Blog

  • பிக்கோலிம் புளுகு – 4

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

    மராட்டியர்களின் பிக்கோலிம் ஊடுருவல்:


    சப்போரா ஆற்றின் வடகரையில் போர்சுக்கீசியர்களும், தென்கரையில் மராட்டியர்களும் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொண்ட பின்பு, இந்தத் தகராறின் இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டு வர போர் ஒன்றே உதவும் என்று இருதரப்பினரும் கருதினர் [12].  மராட்டியர்கள் இன்னமும் போர்ச்சுக்கீசியர்கள்  இப்ரம்பூர் நோக்கித் தங்களது படைகளை நகர்த்தி மராட்டிய எல்லையை ஊடுருவ முயற்சிப்பதாக எண்ணினார்கள். போர்ச்சுக்கீசியர்களோ கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் இடையில் உள்ள பகுதியை ஒரு பாதுகாப்பான அரணாக உருவாக்கிக் கொள்ள விரும்பினர். இதற்கு அவர்கள் கோலாப்பூரையும், கோலாப்பூருக்கு வடக்கில் உள்ள பகுதியையும் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டியது  தேவையாயிருக்கும். ஆனால் இந்த நடவடிக்கை உண்மையில் போர்ச்சுக்கீசியர்களின் ஒரு திட்டமா அல்லது வெறும் வதந்தியா என்பது சரிவர உறுதியாகத் தெரியவில்லை [12]. பேர்நேம் பகுதியின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மராட்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளால் சூழப்பட்டிருந்தது. இதனால் பேர்நேம் (Pernem) பகுதியில் போர் நிகழ்வது தவிர்க்க இயலாதது என்பதை இருதரப்பினரும் அறிந்திருந்தார்கள் [11] [13]. மராட்டியர்கள் பேர்நேமை பாதுகாக்கக்  கருதியிருந்த தங்களது ஆரம்பக் காலத் திட்டத்தைக் கைவிட்டு, பிக்கோலிமின் தென்பகுதிக்குத்  தங்கள் படையை நகர்த்தினர் [9].

    பிக்கோலிம் படைகளால் நன்கு பலப்படுத்தப்படா விட்டாலும், மையமாகவும், பான்ஞ்சிம் (Panjim) இல் இருந்து எளிதில் அடையக்கூடிய வழித்தடத்திலும் இருந்தது. மராட்டியர்கள் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில், வடக்குப் பகுதில் இருந்த நிலவழியாக, பரந்த வயல் வெளிகள் வழியாக, சப்போரா ஆற்றின் தென்பகுதியிலிருந்து பிக்கோலிம்மிற்குள் நுழைந்தனர் [9]. இவ்வாறு மராட்டியர்கள் பிக்கோலிமில் நுழைந்ததை அப்பகுதி வாழ் மக்கள் அறிந்திருக்கவில்லை, இத்தகவல் தெரியவராமல் அவர்கள் ஏமாற்றப்பட்டோ அல்லது மராட்டியப் படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  அத்தகவல் மறைத்தோ வைக்கப் பட்டிருந்தது [9].

    ஆகஸ்ட் மாத முடிவில் மராட்டியக் காலாட்படை கன்சர்பால் (Kansarpal) மற்றும் லட்டம்பர்செம் (Latambarcem) நகர்களையும், மற்றொரு சிறிய படை  அருகிருக்கும் ஸல் (Sal) பகுதியையும் தாக்கியது. இந்த இரு ஊர்களும் முக்கியமான இந்து மதம் மற்றும் இந்துக் கலாச்சாரத்தின் மையங்களாகும் [9] [15]. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அப்பகுதி அதிக எதிர்ப்பினைக் காட்டவில்லை. அதனால் போரில் மிகக் குறைவான இழப்புகளுடன் அப்பகுதியைக்  கைப்பற்றிய மராட்டியப் படைகள், அதனை மேலும் பலப்படுத்தி தங்கள் படைத்தளமாக மாற்றிக் கொண்டது [9]. சந்தடியின்றி நிகழ்ந்த இந்த மராட்டியப்படையின் ஆக்கிரமிப்பு பிக்கோலிம் நகரில் இருந்த நிகொலு டி  மெல்லோ (Nicolau de Mello) வின் கவனத்திற்கு வர ஒரு வார காலம் ஆனது.  ஆனால் வாஸ்கோடகாமா நகருக்கும், இப்ரம்பூர் மற்றும் அலோர்னா கோட்டைப் பகுதிகளில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகளுக்கும் இத்தகவல் கிடைக்க மேலும் அதிக காலம் ஆனது [9].

    மராட்டியப்படை, தோடமார்க் (Dodamarg) பகுதியில் இருந்து பார்டஸ் (Bardez) ன் எல்லைப் பகுதி  வரை  சென்ற நெடுஞ்சாலையையும், அச்சாலைக்கும் சப்போரா ஆற்றிற்க்கும் இடையே உள்ள அனைத்து இடைப்பட்டப் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது [9].  செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள், அலோர்னாவின் மேற்குப் பகுதியில் இருந்த பாலம் வழியாக போர்சுக்கீசியப் படையினர் சப்போரா ஆற்றைக் கடந்தனர் [9]. அவர்கள் உளவு பார்த்த பொழுது மராட்டியக் காலாட்படைகள் ஆற்றின் தெற்குப் பகுதியில் ரோந்து செய்வது தெரிய வந்தது, இதனால் நள்ளிரவில் போர்ச்சுக்கீசியப் படை ஆற்றைக் கடந்தது. இரவில் நடக்கும் ஆயுதத் தாக்குதல் திறனற்றதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது [9]. ஓசையின்றி முன்னேறிய போர்ச்சுக்கீசியப் படையினர்  கன்சர்பாலுக்கு வடக்கில் இருந்த மராட்டியர்களின் படைத்தளத்தை அதிகாலையில் தாக்கினர். எனினும் இறுதியில் மராட்டியப் படை போர்ச்சுக்கீசியர்களை புடை சூழ்ந்த பொழுது  வேறு வழியின்றி அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர் [9].

    போர்ச்சுக்கீசியர்களின் இந்தத் தோல்வி, போராட்டத்தில் ஒரு மிக முக்கியத் திருப்பமாக மாறியது.  அவர்களுக்கு சாதகமாக இருந்த நிலை பறிபோனதுடன், ஆயுதங்களையும் இழந்தனர். மராட்டியர்களை முன்னர் கோவாவில் இருந்து விரட்டிய படைகளும் அலோர்னா கோட்டையில் இருந்த தங்கள் ஆயுதக் கிடங்கை கைவிட நேர்ந்தது. மராட்டியர்கள் மீண்டும் எல்லைப்பகுதியில் இருந்து மற்றொரு தாக்குதலை மாலிங்கும்  (Maulinguem) மீது நிகழ்த்தினார்கள். அப்பகுதியில் இந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்ததாலும், அவர்கள் மராட்டியர்களை ஏற்றுக் கொண்டதாலும் மீண்டும் தாக்குதல் சுலபமாக மராட்டியர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது [9].

    போர்ச்சுக்கீசியர்கள் பிக்கோலிம், லம்கவோ (Lamgao), முல்கவான் (Mulgaon), வதாடியோ (Vathadeo) மற்றும் மராட்டியப் பேரரசிற்கும் சட்டாரி (Satari) க்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதிகளில் அவர்களது படைகளை நிலை நிறுத்தினர் [9].  மராட்டியர்களுக்கு பிக்கோலிம் மக்களிடம் இருந்த ஆதரவை நன்கறிந்திருந்த அவர்கள் பிக்கோலிம்மில் இருந்த மராட்டியர்களை நேரடியாகத் தாக்குவதைத் தவிர்த்தனர். போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் படைகளை நிறுத்தி, பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்த  ஊர்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதனால் அவை மராட்டியர்கள் வசம் இழக்கப்படும் வாய்ப்பும் குறைவாக இருந்தது [9]. அக்டோபரில் வதாடியோ தக்கப்பட்டபொழுது மீண்டும் போர் துவங்கியது [9].

    (தொடரும்)

    (பின் குறிப்பு: அடுத்து வர இருப்பது வதாடியோ போர் பற்றிய பகுதி, அத்துடன் அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று பகுதிகளுக்குப் பின் இக்கட்டுரை நிறைவு பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.)

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை-  http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

     

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (15)

    பவள சங்கரி

    தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும்
    சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான்
    உண்மையில் நீங்கள் அறிவுத்திறன்
    உடையவராய் இருக்க முடியும்.
    ஜே.கிருஷ்ணமூர்த்தி – வாழ்வியல் ஞானி!

    ஒரு சிற்றரசன் ஒரு முறை ஒரு பேரரசனுடன் போர் புரிய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான். படை வீரர்களுக்கு பெரும் பதட்டமான சூழ்நிலை. காரணம், மிகச் சிறிய படையை உடைய தங்களால் அத்துனைப் பெரிய படையை எதிர்த்து நின்று போரிட முடியுமா என்ற அச்சமே. அரசனின் ஆணையையும் மீற முடியாதே. இந்த எண்ணமே அவர்களை துவண்டு போகச் செய்தது. இதனை உணர்ந்துகொண்ட அரசன் படை வீரர்களை அழைத்து, நம்மிடம் மன உறுதி இருந்தால் எத்தகைய பகைவனையும் சமாளிக்கலாம், நம் மனம் எத்துனை பலம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதைக்கொண்டுதான் எதிரியை வீழ்த்த முடியும், அதனால் எக்காரணம் கொண்டும் மனம் தளரக்கூடாது என்று நம்பிக்கையூட்டும் விதமாக பேசியதோடு, தாங்கள் தங்கியிருந்த காளிமாதா கோவிலின் முன் தங்களுடைய ஆன்ம பலத்தையும் சோதித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டார். ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு, தலை விழுந்தால் நாம் போரில் எக்காரணம் கொண்டும் தலைகவிழ மாட்டோம் என்று உறுதியாகச் சொல்லி தேவி முன்னால் சங்கல்பம் செய்துகொண்டு அந்த நாணயத்தை சுண்டிவிட்டார். வீரர்கள் மிக ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அரசன் சொன்னது போலவே தலை விழுந்ததாம். உடனே வீரர்களிடம் உற்சாகம் பொங்கியதோடு, காளிதேவியின் அருள் தங்களுக்குப் பூரணமாகக் கிட்டிவிட்டது, இனி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக நம்பிய படை வீரர்கள் போருக்குத் தயாராகிவிட்டனர். அதே உறுதியோடும், உற்சாகத்தோடும் போரிட்டவர்கள் இறுதியாக வெற்றி மாலையும் சூடி வந்தனர். எல்லாம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாக நாடு திரும்பியவுடன், தளபதி அரசனிடம் மெல்ல வந்து, ‘அரசே, ஒரு வேளை நீங்கள் நாணயத்தை சுண்டிய பொழுது அதில் பூ விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும். வீரர்கள் போரிடவேத் தயங்கியிருப்பார்களே, காரியமே கெட்டிருக்குமே’ என்று ஆச்சரியமாகக் கேட்டார். அப்போது அரசன் புன் சிரிப்புடன் ஒன்றுமே பேசாமல் அந்த நாணயத்தை எடுத்துக் காட்டினார். அதில் இரண்டு பக்கமும் தலை மட்டுமே இருந்தது. அரசரின் சமயோசித புத்தியையும், வீரர்களுக்கு மன உறுதியை ஊக்குவிக்கும் விதமாக செயல் புரிந்ததற்கும் முதலில் அரசனின் தன்னம்பிக்கையும், மன உறுதியும் மற்றும் சரியான வழிநடத்தலுமே என்பதை புரிந்து கொண்டார். இந்த தலைமைப் பண்பு மட்டுமே ஒரு காரியத்தை வெற்றிப்பாதையை நோக்கிச் செலுத்துகிறது.

    நேர்மறையாக எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் நிலைத்து நிற்கக்கூடியது என்பது போல எதிர் மறையாக எடுக்கின்ற முயற்சிகள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெற்றி பெற்றது போன்ற மாயையை ஏற்படுத்தினாலும், அந்த வெற்றி நிலைத்து நிற்பதில்லை. ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல எதையாவது செய்து சாமர்த்தியமாக காரியம் சாதிக்க வேண்டும் என்று அவசரத்தில் அள்ளித் தெளித்த நீர்க்கோலமாக எடுக்கும் முடிவு நிரந்தரமான வெற்றியை அளிப்பதில்லை. ஒவ்வொருவரையும் பிரித்துவைத்து தனித் தனியாக காரியம் சாதிக்க முயற்சி செய்வதைக் காட்டிலும், அனைவரையும் ஒன்று கூட்டி, ஒற்றுமையுடன் பணிபுரிய வழி வகுத்துக் கொடுப்பதே சிறந்த தலைமைப் பண்பாம். அந்த வகையில் ஒரு வெற்றியாளருக்கு நேர்மறை எண்ணங்கள் மட்டுமே நிரந்தரமான வெற்றியைத் தேடித்தரும் என்பதே சத்தியம்.

    அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுதலே உத்தமம்!


    ஒருவருடைய குறிக்கோள் எத்தகையதாக இருப்பினும், அவர் எப்படிப்பட்ட தன்மையுடையவராயினும், பேரும், புகழும், அளிக்கக்கூடிய வெற்றியாளராக பிரகாசிக்க வேண்டுமெனில் முதலில் தாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று எதை, எங்கிருந்து ஆரம்பிப்பது மற்றும் எதை ஒருக்காலும் செய்யக் கூடாதது என்பதுதான். ஆரம்பத்தில் பல திட்டங்களை வகுத்துக்கொண்டு அதையனைத்தையும் முழுமையாகக் கவனம் கொள்ள முடியாமல், ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்தவும் செய்கிறோம். நம்மால் முடியக்கூடிய சிலத் திட்டங்களை மட்டும் ஆரம்பித்து, அதில் தீவிர கவனம் செலுத்தி, சரியான பாதையை வகுத்து அதில் பயணம் செய்யும் வல்லமையை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். ஒரு திட்டத்தை ஆரம்பிப்பது என்பது எவருக்கும் எளிதான காரியம். ஆனால் அதனை செம்மையாக வழிநடத்தி வெற்றி காண்பதற்கு பெரிய அறிவுஜீவியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அதற்குத் தேவையான துணிச்சலும், தன்னம்பிக்கையும், கடுமையான பொறுமையும் அத்தியாவசியமாகிறது. கொஞ்சம் பொது அறிவும், நல்லொழுக்கமும், செய்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாத குணமும் இருந்தாலே போதும். தன் தகுதிக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப, சரியான ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்காக கடுமையாக, விடா முயற்சியுடன் உழைத்தாலே போதும். ஒரு சாதனை என்பது சாதாரண வெற்றியைப் போன்று உடனே கிடைப்பது அன்று. பொறுமையுடன் கூடிய நீண்டதொரு கடினமான பயணம் மட்டுமே சாதனையை அடையச் செய்யக்கூடியது. விதையை ஊன்றியவுடன் கனியை எதிர்பார்ப்பது என்பது சாத்தியமன்று. விதை துளிர் விட்டு, செடியாகி, மரமாகி பின்புதான் கனியைக் கொடுக்க வல்லது. அப்படியேதான் நம் திட்டமும் ஆழ உழுதால் மட்டுமே கனி கொடுக்க ஆரம்பிக்கும். ஏதோ ஒரு திட்டத்தை ஆரம்பித்து, அதனை பாதியிலேயே நிறுத்திவிட்டு அடுத்த திட்டத்திற்குத் தாவிக் கொண்டிருப்பவர்கள் இறுதியில் எதையுமே முழுமையாக செய்து முடிக்க மாட்டார்கள். உதாரணமாக முதலில் நூல் வியாபாரம் செய்வதாகத் திட்டமிட்டு, சொற்ப காலங்களிலேயே, தான் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்று முடிவு செய்து உடனே எண்ணெய் வியாபாரம் செய்யத் துணிந்து, பின் அதுவும் திருப்தியில்லாமல், ஜவுளி வியாபாரம் செய்கிறேன் என்று செல்பவர் ஒன்றில் நிலையான வெற்றியை எப்படி அடைய முடியும். இறுதிவரை அவர் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அதை விடுத்து முதலில் ஆரம்பித்த நூல் வியாபாரத்தில் எப்படி முன்னேற்றம் காண்பது என்பதை வரையறுத்து அதற்கான முழு முயற்சியை கடுமையான உழைப்புடன், அதே எண்ணத்துடன் செயல்பட்டால் ஒருநாள் அதன் எல்லையைத் தொட்டு சாதனையாளராக வெளிப்படுவார்.

    எடுத்துக்கொண்ட பணி சிறியதோ அல்லது பெரியதோ எதுவாக இருப்பினும் அதை நுணுக்கமாக கவனம் கொண்டு, அழகாக ஆரம்பித்து, அதே அழகுடன் இறுதி வரை முழுமையாகச் செய்து முடித்தால் அது கொடுக்கும் நம்பிக்கை அதுவே நம்முடைய வழமையாக மாறிவிடக்கூடும். தொடர்ந்து எடுக்கக்கூடிய பணிகள் அனைத்தும் தானாகவே வெற்றிப்பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடும் என்பதே சத்தியம்!

    ஆழமற்ற தேடல் என்பது அர்த்தமற்ற அனுபவம்!

    படங்களுக்கு நன்றி:

    http://www.allposters.com/-sp/Motivational-Persistence-Posters_i796514_.htm

    Share
  • கண்ணா மூச்சு வேலைகள் வேண்டாம்

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். நமது இளைய தலைமுறையினரான ஆண்,பெண் இருபாலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது அரசாங்கத்தின் கடமை என்றாலும், இந்திய இளைஞர்கள் மிகவும் ஆபத்தான நடவடிக்கைகளில் இறங்கியதன் பயனாய் அவப்பெயரைத் தாங்கியிருக்கும் இவ்வேளையில் அவர்களைக் காப்பதும்,அவர்களுக்கு நல்வழி காட்டுவதும் அவசியம் என்பதால் ஒட்டுமொத்த இந்திய சமூகம் உடனடித் தீர்வுகளில் இன்றே இறங்குவது நலம் பயக்கும் நடவடிக்கையாகும்.

    நாட்டின் பதின்மூன்றாவது,தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கும் இவ்வேளையில் இந்திய சமூகம் எதிர்பார்த்தது போல் நடை பெறாமல் போன வருத்தம் இருந்தாலும், இனி யார் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் இந்திய சமூகத்துக்குப் பட்டை நாமம் என்பது மட்டுமே உறுதியாகிவிட்டது.

    மேலும் அண்மைய காலமாக சிறிய சமூகமாக இந்திய சமூகம் பெயர் குறிக்கப்பட்டு, அதனை மேலும் ஒரம்கட்டும் நடவடிக்கைகள் இன்றோ நேற்றோ எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல. மாறாக நெடுங்காலமாக எல்லாம் திட்டமிட்டே நடைபெற்று வந்த இந்த உண்மையை இனியாகிலும் நாம் ஏற்கத்தான் வேண்டும். இன்றைய அவல நிலைக்கு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்.

    இனி, நம் கையைக்கொண்டுதான் கரணம் எனும் நிலையில் நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயலாற்றி சமூகத்தின் அடுத்த வெற்றிக்கோட்டைத் தொடவிருக்கும் இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்ட நமது புதிய யுத்திகளைச் சொல்லித்தருவோம்.

    தேர்தலுக்குப்பிறகு,அமைக்கப்பட்ட அமைச்சரவை இந்திய சமூகத்துக்கு குறிப்பாக இந்திய இளைஞர்களுக்குச் சாதகமாக அமைந்தது. இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சாகும். இதன் அமைச்சர் கைரி ஜமாலுதின். அம்னோ இளைஞரணித் தலைவரான இவர் முதல் முறையாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் முதன் முறையாக ஒரு தமிழருக்கு துணையமைச்சர் பதவிவழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சில ஆண்டுகள் முன்னாள் ம.இ.கா.இளைஞரணித் தலைவர் எஸ். விக்னேஸ்வரன் இந்த அமைச்சுக்கு நாடாளுமன்ற செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

    இன்றைய பிரதமர் நஜீப், இளைஞர்,விளையாட்டுத்துறை அமைச்சராக 1986 ஆம் ஆண்டும், தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு முதல் அம்னோ இளைஞரணித் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது கவனிக்கத்தக்கதாகும். நஜீப் அவர் காலத்தில் இந்தியர்களுக்குச் செய்யத் தவறியதை, தற்போது பதவி ஏற்றுள்ள அமைச்சர் கைரி ஜமாலுதின் தவறாமல் செய்வார் என்று நம்புகிறோம். சத்து மலேசியா கொள்கைப்படி பாகுபாடின்றி இந்திய இளைஞர்களுக்கு உதவ வேண்டும். இதில் துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் கூடுதல் கவனம் செலுத்திக் கிடைத்த வாய்ப்பைக் கோட்டைவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    1960 ஆம் ஆண்டுகளில் நமது இந்திய இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் கொடிகட்டிப் பறந்த ஒரு காலம் இருந்தது மிக உண்மை. நமது இந்திய விளையாட்டாளர்கள் மட்டுமின்றி 1950 ஆம் ஆண்டுகளில் சீனர்கள் பூப்பந்துவிளையாட்டை தங்களின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதுடன் தாமஸ் கிண்ணத்தைப் பல ஆண்டுகள் வெற்றி கொண்டு நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.

    1969 மே இனக்கலவரத்துக்குப் பின் அரசாங்கம் தன் மூப்பாக எடுத்த பல முடிவுகளால் தமிழர்களும்,சீனர்களும் பல துறைகளில் ஓரம் கட்டப்பட்டது போல், விளையாட்டுத் துறையிலும் இரு இனங்களையும் முற்றாக ஓரங்கட்டியது. பூப்பந்து, நீச்சல், பௌலிங், குவாஷ், கூடைப்பந்து, மேசைப்பந்து, ஜூடோ, போன்ற விளையாட்டுகள் இன்றும் சீனர்களின் கட்டுப்பாட்டுக்களில் இருந்து வருகின்றன. சீனர்களின் பொருளாதார பலம் அவர்களை இத்துறையில் காலூன்றச் செய்துள்ளது.

    இந்தியர்கள் பெருமளவில் ஆர்வமுடன் பங்கு பெற்ற காற்பந்து, ஓட்டப்பந்தயம், ஹாக்கி, பெருநடைப்போட்டி, டெனிஸ் ஆகிய போட்டிகளில் இந்தியர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். பொருளாதாரப் பிரச்சனையினால் இவர்கள் இத்துறையில் நிலைக்க முடியாமல் போனது ஒரு புறமிருக்க, அரசாங்கம் திட்டமிட்டே இவர்களை ஒதுக்கியதுதான் உண்மை.

    விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு முறையானப் பயிற்சிகள் மூலம் உருவாக்க வேண்டிய இடம், ஆரம்பப்பள்ளிகளும், இடைநிலைப் பள்ளிகளும்தான். ஆனால், இனப்பாகுபாட்டை காட்டக் கூடாத பள்ளித் தலைமையாசிரியர்களும்,பள்ளி முதல்வர்களும் மலாய்க்காரர்களாக இருந்ததால், சீன, இந்திய மாணவர்களை முளையிலேயே கிள்ளி எறிகிறார்கள்.

    மலேசிய விளையாட்டு மன்றம் நடத்தும் போட்டிகளில் மலாய் மாணவர்களே அதிகமாகப் பங்கு பெறுவதைக் கண்கூடாகக் காணலாம்.இதன் தாக்கம் தேசிய நிலையிலும் பிரதிபலிக்கின்றன. தேசிய காற்பந்து போட்டிகளில் ஒருகாலத்தில் அதிகமான இந்திய விளையாட்டாளர்கள் விளையாடிய இடத்தில் ஒருவருக்கு மட்டும் வாய்ப்புக் கொடுப்பது எந்தவிதத்தில் ஞாயம்? சீனர்களை அடியோடு இந்த விளையாட்டில் இல்லாமல் செய்துவிட்டு தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுவது அர்த்தமற்றது.

    தேசிய விளையாட்டு வாரியத்திற்கு இந்திய இயக்குநர் ஒருவரை நியமனம் செய்யவிருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார் டத்தோ மு.சரவணன். பல மலாய்க்கார அதிகாரிகள் மத்தியில் தமிழர் ஒருவரை மட்டுமே நியமிப்பது நல்ல பலனைத் தராது என்பது தெளிவு. அங்கேயும் கோட்டா முறையில் மலாய்க்காரர்கள் பேசுவார்கள், முடிவு செய்வார்கள். நமக்காகப் போராடும் நபர்களை மட்டுமே நியமியுங்கள். தலையாட்டிப் பொம்மைகளும் ஜால்ராக்களும் இனி நமக்கு வேண்டாம்.

    அமைச்சரவையில் ஓர் அமைச்சர் மட்டுமே இருந்த வேளையில் இந்தியச்முதாயம் இழந்தது அதிகம். அந்த கண்ணாமூச்சு வேலைகள் எல்லாம் இனியும் வேண்டாம். நமது இந்திய இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் மீண்டும் சிறந்து விளங்க உதவுங்கள். நமது இளைஞர்களின் மீது படிந்துள்ள கறைகளைப் போக்குங்கள்.

    இளைஞர்களாக இருக்கும் அமைச்சரும், துணையமைச்சரும் சாதனைப்படைக்க வேண்டும். இந்திய இளைஞர்கள் உலகளவில் சாதனைப் படைக்க உதவுங்கள்!

    Share
  • அறுமுகநூறு (17)

     

    சச்சிதானந்தம்

     

    அறுமுகன் என்னும் ஆழ்ந்த பொருளை,

    அழகுற அகிலம் சூழ்ந்த பொருளை,

    அகமுக மிரண்டும் காணும் பொருளை,

    அடிபணிந் துணர்ந்து அன்பை உணர்வோம்!                                                                   81

     

    சிக்கலில் வேலுற்றுச் செந்தூரில் வீறுற்றுச்

    சூரனைக் கூறிட்ட பின்னாலும் அருளுற்றுச்,

    செங்கொண்டைச் சேவலாய்ப் பூங்கொண்டைப் பீலியாய்ச்

    செய்தவனைக் காத்திட்ட சிங்கார வேலனே!                                                                   82

     

    குடிக்கும் தண்ணீரைக் குடித்திட முடியாமல்,

    துதிக்கை துண்டாகித் துடிக்கும் யானையாய்,

    துதிக்கும் உன்னைநான் துதித்திட முடியாமல்,

    தடுக்கும் நெஞ்சத்தின் மயக்கம் நீக்கிடுவேலா!                                                               83

     

    அகவும் மயிலது அரவம் தாக்கும்,

    அறுமுகன் அருளது அகந்தை நீக்கும்,

    அலறும் ஆந்தை இரவில் தாக்கும்,

    அலையும் மனத்தைக் கரவேல் காக்கும்!                                                                        84

     

    ஒளியில் நிறைந்த இறைவனின் அழகைக்,

    கண்டவர் மனதின் களங்கம் நீங்கும்,

    விழியில் நிறைந்த அவனது எழிலால்,

    மனதில் நிறையும் அமைதியின் தோற்றம்!                                                                    85

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(60)

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் இவ்வார மடலை வரைகிறேன்.

    இலக்கியம் என்பது மனைத வாழ்க்கையுடன் இன்றியமையாத வகையில் இணைக்கப்படிருக்கிறது. எமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு கணத்தினையும் இலக்கிய உணர்வோடு பார்க்கும் போது அப்பாஅர்வை எம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் சோகத்திலும் சுகமான, இதமான எண்ணங்களை தவழ விடுகிறது.

    இதனால் தான் கவிஞர்கள் சோகத்திலும் அழகிய கவிதைகளை ஆழமான உணர்வுகளோடு வரைஒயும் வல்லமை பெற்றவர்களாகிறார்கள்.

    இலக்கியம் எனும் சொல்லைக் கேட்டவுடனே அதனை ஏதோ அர்த்தம் புரியா கனமான விடயம் எனும் வகையில் பார்க்கும் பலரைக் காணக்கூடியதாக இருக்கிறது.

    ஒவ்வொரு மொழியின் பெருமையும் அதனுடைய இலக்கியத்திலேதான் வெளிப்படுகிறது.

    இலக்கியத்தை ரசிப்பவர் மொழியின் மீது வெறி கொள்வதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை எனலாம்.

    ஒவ்வொரு மனதின் சிந்தனையின் வெளிப்பாடு அதனுடைய உணர்வுகளின் அதீதம் இலக்கியத்தின் பால் திரும்புமானால் எவர் மனதிலும் தீவிரவாதம் தலைதூக்கும் வாய்ப்புகள் அருகிறது,

    இன்றைய நவீன உலகினிலே காணப்படும் வெறித்தனமான போராட்டங்கள் பலவும் மதத்தையோ அன்றி மொழியையோ சார்ந்ததாக இருப்பதன் காரணம் இலக்கிய உணர்வுகள் பெரும்பான்மையோரின் மனங்களில் குன்றிப்போயிருக்கும் காரணத்தினாலேயே என்று சொன்னால் அது மிகையாகாது.

    எதற்காக இந்த ஆழமான முன்னுரை என்று கேட்கிறீர்களா ? இதோ வருகிறேன் விடயத்திற்கு.

    இங்கிலாந்து அரசாங்கத்தினால் “Poet Laureate” அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியவாதி எனும் வகையிலான ஒரு கெளரவப் பட்டம் , பெயர் பெற்ற இலக்கியவாதி ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இக்கெளரவப் பட்டம் மூன்று வருட காலத்திற்கு ஒவ்வொருவருக்கும் வழங்கப் படுகிறது.

    இவர்கள் நாட்டின் பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் அந்நிகழ்வுகளைப் பெருமைப்படுத்துவதோடு நாட்டின் இலக்கிய வலர்ச்சியைப் பற்றிய கருத்துக்களை முன்னிலைப் படுத்தும் வகையில் முதன்மையானவர்களாகத் திகழ்கிறார்கள்.

    இவர்களின் பங்களிப்புகளும் இப்படியான ஒரு கெளரவப் பட்டத்தை அரசாங்கமே முன்னிலைப் படுத்தி வழங்குவதும் மக்களின் மனதில் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்பதே இதன் ஆதரவாளர்களினது வாதமாகும்.

    இதே போல ஒரு கெளரவப் பட்டத்தை ” Children’s Laureate “ அதாவது குழந்தைகளுக்கான இலக்கிவாதி எனும் வகையில் இளையோர் இலக்கியத்தை முதன்மைப் படுத்தும் எழுத்தாளர்களுக்கும் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

    இம்முறை இக்குழந்தைகளுக்கான இலக்கியவாதி எனும் கெளரவப் பட்டம் முதன்முறையாக ஒரு கறுப்பு இனத்தவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இப்பட்டம் ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டிருப்பது மேலும் ஒரு சிறப்பாகக் கணிக்கப்படுகிறது.

    இப்பட்டத்துக்குரிய பெண்மணி 51 வயதே நிரம்பிய ” மலோரி பிளாக்மன் (Malorie Blackman) “ எனும் ஒரு முன்னனி எழுத்தாளராவார்.

    1962ம் ஆண்டு பிறந்த இவர் “நீல் பிளாக்மன்(Neil Blackman)” எனும் ஸ்கொட்லாந்து நாட்டுக்காரரைக் கணவனாகவும் எலிஸபெத் எனும் 17 வயதுப் பெண்ணின் தாயருமாவார்.

    “ Noughts and Crosses “ எனும் பதின்ம வயது இளையோருக்கான ஒரு தொடர் நாவல்களி எழுதி மிகவும் பிரபலமடைந்தார்.

    இவருடைய நாவல்களின் சாரம் இங்கிலாந்தில் இலைமறைகாய் போல இருந்து வரும் இனவேற்றுமை, நிறவெறி என்பனவற்றைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பது இவரது தனித்தன்மையாகும்.

    இலக்கிய உணர்வு சிறுவர்களின் உள்ளத்தில் சிறு பராயத்திலிருந்தே வளர்க்கப்படுவது அவசியம் எனும் இவர் இத்தன்மையை வளர்த்தெடுப்பதற்கு பெற்றோரும், ஆசிரியரும் குழந்தைப்பருவத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிடங்களாவது குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

    இன்றைய கணணி உலகத்தில் இலக்கியமும் விஞ்ஞானமயப்படுத்தப் பட வேண்டியது அவசியம் என்று கூறும் இதனாலேயே இளையோரை இலக்கியத்தில் ஈடுபடச் செய்யலாம் என்று அறிவுறுத்துகிறார்.

    புத்தகங்கள் படிக்கும் வழக்கம் ஒன்றே தன் வாழ்க்கையில் தனக்கு பல சந்தர்ப்பங்களுக்கான கதவுகளைத் திறக்கக் காரணமாயிருந்தது என்பதே இவரது கருத்தாகிறது.

    ஒவ்வொரு சிறுவர்கள் கைகளிலும் சிறுவர்களுக்கான வாசிகசாலை அங்கத்தவர் அட்டை இருப்பது அவசியம் என்கிறார். இதைப் பெற்றோர் செய்யத்தவறினால் அதற்கான பொறுப்பைப் பாடசாலைகள் ஏற்றுக்கொள்ல வேண்டும் என்பது இவரது வாதமாக இருக்கிறது.

    நாவல்கள் எழுதியது மட்டுமல்லாமல் லண்டன் தொலைக்காட்சியில் இளையோருக்கான ஒரு முன்னனித் தொடரான “பைக்கர் க்றோவ்(Byker Grove)” எனும் தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

    ஒரு நாட்டின் மொழியின் தொன்மை அந்நாட்டின் இலக்கியச் செழுமையிலேயே தங்கியுள்ளது. இவ்விலக்கியம் செழுமையடைய வேண்டுமானால் அச்சமூகத்தின் இளைய தலைமுறை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இளையோர்கள் உலகம் இன்று கணனி எனும் மையத்தினுள் சிக்கிக் கிடக்கிறது. இலக்கியம் தன்னை இக்கணனி வலைக்குள் பிணைத்துக் கொண்டால்தான் இளையோர்கள் இலக்கியத்தின் முக்கியத்தினை உள்வாங்கிக் கொள்வார்கள்.

    இளையோர்களுக்கான நாவல்கள் மூலம் புகழ் பெற்ற இத்தகைய முன்னனி எழுத்தாளர்களை முன்னிலைப் படுத்துவதன் மூலம் அவர்கள் இச்செயல்களின் தாக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறார்கள்.

    இதை ஆதரித்துச் செயல்படுத்தும் இங்கிலாந்து அரசாங்கத்தை பாராட்டாமல் இருக்க முடியாது

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     http://www.thamilpoonga.com

    Share
  • அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்

    வெங்கட் சாமிநாதன்

    எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர். தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். அடக்கம் மிகுந்தவர்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை. அவர் எதிர்பார்த்ததுமில்லை. அக்காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும் போல தம் இயல்பில் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கம் நிலம் மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும் நன்கு தெரிந்த போதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்கு தியாகம் என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.

    அவர் 1974-ல் இறந்த போது அவர் சொத்து எதுவும் விட்டுச் செல்லவில்லை. குடும்பம் வறிய நிலையில் தான் இருந்தது. அவர் குமாரர்கள் தம் வழிச் சென்றுவிட்டனர். இது எங்கும் அனேகமாக நேர்வது தான். அவரது இரண்டாவது மகள், பாப்பா தான் வீடுகளில் சமையல் வேலை செய்து தன் தந்தையையும் தாயையும் காப்பாற்றி வந்திருக்கிறார். திஜர வின் மறைவிற்குப் பின்னும் இதே நிலை. 2008-ல் தமிழக அரசு திஜர வின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கி ஆறு லட்சம் ரூபாய் வழங்கியது. அந்த ஆறு லட்ச ரூபாயைப் பங்கு போட்டுக்கொண்டனர் திடீரென தோன்றிய திஜரவின் சட்டபூர்வமான வாரிசுகள் அனைவரும். இதுவும் அனேகமாக எங்கும் நடப்பது தான். அதில் திஜரவையும் தாயையும் காப்பாற்றி வந்த பாப்பாவின் பங்கு மிகச் சிறியதாகியது. அதுவும் தான் இருந்த வறிய நிலையில் கடன் கொடுத்தவர்களூக்குப் போயிற்று.

    இப்போது, தந்தை திஜரவையும் தன் தாயையும், காப்பாற்றி வந்த பாப்பா வுக்கு 86, இப்போது அவரையும் தன் 50 வயது அக்காவையும் காப்பாற்றி வருவது அவரது இரண்டாம் மகள், திஜர வின் பேத்தி, 48 வயது சத்திய பாமா. அவர் குழந்தைகளுக்கு பாட்டு வகுப்பு நடத்தி அதில் வரும் வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வந்தது. அம்மா அக்கா இருவருமே முதுமையின் தேக உபாதைகளால் துன்புறுபவர்கள். அவர்களுக்கான மருத்துவ செலவும் சேர்ந்து கொள்ள அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு இரண்டாம் பேத்தியினதாகியது.

    தீக்ஷை பெற்று சன்னியாசியாக தனித்து வாழ்ந்த வந்த மலர்மன்னன் தான் அவர்களைத் தான் இருந்த இடத்திற்கு அழைத்துப் பாதுகாத்து வந்துள்ளார் கடந்த சில வருஷங்களாக. அவரும் இப்போது மறைந்துவிட்டார். மலர் மன்னன் தன் கடைசி வருடங்களில் சத்தியபாமாவின் பாட்டு வகுப்புக்களையும் நிறுத்தச் சொல்லி அவர்களது முழு பாதுகாப்பையும் தாமே எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார். அவர்களது பெயரில் ஒரு வைப்பு நிதி ஒன்று வசூலித்து ஏற்படுத்தி விட்டால் அதிலிருந்து வரும் வட்டி இவர்களை ஓரளவுக்குக் காப்பாற்றும் என்பது அவரது திட்டமாக இருந்திருக்கிறது. அவரது மறைவிற்குப் பிறகு, அந்தத் திட்டமும் நிறைவேறாது அவரது பாது காப்பும் அற்ற நிலையில் திஜரவின் பேத்தி இருவரும் அவர்களது முதிய தாயும் விடப்பட்டுள்ளனர். குறைந்த வாடகையில் அவர்கள் இருப்பது மலர்மன்னன் இருந்த இடம் தான். மலர் மன்னன் இறந்ததும் அவரது குடும்பத்தார் வந்து மலர்மன்னனின் புத்தகம் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர்.

    எனது வேண்டுகோள் நாம் எல்லோரும் அவரவருக்கு முடிந்த அளவில் செய்யும் பொருள் உதவி மொத்தமாக வறிய நிலையில் அனாதையாகி விட்ட இவர்களூக்கு உதவக்கூடும். ஆறு லட்சம் அரசின் நிதி உதவி பெற்ற குடும்பம் என்ற பெயர் அழுத்தி வதைக்கும் வெற்று பாரமாகவே இவர்களுக்கு ஆகியுள்ளது வாழ்க்கையின் தரும் முரண்களில் ஒன்று.

    எனவே திரும்பவும் எனது வேண்டுகோள். அவரவர் சக்திக்கு ஏற்றபடி உதவி அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விவரங்கள்.

    R. Sathyabama, SB A/c No. 37950100001010,

    IFSC code BAR8 ‘O” THICE, Micr code 600012047

    Bank of Baroda, Thiruvanmiyur Branch,

    Chennai

    அவரது முகவரி: R.Sathyabama, 18/37, MuthuLaxmi Road,

    Laxmipuram (near Pamban Swami mutt)

    Chennai-41 PIN 600 041

    Share
  • நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! (4)

    செல்வன்

    இந்தத் தொடரில் கான்சர், டயபடிஸ், மாரடைப்பு, அல்சர், ஆஸ்த்மா முதலிய வியாதிகள் அனைத்தும் ஆதிமனிதனுக்கு இல்லை என்பதும் அதற்கு காரணம் அவன் வாழ்க்கை முறையும், உணவுமே எனும் கருத்து ஆராயப்பட்டது.

    குண்டு, ஒல்லி என்பதன் உளவியலை ஆராயாமல் இந்த தொடர் நிறைவுறாது. குண்டாக இருப்பது நம்மைப் பொறுத்தவரை விரும்பதக்கது அல்ல. ஆனால் இத்தகைய உளவியலே நாகரிக மனிதனின் போக்குதான். 20ம் நூற்றாண்டு பத்திரிக்கைகள், ஹாலிவுட், பார்பி பொம்மைகள் ஆகியவை உருவாக்கிய ஒரு செயற்கை பிம்பம் சின்ன இடை, மெலிந்த உடல் தான் அழகு என்பது. பரிணாமரீதியில் குண்டாக இருக்கும் மனிதன்தான் பஞ்சகாலத்தில் உயிர் பிழைக்கக் கூடியவன். நம்மைப் பொறுத்தவரை நம் ஜீன்களுக்கு பசுமைப் புரட்சி நடந்ததும், அம்மா உணவகத்தில் 1 ரூபாய் இட்லி கிடைப்பதும் இன்னும் பதிவாகவில்லை. நம் ஜீன்களுக்கு நாம் இன்னும் ஆதிவாசியாக குகையில் இருக்கிறோம் என்பதுதான் தெரியும். அதனால் அதிக உணவு கிடைத்தால் அதைக் கொழுப்பாக மாற்றி அதனைச் சேமித்து, வரும் குளிர்காலத்துக்கு நம்மை உயிர்பிழைக்க வைக்கும் முயற்சியை எடுக்கிறது.

    அதனால் என்னதான் உடல்பயிற்சி செய்தாலும், பட்டினி கிடந்தாலும் நவீன காஸ்மாபாலிடன் பத்திரிக்கையில் இருப்பது மாதிரி மாடல்களின் உடல் அழகை நாம் அடைவது சாத்தியம் இல்லை. அதாவது இயற்கை முறையில். மார்பக அறுவை சிகிச்சை, ஸ்டிராய்டு மாதிரி உட்கொண்டு சிக்ஸ்பேக் வைக்கலாம். ஆனால் இயற்கை உணவில், இயற்கை வாழ்க்கை முறையில் அடையப்படும் அழகு என்பது வேறு.

    ஆதிமனிதன் செதுக்கிய பெண் சிற்பம் ஒன்று வில்லன்டாஃர்ப் நகரில் கிடைத்தது. அதில் இருக்கும் பெண் உருவம் “வில்லன்டாஃர்ப் வீனஸ்” என அழைக்கபடுகிறது. அன்றைய அழகியல் மதிப்பீட்டின்படி குண்டாக இருக்கும் பெண்தான் அழகானவளாக கருதப்பட்டாள். இன்று இந்தப் பெண் அழகற்றவளாக கருதப்படுவாள். இன்றைய காலகட்டத்தில் ஒல்லியாக கருதப்படும் மேற்கத்திய அழகியல் மனப்பான்மை ஆதிமனிதனுக்கு இல்லை.

    அதனால் நீங்கள் பின்பற்றும் உணவுமுறையை மாற்றுமுன் “எதை அடைவதற்கான நோக்கமாக இந்த உணவுமுறையை நாம் பின்பற்றுகிறோம்” என்பதை தெளிந்துகொள்வது முக்கியம்.

    ஆதிமனித உணவு முழுக்க மாமிசமாக இருப்பதால் சைவர்கள் என்ன செய்வது என கேள்வி எழுவது இயல்பு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சைவர்கள் இல்லை. சைவம் என்பது கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் விவசாய நாகரிகம் பல்கிப் பெருகிய பின், கால்நடைகளை பாதுகாக்க வேண்டி விவசாய சமூகம் கடைபிடித்த வாழ்க்கை முறை. பழங்குடிகளால் காட்டில் முழு சைவர்களாக வாழ்ந்திருக்க இயலாது. சைவ உணவில் முழு ஆரோக்கியத்தை அடையலாம். கலோரிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் எடைகுறைப்பு, சர்க்கரை நோய் குறைப்பு ஆகியவற்றை அடையலாம். என் தனிப்பட்ட கருத்து என்னவெனில் முற்றிய சர்க்கரை வியாதி இருப்பவர்கள் காட்டுமிரான்டி உணவின் மூலமே முழு குணம் அடைய இயலும் என்பது. அவர்களுக்கு மட்டும் சைவ உணவு பலனளிக்காது. மற்ற யாரும் இந்த உணவு முறைக்காக தம் புலால் உண்ணாமை கொள்கையை கைவிட வேண்டியது இல்லை.

    கட்டுரைத் தொடரை எழுத வாய்ப்பளித்த வல்லமை ஆசிரியர் குழுவினருக்கும், படித்து கருத்தளித்த அனைவருக்கும் என் நன்றி.

    (முற்றும்)

    Share
  • மெரினாவுக்குப் போயிருந்தேன்

    ஈரோடு கதிர்

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மெரினாவுக்குச் செல்கின்றேன். முப்பது நாட்களுக்குள் நான்காவது முறை வந்திருக்கும் சென்னைப் பயணம். சுமக்கத் திணறும் ஒரு பெரிய பாரத்தை கொஞ்சம் முட்டுக்கொடுத்துவிட்டு, சற்றே தளர்த்திக்கொண்ட லேசான மனோநிலையில் இருக்கின்றேன். அடுத்தடுத்த பயணம், உறக்கம் குறைந்த இரவுகள் என கூடிக்கிடந்த அலுப்பு துளியும் குறைந்தபாடில்லை. கார் நிறுத்துவதற்கு இடம் தேடிக் களைத்து, முறையற்ற முறையில் நிறுத்தியிருந்த ஒரு வேனை ஒட்டி நிறுத்தவேண்டியதாகிப் போனது. நிறுத்திய இடம் முறையற்றது, அதேசமயம் யாருக்கும் தொந்தரவாக இருக்க வாய்ப்பில்லை.

    5 மணி நேர மாலை வெயில் கூடுதலாய் சுடுகின்றது. மணளில் கால் புதைந்தது. காரிலேயே காலணியை விட்டிருக்கலாமோ எனத் தோன்றியது. உள்ளங்கால்களில் மணலின் வெதுவெதுப்பை வாங்கவேண்டும் போல் இருந்தது. மணலில் உறங்கும் வெயிலை எத்தனையெத்தனை கால்கள் இந்த தினத்தில் மட்டும் களவாடிப் போயிருந்திருக்கும்.

    என்னோடு மனைவியும், நண்பரின் மகளும். நண்பரின் மகள் சிகிச்சையின் பொருட்டு உணவுக் கட்டுப்பாட்டியில் இருப்பவள். வீட்டிலிருந்து புறப்படுகையில் ’என்ன சொல்லிக் கேட்டாலும் பஜ்ஜி மட்டும் கூடாது” என எச்சரிக்கையோடுதான் அனுப்பப்பட்டிருந்தாள்.

    ”அங்கிள் எனக்கு காலிஃப்ளவர், உங்களுக்கு வேணா பஜ்ஜி வாங்கிக்குங்க” என நயமாய் என்னையும் மனைவியையும் பஜ்ஜிக் கடைக்கு நகர்த்திச் செல்கிறாள். கடைக்காரப் பெண்மணியிடம் தனக்கு காலிஃப்ளவர் ஒரு தட்டு, எங்களுக்கு மிளகாய் பஜ்ஜி ஆளுக்கொரு தட்டு தரச்சொல்கிறாள்.

    ”வீட்ல சொன்னதுக்காக பஜ்ஜி வாங்கிக்காம நல்ல பொண்ணா இருக்காளே….” என நினைக்கும் கணத்தில் தன் தட்டை நீட்டி காலிஃப்ளவர் ஒரு துண்டு எடுத்துக்கொள்ளச் சொல்கிறாள். எடுத்த கணத்தில் ”மொளகா பஜ்ஜி நல்லாருக்கா அங்கிள்?” எனப் பதிலுக்கு காத்திராமல் ஒன்றை எடுத்துக்கொள்கிறாள்.

    “யெம்மா கண்ணு இதெல்லாம் ஓவரு. அம்மா எதும் வாங்கித் தரக்கூடாதுனு சொல்லியிருக்காங்க…. உங்கவீட்டு உப்பைத் தின்னுட்டு துரோகம் செய்யக்கூடாது”

    ”சும்மா கத விடாதீங்க அங்கிள், எங்கம்மா இன்னிக்கு கொழம்புக்கு உப்பே போடலை, அதுக்கு பழிவாங்கிட்டதா நினைச்சு விடுங்க”

    சற்றுத் தாமதித்து மனைவியின் தட்டிலும் அதே முறையை அமுல்படுத்துகிறாள்.

    நடக்க நடக்க மணற் புழுதியில் கால் அமுங்குகிறது. அடர்த்தியாய் புழுக்கமாய் கடற்காற்று கடந்துபோகிறது. காலணியை விட்டுவிட்டு வந்திருக்கலாமோயென நினைத்த நொடியில் கையகல கண்ணாடித்துண்டு கண்ணில் மின்னுகிறது.

    குடிப்பதில் தெளிவாக இருப்பதைவிட, குடித்த பாட்டிலை உடைப்பதில் தெளிவாக இருக்கின்றனர் மக்கள். மீறிய போதையில் பாட்டில்கள் உடைபடுவதைவிட, குடித்த நிமிடங்களில் உள்நாக்கிலிருந்து கசப்பு அகலும் தருணத்தில், தெளிவிலிருந்து போதைக்கு நகரும் முசுவில் ஏதோ ஒன்றைத் தகர்ப்பதுபோல் தூக்கி வீசியடித்து உடைக்கப்படும் பாட்டில்களே அதிகம்.

    உடம்பும், மனசும் கசகசவென்றிருந்தது. துகள்துகளாய் வெதுவெதுப்பாய் காலணிக்குள் புகுந்து சீண்டிய மணல்களை நேசித்து, அலையடிக்கும் கரை எட்டுகிறேன்.

    அலையாய் மக்கள் வெள்ளமும். விவரிக்க முடியாதொரு புழுக்கம் விரிந்து கிடந்தது. கடலுக்கு எப்போது வந்தாலும் ஓடிச்சென்று கால் நனைக்கும் எனக்கு, இந்த முறை நனைய விருப்பமற்றிருந்தது. உடன்வந்தோரை அனுப்பிவிட்டு அவர்களின் காலணிக்கு காவலிருக்கத் துவங்கினேன். என்னைப்போலவே இன்னும் சிலரும் காலணிக்கு காவலிருந்தனர். உதடுகளில் களைப்பானதொரு புன்னகை பூத்தது.

    அலை சீற்றத்தோடு அடித்துக்கொண்டிருந்தது. வானத்தில் வட்ட நிலா மங்கலாகத் தெரிகிறது. இன்றோ நாளையோ பௌர்ணமியாக இருக்கலாம். அலை ஆற்றல் மிகுந்து குதிப்பதாகத் தோன்றியது. கடல் நீரில் கால் நனைக்கும் எல்லோரிடமும், ஒரு கத்தல் குரல் துவங்கிவிடுகிறது. அது மகிழ்ச்சியின் குரலா? பயத்தின் மொழியா? அடைந்துகிடக்கும் அழுத்தத்தின் பிரசவமா?

    யாராக இருந்தாலும், அவர்களிடம் மிச்சமீதியிருக்கும் குழந்தைத் தனத்தை மீட்டுவிடுவதில் கடலலைகளுக்கு சிறப்பான பங்குண்டு. கால் நனைக்க வேண்டாம் என அலைகளிலிருந்து முடிந்தவரை தள்ளி நின்றவர்களையும், அலை எப்போதாவது வந்து வருடிவிட்டுப் போகிறது. அப்படி அலை வருட வரும்போது, நனைய விரும்பாதோர் பொய்யாய் ஒரு பயம் காட்டி பின்வாங்க முயல, அலை ஒரு வேட்டை நாய்போல் பாய்ந்து, பின்வாங்குகையில் வீட்டு நாய்போல் காலைச் சுற்றிவிட்டு எச்சில் படுத்திப்போகிறது. அந்த அலைத்தழுவல் சுகத்தின் பின்னே காய மறுக்கும் பிசுபிசுப்பு ஒட்டிக்கொள்வது தவிர்க்கவியலாத ஒன்று!

    ”சுண்டல்” என ஒரு சிறுவன் கடந்துபோகிறான். எதும் வாங்கும் மனநிலையில்லை. சுண்டல் குறித்து காலம் காலமாய் வாரப் பத்திரைக்கைகளில் படித்த மொக்கை ஜோக்குகள் நினைவுக்கு வருகின்றன. இப்போது யோசிக்கையில், அவை எத்தனை மொக்கையாய் இருந்தன எனத் தோன்றுகிறது.

    கூட்டத்தினூடே புகுந்த குதிரைகள் சவாரிக்கான வாடிக்கையாளரைத் தேடிக்கொண்டிருக்கின்றன. ஒரு படத்தில் நகையைத் திருடிக்கொண்டு வடிவேல் குதிரையில் செல்கையில், என்னத்த கன்னையாவின் பாவனையும், குதிரை திரும்பிவரும் காட்சியும் நினைவில் வந்துபோகின்றது. யாருக்கும் எதுவும் நடக்கலாம் என்பதற்கு வடிவேலு எனும் மா கலைஞன் சரியான உதாரணம் எனும் எண்ணம் மனதில் ஓடுகின்றது.

    அந்த கூட்டத்திலும் மணலில் அமர்ந்திருக்கும், முகத்தில் அடர்த்தியாய் மஞ்சள் பூசியிருந்த பெண்மணி அருகிலிருக்கும் மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். சுருட்டி வைக்கப்பட்ட சில உடைகளை கையில் ஏந்தியிருக்கிறார். குடும்பத்தினர் அலையில் குதூகலித்துக் கொண்டிருக்கலாம். அந்தப் பெண்மணியின் பிள்ளைகள் கடலில் விளையாடிக் கரையேறினால், அம்மாவிடம் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கும்.

    ஒரு அழகிய கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம், மேலே நிலவு தெரிகிறது, மிகப் பக்கத்தில் அலைகள் கரையோடு கூடி உச்சத்தில் கலைகின்றன என்பதையெல்லாம் அமர்ந்தவாறு மும்முரப் பேச்சிலிருப்போர் உணர்ந்திருப்பார்களா?. இப்படியெல்லாம் உணர்ந்தால்தான் வாழ்க்கையா? அவர்களுக்குள் இதையெல்லாம் கடந்த ஒரு பெருமகிழ்ச்சியோ, துக்கமோ ஊடாடிக் கொண்டிருக்கவும் கூடும்.

    அடுக்கிக் கட்டப்பட்டிருக்கும் பலூன்களை ஒரு குடும்பம் ஆள்மாற்றி ஆள்மாற்றி சுட்டுத்தள்ளி மகிழ்ந்துகொண்டிருக்கின்றது. இடைவெளியின்றி அடுக்கப்பட்ட பலூனில் எங்கு சுட்டாலும் ஒரு பலூன் வெடிக்கும் எனும் உளவியலையும் தாண்டி, வெடித்த பலூனில், எதையோ வீழ்த்திய சற்றே செயற்கைச் சாயம் பூசப்பட்ட மகிழ்ச்சி சூழ்ந்து பொங்குகின்றது.

    ஒரு நொடிப்பொழுது, இந்தக் கடற்கரையில் என்னைத் தவிர எல்லோரும் காணாமல் போய்விட்டால் எப்படியிருக்குமென யோசிக்கின்றேன். குதூகலமாய் வீசும் இந்தக் கடலலைகள் சூன்யம் மிகுந்ததாய், அச்சுறுத்தலாய் அந்த நொடியில் மாறிப்போகலாம். இருக்கும் வெளிச்சத்தையும் தாண்டி கூடுதலான இருள் சூழ்ந்ததாகத் தென்படலாம். தலையை உலுக்கி சிந்தனை நிலைப்படுத்துகிறேன். Cast away படம் நினைவுக்கு வருகிறது. எத்தனை அற்புதமான படம். பட நாயகன் நினைவில் வந்துபோகிறான். அப்படியொரு தனிமையில் தள்ளப்பட்டால், கடப்பது எளிதா என்ன?

    நண்பரின் மகள் கொடுத்துச் சென்ற IPhoneஐ எங்கேயென கால்சட்டை பைகளில் கை அநிச்சையாய் தேட, மனைவியும் நண்பரின் மகளும் எங்கேயென கண்கள் தேட, வண்டி விட்ட இடத்தை மனது தேடத்துவங்குகிறது.

    கடல் குறிப்பிட்ட தூரம் வரை கலங்கியும், அதற்கப்பால் ஒரு அழகிய வெளிர் அடர்பச்சை நிறத்திலும் தெரிகிறது. தொலைவில் இரண்டு கப்பல்கள் தெரிகின்றன. கப்பல் எத்தனை பெரிய பிரமாண்ட உலகம். கடந்தமுறை வந்த புயலில் தரைதட்டிய கப்பல் விபத்து நினைவு வருகிறது. அந்த விபத்தில் இறந்து போனவர்களின் குடும்பம் அதன்பின் கடற்கரைக்கு வந்திருக்குமா? மரணத்தைச் சந்திக்கும்வரை அந்தக் குடும்பத்திற்கு கடல் எத்தனை பிரியத்துக்குரியதாக இருந்திருக்கும். இப்போது எத்தனை மடங்கு கசப்பு மிகுந்ததாக மாறியிருக்கும். ஒரு கணம் கடல் மேல் பயம் குவிந்து விலகியது.

    தவழ்ந்து மிதந்து கரை நெருங்குகையில் அடர்த்தி கூடி, அழுத்தம் கூடி, விசை கூடி எழும்பி வரும் அலையைக் கண்டபோது சுறா படத்தில் கடலிலிருந்து விஜய் பறந்தெழும் காட்சி நினைவுக்குள் வந்தது. அப்படியொரு காட்சியை வைக்க அந்த இயக்குனரிடம் எவ்வளவு மொக்கைத் தனம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காட்சியைக் கேட்ட, விஜய்க்கு நடிக்க கொஞ்சம்கூட கூச்சமாக இருந்திருக்காதா? கைபேசியில் இருக்கும் ஃபேஸ்புக் வழியே ”கடலை வெறித்தவாறு காற்று வாங்கும் பொழுதெல்லாம் சுறா படத்தில் விஜய் பறந்து வந்த காட்சி மனதைக் கொத்துகிறது “ எனப் பதிவிடுகிறேன்.

    இதற்குமுன் கடற்கரைக்கு வந்துபோன நினைவுகளை மனது வரிசைப்படுத்துகிறது. பாண்டிச்சேரி, கோவளம், தலச்சேரி, கோழிக்கோடு, மெரினா, பெசண்ட் நகர் என நினைவில் அலையடிக்கிறது. ஒரு பகற்பொழுதில் என்னுடன் எவருமற்று நின்றிருந்த திருச்செந்தூர் கடற்கரை மனதில் வருகிறது. அது ஒரு ஏகாந்த தனிமை. என்னைச் சுற்றிலும் எவரெவரோ, ஆனால் என்னோடு எவருமில்லை. காற்சட்டையை மடித்துவிட்டுக் கொண்டு மதியவெயிலில் மணிக்கணக்கில் நின்றிருந்தேன். அன்றைக்குபோல் என்றைக்கும் நான் கடலினை அனுபவித்ததில்லை. முதற்கூடல் போலவும், முதிர்ந்த கூடல் போலவும் விதவிதமான அனுபவங்களை அன்றைக்கு கடல் அள்ளித்தந்தது. அலைக்குள் குளிக்கவும், அலையில் கால் நனைக்கவும், அலையில் இருந்து ஒரு துளி கூட தொட்டிடாத தூரத்தில் நிற்கவும் என விதவிதமாய் மனிதர்கள் இருந்த அவ்விடத்தில் அலை என்னைத் தாக்கி, தடவி, முத்தமிட்டு, கிள்ளிவைத்து, உரசி, ஊதி, தழுவி என என்னென்னவோ செய்தது. அத்தனை கூட்ட நெரிசலிலும் தனிமையையும், அமைதியை உணர்ந்த அற்புதமான நாள் அது. உடன் வந்திருப்போர்க்கு அலை பிடிக்குமா? நனையப் பிடிக்குமா? நேரம் ஆகிவிடுமா? என எந்தப் பிடுங்கல்களும் இல்லாத ஏகாந்தம் தனியே கடலலையில் நிற்பதில் உண்டு.

    நனைந்த உடைகளோடு, உற்சாகமும், மகிழ்ச்சியும், களைப்பும் ஒன்றிய முகத்தோடு மனைவியும், நண்பர் மகளும் வருகிறார்கள். கையைத் துடைத்துக்கொண்டு IPhone வாங்கிய நண்பரின் மகள், போனை இயக்கி ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலைப் பார்த்து…. ”உங்களுக்கு என்ன தில் இருந்தா விஜயை கிண்டல் அடிப்பீங்க!?” எனப் பொய்க் கோபம் காட்டுகிறாள்.

    கார் இருக்கும் திசையை உத்தேசமாகக் கவனித்து நடக்கிறோம். குறுக்கே கடக்கும் குதிரையின் வாலைப் பிடித்திழுக்க, கடல் பார்க்க வந்த ஒரு சிறுமி முயல்கிறாள். தலைக்கு கையை வைத்துப்படுத்தவாறு ஒருவர் வானம் பார்த்துக் கொண்டிருக்கிறார். குனிந்து செய்தித்தாளை பொறுப்பாக ஒருவர் வாசித்துக் கொண்டிருக்கிறார். ஹெட்போனில் இருக்கும் இரண்டு ஸ்பீக்கர்களை ஆளுக்கொன்றாய் மாட்டிக்கொண்டு ஒரு ஜோடி அமர்ந்திருக்கின்றது. சாலைக்கும், அலைக்கும் இடைப்பட்ட வெளியில் அமர்ந்திருப்பவர்களுக்கென தனி ஒரு உலகம் இருப்பது புரிகின்றது.

    மணற்பரப்பு கடந்து சாலை ஏறுகையில், மீண்டும் எப்போது கடலினைக் காண்போமென மெல்லியதாய், மிக மெல்லியதாய் ஒரு சிறு துக்கம் மனதில் அடைக்கிறது. கடல் ஒரு மாபெரும் உலகம். கடற்கரையும் ஒரு உலகம். கடலும், கடற்கரையும் தாண்டி சாலைக்கு அப்பால் இருப்பதும் ஓர் உலகம். ஒவ்வொரு மனிதனும்கூட ஓர் உலகம்தான். உணர்வதும், நம்புவதும் மட்டும் அவ்வளவு எளிதல்ல!

    Share
  • தண்ணீர்… தண்ணீர்…!

     

    -கவிநயா

    ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. வீட்டுக்காரர் கதவைத் திறந்து பார்க்கிறார். முன் பின் தெரியாத இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

    “யாரைப் பார்க்க வேண்டும்?”

    “உங்கள் வீட்டில் தண்ணீர்க் குழாய் ஏதாவது ஒழுகுகிறதா? அப்படியானால் சொல்லுங்கள். நாங்கள் இலவசமாக சரி பார்த்துத் தருகிறோம்”

    வீட்டுக்காரர் நம்ப முடியாமல் பார்க்கிறார். இலவசமாகவா?!

    இப்படித்தான் ஆரம்பித்தது Drop Dead Foundation-னின் பணி. “Save every drop or drop dead” என்பது இவர்களின் முழக்கம். இந்தச் சிறப்பு மிக்க பணியை ஒற்றை ஆளாகத் தொடங்கியவர், திரு. ஆபிட் சுர்தி (Aabid Surti) என்பவர். இவர் விருது பெற்ற எழுத்தாளரும், ஓவியரும் கூட. ஆனால் இவர் தன்னுடைய பெரிய சாதனையாகக் கருதுவது பல்லாயிரம் லிட்டர் தண்ணீரின் சேமிப்பைத்தான். ஒவ்வொரு வருடமும் இவர் பணியால் 414,000 லிட்டர்கள் தண்ணீர் (மும்பையில் மட்டும்) வீணாகாமல் காப்பாற்றப்படுகிறதாம்!

    70-களில் இருக்கும் இவருக்கு, இளம் வயதிலேயே தண்ணீரின் அருமையை மும்பை வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது. ஒரு முறை ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவர் வீட்டில் ஒழுகிய குழாய் இவரை ரொம்பத் தொந்தரவு செய்திருக்கிறது. ஒழுகும் குழாயை சரி செய்வதில் என்ன கஷ்டம் என்று பலரிடமும் பேசிப் பார்த்த போது, குழாய் சரி செய்பவர்கள் கிடைப்பது அரிதென்றும், கிடைத்தாலும் அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துச் சரி செய்யும் வசதி பலருக்கும் இல்லையென்றும் தெரிய வந்தது.

    ஒரு குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகினாலும், ஒரு மாதத்தில் 1000 லிட்டர் தண்ணீர் வீணாகிறதாம். ஆயிரம் 1-லிட்டர் தண்ணீர் பாட்டில்களைக் கூவத்தில் எறிவதாக நினைத்துப் பாருங்கள்! அவர் அப்படித்தான் நினைத்துப் பார்த்தாராம்!

    அத்துடன் இல்லாது, எதிர்காலத்தில் தண்ணீரின் காரணமாகவே உலக நாடுகளுக்குள் போர் மூளலாம் என்ற செய்தியையும் வாசித்திருக்கிறார்.

    இந்த இரண்டு விஷயங்களையும் அவரால் நமக்கென்ன என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. சரியாக 2007-ல் (உலக தண்ணீர் வருடம்) அவருக்கு உத்தர பிரதேச அரசிடமிருந்து சாகித்ய சந்த்ஸா (Sahitya Santhsa award) விருது ரூ.100,000 கிடைத்தது. உடனடியாக அந்தப் பணத்தை இந்தப் பணிக்குச் செலவிட முடிவெடுத்து விட்டார்.

    ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலையிலும் தன்னுடன் ஒரு குழாய் பழுது பார்ப்பவரைக் (plumber) கூட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று இலவசமாக குழாய்களைப் பழுது பார்த்துத் தருகிறார்.

    இப்போது இவருடையது ஒரு இயக்கமாகவே மாறி விட்டது. பள்ளிக் குழந்தைகளையும் இவருடைய தண்ணீர் சேமிக்கும் இயக்கத்தில் ஈடுபடுத்தி வருகிறார்.

    “A penny saved is a penny earned” என்று சொல்வார்கள். அது தண்ணீருக்கும் நிச்சயம் பொருந்தும். சிறு துளி பெரு வெள்ளமல்லவா? குறிப்பாகப் பருவ மழை பொய்த்துப் போகும் இந்தக் காலத்தில், ஆறு குளங்களெல்லாம் கட்டிடங்களாகிக் கொண்டு வரும் இந்தக் காலத்தில், தனி மனிதனால் செய்யக் கூடியவற்றவைகளையாவது நாம் செய்ய வேண்டுமல்லவா? அதுதானே நாம் நம் சந்ததியினருக்கு விட்டு போகும் செல்வம்? இப்போதிருக்கும் நிலைமையில் நாம் வறண்ட பூமியைத்தான், உணவும், நீரும், இல்லாத பூமியைத்தான் அவர்களுக்கு விட்டுப் போகத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறோம்! 🙁

    நாம் ஒவ்வொருவரும் ஆபிட் சுர்தியாக ஆக முடியா விட்டாலும், தண்ணீரைச் சேமிக்க நம்மாலான பல எளிய வழிகள் இருக்கின்றன.

    ஒழுகும் குழாய் இருந்தால் உடனடியாகச் சரி பார்க்கலாம்.

    காலையில் பல் துலக்கும் போது பலரும் தண்ணீரைத் திறந்து வைத்து, அது பாட்டுக்கு போய்க் கொண்டிருக்க, அவர்கள் பல் துலக்குவார்கள். அப்படியில்லாமல் தண்ணீரை வேண்டுமென்னும் போது மட்டும் திறந்து கொள்ளலாம்.

    பாத்திரம் துலக்கும் போதும் சிலருக்கு தண்ணீர் போய்க் கொண்டே இருக்க வேண்டும், அல்லது முழு வேகத்தில் திறந்து விடுவார்கள். இதிலெல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.

    குளிக்கும் போதும் அப்படியே. சோப்பு போடும் போது தண்ணீரை நிறுத்தி வைக்கலாம். குளிக்கும் போது கனவு கண்டு கொண்டிருந்தாலும் (மற்ற விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும்), தண்ணீர் போய்க் கொண்டிருப்பதே தெரியாது. அதனால் குளியல் கனவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். (இதை எனக்கே சொல்லிக் கொள்கிறேன்!)

    சிலர் தண்ணீர் குடிப்பதற்கென எடுக்கும் போது தம்ளர் நிறைய எடுத்து விட்டு, கால் தம்ளர் மட்டுமே குடித்து விட்டு மீதியைக் கீழே ஊற்றி விடுவார்கள். அதற்குப் பதில் வேண்டுமென்கிற அளவு மட்டுமே எடுத்துக் குடிக்கலாம்.

    சரியாக மூடப் படாத குழாயைப் பார்த்தால், பொது இடமாக இருந்தாலும் நமக்கென்ன என்று போகாமல் சரியாக மூடலாம்.

    தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்!

    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

    அன்புடன்
    கவிநயா

    பி.கு.: சுகி. சிவம் அவர்கள் ஒரு முறை இவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். அதிலிருந்துதான் இந்தக் கட்டுரை எழுதும் எண்ணம் வந்தது. ஆகையால், அவருக்கு நன்றி!

    படத்துக்கு நன்றி: http://superaalifragilistic.wordpress.com/2013/01/26/saving-the-planet-one-drop-at-a-time/

     

    Share
  • இறுக்கமாகிக் கொண்டிருக்கும் சமூக வாழ்க்கை …………

    எஸ் வி வேணுகோபாலன்

    அண்மையில் ‘சிறப்பாக’ ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் வந்திருக்கிறது:

    ”நீங்க நியூஸ் பேப்பரே படிக்கிறது இல்லையா?”
    ”டெய்லி டேட் மாத்தி விக்கிறான்… அதை எதுக்குப் படிக்கணும்?”

    இது நகைச்சுவைக்காக எழுதப் பட்ட ஒரு வசனம் தான். ஆனால் செய்தித் தாள்களில் வரும் சில திடுக்கிடும் செய்திகள், பரபரப்பு விஷயம், அதிர்ச்சி சம்பவம் இவற்றைத் தொகுக்க உட்கார்ந்தால், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சில நிகழ்வுகள் நம்மைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பது போலத் தோன்றும். ஒரு பத்து நாள் விஷயங்களை ஒரு சேர எடுத்து வாசிக்க நேர்ந்தால் சமூகத்தில் நம்பிக்கை கொள்வதற்கு எதுவுமே மிஞ்சாது போல் கூடத் தோன்றும்.

    கொலை, தற்கொலை, கணவன் – மனைவி உறவில் விரிசல், அதிகமாகிக் கொண்டிருக்கும் மண முறிவு (விவாகரத்து), கள்ளக் காதல், பரஸ்பர சந்தேகம், நிம்மதியற்ற தாம்பத்திய வாழ்க்கை, பொருளாதார ஏற்றத் தாழ்வு மற்றும் மனைவி வேலைக்குப் போவது குறித்த கருத்து முரண்பாடு, குடும்ப உறுப்பினர் நிமித்தம் கருத்து மோதல்கள்…..இவை குறித்த இடைவிடாத செய்திகள் நாளிதழ் முழுக்க நிறைந்திருப்பதைக் காண முடியும். குடும்பங்கள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன என்ற சித்திரம் நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும், அப்படியான குரல் கேட்கும்படி பல செய்திகள் வருகின்றன.

    இவை எதுவும் பொய்யான செய்திகள் அன்று. எங்கோ நடப்பதைத் தான் எழுதுகின்றனர். ஆனால், சமூகம் முழுக்க இந்த மாதிரியான விஷயங்களே நிறைந்திருப்பது மாதிரியான தோற்றம் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது. அது உண்மை அல்ல. இந்தச் செய்திகள் வழங்கப்படும் விதம் அப்படியான ஒரு தாக்கத்தை வாசகருக்கு ஏற்படுத்துகிறது.

    அப்போதைக்கு வெளிவந்திருக்கும் செய்திகள், ஒரு பக்க சார்பாக வெளிப்படும் செய்திகள், முழு விவரமற்ற ஊகத்தில் புனையப்படும் செய்திகள், உண்மை கலவாத கற்பனை சரடுகள், உணவில் சேர்க்கப்படும் அஜினமோட்டோ போல் விறுவிறுப்பு ஏற்றி எழுதப்படும் செய்திகள், மறுப்பு வந்தாலும் கண்டு கொள்ளாது விடப்படும் செய்திகள்…..என இது ஒரு தனி விவாதத்திற்குரிய அம்சம்.

    இன்னொருபுறம், இந்தச் செய்திகள் படிப்பவர் மனத்தில் பன்மடங்கு விரிவாக்கம் செய்து புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பது தெரிந்தும் தெரியாதது போல் எழுதப்படுவது. அதாவது எங்கோ ஒன்று இரண்டு நிகழ்வுகள் என்றல்ல, வர வர காலம் போகும் போக்கே சரி இல்லையே என்று தான் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.

    ஏன் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன….ஏதாவது காரணங்கள் உண்டா, தற்செயலான நிகழ்ச்சிப் போக்குகள் தானா என்றெல்லாம் பெரிய விவாதங்களையோ அலசல்களையோ ஊடகங்கள் நடத்துவதில்லை. தங்களுக்கு ஆதாயம் உருவாக்கும் அதிரடி, பரபரப்பு செய்திகள் மீது மட்டும் கண் கூசும் அளவு வெளிச்சம் பாய்ச்சுவதும், சமூகத்திற்கு உருப்படியாகச் சொல்லத் தக்க அல்லது சொல்ல வேண்டிய விஷயங்களை இருட்டடிப்பு செய்வதும் ஊடக வாடிக்கை. அவர்களுக்கு அதில் அரசியல், வர்த்தக நோக்கம் உண்டு.

    இன்றைய சமூகம் பெருமளவு இறுக்கமான நிலையில் இயங்குகிறது என்பது கவனிக்கத் தக்கது. இறுக்கமான சமூக இயக்கம் மனிதர்களை நெளிவு சுளிவுக்கு உட்பட மறுக்க வைக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட தேவையற்ற விரோத மனப்பான்மை உருவாக இடம் தருகிறது. அடுத்தவர் சொல்வதைக் கேட்கும் பொறுமையோ, எதிர்ப்பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்று அறிய விரும்பும் தன்மையோ இல்லாது போய்க் கொண்டிருக்கிறது. தாம் செய்வது சரி என்று தீர்மானமாக நம்பும்போது மற்ற எல்லாக் கதவுகளும் அடைபட்டுவிடுகின்றன. பகிர்தல் அற்ற உளவியல் ஓர் அழுத்தத்தை உள்ளே கூட்டிக் கொண்டே செல்கிறது. இதனால் மூச்சு திணறும் மனிதர்கள் வன்மம் வளர்த்துக் கொள்ளவும், வன்முறையை யோசிக்கவும் நேர்கிறது. அல்லது, தங்களுக்கு இங்கே வாழ இடமில்லை என்று முடிவெடுக்கவும் தூண்டுகிறது.

    இந்த இறுக்கமான சமூக இயங்குதல், நெளிவு சுளிவுக்கு உட்பட மறுக்கும் உளவியல் ஒருபுறம். மற்றொருபுறம், கனவுகளையும், இலக்குகளையும், வெற்றிக் கோடுகளையும் மட்டுமே நிறுத்தி ஓடிக் கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கை. இவை மனிதர்களை எளிதில் சலிப்படைய வைக்கிறது. மிக இலகுவாக நிராசை அடைய வைக்கிறது. விரும்பிய உணவை ருசித்து உண்ணவேண்டிய பொழுதில், எரிச்சலும் பதட்டமும் உணவுத் தட்டை நிரப்பி விடுகின்றன.

    தாம் மட்டுமே ஏமாற்றப் படுகிறோம் அல்லது தாம் மட்டிலும் எப்படியாவது முந்திச் சென்று விட வேண்டும் என்ற உளப்பாங்கை இன்றைய போட்டி உலகம் ஏற்படுத்துகிறது. சந்தைப் பொருளாதார உலகம் தனித்தனி நியாயங்களை, தனித்தனி கற்பிதங்களை, தனித்தனி தீர்வுகளை நுட்பமாக சமூகத்தில் நடுகிறது.

    இந்த உணர்வாக்கம் தான், வெல்வதற்காக எதுவும் செய்யலாம் என்று தூண்டுகிறது. வெற்றிப் பயணத்தின் திசை வழியில் வெல்வதற்கான கருவிகளை எப்படியும் பயன்படுத்தலாம் என்று கற்பிக்கிறது. அடுத்தவர் வலியை, அடுத்தவர் துயரை, அடுத்தவர் கதறலை நின்று நிதானித்துக் கேட்டு, அவர்களுக்கு ஆறுதல் வழங்கலாம் என்று நிற்பது கூடத் தமது நேரத்தில் வீண் விரயம் என்று பாராதது போலக் கடந்து செல்ல வைக்கிறது.

    சக மனிதர்கள் என்ற சொல்லை எடுத்துவிட்டு சக போட்டியாளர்கள் என்ற சொல்லாடலை முன்வைக்கிறது. உரையாடல்களுக்குப் பதிலாக வாக்கு வாதங்களையும், நிதானமான அணுகுமுறைகளுக்கு மாற்றாக ஆவேசத் தலையீடுகளையும், மறு பரிசீலனைக்குப் புறம்பாக இறுதிச் சொல் இதுவே என்ற வற்புறுத்தலையும், பன்முக நோக்கைக் கை கழுவி ஒற்றைக் கோணத்தையும், திறந்த பார்வையை உதறிவிட்டுக் குறுகலான சொந்தப் பார்வையையும் முன்மொழிகிறது.

    இதனால் தான், பேசித் தீர்க்கக் கூடிய விவாதங்களில் திடீரென்று ஆயுதங்கள் மூலம் பிரச்சனைகள் ‘தீர்த்துக்’ கட்டப்படுவதைக் காண்கிறோம்.சண்டை இட்டுக் கொண்டிருக்கும் யாரோ இருவரிடையே புகுந்து சமரசம் செய்ய முயற்சி எடுக்கும் மூன்றாவது நபர் கொலையுண்டதான செய்திகளை அதிர்ச்சியோடு கவனிக்கிறோம். ஆசிரியரைக் கொல்லத் துணியும் மாணவரையும், எந்தக் காரணமும் இன்றி அண்டை வீட்டு நபரைப் ‘போட்டுத் தள்ளும்’ மனிதர்களையும் கண்டு நடுங்குகிறோம்.

    இதன் விபரீத அடையாளங்கள் குடும்ப உறவிலும் வெளிப்படுகின்றன. திருமணம் நிச்சயிக்கும் பெற்றோர் குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள், எதை எதிர்பார்க்கின்றனர் என்று பொறுமையோடு கேட்டறியாத போதும், திருமண வயதில் உள்ள ஆணும் பெண்ணும் மனம் விட்டு பெற்றோரிடம் பேசத் தவறுகிற போதும் முதல் கட்ட பிரச்சனைகள் தோன்றுகின்றன. கல்வி, வேலைத் தன்மை, ஊதியம் போன்றவையும், உணவுப் பழக்கங்களும், வேறு வகை பழக்க வழக்கங்களும் திருமணத்திற்கு அடுத்த நாளில் இருந்தே பூதாகர உருவெடுக்கின்றன.

    தாங்கள் எப்படியும்இருக்கலாம், பெண்கள் மட்டும் அடங்கிப் போகவேண்டும் என்ற ஆணாதிக்க மனோபாவம் நவீன பண்பாடுகளை விரும்புவதுபோல் காட்டிக் கொள்ளும் ஆண்களிடமும் நிலவுகிறது. பரஸ்பரம் ஒளிவு மறைவற்ற பகிர்தலுக்கான இடம் மறுக்கப் பட்டதாக குடும்பங்கள் இன்று பெருகி வருகின்றன. சின்னச் சின்ன கருத்து முரண்பாடுகள் கூட பெரிய மோதல்களாக வெடிக்கின்றன. சரி செய்யக் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு இடைவெளியும், பெரிய பெரிய பள்ளங்களாக உருவெடுத்து விடுகின்றன.

    குடும்ப வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஜனநாயகத் தன்மை வேண்டும் என்ற அம்சம் நமது மரபிலோ, கல்வியிலோ, வளர்ப்பிலோ கிடையாது என்பது மிக சுலபமாக, இனிமையாக பேசி சரி செய்யத் தக்க விஷயங்களைக் கூட ஊதி ஊதிப் பெரிதாக்குகிறது. ஈகோ எனப்படும் அகங்காரம் அறிவுக் கண்ணை இறுக்க மூடிவிடுகிறது.

    அதிக ஊதியம் பெற்றுத் தரும் ஓய்வு ஒழிச்சல் அற்ற வேலைகளில் ஈடுபடுவோர் தமக்கான நிம்மதியை மது பானத்தில் தேடுவது தற்காலத்திய மிகப் பெரிய பிரச்சனையாக உரு மாறியிருக்கிறது. மது ஒரு தவறான பழக்கம் என்று சமூக மதிப்பில் பார்க்க வேண்டியதில்லை. ஆல்கஹால், நமது உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், நமது உளவியலில் ஆட்டிப் படைக்கும் மாற்றங்கள், பொருளாதார ரீதியாக சுமத்தும் செலவினம், பொதுவெளியில் ஏற்படுத்தும் நெருக்கடிகள் இவை பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. கூட்டாக, குடும்ப சங்கமமாக, உறவின் வெளிப்பாடாக, நட்பின் அடிப்படை கட்டுமானமாக இன்று மது அருந்துதல் மாறிக் கொண்டிருக்கிறது. இதன் வெடிப்புகளும் குடும்ப உறவில் பிரதிபலிக்கின்றன.

    பணத்தை முன் நிறுத்தும் தாராளமய பொருளாதாரம் குறுக்கு வழியில், மிக விரைவான கதியில் முன்னேறிவிட முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறது. நீடித்த, ஆரோக்கியமான, மகிழ்ச்சி தரும் சொந்தங்களை விடவும், குறுகிய காலத்திற்கு இன்பம் பயக்கும் உறவுகளை நாடத் தூண்டுகிறது. இதன் தாக்கமே எல்லை மீறிய ஆசைகள், தவறான தொடர்புகள், நட்பின் விரிசல்கள் போன்றவற்றை நியாயப் படுத்துகின்றன. பணம் எல்லாவித உறவுகளையும் சிதைக்கிறது என்பதை மார்க்சிய பார்வை சுட்டிக் காட்டுகிறது. கலை, கேளிக்கை, விளையாட்டு எல்லாவற்றையும் காசு எப்படி பேரம் பேசுகிறது, சீரழிக்கிறது, கொச்சைப் படுத்துகிறது என்று நாம் பார்க்கிறோம். மனித உறவுகளையும் அது ஈவிரக்கமின்றி மிதித்துப் போகிறது.

    நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் அல்லது செய்தி ஊடகங்களில் தெரிந்து கொள்கிற நடப்புகள், தனி நபர் நடவடிக்கைகள் போலவோ, தனி நபர் வாழ்க்கை தடுமாற்றங்கள் போலவோ நமக்குத் தெரிகின்றன. ஆனால் அவற்றை நுட்பமாக கவனிக்கத் தான் வேண்டும். முற்போக்கான மதிப்பீடுகள் மட்டுமே சமூகத்திற்கு ஆரோக்கியமான முன்மாதிரிகளை ஏற்படுத்தித் தர இயலாது, வெறும் பேச்சுக்களால் மட்டும் சமூகத்தை மாற்றி அமைக்க முடியாது. ஆரோக்கியமான சமூக மாற்றம் பற்றிய அக்கறை கொள்வோர் இந்தச் செய்திகளைக் கடக்கும்போது மாற்று சமூகப் பார்வைகள் குறித்த விவாதத்தை அதிகரிக்க வேண்டும். முற்போக்கான முன்னுதாரணங்கள் பொது மன்றத்தில் பரந்த கவனத்திற்கு எடுத்துச் செல்லப் படவேண்டும்.

    வாழ்க்கையின் தடுமாற்றங்களைத் தனி நபர் பிரச்சனைகளாக ஊடகங்கள் செய்தியாக்கும்போது அதை தேடித் தேடி படிக்கும் கிளுகிளுப்பு ஒரு விற்பனை சரக்கு. அதன் மூல காரணத்தைத் தேடிப் பார்த்து விவாதிப்பது மாற்றங்களுக்கான தொடக்கப் புள்ளி.

    ***********

    நன்றி : வண்ணக்கதிர்

    Share
  • நடுங்கும் நடுத்தரங்கள்

     

    சச்சிதானந்தம்

     

    வறுமையில் வாடுபவன் கூட,

    வெறுமையின் எல்லைக்குச் சென்றாவது

    வெற்றியின் மடியை அடைகிறான்,

    பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாதவன்

    சிந்தனையிலும் சிக்கல்கள் இருப்பதில்லை!

    சிகரங்கள் அவனைச் சரணடைகின்றன!

    ஆனால்,

    நடுத்தரக் குடும்பங்கள், என்றும்

    நடுங்கும் தரத்துடனேயே இருக்கின்றன!

    அன்றாடத் தேவைகளுக்காக

    மன்றாடித் திரிந்து,

    இலட்சியக் கனவுகளைப் பணயம் வைத்து,

    வாழ்க்கைப் பயணத்தைத்

    தொடர்ந்திடும் பரிதாப நிலை!

    உணவுத் தேவைகளே அவன்

    உழைப்பின் எல்லையாய்

    அமைந்துவிடும் பாவக்கோலம்!

    உணர்வுத் தேவைகளான

    இலட்சியங்களும்,கனவுகளும்

    நடைமுறைத் தேவைகளின்

    நச்சுச் சூட்டில் உலர்ந்துபோகின்றன!

    உலர்ந்து போன கனவுகளுடனும்

    உறைந்துபோன உற்சாகங்களுடனும்

    அவன் இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றான்!

    தன் பிள்ளையாவது சாதிப்பான் என்று!

    Share
  • அன்பே அழகானது – 2

    ராஜப்ரியன்

    டாடி ….

    டாடி ……….

    என்னடா ?

    பைக் ஓட்டனா காது கேட்காதா டாடி?

    எத்தனை முறை சொல்லியிருக்கன் அப்பான்னு கூப்டுன்னு.

    ஸாரி.

    சரி எதுக்கு கூப்ட்ட.

    எங்க போறோம் ?

    என்னடா கேள்வியிது. ஆறாவது சேர்ந்துயிருக்க புது ஸ்கூல் அதனால உனக்கு யூனிபார்ம் எடுக்கப் போறோம்.

    அது தெரியும். கிளம்பும்போது என்ன சொன்னிங்க.

    என்ன சொன்னன்?

    ஐஸ்கிரிம் சாப்பிட்டுட்டு அப்பறம்மா டிரஸ் எடுக்கலாம்ன்னு சொன்னிங்கயில்ல.

    ஆமாம் அதுக்குயென்ன இப்போ.

    முதல்ல ஐஸ்கிரிம் பார்லர் அதுக்கப்பறம் டிரஸ்.

    நீ ஓழுங்கா ஐஸ்கிரிம் சாப்பிடமாட்ட. டிரஸ் மேலப்படும். அப்படியே துணிக்கடைக்குப் போனா அசிங்கமா இருக்கும். அதனால போகும் போது வாங்கித்தர்றன் வீட்ல வந்து சாப்பிடு.

    வீட்ல வந்து சாப்பிடறன். ஆனா இப்ப வாங்கித்தா.

    டிரஸ் எடுக்கப் போறப்ப அத வேற கைல எடுத்துக்கிட்டு போகனும்டா.

    டிரஸ் எடுத்ததுக்கப்பறம் காசுயில்ல, சளி புடிக்கும்ன்னு சொல்லுவீங்க.

    அதெல்லாம் சொல்லமாட்டன்டா.

    உங்களப்பத்தி எனக்கு தெரியும்.

    கேடிடா நீ.

    நான் உன் பையன்ப்பா என்றவனிடம் வேறு எதுவும் பேசாமல் பைக்கை ஐஸ்கிரிம் பார்லர் முன் நிறுத்தியதும் நீ வெளியில இருப்பா நான் வாங்கி வந்துடறன் என 200 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓடிய ரஞ்சித் நான்கு ஐஸ்கிரிம் கப்புகளை வாங்கிக்கொண்டு மீதி சில்லறையை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வருவதை மதன் பார்த்தான்.

    அருகே வந்த ரஞ்சித்திடம் மீதி பணத்த எங்கிட்ட தாடா.

    உங்கிட்ட காசுயில்லாதப்ப தர்றன் என்றபடியே வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

    உனக்கு வர்ற வர்ற கொழுப்பு அதிகமாயிடுச்சிடா.

    அதுக்குத்தான் சாப்பாட்டுல ஆயில் குறைக்கச்சொல்றன்.

    அவன் நக்கலடிப்பதைக் கேட்டு டேய் பேசாம வா என்றதுக்கு ‘ம்’ என்றான்.

    குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் அலுவலகத்தில் சொன்னபடி அவர்கள் குறிப்பிட்ட துணிக்கடைக்கு சென்று மூன்று செட் யூனிபார்ம், டை, ஷீ எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர இரவு 8 மணியானது. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்ததும் டேய் தோசை சுடறன் சாப்பிட்டுட்டு அதுக்கப்பறம் ஓரே ஒரு ஐஸ்கிரிம் சாப்பிடு. மீதிய நாளைக்கு சாப்பிடுவ.

    நோ டாடி. இப்ப டூ, டுமாரோ டூ.

    நைட்ல சாப்பிட்டா சளி பிடிக்கும் காலையில சாப்பிடுடா.

    காலையில சாப்ட்டா கோல்டாகாதா?.

    ஆகாது.

    ஏன்?.

    கேள்வி கேட்காம அதக் கொண்டு வந்து பிரிட்ஜ்ல வை.

    பிரிட்ஜ்ஜைத் திறந்து அதை வைத்தபடியே நான் தூங்கனதுக்கப்பறம் நீ எடுத்து சாப்பிடமாட்டயில்ல.

    நீ அதிகமா என்னை நக்கல் அடிக்கறடா எனச்சொன்னதை அலட்சியவன்.

    தோசைக்கு சக்கரை வச்சி தாப்பா.

    ம் என்றதும் ஹாலுக்கு சென்று டிவியை போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். ஆதித்யா, போகோ, நிக் என மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தவன் முன்னால் தோசை தட்டை வைத்ததும் ரிமோட்டை தொடைக்கு கீழே வைத்துவிட்டு சாப்பிட தொடங்கினான். நானும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினேன். எதையும் கண்டுக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டை தந்தான். நான் பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வரும்வரை டிவி முன்பே உட்கார்ந்து இருந்தவனிடம் டைம்மாகிடுச்சி ரஞ்சித் படுக்கலாம்.

    இன்னும் கொஞ்ச நேரம்ப்பா.

    ரிப்பீட்டட் புரோகிராம்டா நாளைக்கும் போடுவான் வா என்றதும் டிவியை ஆப் செய்துவிட்டு பெட்ரூமுக்குள் நுழைந்தான். நான் கதவை லாக் செய்துவிட்டு பெட்ரூமுக்கு வர அவன் கட்டிலில் படுத்திருந்தான். அவனுக்கு பெட்ஷீட் போர்த்திவிட்டு பக்கத்தில் அமர்ந்தேன்.

    ஸ்கூல் எப்பப்பா ஓப்பன்.

    இன்னும் இரண்டு நாள் இருக்கு.

    தினமும் நீ அழைச்சிம்போய் விடுவியாப்பா.

    காலையில ஆட்டோவுல போய்டு. ஈவ்னிங் நான் வந்து உன்னை அழைச்சி வர்றன்.

    காலையில உன்னோட பைக்லயே வர்றன்ப்பா.

    எனக்கு ஆபிஸ் பத்து மணிக்குடா. உனக்கு ஸ்கூல் 8:30 மணிக்கு ஸ்டார்ட்டாகிடும். அதனால நீ காலையில ஆட்டோவுல போய்டு. மதியம் லஞ்ச்ச பாக்ஸ்ல எடுத்தும் போய்டு. தாத்தா பாட்டி ஊர்லயிருந்து வந்ததுக்கப்பறம் பாட்டி தினமும் மதியம் லஞ்ச் எடுத்து வருவாங்க.

    போப்பா தாத்தாவும் – பாட்டியும் வந்துடுவாங்கன்னு நீயும் தான் சொல்ற. அவுங்க வரவே மாட்டேன்கிறாங்க.

    வருவாங்கடா செல்லம் இப்ப நீ தூங்கு என்றதும் அவன் சோகமாக கண்ணை மூடிக்கொண்டான். அவன் தூங்குவது உறுதியானதும் கட்டில் டிராயரை சத்தம் வராமல் திறந்தேன். அதில் லேமினேஷன் செய்யப்பட்ட போட்டோவில் ஜோடியாக நானும் என் மனைவியும் சிரித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் மனம் பாரமானது.

    தொடரும்

    Share
  • மே (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    வெங்கட் சாமிநாதன்

    கதைகளின் வருகை குறைந்ததற்குக் காரணம் எழுதுபவர்கள் பலருக்கு நாம்/ நான் உற்சாகம் கொடுக்கமுடியாமற் போவது தான் . வருவது முப்பது முப்பத்தைந்து கதைகளே ஆனாலும் ஒன்றிரண்டு நம்மை மிகவும் கவர்ந்து கொள்வதே பெரிய காரியம்.

    இம்முறை கதைகள் வெகுவாகக் குறைந்த போதிலும் பலர் வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். இப் புதிய முயற்சிகளில், தேமொழியின் துப்பறியும் கதை முயற்சி வந்தவற்றுள் படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது. மே மாத சிறுகதைப் போட்டியின் வெற்றியாளராக தேமொழியைத் தேர்ந்தெடுக்கிறேன்.

    தேமொழிக்கு என் பாராட்டுக்கள்.

    இந்த மாத சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற சிறுகதைகள்:

    1.முன்னைப் பிறவியில்… (கவிதைக்கதை)

     

    2. நகைச்சுவைத் திருவிழா

    3.ஜினா என்றொரு க்ருயெல்லா

    4.அவ்யயாநந்தர்

    5. பேஸ்புக் ஸ்டேடஸ் (Facebook Status)

    6. ஆராதனா

    7.பெண்மை

    போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே. வெற்றி  பெற்ற தேமொழிக்கு வல்லமை குழுவினரின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.  போட்டியில் அனைவரையும் பங்குபெற வரவேற்கிறோம்.
    அன்புடன்
    பவள சங்கரி
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ஏற்கனவே ஒருமுறை அருங்காட்சியகங்களின் அருமையைப் பற்றி (தேமொழி எழுதியபோது) அதன் பெருமையை எடுத்துக் காட்டினோம். இப்போது இன்னொரு அருங்காட்சியகமும் அதன் பூர்வகதையும் பற்றிய தகவல் அடங்கிய கட்டுரை ஒன்றினை இரண்டு நாட்கள் முன்பு படிக்க நேர்ந்தது. பாரத பண்பாட்டையும் அதன் சிற்பக் கலையின் மேம்பாட்டையும் நன்கு உணர்ந்து அதன் உன்னதத்தைப் போற்றியதோடு மட்டுமல்லாமல் அந்த சிற்பங்களை பாதுகாக்க அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் இரு மேற்கத்தியவர்கள் ஆற்றிய பணிகள் பற்றிய சிறு வரலாற்றுடன் கூடியது

    சிற்பக் கலையின் பெருமைகளை அறியத் தரும் ஒரு அருமையான தளம், சிங்கப்பூர் விஜய் அவர்களின் கல்லிலே கலைவண்ணம் கண்டான் – பொயட்ரி-இன்-ஸ்டோன், இதன் பதிவுகள் இந்த வாரத்தில் முன்னூறை எட்டியுள்ளன. இந்த முன்னூறாம் பதிவை இந்த வாரம் பதிப்பித்தவர் நம் மதிப்பிற்குரிய எழுத்தாளர் கடலோடி திரு நரசய்யா அவர்கள். இந்தப் பதிவில்தான் நான் மேற்குறிப்பிட்ட பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மதுரை மதன கோபால்சாமி ஆலய கலைச் சிற்பங்கள் பற்றிய முன்வரலாற்றுக் குறிப்பை மிகச் சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுத்தின் மூலமாக சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    சரி, இவர் விஷயங்களுக்குப் போவதற்கு முன், நாம் ஸ்டெல்லா கிராம்ரிஸ்ச் எனும் அம்மையாரைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் வேண்டும். நான் கிருத்திகாவின் (மதுரம் பூதலிங்கம்) ‘லெட்டெர்ட் டயலாக்’ எனும் புத்தகத்தை எழுதும்போதும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடும்போதுதான் ஸ்டெல்லா, கிருத்திகாவை அமெரிக்காவுக்கு அழைத்த விவரம் கண்டு வியந்தேன். ஸ்டெல்லா (1896-1993) ஒரு கலைப்பிரியர். ஆஸ்திரியாவில் பிறந்தாலும் பாரதத்தின் பண்பாடு இவரை ஈர்த்தது. இளம்பருவத்திலே மேற்கத்திய நடனத்தில் தேர்ந்தவர்தான் எனினும், வியன்னாவில் வசிக்கும்போது இவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகவத் கீதை இவர் மனதை கொள்ளை கொண்டது. இது இவரை வடமொழியில் ஈடுபாடு கொள்ளச் செய்ததோடு மட்டுமல்லாமல் வடமொழியில் டாக்டர் பட்டமும் பெறும் அளவுக்கு கொண்டு சென்றது. இந்திய சமயத் தத்துவங்களில் இவர் ஈடுபாடும் இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பேசிய சொற்பொழிவும் கல்கத்தாவில் உள்ள தேசிய கவிஞர் ரவீந்திரநாத தாகூர் கேள்விப்பட்டு இவரை சாந்திநிகேதனில் பணியாற்றுமாறு அழைத்தார். 1924 முதல் 1950 வரை சாந்திநிகேதனில் இந்தியக் கலைகளுக்கான பேராசிரியராகப் பணியாற்றியபோதுதான் ஃபிஸ்கே கிம்பெல் (இவர் அப்போது பிலெடெல்பியாவில் அருங்காட்சியக இயக்குநராக இருந்தவர்) பேராசிரியை ஸ்டெல்லாவை அமெரிக்காவில் அந்த அருங்காட்சியகப் பொறுப்பாளராக அழைப்பு விடுத்தார். ஏற்கனவே இந்தியக் கலைப் பண்பாடுகளில் ஆர்வம் மிகுந்த ஸ்டெல்லா இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பிலடெல்பியா சென்றதும் செய்த முதல் வேலை இந்தியக் கலைப்பொருள்களுக்கான பகுதியை அந்த அருங்காட்சியகத்தில் விரிவாக்கியதுதான். அத்துடன் இல்லாமல் பொறுப்பாளருக்கான நிதி உதவி (நன்கொடை) இருக்கை (Curatorial Chair Endowment) ஒன்றையும் உருவாக்கி ஊக்கமளித்தார். இப்படி இந்த இருக்கைக்கான முதல் நிதியுதவி நியமனத்தைப் பெற்றவர் டெரீல்லெ மேஸன் எனும் பெண்மணியார். மதுரை (ஆலவாய்) பற்றி எழுதும்போது மேஸன் அவர்களிடமிருந்து பல செய்திகள் பெற்றுக் கொண்டதையும் என்னால் மறக்கமுடியாது.

    மறுபடியும் நார்மன் பிரவுன் அவர்களிடத்தே வருவோம். 1931 இல் அருங்காட்சியகத்தில் இந்தியக் கலைச் சொத்துக்கான முதல் பொறுப்பாளராக பதவியேற்றவர் பிற்காலத்தில் பலமுறை இந்தியா வந்து சென்றார். அவருக்கு கல்கத்தா, சென்னை பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் கொடுத்துப் பெருமை பெற்றன. அவருடைய கலையறிவும் ஞானமும் அவர் எழுதிய எழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் ஒன்றுதான் ஒரு சிறிய புத்தகம், ஆனால் ஞானம் தோய்ந்தது. அதன் பெயர் ‘எ பில்லர்ட் ஹால் ஃபிரம் டெம்பிள் அட் மதுரா’ என்பது. இப் புத்தகத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழகமே 1940 இல் பிரசுரித்தது. இந்தப் புத்தகத்தில்தான் அந்த அருங்காட்சியகத்தில் உள்ள அரிய சிலைகளின் பிறப்பிடத்தை தான் எப்படி கண்டுகொண்டு அதன் நேர்த்தியையும் அழகையும் எப்படியெல்லாம் வியந்தோம் என்பதையும் எழுதி இருக்கிறார். மதுரை மதனகோபால் சுவாமி சிற்பங்கள் பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் பார்க்கப்படும்போதும் அவைகளின் பிறப்பிடம் நம்முடைய ஊர்தான் என்று தெரியவரும்போதும், நம்மை விட மிக எச்சரிக்கையாகவும், அழகாகவும் பராமரிக்கப்படும் நேர்த்தியைப் பார்க்கும்போதும் நமக்குள் ஒருவித பெருமை நம்மையறியாமல் தோன்றும்தான்.

    மேலும் படிக்க சுவையான இந்த இணைப்பைச் சொடுக்குங்களேன்..
    http://poetryinstone.in/lang/ta/2013/05/31/300th-post-connection-of-west-and-east-by-art-poetryinstone-becomes-a-record-of-history-kra-narasiah.html

    நரசய்யா அவர்கள் எனக்கு எப்போதும் எழுத்துலகில் பெரிய வழிகாட்டியாக இருப்பவர். அவர் என்னைப் பாராட்டி எழுதிய எத்தனையோ சந்தர்ப்பங்களைக் கைவரப்பெற்றவன்.. ஆனாலும் சிறியனாகிய நான் எப்போதுமே அவரை ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இவரது அனுபவங்கள், தெளிந்த ஆராய்ச்சிகள், நேர்மையான எழுத்துகள், அதற்கும் மேலாக எளிமை, இன்னும் இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்தான் இவை எல்லாமே எதிர்கால எழுத்தாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான். இந்த முன்னூறாவது பதிவிலும் அவரது ஆராய்ச்சியின் புலமையும் அவரது நினைவாற்றலும் போற்றத்தக்க வகையில் பரிமளித்த விதமும் எங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது. அதுதான் இந்த வார வல்லமையாளர் எனும் விருதினை நரசய்யா அவர்களுக்கு அளித்து மகிழ்வது என்பது. . விருதுகள் பல வாங்கியவருக்கு இது பத்தோடு பதினொன்றாக இல்லாமல் எங்கள் இதயங்களின் அன்பையும் சுமந்துகொண்டு கொடுப்பதை அவர் அறிவார். மேலும் பல பல சுவையான தகவல்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்க அவரது எழுத்துப் பணி!

    கடைசி பாரா: பழமை பேசி தன் பெயரை புதுமை பேசியாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘அமைதி’ யான கவிதை

    தவளைகளின்
    அட்டகாசத்தில்
    ஆர்ப்பரித்துக் கிடக்கும்
    குளத்திலும் அமைதி
    மணவாட்டி இல்லாத
    அடுக்களை போல!!

    Share
  • அடுக்களையும் அமைதியும்

    தவளைகளின்
    அட்டகாசத்தில்
    ஆர்ப்பரித்துக் கிடக்கும்
    குளத்திலும் அமைதி
    மணவாட்டி இல்லாத
    அடுக்களை போல!!

    வணக்கம். இவ்வார வல்லமையாளர் பத்தியில், அன்பு திவாகர் அய்யா அவர்கள் இச்சிறு கவிதையைக் குறிப்பிட்டு இருக்கிறார். மூலையில் எங்கோ புதையுண்டு கிடக்கும் அந்த நுண்ணுணர்வினைக் களைந்தெறிந்து விட்டு வாசித்தால் இனிப்பைத் துறந்து விட்டு மெல்லும் கரும்புச் சக்கை போலத்தான் இருக்கும் எப்பேர்ப்பட்ட கவிதையும். அதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. அன்பு அய்யா அவர்களுக்கும் இக்கவிதையில் புதைந்திருக்கும் அந்த நுண்ணுணர்வின் தாக்கம் இருக்கிறது. அனுபவமும் நெகிழ்வும் தரித்த படைப்பாளிக்கு அதன் தாக்கம் இருக்கப் பார்ப்பதில் வியப்பில்லைதான். ஆனால் எமக்கு எல்லா நேரமும் அது வாய்க்கப் பெறுவதில்லை. அவ்வுணர்வைச் சரியாக வெளிப்படுத்துகிற கவிதைகளின் வீரியமும் அளப்பரியது. எனவேதான் கவிஞர்கள் உலகை ஆளுகிறார்கள். கவிதைகளாலே புரட்சிகள் பல பிறக்கின்றன! மக்கள்சக்தியை பராசக்தியாக்கி நாட்டைத் தட்டி எழுப்பினான் மகாகவி.

    மனத்துள் விளைந்ததை எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். வினாவொன்று நம்மை நிற்கவைத்து வினவியது. மணவாட்டி என்றால் அடுக்களைதானா? முற்போக்குவாதம் எனக் கையிலெடுத்துக் கொண்டு வந்தால் நீ பிற்போக்குவாதியாகி விடமாட்டாயா?? சிந்தையில் விழுந்தது சாட்டையடி. உள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் திரித்துச் சொல்வதுவும் நன்றன்றோ? எதிர்ச்சாட்டையின் வலு முன்னைய அடியைக் காட்டிலும் மிகுந்திருந்தது. வல்லான் வகுத்ததே வாய்க்காலெனக் கருதியும் உண்மை கருதியும் பின்னதன் சொல்படியே, எழுதியது எழுதியபடியே இருக்கட்டுமென இருந்து விட்டேன்.

    ”வெயிலின் அருமை நிழலில் தெரியும்; அண்மையின் அளவு அகல்தலில் தெரியும்!” என்பார்கள். விடுமுறைக்காலப் பயணமாகத் தாயகம் சென்றிருக்கும் மணவாட்டிக்கும் எனக்குமான அணுக்கம் அகம் குறித்தானது; எனவே எங்களுக்குள் பிரிவென்றேதும் கிடையாது. ஆனால் புறத்துக்கும் அகத்துக்குமான பிரிவு, அதாவது அடுக்களைக்கும் அவருக்குமான பிரிவின் தாக்கம் எமக்கு உண்டு. எனக்குச் சமைத்துக் கொடுக்க ஆளில்லாமல், நானே சமையலை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதல்ல அதன் பொருள். அமைதியாய்ச் சலனமெதுவுமின்றிக் காணப்படும் அடுக்களைதான் எம்மை என்னவோ செய்கிறது. அடிக்கடி சென்று பார்க்கிறேன். வெறுமையாய் இருக்கிறது. அந்த வெறுமையே எம்மிலும் புகுந்து பிரிவைச் சொல்லிக் காட்டி கெக்கலிக்கிறது.

    நகரில் பிறந்து வளர்ந்து ஆளானவர் மணவாட்டி. மணமாகும் வரையிலும் செல்லப் பிள்ளைக்கே உரிய பாங்கில் சமையல் வேலை எதுவும் செய்யாமல் படிப்பும் விளையாட்டுமாய் இருந்த ஒருவர். சமையல் கட்டுக்கும் அவருக்கும் யாதொரு பிணைப்பும் இருந்ததில்லை. ஆனால் இன்று? பட்டறையே கதியென்று கிடக்கும் பொற்கொல்லனைப் போல இருக்கிறார். அவருக்கு எல்லாமும் எப்போதும் அடுக்களைதான்.

    சிறப்புப் பட்டம் பெற்று, மருத்துவத்துறையின் உரிமம் பெற்ற ஒருவர் இப்படியானதொரு பாங்கில் இருக்கிறாரே என எண்ணி நான் வியந்தது எண்ணற்ற முறை. பொதுவாக ஒருவர் காலையில் எழுந்ததும் கழிவறைக்குச் செல்வது வழமை. ஆனால் இவரோ அடுக்களைக்குச் செல்வார். சும்மா அடுக்களைக்குச் சென்று அங்கொரு திருகு போட்டு விட்டுப் பின்னர் கழிப்பறைக்குச் செல்வார். சில நேரங்களில் சும்மாவேனும் எதோவொரு கதவினைத் திறந்து பார்த்து விட்டு, இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியது இருக்கிறதாவென உறுதி செய்துவிட்டுச் செல்வார்.

    வெளியே எங்கு போய் விட்டு வந்தாலும் சரி, கதவைத் திறந்து கொண்டு நேரடியாக அடுக்களைக்குப் போய் கண்களைச் சுழலவிட்டு ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரைக்கும் மேய்ந்தானபின் அங்கிருக்கும் நீர்க்குவளையில் ஒரு வாய் தண்ணீர் குடித்து விட்டுத்தான் இயல்புக்கு வருவார். விமான ஓட்டியின் அந்த ஒற்றைப் பார்வைக்கு நூறு கண்கள் இருக்கும். தன் எதிரே இருக்கும் நூற்றுக்கணக்கான எண்ணிமகாட்டிகளில் எதுவொன்று இயல்பிலியாக இருந்தாலும் உடனுக்குடன் அறிந்து கொள்கிற ஆற்றல் ஒரு விமானிக்கு உண்டு. ஆனால் என் மணவாட்டியின் அடுக்களைப் பார்வைக்கோ ஆயிரம் கண்கள். அதனதன் வைப்பிடத்தில் ஏதேனும் மாறுதல் இருந்தாலோ, இருக்க வேண்டிய இடத்தில் ஏதேனும் இல்லாமற் போனாலோ, புதிதாய் ஏதேனும் இடம் பெற்றிருந்தாலோ சட்டெனக் கண்டுபிடித்து விடுவார்.

    அடுக்களையில் இருந்தபடியே குறுங்கணினியில் மின்னஞ்சல் பார்ப்பார். அடுக்களையில் இருந்து கொண்டே தொடுப்பிலித் தொலைபேசியினூடாக தாத்தா, பாட்டி, அதாவது என் அம்மா, அப்பாவை அழைத்து அவர்களுக்கு நடக்க வேண்டியது கிரமத்துடன் நடந்து கொண்டிருக்கிறதாவென அறிந்து கொள்வார். சில பல நேரங்களில் ஊரில் இருக்கும் அம்மா, அமெரிக்க அடுக்களையில் சமைத்துக் கொண்டிருப்பார். ’பொசுக், பொசுக்னு நாள் முச்சூடும் டாக்டர்கிட்டப் போய்ட்டு இருக்கப்படாது. கைக்குழந்தைகள்னா அப்படித்தான். இஞ்சியத் தட்டி இதுல போடு. சுக்கைத் தட்டி அதுல போடு. எண்ணைய சுட வெச்சி அதுல நாலு பல்லுப் பூண்டைப் போடு” என்று அடுக்களையில் அற்றைநாள்ப் போருக்கான முசுதீபுகள் பதினாறு இறக்கைகள் கொண்டு பறக்கும்.

    “அம்மா, சீனு என்னோட அதை எடுத்திட்டு தர மாட்டீங்றான்” என்று பெரிய புராணத்தோடு வந்து நிற்கும் இரட்டை வாண்டுகளில் ஒன்று. ஒட்டிப் பிறந்தது வாளாதிருக்குமா? கூடவே வந்து நாயனத்துக்கு ஒத்து ஊதும். இலாகவமாக அதுகளுக்குப் பஞ்சாயத்து நடப்பதும் அந்த அடுக்களையில் வைத்துத்தான்.

    சற்று நேரத்தில் அடுத்தவர் வருவார். “அம்மா, நேத்தே சொன்னனே? ஃபீல்டு ட்ரிப்புக்கு இருபது டாலர் கட்டணும்!”. அடுக்களையின் எதோவொரு இழுப்பறையை இழுக்க வந்து சேரும் வேண்டிய அந்த இருபது டாலர். எதற்காவது அடுக்களைக்குள் நாம் செல்ல நேரிட்டாலோ, வந்து பாயும் காண்டீபக் கணைகளும் பேட்ரியாட்களும். “இங்கென்ன செய்றீங்க? நீங்க போங்க. நான் எடுத்துத் தர்றேன்!”. நமக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. அடுக்களைக்கு நாம் ஒரு அந்நியன். எத்தனையோ ஃபோபியோக்கள், கிலிகள் உண்டு. இது ”அடுக்களையோ கிலி”. எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்காமல் விட்டுவிடுவோமோ என்கிற கிலி.

    “சின்னவங்க ரெண்டு பேரும் வாங்க. உக்காருங்க பேசாம. சாப்டுட்டுப் போயி விளையாடுவீங்களாமா!! இருந்து, ஆற அமரச் சாப்பாடு உண்ண ஆயிரம் அறைகலன்கள் வீட்டில் இருந்தாலும் அடுக்களைதானே இருந்தாக வேண்டிய இடம்? அடுக்களையின் தரையிலேயே சின்னதுகளும் உட்கார, நடந்தேறும் காலைச் சிற்றுண்டி.

    இப்படி விடியல் பிறந்ததும் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிடுமந்த அடுக்களை. நாள் முழுமைக்கும் அடுக்களையில்தான் எல்லாமும். கதைப் புத்தகங்கள் வாசிப்பதும், அண்டை வீட்டாருடன் அளவளாவுவதும், எந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு எந்த நாளில் செல்ல வேண்டுமெனத் தீர்மானிப்பது உள்ளிட்ட ஏனைய பிற அலுவல்களும் அடுக்களை உருட்டலினூடேதான்.

    செய்ய எதுவுமே இல்லாவிட்டாலும் செய்வதற்கு உரிய வேலைகள் உண்டு அடுக்களையில். சென்றவாரம் இடப்பக்கத்தில் இருப்பதை எல்லாம் வெளியே இழுத்துப் போட்டு மீண்டும் உள்ளே அடுக்கி வைத்தோமா? அப்படியானால் வலப்பக்கத்திலிருப்பதை எல்லாம் இழுத்துப் போடுவோம் இப்போது. இப்படித்தான் அடுக்களைக்குச் சீர் நடக்கும் தவறாது. என்றாவது ஒருநாள் அடுக்களையும் ’தன் வரலாறு’ எழுதும்; அன்று தெரியவரும் அதற்கு ஈடேறுகிற சீர்களும் பேணுதல் வரிசைகளும் முற்றிலுமாய்.

    ”உன்னை எனக்குக் கட்டி வைத்தார்களா, அடுக்களைக்கா?”, கேட்ட மாத்திரத்தில் பதில் வந்து விழும். அது நீங்கள் கட்டியழும் கம்ப்யூட்டரிடம் போய்க் கேளுங்கள் என்று. ஒரு வீட்டில் திருமண பந்தம் வைத்துக் கொள்கிறோம் என்றால், அந்த ஆணையோ பெண்ணையோ பார்க்கத் தேவையில்லை. கழிப்பறை அல்லது அடுக்களையைப் பார்த்தால் விளங்கும் என்கிறவாக்கில், “அடுப்புஞ் சலதாரையும் சுத்தமின்னா பொண்ணுஞ் சுத்தந்தேன்” என்கிறது ஊர்ப்புறத்துச் சொலவடை. எங்கள் வீட்டு அடுக்களையைப் பார்த்தாலோ ஏழேழு பிறவிக்கும் இந்த ஒரே மணவாட்டிதான் போலிருக்கிறது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

    வீட்டின் மறுகோடியில் இருக்கும் அலுவலக அறையிலிருந்து பார்க்கிறேன். ஆட்டுவிக்கப்படாத பொய்க்கால் குதிரை போலச் சலனமற்று ஒலிப்பசியுடன் கூடிய இருட்டுப் பட்டினியுடன் துவண்டு கிடக்கிறது. ஆமாம். கடந்த இரு வாரங்களாய்த் தரிசாய்க் கிடக்கிற அதன்மேல் மெலிதாய்ப் போர்த்தப்பட்டுமிருக்கிறது அமைதி.. அமைதி.. அமைதி!!!

    Share