் கோபிக்கவில்லை. கண்கள் பளபளக்க அவனைக் கூர்மையாக, பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    “ஆல் ரைட்.. சூப் தயாராயிருக்கு. சாப்பிடுவோம் அப்பறமா பேசலாம்.”
    வெற்றிவேலுக்காகத் தயாரித்த ஆம்லெட்டைத் தட்டில் போட்டுக் கொண்டு மேஜைக்கு வந்தான் சிவா.

    தொடரும்

    Share
  • சிகரம் நோக்கி (13)

    சுரேஜமீ

    மனம்

    peak1111111

    இந்த உலகில் வடிவமில்லாத ஒன்று, கண்ணுக்குப் புலனாகாத ஒன்று, கடவுள் என்ற கருப்பொருளுக்கு இணையான ஒன்று, பிறப்பின் ஆழத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் புரிய வைக்கின்ற ஒன்று, மனிதனின் இருப்பை மற்ற உயிரினங்களிலிருந்து உயர்த்திக் காட்டுகின்ற ஒன்று இருக்கிறது என்றால்

    அதன் பெயர்தான் ‘மனம்’!

    அது எங்கே இருக்கிறது? அதை எப்படி புரிந்து கொள்வது? அதனால் நமக்கு என்ன பயன்? என்பதைப் பற்றிப் பார்ப்போமா?

    உலகில் படைக்கப்பட்டுள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் மனம் என்ற ஒன்று இருந்தாலும், மனித மனம் மட்டும் அதிலிருந்து வேறுபடக்கூடியது. விலங்கினங்கள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரப்போகிறது என அறிந்தால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுதான், அதனை வழி நடத்தி, உயிரைக் காப்பாற்ற உதவுகிறது.

    ஆனால், மனிதனுக்கு மட்டுமே ஒரு ஆபத்துக்கான காரணத்தை ஆராயும் தன்மையான உயர்ந்த நிலையைக் கொடுக்கிறது. அடுத்து அதுபோல் நடக்காமலிருக்க தன்னைத் தயார்படுத்தவும் செய்கிறது.

    அத்தகைய உயர்வான மனத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

    விலங்குகளில் குரங்கு என்பது ஓரிடத்தில் நிற்காது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பது போல், மனம் என்பதும் ஒரு குரங்கைப் போல், நிலையால் இல்லாமல், ஒரு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே, அடுத்தடுத்த சிந்தனைகலுக்கும் சென்று கொண்டிருக்கும்.
    அதானல் எதிலுமே முற்றுப் பெற முடியாமல், அதற்கேற்ற விளைவுகளால் அவதியுற நேரும்.

    அவ்வாறு நேராமல் இருக்க மனதை நாம் பக்குவப் படுத்த வேண்டும்.
    மனத்தின் தன்மையை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், இவ்வுலக வாழ்வே ஒரு சொர்க்கமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    மனதின் ஆற்றலுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், நாம் நினைத்த மாத்திரத்தில், உலகின் ஒரு மூலையிலிருந்து அடுத்த மூலைக்கு மனம் பயணப்பட்டு விடும். ஆனால், உடல் அவ்வாறு பயணிக்க வேண்டுமானால் கடவுச்சீட்டு தொடங்கிப் பயணசீட்டு பெற்று பயணப்பட்டால் மட்டுமே முடியும்!

    மனித வாழ்வில் ஏற்படக்கூடிய அத்துனை இன்ப துன்பங்களுக்கும் காரணமாக இருப்பது மனம். இன்பம் வந்தால் அறியாமையால் ‘துள்ளிக் குதிப்பதும்’; துன்பம் வந்தால் ‘துவண்டு விடுவதும்’ மனம் தான் என்பதை நாம் அறிவோம்.

    கவியரசர் கண்ணதாசன் அவர்கள், ஒரு பாடலிலே இவ்வுலகில் எல்லாமே இரண்டாக இருக்கும் பொழுது உள்ளம் மட்டும் ஒன்று போதாது….இரண்டு வேண்டும் என்று இறைவனிடம் கேட்பார்;

    இரவும் பகலும் இரண்டானால்
    இன்பம் துன்பம் இரண்டானால்
    உறவும் பிரிவும் இரண்டானால்
    உள்ளம் ஒன்று போதாதே! ….என்று

    ஆக நமக்குள் இருந்து ஒரு நீதி பரிபாலனம் பண்ணக்கூடிய ஆற்றல் வாய்ந்த மனதை நாம் ஆள்வதன் மூலமாக, இவ்வுலகில் நாம் நினைத்த எதையும் அடைய முடியும் என்பது மட்டுமல்ல; ஒரு ஒப்பற்ற மாமனிதராக உருவெடுக்க முடியும் என்பதும் உண்மை.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் சொல்கிறார் ;

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற.

    ஒருவன் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதே சிறந்த அறம் என்றால், அதனை நாம் பின்பற்றி மனத்தைப் பழக்கப்படுத்தி, நம்மை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்கான விதையை அப்பொழுதே விதைத்திருக்கிறார் என்றால்,

    ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்தில்தான் இன்னமும் நாம் இருக்கிறோம் என்பது மட்டுமல்ல; இனிவரும் காலமும் இருக்கும் இந்த மனித சமுதாயம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

    உலகில் உள்ள எண்ணற்ற மதங்கள் தோன்றியதன் நோக்கமே மனித மனத்தைப் பக்குவப்படுத்தி மனித வாழ்வை ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டு செல்வதற்காகத்தான் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

    குருஷேத்திரத்திலே அர்ஜுனன் தன் உறவுகளுக்கு எதிராகப் போருக்குத் தயங்கிய பொழுது, பகவான் கிருஷ்ணர் அவனுக்கு எது தர்மம் என்பதை நிலைநாட்ட, உள்ளத்தைத் தெளிவு படுத்த, அதிலிருந்து எழக்கூடிய உணர்வுகளை மட்டுப்படுத்தி, நீதியைப் புரியவைத்து உலக்குக்கு அளித்த ஒப்பற்ற வசனங்களைக் கொண்டதுதான், பகவத் கீதை எனப்படும் இந்துக்களின் புனித நூல்.

    இதைப்போல ஒவ்வொரு மதத்திலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து தெளிவான மனநிலையைக் கொடுக்கும் ஒப்பற்ற நூல்களாக புனித நூல்கள் இருக்கின்றன.

    மனத்தினில் எழக்கூடிய உணர்ச்சியின் பால் தூண்டப்படுகின்ற ஆசைகளே துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறது. அத்தகைய துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள

    மனத்தை அறிவின்பால் செலுத்த, அதனைப் பழக்க முயன்றால், வாழ்வில் ஒரு நிலைத்தன்மையை நம்மால் அடைய முடியும்.

    • மனதைப் பழக்குவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது ‘ நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உச்சரிக்க வேண்டும்.
    • உடற்பயிற்சி எப்படி உடல்நலத்திற்கு முக்கியமோ, அதைப்போல ‘மனப்பயிற்சி’ மனநலத்துகும்; உடல் நலத்திற்கும் இன்றியமையாதது.
    • யோகா முறையாகக் கற்றுக்கொண்டு தினமும் பயிற்சி செய்வது மனதைக் கட்டுப்படுத்த உதவும்.
    • ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு பத்து நிமிடமாவது கண்களை மூடித் தியானம் செய்வது.
    • உயர்ந்த இலட்சியங்களை நோக்கி வாழ்க்கையை நகர்த்துவது.
    • மனதுக்கு இதமாக, இன்பமாக இருக்கக் கூடிய இடத்திற்கு அடிக்கடி செல்வது.

    இவ்வாறெல்லாம் மனதைப் பழக்கிப் பக்குவப்படுத்த, ஒரு செயலின் விளைவை ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களைக் கூறிட்டு; அதனால் ஏற்படக்க்கூடிய நன்மை தீமைகளைக் கணக்கில் கொண்டு, செயலில் இறங்கும் ஆற்றலை மனம் சுலபமாகக் கொண்டுவிடும்!

    அதன்பின் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறதென்று?

    ஒரு வெற்றியாளராக, ஒரு ஊர் போற்றும் உத்தமராக, சான்றோன் எனக் கேட்கும் தாய்க்கும்; என்னோற்றான் கொல்! என அறியும் தந்தைக்கும் மகனாக; மகளாக; நாட்டின் சிறந்த குடிமகனாக உங்களை மாற்றிக் காட்டும் உங்கள் மனம் என்பதற்கு உங்கள் வாழ்வே ஒரு சாட்சியாக இருக்கும்!

    இதோ காவியத்தாயின் இளைய மகன் கவியரசர் கண்ணதாசனே சொல்கிறார்…….
    நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
    அது நீதிதேவனின் அரசாட்சி! ……….என

    நண்பர்களே இங்கு சொல்லப்படுவது ஒரு துளியே…அந்தத் துளி ஒரு உளிபோல உங்களைச் செதுக்கினால் வருகின்ற சிலையாக ஒரு தெய்வத்தன்மையுடன் கூடிய மனிதனாக மாற்றினால் சிகரம் என்பது கூட ஒரு சிறுகுன்றாகிவிடும் உங்கள் முன்னால்!

    தொடர்வோம் பயணத்தை………

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • குறளின் கதிர்களாய்….(80)

    -செண்பக ஜெகதீசன்

    குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும். (திருக்குறள்-601: மடியின்மை)

    புதுக் கவிதையில்…

    விளக்கு ஒளி குறையாதிருக்க
    அது                                                  
    மாசடையாமல் காக்கவேண்டும்                    
    நற்குடி என்னும்
    நல்ல விளக்கில்
    சோம்பலெனும் மாசடைந்தால்,     lamps
    ஒளியிழந்து
    வீணாகி அழியும்!

    குறும்பாவில்…

    நற்குடி என்னும் நல்விளக்கு
    சோம்பல் கறைபடிந்து
    வீணாகி அழியும் ஒளியிழந்தே!

    மரபுக் கவிதையில்…

    என்றும் நன்றாய் ஒளிபெறவே
    ஏற்றும் விளக்கில் மாசகற்றி
    நன்றாய்த் துடைத்து வைத்தால்தான்
    நாலா புறமும் ஒளிதெரியும்,
    என்றும் நற்குடி விளக்கேதான்
    இதிலே சோம்பல் மாசடைந்தால்
    குன்றும் ஒளியும் மாய்ந்தேதான்
    கெட்டே அழியும் காண்பீரே!

    லிமரைக்கூ…

    விளக்கை ஒளிகுறைத்து அழியவைக்கும் தூசு,
    நற்குடி என்பதும் விளக்கேதான்,
    நலியவைத்து அதையழிக்கும் சோம்பலாம் மாசு…!

    கிராமிய பாணியில்…

    வெளக்குவெளக்கு ஊட்டுவெளக்கு
    வெளிச்சந்தரும் நல்லவெளக்கு,
    தொடச்சிவச்சா ஒளியத்தரும்
    தூசிசேந்தா அழிஞ்சிபோவும்
    நல்லகுடியும் வெளக்குத்தான்
    நன்மதரும் வெளக்குத்தான்,
    அதுல
    சோம்பல்தூசி சேந்ததுண்ணா
    சொந்தபந்தம் உட்டுப்போவும்
    சேந்தாப்புல கெட்டுப்போவும்

    வெளக்குவெளக்கு ஊட்டுவெளக்கு
    வெளிச்சந்தரும் நல்லவெளக்கு!

     

    Share
  • கதை கதையாம் காரணமாம் …

    கவிஜி.

    கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள். மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும். சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள். நற நறத்தே கிடக்கின்றனமணல்களின் படிமங்களாய் வழுக்கிக் கொண்டே செல்லும் இரவுகளின் வீரியத்தில் நிழல்கள். தன்னிறம் மாறுவதை ஹைக்கூவாக உணர்ந்த பின் கிடைக்கும் புதுக் கவிதையாக, ஒரு மரபு மாந்திரீகம் விதைக்கிறது. எப்போதும் இரவென்றால் எப்படி இருக்கும் பாலைவனம்!!

    வனங்களில், கணிக்க முடியாத வானம் கொண்ட பாலைவனம் குளிர்களின் கம்பிளியை போர்த்திக் கொண்டே இருக்கிறது. கடுங்குளிர் தேகம் நடுக்க, நடுவினில் வளைந்து வளைந்து செந்தளிராய் மூட்டிய நெருப்பு ஒரு அருகாமை சூட்டை சுற்றிலும் தெளித்துக் கொண்டிருக்கிறது. உடல் முழுக்க மணல், அல்லது மணல் முழுக்க உடல். கடல் தவிக்கும் கண்களை நெருப்பு மூட்டிய நிஜமாய் நியந்தா சுமந்து கொண்டிருந்தாள். எதிரே… எல்லாம் தெரிந்தும் தெரியாமல் கவிஜி.

    காற்றும் கவிதையும் கதை பேசும் தருணமாக, கண்கள் நான்கும் மணல் கொண்ட புதையலாய் புதைந்து நிமிரும் புதுப் பயணம் சுமந்து கிடக்கிறது. விரல் பிடித்துக் கொண்ட வேகத்தில் நிலவு சற்று நிழல் தேடியது மேகத்துக்குள். இருக்கும் இருட்டில் இன்னும் சிவப்பாய் நியந்தா இனி தாங்காது என்பது போல தாங்கி கொள்ளும் சூட்சுமம் வரைந்தான் கவிஜி. வரைவதில் கிறுக்கல்கள் கொண்ட பித்தனைப் போல வரைந்தாலும் அது அவள்தானே என்பதை போல ஒரு பிக்காசோ அது.

    மெல்லிடை படிய, மார்புக்கவளம் விரிய, மை விழிக்காரி நியந்தா. மௌன மொழியில் கத்திக் கொண்டது நாணம் கடந்த பின்னிரவு துவக்கம். கவிஜி மெல்ல பின்னால் சரிய, மேல் நோக்கி சரிந்து கொண்டே இதழ் வருடும் இதழை மிக மிக அருகினில் கொண்டு வந்தாள் நியந்தா. ஒரு மணல் காற்று வந்து கடந்து போனது. முதுகினில் கொஞ்சும் சாரலாய் மணலை அள்ளி வீ சிப் போன நொடியில் உள் வாங்கிய முதுகு வெளியானது, சுவாசம் கூடிய அவனுக்கு.

    கண்கள் நான்கும் பார்த்தன. அவள் இதழ் விரியக் கிசுகிசுத்தாள்.

    “அது என்னடா பேர் கவிஜி?”

    கவிஜி சட்டென முகம் உயர்த்தி அவள் இதழில் ஒரு முத்தம் பதித்தான்.

    “நான் கேட்டுட்டு இருக்கேன்ல, அதுக்குள்ளே என்ன அவசரம்?”

    மீண்டும் ஒரு முத்தம்.

    அவள் சப்பென்று ஒரு அறை வைத்தாள்.

    இம்முறை கன்னம் கடித்தான்.

    மீண்டும் முத்தம்.

    அடிக்க கை எடுத்த அவள் அவனின் தலை கோதினாள். இம்முறை இன்னும் ரகசியமாக கேட்டாள்.

    “அது ஏன் கவிஜி? பொண்ணு பேர் மாதிரி இருக்குடா”

    “ஏன் நல்ல இல்லையா?”

    “இருக்கு”

    “பிடிக்கலையா?”

    “உன்னையே பிடிச்சிருக்கு, பேர் பிடிக்காதா?”

    “சரி, ஏன்னு சொல்றேன் கண்ண திறந்துகிட்டே. இதோடு இதழ் பதி. அப்போ தான் சொல்லுவேன்.”

    “அப்போ நீ சொல்லவே வேண்டாம். போடா. இவன் பெரிய கவிஞன்”

    “நான் பெரிய கவிஞன்னு யார்டி சொன்னா பிசாசு?”

    “என்ன? பிசாசா?”

    “ஆமா, இப்டி முடிய விரிச்சு போட்டு இருந்தா பிசாசு தான்.”

    அவர்கள் மூன்று முறை உருண்டு சற்று தள்ளி குளிருக்குள் சென்று விட்டார்கள். தீ நாக்கின் எச்சில் குளிரை விரும்பியது போல, தீக்குள் விழுந்த சிறு மணல் ஒன்றின் உள்ளே தீர்த்த கடல் கொண்ட தெற்கு மூளை மறந்த வரியாக.

    “டேய்! கை எங்க போகுது கொன்னுடுவேன்.”

    “ஆமா, உலகமே அழிஞ்சு போய்டுச்சு, என்னையும் கொன்னுட்டு என்னடி பண்ணுவ? அழகி.”

    சற்று விலகிக் கிடந்தவள். உடல் நடுங்கியவளாய் ஓடி வந்து அணைத்துக் கொண்டு முகம் முழுக்க முத்த மழை பொழிந்தாள். ஈர முத்தங்களுக்கிடையில் சிக்கிய மணல் துகள்கள் மோட்சம் போகும் என்பது இரவின் கூப்பாடு/ காற்றை கொண்டு வேவு பார்த்த மனம் குளிர்ந்தது.

    வெப்பம் கொண்ட தேகம். தெப்பம் ஆகும் தாகும். மொத்த முத்தம். எச்சில் கத்தும் கூந்தல் நுழைந்த விரல்களில். இரவுச் சூரியன். பின் கழுத்தில் நுழைந்த முகத்தினில் இரு நிலாக்கள்.

    “இந்த உலகமே இன்னைக்கு இல்ல. நீ நான் மட்டும். அப்புறம் நம்ம காதல். ஏன் நாம மட்டும் பொழைக்கணும் நியந்தா.”

    அவர்கள் பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை. உடல் தேடும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்க மறந்த மூளையின் மடிப்பு, மணல் துளிகளால் பயம் நிரப்பிக் கொண்டேயிருந்தது.

    காதுக்குள் கிசு கிசுத்த வார்த்தைகளில் அவள் வாக்கியமாய் நெளித்தாள்.

    “தெரில கவிஜி, ஆனா, அடுத்து என்ன பண்ணப் போறோம்? இப்டியே எத்தன நாள் இங்க இருக்கறது? எங்க இருக்கோம்ன்னும் தெரியல. சூரிய வெளிச்சமே வர மாடேங்குதே. பயமா இருக்குடா.”

    “பயந்தா எப்டி நியந்தா! இப்போ இந்த உலகத்துக்கு நீயும் நானும் தான் ஆதாம் ஏவாள். ஆதாம் ஏவாள் பயந்திருந்தா இன்னைக்கு நீயும் நானும் இல்லடி”

    “போடா எப்போ பாரு உனக்கு அதே தான்.”

    “என்ன? அது என்ன அவ்ளோ ஈசியா? என் பக்கம் நின்னு பாரு. கஷ்டம் எவ்ளோன்னு தெரியும்.”

    அவள் சிரித்து விட்டாள். இப்போது அவள் முறை.

    “கூந்தல் சுருட்டு. விடியட்டும்”

    “என்ன கவிதையா? நானும் சொல்லி.. லி… லிரூ…வே… ண்டா…”

    “முதல்ல மூச்சு வாங்காம இந்த வார்த்தைய சொல்லுடி, பாப்போம்.”

    சட்டென்று முன்னோக்கி சரிந்து, நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் பதித்து. மீண்டும் முதல் இருந்த நிலைக்கு வந்தவள், “நெற்றி வியர்வை துடைத்த இதழில் முத்தப் புரியாமை” என்றாள்.

    அப்டியா? இப்ப பாரு … என்றவன் இப்படி…

    “விழி செய்த மொழியில் சிமிட்டல்-ஜென்.”

    “ம்ம் ” என்று நடுங்கிக் கொண்டே யோசித்தாள் இப்படி.

    “உணர்தல் வெறுமை. கண்டும் காணாமல் போவது தத்துவம்.”

    “நிறம் தாண்டிய சுழற்சியில் பிம்பம் புதுமை.”

    “புகைப்படம் எடுக்கப்பட்ட நான், கணம் ஒன்றில் சிறையான வெற்றிடம்.”

    அடுத்த கவிதை யார் சொல்ல என்று யோசிக்கும் போதே. இதழும் இதழுமாய் இன்னும் ஆழமாய் எல்லாருக்கும் புரிந்த கவிதையை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

    பின்னிரவு துவக்கம்…

    அவள் மடி சாய்ந்து கிடந்தாள், அவன் குடை சாய்ந்து கிடந்தான்.

    “இன்னும் எத்தன நாள் கவிஜி? நாம் உலகத்துல தான் இருக்கோமா? இல்ல ஒரு வேலை செத்துட்டோமா?”

    “உன்னோடு இருந்தால் செத்து விடுவதும் சுகமடி மூக்குத்தி பெண்ணே.”

    அவள் இன்னும் அவனின் மார்புக்குள் தன்னை நெருக்கிக் கொண்டாள்.

    “என்ன இது வரை நீ அடிச்சதே இல்லல? ஏன் கவிஜி?”

    “ஹே… என்னடி இது கேள்வி? எதுக்கு அடிக்கணும்?”

    “ஆணின் அரவணைப்பு போல அடித்தலும் ஒரு வகை கூடல் தானே, கவிஞரே.”

    “ஆமாமா, உங்க தமிழ் எனக்கு வராதுடி. நான் அடிக்க மாட்டேம்பா?”

    “என் கவிதை உனக்கு புரிஞ்சா போதுண்டா. பொறுக்கி, ப்ளீஸ்… ப்ளீஸ்… அடியேன்”

    “ம்ஹும். நீ கவிதைக்காரிதான். அதுக்காக உன்ன அடிக்கவெல்லாம் முடியாது. வேணுன்னா சொல்லு. முத்தம் குடுக்கிறேன்.”

    “நீ அடிச்சா. நீ அடிக்கடி கேப்பீல்ல அதை பண்ணுவேன் எப்படி வசதி? என்று அவள் கண்ணடித்தது அந்த வெளிச்சத்திலும் ஒரு மின்னலை வெட்டியது.

    “நம்பலாமா?”

    “நம்பித்தான காதலிக்கறேன். என் முட்டாள் கவிஞனே”

    “ம்…ம்… இந்தா” என்று ஒரு அறை.

    “போடா. இதுக்கு நீ ஆக மாட்ட”

    “அதுக்கு”என்று அருகினில் சென்று கேட்டான். ரகசியமாய்.

    “அதுக்கு மட்டும் தாண்டா நீ ஆவ. ஓடிடு” என்றாள்.

    பொய்யான கோபத்திலும் மின்னிய மூக்குத்தி “நெஞ்சம் ஒரு முறை நீ என்றது” என்று முணங்க வைத்தது.

    “அடிப்பாவி, சரி, நீ சொல்றதும் சரிதான். ஒரு ஆதாம் அப்டி தான் இருக்கணும். இந்த பூமியே என்ன நம்பிதாண்டி இருக்கு”

    “நானும்”என்று தோள் சாய்ந்தவளைமீண்டும் ஒரு அறைஅறைந்தான்.

    “ம்ஹும். கொசு கடிச்ச மாதிரி இருக்கு மை மேன்” என்று காது கடித்தாள்.

    “சரி இது? “என்று மீண்டும் ஒரு அறை அறைந்தான்.

    கீழே கிடந்தவளின் கழுத்துக்குள் சென்று கிசு கிச்சு மூட்டினான் கவிஜி.

    நியந்தா எழவில்லை.

    “ஹே என்ன இது விளையாட்டு. எந்திரிடி. இப்ப எந்திரிக்கல அப்புறம் அது தான். சொல்லிட்டேன்”

    அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை…அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை… அவள் எழவேயில்லை…

    அவள் எழவேயில்லை.

    நியந்தா… நியந்தா… நியந்தா…

    தலைக்குள் வண்டு, வண்டு புகுந்து கொண்ட ரீங்காரம், மூளை உதிரத் தொடங்கியது.

    பெருமூச்சு வாங்கிய எழுத்தாளர் சந்தோஷ் படுக்கையில் இருந்து வேகமாய் பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தார். அவரின் உடல் நடுங்குகிறது. அதே நேரம்…அதே இரவு… அதே நாள்… அதே கனவோடு…, எழுந்து அமர்கிறார். எழுத்தாளர் சரவணா மற்றும் எழுத்தாளர் அகன் அவர்களும்.

    ஒரே கனவு, ஒரே நாள், ஒரே நேரத்தில். மூன்று பேருக்கு.

    மூன்று பேரும் ஒரே நேரத்தில் உச்சரித்த பெயர் கவிஜி நியந்தா.

    அவர்களின் பெருமூச்சு அவரவர்களின் அறையில், இல்லாத சுவர்களை எழுப்பிக் கொண்டிருந்தன.

    இது கனவாஇல்லை. நடக்கப் போவதா இல்லை. நடந்து முடிந்ததா? மூவரின் கேள்விகளும் முதலை தேடும் கண்ணீரை சுரந்து கொண்டே இருந்தன.

    நன்றாகத் தெரியும். அது கவிஜிதான். கூட இருந்த பெண் கவிஜி அடிக்கடி சொல்லும் நியந்தாவாகதான் இருக்க வேண்டும். அந்த முகம் சரியாக நினைவுக்கு வராமல் மூவருமே யோசித்தார்கள். யோசனையின் வழியில், ஒற்றையடி பாதைக்கே வழியில்லாமல் தடுமாறிய பாதங்களில் முள் குத்தியது போல, தலைக்குள் ஊசியின் குளிரைஉணர முடிந்தது.

    அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பின் …
    கவிஜியின் வீட்டை நெருங்கி விட்ட சந்தோஷ். ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாமல் அங்கேயே நின்றார். பார்த்துக் கொண்டே நின்றார்.

    “கவிஜியை பார்க்க வேண்டும். பேச வேண்டும். பேசியே ஆக வேண்டும்”என்று யோசித்துக் கொண்டே முன்னேற முயற்சி செய்த சந்தோஷால் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வீட்டை நோக்கி நகர முடியவில்லை. எதுவோ தடுத்தாற்போல, காற்றில் ஏதோ சுவர் போல ஒரு வித மயக்க நிலைக்குள் விழுவதாக, ஒரு வித கற்பனையை சுமந்து நின்றார். இரவுக்குள் மின்னிய வெளியில் அந்த வீடு மிதந்து கொண்டு இருப்பதாகத் தோன்றியது. தானும் மிதப்பதாக நினைத்த சந்தோஷ் சத்தம் போட்டு கூப்பிட்டார்.

    “கவிஜி… கவி…ஜி… வெளிய வாங்க. கொஞ்சம் பேசணும்” இன்னும் இன்னும் கத்தினார். கத்தி கத்தி கத்தினார். தான் கத்துவது தனக்கே கேட்காததை அப்போது தான் உணர்ந்தார். தன்னை ஒருமுறை கூர்ந்து கவனித்தார். காதுகள் அடைத்து இருப்பதை உணர முடிந்தது.

    “இந்த இடத்தில் என்னால் ஏன் இயங்க முடியவில்லை? என்னால் ஏன் நகர முடியவில்லை? எல்லாம் புதிராக இருக்கிறதே ஏன்? கேள்விகளால் கண்கள் சிமிட்டுவது, கொடும் விஷத் துளியாகி காட்டுக்குள் தொலைவதைப் போல இருக்கிறதே!”—— எத்தனை யோசித்தும் எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ஆனால் சந்தோஷால் கவிஜியை இப்போது நன்றாகக் காண முடிந்தது. ஆனால் ஆள் ஒரு மாதிரி வெளுத்துப் போய் இருப்பது போல ஒரு எண்ணம் கண்களில் தூசியாய் விதைந்தது

    விலக்க விலக்க காற்றுக்குள் ஒருவித திரை விழுந்து கொண்டே இருந்ததை உணர முடிந்த சந்தோஷ், இன்னும் கண்களை நன்றாகக் கூர்மையாக்கிப் பார்த்தார். கவிஜி வாசல் வருவதும், உள்ளே யாரிடமோ பேசுவது, நின்று நிலவை ரசிப்பதும், ஏதோ எழுதுவதும், உள்ளே சென்று சற்று நேரத்தில் ஒரு கோப்பை மதுவோடு வெளியே வந்து நின்று கொண்டு வானம் பார்த்து குடித்துக் கொண்டே உள்ளே யாரிடமோ பேசுவதையும் நன்றாக பார்க்க முடிந்தது. வானம் முழுக்க நட்சத்திரங்கள், முழு நிலா முன்னிரவு தொடக்கம். பிரபஞ்ச வெளியில் துகள்களால் நெய்யப்பட்ட உருவமாய் கவிஜியின் சாயல் இருந்ததைக் கண்ட சந்தோஷ் முழுக்க முழுக்க குழப்பத்தால் சுழன்றார். இப்போது ஒன்றை கவனிக்க முடிந்தது. இந்த வீட்டை சுற்றி எதுவுமே இல்லாதது போல ஒரு வெறுமை சந்தோஷுக்குத் தெரிந்தது. சந்தோஷ் தலையைப் பிடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். யாரோ தன்னை கடந்து போவதை உணர முடிந்த சந்தோஷ்ஷால் கடந்து போனது என்ன? யார் என்பதைப் பார்க்க முடியவில்லை. அது ஒரு வகை இளம் சூட்டை பனியில் கலந்த மலை உச்சி பயணமாய், சர்ரென கொண்டு போகும் ஒரு பறவையின் தீவிரத் தேடலைப் போல இருந்தது.

    அடுத்த அரை மணி நேரத்துக்குப் பின்…
    கடந்து போன காற்றில் அதிவேகமாய் நண்பனுக்கு என்ன ஆனதோ என்று தேடி வந்தது போல சரவணா பெருவிழிகள் கொண்டு நின்றார். பெருவெடிப்பின் தூரம் போல கண்களுக்குள் தூசுகளால் நிறைந்து நின்றது கவிஜியின் வீடு.

    “அதே வீடு. ஆம், இது அதே வீடுதான். ஆனால், நிறைய மாற்றங்களுடன் இருப்பதை உள் வாங்க சற்று நேரம் பிடித்தது. வழக்கமாக உள்ளே நுழையுமிடத்தில் சட்டென நின்றார். கண்கள் முழுக்க பனி மூட்டம் எத்தனை விலக்கியும் உள்ளே நுழைய முடியவில்லை. “ஏன் இப்படி? ” என்று நினைத்துக் கொண்டே .”கவிஜி …ஜி… ஹலோ…ஜி… நான் சரோ. கொஞ்சம் வெளிய வாங்க. ஒரு முக்கியமான விஷயம் பேசனும் “- கத்த கத்தவே, ஏதேதோ யோசனைக்குள் சிக்கிய மனதை வெளியே பிடித்து எதுவோ இழுப்பது போல உணர முடிந்தது. உணர உணர முடிந்து கொண்டே இருந்தது எதுவோ எதுவோ அது என்று யோசிக்க, யாசித்து வீழ்கிறது. உள்ளுக்குள் ஒரு பிம்பம். உடைவது மட்டுமென்ன உடையாமல் இருப்பதும் தூரங்களா? கேள்விக்குள் பதிலை வண்டாக்கி ரசித்த பூவில் உதிரத் தொடங்கிய இதழ்களை கூர்ந்து கவனிக்க விடாத பனிமூட்டம். மூளையெங்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல். கையை அசைத்து அசைத்து கூப்பிட்டார்.

    நன்றாகத் தெரிந்தது, அந்த வீட்டில் ஒரு பெண் வெளியே வருவதும், நிலவைப் பார்ப்பதும், உள்ளே யாரிடமோ பேசுவதும், கையில் மதுக் கோப்பையில் மது அருந்திக் கொண்டே சிரிப்பதும். நன்றாகத் தெரிந்தது. ஆனால் அது முழுக்க முழுக்க கவிஜியின் உடல் மொழியில் இருந்தது. இன்னும் கண்களைக் கசக்கும் பனியை ஊதி விலக்கி. கிடைத்த இடைவெளியில் பார்க்க பார்க்க அது கண்டிப்பாக ஒரு பெண்ணாகத்தான் தெரிந்தது.

    “நியந்தா நிலவின் வெளிச்சத்தில் ஒரு விதமான சாம்பல் பூத்த நிறத்தில் இருந்தாள். மூக்குத்தி மின்னியது. கண்கள் கண்ட காட்சியில் கவிதைச் சிறகு உடைந்து உடைந்து பறப்பது போல, ஒரு அழுகை ஆளுமையானது. பூத்துவிட்ட விழித் திரைகளில். இனம் புரியாத பூத்தூவல்கள் பனி மூட்டத்தில் நெளி நெளியாய் சரவணா முன் விரிந்தன மீண்டும் ஒரு முறை படிக்க மீண்டும் ஒரு முறை எழுது கவிஜி படிக்க படிக்க அழகாகும் இவள் பற்றிய கவிதையில் இவள் இன்னும் இன்னும் அழகாகிறாள். அழகாவது தானே அத்தனை அழகு காதலில் நிழற்படமாய் நீண்டு கிடந்த நினைவுகளில் திடீர் புகை… திடீர் சோகம் அப்பிக் கொண்டே இருந்தது. நீண்டது. நீட்சியின் சூட்சுமம். சூட்சுமங்கள் நிஜங்களைக் கொண்டே சமைக்கப் படுகிறது. புதிய புதிய கிறுக்கல்களில் வாழ்கிறது காதல் என்று அடிக்கடி கவிஜி கூறும் கூற்று. அங்கு காற்றாய் வாழ்வதாக த்தோன்றியது சில பாறைகள் நீரை வார்க்கத்தான் செய்கிறது பனி மூட்டம் மட்டும் கொஞ்சம் உடன் பட்டால் உள்ளே சென்று விடுவது சுலபம் என்று சரவணா யோசிக்க யோசிக்கவே, நிமிடங்களைக் கடக்க விட்டுக் கொண்டிருந்தது காலம்.

    அடுத்த அரை மணி நேரத்துக்கு பின்…
    ஒரு பாலைவனக் காற்று. மணல்வெளியை புதைத்துக் கொண்டிருக்க, ஒரு குதிரையில் தரையில் கால் குளம்பு படாமல் காற்றை கிழித்துக் கொண்டு கவிஜி வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார் அகன். அந்தக் குதிரை நிற்கவே இல்லை அது வந்து கொண்டே இருந்தது.

    ஆனால் வீட்டை நெருங்க முடியவில்லை. குதிரையின் கால்களும் நிற்கவில்லை. அது தீராப் பயணத்தை விதைத்து கொண்டே இருந்தது. அவரும் நிறுத்த முயற்சிக்க வில்லை. ஒரு கட்டத்தில் முயற்சித்தும் குதிரை நிற்கவில்லை. நிற்காத ஒன்றாய் நீட்சியின் இரண்டாய். தூரம் விதைத்து தூரம் போய்க் கொண்டே இருப்பது துக்கம் செய்தது. துக்கித்த ஏக்கம் தகித்த துக்கம். சித்திரம் உடைத்து கொண்டே இருப்பதில் காலத்தின் கணக்கை முறியடிக்காத வலிமையைக் கொண்டே இருப்பதாக சிந்தனையின் குளறுபடி. தலைக்குள் பாரமாய், தவிப்பாய், நெருப்பாய் உணர முடிந்தது. இப்போது கவிஜியின் வீட்டை நன்றாக பார்க்க முடிந்தது.

    தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தார். ஆனாலும் வீட்டுக்குள் நுழையமுடியவில்லை. யோசிக்க யோசிக்க மணல் வெளிகளின் ஒரு புத்தியில், உதிர்ந்து கொண்டே இருப்பதாக சுழன்ற யுக்தியில்,ஒரு வித மயக்க நிலை காரியம் விதைத்தது. கவிஜியை நன்றாகக் காண முடிந்தது. நிலவொளியில், இரவாய் செய்யப்பட்ட உருவமாய் நின்று நிதானித்து, சுற்றும் கவனித்து, அமர்ந்து எழுதி உள்ளே யாரிடமோ பேசிக் கொண்டே., சிரித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. மணலால் செய்யப்பட்ட ஏதோ ஒன்றாய் தன்னை உணர்த்தார். “ஏன் தன்னால் இதற்கு மேல் போக முடியவில்லை?” என்று யோசிக்க யோசிக்க மறப்பது நல்லது போல ஒரு வித சுழல் அவரை நிறைக்கத் தொடங்கியது. காற்றில் மிதப்பதாக தோன்றியது. காற்றே மிதப்பதாக தோன்றியது.

    கவிஜி இப்போது உள்ளே சென்றான் அகனின் பார்வையும் பின்னால் சென்றது உள்ளே, நியந்தா படுத்துக் கிடந்தாள் கவிஜி அருகில் அமர்ந்தான். ஏதோ பேசினான், சிரித்தான். குனிந்து நெற்றியில் முத்தமிட்டான். கன்னம் பிடித்து கிள்ளினான் அவள் அசையாமல் கிடந்தாள். அகனின் முகம் மெல்ல மாறியது. கண்களின் காட்சியில் வார்த்தைகள் காலம் சுமப்பதாக இருந்தது. இருப்பது எல்லாமே இருப்பது தானா திசை மாறும் மனச் சுழலை மெய் மறந்து கண்டு விடுவது தானே நியதி என்பது போல தீக்குள் விரலைக் கொண்ட நந்தலாலாவாக கண்டு கொண்டே இருந்தார்.

    கவிஜி கீழே கிடக்க. நியந்தா எழுந்து அவன் அருகே அமர்ந்து ஏதோ பேசினாள். பின், எழுந்து வெளியே வந்தாள். நிலவைக் கண்டாள். நிலவும் கண்டது. எழுதினாள். காற்றோடு காற்றாக கவிதை வாசித்தாள். அகன் தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினார். அவர் கத்துவது அவருக்கே கேட்கவில்லை அவர் யோசித்துக் கொண்டே. சிந்தனையை பின்னோக்கிக் குவித்தார்.

    அந்த வீட்டைச் சுற்றி ஒரு சுழலாய் சுழன்று கொண்டிருந்தது கவிஜிநியந்தாவின் காதல் கதை.

    நமக்குப் பிடித்தது போல ஒருவர் அவருக்கும் நம்மை பிடித்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அவர்களின் பிடிப்பு திகட்டாத காதல். தீர்க்கவே முடியாத காதல் நிலவின் பிடியில் சிக்கியக் கவிதையாக வரிகளின் உள்ளங்கைக்குள் எப்போதும் அடுத்தவருக்கான முத்தத்தை பிடித்துக் கொண்டேதான் இருப்பார்கள். எப்போதும் பேசுவார்கள். பேசப் பேச கவிஜியின் உருவகத்தில் நியந்தா ஒரு சிண்ட்ரெல்லாவாக உருவெடுப்பாள். அவளின் வானம் வெள்ளுடை தரித்தே கிடப்பதாக அதிகாலை எழுப்பிக் கூறுவான். பதில் அணைப்பைத் தவிர வேறு என்ன என்பது போல. அணைப்பாள், மிதப்பாள், கைகள் விதைப்பாள். கவிதை தைப்பாள்கண்கள் தாழ்பாள்.

    “போங்க. எப்பவும்” இப்டியேதான் என்று நகைப்பாள்.

    கவிஜி (இடைவெளியில் கண்கள் சுருக்குவாள். இதழ்கள் முறுக்குவாள்). கவிஜி, நீ ஏன் இவ்ளோ காதலோட இருக்க? என்று செல்லமாக சண்டை போடுவாள். அவள் நெற்றியில் நிலா என்று எழுதி வைப்பான். அவள் உடனே நெற்றியில் முத்தம் கேட்பா, அவன் கொடுப்பான்.

    “இப்போ இது சர்க்கரை நிலா” என்பாள்.

    சிரிப்பார்கள் …

    கோபம் இருவருக்குமே உச்சத்தில் இருக்கும் போது அழுவார்கள், அடித்துக் கொள்வார்கள். அப்படி ஒரு நாள் அடித்ததில்தான் அவள் செத்தே போனாள். அந்த இரவு. பிணமான பின்னாலும் மறக்கவே முடியாத இரவு. பிணமாகி போக மறுக்காத இரவு. கீழே செயலற்றுக் கிடந்த உடலை குலுக்கி ஆட்டி, எழுப்பி தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அழுத கவிஜி, ஆயுளுக்கும் உண்டான அழுகையைக் கொட்டித் தீர்த்தான். தீர்க்க முடியுமா காதலின் அழுகையைகெஞ்சினான் இனி அடிக்க மாட்டேன் நியந்தா விட்டுப் போகாதே என்று கதறினான். அவளுக்கு காதல் இருந்தும் காதில்லை. கவிதை இருந்தும் நினைவில்லை. திரும்ப திரும்ப யோசித்தான். ஒரு வேகத்தில் ஒரே ஒரு அறைதானே! இந்த கை அடித்தா மரணம் வரும்? இந்த மனம் அடித்தா மறதி வரும்? லயம் மறந்த வரியில் இன்னிசை சாகத்தானே செய்யும். அசரீரி கனவில் காகித கிழிசல். கவிதை என்று சொல்லும் மூடன். தாடிக்குள் கவிஜியாக இருந்தான்.

    மரணம் …

    “ஏய் சனியனே, உன்னை இங்கு யார் அழைத்தது? என் நியந்தாவை என்னிடமே திருப்பிக் கொடு. அவள் இல்லாத உலகில் என் பார்வை காட்சிக் குருடு தானே. அவள் இல்லாத தூரத்தில் நான் பயணம் அற்றவன் தானே. அவள் இல்லாத போதியில் மீண்டும் நான் சித்தார்த்தன் தானே” காடும் வெளியும் மலையும் கடலும் கதறுவதாக அவனின் மூளை நரம்புகள் முடிச்சை விட்டு விடத் தீர்மானித்தது போல சுழன்று புரண்டான்.

    “மரணம் ரணம். ரணம் மனம். மனம் கணம், கணம் கனம். இனி தினம். நான் பிணம். யாரிடம் சொல்லி இவளை பிழைக்க வைப்பது?” தன்னையே அடித்துக் கொண்டான். “இந்த காதலின் மொத்தம். இவள் தானே என்று நினைத்தேனே இனி என்ன செய்வேன்”- அவன் புலம்பல்கள். இலக்கிய சிந்தையில் தப்பு தப்பாய் கவிதை படைப்பதாக யோசித்தான். எல்லாமே தவறாக போவதின் வெளிப்பாடே அண்டத்தில் சிறையாகும். அகத்தின் பிம்பம் அகம் மறைக்கும் அவலத்தில் ஆண்டு விடப் போகிறது யாதும். யாவும் அற்றவன் அவளாகிப் போகும் போது அதுவாகி இன்னும் இருக்கிறது காதல்.

    முதல் முறையாக கடவுளை அழைத்தான். காதுள்ள கடவுள் கூப்பிட்ட மறுநொடி முன்னே வந்து நின்றார். வெகு தூரப் பயணமாம். குளிர் வேறு என்று படுக்கையில் கம்பளி போர்த்திக் கொண்டு அமர்ந்திருந்தார்.

    மடியில் கிடந்த நியந்தாவைக் கண்டார். மடிந்துக் கிடந்த கவிஜியை கண்டார்.

    “எழுதப்பட்டவைகளை மாற்ற நான் யார் கவிஜி? உன் கவிதையை நீதான் முடிக்க வேண்டும் என் பார்வை எப்படி இருப்பினும்.”

    “கவிதை சொல்லும் நேரமா இது கடவுளே?”

    “நேரம் கடந்தால்தான் கவிதையே கவிஜி. உனக்கு சொல்லித் தர வேண்டுமா?”

    “காலம் கடப்பது இருக்கட்டும் காலம் கடக்கும் முன் ஏன் இவளைக் கை விட்டீர்?”

    “நீ ஏன் கை வைத்தீர்?”

    “அய்யோ விவாதம் செய்யும் நேரமில்லை இவளைக் காப்பாற்று. உயிர் கொடு”

    “அத்தனை சுலபமா? கவிஜி உயிர் என்பது சூட்சுமம். அவனவன் உயிரை அவனவன்தான் பாத்துக் கொள்ள வேண்டும். உயிர் கிடைப்பது. வெளிகளின் சிந்தனை.”

    கவிஜி பாவமாக பார்த்தான். பாவம் அற்றவனாய் பார்த்தான்.

    “பிறப்பது யாவும் இறக்கத்தான் கவிஜி. அது கவிஜியே. ஆனாலும், மரணத்தைப் போல் ஒரு மகத்துவம் இல்லை கவிஜி. நன்றாக யோசித்துப் பார் இது வரை. இவளை ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நினைத்தாய்?”

    —————————-

    “மொத்தமாக ஒரு 8 மணி நேரம். அவ்ளோ தான். ஆனால், இனி 24 மணி நேரமும் நினைப்பாய். காதல் இப்போது தானே அதிகம் ஆகிறது. காதலுக்கு உடலும் தேவை இல்லை. உயிர் கூடத் தேவை இல்லை. அது நினைவுகளால் கட்டமைக்கப்பட்ட சூத்திரம். அது இயற்கையின் ஒற்றை விரல்.”

    கடவுள் மறைந்து போனார். மறந்து போனார்.

    யோசிக்க யோசிக்க யாசித்துக் கிடக்கவே தோன்றியது. அழுது அழுது அழுத்தம் நிறைந்த கவிதையாக வெடித்து விட்ட பெரு வெடிப்பாய் சிதறிப் போக மனம் துடித்தது. துளி கண்ணீர் கூட நெருப்புக் குழம்பாய் நியந்தாவின் காதலால் எரிந்து கொண்டிருந்தது.

    “என்ன செய்ய யாரை அழைக்க?” -கடவுளைத் திட்டத் தொடங்கினான். அறை முழுக்க ஓடி ஓடித் திரிந்தான். தேடினான் கடவுளைத் தேடினான். கடவுளே உன்னைக் கொல்லவேண்டும். உன்னைக் கொல்ல வேண்டும், உன்னை மட்டும் கொல்ல வேண்டும். கை ஏந்தி நிற்பவனைக் கடந்து போகும் நீ கடவுள் அல்ல. நீ கடவுள் அல்ல சாத்தான். சாத்தான் சாத்தான். சாத்தான் சாத்தான்.”- அழுத்தி அழுத்தி கத்தும் காலம் சற்று நிற்க எதிரே அழுது கொண்டு நின்றார் சாத்தான்.

    “இந்த கடவுள்களே இப்படி தான் கவிஜி. நான் இருக்கேன். நியந்தா உனக்கு உயிரோடு வேண்டும் இல்லையா? வா. இது பாவமான உலகம். இங்கே எல்லாமே வெள்ளையாகிப் போன குருட்டுக் கூட்டம். எல்லாவற்றுக்கும் கோஷம் போடும் முட்டாள் மக்களைக் கொண்டு ஜோடிக்கப்பட்ட பூமி. தீர்க்கமுடியாத நோயினால் தினம் தினம் அழுது அழுது சாவான் மனிதன். அது தான் கடவுள்களின் திட்டம். நினைத்தபடி வாழ முடியவில்லை என்றால் எதற்கு இந்த பிறப்பு கவிஜி. ஒரு பக்கம் குடிசை, ஒரு பக்கம் மாளிகை விளங்குமா? கடவுளைக் கொல்ல வேண்டும் கவிஜி.

    நாம் எல்லாருக்கும் மாளிகை கட்டி தருவோம். அவர் ஏதோ பாடம் சொல்லித் தருகிறாராம். அதனால் தான் இந்த பொன்னான பூமியில் இத்தனை களேபரங்களாம். இத்தனை மரணங்களாம். ஒரு அறைக்கு யாராவது சாவார்களா! எத்தனை முட்டாள் பார் இந்த கடவுள்! பிடிக்காத மாமியார்க்கு கை பட்டாலும் குத்தமாம் கால் பட்டாலும் குத்தமாம். அப்படி இருக்கிறது இந்தக் கடவுள்களில் செயல்பாடுகள் நான் வன்மையாக கண்டிக்கிறேன் கவிஜி. பிரச்சினை செய்வதெல்லாம் கடவுள்கள். பலி, சாத்தான்களுக்கு என்ன செய்வது? எழுதப்பட்டவை. நாம் அதை உடைப்போம். ப்ரேக் தி ரூல்ஸ். உடைப்பவன்தான் இங்க விஞ்ஞானி. அணுவைப் பிளப்பவன்தான் அடுத்த மானுடம் வா. நியந்தாவை பிழைக்க வைப்போம். ப்ளேக் மேஜிக் கேள்விப் பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். அதில் ஒரு கட்டம். இது” என்று ஏதோ ஒன்றை சொல்லிக் கொடுத்தார் சாத்தான்.

    “இது பற்றி சித்தர்களே சொல்லி விட்டு போயிருக்கிறார்களே”-என்று கண்கள் விரிய கேட்டான் கவிஜி.

    “சித்தனாகி இதை செய்வதற்குள் நீ பித்தனாகி விடுவாய் கவிஜி. இது குறுக்கு வழி. பில்லி சூனியம். இதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதோ இப்போது இதை வைத்து உன் நியந்தாவின் உடலை எழுப்ப போகிறாய், முதல் கட்டமாக. இதை செய். மற்றவை. இன்னும் ஓரிரு நாட்களில் கற்றுத் தருகிறேன் கற்க இருக்கிறது நிறைய. கற்றவன் கண் இமைப்பது போல. எதுவும் இங்கு சாத்தியம் அல்ல. சாத்தியத் தோற்றங்களே,.உங்க பாரதி பாடினாரே “யாவும் தோற்ற மயக்கங்களே” என்று … அப்படி!”

    சாத்தான் மறைந்தது.

    இப்போது கூட சாத்தான் வரவுக்காகத்தான் காத்துக் கிடக்கிறான். இன்று முழு நிலா. நியந்தா எப்படியும். உயிரோடு எழுந்து விடுவாள். சிந்தனையை பின்னோக்கி குவித்த அகன்க்கு கவிஜி வீட்டுக்குள் சென்று பிணமாக கிடந்த நியந்தாவின் அருகில் படுத்து தன் உயிரை வெளியே எடுத்து, அவளின் உடம்பில் பொருத்திக் கொள்ளும் கூடு விட்டு கூடு பாயும் கலையை செய்தது கண்களில் விரிந்தது.

    “இங்கு எப்படி வந்தோம்”- என்று மயக்கம் தெளிந்து யோசித்துக் கொண்டிருந்த சந்தோஷ் மற்றும் சரவணா இருவருக்கும் தலை மீண்டும் சுற்றியது. இப்போது அகனும் மெல்ல சரிந்தார்.

    “மரணத்தை யாராலும் வெல்ல முடியாது” என்று அலையாகி தடுத்துக் கொண்டிருந்தார் கடவுள்.

    வாசலில் நின்று உள்ளே போக முடியாமல் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த நியந்தாவின் ஆத்மா இம்முறை கொண்டிருந்த உருவம். அது. அது அது அவள்.

    கூடு பாயும். கூடு தொடரும்

    Share
  • அவர் விஸ்வநாதம்

    msvபத்து வருஷங்களுக்கு முன்பு நான் மந்தவெளி பக்கம் வசித்து வந்தேன். காலை கொஞ்சம் சாந்தோம் பக்கம் நடை பயிற்சி செல்வேன். அப்போது என் கால்களில் பாதிப்பு இல்லை. உடன் என் மனைவி வருவாள். எம் எஸ் வீ . வீட்டு பக்கம் ( அது பழைய வீடு ) வரும்போது அவரை பார்ப்பேன். பொதுவாக எந்த பிரபலத்தையும் தொந்தரவு செய்ய பிடிக்காது. ஆனால் அன்று அவர் பால்கனியில் லுங்கியில் உலாவி கொண்டிருந்தார். கீழே நாங்கள் பார்த்து வரவா என வினவினோம். அவருக்கே உரிய தோரணையில் வாங்கோ என்றார். மேலே சென்று அவரை கை குவித்து வணங்கி அமர்ந்து சிறிது நேரம் பேசினேன்.

    எவ்வளவு பெரிய இசை மேதை ? கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் என்ன இயல்பாய் இருந்தார் … இந்த பண்பு படித்து வருவது அல்ல. உள்ளம் அப்படி. பிறிதொரு சமயம் சந்தூர் விஸ்வேஸ்வரன் மறைந்த போது அவர் கீழ் அமர்ந்து பேசும்போது அவர் என்னை தரையில் அமர விடாமல் இருக்கையில் உட்கார சொன்னார். என்னை பொறுத்த வரை எனக்கு எப்படி நடிகர் திலகமோ அப்படியே விசுவும். அவர் இசையில் நான் மயங்காத நாள் உண்டா ? எத்தனை பாடல்கள், எவ்வளவு நுணுக்கங்கள்…சந்தோஷமான சூழலா அங்கே விசு… வயிற்றை பிசையும் துக்கமா ..விசு அங்கே .

    சென்ற வாரம் அவர் மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவரை பார்க்க வேண்டும் என சொன்னேன். ரெண்டு நாளில் சொல்வதாச் சொன்னார். பின்னர் அவரே அழைத்து நன்கு தேறி வருவதை தெரிவித்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. இரவு கிளம்பி சென்றேன். மலர் அடையாரில் இருந்தார். சில பழைய நண்பர்கள் அங்கிருக்க விசுவின் குடும்பத்தினர் அங்கு குழுமி இருந்தனர். ICU வில் இருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை. அரை மணி நேரம் இருந்து பேசி விட்டுப் புறப்பட்டேன்.

    அவர் மகள் பேசும் போது சொன்னார்கள். சிகிச்சை செய்ய வந்த நர்சை பார்த்து உன்னை நான் சந்தித்தேன் …நீ ஆயிரத்தில் ஒருத்தி என்று … கைகள் படபடக்க அவர் படுத்த படுக்கையிலே தாளம் போட்டபடி இருந்தாராம். இரண்டு நாள் முன்பு இளையாராஜா வந்து அவர் கால்களை பிடித்து விட்டதையும் , வித்யாசாகர் பாடினதையும் நினவு கூர்ந்தார்கள். பாலு வந்தவுடன் அவர் நெகிழ்ந்து பேசினாராம். இன்று காலை என் மகன் செய்தி சொன்னனான். அப்பா , எம் எஸ் வீ இஸ் நோ மோர் என்றான்–எனக்கு ஓர் ஆசை இருந்தது.என் மகன் அவர் முன் பாடவேண்டும் என்று. அது நிறைவேறவில்லை.

    வாழ்க்கையில் சில விஷயம் முடியாமற் போவதின் பின் ஓர் உண்மை உண்டு. நான் வீட்டில் கவலையாய் இருக்கும் தருணத்தில் என் மகன் இணையத்தில் இருந்து நாலு பாடல்களை போட்டு காட்டி ராகம் பேசுவான் .எனக்கு நிறைவாய் இருக்கும். எனக்கு பிடித்த விசுவை என் மகனே சிலாகிக்கும் போது போது எவ்வளவு நிறைவு ——அவர் விஸ்வநாதம் .

    Baskar Seshadri
    chennai

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy2

    கேசவ், உன் கை கண்ணனுக்கு எது ‘கை’…. பிரில்லியண்ட்….

    “ILL-LUCK , இனியில்லை, இம்மைக்குப் போட்டியாய்,
    மல்லுக்கு நிற்கும் மறுமைகாண், -கல்லுக்குள்,
    தேரையை வைத்தற்கு நீரையும் பாய்ச்சும்அக்
    காரய்யன் கண்ணன் காப்பு” ….கிரேசி மோகன்….

    இம்மை-இகசுகம், மறுமை-மோக்‌ஷம்….
    அக்காரய்யன் -வெல்லம் கரும்பு போல் தித்திப்பானவன்….a

    Share
  • மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

    கவிஞர் காவிரிமைந்தன்

    ams

    ஏழிசை ஸ்வரம் எடுத்து ஏந்தி வந்த கலைமகளும்
    எம்.எஸ்.வி. எனும் மகனை இத்தரணிக்குத் தந்ததனால்
    எங்களைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி. என்பதுவும்..
    இனியதொரு தமிழ்ச் சொல்லே..

    உலகில் எத்தனையோ இசை அமைப்பாளர்கள்.. இருப்பினும் amas
    ஒரு மாபெரும் கவிஞனுக்கு சிலை அமைத்த பெருமை
    எங்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களையே சாரும்.

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் – பம்மல் – 1993 முதல் இன்று அதிகாலை வரை
    எங்கள் அமைப்போடு ஒன்றிணைந்து கண்ணதாசன் புகழ் பாடிய அன்பிற்கினியவர்..
    கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை நிறுவிட முழுமையாய் தன்னை அர்ப்பணித்தவர்..

    பணிவு என்பதற்கு இலக்கணம் வகுத்து சங்கீதத்துடன் எனக்கு கொஞ்சம் இங்கிதமும் தெரியும்
    என்று பழகும் அனைவரையும் பண்போடு அரவணைத்து பாசம் பொழிந்து உபசரித்து
    உள்ளம் திறந்து உரையாடி மகிழ்ந்த அந்த குழந்தைக்கு வயது 87ஆம்…

    மண்ணிலே வந்து மக்கள் மனம் விரும்பும் இசையை தன் வாழ்நாள் எல்லாம் வழங்கி
    நம் நெஞ்சில் நிறைந்த அற்புத கானங்கள் பலவற்றிற்கும் ஜீவன் தந்து..
    இசையால் நம்மை ஆளும் மன்னர் இவராகி.. இன்று இம் மண்ணைவிட்டுப் பிரிந்தாரே..
    எங்கள் எம்.எஸ்.வி. பக்தி.. தாய் பற்று.. உழைப்பு, எனப் பல உயர் குணங்கள்
    ஒன்றெனத் திகழ்ந்த எம்.எஸ்.வி. கிருஷ்ண கானம் முதல் கேட்கும் கானங்கள்
    பெரும்பாலும் உம் பெயர் சொல்லுமே.. உலகம் உள்ளவரை காற்றில் தவழ்ந்திருக்கும்
    உன் பாட்டு மண்டலத்தில் இவ்வுலகம் கேட்டு மகிழ்ந்து துயில் கொள்ளுமே

    வாழ் நாளெல்லாம் கவியரசர் மீது அளவிலாப் பற்று வைத்து .. ams1
    இன்று அவர் இருக்கும் இடம்தேடிச் செல்கிறீரே..
    தமிழ்த் திரையின் ராஜ சிம்மாசனம் உமதென்பது
    காலம் எழுதி வைத்திருக்கும் கணக்கு..

    எங்கள் பிறவியில் உம்மோடு ஒன்றிணைந்து கண்ணதாசன் புகழ் பாடினோம் என்பது
    நீங்கள் எமக்களித்த பெரும் பேறு.. உயிருள்ளவரை நன்றியுடன் உங்கள் புகழ் சொல்லுவோம்..

    கண்ணீருடன்….

     

     

     

    Share
  • “இசையே நீ என்றும் வாழ்வாய் …..”

    மீ.விசுவநாதன்

    msv

    பிறப்பும், வாழ்வும், இறப்பும் இயற்கை. இந்தக் கால ஓட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து மண்ணில் நல்ல வண்ணம் வாழவேண்டும் என்று நினைவில் நிற்கும்படியான செயல்களைச் செய்து விட்டுத்தான்ச் செல்லவேண்டும். அப்படிச் சென்றிருக்கிறார் “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்” அவர்கள். அவர் இன்று (14.07.2015) அதிகாலையில் மறந்த செய்தி அறிந்து மனம் வருந்தியது. அடுத்தநொடியே அந்த மேதையின் இசையை என் இதயம் இசைக்கத் துவங்கியது. ஒரு அற்புத இசைக்கலைஞர். ஒன்றா இரண்டா எத்தனையோ மெட்டுக்கள் எப்போதும் நம் இதயத்தைத் தென்றலாக, மயிலிறகாக வருடிக்கொண்டே இருக்கிறது. கவியரசர் கண்ணதாசனும் அவரும் இணைந்து தந்த தமிழ் இசைக் கொடை அனந்தம். அதில் ஒருதுளிதான் “ஸ்ரீ கிருஷ்ணகானம்”. அதில் உள்ள ஒன்பது பாடல்களுமே அமிர்தக்கடல்தான். அந்த இசைத் தொகுப்பில் இருக்கும் “ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ” என்ற பாடலை ஒலிப்பதிவு செய்யும் பொழுது இரவு மணி பனிரெண்டு என்று சொல்வார்கள்.

    “எம்.எஸ் .வி”. அவர்கள் இசையமைக்கும் அழகை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு இரண்டு முறைகள் கிடைத்தன. அதில் ஒன்று நான் நண்பர்களுடன் திருவல்லிக்கேணி வசந்தாமேன்ஷன் விடுதியில் தங்கி இருந்த பொழுது, விடுதியின் சொந்தக்காரர் 1978ம் வருடம் “மே” மாதத்தில் ஒரு படம் எடுக்க பூஜை போட்டார். அந்த நிகழ்ச்சிக்கு படத்தயாரிப்பாளரான விடுதியின் சொந்தக்காரர் என்னை அழைத்திருந்தார். (எனக்கு அதில் விருப்பம் இருந்த காரணத்தால்) ஜெமினி ஸ்டுடியோவில் பூஜையுடன் பாடல் ஒலிப்பதிவு. படத்தின் இயக்குனர் மல்லியம் ராஜகோல்., எம்.எஸ்.வி. இசையமைப்பில் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டேன். எம்.எஸ்.வி. அவர்கள் மெட்டுச் சொல்ல அதற்கு “இங்கே ஒரு சங்கம் அதில் சங்கம் அடைந்தேனே …அங்கே ஒரு அங்கம் அதில் அங்கம் வகித்தேனே” என்ற அழகான வரிகளைக் கவியரசர் சொல்ல, அதற்குத் தகுந்த இசையமைத்த எம்.எஸ்.வி. அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குப் பாடிக் காட்ட, எம்.எஸ்.வி. அவர்களின் உதவியாளர் ஜோசப்கிருஷ்ணா துணையுடன் அந்த மிக இனிமையான பாடல் ஒலிப்பதிவான தருணம் இன்றும் எனக்கு அதே இனிமையுடன் நினைவிருக்கிறது. பணப்பிரச்சனையால் அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது. ஆனால் அந்தப் பாடல் என் நெஞ்சிலே நின்று விட்டது.

    இரண்டாவது முறை 1999ம் வருடம் “அண்ணாமலை கைதொழ” என்ற தேவார, திருவாசகப் பாடல்களின் இசைத் தொகுப்புக்கு எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைக்கும் பொழுது முழுமையாக இரண்டு தினங்கள் அவருக்கு வெகு அருகிலேயே இருந்து ரசிக்கும் பாக்கியம் பெற்றென். அ.ச.ஞானசம்மந்தன் அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பதினேழு பாடல்களுக்கு மெட்டமைத்து, தனது குழுவினருடன் அவர் இசையமைத்த அழகையும், அந்த இசையிலேயே அவரும் மூழ்கிக் குளித்த அவரின் ஆழ்ந்த ஈடுபாட்டையும் நேரில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.

    “இலக்கிய சிந்தனை” அமைப்பாளர்களில் ஒருவரான R. A. K. பாரதி அவர்கள் என்னிடம்,” விஸ்வநாதா…தேவார, திருவாசகத்தில் இருந்து சில பாடல்களை அறிஞர் அ.ச.ஞா. தேர்வு செய்திருக்கிறார். அதற்கு “எம்.எஸ்.விஸ்வநாதன்” இசையமையகப் போகிறார். இரண்டு நாட்கள் அதன் ஒலிப்பதிவு மைலாப்பூர், கச்சேரி ரோட்டில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் நடக்கவிருக்கிறது. ஒனக்கு இதிலெல்லாம் ஈடுபாடுண்டே..முடிந்தால் இரண்டு நாட்கள் லீவு போட்டு வாயேன். மிகக் குறைந்த பேர்கள்தான் இருப்பார்கள். அ.ச.ஞானசம்மந்தன் இருப்பார். முடிந்தால் சீதாவையும் (என் மனைவி) கூட்டிக்கொண்டு வா” என்றார். இரண்டு நாட்கள் லீவு போட்டுவிட்டு காலையில் எட்டு மணிக்குச் சென்று இரவு பதினோரு மணிக்குத்தான் திருபினேன்.

    ஒலிப்பதிவுக் கூடத்தின் உள்ளே அ.ச.ஞா. அவர்கள் அமர்ந்திருந்து ஒவ்வொரு தேவார திருவாசகப் பாடலுக்கும் ஒரு சிறு உரை தருவார். அதை எம்.எஸ்.வி.அவர்கள் நுணுக்கமாகக் கேட்டுப் பதிவு செய்வார். ஒலிப்பதிவு முடிந்தவுடன் அ.ச.ஞா. கூறும் அற்புதமான விளக்கங்களைக் கேட்டு ரசிப்பார். அடுத்ததாக எந்தப் பாட்டு யார் பாட வேண்டும் என்று திட்டமிட்டபடி பாட அழைத்திருந்தார். இசையமைக்கும் குழுவினர் ஒரு கூடத்தில் இருப்பார்கள். அவர்களுக்குக் குறிப்புகள் தந்து வழிநடத்துவார். உடனே தனது இடத்திற்கு வந்து பாடகர்களுக்கான பாடலைத்தந்து, அதை எப்படிப் பாடவேண்டும் என்றும் கற்றுத் தருவார். குறித்த காலத்தில் ஒலிப்பதிவை முடித்துவிட்டு, அதை அங்கே உடனேயே போட்டுக் காட்டி ஒப்புதல் பெற்றுக் கொள்வார்.

    “அண்ணாமலை கைதொழ” என்ற அத்தொகுப்பில் அப்பர் தேவாரத்தில் இருந்து “எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே ..சிந்தை உள்ளும் சிரத்துளும் தங்கவே” என்ற பாடலுக்கான இசைக்குறிப்பை (பதிவு செய்த ஒலிநாடாவை) எஸ்.பி.பி. இடம் தந்து,” பாலு..இதக் கேளு..பாடு” என்றார். எஸ்.பி.பி. அதைப் பணிவோடு பெற்றுக்கொண்டு எம்.எஸ்.வி.யையும், அங்கே அமர்ந்திருந்த அ.ச.ஞா. அவர்களையும் வணங்கி விட்டுப் பாடுவதற்காக ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் சென்று விட்டார். அவர் சென்றவுடன், “பாலுவிடம் ரொம்பப் பணிவும், கிரகிப்புத்தன்மையும் ஜாஸ்த்தி. என்ன சொல்லிக் கொடுகிரோமோ அதை அப்படியே பாடி இசையமைப்பாளர்களின் செல்லப் பிள்ளையாய்டுவான்” என்று அங்கிருந்த அ.ச.ஞா., ப.லஷ்மணன், பாரதி ஆகியோர்களிடம் கூறினார். பாடல்களை எல்லாம் “டிராக்”கில் பாடியவர் எம்.எஸ்.வி.யின் உதவியாளராக இருக்கும் அனந்தநாராயணன். அவர் எம்.எஸ்.வி.யின் செல்லப்பிள்ளை.

    “தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்” என்ற திருவாசகப் பாடலை கிருஷ்ணராஜாவும், ராகவேந்தரின் மகளும் பாடினர். அந்தப் பாடலில் “தேராந்த வீதிப் பெருந்துறையான் நிருனடஞ்செய்” என்று ஒரு வரி வரும். அதற்கு இசை அமைக்கும் பொழுது எம்.எஸ்.வி.யிடம் அ.ச.ஞா. அவர்கள், ” எம்.எஸ்.வி….இந்த இடத்துல இறைவன் தேரில் ஊர்வலம் வருகிறார்…” என்று சொல்லும் பொழுது, ” ஆங்….புரிஞ்சுது..புரிஞ்சுது..என்று சொல்லி “மாலாரி” ராகத்தில் அதை மிக அழகாக அமைத்தார். நாதஸ்வரம், மேளம் என்று அந்த இசை அமர்க்களமாக இருக்கும். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ப.லஷ்மணன் பரவசப்பட்டு எம்.எஸ்.வி.யின் கையைப் பிடித்துப் பாராட்டினார். அந்தப் பாடலைக் கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்க்கும்.
    .
    இரண்டாவது நாள் “சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக” என்ற திருவாசக, திருப் பொன்னூசல் பாடலை “சிந்து” பாடினாள். ரொம்பவும் அற்புதமான, மனம் ஊஞ்சலாடுகின்ற வண்ணம் அந்தப் பாடலுக்கு மெல்லிசைமன்னர் இசையமைத்திருப்பார். அந்தப் பாடல் ஒலிபதிவு செய்து முடிக்கும் பொழுது இரவு மணி பதினொன்று. அப்பொழுது அங்கிருப்பவர்களிடம்,” இதப் போல்லத்தான் “ஆயர்பாடி மாளிகையில்” பாட்டையும் நள்ளிரவுல ஒலிபதிவு செய்தோம்” என்றார் எம்.எஸ்.வி.

    அப்பொழுது என்னுடன் என் மனைவியும், என் மைத்துனி “கலாவும்” இருந்தனர். கலா நன்றாகக் கர்நாடக சங்கீதம் கற்றவர். நான் எம்.எஸ்.வி.அவர்களிடம்,” இவங்க என் மச்சினி..கலா ..கர்நாடக சங்கீதம் கற்றவர்” என்று அறிமுகம் செய்து வைத்தேன். உடனே அவர் தன் ஆர்மோனியப் பெட்டியின் மீது தனது வலதுகை விரல்களைப் பரப்பியபடி,” அம்மா..எங்க..ஒரு பாட்டுப் பாடு” என்றார். கலாவும் கொஞ்சம் பாடினாள். ,” அம்மா ஒனக்கு நல்ல சாரீரம் இருக்கு…நிறைய பிராக்டீஸ் பண்ணனும் ..நல்ல வருவே..” என்று வாயார வாழ்த்தினார் அந்த இசை மேதை.

    ஒவ்வொரு மேடையிலும் தன் இசை நிகழ்ச்சியைத் துவங்கும் முன்பு கவிஞர் கண்ணதாசன் எழுதிய “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்” என்ற பாட்டை பாடி முடித்ததும்,” எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்” என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பாடி முடிப்பார். இன்று நானும் “எங்கள் கண்ணதாசன் புகழோடு எம்.எஸ்.வி.புகழையும் பாடுங்களேன்” என்று அந்த புருஷோத்தம மூங்கில்களைப் பிராத்திக்கின்றேன்..

    Share