– தேமொழி.
பழமொழி: யாப்பினுள் அட்டிய நீர்
நூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள்
தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர்; அஃதன்றிக்
காப்பி னகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
நூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துள்
தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,
காப்பின் அகத்து இருந்து, காய்வார் மிக உரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர்.
பொருள் விளக்கம்:
போரில் பிறர் வென்றாலும், தான் வென்றாலும் (என வெற்றி யாருடையதாக இருப்பினும்), கொடிய போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவரே வீரர் எனக் கூறத் தகுதியுடையவர். அவ்வாறின்றி, பாதுகாப்பான அரணுக்குள் இருந்துகொண்டு, சினம் கொண்டவர் போல பேசும் வாய்ச்சொல் வீரம் என்பது வயலில் பாய்ச்சிய நீர் (பயிர் வளர உதவுவது போல, பகையென்னும் பயிரை வளர்க்கவே உதவும்).
பழமொழி சொல்லும் பாடம்: அஞ்சாமையுடன் போர்புரிந்து, பகையழித்து வெற்றியை எதிர்கொள்பவரே வீரர்கள் எனப் பாராட்டத் தக்கவர்கள். வாய்ச்சொல் வீரர்கள் உண்மையில் வீரர்களே அல்லர். குறள் கூறும் படைவீரர் கொண்டிருக்க வேண்டிய வீரர்களது பண்பாகக் குறிக்கப்படுவது,
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. (குறள்: 765)
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலைக் கொண்டவரே படையினர் என்பதாகும்.

Leave a Reply