Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    ந்ருசிம்ஹ ஜெயந்தி அன்று எழுதியது
    ———————————————————————–
    ந்ருஸிம்ஹ மந்த்ரராஜம்(மூல மந்திரம்)
    ——————————————————————————
    “உக்ரம், வீரம் ,மஹாவிஷ்ணும் ,ஜ்வலந்தம் ,ஸர்வதோமுகம் |
    ந்ருஸிம்ஹம்,பீஷணம் ,பத்ரம் ,ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||

     

    crazy
    வெண்பாவாக்கம்
    ————————————-
    “வீரியன், வீரன் , வியாபகன் , சைதன்ய
    சூரியன் சூக்குமக் காரியன், -சீறிடும்,
    சிங்கன் ,எதிரிக்கு சொப்பனம் ,காலகாலன்,
    மங்களம் சேர்த்திடும் மால்”….கிரேசி மோகன்….

    Share
  • விழுப்புரம் சந்திப்பு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக    (16)

     

    விழுப்புரம் சந்திப்பு

     {பாடலைக் கேட்டு மகிழ}

    indian-couple-love-romantic-honeymoon-cool-picture

    விழுப்புரம் சந்திப்பு…..ம்..

    எப்போது நம் சந்திப்பு?

     

    இப்போதுதானே சந்தித்தோம் என்று

    மனித பாஷை பேசலாமா நீ?

    ஓ!

    முத்தங்களுக்கும் பட்டியல்?

     

    சந்தித்த போதெல்லாம்

    சிந்தித்துக்கொண்டே இருந்தோமே

    விதி மகிழ மகிழ

    பிரிவைப் பற்றி?

     

    சந்திக்க ஏங்குகிறோம்

    சந்தித்தால் உருகுகிறோம்

    சந்தித்தபின் மருகுகிறோம்

     

    சந்திக்கத்தான் பிரிகிறோமா

    பிரியத்தான் சந்திக்கிறோமா

     

    இந்த நெடும் பயணத்தில்

    இத்தனை சந்திப்புகள்

    இருப்பதெல்லாம்

     

    பிரிவும் சந்திப்பும்

    என்றேனும் ஓர்நாள்

    சமன்பெறும் என்ற நம்பிக்கையாலா?

     

    எனக்கென்னவோ இந்தப்

    பிரிவுப் பிடாரிதான் சந்திப்பு மோகினியாய்

    வித்தை காட்டுகிறாள் என்று தோன்றுகிறது

     

    எல்லோரும் இறங்கிவிடும்

    ஏதோவொரு சந்திப்பில்

    என்ன இருக்கப் போகிறது

    எனக்கும் உனக்கும்?

     

    என்றைக்குச் சந்தித்தோமோ

    அன்றைக்கே முழுமையாக

    இறக்கிவிட்டு விட்டோமே

    எல்லோரையும்!

     

    உனக்கென்ன தோன்றுகிறது?

    ஒய்யாரக் கழுத்தை ஒசித்து

    உயிரை உதட்டில் குவித்து

    மூச்சு நிற்கும்படி

    முத்தமிட்டு விட்டால்

    சங்கமத்தின் நிரந்தரத்தில்

    பிரிவு தொலைந்தே போய்

    சந்திப்பு நிலைக்குமென்று

    சிந்திக்கிறாயா?

     

    விழுப்புரம் விலகிவிட்டது

    வேண்டுமென்றால்

    சங்கிலியை இழுத்துவிட்டுத்

    தண்டவாளத்தின் நடுவே

    சற்றும் நழுவாமல்

    முற்றும் தழுவியபடி

    சந்திப்போமா?

    படத்திற்கு நன்றி

     

    Share
  • இன்னும் மாயை இருக்கிறது

     

    THE LAST STANZA OF THIS POEM TRANSLATED BY MY SON AJITH SUBRAMANIAN CAN BE SEEN AT THE END..

    Su.Ravi

    PS : my poet friend K.Ravi’s reply poem & the chain poems thereafter will be sent subsequently.

     

    BF3B946F-ED68-4A62-B1DB-942F77340846

    இன்னும் மாயை இருக்கிறது- அது
    என்னில் என்னை மறைக்கிறது!
    மின்னல் கீற்றாய் மெய்யுணர்(வு) அந்தோ!
    எப்பொழுதாகிலும் ஸ்புரிக்கிறது. ( இன்னும்)

    புலன் உணர்வெல்லாம் பொய்மைஎன்றே ஒரு
    பொறிபறந்தாற்போல் புரிகிறது;
    நிலத்தில் இவ்வாழ்வும் நிலைகிடையாதெனும்
    நிச்சய உண்மை தெரிகிறது- மனம்
    சிலபோதேனோ இனிப்பை அவாவும்
    சிறுமதலை போல் அலைகிறது-உடல்
    பலமிழந்தோய்ந்தால் பயந்து நடுங்கிப்
    பரிதவித்தேங்கிக் குலைகிறது! ( இன்னும்)

    ‘மனநிறை(வு) என்பதோர் மாரீசம் – அது
    மயக்கி இழுத்துனைச் செயும் மோசம்
    இனம் குலம் என்பவை வெளிவேஷம் “- என
    இன்னும் பலப்பல கதை பேசும்= உடன்
    தனயன், தாய், மனை இவர் முகம் பார்த்திடில்
    தயங்கும், தடுக்கும், தவறி விழும்!
    கனவும் நனவும் கடந்த பின்னாலும்
    கணப்பொழுதாசையில் கவிழ்ந்து விடும்! ( இன்னும்)

    விண்ணியல் கண்டு தெளிந்தாலும்- மறை
    ஓதிய பண்டிதன் ஆனாலும்
    எண்ணிய மட்டினில் ‘யான்’ ,‘என(து)’ எனும் இவை
    எங்கோ பாதலம் ஆழ்த்திவிடும்
    திண்ணிய நெஞ்சுரம் வைராக்யம் இவை
    திரும்பவும் இடிந்து பொடியாகும்
    நுண்ணிய நூலிழைதான் பாசம்- அது
    நோற்ற தவங்களை விலைபேசும் ( இன்னும்)

    ஓட்டம் இதற்கோர் இலக்கில்லை
    ஓடாதிருக்க விலக்கில்லை
    ஓட்டுவ தாரோ, ஓடுவ தேனோ
    ஓடும் எவர்க்கும் தெரிவதில்லை
    ஓட்டம் முடிந்தபின் ஓடு கழன்றால்
    ஓய்வுண்டோ எனில் அதுவுமிலை
    ஓட்டத்தின் ஊடே ஓராயிரம் தடை!
    ஓட்டத்தில் நாட்டம் குறையவில்லை ( இன்னும்)

    சு.ரவி
    ********************************************

    Ajith (s/o Su.Ravi):

    The rules of the game, aint so clear,
    I can quit this game, but my lifez so dear!
    Who runs the show? Why play this game?
    Not a single player can answer the same!
    Oh the game is over, and now Ive got no name!!
    I wanna rest, but, here we go again!
    A thousand obstacles each time I play,
    Do I lose interest? Nay nay nay!!
    **********************************

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “இந்த்ர மழையை, இடிமின்னலை ஏற்றவன்,
    சந்த்ர குலத்தோன், சகாக்களை, -தொந்த்ரவு,
    கெட்டலைய வைக்காது, காப்பாற்றும் பாண்டுரங்க,
    விட்டலைக் கண் டேன்கேச வா”….கிரேசி மோகன்….

    Share
  • நந்தவனக் குயிலே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (15)

     

     

    நந்தவனக் குயிலே!

      (பாடல்)

    10294248_354612934692545_5491888087630846935_n

    நந்தவனக் குயிலே! சின்னப் பனித்துளியே!
    சின்னப் பனித்துளியில் சிலிர்க்கும் சித்திரப் புல்நுனியே!
    புல்லின் நுனிமுனையில் புன்னகைக்கும் ஒளியே!
    ஒளிமடி தேடும் ஒய்யார நிழலே!

    நிழல்தவழ்ந்துவரும் அந்த நீலநதிக்கரையே
    கரைமணல் பஞ்சில் காலைத் தழுவும் நிலவே!
    நிலவு நெகிழ்ந்திடும் நேசம் பொங்கிவரும் விழியே
    கொஞ்சம் விழியசைந்தால் நெஞ்சில் கொஞ்சும் நந்தவனமே!

    வானம் கொடுத்தவரம் வாணி வீணை தெறித்த ஸ்வரம்
    மோனக் குகையினிலே ஒருநாள் முளைத்த ஒளிமயம்
    தேனும் திணறும்விழி இன்பத் தென்றல் மயங்கும் மொழி
    ஊனும் உருகுதம்மா! இந்த உயிருக்கென்ன வழி?

    சின்னச்சின்ன விழிகள் பேசும் என்ன என்ன மொழிகள்!
    மொழியின் நடுவே ஏனோ மூடும் மர்மத் திரைகள்
    திரைநடுவினிலே வந்து திறக்கும் உதயங்கள்
    உதயக் கரங்களில் வந்து உருகும் இதயங்கள்

    பஞ்சுச் சிறகாக உன்னை நெஞ்சில் அணைத்திடவா?
    பட்டு மலரிதழில் உயிரைத் தொட்டு முத்தம் தரவா?
    கண்ணை இமைத்தாலும் கலங்கும் வண்ணத் திருக்குளமே
    ஓரத்தில் நின்றபடி உயிரால் வருடி மகிழவா?

    ஒன்றும் புரியவில்லை எந்தன் உள்ளம் உள்ளத்தில் இல்லை
    உள்ள உயிரொன்று உந்தன் உள்ளங் கையில் முல்லை
    என்று தொடங்கியதோ? நடுவில் ஏன் மறைந்ததுவோ?
    என்றும் தொடர்ந்திடுமோ? என்னென்ன செய்திடுமோ?

    Share
  • ராதா மாதவன் வரும் நேரம் …

     

    வணக்கம் வாழிய நலம்

    யமுனை நதியின் பரப்பில் பால்வெண்ணிலவு பாதரசத்தில் பாதைவிரிக்கும்!
    ஆங்கே வேய்ங்குழல் ஊதி ராதையின் மனத்தைக் கொள்ளை கொள்ளும்
    ராதாமாதவனைத் தன் தேமதுரக் குரலில் திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    திரு ரமேஷ் வினாயகம் இசையமைப்பில் பாடுவதைக் கேட்க கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

    பாடலும், பாடற் காட்சியும்
    பார்க்க, ரசிக்க….

    சு.ரவி

    https://ia601204.us.archive.org/21/items/SuraviKrishnarAlbumSongs/09Track9.mp3

    ராதா மாதவன் வரும் நேரம் …

    D69987FC-F4ED-4580-9CAD-7395C7C5978A

    ராதா மாதவன் வரும் நேரம்
    ராகங்களோடு கவிசேரும்
    யமுனா தரங்கம் அலைமோதும்
    யது நாதன் என்று துதிபாடும்!
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
    ஓரிரவினிலே கோகுலம் நாடி
    மழலை பேசி வளர் மாயன்!
    இடையர்சூழவே கானகம் ஏகி
    மாடுமேய்த்திடும் ஆயன்!
    கார்கால மேகம் அவன் தேகம்!-கோ
    தூளி செய்யும் அபிஷேகம்!
    வனமாலை சூடி விளயாடும்- ஸ்ரீ
    வாசுதேவனே போதம் !
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா! (ராதா மாதவன்)

    பூரண நிலவில் வேய்ங்குழல் வழியே
    அமுத கீத நதி பாயும்!
    தமைமறந்திடும் கோபியர் நெஞ்சம்
    வேணுகானமதில் தோயும்!
    கோவிந்த ரூபமே த்யானம்!
    கோவிந்த கானமே ஞானம்!
    நவ நீதமாகும் மனம் யாவும்- ஸ்ரீ
    க்ருஷ்ண மந்திரம் ஆகும்!
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா!
    ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ணா! (ராதா மாதவன்)

    சு.ரவி

    Share
  • சொல்லின் செல்வன்

    -பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

    அவை
    மூலதனம்
    முகவரியும்கூட!

    ஆத்திரத்திலும்
    அரிதாரத்திற்காகவும்
    செலவு செய்ததில்லை
    செலவு செய்வதில்லை

    அனைத்திற்கும்
    முதலீடுசெய்வதில்லை
    செலவுகள்
    தீர்க்கமானவை
    தெளிவானவை

    அவற்றிற்குத்
    திசைகளுமுண்டு
    இலக்குகளுமுண்டு

    பரிணாமத்தின் கிடங்காகி
    அடர்த்தியாகச்
    சேமிக்கப்பட்டிருக்கிறது
    பரிமாணத்தின்
    அடையாளமாக
    அவ்வப்போது வழங்கப்படுகிறது

    வெளிச்சமேடையில்
    விரயம் செய்வதில்லை
    விதைத்தவை
    விளைந்தவை
    அறுவடையாகவேண்டுமென்பதிலேயே
    கவலையும்
    கரிசனமும் கலந்து
    கழிகிறது காலம்!

    Share
  • மரஞ்சாக மருந்து கொள்வரோ?

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    சங்க இலக்கியங்கள் தொடு மணற்கேணியாய்ப் பயிலுந்தொறும் நுண்பொருள் காட்டும் காலக் கண்ணாடிகளாகும். இத்தகைய நுண்பொருள் காண, ஆசிரியர் தொல்காப்பியர் சில நெறிகளைச் சுட்டியுள்ளார். அவை உள்ளுறை, இறைச்சி என்பனவாம். நன்கு இலக்கியப் பயிற்சியுடையோரே இந்நெறிக்கண் சென்று நுண்பொருள் காண இயலும். இத்தகைய கூர்த்த மதியினையே, வள்ளுவப் பெருந்தகை, “நுண்மாண் நுழைபுலம்” எனக் குறித்துள்ளார். நுனித்துக் கற்றாரேயன்றி ஏனையோரும் இலக்கிய இன்பம் துய்ப்பான் வேண்டிச் செய்யுள் யாத்த புலவரும் பலருளர். அவருள் ஒருவரே கணிபுன்குன்றனார் ஆவார்.

    இவரைச் சிலர் ‘கணியன் பூங்குன்றனார்’ எனவும் மொழிவர். ஆயினும், கணிபுன்குன்றனார் என்னும் பெயரால் இவர் பாடிய அகப்பாடல் ஒன்றே நமக்குக் கிட்டியுள்ளது. இப்புலவர்பெருமான் நற்றிணையில் பாலைத் திணையில் ஒரு செய்யுளைச் செய்துள்ளார். பாலைப் பாடல்கள் பெரிதும் பிரிவுத் துயரினையே சுட்டிவருவன. ‘போக்கெல்லாம் பாலை’ என்பர் சங்கச் சான்றோர். ’பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ இத்திணைக்குரிய உரிப் பொருளாம். இனி, நாம் காண இருக்கின்ற செய்தியினைப் பார்ப்போம்.

    பொருள்தேடச் சென்றான் தலைவன் ஒருவன். இன்பமாக வாழ்வதற்குப் பொருள் இன்றியமையாததல்லவா? அறம் செய்வதற்கும் பொருள் மிகுதியும் தேவை. அதனாலன்றோ சான்றோர் ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ எனக் கூறுவாராயினர். இவையெல்லாம் நம் தலைவி அறியாதவளா? இல்லை இல்லை…அவள் இளையோள்; அண்மையில் மணவாழ்வு மேற்கொண்டவள். ஆதலால் பிரிவுத் துயரைப் பொறுக்கலாற்றாது பெரிதும் வருந்துகின்றாள். மாலைக் காலமும் வெண்மதியும் அவளது துயரை மிகுவிக்கின்றன.

    sankailakkiyamதலைவியின் துயரை அறிந்த அவள் இன்னுயிர்த் தோழி அவளுக்கு ஆறுதல் மொழிகள் பலவற்றைக் கூறி அவளை ஆற்றுவிக்க முயல்கின்றாள்.”நம் தலைவர் நின்மாட்டு அன்பு மிக்குடையவர்; உன்னை நீண்ட காலம் பிரிந்துறையார்; பொருள் தேடியதும் விரைந்து வந்துவிடுவார் தலைவர்” என்றாள் தோழி.     

    இதற்கு மறுமொழியாகத் தலைவி கூறுகின்றாள், “தோழி! நல்ல மருந்து மரமொன்றுள்ளது; அம்மரம் வேர் முதல் கனி வரையில் மருந்தாகப் பயன் தந்து நோய் நீக்கும் தன்மையுடையது. அதற்காக நோயைப் போக்க மருந்து வேண்டுபவர், அம்மரத்தையே வேரோடு வெட்டிச் சாய்ப்பரோ? மாட்டார்! மருந்திற்குப் பயன்படுமாறு சிறிதளவே பயன்படுத்திக் கொள்ளுவர். மேலும், நாடு காக்கும் வேந்தனும் மக்களைக் காக்க வரிவாங்குவது உலக இயல்பே. ஆனால் பொருள்சேர்ப்பதற்காக – வரி வாங்குவதற்காக – மக்களையே கொன்று அவர்தம் பொருளைப் பெற முயல்வரோ? அவ்வாறு பொருள்பெற முயன்றால் அம்மன்னனது ஆட்சி நிலைபெறுமா? அழிந்தல்லவா போகும்! இதனையறியாயோ தோழி நீ?” என்கிறாள் தலைமகள். மேலும் தவம் செய்வோர் உயர்நிலை அடையவே தவம் செய்வர். தம் இன்னுயிர் நீக்கவா தவம் செய்வர்? என்ற வினாவையும் எழுப்புகின்றாள்.

    இதுபோன்றே, இல்வாழ்க்கை நன்கு சிறப்புறப் பொருள் மிகுதியும் தேவையே. பொருள் பெற்றால்தான் இன்பமும் நிலைபெறும்; அறமும் செழிக்கும். “நடுவணது எய்த இருதலையும் எய்தும்” என்ற மூத்தோர் மொழி முற்றிலும் உண்மையே. ஆனால், தலைவர் பிரியாத வரையில் எனதுயிர் என்னுடலில் நின்றது உண்மையே. அவர் அன்பை நம்பியே வாழ்ந்தவள் நான். என் காதல் தலைவரோ என்னைப் பிரிந்து அரிய கானகங் கடந்து பொருள்தேடச் செல்வாராயின், என்னுயிரும் உடலில் தங்காது அவரோடு சென்றுவிடுமன்றோ? உயிரைப் பிரிந்து நான் எங்ஙனம் வாழ முடியும்? கூறாய் தோழி!” என்றாள் தலைவி. மேலும், ”அவர் தேடிக் கொண்டுவரும் பொருள், பிரிந்த நம் இன்னுயிரை மீட்டுத் தருமா?” எனவும் மற்றுமோர் வினாவை எழுப்புகின்றாள்.

    ”இவற்றையெல்லாம் நம் தலைவர் அறியாதவர் அல்லரே. அறிந்தும் என்னைப் பிரிந்து சென்றுள்ளாரே! இவள் இறக்கமாட்டாள் என்ற எண்ணந்தானே? இவ்வாறு பிரிந்து பொருள்தேடச் செல்வது தலைவனின் இயல்பேயென்பர் சான்றோர். இதுவே உலக இயற்கை போலும்” எனக் கூறித் துன்பத்திற் புலம்புகிறாள் தலைவி. எனினும், பொருள் தேடச் சென்ற தலைவன் பொருளொடு விரைந்து வருவான்; அவர்கள் வாழ்க்கையில் இன்பம் நிலைபெறும் என்பதே உலக வழக்கு.

    இப்பாடல் அகத்திணைப் பாடலாயினும், இவற்றில் இடம்பெற்றுள்ள மூன்று உவமைகளால் உலக மக்களுக்கு நல்லறிவு கொளுத்துகின்றது.

    1. மருந்திற்காக மரத்தையே கொல்லலாமா? என்ற வினாவின் வாயிலாக   மருந்துக்குத் தேவை வேராயினும், பட்டையாயினும் தமக்குத் தேவையான சிறிதளவே கொள்ளல் வேண்டும்; ஏனெனில் மருந்து சிறிதளவே உண்ணுதற்குரியது. அஃது உணவன்று; அதனாலேயே “மரஞ்சாம் மருந்துங் கொள்ளார் மாந்தர்”, என்றார் இப்புலவர். ஆனால், சில இடங்களில் மருந்துப்பயன் வேண்டி மரத்தையேயழிப்பதைக் காண்கிறோமே நாம்! இந்நிலை இனியேனும் மாறவேண்டும்.

    2. தவம் செய்வது நற்பயன் பெறவே; தம் உயிரைப் போக்குவதற்கன்று! எனவே, நற்பயன் நோக்கியே நாம் எச்செயலையும் மேற்கொள்ளவேண்டுமென்பதே இதன் கருத்தாம் என்க.

    3. நாடு வளம்கெடுமாறு மன்னர் வரிவாங்க மாட்டார். இஃது ஆட்சியாளர்க்கு என்றும் வழிகாட்டும் அறிவுரையாகும். இதே கருத்தைப் புறப்பாடல் 184-இல் புலவர் பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடைநம்பிக்கு அறிவுரை கூறுமுறையில் விரிவாகக் கூறியுள்ளார். இக்கருத்துக்கள் ஆட்சியாளர்களுக்கு என்றும் பொருந்துவன.

    இனி, பொருள்செறிந்த அந்நற்றிணைப் பாடலைக் காண்போம்!

    மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்
    உரஞ்சாச்
    செய்யார் உயர்தவம் வளங்கெடப்
    பொன்னுங்
    கொள்ளார் மன்னர் நன்னுதல்
    நாந்தம்
    உண்மையின் உளமே அதனால்
    தாஞ்செய்
    பொருளளவு அறியார் தாங்கசிந்து
    என்றூழ்
    நிறுப்ப நீளிடை ஒழியச்
    சென்றோர்
    மன்றநங் காதலர் என்னும்
    இன்ன
    நிலைமைத் தென்ப
    என்னோரும்
    அறிபஇவ் வுலகத் தானே. (நற்: 226 – கணிபுன்குன்றனார்)

    (நன்றி: தினமணி – தமிழ்மணி)

    Share
  • நியூட்ரானின் தந்தை ஜேம்ஸ் சாட்விக்

    -முனைவர் சேஷா சீனிவாசன்

    Chadwickபல அறிவியல் வல்லுநர்கள் அணுவைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த சமயம், ஜேம்ஸ் சாட்விக்தான் (Sir James Chadwick) 1932இல் நியூட்ரான்களாலான அணுக்களையும் அது தொடர்பான நியூக்ளியர் வெடிப்பான்களையும் (Nuclear Bomb) முதன்முதலாகக் கண்டுபிடித்தார்.

    இங்கிலாந்திலுள்ள செஷைர் நகரத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் சாட்விக். அவருடைய படிப்பிற்கான உதவித்தொகை கிடைக்கப்பெற்றதால் மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்தில் நான்கு மைல்கள் நடந்து சென்று படிக்க முடிந்தது.

    1912-இல் முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாவதாகத் தேறியதோடு மட்டுமல்லாமல் தம்முடைய பேராசிரியர் ரூதர்ஃபோர்டுடன் (Ernest B. Rutherford) இணைந்து தம் முதல்ஆராய்ச்சிக் கட்டுரையைப் பதிப்பித்தார். பெர்லினில் இருந்த முனைவர் ஹேன்ஸ் கைகருடன் (Hans Geiger) சேர்ந்து “பீட்டா கதிரியக்கம்” என்ற தலைப்பில் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

    முதல் உலகப்போர் தொடரப்பட்ட நேரத்தில் கைகர், சாட்விக்கைத் தன் நாட்டிற்கு (இங்கிலாந்திற்கு) திரும்பிப்போகக் கட்டளையிட்டார். தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல எத்தனித்த தருணம் சாட்விக்கைக் கைது செய்து பத்து நாட்கள் சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு. பின்னர் அவர் பணியாற்றிய ஆராய்ச்சி நிலையத்தின் வேண்டுதலின் பேரில் சாட்விக்கை விடுதலை செய்தது.

    திரும்பவும் பிரிட்டிஷ் குடிமக்களையும், சாட்விக்கையும் சேர்த்து ருஹல்பென்னில் (Ruhleben) உள்ள சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு. ஒவ்வொரு சிறை அறையிலும் 6 கைதிகளை அடைத்து வைத்திருந்தனர். அனைவரும் தரையிலேயே உறங்கினர். அவர்களுக்கு சாப்பாடு பற்றாக்குறையாகவே இருந்தது. சாட்விக் ஒரேயொரு துணியினால் தன்னை மூடிக்கொண்டு கடுமையான ஜெர்மன் குளிரில் அவதிப்பட்டார். அவரே கீழ்க்கண்ட வார்த்தைகளை ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். “என்னுடைய வலியின் கடுமையைக் காலை 11 மணியளவில் என் காலில் படும் சூரியவெப்பத்தின் மூலம் என்னால் நன்கு உணரமுடிந்தது”.

    ஆயினும், சிறையில் சாட்விக்கும் மற்ற அறிவியல் அறிஞர்களும் சிறப்பு அனுமதியின் பேரில் யாரும் பயன்படுத்தாத சிறையின் ஒரு பகுதியைத் தங்கள் ஆராய்ச்சிக்கூடம் நிறுவுவதற்காகப் பெற்றனர். தமக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு சோதனைக்கருவிகளைச் செய்தனர் அவர்கள். சாட்விக் செம்பாலான (Copper) மின்காந்தத்தைக் கண்டுபிடித்தார். அது தவிர, நாம் பல்துலக்கும் பற்பசையிலுள்ள தோரியம் சிறிய அளிவில் கதிர்வீச்சை வெளிப்படுத்துவதையும், மற்றும் கார்பன் மோனாக்ஸைடு (CO) எனும் வாயுவுடன் குளோரின் வேதிவினை புரிதலையும் கண்டுபிடித்தார் அவர்.

    முதல் உலகப்போர் முடிந்தவுடன் சாட்விக் தன் பெற்றோர்கள் வசித்து வந்த மான்செஸ்டர் நகருக்குத் திரும்பினார். அப்போது, அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகியது.

    இந்தத் தருணத்தில் அவருடைய நிலையைப் பார்த்து இரங்கிய ரூதர்ஃபோர்டு, சாட்விக்கிற்குப் பகுதிநேர ஆசிரியர் பணிக்கு உதவி செய்தார். கேம்பிரிட்ஜின் கேவண்டிஷ் (Cavendish Laboratory) ஆய்வுக் கூடத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த ஜே. ஜே. தாம்ப்ஸன் பணிஓய்வு அடைந்தமையால் ரூதர்ஃபோர்டு அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் சாட்விக்கும் அவரைத் தொடர்ந்தார். “செயற்கை நியுக்ளியர் பங்கீடு” என்ற தலைப்பில் தன் முனைவர் பட்டத்தை (PhD) 1921இல் பெற்றார் சாட்விக்.

    அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூதர்ஃபோர்டு அணுக்கருவில் அமைந்துள்ள புரோட்டான் (Proton) என்னும் நேர்மின் துகளைக் (positive charge) கண்டுபிடித்தார். ஆனால் அவரின் அடுத்தடுத்த அணு குறித்த சோதனைகளில் அணு எண், அணு எடையை விடக் குறைவாகவே இருந்தது. அதற்குக் காரணம் எதிர்மின் எலக்ட்ரான்களாக (negative charge electrons) இருக்க முடியாது என்றும் ஏதோ ஓர் எடையுள்ள ஆனால் மின்சக்தி இல்லாத (particle with mass and no charge) பொருள் அணுக்கருவில் இருக்கவேண்டும் என்றும் ரூதர்ஃபோர்டு தன்னுடைய ஆராய்ச்சித் தத்துவத்தை எடுத்துரைத்தார். அதே வேளையில் 1925இல் இயல்பியலாளர்களால் ”ஸீமன் நிகழ்வு” (Zeeman Effect) என்றழைக்கப்படும் காந்தப் புலத்தில் ஏற்படும் அணு அடுக்குகளின் நகர்வு (Atomic level shift in magnetic field) கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவ்வாராய்ச்சியாலும் அணுவிலுள்ள மின்சக்தியற்ற அந்த நுண் துகளைப்பற்றித் தெளிவாக வரையறைக்க முடியவில்லை. அணு என்பது புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் கூட்டமைப்பாகவே (அப்போது) கருதப்பட்டது.

    சாட்விக், தான் ஜெர்மனியில் செய்த ஓர் ஆராய்ச்சியைத் திரும்பச் செய்யலானார். அவ்வாராய்ச்சியானது பொலொனியம் (Polonium) என்ற வேதிப்பொருள் பெரிலியம் (Beryllium) தகட்டின்மேல் வேகமாக வந்து மோதும்போது ஒருவிதமான கதிர்வீச்சு (radiation) அத்தகட்டிலிருந்து வெளிவருதல் குறித்ததாகும். இவ்வாராய்ச்சியில் பெரிதும் ஈடுபாடு கொண்ட சாட்விக், தன்னுடைய உழைப்பு, சக்தி, அறிவு அனைத்தையும் ஒருமுகமாகத் திரட்டி பகலிரவு பாராமல் இந்தப் புதிய ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

    ’செயலைச் செய், பலன் தன்னால் அமையும்’ என்ற பொன் மொழிக்கிணங்க சாட்விக்கின் கடின உழைப்பு ஒரு வாரத்திலேயே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது என்றால் அவரின் விடாமுயற்சியை என்ன சொல்வது!

    1932இல் சாட்விக் “இயற்கை” (Nature) என்ற உலகப்புகழ் வாய்ந்த அறிவியல் ஆராய்ச்சிப் பத்திரிகைக்குத் தன்னுடைய செயல்முறை ஆராய்ச்சி குறித்தும், அணுக்கருவிலுள்ள நுண் துகளான “நியூட்ரான்கள்” பற்றியும் பகிர்ந்துகொண்டார். தன்னுடைய இரண்டாவது ஆராய்ச்சிப் பதிப்பில் நியூட்ரானின் இயல்பு பற்றிய அரிய பல தகவல்களையும் அளித்தார்.

    இந்த இரு பதிப்புக்களுமே அறிவியலாளர்களான நீல்ஸ் போர் (Niels Bohr) மற்றும் வெர்னர் ஹைன்ஸ்பர்க் (Werner Karl Heisenberg) ஆகியோரால் பெரிதும் வரவேற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சாட்விக், மாரிஸ் கோல்ட்ஹேபர் (Maurice Goldhaber) என்ற விஞ்ஞானியுடன் சேர்ந்து நியூட்ரானின் எடையையும், அது அணுக்கருவில் இருக்கும் தனித்ததொரு துகள் என்பதையும், புரோட்டான் – எலக்ட்ரான் சார்பற்றது என்பதையும் நிரூபித்தார்.

    இங்கிலாந்தில் பொருளாதாரப் பற்றாக்குறை இருந்த சமயம் அது. ஆகவே, ஆராய்ச்சிகள் அனைத்தும் பணப்புழக்கமில்லாமையால் முடக்கப்பட்டன. சாட்விக் செய்துவந்த கேவண்டிஷ் ஆராய்ச்சிக்கூடமும் இதனால் செயற்படமுடியாத நிலையடைந்தது.

    அவ்வேளையில் சாட்விக் சைக்ளோட்ரான் (Cyclotron) எனும் கருவியை அமைக்க வேண்டும் எனவும், அதனால் அமெரிக்க வல்லரசுக்கு இணையாக இங்கிலாந்தும் அறிவியலாராய்ச்சியில் திகழலாம் எனவும் தனது பேராவலை ரூதர்ஃபோர்டிடம் எடுத்தியம்பினார். ஆனால் பழமை விரும்பியான ரூதர்ஃபோர்டு மிகுந்த எடையுள்ள மற்றும் விலையுயர்ந்த கருவிகளின் உதவியால் அறிவியல் ஆராய்ச்சிகள் செய்யத் தேவையில்லையென்று சாட்விக்கின் ஆலோசனையை நிராகரித்ததோடு, அதற்குப் பணஉதவி செய்யவும் முன்வரவில்லை.

    அதனால் வருத்தமடைந்த சாட்விக் 1932-இல் மிகப் பிரபலமான கேவண்டிஷ் ஆராய்ச்சிக்கூடத்தை விடுத்து அதற்குச் சிறிதளவும் சமமில்லாத (தரம் குறைந்த) லிவர்பூல்ப் பல்கலைக்கழகத்தில் இருந்த (University of Liverpool) சிதைந்துபோன ஓர் ஆராய்ச்சிக் கூடத்தை வழிநடத்தச் சென்றார். அதே ஆண்டில் அவர் நோபல் பரிசினை வென்றார் என்றால் நம்மால் நம்பமுடிகிறதா!

    இதிலிருந்து, ”இருக்கும் இடம் முக்கியமில்லை, உடலுழைப்பும், அறிவார்ந்த சிந்தனையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என்பது புலனாகிறது அல்லவா? அதுமட்டுமல்லாமல், அவருக்குக் கிடைத்த நோபல் பரிசுத்தொகையிலிருந்து சரிபாதியைத் தான் கனவு கண்டிருந்த சைக்ளோட்ரான் எனும் கருவியை வாங்கவும், மற்றவர்கள் கொடுத்த அன்பளிப்பைக் கொண்டு சைக்ளோட்ரானின் உதிரி பாகங்கள் வாங்கவும் செலவழித்தார். அந்த சைக்ளோட்ரான் 1939இல் பயன்பாட்டிற்கு வந்தது.

    மேலும் சாட்விக் தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் யுரேனியம் (Uranium) எனும் கனிமத்தின் எடையை விடவும் அதிக எடையுள்ள கனிமங்களை உருவாக்கும் முயற்சியில் பிற அறிவியலாளர்களோடு இணைந்து ஈடுபட்டார். மெதுவாக நகரும் நியூட்ரான்கள் (slow neutrons) யுரேனியத்தில் மோதுவதனாலும், பீட்டாக் கதிர்களின் சிதைவினாலும் (Beta Decay) அதிக எடையுள்ள கனிமங்கள் உருவாவது சாத்தியமாகின்றது. இதுவே நியூக்ளியர் வெடிப்பான் (Nuclear Bomb) உருவாகக் காரணமாயிருந்தது. இந்நியூட்ரான்கள் அணுக்கருவின் நியூக்ளியஸினைத் துளைக்கவும் பயன்படுத்தப்பட்டன.

    இவ்வாறு கனிமங்கள் குறித்த ஆராய்ச்சியில் சாட்விக் மும்முரமாக இருந்தபோது இரண்டாம் உலகப்போர் துவங்கியது. அதனால் அவரால் தன் ஆராய்ச்சிகளைத் தொடரமுடியாத சூழல் ஏற்படவே, தன் குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். இங்கிலாந்திற்குத் திரும்பியவுடன் தன் அறிவியல் சிந்தனைகளின் துணைகொண்டு யுரேனியம்-235 (U-235) என்ற கனிமத்தின் குறுக்களவை (cross section) அளந்தார். உலகப்போர் முடிந்தவுடன் 1946இல் இங்கிலாந்தில் மீண்டும் தன்னுடைய பழைய வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

    பணிஓய்வடையும்வரை (1948முதல் 1958வரை) Gonville and Caius கல்லூரியில் சாட்விக் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1974இல் நித்திரையிலேயே அவ்வறிவியல் மேதை இயற்கை எய்தினார்.

    சாதாரண மனிதனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிச் சாதனையாளராக அதை நிறைவு செய்த சாட்விக்கின் வாழ்க்கையை நாம் என்றென்றும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.

    ஆதாரங்கள்:

    1. American Physical Society News, Vol 23, No. 2, February 2014.
    2.  Chadwick, J. (1932) “Possible Existence of Neutron”, Nature 129 (3252) 312.
    3. Chadwick, J. (1932) “The Existence of a Neutron” Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 136 (830) 692.
    4. AIP Oral History Transcript: http://www.aip.org/history/ohilist/3974-1.html.
    Share
  • தப்பி ஓடிய கைதி!

    -தாரமங்கலம் வளவன்

    கான்ஸ்டபிள் செங்கோடனால் முடிவு எடுக்க முடியவில்லை.

    ஏற்கனவே சுகுணாவின் அப்பா அம்மாவைப் பார்த்து,  வெள்ளிக்கிழமை அதாவது நாளை தன் அப்பா அம்மாவைக் கூட்டிக் கொண்டு பெண் பார்க்க வருவதாகச் சொல்லி அவர்களிடம் சம்மதம் வாங்கி இருந்தான்.

    சுகுணாவும் லீவு போடுவதாகச் சொல்லி இருந்தாள்.

    அதற்குள் இப்படி ஆகி விட்டது.

    அவளிடம் தான் சஸ்பென்ஸன் ஆகி உள்ளதைச் சொல்லி, நாளைக்கு பெண் பார்க்க வருவதாக இருந்ததை நிறுத்தி விடலாமா என்று யோசித்தான்.

    தான் சஸ்பென்ஸன் ஆகி உள்ள விஷயத்தை மட்டும் அவளிடம் சொல்லி, உனக்குச் சம்மதம் என்றால், அப்பா அம்மாவைக் கூட்டிக் கொண்டு வருகிறேன், இல்லையென்றால், பெண் பார்க்க வருவதை நிறுத்தி விடலாம் என்று கேட்டுப் பார்க்கலாமா…

    அப்படிக் கேட்டுப் பார்த்தால் அவளுடைய மன நிலை தெரியுமா…?

    தானும் ஒரு கான்ஸ்டபிள் என்பதினால் இந்த சஸ்பென்ஸன் விஷயத்தை புரிந்து கொண்டு பெண் பார்க்க வாருங்கள் என்று அவள் சொல்வாளா…?

    அப்படியே அவள் ஒப்புக் கொண்டாலும், அவள் வீட்டில் உள்ள மற்றவர்கள் ஒப்புக் கொள்வார்களா…? அவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

    தன் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்வாளா…அல்லது இந்த சஸ்பென்ஸன் விஷயத்தைத் தன் அப்பா அம்மாவிடம் சொல்லி விடுவாளா…

    இது தற்காலிகப் பணி நீக்கம் என்பதையோ, தன்னிடமிருந்து தப்பித்த கைதி திரும்பவும் கிடைத்தால்  சஸ்பென்ஷனை வாபஸ் வாங்கி விடுவார்கள் என்பதையோ அவர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்?

    தான் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனில் சுகுணாவைப் பற்றியோ அவள் எந்த போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்கிறாள் என்றோ தன்னுடன் வேலை செய்யும் மற்ற போலீஸ்காரர்களுக்கு அவன் எதுவும் சொல்லவில்லை.­­

    தனக்கு ஒரு பெண் கான்ஸ்டபிள் மனைவியாக வருவதைப் பற்றி

    மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள் என்று நினைத்தான்.

    அவளை பெண் பார்க்க போகப் போவது பற்றி கூட உடன் வேலை செய்யும் மற்ற போலீஸ்காரர்களிடம் அவன் சொல்லவில்லை.  வேறு ஏதாவது காரணம் சொல்லி லீவு கேட்பதாக இருந்தான்.

    இப்போது லீவு கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல், சஸ்பென்ஷன் ஆர்டரைக் கையில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.

    இரவு பூராவும் யோசித்தான்.

    கடைசியில் தன் அப்பா அம்மா உட்பட யாரிடமும் சொல்லப் போவதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்தபடி சுகுணாவைப் பெண் பார்க்க போவது என்றும் முடிவு எடுத்தான்.

    பெண் பார்த்து முடியும் வரைக்கும் இந்த சஸ்பென்ஷன் ஆன விஷயம் தெரியாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்று மனதில் பட்டது அவனுக்கு. அப்புறம் கல்யாணத் தேதி முடிவு செய்ய நாள் ஆகும். அதற்குள் தப்பிப் போன கைதி பிடிபட்டால், சஸ்பென்ஷன் ஆர்டரை டிபார்ட்மெண்ட்டில் வாபஸ் பெற்று விடுவார்கள்.

    “இது டவுன் பஸ் இல்ல… இந்த ஸ்டாப்ல நிக்காது..  நீங்க போலீஸ்னு சொன்னதனால  நிறுத்தறோம்.. சீக்கிரம் எறங்குங்க…” என்று சொல்லி அவசரப்படுத்தினார் கண்டக்டர்.

    அப்பாவையும், அம்மாவையும் வேகமாக இறங்கச் சொல்லி தானும் இறங்கினான் செங்கோடன்.

    தன் மகன்  போலீஸ்காரன் என்று அப்பா கண்டக்டரிடம் சொல்லி இருக்க வேண்டும்.

    செங்கோடனுக்கு சுருக்கென்றிருந்தது; தான் இன்னமும் போலீஸ்காரன் தானா…?

    அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருப்பது குறித்து, குற்ற உணர்வால் மனம் அடித்துக் கொண்டது.

    மூவரும் நடக்க அரம்பித்தார்கள்…

    அப்பாவின் முகத்தைப் பார்த்தான்.

    பெண் பார்க்க போகும் போது இருக்க வேண்டிய சந்தோசம், அப்பாவுக்கு இல்லை. அப்பாவின் முகம் கடுகடு என்று இருந்தது.

    நியாயமாகப் பார்த்தால் லட்சுமியைக் கல்யாணம் செய்துகொள்ள அவன் மறுத்ததற்கு அம்மாதான் கோபப்பட வேண்டும். ஏனெனில் லட்சுமி தாய் மாமனின் மகள்.

    ஆனால், அம்மாவை விட அப்பாவிற்குத்தான் கோபம் அதிகம்.

    ஒரு வேளை போலீஸ் யூனிபார்மில் சுகுணாவைப் பார்த்திருந்தால், அப்பாவுக்கு பிடித்துப் போயிருக்குமோ…

    அல்லது, இந்த போலீஸ்காரி மருமகளாக வந்து என்ன செய்யப் போகிறாளோ என்று அவர் பயந்து போயிருப்பாரோ..?

    சுகுணாவைப் பற்றிய நினைப்பில் கொஞ்சம் கவனக்குறைவாகத் தான் இருந்து விட்டதாகத் தோன்றியது அவனுக்கு.

    சுகுணா அவனைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்த பிறகு அவன் மனம் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தது.

    அந்தக் கைதி தப்பிக்க அது தான் காரணமா…?

    ஒருக்கால் சுகுணாவிற்கு விஷயம் தெரியும்போது, உன்னுடைய நினைப்பினால்தான் நான் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டேன், அதனால்தான் இந்தத் தவறு நடந்து விட்டது என்றால் அவள் ஒப்புக் கொள்வாளா…?

    அதற்குள், “வாங்க.. வாங்க.. நான் பொண்ணோட சித்தப்பா… உங்கள கூட்டிக்கிட்டு போகத்தான் காத்திட்டுக்கிட்டு இருக்கேன்..” என்று ஒருவர் பஸ் ஸ்டாப் டீக்கடையிலிருந்து வெளிப்பட்டார்.

    “உட்காருங்க… டீ குடிச்சிட்டுப் போகலாம்.” என்று அவர் சொல்ல, பஸ்சில் வந்த களைப்பில் அப்பாவும் அம்மாவும் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். இருவருக்கும் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

    செங்கோடனுக்கு லட்சுமியைப் பற்றிய ஞாபகம் வந்தது.

    சின்ன வயதிலிருந்து தன் அண்ணன் மகள் லட்சுமிதான் தனக்கு மருமகள் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள் அம்மா. அவனும் லட்சுமிதான் தனக்கு வரப் போகிறவள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். லட்சுமியிடம் பேசும்போதுகூட அந்த மாதிரியான எண்ணங்களை அவளிடம் உருவாக்கியது உண்டு.

    மாமனுக்குச் சொத்து என்று ஒன்றும் கிடையாது. இருந்த முக்கால் ஏக்கர் நிலத்தையும் அவர் விற்று, அத்தையின் வைத்தியச் செலவுக்காகக் காலி பண்ணிவிட்டார். வைத்தியம் பலிக்காமல் அத்தை போய்ச் சேர்ந்து விட, இப்போது மாமனும், லட்சுமியும், நடவு வேலை, அறுப்பு வேலை என்று கூலி வேலைக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். செங்கோடனுக்கு போலீஸ் வேலை கிடைத்தவுடன், அவனுக்கு லட்சுமி வேண்டாம் என்று மனதில் தோண ஆரம்பித்து விட்டது.

    அவன் வேலை செய்யும் போலீஸ் ஸ்டேஷனில் பெண் கான்ஸ்டபிள் யாரும் கிடையாது. கோர்ட்டுக்கு போகும் போது பெண் கைதிகளைக் கூட்டிக் கொண்டு வரும் பெண் கான்ஸ்டபிள்களைப் பார்த்திருக்கிறான். யூனிபார்மில் இருக்கும்  பெண் கான்ஸ்டபிள்கள் அவன் மனதைக் கவர்ந்தார்கள். அப்போதுதான் அவன் முடிவு செய்தான், கான்ஸ்டபிளாக வேலை செய்யும் ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று.

    அப்படி இருக்கும் போது தான், சுகுணாவைப் பார்த்தான். ஒரு பெண் கைதியைக் கோர்ட்டுக்குக் கூட்டி வந்திருந்தாள். முதலில் அவளிடம் பேசி அவளைச் சம்மதிக்க வைத்தான். பிறகு தன் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல், சுகுணாவின் அப்பா அம்மாவை ஒரு நாள் போய்ப் பார்த்து அவர்களையும் சம்மதிக்க வைத்தான்.

    பிறகு தன் அப்பா அம்மாவிடம் சொல்லிச்  சம்மதிக்க வைத்து, பெண் பார்க்கக் கூட்டி வந்தாயிற்று.

    அதற்குள் இப்படி ஒரு சஸ்பென்ஷன்…

    கடைவீதியில் நடந்த தகராறில், இந்தக் கைதி ஒருத்தனின் கையை வெட்டியவன்.

    அவனைச் செங்கோடன் கோர்ட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகும் போதுதான் அவன் தப்பி விட்டான்.

    சுகுணாவின் சித்தப்பா, அப்பா அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க, எதிர்ப் பக்கம் ஒரு நபர் மூச்சு இறைக்க ஓடி வந்தார். அந்த ஆள் சைகை காட்டி அந்தச் சித்தப்பாவைக் கூப்பிட, “ இருங்க ஒரு நிமிஷம்…” என்று சொல்லி விட்டு அந்தச் சித்தப்பா ஓடி வந்த நபரிடம் சென்றார்.

    இருவரும் ஏதோ பேசிக் கொண்டார்கள்.

    திரும்பி வந்த பெண்ணின் சித்தப்பாவின் முகம் கடுகடு என்றிருந்தது.

    நேரிடையாக அப்பாவிடம் சென்றவர், “என்னங்க இப்படி மோசம் பண்ணீட்டீங்க.. மாப்பிள்ளைக்கு வேலை போயிடிச்சாமே… சஸ்பெண்ட் ஆயிட்டாராமே.. இதை ஏன் எங்ககிட்ட சொல்லலை…” என்றார்.

    அப்பாவும் அம்மாவும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, செங்கோடன் பக்கம் திரும்பினார்கள்.

    செங்கோடன் பதில் சொல்வதற்குள், சுகுணாவின் சித்தப்பா கோபமாய், “ வேலை திரும்பக் கெடைக்கட்டும்… அப்புறம் பாத்துக்கலாம்னு அண்ணன் சொல்லி அனுப்பிச்சிருக்காரு…” 

    வீடு வந்து சேரும் வரை அப்பா எதுவும் பேசவில்லை..

    அப்பா பேசாமல் இருப்பதைப் பார்த்து செங்கோடன் விளக்க வேண்டியதாகிப் போய் விட்டது.

    “ஒரு கைதியை கோர்ட்டுக்குக் கூட்டிக்கிட்டு போனேன்.. வழியில அவன் தப்பிச்சிட்டான்… அதனால வேலையிலிருந்து சஸ்பெண்ட் பண்ணி வைச்சி இருக்காங்க.. ரூல்ஸ்படி அப்படித்தான் பண்ணியாகணும்… கைதியைத் தேடிக்கிட்டு இருக்காங்க டிபார்ட்மெண்ட்ல.. கைதி திரும்பக் கெடைச்சா வேலைக்குத்  திரும்ப கூப்பிட்டுக்குவாங்க…”

    ரொம்ப அவமானப்பட்டு போனதாக நினைத்துப் பேய் அறைந்தது போல் உட்கார்ந்து இருந்தார் அப்பா. அம்மாவும் எதுவும் பேசவில்லை.

    சூரியன் மறையும் நேரம்…

    வீட்டு ஜன்னலின் மறுபுறம் இருந்து ஒரு குரல்..

    “மாப்பிள்ள… ஒரு நிமிஷம்…”

    எட்டிப் பார்த்தால் மாமன் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார்..

    ”நான் வேல முடிஞ்சி வீட்டுக்குப் போனேன்.. லட்சுமி தலைவலின்னு சொல்லிப்  பவானி ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறதா பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க.. நா வந்தா உங்களயும் கூட்டிக்கிட்டு நம்ம இரண்டு பேரையும் ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னாளாம்.. எனக்கு பயமா இருக்கு.. ஒரு வேள நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கலேன்னு ஏதாவது விஷம் சாப்பிட்டாளோன்னு பயமா இருக்கு.. பணம்லாம் எதுவும் வேணாம்.. எங்கிட்ட இருக்குது பணம்…. நீங்க போலீஸ்ங்கறதனால வந்து உதவி செஞ்சா போதும்…. ”.

    அழுது விடுவார் போலிருந்தது.

    “அவளே நடந்து ஆஸ்பத்திரிக்கு போனான்னு சொல்றீங்க.. விஷம் சாப்பிட்டிருந்தா எப்படி போயிருக்க முடியும்.. அதுவும் தலைவலின்னு சொல்லிட்டுப் போனாதாச் சொல்றீங்க.. ”

    “அதுதான் எனக்கும் புரியல மாப்பிள்ள..” என்றார் மாமா.

    நேரடியாக ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள் இருவரும். ஆண்கள் வார்டு பக்கம் போகும் போது அங்கே சத்தமாக இருந்தது. ஒரே கூட்டமாய் இருந்தது..

    ”என்ன கலாட்டா?” என்று செங்கோடன் கேட்டான்.

    “ஒரு பொண்ணு கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கா. அந்தப் பொண்ண அவ புருஷன் ஏமாத்திட்டானாம். வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். சும்மா நெஞ்சுவலின்னு வந்து படுத்துக் கிட்டானாம்.. அவ வந்து சத்தம் போடறா..”

    கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு போய்ப் பார்த்தான்.

    அந்தப் பெண் லட்சுமி. அந்த ஆண், செங்கோடனிடம் இருந்து தப்பித்து ஓடிய கைதி.

    வியப்பின் உச்ச கட்டத்துக்குப் போன செங்கோடன், முதலில் ஓடிப் போய் அந்த கைதியின் காலரைப் பிடித்துக் கொண்டான். பிறகு பக்கத்தில் இருந்த ஒருவரின் தோளில் இருந்த துண்டை எடுத்து அந்தக் கைதியின் கைகள் இரண்டையும் பின்பக்கமாகச் சேர்த்துக் கட்டினான்.

    லட்சுமியைப் பார்த்து, “இது என்ன விளையாட்டு…” என்று கேட்டான்.

    அதற்கு அவள்,

    “அந்தக் கைதிக்கு எதிரிங்க இருப்பாங்க போலிருக்கு… இரண்டு பேரு வந்தாங்க அவனைக் காட்டிக் கொடுக்கிறதுக்காக.. உங்க வீட்டுக்கு போறதுக்கு பயந்துகிட்டு, என் அப்பாவைத்  தேடி எங்க வீட்டுக்கு வந்தாங்க.. அந்த சமயத்தில அப்பா வீட்ல இல்ல.. நான் என்னா விஷயம்னு கேட்டேன்.. இந்த மாதிரி உங்க மாமாகிட்ட இருந்து தப்பிச்சி ஓடின கைதி ஆஸ்பத்திரியில சும்மா படுத்துகிட்டு இருக்கான்னு சொன்னாங்க…  வந்தவங்கள கூட்டிக்கிட்டு இந்த ஆஸ்பத்திரிக்கு நான் ஓடியாந்தேன்… நீ வர்ற வரைக்கும்  அவன் தப்பிச்சி போகாம பாத்துகிறதுக்காக, சும்மா அவன் கிட்ட வம்பு இழுத்தேன். நீ வருவேன்னு தெரியும்.” என்றாள்.

    கொஞ்சம் இடைவெளி விட்டு,

    “இப்ப இவன் கெடைச்சிட்டான் இல்லியா.. உனக்குப் போன வேலை திரும்ப கெடைச்சிடுமா….”  ஆவலாய்க் கேட்டாள் லட்சுமி செங்கோடனிடம்.

    “ஆமா,  வேலை திரும்பக் கெடைச்சிடும்… சஸ்பென்ஷனை வாபஸ் பண்ணிப்பாங்க.. எனக்கு சஸ்பென்ஷன் ஆயிடிச்சுன்னு தெரிஞ்ச உடனே சுகுணா வீட்டுக்காரங்க இந்தக் கல்யாணம் வேணான்னு சொல்லி நிறுத்திட்டாங்க. உன்ன விட்டுட்டு அவளக் கல்யாணம் செய்ய நெனச்சது தப்பு தான்.. அதுக்குத்தான் கடவுள் இந்தத் தண்டனையை கொடுத்தார்னு நெனக்கிறேன்.. என்ன மன்னிச்சுடு…  இப்ப என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா..” என்றான் செங்கோடன் லட்சுமியிடம்.

    அதைக் கேட்ட மாமா,

    “என்ன மாப்பிள்ள.. மன்னிச்சுடுன்னு, பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு.. கடைசியில கடவுள் நமக்கு நல்ல வழி காண்பிச்சுட்டாரு பாருங்க.. ” என்றார்.

    அதைக் கேட்ட லட்சுமிக்கு சந்தோசத்துடன் கூடிய வெட்கம் ஏற்பட்டது.

    Share
  • கோவிந்தா – ஹரே – கோபாலா

    சு. ரவி

    வணக்கம் வாழிய நலம்

    https://ia801604.us.archive.org/6/items/ThitumalaiVaasaa/03Track3IkamEnra.mp3

    எனதருமை நண்பர் திரு.K.S. ராஜகோபால் அவர்களின் குரலில் கோவிந்தன் ஏழுமலையான் மீது இயற்றப்பட்ட பாடலைக் கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கிக் கேட்கலாம். இணைப்பில் ஏழுமலையான் ஓவியம்.

    992CCFE5-0DF4-4C60-B9CF-51292C7A4275

    கோவிந்தா – ஹரே – கோபாலா

    இகமென்ற கரையங்கு மறைகின்றது
    பரமென்ற தொடுவானம் விரிகின்றது. (கோவிந்தா)

    அறியாமை முகிலாக இருள்சூழுது
    பொருளாசை ஒருமாயச் சுழலானது
    திசைகாண முடியாத படகாயினேன்
    கதிராக வரவேணும் மதுசூதனா! (கோவிந்தா)

    மனமெங்கும் மயலென்ற புயல்வீசுது
    மறைவாக விதியென்ற மலைநின்றது
    அனலாற்றில் மெழுகில் ஒரு படகாயினேன்
    மழையாக வரவேணும் மதுசூதனா! (கோவிந்தா)

    பவமென்ற நுரைபொங்கும் நதியோடுது
    அஹங்காரம் மமகாரம் சுமையானது
    பழுதான படகாக அலைமோதினேன்
    பரிவாக வரவேணும் மதுசூதனா! (கோவிந்தா)

    இகமென்ற கரையங்கு மறைகின்றது
    பரமென்ற தொடுவானம் விரிகின்றது. (கோவிந்தா)

    சு.ரவி

    படிக்க, கேட்க, பார்க்க, ரசிக்க…

    Share
  • மீண்டும் சாக்லேட் கிருஷ்ணா

    சு. ரவி

    திரு கேசவ் கிரேசி மோகனுக்கு சாக்லேட் கிருஷ்ணா ஓவியத்தை வரைந்தளித்த மேடையில் அவ்வோவியத்திற்காக ஆதிசங்கரரின் கோவிந்தாஷ்டகம் சந்தத்தில் என்னால் இயற்றப்பட்ட பாடல் இது. ( வடமொழி ஸ்லோகத்தில் உள்ளதுபோலவே, ஒற்றெழுத்து நீங்கலாக அடிஒன்றுக்கு 18 எழுத்துகள் கொண்டமைந்த விருத்தம்),

    பால் போன்ற ஆகாசமும், இடையிலே சாக்லேட் பேப்பரை முடியிலும் இடையிலும் தரித்த சாக்லெட் கோவிந்தனும், அவன் பாதம் வருடும் பசுவும் கொடுத்த உந்துதலே இப்பாடல்..

    531F0C5D-D48D-4657-A027-81176E23ADD8

    பால்பொங்கும்வெளி போல்பொங்கும் மன
    ஆகாசம்- பர மாகாசம்,
    பால்பொங்கும் திரை மேல் துஞ்சும் இறை
    தான் வாழும் இடம் கோலோகம்
    பால்பொங்கும் பசு கால்நாடும் சுகம்
    ஆச்சர்யம் -அதன் வாத்ஸல்யம் !
    கோல்கொண் டாவினம் மேய்க்கும் தெய்வதம்
    கோவிந்தம் பர மானந்தம்!

    08FC3C1F-5150-4D5C-BD8A-37291B884161

    சு.ரவி

    Share
  • காற்று வாங்கப் போனேன் (29)

    கே.ரவி

    “என்னப்பு! ஆசுகவி எல்லாம் எழுதித் தள்ளிப்புட்டீர்.” சிகாமணி திடீரென்று என்முன் கேலி கலந்த கேள்வியோடு தோன்றுகிறான். “அது கெடக்கட்டும். ஏதோ புதுக்கவிதை என்று காதில் விழுந்தது. அதெல்லாம் வேறு எழுதுவதுண்டோ?”

    “ஓ! மாணவரிஸம் பத்திரிகையில் …” என்று நான் முடிக்குமுன், சிகாமணி இடைமறித்து, “அதென்ன ஓய் பேரு? மாணவரிஸம்?” என்று கேட்கிறான்.

    அது ஒரு கதை அப்பா. சிந்தனைக் கோட்டத்தில் சேர்ந்த பெண்கள் கூட்டம் சில மாதங்களுக்குப் பிறகு காணாமல் போய்விட்டார்கள் என்று சொன்னேன் இல்லையா? ஷோபனாவும் அப்படித்தான். கிட்டத்தட்ட ஒரு வருடம் பார்க்கவில்லை. திடீரென்று ஷோபனாவும், மங்களசுந்தரியும் நான் வசித்த பலாத்தோப்பு வீட்டுக்கு என்னைத் தேடி வந்தார்கள். அப்போது, அவர்கள் ‘நாம் மாணவர்களுக்காக ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?’ என்று கேட்கப் போய் நான் உடனே அந்த யோசனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். பத்திரிகைக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த எந்தத் தலைப்பையும் பத்திரிகைப் பதிவாளர் அங்கீகரிக்கவில்லை. ஏற்கனவே பதிவாகி விட்ட பெயர்கள் என்று தள்ளி விட்டார். மாணவர் குரல், மாணவர் முரசு எல்லாம் தள்ளுபடியாகி விட்டன. எனக்குப் பொறுமை போயிற்று. யாரும் வைத்திருக்க முடியாத ஒரு பெயர் வேண்டும் என யோசித்துத் தேர்ந்தெடுத்த பெயர்தான் ‘மாணவரிஸம்’.

    அந்தப் பத்திரிகை சுமார் நாலாண்டுக் காலம் நடந்தது. அவ்வளவு காலம் நான் படித்துக் கொண்டிருந்தேன். ஒரே வகுப்பில் இல்லை சாமி! பி.ஏ. முடித்துவிட்டு, பி.எல்.! அது முடித்த பிறகு, எம்.ஏ. அதற்கும் பிறகு எம்.ஃபில். மாணவனாகவே என் வாழ்நாள் முழுதும் போய்விடுமோ என்ற அச்சமே வந்து விட்டது. திருமணத்துக்குப் பிறகும் நானும், ஷோபனாவும் சில ஆண்டுகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தோம், கவிஞர் சொன்னதுபோல் பாடித் திரிந்த பறவைகளாக!

    சரி, சரி மாணவரிஸத்துக்கு வருகிறேன். அதில் எத்தனை மாணவர்கள் கதை, கவிதை, கட்டுரை எழுதினார்கள்! எத்தனை மாணவர்கள் ஓவியம் வரைந்தார்கள், நிருபர்களாகச் செய்தி திரட்டித் தந்தார்கள்! வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான், பின்னாளில் ஐ.பி.எஸ். அலுவலராக வரவிருந்த ரவி ஆறுமுகம், சுகி சிவம், சு.ரவி, க்ரேஸி மோகன்! ஏன், பின்னாளில் பெரிய திரைப்பட இயக்குநராக வரவிருந்த மனோபாலா மாணவரிஸத்தின் நிரந்தர ஓவியராகப் பணியாற்றினார். சென்னை, திருச்சி, கடலூர், பாண்டிச்சேரி, மதுரை, திருநெல்வேலி, பம்பாய், டில்லி என்று எல்லா இடங்களிலும் மாணவ நிருபர்கள் இருந்தும் நிறைய பிரதிகள் அவர்கள் மூலம் மாதம்தோறும் பட்டுவாடா ஆகியும் வசூல் மட்டும் சரிவர இல்லாததால், என் கைப்பணத்தைச் செலவழித்துத்தான் பத்திரிகையை ஒவ்வொரு மாதமும் அச்சகத்திலிருந்து கொண்டு வருவேன்.

    சிகாமணிக்குப் பொறுக்க முடியவில்லை. ‘ஏம்பா, புதுக்கவிதை எழுதியுள்ளாயா என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறாய். உன் பதிலைப் புரிந்து கொள்வதை விடப் புதுக்கவிதையைப் புரிந்து கொள்வதே சுலபம் போல இருக்கிறதே!’ என்று ஒரு போடு போட்டான்.

    நான் எழுதும் கவிதை புதுசா, பழசா என்று நானே சொல்வதை விட அதைப் படிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். இலக்கணக் குடத்துக்குள் கவிதையை அடக்கவும் நான் முயலவில்லை, இலக்கணத்தை மீறி எழுதியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததும் இல்லை. நான் எழுதத் தொடங்கும் போது, இப்பொழுது ஒரு வெண்பா எழுத வேண்டும் அல்லது விருத்தம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு ஆரம்பிப்பதில்லை. ஏதோ தோன்றுவதை மனத்துக்குள் சொல்லி அல்லது பாடிப் பார்த்து, ஓ! இது வெண்பாவோ? ஓ! இது கட்டளைக் கலித்துறையோ? என்று அடையாளம் காண்பதே என் வழக்கம். பல சமயங்களில், இலக்கண வடிவுகளில் கட்டுப் படாமல் கவிதை திமிறிக் கொண்டும் வரும். ஆனால், அதற்கும் புது இலக்கணம் வடிவமைத்துச் சொல்ல இருக்கவே இருக்கிறான் நம்ம புத்தி சிகாமணி! எடுத்துக்காட்டாக ஒன்று சொல்கிறேன். 1978-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கவிதை:

    எதற்காக வோமனம் படபடக் கின்றது

    யாழெடுத் தேனதில் ஸ்ருதிகலை கின்றது

    கருமே கங்கள் உருமா றிப்போய்

    நெஞ்சுக் குள்ளே நுழைந்து கொண்டன

    ஒருதுளிக்கும் மறுதுளிக்கும்

    இடைவெளி இன்றி மழைபொழி கின்றன

    எதற்காக வோமனம் படபடக் கின்றது

    .. .. ..

    இந்தக் கவிதையில், “ஒருது ளிக்கும் மறுது ளிக்கும்” என்று யாப்பிலக்கணப்படி எழுதிப் படித்துப் பாருங்கள். சப்பென்று இருக்கும். அப்படி இல்லாமல், மேலே உள்ளது போல், இடைவெளி இல்லாமல் ‘ஒருதுளிக்கும் மறுதுளிக்கும்’ என்று சேர்த்துப் படித்துப் பாருங்கள். அப்போது, இடைவெளியின்றி மழைபொழியும் சந்தம் புரிபடும். இலக்கணம், கவிதைக்குப் பணிசெய்ய வேண்டுமே அல்லாமல், இலக்கணத்தால் கவிதை முடங்கிவிடக் கூடாது. எப்படி என் பிரசங்கம்!

    இப்பொழுது நிஜமாகவே புதுக்கவிதை சமாச்சாரத்துக்கு வருவோம். புதுக்கவிதை இயக்கத்துக்கும் மரபுக் கவிதைப் புலவர்களுக்கும் நடந்துவந்த போர்பற்றி முன்பொருமுறை நான் எழுதியிருந்ததை நினைத்துக் கொள்கிறேன்:

    “பொய்க்கால் குதிரைகளும் வைக்கோல் கன்றுகளும் போர்க்குரல் எழுப்புகின்றன.”

    மாணவரிஸத்தில் ‘பகலவன்‘ என்ற பெயரில் கவிதைகளும், ‘கதிரவன்‘ என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதிய காலத்தில், மரபு மீறாத ஒரு புதுக்கவிதை மாணவரிஸத்தில் எழுதினேன். அது என்னய்யா, மரபு மீறாத புதுக்கவிதை? கவிதையின் தலைப்பு “இவள் ஒரு புதுக்கவிதை”:

    இவளொரு புதுக்கவிதை

    சுரதாவின் கவிதையைப்போல் சுகமான நளினங்கள்

    சுழலும் பார்வை

    எலியெட்டின் கவிதையைப்போல் என்றைக்கும் புதிராக

    இருக்கும் உள்ளம்

    தத்துவங்கள் கனக்கின்ற தாகூரின் கவிதையைப்போல்

    தழைந்த கூந்தல்

    இத்தனையும் இவளிடமே இயைந்திருக்கும் காரணத்தால்

    மட்டும் இல்லை

    செவிவரைக் கும்தான் செல்ல வேண்டுமெனக்

    கவிஞர் வகுத்த கண்ணிலக் கணத்தை

    மீறிய தாலும்

    தன்சிலிர்ப் புக்குத் தக்க காரணத்தைத்

    தானே அறியாமல் தயங்குவ தாலும்

    உரைநடை ஒன்றை ஒடித்து வளைத்துப்

    பாட்டெனச் சொல்லும் பாசாங் கைப்போல்

    தென்றலைக் குழைத்துத் தேக்கில் இழைத்து

    மின்னலின் வடிவில் மெல்ல வளைத்து

    (அதை)

    இடையெனச் சொல்லும் இரகசியத் தாலும்

    இவளொரு புதுக்கவிதை

    சிகாமணி ஒரு கேள்வி கேட்கிறான். “சரி ஓய், இன்ன வடிவில் எழுதுவது என்று முடிவு செய்து கொள்ளாமல் எழுதுகிறாய் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறாய். எதைப் பற்றி எழுதுவது என்றாவது முடிவு செய்து கொண்டு எழுதுவாயா, இல்லை…? என்று சிகாமணி இழுக்கிறான்.

    எல்லாம் தெரிந்தே, தெரியாதது போல் கேட்கிறான் சிகாமணி. என்னை வம்புக்கு இழுப்பதில் அவனுக்கு அவ்வளவு ஆனந்தம்!

    எதைப் பற்றி எழுதுகிறேன் என்ற முன்முடிவோடு நான் கவிதை எழுதுவது கிடையாது. அதுவாக உள்ளிருந்து பொங்கி வரும். வந்து, வார்த்தைகளாகிச் சிந்திச் சிதறி, வெடித்துச் சில சமயங்களில் கோவென்று கதறிய பிறகே அதன் பொருள் என்ன என்று புரிந்து கொள்ள முயல்வேன். சில சமயம் புரிந்து கொள்ளும் முயற்சியில் தோற்றும் போயிருக்கிறேன்.

    நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். இந்தத் தொடரின் சென்ற பகுதியை வல்லமை ஆசிரியருக்கு அனுப்பிய பிறகு அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ” சார், நீங்கள் அனுப்பிய கட்டுரையின் நிறைவில் ஒரு கவிதை எழுதியிருந்தீர்கள். அதில், “கூத்தன் அவனன்றிக் கூட்டில் எதுபறவை” என்று ஒரு வரி இருக்கிறது. ஒருவேளை, ‘ஏதுபறவை’ என்பது தட்டச்சுப் பிழையால் ‘எதுபறவை’ என்று ஆகி விட்டதோ?” என்று கேட்டார். அவர் கேட்டது பற்றிச் சிந்தித்தால் அவர் சொன்னது சரியென்றே பட்டது. ஆனாலும், அது எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி உரையாடலை முடித்து விட்டேன். உடனே பொறிதட்டியது. ஆம், ‘கூத்தன் அவனின்றி’ என்றிருந்தால் ‘ஏதுபறவை’ என்பதே சரியாக இருந்திருக்கும். அவன் இல்லாமல் உயிர்ப்பறவை எப்படியிருக்க முடியும் என்று அர்த்தமாகும். ஆனால் அவன் அன்றி எதுபறவை என்றால், அவனே பறவை என்று பொருளாகிறது. கூத்து நடத்துபவனும் அவனே. கூடு கட்டுபவனும் அவனே. கூட்டுக்குள் உயிர்ப்பறவையாய்ச் சிறைப்பட்டிருப்பவனும் அவனே. இந்தப் பொறி தட்டியதும் உடனே நான் வல்லமை ஆசிரியரைத் தொலைபேசியில் அழைத்து இதைச் சொன்னேன். அவரும் ஒப்புக் கொண்டார். நான் பல வருடங்களுக்கு முன் எழுதிய நாடோடிக் குறள் என்ற குறட்பாக்களில் வரும் ஒரு குறளுக்கு அர்த்தம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் தெளிவாகிறது:

    கூடோ தான் கட்டுறது கூண்டோ போய்ச் சிக்குறது

    கூடே கூண் டானதென்ன கூத்து

    கூத்தன் சிரிக்கிறான். வானத்தில் இடியிடிக்கிறது. மழைபொழியப் போகிறதோ?

    images (1)என்னடா கதையளக்கிறாய். வானத்தின் இடியோசைக்குத் தாளம்போட உன்னால் முடியுமா? இல்லை கடலின் ஓங்காரத்துக்கு ஸ்ருதி சேர்க்கவாவது முடியுமா? என் தலைப்பாகை மைந்தனைப் போல் மழைபொழிந்திடும் வண்ணத்தைத்தான் காண முடியுமா? கவிதைக்கு என்ன வடிவம், என்ன அர்த்தம் என்றா ஆராய்ச்சி செய்கிறாய்! அங்கே பார், ஓர் ஓரத்தில் ஒயிலாகச் சாய்ந்து கொண்டு உன்னைப் பார்த்து அந்த நந்தியாவட்டைப் பூ நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறது. அதன் மேல் ஒரு பனித்துளி எவ்வளவு கனமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது பார்த்தாயா? இன்னும் ஒரு நொடியில், ஒரே நொடியில் அது உடையப் போகிறது. தன் கனம் தாங்காமல் தானே உடையப் போகிறது. அதைத் தன் கதிர்க் கையால் அபகரித்து விழுங்கிவிடப் போகிறான் சூரியன். அது காணாமல் போய்விடுமோ? அதற்குள் விரிந்த வானமும் காணாமல் போய் விடுமோ? உடையும் துளியில் இருந்து ஒரு புதிய வானம் தெறித்து விழுந்து விரிந்து இன்னுமோர் புதிய உலகம் பிறக்கும் கணநேர அதிசயத்தை உன்னால் தரிசிக்க முடிந்தால், அதற்குப் பிறகு வா, கவிதை, வடிவம், அர்த்தம் என்று வம்பளப்போம். நான் காலபைரவன்! காத்திருப்பேன்.

    கூத்தன் சிரிக்கிறான். வானத்தில் இடியிடிக்கிறது. மழைபொழியப் போகிறதோ?

    கேட்டு மகிழ  சொடுக்கிப் பாருங்கள்

    எதற்காக வோமனம் படபடக் கின்றது

    யாழெடுத் தேனதில் ஸ்ருதிகலை கின்றது

    கருமே கங்கள் உருமா றிப்போய்

    நெஞ்சுக் குள்ளே நுழைந்து கொண்டன

    ஒருதுளிக்கும் மறுதுளிக்கும்

    இடைவெளி இன்றி மழைபொழி கின்றன

    எதற்காக வோமனம் படபடக் கின்றது

    செவியறி யாத ஓசைகள் எல்லாம்

    சிந்தனைக் குள்ளெ ஜெபிக்கப் படவும்

    புவியறி யாத உருவங்கள் எல்லாம்

    புலன்க ளுக்குள் நடன மாடவும்

    கவிதை என்ற பெயரி லேஒரு

    கனத்தை நெஞ்சில் தாங்கிக் கொண்டும்

    தவிக்கி றேன்நான் தளர்ந்து போயிதில்

    தர்க்கம் வேறு தனிமை வேறு

    மாம்பழத் துக்குள் வண்டிருப் பதைப்போல்

    மனத்துக் குள்ளே ஏதோ ஒன்று

    நடுங்கிக் கொண்டே நாதம் இழந்து

    முனகுவ தைநான் உணருகிறேன்

    வாரணம் ஆயிரம் மார்புக் குள்ளே

    வந்து நுழைந்து மிதிப்ப தைப்போல்

    காரணம் இன்றிக் கதறுகி றேனிதில்

    கற்பனை வேறு கனவுகள் வேறு

    இருட்டுக் குள்ளே மூழ்கிப் போயென்

    இதயம் புழுங்கித் தவிக்கிறது

    அறிவோ ஞானக் குளிரெடுத் துப்போய்

    அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது

    ஒருமை பன்மை பேதங்கள் இன்றி

    உள்ளம் குழம்பித் திகைக்கிறது

    ஒருநிமி டம்தான் அதற்குள் இந்த

    உலகே மாறி விடுகிறது

    எங்கோ தொலைவில் ஒருகுயில் கூவ

    மின்னல் வெளிச்சம் பிறக்கிறது

    இருட்டை விரட்டி இதயம் மட்டும்

    இடியிடி என்று சிரிக்கிறது

    தர்க்கம் தனிமை கற்பனை கனவு

    தத்துவம் எல்லாம் புரிகிறது

    தாளத் தோடு மிதந்து கொண்டே

    பாடல் ஒன்று வருகிறது

    எதற்காக வோமனம் களிப்படை கின்றது

    யாழெடுத் தேனதில் இசைபிறக் கின்றது

    (தொடரும்)

    Share
  • நீலக்கடல் மணி!

    நீலமேக ஸ்யாமளரூப கண்ணன் துதி

    இயற்றியவர்: கவிதாரத்னம், வித்யாரத்னம், வித்யாவிஷாரத
    பாஷணகேஸரி, விக்ஞான சிந்தாமணி, ப்ரவசன சிரோமணி

    திருமதி ஹா.கி. வாலம்

    அனுப்பியவர்: தஞ்சை திரு. வெ. கோபாலன்

    நீலக்கடல் மேல் ஆல இலை
    ஆலிலை மேலோர் நீல மணி!                                                 

    கோலக் குழவி குளிர் வடிவம்                            Aalilai-Krishna
    ஜாலக் கடலோ ஜாலக் கடலுள்

    தாமரைக் கண்கள், தளிர் உடலம்
    சாமள வண்ணன், ஜலஜ முகம்
    கோமள குழற் சுருள், க்மிழ் நாசி
    காமனை மயக்கும் கட்டழகு!

    குமுதப் பூங்கனி வாய் அதரம்
    அமுதம் பொழி எழில் அதிமதுரம்
    சமுத்திர நடுவில் கருணை முகில்
    அமைத்தது யாரோ அற்புதமே!

    வலப்பத மலரைக் கரமலரால்
    ஜலஜ முகக் கனிவாய் அதனில்
    நிலைபெறச் செய்து கட்டைவிரல்
    சுவைத்திடும் சுந்தரமணி யாரோ?

    வானம் நீலம், கடல் நீலம்
    தானும் நீலம், விழி நீலம்
    பானம் பண்ணும் விரல் நீலம்
    ஆன இந்நீலக்கடல் யாரோ?

    ஊழிக்கால் உயர் கடலுள்
    ஆழிக்கையன் ஆலிலை மேல்
    தோழர் துணைவர் இல்லாமல்
    வாழ்வதும் என்னடி என் தோழி!

    அன்னையுமில்லை, அப்பனில்லை
    பன்னகப் பாயல் தானுமில்லை
    முன்னையுமில்லை, பின்னையிலை
    தன்னில் சுகிப்பவன் இவன் யாரோ?

    அன்னவன் உன்னை ஆட்கொண்ட
    பன்னக சயனப் பெருமான் தான்;
    கன்னல் மதுமொழிக் கண்ணபிரான்
    சின்னக் குழந்தை வடிவானான்!

    ஆலிலைமேல் துயில் அக்குமரன்
    பாலையுளம் வளர் பரமன் காண்
    நீலக்கடல் மணி நெடுமால்தான்
    பாலப் பருவத் தெய்வம் காண்!

    Share
  • கண்ணபிரான்

    கே. ரவி 

    பாடியவர் : ராஜகோபால்

    கண்ணபிரான் பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

    images (3) 

    என்
    நாவிலே பொன்வீணை நீ – என்
    ஆவியே உந்தன் ஸ்ருதி – என்
    நாவிலே பொன்வீணை நீ

    கண்ணாவுன் மேனி கார்முகில்
    மின்னல்களே உன் பூந்துகில்
    ககனமே உந்தன் நிழல் – என்
    கண்களே உன் பாற்கடல் – என்
    கவிதைகள் உந்தன் குரல்
    என்
    நாவிலே பொன்வீணை நீ

    பார்வையில் கலாபம் நீ – என்
    பாடலில் சுநாதம் நீ
    மாயையில் மெய் தோன்றும் இந்த
    வாழ்விலே வினோதம் நீ
    கருணை மார்கழிப் பனி
    கலந்த ஞான பானு நீ
    என்
    நாவிலே பொன்வீணை நீ

     

    Share