திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு

மானக்கஞ்சாறர்பணிவுடையார்; பாம்புடன், மதியையும் அணிந்த சடையை உடைய சிவபெருமானுக்குத் தொண்டாற்றும் பேறுடையவராய், அப்பெருமானுக்கே  ஏவல் செய்யும் செயலை  ஏற்றவர். பெருகி வரும்  செல்வம் முழுவதையும் நதியணிந்த சடையாரின் அடியாராம் செல்வ முடையாரின் நேரில் சொல்லுமுன், குறிப்பறிந்து கொடுப்பவர். அவருக்கு மகப்பேறின்மையால் திருவடிகளை யன்றி வேறு ஏதும் நினையாமல் மகவு பெற எண்ணி மனத்தால் வணங்கினார்.

அவர் மனைவியார் வினைப்பயன் நீக்க உதவும் பெண்மகவை ஈன்றார். அந்த மகிழ்ச்சியால்  மங்கல இசை முழங்கி ஊரே மகிழ்ந்தது. சிவனடியார்க்  கெல்லாம்  அளவில்லாத செல்வத்தை வாரி வழங்கி அம்மகவை வளர்த்தார். அக்குழந்தை வண்டுகள் மொய்க்கும் சுருண்ட கூந்தலுடன், காதில் குழை யுடன், மேகலை அணிந்த சிற்றாடையுடன் கிண்கிணி அசையும் பாதங்களுடன், கைகளால் அரவணைத்து மகிழும் தாதியர் நடுவே வளர்ந்தது. அமுதம் போன்ற அம்மகள், இல்ல முகப்பில் மணல் வீடு அமைத்து, கிண்கிணி ஆட ஆடற்கலை பயின்று. மார்பு எழும் பருவத்தை அடைந்தார். அழகு வெளிப்பட, முத்துப் பற்களுடன், தளிர் போன்ற கரங்களுடன்  இடையை மார்பு வருத்தும் மணப்பருவம் அடைந்தார். அவரை,

பாடல்

திருமகட்கு மேல்விளங்கும்  செம்மணியின் தீபமெனும்
ஒருமகளை மண்ணுலகில்  ஓங்குகுல மரபினராய்க்
கருமிடற்று மறையவனார் தமராய கழல் ஏயர்
பெருமகற்கு  மகட்பேச வந்தணைந்தார் பெருமுதியோர்.

பொருள்

திருமகளுக்கு மேலாக விளங்குகின்ற செம்மணியின் விளக்குப் போன்ற ஒப்பற்ற அந்தப் பெண்மணியாரை, இவ்வுலகில் ஓங்கும் வேளாண் குலத்தில் ஒத்த மரபில் வந்தவராய்த், திருநீல கண்டத்தையுடைய வேதியராம் சிவபெருமானுக்கு அன்பராகிய வீரக்கழல் அணிந்த ஏயர்கோன் கலிக்காமனாருக்கு மணம் பேசுவதற்குப் பெருமுதியோர்கள் வந்து சேர்ந்தனர்.

விளக்கம்

திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம்  என்ற தொடர்,  உருவாலும் திருவாலும் ஒளியாலும் அருளாலும் இலக்குமியினும் இவ்வம்மையார் மிக்கிருப்பர்; திருமகள் தரும் செல்வம் போல அழிந்துபடாது இவ்வம்மை காரணமாக வரும் செல்வம் இருகுடிக்கும் நித்தியமாகிய அருட்செல்வமாய் விளங்கிற்று; திருமகள் சிவனடியார் பணி கேட்டுத்திரியா நிற்க, இவ்வம்மையார் அருணிறைந்த அடியார்க்குத் துணைவியாராயினர்; மேலும் இவ்வம்மையாரது கற்பின் திறம் மழைக்குதவும் தன்மையுடையது என்றிவை முதலிய காரணங்களால் திருமகட்கு மேல் விளங்கும் என்றார்.

செம்மணியின் தீபம் என்ற தொடர்,  இயற்கையாலும் தீட்டுதல் முதலிய செயற்கையாலும் மங்காத ஒளியுடையது என்பதைக்க குறித்தது..

தீபம் என்ற சொல்லால்  அன்பின் பெருமையினையும் அருளின் பெருமையினையும் எடுத்துக் காட்டாக உலகில் விளக்கும் பொருளென்பார் இவ்வம்மையாரை விளக்கு என்றுவமித்தார்.

ஒரு மகள் நாயனாரின் ஒப்பற்ற மகள்;  அவளை மணமகளாகக் கொள்வது பற்றிப் பேச, குலத்தாலும் மரபாலும்ஓங்கி ஒத்து உள்ளாராய். மரபு – பெரும்பிரிவு. குலம் – அதனுட் சிறுபிரிவு. குடி – கோத்திரம் – என்பர். நாயனாரை அரசர் சேனாதிபதியாம் குடி என்றதுபார்க்க. சைவ சமய பரமாசாரியராலும் பாடப்பெற்ற பெருமை பற்றியும்,  ஓங்கு குலம்என்றார்.

கருமிடற்று மறையவனார் தமர்  என்பது, சுற்றத்தாரைக் குறித்துப் பெரும்பாலும் வழங்கும் இச்சொல் இங்கு அன்புபூண்ட அடிமைத் திறத்தின் தொடர்பு என்ற அதன் உண்மைப் பொருள் குறித்தது.

தம்மவர் எனற்பாலது தமர் என வழங்குவதாம். தமர் –  இங்கு, வழிவழி அடிமைச்சார்பு குறித்தது. தமராதலின் நம்பிகள் தூது விட்டமைபற்றிச் சினந்தனர் என்பதும் குறிப்பு.

மரபினராய் கருமிடற்று மறையவரின் தமராய் – ஒத்த குடியும், மரபும், இவற்றிற்குமேலாய்ச் சிவனடிமைத்திறமுடைமையும் என்றித்திறங்களை மகட்பேச வந்த பெருமுதியோர்.

கழல் ஏயர் பெருமகன் – கழல் – வீரக்கழல். அரசர் சேனாதிபதிக் குடியின் அடையாளம் குறித்தது. ஏயர் பெருமகன் – ஏயர்கோன்,  என்பது தலைவன் – என்ற பொருளில் வந்தது.

ஏயர் – இவரது குடிப்பெயராம். கேகயம் – ஒரு நாடு; கேகயர் என்பது ஏயர் என்று மருவி வழங்குவதாயிற்றென்பர் ஆராய்ச்சியாளர். இது குடிப் பெயர் என்பது , “ஏயர் கோக்குடிதான், மன்னி நீடிய வளவர் சேனாபதிக்குடியாம்” என்பதானறிக.பெருமுதியோர் – வயது நிறைந்த அனுபவத்தாலும்,அறிவாலும் முதிர்ந்தவர். இவர்களே இருதிறத்தார்க்கும் பொருந்துவனவற்றைத் தக்கபடி எடுத்து உரைத்து மணம் பொருந்த வைக்க வல்லவர்களாதலின் இன்னோரை அனுப்பி மணம் பேசுதல் முன்னாள் வழக்கு.  இவர்கள் வயதால் மட்டுமன்றி அறிவாலும் முதிர்ந்தோர் என்பதனை வந்த முதறிவோரை என வரும்பாட்டில்  கூறுவது காண்க.

இப்பாடலால் மணப்பருவம் அடைந்த மகளுக்குத்  திருமணம் பேச ஏயர்குடியின்  தலைவராகிய  ஏயர்கோன் கலிக்காம நாயனார் உறவின் பெரியோர் வந்தனர் என்பது புலனாகும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *