Blog

  • தீராத விளையாட்டுப் பிள்ளை

    தீராத விளையாட்டுப் பிள்ளை

    மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டில் அவர் இயற்றிய பாடல்களைத் தொடர்ந்து இசைப்பாடலாக வலையேற்றி வருகிறோம். இதோ, அவரது அழியாப் புகழ்பெற்ற அமர கீதம், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. மாயக் கண்ணனின் லீலா விநோதங்களை அனுபவித்துக் கொண்டாடுகிறார் பாரதியார். வண்ணமயமான இந்தப் பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காலங்களில் அவன் வசந்தம் – 70 ஆவது நிகழ்ச்சி

    காலங்களில் அவன் வசந்தம் – 70 ஆவது நிகழ்ச்சி

    வணக்கம்!

    காலங்களில் அவன் வசந்தம் – 70 ஆவது நிகழ்ச்சி.

    செப்டம்பர் 30, வியாழக்கிழமை, மாலை 6.30 மணிக்கு.

    இந்த முறை சிறப்பு விருந்தினர் யாரும் பங்கு கொள்ளவில்லை. தனியாட்டம்தான்! தாங்குவீர்கள்தானே??!!

    நிகழ்ச்சியைக் காண:

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நேரலை: https://www.youtube.com/watch?v=EUPJi1XNgO0

    புதுயுகம் முகநூல் நேரலை: https://www.facebook.com/255637074538822/posts/3677795312322964/?d=n

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • கில்லெட் இப்படிச் செய்யலாமா?

    கில்லெட் இப்படிச் செய்யலாமா?

    பிளேடு விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் கில்லெட் இப்படிச் செய்யலாமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் அவர்களுடன் ஓர் உரையாடல். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • டாப்லைட் நூலகம்  நான்காம் ஆண்டுத் தொடக்க விழா

    டாப்லைட் நூலகம் நான்காம் ஆண்டுத் தொடக்க விழா

    திருப்பூர் பல்லடம் சாலை குன்னங்கல்  கிராமத்தில் அமைந்திருக்கும் டாப்லைட் நூலகத்தின்  நான்காம் ஆண்டுத் தொடக்க  விழா, ஞாயிறு மாலை நடைபெற்றது. டாப்லைட் பின்னலாடை நிறுவன உரிமையாளரும் நூலக ஸ்தாபனருமான வேலுச்சாமி, விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

    உள்ளூர்ப் பிரமுகர்கள், நூலகத்தின் சிறந்த பயன்பாட்டையும் பொதுமக்களின் உபயோகத்தையும் பாராட்டிப் பேசினர். மருத்துவர் பல்லடம் பாலமுரளி, பாலு மணியக்காரர், ஆல்வின் வெள்ளியங்கிரி  முத்துபாரதி, வெஸ்மேன் சேகரன், கவுசல்யா தேவி,  ஆ.அருணாச்சலம், சுப்ரபாரதிமணியன், மணிநாதன், ஆசிரியர் ரணதேவ், வேல்முருகன்  உட்பட, பலர்  கலந்து கொண்டனர்.

    மிருதுளா நடராஜன் ”தமிழக அரசியல் வரலாறு” நூல் பற்றியும், சரோஜினி “இவர்கள் வென்றது இப்படித்தான்” –சுயமுன்னேற்ற நூல் பற்றியும், டாப்லைட் வேலுச்சாமி மரபுக் கவிஞரும், பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கியவருமான வா.செ.குழந்தைசாமியின் ”குலோத்துங்கன் கவிதைகள்”  நூலையும் ஆய்வு செய்து பேசினர்.

    சுப்ரபாரதிமணியன்,  நோபல் பரிசு பெற்றவர் குறித்த ”வங்காரி மத்தாயும் சுற்றுச்சூழலும்“  என்ற தலைப்பில் பேசினார். என்.சொக்கன் எழுதிய “அண்ணாந்து பார்“ என்ற சி.என்.அண்ணாதுரை பற்றிய நூல் குறித்து மாணவர் இளையபாரதி, Kids who came from  space   நூல் பற்றி மாணவர் அனிருத் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் பேசினர். பல்லடம் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறுவர்களின் கதை சொல்லல் நிகழ்ச்சி நடைபெற்றது. நூலகப் பொறுப்பாளர் மணிநாதன், விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

    திருப்பூர் குன்னங்கல் பாளையத்தில் அமைந்துள்ள டாப்லைட் நூலகம், டாப்லைட் பின்னலாடை நிறுவன உரிமையாளரும் நூலக ஸ்தாபனருமான வேலுச்சாமி அவரின் பெற்றோர் வசித்து வந்த 20 செண்ட் வீட்டைப் பொதுமக்கள் உபயோகத்திற்காக  நூலாமாக மாற்றியுள்ளார். நூலகத்தை ஒட்டிய 8 ஏக்கர் நிலத்தில் அபூர்வமான 55 மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறார். ஏடகத்தின் கானகம் என்ற பெயரில் அமைந்துள்ள தோட்டம் பல அபூர்வ மரங்களையும் செடிகளையும் கொண்டுள்ளது. மியாவாக்கி முறையில் செடி, மரங்களை அந்த நிலத்தில் வளர்த்துப் பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பொதுமக்களுக்கும்  பயன்படும் வகையில்  இந்த டாப்லைட்  நூலகம் அமைந்துள்ளது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 146 (திருமகட்கு)

    சேக்கிழார் பாடல் நயம் – 146 (திருமகட்கு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    மானக்கஞ்சாறர்பணிவுடையார்; பாம்புடன், மதியையும் அணிந்த சடையை உடைய சிவபெருமானுக்குத் தொண்டாற்றும் பேறுடையவராய், அப்பெருமானுக்கே  ஏவல் செய்யும் செயலை  ஏற்றவர். பெருகி வரும்  செல்வம் முழுவதையும் நதியணிந்த சடையாரின் அடியாராம் செல்வ முடையாரின் நேரில் சொல்லுமுன், குறிப்பறிந்து கொடுப்பவர். அவருக்கு மகப்பேறின்மையால் திருவடிகளை யன்றி வேறு ஏதும் நினையாமல் மகவு பெற எண்ணி மனத்தால் வணங்கினார்.

    அவர் மனைவியார் வினைப்பயன் நீக்க உதவும் பெண்மகவை ஈன்றார். அந்த மகிழ்ச்சியால்  மங்கல இசை முழங்கி ஊரே மகிழ்ந்தது. சிவனடியார்க்  கெல்லாம்  அளவில்லாத செல்வத்தை வாரி வழங்கி அம்மகவை வளர்த்தார். அக்குழந்தை வண்டுகள் மொய்க்கும் சுருண்ட கூந்தலுடன், காதில் குழை யுடன், மேகலை அணிந்த சிற்றாடையுடன் கிண்கிணி அசையும் பாதங்களுடன், கைகளால் அரவணைத்து மகிழும் தாதியர் நடுவே வளர்ந்தது. அமுதம் போன்ற அம்மகள், இல்ல முகப்பில் மணல் வீடு அமைத்து, கிண்கிணி ஆட ஆடற்கலை பயின்று. மார்பு எழும் பருவத்தை அடைந்தார். அழகு வெளிப்பட, முத்துப் பற்களுடன், தளிர் போன்ற கரங்களுடன்  இடையை மார்பு வருத்தும் மணப்பருவம் அடைந்தார். அவரை,

    பாடல்

    திருமகட்கு மேல்விளங்கும்  செம்மணியின் தீபமெனும்
    ஒருமகளை மண்ணுலகில்  ஓங்குகுல மரபினராய்க்
    கருமிடற்று மறையவனார் தமராய கழல் ஏயர்
    பெருமகற்கு  மகட்பேச வந்தணைந்தார் பெருமுதியோர்.

    பொருள்

    திருமகளுக்கு மேலாக விளங்குகின்ற செம்மணியின் விளக்குப் போன்ற ஒப்பற்ற அந்தப் பெண்மணியாரை, இவ்வுலகில் ஓங்கும் வேளாண் குலத்தில் ஒத்த மரபில் வந்தவராய்த், திருநீல கண்டத்தையுடைய வேதியராம் சிவபெருமானுக்கு அன்பராகிய வீரக்கழல் அணிந்த ஏயர்கோன் கலிக்காமனாருக்கு மணம் பேசுவதற்குப் பெருமுதியோர்கள் வந்து சேர்ந்தனர்.

    விளக்கம்

    திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம்  என்ற தொடர்,  உருவாலும் திருவாலும் ஒளியாலும் அருளாலும் இலக்குமியினும் இவ்வம்மையார் மிக்கிருப்பர்; திருமகள் தரும் செல்வம் போல அழிந்துபடாது இவ்வம்மை காரணமாக வரும் செல்வம் இருகுடிக்கும் நித்தியமாகிய அருட்செல்வமாய் விளங்கிற்று; திருமகள் சிவனடியார் பணி கேட்டுத்திரியா நிற்க, இவ்வம்மையார் அருணிறைந்த அடியார்க்குத் துணைவியாராயினர்; மேலும் இவ்வம்மையாரது கற்பின் திறம் மழைக்குதவும் தன்மையுடையது என்றிவை முதலிய காரணங்களால் திருமகட்கு மேல் விளங்கும் என்றார்.

    செம்மணியின் தீபம் என்ற தொடர்,  இயற்கையாலும் தீட்டுதல் முதலிய செயற்கையாலும் மங்காத ஒளியுடையது என்பதைக்க குறித்தது..

    தீபம் என்ற சொல்லால்  அன்பின் பெருமையினையும் அருளின் பெருமையினையும் எடுத்துக் காட்டாக உலகில் விளக்கும் பொருளென்பார் இவ்வம்மையாரை விளக்கு என்றுவமித்தார்.

    ஒரு மகள் நாயனாரின் ஒப்பற்ற மகள்;  அவளை மணமகளாகக் கொள்வது பற்றிப் பேச, குலத்தாலும் மரபாலும்ஓங்கி ஒத்து உள்ளாராய். மரபு – பெரும்பிரிவு. குலம் – அதனுட் சிறுபிரிவு. குடி – கோத்திரம் – என்பர். நாயனாரை அரசர் சேனாதிபதியாம் குடி என்றதுபார்க்க. சைவ சமய பரமாசாரியராலும் பாடப்பெற்ற பெருமை பற்றியும்,  ஓங்கு குலம்என்றார்.

    கருமிடற்று மறையவனார் தமர்  என்பது, சுற்றத்தாரைக் குறித்துப் பெரும்பாலும் வழங்கும் இச்சொல் இங்கு அன்புபூண்ட அடிமைத் திறத்தின் தொடர்பு என்ற அதன் உண்மைப் பொருள் குறித்தது.

    தம்மவர் எனற்பாலது தமர் என வழங்குவதாம். தமர் –  இங்கு, வழிவழி அடிமைச்சார்பு குறித்தது. தமராதலின் நம்பிகள் தூது விட்டமைபற்றிச் சினந்தனர் என்பதும் குறிப்பு.

    மரபினராய் கருமிடற்று மறையவரின் தமராய் – ஒத்த குடியும், மரபும், இவற்றிற்குமேலாய்ச் சிவனடிமைத்திறமுடைமையும் என்றித்திறங்களை மகட்பேச வந்த பெருமுதியோர்.

    கழல் ஏயர் பெருமகன் – கழல் – வீரக்கழல். அரசர் சேனாதிபதிக் குடியின் அடையாளம் குறித்தது. ஏயர் பெருமகன் – ஏயர்கோன்,  என்பது தலைவன் – என்ற பொருளில் வந்தது.

    ஏயர் – இவரது குடிப்பெயராம். கேகயம் – ஒரு நாடு; கேகயர் என்பது ஏயர் என்று மருவி வழங்குவதாயிற்றென்பர் ஆராய்ச்சியாளர். இது குடிப் பெயர் என்பது , “ஏயர் கோக்குடிதான், மன்னி நீடிய வளவர் சேனாபதிக்குடியாம்” என்பதானறிக.பெருமுதியோர் – வயது நிறைந்த அனுபவத்தாலும்,அறிவாலும் முதிர்ந்தவர். இவர்களே இருதிறத்தார்க்கும் பொருந்துவனவற்றைத் தக்கபடி எடுத்து உரைத்து மணம் பொருந்த வைக்க வல்லவர்களாதலின் இன்னோரை அனுப்பி மணம் பேசுதல் முன்னாள் வழக்கு.  இவர்கள் வயதால் மட்டுமன்றி அறிவாலும் முதிர்ந்தோர் என்பதனை வந்த முதறிவோரை என வரும்பாட்டில்  கூறுவது காண்க.

    இப்பாடலால் மணப்பருவம் அடைந்த மகளுக்குத்  திருமணம் பேச ஏயர்குடியின்  தலைவராகிய  ஏயர்கோன் கலிக்காம நாயனார் உறவின் பெரியோர் வந்தனர் என்பது புலனாகும்

    Share
  • இங்கிலாந்தின் அஷ்மோலியன் அருங்காட்சியகம்

    இங்கிலாந்தின் அஷ்மோலியன் அருங்காட்சியகம்

    இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைத்துள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தின் உள்ளே ஒரு வலம் வரலாம் வாருங்கள். இது, கலை மற்றும் தொல்லியல் துறைக்கான சிறப்பு அருங்காட்சியகம் ஆகும். ஏராளமான அரும்பொருள்களைச் சிறப்பாகப் பேணிக் காத்து வருகிறது. ‘இதில் இருக்கும் திருமங்கை ஆழ்வார் சிலை, தமிழ்நாட்டில் ஒரு கோவிலிலிருந்து திருடப்பட்டது. எனவே அதைத் திருப்பித் தர வேண்டும்’ என்று கடந்த ஆண்டு இந்திய அரசு இந்த அருங்காட்சியத்தைக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    The Ashmolean Museum of Art and Archaeology, Oxford, England, is the world’s second university museum (after the establishment of the Kunstmuseum Basel by the University of Basel, Switzerland, in 1661) and Britain’s first public museum.

    Video by Navya.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் – 1

    ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் – 1

    சந்திப்பு: ஓவியர் ஸ்யாம்

    ஓவியர் ஜெயராஜ், தமிழ் இதழுலகில் தடம் பதித்த சித்திரக்காரர். சிறுகதைகள், தொடர்கதைகள், படக்கதைகள், புத்தகங்கள், பாடநூல்கள்… என 64 ஆண்டுகளாகப் பல்லாயிரம் ஓவியங்களைப் படைத்து அளித்து வருகிறார். தமக்கெனத் தனிப் பாணி, முத்திரையுடன் எழில் குலுங்கும், இளமை ததும்பும் ஓவியங்களைத் தீட்டி வருகிறார். சுஜாதாவின் கணேஷ் – வசந்த், பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி – சீதாப்பாட்டி எனப் பல பாத்திரங்களை வாசகர்கள் மனத்தில் பளிச்சென அமர வைத்தவர். 84 வயதுடைய மூத்த ஓவியர் ஜெயராஜ் அவர்களை இளம் ஓவியர் ஸ்யாம் சந்தித்து உரையாடுகிறார். இந்தக் கலகலப்பான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 37

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 37

    -மேகலா இராமமூர்த்தி

    கும்பகருணன் இல்லத்தில் நுழைந்த அனுமன் அவனை இராவணனோ என்று ஐயுற்றுப் பின்னர் இவனுக்குத் தலை ஒருபதும் புயங்கள் இருபதும் இன்மையின் இவன் இராவணன் அல்லன் எனத்தெளிந்து தேடுதலைத் தொடர்ந்தான். அடுத்து அவன் நுழைந்தது வீடணனின் இல்லத்தில்.

    உறங்கும் வீடணனைக் காண்கின்றான் அனுமன். அவ் இல்லத்தின் எண்ண அதிர்வுகளும் அலைகளும் அங்கு உறைபவன் நல்லவன்; அறத்தின்வழிப் பட்டவன் எனும் உணர்வை அனுமனுக்குள் ஏற்படுத்துகின்றன.

    கருநிற அரக்கர்கள் நடுவில் வெண்ணிறங்கொண்டு வெளிப்படையாக வாழ்தல் கடினம் என்பதனால் அவர்களின் கருநிற வடிவத்தை அடைந்து, பவளத்தால் செய்யப்பட்ட கூடத்தில் பசுந்தேன் சிதறுகின்ற கற்பகப் பந்தலின்கீழ் பளிங்கால் அமைந்த மேடையில் மறைந்து வாழுகின்ற தருமம் போன்ற வீடணனை உற்றுநோக்கினான் அனுமன்.

    பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன்
    துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால்
    வெளித்து வைகுதல்அரிதுஎன அவர்உரு மேவி
    ஒளித்துவாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.
    (கம்ப: ஊர்தேடு படலம் – 5077)

    அனுமன் வீடணனை அருகில்சென்று கண்டபோது, அவன் குற்றமற்ற நல்மனத்தினன்; உயர் குணத்தினன் எனும் உணர்வடைந்தான். ‘கள்ளி வயிற்றில் அகில் பிறப்பதுபோல’த் தீமையே நிறைந்துள்ள இலங்கையில் இப்படி ஓர் உயர்ந்தவனா என வியந்தபடி அங்கிருந்து அகன்றான்.

    பல்வேறு மாளிகைகளைக் கடந்த அனுமன், ஆயுதம் ஏந்திய தடக்கையர், தம் பற்கள் வெளிப்பட மூதுரைகளையும் விடுகதைகளையும் பேசிக் கொண்டிருப்பவர்கள், வலிமையோடு காவல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எனப் பலரையும் தாண்டிச்சென்று இந்திரனைச் சிறைவைத்தவனான இந்திரசித்தனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.

    ஆங்கே அழகிய மகளிர் குழாத்திடை உறங்கிக் கொண்டிருக்கின்ற இந்திரசித்தனைக் கண்டான்.

    அவனுடைய தோற்றத்தைக் கண்ட அஞ்சனை மைந்தன், குகையில் உறங்கும் கொடுஞ்சிங்கம் போன்ற இவன், வளைந்த ஒளிமிகு பற்களையுடைய அரக்கனோ? மழுப்படை ஏந்திய சிவனின் மகனான முருகனோ? எவனோ என அறியாதிருக்கின்றேன். இளைய வீரனான இலக்குவனும் அடைக்கலமென வந்தோரை ஏந்திக் காக்கும் இராமபிரானும் மன உளைச்சல் அடையும்படி இவ்வீரனோடு நெடுநாள் போர் நிகழப் போகின்றது என உய்த்துணர்ந்தான்.

    வளையும் வாள்எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ
    அளையில் வாள்அரி அனையவன் யாவனோ அறியேன்
    இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள்
    உளைய உள்ளபோர் இவனொடும் உளது என உணர்ந்தான்.
    (கம்ப: ஊர்தேடு படலம் – 5082)

    இவனைத் துணையாகக் கொண்ட இராவணன் மூவுலகங்களையும் வென்றது அருஞ்செயல் இல்லை என்று எண்ணியவாறே அவ்விடம்விட்டு நீங்கினான்.

    அடுத்து இராவணனின் காதற் கிழத்தியர் இல்லங்களிலெல்லாம் நுழைந்து தேடிக்கொண்டு சென்ற அனுமன், அவன் பட்டத்தரசியான மண்டோதரியின் மனையை அடைந்தான். மற்ற மாளிகைகளினும் அழகினும் சிறப்பினும் மேம்பட்டு அது திகழ்வதைக் கண்டு சீதாப் பிராட்டியை இராவணன் சிறை வைத்திருக்கும் மாளிகை இதுவோ என்று சிந்தித்தான்.

    அரம்பையும் உருப்பசியும் ஏனைய தேவமாதரும் மண்டோதரியின் தளிர்புரை பாதங்களை வருடிவிட, அவள் துயில்கொண்டிருக்கும் நிலையை மறைந்திருந்து கண்டான் அனுமன்.

    எரிகின்ற மாணிக்க விளக்குகளின் ஒளியைக் குன்றச் செய்யும் பேரொளியோடும் எழிலோடும் திகழ்ந்த மண்டோதரியின் தோற்றத்தைக் கண்ணுற்றதும் அவள் சீதாப் பிராட்டியோ எனும் ஐயம் அனுமனுக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த எண்ணத் தீயானது அவன் உடலை வாட்டியது.

    அத்துன்பத்தைத் தாளமாட்டாத அனுமன், எலும்புகளால் கட்டப்பட்ட சிறந்த உடம்பினால் பெறும் பயனை இவள் இழந்துவிட்டாள்; இது கிடக்கட்டும்! இங்கே துயிலும் பெண், அன்பாகிய பிணிப்பைக் குடிப்பிறப்போடு சேர்த்து நீக்கித் தனக்குரிய தெய்வக் கற்பு நீங்கிய சீதை என்பது மட்டும் உறுதியானால், இராமனின் புகழும் பொலிவும், நானும், இந்த இலங்கை மாநகரும், இங்குள்ள இராக்கதர்களும் இன்றைய நாளில் அழிவோம் என்று கருதி வருந்தலானான்.

    எற்புவான் தொடர் யாக்கையால் பெறும்பயன்
         இழந்தனள் இதுநிற்க
    அற்பு வான்தளை இற்பிறப்பு அதனொடும்
         இகந்துதன்அருந் தெய்வக்
    கற்பு நீங்கிய கனங்குழை இவள்எனின்
         காகுத்தன் புகழோடும்
    பொற்பும் யானும்இவ் இலங்கையும் அரக்கரும்
         பொன்றுதும்இன்று என்றான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5141)

    கும்பன், வீடணன், இந்திரசித்தன் ஆகியோரைக் கண்ட மாத்திரத்தில் அவர்களின் அங்க அடையாளங்களையும் அவ் இல்லங்களின் இயல்பையும் வைத்தே அவர்களைத் துல்லியமாய் எடைபோட்ட அனுமன் மண்டோதரியைக் கண்டதும் இவள் சீதையோ என்று ஐயுற்றது ஏன்? அத்தகைய குழப்பம் அவனுக்கு நேர்ந்தது எப்படி என்று சிந்தித்தால் அதற்கு நாம் இராமனைத்தான், ஒருவகையில், பொறுப்பாளியாக்க முடியும்.

    ஏனெனில், அவன் தன் மனைவியின் அழகை அனுமனிடம் அடையாளத்தின் பொருட்டுப் பாதாதிகேசம் வருணித்திருந்தபடியால் அவளையொத்த அங்க அழகுகள் பொருந்திய ஒருத்தியைக் கண்டதும் அவள் சீதைதானோ என்ற ஐயம் அனுமனுக்கு ஏற்படுவது இயல்புதானே?

    எனினும் அவ் ஐயம் அனுமனுக்கு நெடுநேரம் நீடிக்கவில்லை. சில கணங்களிலேயே சிந்தை தெளிந்தவனாய், இவள் சீதையையாய் இருக்க வாய்ப்பில்லை. இவளின் உடலில் சில நல்ல இலக்கணங்கள் உளவெனினும் இவள் மானுடப் பெண்ணினும் சற்று மாறுபட்டவளாய்க் காட்சியளிக்கின்றாள். இவள் உடலின் அடையாளம் இவளுக்கு விரைவில் எல்லையில்லாத் துன்பம் வரப்போகின்றது என்பதை அறிவிப்பதாய் இருக்கின்றது என்றெண்ணினான்.

    தான் கண்டவள் சீதையில்லை என்ற மனத் தெளிவினால் ஏற்பட்ட மகிழ்ச்சியோடு மண்டோதரியின் மாளிகையை நீங்கிச் சென்ற மாருதி, அடுத்து பிரம்மாண்டமான பெரிய அரண்மனை ஒன்றைக் கண்டான். அதுதான் இலங்கைவேந்தன் இராவணனின் இருப்பிடம்.

    அதனுள்ளே அனுமன் நுழைந்ததும் இலங்கையின் பல இடங்களில் அதிர்வு ஏற்பட்டது; திசைகள் துடித்தன; நீர் நிரம்பிய மங்கலக் கலசங்கள் சிதறின. இவ்வாறு அங்குத் தோன்றிய தீக்குறிகளைக் கண்ட அனுமன், அப்பெரிய நகரின் செல்வம் அழியப் போகின்றது என்பதைத் தன் மதிநுட்பத்தால் உணர்ந்து அதற்கு நெகிழ்ந்து நின்றான். ”எக்குலத்தவராய் இருந்தால்தான் என்ன? எல்லார்க்கும் நல்வினை தீவினைகளின் பயன் ஒன்றுபோலத்தான் இருக்கும். ஊழைவிட வலிமை உடையது எது?” என்று சிந்திக்கலானான்.

    புக்குநின்று தன்புலன் கொடு நோக்கினன்
         பொருவருந் திருவுள்ளம்
    நெக்குநின்றனன் நீங்கும் அந்தோ இந்த
         நெடுநகர்த்திரு என்னா
    எக்குலங்களின் யாவரே யாயினும்
         இருவினை எல்லார்க்கும்
    ஒக்கும் ஊழ்முறைஅல்லது வலியது ஒன்று
         இல் என உணர்வுற்றான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5146)

    ”ஊழிற் பெருவலி யாவுள?” (380) எனும் பேராசான் வள்ளுவரின் குறள் கருத்தை அனுமன்மூலம் வெளிப்படுத்தியுள்ள கம்பர், பிறர் கேட்டை நினைந்து வருந்தியமையால் அனுமனைப் பொருவருந் திருவுள்ளம் கொண்டவன் (ஒப்பிலா நன்மனத்தினன்) என்கிறார் விதந்து.

    பொன்மயமான அம்மாளிகையில் நித்திரையில் ஆழ்ந்திருந்தான் நிருதர்கோன் இராவணன். இருள் என்று சொல்லப்படும் பொருள் அழியும்படி அவன் கிரீடங்களிலிருந்த மணிகள் இளவெயில்போல் ஒளிவீச, இரணியனைக் கொன்ற நரசிங்கம் பல தலைகளோடு துயில்வதுபோன்ற தன்மையோடு காட்சியளித்தான் அவன்.

    கருப்பூரம் முதலிய கலவைகளைப் பெற்ற சந்தனப் பூச்சின்மேல் தவழுகின்ற, குளிர்ந்த தமிழ்மொழியுடன் பிறந்த, இளந்தென்றல் காற்றால் கொடுமையான காம நெருப்பானது வெளிப்பட்டு, இரு மடங்கு துருத்தியைப் போல் பெருமூச்சு அதிகமாக, காந்தள் மெல்விரலாள் சானகியின்பால் மனம் முதலான புலன்கள் விரைந்தோட, பாம்புகள் (ஐம்புலன்கள்) நீங்கிய புற்றைப்போல் நெகிழ்ந்த தன்இதயம் சூனியம் பட்டவனாய்க் கிடந்தான் இராவணன்.

    சாந்துஅளாவிய கலவைமேல் தவழ்வுறு
         தண்தமிழ்ப் பசுந்தென்றல்
    ஏந்து காமவெங்கனல் உயிர்த்து இருமடி
        துருத்தியின் உயிர்ப்புஏற
    காந்தள்மெல்விரல் சனகிமேல் மனம்முதல்
         கரணங்கள் கடிதுஓடப்
    பாந்தள்நீங்கிய முழைஎன குழைவுறு
         நெஞ்சுபாழ்பட் டானை. (கம்ப: ஊர்தேடு படலம் – 5151)

    உறங்கும் வேளையிலும் சீதையின் நினைவால் ஏற்பட்ட மன உளைவால் இராவணனுக்கு அமைதியில்லை; நிம்மதியான நித்திரை இல்லை என்பதைப் பல பாடல்களில் ஈண்டு விளக்குகின்றார் கவிச்சக்கரவர்த்தி.

    இராவணனைக் கண்டதும் ஏற்பட்ட சினத்தால் அவனை நானே கொன்றுவிடுகின்றேன் என்று கைகளை நெறித்துப் பற்களைக் கடித்தான் அனுமன். சிந்தித்துப் பார்த்தவன் அது தவறு என்ற முடிவுக்கு வந்தவனாய், இன்றைய தினத்தில் இராவணனனோடு போர் செய்யவேண்டும் எனும் பெருஞ்சீற்றம் என்னுள்ளேயே அடங்கிக் கிடக்கட்டும். கற்றை மலர்க்குழலாளைச் சிறைவைத்த முள்ளனைய இராவணனை ஒரு குரங்கு போரில் முடித்தது எனும் நிலை ஏற்பட்டால் அஃது இராமனின் வெற்றிதரும்  வில்லாற்றலுக்குத் தாழ்ச்சி உண்டாக்கும் என்றுணர்ந்து சீற்றம் தணிந்தான்.

    இற்றைப் போர்ப் பெருஞ்சீற்றம்
         என்னோடும் முடிந்திடுக
    கற்றைப் பூங் குழலாளைச்
         சிறைவைத்த கண்டகனை
    முற்றப் போர்முடித்தது ஒரு
         குரங்குஎன்றால் முனைவீரன்
    கொற்றப்போர்ச் சிலைத் தொழிற்குக்
         குறைவுஉண்டாம் எனக்குறைந்தான். (கம்ப: ஊர்தேடு படலம் – 5164)

    உணர்ச்சிவெள்ளம் மீதூரும் போதெல்லாம் அதனைத் தன் அறிவின் துணையால் அணைபோட்டு வெல்லும் அனுமனின் செயல்முறை இன்றைய மாந்தர்க்கும் தேவைப்படும் உயர்ந்த பண்பாகும்.

    இராவணனின் அரண்மனையைவிட்டு வெளியில் வந்த அனுமனின் உள்ளத்தில் இலங்கை முழுவதும் தேடியும் சீதை சிறையிருக்கும் இடத்தை அறிய முடியவில்லையே என்ற கலக்கம் எழுந்தது.

    அப்போது தேன்மலர்கள் நிறைந்த சோலை ஒன்று அருகே இருப்பதைக் கண்ணுற்றான் அவன். அதனுள் சென்று தேடலாம் என்ற முடிவுக்கு வந்தான். அதுவே அசோக வனமாகும்!

    இங்கே பிராட்டியைக் கண்டால் எனை வாட்டிக்கொண்டிருக்கும் உளத்துயர் நீங்கும் என்று எண்ணியவனாய்ச் சோலைக்குள் நுழைந்தான் அனுமன்.

    இப்போது நீண்ட நாட்களாக நாம் காப்பியத்தில் சந்திக்காமலிருந்த சீதையை அனுமனுக்கு முன்னதாகவே நாம் சந்திக்கக்கூடிய நல்வாய்ப்பை நல்குகின்றார் கம்ப நாடர்.

    நாமும் சீதையைச் சந்திக்கும் பேராவலோடு அருகில் சென்றால் அங்கே அந்தப் பெண்ணரசி இருக்கும் நிலை நம்மைக் கண்கலங்க வைக்கின்றது.

    தான் உடுத்திய ஆடையை மாற்றாது, நீராடாது, புகைபடிந்த ஓவியமென அந்தப் பாவை, கொடிய அரக்கியர் சூழ, அங்கே அமர்ந்திருந்தாள். அவள் உள்ளக் கடலோ ஏதேதோ எண்ண அலைகளால் தத்தளித்துக் கொண்டிருந்தது.

    தன்னை இராவணன் கடத்திக்கொண்டு போனபோது அதனைக் கண்டவனான சடாயு உயிர்நீத்து விட்டபடியால் தன்னிலையை இராம இலக்குவருக்கு விளக்குவார் யாருமிலர். எனவே, இப்பிறப்பில் தான் மீண்டும் அவர்களைக் காணப் போவதில்லை என்றெண்ணி வாடினாள் அவள்.

    இராமனைத் தேடிச்செல்ல மறுத்த இலக்குவனைக் கொடுஞ்சொற்களால் தான் நிந்தித்ததை அறிந்த இராமன் தன்னை அறிவில்லாதவள் என்று கருதித் துறந்துவிட்டானா? என் தீவினையின் விளைவா இது? என்றெண்ணிக் குமைந்தாள்.

    ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல எண்ணவோட்டங்கள் சீதைக்குள் எழுந்து அவளை வாட்டமுறச் செய்தன.

    தான் அமர்ந்திருக்கும் இடம் கறையானால் அரிக்கப்பெற்றுப் புற்றுத் தோன்றினும் அவ்விடத்தை விட்டு எழாத சீதை, ”ஐயோ மெல்லிய இலைக்கறி உணவை எவர் பரிமாற இராமன் உண்பான் என்று சிந்தித்துத் துன்புறுவாள்; அவனை நாடி விருந்தினர் வந்தால், அவர்களை வரவேற்று உணவு பரிமாற நான் அருகில் இல்லாததால், எத்தகைய துன்பம் அடைவானோ என்று நினைத்து ஏக்கமுறுவாள்; யானே வரவழைத்துக்கொண்ட இந்த நோய்க்கு மருந்தும் உண்டோ என்றுகூறிச் சோர்வடைவாள்.

    அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும் என்று அழுங்கும்
    விருந்து கண்டபோது என்உறுமோ என்று விம்மும்
    மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு என்று மயங்கும்
    இருந்த மா நிலம்செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள்.
    (கம்ப: காட்சிப் படலம் – 5190)

    விருந்தினரைப் பேண இராமனின் அருகில் தான் இல்லையே என்று சீதை வருந்துவதாய்க் காட்டுவதன்மூலம் ஓர் ஆடவன் பெண்ணை மணப்பதன் முதன்மைப் பயன் விருந்தோம்பலே என்பதை அனைவர்க்கும் அறியத் தருகின்றார், தமிழர் பண்பைப் போற்றுவதில் என்றும் பிறக்கிடாத, கம்பர்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை

    1.கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2.கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3.கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4.கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • Nithila Annakannan Ideas – 3 – Heart-shaped Call Button

    Nithila Annakannan Ideas – 3 – Heart-shaped Call Button

    Here is a new idea from Nithila Annakannan. Released this in International Daughters day. We seek your feedback.

    (To subscribe Annakannan’s YouTube channel, please click here: http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 34

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 34

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    தமிழ்க்கவிதை உவமங்களில் பானையும் யானையும்

    முன்னுரை

    தமிழ்க்கவிதை வல்லார் தமது கவிதைகளில் அமைக்கும் உவமங்களில் அல்லது தாமாகவே அமையும் உவமங்களில் அவர்தம் பன்முக நோக்கு புலப்படுகிறது.  இயற்கையின் ஒவ்வொரு நுண்ணிய அசைவுகளையும் அவர்கள் நோக்கி வந்திருக்கிறார்கள். பல்லியின் ஒலியை அடையாக்கிக் ‘கனைகுரல் பல்லி’ என்று சொல்லுவதிலும் ‘ஆடுநடை புரவி’, ‘அசைநடை களிறு’ என்பதிலும் அவர்களுடைய நோக்கு புலப்படுகிறது. ‘குவிமுகிழ் எருக்கு’ என்பதில் அவர்களுடைய இயற்கை நாட்டம் தென்படுகிறது. தூமயிர் குறுந்தாள் நெடுஞ்செவி குறுமுயல்’ என்பதில் ஒரு சாதாரண உயிரின் உறுப்புக்களை எவ்வளவு நுட்பமாகக் கவனித்து வந்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.  அந்த வகையில் மக்களுக்கு அப்பாற்பட்ட கவிதை உவமங்களில் தாவரங்கள், ஊர்வன, பறப்பன, விலங்கினம், நீர்வாழ்வன முதலியன இடம்பெற்றிருப்பதை அறியமுடிகிறது. இந்த வகையில் மண்பானையையும் மறவேழத்தையும் உவமப் பொருளாகக் கொண்டு அவர்கள் விளக்கிய கருத்துக்கள் சில இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகின்றன.

    தொல்காப்பியர் கண்ட பானை

    தமிழின் தலையிலக்கணமாகிய தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பானை உவமமாகக் காட்டப்பட்டுள்ளது. இதுவெறும் பானை அல்ல. நீர்ப்பானை. காய்ந்த பானை அன்று. பச்சைப் பானை. குழந்தையைப் ‘பச்சை மண்’ என்னும் வழக்கு நோக்குக. இந்தப் பச்சைப் பானையை இலக்கிய வழக்கில் ‘பசிய மட் கலம்’ அல்லது ‘பசுமட்கலம்’ என்பர்.

    “தன்னுறு வேட்கையைக் கிழவற் முற்கிளத்தல்
    எண்ணுங்காலை கிழத்திக்கில்லை
    பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
    பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப” (28)

    பெண்விடுதலையாளர் பலரும் எதிர்க்கின்ற நூற்பா இது. தொல்காப்பியம் ஒரு மொழியிலக்கண நூல் என்பதையும் இலக்கியத்திற்கான உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் கூறுகின்ற நூல் என்பதையும் முற்றிலும் மறந்து அதனை ஒரு வரலாற்றுப் பனுவலாகக் கருதியதன் விளைவே அந்த எதிர்ப்பு. எழுவகை அகத்திணையுள் பெருந்திணை மாக்களை ஒப்பிட்டுக் கூறிய நூற்பா இது. பிற நீர் மாக்களின் என்னும் தொடருக்கு,

    “வேறு வேறாகத் தம்மின் தாம் காதல் செய்து ஒழுகும் அறிவில்லாதவரைப்போலத் தலைவன் அறியும் படியாகத் தனக்குற்ற வேட்கையை அவன் முன்னர்க் கூறுதல் தலைவிக்கு இல்லை”

    என்னும் நச்சினார்க்கினியர் உரைவிளக்கம் மிக ஆழமான சிந்தனையை உள்ளடக்கியது. அகன் ஐந்திணை தலைமக்களையும் பெருந்திணை மற்றும் கைக்கிளை மாந்தரையும் ஒப்பிட்டுக் கூறிய நூற்பா இது. இனிக், காதல் மலரினும் மெல்லிது என்னும் உணர்வுடையாருக்கு இந்த நூற்பாவின் மென்மை புரியும். ‘பேதையின் நகை மொக்கில்’ காதலை உணரும் மென்மையான தலைமக்களுக்கு அது மலரினும் மெல்லிது என்பது புரியக் கூடும். அரும்பிப் போதாகி மலரும் நோயாகக் காதலைக் கண்டவர்கள் அதனை ஒரு வெடிகுண்டாகக் கருதமாட்டார்கள். ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்ற பெண்மையின் தன்னிச்சையான வெளிப்பாடு, உரிமையின்பாற்பட்டதன்று. பண்பாட்டின்பாற்பட்டது. அதனால்தான் பசிய மட்கலத்துள் பெய்து வைத்த நீர் எப்படிப் புறத்தே கொஞ்சம் கொஞ்சமாகப் பொசியுமோ அது போலப் பொசியும் என்று உவமம் கூறினார் தொல்காப்பியர். காதலுக்குக் காப்பியர் சொன்ன இந்த உவமத்தைத்  திருவள்ளுவர்,

    “சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட்கலத்துள்
    நீர் பெய்திரீஇ யற்று” (660)

    என்னும் குறட்பாவில் அற வழியிலின்றி அல்வழியில் வந்த பொருளால் அரசனைக் காக்க முயல்வது நீரைச் சேமிப்பதற்காகப் பசிய மட்கலத்துள் அதனைப் பெய்தலோடு ஒக்கும் எனச் சித்திரிக்கிறார்.

    பச்சைக் குழந்தையும் பசுமட் கலமும்

    பாவேந்தர் எழுதிய இறவா இலக்கியமான குடும்ப விளக்கிலே ஒரு காட்சி. வேடப்பனுக்கும் நகைமுத்துக்கும் மகள் பிறக்கிறாள். மகவைக் கண்ட பேராவல் காரணமாகத் தூக்கிக் கொஞ்சுதற்காக விரைந்து செல்கிறான் வேடப்பன். அவன் விரைவைக் கண்ட நகைமுத்து அவனைத் தடுத்துக் குழந்தை எத்தகையது? அதனை எப்படித் தூக்க வேண்டும்? என்று இப்படி அறிவுறுத்துகிறாள்.

    “வேடப்பன்
    அடங்கொணா மகிழ்ச்சியால் அருமை மகளை
    எடுக்க விரைந்தான் “அதுதான் இயலாது
    கொள் அன்று., கொத்து மல்லி அன்று.,
    பிள்ளை அத்தான்”  என்றாள் பெற்றவள்
    பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் தானும்
    வேடப்பனுக்கு விளக்குவாள் துணைவி!
    ஆழியுள் உருவான அழகு மட்கலத்தை
    இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்!
    சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்!
    …………………………………………………………………………………………
    தலை உடல் இரண்டையும் ஒருங்கு தூக்கி
    உலை அமிழ்தை வறியவள் ஒருத்தி தூக்கல்போல்
    தவறாது தூக்குதல் தலையாகிய கடன்”

    நகைமுத்தின் இந்த அறிவுறுத்தலில் பச்சைக்குழந்தைக்குப் பசிய மட்கலம் உவமமாக்கப்பட்டுள்ளது.

    சித்தர் பாட்டில்  சிதறிய  பானை

    புகழ் பெற்ற சித்தர் பாடல் இப்படி அமைந்திருக்கிறது. அந்தப் பாடடில் ‘பானை’ என வெளிப்படக் கூறாவிடினும் வனைந்தவன் குயவன் என்பதால் வனையப்பட்டது பானை என்பது பெறப்படும்.

    “நந்த வனத்தில் ஓர்ஆண்டி அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
    கொண்டு வந்தான் ஒரு தோண்டி
    அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

    என்ற பாடல் கடுவெளி சித்தரால் பாடப்பட்டது. வாழ்க்கை நிலையாமையைக் கூறுகிற பாடல் இது. அதாவது இந்த உடல் அழியக் கூடியது என்னும் வாழ்வியல் உண்மையை உணர்த்துவது. மனிதரின் இறுதிச் சடங்கில் முச்சந்தியில் மூன்று துளைகளையிட்டுப் பானை உடைத்து நறைவுறும் சடங்கு  இன்றைக்கும் உள்ள நடப்பியல் உண்மை. ‘மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று வேண்டிப் பெற்ற மனிதப்பிறவியின் நோக்கம் நிறைவேறுவதற்கு உடல் தலையாய ஊடகம். இந்த ஊடகத்தின் சிதைவே உயிர்ச்சிதைவாகும்.

    கடைச்சங்க இலக்கியத்தில் களிறு

    ‘யானைமறம்’, ‘களிற்றுடன் நிலை’ என்றெல்லாம் புறத்திணை இலக்கணத்தின் மையப்பொருளாகத் திகழும் யானை புலவர்கள் நாவில் உவமமாகவும் நடைபயின்றுள்ளது. அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடுகிறார்.

    “கையது வேலே! காலன புனை கழல்!
    மெய்யது வியரே! மிடற்றது பசும்புண்
    ……………………………………………………………………………………………………
    சுரி இரும் பித்தை பொலயச் சூடி
    வரிவயம் பொருத வயக்களிறு போல
    இன்னும் மாறாது சினனே! அன்னோ!
    உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றியோரே!
    செறுநர் நோக்கிய கண் தன்
    சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே!” (புறம். 100)

    என்ற பாட்டில் ‘வரிவயம் பொருத வயக்களிறு’ போல என்ற உவமிக்கிறார். அதியமான் தனக்கு மகன் பிறந்திருக்கும் சேதியறிந்து களத்திலிருந்து அரண்மனை செல்கிறான். அந்தத் திருவோலக்கத்தில் ஔவையார் அவனைக் காண்கிறார். மழலைகளின் பிஞ்சு நெஞ்சிலும் போர்க்கோலமே நிலைபெற வேண்டும் என்னும் கருத்தான போர்க்கோலத்தில் கண்சிவக்கக் காணப்படும் அதியமானைக் கண்ட ஔவையார் “செல்லப் புதல்வனைக் காணுகிற நேரத்திலும் புலியைக் கொன்ற களிறுபோல் சிவக்கின்ற கண்களை உடையவனைப் பகைவர் கண்டால் என்ன ஆவாரோ?” என்ற கருத்தினைச் ‘சிறுவனை நோக்கியும்’ என்ற தொடரால் குறிக்கிறார். ‘மறப்போரில் சிவந்த கண் மழலை கண்டும் மாறவில்லை’ என்பது கருத்து.

    சிறுவர்களுக்குக் குளிர்கிறாய்! சீறியோர்க்கு எரிகிறாய்!

    ‘காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன்’ என்றால் தன் நாட்டு மக்களுக்கு என்று பொருள். பகைவர்க்கு எந்த மன்னனும் எளியனாக மாட்டான். கூடாது. தன் நாட்டு மக்களுக்கு ‘மயங்கும் யானையாக’ இருக்கும் அதியமான் மாற்றாருக்கு மதம் பிடித்த யானையாகத் திகழ்கிறான் என்பதை விளக்க யானை பற்றிய இரண்டு  உவமங்களைக் கூறி மகிழ்கிறார் ஔவையார்.

    “ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
    நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
    இனியை பெரும எமக்கே! மற்று அதன்
    துன்னரும் கடாஅம் போல
    இன்னாய் பெரும! நின் ஒன்னா தோர்க்கே!” (புறம். 94)

    மாற்றார் அரணைக் கிழிக்கும் தந்தத்தைச் சிறுவர் கையில் பிடித்து விளையாடும் அளவுக்கு எளியன், மதம் (கடாஅம்) பிடித்த களிறாகப் பகைக்குத் தோன்றுகிறான் அதியமான் என்பது கருத்து.

    தந்தை காணட்டும் தனையன் வீரத்தை!

    காட்சியளவையின் அழகியலைக் கருத்தாவாகிய படைப்பாளன் தன் மொழி கொண்டு எழுத்தில் கொண்டு வருகிற முயற்சியே கவிதை. இலக்கியச் சுவைத்திறன் என்பது கற்பார் உணர்ச்சியையும் உள்ளத்தையும் பொருத்தது. அறிவை அளவுகோலாகக் கொள்ளாது, படைப்பாளனின் உணர்வையும் அனுபவத்தையும் மொழிவழிப் பரிமாறிக் கொள்வது. தித்தன் என்பானின் மகன் போர்வை கோப்பெரு நற்கிள்ளி. தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு. அதனால் தந்தையைப் பிரிகிறான். பிரிந்தவனுக்கு ஆமூர் மல்லன் என்னும் வீரனை எதிர்க்க வேண்டிய நிலை வருகிறது. எதிர்த்துப் போரிடுகிறான். மல்லனின் அத்தனை போர்த் தந்திரங்களையும் முரியடித்து ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்’ போர்செய்து வீழத்துகிறான் நற்கிள்ளி. இந்த வீரத்தை அவன் தந்தை  காணட்டும்! என்று முழங்குகிறார் புலவர் சாத்தந்தையார்.

    “பொரல் அரும் தித்தன் காண்கதில் அம்ம!
    பசித்துப் பணை முயலும் யானை போல
    ஒரு தலை ஒசிய எற்றிக்
    களம்புகும் மல்லன் கடந்து அடு நிலையே!” (புறம். 80)

    மல்லனின் போர்த்தந்திரங்களை முரியடிக்கும் நற்கிள்ளி செயலை உயர்ந்து வளர்ந்து காற்றில் ஆடும் மூங்கிலை வளைத்து முரிக்கும் யானையின் முயற்சிக்கு ஒப்பிடுகிறார் புலவர். இன்னும் வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானை யாத்தற்று’, ‘கழை தின் யானைக் காலகப்பட்ட வன்திணி நீள்முளை போல’ என்றெல்லாம் அதன் தன்வினைகளும் பிறவினைகளும் கூட உவமமாக வந்துள்ளதை அறியலாம்.

    வள்ளுவர் கண்ட யானை

    பழந்தமிழ் இலக்கியங்களில் யானை பற்றிய பதிவுகளுக்கும் திருக்குறளில் அது பற்றிய பதிவுகளுக்கும் அதாவது பிற சான்றோர்களின் நோக்கிற்கும் திருவள்ளுவர் நோக்கிற்கும் ஒத்திசைவு அவ்வளவாக இல்லை. சங்க இலக்கியத்தில் போர்க்கள நாயகனாகப் பார்க்கப்பட்ட யானை, திருவள்ளுவர் நோக்கில் அதன் உருவப் பெருமையே முன்னிறுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அரச நீதி சொல்ல வந்த வள்ளுவர் வேழத்திற்கு வேந்தனை ஒப்பிடினும் அதன்கண் உள்ள பலவீனத்தையும் கூறுதல் ஒரு நடுநிலை நோக்காகவும் இருந்திருக்கலாம். இனிப், புலிக்கணமும் சீயமும் போர்க்களிறும் போல்வார் வலிச்சினமும் மானமும் தேசும்’ (பு.வெ.மா.கர. 4) என்னும் நிரலில் யானையின் உருவத் தோற்றத்தால் அது போர்மலைதலின் இறுதியில் அமைந்திருப்பது காண்க.

    “பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்” (குறள். 599)

    என்னும் கருத்தும்,

    “சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப் பாடூன்றும் களிறு” (குறள்.597)

    என்னும் இருவேறு பண்புகளுக்கு யானை உவமமாகியிருப்பதை அறியலாம்.

    “காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
    வேலாழ் முகத்த களிறு” (குறள். 500)

    என்னும் குறட்பாவிலும் எல்லாச் சூழலிலும் யானை வெல்ல முடியாது என்பதுதான் குறிப்பிடப்படுகிறது என்பதை நோக்குக.

    உவமம் பொருளான கதை

    யானை பற்றிய மேற்கண்ட பதிவுகளில் அது உவமமாகக் கொள்ளப்பட்டுப் பொருள் விளக்கத்திற்கு உதவியதைக் கண்டோம். காளமேகப் புலவர் யானைக்கும் வைக்கோலுக்கும், யானைக்கும் ஆமணக்குக்கும் யானைக்கும் சிலேடை பாடியிருக்கிறார்.  பிற பொருளுக்கு உவமமான யானையைக் கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டார் பொருளாக்கி அதற்கு மற்ற பொருட்களை உவமமாக்கிக் காட்டியிருப்பதையும் கட்டுரைப் பொருள் நிறைவு கருதிச் சுட்டப்படுகிறது.

    “உடலின் மேல் பலகாயம் சொரிந்து, பின்கால்
    உடன்பல தப்ப உதிரத்தே ஒழுகும் யானை
    கடலின்மேல் கலம் செல்ல பின்னே செல்லும்
    கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்!” (கலி.பரணி. 476)

    என்னும் தாழிசையில் கலிங்கத்துக் களத்தில் குருதி, கடலாகப் பெருக அதில் நீந்தி வரும் யானைகள் கடலில் நீந்தும் கப்பல் வரிசையைப் போல் இருந்ததாக யானைகளைப் பொருளாக்கி நாவாய்களை உவமமாக்கியிருக்கிறார்.

    ஆனை பாடிய வாயால் பானை பாடிய ஜீவா

    பொதுநலம் நாடி வாழ்க்கையையே பொதுவாக்கிக் கொண்ட பொதுவுடைமைச் சிந்தனைவாதியும் மிகச் சிறந்த இலக்கியச் சுவைஞரும் கவிஞருமாகிய மறைந்த வணக்கத்திற்குரிய தோழர் ப.ஜீவானந்தம் என்னும் ‘ஜீவா’ அவர்கள் எழுதிய பாடல்களில் ஒரு சிறப்பான பதிவைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை’ பாடிய மணிவாசகரைப் போல யானை பாடிய வாயால் பானையையும் பாடியிருக்கிறார் ஜீவா. இவற்றைத் தனித்தனியே கண்ட நமக்கு இரண்டையும் ஒரே பாட்டில் வைத்துப் பார்ப்பதும் மகிழ்ச்சிதானே?

    “யானைபோல் கொழுத்த மேனி!
    இடர் செய்யும் நச்சு நெஞ்சு!
    பூனைபோல் திருட்டு எண்ணம்!
    பொய் புலை நிறைந்த வாழ்வு!
    ஏனையோர் குடிகெடுக்கும்
    எத்தனம் பொழுது போக்கு!
    பானைபோல் வயிறு கொண்ட
    பணத்திமிர் வீழ்க வீழ்க”

    முதலாளித்துவத்திற்கு எதிராகப் போர் முரசு கொட்டிய அந்நாள் தலைவர், எழுதிய பாடல் இது. ஏகாதிபத்தியத்திற்கு யானைபோலக் கொழுத்த மேனி என்றும், ‘பானைபோல் வயிறு’ என்றும் அவர் செய்து காட்டியிருக்கும் சதுரப்பாட்டில் உவமம், உருவகம் இரண்டும் கலந்து களிநடம் புரிவதைக் காணலாம்.

    நிறைவுரை

    தமிழ்க் கவிதைகளில் குன்று உவமமாக்கப்பட்டுள்ளது. குன்றிமணியும் உவமமாக்கப்பட்டுள்ளது. மானையும் மயிரையும் உவமமாக்குவார்கள். இல்வளர் முல்லையைப் பாடியவரே எருக்கம்பூவையும் பாடுவார். அவர்கள் கைவண்ணத்தால் அஃறிணைக்கும் வீடுபேறு உண்டு. அதனால்தான் அவர்கள் பானையையும் பாடி ஆனையையும் உவமமாகப் பாடியிருக்கிறார்கள். எதனை உவமமாகக் கொண்டாலும் அவற்றால் அவர்கள் செய்திருக்கும் கருத்து விளக்கம் காலத்துக்கும் நிலைக்கும்!.

    (தொடரும்…)

    Share
  • வானத்தில் எத்தனை வண்ணங்கள் – தொடர் நிகழ்ச்சி

    வானத்தில் எத்தனை வண்ணங்கள் – தொடர் நிகழ்ச்சி

    வணக்கம்.

    ‘வானத்தில் எத்தனை வண்ணங்கள்’ தொடர் நிகழ்ச்சி.

    செப்டம்பர் 27 மாலை:

    https://youtu.be/CJGXrbAXL5A

    வரலாம். அல்லது நேரலையாகவும் காணலாம்.

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • இந்தியா இருமுறை எரிசக்தி இணைப்பில் [Hybrid Energy Integrated System] மின்சக்தி பெருக்கத் திட்டங்கள்

    இந்தியா இருமுறை எரிசக்தி இணைப்பில் [Hybrid Energy Integrated System] மின்சக்தி பெருக்கத் திட்டங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    First Solar Company CEO, Mark Widmar recently met Prime Minister Shri Narendra Modi to discuss India’s renewable energy landscape, particularly solar energy potential, and the company’s target of 450 GW by the year 2030.

    2030 ஆண்டுக்குள் இந்தியா 450,000 MW மீள்புதிப்பு எரிசக்தியில் [சூரிய ஒளிக்கனல் & காற்றாடி மின்சாரம்] [Renewable Energy Solar & Wind Power] உற்பத்தி செய்யும் என்று பிரதம மந்திரி மோடி சமீபத்தில் அறிவிப்பு செய்துள்ளார். தொழிற்துறை ஆலைகள் தொடர்ந்து இயங்க அடிப்பளு மின்சார நிலையங்கள் [Base Load Power Stations], ஏறி இறங்கும் பளு மின்சாரத் தளங்கள் [Swing Load Power Systems] தேவைப்படுகின்றன.

    அடிப்பளுத் தேவைக்கு நிலக்கரி நிலையம், நீரழுத்த நிலையம் அல்லது அணுமின் நிலையம் பூர்த்தி செய்யும். கிரீன்ஹௌஸ் வாயுக்கள் எழுச்சி குறைக்க வேண்டுமானால் அணுமின் நிலையங்கள் தகுதி பெறும். இவ்விதம் இயங்கும் இருமுறை எரிசக்தி இணைப்பு ஏற்பாடுகள் பல [HYBRID ENERGY INTEGRATED SYSTEMS ] உலக நாடுகளில் பரவி வருகின்றன. கரிவாயு குறைப்பு நீடிக்க, கிரீன்ஹௌவுஸ் சேமிப்பு தவிர்க்க வேண்டுமானால் ஹைபிரிட் இணைப்பு எரிசக்தி ஏற்பாடுகளை இந்தியா மேற்கொள்வதை நாம் வரவேற்க வேண்டும்.

    இந்தியாவில் ஆறு 1000 MW அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    வெஸ்டிங்ஹவுஸ் AP-1000 MWe அணுமின்சக்தி நிலையம்

    https://www.reuters.com/article/us-india-usa-trump-westinghouse-exclusiv/exclusive-westinghouse-set-to-sign-pact-with-indian-firm-for-nuclear-reactors-during-trump-visit-idUSKBN20E1PM

    https://timesofindia.indiatimes.com/india/US-based-Westinghouse-to-build-6-nuclear-power-plants-in-India/articleshow/52644065.cms

    https://en.wikipedia.org/wiki/AP1000

    Obama, Modi Kick Start the Westinghouse Nuclear Deal

    +++++++++++++++++++

    Image result for westinghouse nuclear reactor ap1000

    Westinghouse PWR Reactor Vessel Components

    அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள் 

    2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய்  கோகலேயும் அமெரிக்க  அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது.  பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.  கடந்த பத்தாண்டு களாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது ?  அணு உலை இயக்கும் இந்தியாவா?  அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா?  [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக் கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.]  இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள் ஆந்திராவில் நிறுவகம் ஆகும். இந்தியா 2031 ஆண்டுக்குள் 22,480 மெகாவாட் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளது.  2019 ஆண்டு  அணுமின்சார உற்பத்தி அளவு ; 6780 மெகாவாட்.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது.  “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்த திட்டம்.  இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்]  முனைந்துள்ளது.  அமெரிக்கன் 1000 மெகாவாட் ஒரு நிலையம் நிறுவ, குறைந்தது 3 ஆண்டுகள் ஆகலாம். சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டன.  நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ்  நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்த திட்டம் உறுதி ஆகும்.  ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப் படவில்லை.

    Image result for indian electric power generation

    Share
  • குறளின் கதிர்களாய்…(369)

    குறளின் கதிர்களாய்…(369)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(369)

    உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா
    லுள்ளான் வெகுளி யெனின்.

    – திருக்குறள் – 309(வெகுளாமை)

    புதுக் கவிதையில்

    தவம் செய்வோன்
    தன் உள்ளதால்கூடக்
    கணப்பொழுதும்
    சினத்தை
    நினைக்காமல் இருப்பானாயின்,
    நினைத்த
    நற்பயன்களையெல்லாம் அவன்
    ஒருசேரக் கிடைக்கப்பெறுவான்…!

    குறும்பாவில்

    சினத்தை மனத்தாலும் நினைக்காதிருந்தால்
    தவம்செய்வோன் தான்நினைத்த நற்பயன்களை யெல்லாம்
    ஒன்றாய்க் கிடைக்கப் பெற்றிடுவான்…!

    மரபுக் கவிதையில்

    கொடிய குணமாம் கோபமதைக்
    கொள்ளா ததையே மனத்தாலும்
    நொடியும் நினைக்கா திருந்திட்டால்,
    நோற்கும் தவத்தில் உள்ளவனும்
    பிடிக்க நினைத்த நற்பயன்கள்
    பேற்றை யெல்லாம் பெற்றிடவே
    முடியும் ஒன்றாய் சேர்ந்தேதான்
    முற்று முண்மை யிதுதானே…!

    லிமரைக்கூ

    மனத்தாலும் நினையாதே சினத்தை,
    மாதவத்தோன் பெறுவான் ஒன்றாய் நற்பயன்கள்
    மனத்தில் நினைத்த இனத்தை…!

    கிராமிய பாணியில்

    கொள்ளாத கொள்ளாத
    கோவம் கொள்ளாத,
    கொடிய கொணமாம்
    கோவம் கொள்ளாத..

    மனசால கூடக்
    கோவத்த
    நெனைக்காம இருந்தா,
    தவசி கூடத்
    தன் மனசுல நெனைக்கிற
    நல்ல பலனயெல்லாம்
    ஒண்ணாப் பெறுவானே..

    அதால
    கொள்ளாத கொள்ளாத
    கோவம் கொள்ளாத,
    கொடிய கொணமாம்
    கோவம் கொள்ளாத…!

    Share
  • பாரதியைக் கொண்டாடுவோம்

    பாரதியைக் கொண்டாடுவோம்

    வணக்கம்.

    இன்றைக்கு, சிங்கப்பூர் லிஷா அமைப்புக்காக, பாரதியைக் கொண்டாடுவோம் என்னும் தலைப்பில் பேசுகிறேன்.

    இந்திய நேரம்: மாலை 3.30 மணி
    சிங்கப்பூர் நேரம்: மாலை 6.00 மணி

    Zoom:

    Meeting ID: 919 7404 0684
    Passcode: 129103

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • பழகத் தெரிய வேணும் – 85

    பழகத் தெரிய வேணும் – 85

    நிர்மலா ராகவன்

    எவரும் தாழ்ந்தவரில்லை

    தன்னைவிட ஒரு படி மேலாக இருக்கும் பிறரைக் கண்டால், சிறுமை உணர்ச்சிக்கு ஆளாகாதவர்கள் வெகு சிலரே. அதைத் தணித்துக்கொள்ள, தன்னைவிடச் சிறந்த ஒருவருடன் எப்படியோ இணைந்தால், `நம் மதிப்பும் கூடாதா!’ என்று அவர்கள் எண்ணம் போகும்.

    கதை

    கல்வி, பொருளாதாரம், அழகு ஆகிய எல்லாவிதங்களிலும் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைத் தேடி மணந்தான் சம்பத் — பிறர் பொறாமை அடையவேண்டும் என்ற நப்பாசையுடன்.

    அவன் விரும்பியதுபோலவே, அவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. ஆனால், அதை மறைக்க, `ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான்!’ என்று அவனைக் கேலி செய்வார்கள் என்பதைத்தான் சம்பத் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

    அந்த ஏமாற்றம் மனைவிமேல் கோபமாக மாறியது. அவளையும், அவள் குடும்பத்தினரையும் மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான்.

    தம்பதியர் இருவருக்குமே நிம்மதி பறிபோயிற்று.

    குடும்பத்தில் உயர்வு தாழ்வு

    ஒரு குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளும் ஒரே தன்மை உடையவர்களாக இருப்பார்களா?

    இது புரியாது, பல பெற்றோர் பழிப்பார்கள்: `உன் தங்கையை, தம்பியைப் பார்! எவ்வளவு சுறுசுறுப்பாக, எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்! நீயும் இருக்கிறாயே!’

    மூத்த குழந்தையின் பொறுமையை `அசமஞ்சம்!’ என்று, எடுத்துக்கொள்வார்கள். எதையும் பிழையின்றி பொறுப்பாகச் செய்யும் குணம், `இவன் எல்லாவற்றிலும் அதிநிதானம்!’ என்ற கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது.

    சிறு வயதில், பெற்றோரும் பிறரும் தன்னைப்பற்றி என்ன அபிப்ராயம் கொண்டு நடத்துகிறார்களோ, அதை அப்படியே குழந்தைகள் நம்பிவிடுவார்களே!

    அதனால், `நான் என் பிறரைப்போல் புத்திசாலி இல்லை!’ என்று சிந்தனைபோக, தாழ்மை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.

    உடல் ரீதியாகவோ, அறிவாலோ, தம்மைத் தாழ்ந்தவர்களாக உணர்கிறவர்கள் பிறருடன் பழகத் தயங்கி, ஒதுங்குவதும் உண்டு.

    கதை

    என் மாணவன் ஒருவன் வெள்ளைக்காரச் சாயலாக இருப்பான். அவனோ மலாய் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

    ஆங்கிலேயர்களின் வசம் அன்றைய மலாய் நாடு இருந்தபோது, அவன் வம்சத்தில் யாரோ ஒரு பெண் வெள்ளைக்காரருடன் தகாத உறவு பூண்டிருக்கவேண்டும். (அவர்கள் உள்நாட்டவர்களை மணந்ததில்லை).

    பல தலைமுறைகளுக்குப்பின், இவனிடம் அந்த ஜீன்ஸ் தன் வேலையைக் காட்டிவிட்டதுதான் பரிதாபம். அவன் வயதொத்த மாணவர்கள் அவனை ஏற்கவில்லை. ஏதோ கேலிப்பொருளைப்போல் அவனை நடத்தினார்கள். அவர்களை எதிர்க்கும் தைரியமின்றி, பிறரிடமிருந்து ஒதுங்கியே இருந்தான். மூளையும் மந்தமாகிவிட்டதுபோல் இருந்தது.

    என் வயதொத்த சுபீராவின் கதையும் கிட்டத்தட்ட அவனுடையதுபோல்தான்.

    ஒரு வித்தியாசம்: அவளுடைய தந்தை ஜப்பான்காரர். (ஆங்கிலேயர்களுக்குப்பின், ஜப்பானியர் சில காலம் மலாயாவை ஆண்டார்கள்).

    சுபீராவின் தந்தை பெயர் Putih (மலாயில், வெள்ளை) என்று அடையாளக்கார்டில் குறிப்பிட்டிருந்ததால், யாரும் எதையும் சந்தேகிக்கவில்லை. அவளே சொல்லித்தான் எனக்கு மட்டும் தெரியும்.

    நான் சற்று வியப்புடன், ஒரு சரித்திர ஆசிரியையைக் கேட்டேன்: “ஜப்பானியர் மலாய்ப்பெண்களை மணந்தார்களா?”

    “இல்லை. அப்பெண்களை வைத்திருந்தார்கள்!”

    எனக்கு ஏதோ புரிந்ததுபோலிருந்தது.

    எங்கள் பள்ளிக்கு வந்த புதிதில், அவள் எல்லாருக்கும் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவாள்.

    (ஏதோ உள்ளர்த்தத்துடன்தான் இதைச் செய்கிறாள் என்று எனக்குத் தோன்ற, நான் வாங்க மறுத்துவிடுவேன்).

    விரைவிலேயே, எல்லாரும் அவளை ஒரேயடியாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவளுடைய அதிகாரம் வலுத்தது. அவள் சொல்வதை யாரேனும் ஏற்காவிட்டால், சண்டை பிடித்து, அவர்களிடம் பேசவேமாட்டாள்.

    வட்டார ரீதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாங்கள் இருவரும் எங்கள் பள்ளியின் சார்பில் அனுப்பப்பட்டிருந்தோம். அங்கு அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாது இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

    தான் ஏதாவது சொல்லப்போய், பிறர் மாற்றுக்கருத்து கூறினால், சண்டை போடத் தோன்றுமே என்று தன்னையே அடக்கிக்கொண்டிருப்பாள். ஒரு வேளை, தாழ்மை உணர்ச்சியாலோ, என்னவோ!

    சமூகத்தால் அவர்களை ஏற்க முடிகிறதோ, இல்லையோ, முறையாகப் பிறக்காத குழந்தைகளால் தங்களைத் தாமே  ஏற்க முடிவதில்லை.

    கதை

    `பல குழந்தைகளைப் பெற்ற ஒருவரின் ஆசைநாயகியாகச் சில காலம் இருந்தவள் பெற்ற பிள்ளை நான்!’ என்ற உணர்வு கிட்டுவைத் தகித்தது.

    அவன் பிறக்குமுன்பே தந்தை இறந்துவிட்டபின், அவருடைய மனைவி அன்புடன் அவனையும் அவன் தாயையும் ஏற்றாள். ஆனால், `இவர்தான் என் தந்தை!’ என்று அவன் பெருமையுடன் எங்கும் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

    தன்னையும் அவர்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக ஏற்றவர்களைப் பழிக்கு ஆளாகச் செய்யவேண்டும் என்ற வன்மமாக மாறியது கிட்டுவின் ஆத்திரம்.

    இவனைத் `தம்பி’ என்று அருமையாக ஏற்றவனுடைய மனைவியை மயக்கி, தன்னுடன் இணைந்து வாழும்படி செய்தான். அப்படியும், அவனைப் பெருந்தன்மையுடன் நடத்தினார்கள். ஆனால், சமூகத்தில் அவனுடைய மதிப்பு அறவே போயிற்று.

    உயர்வும் தாழ்வும்

    நாம் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் பிறரைவிடச் சற்றுத் தாழ்ந்த நிலையில்தான் இருப்போம்.

    தன் அறிவுகூர்மையை எண்ணிப் பெருமைப்படுகிறவன்  ஒரு சிறு பிழை புரிந்துவிட்டாலும், ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டாற்போல் குறுகிவிடுவான்.

    ஒரு போட்டியில் வெற்றி பெற்றவர்கள், `நான் எல்லாரையும்விட மேலானவன், திறமைசாலி!’ என்ற மிதப்புடன், தலையை நிமிர்த்தி நடப்பதைக் கண்டிருப்பீர்கள்.

    `இப்படிப்பட்டவர்களுக்குத் தோல்வி என்பதே கிடையாதா!’ என்று பிறர் அதிசயிக்க வேண்டுமாம்!

    ஒரு சிறு தோல்வி வந்தாலும், இவர்கள் துடித்துப்போய்விடுவார்கள். வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல என்பதை உணராதவர்கள் இவர்கள்.

    பிறருடன் எப்போதும் ஒப்பிட்டுக்கொள்ளும் குணம் நிலைத்துவிடுவதால், தன்னைவிட அழகானவர், திறமையானவர், பணக்காரர் என்று தோன்றினால், அவர்களைக் கண்டு வயிற்றெரிச்சல் எழுகிறது பெரும்பாலோருக்கு.

    தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவரைப் பார்த்தோ, கருணை எழுவதில்லை. அவர்களைக் கேலி செய்யத் தோன்றுகிறது. அப்போதுதானே, தான் மேலானவன் என்று காட்டிக்கொள்ளலாம்! அவர்களிடம் தன் திறமைகளை, தான் சாதித்ததைப் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள்.

    கதை

    பள்ளி இறுதிப் பரீட்சையில் தான் தமிழ்ப்பாடத்தில் எவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்றோம் என்று, ஆங்கிலத்தில், நீண்ட உரை நடத்தினாள் ஒரு மாது – அவளைப் பார்த்து நானும் பிரமிக்க வேண்டும் என்று எண்ணியவள்போல்.

    ஒருவழியாக ஓய்ந்ததும், “உங்களுக்குத் தமிழில் எழுதத் தெரியுமா?” என்று சவால் விடுவதுபோல் என்னிடம் கேட்டாள்.

    வலுவில் வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன், “நான் ஒரு தமிழ் எழுத்தாளர்,” என்று பதிலளித்தேன். அவள் அடைந்த அதிர்ச்சியைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

    தாம் பின்பற்றும் மதம்தான் உயர்வானது என்று பலர் கருதி, அதைப் பற்றியே பேசி, மறைமுகமாகப் பிறரை மட்டம் தட்டுவார்கள். தம்மைப் பற்றிய சந்தேகம் அவர்களுக்கே எழுந்ததாலோ?

    பணவசதி குறைந்தவர்கள் பணக்காரர்களைப் பார்த்துப் பொருமுவார்கள் என்றால், பணக்காரர்களாக இருப்பவர்கள் குடும்ப வாழ்விலோ, ஆரோக்கியத்திலோ நிறைவு இன்றி, தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.

    முன்காலத்தில், சில அரசர்கள் தங்கத்தால் ஆன சிம்மாசனம் செய்துகொண்டார்கள். (மைசூரில் இன்றும் காணலாம்).

    கழிப்பறையில் உபயோகப்படுத்தும் சாதனத்தைத் தங்கத்தால் செய்துகொண்டார்கள் வேறு சிலர். அதில் ரத்தினக்கற்கள் பதித்துக்கொண்டவர்களும் உண்டு!

    வருவாயை எப்படிப் பிறருக்கு உபயோகமான வகைகளில் செலவிடலாம் என்ற அக்கறை இல்லாததாலா?

    இல்லை, தம் குடிமக்களைவிடத் தாம் உயர்வானவர்கள் என்று காட்டிக்கொள்ளவோ?

    சில வம்சங்களின் அழிவுக்கு இத்தகையவர்கள்தாம் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

    `நான் மேலானவன் (அல்லது தாழ்ந்தவன்)’ என்ற எண்ணப்போக்கு இல்லாது, இருக்கிறபடியே தம்மை ஏற்பவர்களிடம்தான் நிம்மதி நிலைத்திருக்கும்.

    Share