பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

 

பழமொழி: தனிமரம் காடாத லில்

 

எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்
தனிமரம் காடாத லில்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 
பதம் பிரித்து:
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
கதித்துக் களையின் முதிராது தீர்த்து,
நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீர
தனி மரம் காடு ஆவது இல்.

பொருள் விளக்கம்:
எதிர்த்திடும் பகைவரின் பகைமையை அது தோன்றும் பொழுதிலேயே, விரைந்து நீக்கிப் பகை முற்றவிடாமல் அழித்து, தன்னை விரும்புமாறு பகைவரின் நண்பர்களையும் தம் வசப்படுத்திவிட்டால், தனித்திருக்கும் மரம் காடாகாது அல்லவா (அவ்வாறாகத் தனித்துவிடப்பட்ட பகைவர் தீமை செய்ய இயலாத வகையில் வலுவிழப்பார்)

பழமொழி சொல்லும் பாடம்:
பகைவரை வளரவிடாது, அவர் கொண்ட பகைமையை முளையிலேயே கிள்ளி பகையை அடியோடு அழித்துவிட வேண்டும். பகையை வளர விடாது வேரறுக்க வேண்டும் என்ற கருத்தினை வள்ளுவர்,

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. (குறள்: 879)

முள் மரத்தை அது சிறிய செடியாக இருக்கும் பொழுதே வளரவிடாமல் அழித்துவிடவேண்டு. வளரவிட்டு அதை அழிக்க முற்பட்டால் அழிப்பவர் கையை பதம் பார்த்துவிடும் என்று, பகையை அழிக்கும் வழியைக் காட்டுகிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.