மாதவன் ஸ்ரீரங்கம்.

கதைக்குமுன்பு ஒரு நிமிடம் :
நீங்கள் ஒரு இடத்தில் கண்விழித்து எழுகின்றீர்கள். அப்பொழுது உங்களைச் சுற்றியுள்ளவற்றை பற்றியோ, உங்களைப்பற்றியோ, உங்களுக்கு எதுவும் நினைவிலில்லை. மற்றவர்களுக்கும் உங்களைப்பற்றி எதுவுமே தெரியவில்லை என்றால் …

நீங்கள் என்பது யார் ?

_____________________________________________________________________

இப்போது அவனுக்கு பயமாக இருந்தது.

சுமாராக இரண்டு மூன்றுமணிநேரங்களாக அவன் அந்த கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். அந்த இடம் முழுவதும் மனிதர்களால் நிரம்பியிருந்தது. அங்கிருந்த ஒருவருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. அவர்கள் யாரென்றும் அவனுக்குத் தெரியவில்லை. அவ்வளவு ஏன், அவனுக்கு தன்னைப்பற்றியே யாரென்று தெரியவில்லை. கண்விழித்தபோது கொஞ்சம் குழப்பமாக இருந்தது. பிறகு அது ஒருவகையில் அவனுக்கு சவுகரியமாகவும்கூட இருந்தது. ஆனால் நேரம் செல்லச்செல்ல அவனால் தாங்கமுடியாத அளவிற்கு இது ஒரு பயங்கரமான கனவாக இருக்குமோ என்றுகூடத்தோன்றியது.

அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை வைத்து கொஞ்சம் பயம்விலகி சமாதானமாகிக்கொண்டு மெல்ல எழுந்தான். அங்கங்கே மனிதர்கள் ஆடையேதும் அணியாமல் வெயிலில் குளித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அலைகளில் கால்நனைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அனைவரும் மிக மும்மறமாக மணலில் உருண்டுகொண்டிருந்தார்கள்.

அவன் மெல்ல நடந்து சென்று, தனியாக உட்கார்ந்திருந்த அந்த முதியவரை நெருங்கி எதையோ பேசமுற்பட்டான். குரல் வரவில்லை அவனுக்கு. கிழவர் சலனமின்றி இவனைப்பார்த்துவிட்டு அருகில் அமரச்சொல்லி சைகை செய்தார். இவன் உட்கார்ந்தபடி அவரிடம் கேட்டான்.

“ஐயா இது என்ன இடம் ? நான் யார் ? நீங்கள் யார் ?…”

இவன் கேள்விகளை முடிக்குமுன்பே கிழவர் தடுத்துவிட்டு பேசத்தொடங்கினார்.

“இது ஒரு அடையாளமற்ற இடம். இடத்திற்கு மட்டுமல்ல. இங்கிருக்கும் எவருக்குமே எந்தவித அடையாளமும் இல்லை”

இவன் குழப்பம் இப்போது அதிகரித்தது. புரியாமல் அவரையே பார்த்தான். அவர் மெலிதான புன்னகையோடு தொடர்ந்தார்.

“நீ இந்த இடத்திற்கு வந்து சிலமணிநேரங்கள்தான் ஆகின்றது. அதனால்தான் உனக்கு இன்னும் முழுமையாக இந்த இடம் பற்றிப் புரியவில்லை. அதோ அங்கே பார்”…

அந்தக்கிழவர் கைகாட்டிய திசையில். விதவிதமான பறவைகளும் மிருகங்களும் பிராணிகளும் ஒன்றாக பறந்துகொண்டிருந்தன. நடுநடுவே மனிதர்களும் அவ்வப்போது பறந்துகொண்டும் மிதந்துகொண்டுமிருந்தனர். கிழவர் மறுபடி தொடர்ந்தார்.

“உண்மையில் இந்த இடம் எந்தவிதமான அடையாளங்களுமற்றது. கடல் மனிதர்கள் பறவைகள் மிருகங்கள் குழந்தைகள் கிழவர்கள் போன்ற அடையாள வார்த்தைகளெல்லாம்கூட, இதை எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரின் துயரம் மட்டுமே. மற்றபடி இங்கு எந்த உயிரிலும் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது.

இங்கு எவருக்கும் பசியில்லை தாகமில்லை காமமில்லை முதுமையில்லை நோய்களில்லை மரணமும் இல்லை. இங்கிருப்பவர்களெல்லாம் வெறுமனே இருக்கிறார்கள். அவ்வளவுதான். எவருக்கும் எவரோடும் பேசத்தேவையில்லை. இங்கு இயற்கை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது எப்போதும். உனது வாயைவிட காதுகள் மிகக்கூர்மையானது. உன்பேச்சை விட்டுவிட்டு இந்தக் கடலை, பறவை, விலங்குகளை மனிதரை உற்று கவனி நிறையப் புரியும்”.

அவன் அவரிடம் மிகநிதானமாகக் கேட்டான்.

“ஆனால் எனக்குக் கேள்விகள் வந்துகொண்டேயிருக்கின்றன ஐயா. உதாரணத்திற்கு, நான் யார்?”

கிழவர் பலமாக ஒருமுறை சிரித்தார்.

“அதை பெரிதுபடுத்தாதே. இயல்பில் அது சாத்தியமானதே. உன்னில் மிச்சமிருக்கும் பழைய அடையாளக் கலாச்சாரத்தின் எச்சம்தான் உனது கேள்விகள். இங்கு உனது தொடர்ந்த இருப்பினால் மட்டுமே அவை மறைந்துபோகும் சாத்தியமுண்டு. உனக்கு உன்னைப்பற்றி தெரியாததைப் போலவே எனக்கும் என்னைப்பற்றி எதுவும் தெரியாது. இங்கு வந்த புதிதில் எனக்கும் நான் யார் என்பதில் மிகுந்த குழப்பமும் கேள்விகளும் இருந்தது. தொடர்ந்த எனது பொறுமையின் காத்திருப்பால் கேள்விகள் குழப்பங்களெல்லாம் ஒருநாள் காணாமல் போயிற்று.

இங்கு எல்லோருக்குமே அப்படித்தான். ஆனால் நான், நீ, அவர்கள் என்னும் பண்டைய அடையாள உலகில் அதிக ஆழத்தில், தான் இன்னார் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர்களை, சிறிது அதிககாலம் இந்தக்கேள்விகள் இங்கு துரத்திவரும். நீ விரும்பினால் இங்கு அதற்கும்கூட வழியுண்டு. அதோ. உன் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதற்கான வழி”.

சற்றே தனிமையான மேட்டுப்பாங்கான இடத்திலிருந்த பெரிய மரத்தில் ஒரு ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. கிழவர் சொன்னார்.

“அந்த ஊஞ்சல் ஒரு கால ஊர்தி. அதில் உட்கார்ந்துகொண்டு ஆடத்துவங்கினால், நீ விரும்புகின்ற உனது பிறவிகளுக்கெல்லாம் அது உன்னை அழைத்துச்செல்லும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள். உனது எந்தப்பிறவியிலும் எவரோடும் பேசிவிடாதே. பிறகு நீ அங்கேயே தங்கிவிடுவாய். பலவிதமான பிறவிகளின் தொடர்ந்த சலிப்பினால்தான் நீ இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய்.

வலிகளும், புன்னகையும், காதலும், நோய்களும், முதுமையும், சூழ்ச்சிகளும், பொய்களும் தொடர்ச்சியாக உன்னை வறுத்தெடுத்ததாலும், நீ ஆத்மார்த்தமாகவே அவற்றையெல்லாம் கடந்துவிட விரும்பியதாலும்தான் இங்கு வந்திருக்கிறாய். இவையெல்லாம் பலகோடி ஆண்டுகளாக படிப்படியாக நிகழ்ந்தது. ஒருவேளை ஏதேனும் பிறவியில் நீ சிக்கிக்கொண்டால், மறுபடி இங்கே வர பலநூறுகோடி ஆண்டுகள் ஆகக்கூடும் ஜாக்கிரதை.”

இப்போது அவன் மிகப்பெரிய நிம்மதியை உணர்ந்தான். சற்றே யோசித்துப்பார்த்ததில், உண்மையில் அவனுக்கு இங்கு என்ன குறை ? கிட்டத்தட்ட மாலை வந்துவிட்டது. சிலமணிகளில் இருட்டிவிடும். இதுவரை பசியென்ற உணர்வே தோன்றவில்லை அவனுக்கு. உடலின் எடையைக்கூட உணரவில்லை. மிக எளிமையாகச் சொன்னால், அவனுக்கு இங்கு தேவையென்றே எதுவுமில்லை. நிம்மதியும் திருப்தியும் சுதந்திரமாகவுமாக இருக்கின்றான். இங்கேயே இப்படியே எந்த அடையாளமுமற்று இருந்துவிடவே அவனுக்கும் விருப்பமிருந்தது.

ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, தான் யார் என்று தெரிந்துகொள்ளும் தீராத உந்துதலில் அவன் ஊஞ்சல் நோக்கி நகர்ந்தான். இப்போது அங்கிருந்த மனிதர்களெல்லாம் நடுவில் நெருப்பிட்டு அதைச்சுற்றிவந்து நடனமாடினார்கள். அவர்கள் கைகள் ஒருவருக்கொருவர் சங்கிலிபோலப் பிணைத்திருந்தார்கள். அவர்களது நடனத்தின் லயத்தை ரசித்தபடியே அவன் ஊஞ்சலி உட்கார்ந்துகொண்டான். அவர்கள் இன்னும் பரவசமாக ஆடினார்கள். அந்த நெருப்பின் ஜ்வாலையும்கூட அவர்களோடு சேர்ந்து ஆடியதுபோலத்தோன்றியது அவனுக்கு.

மெல்ல ஊஞ்சல் ஆடத்தொடங்கியதும் அவனைப் பிறவிகள் ஆக்கிரமித்தன. மாறிமாறி அவன் பல பிறவிகளுக்குள் பிரவேசித்தான். ஒரு பிறவியில் அவன் டைனோசராய் இருந்தான். இன்னொன்றில் அவன் எறும்பாய் இருந்தான். மற்றொன்றில் அவன் அலெக்ஸாண்டராய் இருந்தான். ஒரு விஞ்ஞானியாக, கிழவியாக, புல்லாக, பாம்பாக, உருவமற்ற பிண்டமாக, நீக்ரோவாக, ஐரோப்பியனாக, மரமாக, பசுவாக, காகமாக, எழுத்தாளனாக, நடிகனாக, ரசிகனாக, கடத்தல்காரனாக, பாதிரியாராக, நீச்சல்வீரனாக, கொலைகாரனாக, அடிமையாக, மன்னனாக, அலியாக, தவளையாக, பல்லியாக….. அவன் சலித்துப்போனான்.

சபிக்கப்பட்ட இத்தனை பிறவிகளிலிருந்தும் அவனால் தான் யார் என்னும்டையாளத்தை மீட்டுக்கொள்ள முடியாத குழப்பத்திலிருந்தபோது, அவன் பட்டாம்பூச்சியாக ஒரு சிறுவனின் கையில் அகப்பட்டபோது ‘ஐயோ’ என்று கத்திவிட்டான்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *