அன்பினிய நண்பர்களுக்கு,

வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி

kamarajar

வணக்கம். அன்னை சிவகாமி பெற்றெடுத்த தமிழ்ச் சிங்கம்.. பொற்கால ஆட்சியை நடத்திக் காட்டிய தலைவர்! தர்மமே மானிடப் பிறப்பெடுத்துத் தரணியிலே வந்துதித்து ஏழைகளைக் காத்து நின்றதென்றால் காமராசருக்கே அது சாலப் பொருந்தும்.

நம் தமிழ் நாட்டில் இலட்சோப லட்சம் மக்கள் கல்விச்செல்வம் பெற்றுத் திகழ்வதற்கு காமராசர் ஒருவரே காரணம் என்பதை மறுக்க இயலாது. எளிமைக்கு இவர், இனிய எடுத்துக்காட்டு! கருப்புத் தங்கம்.. காங்கிரஸ் பேரியக்கத்தில் மாநிலத் தலைவர் – இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்…. இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரிகளை நிர்மாணித்த கிங் மேக்கர்! தன்னிகரில்லாப் பெருந்தலைவர்! ஈடில்லா உழைப்பாளி! மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே தியாக வாழ்வேற்று மறைந்த மா மனிதர் இவர் என்பதை இவரின் இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் சாட்சி சொன்னது!

அந்த நன்றிப் பெருக்கோடு உளம் கனிந்து அத்திருமகனாரை நினைவில் நிறுத்தும் பொருட்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கர்மவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகள், வல்லமை மின்னிதழில் வெளியாகும். வெற்றி பெறும் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு உண்டு. தேர்வு பெறும் கட்டுரைகள், நூல் வடிவம் பெறும்.

இக்கட்டுரைப் போட்டியின் நடுவர் பொறுப்பினைத் தமிழறிஞரும் சிறந்த சொற்பொழிவாளரும் காமராசர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவரும் பண்பட்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் ஏற்றுள்ளார். தமிழருவி மணியன் அவர்களுக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியை முன்மொழிந்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கும் நமது நன்றிகள்.

15.07.2015, காமராசர் பிறந்த இந்த நன்னாளில் இந்தக் கட்டுரைப் போட்டியை நடத்துவதில் பெருமை கொள்கிறோம். படைப்பாளர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்று, பரிசுகளை வெல்ல அழைக்கிறோம்.

உங்கள் கட்டுரையை யூனிகோடில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, 15.08.2015க்குள் vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

பரிசுத் தொகை – முதல் பரிசுகள் மூன்று …. ரூ.1000 வீதமும்

இரண்டாம் பரிசுகள் இரண்டு ரூ.750 வீதமும் மற்றும் மூன்றாம் பரிசுகளாய் மூன்று ரூ.500 வீதமும் வழங்கப்படும்! (மொத்தப் பரிசுகள் – ரூ.6 ஆயிரம்)

மேற்கண்ட பரிசுகளைத் தவிர, பங்கேற்கும் அனைத்துக் கட்டுரைகளும் பரிசீலித்து, தகுதியுள்ள படைப்புகள் நூல் வடிவம் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்!

ஒருவரே ஒரு கட்டுரைக்கு மேல் அனுப்பலாம்; எந்தத் தடையும் இல்லை..

கட்டுரைப் போட்டி முடிவுகளைப் பொறுத்தவரை, நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

போட்டியில் அனைவரும் பங்கேற்று, பரிசுகளை வெல்லுமாறு அன்போடு அழைக்கிறோம். வாழ்த்துகள் நண்பர்களே.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி!

  1. கட்டுரைப்போட்டிக்கு கால நீட்டிப்பு ஏதும் செய்யப்பட்டுள்ளதா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *