வையவன்

எங்கே போவாய் சிவா? அந்தக் கேள்வி கூடவே அவனுடன் நடந்து வந்தது.
அதிகாலையில் சிவா மெரீனாவிற்குப் போனான். ‘வாக்கிங்’ பயிற்சிக்கும் ஓட்டப் பயிற்சிக்கும் ஆண்களும் பெண்களும் கடற்கரைச் சாலையில் சுறுசுறுப்பாக நடந்தார்கள். ஓடினார்கள்.

அவன் மைலாப்பூரில் நர்ஸிங் ஹோமிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டான்.
புறப்படும் போது பிரீதா கேட்டாள்.

“தெரியலே…எங்கேயோ போகணும் போலிருக்கு!”
“டிபன் சாப்பிட வந்துடு. எனக்கு காலைலே டூட்டி புட்டு செஞ்சு வச்சுட்டுப் போறேன். வந்து சாப்பிடு. இந்தா டூப்ளிகேட் சாவி!”
பிரீதா நீட்டியபோது வாங்க மனமில்லை.

“எங்க போறேண்ணே தெரியலே. எப்ப வருவேண்ணும் தெரியாது.”
“பரவால்லே. எங்கிட்டே வேறே ‘கீ’ இருக்கு”
“ஒருவேளை நான் ஊருக்குப் போய்ட்டா…?”
“நானும் ஊருக்கு வருவேன்”
அவன் பிரீதாவை நிமிர்ந்து பார்த்தான்.

“யூ நோ! எனக்கு எப்படி இருக்கும்ணு நீ யோசிச்சியா?”
அவள் கண்கள் கலங்கின. தளும்பி நின்ற அந்த கறுப்பு ஊற்றுக்களின் கீழே சமுத்திரம் குமுறிக் கொண்டிருக்கிறது.

“என்னைப் பத்தி யோசிக்கவே மறந்துட்டே இல்லை?”
மெய்தான். சிவா யாரைப் பற்றியும் யோசிக்க மறந்து விட்டான். விழுந்த அடி அவன் முதல் அனுபவம்.வழங்கப்படுகிற எந்த பாதுகாப்பும் எந்த ஆறுதலும் எந்த உறவும் எப்போதும் எந்த வினாடியிலும் ரத்து செய்யப்படும் என்ற கொடூரமான உண்மை தான் எல்லாவற்றிற்கும் அஸ்திவாரமாக நிற்கிறது.

அது அவனைச் சந்தித்துப் போயிற்று. அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட பின்னால் அவனுக்கு யாரைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை.

“எங்கே போவாய் சிவா?”
அதே கேள்வியை திஷ்யாவும் கேட்டாள்.

ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் தாமுவின் உடமைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு, தாமுவின் மாமா வீட்டைக் காலி செய்த பின்பு தனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கேட்டாள்.
“இப்ப பிரீதா க்வார்ட்டர்ஸிலே தங்கப் போறேன். அப்புறம் எங்க போவேண்ணு தெரியலே.”

“மறந்துடுவீங்களா?”
சிரித்துக் கொண்டே தான் கேட்டாள். நெஞ்சைக் குத்தும் சிரிப்பு. கண்ணீரை ரஸவாதம் செய்து வாக்குறுதிகளின் மெருகேற்றிக் கேட்ட சிரிப்பு.

“வேணும்னா சொல்லு! ஐ வில் ட்ரை!
புண்ணியகோடியின் தற்கொலை முயற்சி பற்றிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அவர் பல்லாவரத்திற்கு மாறுதல் வாங்கியிருந்தார்.

குடும்பத்தை அனகாபுத்தூருக்கு மாற்ற வீடு பார்த்துக் கொண்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டி அவன் சொன்னான்.

“நினைப்பு இருந்தா சரி!” அவள் மீண்டும் இடக்கு பேசினாள்.

அவனுக்கு வேடிக்கை பேச மனசில் பசுமையில்லை.

“திஷ்யா… இதை நீ உங்க அப்பாகிட்டே சொல்லு.”
“ஏன்?”
“இப்ப அவர் என்னைப் பார்க்கவே இஷ்டமில்லாதவர் போல போறார்… வர்றார்”
தாமுவின் மரணத்திற்குப் பின்னர் புண்ணியகோட்டி விலகி விலகித்தான் நடந்தார். தாமு என்ற பின்னணி தகர்ந்து போனதும் அவன் தலையீடுகளெல்லாம் பெரும் பிழைகள் என்று அவருக்குத் தோன்றியிருக்குமோ!
ராயப்பேட்டை வாசம் அவரை மனக்கோட்டைகள் இடிந்த மைதான வாசம் மாதிரி மாற்றியிருக்கக் கூடும்.

பாவம்… துரத்துகின்ற நிழலுக்குப் பயந்து எட்டாத கானலுக்கு ஓடித் தோற்றவர்! அவர் மீது அவனுக்கு அனுதாபம் தான் வந்தது.

“கொஞ்சம் இரு சிவா!” திஷ்யா உள்ளே போய் ஒரு வெள்ளைத் தாளில் விலாசம் எழுதிக் கொண்டு வந்தாள்.

“வீடு கெடைச்சுட்டுது. இதான் புது அட்ரஸ். தபால் போடு”
“தபால் தானே… எழுதறேன். எனக்கு விலாசம் கெடைக்கற வரைக்கும் நீ பதில் எழுத வேண்டாம். நான் தபால் எழுதிக்கிட்டே இருப்பேன்.”
“சரி” அவள் நம்பிக்கையோடு சிரித்தாள்.

“எங்கே போவாய் சிவா?” அப்புறமும் கேட்டாள்.
அவன் கைகளை விரித்துக் காட்டி விட்டு வெளியேறினான்.
எங்கே போவாய் சிவா?
அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

மெரீனாவிலிருந்து கரையோரமாக வெயிலை எதிர்பார்த்து விரிந்த வலைகளையும் கட்டுமரங்களையும் கடந்து நடந்தான்.

அலைகள் கரையை விட்டுக் கொஞ்சம் பின் வாங்கியிருந்தன.
கிழக்கே உதயத்தின் முதலாவது முலாம் பூசப்பட்டிருந்தது. இன்னொரு நாள் விடிவதை எதிர்பார்த்துக் கொண்டு மீனவர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர்.

அவன் அலைகள் ஓயாத அந்த ஜீவ இயக்கத்தில் போக்கிடமற்ற ஒரு பயணி போன்று பார்வையாளனாக குறியற்று, நோக்கற்று நடந்தான்.

லைட் அவுஸுக்குப் பின்புறம் உயர உயரமாக நின்ற கயிற்றுக் கருணைகள் வந்ததும் உட்கார் என்று யாரோ உத்திரவிட்ட மாதிரி உட்கார்ந்தான்.
உதயமாயிற்று.

மாணிக்கப் பசும்பொன் போன்று அந்த சிவப்பு வட்டம் கடல் விளிம்பிலிருந்து மெதுமெதுவே விடுதலையாகி சாண் உயர்ந்தது. முழம் உயர்ந்தது. மார் உயர்ந்தது.

இது நேற்றும் வந்தது. உண்டோம். உறங்கினோம். மீண்டும் உதயமாகியிருக்கிறது.
எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்…என்ற தாயுமானவர் பாடல் சரேலென்று நினைவுக்கு வந்தது.

அதே இடத்தில் அமர்ந்து ஒரு சந்திரோதயத்தைத் தரிசித்ததை எண்ணினான் சிவா. அப்போது நினைவில் ஒரு தோணி போல் மிதந்து வந்த வாசகம் ஞாபகமாயிற்று.

விடுதலை பெறுக!
அம்மா, திஷ்யா, பிரீதா.

பெண்களின் பந்தங்கள் தான் தன்னை இறுக்கி யிருந்தன என்று நினைத்திருந்தான் அதுவரை. தாமுவின் மரணம் ஒரே வீச்சில் அந்த நினைப்பை வெட்டி வீழ்த்தி விட்டது. உருவாக்கியது தெரியாமல் அவனை தாமு உருவாக்கியிருந்தான். அந்தக் கரம் வீழ்ந்ததும் தனக்குள் சுற்றிய சக்கரம் நின்று போனதை ஒரு சூன்ய உணர்வோடு அவன் உற்றுக் கவனித்தான்.

தூரத்தில் முதலாவது கட்டுமரம் அன்றைய தினத்தை வரவேற்க கரைக்கு வந்து கொண்டிருந்தது. மீனவப் பெண்களும் குழந்தைகளும் அலைகளுக்கு அஞ்சாமல் அதனருகே ஓடினர்.

இரவைக் கடலின் மடியில் கட்டுச் சோற்றுடன் கழித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.

பசி தீர உண்பதுவும் உறங்குவதுமாக மட்டுமா வாழ்க்கை முடிகிறது?
வேதாந்திகளுக்கும் வாழ்க்கையை உதறிய துறவிகளுக்கும் ஒருவேளை யோசிக்கும் வேளையில் அப்படி முடியலாம்.

ஓர் அலை எதிரில் வந்த கட்டுமரத்தை உந்தி கரைக்குத் தள்ளிற்று.

அதோ பசி தீர உண்பதற்கும் உறங்குவதற்கும் கூட இயற்கையை எதிர்த்து, அலைகளோடும் சுறாக்களோடும் யுத்தம் செய்து நடக்கும் அந்த முயற்சியில் என்ன வேகம்! என்ன விளையாட்டு!

கரையேறுவதற்குச் சாடி வந்த அலை ஒன்று சிலீரென்று அரைந்து தன் நுரைப் பாவாடையை விரித்துச் சிரித்தது. அதற்கு அது தோல்வியோ. அது மீண்டும் வரும். அதற்கு வெற்றியுமில்லே. தோல்வியுமில்லை.

விடுதலை பெறுக.

அவனுக்கு அந்த வாசகம் மீண்டும் ஞாபகம் வந்தது.
அதற்கு அவனுக்கு இப்போது புதுப் பொருள் புரிந்தது.

சார்பு நிலையிலிருந்து விடுதலை பெறுக…நீ எழுந்து உன் சொந்தக் கால்களில் நட… சிவாவுக்கு உடம்பு விறுவிறுத்தது.

தன்னைக் கவிந்திருந்த முட்டையின் கூடு நொறுங்கி வெப்பமும் கடினமும் வாய்ந்த நிலப்பரப்பில் வந்து விழுந்த ஒரு சிலிர்ப்பு தோன்றியது.
திஷ்யா, நான் விடுதலையாய் விட்டேன்.

பிரீதா நான் விடுதலையாகிறேன்.
அம்மா எனக்கு விடுதலை.

தாமு உங்களுக்கு நன்றி. அரவணைத்தீர்கள். ஆதரவளித்தீர்கள். மேலே ஏறு என்று பொறுப்பளித்தீர்கள். அப்பாலே போ என்று அகன்று போய் விட்டீர்கள். நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி.
சிவா வெய்யில் உறைக்கவே எழுந்தான்.

கூழ் மாதிரி ஜெல்லி மீன் மாதிரி நெகிழ்ந்து குழைந்து வந்து அங்கே உட்கார்ந்திருந்து விட்டு மீள எழுந்தபோது எஃகு மாதிரி உறுதியோடு நிமிர்வதை நினைத்தான்.

பதினெட்டு நாட்கள் கழித்து அவனுக்குப் புன்னகை வந்தது.
தான் அப்படி இருந்ததை தாமு ரசித்திருப்பானா?

இல்லை. யார் ரசிக்கிறார்கள்… யார் ரசிக்கவில்லை என்பது இனி எனக்கு அளவுகோல் இல்லை. நான் அப்படி இருந்தது எனக்கு ஒரு தேவை. இந்த விடுதலைக்காக என்னை உதறி என் கட்டுகளை வெட்டியெறிவதற்கு ஒரு தேவை!
அவன் மணலில் வேகமாக நடந்தான்.

கயிற்றுக் கருணை நின்ற அந்த கடற்கரை மூலையிலிருந்து நடக்க நடக்க ஒரு நதி மூலம் உதித்த மாதிரி யோசனைகள் வந்தன. திடமான, ஆண்மை பொருந்திய யோசனைகள் – தீர்மானங்கள்.
இப்போது அவனுக்குப் பசித்தது.

பிரீதா க்வார்ட்டர்ஸுக்குப் போக வேண்டும் போல் தோன்றியது. அவன் வேகமாக நடந்தான்.
அங்கிருந்து புறப்பட்ட சிவா வேறு சிவா. அவனுக்கு மரணம் வழங்கிய அதிர்ச்சி தீர்ந்து வாழ்க்கை வழங்கிய உத்வேகம் நிரம்பிய சிவா.

யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடிந்தாலும் இந்த நாடக அரங்கில் தன் பாத்திரம் என்ன என்று உணர்ந்த சிவா.

அம்மா… வெற்றிவேல்… தாமு… திஷ்யா… பிரீதா எல்லோருமே தனித்தனியாக இதைத்தான் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தார்கள். உணர வேண்டுமென்று ஊதி ஊதி ஓதிக் கொண்டிருந்தார்கள்.
புரிந்து கொள்வதற்கு தாமதமாகி விட்டது.

அவனுக்கு அந்த கடற்கரைக் காற்றைப் போல் மனசு பரிசுத்தமாயிருந்தது. லேசாயிருந்தது.
ஜனனத்தைத் தனியே சந்தித்தேன். மரணமே உன்னையும் தனியே சந்திக்க வேண்டும்! நல்லது; காத்திரு… இந்த இடைவேளையில் எனக்கு ஒரு வேலை இருக்கிறது.

இதோ உருவழிகிற இந்த காலடிச் சுவடுகள் போன்று என் வேலைக்கு எனக்கு அப்புறம் எந்த அடையாளமும் இல்லாமற் போகலாம்! நல்லது. வேலை…வேலை தான் அடையாளம் பதிந்தாலென்ன? அழிந்தாலென்ன?

ஆயிரம் மனப் பிரமைகளுக்கு நடுவில் நேர்கிறது இந்த ஜனனம் என்ற விபத்து. இதற்கு ஆளான கோடிக்கணக்கானவரிடம் எனக்கு ஒரு வேலை உண்டு. என்னிடம் ஒரு பேனா உண்டு.

இயற்கையாகவோ செயற்கையாகவோ இந்த மனிதர்கள் கலைத்துப் பிரித்து ஏற்படுத்தியிருக்கும் சிக்கலில் ஓர் இழையையாவது நேராக்குகிற வேலை கதை சொல்லும் வேலை. சிந்தித்து என் பிரார்த்தனைகளைப் பகிர்ந்து கொள்கிற வேலை.

அக்கரையில் – இல்லை – அடுத்த அசைவிலேயே மரணம் காத்திருக்கிறது. ஆல்ரைட்.
எப்போது வேண்டுமானாலும் அது வந்து என பந்தங்களில் எதை வேண்டுமானாலும் அது பறித்துச் செல்லட்டும். இந்த நிமிஷம்…இந்த வினாடி யெனினும் அதற்கு நானும் தயார்.

அது விட்டு வைக்கிற வரை நான் என் வேலையைச் செய்வேன். சிந்திப்பேன். எழுதுவேன். என்னை வெளிப்படுத்துவேன்.

பிரீதாவின் குவார்ட்டர்ஸுக்கு வெளியே ஒரு கார் நின்றிருந்தது.
யார் வந்திருப்பது?
அவன் படியேறும் போதே கணீரென்ற ஒரு குரல் அவனை வரவேற்றது.
“வா சிவா”
வெற்றிவேல்.

பளபளவென்று கலையாத தலையோடு, இன் பண்ணிய உடையும் பாலீஷ் மின்னும் ஷûவுமாக மின்னிக் கொண்டு கையில் சிகரெட் புகைய அவன் வெளி வராந்தாவில் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.

“எப்போ வந்தே?”
“வழக்கப்படி ஐயாவுக்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன். ஒரு மணி நேரம் ஆச்சு”இந்த அட்ரஸ்?”
“திஷ்யா சொன்னா”
திஷ்யா என்ற பெயரையும் சொன்னாள் என்ற ஒருமையையும் ஒரு சுதந்திரத்தோடு பிரயோகித்ததை சிவா கவனித்தான்.

“நர்ஸம்மா வந்து இங்கே வெய்ட் பண்ணிகிட்டிருங்க. வந்துடுவார்ணு சொல்லிட்டுப் போனாங்க”
“நீ சாப்பிட்டியா… எனக்குப் பசிக்குது” என்று வெறுமனே மூடியிருந்த கதவைத் திறந்து கொண்டே கேட்டான்.

“நான் சாப்பிடல்லே. வா ரெண்டுபேரும் ஒரு ஹோட்டலுக்குப் போவோம். ஒனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கேன்.”

“வெற்றி… எனக்கு ஹோட்டலுக்கு வர்ற அளவு பொறுமை ல்லே. பசி… உயிர் போவுது… உள்ள வா! பிரீதா புட்டு பண்ணி வச்சிருப்பா. உள்ளே பிரெட் பிஸ்கெட் எதாவது இருக்கும். ஷேர் பண்ணிப்போம்.”
“ஆல்ரைட்”
வெற்றிவேல் உள்ளே எழுந்து வந்தான்.

புட்டு வைத்திருந்த பாத்திர மூடியைத் தூக்கிப் பார்த்தான். இரண்டு பேருக்கும் காணாது. அரை லோஃப் ரொட்டி இருந்தது. தொட்டுக் கொள்ள ஜாமோ சாஸோ இல்லை. அது போன வாரமே தீர்ந்துவிட்டது.

புட்டு ஆறி வறவற வென்றிருக்கும். எங்கிருந்தோ தேடி வந்திருப்பவனுக்கு இந்தத் தண்டனை எதற்கு?
சிவா சட்டென்று ஸ்டவ் ஸ்விச்சை “ப்ளக்”கில் செருகினான்.

“என்னடா செய்யப்போறே… சமையலா?”
“பத்து நிமிஷம் உட்காரு. ஒரு டொமாடோ சூப் வச்சுடறேன்.”
“ஹோட்டலுக்கே போயிருக்கலாம்.”

“அங்கே புட்டும் டொமாட்டோ ஸுப்பும் சேந்து கெடைக்காது” என்று முட்டை வைத்திருக்கும் பெட்டியைத் தூக்கிப் பார்த்தான். நல்ல காலம் நாலு முட்டைகள் இருந்தன. வெற்றிவேலுக்கு ஆம்லெட் பிடிக்கும்.

“எங்கிருந்து வந்தே? ஏன் வந்தே?”
“இதான் விருந்தாளிக்கிட்டே பேசற மானர்ஸா?”
“நீ விருந்தாளியில்லே. ஒனக்கு மானர்ஸ் எதுக்கு?”
“சிங்காரப் பேட்டையிலிருந்து புறப்பட்டு வர்றேன். ரிஷிகேஷிற்குப் போய்க்கிட்டிருக்கேன்… ஐம் ஸாரி, போகப் போறோம்.”
“ரிஷிகேஷ்?” சிவா நெற்றியைச் சுருக்கியவாறே திரும்பிப் பார்த்தான்.

“எஸ்…ரிஷிகேஷ்” என்று மீண்டும் வெற்றிவேல் வலியுறுத்தினான்.
“நான் கூடவா?”
“ஆமாம்; நீ கூட”
“அங்கே என்ன விசேஷம்?”
“பாபா ஓம்கார்நாத் கைலாச யாத்திரை தொடங்கப் போறார். அங்கே நண்பன் ஒருவன் கடிதம் எழுதியிருந்தான்.”

பாபா ஓம்கார்நாத் என்ற சொல் ஜிவ்வென்று ரத்த ஓட்டத்தில் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கிற்று. அடுத்த கணமே தன்னை சிவா சுதாரித்துக் கொண்டான்.

“பாபாக்கள் கிட்டேயிருந்தும் ஸ்வாமிஜிகள் கிட்டேயிருந்தும் ஒனக்கு இன்னும் விடுதலை கிடைக்கலியா?”
“பாபாவுக்கு பந்தமில்லை. அவர் கடிதம் எழுதவில்லை. ஒரு ஜெர்மன் நண்பன் எழுதியிருந்தான்.”

“கைலாசத்துக்குப் போறது அவர் பிஸினஸ். அங்கே ஒனக்கு என்ன பிஸினஸ்?”
“ஒனக்குண்ணு சொல்லாதே. நமக்குண்ணு சொல்லு”
“ஆல்ரைட், நமக்கு என்ன பிஸினஸ்.”
“ஒருவேளை அவர் திரும்பாமல் போயிடலாம்.”

“கடவுள் சித்தம். நான் என்ன பண்ண முடியும்? போய்த் தடுக்கலாம்கறியா?”
“முட்டாள்! கடைசியாக.. ஐம் ஸாரி… வழியனுப்புவதற்கு ஒருமுறை போய்ட்டு வருவோம். நீ அவர் மகன்.”
“அது பழைய கதை! மகான்களுக்கு மகன்கள் இல்லை.”
“மகன்களுக்கு தந்தை உண்டு.”

தந்தைக்கும் மகனுக்குமிடையே இல்லாத உறவுக்கு, பொருளிழந்து போன பந்தத்திற்கு வெற்றிவேல் பாலம் போடுவது இது இரண்டாவது முறை. இதில் என்ன இவனுக்கு இப்படி ஒரு சிரத்தை?
“வெற்றிவேல்…” என்று தட்டிய முட்டையை நிறுத்தி அவனை விளித்தான் சிவா.

“ஒனக்கு ஏண்டா இந்த வீண் வேலை?என்ன கண்டுட்டே அந்த பாபா ஓம்கார்நாத்கிட்டே?”
“விடுதலை. அவர் அதோ அந்தப் பறவை மாதிரி… இப்ப பறந்தது பாரு அந்த திக்கு மாதிரி விடுதலையடைந்தவர். ஹி லிபரேடட் மீ… அவர் என்னை விடுதலை செய்தார்.”

“எதிலிருந்து?”
“என் சிறையிலிருந்து…”
“இந்தப் பரிபாஷை வேண்டாம்… பீ பிளெய்ன்…”

“என்னோட அகந்தையிலிருந்து… என் அட்வென் சரிஸத்திலிருந்து…என் வேட்கைகளிலிருந்து”
“நீ விடுதலை ஆயிட்டதா நெனைக்கிறியா?”
“எஸ்… பெருமளவு”
“மீதிக் கொஞ்சம் இருக்கு… இல்லையா?”
“ஆமாம்”

“மை டியர் வெற்றி… இது ஒரு கற்பனை…உன் விடுதலையும் கற்பனை…உன் தளைகளும் கற்பனை. நீ இந்த வெளிநாட்டுப் பேர் வழிகளோடே பழகிப் பழகி அவர்கள் மாதிரி கற்பனையிலேயே காணாமற் போய் கற்பனையிலேயே ஒன்னை மறுபடியும் கண்டுபிடிச்சுகிட்டிருக்கே. அதுக்கு ஒன்னை நீயே கட்டுப்பாடு பண்ணிகிட்டிருக்கே. நீ இழந்திருப்பது உன் சுதந்திரம்.”

புத்திக் கூர்மையோடு சிவா அவனை மடக்குவதைப் புரிந்து கொண்ட மாதிரி வெற்றிவேல் சிரித்தான். சிவா மேலும் தொடர்ந்தான்.

“விடுதலைக்கு விலை சுதந்திரம் அல்ல”
“நீ ‘இன்டெலச்சுவல்’ மாதிரி பேசறே. நான் ஸாலிடா இருக்கேன்.”
சூப் கொதிக்கும் ஓசை கேட்டது.

“சிவா…நான் விடுபட்டது எதிலிருந்துண்ணு எனக்கு தெளிவாத் தெரியும். அந்த முட்டையிலேருந்து நீ வெளியே எடுத்த கரு மாதிரி எனக்குத் தெரியும். என் முட்டை ஓடு நொறுங்கியது என் காதில் விழுந்தது. டோன்ட் டாக் லைக் எ ப்ளடி மெடீரியலிஸ்ட்”
சிவா சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தான்.

வெற்றிவேல் கோபிக்கவில்லை. கண்கள் பளபளக்க அவனைக் கூர்மையாக, பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆல் ரைட்.. சூப் தயாராயிருக்கு. சாப்பிடுவோம் அப்பறமா பேசலாம்.”
வெற்றிவேலுக்காகத் தயாரித்த ஆம்லெட்டைத் தட்டில் போட்டுக் கொண்டு மேஜைக்கு வந்தான் சிவா.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *