Author: தேமொழி

  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 4, 2016

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு மகிஷன் ஞானசேகரன் அவர்கள்

    Capture

     

    நியூ ஜெர்சியில் வசித்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நிர்மலா மற்றும் செல்லையா ஞானசேகரன் இணையரின் மகன் திரு. மகிஷன் ஞானசேகரன் (Mahishan Gnanaseharan) அவரது தொடர் சமுகநல அக்கறை கொண்ட செயல்களுக்காக வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுகிறார். இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த திரு. மகிஷன் ஞானசேகரன் அவர்கள் அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியின் உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிறந்த இரு மாணவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு, அம்மாநிலத்தின் பிரதிநிதியாக “வாஷிங்டன் வாரம்” என மார்ச் 5 – 12, 2016 வரை வாஷிங்டன் டி சி யில் நடக்கவிருக்கும் பயிற்சியில் பங்கு பெற இருக்கிறார்.

    Senate Youth1

    ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், மாநிலத்திற்கு இருவரென 1)கல்வி, 2) தலைமைப்பண்பு, 3) சமூகப்பணி ஆகிய மூன்றிலுமே மிகச் சிறந்து விளங்கும் உயர்நிலைப்பள்ளி மாணவர் இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறாக அமெரிக்க அளவில் தேர்வு செய்யப்படும் 104 மாணவர்களுக்கும் மார்ச் மாதம் – வாஷிங்டன் வாரத்தில் அமெரிக்க பாராளுமன்றம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நேரடியாகப் பார்க்கவும், சமூகப்பணியில் பங்கேற்க செயல்முறைப் பயிற்சி பெறவும் வாய்ப்பு அளிக்கப்படும். பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகப்பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பெறுவது மிகவும் பெருமைக்குரிய சாதனையாகும். அமெரிக்க நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்ற அளவில் இந்த இளைஞர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.

    Senate Youth2

    பயிற்சி காலத்தில், தேர்வு செய்யப்பட்ட இளையதலைமுறையினர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பினையும், அரசு இயங்கும் விதத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பினையும் பெறுவார்கள். இவர்களுக்குக் கல்லூரி படிப்பிற்காக $5,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த ஆண்டு மார்ச் 5 – 12, 2016 வாஷிங்டன் டி சி யில் நடக்கவிருக்கும் 54 ஆவது “அமெரிக்க சட்டமன்றத்தின் இளைஞரணி பயிற்சிப் பாசறை” (United States Senate Youth Program – ussenateyouth.org) பயிற்சியாளர்களில் ஒருவராகத் திரு. மகிஷன் ஞானசேகரன் பங்கேற்க உள்ளார். ஜனவரி முதல் வாரம் (இந்த வாரம்) இப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் முறையாகப் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் ‘முதல் தமிழ் மாணவர்’ இவர் என்று ‘கனடா மிர்ரர்’ (www.canadamirror.com) குறிப்பிடுகிறது.

    இந்தத் தகுதியை மகிஷன் அடைவதற்குக் காரணம்; நடுநிலைப்பள்ளி நாட்களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்டிய சமூக அக்கறை கொண்ட பல செயல்களும் பணிகளுமாகும். இவையாவும் ஒவ்வொருபடியாக இவரை உயர்த்தி வந்துள்ளது.

    பத்து வயதில் வானியல் வல்லுநராகப் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட மகிஷனின் நோக்கம் பிற்காலத்தில் ஒரு கோளையோ, விண்கற்களையோ கண்டுபிடிக்க வேண்டும் என்று துவங்கியது. நூலகம் நடத்திய போட்டியில் பங்கு பெற்று நூலகத்தின் 1,000 புத்தகங்களைப் படித்தமைக்காக நெவார்க் (Newark)நகர ஆட்சியாளரிடம் இருந்து பரிசு, பிறகு சிறந்த கவிதை ஒப்பித்தற்காகத் தங்கப்பதக்கம், மூன்று “உச்சரிப்புத் தேனீ” (ஸ்பெல்லிங் பீ) போட்டிகளில் பரிசுகள் என்று கல்விக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு பல போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார்.

    Capture7

    பொருளாதாரப் பற்றாக்குறையால் நிதியின்றி தனக்கு உதவிய நகர நூலகம் மூடப்பட்ட பொழுது அது ‘மனிதக்குலத்திற்கு எதிரான குற்றம்’ என மிகவும் இளவயதிலேயே தனது கருத்தைத் தயக்கமின்றிப் பதிவு செய்தவர் மகிஷன். மக்களாட்சியைச் சிறப்பாக செயல்படுத்துவதைப் பற்றிய கட்டுரைப்போட்டியில் வன்முறையைக் கட்டுக்குள் வைப்பது பற்றி இவர் எழுதிய கட்டுரை தேசிய அளவில் சிறந்த கட்டுரைக்கானப் பரிசைப் பெறக் காரணமாக அமைந்தது.

    Capture5

    தனது ஆரம்பப் பள்ளி நாட்களில் (நான்காம் வகுப்பு) தனது நண்பனான நல்ல மாணவன் ஒருவர் அநீதியாகத் தாக்கப்பட நேர்ந்ததைப் பார்த்த இவரது அனுபவம் வன்முறைக்கு எதிரான சமூகப்பணியில் இவரை ஆர்வம் கொள்ளச் செய்துள்ளது. நெவார்க் நகரத்தில் நடந்த அமைதி கருத்தரங்கை (Newark Peace Education Summit – 2011) தலாய்லாமா அவர்கள் தலைமையேற்று அதில் அவர் உரையாற்றிய பொழுது, அதே மேடையில் வன்முறைக்கு எதிராக ஏழாம் வகுப்பு படித்த 13 வயது மகிஷனும், நெவார்க் நகரத்தின் பிரதிநிதியாக, இளைஞர்களிடம் உள்ள வன்முறைப்போக்கை கண்டித்து அமைதிக்காக உரையாற்றினார்.

    Capture6

    உயர்நிலைப்பள்ளியின் இரண்டாமாண்டில் படிக்கும் பொழுது ‘நியூ ஜெர்சி மாநிலத்தின் வொய்.எம்.சி.ஏ இளைஞர் – அரசாட்சி அமைப்பில்’ (New Jersey YMCA – Youth and Government program) துணை ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டு சமூகப்பணிகளில் பங்குபெற்று வந்தார். அதில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக மாநில அளவின் சிறந்த தலைவர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுப் பாராட்டப்பட்டார். மீண்டும் பதினோராம் வகுப்பு மாணவராக இருக்கும் பொழுது, சென்ற ஏப்ரலில் (ஏப்ரல் – 2015) அதே வொய்.எம்.சி.ஏ அமைப்பின் தேர்தலில் ஆறு மாணவர்களுடன் போட்டியிட்டு அந்த இளைஞர் அமைப்பின் ஆளுநராகத் ( Youth Governor) தேர்வு செய்யப்பட்டு, தலைமைப் பதவியில் வழிநடத்தி வருகிறார்.

               Capture2Capture3

    சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டு, தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியையும் வளர்த்துக் கொண்டுள்ள மகிஷன் உலகப்புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் அடுத்த ஆண்டு தனது பட்டப்படிப்பைத் தொடரவிருக்கிறார். திரு. மகிஷன் ஞானசேகரன் அவர்களின் குறிக்கோள்கள் வெற்றியடைய  வல்லமை இதழின் சார்பாக பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    ________________________________________________________

    வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள:
    Mahishan Gnanaseharan
    https://www.facebook.com/mahishan.g

    http://magnaed.com/

    ________________________________________________________

    தகவல் தந்துதவிய தளங்கள்:
    யாழ் அளவெட்டி மகீசன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்கவுள்ளார்
    http://www.canadamirror.com/canada/54859.html

    YMCA New Jersey Youth & Government Program
    https://www.facebook.com/YMCA.NJYAG/?fref=nf

    Senate Youth (ussenateyouth.org)

    #USSYP2016 delegates

    GNANASEHARAN SELECTED AS ONE OF TWO DELEGATES FROM N.J. FOR THE YOUTH SENATE PROGRAM
    http://www.sbp.org/GnanaseharanYouthSenate

    GNANASEHARAN CLIMBS THE LADDER TO THE TOP OF YOUTH & GOVERNMENT
    http://www.sbp.org/RelId/629227/ISvars/default/Gnanaseharan_YAG_’15.htm

    US Capitol Historical Society Awards Mahishan Gnanaseharan Second Place In 2013 ‘Making Democracy Work’ Student-Essay Contest
    http://www.prnewswire.com/news-releases/us-capitol-historical-society-awards-mahishan-gnanaseharan-second-place-in-2013-making-democracy-work-student-essay-contest-257996111.html

    Di Ionno: A lesson on nonviolence, through the voice of the young
    http://blog.nj.com/njv_mark_diionno/2011/05/di_ionno_a_lesson_on_nonviolen.html

    Newark community is up in arms about local library closures due to city budget cuts
    http://blog.nj.com/njv_barry_carter/2010/07/newark_residents_are_distraugh.html

    ‘Star reader,’ 10, among honorees at Newark Public Library gala
    http://www.nj.com/helpinghands/jamieduffy/index.ssf/2008/11/booked_for_the_evening_a_gala.html

    ________________________________________________________

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: பெரிது அகழின் பாம்பு காண்பாரும் உடைத்து

     

    உரிமைதனிற் றம்மோ டுழந்தமை கண்டு
    பிரிவின்றிப் போற்றப் படுவார் – திரிவின்றித்
    தாம்பெற் றதனா லுவவார் பெரிதகழிற்
    பாம்புகாண் பாரு முடைத்து.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு
    பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்
    தாம் பெற்றதனால் உவவார்; பெரிது அகழின்,
    பாம்பு காண்பாரும் உடைத்து.

    பொருள் விளக்கம்:
    உரிமையோடு (நண்பர் ஒருவர் தனது துன்பத்திலும்) தன்னோடு வருந்தியதைப் பார்த்து, வேறுபாடு காட்டாது அவரால் பாதுகாக்கப்பட்டவர், நண்பரால் கிடைத்த உதவியை ஏற்று மனவருத்தமின்றி அதனால் நிறைவடைவார். (அவ்வாறு செய்யாமல், அதிக உதவி எதிர்பார்த்தால்) பெரிதும் ஆழமாகத் தோண்டும் பொழுது பாம்பையும் காண நேரலாம் (பேராசையால் பெரும் இழப்பை அடைவது போல, தொல்லை தருவதைத் தாளாது நண்பரும் சீற்றம் அடையக்கூடும்)

    பழமொழி சொல்லும் பாடம்: கிடைத்த உதவியில் மனநிறைவு கொள்வது சிறந்த நட்பின் பண்பாகும். பேராசை கொண்டு அதிக உதவி எதிர்பார்த்தால் பெரும் இழப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனையொத்த வழக்குகளாக, ‘புதையல் விரும்பித் தோண்டும் பொழுது பூதம் புறப்பட்டது’ என்றும், ‘எலி பிடிக்கும் எண்ணத்தில் புற்றினைத் தோண்ட பாம்பு கிளம்பியது’ என்றும் கூறும் வழக்கங்களும் உள்ளன. இக்கருத்தை விளக்கும் குறள்,

    பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
    கெழுதகைமை கேடு தரும். (குறள்: 700)

    பலநாள் பழகிய நட்பு என்று உரிமை எடுத்துக் கொண்டு, முறையற்ற செயலைச் செய்தால், அது அந்த நட்பிற்கு கேடு விளைவிக்கும் என்று கூறுகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர்

     

     

    உற்றா லிறைவற் குடம்பு கொடுக்கிற்பான்
    மற்றவற் கொன்னாரோ டொன்றுமோ? – தெற்ற
    முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா
    இரண்டே றொருதுறையுள் நீர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
    மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற
    முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
    இரண்டு ஏறு ஒரு துறையில் நீர்.

    பொருள் விளக்கம்:
    ஒரு துன்பம் தனது தலைவருக்கு நேரிடுமானால் தனது உடலையே கொடுக்கும் வீரர் ஒருவர், மாற்றானாகிய எதிரியுடன் சென்று சேர்வாரா? (அவ்வாறு செய்ய விரும்ப மாட்டார்). தெளிவாக தம்முள் முரண்பாடுகள் கொண்ட வலிமையுள்ளவர் ஒன்றுபடுவரோ? மாறுபாடுகள் கொண்ட எருதுகள் இரண்டு இணைந்து ஒரே துறையில் நீர் உண்ணுவதில்லை (அவ்வாறே, தனது மன்னனிடம் மாறாத அன்பு கொண்ட வீரரும் பகைவனுடன் சேர விரும்ப மாட்டார்)

    பழமொழி சொல்லும் பாடம்: அரசைக் காக்கும் பொறுப்புள்ள வீரர் பகைவருடன் சென்று சேர்ந்து தனது நாட்டிற்கு இரண்டகம் செய்ய விரும்ப மாட்டார். வீரரின் இத்தகைய பண்பினை, இத்தகைய வீரர்கள் கொண்ட படையினை விவரிக்கும் வள்ளுவர்,

    அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை. (குறள்: 764)

    போரில் அழிவின்றியும், பகைவரின் வஞ்சத்திற்கு இறையாகாமலும்(அறைபோகாதாகி), தலைமுறை தலைமுறையாக அச்சம் தவிர்த்து வீரத்துடன் போரிடும் படையையே சிறந்த படை என்கிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 28, 2015

    இவ்வார வல்லமையாளர்கள் 

    தனய் டாண்டன் மற்றும் தீபிகா போடபட்டி 

    Deepika and Tanay3

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர்களாக சிறப்பிக்கப் படுபவர்கள் இளம் தொழில் முனைவோர்களான, ‘அதிலாஸ்’ (Athelashttp://getathelas.com/) நிறுவனத்தின் நிறுவனர்கள் திருமிகு ‘தனய் டாண்டன்’ (Tanay Tandon ) மற்றும் ‘தீபிகா போடபட்டி’ (Deepika Bodapati) ஆகியோர். கலிஃபோர்னியா மாநிலத்தின் இந்த இரு இளம் தொழிலதிபர்களும் கல்லூரி மாணவர்கள், இருபது வயதைத் தாண்டாதவர்கள், இந்த ஆண்டு பலகலைக்கழகத்தில் முதலாண்டில் அடியெடுத்து வைத்துள்ளவர்கள். மாணவர்கள் இருவரும் அறிவியல் துறையில் ஆர்வம் மிக்கவர்கள். உயர்நிலைப் பள்ளி நாட்களிலேயே இருவரும் பல அறிவியல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பெற்றுள்ளனர். தனய் டாண்டன் சிலிக்கான் பள்ளத்தாக்குப் புகழ் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University’) கணிதத்தில் பட்டப்படிப்பையும், தீபிகா போடபட்டி தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of Southern California) பயோமெடிக்கல் என்ஜினியரிங்கில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்கள் துவக்கியுள்ள அதிலாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள எளியமுறை இரத்தப் பரிசோதனைக் கருவியை வணிக அளவில் சந்தைப்படுத்தும் திட்டத்தை, இருவரும் தங்களது பல்கலைக்கழகங்கள் நடத்தும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் போட்டியில் சமர்ப்பித்து பரிசுத் தொகையை வென்று, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நிதியையும் பெற்றுள்ளார்கள். இவர்களது இந்தச் சாதனைக்காக தனய், தீபிகா ஆகியோரை வல்லமை விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் நிறுவனர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள்.

    கணினி நிரல்கள் (Computer Programming) உருவாக்குவதில் ஆர்வமிக்க தனய் தொடங்கும் இரண்டாவது தொழில் நிறுவனம் இது. இவருடைய மற்றொரு நிறுவனம் “கிளிப்ட்” (http://clipped.me/). ஆப்பிள் ஐஃபோன் அலைபேசியின் செயலியான ‘கிளிப்ட்’, செய்திகளைச் சுருக்கி முக்கியமான கருத்துகளைப் பட்டியலிட்டுப் படிக்க உதவும் ஒரு மென்பொருள். இந்த இலவச செயலியை ஆப்பிள் (https://itunes.apple.com/us/app/clipped/id583616193) தளத்தில் இருந்து தரவிறக்கிப் பயன்பெறலாம்.

    பள்ளி நாட்களில் இருந்து தனய் மருத்துவப் பரிசோனையில் உதவக்கூடிய இரத்தப் பரிசோதனைக் கருவியை வடிவமைத்து வருகிறார். இதற்காகப் புகழ் பெற்ற அறிவியல் போட்டிகளான கூகுள் நடத்தும் அறிவியில் போட்டியிலும் (Google Science Fair), இன்டெல் அறிவியல் போட்டியிலும் (Intel Science Talent Search) பரிசுகள் பெற்றுள்ளார். கூகுள் போட்டியில் வெற்றி பெற்றதனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

    obamamefinal

    இக்காலத்தில் அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்ட திறன்பேசியில் (ஸ்மார்ட்ஃபோன்), மலிவான விலையில் தயாரிக்கக் கூடிய நுண்ணோக்கி வில்லையை (லென்ஸ்) இணைத்துப் பயன்படுத்தி, அதனை ஒரு சக்திவாய்ந்த நுண்பெருக்கியாக (மைக்ராஸ்கோப்) மாற்றுவது கையடக்க இரத்தப்பரிசோதனைக் கருவியின் (பிளட் டெஸ்டிங் கிட்) அடிப்படை. இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிந்த தனது தாத்தா பற்றியும், இரத்தப்பரிசோதனைக்காக ஆய்வகத்தின் வாசலில் வரிசையாக நிற்கும் நோயாளிகளையும், அதற்கு எடுக்கும் நேரம் பற்றிய தகவல்களைத் தனது தாய் மூலம் அறிந்த தனய் இக்கருவியை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டார்.

    இக்கருவி இயங்கும் விதம்; மலேரியா போன்ற ஒட்டுண்ணி நோய்க்கிருமியால் பாதிப்பா என்பது போன்ற இரத்தப் பரிசோதனை செய்ய, இரத்தத் துளிகளை ஆய்வகத்தின் கண்ணாடிப் பட்டையில் சேகரித்து, சோதனைக்குத் தயார் செய்து கைபேசியை நுண்பெருக்கியாகப் பயன்படுத்தி அதன் வழியாக ஆராய வேண்டும். பரிசோதனைக் கருவியாக மாறிய கைபேசி அதனை 350 முதல் 400 மடங்குவரை உருப்பெருக்கி ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை, இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிடும். இந்தத் தகவலை கைபேசியில் உள்ள செயலியின் மென்பொருள் பிற இரத்தப்பரிசோதனை தரவுகளுடன் ஒப்பிட்டு நோயினால் பாதிப்பா என்பது போன்ற தகவலை அளிக்கும். இந்த சோதனைமுடிவை மிகத் துல்லியமாக்கும் முறையில் இப்பொழுது தனய் மேற்கொண்டு கவனம் செலுத்தி வருகிறார். இந்தச் செயல்முறையை இவர் விளக்குவதைக் கீழ்காணும் காணொளி மூலமும், படம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

    Athelas
    காணொளி: https://youtu.be/lxBoZVJJdis

    https://youtu.be/lxBoZVJJdis

    இந்த மாதம் (டிசம்பர் 2015), தனய் பயிலும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு கிளையான, ‘கார்டினல் வென்ச்சர்’ (Cardinal Ventures) என்ற புதுமுறை தொழில்களின் முனைவோர்களை ஊக்குவிக்கும் நிதி முதலீடு செய்யும் (venture capitalist) நிறுவனம் நடத்திய போட்டியில் 60 தொழில் முனைவோர் குழுவினர் பங்கேற்றார்கள். அதில் தனய் டாண்டனின் கண்டுபிடிப்பான எளிய இரத்தப் பரிசோதனைக்கருவி உபயோகத்திலும், சந்தைப்படுத்துவதிலும் நம்பிக்கை தரும் ஒரு முயற்சி என்று பாராட்டப்பட்டு தேர்வு பெற்று பரிசும், நிதி உதவியும் பெற்றது. கூகுளும் இதுபோன்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக தொழில் முனைவோர் உருவாக்கியது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தைத் தேர்வு செய்த மூன்று நடுவர்களில் ஒருவரான ‘ஆனி காடவி’ (Annie Kadavy), இது வணிக முதலீட்டாளர்களைக் கவரும் நல்லதொரு தொழில் முயற்சி எனப் பாராட்டியுள்ளார்.

    Athelas3

    Athelas2

    சென்ற அக்டோபர் மாதம் ‘தீபிகா போடபட்டி – தனய் குழு, அதிலாஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான தீபிகா போடபட்டி படிக்கும் தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோருக்கான ஸ்டீவன் மாணவ கண்டுபிடிப்பாளர் போட்டியில்’ (Stevens Student Innovator Showcase) 24 மாணவர்கள் கொண்ட குழுக்களுடன் போட்டியிட்டனர். தேர்வு செய்யப்பட்ட 6 குழுக்களில், சிறந்த புத்தாக்கத்திற்கான சிறப்புப் பரிசையும், $7,000 பரிசுத் தொகையையும் வென்றனர். மேலும் அதே மாதம், அதே பல்கலைக் கழகத்தின் ‘சிலிக்கான் பீச் தொழில் முனைவோருக்கான நான்காவது ஆண்டு போட்டியின் பரிசாக’ (4th Annual Silicon Beach Awards Venture Competition) $25,000 பரிசையும் பெற்றனர். இந்த பரிசுத் தொகைகளின் உதவி கொண்டு தங்கள் இரத்தப் பரிசோதனைக் கருவியை மேம்படுத்தி, மருத்துவதுறையினர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி, ‘அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்தக நிறுவனத்தின்’ (U.S. Food and Drug Administration) அங்கீகாரம் பெறும் வகையில் வடிவமைக்கப் போவதாக தீபிகா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    Athelas1

    Deepika and Tanay

    தனய், தீபிகா இருவரும் தங்களது அதிலாஸ் நிறுவனத்திற்காக இதுபோல போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசுத் தொகைகளாகவே $50,000 வரை நிதி சேகரித்துள்ளனர். இந்த இளம் தொழில் முனைவோர்களின் முயற்சி வெற்றிபெற்று, மருத்துவத்துறையினருக்கு பெரிதும் உதவி புரிந்து, அதன் மூலம் பல்லாயிரம் உயிர்களைக் காக்க வேண்டும் என்று வாழ்த்தி வல்லமைக் குழுவினரின் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    __________________________________________________________________________

    மேலும் தகவலுக்கும் தொடர்புக்கும்:

    Athelas:
    http://getathelas.com/

    கையடக்க இரத்தப் பரிசோதனைக் கருவி பற்றி தனய் டாண்டன் வழங்கும் செயல்முறை விளக்கக் காணொளி:
    https://youtu.be/lxBoZVJJdis (https://www.youtube.com/channel/UCIghdhdj3GY3n0P_IYUZBNA)

    Tanay Tandon:
    http://tanaytandon.com/
    http://clipped.me/
    https://www.facebook.com/tanay.tandon.5
    https://www.linkedin.com/in/tanaytandon

    https://www.youtube.com/channel/UCIghdhdj3GY3n0P_IYUZBNA

    Deepika Bodapati:
    https://www.facebook.com/deepika.bodapati
    https://www.linkedin.com/in/deepika-bodapati-10229773
    http://www.huffingtonpost.com/deepika-bodapati/

    __________________________________________________________________________

    தகவலும் படங்களும் தந்துதவிய தளங்கள்:

    (1)
    The college freshman looking to shake up blood tests
    Athelas CEO Tanay Tandon has developed a blood-testing kit
    Tuesday, 8 Dec 2015
    http://video.cnbc.com/gallery/?video=3000463731

    (2)
    Stanford University’s on-campus incubator Cardinal Ventures
    Dick Costolo’s advice to entrepreneurs
    Harriet Taylor, Tuesday, 8 Dec 2015
    http://www.cnbc.com/2015/12/08/dick-costolos-advice-to-entrepreneurs.html

    (3)
    Next generation of entrepreneurs shines at USC Stevens Student Innovator Showcase
    The ninth annual event awards startups that create viable solutions to global problems
    BY Peijean Tsai, NOVEMBER 2, 2015
    https://news.usc.edu/88158/next-generation-of-usc-entrepreneurs-shines-at-student-innovator-showcase/

    (4)
    USC Stevens Student Innovator Showcase Awards $25K to Student Startups
    https://stevens.usc.edu/usc-stevens-student-innovator-showcase-awards-25k-to-student-startups/

    (5)
    Intel Science Talent Search finalist, vying for thousands of dollars in scholarships.
    http://googleforeducation.blogspot.com/2015_08_01_archive.html

    (6)
    ABC7 STAR SCHOLAR: TANAY TANDON
    https://www.googlesciencefair.com/projects/en/2015/fd6ac2f5d877cecc8705915021b5fc3e5a15f5feb8bde09d0c2f6be1559c2d65

    (7)
    This teenager could revolutionize malaria testing with a cheap smartphone attachment
    by Pavel Curda PAVEL CURDA — 18 Aug 2014
    http://thenextweb.com/insider/2014/08/18/teenager-revolutionize-malaria-testing-cheap-smartphone-attachment/

    __________________________________________________________________________

    Share
  • இணையத்தில் தொற்றுநோய் – 1

    — தேமொழி

    சமூக வலைத்தளங்களை சில நேரங்களில் கலக்கும் செய்திகள் வரும்.

    தொற்றுநோய் போல பரவுவதால் இதனை ‘It went viral’ அல்லது ‘gone viral’ என்று சொல்லிச் சொல்லி தங்களைக் கவர்ந்த செய்தியை அனைவருக்கும் பலசமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பிக் கொண்டிருப்பது நமது வழக்கம். அதாவது…இப்பொழுது இங்கு நான் பரப்புவது போல என்று வைத்துக் கொள்ளலாம்.

    கால்நூற்றாண்டிற்கு முன்னர் இணையம் பரவலாக பயனில் இல்லாதக் காலத்தில் gone viral என்றால் மருத்துவத் தொடர்பான செய்தியாக இருந்திருக்கக் கூடும். ஏதேனும் தீயநோய்க்கு அறிகுறியாக இருந்து, ஆளைப்பிடித்து தனிமைப்படுத்திப் பரவவிடாமல் செய்திருப்பார்கள். இணையச் செய்திகளில் இதெல்லாம் நடக்காது. செய்தி பரவிப் பரவி டிவிட்டர் மூலம் எகிப்து, ஈரான், மால்டோவா போன்ற சில நாடுகளின் புரட்சியாளர்கள் ஒருங்கிணைத்து அவர்கள் நாட்டின் அரசுக்கு எதிராகப் புரட்சிகள் செய்தனர், அவை அந்த நாடுகளின் ஆட்சியை அசைத்துப் பார்த்தன.

    ஒசாமா பின் லேடனனைப் பிடிப்பதற்காக அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானில் அதிரடித் தாக்குதலில் இறங்கிய பொழுது வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவுடன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியுடன் அதை நேரடி ஒளிபரப்பாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது … உலகில் யாருக்குமே அந்தச் செய்தி தெரியாது.

    அபூத்தபாத் (Abbottabad) என்ற அந்த நகரில், ஒசாமா தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் வசித்த, தொலைத்தொடர்பு ஆலோசகராகப் பணிபுரியும் ‘சோஹேப் அத்தர்’ (Sohaib Athar), என்ற 33 வயது இளைஞர், வீட்டிற்கு மேல் பறந்த இராணுவ ஹெலிகாப்டர் ஏற்படுத்திய ஓசை, தொடர்ந்த அதிரடித் தாக்குதல் ஆகியவை வழக்கத்திற்கு மாறாகத் தூங்கவிடாமல் தொல்லை செய்ததால் அதனை டிவிட்டர் வலைத்தளத்தில் நேரடிப் பதிவு செய்து கொண்டிருந்தார் (Sohaib Athar, @ReallyVirtual, https://twitter.com/ReallyVirtual).

    “Helicopter hovering above Abbottabad at 1AM (is a rare event).”

    “Go away helicopter – before I take out my giant swatter.”

    “A huge window shaking bang here in Abbottabad.”

    “I hope its not the start of something nasty.”

    என்ற செய்திகளாக, நடந்தது என்னவென்றே தெரியாமல் அவர் செய்த பதிவுகளின் முக்கியத்துவம் பின்னர் உணரப்பட்டு ஒரே நாளில் உலகின் புகழ் உச்சிக்குச் சென்றார். டிவிட்டர் வலைத்தளத்தில் அவரைப் பலர் தொடரத் தொடங்கினர். இது போன்று பல செய்திகள் பரவுவதும், நாம் பரப்புவதும் வாடிக்கை.

    சமீபத்தில் இணையத்தைக் கலக்குவது ஒரு படம். “பாண்டாவைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்ற கேள்வியுடன் ஸ்னோமேன் கூட்டத்தில் மறைந்திருக்கும் பாண்டாக் கரடியை அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ‘டாடல்ஃப்’ (Dudolf) என்ற புனைப்பெயர் கொண்ட ஓவியர் ‘ஜெர்ஜிலி டூடஸ்‘ (Gergely Dudás), தனது ஃபேஸ்புக் தளத்தில் (https://www.facebook.com/thedudolf/) வரைந்து பதிவிட்ட படம் தொற்றுநோய் போலப் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஸ்னோமேன் கூட்டத்தில் பாண்டாவைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்பது போல “ஆந்தையின் கூட்டத்தில் பூனையைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்ற மற்றொரு படமும் வரைந்து வெளியிட்டுள்ளார் தனது எதிர்பாராத புகழைக் கண்டு மகிழ்ந்த ஓவியர் டாடல்ஃப் அவர்கள்.

    விடுமுறை நாட்களில் பொழுதை ஓட்ட இது போன்ற விளையாட்டுகள் மக்களுக்கு உதவுகிறது. அனைவரும் பார்த்து மகிழப் படங்கள் கீழே …

    Gergely Dudás

    Gergely Dudás2

    Picture Courtesy:  https://en.wikipedia.org/wiki/Situation_Room  &  https://www.facebook.com/thedudolf/

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: தனிமரம் காடாத லில்

     

    எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
    கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
    நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்
    தனிமரம் காடாத லில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     
    பதம் பிரித்து:
    எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
    கதித்துக் களையின் முதிராது தீர்த்து,
    நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீர
    தனி மரம் காடு ஆவது இல்.

    பொருள் விளக்கம்:
    எதிர்த்திடும் பகைவரின் பகைமையை அது தோன்றும் பொழுதிலேயே, விரைந்து நீக்கிப் பகை முற்றவிடாமல் அழித்து, தன்னை விரும்புமாறு பகைவரின் நண்பர்களையும் தம் வசப்படுத்திவிட்டால், தனித்திருக்கும் மரம் காடாகாது அல்லவா (அவ்வாறாகத் தனித்துவிடப்பட்ட பகைவர் தீமை செய்ய இயலாத வகையில் வலுவிழப்பார்)

    பழமொழி சொல்லும் பாடம்:
    பகைவரை வளரவிடாது, அவர் கொண்ட பகைமையை முளையிலேயே கிள்ளி பகையை அடியோடு அழித்துவிட வேண்டும். பகையை வளர விடாது வேரறுக்க வேண்டும் என்ற கருத்தினை வள்ளுவர்,

    இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து. (குறள்: 879)

    முள் மரத்தை அது சிறிய செடியாக இருக்கும் பொழுதே வளரவிடாமல் அழித்துவிடவேண்டு. வளரவிட்டு அதை அழிக்க முற்பட்டால் அழிப்பவர் கையை பதம் பார்த்துவிடும் என்று, பகையை அழிக்கும் வழியைக் காட்டுகிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 21, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு ஆக்சாத் பிரகாஷ் அவர்கள்

    Akshat Prakash-Photo by PTI profile

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், விபத்தில் உயிர் காக்கும் கருவி ஒன்றை வடிவமைத்தவரும், மேல்நிலைப்பள்ளி மாணவருமான திரு. ஆக்சாத் பிரகாஷ் அவர்கள். மருத்துவ அறிவியலில் மிகுந்த ஆர்வமிக்க ஆக்சாத் பிரகாஷ் உத்தரப் பிரதேசம் காஜியாபாதை சேர்ந்தவர். டெல்லி இந்திராபுரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும், 17 வயதாகும் இந்த இளைஞர், கைக்கடிகாரம் போல கையில் அணிந்து கொள்ளும் முதலுதவி சிகிச்சை தரும் ‘தொழில்நுட்ப அணிகலன்’ (wearable technology device) ஒன்றினை வடிவமைத்து, தைவானில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சி – 2015 (Taiwan International Science Fair, 2015) இல் அறிமுகப்படுத்தினார். இக்கருவி செயல்படும்விதத்தைப் பற்றி அறிவியல் கண்காட்சியில் செயல்முறை விளக்கமும் அளித்துள்ளார். ஆக்சாத் பிரகாஷ், ‘ஹெலிக்ஸ்சேஃப்’ (HelixSafe – #HelixSafe on twitter.com) என்று பெயரிட்டுள்ள தனது மருத்துவ கருவிக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார். காப்புரிமை பெற 2013 இல் இவர் விண்ணப்பித்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வமான காப்புரிமை தகவல் இதழில் (Official Patent Journal, 2015) இச்செய்தி வெளியாகியுள்ளது.

    Akshat Prakash-Photo by PTI

    விபத்துகள் நிகழும் பொழுது, உயிருக்கு ஊசலாடுபவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்கத் துரித கதியில் இயங்கத் தேவை. வீணாக்கும் ஒவ்வொரு பொன்னான வினாடியும் வாழ்வா, சாவா என்ற முறையில் ஒருவரது வாழ்க்கையையே நிர்ணயிக்கும். நகரப்பகுதியில் விபத்து நிகழ்ந்தாலே அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதில் பெருமளவு காலம் விரயமாவதைத் தடுக்க வழி இருப்பதில்லை. ஆளரவமற்ற அத்துவானக்காட்டின் சாலையொன்றில் வாகன விபத்து நிகழ்ந்தால், அதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குள் விபத்திற்குள்ளானவர் உடனடி மருத்துவ உதவியின்றி அவரது வாழ்வே முடிந்துவிடலாம்.

    இது போன்ற வாகன விபத்து நிகழ்வுகளில் கைகொடுத்து உதவக் கூடியது, விபத்தினால் பாதிக்கப்பட்டவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரம் போன்ற ஹெலிக்ஸ்சேஃப்-தொழில்நுட்ப அணிகலன். இக்கருவியின் சென்சார் என்ற உணரும் பகுதி விபத்து நிகழ்ந்த நேரத்தில், இக்கருவி அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பைக் கணக்கிட்டு அவரது உடல்நிலையைக் கண்காணிக்கும். அது இயல்புக்கு மாறாக இருந்தால், தானே தேவையான முதலுதவிக்கான மருந்தினை கருவியில் இருக்கும் சிறிய ஊசி உடலுக்குள் செலுத்துவதுடன், அருகாமையில் உள்ள மருத்துவ அவசர சிகிச்சை மையத்திற்கு உடனடித் தகவலும் அனுப்பும்.

    இந்த மருத்துவக் கருவியின் மாதிரி வடிவம் ‘அர்டுயினோ டெவெலப்மென்ட் என்விரான்மெண்ட்’, மற்றும் ‘எம்பெடெட் சி’, ‘விஷுவல் பேசிக்’ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது (The prototype has been created with Arduino Development Environment, Heart Rate Sensor and accessories and programmed in Embedded C and Visual Basic). இந்த ‘ஹெலிக்ஸ்சேஃப்’ மருத்துவக் கருவி கண்டுபிடிப்பிற்காக, “சிறந்த கண்டுபிடிப்பை வழங்கிய இந்தியாவின் முதன்மை திறமைசாலிக் குழந்தை” (‘India’s First Whiz Kid’ award for Best Innovation, 2013), என்ற விருதினையும் ஆக்சாத் பிரகாஷ் பெற்றுள்ளார். இந்த விருதினை 2013 ஆண்டு ‘நர்ச்சர் டேலண்ட் அண்ட் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ (Nurture Talent & Computer Society of India) இவருக்கு வழங்கிப் பாராட்டியது. இந்த மருத்துவக் கருவி செயல்படும் முறையைப் பற்றி , ஐ.ஐ.டி. டெல்லி, ஐ.ஐ.டி. மும்பை ஆகிய இந்திய தொழில்நுட்பக் கல்வி பல்கலைக் கழகங்களிலும் ஆக்சாத் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.

    Akshat Prakash-Photo by PTI-3

    ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ துறை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை. தற்பொழுது பெரும்பாலும் ஆரோக்கிய வாழ்வினை முன்னிறுத்தும் நோக்கில் உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றின் அளவுகளைக் கண்காணிக்க மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு கலிஃபோர்னியா நிலநடுக்கத்தின் பொழுது, தொழில்நுட்ப அணிகலன் அணிந்திருந்தவர்கள் உறக்கம் தடைப்பட்டு விழிக்க நேர்ந்ததையும், மீண்டும் உறங்கச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது என்பது போன்ற தகவல்களை, தானே சேகரித்து தரவுகளை அனுப்பியது.

    Akshat Prakash-Photo by PTI-4

    இந்தத் தொழில் நுட்பத்தை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்துவதில் உள்ள ஆதாயம் பற்றி இத்துறை வல்லுநர்கள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக மாரடைப்பு, வலிப்பு போன்ற நேரங்களில் உடலில் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ப விரைந்து செயலாற்றி சிகிச்சையைத் துவக்க விரும்பி மருத்துவத் துறையும் இதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் 2 பில்லியனில் இருந்து 40 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இத்துறை வளரும் என்றும், சிறு கணினிசார் நிறுவனங்கள் இதன் வளர்ச்சியில் அதிகம் பங்கு பெற்றுப் பலனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு, உடற்பருமன், இதயநோய் எனப் பல்வேறு வகையிலும் உடல்நலம் கண்காணிக்க ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ உதவக்கூடும் எனவும் தெரிகிறது.

    முன்னேறும் இத்துறையில் ஒரு பதின்ம வயது பள்ளி மாணவன் இந்தியாவில் முன்மாதிரியாக இருப்பது இந்தியத் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கிறது. கணினி அறிவியலில் தனக்கு மிகவும் ஆர்வம் இருப்பதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அத்துறையில் ஓர் ஆய்வாளராகப் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் செல்வன் ஆக்சாத் பிரகாஷ்; தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு, சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு நிறைந்த சமுதாயம் உருவாக, மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நல்ல பல கருவிகளைத் தயாரிக்க விரும்புவதாகவும் ‘பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ (PTI-Press Trust of India)விற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். செல்வன் ஆக்சாத் பிரகாஷின் விருப்பங்கள் நிறைவேறி, மக்களுக்குப் பயன்தரும் கருவிகள் பல வடிவமைக்க வல்லமை இதழ் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    மேலும் தொடர்புள்ள தகவலுக்கு:
    விபத்தில் உயிர் காக்கும் கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்
    http://tamil.thehindu.com/india/விபத்தில்-உயிர்-காக்கும்-கருவியை-கண்டுபிடித்த-பள்ளி-மாணவர்/article8004063.ece
    Published: December 18, 2015

     

    Beyond Fitbit: The quest to develop medical-grade wearables
    http://www.reuters.com/article/us-usa-health-wearables-insight-idUSKBN0U10G120151218
    Published: December 18, 2015

     

    Wearable Technology is Here: Interoperability will be an issue for this technology, just as it is today for communications and data.
    http://www.emergencymgmt.com/emergency-blogs/disaster-zone/wearable-technology-is-here.html
    Published: December 18, 2015

     

    How The Napa Earthquake Affected Bay Area Sleepers
    https://jawbone.com/blog/napa-earthquake-effect-on-sleep/
    Published: Aug 25, 2014

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: செய்கொன்றான் உண்கென்னு மாறு

     

    வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
    பெற்றிலே மென்பது பேதைமையே – மற்றதனை
    எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ
    செய்கென்றான் உண்கென்னு மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வெற்றி வேல் வேந்தன் வியம் கொண்டால், ‘யாம் ஒன்றும்
    பெற்றிலேம்’ என்பது பேதைமையே; மற்று அதனை
    எவ்வம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,
    ‘செய்க!’ என்றான், ‘உண்க!’ என்னுமாறு.

    பொருள் விளக்கம்:
    வெற்றியைத் தரும் வேலினை ஏந்திய மன்னவன் ஆணை இட்டால், நான் அதனைச் செயல் படுத்தும் திறனைப் பெற்றிருக்கவில்லை என்று சொல்லி மறுப்பது அறியாமையாகும். அவ்வாறின்றி அச்செயலை வருத்தமுறாமல் செய்க. அவ்வாறாகச் செய்தால், செய்க இச்செயலை என்ற மன்னவனின் கட்டளை உணவு உண்பதற்கு வழிவகுத்ததை ஒத்ததாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: தனக்குத் திறமையில்லை என்று வருத்தம் கொள்ளது, அதிகாரத்தில் உள்ளவர் இட்ட கட்டளையை மறுக்காது நிறைவேற்றுவது, பசியின்றி வாழும் வகையில் ஒருவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும். நம்மால் இது இயலாது என்று மனந்தளராது காரியமாற்றுவதால் விளையும் நன்மையைக் குறிக்கும் குறள்,

    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும். (குறள்: 611)

    நமக்குக் கடினமான செயல் இது என்று மனச்சோர்வு கொள்ளாது, முயன்று செயலாற்றினால், அதன் விளைவு பெருமை தரத் தக்க வகையில் அமையும் என்று விளக்குகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: செய்தானை ஒவ்வாத பாவையோ இல்

     

    செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
    பயிரறு பக்கத்தார் கொள்வர் – துகிர்புரையும்
    செவ்வாய் முறுவனற் சின்மொழியாய்! செய்தானை
    ஒவ்வாத பாவையோ வில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை
    பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்
    செவ்வாய் முறுவல் நல் சில் மொழியாய்!-செய்தானை
    ஒவ்வாத பாவையோ இல்.

    பொருள் விளக்கம்:
    குற்றமற்ற செங்கோலை ஏந்திய, சினம் கொண்ட மன்னவன் இழைக்கும் தீமைக்கு, குற்றமற்ற, அருகில் உள்ள அமைச்சர்களே பொறுப்பாவார்கள். பவளம் போன்ற செவ்விதழ் கொண்ட வாயில் புன்முறுவல் துலங்க இனிய சில மொழிகளைக் கூறும் பெண்ணே, (இது எவ்வாறெனில்) ஓவியர் தம் மனது விரும்பாத ஓவியத்தை வரைவதில்லை அன்றோ.

    பழமொழி சொல்லும் பாடம்:  ஓவியர் விரும்பியது போலவே அவர் தனது ஓவியப்பாவையை வரைவார், அது போல அமைச்சர் வழி நடத்துவதற்கு ஏற்பவே அரசனின் செயல்கள் அமையும். எனவே, அரசன் செய்யும் தீங்குகளுக்கு அருகிருந்து அவனை இடித்துரைத்துத் திருத்த வேண்டிய அமைச்சர்களே பொறுப்பாவார். அறிவுரை கூறவேண்டியவர் கடமையைப் பற்றிக் கூறும் வள்ளுவர்,

    அறிகொன்று அறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன். (குறள்: 638)

    அறிஞர் சொல்லும் அறிவுரையையும் கேட்காத, சொந்த அறிவும் இல்லாத மன்னவனுக்கு, உடனிருக்கும் அமைச்சரே நல்வழி காட்டி அறிவுறுத்தக் கடமைப் பட்டவர் என்று கூறுகிறார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 14, 2015

    இவ்வார வல்லமையாளர்

    அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்

    amutha and kajalakshmi

     

    இவர்களைப் போன்ற இந்திய ஆட்சிப் பணியாளர்களே நமக்குத் தேவை என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் மக்கள் ஒருமனதாகப் பாராட்டும் வண்ணம் சிறப்பாகப் பணியாற்றிய அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். ஆகியோர் வல்லமையின் இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டப்படுகிறார்கள்.

    அரசு அதிகாரிகள் பேரிடர் காலத்தில் தங்கள் பணியை… கடமையை செய்ததற்குப் பாராட்டுகள் தேவையா என்பது இந்திய அரசியலைப் பற்றிய விவரம் தெரியாதவர்களின் கேள்வியாக இருக்கும். ஆனால் இந்திய அரசியல்வாதிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் அரசுப்பணியாளர்களுக்கு இடையூறு அளிக்காமல் இருந்ததாகக் கேள்விப்பட்டவரும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. சீரிய முறையில் பணி செய்யும் அரசு அதிகாரிகள் தங்களது “வளர்ச்சிக்கு” இடையூறு தருபவர்கள் என்று முடிவு செய்து, சிறிய, பெரிய என்ற எந்த நிலையில் உள்ள “தலைவர்களும்” அதிகாரிகளை மிரட்டுவதும், அதிகாரிகள் “ஒத்துழைக்க” மறுத்தால், மேலிடம்வரை சென்று ஒத்துவராத அதிகாரிகளுக்கு “பணிமாற்றம்” என்ற “பரிசு” வழங்க ஏற்பாடு செய்வதும்தான் நமக்குத் தெரிந்த நடைமுறை.

    இதுபோன்ற முறையற்ற செயல்களினால், சென்னை நகரத்தின் வளர்ச்சி ஒரு திட்டமிடப்படாத வளர்ச்சியாகக் கடந்த அரைநூற்றாண்டாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்டது. விளைவு: சென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கைப் பேரிடர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. செல்வாக்கு உள்ளவர்கள் அரசு இயந்திரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நீர்நிலைகளையும், நீரோட்டத்தின் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பெரும் செல்வந்தர்களாகப் பொருளீட்டி விட்டார்கள். மனசாட்சியை விற்று சுயநலநோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் ஆட்சியாளர்களும் பாராமுகமாக நடந்து கொண்டார்கள், இதனால் துயருற்றது பொதுமக்கள். இப்பொழுதோ வெட்கமில்லாமல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளார்கள். அதற்குக் காரணமும் அடுத்து ஆட்சியைப் பிடிக்கும், அல்லது தக்க வைக்கும் எண்ணம் மட்டுமே.

    இவர்களது திருவிளையாடல்களினால் எழுப்பப்பட்டுவிட்ட ஆக்கிரமிப்புகளினால் ஒரு வார பெருமழையைத் தாங்கமுடியாமல் சென்னை வெள்ளக்காடானது, சேர்ந்த வெள்ளமும் வடிய வழியின்றித் தேங்கிப் போன நிலை. தூர்வாருதல் போன்ற பராமரிப்பு இன்றி குப்பைகூளங்கள் அடைத்து, அத்துடன் ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் ஆறு, கால்வாய்களின் அகலம் சுருங்கிப் போயின. ஆக்கிரமிப்பு பகுதிகள் பெரும்பாலும் வியாபார நிறுவனங்களாகவும், கடைகளாகவும் இருந்தாலும், மணிமங்கலம் பகுதி கால்வாயை ஆக்கிரமித்து ஒரு கோவிலே கூட கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. அதை இடிக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் கூட வைத்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற பொதுப்பணி துறை நீர்வழித்தடங்களிலும்; ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய் உள்ளிட்ட மாநகராட்சி நீர்வழித்தடங்களிலும் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

    Capture

    வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஒன்பது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைத்த தமிழக அரசு, இக்குழுவை மீட்புப் பணி, நிவாரணப் பணி, எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. இராணுவத்தின் துணையோடு இப்பணிகளை அரசு அதிகாரிகள் செயல் படுத்தினர்.

    இவர்களில் வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா அவர்கள் தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மக்களை மீட்டதுடன், மீண்டும் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களில் இருந்து ஆற்றுக்குச் செல்லும் வழிகளைச் சீரமைக்கும் பணியில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துப் பல ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ள உதவியுள்ளார். இதனால் ஒருவாரம் வரை வடியாமல் தேங்கிய வெள்ளம் சிலமணி நேரங்களில் வடிந்துவிட்டிருக்கிறது. இவரது பணியை தடை செய்வதற்கு முயன்றவர்களை இவர் பொருட்படுத்தவில்லை. தாம்பரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இவரது ஆணையினால் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் அடையாறு ஆற்றுக் கால்வாய்  முதலில் இருந்ததை விட மூன்று மடங்கு அகலமாகியுள்ளது.

    amutha 600-vikatan.com-picture

    கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ் அவர்கள் சென்ற அக்டோபரில்தான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற ஒருமாதத்தில் அவர் மாவட்டம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டது. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளநீரில் களமிறங்கி இரவு பகல் பாராது மீட்புப் பணியையும் நிவாரணப் பணியையும் முன்னின்று நடத்தியுள்ளார் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். வெள்ள பாதிப்பிற்குக் காரணமான மாவட்டத்தின் பல்வேறு நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் இவரது உத்தரவின் பேரில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன.

    kajalakshmi

    ஆக்கிரமிப்புகள் யாவும் அரசின் மெத்தனத்தினால் நிகழ்ந்தவை என்றாலும், பேரிடருக்குப் பின்னர் செய்யும் இது போன்ற பராமரிப்பு நடவடிக்கைகள் இழப்புகளை ஈடுகட்டப் போவதில்லை என்றாலும், இனியாவது வருங்காலத்தில் இழப்புகளை இந்த நடவடிக்கைகள் குறைக்கும் என எதிர்பார்க்கலாம். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலக்ஷ்மி போன்றோரின் அதிரடி நடவடிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை. தனது பதவிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை சரிவரப் பயன்படுத்தத் தெரியாத பிற அரசு அதிகாரிகளுக்கு இவர்களது நடவடிக்கைகள் நல்லதொரு பாடமாக அமையுமாறு செயலாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலக்ஷ்மி ஆகியோருக்கு வல்லமை இதழின் பாராட்டுகள்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     _____________________________________________

    தகவல் தந்து உதவிய செய்திகள்:
    அமுதா ஐ.ஏ.எஸ்
    அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்… அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்… வடிந்தோடும் வெள்ளநீர்!
    http://www.vikatan.com/news/coverstory/56265-encroachment-sequestration-amutha-ias.art

    அரசியல் கட்சியினரின் மிரட்டல்கள் எடுபடவில்லை தாம்பரம், முடிச்சூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடி
    http://www.dailythanthi.com/News/State/2015/12/10001525/Amudha-removal-of-IAS-invasions-Action.vpf

    கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்.
    அடையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் தூள் …தூள்:மாநகராட்சிக்கு வழிகாட்டுகிறார் காஞ்சிபுரம் கலெக்டர்
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=1404910

    Share
  • வானத்தைவிடப் பரந்து விரிந்தது

    – தேமொழி.

     

    வானத்தைவிடப் பரந்து விரிந்தது

    கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    எல்லையற்ற கற்பனைத் திறனில்
    நீலவானைவிடப் பரந்து விரிந்தது
    அருகருகே வைத்து ஒப்பிட்டால்
    மூளையின் ஆற்றலுக்கு உட்பட்டு
    அதனுள் அடங்கிவிடும் பரந்தவானமும்

    அளவற்ற கற்கும் ஆற்றலில்
    நீலக்கடலை விடவும் ஆழமானது
    ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டால்
    மூளை ஒரு கடற்பஞ்சென உறிஞ்சிட
    வாளிக்குள் ஒடுங்கிவிடும் ஆழ்கடலும்

    நிகரற்ற படைப்பாற்றல் தகுதியில்
    ஒப்பற்ற கடவுளின் சக்திக்குச் சமம்
    எடைக்கு எடை ஒப்பிடுகையில்
    மூளை கடவுளைவிட மாறுபடுமெனில் அது
    இசையின் சந்தங்களென வேறுபடுவதே

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    emily-dickinson-everett
    The Brain—is wider than the Sky—

    – Emily Dickinson

     

    The Brain—is wider than the Sky—
    For—put them side by side—
    The one the other will contain
    With ease—and You—beside—

    The Brain is deeper than the sea—
    For—hold them—Blue to Blue—
    The one the other will absorb—
    As Sponges—Buckets—do—

    The Brain is just the weight of God—
    For—Heft them—Pound for Pound—
    And they will differ—if they do—
    As Syllable from Sound—

     

    Share
  • இறுதிப் பயணம் …

    – தேமொழி.

    இறுதிப் பயணம் …

    கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    சாவை நான் எதிர்நோக்காததால்
    காலனே கனிவுடன் எனைத்தேடி வந்தான்
    மறுவுலகம் செல்லும் மரணத்தேரிலே
    காலனுடன் என் இறுதிப்பயணம்

    மெதுவாக ஊர்ந்தே நாங்கள் சென்றோம்
    காலனுக்கு எந்த ஓர் அவசரமுமில்லை
    அவன் கருணையை மதித்தே நானும் எனது
    உழைப்பிற்கும் ஓய்விற்கும் விடைகொடுத்தேன்

    இடைவேளை மணியொலிக்க
    பள்ளித் திடலில் விளையாடும்
    குழந்தைகளைக் கடந்தோம்
    வெறித்து நோக்கும்
    வயல்வெளிக் கதிர்களையும்
    மறையப் போகும்
    மாலைக் கதிரவனையும் கடந்தோம்

    இல்லை, கதிரவன்
    எங்களைக் கடந்தே சென்றான்
    மாலைப்பனியின் நடுக்கும் குளிரை
    தடுக்கும் திறனற்றுப் போனதென்
    மெல்லிய ஆடையும் சால்வையும்

    மணல் திட்டின் மீதிருந்த
    மாளிகையின் முன்னே
    மரணத்தேரைச் சற்றே நிறுத்தினோம்
    மண்ணில் புதைந்து புலப்படவில்லை
    மாளிகையின் கூரையும் அதன் முகடும்

    நூற்றாண்டுகள் பல கடந்தாலும்
    அன்று நடந்தவை யாவுமே
    நேற்று நிகழ்ந்தவையாக நெஞ்சில்
    நிலைத்துப்போன நினைவுகள்
    நான் எண்ணியவாறே அழிவற்ற
    நிரந்தர வாழ்வை நோக்கிப்
    பயணித்தன மரணத்தேரின் குதிரைகள்

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    emily-dickinson-everett

    Because I could not stop for Death

    – Emily Dickinson

     

    Because I could not stop for Death –
    He kindly stopped for me –
    The Carriage held but just Ourselves –
    And Immortality.

    We slowly drove – He knew no haste
    And I had put away
    My labor and my leisure too,
    For His Civility –

    We passed the School, where Children strove
    At Recess – in the Ring –
    We passed the Fields of Gazing Grain –
    We passed the Setting Sun –

    Or rather – He passed us –
    The Dews drew quivering and chill –
    For only Gossamer, my Gown –
    My Tippet – only Tulle –

    We paused before a House that seemed
    A Swelling of the Ground –
    The Roof was scarcely visible –
    The Cornice – in the Ground –

    Since then – ’tis Centuries – and yet
    Feels shorter than the Day
    I first surmised the Horses’ Heads
    Were toward Eternity –

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 7, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு நிகிதா ஆசாத் அவர்கள்

    நிகிதா1

    சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை ஃபேஸ்புக்கில் துவக்கியுள்ள திருமிகு நிகிதா ஆசாத் (Nikita Azad) அவர்கள் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார். “மாதவிடாய் மகிழ்ச்சிக்குரியதே” (#Happy to Bleed) என்ற கவன ஈர்ப்பு வாசகத்தின் மூலம் பெண்களுக்குச் சமூகத்தில் நடத்தப்படும் அவமதிப்பை எதிர்க்கும் இவரது நோக்கம் பாராட்டப்படவேண்டிய முயற்சி.

    மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது இனப்பெருக்கப் பருவமடைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஓர் இயற்கை நிகழ்வு. கருத்தரித்த பெண்ணின் கரு வளர்ச்சியடைய உதவுவது கர்ப்பப்பையும் அதன் சுவர்களும். அவள் அந்த மாதம் கருத்தரிக்கத் தவறினால் பயனற்றத் திசுக்கள் கழிவாக உதிரப்போக்குடன் உடலில் இருந்து வெளியேற்றப்படும் இயற்கை நிகழ்வே மாதவிலக்கு. இதனைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலான ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமே கிடையாது. மேலும் சரியான கழிவறை வசதியற்ற நாடான இந்தியாவில் வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் துன்பம் அதிகம். இதனை வெளிப்படையாகப் பொதுவில் பேசவும் பெண்களுக்குத் தயக்கமும் கூச்சமும் அதிகமிருக்கும். அதனையும் இடக்கரடக்கல்லாக வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு, வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, தீட்டு என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், சோர்வு, வலி போன்றவற்றால் அவர்களே தினசரி நடவடிக்கைகளைக் கைவிடும் காலமும் முன்னர் இருந்தது. ஆனால் சுகாதார வளர்ச்சி, அறிவியல் கல்வியால் புரிந்துணர்வு, ஆயத்தப் பஞ்சுறைகள் (சானிட்டரி நாப்கின்) ஆகியவற்றின் பயன்பாடுகளால் தினசரி வாழ்க்கையை எந்தவித மாற்றமுமின்றிப் பெண்கள் எதிர்கொள்ளும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. நம்நாட்டில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் கூடத் தங்களை குடிகாரர் எனப் பிறர் எண்ணிவிடுவார்களே என்று கூச்சநாச்சமில்லாமல் வெளிப்படையாக வாங்கிச் செல்லலாம். ஆனால், ஆயத்தப் பஞ்சுறைகள் வாங்கக் கடைக்குச் சென்றால் அது என்ன என்று அடையாளமே தெரியாதவாறு (?) ஒரு செய்தித்தாளில் பொட்டலம் கட்டித்தரப்படும் நிலைமையும் உண்டு என்பது இன்றைய நாட்டு நடப்பைத் தெளிவாக்கும்.

    மாதவிலக்கின் போது பெண்களை அங்கே உட்காரக் கூடாது, இங்கே நிற்கக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இதைப் பார்க்கக்கூடாது போன்ற கட்டளைகள் இட்டு, நடவடிக்கைகள் முடக்கப்பட்டு அவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே ஒதுங்கி வாழ வேண்டிய நிலைமை எல்லாம் இருந்தது அக்காலம். இன்னமும் குக்கிராமங்களில் உள்ள பெண்கள் இதுபோன்ற அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். மாதவிலக்கு நாட்களில் பெண்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படுவது போலவே, இறைவழிபாட்டிலும் பெண்கள் கோவிலுக்குப் போகக் கூடாது, பூசை அறைக்குள் நுழையக்கூடாது, வழிபாட்டிற்குரிய பொருட்களையோ புனித நூல்களையோ தொடக்கூடாது என்பது போன்ற பெண்கள் மீதானக் கட்டுப்பாடுகள் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ’கலம் தொடா மகளிர்’ என்ற பெயரில் சங்க காலம் தொட்டுப் பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்து வருவதற்கு இலக்கியச்சான்றுகளும் காட்டப்படுகிறது.

    இவ்வாறு மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் சமீப காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விவாதங்களாக மாறிவருகின்றன. மகாராஷ்ட்ராவில் உள்ள சனி பகவான் கோவில் ஒன்றில், பெண் ஒருவர் சிலை அருகே சென்று வணங்கியதால் சனி பகவான் சிலையைக் கழுவிப் பரிகாரம் செய்துள்ளனர். மாதவிலக்கு, அதனால் தூய்மையில்லை என்பது போன்ற காரணம் கூறப்படவில்லை இந்த சனிபகவான் கோவில் நிகழ்வில். அது பெண்கள் எந்த நாளிலும் அந்தக் கோவிலில் சிலையருகில் சென்று வழிபட உரிமை மறுக்கப்பட்டுள்ள நிகழ்வு. பெண்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற பழமையான எண்ணத்தின் பிரதிபலிப்பாக அமைந்துள்ள மற்றுமொரு நிகழ்வு. பெண்களைமட்டுமல்ல சமூகத்தில் ஒருசில பிரிவினரே இவ்வாறு கோவிலுக்குள் நுழையவிடாமல் ஒதுக்கப்பட்ட காலத்தைக் கடந்து நாம் வெகு தூரம் வந்துவிடவில்லை.

    ஃபேஸ்புக்கில் நிகிதா கவனஈர்ப்பு கொண்டு வந்துள்ளது கேரளாவில் நடந்த மற்றொரு நிகழ்வு. கேரளாவின் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குள் பருவ வயதுப்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனைக் குறித்து கொல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் செய்தியாளர் ஒருவர், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் எப்பொழுது பெண்களைச் சபரிமலையில் வழிபட அனுமதிப்பீர்கள் என்றக் கேள்வியை எழுப்பினார். அதற்குத் தேவஸ்தான தலைவர், ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பவர்களை அடையாளம் காணும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது போல, பெண்கள் மாதவிலக்கு நாட்கள் பற்றிக் கண்டறியவும், தூய்மையாகத்தான் இருக்கிறார்களா என உறுதி செய்ய உதவும் கருவி ஒன்றினைக் கண்டுபிடிக்கும் வரை பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க இயலாது. அந்தக் காலம் வந்த பின்னர் அதைப்பற்றிப் பேசலாம் என்று பதிலளித்தார். இக்கூற்றின் அடிப்படைக் கருத்து “மாதவிலக்கான அந்நாட்களில் பெண்கள் தூய்மையற்றவர்கள்” என்ற பண்டைய வழக்குதான். தேவஸ்தான தலைவரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய செய்தியானது. பிறகு எனது விளக்கம் தவறான முறையில் புரிந்து கொள்ளப்படுகிறது என்று பிறையார் கோபாலகிருஷ்ணன் மறுப்பும் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற கருத்துகள் பிறமதங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நிகிதா2

    இருப்பினும், இயற்கையாகப் பெண்களுக்கு நிகழும், தவிர்க்க இயலாத மாதவிலக்குக்காக அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது சரியல்ல என்பது நிகிதாவின் வாதம். இதற்காக நவம்பர் 21ஆம் தேதியில் இருந்து “ஹாப்பி டு ப்ளீட்” என்ற ஃபேஸ்புக் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நிகிதாவுடன் அவரது நண்ப திரு. சுக்ஜீத் சிங் என்பவரும், சுருதி உபாத்தியாய், சாம்பவி விக்ரம் என்ற தோழியரும் (Sukhjeet Singh, Suridhi Upadhyay, Shambhawi Vikram) இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் அவருக்குத் துணையாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பலரும் நிகிதாவை ஆதரித்து, ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளும் படங்களும் பதிவு செய்துள்ளனர். இந்தக் கவனஈர்ப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்த காரணத்தால் தினசரி நாளிதழ்களிலும் செய்தியாகப் பரவி வருகிறது. ஃபேஸ்புக் பிரச்சாரப் பக்கம் தரும் தகவலின்படி ஆண்களில் பலரும் நிகிதாவிற்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் இறங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய செயல்.

    நிகிதா2a

    இந்தப் பிரச்சாரம் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்காக மட்டும் அல்ல; பெண்களைப் பாலியல் ரீதியில் வேறுபடுத்தி, சிறுமைப்படுத்தும் நோக்கில் இன்றும் நிலவும் இதுபோன்ற சமூக வழக்குகளுக்கு எதிராக எழுப்பிய கண்டனம் என்று நிகிதா ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து, www.change.org லும் இந்தப் போராட்டத்தை எடுத்துச் சென்றுள்ளார். கோயிலுக்குள் நுழைய அனுமதி எதிர்பார்த்து இப்பிரசாரத்தைத் துவக்கவில்லை என்றும், பழமையான நம்பிக்கைகளை எதிர்க்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் என்று கூறும் பஞ்சாபி பல்கலைக்கழக மாணவியான, இருபது வயதாகும் நிகிதா ஆசாத் பாட்டியாலாவில் வசிக்கிறார். இந்தியா ரெசிஸ்ட்ஸ், யூத் கி ஆவாஸ், ஃபெமினிஸம் இன் இந்தியா (India Resists, Youth Ki Awaaz, Feminism in India) போன்ற பத்திரிக்கைகளிலும் எழுதி வருகிறார். காலங்காலமாகப் பெண்கள் எதிர்க்கத் தயங்கிய, மறுகிய, கூசிய, அஞ்சிய மாதவிலக்கைப் பற்றிய கருத்துக்களை; அதனால் பல சமூகக் கட்டுப்பாடுகளுக்குள் பெண்களை முடங்க வைத்த வழக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நிகிதாவின் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Contact Info:
    Nikita Azad
    https://www.facebook.com/archangelniks
    https://www.facebook.com/events/757746744337128/
    https://www.change.org/p/national-commission-for-women-happy-to-bleed-an-initiative-to-break-menstrual-taboos-and-myths

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: முறைமைக்கு மூப்பிளமை இல்

     

    சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
    காலை கழிந்ததன் பின்றையு – மேலைக்
    கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்
    முறைமைக்கு மூப்பிளமை யில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
    காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்
    கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-
    முறைமைக்கு மூப்பு இளமை இல்.

    பொருள் விளக்கம்:
    மிகவும் முயன்று மறைத்துப் பேசி, அறிவுடையார் இது குற்றமன்று என்றாலும், காலம் கடந்த பின்னரும், முன்னர் பசுவின் கன்றைக் கொன்றவனை, அவனது தந்தையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான், (எனவே) நீதி வழங்க முதுமையடைந்தவர் இவர், இளமையானவர் என்ற பேதம் பார்க்கத் தேவையில்லை.

    சிலப்பதிகாரம், புறநானூறு, பழமொழி, மூவருலா, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம் போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மனுநீதிச்சோழனின் கதை இப்பாடலில் எடுத்தாளப்பட்டுள்ளது. அனைவரும் அறிந்த மனுதீதிச்சோழன் கதையினை அடிப்படையாகக் கொண்டு அரசனின் செங்கோன்மை நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. “முறைமைக்கு மூப்பு இளமை இல்” என்பதற்கு விளக்கமளிக்கும் உரையாசிரியர்கள் வெவ்வேறு முறைகளிலும் விளக்கமளித்துள்ளார்கள்.

    கன்றை இழந்த பசு ஒன்று நீதி வேண்டி ஆராய்ச்சிமணியினை அடிக்க, அதன் காரணத்தை விசாரித்து, அந்தப் பசுவின் கன்றின் மீது தேரோட்டிக் கொன்றவன் தனது மகன் என அறிகிறான் அரசன். அமைச்சர்கள் தங்களது நாவன்மையால் அது குற்றமல்ல என மறுக்க முற்படுகிறார்கள். அவர்கள் அரசன் ஆணையை ஏற்று இளவரசனைத் தேர்க்காலில் ஏற்ற மறுத்துப் பின்வாங்கினாலும், அரசன் பசுவுக்கு நீதிவழங்கும் பொருட்டு, கன்றினைக் கொன்ற தனது மகனின் மீது தானே தேரோட்டி பசுவுக்கு நீதி வழங்கினான்.
    நீதி வழங்கும்பொழுது குற்றவாளி ஓர் இளவயதினன் என்பதற்காகக் கருணை காட்டவில்லை என்ற வகையிலும் விளக்கமளிக்கப்படுகிறது.

    மாற்று விளக்கமாகக் கூறப்படுவது பசு ஆராய்ச்சிமணி அடித்து நீதி கேட்டதைப் பற்றிய கதைக் கருத்தை முன் வைக்கவில்லை. இளவரசன் கன்றினைத் தேரேற்றிக் கொன்றதைக் கற்றறிந்த அமைச்சர்கள் பலவாறு பேசி மறைத்துவிடுகிறார்கள். பின்னொருநாளில் அரசனுக்குத் தனது மகன் இழைத்த குற்றம் தெரிய வருகிறது. காலம் கடந்துவிட்டாலும் முன்னாளில் தனது மகன் செய்த குற்றத்திற்காக, அவன் மீது தேரேற்றி தண்டனை வழங்குகிறான் மன்னவன். காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்படுகிறது.
    காலம் கடந்துவிட்டாலும் குற்றத்திற்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற விளக்கமும் அளிக்கப்படுகிறது.

    பழமொழி சொல்லும் பாடம்: முதியவர்  அல்லது இளைஞர் எனக் குற்றவாளியின் வயதினைக் கருத்தில் கொண்டு, சார்பு நிலையுடன் நீதி வழங்கப்படுவது சரியல்ல. குற்றம் செய்தவர் யார் என அவர் பின்புலம் கண்டு மயங்காது, நடுவுநிலை தவறாது நீதி வாங்க வேண்டுமென்பதை வள்ளுவர்,

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541)

    நிகழ்ந்த குற்றத்தினை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, சார்புநிலையைத் தவிர்த்து, நடுவுநிலைமை கொண்டு வழங்கப்படுவதே நேர்மையான தீர்ப்பாகும். எனவே,

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 118)

    என்ற குறள் விளக்குவது போல எப்பக்கமும் சாயாமல், நடுவுநிலை தவறாது, துலாக்கோல் போல சீர்தூக்கிப் பார்த்து நியாயம் வழங்குவதே நேர்மையான சான்றோருக்கு அழகு.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: அறிவினை ஊழே அடும்

     

    சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்
    பட்ட விருத்தம் பலவானால், – பட்ட
    பொறியின் வகைய கருமம் அதனால்
    அறிவினை ஊழே அடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
    பட்ட விருத்தம் பலவானால், பட்ட
    பொறியின் வகைய கருமம், அதனால்,-
    அறிவினை ஊழே அடும்.

    பொருள் விளக்கம்:
    குறிப்பிட்டுச் சொல்லப்படும் பெரிய அறிஞர்கள் இடத்திலும் உள்ள குற்றங்கள் பலவாக இருக்குமானால், (அது அவர்களது) முன்வினைப்பயன் செய்த செயலாகும். ஆகையினால் அறிவினை விதி அழித்து பேதைமையாக்கும்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    பேரறிவு கொண்டோரும் விதியின் காரணத்தால் மதியிழந்து குற்றம் செய்வார்கள். விநாச காலே விபரீத புத்தி என்பது வடமொழி கூறும் வழக்கு. ஒருவர் கெடும் நேரம் காலம் வந்தால் மதிக்கெட்டு குற்றமிழைத்து அழிந்து போவார்கள். பிறர் போற்றும் அறிஞர்களும் தவறு செய்வதற்கு அவர்களது தலையெழுத்தே காரணம், விதியின் வழி அவர்களது மதி சென்றது என்பதைத் திருக்குறள்,

    பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூழ் உற்றக் கடை. (குறள்: 372)

    ஒருவர் சிறுமைப்பட வேண்டிய விதியிருந்தால் அவர்கள் அறிவழிந்து போவார்கள், அதுவே அவர்கள் சிறப்படைய வேண்டிய நேரமாக இருக்குமானால் அறிவாற்றலால் உயர்வடைவர் என்று விளக்குகிறது.

    Share