சு.கோதண்டராமன்

vallavan-kanavu11

லகுலீசர்

 

நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம:

நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யாம் உத தே நம:

-ஸ்ரீருத்ரம்

ருத்திரனின் கோபத்துக்கு வணக்கம், அவரது அம்புக்கும், வில்லுக்கும்

கைகளுக்கும் வணக்கம்.

புலவர் பரிசு பெற்றுக் கொண்டு போன எட்டாம் நாள் அரசவைக்கு ஒரு வடதேசப் பிராமணர் வந்தார். அவரது தோற்றமே வித்தியாசமானதாக இருந்தது. சோழியர்களைப் போல் அல்லாமல் அவரது உடல் நல்ல சிவந்த நிறமாக இருந்தது. சோழநாட்டில் பிராமணரும் பிறரும் குடுமியை முன்பக்கமாக நெற்றிக்கு மேல் அலங்காரமாக இருக்கும்படி முடிந்துகொள்வது வழக்கம். இவரோ தலையை முன்பக்கம் மழித்து, குடுமியைப் பின்பக்கம் முடிந்துகொண்டிருந்தார். சோழியர்களின் நெற்றியை அலங்கரித்தது ‘ப’ வடிவச் சந்தனக் கோடு. இவரோ சாம்பலைக் குழைத்து படுக்கைவாட்டில் மூன்று கோடுகளாக அணிந்திருந்தார். சோழியர்கள் வேட்டியைத் தட்டாடையாக  அணிவது வழக்கம். இவர் ஒரு நீண்ட வேட்டியின் முனைகளை விசிறி மடிப்பாக மடித்து முன்புறமும் பின்புறமும் சொருகியிருந்தார்.

அரசர் அவரை வரவேற்று இருக்கையில் அமரச் செய்து, “எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கு வந்த நோக்கம் என்ன?” என்று விசாரித்தார். வந்தவர் பேசத் தொடங்கினார்.

“நான் அவந்தி நாட்டிலிருந்து வருகிறேன். எங்கள் பேரரசர் நரசிம்மகுப்தர் பாடலிபுத்திரத்தில் உள்ளார். அவந்தியின் தலைநகரான உஜ்ஜயினியில் எங்கள் சிற்றரசர் அக்னிகுப்தர் ஆட்சி செய்கிறார். பர்த்ருஹரி, காளிதாஸர் போன்ற பல புகழ்பெற்ற கவிஞர்களும் ப்ரம்மகுப்தர், பாஸ்கராசார்யர் போன்ற கணித அறிஞர்களும் தோன்றிய பூமி உஜ்ஜயினி. அங்கே சில காலமாக செல்வாக்குடன் வளர்ந்து வரும் ஒரு சமயத்தைப் பற்றித் தங்களுக்குத் தெரிவிக்கவே வந்தேன்” என்றார். அரசர் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டார்.

“உஜ்ஜயினிக்கு தென்மேற்கில் நர்மதை நதிக்கு வடக்கில் காயாவரோகணம் என்னும் ஒரு சிறு நகரம் உள்ளது. அதன் பெயருக்குக் காரணமானவர் ஒரு மகான். யுவா சர்மா என்ற பெயர் கொண்ட அவர் 16 வயதாக இருக்கும்போது மரத்திலிருந்து தவறி விழுந்தார். நீண்ட நேரம் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால் அவர் இறந்து விட்டார் என்று எண்ணி அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று சிதையில் கிடத்தித் தீ வைத்துவிட்டு வந்து விட்டனர்.

உண்மையில் அவர் இறக்கவில்லை. சூடு பட்டதும் அவருக்குப் பிரக்ஞை வந்தது. கை கால்களை உதறிக்கொண்டு சிதையிலிருந்து வெளிவந்தார். தீ நேரடியாகப் பட்டதால் நெஞ்சுப் பகுதி மட்டும் கறுத்துவிட்டது. மற்றபடி அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் எங்கிருக்கிறோம் என்று உணரச் சிறிது காலம் பிடித்தது. தான் இறந்துவிட்டதாக எண்ணி உறவினர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்தார். தான் இறக்கவில்லை என்று அறிந்தால் அவர்கள் மகிழ்வார்கள் என்று எண்ணி வீடு நோக்கி நடந்தார். நரிகள் கூட்டமாக அவரைச் சூழ்ந்து கொண்டு வேட்டையாடத் துடித்தன. அவற்றை விரட்டுவதற்காக அங்கு கிடந்த பாடையின் மூங்கிலைக் கையில் எடுத்துக் கொண்டார். சிதையில் வைக்கும்போது உடலிலிருந்து ஆடையை அகற்றிவிடுவது வழக்கம். எனவே அவர் நிர்வாணமாகவே நடந்தார். அவரை ஊர் எல்லையில் கண்ட உடனேயே எல்லோரும் யுவா சர்மாவின் ஆவிதான் பேய் வடிவில் வந்துள்ளது எனப் பயந்து ஓடத் தொடங்கினார்கள். தன் வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டார். உள்ளிருந்து எவரும் வெளிவரவில்லை. இவருக்கோ பசி. உணவிடுங்கள் அம்மா என்று கூவிக் கொண்டே தெருத்தெருவாக அலைந்தார். எவரும் கதவு திறக்கவில்லை. நம் கதி இப்படியா ஆகவேண்டும் என்று நொந்துகொண்டு மீண்டும் சுடுகாட்டிற்கே போனார். பசி மிக வாட்டியது. இங்கு கிடைக்கும் இலை எதையாவது தின்போம். பசி தீரலாம். விஷச் செடியாக இருந்தாலும் நல்லதுதான். உண்மையாகவே உயிர் போய் விடும் என்று தீர்மானித்து அங்கிருந்த ஊமத்தைச் செடியின் இலைகளைப் பறித்து வயிறு கொண்ட மட்டும் தின்றார். சற்று நேரத்தில் அவருக்குக் கனவா, மயக்கமா, உறக்கமா என்று புரியாத நிலை ஏற்பட்டது.

அந்நிலையில் அவருக்கு ஒரு மானதக் காட்சி தோன்றியது. ஒரு பெரிய மலை. அதன் உச்சியில் பனி படர்ந்திருக்கிறது. அதன் கீழ்ப் பகுதிகளில் அடர்ந்த காடு. அழகாகவும் காணப்படுகிறது, அச்சம் தருவதாகவும் இருக்கிறது. அங்கே ஒரு ஆறு பெருக்கெடுத்துக் கீழ்நோக்கி இறங்குகிறது. சற்று நேரத்தில் அந்த மலை ஒரு மனித உருவாக மாறுகிறது.  மலை உச்சி தெரிந்த இடத்தில் பிறைச் சந்திரன் தெரிகிறது. காடு அவரது சடையாக மாறுகிறது. அந்த ஆற்று நீர் அவரது சடை மேல் கொட்டிக் கொண்டிருக்கிறது. அவருடைய இடப்பக்கம்  பெண் உருவமாக இருக்கிறது. அவரைச் சுற்றிப் பல விதமான மிருகங்கள் நிற்கின்றன. அவரது கையில் வில் கத்தி போன்ற பல ஆயுதங்கள். அச்சம் தரும் இந்தத் தெய்வம் யார் என்று இந்த இளைஞர் திகைத்து நின்றபோது அவர் கற்ற வேதம் நினைவுக்கு வந்தது. ஆம், இது ருத்ரன்தான். உடனே அவர் நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம: என்று ருத்ர மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். காட்சி மறைந்தது. அவருக்குச் சுய நினைவு வந்தது. அது முதல் அவருக்குப் பசி உணர்வே அற்றுப் போய் விட்டது. ஊர்ப் பக்கம் போக வேண்டிய தேவையும் இல்லாமல் போயிற்று. கள்ளிச் செடிகள் சூழ்ந்த சுடுகாட்டிலேயே ருத்ரத்தைச் சொல்லிக் கொண்டு நாட்களைக் கழிக்கலானார்.

மக்கள் அவரை மறந்துவிட்டார்கள். நீண்ட காலம் கழித்து ஒரு நாள் அந்த ஊரில் ஒரு பெண்மணி இறந்துவிட்டார். அவரைத் தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் சுடுகாட்டுக்கு வந்தது. மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் வெய்யில் நேரத்தில் ஒரு ஆலமரத்தடியில் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் நடுவே ஒரு கல்லின் மேல் யுவா சர்மா ஆடையில்லாமல் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்த உடன் தூக்கி வந்தவர்களும் பிறரும் பாடையைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இறந்தவரின் மகன் மட்டும் தீச்சட்டியுடன் செய்வதறியாது திகைத்தும் பயத்தால் நடுங்கிக் கொண்டும் நின்றான்.

யுவா சர்மா அவனைப் பார்த்து, “பயப்படாதே, நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்” என்று கூறினார். அவன் சற்றே தைரியமடைந்து கீழே கிடந்த தன் தாயின் உடலைப் பார்த்தான். யுவா சர்மா அருகில் சென்று அந்தப் பிரேதத்தைத் தூக்கிச் சிதையில் வைத்து உரிய மந்திரங்களைக் கூறி, அவனைக் கொண்டு எரி மூட்டச் செய்தார்.  தன் கடமை நிறைவேறியதில் திருப்தி கொண்ட அவன் அவரை நன்றியுடன் வணங்கினான்.

அவன் ஊருக்குள் சென்று சுடுகாட்டில் நடந்ததை எல்லாம் விவரித்தான். ஊர் மக்கள்  தைரியம் அடைந்து ஒவ்வொருவராகச் சுடுகாட்டுக்கு வந்து இவரைப் பார்த்துப் பேசத் தொடங்கினர். இவரும் தனக்கு ஏற்பட்ட மானதக் காட்சியையும் பசியில்லாமல் போனதையும் வந்தவர்களிடம் தெரிவித்தார். ருத்ரனே இவருடைய இறந்துபோன உடலில் வந்து இறங்கியதாக ஊர் மக்கள் நம்பினர். இந்த நிகழ்வை காயாவரோகணம் (உடலில் இறங்குதல்) என்று கொண்டாடினர். அதனால் அந்த ஊரின் பெயரே காயாவரோகணம் ஆயிற்று. அது சுருங்கி இப்பொழுது கார்வான் என்று அழைக்கப்படுகிறது.

யுவா சர்மாவை ஊருக்குள் அழைக்க எவரும் துணியவில்லை. அவரைத் தெய்வமாகக் கருதி சுடுகாட்டுக்கு வந்து வணங்கினர். கையில் கோல் வைத்திருந்ததால் அவரை லகுலீசர் என்று அழைத்தனர். அவரது பழைய பெயர் மறைந்து விட்டது.

தனக்குக் காட்சி தந்த பசுபதியை ருத்ரம் முதலான வேத மந்திரங்களைக் கூறி வழிபடுமாறு அவர் உபதேசித்தார். அவரது போதனைகள் பாசுபதம் எனப்பட்டன. பலர் அவருக்குச் சீடர்கள் ஆயினர். அவர்கள் பாரதத்தின் பல பகுதிகளுக்கும் சென்று அவரது போதனைகளைப் பரப்பினர். தமிழ்நாட்டுக்குக் கூடச் சிலர் வந்திருக்கிறார்கள். இதெல்லாம்  நடந்து இருநூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.  காலப்போக்கில் அவரது போதனைகள் உருமாறின. லகுலீசர் நெஞ்சு கறுப்பாக இருப்பதை நினைவூட்டும் வகையில் சிலர் தங்கள் முகங்களில் கரி பூசிக் கொண்டு திரிந்தனர். அவர்கள் காலாமுகர்கள் என அழைக்கப்பட்டனர். காபாலிகர் எனப்பட்ட வேறு சிலர் உடம்பெல்லாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து திரிந்தனர். இதனால் லகுலீசரின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.”

வடதேச பிராமணர் நிறுத்தினார். அரசருக்குப் பனி மூட்டம் கலைந்து சூரிய உதயம் ஆனாற்போல இதுவரை புரியாத பல விஷயங்கள் புலப்பட்டன. புறநானூறு முதலான தமிழ் நூல்களில் நீல மணி மிடற்றன், கள்ளிக் காட்டில் அமர்ந்திருப்பவர், ஆலமர் செல்வன், விடையேறி என்று குறிப்பிடப்படும் தெய்வம் லகுலீசரின் சீடர்கள் பரப்பிய தெய்வமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. லகுலீசர் 16வது வயதில் யமன் பிடியிலிருந்து மீண்டது இங்கு மார்க்கண்டேயன் கதையாக உருமாறி இருக்கவேண்டும் என நினைத்தார். அதுவே இறைவன் யமனைக் காலால் உதைத்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லகுலீசர் உணவு தேடி ஒரு நாள் ஆடையில்லாமல் பிச்சை எடுக்கச் சென்ற நிகழ்ச்சியை இறைவன் பலி ஏற்றுத் திரிவதாக அம்மையார் குறிப்பிட்டுள்ளார். லகுலீசர் நெஞ்சில் தீ சுட்டுக் கறுத்தது நஞ்சு உண்டு அவர் கழுத்துக் கருமை அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அம்மையாருக்கு உபதேசம் செய்தவர் லகுலீச சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். செவி வழிச் செய்தியாகப் பரவும்போது கால தேச இடைவெளி காரணமாக இவை சில சில மாற்றங்களை அடைந்துள்ளன என்று நினைத்தார் அரசர்.

 தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வளவன் கனவு-6

  1. அத்தியாயம் மிகவும் சிறியதாக இருக்கிறது. இன்னும் சற்று பெரியதாக இருக்கலாமே? பார்த்தசாரதி களப்பிரர்களிடமிருந்து பாண்டியன் தன நாட்டை மீட்பதை ‘நித்திலவல்லி’ எனும் புதினமாக எழுதியிருப்பார். ஆனால், இதுவரை யாரும் களப்பிரர்கள் எப்படி தமிழகத்தை கைப்பற்றினார்கள் என்பதைப் பற்றி எழுத முன் வராதது ஏன் ? உங்களது கதையும் கலப்பிறரிடமிருந்து சோழன் தன் நாட்டை மீட்பதைப் போன்றுதான் இருக்கப் போகிறது என்று எண்ணுகிறேன். ஆங்கிரசு பிரமராயர் அவந்தியிலிருந்து வேதம் அறிந்தவர்களை அழைத்து வந்து சோழ நாட்டில் குடியேற்றி அவர்கள் மூலம் மக்களுக்கு வேதத்தைக் கற்பித்து மக்களை வீரமானவர்களாக மாற்றி களப்பிரரை விரட்டுவதைப் போன்று எழுதப் போகிறீர்கள் என எண்ணுகிறேன் நான்.

    களப்பிரர் காலம் இருண்ட காலம் என அழைக்கப்பட இரண்டு காரணத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்!

  2. நடுநிலையில் புதினத்தை எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *