Blog

  • பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும்

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    Pattaadai...
    அன்றாடம் நாம் சந்திக்கும் சராசரி மனிதர்களின் வாழ்வில் இடம்பெறும் பிரச்சினைகளை மையப்படுத்தி கதையமைப்பு.. திரைக்கதை.. வசனங்கள்.. பாடல்கள் என்று தமிழ்த்திரையொரு சகாப்தத்தை தன்னுள் இன்னும் வைத்திருக்கிறது.  அவ்வகையில் ஏ.பீம்சிங் .. நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.. நாட்டியப்பேரொளி பத்மினி, கே.ஆர்.விஜயா.. கே.வி.மகாதேவன் .. கண்ணதாசன் .. டி.எம்.செளந்ததிரராஜன், பி.சுசீலா .. கூட்டணி ஈட்டிய வெற்றி என்று பார்த்தால் திரைக்கதை வசனம்.. பாடல்கள் வழக்கம்போல் அமர்க்களம்தான்..

    kkkkkvmp susheela(1)krv(1)
    இல்லற வாழ்வின் ஈடிலா இன்பம் மழலை.. அதை இறைவன் அருளிடாத நிலையில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும் அங்கே சந்தோஷம் தொலைந்துபோய்விடும் நிலையை சந்திக்கும் தம்பதிகளாக சிவாஜியும் பத்மினியும்.. முகபாவனைகளால் ஆயிரமாயிரம் அர்த்தங்களைப் புரியவைக்கிறார்கள் இருவரும்!  ஒருவரையொருவர் எப்படி இணைந்து வாழ வேண்டும் என்று இலக்கணம் வகுக்கும் தம்பதிகள்!  ஒருவர் மகிழ்ச்சியே மற்றவரின் மூச்சாக கொள்ளும் மனம்!  இடையில் இந்த நெருடலால் அவள் மனம் காயப்பட்டுவிடக்கூடாது என்று நாயகனும்.. அவன் மனம் வாடிவிடக்கூடாது என்று நாயகியும் ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் காதல்மனதை காட்சிப்படுத்துகிறார்கள்.

    எப்படியும் தன் குடும்பத்தில் மழலை வந்து தவழ வேண்டும் என்று நாயகி தன் தங்கையையே கணவனுக்கு இரண்டாம்தாரமாக்க முடிவுசெய்கிறாள்.  பாசத்தின் சிகரமாய் விளங்கும் நாயகன் அந்த முடிவை.. முற்றிலுமாய் எதிர்க்கிறான்.. மறுக்கிறான்..  இத்தகு சூழலில்.. நாயகியின் தங்கை.. எதார்த்தமாக விரைவில் இந்த வீட்டில் ஒரு குழந்தை வரப்போகிறது என்று பாடுவதுபோல் இந்தப் பாடல்..

    எத்தனை எத்தனை அர்த்தபுஷ்பங்கள் மலரவைத்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன்!  கூடுவிட்டு கூடுபாயும் வித்தை கற்றவரோ என்றெண்ண வைக்கிறார்.. பிறகெப்படி.. அந்தப் பாத்திரம் என்ன சொல்ல வேண்டுமோ அதன் உச்சம் தொட்டுக் காட்டுகிறார்!  திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலாவின் குரலில் மெல்லிய காற்று நம் இதயம்நோக்கித் தவழ்ந்துவருகிறது கேளுங்கள்..

    பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும் – என் கண்ணுக்கு
    பால் வண்ணச் சங்கு கொள்ள வேண்டும்
    சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும் – என் கண்ணுக்குச்
    சிங்காரப் பொட்டு வைக்க வேண்டும்..

    கவியரசரின் அழகுதமிழின் ஆனந்த நடனமிது.. குழந்தையைக் கொஞ்ச இந்தத் தமிழ் போதாதா?

    கண்ணுக்கு மேலே மையிட்டுப் பார்த்து
    கன்னத்தைக் கிள்ள வேண்டும்
    முன்னொரு நூறு பின்னொரு நூறு
    முத்தங்கள் சிந்த வேண்டும்..
    முத்தங்கள் சிந்த வேண்டும்..

    பால்மழலை முகம்பார்த்து குதூகலித்து.. பனிபோல் முத்தங்கள் பொழிய வேண்டுமாம்..  அதுவும் கண்ணுக்கு மையிடும்போது.. அந்த அழகைக் கண்டு சொக்கிப்போய்.. கன்னம் கிள்ளுவதாய்.. முத்தங்கள் கூட நூற்றுக்கணக்கில் வரிகளில் கொண்டு வந்து சொர்க்கத்தை நிறுத்துகிறார்!

    மார்பினில் எடுத்துப் பாலுண்ணக் கொடுத்து
    மயக்கம் கொள்ளும்போது
    அவர் வரப் பார்த்து ஆடையை மறைத்து
    அப்பப்பா.. சொல்ல வேண்டும்..

    கற்பனைக் காட்சிதான் என்றாலும்.. அந்தக் காட்சிப்படுத்தலை.. படிமத்தை.. எப்படிக் கவிதை வாயிலாய் காட்டுகின்றார் பாருங்கள்!  ஆயிரம் கவிஞர்கள் வரலாம்.. எங்கள் கண்ணதாசன் போல் வருமா என்று சொல்வதன் காரணம் புரிகிறதா?

    அன்னையைத் தந்தை அணைக்கின்ற கோலம்
    கண்ணனும் காண வேண்டும்
    என்னையும் மறந்து ஏனிந்த விருந்து
    என்றவன் சொல்ல வேண்டும்..
    என்றவன் சொல்ல வேண்டும்..

    எண்ணிப்பார்த்து எய்தும் இன்பம் இப்படி இருக்குமா?  எழுதிக்காட்டும் கவிதை வடிவம் அருவியாகிறது!  கற்பனைவந்து கைகொடுக்கும் கவிஞரின் வரிகளில் உள்ளம்தொடுகின்ற எழுத்துரதமே ஊர்வலம் வருகிறது!  விளக்கம் தேவையில்லாத அளவு விரிவான வரிகள் நான்கு.. இதைவிட என்ன சொல்ல முடியும்?

    ஏதோ திரைப்பாடல்தானே என்று எண்ணுபவர்கள்கூட இத்தனைப் புதையல்கள் இருக்கிறதா என்று ரசிக்க வேண்டிய பாடலிது!!

    இந்தப் பாடல் இத்தனை அர்த்தங்களைச் சுமந்திருப்பதால்  திரைப்படத்திற்கு பாலாடை என்கிற பெயரும்கூட பொருத்தமே!!

    http://www.youtube.com/watch?v=8hwyAvepyo4
    காணொளி: http://www.youtube.com/watch?v=8hwyAvepyo4

    பாடல் : கண்ணதாசன்
    படம் : பாலாடை
    குரல் : சுசீலா
    இசை : கே.வி.எம்.
    நடிகை : கே.ஆர்.விஜயா

    பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும் – என் கண்ணுக்குப்
    பால் வண்ணச் சங்கம் கொள்ள வேண்டும்
    சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும் – என் கண்ணுக்குச்
    சிங்காரப் பொட்டு வைக்க வேண்டும்

    (பட்டாடை)

    கண்ணுக்கு மேலே மையிட்டுப் பார்த்து
    கன்னத்திக் கிள்ள வேண்டும்
    முன்னொரு நூறு பின்னொரு ணூறு
    முத்தங்கள் சிந்த வேண்டும்
    முத்தங்கள் சிந்த வேண்டும்

    (பட்டாடை)

    மார்பினில் எடுத்துப் பாலுண்ணக் கொடுத்து
    மயக்கம் கொள்ளும்போது
    அவர் வரப் பார்த்து ஆடையை மறைத்து
    அப்பப்பா.. சொல்ல வேண்டும்

    அன்னையைத் தந்தை அணைக்கின்ற கோலம்
    கண்ணனும் காண வேண்டும்
    என்னையும் மறந்து ஏன் இந்த விருந்து
    என்றவன் சொல்ல வேண்டும்
    என்றவன் சொல்ல வேண்டும்

    (பட்டாடை)

    Share
  • “நான்” ஒரு விளையாட்டுப்பிள்ளையா? … 2

    –இன்னம்பூரான்.

     

    300px-Social_Psychology_Definition_3

    இடம் கருதி எழுதினால், தலைப்பை ‘புதுச்சேரி நோட்ஸ்’ என்று மாற்றவேண்டும். பொருள் கருதி எழுதினால் அது தேவையற்றது. ஏவல் கருதி எழுதினால், தலைப்பை ‘மனதின் மார்க்கம்’ எனலாம். இப்போதைக்கு, தலைப்பு இருந்து விட்டு போகட்டுமே. எல்லோரும் இந்நாட்டு ‘உளவியல் வல்லுனர்கள்’ என்பது ஒரு நெருடலான விஷயம். தச்சனிடம் போய் முடி வெட்டிக்கொள்ளமுடியுமா?

    அண்மையில் ஒரு மன நல ஆலோசகர் தொலைக்காட்சியில் அருமையான சில கருத்துக்களை கூறினார். அதனுடைய பயனை புதுச்சேரிக்கு பயணிக்கும் ஒரு சகபயணியிடம் கண்டேன். அவளது மகன் பிஸ்கோத்து சாப்பிட்ட பின் அதனுடைய பேக்கிங்கை குப்பைத்தொட்டியை தேடி அதில் போட்டான். அதை சிலாகித்து நான் பேசியபோது,தான் அந்த தொலைக்காட்சியை பார்த்ததின் நற்பயனே இது என்றார்.

    பெரியவிஷயம் ஒன்றுமில்லை. சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்.. பையன் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து விட்டது. சிறிது நேரம் கழித்த பின் ஒருப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ஒரு மனிதர் நழுவவிட்டார். அது உருண்டோடியவண்ணம். அந்த சிறுவன், அது மற்றவர்களை காவு வாங்குவதற்கு முன், அதை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டான். அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார். சரி. ஒரு நல்ல தலைவன் உருவாகி வருகிறான் நான் ஆனந்தப்பட்டேன். பாட்டிலை நழுவ விட்ட மனிதன் காலி பாக்குப்பொட்டலத்தை வீசி எறிந்தான். சரி. ஒரு சமூகவிரோதி நடமாடுகிறானே என்று கவலைப்பட்டேன். உரிமையை நாடும் மனிதன் கடமையை செய்ய பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்பது பாடம். எந்த பள்ளியிலும் இது எடுக்கப்படவில்லை என்பதால், பெற்றோர்களின் தலையாய கடமையாகி விடுகிறது.

    அடுத்தபடியாக, தன் செயலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வது. மார்க்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்கு உள்ளான மனிதராக இருக்கிறார். அலஹாபாத்தில் அவர் நீதிபதியாக இருந்த காலத்தில் ஒரு பொதுநல உதவி அவரிடம் நாடினேன். உடனே கொடுத்து பாராட்டிய அவர் மன்மோஹன் சிங்கை ஒரு அரசியல் கட்சி பாடாய் படுத்தியதை கூறவும், சில கட்சி தலைவர்கள் பாய்ந்து, பாய்ந்து அவரைகண்டனம் செய்கிறார்கள். அவர்கள் உள்மனதுக்கு நடந்த விஷயம் அப்பட்டமாக தெரியும். அதை பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்த மாதிரி, மூடி மெழுகுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதே மாதிரி, தணிக்கைத்துறை கூறுவதுஎல்லாவற்றையும் ஆவணமாக ஒப்புக்கொண்டபின், பல துறைகள் குய்யோமுறையோ என்று அடித்துக்கொள்கிறார்கள். கேட்டகேள்விக்கு பதில் இல்லை.

    அரசியல், சமூகம், சுற்றம், தனித்துவம் ஆகியவற்றில் இத்தகைய போலி நியாயப்படுத்தல் (Rationalization), சால்ஜாப்பு, மெய்யை பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் மாற்றி வைப்பது (Fabrification) எல்லாவற்றையும் அன்றாடம் காண்கிறோம். அதன் தீவினையாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் மன்றமே கட்டைப்பஞ்சாயத்து செய்கிறது!தனிமனிதனின்மனோவியாதியின்/குறுக்குப்புத்தியின்/ வக்கிரத்தின் கொள்ளுவாய் பிசாசு தான் இது என்பதில் ஐயமில்லை.

    மூன்றாவதாக சமுதாயத்தை குலைக்கும் தனிமனிதனின் மற்றொரு விகாரம் பற்றி, நீங்களே சொல்லுங்களேன்!

    இன்னம்பூரான்
    04 08 2014

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    சித்திரத்துக்கு நன்றி:
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Social_Psychology_Definition_3.jpg/300px-Social_Psychology_Definition_3.jpg

    Share
  • அதுவும் இதுவும்…

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (14)

     

     

    அதுவும் இதுவும்…

    {கேட்டு மகிழ இங்கே சொடுக்கவும்}

     

    2f525004326e8d13fa96ef6e2140a672-d68s40h
    அதுவோர் அழகிய சுனை
    இது ஏதோ ஒன்றின் முனை

    அது
    மடுவாய் இருக்கலாம்
    தோற்றப் பிழையாய் இருக்கலாம்
    சுனையாகவே கூட இருக்கலாம்

    இது
    மலையாய் இருக்கலாம், அதிலொரு
    மலராய் இருக்கலாம், ஏதோ ஒன்றின்
    முனையாகவே கூட இருக்கலாம்

    அதற்கும் இதற்கும் முடிச்சுப் போட்டது
    அதுவோ இதுவோ இல்லை
    யாரோ எதுவோ தெரியவில்லை

    ஓர்
    அந்திச் சிவப்பின் மந்திர மயக்கம்போல்
    அதீதமான அபாயத்தின் விளிம்புபோல்
    அபரிமிதமான லஹரியில்
    தன்வயமின்றித் தள்ளாடின
    இயல்பின் உச்சத்தில்
    எதுதான் சந்நிதியில்லை?

    மயக்கத்தில், அது
    மயக்கமென்று புரியாததால்
    தெளிவின் எதிர்ப்பதமே
    தெளிவென்று மார்தட்டும்.

    உலகமே தொலைந்துபோன இந்த
    உன்மத்தத்தில்
    ஊரேது? உறவேது?
    உயிர்தான் ஏது?

    எதற்கும் அப்பாற்பட்டதாய்
    அதுவும் இதுவும் எண்ணிக்கொண்டிருக்க
    ஓரத்தில் சாய்ந்தபடி
    ஒருவழிப்போக்கன் சொன்னான் :

    ’’அது சுனையல்ல
    ஆனந்தக் கடலின் முனை

    இது முனையல்ல
    அடங்காத கண்ணீரின் சுனை”

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy
    “அவலுக்கும் உண்டோ அடைக்கும்தாள்’, பார்யாள்
    அவளுக்கோர் கீதைசொன்னான் அன்றே; -கவலை
    சுதாமன் வறுமையை சுத்தமாய் போக்கும்
    பிதாமகன் கேசவ் பிரஷ்”….கிரேசி மோகன்….

    சுதாமன் -குசேலனின் இன்னொரு பெயர்….

    Share
  • வெகுமதிகள் தேவைதான்…..

    பவள சங்கரி

    தலையங்கம்

    மும்பை மாநகரில் இணையத் தொடர்பு அனைத்துப் பகுதிகளிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது நல்ல செய்தி என்றால் அதைவிட நல்ல செய்தி அனைத்துக் கட்சியினரும் இணைந்து இந்த நல்லதொரு பணியை செய்திருப்பதுதான். வாக்குகளுக்காக இலவசங்களும், வெகுமதிகளும் வழங்குவதைக்காட்டிலும் இது போன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவது வரவேற்புக்குரியது. இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இது போன்ற மாற்றம் ஏற்பட்டால் அதுதான் நம் நாட்டின் பொன்னான காலம். . நாடும் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடும் என்பதும் உறுதி..

    பத்தாண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் ஏற்பட்ட சோக நிகழ்விற்கு இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காலங்கடந்த தீர்ப்பு.. இனிமேலும் இது போன்ற அவலங்கள் தொடராமல் இருக்க வேண்டும் என்ற உண்மையான நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பின், பொதுப்பணியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் சேர்ந்தோ அல்லது தனித்தோ அந்தப் பள்ளி மற்றும் இது போன்ற மோசமான நிலைகளில் இருக்கும் மற்ற கல்வி நிலையங்களையும் தத்து எடுத்துக்கொண்டு நிலையான கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தால் எவ்வளவு சிறந்த செயலாக அது இருக்கும். ”தேர்தலுக்கு முன்பே நாங்கள் செய்து காட்டிவிட்டோம் தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுத்தால் நாங்கள் இன்னும் உற்சாகமாகப் பணியாற்றுவோம்” என்று இப்படி ஆதாரப்பூர்வமாகக் கூறினால் மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்காமல் விடுவார்களா என்ன?

    மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டு உள்ள, மனதை உலுக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 82 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இன்னும் எத்தனை சடலங்கள் கிடைக்குமோ தெரியவில்லை. ஒரு நாளில் மாற்றம் ஏற்பட்டு சரிவை ஏற்படுத்தக்கூடிய தன்மையுடைய மண் அல்ல அது. இலகுவான தன்மை கொண்ட மண் என்பதால் எப்போதும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்கும்போது மழைக் காலம் வருவதற்கு முன்பே அந்தப் பகுதியைச் சார்ந்த அரசியல் கட்சிகள் அந்த கிராமத்தின் மீது தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி, நிலையான கட்டுமானப் பணிகளைச் செய்திருந்தால் இந்த கோரச் சம்பவம் நிகழாமல் தடுத்திருக்கலாம். எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த கோரச் சம்பவத்தால் உயிர் சேதம் ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

    kosi_PTI_2036476hஇந்த நிகழ்வுகளின் சோகம் மறைவதற்கு முன்பே அடுத்த நிகழ்வும் தயாராகிவிட்டது. கோசி நதியின் வெள்ளப் பெருக்கால் பீகாரில் 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு 1 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேபாள நாட்டில் உற்பத்தியாகும் கோசி நதியில், அங்கு பெய்யும் தொடர் மழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது கோசி ஆற்றில் 12 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் வந்து கொண்டு இருக்கிறது. கோசி நதி, பீகார் மாநிலத்தின் 6 மாவட்டங்கள் வழியாக மேற்கு வங்காளத்தில் சென்று வங்கக் கடலில் கலக்கிறது. கோசி நதியின் குறுக்கே உள்ள பிர்பூர் அணையில் இருந்து இப்போது வினாடிக்கு 2½ லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கோசி நதியின் வெள்ளப்பெருக்கும், இதே போன்ற நிலச் சரிவும் நேபாளத்தையும், நமது பீகார் மாநிலத்தையும் பெரிதும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13 கரையோர மாவட்டங்களைச் சார்ந்த ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் களையும் குழுக்கள் நேபாளத்திற்கு ஒன்றும், பீகாருக்கு ஆறு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. கங்கைக்கு 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது போன்று இந்த மாவட்டங்களின் புனரமைப்பிற்கும் அந்த நதியை சீரமைப்பதற்கும் சில கோடிகள் ஒதுக்கினால் வருமுன் காக்க முடியும். கடந்த 2008–ம் ஆண்டு நேபாளத்தில் பெய்த மழையால் கோசி நதியில் இதே போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீகாரில் பேரழிவும் ஏற்பட்டது. அதில் நூற்றுக் கணக்கானோர் பலியானதும், 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதோடு, 8 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

    மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லக்கூடிய மலைப்பாதையும் இது போன்ற இலகுவான மண் அமைப்பைக் கொண்டதே. மழைக் காலம் என்றால் பாதையில் சரிவு ஏற்படுவதும், மரங்கள் வேரோடு சாய்வதும், ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் தான் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பின்புதான் நாம் அதைப்பற்றி கவனம் கொள்கிறோம். இது போன்ற மண் அமைப்புதான் மூணாறிலும் உள்ளது. மக்களுக்காகச் சேவை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும், தொண்டர்களும் சிந்திக்க வேண்டிய விசயம் இது. மக்களுக்கான இது போன்ற பாதுகாப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வெகுமதியாகத் தருபவர்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு என்ன தடை இருக்கப் போகிறது. எந்தக் கட்சியாக இருந்தால் என்ன.. உண்மையான சேவை செய்யும் கட்சி மட்டுமே மக்களைக் கவர முடியும் என்பதே சத்தியம். வருமுன் காக்க வாருங்கள் நல்லுள்ளங்களே!

    Share
  • போய்விடாதே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (13)

     

    போய்விடாதே!

     {கேட்டு மகிழ சொடுக்குங்கள்}

    birds-cloud-girl-pretty-running-Favim.com-116014_large

    அம்மாடி!
    இனிமேலும் இந்த
    பூமியை விட்டுப் பறப்பதற்கு
    உந்தித் தவிக்க வேண்டாம்.

    கால்கள் பிசகுபோல் காணப்பட்டு
    வார்த்தை விழாத சந்தங்கள்போல்
    இறக்கைகளை விரித்துக்கொண்டு
    நாக்கு குழறிய பேச்சுபோல் புழுதி கிளப்பி நாணும்
    யத்தனத்தின் அருவருப்பு இத்தோடு தீர்ந்தது.

    இறகுகளைச் சிறகுகளாய் நம்பினேன்
    சொடுக்கி எடுத்த மீன்களின் செதில்கள்போல்
    உதிர்ந்து உதிர்ந்து அவை
    உயிரை உறுத்தின

    பறக்கவேண்டும் என்பது ஆசையல்ல
    பறக்க முடியாது என்னும் பொய்யைத்
    தாங்க முடியவில்லை
    சிறகுகளா பறப்பதற்குக் காரணம்?!

    பொருளைத் தாங்கி பொருளில் நின்று
    பொருளால் தொடப்படாமல் புன்னகைத்துக் கொள்ளும்
    அருளல்லவா வானம்!
    அதன் தயவல்லவா நான் பறப்பதும்
    பறக்காமல் மிதப்பதும்
    பூமியைப் புள்ளியாகப் பார்ப்பதும்
    காற்றின் இழைபிரித்துக் கானங்கள் பாடுவதும்!

    நிறைவின் உச்சத்தில்
    நீந்தாமல் நீந்தி நிலவுகின்றேன்
    எங்கிருந்தாலும் வானந்தானே என்னும்
    ஏமாற்று வேலைகள் நடக்காது
    நிலத்தில் ஏது நீலம்? நிர்மலம்?
    நீளும் விரிவு? நிம்மதி?

    ‘’ஓ! அப்படியென்றால் நானெதற்கு?’’
    என்று
    புன்னகைத்தபடி புன்னகை போலவே
    போய்விடாதே

    வானம் போதுமென்று
    வாய்விட்டுச் சொல்லிவிடுமா
    வானம்பாடி?

    எல்லாம் அடைந்துவிடலாம்
    எண்ணங்கள் நின்றுவிடலாம்
    ஏக்கங்கள் தொடரத்தானே செய்யும்?

    நீ
    வந்துசென்ற பின்னே அங்கே
    குந்தியிருக்கும் வாசத்தைப் போல
    என்
    பல்லவியைத் தொடர்ந்து
    பாதை வளைவில்
    எட்டிப் பார்க்கும் சரணத்தைப் போல….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “மாடெலாம் தானாக மேய்ந்திட கோகுலத்தில்,
    மாடலாகும் ஆசையில் முன்வந்துன், -வீடதன்,
    காலிங்க்பெல் எட்டாது, கண்ணன் குதிக்கின்றான்,
    தாளிங்கு கேசவ் திற”….கிரேசி மோகன் ….

     

    Share
  • நெய்தல் நிலம்

    இதோ ஒரு நெய்தல் நிலக் காட்சி…
    மீன்பிடிப் படகுகளோடும், அன்று கிடைத்த செல்வங்களோடும்…

    பார்க்க, ரசிக்க…..

    சு.ரவி

    14C94A70-4A43-4CDA-AC67-B9E6629A5C47

     

     

     

    Share
  • பெருமாள் பெருமாள்

     

    கே. ரவி

    பா டல் : உன்னி மேனன்

     

    பெருமாள் பெருமாள் பாடலைக் கேட்க சொடுக்குங்கள்

    images (1)

    கலிதீர்க்க வந்தவன் தான் கலிய பெருமாள்
    வினைதீர்ப்பவன் வெங்கடேசப் பெருமாள்
    திருமண் ஒளிவீசும் கரிய பெருமாள்
    தினம்தோறும் நாம்வணங்கும் பெரிய பெருமாள்
    — கலிதீர்க்க

    நின்றதிருக் கோலத்திலே உள்ள பெருமாள்
    நித்தம்நம்மை வாழவைக்கும் நல்ல பெருமாள்
    சொர்ணகவ சத்துக்குள்ளே சோதிப் பெருமாள் – நம்மைச்
    சோதித்துப் பார்க்குமிந்த ஆதிப் பெருமாள்
    — கலிதீர்க்க
    வரம்தருவ தோடுசரி மத்த பெருமாள்
    வட்டிபோட்டு வாங்குபவன் பெத்த பெருமாள்
    மார்பில்மஹா லட்சுமியை வைத்த பெருமாள்
    மந்திரங்களில் ஜொலிக்கும் முத்துப் பெருமாள்
    — கலிதீர்க்க

    சரணங்களைக் காட்டிநிற்கும் கோலப் பெருமாள்
    சங்குச்சக்ரம் ஏந்திநிற்கும் மூலப் பெருமாள்
    மரணத்தை வெல்லும்வழி சொன்ன பெருமாள்
    மங்களங்கள் தங்கவைக்கும் நம் பெருமாள்
    — கலிதீர்க்க

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 4, 2014

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்கள்

    kamatchi

    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்களுக்கு அவரது வலைப்பூவைத் தொடங்கிய ஆண்டுக்கு ஓராண்டு முன்பு வரை கணினியைப் பயன் படுத்தத் தெரியாது.  ஆனால் அவருடைய 78 வயது என்பது அவரது ஆர்வத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை.  விகடனின் தீவிர வாசிப்பளரான இவர், பதிவுகளைப் படித்து கருத்துரைகளையும் வழங்கி வருபவர்.  பத்திரிக்கைகளை உடனுக்குடன் இணையம் மூலம் படிப்தற்கும், எழுதுவதற்கும் தனது மகனின் உதவியால் கணினியைக் கையாளக் கற்றுக் கொண்டதுடன் தானும் எழுதத்  தொடங்கி, தனது வலைப்பூ பதிவில் கருத்துரைக்கும் வாசகர்களுடனும் உற்சாகமாக கலந்துரையாடுகிறார்.

    இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர் ரஞ்சனி  அவர்கள். முதுமைக் காலத்திலும் தன்னால் இயன்ற அளவு பயனுறப் பொழுதைக் கழித்து, தனது எழுத்து ஆர்வத்தின் மூலம் தனக்குத் தெரிந்தவற்றை பிறருக்குப் பயன்படும் வகையில் எழுதி வரும் “சொல்லுகிறேன் காமாட்சி” அம்மையாரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    காமாட்சி அம்மையார் சிறு வயதில் ஒரு பெரிய நகரில் பிறந்து வளர்ந்தாலும் அந்நாட்களில் பெண்கல்விக்கு இருந்த வசதியற்ற சூழலில் எட்டாம் வகுப்புடன், அவருடைய 12 ஆவது வயதில் அவருடைய பள்ளிப்  படிப்பு நின்று போயிருக்கிறது.  அண்டை அயல் வீடுகளில் உள்ளவர்களுக்கு நூல்கள் படித்துக் காட்டியும், கடிதங்கள் எழுத உதவியும் வந்திருக்கிறார். 1945 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விமுறையை அரசு அறிவித்த பொழுது மாணவர்கள் தொகை அதிகமாகிவிட  ஆசிரியர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.  இவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்  (அந்தக் காலத்தில் E.S.L.C படித்தாலே ஆசிரியர் பணி புரியலாம்). சுதேசமித்திரன்  போன்ற பத்திரிக்கைகளில்,கதைகளும், பலவகை சமையல் குறிப்புக்களும் எழுதி சன்மானங்களும் வாங்கி இருக்கிறார்.

    திருமணத்திற்குப் பிறகு, அவர் வசித்த நேபாளத்திலிருந்து  மடல்கள் அனுப்பினாலே ஏற்படும் தாமதம், குடும்பப் பொறுப்பு, ஐந்து குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆகியவற்றினால் இவரது எழுத்துப்பணி தடை பட்டிருக்கிறது.  பிறகு முதுமைக்காலத்தில் தனது மகனுடன் ஜெனிவாவில் வசிக்கத் துவங்கியதும் இணையம் மூலம் தனது எழுத்தார்வத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளார்.  காமாட்சி அம்மையார் 1930 களில் பிறந்தவர். அவர் தனது 78 ஆவது வயதில் வர்ட்பிரஸ் (wordpress.com)  வலைப்பூ தொடங்கி எழுதத் துவங்கியதே ஒரு சாதனைதான்.

    ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தற்பொழுது  தனது 82 ஆவது வயதிலும்  தொடர்ந்து  “சொல்லுகிறேன்”  என்ற தலைப்பில் தனது வலைப்பூவில் எழுதி வருகிறார். சமையல் குறிப்பில் தொடங்கி தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்வேன் என்று வலைப்பூவில் தன்னைப்பற்றிய அறிமுகப் பகுதியில் குறிபிட்டுள்ள காமாட்சி அம்மையார், அதைப் போலவே பெரும்பான்மையான சமையல் குறிப்புகளும், அவற்றுடன் பயணக் கட்டுரைகள், விழாக்கள், சில நினைவுகள்,கடிதங்கள், கதைகள், துணுக்குகள்,  நடப்பு என்ற பற்பல தலைப்புகளின் கீழும் தனது எண்ணங்களைப் பதிவு செய்து வருகிறார்.  அத்துடன் தனது பதிவிற்கான புகைப்படங்களையும் தானே எடுத்து பதிகிறார் என்பது  இவரது தனிச் சிறப்பு. திரு சைபர் சிம்மன் ’80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!’ என்றும் இவரது வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். திருமதி காமாட்சியின்  வலைப்பூ அவள் விகடனிலும் அறிமுகம் ஆகியுள்ளது.

    ஓர் அன்னையர் தினப் பதிவாக தனது அன்னையைப் பற்றிய அந்தக் கால நினைவுகளை அசை போடத் தொடங்கியவர் தொடர்ந்து  அடுத்த ஆண்டு வரை பதினைந்து பதிவுகளுக்கு அக்கால நினைவலைகளில் நீந்திச் செல்கிறார்.  அதன் வழியாக சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கால வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.  “பழைய காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கை எப்படியெல்லாம் அமைந்தது என்பதின் சிலரின் குறிப்புகள்…… அந்த நாளைய சமாசாரங்கள். இந்த கதையெல்லாம் யாராலே சொல்லமுடியும் ? பிடிச்சா படியுங்கோ. அவ்வளவுதான்…” என்று முன்குறிப்புகள் கொடுத்துத் தொடர்ந்துள்ளார்.  அப்பதிவுகளில் இருந்து ஒரு சில பகுதிகள் மட்டும்  படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

    அன்னையர் தினத் தொடர்வு

    என் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன். அவர் இருந்தா  நூறைவிட அதிகம் வயது. இருக்க வாய்ப்பில்லை. அவரின் சின்ன வயது அனுபவங்களைப் கேட்டபோது காலம் எப்படியெல்லாம் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிறிய வயது காலத்தில்  விவாகம் என்பது பெண் குழந்தைகளுக்கு அவசியம் என்பதுடன், உள்ளூரிலேயே ஸம்பந்தம் செய்ய வேண்டும்,  என்பதால்,  சாப்பாட்டிற்கு கஷ்டமில்லாது பார்த்துக் கொள்ளக் கூடியவரைப் பார்த்தார்களே தவிர நல்ல இடம் கிடைக்கும் என்றுவேறு ஊர்களில் வரன் தேடுவதில்லை. கஷ்டப் பட்டாலும், கண்ணெதிரே இருப்பதை விரும்பினார்கள்.  ஆதலால் வயது வித்தியாஸம், பெரியதாகத் தெரிவதில்லையாம். அந்தந்த ஸீஸனில் விளையும் பயிர் பச்சைகள் போல, கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள போலும்………..

    ……. மற்றொரு பதிவில் …….

    அது ஒருகாலம்.  குழந்தை வைத்தியம் ஸரிவர இல்லாத காலமென்றும் சொல்லலாம். மருந்துகள்   கண்டு பிடித்த காலம் அது என்றும்  சொல்லலாம். எங்கு நோக்கினாலும்    ஒரு வயதுக் குழந்தைகள்  வயிற்றைப் பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும், மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிர சுரு சுருப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல், குலைக்கட்டிக்கு ஆளாகி  இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக் கிடைக்கும். கட்டி விழுந்த குழந்தை.,   மாதமொரு  முறை  ஜம்மி வெங்கட ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம் எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக அம்மாவுடன் பயணிக்கும். நல்ல    வார்த்தை  டாக்டர்  சொல்ல  வேண்டுமே  என்று  வேண்டும் தாயின்  உள்ளங்கள்.

    பத்துரூபாய் மருந்து என்றால்   பாப்பையா மருந்து.   வியாதி கடினம். ஐந்து ரூபாய் மருந்து என்றால்  ஜம்மியோ, ஜிம்மியோ? வியாதி  ஆரம்பம். அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும் கஷ்டம், எத்தனை தேரும், தேராது என்பது. ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது. நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன். ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என நினைக்கிறேன். அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு………..

    அக்காலத்தில் தனது பாட்டிகளிடம் கதைகேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரியும் பாட்டிகள் எவ்வளவு அனுபவச் சுரங்கங்களாக இருந்தார்கள் என்பது. கதைகள், வைத்தியக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், பாடல்கள், காலக்குறிப்புகள் எனஅவர்கள் அள்ளி அள்ளி வழங்குவார்கள்.  அந்த அருமையான வாய்ப்பினை இழந்த இக்காலதத்வருக்கு, அந்த ஏக்கத்தை தீர்க்க  ‘இணையப்பாட்டி’ போல  காமாட்சி அம்மையார்  எழுதி வருகிறார்.  இளைய தலைமுறையினருக்கு இவரது வலைப்பூ  தகவல் பலத் தரும் ஓர் அருமையான கருவூலம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 130

    -மலர் சபா

    மதுரைக்காண்டம் – 02: வேட்டுவவரி

    உரைப்பாட்டு மடை

    முன்றிலின் சிறப்பு

    நெற்றியில் கண்ணுடைய சிவபெருமான்
    தம் இடப்பாகத்தில் கொண்ட
    கொற்றவையின் முன்றிலின் இடத்து…

    மணம் வீசும் சுரபுன்னை மரமும்,
    நாரத்தையும் வரிசையாக ஒழுங்குபட நின்றன.
    ஆச்சா மரமும் சந்தன மரமும்
    உயர்ந்தோங்கி வளர்ந்திருந்தன.                     goddess durga for silambu 4th august
    எவ்விடத்தும் சேவும் மாவும்
    நெருங்கி வளர்ந்து நின்றன.

    பிறையை உடைய சடை கொண்ட
    கொற்றவையின் முன்றிலின் இடத்து
    வேங்கை மரங்கள் சிவந்த பொன் போன்ற
    பூக்களைச் சிந்தி நின்றன.
    நல்ல இலவமரங்கள் தம் கிளைகளில் பூத்த
    செம்மலர்களை உதிர்த்துக் குவித்தன.
    புன்க மரங்கள் வெள்ளைப் பொரி போன்ற
    பழம்பூக்களை உதிர்த்து நின்றன.

    திருமாலுக்கு இளைவளாகிய
    கொற்றவையின் முன்றிலின் இடத்து…
    வெண்கடம்பும் பாதிரியும் புன்னையும்
    மணம் வீசும் குராவும் கோங்கமும்
    பூத்துக் குலுங்கின.
    அவற்றின் கிளைகளில் வண்டுக்கூட்டம் முழங்கி
    யாழ் போல் இசைக்கும்.

    வள்ளிக்கூத்து

    துர்க்கை அணியும் அணியை எல்லாம்
    தாமும் அணிந்துகொண்டு நிற்கும்
    இப்பொன் வளையணிந்த குமரி
    முன்னர் செய்த தவம்தான் எதுவோ?
    பொன்வளையணிந்த இம்மாது பிறந்த குடிப்பிறந்த
    வில்லேந்தும் மறவர் குலமே சிறந்த குலம்.

    கொற்றவையின் அழகினை ஒத்ததாக
    அழகு கொண்ட, பாம்பினைப் போன்ற அல்குலை உடைய
    இக்குமரி செய்த தவம்தான் எதுவோ?
    இவள் பிறந்த குடிக்கண் தோன்றிய
    அம்பெய்தும் வில்லினையுடைய
    எம் வேட்டுவக் குலமே சிறந்த குலமாகும்.

    தாவும் கலைமானை ஊர்தியாகக் கொண்ட
    கொற்றவையின் கோலம் கொண்டு நிற்கும்
    அழகிய வளையணிந்த இவள் செய்த தவம்தான் எதுவோ?
    இவள் பிறந்த குடியில் தோன்றிய
    மூங்கில் வில்லினையுடைய
    மறவர் குலமே சிறந்த குலமாகும்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  01 –  06
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://allgodstuff.blogspot.in/2014/02/durga-maagif_8787.html

     

    Share
  • அர்ச்சனை -2

    –சு.கோதண்டராமன்.

    ram_worship_god_shiva

     

    யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் தோத்திரம் இந்து சமய இலக்கியத்தின் மிகப் பழமையான அருச்சனை என்ற சிறப்பைப் பெறுகிறது. இறைவனின் ஒவ்வொரு பெயருடனும் நம என்ற இணைப்புச் சொல் கொண்ட மந்திரம் வேதத்தில் இது ஒன்றே. அதனால் இது நமகம் என்றும் அழைக்கப்படுகிறது.

    ருத்ரனின் பல விதமான சிறப்புப் பெயர்களைக் கூறி ஒவ்வொன்றுடனும் நம என்று சொல்லப்படுகிறது. அப்படி 273 முறை நமஸ்காரம் செய்யும் இதில் 226வதாக வருவதுதான் நம சிவாய என்ற மந்திரம். மங்கலம் உடையாருக்கு வணக்கம் என்ற பொருளுடையது. இதற்கு அடுத்த மந்திரம் சிவதராய. மேலதிக மங்கலம் உடையாருக்கு வணக்கம் என்ற பொருள் படுவது.

    இதில் ருத்ரனின் தோற்றத்தைக் குறிக்கும் பெயர்களாக வருபவை- தங்கக் கையர், கருங் கேசத்தர், ஆயிரம் கண்ணர், பூணூல் அணிந்தவர், தலைப்பாகை கொண்டவர், செம்மேனியர்  என்று பல உள்ளன.

    வாளேந்தியவர், அம்புக் கையர், அழகிய நாணேற்றிய வில்லினர்,  காலாட்படை தலைவர்,  எதிரிகளை குத்தித் துளைத்து அடித்து அழ வைக்கின்றவர் என்று அவரது போர்த்திறமையைப் புகழ்ந்து பேசும் நமகங்கள் பல.

    துன்பம் துடைப்பவர், பாபத்தை அழிப்பவர், அருள் மழை பொழிபவர், இம்மை மறுமை இன்பம் தருபவர் என்ற பெயர்கள் அவரது உயர் பண்புகளைக் காட்டுகின்றன.

    வில்லாளிகள், நாணேற்றுபவர்கள், நாணை இழுப்பவர்கள், அம்பு ஏந்தியவர்கள், குறி நோக்கி அம்பு எய்துபவர்கள், படை தலைவர்கள், எதிரியைக் கிழிப்பவர்கள் என்று அவர் பன்மையில் வணங்கப்படும்போது  அவர் பல்லாயிரம் வடிவத்துடன் தோன்றுவதை அறிகிறோம்.

    காலத்தால் மிகப் பழமையானது என்பதைத் தவிர, இந்த அருச்சனைக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை இது சொல்லும் முறை வித்தியாசமானது.

    மணல் திட்டு, ஓடும் நீர் முதலான எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் என்று கூறாமல் மணல் திட்டே வணக்கம், ஓடும் நீரே வணக்கம்,  களர் நிலமே வணக்கம்  என்று இவ்வகையில் சுக்கான் பூமி, மாட்டுக் கொட்டகை, வீடு, கட்டில், ஒலி, எதிரொலி என்று பல பொருள்களுக்கு வணக்கம் கூறுகிறது. பொருளுக்குள் இறைவன் மறைந்து இல்லை, பொருளே இறைவன் என்கிறது இது.

    மந்திரியாகவும் அவைத் தலைவராகவும் விளங்குபவரும் அவரே. மற்றும் வணிகர், தச்சர், குயவர், விராதன் (புலையன்) என்று எல்லா வகை மனிதராகவும் அவரே காட்சி தருகிறார். குதிரை, நாய் முதலான மிருகங்களும் அவரே. இந்த எல்லா உயிர்களுக்கும் வணக்கம் தெரிவிப்பதிலிருந்து எல்லாமே  இறைவனாகப் போற்றப்பட வேண்டியவை என்பது விளக்கப்படுகிறது.

    கருங் கழுத்தர்- வெள்ளைக் கழுத்தர், சடையர்- மொட்டையர், மூத்தவர்- இளையவர், பச்சை இலை- காய்ந்த சருகு, மழைநீர்- மழையின்மை என்று ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலைகளையும் ருத்திரனாகக் கருதிப் போற்றும் மந்திரங்கள் சோதியனே- துன்னிருளே, சேயாய்- நணியானே என்ற மணிவாசகரின் வரிகளை நினைவூட்டுகின்றன.

    எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் இறைவன் என்றால் நாம் அன்றாடம் கண்ணெதிரில் காண்போரும் தெய்வம் தானே. உரக்கக் கூவுபவர்களுக்கு வணக்கம், ஓடுபவருக்கு வணக்கம், உட்கார்ந்து இருப்பவர்களுக்கு வணக்கம், படுத்திருப்பவர்களுக்கு வணக்கம், தூங்குபவர்களுக்கு வணக்கம், விழித்திருப்பவர்களுக்கு வணக்கம், நிற்பவர்களுக்கு வணக்கம் என்று இறைவனின் வியாபகத் தன்மையை விதந்து ஓதுகிறது ருத்ரம்.

    இறைவன் கெட்டவரிடத்தும் இருப்பான் அல்லவா?  அதனால் ருத்ரம் அவனது உயர் பண்புகளைப் போற்றுவதோடு நிற்கவில்லை. தாழ்ந்ததாக நாம் கருதும் பண்புகளையும் கொண்டவன் இறைவன் என்கிறது.  இது பிற அருச்சனைகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு.

    திருடர்களின் தலைவருக்கு வணக்கம், கொள்ளையருக்கு வணக்கம், ஏமாற்றுபவருக்கு வணக்கம்,  பேராசைக்காரருக்கு வணக்கம் என்று நாம் சமூகத்தில் விரும்பத் தகாதவராகக் கருதுவோரையும் இறைவனாகவே காண்கிறது.

    இதைப் படித்து விட்டுத் தான் பாரதி சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி (வேதம்) சொல்லும் என்று பாடினார் போலும். வேறொரு பாடலில் ருத்ரத்தின் சாரத்தைப் பிழிந்து தமிழில் தருகிறார்.

    சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
    சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
    வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
    வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

    பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
    பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
    நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
    நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

    உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
    ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
    பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
    பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

    வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
    மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
    இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
    எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.

     

    படம் உதவிக்கு நன்றி:  http://new-hdwallpaperz1.blogspot.com/2013/07/hindu-god-shri-ram-wallpapers.html

    Share
  • பால்நினைந்து கொடுத்திடுவீர்!

    -எம். ஜெயராமசர்மாமெல்பேண்

    பிரமனின் படைப்பினிலே
    பெரும்படைப்பு
    பெண்ணினமே!          MotherChild2
    பெருங்குணங்கள்
    பெற்றவளே
    பிறப்பினிலே
    பெண்ணாவாள்!

    ஆண்படைப்பும் பெண்படைப்பும்
    அகிலத்தில்
    உயர்படைப்பே!
    ஆனாலும்
    பெண்படைப்பே
    அகிலத்தை
    ஆளுவதே!

    கருவினைத் தாங்கிநிற்கும்
    பெருமையே
    பெண்மையாகும்!
    உருவினைக்
    கொடுப்பதற்கும்
    உரியதே
    ஆண்மையாகும்!

    இருஇனம் சமமானாலும்
    பெருமையே
    பெண்ணுக்கன்றோ!
    சுமைதனைத்
    தாங்கிநின்று
    சுமப்பது
    பெண்மைதானே!

    அடிவயிறு நோவெடுக்க
    அவள்சுமந்து
    பெற்றபிள்ளை
    அழகுமுகம்
    கண்டவுடன்
    அகமகிழ்ந்து
    நின்றிடுவாள்!

    அக்குழந்தை பால்குடிக்க
    அவள்வயிறு
    குளிர்ந்துவிடும்!
    அக்கணத்தில்
    ஆனந்தம்
    அவளோடு
    அணைந்துவிடும்!

    பால்குடிக்கா விட்டாலும்
    பால்கொடுக்கா
    விட்டாலும்
    தாயின்நோ
    அதிகரிக்கும்
    தாளாத
    துயரைத்தரும்!

    குழந்தை அழவேண்டும்
    குடிக்கவேண்டும்
    தாய்ப்பாலை
    தாயப்போ
    தனைமறப்பாள்
    தாயன்பு
    சுரக்குமப்போ!

    தாய்ப்பாலே உணவாகும்
    தாய்ப்பாலே
    மருந்தாகும்
    தாய்ப்பாலைத்
    தவிர்த்துவிடின்
    நோய்க்கிடமாய்
    ஆகிடுமே!

    பிள்ளைக்குப் பால்கொடுத்தல்
    பெருமையென
    நினைத்தார்கள்
    பால்குடிக்கும்
    பிள்ளைக்கு
    நோயணுகா
    என்றார்கள்!

    நாகரிகம் தலைக்கேறி
    நல்லதெல்லாம்
    மறந்துவிட்டுப்
    பால்கொடுத்த
    பெண்களிப்போ
    படுத்துறங்கி
    நிற்கின்றார்!

    குழந்தை அழுதாலும்
    கொடுக்கமாட்டேன்
    பாலென்று
    குழறுபடி
    செய்கின்றார்
    குடும்பமதில்
    பெண்களிப்போ!

    பால்கொடுத்தால் தம்மழகு
    பாழாகி
    விடுமென்று
    பவ்வியமாய்ச்
    சொல்லியவர்
    பால்கொடுக்க
    மறுக்கின்றார்!

    பெற்றபிள்ளை அழுதாலும்
    பெருங்கவலை
    கொள்ளாமல்
    வற்றிவிடும்
    அழகுஎன்று
    வாடியவர்
    நிற்கின்றார்!

    உற்றவரும் மற்றவரும்
    ஓலமிட்டு
    உரைத்தாலும்
    சற்றுமதை
    மதியாது
    தம்மழகைப்
    பேணுகின்றார்!

    புட்டிப்பால் கொடுக்கின்றார்
    புத்திகெட்டு
    அலைகின்றார்
    கிட்டச்சென்று
    கேட்டாலோ
    வெட்டியே
    பார்க்கின்றார்!

    விஞ்ஞானம் வளர்ந்தாலும்
    விந்தைகள்
    புரிந்தாலும்
    உண்மைகள்
    ஒருபோதும்
    ஓடிவிட
    மாட்டாது!

    தாய்ப்பாலைக் கொடுத்துவிடின்
    தாய்க்குக்குறை வருவதில்லை
    தாயழகும்
    கெடுவதில்லை
    தாய்மைதான்
    அழகுபெறும்!

    என்றிப்போ விஞ்ஞானம்
    எடுத்தியம்பி
    நிற்கிறது
    இதைக்கேட்ட
    தாய்மாரும்
    இரங்கிவந்து
    நிற்கின்றார்!

    மேலைநாட்டில் பெண்களிப்போ
    விரும்பிப்
    பால்கொடுக்கின்றார்
    வேலைக்குச்
    சென்றாலும்
    பால்கொடுக்க
    மறக்கவில்லை!

     எம்கருவில் வந்தபிள்ளை
    எம்பாலைக்
    குடிப்பதனால்
    எங்கிருந்து
    பிரச்சனைகள்
    எமக்குவரும்
    எண்ணுங்கள்!

    தாய்ப்பாலைக் குடித்தவர்கள்
    தானுரமாய்
    உள்ளார்கள்
    தகரப்பால்
    குடிப்பதனால்
    தரம்கெட்டுப்
    போகாதா?

    தாய்ப்பாலில் உள்ளசத்து
    தகரத்தில்
    இருக்கிறதா?
    தாய்மாரே
    மறக்காதீர்!
    தாய்ப்பாலைக்
    கொடுத்திடுவீர்!

    பால்முகத்தைப் பாருங்கள்!
    பரிவோடு
    அணைத்திடுங்கள்!
    பால்நினைந்து
    கொடுத்திடுவீர்
    பாரிலுள்ள
    தாய்மாரே!

    Share
  • காற்று வாங்கப் போனேன் (28)

    கே.ரவி

    ரயிலில் என்னைத் தாக்கிய மின்னற் கவிதை என்று போன அதிகாரத்தில் குறிப்பிட்டேன் இல்லையா? அதுதான் ‘ஸ்பரிசம்’ படத்தின் அடுத்த பாடலாகியது. அதுவும் இரண்டே வரிகள். அதையே வேறு வேறு ஸ்தாயியில், ஆனால் ஒரே ராகத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த பாடல். எனக்குத் தெரிந்த வரையில் அதைவிட அளவில் சிறிய பாடல் எதுவும் எந்தத் திரைப்படத்திலும் வந்ததில்லை.

    baluஅந்தப் பாடலைப் பாட எஸ்.பி.பாலசுப்ரமண்யம் ஒப்புக் கொண்டிருந்தார். அதற்கு முன் நான் அவருக்கு அறிமுகம் இல்லை. பாடல் பதிவுக்கு நாள் குறித்தாகி விட்டது. அன்று பகல் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் ஆர்.ஆர்.ஒலிப்பதிவுக் கூடத்தை வாடகைக்கு எடுத்து விட்டோம். வாத்தியக்காரர்களை எல்லாம் வரவழைத்து, ஹார்மோனியம் ராமமூர்த்தி உதவியுடன் ஸ்வரங்கள் எழுதித் தந்து, ஒத்திகை எல்லாம் பார்த்து முடித்து, இரவு 6 மணிக்குத் தயாரக, எஸ்.பி.பி. அவர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தோம். 7 மணியாயிற்று வரவில்லை. தொலைபேசியிலும் அவர் அகப்படவில்லை. 8 மணிக்குத் தொலைபேசியில் கிடைத்தார். “சாரி ரவி, நான் திருப்பதியில் இருந்து வந்து கொண்டிருக்கிறேன். வரப் பத்து மணிக்கு மேலாகிவிடும். ரொம்பக் களைப்பாகவும் இருக்கிறது. நீங்கள் ம்யூஸிக் டிராக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நான் இன்னொரு நாள் பாடிக் கொடுக்கிறேனே” என்று மிகப்பணிவாக அவர் வேண்டுகோள் விடுத்தார். டிராக் பதிவு செய்த அனுபவம் எனக்கு அப்போது இல்லாததாலும், எஸ்.பி.பி. பாட வேண்டிய என் முதல் பாட்டிலேயே இப்படித் தடை வருகிறதே என்ற ஆதங்கத்தாலும் அவர் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காமல் அன்றிரவே அவர் வந்து பாடிக் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தேன். என் நிலையைப் புரிந்து கொண்டு அவர் வீட்டுக்குக் கூடப் போகாமல் இரவு பத்து மணிக்கு நேராக ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்தார். பாடல் சொல்லுங்கள் என்றார். நான் இரண்டு வரிகளைச் சொன்னேன். ஓகே, சரணம்? என்றார். அவ்வளவுதான் என்றேன். நிமிர்ந்து பார்த்தார். பாடலே அவ்வளவுதானா? ஆம். அரை மணி நேரத்துக்குள் மலஹரி ராகத்தின் சாயையில் அமைந்திருந்த அந்தப் பாடலை அமர்க்களமாகப் பாடிக் கொடுத்தார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாடல் மிகவும் நன்றாக அமைந்தது. அந்தப் பாடல் இதுதான்:

    ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா

    காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா

    அவ்வளவுதான் பாடல். இதே வரிகளை வெவ்வேறு விதமாக மூன்று முறை கதாநாயகன் நாயகியிடம் பாடுவதாகக் காட்சி அமைந்தது. நீங்களும் பாடலைக் கேட்கலாம், பின்வரும் சுட்டியைச் சொடுக்கினால்.

    http://www.inbaminge.com/t/s/Sparisam/Oodal%20Siru%20Minnal.eng.html

    ராக்கெட் ராமனாதன், சுப்புணி (என்னுடன் விவேகானந்தா கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த நண்பன் டி.எம்.சுப்பிரமணி) இவர்களுடைய நகைச்சுவையும், இந்தப் படத்தின் பாடல்களுமே, வினியோகஸ்தர்கள் இந்தப் படத்தை வாங்க, முக்கியமான காரணங்களாக அமைந்தன.

    மேலே உள்ள பாடல், பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் இல்லை. பல்லவியே ஒரு முழுப்பாடலாக உருக்கொண்டு விஸ்வரூபம் எடுத்த பாடல். அதற்குமேல் வளர அதில் இடமில்லை. ஆனால், பல்லவியோடு நின்றுவிட்ட பாடல்களும் உண்டு.

    ஒருநாள் இளங்காலைப் பொழுது, சின்ன சின்ன இழைகளாக வானம் மெல்ல மழைதூவிக் கொண்டிருந்தது. அந்த ரம்மியமான சூழ்நிலையில் ஒரு பல்லவி, தர்பாரி கானடா ராகத்தில், மனத்தில் மெல்லப் படர்ந்தது. அதையே மனம் முணுமுணுத்துக் கொண்டிருக்க, அதுவே அப்படியே மெல்லத் தேய்ந்து போனது, ஆங்கிலத்தில் ஃபேட் அவுட் ‘fade out’ என்பார்களே, அது போல்.

    மழைத்

    தூறலிடும் ஒரு காலைப் பொழுது – உனைத்

    தூண்டிவிடும் ஒரு பாடல் எழுது

    பிறகு நேர்ந்த எந்தத் தூண்டுதலும் அனுபல்லவி, சரணங்களைத் தரவில்லை. அந்தப் பல்லவியைத் தொடர்ந்து எழுதப் பலமுறை நான் முயன்றும் முடியவில்லை. வார்த்தைகள் வந்தன. ஆனால் அந்தப் பல்லவியோடு அவை இணைய முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.

    ஷோபனாவும் பாடல்கள் எழுதியுள்ளாள். அதுவும் அவள் இஷ்ட தெய்வமாகிய கண்ணன் மேல் அவள் வடித்த பாடல்களில் மீராவின் தாபமும், ஆதங்கமும் எதிரொலிக்கக் கேட்கலாம். அப்படி அவள் 1980-களில் எழுதிய ஒரு பாடலில் வரும் இரண்டு வரிகளை இந்தச் சூழ்நிலையில் எண்ணிப் பார்க்கலாம்:

    குழலில் இருந்து பிறந்த இசை நான் – அவன்

    குழலில் இருந்து பிறந்த இசை நான்

    கண்ணனின் கற்பனை நான்

    இந்தப் பல்லவியோடு தொடங்கும் அந்தப் பாடலின் சரணத்தில் வரும் அந்த இரண்டு வரிகள்:

    தென்ற லின்வழி சென்றத னாலே கண்ணனை மறந்திருந்தேன்

    பல்லவி யோடு நின்றத னாலே கண்ணனைச் சரணடைந்தேன்

    செதுக்கச் சிற்பி வந்தால்தான் கல் சிலையாகும். அவிழ்க்கக் கவிஞன் வந்தால்தான் சொல் கவியாகும். நம் உயிரே ஒரு கல்; ஒரு சொல்; அதைச் செதுக்க வரும் சிற்பிக்காக, அல்லது அதை விரித்துப் பாடவரும் கவிஞனுக்காக அது எத்தனை யுகமானாலும் காத்திருக்கும், ராமனுக்காகக் காத்திருந்த அகலிகை போல!

    பல ஆண்டுகள் கழித்து நான் எழுதிய ஒரு பாடலின் தொகையறா (இந்த வார்த்தைக்கு என்ன பொருளோ!):

    உளிதாக்கி உடைகின்ற கல் – நான்

    உமிவிலகக் காத்திருக்கும் நெல்

    ஒருதேவ முனிவன்வந் துச்சரிக் கும்வரை

    ஓசையின்றி ஒளிந்திருக்கும் மந்திரச்சொல்

    என் வாழ்க்கையில் எப்படியெல்லாம் மின்னல் அடித்திருக்கிறது! 5 வயதில் ‘மின்னல் வீரன்’ என்ற பெயரில் என் வளர்ப்புத் தந்தை தயாரித்த படத்தில் குட்டிக் கதாநாயகனாக நடித்தேன். 11 வயதில் என் ஆசிரியர் என் தமிழ் விடைத்தாளைச் சுருட்டி என் முகத்தில் வீசியெறிந்த ஒரு மின்னல் அதிர்ச்சியில் உந்தப் பட்டு மூன்று மாதங்களில் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை நானே நூலகம் சென்று பயின்று கவிதை எழுதத் தொடங்கிப், “மின்னற் சுவையே கன்னற் கனியே” என்று தொடங்கும் ஒரு நீண்ட கவிதை எழுதி ஆசியரின் அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்றேன். 28 வயதில் எஸ்.பி.பி பாட “ஊடல் சிறு மின்னல்” என்ற என் பாடலை நானே இசையமைத்துப் பதிவு செய்தேன். பிறகு, 1998-ஆம் ஆண்டில் பாரதியியல் பற்றி “மின்னற் சுவை” என்றொரு நூல் எழுதி அதற்குக் கவியரசி செளந்தரா கைலாசத்திடம் அருமையான முன்னுரை வாங்கி வெளியிட்டேன்.

    balu1என் இசையமைப்பில் எஸ்.பி.பி. பாடிய இரண்டாவது பாடலும் மின்னல்தான். ஆனால் அது ‘ஸ்பரிசம்’ படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் வளர்ப்புத் தந்தை எடுத்த ‘ராஜா நீ வாழ்க’ படத்துக்காகப் பதிவானது. பிரபு, சத்யராஜ், அம்பிகா நடித்து, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் தயாரான அந்தப் படத்துக்காக எஸ்.பி.பி. பாடிய பாடலைப் பதிவு செய்ய என் உதவியாளராகப் பணியாற்றிய எல்.வைத்தியநாதனை இப்போது நினைத்துக் கொள்கிறேன். ஏற்கனவே, ‘ஏழாவது மனிதன்’ என்ற படத்துக்கு இசையமைத்து வெற்றியும் பெற்ற இசையமைப்பாளர் அமரர் எல்.வைத்தியநாதன் தம்மை விட வயதிலும், அனுபவத்திலும் குறைந்த எனக்கு உதவிசெய்ய முன்வந்த பெருந்தன்மையை நன்றியுடன் நினத்துக் கொள்கிறேன். அந்தப் பாடலை எஸ்.பி.பி எப்படித் தம் இனிய குரலால் வளம் செய்திருக்கிறார் என்பதை நினைத்தால் இப்பொழுதும் என் கண்கள் குளமாகின்றன:

    தென்றலே மலர் சூடவா
    கொடி மின்னலே வளை போடவா
    மேகமே மழைத் துளிகளில்
    மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

     

    நிலவே ஒரு மலரென மலர்வதும்
    நிழலே மணி ஒளியென விரிவதும்
    கனவா இல்லை நினைவா உன் முகமா
    காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்

    பார்வையே மலர் சூடுமே – ஒளிப்

    புன்னகை வளை போடுமே – என்

    கண்களின் மழைத்துளிகளே – உன்

    கால்களில் ஜதி போடுமே

     

    தென்றலே மலர் சூடவா

     

    வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
    வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
    கனவு மலரக் கண் இமைகள் நெகிழப் – புதுக்

    கனவு மலரக் கண் இமைகள் நெகிழ – ஒரு

    மழலை வடிவமுன் மடியில் தவழவரும்
    வெண்புறா விளையாட வா – குயில்

    பேடையே குழ லூதி வா – அலைக்

    கரங்களில் நுரைக் குடங்களில் – நதி

    அன்னை யேசீர் கொண்டு வா

     

    தென்றலே மலர் சூடவா
    கொடி மின்னலே வளை போடவா

     

    லாலலா லல லாலலா
    லல லாலலா லல லால லா

    [பாடலை நீங்களும் கேட்கச் சொடுக்கவும்]

    https://www.youtube.com/watch?v=d0HckTVpYFw

    இந்தப் பாட்டுக்கும் ஒரு பின்னணி உண்டு. அதுவும் இலக்கியப் பின்னணி. என் கல்லூரி நாட்களில் என் நண்பன் ஓவியக்balu2 கவிஞர் சு.ரவி எனக்கு அவ்வப்போது சம்ஸ்க்ருத இலக்கியத்திலிருந்து நல்ல கவிதைகளைச் சொல்லி விளக்கியிருந்தான். அதிலும் மஹாகவி காளிதாசனின் ‘ரகுவம்சம்’ என்ற காவியத்தில் இருந்து அவன் சொன்ன ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ரகுவம்சத்தில் ஒரு பகுதிதான் ராமனின் கதை. அதில், ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போகும் வழியில், சீதை தன் ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றிக் கீழே வீசி எறிந்ததாகவும், அவள் கைவளையல்களை அப்படிக் கழற்றி எறிந்ததும், அவளுடைய வெறுங்கையைப் பார்க்கப் பொறுக்காமல் வானமே இடியிடித்து, மின்னலால் அவள் கைக்கு வளையிட்டது என்ற அருமையான பாடல் என் மனத்தில் உறைந்து, தக்க நேரத்தில் தமிழில் வெளிப்பட்டதை எண்ணி மகிழ்கிறேன்.

    இன்னும் என் வாழ்வில் என்னென்ன மின்னல்கள் காத்திருக்கின்றனவோ!

    அட, இந்த வரி எழுதும் போதே உள்ளத்தில் பளிச்சென்று மின்னலிடுகிறதே ஒரு புதுக்கவிதை; அதாவது, இப்பொழுதுதான் உதித்த புதிய கவிதை. சுடச்சுட, அப்படியே பரிமாறுகிறேன். இந்தக் கவிதைக்கு இதுவே சூழல்; நீங்களே இதன் செவிலித் தாய்மார்கள்:

    காற்றும் மின்னலுமாய்க் கதைசொல்ல வந்தேனே

    நேற்று நினைவுகளை நெஞ்சுருகத் தந்தேனே

    போற்றிப் புகழ்வதற்கா புலனழிந்து போவதற்கா

    ஏற்றம் எனக்கில்லை எல்லாம் திருவருளே

     

    சாட்டை சொடுக்கியவன் சங்கல்பத் தால்நானும்

    ஆட்டம் போடுகிறேன் ஆலோலம் பாடுகிறேன்

    வேட்டைக் காரனுக்கு வேறென்ன குறிக்கோளோ

    வேடிக்கை காட்டுகிறான் வேஷங்கள் போடுகிறேன்

     

    கூத்து நடக்கையிலே கூட நடிப்பார்கள்

    கூத்து முடிந்ததுமே கூட்டம் கலைந்துவிடும்

    கூத்தன் அவனன்றிக் கூட்டில் எதுபறவை

    கூத்து நடக்கட்டும் கொண்டுவா கவிதைகளை

    (தொடரும்)

    Share
  • நேர்மையின் வலி!

    சங்கர் சுப்ரமணியன்

    அப்பாவின் கைப்பிடித்துக்                                    Pandavas
    காலார நடக்கையிலே
    சொல்லி வந்திடுவார்
    அர்ச்சுனனின் உண்மையும்
    தர்மனின் நேர்மையும்
    அவர்களடைந்த மேன்மையும்
    எனக்கும் பசுமரத்தில் அடித்த
    ஆணிபோல் நெஞ்சத்தில் பதிந்து போனது!

    சிவப்பு விளக்கு எரிகையிலே
    முன்னம் செல்ல, அலுவலகங்கள்
    வேலைமுடிக்க பணம் கொடுக்க,
    வரிசையில் நில்லாமல் இடை சொருக,
    முன் நிற்பவனின் இடம் பெற,
    மனம் பொருந்தா வேலை செய்ய…
    பின்னமிருந்து சமூகம் என்னை
    முன்னம் தள்ளப்பார்க்கும்!

    இப்படியாகச் செய்யாவிடின்
    இல்லாத காரணம் சொல்லி
    என்னைப் பின்னம் தள்ளும்!
    இவன் கனவுகளில் நிஜம்
    இழக்கும் பைத்தியக்காரன் என்ற
    முத்திரையுடன் எள்ளி நகைக்கும்!

    எதுவரினும், என் முகம் சிதைந்திடினும்
    நேர்மையின் வலி என்
    இதயமெல்லாம்  ஆறாத ரணங்களாய்
    நிறைந்திடினும், நான் நிறம்
    இழந்திடேன்! ஏனெனில் கழட்டி
    மாட்டும் சட்டையல்ல என் நேர்மை!
    உறையும்வரை உடன்வரும் என் உதிரம்!

    Share