மாதவன் ஸ்ரீரங்கம்.

சட்டென்று ஏதோ ஒருநாளில் அது நிகழ்ந்துவிட்டது. வானத்தில் நிலாவே வரவில்லை. ஏன் எதனாலென்றெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. நகரம் முழுக்க இதே பேச்சாக இருந்தது. சரி இங்கு மட்டும்தான் இப்படியா என்று தெரிந்துகொள்வதற்காக பக்கத்து நகரத்திற்கு ஆளனுப்பி விசாரித்ததில் அங்கும் இப்படித்தானாம். ஏறக்குறைய எல்லா இடங்களிலுமே இதேகதைதான். மக்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

மீடியாக்கள் அனைத்திலும் இதுதான் செய்தியாக இருந்தது. இணையம் முழுக்க இதுபற்றிய காரண அலசல்களும் காரசார விவாதங்களும் நிகழ்ந்தன. பூமியிலிருந்த கேமராக்கள் அனைத்தும் வானைநோக்கி குறிபார்த்து காத்திருக்கத் துவங்கின.

ஒட்டுமொத்தமாக ஏதோ தெய்வகுத்தமாக இருக்கக்கூடுமென்று அங்கங்கு ஊர்களிலுள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நிகழ்த்தினார்கள். ஒன்றும் பயனளிக்கவில்லை. ஏதோ மாபெரும் சாபம் பூமிமீது கவிழ்ந்திருக்கிறதென்று மக்கள் பீதியிலாழ்ந்தார்கள்.

ஆள்பவர்களெல்லாம் அவசரமாக ஐநா சபையில் ஒன்றுகூடி கலந்தாலோசித்தார்கள். தலைக்குத்தலை ஏதேதோ பேசினார்கள், உங்களால்தான் எங்களால்தான் என்றெல்லாம் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள்.

பிறகு ஒரு சாரர் மட்டும் “எழுந்து இதில் அறிவியல் ரீதியிலான பார்வைகள் ஒருபக்கம் தொடரட்டும். மக்களின் புராதன நம்பிக்கைகள்பற்றியும் நாம் யோசித்துப்பார்க்கவேண்டும். எதற்கும் ஆன்மீகத்தலைவர்கள் எல்லோரையும் வரவழைப்போம்” என்றார்கள். அந்தக்கருத்து அனைவருக்குமே ஒப்புதலாக இருக்க. அதிவிரைவாக ஒரு மாநாடு ஏற்பாடு செய்தார்கள்.

கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் யூதர்கள் பவுத்தர்கள் இந்துக்கள் சமணர்கள் இன்னும் என்னவெல்லாம் மதங்கள் உண்டோ அதன் அதிகாரபூர்வ தலைவர்களெல்லாம் அதில் கலந்துகொண்டார்கள். விஞ்ஞானிகளும் ஒரு பக்கமாக சேர்ந்துகொண்டார்கள்.

மதத்தலைவர்கள் அதற்கு காரணிகள் என்னவாக இருக்குமென்று பட்டியலிட்டுக்கொண்டே செல்ல அறிவியல் ஆய்வாள்ர்கள் அதையெல்லா மறுத்தபடி விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பயங்கரமாக பேச்சு நீண்டுகொண்டிருந்தது. ஆன்மீகவாதிகள் கேட்ட சில சந்தேகங்களுக்கு பதில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அப்பட்டமாக ஒப்புக்கொண்டனர்.

யாரும் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை. ஒருசாரர் சொல்வதை மறு சாரர் மறுதலித்தார்கள். சிலர் எழுந்து வெளிநடப்பு செய்தார்கள். கொஞ்சம் பேர் அவர்களை தடுத்தார்கள். பெரிய குழப்பமாக இருந்தது.

சிலர் பலி கொடுக்கவேண்டுமென்று சொல்ல. எதை பலியாக கொடுப்பதென்பதில் கருத்துவேறுபாடுகள் நிலவின. நாம் நாகரீகமனிதர்கள் எனவே நரபலியெல்லாம் கூடாதென்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள். ஆடு மாடு பன்றி கோழி என அவர்வர் சூழலியலுக்கு ஏற்ப விலங்கினங்களை பலியிடலாமென்று சொல்ல, புளூகிராஸ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தார்கள்.

கொசகொசவேன பேச்சு நீண்டதே ஒழிய முடிவிற்கு வந்தபாடில்லை. கடைசியாக பிரார்த்தனைதான் ஒரேவழி. ஒரு குறிப்பிட்ட நாளில் கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று முடிவிற்குவந்தார்கள். ஏறக்குறைய எல்லோருக்குமே அதில் சம்மதமாயிருந்தது. அடுத்தவாரத்தில் ஒருநாளில் மாலை ஆறுமணியை பிரார்த்தனைக்கான நேரமாக அறிவித்து மாநாட்டை கலைத்துச் சென்றார்கள்.

குறிப்பிட்ட அந்த நாளில், மிகச்சரியாக பூமியிலுள்ள அனைவரும், பிரார்த்தனை செய்தார்கள். எல்லாம் முடிந்து இருண்டபிறகு நிலா வருமென்று ஆவலுடன் பார்க்க கடைசிவரை வரவேயில்லை நிலா.

மக்கள் நொந்துபோனார்கள். கவிஞர்களில் பாதிபேர் தற்கொலை செய்துகொண்டார்கள். மீதிபேர் பைத்தியம் முற்றிப்போனார்கள். அம்மாக்கள் சோறூட்ட நிலா இல்லாததால் குழந்தைகள் சாப்பிடாமல் மெலிந்தன. வடை சுடும் பாட்டிகதையெல்லாம் வழக்கொழிந்து போய்விடுமே என்று சிலர் வருந்தினார்கள்.

காதலிகளெல்லாம் காதலர்களிடம் நிலாவை கொண்டுவா காதலிக்கிறேன் என்று கேலி பேசினார்கள். இரவுகள் பயங்கரமாக அச்சமூட்டின. மனிதர்கள் சமநிலையிழந்து வெறிகொண்டு ஒரு மார்க்கமாக அலைந்தனர். அங்கங்கே நிலாவை திரும்பக்கொண்டுவரும்படி அரசை வற்புறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்கள்.

அரசு மக்களை சமாதானம் செய்ய கண்துடைப்பிற்காக நிலா மீட்புக்கமிட்டி ஒன்றினைத் துவங்கி, இன்னும் சில நாட்களில் நிலாவை கொண்டுவந்துவிடுவோம் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் வன்முறைகளும் சூறையாடல்களும் நிகழ்ந்தன.

சர்வதேச நாடுகள் மறுபடி ஐநா சபையில் ஒன்றுகூடி விவாதித்தபோது நாசா மையத்தின் தலைவர் ஆண்டர்சன் ஒரு கட்டுரை சமர்ப்பித்தார். அதன்படி, முறையாக நிலவைப்பற்றி ஆய்வுகள் தொடரும் அதேபட்சத்தில் மக்களை கட்டுக்குள் கொண்டுவர வானில் ‘செயற்கை நிலா’ ஒன்றினை தற்காலிகமாக நிறுவுவதுதான் ஒரே வழி என்றார். அதற்கு ஆகக்கூடிய செலவுகள் பற்றிய பட்ஜட்டினையும் சமர்ப்பித்தார்.

கொஞ்சம்போல சலசலப்புகளிருந்தாலும் பெரும்பாலானோர் இந்த பிராஜக்டிற்கு ஒப்புக்கொண்டனர். அனைத்து நாடுகளும் ஏதேதோ பொய்யான காரணங்கள் கூறி பிராஜக்டிற்காக பலகோடி டாலர்கள் நிதி ஒதுக்கின. நிதிகளை ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து நாசாவிடம் ஒப்படைக்கும் பொறுப்பையும் ஐநா செவ்வனே செய்தது. ஐநா தலைவர், நாசாவின் தலைவர் ஆண்டர்சனிடம் சொன்னார். “சொன்னபடியே ஒரு மாதத்தில் பிராஜக்டை முடித்துவிடுங்கள்”

பிறகு சர்வதேச தலைவர்களும் அறிக்கை விடுத்தார்கள். “நிலாவினை கண்டுபிடித்தாயிற்று. இன்னும் ஒரு மாதத்தில் நிலா உதிக்கும். அதுவரை பொறுமையாக இருப்போம்” என்று.

___________________________________________________

கிளைமாக்ஸ் பூஜ்யம் :

சொன்னபடியே ஒரு மாதத்தில் நிலா உதிக்க, மக்களெல்லாம் மறுபடிப் பழையபடி தங்கள் பிரச்சனைகளுக்கு திரும்பினார்கள்.

___________________________________________________

கிளைமாக்ஸ் ஒன்று :

ஆண்டர்சன் மதுக்கோப்பையை நாசாவின் தலைமை விஞ்ஞானி ஜான் பீட்டரிடம் கொடுத்துவிட்டு சொன்னார்,

“சக்ஸஸ் ஜான். உனக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும். நீ மட்டும் சரியான சமயத்தில் தகவல் சொல்லாமலிருந்தால், நம்மால் இத்தனை கோடி கோடி டாலர்கள் சம்பாதித்திருக்க முடியாது”

ஜான் பதிலுக்கு சொன்னார்.

“இதில் என் பங்கு என்று எதுவுமே இல்லை. விண்கல் ஒன்றின் நகர்வை கவனித்து, அது பூமிக்கும் நிலவுக்குமான பாதையில் வருகையில், சில மாதங்களுக்கு பூமியிலிருந்து நிலா மறைந்துபோகலாம் என்றுதான் சொன்னேன். இதை மட்டும் வைத்துக்கொண்டு இத்தனை பெரிய திட்டம் தீட்டியது உங்கள் மூளைதான் சார்”

“வியாபார மூளை என்று சொல் ஜான்”

“உண்மை உண்மை. எல்லாம் சரி. நிஜத்தில் நிலா வெளிப்பட்டபிறகு நாம் உருவாக்கியதாக புரளி செய்த செயற்கைநிலாவும் சேர்ந்தால் இரண்டு நிலாக்கள் அல்லவா தெரியவேண்டும் ? வானில் ஒன்றுதானே தெரியும் ? ஐநாவில் இதை கேட்கவில்லையா”?

“அதெல்லாம் முன்பே யோசித்து சமாளித்துவிட்டேன் ஜான். நாம் உருவாக்கியதாகக் கூறிய செயற்கை நிலா நிஜமான நிலா உதித்ததும் தானாக மறைந்துவிடும் என்று கூறிவிட்டேன். அதுமட்டுமல்ல. பார்வையைவிட்டு மறைந்தாலும் கூட அது ஆபத்தானது, அதை அகற்றவேண்டும் என்று கூறி அதற்கான பலகோடி மில்லியன் டாலர்களுக்கான பிராஜக்டையும் சமர்ப்பித்தாயிற்று”

“ஆஹா பிரமாதம் பிரமாதம்” என்று புகழ்ந்த ஜான் மறுநாள் ஒரு கார் விபத்தில் இறந்துபோனார்.

___________________________________________________

கிளைமாக்ஸ் இரண்டு :

விண்வெளியில்,

லூ அவளை அழைத்தான்.

“மீ இங்கே வா. தலைவர் திரையில் வந்திருக்கிறார்”

மீ அவசரமாக திரைமுன்பு வந்தாள்.

“எல்லாம் தயாரா”?

“தாயார் தேவரே”

“பிரஜைகளின் மனநிலை”?

“வழக்கம்போலத்தான் தேவரே. மனம் சமநிலையை இழந்துவிட்டார்கள்”

“சரி நல்லது. டெஸ்ட்ராய் தி எர்த்”

மீ கணினியை நெருங்கி ஏதோ ஒரு பட்டனை தட்டிவிட்டு தன் பர்சனல் பேடில் எழுதிக்கொண்டாள்.

‘பிராஜக்ட் 44445555500000 கம்ப்ளீட்டட்’

___________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.