Blog

  • கால(ன்) நிர்ணயம் …

    இரா.சந்தோஷ் குமார்.

    இந்த தேசிய நெடுஞ்சாலை ஏன் கறுப்புக் கம்பளத்தை விரித்துச் செல்கிறது? எதையும் நேர்மறையாக சிந்திக்க பழகியிருந்த எனக்கு இன்று ஏனோ எதிர்மறைச் சிந்தனையில் தடுமாறுகிறது மனம்.

    பெங்களூருவிலிருந்து தருமபுரி வழியாக சேலம் பை பாஸ் சாலையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். நான் ஓட்டிக்கொண்டிருப்பது இன்னோவா கார். இன்று காலையில் தான் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடமிருந்து இந்த காரை வாங்கினேன். நண்பர் என்பதால் சில லட்சத்தை விலை குறைத்து எனக்கு கொடுத்தார். இந்த காரின் வயது ஒன்றரை ஆண்டு,

    காரைச் செலுத்திக்கொண்டிருக்கிறேன். மித வேகமாக, கொகுசாக என்னை பயணிக்க வைத்தது இந்த இன்னோவா கார். கருமை நிற தேவதையின் அழகுப்போல கறுப்பு நிற இன்னோவா கார். அழகு என்றால் அப்படி ஓர் அழகு. இன்னோவாவின் உள்ளே இருக்கை மடியில் அமர்ந்து இவளை இயக்குகிறேன். ஒவ்வொரு கியர் மாற்றி , ஏற்றி குறைக்கும்போதெல்லாம் என்னுள் ஹார்மோன்கள் சந்தோஷக் கூத்தாடுகிறது.

    வசதி படைத்த குடும்பத்தின் கடைக்குட்டி தான் நான் என்றாலும். நானாக ஒரு கார் வாங்க வேண்டும். என் சொந்த உழைப்பில் வாங்க வேண்டும். இதுதான் எனது ஒருவிதமான வினோத லட்சியமாக சிறுவயது முதல் இருந்தது.

    இன்னும் சில மணிநேரம் தான். என் இல்லத்திற்குச் சென்றடைந்துவிடுவேன். என் அம்மா அப்பா விடம் நான் வாங்கிய இந்த காரை காண்பித்து அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று மகிழ வேண்டும். நான் கார் வாங்கிய விஷயத்தை இன்னும் அம்மாவிடம் சொல்லவில்லை. ஓர் இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் அல்லவா.

    அம்மாவின் ஆசைப்படி நான் கார் ஓட்ட, அம்மா அப்பா காரின் பின் இருக்கையில் அமர்ந்தவாறே கோவை மருதமலைக்கு சென்று அம்மாவின் பேவரைட் கடவுள் முருகனை தரிசித்து வர வேண்டும். இந்த முறையாவது அம்மாவிற்காக அந்த முருகனை பார்த்து ஒரு ’ஹாய் ’சொல்ல வேண்டும்.

    பின்பு இந்த இன்னோவை அழைத்துகொண்டு என் அண்ணன் அண்ணி இருக்கும் ஊருக்கு சென்று அவர்களையும் அழைத்துக்கொண்டு ஏதேனும் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சென்று உணவருந்தி விட்டு, மீண்டும் என் அம்மாவின் இருப்பிடத்திற்கு இவர்களை அழைத்து வர வேண்டும். என் அண்ணா என் அம்மாவிடம் “தம்பி நல்லா கார் ஓட்டுறான் மா. அவன் கஷ்டப்பட்டு வாங்கின கார்ல நான் வந்தது என்னை ரொம்ப ஆனந்தமாக்கியது அம்மா. இவளுக்கு சந்தோஷம் தாங்கல. பாருங்க.. “ என பெருமிதத்துடன் அவன் பேசும் அழகை புதிதாக நான் வாங்கிய ஐ போனில் படம் பிடித்து நான் ரசிக்க வேண்டும். கூடவே என் அன்னைப்போன்ற என் அண்ணியின் விழியில் பொழியும் பெருமித கண்ணீரை ரசிக்க வேண்டும். எனக்காகத் துடிக்கும் உயிர்களின் ஆனந்த உற்சாகமிடும் அந்த நொடியை நான் பார்க்க ஆவலாகச் செல்கிறேன்.

    ஆசைகள்… ஆசைகள்… தீரா ஆசைகள்.

    இந்தக் கார் வெறுமனே சொகுசு உபயோகத்திற்கு வாங்கப்பட்டது அல்ல. கெளரவத்தின் அடையாளத்திற்கும் அல்ல. இந்த கார் வாங்கிய பிண்ணனியில் என் வாழ்கை அடங்கியிருக்கிறது. என் கொடூர கஷ்டங்கள் புதைந்திருக்கிறது. பல துரோகிகளின் அனல் அம்புகளில் ரணப்பட்டு ரணப்பட்டு… உடம்போடு மனமும் கதறி கதறி புண்ணாகி மண்ணாகி வீழ்ந்து ஒரு முறை செத்து, ஃபீனிக்ஸ் பறவைப்போல எழுந்து எழுச்சியுடன் ஒரு சாதனையின் பரிசாக வாங்கப்பட்ட கார்.

    வாழ்க்கையில் நமக்கான விமர்சகர்கள் எங்கிருந்து வேண்டுமானலும் கிளம்புவார்கள். அவர்களுக்கு நாக்கில் நரம்பு இருக்காது என்றாலும் அவர்களின் விமர்சன வாக்கில் நமக்கு ஒர் உந்துதல் கிடைக்கும். அள்ளி வீசும் நெருப்பு சொற்களை எல்லாம் இருதயத்தில் ஏந்தி இரத்த நதியில் கொதிக்க வைத்து மூளையை சூடாக்கி வேகமாக முன்னேறவேண்டும். அப்படித்தான் முன்னேறினேன். சமபளத்திற்கு வேலையா ? நானா அடிமை? விட்டெறிந்த வேலையோடு வீட்டில் வெட்டியா ஆறுமாதம் கழிந்த அந்த காலத்தில் பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு, அந்நிய சொந்தங்கள், நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் பாடாய் படுத்தி வறுத்து எடுத்த அந்த ரணத்தில் மீண்டதே பெரிய விடயம்.

    மீண்டு விட்டேன். ஓர் சொந்த அலுவலகம். தன்னம்பிக்கை 300 சதவீதம் வந்தப்போது அம்மாவிடம் சொன்னேன் ”அண்ணாகிட்ட இருக்கிற காரை போல ஒரு கார் சீக்கிரமா வாங்கிவிடுவேன் அம்மா” என சொல்லிய அடுத்த நாளில் எதிர்பாரா விதமாய் தொழில் பங்குதாரனாகிய நண்பன் துரோகி ஆனான். ஓடியவனை தேடும் தேடலில் சில்லரைகள் கரைந்தது. காசோலைகள் கிழிந்தன. வங்கியிருப்புக்கள் முடங்கின. அம்மாவிடம் சொன்னேன். “முடியும் அம்மா. அஞ்சு வயசுல நான் சொல்லியிருக்கேன்ல மா. உங்கள கூட்டிட்டு கார்ல போவேன்னு. செய்வேன் அம்மா. இப்போ முடியாது… ஆனா முடியும்மா “ என்றேன். அம்மா சொன்னார் “ நீ உன்னையக் காப்பாத்திக்கோடா கார்லாம் நமக்கு எதுக்கு “ அம்மாவின் ஆறுதலில் ஒரு ஏமாற்றத்தையும் கண்டேன்.

    ” கார் எல்லாம் நமக்கு எதுக்கு ? ” அம்மா ஏன் இப்படி விரக்தியாகச் சொன்னார். மனம் வலித்தது. ச்சே… அம்மாவின் ஆசையைக்கூட நிறைவேற்ற முடியல. பெத்தவங்க எப்போதும் நாம நல்லா இருந்தா போதுமுன்னுதான் யோசிப்பாங்க. அதுக்காக அவங்க ஆசைப்பட்ட சின்ன சின்ன விஷயத்தை நாம செய்யலைன்னு நாம பொறந்து என்ன பிரயோசனம்? அந்த ஆசையும் நான் தானே உருவாக்கி விட்டேன். செய்யனும்…

    மீண்டும் புதிய அலுவலகம். புதிய முயற்சி, புதிய நம்பிக்கை, புதிய உதயம். நோ, பார்டனர். சாவோ வாழ்வோ அது நான் தான் முடிவு பண்ணனும். நினைச்சேன், உழைச்சேன், சாதிச்சேன். 8 மாத கடும் தவம். உறக்கம் என்றால் எப்படி இருக்கும் என கேட்ட காலம் அது.

    ” அம்மா இன்னும் ஒரு வாரத்தில நம்ம வீட்டு முன்னாடி கார் நிக்கும்மா. பாருங்க. இல்லனா பேரை மாத்திக்கிறேன். “ அம்மாவிடம் சொன்னப்போது, அம்மா என் தலையைக் கோதி, மெதுவாக வருடிவிட்டு, ”மெல்லமா வாங்கலாம் டா. முதல்ல பணம் சேர்த்து வை. உனக்கு கல்யாணம் ஆகணும். ஒரு பேரக்குழந்தை பார்க்கணும்டா. இதுதாண்டா ஆசை. கார் எல்லாம் சும்மாடா. உன் ஆசைக்கு என் விருப்பம் அவ்வளவுதான் “ அம்மா ஏதோ ஏதோ சொன்னாலும் , எனக்கு கார் வாங்குவதில் மட்டுமே கவனம் இருந்தது.

    அது ஒரு மார்ச் மாதக் கடைசி வாரம். கார் வாங்கக் கூடிய நாட்கள் நெருங்கியது. முதலில் டவேரா வாங்கிப்போம், அப்புறம் இன்னோவா வாங்கிக்கலாம். புது மாடல் டவேரா பார்த்து விட்டேன். சந்தனமும் வெள்ளையும் கலந்த ஒரு நிறம். ரிவர்ஸ் பார்க்க டிஸ்ப்ளே. ஏசி எல்லாம் உயர் ரகம். முடிவு பண்ணிட்டேன். இரண்டு நாள் கழித்து வந்து அட்வான்ஸ் கொடுத்து எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அலுவலகம் வந்தப்போது ……………………………………..

    அந்த தீ………………! மின்சார விபத்து… திகு திகுவென… என் இலட்சியங்களை எல்லாம் அந்த தீ நாக்குகள் தின்று கொன்றுவிட்டு சென்றுவிட்டது. அது விடுமுறை நாள் என்பதால் நாங்கள் தப்பித்துக்கொண்டோம். அன்று நான் அங்கு இருந்திருக்க வேண்டும் என் இலட்சியக்கனவுளோடு நான் பொசுங்கியிருக்க வேண்டும். தவறிழைத்துவிட்டேன். ஆனாலும் மனம் பதறவில்லை. கண்ணில் ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை. இருதயத்தை இரும்பாக்கி கொண்டேன். யாரிடமும் இந்த விபத்து குறித்துப் பகிரவில்லை. அம்மாவிடம் அலுவலகம், பராமரிப்பு வேலை, என்று மற்றொரு பொய் சொல்லிவிட்டேன். ” கார் வாங்க முடியல அம்மா. ஆனா எப்படியும் வாங்கிடுவேன். சாரி அம்மா.” அம்மாவிடம் சொல்லாமல் என் மனதில் பேசிக்கொண்டேன். பேரை மாத்துறேன்னு சொன்னேன்ல … மாத்திட்டேன்…

    ” அதிர்ஷ்டமற்றவன் ”

    அலுவலகத்திற்கு செய்த இன்சூரன்ஸ், விசாரணை எல்லாம் தோல்வி. அலுவலக தோழர்கள் பாவம், அவர்களை வேறு வேலைக்கு சேர்த்துவிட்டேன். அதிர்ஷ்டமற்றவனோடு அவர்களுக்கு இனி என்ன வேலை இருக்க போகிறது. கையில் ஒத்த ரூபாயில்லை. அன்று எனக்கு இருந்த ஒரே தோழன் மடிக்கணினி. கூட ஒரு தோழி ..

    விழிகளால்
    எதையும் குறையாக
    பார்க்காதே… மனமே…
    எதையும் நிறைவாக
    பார்…
    பரந்தமனதுடன் பார்!
    இந்த பூமி
    பல தத்துவங்களை ஒளித்திருக்கும்
    அந்த வானம்
    சில பொன்மொழிகளை மூடியிருக்கும்

    குயிலும் காக்கையும்
    புது மெட்டுகளை யாசகமிடும்
    மயிலும் மானும்
    நளின நடனங்களை சொல்லித்தரும்
    எல்லாமே ரசித்திடு…
    எல்லாமே… எல்லாமே …
    எதையுமே எதையுமே
    ரசித்திடு…
    ஆனால் சொந்தமாக்கிக்கொள்ளாதே!
    அது உன் காதல் தேவதையே என்றாலும்…
    ரசித்துக்கொள்… ரசிக்க மட்டுமே செய்…
    ஒருப்போதும் உறவாக்கி கொள்ளாதே.
    உறவாக்க நினைத்து ஏமாற்றமடையாதே.

    இந்த உலகம் வினோதமானது
    எதுவோ ஒன்று சொல்லிக்கொடுக்கும்
    கேட்காதே.
    உலகத்திற்கு நீ சொல்
    உலகத்தின் செவிகளில்
    உன் சொற்களை கேட்க வை.

    அதற்கு ஒரே வழி
    நீ கவிஞனாக வேண்டும்.
    கவிதையாகவே நீ மாற வேண்டும்.

    கவிதை….. ஆஹா….. கவிதை….! கவிதைதான் என் தோழி. அன்று துரோகியான நண்பன் எனக்குப் பல இலட்சங்களை இழப்புக்கொடுத்து ஒடியப்போதும், இந்த தீ என்னை கொன்றப்போதும் என்னை ஃபீனிக்ஸ் பறவையாய் எழ வைத்தது நான் எழுதிய கவிதைகள் தான். அந்த கொடூர நாட்களில் நான் என்னை தேற்றிக்கொள்ள தஞ்சமடைந்த இடம் கவிதை. எழுதுவேன், வடிவமோ… உருவமோ … சந்தமோ… இலக்கணமோ… எதுவும் தெரியாது. ஆனாலும் எழுதுவேன். தீர தீர எழுதுவேன். தாகமெடுக்க … தாபமெடுக்க … ரசித்து ரசித்து எழுதுவேன். ஆழிப்பேரலையை விரல்நுனியில் நிறுத்திவிடுமளவிற்கு கற்பனையோடு எழுதுவேன். வைரமுத்து என்ன பெரிய வைரமுத்து. நான்தான்டா கவிஞன்… செறுக்கு மீசையை தடவியவாறு எழுதுவேன். கிட்டத்தட்ட கற்பனை தேசத்தில் என்னை நானே கடத்திக்கொண்டேன்.

    மனம் லேசானது. தொழில் மீண்டும் சிறியதாகத் தொடங்கினேன். வருமானம் போதவில்லை. கடனாளியாக்கப்பட்டேன். முந்தைய இழப்புக்களுக்கு வாங்கிய கடன். அந்த கடனுக்கு வட்டி. வட்டிக்கு வட்டி, குட்டி எல்லாம் சம்பாதித்து சம்பாதித்து வியர்வையால் அடைத்தேன்.

    கவிதையின் வளர்ச்சியில் கதை எழுதத் தூண்டப்பட்டேன். கதையின் பரிணாமத்தில் குறும்படம் எடுக்க ஆரம்பித்தேன். எடுத்தேன். என் கவிதையானவன். இனிய நண்பன் மாறனின் இயக்கத்தில் ஓர் அசாத்தியமான குறும்படம், உலக அரங்கில் மிக பிரமாண்டமாக வியந்து பேசப்பட்ட படம். வாழ்வை மாற்றிய படம். மாற்றியது. நண்பனின் முயற்சியில் எனது ஒரு சிறு பங்களிப்பு. அதில் கிடைத்த பெரும் வாய்ப்பு. திரைப்படக் கதாசிரியராக வளர்ந்தேன். நண்பன் விஜி பிரபல இயக்குநராக மாறினார். எனது ஒரு கதை சமூகத்தின் விதையானது. அந்த விதைக்கு கிடைத்த சன்மானத்தில் வாங்கியதுதான் இந்த இன்னோவா கார்.

    சேலத்தைக் கடந்துவிட்டேன்.

    என் ஐ போன் ஒலித்தது. அழைத்தது என் அம்மா “ எங்கடா இருக்க ? சாப்பிட்டியா ? எப்போ வருவ ? நாளைக்கு பொண்ணு பார்க்க போகணும். சீக்கிரமா வா டா ”

    “ அம்மா .. நான் எத்தன தடவ சொல்றது…? பொண்ணுலாம் பார்க்காதீங்கன்னு ? “

    “ எப்போது பார்த்தாலும் இப்படியே சொல்லு. சின்ன மருமகளை, மகளா பார்க்க ஆசையா இருக்கேன் டா……. வேறு எந்தப் பொண்ணாவது உன் மனசுல இருக்காளா ? சொல்லுடா உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு… பேசலாம். “

    “ அய்யோ அம்மா. இப்போ தலைவலிக்குது… என்னை விடும்மா. உனக்கொரு ஒரு சர்ப்ரைஸ் அதிர்ச்சி நியூஸ் காத்திட்டு இருக்குமா… ஒரு மணி நேரம் வெயிட் பண்ணு. சரியா. நான் போன் வைக்கிறேன். “

    “ என்னடா தலைவலிக்குதா… ஏன் என்னாச்சு? “

    “ அய்யயோ அம்மா… ஒன்னுமில்ல… விடும்மா என்னை… “

    கருப்பு நிறச் சாலையில்… இன்னோவை இயக்கிக்கொண்டிருந்த எனக்கு தீடிரென இப்போது தலையில் இடியொலி.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்ட கடுமையான மன அழுத்தம், தூக்கம் இல்லாமை, மனச்சிதைவு , ஏமாற்றம், ரணம், ஆதங்கம், கோபம், ஆவேசம், ஆர்பாட்டம், ஆட்டம் எல்லாம் சேர்ந்து தலையில் குடிக்கொண்டு மரணச்சிலுவையில் என்னை விதிகளின் ஆணிகளில் அடிக்க காத்திருந்தது காலம். அவ்வப்போது வரும் தலைவலி. இம்முறை அதிகமாக.

    என் முன்னிருக்கும் காட்சிகள் இருள ஆரம்பிக்கிறது. வானிலை மாறுகிறது. என் சூழ்நிலையும்!

    வானத்தில் இடிக்காரன் மரண தாளம் அடிக்க… அடிக்க … பூமியில் மழை தேவதைகள் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்கள், மின்னல்காரி பளிச் பளிச் என எனை பார்த்து கண்ணடிக்கிறாள். இவளை என்றேனும் பிடித்துவிட வேண்டும் என எனக்கு வெகு நாட்களாக ஓர் ஆசையுண்டு… பிடித்துவிட துடித்தேன் இம்முறை……..!

    என் சொந்த உழைப்பில் வாங்கிய கார் இன்னோவா தேவதைக்கு முன் பலத்த ஹாரன் ஒலி………………… சங்கொலியாய் கடைசியாய்க் கேட்டேன்.

    டப்………………..!!

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு :

    நாளைய விடியல் தொலைக்காட்சியில்…

    “ அரசியல் மந்திரம்” திரைப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது. இந்த படத்தின் இயக்கம் , கதை வசனம் ஆகிவை தேசிய விருது பெறுகிறது. அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியமைக்காக முதன் முறையாக பொது மக்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்தப் படம் தேசிய விருது பெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

    இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான கதை வசனம் எழுதியவருக்கு படத்தின் தயாரிப்பாளர் புது உயர்ரக காரை பரிசாக கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். ”

    மற்றொரு டிவி சேனலில் ஒரு செய்தியாக:

    ”பவானி அருகே… தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கருப்பு நிற கார் எதிரே வந்த லாரியுடன் மோதிய கோர விபத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் அகால மரணமடைந்தார்.”

    ***

    Share
  • செயற்கை நிலா

    மாதவன் ஸ்ரீரங்கம்.

    சட்டென்று ஏதோ ஒருநாளில் அது நிகழ்ந்துவிட்டது. வானத்தில் நிலாவே வரவில்லை. ஏன் எதனாலென்றெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. நகரம் முழுக்க இதே பேச்சாக இருந்தது. சரி இங்கு மட்டும்தான் இப்படியா என்று தெரிந்துகொள்வதற்காக பக்கத்து நகரத்திற்கு ஆளனுப்பி விசாரித்ததில் அங்கும் இப்படித்தானாம். ஏறக்குறைய எல்லா இடங்களிலுமே இதேகதைதான். மக்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

    மீடியாக்கள் அனைத்திலும் இதுதான் செய்தியாக இருந்தது. இணையம் முழுக்க இதுபற்றிய காரண அலசல்களும் காரசார விவாதங்களும் நிகழ்ந்தன. பூமியிலிருந்த கேமராக்கள் அனைத்தும் வானைநோக்கி குறிபார்த்து காத்திருக்கத் துவங்கின.

    ஒட்டுமொத்தமாக ஏதோ தெய்வகுத்தமாக இருக்கக்கூடுமென்று அங்கங்கு ஊர்களிலுள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நிகழ்த்தினார்கள். ஒன்றும் பயனளிக்கவில்லை. ஏதோ மாபெரும் சாபம் பூமிமீது கவிழ்ந்திருக்கிறதென்று மக்கள் பீதியிலாழ்ந்தார்கள்.

    ஆள்பவர்களெல்லாம் அவசரமாக ஐநா சபையில் ஒன்றுகூடி கலந்தாலோசித்தார்கள். தலைக்குத்தலை ஏதேதோ பேசினார்கள், உங்களால்தான் எங்களால்தான் என்றெல்லாம் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள்.

    பிறகு ஒரு சாரர் மட்டும் “எழுந்து இதில் அறிவியல் ரீதியிலான பார்வைகள் ஒருபக்கம் தொடரட்டும். மக்களின் புராதன நம்பிக்கைகள்பற்றியும் நாம் யோசித்துப்பார்க்கவேண்டும். எதற்கும் ஆன்மீகத்தலைவர்கள் எல்லோரையும் வரவழைப்போம்” என்றார்கள். அந்தக்கருத்து அனைவருக்குமே ஒப்புதலாக இருக்க. அதிவிரைவாக ஒரு மாநாடு ஏற்பாடு செய்தார்கள்.

    கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் யூதர்கள் பவுத்தர்கள் இந்துக்கள் சமணர்கள் இன்னும் என்னவெல்லாம் மதங்கள் உண்டோ அதன் அதிகாரபூர்வ தலைவர்களெல்லாம் அதில் கலந்துகொண்டார்கள். விஞ்ஞானிகளும் ஒரு பக்கமாக சேர்ந்துகொண்டார்கள்.

    மதத்தலைவர்கள் அதற்கு காரணிகள் என்னவாக இருக்குமென்று பட்டியலிட்டுக்கொண்டே செல்ல அறிவியல் ஆய்வாள்ர்கள் அதையெல்லா மறுத்தபடி விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பயங்கரமாக பேச்சு நீண்டுகொண்டிருந்தது. ஆன்மீகவாதிகள் கேட்ட சில சந்தேகங்களுக்கு பதில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அப்பட்டமாக ஒப்புக்கொண்டனர்.

    யாரும் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை. ஒருசாரர் சொல்வதை மறு சாரர் மறுதலித்தார்கள். சிலர் எழுந்து வெளிநடப்பு செய்தார்கள். கொஞ்சம் பேர் அவர்களை தடுத்தார்கள். பெரிய குழப்பமாக இருந்தது.

    சிலர் பலி கொடுக்கவேண்டுமென்று சொல்ல. எதை பலியாக கொடுப்பதென்பதில் கருத்துவேறுபாடுகள் நிலவின. நாம் நாகரீகமனிதர்கள் எனவே நரபலியெல்லாம் கூடாதென்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள். ஆடு மாடு பன்றி கோழி என அவர்வர் சூழலியலுக்கு ஏற்ப விலங்கினங்களை பலியிடலாமென்று சொல்ல, புளூகிராஸ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தார்கள்.

    கொசகொசவேன பேச்சு நீண்டதே ஒழிய முடிவிற்கு வந்தபாடில்லை. கடைசியாக பிரார்த்தனைதான் ஒரேவழி. ஒரு குறிப்பிட்ட நாளில் கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று முடிவிற்குவந்தார்கள். ஏறக்குறைய எல்லோருக்குமே அதில் சம்மதமாயிருந்தது. அடுத்தவாரத்தில் ஒருநாளில் மாலை ஆறுமணியை பிரார்த்தனைக்கான நேரமாக அறிவித்து மாநாட்டை கலைத்துச் சென்றார்கள்.

    குறிப்பிட்ட அந்த நாளில், மிகச்சரியாக பூமியிலுள்ள அனைவரும், பிரார்த்தனை செய்தார்கள். எல்லாம் முடிந்து இருண்டபிறகு நிலா வருமென்று ஆவலுடன் பார்க்க கடைசிவரை வரவேயில்லை நிலா.

    மக்கள் நொந்துபோனார்கள். கவிஞர்களில் பாதிபேர் தற்கொலை செய்துகொண்டார்கள். மீதிபேர் பைத்தியம் முற்றிப்போனார்கள். அம்மாக்கள் சோறூட்ட நிலா இல்லாததால் குழந்தைகள் சாப்பிடாமல் மெலிந்தன. வடை சுடும் பாட்டிகதையெல்லாம் வழக்கொழிந்து போய்விடுமே என்று சிலர் வருந்தினார்கள்.

    காதலிகளெல்லாம் காதலர்களிடம் நிலாவை கொண்டுவா காதலிக்கிறேன் என்று கேலி பேசினார்கள். இரவுகள் பயங்கரமாக அச்சமூட்டின. மனிதர்கள் சமநிலையிழந்து வெறிகொண்டு ஒரு மார்க்கமாக அலைந்தனர். அங்கங்கே நிலாவை திரும்பக்கொண்டுவரும்படி அரசை வற்புறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்கள்.

    அரசு மக்களை சமாதானம் செய்ய கண்துடைப்பிற்காக நிலா மீட்புக்கமிட்டி ஒன்றினைத் துவங்கி, இன்னும் சில நாட்களில் நிலாவை கொண்டுவந்துவிடுவோம் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் வன்முறைகளும் சூறையாடல்களும் நிகழ்ந்தன.

    சர்வதேச நாடுகள் மறுபடி ஐநா சபையில் ஒன்றுகூடி விவாதித்தபோது நாசா மையத்தின் தலைவர் ஆண்டர்சன் ஒரு கட்டுரை சமர்ப்பித்தார். அதன்படி, முறையாக நிலவைப்பற்றி ஆய்வுகள் தொடரும் அதேபட்சத்தில் மக்களை கட்டுக்குள் கொண்டுவர வானில் ‘செயற்கை நிலா’ ஒன்றினை தற்காலிகமாக நிறுவுவதுதான் ஒரே வழி என்றார். அதற்கு ஆகக்கூடிய செலவுகள் பற்றிய பட்ஜட்டினையும் சமர்ப்பித்தார்.

    கொஞ்சம்போல சலசலப்புகளிருந்தாலும் பெரும்பாலானோர் இந்த பிராஜக்டிற்கு ஒப்புக்கொண்டனர். அனைத்து நாடுகளும் ஏதேதோ பொய்யான காரணங்கள் கூறி பிராஜக்டிற்காக பலகோடி டாலர்கள் நிதி ஒதுக்கின. நிதிகளை ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து நாசாவிடம் ஒப்படைக்கும் பொறுப்பையும் ஐநா செவ்வனே செய்தது. ஐநா தலைவர், நாசாவின் தலைவர் ஆண்டர்சனிடம் சொன்னார். “சொன்னபடியே ஒரு மாதத்தில் பிராஜக்டை முடித்துவிடுங்கள்”

    பிறகு சர்வதேச தலைவர்களும் அறிக்கை விடுத்தார்கள். “நிலாவினை கண்டுபிடித்தாயிற்று. இன்னும் ஒரு மாதத்தில் நிலா உதிக்கும். அதுவரை பொறுமையாக இருப்போம்” என்று.

    ___________________________________________________

    கிளைமாக்ஸ் பூஜ்யம் :

    சொன்னபடியே ஒரு மாதத்தில் நிலா உதிக்க, மக்களெல்லாம் மறுபடிப் பழையபடி தங்கள் பிரச்சனைகளுக்கு திரும்பினார்கள்.

    ___________________________________________________

    கிளைமாக்ஸ் ஒன்று :

    ஆண்டர்சன் மதுக்கோப்பையை நாசாவின் தலைமை விஞ்ஞானி ஜான் பீட்டரிடம் கொடுத்துவிட்டு சொன்னார்,

    “சக்ஸஸ் ஜான். உனக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும். நீ மட்டும் சரியான சமயத்தில் தகவல் சொல்லாமலிருந்தால், நம்மால் இத்தனை கோடி கோடி டாலர்கள் சம்பாதித்திருக்க முடியாது”

    ஜான் பதிலுக்கு சொன்னார்.

    “இதில் என் பங்கு என்று எதுவுமே இல்லை. விண்கல் ஒன்றின் நகர்வை கவனித்து, அது பூமிக்கும் நிலவுக்குமான பாதையில் வருகையில், சில மாதங்களுக்கு பூமியிலிருந்து நிலா மறைந்துபோகலாம் என்றுதான் சொன்னேன். இதை மட்டும் வைத்துக்கொண்டு இத்தனை பெரிய திட்டம் தீட்டியது உங்கள் மூளைதான் சார்”

    “வியாபார மூளை என்று சொல் ஜான்”

    “உண்மை உண்மை. எல்லாம் சரி. நிஜத்தில் நிலா வெளிப்பட்டபிறகு நாம் உருவாக்கியதாக புரளி செய்த செயற்கைநிலாவும் சேர்ந்தால் இரண்டு நிலாக்கள் அல்லவா தெரியவேண்டும் ? வானில் ஒன்றுதானே தெரியும் ? ஐநாவில் இதை கேட்கவில்லையா”?

    “அதெல்லாம் முன்பே யோசித்து சமாளித்துவிட்டேன் ஜான். நாம் உருவாக்கியதாகக் கூறிய செயற்கை நிலா நிஜமான நிலா உதித்ததும் தானாக மறைந்துவிடும் என்று கூறிவிட்டேன். அதுமட்டுமல்ல. பார்வையைவிட்டு மறைந்தாலும் கூட அது ஆபத்தானது, அதை அகற்றவேண்டும் என்று கூறி அதற்கான பலகோடி மில்லியன் டாலர்களுக்கான பிராஜக்டையும் சமர்ப்பித்தாயிற்று”

    “ஆஹா பிரமாதம் பிரமாதம்” என்று புகழ்ந்த ஜான் மறுநாள் ஒரு கார் விபத்தில் இறந்துபோனார்.

    ___________________________________________________

    கிளைமாக்ஸ் இரண்டு :

    விண்வெளியில்,

    லூ அவளை அழைத்தான்.

    “மீ இங்கே வா. தலைவர் திரையில் வந்திருக்கிறார்”

    மீ அவசரமாக திரைமுன்பு வந்தாள்.

    “எல்லாம் தயாரா”?

    “தாயார் தேவரே”

    “பிரஜைகளின் மனநிலை”?

    “வழக்கம்போலத்தான் தேவரே. மனம் சமநிலையை இழந்துவிட்டார்கள்”

    “சரி நல்லது. டெஸ்ட்ராய் தி எர்த்”

    மீ கணினியை நெருங்கி ஏதோ ஒரு பட்டனை தட்டிவிட்டு தன் பர்சனல் பேடில் எழுதிக்கொண்டாள்.

    ‘பிராஜக்ட் 44445555500000 கம்ப்ளீட்டட்’

    ___________________________________________________

    Share
  • படக்கவிதைப் போட்டி 20-இன் முடிவுகள்

    மேகலா இராமமூர்த்தி

    திரு. விஜய் கணேஷ் ஜெயராஜ் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் எங்கள் நன்றிகள்.

    Lion and Lioness

    காட்டரசனார் ஏதோ சிந்தித்தவண்ணம் நாக்கைச் சுழற்றுவதிலும் ஓர் நளினமும், கம்பீரமும் தென்படவே செய்கின்றன. அவர் பார்வையில்தான் என்னவொரு தீட்சண்யம்! ’அரிமா நோக்கு’ என்பது இதைத்தானோ! அருகிருக்கும் பெண்ணரசியாரின் வாஞ்சையும் நம் நெஞ்சைக் கவரவே செய்கின்றது.

    கவிஞர்களின் பார்வையில் இந்தச் சிங்கங்களைப் பற்றி அறிந்துவருவோம்!

    முதல் கவிதை திரு.கவிஜியினுடையது. தத்துவ நோக்கில் இப்புகைப்படத்தை அணுகியிருக்கும் அவர், உயிரின் தன்மை, வாழ்க்கையின் தீராப்பிணியான பசி, சிறந்த உறக்கமான மரணம் இவற்றைக் குறித்தெல்லாம் தன் கவிதையில் பேசுகின்றார்.

    நான் அழிவதில்லை
    என்று நினைப்பதே
    உயிர்…

    ஓயாமல்
    தேடிக் கொண்டே இருப்பது தான்
    பசி…

    யாரென்று நீ என்று
    நினைக்கிறாய் 

    அழியாத தீ ஒன்று
    உனதென்று சொல்….

    விழுமியங்களின்
    விருட்சம் –தலைவிரித்த
    பற்களின் நற நற…

    பற பற- பரபரக்கும்
    பரிதவிப்பு ஆளும்
    மாமிச பிண்டம்….

    அண்டம் சுழலும்
    ஆன்மா- நீ மற்றும்
    நான்…

    அழியாத ஒன்றுக்குள்
    சூன்யம்….
    ஆக சிறந்த தூக்கம்
    மரணம்…

    ஆன்மாவுக்கும்
    மரணத்துக்கும்
    இடைவெளி…
    காலம்….

    காலம் எக்காலம் என்பதில்
    இருக்கிறது…
    ஜனிப்பென்ற காடு….

    ***

    ’சிறுமுயலைத் தின்றுவிட்டு அந்தப்புரத்தில் அரசியோடு ஓய்வு கொண்டிருக்கும் சிங்கமிது’ என்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி தன் கவிதையில்.

    அறுசுவை(?) விருந்து முடிந்து ஓய்வெடுக்க
    அந்தப்புரம் வந்தமர்ந்த ராஜாவே
    உறுதுணைக்கு ராணியுண்டு; உங்களிடம் தப்பியே
    உயிர்பிழைக்க எண்ணுவோரின் நிலைஎன்ன?
    இறுதிவரை காத்திடுவீர் என்றுநம்பி கானகத்தில்
    இருக்கின்ற உயிரினங்கள் காத்திருக்க
    சிறுமுயலைக் கொன்றுதின்று நாவால்சப் புக்கொட்டும்
    செயல்தான் முறையாமோ சொல்லேன்?

    ***

    பெண்சிங்கத்தின் உயர்வு பேசும் திரு. செண்பக ஜெகதீசன், ’நாட்டுப் பெண்டிரும் இந்தக் காட்டரசிபோல் போட்டி பொறாமையற்றோராய் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ எனும் தன் உள்ளக்கிடக்கையை இங்கே பதிவு செய்திருக்கிறார்.

    வேட்டை யாடி வென்றுவரும்
    வனத்து வேந்தன் உளங்குளிர
    காட்டும் காதல் அரவணைப்பு
    காலம் காலமாய் உள்ளதுதான்,
    போட்டி பொறாமை இல்லாத
    பெண்மையின் உயர்வது இதுபோல
    நாட்டு மாந்தரில் வந்துவிட்டால்
    நலம்பெறும் மக்கள் நல்லுறவே…!

    ***

    ’தலைவனைத் தந்திரமாய்த் தன்வலையில் வீழ்த்தும் வனராணியைக் காண்மின்!’ என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    தலையணை மந்திரம் ஓதித் தமது 
    தலைவனைத் தந்திர மாக – வலைக்குள் 
    விழச்செய்யும் வித்தை வனராணிக் கும்தான் 
    பழக்கமாய் ஆனதே பார்! 

    ***

    காதலின் கதகதப்பில் இணைந்திருக்கும் சிங்கங்களை நமக்கு அறியத்தரும் திருமிகு. தமிழ்முகில், அவற்றின் இயல்புணராது விளையாடினால் ஆபத்து நமக்குத்தான் என எச்சரிக்கவும் தவறவில்லை.

    காதலின் கதகதப்பில்
    கலந்திட்ட ஜீவன்கள்
    ஒருவருக்கொருவர்
    ஆதரவாய் அனுசரணையாய்
    அன்பு உலகில்
    ஆனந்தமாய் சஞ்சரிக்கிறார்கள் –
    சுற்றியிருக்கும் சூழல் தனையே
    மறந்தவர்களாய் !
    அவர்தம் வாழ்விடத்தை விட்டு
    நம் வசதிக்கேற்ப கூண்டில்
    குகையில் அடைக்கிறோம் !
    அவர்களை காட்சிப் பொருளாய்
    நாம் எண்ணிக் கொள்கிறோம் ….
    உண்மையில்
    நாம் அவர்களுக்கு
    காட்சிப் பொருளாகிறோம் !
    சமயங்களில் அதீத விளையாட்டால்
    அவைதம் இரையாகவும்
    மாறிப் போகிறோம் !
    இயற்கையின் இயல்பை
    மாற்ற எத்தனித்தால்
    அழிவு நமக்கென்பதை
    நாம் உணரும் காலம் எப்போது ?

    ***

    ’செல்களுக்குப் புத்துயிர் பாய்ச்சும் மீளாக்காதலுடன் நெருங்கியிருக்கும் சொந்தங்கள் இவை’ என்று சிங்கங்களைச் சுட்டுகின்றார் திருமிகு. கார்த்திகா.  

    அடர் வனத்தின் கருமையில்
    தொலைந்த சிற்றொளியாய்

    சப்தங்கள் நிறைந்த
    குழலிசையில் இழையோடும்
    சந்தங்களின் இன்னிசையாய்

    மரங்கள் தழுவிய இளம்
    மலர்களின் அணைப்பாய் 

    தொடர் மழையால்
    மின்னிடும் பூமியின்
    புது வெட்கமாய்  

    செல்களுக்கு புத்துயிர் தரும்
    மீளாக் காதலுடன்
    வசந்தங்களில் தலையசைப்புகளில்
    இதமாய் இனித்திருக்கட்டுமே!!

    ***

    காதல் மானுடத்திற்கு மட்டுமன்று; மன்னுயிர்கள் அனைத்திற்குமே பொதுவானது! எனும் வாழ்வியல் தத்துவத்தைத் தன் கவிதையில் சுவைபட விவரிக்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    பாரில் உயிர்கள் இயங்க
    பாசம் காதல் பொதுவுங்க
    மாக்கள் மனிதரும் உணர்வில்
    மாற்றமில்லாச் சம தேடல்
    காதல் துறைமுகத்தில்  இணைகளுக்கு
    காத்திரமான நங்கூரம் – அருகாமை
    வயோதிபமும் வளரிளம் பருவமும்
    வசமாக விரும்பும் வாசமிது

    சுதந்திர வனத்தில் இணையாமை
    தந்திரமாய் இங்கடைத்தார் மானுடர்
    கூண்டிற்குள் எம் பொழுதாயினும்
    மீண்டதுன் அருகாமை ஆறுதல்
    அடுத்த காட்சிக்கு முன்னர்
    எடுக்குமுன் அருகாமை ஓய்வு
    கொடுக்கட்டும் மகாபலம் எமக்கு
    கொடுப்பனையிது பாலைவனச்சோலை உன்னருகு

     ***

    அல்லல் தரும் மானுடத்தை வெல்லும்வழி யோசித்துக்கொண்டிருக்கும் அரிமாவை நமக்கு அறிமுகம் செய்கின்றார் திரு. சுரேஜமீ.

    …இந்தோ வருகின்றான் கூண்டில் அடைக்கின்றான்
      கேளிப்பொரு ளாக்கி வதைகள் செய்கின்றான்
    என்ன மனிதனிவன் அத்தனை பெரியவனா?
     என்னைப் படைத்தவனே உண்மை உரைப்பாயா?

    பசிக்கு உண்போமே அல்லால் எதையும்
     புண்ணாக்கும் எண்ணம் எமக்கில்லை மானுடரே
    புண்ணியம் பாவமெலாம் எம்வழி வந்ததில்லை
     புத்தனும் காந்தியும்போல் பூமியில் வாழ்ந்திடவே

    எல்லைகள் யாமறிவோம் எண்ணிய முடித்திடுவோம்
     அல்லல்கள் ஏற்படுத்தும் மானிடம் வெல்வதற்கு
    மாற்றினை யோசித்து யானும் இருக்கின்றேன்
     மந்திரம் ஏதுமுண்டோ மாற்றுக் கருத்துமுண்டோ?

    மண்ணும் அழிகிறதே மானுடம் போக்கினிலே
     மாரியும் பொய்க்கிறதே மீறிய செயலாலே
    யாரிடம் சொன்னாலும் தானாய் அறியாமல்
     யாண்டும் வருவதில்லை இன்பம் வாழ்வினிலே!
     
    ***

    வழக்கம்போலவே சிறந்த கவிதைகளைச் சீரிய சிந்தனையுடன் படைத்திருக்கும் கவிஞர்கட்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என்று பார்ப்போம்!

    காலம்செய்த (அலங்)கோலத்தால் சொந்தங்களை இழந்து நல்வாழ்வதனைத் தொலைத்து, மானுடன் அமைத்த கூண்டில் சிக்கிவிட்ட காதலுயிர்களாம் சிங்கங்கள் இரண்டின் அவலம்பேசும் கவிதையொன்று நம் மனத்தை வேதனையில் கனக்கச் செய்கின்றது.

    அக்கவிதை…

    காலம் செய்த கோலமிது கடந்து வந்த பாதையிலே
    ஞாலம் செய்து விட்ட மாற்றம் கூடிக் குலவியன்று
    கோலமிட்ட வாழ்வதனை மானிடக் கூண்டு ஒன்றில்
    ஓலமிட்டுத் தொலைத்து விட்ட பொழுதுகளை இன்றும்

    மேலும் நினைத்திங்கே வாடுதலும் முறையோ…?
    சால ஆறி அமர்வதற்கு மரக் கிளையின் நிழல் இல்லை
    பால வயதினிலே எம்மைச் சுற்றி நின்ற சுற்றம் இல்லை
    ஆலம் விழதுகள் போல் எமைத் தொடர்ந்த உறவும் இல்லை

    சீலம் பெற்ற எம் வாழ்வும் சிறைப் பட்டே போயிற்று
    வேலேனவே நெஞ்சில் துன்பக் கணைகள் தைத்து
    நூலான எம் வாழ்வு இனி அதில் மகிழ்வு எங்கு ?
    காலன் அழைப்பு வரை நாமிருவர் துணையிருப்போம்…

    கலங்காதீர் கண்ணாளா! வேளை வெகு தொலைவிலில்லை
    சலனமற்ற பொழுதுகளும் சற்றே பொறுத்து விட்டால்
    சுலபமுடன் கழிந்து விடும் காலன் எமை அழைத்திடுவான்
    உலகழிந்து போனாலும் நிலைத்து நிற்கும் எம்
    உறவு

    இக்கவிதையைப் படைத்திருக்கும் கவிஞர், திருமிகு. புனிதா கணேசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    அரியாசனப் பதவிவெறியில் மனிதநேயம் மறந்து மதம்பிடித்தலையும் மானுடர்களின் உடல்புசிக்க மறுமை உலகில் பசியோடு வீற்றிருக்கும் சிங்கங்கள் இவை எனும் அழகிய விளக்கம் தாங்கிய மற்றொரு கவிதையும் மனங்கவர்கின்றது.

    கல்மனச் சுவர்ச் சிறை உலகில்
    அரியாசனப் பதவி வெறியில்
    உலர் மரங்களாய் அர்த்தமற்ற
    மனிதநேயம் மறந்த சாதிப்பித்து
    மனிதர்கூட்டம் அழிக்க
    சிம்மங்களின் இரகசிய அளவளாவல் ஆரம்பம்!
    பசுமை சூழ் அன்பு வித்தை விதைக்க
    மறந்த அரிமா சமுதாயக் குருளைகள்
    பாதம் காணும் ஆவலில்
    பசும்புற்களும் இங்கு காத்துக் கிடக்கின்றன!!
    நீலவான் நிலவுலகில்
    நில்லாப் புகழ் தேடி
    சகடக்கால் செல்வமொடு
    நிற்காமல் ஓடும் இம்மை
    அகங்கார மனிதர்கள் இரை வேண்டி
    கூற்றுவ அரிஏறு குடும்பம்
    மறுமை உலகத்தில்
    நெடிய பசியுடன் காத்திருக்கிறது!

    திருமிகு. லட்சுமி எழுதிய இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    ***

    கவிஞர் நண்பர்களே! கடந்த சில வாரங்களாகக் கவிதைப் போட்டிக்கான கவிதைகளின் வரவு குறைந்து வருவதைக் காண்கின்றேன். இத்தொய்வு நிலையகற்றிச் சிந்தனைக்கு வேலை கொடுத்துக் கவிமழை பொழியவேண்டுமாய்க் கவிஞர்கள் அனைவர்க்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன். சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல் கவிதையும் சிந்தையைப் பழக்குவதினால் மட்டுமே வசப்படும் ஒன்றாகும். முயன்றுபாருங்கள்!

    அதிக எண்ணிக்கையிலான கவிதைகளை வரும் வாரங்களில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்கா(து),
    உழைக்கவரு வானவன் ஓடி, -மழைக்குக்,
    குடையாய் மலையேந்தி, கோகுலம் காத்த,
    இடையன் இணைப்பில் இரு”….கிரேசி மோகன்….

    Share
  • கதிர்த்தேய்வு அளப்பாடு முறையில் முந்தைய பூகாந்தத் துருவத் திசை மாற்றக் காலக் கணிப்பு.

    Geological Radiometry

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ​+++++++++++


    பூமியின் காந்த துருவங்கள்
    திரும்பத் திசைமாறும் !
    ஆமை வேகத்தில் வட துருவம்
    தென் துருவ மாகும் !
    பூமியின் சுழற்சி நின்று,
    எதிர்த்  திசையில் மீண்டும் ஓடும் !
    பரிதியின்  உதயம் அப்போது
    கிழக்கி லிருந்து மேற்கு !
    உயிரினம்,  மானிடம்  பாதிப்பாகும்.
    மின்காந்த இயக்கங்கள் பூமியில்
    தன்னியல் மாறும்.
    சூழ்வெளி மண்டலம் முறிந்து
    பாழ்வெளி ஆகுமோ ?
    நீர்வள மண்டலம் ஆவியாய் மாறி
    நிலம் பாலை ஆகுமா சூடேறி ?
    உயிரினங்கள் மரிக்குமோ ?
    பயிரினங்கள்
    பசுமை இழக்குமோ ?
    ஒரு மில்லியன் ஆண்டுகட்கு
    ஒருமுறை நேர்ந்திடும்
    துருவத் திருப்பம்,
    பிறகு மீளும் !
    இயற்கை நடன முறையில்
    திருவிளை யாடல் !
    பருவ காலம் தாறு மாறாகி
    வாழ்க்கைப் போக்கு
    மாறுபடும்.
    பிரளய நர்த்தனப் பயிற்சி
    அரங்கேறும் !

    +++++++++++++

    Earth's Pole Reversal

    கதிர்த்தேய்வு அளப்பாடு முறையில் [Radiometric Dating], கடற் படிமானம், புவித் துருவ மாறுதல் [Sea Sediments, Earth’s Pole Reversal] ஆகியவற்றில் செய்த முதல் நேரடி ஒப்புநோக்கு ஆய்வு இது. பூதளவியல் கால நேர்ச்சி விளைவுகள் கணிப்புக்கு எமது ஆய்வுப் பணித் தற்கால விளைவுகளின் எதிர்கால ஆராய்ச்சிக்கு அவசியமானது.

    டாக்டர் யுசுகே  சுகநுமா [National Institute of Polar Research, Tokyo] 

    திரும்பத் திரும்ப நேரும் புவிக் காந்த துருவ மாறுபாடு

    பூமியின் காந்த துருவங்கள் ஓர் இடைவெளிக் காலம் விட்டு வட துருவம் தென் துருவமாகவோ, தென் துருவம் வட துருவமாகவோ திரும்பத் திரும்ப மாறி வருகின்றன.  சமீபத்தைய துருவத் திசை மாறுதல் நேர்ந்து சுமார் 780,000 ஆண்டுகள் கடந்துள்ளதாகக் கணிக்கப் படுகிறது.  கடந்த துருவ மாறுபாடு “மாதுயுமா-புருனெஸ் வரம்பு”  [Matuyuma-Brunhes Boundary (MBB)] என்று அழைக்கப் படுகிறது.

    Earth Pole Reversal

    அந்த துருவ மாற்ற வரம்பு [MBB] பாறைகளின் கால வரையறை வயது நீட்சியை [Calibrating the Ages of Rocks] ஒப்புநோக்கவும், அவற்றின் தோற்ற கால ஆய்வுக்கும் மிக முக்கியமாகத் தேவைப் படுகிறது.  ஆனால் தற்போதைய கால நிலைப்பாடு ஆய்வு முறைகள் [Dating Methods] துல்லிய மாகக் காலத்தை நிர்ணயம் செய்வதில்லை.

    ஜப்பான் – கனடா நாடுகளில் வாழும் ஓர் ஆராய்ச்சிக் குழுவினர் துருவ மாற்ற வரம்பு [MBB] காலத்தைச் செம்மையாக அறிய மேம்படுத்தியுள்ளார். அதற்காக துருவ மாற்ற நேர்ச்சிக்குச் சற்று முன்னே நிகழ்ந்த எரிமலை வெடிப்புச் சாம்பலை ஆராய்ந்ததில்,  அதனில் சிறு ஸிர்கான் படிமங்கள் [Small Zircon Crystals] இருக்கக் கண்டனர்.  எரிமலைச் சாம்பல் உண்டான அதே சமயத்தில் ஸிர்கான் படிமங்கள் உருவாகியுள்ளன.

    யுரேனியம் – ஈயம் கதிர்த்தேய்வு முறையில் [Uranium – Lead Decay Process] ஸிர்கான் கதிர்த்தேய்வுக் காலக் கணிப்பு [Radiometric Dating of Zircon] மூலம் எரிசாம்பலின் துல்லியமான வயதைக் காண முடிந்தது.  இந்தக் கணிப்பு படிமானப் பாறை வயதை அறிய வேறு ஒரு முறையிலும் செய்யப்பட்டு சரிபார்க்கப் பட்டது.  இந்த தகவல் பூதளவியல் இதழில் [Geology Journal ] வெளியாகியுள்ளது.

    Earth's Pole Reversal

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iGDrq8rikJc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=j37F8LUkBig

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=n8Cru41w5uI

    http://paleobiology.si.edu/geotime/main/foundation_dating4.html

    http://www.sciencechannel.com/tv-shows/greatest-discoveries/videos/100-greatest-discoveries-radiometric-dating/

    http://www.sciencechannel.com/tv-shows/greatest-discoveries/videos/100-greatest-discoveries-magnetic-field-reversal/

    https://answersingenesis.org/geology/radiometric-dating/

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1920gi3swe4

    Earth magnetic field

    “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !”

    பிராடு ஸிங்கர், பூதளவியல் பேராசிரியர் விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகம்

    பூகாந்த தளம் திருப்பிக் கொள்ள [Earth’s Magnetic Pole Reversal] 1000 முதல் 10,000 ஆண்டுகள் எடுக்கலாம்.  அந்த திருப்ப இயக்கத்தில் நேரிணைப்பாகும் [Realignment] முன்பு,  காந்த சக்தி மிகவும் தளர்ச்சி அடைகிறது.  அது திடீர்த் திருப்பம் ஆகினும், மெதுவாகவே [Sudden Flip; but a Slow Process] அது நிகழ்கிறது.  அத்தருணத்தில் பூகாந்த சக்தியின் ஆற்றல் பலவீனம் அடைகிறது.   காந்த தளம் சிக்கலாகிச் சில சமயம் இரு துருவங்களுக்கு மேலாகவும் காணப் பட்டு, மீண்டும் காந்த சக்தி வலுவேற்றிக் கொள்கிறது.   அந்த நிலையில் துருவங்கள் எதிராக மாற்றமாகி நேரிணைப்பு [Realigns in the Opposite Direction] செய்து கொள்ளும்

    மோனிகா கோர்ட்டே  [Scientific Director, Niemegk Geomagnetic Observatory, Germany]

    Iside the Earth

    கடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன.  சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது.  அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது.  பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்பதாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன.  துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை.  அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம்.  அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    பூமி அடுத்து எப்போது துருவங்களை மாற்றிக் கொள்ளும் ?

    நமது பூகோளத்தின் ஆயுட் காலத்திற்குள் பன்முறைத் துருவ மாற்றங்கள் நேர்ந்துள்ளதாகப் பூதள விஞ்ஞானிகள் கருதுகிறார்.   அப்படிக் கூறுவதற்கு எரிமலை அடுக்குப் பாறைப் பதிவுகளே  தக்க நிரூபணம் தருகின்றன.   முந்தைய பூகாந்த மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த தாகப் பாறைப் பதிவுகள் மூலம் அறியப் படுகின்றது.   அப்போது தான் கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களைத் தட்டி  அக்கினி உண்டாக்கும் “கனல் சக்தி” [Fire Power] திறன் கண்டுபிடிக்கப் பட்டது.

    Earth's Core

    அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக் கழகத்தில் பூகோள உள்ளமைப்பைக் காட்டும்,  உலகிலேயே பெரிய சுழற்சி கோளம் அமைக்கப் பட்டுள்ளது.  துருப்பிடிக்கா இரும்பில் 10 அடி விட்டத்தில் வடிக்கப் பட்டிருக்கிறது.   அதற்குள் சிறு கோளம் ஒன்றும் உள்ளது.  இரு கோளங்களுக்கும் இடையில் 250 டிகிரி F உஷ்ணத்தில் சூடாக்கப் பட்ட , 12 டன் திரவ சோடியம் நிரப்பப் பட்டுள்ளது.  அதுவே திரவ உலோகமுள்ள பூமியின் உள்ளே இருக்கும் மேல் உட்கருவாகக் [Liquid Iron Outer Core] கருதப் படுகிறது.  மிக வேகமாய்ச் சுழலக் கூடிய அந்தக் கோளத்தில் பல்வேறு பூதளப் பௌதிகச் சோதனைகள் செய்து காட்ட முடியும்.   அச்சோதனைகளில் ஒன்றுதான் பூதளப் பௌதிக விஞ்ஞானி, டானியல் லாத்திரப் [Geophysicist Daniel Lathrop] முன்னறிவிக்க முயலும், அடுத்து எப்போது பூகோளத் துருவமாற்றம்  நிகழப் போகிறது எனப்படுவது.  இந்த முன்னறிப்பை வெளியிட்டது ரஷ்யக் குரல் எனப்படும் “வாய்ஸ் ஆஃப்  ரஷ்யா” [Voice of Russia].   அறிவித்த நாள் :  ஏப்ரல் 29, 2014.

    பூகோளத் துருவ மாற்றத்தால் என்ன கேடுகள் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.   அடுத்த துருவ மாற்றத்தில் மனித இனத்துக்கு தீங்கு எதுவும் நேராது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.  சென்ற துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்திருக்கிறது.   துருவ மாற்றம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது.  அது முடிய ஆயிரக் கணக்கான ஆண்டுகள் [1000 முதல் 10,000 வரை] ஆகலாம்.  துருவ மாற்றம் நிகழ்ந்தால் பூமியின் சுழற்சி நின்று எதிர்ப்புறம் சுற்றுமா ?  பரிதி உதயமாகும் கிழக்குத் திசை வேறுபடுமா ?  எதிர்ர்பாராத இந்த மாறுபாட்டுகளால் பருவ மாற்றங்கள் நேருமா ?  இவை போன்ற கேள்விகள் எழுகின்றன ! ஆனால் இவற்றுக்குச் செம்மையான பதில் இதுவரை கிடைக்க வில்லை.  அடுத்த பூகோளத் துருவ மாற்றம் 400,000 வருடங்கள் கடந்து நிகழும் என்று அனுமானிக்கப் படுகிறது.

    Fig 1 Polat Shift in Earth

    “பூமியின் காந்தத் தளம் நமக்கும், நமது சூழ்வெளிக்கும் பரிதியின் தீவிரப் புயலிலிருந்து (Solar Wind) கேடுகள் விளையாதபடிக் கவசமாய்ப் பாதுகாப்பாக இருக்கும் ஓர் இயற்கை ஆற்றல்.  பறவை இனத்துக்கும், மனித இனத்துக்கும் கடற் பயண முறைக்குத் திசைகாட்டும் (Navigational Direction) ஓர் அரிய ஆற்றல் அது !  பரிதிப் புயல்கள் தீவிரமாய் அடிக்கும் போது மின்சாரப் பரிமாற்றமும், தொலைத் தொடர்புச் சாதனங்களும் பழுதடைந்து போகும்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    “கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன !  ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன !  கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் !”

    டேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.

    Fig 1B Magnetic Pole Shift

    “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.”

    பேராசிரியர் பிராடு ஸிங்கர்.

    பூகோள வரலாற்றில் நேர்ந்துள்ள வடதென் துருவ மாற்றங்கள் !

    பூமியின் வடதென் காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல !  அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் [1000 – 10,000] ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன !  பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் !  அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக்கிறது !  பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் வியப்பூட்டும் வண்ணம் அப்போதையப் பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன !

    Fig 1C Structure of Earth

    பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப் பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது !  பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன !  கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Latitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது !  அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது !  மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது !

    Fig 1E Relative Size of Sunspots

    2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது.  அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது !  அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது !  தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளிலிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது.  ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை !

    Fig 1 Polat Shift in Earth

    பூமியின் துருவ மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன ?

    பூகோளத்தின் துருவ மாற்றங்கள் தாறுமாறான கால இடைவெளிகளில் இதுவரை நேர்ந்துள்ளன.  சமீபத்தில் உண்டான துருவ மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது.  ஆயினும் ஏன் அவ்விதம் நேர்கிறது என்று விஞ்ஞானிகள் வியப்புறுகிறார்கள்.  வெப்பக்கனல் திரவ இரும்புள்ள உட்கருவில் கொந்தளிக்கும் மின்னோட்டம் (Electric Current) உண்டாக்கும் பூமியின் பிரதமக் காந்தத் தளம் துருவ முனைத் திசையைத் திருப்புகிறது !  அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் !  பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !” என்று விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகப் பூதளவியல் பேராசிரியர், பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Earth magnetic field -2

    பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறைகளைக் (Patterns) கண்டறிந்தனர்.  வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    ajay

    பரிதிக் காந்த முனைத் திருப்பத்தால் ஏற்படும் இயற்கைக் கேடுகள்

    2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் ! சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன !  பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை !  அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles).  துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன.  அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.

    11,500 ஆண்டுகளில் மீண்டும் வரப் போகும் பயங்கரப் பனியுகக் காலத்தின் மையத்தில் புவி மாந்தர் இருப்பதாகப் பூதளவியல் விஞ்ஞானிகள் நினைவூட்டி வருகிறார்.  அந்தச் சுழல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது துருவத் திருப்பமும், பூத எரிமலை வெடிப்புகளும், அசுரப் பூகம்பங்களும், சுனாமிகளும், தீவிர ஹர்ரிக்கேன்களும் மக்களைப் பாடுபடுத்திக் கொந்தளிப்பில் தவிக்க வைக்கலாம் !  2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன !  அவற்றைத் தூண்டும் மூல காரணங்களில் ஒன்றாகப் பூகாந்த முனை நகர்ச்சிகள் பங்கு பெறுமா என்பதைப் பூதள விஞ்ஞானிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    [தொடரும்]
    +++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
    11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)
    11 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 -2013 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)
    18.http://worldlywise.pbworks.com/w/page/26834992/The%20causes%20and%20effects%20of%20earthquakes%20and%20how%20people%20respond%20to%20them
    19. http://www.livescience.com/18426-earth-magnetic-poles-flip.html [February 10, 2012]
    20. http://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal [June 21, 2015]

    21.http://www.spacedaily.com/reports/When_next_Earths_magnetic_field_reverse_begins_and_what_consequences_for_mankind_will_it_have_999.html  [April 29, 2014]

    22.  http://www.iflscience.com/physics/magnetic-pole-reversal-can-take-less-lifetime [October 15, 2015]

    23.  https://www.ngdc.noaa.gov/geomag/faqgeom.shtml  [Frequently Asked Questions]

    24.  http://study.com/academy/lesson/radioactive-dating-methods-uses-and-limits-of-radioactive-decay-as-a-dating-tool.html  [Radiometric Dating of Earth’s Pole Reversal]

    25.  http://evolution.berkeley.edu/evosite/evo101/IIE1aAtomicclocks.shtml  [Radiometric Dating]

    26. http://www.sciencedaily.com/releases/2015/07/150707101952.htm  [July 7, 2015]

    27.  https://community.emc.com/people/ble/blog/2012/02/11/magnetic-pole-reversal [February 12, 2012]  [NASA Report]

    27. http://www.spacedaily.com/reports/Improved_age_for_Earths_latest_magnetic_field_reversal_using_radiometric_dating_999.html  [July 8, 2015]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]   July 11, 2015

    https://jayabarathan.wordpress.com/

    Attachments area
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி கிரியேஷன்ஸ் ”சாக்லேட் கிருஷ்ணா” இன்று 777வது ஷோ….நன்றி வெண்பா….
    ———————————————————————————————————————————————————-

    crazy
    “எம்பியுறி வெண்ணை, எடுப்பார்கைப் பிள்ளையவர் –
    தம்பி பலராம தேவர்க்கு,-நம்பீசன், –
    எட்டான் புலனுக்கு ,எட்டுவான் பக்திக்கு, –
    எட்டினான்னின்(று) ஏழேழு ஏழு (777 )….கிரேசி மோகன் ….
    நன்றி கிரேசி கிரியேஷன்ஸ் AND கேசவ் ….

    Share
  • என்னையா ஊர் இது .?

    சேசாத்திரி பாஸ்கர்

    ஒரு சினிமா கொட்டகையில் இப்போது குறைந்த பட்சம் டிக்கெட் விலை நூற்றி இருபது ருபாய் .இரு சக்கர வாகனம் நிறுத்த கட்டணம் முப்பது ருபாய் .வெளியே வாங்கிய தின்பண்டங்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை . முன்பு கபாலி காமதேனு தியேட்டர்களில் கூட ஒரு எவர்சில்வர் அண்டா போல பாத்திரத்தில் குடிநீர் இருக்கும் .ஒரு டம்ப்ளரில் நீரை பிடித்து குடிக்க வேண்டும் .களவு போகாமல் இருக்க டம்ப்ளரில் ஒரு செயின் கட்டி இருப்பார்கள் .தலையை கீழே குனிந்து குடிக்க சட்டையெல்லாம் வீணாகும் .அது பரவாயில்லை போல்இருக்கிறது . இப்போது இந்த பெரிய கொட்டகையில் பாட்டில் தண்ணீர் தான் .நாற்பது ருபாய் .சின்ன பாப்கார்ன் பொட்டலம் என்பது ரூபாயாம் . அடப்பாவிகளா ? என்னை போல் ஆசாமிகள் உள்ளே சென்றால் சண்டை தான் .இத்தனைக்கும் கிட்டத்தட்ட எல்லா சினிமாவுக்கும் இப்போது வரிவிலக்கு.இவ்வளவு வசதிகள் அரசிடம் இருந்து பெற்று கொண்டு விடுமறை நாளில் பத்து காட்சிகள் வரை திரையிட அனுமதி பெற்றும் இவர்கள் ஆசை அடங்கவில்லை .ஒரு சின்ன கணக்கு நேற்று இரவு போட்டு பார்த்தேன் . ஒரு காட்சியில் ஆயிரம் இருக்கைகள் கொண்ட அரங்கில் முந்நூறு பேர் இரு சக்கர வண்டியில் வருவோர் என்றால் அவர்கள் தரும் தொகை சுமார் ஒன்பது ஆயிரம் ருபாய் .இது ஒரு காட்சிக்கு .ஒரு நாள் வசூல் சுமார் இருபத்தி ஏழாயிரம் என்றால் வருஷம் கிட்டத்தட்ட ஒன்பது கோடி .தனி மனித ஒழுக்கம் , நேர்மையான வியபாரம் , தொழில் தர்மம் எல்லாம் போதித்தவர்கள் எல்லாம் முட்டாளா ?இந்த சமூகம் நல்லவர்களை நகர்த்தி கொண்டிருக்கிறது .எல்லாம் நியாயம் என்றால் என்னையா ஊர் இது .? காந்தி நீதிமன்றம் வந்த போது நீதிபதியே எழுந்து நின்ற இந்த தேசத்தில் இப்படியா ?மனசு ஆறவில்லை …….Agitated .

    Baskar CS
    Chennai 4

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ‘பத்மா சணமிட்டு பாதம் பசுவருட
    சத்யவான் கண்ணனவன் சிம்மேந்த்ர, -மத்யமாவில்
    சிந்திக்கிறான் தப்பிக்க, சிங்கமாய்ப் போயொளிய
    .அவன் ஒளிந்த தூண் துரும்பாகும்….
    துரும்பு தூணாகும்….ஜ்வ்லந்தம் சர்வதோமுகன்….
    …கிரேசி மோகன்….

    Share
  • அடையாளம்

    மாதவன் ஸ்ரீரங்கம்.

    கதைக்குமுன்பு ஒரு நிமிடம் :
    நீங்கள் ஒரு இடத்தில் கண்விழித்து எழுகின்றீர்கள். அப்பொழுது உங்களைச் சுற்றியுள்ளவற்றை பற்றியோ, உங்களைப்பற்றியோ, உங்களுக்கு எதுவும் நினைவிலில்லை. மற்றவர்களுக்கும் உங்களைப்பற்றி எதுவுமே தெரியவில்லை என்றால் …

    நீங்கள் என்பது யார் ?

    _____________________________________________________________________

    இப்போது அவனுக்கு பயமாக இருந்தது.

    சுமாராக இரண்டு மூன்றுமணிநேரங்களாக அவன் அந்த கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். அந்த இடம் முழுவதும் மனிதர்களால் நிரம்பியிருந்தது. அங்கிருந்த ஒருவருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. அவர்கள் யாரென்றும் அவனுக்குத் தெரியவில்லை. அவ்வளவு ஏன், அவனுக்கு தன்னைப்பற்றியே யாரென்று தெரியவில்லை. கண்விழித்தபோது கொஞ்சம் குழப்பமாக இருந்தது. பிறகு அது ஒருவகையில் அவனுக்கு சவுகரியமாகவும்கூட இருந்தது. ஆனால் நேரம் செல்லச்செல்ல அவனால் தாங்கமுடியாத அளவிற்கு இது ஒரு பயங்கரமான கனவாக இருக்குமோ என்றுகூடத்தோன்றியது.

    அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை வைத்து கொஞ்சம் பயம்விலகி சமாதானமாகிக்கொண்டு மெல்ல எழுந்தான். அங்கங்கே மனிதர்கள் ஆடையேதும் அணியாமல் வெயிலில் குளித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அலைகளில் கால்நனைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அனைவரும் மிக மும்மறமாக மணலில் உருண்டுகொண்டிருந்தார்கள்.

    அவன் மெல்ல நடந்து சென்று, தனியாக உட்கார்ந்திருந்த அந்த முதியவரை நெருங்கி எதையோ பேசமுற்பட்டான். குரல் வரவில்லை அவனுக்கு. கிழவர் சலனமின்றி இவனைப்பார்த்துவிட்டு அருகில் அமரச்சொல்லி சைகை செய்தார். இவன் உட்கார்ந்தபடி அவரிடம் கேட்டான்.

    “ஐயா இது என்ன இடம் ? நான் யார் ? நீங்கள் யார் ?…”

    இவன் கேள்விகளை முடிக்குமுன்பே கிழவர் தடுத்துவிட்டு பேசத்தொடங்கினார்.

    “இது ஒரு அடையாளமற்ற இடம். இடத்திற்கு மட்டுமல்ல. இங்கிருக்கும் எவருக்குமே எந்தவித அடையாளமும் இல்லை”

    இவன் குழப்பம் இப்போது அதிகரித்தது. புரியாமல் அவரையே பார்த்தான். அவர் மெலிதான புன்னகையோடு தொடர்ந்தார்.

    “நீ இந்த இடத்திற்கு வந்து சிலமணிநேரங்கள்தான் ஆகின்றது. அதனால்தான் உனக்கு இன்னும் முழுமையாக இந்த இடம் பற்றிப் புரியவில்லை. அதோ அங்கே பார்”…

    அந்தக்கிழவர் கைகாட்டிய திசையில். விதவிதமான பறவைகளும் மிருகங்களும் பிராணிகளும் ஒன்றாக பறந்துகொண்டிருந்தன. நடுநடுவே மனிதர்களும் அவ்வப்போது பறந்துகொண்டும் மிதந்துகொண்டுமிருந்தனர். கிழவர் மறுபடி தொடர்ந்தார்.

    “உண்மையில் இந்த இடம் எந்தவிதமான அடையாளங்களுமற்றது. கடல் மனிதர்கள் பறவைகள் மிருகங்கள் குழந்தைகள் கிழவர்கள் போன்ற அடையாள வார்த்தைகளெல்லாம்கூட, இதை எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரின் துயரம் மட்டுமே. மற்றபடி இங்கு எந்த உயிரிலும் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது.

    இங்கு எவருக்கும் பசியில்லை தாகமில்லை காமமில்லை முதுமையில்லை நோய்களில்லை மரணமும் இல்லை. இங்கிருப்பவர்களெல்லாம் வெறுமனே இருக்கிறார்கள். அவ்வளவுதான். எவருக்கும் எவரோடும் பேசத்தேவையில்லை. இங்கு இயற்கை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது எப்போதும். உனது வாயைவிட காதுகள் மிகக்கூர்மையானது. உன்பேச்சை விட்டுவிட்டு இந்தக் கடலை, பறவை, விலங்குகளை மனிதரை உற்று கவனி நிறையப் புரியும்”.

    அவன் அவரிடம் மிகநிதானமாகக் கேட்டான்.

    “ஆனால் எனக்குக் கேள்விகள் வந்துகொண்டேயிருக்கின்றன ஐயா. உதாரணத்திற்கு, நான் யார்?”

    கிழவர் பலமாக ஒருமுறை சிரித்தார்.

    “அதை பெரிதுபடுத்தாதே. இயல்பில் அது சாத்தியமானதே. உன்னில் மிச்சமிருக்கும் பழைய அடையாளக் கலாச்சாரத்தின் எச்சம்தான் உனது கேள்விகள். இங்கு உனது தொடர்ந்த இருப்பினால் மட்டுமே அவை மறைந்துபோகும் சாத்தியமுண்டு. உனக்கு உன்னைப்பற்றி தெரியாததைப் போலவே எனக்கும் என்னைப்பற்றி எதுவும் தெரியாது. இங்கு வந்த புதிதில் எனக்கும் நான் யார் என்பதில் மிகுந்த குழப்பமும் கேள்விகளும் இருந்தது. தொடர்ந்த எனது பொறுமையின் காத்திருப்பால் கேள்விகள் குழப்பங்களெல்லாம் ஒருநாள் காணாமல் போயிற்று.

    இங்கு எல்லோருக்குமே அப்படித்தான். ஆனால் நான், நீ, அவர்கள் என்னும் பண்டைய அடையாள உலகில் அதிக ஆழத்தில், தான் இன்னார் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர்களை, சிறிது அதிககாலம் இந்தக்கேள்விகள் இங்கு துரத்திவரும். நீ விரும்பினால் இங்கு அதற்கும்கூட வழியுண்டு. அதோ. உன் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதற்கான வழி”.

    சற்றே தனிமையான மேட்டுப்பாங்கான இடத்திலிருந்த பெரிய மரத்தில் ஒரு ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. கிழவர் சொன்னார்.

    “அந்த ஊஞ்சல் ஒரு கால ஊர்தி. அதில் உட்கார்ந்துகொண்டு ஆடத்துவங்கினால், நீ விரும்புகின்ற உனது பிறவிகளுக்கெல்லாம் அது உன்னை அழைத்துச்செல்லும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள். உனது எந்தப்பிறவியிலும் எவரோடும் பேசிவிடாதே. பிறகு நீ அங்கேயே தங்கிவிடுவாய். பலவிதமான பிறவிகளின் தொடர்ந்த சலிப்பினால்தான் நீ இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய்.

    வலிகளும், புன்னகையும், காதலும், நோய்களும், முதுமையும், சூழ்ச்சிகளும், பொய்களும் தொடர்ச்சியாக உன்னை வறுத்தெடுத்ததாலும், நீ ஆத்மார்த்தமாகவே அவற்றையெல்லாம் கடந்துவிட விரும்பியதாலும்தான் இங்கு வந்திருக்கிறாய். இவையெல்லாம் பலகோடி ஆண்டுகளாக படிப்படியாக நிகழ்ந்தது. ஒருவேளை ஏதேனும் பிறவியில் நீ சிக்கிக்கொண்டால், மறுபடி இங்கே வர பலநூறுகோடி ஆண்டுகள் ஆகக்கூடும் ஜாக்கிரதை.”

    இப்போது அவன் மிகப்பெரிய நிம்மதியை உணர்ந்தான். சற்றே யோசித்துப்பார்த்ததில், உண்மையில் அவனுக்கு இங்கு என்ன குறை ? கிட்டத்தட்ட மாலை வந்துவிட்டது. சிலமணிகளில் இருட்டிவிடும். இதுவரை பசியென்ற உணர்வே தோன்றவில்லை அவனுக்கு. உடலின் எடையைக்கூட உணரவில்லை. மிக எளிமையாகச் சொன்னால், அவனுக்கு இங்கு தேவையென்றே எதுவுமில்லை. நிம்மதியும் திருப்தியும் சுதந்திரமாகவுமாக இருக்கின்றான். இங்கேயே இப்படியே எந்த அடையாளமுமற்று இருந்துவிடவே அவனுக்கும் விருப்பமிருந்தது.

    ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, தான் யார் என்று தெரிந்துகொள்ளும் தீராத உந்துதலில் அவன் ஊஞ்சல் நோக்கி நகர்ந்தான். இப்போது அங்கிருந்த மனிதர்களெல்லாம் நடுவில் நெருப்பிட்டு அதைச்சுற்றிவந்து நடனமாடினார்கள். அவர்கள் கைகள் ஒருவருக்கொருவர் சங்கிலிபோலப் பிணைத்திருந்தார்கள். அவர்களது நடனத்தின் லயத்தை ரசித்தபடியே அவன் ஊஞ்சலி உட்கார்ந்துகொண்டான். அவர்கள் இன்னும் பரவசமாக ஆடினார்கள். அந்த நெருப்பின் ஜ்வாலையும்கூட அவர்களோடு சேர்ந்து ஆடியதுபோலத்தோன்றியது அவனுக்கு.

    மெல்ல ஊஞ்சல் ஆடத்தொடங்கியதும் அவனைப் பிறவிகள் ஆக்கிரமித்தன. மாறிமாறி அவன் பல பிறவிகளுக்குள் பிரவேசித்தான். ஒரு பிறவியில் அவன் டைனோசராய் இருந்தான். இன்னொன்றில் அவன் எறும்பாய் இருந்தான். மற்றொன்றில் அவன் அலெக்ஸாண்டராய் இருந்தான். ஒரு விஞ்ஞானியாக, கிழவியாக, புல்லாக, பாம்பாக, உருவமற்ற பிண்டமாக, நீக்ரோவாக, ஐரோப்பியனாக, மரமாக, பசுவாக, காகமாக, எழுத்தாளனாக, நடிகனாக, ரசிகனாக, கடத்தல்காரனாக, பாதிரியாராக, நீச்சல்வீரனாக, கொலைகாரனாக, அடிமையாக, மன்னனாக, அலியாக, தவளையாக, பல்லியாக….. அவன் சலித்துப்போனான்.

    சபிக்கப்பட்ட இத்தனை பிறவிகளிலிருந்தும் அவனால் தான் யார் என்னும்டையாளத்தை மீட்டுக்கொள்ள முடியாத குழப்பத்திலிருந்தபோது, அவன் பட்டாம்பூச்சியாக ஒரு சிறுவனின் கையில் அகப்பட்டபோது ‘ஐயோ’ என்று கத்திவிட்டான்.

    Share
  • திருக்கருகாவூர் – தல புராணம்

    பவள சங்கரி

    கருணை மழை பொழியும் கருகாவூர் கற்பக நாயகி!

    11698584_861438480611445_8838361490820937760_n
    திருக்கருகாவூர் – திருத்தாண்டகம்

    குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
    கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
    பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
    பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
    ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
    உள்நின்ற நாவிற் குரையா டியாங்
    கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. – [திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
    (ஆறாம் திருமுறை)]

    முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
    மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
    கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
    அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.[திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
    திருக்கருகாவூர் தேவாரத் திருப்பதிகம் – (மூன்றாம் திருமுறை 46வது திருப்பதிகம்)]

    நம் நாட்டில் மூவரின் பாடல் பெற்று சிறப்புற்று விளங்கும் தேவாரத் திருத்தலங்கள் மொத்தம் 275. அவற்றுள் திருக்கருகாவூர் என்ற இத்திருத்தலம் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலம்.

    தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்

    திருக்காருகாவூர் எனும் இத்திருத்தலத்தை, திருக்களாவூர், முல்லை வனம், மாதவி வனம், கர்ப்பபுரி என பல பெயர்களில் நூல்கள் குறிக்கின்றன. முல்லைக்கொடியை தல விருட்சமாகக் கொண்டதால் இத்தலம் முல்லைவனம் என்றும், இறைவன் முல்லை வன நாதர், என்றும் மாதவீவனேசுவரர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

    நாற்புறமிருந்தும் எளிதாக வந்துபோகும் வகையில், சோழ வள நாட்டின் செழிப்பான தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் எனும் ஊரின் தெற்கே ஆறு கிலோமீட்டர், கும்பகோணத்திற்கு தென்மேற்கில், வடக்கில் 20 கிலோ மீட்டர் மற்றும் சாலியமங்கலத்திற்கு வடக்கில் 10 கிலோமீட்டரில் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. தஞ்சாவூருக்கு வடக்கில் 20 கிலோமீட்டரில், வெட்டாற்றின் தென்கரையில் இக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சிவபெருமான், கற்பக விநாயகர் என அழைக்கப்பெறும் தல விநாயகர் , நந்தி என மூவரும் சுயம்பு மூர்த்திகளாகவும், சுவாமி ஆலயத்தின் பின்புறம் இருக்கும், லிங்கோத்பவரின் குடவரையில் அர்த்தநாரீசுவரர், அமைந்திருப்பது சிறப்பு. முல்லை வனத்தில் சுயம்புவாக, புற்றுருவில் தோன்றியதால் இலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து, வடுவை ஏற்படுத்தியிருப்பதை இன்றும் காணலாம். இறைவன் இன்றும் புற்றுருவிலேயே காட்சியளிப்பதால், வழமையான அபிடேகங்கள் ஏதுமின்றி, புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

    10665717_861438130611480_5514288486832340212_n

    இம்மண்ணில் தோன்றும் அனைத்துயிர்களின் ஆதியாய், கருவைக் காத்தருளும் கர்ப்பரட்சகியாய், கருகாத்த நாயகியாய், கரும்பானையாள் எனும் அன்னையாய் அழகே உருவாய் எழுந்தருளியிருக்கிறார். பிள்ளைப்பேறு வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளுபவள் அன்னை. அன்னையின் திருவடியில் வைத்து பூசித்து வழங்கப்படும் பசு நெய் உண்டவர்களுக்கு பிள்ளை வரம் கிடைப்பதாக பக்தர்கள் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர். எண்ணெய் வைத்து பூசை செய்து, அதை கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பூசிவர சுகப்பிரசவம் ஆகிறது என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இங்கு உள்ள மூலவராகிய முல்லைவனநாதர் சந்நதி, கர்ப்பகரட்சகி அம்மன், இடையில் அமைந்துள்ள ஆறுமுகர் சந்நதி ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் உள்ளபோது தரிசிப்பது பெரும் பேறு என்கின்றனர். அதாவது, சோமாசுகந்தர் அமைப்பில் இருக்கும் மூன்று சந்நதிகளையும் ஒரு சேர வலம் வந்து தரிசிப்பவர்களுக்கு. புத்திரப் பேறும், கருவை நன் முறையில் காத்து அருளும் பேறும் வாய்க்கப் பெறுவது உறுதி. அதற்கான அமைப்பில் சுற்றுப் பிரகாரம் இருப்பதும் சிறப்பு. கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள பாற்குளம் காமதேனு என்ற தெய்வப் பசு தம் காலால் உருவாக்கிய குளம் என்றும் சிவராத்திரிக் காலங்களில் பெருமான் இங்கு தீர்த்தம் அருளுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

    11692672_861439787277981_6858674562650678376_n

    கோவில் அமைப்பு : மிகப் பழமையான இக்கோவில் நான்கு வீதிகளுக்கு இடையில் அழகான வடிவமைப்பில் அமைந்துள்ளது. 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது. கோவிலின் தென்புறம் நுழைவு வாயிலும், கிழக்கு புறம் இராசகோபுரமும் அமைந்துள்ளது. ஆலயத்தினுள் நுழைந்தவுடன் வடக்குபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து முதலில் உள்ள பெரிய பிரகாரத்தில் முல்லைவனநாதரும், இடப்பக்கம் கர்ப்பகரட்சாம்பிகை கோவிலும் தனித்தனி பிரகாரத்தில் உள்ளது.

    ஈசனின் ஆலயத்தின் முன்னால் கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவையும், தென்கிழக்கில் மடப்பள்ளி, அறுபத்து மூன்று நாயன்மார்களும், வட கிழக்கில் நடராசர் சபா முன் மண்டபமும், யாக சாலையும் இருக்கின்றன. மேற்புறம் சுவாமிக்கு வடகிழக்கில் நடராசர் சந்நதியும், நவக்கிரகங்களும், தென்பக்கம் சோமாசுகந்தர் சந்நதியும், அருகில் தென்கிழக்கில் தல விநாயகர் கற்பகப் பிள்ளையார் சந்நதியும் உள்ளன. உட்பிரகாரத்தில் நடராசருக்கு எதிரில் சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சந்நதிகளும், தென்புறம் தட்சிணாமூர்த்தி, நிருதிவிநாயகர் சந்நதிகளும், மேல்புறம் அர்த்தநாரீசுவரர், மகாலட்சுமி சந்நதிகளும், வடபுறம் ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் மற்றும் தல விருட்சமாகிய முல்லைக்கொடியும் அமைந்துள்ளன.

    துலாபாரப் பிரார்த்தனை மற்றும் தங்கத்தொட்டில் பிரார்த்தனை ஆகியவை இங்கு பிரசித்தம்.

    இத்திருக்கோவில் கல்வெட்டில், திருக்கருகாவூர் , மகாதேவர் திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளது.

    திருக்கருகாவூர் கல்வெட்டுகள் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியன் எம்.ஏ., எம்.பில். அவர்களின் தொகுப்பு:

    இத்திருக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இதுவரை 31 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவை முதல் பராந்தக சோழன் காலத்திலிருந்து பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம் முடியும் வரை உள்ள கால எல்லையில் வெட்டுவிக்கப் பெற்றவையாகும். இத்திருக்கோயில் முதல் பராந்தக சோழனின் காலத்தில் (கி.பி. 907 – 953) கற்றளியாக புதுப்பிக்கப் பெற்றதோடு அப்பெருவேந்தனின் 17 கல்வெட்டுகளும் அங்கு சாசனமாக இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து உத்தம சோழனின் கல்வெட்டு ஒன்றும், இராச இராச சோழனின் கல்வெட்டுகள் இரண்டும், விக்கிரம சோழனின் கல்வெட்டு ஒன்றும் இராஜகேசரி என்ற பட்டப் பெயர் பொறிக்கப்பட்ட சோழன் கல்வெட்டுகள் நான்கும், பரகேசரி என்ற பட்டத்துடன் உள்ள கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன.

    ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது என்பது போன்று புராணக் கதைகள் அதிகம் இருந்தாலும், தட்ச சாபத்தால் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாத பௌர்ணமியில் இத்தலத்தில் சிவபூசை செய்து நற்கதி அடைந்ததன் விளைவாக, ஒவ்வொரு பங்குனி பௌர்ணமி நாளிலும் நிலவொளி இறைவன் திருமேனியில் பிரகாசிப்பதைக் காணலாம் என்பது ஆதாரமாக விளங்குகிறது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் பெற்று நன்மக்கட்பேறு பெற, கீழ்கண்ட இந்த சுலோகத்தை 108 முறை பாராயணம் செய்வது நலம்.

    ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே சுரதா நாம யலிஷீனி
    தஸ்யா ஸ்மர்ண மாத்ரேணா விசல்யா
    கர்ப்பிணிபவேது

    திருமணம் கூடிவர, குழந்தை உண்டாக பிரார்த்தனை சுலோகம்:

    தேவேந்திராணி நமஸ்துப்யம்
    தேவேந்திர பிரியபாமினி
    விவாக பாக்யம் ஆரோக்யம்
    புத்ரலாபம்ச தேஹிமே
    பதிம் தேஹி சுதம் தேஹி
    சௌபாக்யம் தேஹிமே சுபே
    சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
    தேஹிமே கர்ப்பரஷகே
    காத்யாயிணி மஹாமாயே
    மஹாயோகின்யதீஸ்வரி
    நந்த கோப சுதம் தேவி
    பதிம் மே குருதே நம

    சுகப்பிரசவம் வேண்டி

    ஹே சங்கர ஸ்மரஹர பிரமதாதி நாதரி
    மன்னாத சாம்ப சசிசூட
    ஹரதிரிசூலின் சம்போஸூகபிரசவ க்ருத்பவமே
    தயாளோ ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே.

    ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
    ஓம் கர்ப்ப ரக்‌ஷாம்பிகையே போற்றி
    ஓம் கருகாவூர்தேவியே போற்றி
    ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    மன்னுயிர்க்கெலாம் அன்பு செய்த மாமனிதர் – ஆல்பர்ட் சுவைட்சர்

    ஜெர்மனியிலுள்ள கய்சர்பர்க் (Kayserburg) எனும் கிராமத்தில், சனவரி 14, 1875-இல், தேவாலயத்தில் கிராமபோதகராய்ப் பணிசெய்துவந்த (the local Lutheran-Evangelical pastor) ஒருவரின் மகனாய்ப் பிறந்தவர் ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer) எனும் பெருமகனார்.

    மெய்யறிவாளர், மதபோதகர், இசைத்துறை வல்லுநர், புகழ்பெற்ற மருத்துவர் இப்படிப் பன்முக ஆற்றலளாராய் மிளிர்ந்த சுவைட்சர், மன்னுயிர்பால் நேயம் கொண்ட மாமனிதராய்த் திகழ்ந்து மன்பதையில் அழியாப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Albert_Schweitzerஇளவயது முதலே இரக்ககுணம் நிரம்பப் பெற்றவராக விளங்கிய சுவைட்சர், மக்களிடத்தும் உயிருள்ள அனைத்துப் பொருள்களிடத்தும் அன்புகாட்ட வேண்டும் எனும் கொள்கையைக் கொண்டவராய் விளங்கினார். ஒவ்வொரு நாளும் தான் உறங்கப்போகும்முன் செய்யும் வழிபாட்டில், “மூச்சுவிடுகின்ற எல்லா உயிர்களையும் ஆண்டவரே நீர் காப்பாற்றி அருள்க! தீமையினின்று அவற்றைக் காப்பாற்றுக! அவை அமைதியோடு உறங்கட்டும்!” என்று வேண்டிக்கொண்ட பின்பே உறங்கச் செல்வதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

    இசை, வேதாகமம் போன்ற துறைகளில் தேர்ச்சிபெற்றிருந்த அவர், பின்பு மெய்ந்நூலிலும் (theology) முனைவர் பட்டம்பெற்று, ஜெர்மனியின் ஸ்டார்ஸ்பர்க் (Strasbourg) பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் மெய்ந்நூலியல் விரிவுரையாளராய்ப் பணியாற்றியபின், அங்குள்ள சமயக் கல்லூரி ஒன்றில் முதல்வராய்ப் பணிபுரிந்திருக்கின்றார்.

    சமயநூற் கல்வி, இசைநூற் கல்வி, மெய்ந்நூற் கல்வி என்று பலவற்றிலும் தேர்ச்சிபெற்றுப் புகழோடு திகழ்ந்துகொண்டிருந்தாலும் இவற்றால் சுவைட்சர் மனநிறைவு கொண்டாரில்லை. பிறருக்கு உழைக்கவேண்டும் எனும் எண்ணம் கொண்ட அவர்மனம் அதற்கான வழிகள் குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்தது.

    அவ்வேளையில், ’உறங்கும் நோயால்’ (sleeping sickness) ஆப்பிரிக்க மக்கள் மிகுந்த இடர்ப்பட்டு நூற்றுக்கணக்கில் இறந்துகொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வருத்தமுற்றார் அவர். அம்மக்களின் துயர்துடைப்பதே தன் வாழ்வின் இலட்சியம் என்றெண்ணியவர், தன் கனவு மெய்ப்பட 1906-ஆம் ஆண்டு மீண்டும் ஸ்டார்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை மாணாக்கராய்ச் சேர்ந்துவிட்டார்.

    ஏழாண்டுகள் அத்துறையில் பயின்று மருத்துவராய்த் தகுதிபெற்றார். தன் முப்பத்தேழாவது வயதில் ஹெலன் பிரஸ்லௌ (Helen Bresslau) எனும் பெண்மணியை மணந்தார் சுவைட்சர். இருவரும் கருத்தொருமித்த காதலராய் விளங்கினர். ஆப்பிரிக்காவிற்குச் சென்று மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் எனும் சுவைட்சரின் எண்ணத்திற்கு ஹெலன் பெரிதும் துணைநின்றார். ஆப்பிரிக்காவிலுள்ள லாம்பரின் (Lambarene) எனும் குன்றுகள் நிறைந்த பகுதிக்குத் தன் மனைவியோடு கப்பலில் பயணம் மேற்கொண்ட சுவைட்சர், இயற்கைச் சீற்றங்கள் பலவற்றைக் கடந்து அவ்விடத்தை அடைந்தார். குன்றுகள் நிறைந்த அப்பகுதில் குன்றாத மனவுறுதியோடு ஏழைமக்களுக்குத் தொண்டு செய்யத் தொடங்கினார்.

    ஐரோப்பா கண்டத்தில் வெள்ளை இனத்தில் பிறந்த அவர் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவரின் நோய்களை குணப்படுத்தி அவர்தம் வாழ்க்கையில் புத்தொளி பாய்ச்ச விழைந்ததை எண்ணுகையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் புறநானூற்று வரிகளின் உதாரண மனிதராய் அவர் திகழ்ந்திருப்பது தெற்றெனப் புலப்படுகின்றது.

    ’உயிர்கள் தொழத்தக்கவை’ எனும் உறுதியான எண்ணங்கொண்ட அவர், மனிதர்கள் வாழ்வதற்கு ஆசைப்படுவதுபோலவே பிற உயிர்களும் ஆசைப்படுகின்றன என்பதைக் கண்டார். அனைத்து உயிர்களையும் பாதுகாப்பதில் அளவிலா ஆவல் கொண்டார். சுவைட்சரின் உயிரிரக்கம், நம் இராமலிங்க வள்ளலின் சீவகாருண்யக் கோட்பாட்டோடு ஒப்பிடத்தக்கதாகும்.

    லாம்பரீனில் அவர் பணிசெய்துகொண்டிருந்த நேரத்தில் முதல் உலகப்போர் மூண்டது. அவரால் தொடர்ந்து அங்கே மருத்துவப் பணி செய்யமுடியாத சூழல் ஏற்பட்டதால் வேதனையோடு தன் சொந்த நாட்டிற்குத் திரும்பினார். மருத்துவத்துறையை ஒதுக்கிவைத்துவிட்டு தத்துவ போதகராகவும் இசை ஆசிரியராகவும் அவர் மீண்டும் பணிபுரிந்துவந்த வேளையில், சுவீடனில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு அவருக்கு அழைப்பு வந்தது. அதனால் உற்சாகம் கொண்ட சுவைட்சர், ”மரப்பெட்டியினுள்ளே மறைந்து கிடக்கும் காசு போன்ற என்னை மக்கள் மறக்கவில்லை” என்று தனக்குத்தானே கூறி மகிழ்ந்தார்.

    சில ஆண்டுகளில் சுவிட்சர்லாந்திலுள்ள சூரிச் பல்கலைக்கழகம் (Zurich University) அவருக்கு ’கவுரவ டாக்டர் பட்டம்’ அளித்துச் சிறப்பித்தது. அதைத்தொடர்ந்து, ’பழைய காட்டோரத்தில்’ (On the edge of the primeval forest) எனும் பெயர்கொண்ட அவருடைய நூலொன்று வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு பல மொழிகளிலும் அறிஞர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. ’நாகரிகமும் அறமும்’ (civilization and ethics) எனும் அவரின் மற்றொரு நூல் 1923-ஆம் ஆண்டு வெளியானது. அந்நூலில், “மனிதர்களின் நாகரிகம் பாழாகிக்கொண்டிருப்பதைத் தடுக்கவேண்டுமானால் ‘உயிர்களின் தொழுதகைமை’ (reverence for life) என்ற அறவுள்ளத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்” என்று தெளிவாய்க் குறிப்பிட்டிருந்தார் சுவைட்சர்.

    மனக்கட்டுப்பாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த சுவைட்சர், ”மனம் சென்றவிடத்திலெல்லாம் அதனை விட்டுவிடுதல் கூடாது என்றும் அதனைத் தீயதிலிருந்து நீக்கி நல்லதன்கண் கொண்டு செலுத்துதல் வேண்டும்” என்றும் விளம்பினார்.

    சென்ற இடத்தாற் செலவிடாத் தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு
    எனும் தெய்வப்புலவரின் பொய்யாமொழி ஈண்டு நினைவுகூரத்தக்கது.

    ’மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ எனும் அற்புளத்தோடு பணியாற்றிக்கொண்டிருந்த சுவைட்சருக்கு 1953-ஆம் ஆண்டு வரவேற்புப் பதக்கம் (Welcome Medal) எனும் பெரும்பரிசும் பணமுடிப்பும் அளிக்கப்பட்டன. அப்பணம் முழுவதையும் ஆப்பிரிக்கப் பெருநோயாளிகளின் (தொழுநோய்) சிகிச்சைகளுக்காகவே செலவிட்டார் அம்மாமனிதர். சமுதாயத்தால் அருவருப்போடு ஒதுக்கப்பட்ட, அங்கம் அழுகிப்போன தொழுநோயாளிகளுக்கு மருத்துவம் செய்து அவர்களின் தொழத்தக்க தெய்வமாக விளங்கினார் சுவைட்சர். அவருடைய அருந்தொண்டைப் பாராட்டும் வகையில் 1952-ஆம் ஆண்டு அவருக்கு நோபல் சமாதானப்பரிசு (Noble peace prize) வழங்கப்பட்டது.

    வயது முதிர்ந்த நிலையிலும் மக்கள் சேவையை நிறுத்தாத அம்மனிதருள் மாணிக்கம், அற்றார்க்கொன்று ஆற்றுவதிலேயே தன் உள்ளத்தைச் செலுத்தினார். அவரின் மகத்தான பணிகளை அறிந்த எலிசபெத் மகாராணியார் அவருக்கு ’Order of Merit’ எனும் சிறந்ததொரு பட்டத்தை 1965-இல் அளித்து மகிழ்ந்தார்.

    பல்வேறு நாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்த சுவைட்சர், தம் பொழிவுகளில் கூறிய அறக்கருத்துக்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஆகும். ”பெருங்குடி மக்களாய்ப் பிறந்தவர்கள் பணியொன்றும் செய்யத் தேவையில்லை; பணியாற்றப் பிறந்தவர்கள் இழிகுடி மக்களே ஆவர்” என்று கிரேக்க அறிஞர்கள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் கூறிய கருத்துக்களைக் கடுமையாக எதிர்த்த சுவைட்சர், உயிர்களுக்குள் பிரிவினையும் வேறுபாடும் கூடாது என்று வலியுறுத்திப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் வான்புகழ் வள்ளுவரின் கருத்தைப் பரப்புரை செய்திருப்பது போற்றுதலுக்குரியது.

    ’தமக்கென்றே உழைத்துக்கொண்டிராமல் பிறர்க்காகப் பாடுபடுவோரால்தான் உலகம் உயர்வடையும்’ என்பதையே தன் வாழ்வின் தலையாயக் கொள்கையாய்க் கொண்டிருந்தவர் சுவைட்சர்.
    ”தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மையானே”
    என்ற புறப்பாட்டின் வரிகளும் இதைத்தானே செப்புகின்றன.

    சுவைட்சரின் பேச்சுக்கள் அவர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்தவை; ஆகவே அவைப் பிறர் உள்ளத்தை எளிதில் தொடுவனவாயின. நாள்தோறும் பிறர்க்கு உழைப்பதையே கடமையாய்க் கொண்டிருந்த சுவைட்சரைப் பார்த்து அவர் மனைவி ஒருநாள், “எவ்வளவு நாட்களுக்கு இப்படி ஊருக்காகவே உழைத்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்?” என்று வினவியதற்கு, “என் மூச்சு உள்ளவரையில்” என்று புன்னகையோடு பதிலளித்தாராம் சுவைட்சர். இவரன்றோ பேராண்மையாளர்!

    திருக்குறள்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட சுவைட்சர், ”வாழ்வுக்குரிய அன்பு நெறியையும்,  உயர்ந்த ஞானத்தையும் புகட்டும் ஒப்பற்ற நூல் திருக்குறள்; இதுபோன்றதொரு நூல் உலக இலக்கியத்தில் வேறெங்குமே இல்லை” என அறுதியிட்டு உறுதிபட உரைத்துள்ளார்.

    ”மனித நாகரிகம் என்பது ஆடம்பரங்களில் இல்லை; அஃது ஆன்ம வளர்ச்சியில் இருக்கின்றது” என்று முழங்கிய அப்பேரறிஞர், ஒல்லும் வாயெல்லாம் வினையாற்றிய பேரருளாளரும் ஆவார். பொறிகளைக் கையாளுவதில் மக்களுக்கிருக்கும் ஆர்வம், நல்ல நெறிகளைக் கைக்கொள்வதிலும் இருத்தல் அவசியம் என்றார்.

    தன் வாணாளின் கடைசி நிமிடம்வரைப் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த மகாத்மாவான சுவைட்சரின் வாழ்க்கையும், அவரின் அறவுரைகளும் நாமனைவரும் படித்துப் பின்பற்றவேண்டியவை.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: யாப்பினுள் அட்டிய நீர்

     

    நூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள்
    தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர்; அஃதன்றிக்
    காப்பி னகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல்
    யாப்பினுள் அட்டிய நீர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    நூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துள்
    தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,
    காப்பின் அகத்து இருந்து, காய்வார் மிக உரைத்தல்
    யாப்பினுள் அட்டிய நீர்.

    பொருள் விளக்கம்:
    போரில் பிறர் வென்றாலும், தான் வென்றாலும் (என வெற்றி யாருடையதாக இருப்பினும்), கொடிய போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவரே வீரர் எனக் கூறத் தகுதியுடையவர். அவ்வாறின்றி, பாதுகாப்பான அரணுக்குள் இருந்துகொண்டு, சினம் கொண்டவர் போல பேசும் வாய்ச்சொல் வீரம் என்பது வயலில் பாய்ச்சிய நீர் (பயிர் வளர உதவுவது போல, பகையென்னும் பயிரை வளர்க்கவே உதவும்).

    பழமொழி சொல்லும் பாடம்: அஞ்சாமையுடன் போர்புரிந்து, பகையழித்து வெற்றியை எதிர்கொள்பவரே வீரர்கள் எனப் பாராட்டத் தக்கவர்கள். வாய்ச்சொல் வீரர்கள் உண்மையில்  வீரர்களே அல்லர். குறள் கூறும் படைவீரர் கொண்டிருக்க வேண்டிய வீரர்களது பண்பாகக் குறிக்கப்படுவது,

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை. (குறள்: 765)

    உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலைக் கொண்டவரே படையினர் என்பதாகும்.

    Share
  • ஏன் இப்படியாச்சு?

    -துஷ்யந்தி

    மனிதனின் உள்ளத்தில்
    சுயநலம் புகுந்தாச்சு
    இயற்கையை எண்ணிப்பார்க்க
    நேரம் குறைந்தாச்சு!                                  dhushyanthi

    பசுமையான நிலமெல்லாம்
    பாலைவனமாய் மாறியாச்சு
    பூமியிலே புதிதாக
    ஓசோன் ஓட்டையாச்சு!

    பூமிக்குள்ளே ஊதாக்கதிரின்
    வருகை கூடிப்போச்சு
    புதுப்புது நோயெல்லாம்
    இதனால் உருவாச்சு!

    பச்சை நிறத்தின் பசுமைபோய்
    தூசு படிந்தாச்சு
    சுவாசிக்கும் காற்றுகூட
    விஷக்காற்றாகிப் போச்சு!

    வானிலை வட்டமெல்லாம்
    சுற்று மாறிப்போச்சு
    பூகம்பமாயும் வெள்ளமாயும்
    பூமியைத் தாக்கியாச்சு!

    மக்களெல்லாம் அநாதையாய்
    அலையவேண்டியதாச்சு
    களவும் கொள்ளையும்
    தலை மீறலாச்சு!

    மனிதத்தின் தனித்துவம்
    மண்ணில் அழிந்துபோச்சு
    தலைக்குமேல் வெள்ளம் போன
    நிலைக்கு தள்ளலாச்சு!

    சந்ததியின் எதிர்காலம்
    கேள்விக்குறியாச்சு
    கேள்விக்கு விடைதேட
    அவசரம் வந்தாச்சு!

    ஆளுக்கொரு மரம் நடணுமென
    எண்ணம் தோன்றியாச்சு
    அழகான பூமிக்கு
    அத்திவாரம் தோன்றியாச்சு!

     

    Share
  • வளவன் கனவு-6

    சு.கோதண்டராமன்

    vallavan-kanavu11

    லகுலீசர்

     

    நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம:

    நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யாம் உத தே நம:

    -ஸ்ரீருத்ரம்

    ருத்திரனின் கோபத்துக்கு வணக்கம், அவரது அம்புக்கும், வில்லுக்கும்

    கைகளுக்கும் வணக்கம்.

    புலவர் பரிசு பெற்றுக் கொண்டு போன எட்டாம் நாள் அரசவைக்கு ஒரு வடதேசப் பிராமணர் வந்தார். அவரது தோற்றமே வித்தியாசமானதாக இருந்தது. சோழியர்களைப் போல் அல்லாமல் அவரது உடல் நல்ல சிவந்த நிறமாக இருந்தது. சோழநாட்டில் பிராமணரும் பிறரும் குடுமியை முன்பக்கமாக நெற்றிக்கு மேல் அலங்காரமாக இருக்கும்படி முடிந்துகொள்வது வழக்கம். இவரோ தலையை முன்பக்கம் மழித்து, குடுமியைப் பின்பக்கம் முடிந்துகொண்டிருந்தார். சோழியர்களின் நெற்றியை அலங்கரித்தது ‘ப’ வடிவச் சந்தனக் கோடு. இவரோ சாம்பலைக் குழைத்து படுக்கைவாட்டில் மூன்று கோடுகளாக அணிந்திருந்தார். சோழியர்கள் வேட்டியைத் தட்டாடையாக  அணிவது வழக்கம். இவர் ஒரு நீண்ட வேட்டியின் முனைகளை விசிறி மடிப்பாக மடித்து முன்புறமும் பின்புறமும் சொருகியிருந்தார்.

    அரசர் அவரை வரவேற்று இருக்கையில் அமரச் செய்து, “எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கு வந்த நோக்கம் என்ன?” என்று விசாரித்தார். வந்தவர் பேசத் தொடங்கினார்.

    “நான் அவந்தி நாட்டிலிருந்து வருகிறேன். எங்கள் பேரரசர் நரசிம்மகுப்தர் பாடலிபுத்திரத்தில் உள்ளார். அவந்தியின் தலைநகரான உஜ்ஜயினியில் எங்கள் சிற்றரசர் அக்னிகுப்தர் ஆட்சி செய்கிறார். பர்த்ருஹரி, காளிதாஸர் போன்ற பல புகழ்பெற்ற கவிஞர்களும் ப்ரம்மகுப்தர், பாஸ்கராசார்யர் போன்ற கணித அறிஞர்களும் தோன்றிய பூமி உஜ்ஜயினி. அங்கே சில காலமாக செல்வாக்குடன் வளர்ந்து வரும் ஒரு சமயத்தைப் பற்றித் தங்களுக்குத் தெரிவிக்கவே வந்தேன்” என்றார். அரசர் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டார்.

    “உஜ்ஜயினிக்கு தென்மேற்கில் நர்மதை நதிக்கு வடக்கில் காயாவரோகணம் என்னும் ஒரு சிறு நகரம் உள்ளது. அதன் பெயருக்குக் காரணமானவர் ஒரு மகான். யுவா சர்மா என்ற பெயர் கொண்ட அவர் 16 வயதாக இருக்கும்போது மரத்திலிருந்து தவறி விழுந்தார். நீண்ட நேரம் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால் அவர் இறந்து விட்டார் என்று எண்ணி அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று சிதையில் கிடத்தித் தீ வைத்துவிட்டு வந்து விட்டனர்.

    உண்மையில் அவர் இறக்கவில்லை. சூடு பட்டதும் அவருக்குப் பிரக்ஞை வந்தது. கை கால்களை உதறிக்கொண்டு சிதையிலிருந்து வெளிவந்தார். தீ நேரடியாகப் பட்டதால் நெஞ்சுப் பகுதி மட்டும் கறுத்துவிட்டது. மற்றபடி அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் எங்கிருக்கிறோம் என்று உணரச் சிறிது காலம் பிடித்தது. தான் இறந்துவிட்டதாக எண்ணி உறவினர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்தார். தான் இறக்கவில்லை என்று அறிந்தால் அவர்கள் மகிழ்வார்கள் என்று எண்ணி வீடு நோக்கி நடந்தார். நரிகள் கூட்டமாக அவரைச் சூழ்ந்து கொண்டு வேட்டையாடத் துடித்தன. அவற்றை விரட்டுவதற்காக அங்கு கிடந்த பாடையின் மூங்கிலைக் கையில் எடுத்துக் கொண்டார். சிதையில் வைக்கும்போது உடலிலிருந்து ஆடையை அகற்றிவிடுவது வழக்கம். எனவே அவர் நிர்வாணமாகவே நடந்தார். அவரை ஊர் எல்லையில் கண்ட உடனேயே எல்லோரும் யுவா சர்மாவின் ஆவிதான் பேய் வடிவில் வந்துள்ளது எனப் பயந்து ஓடத் தொடங்கினார்கள். தன் வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டார். உள்ளிருந்து எவரும் வெளிவரவில்லை. இவருக்கோ பசி. உணவிடுங்கள் அம்மா என்று கூவிக் கொண்டே தெருத்தெருவாக அலைந்தார். எவரும் கதவு திறக்கவில்லை. நம் கதி இப்படியா ஆகவேண்டும் என்று நொந்துகொண்டு மீண்டும் சுடுகாட்டிற்கே போனார். பசி மிக வாட்டியது. இங்கு கிடைக்கும் இலை எதையாவது தின்போம். பசி தீரலாம். விஷச் செடியாக இருந்தாலும் நல்லதுதான். உண்மையாகவே உயிர் போய் விடும் என்று தீர்மானித்து அங்கிருந்த ஊமத்தைச் செடியின் இலைகளைப் பறித்து வயிறு கொண்ட மட்டும் தின்றார். சற்று நேரத்தில் அவருக்குக் கனவா, மயக்கமா, உறக்கமா என்று புரியாத நிலை ஏற்பட்டது.

    அந்நிலையில் அவருக்கு ஒரு மானதக் காட்சி தோன்றியது. ஒரு பெரிய மலை. அதன் உச்சியில் பனி படர்ந்திருக்கிறது. அதன் கீழ்ப் பகுதிகளில் அடர்ந்த காடு. அழகாகவும் காணப்படுகிறது, அச்சம் தருவதாகவும் இருக்கிறது. அங்கே ஒரு ஆறு பெருக்கெடுத்துக் கீழ்நோக்கி இறங்குகிறது. சற்று நேரத்தில் அந்த மலை ஒரு மனித உருவாக மாறுகிறது.  மலை உச்சி தெரிந்த இடத்தில் பிறைச் சந்திரன் தெரிகிறது. காடு அவரது சடையாக மாறுகிறது. அந்த ஆற்று நீர் அவரது சடை மேல் கொட்டிக் கொண்டிருக்கிறது. அவருடைய இடப்பக்கம்  பெண் உருவமாக இருக்கிறது. அவரைச் சுற்றிப் பல விதமான மிருகங்கள் நிற்கின்றன. அவரது கையில் வில் கத்தி போன்ற பல ஆயுதங்கள். அச்சம் தரும் இந்தத் தெய்வம் யார் என்று இந்த இளைஞர் திகைத்து நின்றபோது அவர் கற்ற வேதம் நினைவுக்கு வந்தது. ஆம், இது ருத்ரன்தான். உடனே அவர் நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம: என்று ருத்ர மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். காட்சி மறைந்தது. அவருக்குச் சுய நினைவு வந்தது. அது முதல் அவருக்குப் பசி உணர்வே அற்றுப் போய் விட்டது. ஊர்ப் பக்கம் போக வேண்டிய தேவையும் இல்லாமல் போயிற்று. கள்ளிச் செடிகள் சூழ்ந்த சுடுகாட்டிலேயே ருத்ரத்தைச் சொல்லிக் கொண்டு நாட்களைக் கழிக்கலானார்.

    மக்கள் அவரை மறந்துவிட்டார்கள். நீண்ட காலம் கழித்து ஒரு நாள் அந்த ஊரில் ஒரு பெண்மணி இறந்துவிட்டார். அவரைத் தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் சுடுகாட்டுக்கு வந்தது. மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் வெய்யில் நேரத்தில் ஒரு ஆலமரத்தடியில் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் நடுவே ஒரு கல்லின் மேல் யுவா சர்மா ஆடையில்லாமல் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்த உடன் தூக்கி வந்தவர்களும் பிறரும் பாடையைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இறந்தவரின் மகன் மட்டும் தீச்சட்டியுடன் செய்வதறியாது திகைத்தும் பயத்தால் நடுங்கிக் கொண்டும் நின்றான்.

    யுவா சர்மா அவனைப் பார்த்து, “பயப்படாதே, நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்” என்று கூறினார். அவன் சற்றே தைரியமடைந்து கீழே கிடந்த தன் தாயின் உடலைப் பார்த்தான். யுவா சர்மா அருகில் சென்று அந்தப் பிரேதத்தைத் தூக்கிச் சிதையில் வைத்து உரிய மந்திரங்களைக் கூறி, அவனைக் கொண்டு எரி மூட்டச் செய்தார்.  தன் கடமை நிறைவேறியதில் திருப்தி கொண்ட அவன் அவரை நன்றியுடன் வணங்கினான்.

    அவன் ஊருக்குள் சென்று சுடுகாட்டில் நடந்ததை எல்லாம் விவரித்தான். ஊர் மக்கள்  தைரியம் அடைந்து ஒவ்வொருவராகச் சுடுகாட்டுக்கு வந்து இவரைப் பார்த்துப் பேசத் தொடங்கினர். இவரும் தனக்கு ஏற்பட்ட மானதக் காட்சியையும் பசியில்லாமல் போனதையும் வந்தவர்களிடம் தெரிவித்தார். ருத்ரனே இவருடைய இறந்துபோன உடலில் வந்து இறங்கியதாக ஊர் மக்கள் நம்பினர். இந்த நிகழ்வை காயாவரோகணம் (உடலில் இறங்குதல்) என்று கொண்டாடினர். அதனால் அந்த ஊரின் பெயரே காயாவரோகணம் ஆயிற்று. அது சுருங்கி இப்பொழுது கார்வான் என்று அழைக்கப்படுகிறது.

    யுவா சர்மாவை ஊருக்குள் அழைக்க எவரும் துணியவில்லை. அவரைத் தெய்வமாகக் கருதி சுடுகாட்டுக்கு வந்து வணங்கினர். கையில் கோல் வைத்திருந்ததால் அவரை லகுலீசர் என்று அழைத்தனர். அவரது பழைய பெயர் மறைந்து விட்டது.

    தனக்குக் காட்சி தந்த பசுபதியை ருத்ரம் முதலான வேத மந்திரங்களைக் கூறி வழிபடுமாறு அவர் உபதேசித்தார். அவரது போதனைகள் பாசுபதம் எனப்பட்டன. பலர் அவருக்குச் சீடர்கள் ஆயினர். அவர்கள் பாரதத்தின் பல பகுதிகளுக்கும் சென்று அவரது போதனைகளைப் பரப்பினர். தமிழ்நாட்டுக்குக் கூடச் சிலர் வந்திருக்கிறார்கள். இதெல்லாம்  நடந்து இருநூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.  காலப்போக்கில் அவரது போதனைகள் உருமாறின. லகுலீசர் நெஞ்சு கறுப்பாக இருப்பதை நினைவூட்டும் வகையில் சிலர் தங்கள் முகங்களில் கரி பூசிக் கொண்டு திரிந்தனர். அவர்கள் காலாமுகர்கள் என அழைக்கப்பட்டனர். காபாலிகர் எனப்பட்ட வேறு சிலர் உடம்பெல்லாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து திரிந்தனர். இதனால் லகுலீசரின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.”

    வடதேச பிராமணர் நிறுத்தினார். அரசருக்குப் பனி மூட்டம் கலைந்து சூரிய உதயம் ஆனாற்போல இதுவரை புரியாத பல விஷயங்கள் புலப்பட்டன. புறநானூறு முதலான தமிழ் நூல்களில் நீல மணி மிடற்றன், கள்ளிக் காட்டில் அமர்ந்திருப்பவர், ஆலமர் செல்வன், விடையேறி என்று குறிப்பிடப்படும் தெய்வம் லகுலீசரின் சீடர்கள் பரப்பிய தெய்வமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. லகுலீசர் 16வது வயதில் யமன் பிடியிலிருந்து மீண்டது இங்கு மார்க்கண்டேயன் கதையாக உருமாறி இருக்கவேண்டும் என நினைத்தார். அதுவே இறைவன் யமனைக் காலால் உதைத்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லகுலீசர் உணவு தேடி ஒரு நாள் ஆடையில்லாமல் பிச்சை எடுக்கச் சென்ற நிகழ்ச்சியை இறைவன் பலி ஏற்றுத் திரிவதாக அம்மையார் குறிப்பிட்டுள்ளார். லகுலீசர் நெஞ்சில் தீ சுட்டுக் கறுத்தது நஞ்சு உண்டு அவர் கழுத்துக் கருமை அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அம்மையாருக்கு உபதேசம் செய்தவர் லகுலீச சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். செவி வழிச் செய்தியாகப் பரவும்போது கால தேச இடைவெளி காரணமாக இவை சில சில மாற்றங்களை அடைந்துள்ளன என்று நினைத்தார் அரசர்.

     தொடரும்

    Share
  • அவன், அது , ஆத்மா (20)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 20

    நா.பா. என்னும் இலட்சியவாதி”

    அவனுக்கு நா. பார்த்தசாரதியின் (நா.பா) கதைகள் பிடிக்கும். அவர் கதைகளில் இருக்கும் சத்திய வேட்கையும், கவித்துவமான நடையும் அவரது கதைகளைப் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்குள் ஏற்படுத்தி இருந்தது. அதோடு மணிவண்ணன் என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகளிலும் அவனுக்கு நாட்டமிருந்தது. அவரது “தீபம்” பத்திரிகையை நூலகத்தில் படித்திருக்கிறான். சென்னைக்கு வந்த பிறகு தவறாமல் அதை வாங்கிப் படித்தும் வந்தான். அது அவனது இலக்கியப் பசிக்குக் கொஞ்சம் தீனி போட்டு வந்தது.

    1971ம் வருடம் ஏப்ரல் மாதம் கல்லிடைகுறிச்சியில் ஸ்ரீராமநவமி உற்சவ சமயத்தில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. “ராம நாம யக்ய மண்டலி” என்ற அமைப்பின் மூலமாக “டாபே” மகாதேவன் என்பவரின் முயற்ச்சியால் வீரப்பபுரம் தெருவில் அமைக்கப் பட்டிருந்த பெரிய பந்தலில் வைத்து நடைபெற்ற அந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவர் நா.பார்த்தசாரதி . பாரதி கலைக்கழகத் தலைவர் பாரதி இரா.சுராஜ், பாரதி காவலர் கே.ராமமூர்த்தி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் “தமிழ் ஐயா” என்று அழைக்கப் பட்ட “லக்ஷ்மிநாராயணன்”, பேராசிரியர் பழனிச்சாமி, திலகர் வித்யாலய உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் கே.ஏ. நீலகண்ட ஐயர் போன்ற தமிழ் அறிஞர்கள் அந்தப் பட்டிமன்றத்தில் தமிழருவியாகக் கொட்டிக் களித்தனர். தம்பியரில் சிறந்தவர் இலக்குவனா, பரதனா, கும்பகர்ணனா என்பதே பட்டிமன்றத் தலைப்பு. ஒவ்வொரு அணியினரும் தங்கள் கருத்தை எடுத்துரைக்கும் பொழுது பார்வையாளர்கள் கைகளைத் தட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொடிருந்தனர். இறுதியில் தீர்ப்புச் சொன்ன நா.பா. அவர்கள்,” இது உங்கள் பட்டிமன்றம். இங்கு பேசியவர்களின் கருத்துக்களை நீங்கள் ரொம்பவும் கைதட்டி ரசித்தீர்கள். அதனால் அதிகமாக “ஐம்பத்தொரு முறை கைதட்டல்கள்” வாங்கிய அணியையே வென்றதாகத் தீர்பளிக்கிறேன்” என்று ஒரு புதிய கோணத்தில் தீர்ப்பு வழங்கினார். அப்பொழுது அவராற்றிய தமிழுரையில் அவன் சொக்கித்தான் போனான். அவரது அந்த மேடைப் பேச்சு அவனைக் காந்தம்போல அவரிடம் ஈர்த்தது. நூலகத்தில் அவரது நாவல்களைத் தேடிப் படித்தான். அவனது பி.யூ.சி. வகுப்புக்கு நா.பா.வின் “பிறந்த மண்” என்ற அற்புதமான நாவலைப் பாடமாக வைத்திருந்தனர். அவன் ரசித்து ரசித்து அந்த நாவலைப் படித்தான். இன்றும் அந்தப் புத்தகத்தை அவன் பத்திரமாக வைத்திருக்கிறான். அந்தப் பழைய புத்தகத்தைப் புரட்டும் பொழுது அதைப் பாடாமாக நடத்தி விளக்கிய ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணிக் கல்லூரியின் பேராசிரியர் ஆழ்வான் சார் நினைவுக்கு வருவார்.

    bank

    பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமா”

    கல்லிடைகுறிச்சியில் நா.பா.வின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணமூர்த்தி. அவர் முதலில் “இந்தோ கமர்ஷியல் பேங்க்”ல் வேலை செய்து, பின்னாளில் அது பஞ்சாப் நேஷனல் பேங்க்கோடு இணைந்ததால் அதிலும் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அவரை எல்லோரும் பேங்க் கிருஷ்ணமூர்த்தி என்றுதான் அழைப்பார்கள். நல்ல தமிழார்வமும், இலக்கிய ஆர்வமும் கொண்டவர். ஒருமுறை நா.பா. கல்லிடைகுறிச்சிக்கு வந்திருந்த பொழுது பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமாவும் , நா.பா.வும் ஒரு மாலை வேளையில் ஆற்றங்கரைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தனர். அவன் சிவன்கோவில் வாய்க்கால் பாலத்தின் திண்டில் அமர்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவர்கள் இருவரும் அவனைக் கடந்து செல்வதைப் பார்த்து அவனுக்கு நா.பா.விடம் பேசவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவன் மெதுவாக அவர்களுக்குப் பின்னால் ஒரு இருபதடி தூரத்தில் அவர்களைத் தொடர்ந்து நடந்தான். அவர்கள் பாதையை விட்டு வயல்வரப்புகள் வழியாக நடக்கத் தொடங்கினர். நா.பா. மேற்குத் தொடர்ச்சி மலையையும் , வயல் வெளிகளையும் தன்னுடைய கைகளைக் காட்டிக் காட்டிப் பேசியபடியே சென்று கொண்டிருந்தார். ஆயிரங்கால் மண்டபம் கடந்து, ஆற்றங்கரைக்குள் இறங்கி அங்கிருக்கும் சிறிய சிவன் பாறைக்கு எதிரில் பரந்திருந்த ஆற்று மணலில் அமர்ந்து கொண்டனர். அப்பொழுதெல்லாம் ஆற்றில் நிறைய மணல் இருக்கும். மணற்கொள்ளை அவ்வளாவாக நடைபெறாத காலம். அவன் அந்தச் சிவன் பாறையில் ஏறி அமர்ந்து கொண்டு, அவர்களைப் பார்த்தும், ஆற்று நீரைப் பார்த்துக் கொண்டும் சிறிது நேரம் இருந்தான். பிறகு மெதுவாக எழுந்து அவர்களின் அருகில் சென்றான். அவன் அவர்கள் பக்கமாக வருவதைப் பார்த்த கிருஷ்ணமூர்த்தி மாமா,” என்ன கண்ணா …இங்கவா..இவரைத் தெரியுமோ” என்றார். அவன் அவரது கதைகளைப் படித்திருக்கிறேன் என்றும், நேரில் பார்த்ததில்லை என்றும் சொன்னான். கிருஷ்ணமூர்த்தி மாமா நா.பா.விடம்,” இவன் பேர் விஸ்வநாதன்…கவிதைகள் எழுதுவான்…இலக்கியத்தில் நல்ல ஆர்வமுண்டு என்றார். “அப்படியா” என்று என்னைப் பார்த்து,” நிறையப் படியுங்கள்..எழுத்து தானாக வரும்” என்று நா.பா. அவனை வாழ்த்தினார். அவனுக்கு உள்ளத்தில் ஏக குஷி. சில மாதங்கள் சென்று கலைமகள் பத்திரிகையில் “நீல நயனங்கள்” என்றொரு நாவலை நா.பா. எழுதினர். அதில் அந்தக் கல்லிடைகுறிச்சியின் அழகையும், வயல்வெளிகளின் பசுமையையும், தாமிரபரணியின் குளிர்ச்சியையும் பதிவு செய்திருப்பார். நா.பா.வின் கம்பீரமான தோற்றமும், நிமிர்ந்தபடியே கைகளை வீசிக்கொண்டு நடக்கும் அழகும், நல்ல தமிழ்ப் பேச்சும் அவனுக்கு அவர்மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

    ஒருசமயம் அவனுக்கு நண்பரும், சிறந்த எழுத்தாளரும் , கவிஞருமான சுப்ரபாலன் அவர்களின் அசோக்நகர் இல்லத்தில் 15.08.1987ம் வருடம் “இந்திய சுதந்திர தினத்தன்று” பாரதி கலைகழகம் சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. நா.பா.தான் தலைமை தாங்கினார். கவிதைக்கு “தேசம் எனது தேசம்” என்று தலைப்புத் தந்திருந்தனர். கவிமாமணி தமிழழகன், கவிமாமணி நா.சீ.வரதராஜன், கவிமாமணி தேவநாராயணன், கவிமாமணி பஞ்சநதீசன் போன்ற மூத்த கவிஞர்களுடன் நிறையக் கவிஞர்கள் கலந்து கொண்டு நல்ல கவிதைகளைப் படைத்தனர். அவனும் அன்று ஒரு கவிதையைப் படித்தான். அவன் கவிதையைப் படித்து முடித்தவுடன்,”உங்களது கவிதையில் ஒழுங்கும், இன்றைய நடைமுறையின் கோபமும் இருக்கிறது. இன்னும் இதுபோல் நிறைய ஆழமாக சிந்தித்து எழுதுங்கள்” என்று நா.பா. பாராட்டினார். அதை அவன் ஒரு மோதிரக் குட்டாகக் கொண்டான். கவிமாமணி தேவநாராயணன் அவனது கவிதையைப் பாராட்டியதோடு, சுதந்திர தினத்தன்று தியாகிகளின் பெருமையைச் சொல்ல வேண்டும் என்ற அவரது கருத்தைச் சொன்னார். அடுத்ததாக தேவநாராயணன் அவரது கவிதையைப் படிக்க அழைக்கப்பட்டார். அருமையான கவிதையை அவர் படித்து, இசைத்தார். அதில் பாரத தேசம் புண்ணிய தேசம் என்ற தனது கருத்தை வலியுறித்தி இருந்தார். அப்பொழுது நா.பா. அவர்கள் , “நமது பாரதம் மட்டும் புண்ணிய தேசமில்லை. எல்லா தேசமுமே புண்ணிய தேசந்தான். நமது நாட்டில் கள்ளப் பணத்தைக் கொண்டு “சுவிஸ்வங்கி”யில் போடுபவர்கள் இல்லையா..நேர்மைக் குறைவான அரசியல் வாதிகள் இல்லையா…அதேபோல மற்ற தேசங்களில் சிறந்த மனிதர்கள் இல்லையா, இலக்கியம் இல்லையா….அதனால் வாழுகின்ற மனிதர்களின் குணநலன்களைக் கொண்டுதான் ஒரு தேசத்தை நாம் கணிக்க வேண்டும்” என்றார். அப்பொழுது கவிமாமணி தேவநாராயணன் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திப் பேசினார். ஒரு சிறிய இலக்கியச் சர்ச்சையே அப்பொழுது அங்கு நடந்தது. அதெல்லாம் அவனுக்கு ஒரு அனுபவமாகப் பட்டது. கவிமாமணி தேவநாராயணனுக்கு அவன்மீது ஒரு தனி வாஞ்சையே உண்டு. அந்தக் கவியரங்கத்திற்கு அவனது மனைவியும், எழுத்தாளருமான “சீதாலக்ஷ்மி விஷ்வநாத்”தும் வந்திருதார். அவரும் நா.பா.வின் தீவிர ரசிகை. அன்று அவன் படித்த அந்தக் கவிதையை நீங்களும் இங்கே படிக்கப் பதிவு செய்கிறான்.

    “தேசம் எனது தேசம்”

    “இவரொரு இந்தியர் ! தீவிரத் தியாகிதான் !
    சிவனென இருக்காமல் சிறைக்கதவுக் குள்ளும்தன்
    இந்திய மண்ணிற்காய் சிந்திய ரத்தமிவர்
    பிந்திய பிறப்புக்குத் தெரியவா போகிறது ?
    மனதினது தூய்மையை மாசுபடா திருக்கவே
    தினமுமே தாய்மண்ணைத் தியானமாய்ச் செய்துவந்த
    உன்னதத் தியாகிகளின் உணர்ச்சிமிகு வாழ்க்கையை
    இன்றைய இளைஞனின் இதயந்தான் அறியுமா?

    தாமிரப் பட்டயம் தருவார்கள் எனஎண்ணியா
    ஆயிர மாயிரமாய் அந்நிய உடைமைகளைத்
    தீயிலே கருக்கிநம் விடுதலை வேள்வியை
    தீவிரப் படுத்தினர் ! திரண்டதன் செல்வங்கள்
    அனைத்தையும் இந்ததன் அற்புத நாட்டினது
    கனவுகள் நனவாகக் கற்பூரங் காட்டினர் !

    ஏழ்மையின் கொடுமையில் இவரது குடும்பங்கள்
    கூழுக்கு அலைகிற கொடுமைகள் பெற்றினும்
    பாரதப் பரம்பரை பண்புடன் வாழவே
    வீரவிடு தலையைத்தான் வேண்டியே பெற்றனர்!

    பாரத பூமியோ பசுமையில் செழித்தநல்
    நீர்வளம் மிகுந்ததோர் நித்திய சுமங்கலி !
    ஞானத்தில் ஓங்கிய ஞானியர் உள்மனம்
    நாடிடும் ஈசனை நமக்குள்ளே காட்டிடும்
    பக்தியில் மிகுந்தநற் பண்புள்ள நாடிது !
    எத்தனை வேற்றுமை இருந்திட்ட போதிலும்
    ஒருமுகமாய் எல்லோரும் ஒருகுலமாய் நின்றுகொண்டு
    வருவதனைத் தன்னாட்டின் வளமான மேன்மைக்காய்
    சூழ்சிகளை விரட்டியும் சோதனையே வந்தாலும்
    வாழ்த்தியும் வணங்கியும் “வந்தேமா தரத்தினை”
    ஓதியும் தரமுடனே ஒளிமிகுந்த உளத்துடனே
    சாதிமத பேதமின்றி சரிநிகராய் வாழ்ந்தனர் !

    இரவுபகல் பாராமல் செய்துவந்த தியாகத்தால்
    வரவெனநம் சுதந்திரம் வந்ததே இப்படித்தான்!
    தியாகத்தின் பரம்பரை திரும்பியே பார்க்கையில்
    மாயமாய்ப் போனதே மண்ணினது பக்திதான்!

    ஊழலே இன்றெங்கும் ஊர்வலமாய்ச் சுற்றியே
    வாழலாம் வாவெனவே வாசலில் கூவுதே !
    தியாகியின் பிள்ளையே திருடரின் தலைவானாய்ப்
    போகிறான் இன்றிந்தப் புண்ணியமாம் பூமியிலே !

    பொய்களும் கரும்பணப் புழக்கமும் கொடுமைக்
    கைகளாய் நீண்டதோர் கயமைமிகு நாடென
    மாறியே போனதை மறைக்கவா சொல்வது?
    காறியே உமிழாதோ கண்ணிய நல்மனங்கள்!

    பத்திரிக்கை கூடத்தான் பகல்வேடம் போடுதய்யா !
    இத்தனையும் மீறியிங்கே எவனோதான் துணிந்தெழுந்து
    உண்மையை எழுதினாலோ உதைபடுவார் என்கிற
    கண்ணியங் குறைந்தகீழ் கயமையாய்ப் போனதே !

    பிஞ்சான மனங்களைப் பிரியமாய்க் கவர்ந்தே
    நஞ்சினைப் பாய்ச்சும் கல்வியின் திட்டங்கள்!
    நுனிப்புல்லை மேய்கின்ற நூலாளர் கூட்டத்தைப்
    பணியிலே அமர்த்திய பாபத்தின் சுமைகளுக்கு
    இக்கால இளைஞர்தான் எதிகாலம் தவித்திடுவார் !
    தக்கதோர் கல்வியைத் தரும்சூழல் நிலைஇல்லை!
    நிறைகளைக் காணாமல் நீசரின் செயல்களால்
    குறையேதான் கண்டானிக் குருடனென எவறென்னைப்
    பழித்தாலும் எனக்கொரு பாதகமும் இல்லையடா !
    சுழித்தோடும் காலத்தின் சூக்குமத்தை கவிதையாய்ப்
    படிக்கின்ற பேறுபெற்றேன்! பளிச்செனச் சொல்லவே
    பிடித்தஎன் பேனாவோர் பேரமும் பேசாது!

    தேசம் எனது தேசம் -அதில்
    நாசம் விளைதல் நன்றோ? – யாரும்
    கூசும் செய்கை கூடிப் போனால்
    தேசம் என்ன தேசம்?”

    அந்தக் கவியரங்கம் முடிந்து அனைவருக்கும் வயிறார உணவு பரிமாறப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்த அனைவரிடமும் நா.பா. மிகுந்த வாஞ்சையோடு பேசிகொண்டிருந்தார். அவனிடம்,” நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்கள்?” என்றார். “காட்பரீஸ் கம்பெனியில்” என்றான். உடனே அவர்,” உங்களுக்கு ஆதிலக்ஷ்மணனைத் தெரியுமா” என்றார். “தெரியும். அவர்தான் எனக்கு வேலை வாங்கித்தந்தார்” என்றான். ஆதிலக்ஷ்மணன் அந்தக் கம்பெனியில் உயர் அதிகாரியாகப் பணியில் இருந்தவர். நா.பா.வின் நெருங்கிய நண்பர். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்திற்கும் தலைவராக இருந்து, தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், நாடகக் கலைஞர்களையும், பேச்சாளர்களையும் தமிழ்ச் சங்கத்திற்கு அழைத்துப் பெருமைப் படுத்தியவர். அவரைப் பற்றி அவன் தனியாகவே இங்கே ஒரு அத்தியாயத்தில் பதிவு செய்ய இருக்கிறான்.

    09.07.2015 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

     படம்  உதவி   “, கிச்சாப்பூ” . நன்றி.

    Share