Author: மீ. விசுவநாதன்

  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (17)

     
    மீ.விசுவநாதன்
    பகுதி: 17

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2-1

    கங்கை, உமா தேவி கதை
    வைகறைப் பொழுது வந்ததென
    வாழ்த்தி எழுப்பி விட்டவுடன்
    கைகளால் நீரை வான்நோக்கி
    வழங்கித் துதித்தான் காகுத்தன் !
    பொய்யிலா குருவின் முகம்நோக்கி
    “புனித சோணா நதிகடந்து
    அய்யனே எங்கு செலவுள்ளோம்
    அடியேன் தனக்கு அருளென்றான்!” (1)

    உலகினைத் தாங்கும் உத்தமரின்
    உயர்ந்த வழியே நம்வழிதான்
    பலவினை போக்கும் கங்கைநதி
    பார்த்து வணங்கப் போகின்றோம்
    அலைகிற மனத்தை அடக்கிடுவோர்
    அங்கே அதிக மென்றுரைத்தார்
    விலையிலா தவத்தில் சிறந்துயர்ந்த
    விசுவா மித்ர ராஜரிஷி. (2)

    கங்கையை அடைந்து நீராடி
    கதிரைத் துதித்து வழிபட்டு
    எங்குமே பரந்த இந்நதியின்
    ஏற்றம் மிகுந்த வரலாற்றை
    உங்களின் வாக்கு வழியாக
    உரைக்கக் கேட்க விருப்பமென
    அங்கமே பணிந்து ஸ்ரீராமன்
    அரிய முனியைத் துதிசெய்தான். (3)

    யோகியர் சாந்த இடமாக
    சோலைக் காட்டு மாமலையாய்
    ஆகிய இமய “இமவானும்”
    அன்பு மனைவி “மேனா”வும்
    தூவிய பக்தி மலர்களுக்கு
    தோகை இருவர் பிறந்தார்கள் !
    தீவிர தவம்செய் “உமை”இளையாள்
    தேவ “கங்கை” மூத்தவளாம். (4)

    தேவரே கங்கை மகள்கேட்டு
    தேடி வந்த காரணத்தால்
    மூவரும் போற்றும் முதல்மகளை
    முறையாய்க் கொடுத்தார் இமவானும் !
    பூமகள் உமைக்கோ சிவன்கரத்தைப்
    போற்றிப் பிடிக்கத் துணைசெய்தார் !
    மாபெரும் மலையோன் மகள்கதையின்
    மகிமை சொல்லில் அடங்காது. (5)

    உமையினை மணந்த பரமசிவன்
    உடலின் காம உணர்வினுக்குத்
    தமைதினம் அடிமை செய்ததினால்
    தவத்தில் மேன்மைத் தேவர்கள்
    சிவனிடம் பணிவாய், “சிற்றின்ப
    நினைவை விட்டு வருகவென்றார்”
    அவனி சிறக்க வேண்டுமென்று
    அவர்தன் வீர்யம் அடக்கிவைத்தார். (6)

    உங்களின் வாக்குப் படிகேட்டு
    உயிராம் வீர்ய ஒளிசேர்த்து
    இங்குநான் பூமி மீதினிலே
    இறையின் சக்தி அளிக்கின்றேன்
    அங்கமே அக்னி உருவமென
    அழகு “கார்த்தி கேய”னென்று
    அங்குள கார்த்தி கைப்பெண்கள்
    அறுவர் பாலில் வளர்வனென்றார். (7)

    ஓசையே இல்லா உள்ளத்தில்
    ஓம்ஓம் என்ற பிரணவத்தை
    ஆசையாய்க் கொண்டு தவம்செய்ய
    அன்னை உமையும் காந்தனுமே
    மாசினை அழிக்கும் கங்கையுடை
    மலையாம் இமயம் அடைந்தார்கள் !
    ஈசனின் மகனாம் கந்தனவன்
    தேவ சேனா பதியானான். (8)
    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 35, 36, 37ம் பகுதி நிறைந்தது)

    Share
  • “அவன், அது , ஆத்மா”

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்
    10.11.2017

    அத்யாயம்: 55

    கீழாம்பூர் S. சங்கர சுப்பிரமணியன்

    அவன் 1990ஆம் வருடம் மகரசங்கராந்தி (பொங்கல்) அன்று குருநாதரைத் தரிசிக்கச் சிருங்கேரிக்குச் சென்றிருந்தான். குருவைத் தரிசித்து விட்டு வரும் பொழுது, அவனுக்கு முன்பே பழக்கமான, “Call of Sankara”  என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.எம்.சுப்பிரமணியன் என்பவர், “ஆசார்யாள் தமிழில் ஒரு மாதப் பத்திரிகையைக் கொண்டு வரவேண்டும் என்றும், அது முன்பு வெளிவந்து கொண்டிருந்த “சங்கர கிருபா”வைப் போன்று சிறந்த ஆன்மிகப் பத்திரிகையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவதாகச் சொல்லி, தமிழிலும், ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்ட உனக்குத் தெரிந்த இளைஞரை என்னோடு தொடர்பு கொள்ளச் சொல்லு” என்று அவனிடம் கேட்டுக் கொண்டார். அவனும் முயற்சி செய்வதாக அவரிடம் உறுதி கூறினான்.

    கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்சென்னைக்குத் திரும்பிய இரண்டு தினங்களில் “நெல்லை கலாசார சங்கம்” என்ற அமைப்பு நடத்திய ஒரு கூட்டம் அண்ணா சாலையில் இருக்கும் மத்திய நூலகத்தின் மாடியில் உள்ள ஒரு அறையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் அருமையாக உரையாற்றியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரின் பெயர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் என்று அறிந்து கொண்டான். நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த இளைஞரிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு,” உங்களுக்குச் சொந்த ஊர் கீழாம்பூரா?” என்று கேட்க, அவரும் ஆமாம் என்று சொல்லி தன்னையும் அவனிடம் அறிமுகப் படுத்திக் கொன்டார். அந்த நேரத்தில், தான் சமீபத்தில் சிருங்கேரி சென்று வந்த விபரத்தையும், எம்.எம்.சுப்பிரமணியம் என்ற அன்பரின் கருத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்டான். உடனேயே,” சார்..எங்களுக்கும் சிருங்கேரி ஆசார்யாள்தான் குரு”.  தானே ஒரு பத்திரிகையைத்  துவக்க வேண்டும் என்ற விருப்பத்தில் “அம்மன் தரிசனம்” என்ற பெயரையும் பதிவுசெய்து வைத்திருப்பதாகவும், விரும்பினால் இந்தப் பெயரையே அவர்கள் பயன் படுத்திக் கொள்ளக் கொடுத்து விடுகிறேன்” என்றும் சொன்னார். மேலும் தமிழறிஞர் பி.சி.கணேசன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட “இந்து மதம் அழைக்கிறது” என்ற பத்திரிகைக்காக ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாசுவாமிகளைச் சந்தித்துத் தான் கண்ட நேர்காணலையும் அவனுக்குப்  படிக்கக் கொடுத்தார்.   அவன் அவரிடம் விடை பெரும் பொழுது,” நீங்கள் எம்.எம்.எஸ். அவர்களிடம் என்னுடைய விருப்பத்தைச் சொல்லுங்கள் என்றார்”. அவன் அன்று இரவே சிருங்கேரியில் இருக்கும் எம்.எம்.சுப்பிரமணியம் அவர்களுடன் தொலைபேசியில் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியனை சந்தித்த விபரங்களைச் சொல்லி, விபரமாகக் கடிதமும் எழுதி மறுநாள் அனுப்பி வைத்தான். அதன் பிறகு எம்.எம்.எஸ். அவர்களிடம் இருந்து பத்திரிகை தொடங்குவது பற்றி, கீழாம்பூருக்கும், அவனுக்கும் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து  இருந்து வந்தது.

    அம்மன் தரிசனம்” மாத இதழ் பிறந்த கதை

    ஒரு நல்ல நாளில் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனை சிருங்கேரிக்கு அழைத்து, “அம்மன் தரிசனம்”  என்ற பெயரிலேயே மாதப் பத்திரிகையைத் தொடங்குங்கள். ஸ்ரீ சாரதாம்பாள்நீங்களே ஆசிரியராக இருங்கள். உங்களுக்குப் பரிபூர்ண ஆசீர்வாதம்” என்று ஆசார்யாள் ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள், ஸ்ரீ சாரதாம்பாள் பதித்த ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், மந்திராக்ஷதையையும் கொடுத்து, சென்னைக்குச் சென்றதும் திரு. எஸ். விஸ்வநாதன் (என்பீல்ட் சேர்மன்) அவர்களைத் தொடர்பு கொண்டு மேற்கொண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று அனுப்பி வைத்ததாக அவனிடம் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் சொன்னார்.

    ஒரு வாரம் சென்றதும் “கீழாம்பூர்” அவர்கள் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ” சார்… என்பீல்ட் விஸ்வநாத மாமாவைப் பார்க்கப் போகிறேன். நீங்களும் வாருங்கள்” என்று அழைத்தார். இருவரும் திருவான்மியூர், சிவசுந்தர் அவின்யூவில் இருக்கும்  திரு. என்பீல்ட் விஸ்வநாதன் அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் வரும் விபரமறிந்து வைத்திருந்த திரு. என்பீல்ட் விஸ்வநாதன், இருவரையும் அன்போடு வரவேற்று, கீழாம்பூரிடம் புதிய பத்திரிகை தொடர்பான விபரங்களைக் கேட்டுக் கொண்டார். ஒரு பத்திரிகையைத் துவங்க என்னென்ன தேவையோ அவைகளை மிகவும் தெளிவாக எழுதி ” என்பீல்ட் விஸ்வநாதன்” மாமா அவர்களிடம் கீழாம்பூர் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்துப் படித்து மிகுந்த மகிழ்ச்சியோடு, “எல்லாம் நல்ல படியாக நடக்கும். கவலைப் படவேண்டாம். “அம்மன் தரிசனம்” என்ற இந்த ஆன்மிகப் பத்திரிகையில் வரும் செய்திகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் சிறப்பாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். அதுதான் இந்தப் பத்திரிகையின் தர்மம். அலுவலகத்திற்கான இடத்தையும் உடனேயே பார்த்து வந்து சொல்லுங்கள்” என்றார்.

    அம்மன் தரிசனம் இதழில் திரு. ஏ.என்.சிவராமன் அவர்களைக் கொண்டு “வேத மந்திரங்கள்” என்ற பெயரில் ஒரு தொடரை எழுதவும், பெரிய புராணத்தின் நாயன்மார்களின் கதையை, சிறுகதையாக எழுத எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் கேட்கவும் எண்ணம் இருக்கிறது என்று கீழாம்பூர் சொன்னவுடன், ” ரொம்ப சந்தோஷம். ஏ.என்.சிவராமனை உங்களுக்குப் பழக்கம் உண்டா என்றதும், “அவர் எனக்குத் தாத்தா முறை. அவர்தான் எனக்கு குரு” என்று கீழாம்பூர் சொன்னார். இந்த உரையாடலின் பொழுது என்பீல்ட் திரு. விஸ்வநாதன் அவர்களின் மனைவி திருமதி. கோமதி விஸ்வநாதனும் உடனிருந்தார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். “விஸ்வப்ரியா” என்ற பெயரில் கதைகளும், சிறுகதைகளும் எழுதியவர். விகடனில் முத்திரைக் கதைகளும் எழுதி இருக்கிறார். தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் நல்ல பாண்டித்தியம் கொண்ட மிகவும் பண்பான பெண்மணி.

    மயிலாப்பூரில் எல்டாம்ஸ் சாலையில் ஒரு அறையை வாடகைக்குப் பார்த்தோம். மாத வாடகை ரூபாய் ஐயாயிரம். முன்தொகை ரூபாய் பத்தாயிரம் என்று பேசி இந்தத் தகவலை திரு. விஸ்வநாத மாமாவிடம் கீழாம்பூர் சொன்னார். இடம் போதுமானதாக இருந்தது. முதல் இதழுக்கான கதை, கட்டுரை, கவிதைகளைக் கீழாம்பூர் தேர்வு செய்து, மயிலாப்பூரில் இருந்த “முருகன் பிரிண்டிங் பிரஸ்” மூலம்    மிக அருமையாக அச்சாகி “அம்மன் தரிசனம்” பத்திரிக்கையின் முதல் இதழ் 1990ம் வருடம்   செப்டம்பர் மாதம் வெளியானது. அப்பொழுது அந்த மாத இதழின் விலை ரூபாய் ஐந்து.

    இதழைச் செம்மையாகக் கொண்டு வருவதற்கு மிகவும் உதவியாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் கவிஞர் முருகதாசன், பாரதி காவலர் கு. ராமமூர்த்தி, கங்கா ராமமூர்த்தி, பி.ஆர்.விஸ்வநாதன், ஓவியர் ஜகன், அலுவலக உதவியாளர் குணசேகரன் ஆகியோர். அவனும் அம்மன் தரிசனம் இதழில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வந்தான்.

    கலைமகள் மாதப் பத்திரிக்கைக்கு ஆசிரியராக கீழாம்பூர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அம்மன் தரிசனம் இதழுக்கு கவிஞர் முருகதாசன் ஆசிரியரானார். அவர் சிறந்த மரபுக் கவிஞர். நேர்மையாளர். அவர் ஆசிரியராக இருக்கும் பொழுதுதான், 2006ம் வருடம் ஸ்ரீ சங்கர ஜயந்தி மாத இதழில் “ஸ்ரீ ஆதி சங்கர அத்வைத காவியம்” என்ற பெயரில் ஸ்ரீ சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை, மாதவீய சங்கர விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு தொடராக எழுதி வந்தான். கவிஞர் முருகதாசனுக்குப் பிறகு ஜெ.எஸ்.பத்மநாபன் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அம்மன் தரிசனம் வெள்ளிவிழா கண்டு மிகச் சிறப்பாக நடந்து வருவது குறித்தும், அது நூற்றாண்டைக் கடந்து பல்லாண்டுகள் ஆன்மிகப் பணியில் தொடர்ந்து வர அவனும், கீழாம்பூரும் குருவிடம் வேண்டிக் கொள்வதுண்டு. “அம்மன் தரிசனம்” அவர்களின் குழந்தை அல்லவா!கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் கலைமகள் பத்திரிக்கையில் நல்ல அறிஞர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிறார். சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கும் அவருக்கு மணிவிழா சென்ற வருட இறுதியில் நடைபெற்றது.

    மஞ்சரி மாத இதழின் ஆசிரியர் இலட்சுமணன் (லெமன்) அவர்களை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுமுதல் “லெமன்” அவர்களுடன் அவனுக்குத் தொடர்பு இருந்து கொண்டு வந்தது. அவன் எழுதிய “மிருதங்கம்” என்ற சிறுகதையை வாங்கிப் பிரசுரித்தார். கலைஞன் பதிப்பகம் தொகுத்த இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் “மிருதங்கம்” சிறுகதையும் தேர்வாகி இடம்பெற்றது அவனுக்கு மகிழ்ச்சி.  இலட்சுமணன் (லெமன்) மஞ்சரியில் இருந்து ஓய்வு பெற்றதும் அதன் ஆசிரியராக செங்கோட்டை ஸ்ரீராம் பொறுப்பேற்றார். அவரையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தது கீழாம்பூர்தான். இன்றும் அவனுக்கு ஸ்ரீராம் நல்ல நண்பர்.

    கீழாம்பூரின் குடும்பமே அவன் மீதும், குடும்பத்தார்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருப்பதும், அவனுக்கு நல்ல நண்பனாகக் கீழாம்பூர் கிடைத்ததும் குருவின் அருள்.

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்…

    Share
  • ”ஸ்ரீராம தர்ம சரிதம்” (16)

     
    மீ.விசுவநாதன்
    பகுதி: 16

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2-1
    “மிதிலைக்குப் புறப்படுதல்”

    பொழுது புலர்ந்த வேளையதில்
    புனிதக் கதிரின் மேன்மைகளை
    தொழுது முடித்த இராமபிரான்
    தூய முனியின் முகம்பார்த்து
    விழுது நாங்கள் உங்களது
    விருப்பம் அறிய விரும்புகிறோம்
    எழுத முடியா குருவருளே
    இயம்பும் அடுத்த செயலென்றார்! (1)

    அங்கே இருந்த முனிவர்கள்
    அன்பாய் இராமன் விழிநோக்கி
    சிங்கம் போன்ற சீராளா
    சேர்ந்து வருக எங்களுடன்
    பொங்கும் ஞான மிதிலைக்குப்
    போக வேண்டும் எல்லோரும்
    அங்கு நடக்கும் யாகத்தின்
    அருமை அப்படி என்றார்கள் ! (2)

    ஜனகரிடம் உள்ள “வில்”

    மிதிலை அரசன் ஜனகருக்கு
    மிகுந்த செல்வம் இருந்தாலும்
    எதிலும் அவர்க்குத் துளிகூட
    ஈர்ப்பே இன்றி வாழ்கின்றார் !
    முதியோ ரான முன்னோர்க்கு
    முன்பு கிடைத்த “வில்”லொன்றை
    புதியோ ரான நீர்காணப்
    புறப்ப டுங்கள் என்றார்கள் ! (3)

    “சோணா நதிக்கரை அடைதல்”

    விசுவா மித்ரர் புறப்பட்டார் ;
    விரும்பிப் பறவைக் கூட்டங்கள்
    பசுவும் கன்றும் விலங்கினங்கள்
    பக்தி யுடன்பின் வரக்கண்டு
    “திசையாம் வடக்கில் செல்கின்றோம்
    திரும்பி நீங்கள் செல்கவென்று”
    அசையா மனத்து முனிமன்னன்
    ஆசி தந்து அனுபினரே ! (4)

    சோணா நதியின் கரைவந்து
    சுகமாய் சந்தி செய்தார்கள்
    காணா சாந்தி கிடைத்ததுபோல்
    கவலை மறந்து செபித்தார்கள் !
    வீணாய்க் காலங் கழிக்காத
    விசுவா மித்ரர் குலக்கதையை
    வாணாள் சிறக்க உதவுமென
    மனத்தால் வணங்கிக் கேட்டார்கள் ! (5)

    “விசுவாமித்ரரின் குலக்கதை”

    நான்கு முகனின் மகன்”குசனின்”
    நல்ல தவத்தின் பயனாக
    நான்கு மகன்கள் பிறந்தார்கள்
    ஞான வான்கள் ஆனார்கள் !
    வான மழைக்கு ஈடாக
    வளர்ந்த பிள்ளை “குசநாபன்”
    மான மிகுந்த பெண்பிள்ளை
    வரமாய் நூறு பெற்றிட்டான் ! (6)

    நூறு பெண்கள் அழகினிலே
    நொடியில் வீழ்ந்த வாயுவிடம்
    வேறு பெண்ணைத் தேடுங்கள்
    விட்டு விடுங்கள் ஆசையென
    கூறிய மொழியில் சூடாகிக்
    கோபங் கொண்ட வாயுவுமே
    நேரிய பெண்கள் யாவரையும்
    நெஞ்சம் நடுங்கச் செய்துவிட்டான். (7)

    பெண்கள் பொறுமை நிலைபுரிந்து
    “பிரும்ம தத்தர்” எனும்மன்னன்
    திண்ணம் இவர்க்குத் துணையென்றே
    சேர்த்து வைத்தார் தந்தைதான் !
    பெண்கள் சென்ற பின்தனக்குப்
    பிள்ளை வேண்டிக் குசநாதன்
    எண்ணி யாகம் முடித்திட்டார் !
    இனிய மகனாய்க் “காதி”பெற்றார். (8)

    அறத்தை அகத்தில் காக்கின்ற
    அன்புத் தந்தை “காதிக்கு”
    புறத்தே இரண்டு பிள்ளைகள் !
    போற்றும் படியாய் “சத்யவதி”
    துறவை மனத்தில் வைத்திருக்கும்
    தொண்டன் அடியேன் “கௌசிகனும்”
    இறைவன் கொடுத்த கொடையாக
    என்றும் நிலைத்து வாழ்கின்றோம். (9)

    “கௌசிகீ நதியின் வரலாறு”

    மூத்த பெண்ணை “ரிசீகமுனி”
    முறையாய் மணந்த பின்னாலே
    காத்த தவத்தின் பயனாக
    களிக்கும் தேவ ருலகத்தில்
    பூத்த பொன்னாய் ஆனார்கள் !
    பூமி காக்க சத்யவதி
    ஏத்த நதியாம் “கெளசிகீயாய்”
    இமயம் வழிந்து செழிக்கின்றாள். (10)

    “குலத்தின் பெருமை கேட்டதனால்
    குணத்தைக் கூறித் தெரிவித்தேன்
    நிலத்தின் பெருமை சத்தியத்தை
    நிதமும் காக்கும் மேலோரின்
    பலத்தில் தானே உள்ளதென்று”
    பண்பு விசுவா மித்திரரும்
    நிலத்தில் நிலவின் ஒளிபரவும்
    நேரம் இரவில் துயில்கொண்டார். (11)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 31, 32, 33, 34ம் பகுதி நிறைந்தது)

     

    Share
  • “அவன், அது , ஆத்மா” (55)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 54

    “வங்கக் கவிஞர் டாக்டர் ஜகன்னாத் சக்ரவர்த்தி”

    டாக்டர் ஜகன்னாத் சக்ரவர்த்தி

    வங்கக் கவிஞர் டாக்டர் ஜகன்னாத் சக்ரவர்த்தியின் அறிமுகம் அவனுக்கு மனைவி சீதாலட்சுமி மூலமாகக் கிடைத்தது. அவர் கொல்கத்தாவில் இருக்கும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றியவர். நவீன வங்க இலக்கியத்தின் தலைசிறந்த கவிஞர். இந்திய அரசாங்கம் வழங்கும் “தேசியக் கவி” (National poet) என்ற விருதை இரண்டு முறையும், சோவியத் நாடு நேரு பரிசையும் பெற்றவர். இனிமையாகப் பழகும் தன்மையும், அன்பும் கொண்ட ஒரு நல்லறிஞர். “ஷேக்ஸ்பியர்” படைப்புகளில் ஆழ்ந்த புலமை கொண்ட உலகத்தரத்தில் மதிக்கப் பெற்ற அறிஞர்.

    பத்து கவிதைத் தொகுதிகள், மூன்று ஆய்வு நூல்கள், இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள், ஷேக்ஸ்பியர் பற்றிய ஆங்கில ஆய்வு நூல்கள் இரண்டு, காந்தியின் வாழ்க்கை வரலாறு போன்ற அவரது படைப்புகள் முக்கியமானவைகளாகக் கருதப்படுகிறது.

    1985ம் வருடம் அக்டோபர் மாதத்தில், அவனுக்கு மனைவி அவனை அழைத்துக் கொண்டு கொல்கத்தாவில் ஜாதவ்பூரில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்றிருந்தார். தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பலரை அவருக்குத் தெரிந்திருந்தது. முக்கியமாக மகாகவி பாரதியாரின் கவிதைகளை அவர் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாக அறிந்து வைத்திருந்தார். ஞானக்கூத்தன், கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ் போன்றவர்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்ததை அவருடன் உரையாடும் பொழுது அறிந்து கொள்ள முடிந்தது. அவரது சீரிய வழிகாட்டுதலில்தான் அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மி “மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வால்ட் விட்மன் கவிதைகளை ஒப்புவமை” ஆய்வை ஆங்கிலத்தில் செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

    சதக அமைப்பைக் கொண்டு வங்காள மொழியில் திரு. ஜகன்னாத் சக்கரவர்த்தி எழுதி இருந்த நூறு கவிதைகளை டாக்டர் சீதாலட்சுமி அவர்கள் “மௌன இமாலயமும் அமைதி ஆல்ப்ஸும்” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து மார்ச் மாதம் 1992ம் வருடம் அவனுக்கு நண்பர் திரு.அகிலன் கண்ணன் அவர்களின் “தாகம்” பதிப்பகம் மூலம் வெளியிட்டார்கள். அந்தக் கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் அருமையான முன்னுரை வழங்கி,” எனக்கு ஜகன்னாத் சக்கரவர்த்தியை நேரில் பார்த்து உரையாட வேண்டும். அவர் சென்னைக்கு வரும்பொழுது தெரியப் படுத்துங்கள்” என்று சொல்லி இருந்தார். இந்த மொழிபெயர்ப்புக் கவிதை வெளியான மார்ச் மாதமே (28.03.1992) அந்தத் தொகுப்பைப் பார்க்கும் முன்பே புற்றுநோய் காரணமாக தனது அறுபத்தி எட்டாவது வயதில் அவர் விண்ணுலகம் சென்றுவிட்டது ஒரு துரதிருஷ்டம்.

    தொகுப்பில் இருந்து ஒரு கவிதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

    “ஒரு தடவை கலிபோர்னியாவில்”

    “ஒருதடவை கலிபோர்னியாவில் …….
    ரெட்வுட் காட்டில் நடக்கும் பொழுது உணர்ந்தேன்
    நான் தனியொருவனாகவே
    முழுக் காட்டையும் விட மேல்லானவன் என்று.
    இன்றோ ஆல்ப்ஸின் மேல் ஏறி வந்தபின்
    எனக்குத் தோன்றுகிறது
    நான் தனியொருவனாகவே
    இந்த மலை, காடு இரண்டையும் விட
    மேலானவன் என்று.
    காட்டாலும், மலையாலும்
    தங்களுக்குள் இந்த பூமியைப் பங்கு கொள்ள முடியவில்லை
    எனக்கும் உனக்கும்
    மற்ற யாத்திரிகர்களுக்கும்
    நிற்க இடம் தர வேண்டி வந்து விட்டது.
    நான் உண்மையிலேயே அபரிமிதமானவன்.”

    “இவரது கவிதைகள் எளிமையும், அமைதியும் உடையனவாக உள்ளன. மன விரிவையும், விடுதலை உணர்வையும்,சிறிதளவு துக்கத்தையும் கூடத் தருகின்றன. நமக்கு இவரது கவிதைகள் ஒரு நல்ல வரவு. மொழிபெயர்ப்பில் ஒரு இனிய இசைகூடக் கேட்கிறது” என்று கவிஞர் ஞானக்கூத்தன் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

    03.11.2017

    மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (15)

    மீ.விசுவநாதன்
    பகுதி: 15

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2
    “சித்தாசிரமம் என்ற காட்டுப் பகுதி”

    சிந்தையிலே மகிழ்ச்சிதனைக் கூட்டும்
    “சித்தாச்ர ம”க்கதையைக் கேட்பீர் !
    முந்தயநாள் மாவிஷ்ணு இங்கே
    முடிவில்லா மாதவத்தைச் செய்தார் !
    மந்திரத்தை மனத்துள்ளே ஓதி
    மகத்தான பேரின்பங் கொண்டார் !
    அந்தவோர் வேளையிலே தேவர்
    அனைவருமே அவர்முன்னே வந்தார் ! (1)

    “எங்களது மனக்குறையைக் கேட்பீர் !
    இணையில்லா தர்மத்தால் மூன்று
    மங்காத உலகத்தை ஆளும்
    வரங்கொண்ட “மாபலி”யாம் ராஜன்
    இங்குயர்ந்த வேள்வியொன்று செய்து
    இரப்போர்க்கு இல்லையின்றி ஈந்து
    பொங்குபுகழ் பெற்றுவிட்ட தாலே
    போச்சுதையா இந்திரனின் பேரும் ! (2)

    “வாமனாவதார நோக்கம்”

    நன்றுடனே ஓருதவிநீர் செய்வீர்
    ஞானி”காசி யபர்”க்குமக னாகச்
    சென்றுடனே பிறந்திடுவீர் ” என்றார்
    தேவரெலாம் விஷ்ணுவிடம் ஒன்றாய் !
    அன்றவர்க்கு வாக்களித்த விஷ்ணு
    அழகான வாமனனாய்த் தோன்றி
    நின்றானே மாபலியின் முன்னே
    சிறுகையால் தானம்தா வென்று ! (3)

    மாபலியும் ஈந்தவுடன் மூன்று
    வளரடியால் வான்பூமி தொட்டு
    மாபலியில் தலைமேலே மூன்றாம்
    மணியடியை அழுத்தியவன் வைக்க
    பூமழையாய்ப் புண்ணியமும் பெற்று
    புகழோடு சிரஞ்சீவி ஆனான் !
    மாவிஷ்ணு தவம்செய்த காடே
    மதிப்புமிகு “சித்தாச்ரம்” ஆச்சு ! (4)

    இப்படியோர் இடத்தில்தான் நாங்கள்
    இமைமூடித் தவம்செய்வோம் உள்ளே !
    எப்படியோ இதையறிந்து கொண்டு
    எங்களது வேள்வித்தீ மீதில்
    தொப்பெனவே மாமிசத்தை வீசி
    தொல்லையினைச் செய்கின்றார் ரெண்டு
    தப்பான அசுரர்கள் நித்தம் !
    தடுத்திடுவாய் ஸ்ரீராமா” என்றார் ! (5)

    “வேள்வியைக் காத்தல்”

    ஆகட்டும் குருதேவா என்று
    அதிகாலைச் சூரியனைப் போற்றி
    தேகத்தில் பற்றினையே விட்ட
    தெளிவான யோகிகள் செய்யும்
    யாகத்தைக் காப்பதற்கே இங்கே
    அரணாக இருவருமே நிற்போம்
    சோகத்தைப் போக்கிடுவோம், “ராமன்”
    சொன்னசொலைக் காத்திடுவேன் என்றான் ! (6)

    “மாரீசன், சுபாகு”வென ரெண்டு
    வாலிபத்து அரக்கருடன் நல்ல
    போரிட்டு மாரீசன் மீது
    பொல்லாத அம்பொன்றை ஏகி
    நூறான யோசனைகள் தாண்டி
    நுரைபொங்கும் கடலுக்குள் போட்டான் !
    கூரான அம்பொன்றை வீசி
    சுபாகுவெனும் அரக்கனையும் கொன்றான் ! (7)

    “தீயவர்கள் செயலுக்கு நானே
    தீர்ப்பெழுதித் தீர்திடுவேன்! எந்த
    மாயாவி யானாலும் தர்ம
    வாழ்வுக்காய்ப் போராடி வெல்வேன்!”
    யோகியரே ஆசிதாரும் என்ற
    யுகபுருஷன் ஸ்ரீராமன் பார்த்து,
    “ஆசிபல ஆசிபல” வென்று
    அரியகுரு அன்பொழுகச் சொன்னார்! (8)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 29, 30ம் பகுதி நிறைந்தது)

    Share
  • “அவன், அது , ஆத்மா” (53)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 53

    கவியோகி வேதம்

    பாரதி கலைக்கழகம் சார்பாக நடைபெறும் கவியரங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளும் கவிஞர்களில் கவியோகி வேதமும் ஒருவர். அவரது கவிதைகளில் கார, சாரம் இரண்டுமே இருக்கும். நல்ல நகைச்சுவையும் இருக்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அத்தாழநல்லூர்தான் அவரது பூர்வீகம். தாமிரபரணிக் கரையில் இருக்கும் அந்த ஊரில்தான் “கஜேந்திர மோக்ஷம்” நிகழ்ந்தது என்று புராணம் சொல்கிறது.

    கவிஞர் வேதம், கவிஞர் வ.வே.சு.
    கவிஞர் வேதம் நல்ல மரபு அறிந்தவர். 1978ம் வருடம் சென்னையில் இருக்கும் ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலில் “சக்தி” என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. அதில் அவன் ஸ்ரீ கோமதி அம்மனைப் பற்றிய கவிதையைப் படித்தான். அறுசீர் விருத்தத்தில் எழுதப் பட்டிருந்த அந்தக் கவிதையை “வேதம்” அவர்கள் அவனிடம் இருந்து வாங்கிப் படித்து விட்டு, அவனைப் பாராட்டியதோடு, கவிஞர் சுரதா எழுதிய “தேன்மழை” என்ற கவிதைத் தொகுப்பை, “என் அன்பு விசுவுக்கு” என்று எழுதி அவனுக்குப் பரிசாக அளித்தார். அத்துடன் கி.வா.ஜ. எழுதிய “கவி பாடலாம்” என்ற நூலும் படிக்கக் கொடுத்தார். அவனது ஒவ்வொரு கவிதையையும் படித்துப் பாராட்டியும், திருத்தங்கள் தேவைப்படும் இடத்தில் அதைச் சொல்லியும் ஊக்கம் தரும் ஒரு நல்ல உள்ளம் அவருக்கு உண்டு.

    அவர் சென்னையில் பெசன்ட் நகரில் “ரிசர்வங்கி” அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்த அவரது இல்லத்தில் நடைபெற்ற கவியரங்குகளிலும் அவன் பங்கு பெற்றிருக்கிறான். அரங்கு முடிந்தவுடன் நடைபெறும் விருந்தில் அவரும், அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகளும் அன்போடு உணவு பரிமாறி உபசரிப்பார்கள். அப்படி ஒரு முறை நடைபெற்ற கவியரங்கில்தான் அவனுக்கு எழுத்தாளர் “ஜெயரதனை” அவர் அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகத்தால் “ஜெயரதன்” இல்லத்தில் (பெசன்ட் நகரில்தான்) அப்போதய “அமுதசுரபி” இதழின் ஆரிசிரியர் விக்கிரமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலக்கியக் கூட்டத்தில் அவன் “மனிதப் பாடம்” என்ற கவிதையை வாசித்தான். “விஸ்வநாதன்…உங்கள் கவிதையில் ஒரு நல்ல கதையும் இருக்கிறது..நீங்கள் சிறுகதைகளும் எழுதுங்கள்” என்று அவனைப் பாராட்டினர் எழுத்தாளர் விக்கிரமனும், ஜெயரதனும். ஜெயரதன் ஜோதிடத்திலும் தேர்ந்தவர்.

    கவிஞர் வேதத்திற்கு “மகான் லஹரி பாபாஜி” மீது உண்டான தீவிர பக்தியால் யோகக்கலையும் கற்று, கவியோகியாகி அன்பர்களுக்கும் தான் கற்ற வித்தையைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,” விசு…நீ உடனேயே ‘சந்தவசந்தம்’ குழுமத்தில் சேர்ந்து உனது கவிதைகளை அதில் பகிர்ந்துகொள். கவிமாமணி இலந்தை ராமசாமிதான் அதன் நெறியாளர். பேராசிரியர் கவிஞர் பசுபதி, கவிஞர் அனந்த் போன்ற அறிஞர்கள் அதில் இருக்கிறார்கள். உனக்கு மிகவும் பயனாகும்” என்று அந்தக் குழுமத்தில் இணைந்து கொள்ள வழிசெய்தார் கவியோகி வேதம். அவனுக்கு அந்த நல்லோர்களின் அறிமுகமும், தொடர்பும் அவனைச் செம்மைப் படுத்தி வருகிறது என்பது உண்மைதான். அதுபோலவே “இலக்கியவேல்” ஆசிரியர் கவிஞர் சந்தர்சுப்ரமணியனுக்கு அவனை அறிமுகப்படுத்தி அந்த இதழிலும் எழுத வைத்து மகிழ்ந்து வருபவர்.

    கவியோகி வேதம் “இலக்கியவேல்” பத்திரிகையில் “ஒரு குக்கிராமத்திலிருந்து குகை பாபாஜிவரைஎன்ற தலைப்பில் சுயசரிதையை அருமையான கட்டுரைவடிவில் எழுதி வந்தார். அதையே “ஒரு குக்கிராமத்திலிருந்து மகான் லஹரி பாபாஜி குகைவரை” என்ற நூலாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் தனக்குக் குருவின் ஆசி எப்படியெல்லாம் வழிநடத்துகிறது என்பதை மெய்சிலிர்க்கும் படியாக எழுதியிருக்கிறார். அவர் ஒரு நல்ல சிறுகதைப் படைப்பாளியும் கூட. எல்லாவற்றையும் விட, அவர் சகமனிதர்களிடம் காட்டும் அன்பு மகத்தானது.

    கவிமாமணி வ.வே.சுப்பிரமணியன்

    “தோப்புக் கரணமிடின் தொல்லைவினை நீக்கியருள்
    காப்புத் தருவாய் கணபதியே – யாப்புள்ளே
    உன்னைப் பிடித்தே உருவம் சமைத்துள்ளேன்
    என்கவிதைத் தேரினிலே ஏறு.”

    இது கவிமாமணி வ.வே.சுப்ரமணியன் என்ற வ.வே.சுவின் ஒருதுளிக் கவிதை . அவர் ஒரு அற்புதக் கவிஞர். சென்னையில் உள்ள “விவேகானந்தாக் கல்லூரியில்” பேராசிரியராக இருந்து, முதல்வராக உயர்ந்த அறிஞர். சிரித்த முகமும் , நகைச்சுவைப் பேச்சும் இவரது முத்திரை. நல்ல சங்கீத ஞானம் உள்ளவர். பாரதிக் கலைகழகம் கண்ட கவிஞர்களில் “ரத்தினம்” இவர். அவனுக்குக் கவிஞர் வ.வே.சு.வுடன் 1978ல் இருந்தே மிக நல்ல பழக்கம் இருந்து வருகிறது.

    அவனுக்குத் திருமண வரவேற்பு (23.06.1985) நிகழ்ச்சி அன்று நடைபெற்ற கவியரங்கிற்கு வ.வே.சு.தான் தலைமை தாங்கினார். மிக அருமையாகப் பாடியும், கவிஞர்களை கவிதையிலேயே அழைத்துக் கருத்துச் சொன்ன பாங்கும் இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது. அவரது கவிதையில் ஒரு “அமங்கலச்சொல்” இருக்காது. ஒரு தேர்ந்த நல்லாசிரியரின் குரலை அவரது கவிதைகளில் கேட்கலாம்.

    அவனுக்கு அப்பா, மனைவி, குழந்தைகள் என்று அனைவரிடமும் அவர் அன்போடும், நட்போடும் இன்றும் பழகி வருகிறார். அவனது குடும்பத்தின் அன்புக் கவியென்று அவரைச் சொல்லுவான்.

    பாரதி கலைக்கழகம் அவனுக்கு “கலைமாமணி” விருது கொடுத்த அன்று, அவன் எழுதிய கவிதைகளைத் தொகுத்து “மனித நேயம்” என்ற பெயரில் ஒரு நூல் வெளியிடப் பட்டது. அதில் இருக்கும் அத்தனை கவிதைகளையும் தேர்வு செய்து கொடுத்து, அதற்கு அருமையான வாழ்த்துரையும் அளித்தவர் கவிமாமணி வ.வே.சு. அவர்கள்தான்.

    ஒவ்வொரு மாதமும் “தமிழ் வளர்த்த சான்றோர்கள்” என்ற தலைப்பில் தமிழுக்காகத் தொண்டு செய்த பெரியோர்களைபற்றி கவிமாமணி வ.வே.சு.வும், அது தொடர்புடைய ஒரு அறிஞரும் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்குச் சென்று வந்தால் ஒரு நூறு நூல்களைப் படித்த பக்குவம் அவனுக்குக் கிடைப்பதாக அவன் உணருகிறான்.

    “அம்மன் தரிசனம்” மாத இதழில் ஆசிரியரும் மாணவரும் உரையாடுவதுபோல முனைவர் வ.வே.சு. எழுதிவரும் இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைத் தொடர் மிகப் பிரபலம். அதுபோலவே தினமணி நாளிதழில் எழுதி வந்த சுயமுன்னேற்றக் கட்டுரைகளும் மிக மிகப் பயனுள்ளவை.

    “அத்தனை பயணங்களுக்கும் ஆரம்பப் புள்ளி
    அன்று நாம் படித்த ஆரம்பப் பள்ளி.”

    என்று தான் படித்த பள்ளியின் நினைவுகளைப் பற்றி வ.வே.சு.எழுதிய கவிதையில் அவனுக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

    “நான் படித்த பள்ளி – இது
    ரொம்ப நல்ல பள்ளி
    மானைப் போலத் துள்ளி – தினம்
    மகிழ்ந்திருந்த பள்ளி.

    ஆட்டம் பாட்டம் ஓட்டம் – விளை
    யாட்டில் என்றும் நாட்டம்.
    வீட்டில் நேரம் கொஞ்சம் – வெளி
    வீதியில்தான் நெஞ்சம்

    அவ்வப்போது சண்டை – சில
    அடிகள் உடையும் மண்டை.
    பத்துக் கோடிக்கில்லை – வெறும்
    பல்பத்துக்காய் சண்டை.

    அதிகம் அன்று ஒன்று – எனை
    அச்சம் செய்ததுண்டு; – அது
    பதிமூன்றாம் வாய்ப்பாடு – அய்யோ
    படுத்தி வைத்த பாடு.

    சீருடைகள் இல்லை – அன்று
    ஸ்மார்ட் க்ளாஸ்கள் இல்லை-எனில்
    சீர் நடைகள் கற்றோம் – இன்று
    சிறந்து வாழுகின்றோம்.”

    அன்பர் வ.வே.சு.வின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்களும் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகனும், மருமகளும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். வ.வே.சு.வின் மகன் பள்ளிச் சிறுவனாக இருந்த பொழுது ஒருநாள் அவர்கள் தி.நகரில் வசித்து வந்த வீட்டிற்கு அவன் சென்றிருந்தான். “டேய்.. விசு இன்னிக்கு மொட்டமாடிச் சுவர்ல ஒக்கார்ந்திருந்த ஒரு காக்கையைக் காட்டி, சுந்தர் அதோ பார் காக்கை என்றேன். உடனே “அப்பா அதோபார் அதன் மூக்கை” என்று தன்னைக் கவிஞனின் பிள்ளையாக நிரூபித்து விட்டான்” என்று ஒரு குழந்தையைப் போல அவர் சிரித்துக் களித்தது பசுமையாக இருக்கிறது.

    27.10.2017

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (14)

    மீ.விசுவநாதன்
    பகுதி: 14

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1
    தாடகையின் பிறப்பு
    பிரும்மாவின் வரம்பெற்றுப் பிறந்தவளே இந்த
    பிரும்மாண்ட பலங்கொண்ட தாடகைப்பெண் என்பாள் !
    விரும்பித்தான் “சுந்தனை”யே திருமணமும் செய்தாள் !
    விவேகமிலா கோபத்தால் அகத்தியரைச் சீண்ட
    திரும்பியவர் சாபமிட வீழ்ந்திட்டான் சுந்தன் !
    தீராத ஆத்திரத்தில் தெய்வமுனி செய்யும்
    பெருமைமிகு வேள்விகளைச் சீர்கெடுத்து வந்தாள்
    பெயருக்குப் பெண்னென்ற பேரரக்கிப் பேயாள் !

    தீயோரைத் தீர்த்துவிட தெய்வபலங் கொண்ட
    ஸ்ரீராமா உன்னால்தான் திடமாகக் கூடும் !
    மாயோனாம் திருமாலே வதம்செய்தான் நன்கு
    மதிப்புள்ள பிருகுமுனி பத்தினியை அன்று !
    ஓயாது யோசித்தால் ஒருநாளும் எண்ணம்
    ஒளிபெற்றுத் திகழாது ! உடன்நீயும் அந்தப்
    பேயான தாடகையைப் பிணமாக்கி வீசு
    பெரும்பேர் சேருமென்றார் விசுவாமித் ரர்தான்!

    தாடகை வதம்
    குருவினது வார்த்தையைக் கும்பிட்டுக் கேட்டு
    குறிபார்த்து அம்பொன்றால் கொன்றிட்டான் அந்த
    உருபெரிய தாடகையை உயர்வீர ராமன் !
    உத்தமர்கள், தேவர்கள் ஓதினரே ஆசி !
    “வரும்நாளில் உன்காட்டில் மகத்தான வெற்றி
    மழைகொட்டும்! மனிதருக்குள் மாணிக்கம் உன்னால்
    பெருமைபெறும் ரகுவம்சம் ! பீடித்த துன்பம்
    விலகியோடும் நம்பிக்கை பெற்றோமே” என்றார் !

    விசுவாமித்திரர் வழங்கிய அத்திரங்கள்

    ராஜரிஷி மகிழ்ச்சியுடன் ராமனிடம் வந்து,
    “ராகவனே உன்பெருமை ரகசியங்கள் யாவும்
    ஆனமுதல் மூவருக்கும் அறியவொண்ணா தென்றார் !
    அளப்பில்லா அத்திரங்கள் அத்தனையும் தந்தேன்
    போனவுடன் அத்தனையும் திரும்பியுனைச் சேரும்
    பொல்லாரைக் கொன்றதனால் புகழ்பரணிப் பாடும் !
    வானவரின் துன்பத்தை மாயத்திடுக நன்றாய் !
    வருங்காலம் உன்பெயரை மறக்காது வைக்கும் !
    (தர்ம சரிதம் வளரும்)

     
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 25, 26, 27, 28,ம் பகுதி நிறைந்தது)

    Share
  • “அவன், அது , ஆத்மா” (52)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 52

    ‘ கவிமாமணி ந.சீ.வரதராஜன்

    கவிமாமணி நா.சீ.வரதராஜன் அவர்களை அவன் பாரதி கலைக்கழகக் கவியரங்கத்தில்தான் சந்தித்தான். அவர் ஒரு நல்ல ரசிகர். மற்றவர்களின் கவிதைகளைக் கூர்ந்து கேட்டு, படித்து அதன் நிறைகளை வாய்விட்டுக் கூறி பாராட்டி, ஊக்குவிக்கும் அற்புத ரசிகன்(ர்). அவரது கவியரங்கத் தலைமையில் கவிதை பாடுவது தனி அனுபவமாக அவனுக்கு இருந்தது. அவனிடமிருந்து கவிதைகளை வாங்கிப் படித்து விட்டு தேவைப்பட்டால் திருத்தங்களும் சொல்லுவார். கவிதையை மிக உணர்ச்சிபூர்வமாகப் படிக்கும் பொழுதே கேட்பவர்களின் இதயத்தில் அவர் சிமாசனம் போட்டு அமர்ந்து கொள்வார். ஒரு கவிதையை எப்படி அரங்கில் படிக்க வேண்டும் என்று அவனுக்குக் கற்றுக் கொடுத்தவர் அந்தக் கவிமாமணி. அவரது பிறந்த ஊர் நாங்குநேரி. அவனும் அவரது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால்,” டேய்…விசு..நானும் தாமிரபரணித் தண்ணியக் குடிச்வண்டா” என்று அவனிடம் வாஞ்சையாகப் பேசுவார். கவியரங்கங்களில் பங்கு பெரும் கவிஞர்களை அவர்தனது கவிதைவரிகளில் அழைத்து, பாடிய கவிஞரின் கவிதையின் ஜீவனைப் பிடித்து ரசித்து அதையும் தனது கவிதையிலேயே அவர் உணர்வுபூர்வமாகச் சொல்வதை நேரில் கேட்டவர்கள் பாக்கியசாலிகள்.

    கவிஞர் வாலி ஆனந்தவிகடனில் ஸ்ரீராமாயணத்தை வசன கவிதையில் “அவதார புருஷன்” என்ற தலைப்பிட்டு எழுதி வந்தார். அவன் அதைத் தொடர்ந்து படித்துவிட்டு அன்றே காலை வேளையில் அந்தக் கவிதையின் அழகை, வார்த்தைப் பிரயோகத்தை கவிஞர் வாலியிடம் தொலைபேசியில் பகிர்ந்து கொள்வான். அவரும் அவனது கருத்துப் பரிமாற்றத்தை மிகவும் ரசிப்பார். அதுபோலவே கவிஞர் ந.சீ.வா.வும் அந்தத் தொடரைப் படித்து,” விசு…இந்தவாரம் படிச்சியா….அந்த ஆளு என்னமா எழுதறார் பாரு….ஒவ்வொரு வாரமும் பின்னி எடுக்கரார்ப்பா” என்று தொலைபேசியில் அவனோடு பகிர்ந்து கொள்வார். ஒரு முறை கவிஞர் வாலி அவர்களைச் அவன் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தான். அப்பொழுது கவிஞர் ந.சீ.வா.வைப் பற்றியும், அவர் “அவதார புருஷனை”ப் பற்றிப் பகிர்ந்து கொண்டது பற்றியும், “பீஷ்மன்” என்ற பெயரில் அவர் சிறுகதைகள், நாவல்கள் எழுதிவருவதையும் தெரிவித்தான். ” ஓ..பீஷ்மனா…அவரது கதை, கவிதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்தது கிடையாது” என்றார் கவிஞர் வாலி. “ந.சீ.வா.வின் தொலைபேசி இருக்கிறது தரட்டுமா? என்றான். “தா..என்று வங்கிக் கொண்டு, உடனேயே அவரது இல்லத்தில் இருந்து ந.சீ.வா.வுடன் தொலைபேசியில் ஒரு பத்து நிமிடங்களுக்கு மேலாக உரையாடினார். பேசி முடித்ததும்,” விஸ்வநாதன்….ந.சீ.வா.வும் ஒரு ரசிகமணி. அவதார புருஷன் கவிதைகளை எப்படி ரசிக்கிறார் பாருங்க…அவரை ஒரு முறை வீட்டுக்கு அழைத்து வாருங்கள்” என்றார் கவிஞர் வாலி. வாரா வாரம் ந.சீ.வா. வாலியின் கவிதைகளை வரிக்கு வரி ரசித்து தொலைபேசியில் அவருடன் பகிர்ந்து கொள்வார். நேரில் பார்க்காமலேயே இருவரும் இப்படித் தங்களுக்குள் இலக்கியப் பரிமாற்றம் செய்து வந்த பொழுது, கவிஞர் ந.சீ.வா.வின் மகளின் திருமணத்திற்குக் கவிஞர் வாலி அவர்களை ந.சீ.வா.வின் மகன் பிரகாஷ் , மற்றும் குடும்பத்தார்கள் நேரில் சென்று அழைத்தனர். அவரும் வருவதாக உறுதி செய்தார். திருமணம் அடையாறில் இருக்கும் “ஆண்டாள் திருமண மண்டபத்தில்” வைத்து நடந்தது. திருமணத்திற்கு முந்தய நாள் காலையில் கவிஞர் வாலி அவர்கள் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,” விஸ்வநாதன்…..இன்று மாலையில் நம்ம ந.சீ.வா.வின் மகள் கல்யாண வரவேற்புக்கு வரலாம்னு இருக்கேன் . மண்டப வாசலில் நீங்கள் இருங்கள். நாம் இருவரும் சேர்ந்தே வரவேற்புக்குப் போகலாம்.” என்றார். அதன்படியே அன்று மாலையில் அவன் கவிஞர் வாலியின் வரவை எதிர் நோக்கி அந்த மண்டப வாசலில் காத்திருந்தான். அவரும் சரியான நேரத்தில் மண்டப வாசலில் வந்து காரில் இருந்து இறங்கிய உடன்,”விஸ்வநாதன்….எனக்கு ந.சீ.வா. யார்? என்பதைக் காட்டும். போனில்தான் பேசி இருக்கிறோம்..நேரில் சந்தித்தது கிடையாது” என்றார். அந்த மண்டபத்தில் பாரதிக் கலைகழகத்தின் தலைவர் இரா.சுராஜ், கவிமாமணி தமிழழகன், கவிஞர் ஐயாரப்பன் போன்ற இலக்கிய அறிஞர்களிடம் ந.சீ.வா. பேசிக் கொண்டிருந்தார். “அதோ நடுவில் இருக்கிறாரே..அவர்தான் ந.சீ.வா., அவரிடம் பேசிக் கொண்டிருப்பவர்தான் இரா.சுராஜ்” என்று கவிஞர் வாலியிடம் அவன் சொல்லிக் கொண்டு வந்தான். வாலி வருவதைப் பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் இருகைகளையும் நீட்டி,” வாருங்கள் கவிஞரே” என்று ந.சீ.வா. வரவேற்று அங்கு இருக்கும் நண்பர்களை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் காட்சியைப் பார்த்து அவன் மிகவும் மகிழ்ச்சி கொண்டான். நிகழ்ச்சி முடிந்து வாலி அவர்கள் புறப்படும் பொழுது,” ந.சீ.வா. ஒரு கவிஞர் மட்டுமில்லை…நல்ல ரசிகர்…நல்ல மனிதர் அவரது குடும்பம் நல்லா இருக்கும் விஸ்வநாதன் ” என்று வாயாரப் புகழ்ந்தார். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது அவரிடம் நெருங்கிப் பழகிய அவன் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    ந.சீ.வா. திருவல்லிக்கேணியில் வசித்து வந்த காலத்தில் அவரது வீட்டிற்கு அவனும், அவனுக்கு மனைவியும் அடிகடி சென்று பார்த்து பேசிக்கொண்டிருந்து விட்டு வருவார்கள். அவனுக்கு மனைவி சீதாலட்சுமி, வங்க எழுத்தாளர் “சரத்சந்திர சட்டர்ஜி”யின் நாவலை தமிழில் “கல்யாண மானவள்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்ததை “புதிய பார்வை” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பாவைச்சந்திரன் தொடராக வெளியிட்டு வந்தார். அந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வந்த ந.சீ.வா., சீதாலட்சுமியின் மொழிபெயர்ப்பை மிகவும் பாராட்டி, அந்தக் கதையைப் பற்றியும் அவர் விவாதித்தது அவனுக்கு இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. இப்படி உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதே ந.சீ.வா.வின் மனைவி அவனுக்கும், சீதாலட்சுமிக்கும் சுடச்சுட தோசை தந்து அன்போடு உபசரிப்பார்கள்.

    அவன் எழுதிய “தேர்” என்ற சிறுகதையை சுபமங்களாவில் படித்து விட்டு அவனுக்கு ஒரு தபால் கார்டில் பாராட்டி எழுதியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசி ஊக்கம் தந்தார். இது போன்று அவன் எழுதும் ஒவ்வொரு சிறுகதைகளையும் படித்துவிட்டு அவனோடு அவரின் விமர்சனக் கருத்தைப் பகிர்ந்து கொள்வார். கடிதமும் எழுதுவார். அதையெல்லாம் அவன் பத்திரமாக வைத்திருக்கிறான்.

    பேராசிரியர் நாகநந்தி அவர்கள் பாரதியாரின் பாஞ்சாலி சபதம் கவிதையை (சேவா ஸ்டேஜ் மூலமாக நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமன் குழுவினர் நடித்தது) பாரதி கலைகழகக் கவிஞர்களைக் கொண்டு நடிக்க வைத்து 1982ம் ஆண்டு நாடகமாக மயிலாப்பூர் பாரதிய வித்யாபவன் அரங்கில் அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் “விதுரன்” பாத்திரத்தில் மிகவும் உணர்ச்சிகரமாக ந.சீ.வா.நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

    ந.சீ.வா. எழுதிய கடேசிக் கவிதை “பிரிவு”. அதில் இருந்து சிலவரிகளை இங்கே பதிவு செய்கிறேன்:

    “காலத்தின் மாயத்தில் கனவு நிழலும் மறைய
    வேளை-வேகம்-மனைவி , வீட்டில் குழந்தைகள் !
    ஓடியுடல் களைத்தேன்; ஓய்வுபெற்று நிற்கையிலே
    நாடி வந்த இக்கடிதம் நமனுலகு நீசென்ற
    சேதியினைச் சொல்கிறது! சிந்தை கலங்கவில்லை
    போதிமர வாழ்க்கையதில் புத்தனென ஆனேனா?
    என்றோஎன் நினைவில்நீ எரிந்துவிட்டாய் என்பதனால்
    இன்றிங்கே நான்ஜடமாய் இறுகிப்போய் விட்டேனா?”

    இந்தக் கவிதை அவர் இறப்பதற்கு முன்பாகக் கல்கி பத்திரிகைக்கு அனுப்பி இருக்கிறார். அது வெளியாகும் போது “ந.சீ.வா.” இவ்வுலகை விட்டு வெளியேறி விட்டார். அவர் இறந்த செய்தியை அவனுக்கு நண்பனும், ந.சீ.வா.வுக்கு மிகவும் பிரியமான எழுத்தாளரும், கல்கி பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் இருந்தவருமான “பா.ராகவன்” அவர்களிடம் அவன் சொன்னவுடன்,” விபரம் இன்று காலையில் எனக்குத் தெரிந்தது. மிகவும் வருந்துகிறேன். அவர் தந்த கவிதையைத்தான் இப்பொழுது இந்த வார கல்கி இதழுக்காக அச்சேற்றிக் கொண்டிருக்கிறேன். இதுதான் அவரது கடேசிக் கவிதையாக இருக்கும்” என்றார்.

    கவிமாமணி, ரசிகமணி ந.சீ.வா.வின் அன்பான குடும்பத்துடன் பழகும் வாய்ப்பு அவனுக்கு இறைவன் அளித்த வரம். இன்றும் அவரது மகன் பிரகாஷ் மற்றும் குடும்பத்தார்களிடம் அவன் தொடர்பு வைத்து வருகிறான்.

    20.10.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • சிவபிரதோஷம் “வெண்பனித் தீயினன்”

    மீ.விசுவநாதன்

    ஸ்ரீ மகாசன்னிதானம்

     “அன்பே சிவம் “

    இறைவனுண்டா ஏமாற்றா? – என்
    ஏக்கத்தைத் தாய்க்குத் தெரிவித்தேன்
    நிறைமனத்தில் அன்புவைநீ – அந்த
    நிமிடமுதல் இறையே நீயென்றாள் .

    தெய்வமுண்டா கிடையாதா ? – குருவே
    தெளிவுதாரீர் எனக்கே எனக்கேட்டேன்
    ஐயமின்றி உண்டென்றார் – அதை
    அனுபவத்தில் கண்டே உணரென்றார்.

    கடவுளுண்டா கற்பனையா ? – இரு
    கண்மூடிக் கேட்டேன் எனக்குள்ளே
    அடமனிதா உன்னைநம்பி – நீ
    வைக்கின்ற அடியே கடவுள்தான்.

    (இன்று 17.10.2017 பிரதோஷம்)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (13)

    மீ.விசுவநாதன்
    பகுதி: 13

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1

    தாடகவனத்தை அடைதல்

     

    காலையிலே எழுந்தவுடன் கதிரவனை வேண்டி
    காகுத்தன் இலக்குவனும் கடமைகளைச் செய்து
    வேலைகளை முடித்தவுடன், வேள்விதனைச் செய்யும்
    மேலான முனிவர்கள் முகமலர்ச்சி யோடு
    ஓலமிடும் கங்கையினை உடன்கடந்து செல்ல
    ஓடமொன்று தந்ததிலே உடனமரச் சொல்லி
    ஞாலமதில் தர்மமென்றும் நன்றாக வாழ
    நாகுளிர ஆசிதர நகர்ந்ததுவே ஓடம் ! (1)

    “மானசரோவர் எரியும் சரையூ நதியும்”

    கங்கையிலே செல்கையிலே காகுத்தன், “இந்தக்
    கடல்பேசும் பேரோசைக் காரணம்தான் என்ன?
    எங்களுக்குக் கூறிடுக” எனப்பணிவாய்க் கேட்க,
    “பிரும்மா”தன் மனத்தாலே பெரியதொரு ஏரி
    பொங்கிடவே செய்ததினால் புகழயோத்தி சுற்றிப்
    பூரித்துப் பாய்ந்தோடி “சரயு”வெனும் பேரால்
    கங்கையிலே கலக்கின்ற கடும்சத்தம் ” என்றார்
    களங்கமிலா மாமுனிதான் காகுத்தன் பார்த்து. (2)

    “மலாதம், கரூசம்” என்ற நாடுகள்”

    கரைவந்து சேர்ந்தவுடன் காட்டிற்குள் போகக்
    கவனமுடன் நடந்தார்கள் ! கணக்கில்லா புட்கள்,
    இரைதேடும் புலிக்கூட்டம், மிகநடுங்கும் மான்கள்
    இயல்பாக இருக்கின்ற இடமென்று காட்டி
    இறைதேடும் முனிவர்க்கும் இதுதானே சொர்க்கம்
    இதன்கதையைச் சொல்கின்றேன் ஸ்ரீராமா கேட்பாய் !
    கறைபட்ட இக்காட்டின் இந்தநிலை மாற்றக்
    கடமையுனக் குண்டென்று காரணமும் சொன்னார் ! (3)

    இந்திரனால் “விருத்திரா சுரன்”மாண்டான்! அந்த
    இறப்பிற்காம் தோஷங்கள் இந்திரனும் கொண்டான்!
    மந்திரங்கள் மூலமதை மாற்றிட்ட பின்பு
    வளமாச்சு “கரூசமும், மலாத”வள நாடும்
    இந்திரனின் நல்லாசி இதற்கிருந்த தாலே
    எப்போதும் முனிவர்கள் இங்கிருக்கும் போது
    அந்திபகல் எல்லாமே அவர்மனத்தில் சாந்தி
    அதுவாக அமைந்திட்ட அருட்குகையாய் ஆச்சு ! (4)

    “யட்சப் பெண் தாடகை”

    இந்தஒரு காலத்தில் இடறொன்று “யட்சப்
    பெண்ணுருவாய்” வந்ததனால் பெரியதொரு துன்பம்
    வந்ததென்பேன் ! “சுந்தனின்” மனைவியென ஆனாள்
    மகனாக “மாரீசன்” மடிமீது கொண்டாள் !
    இந்தவழிக் காட்டினிலே இருக்கின்றாள் அந்த
    இளவரக்கி தாடகையாய் எதிர்வந்து நிற்பாள் !
    எந்தஒரு தயக்கமுமே நெஞ்சினிலே வேண்டாம்
    இப்போதே கொன்றுவிடு என்றாரே ஞானி ! (5)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 24ம் பகுதி நிறைந்தது)

    Share
  • அவன், அது , ஆத்மா” (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை 51)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 51

    கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்

    கொங்குத் தமிழால் கொஞ்சும் கவிதைகளை எழுதி அதை அப்படியே கேட்போர் மனத்துள் அப்பிவிடும் ஆற்றல் படைத்த பெருமகனார் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் அவர்கள். சிறந்த மரபுக் கவிஞர். அவனுக்கு அவரது இசைகலந்த குரலில் அவரது கவிதையைக் கேட்க ஒரு தனி விருப்பம் உண்டு. பொதுவுடைமைக் கொள்கையையும், மனித நேயத்தையும் உட்கருத்தாகக் கொண்டிருக்கும் கவிதைகளைப் படைப்பவர் அவர். தும்பைப் பூப்போல வெள்ளை வெளேர் என்ற கதர் வேட்டியும், ஜிப்பாவும் போலவே அவரது மனமும் சுத்தமானது என்பது அவருடன் பழகியோர்களுக்கு நிச்சயம் புரியும். அவனுக்கு அந்தக் கவிஞருடன் பழகும் வாய்ப்பு அமைந்திருந்தது. “பாதை தெரியுது பார்” என்ற திரைப்படத்தில் அவர் எழுதி, எம்.பி. ஸ்ரீநிவாசன் இசையமைத்து மிகவும் பிரபலமடைந்த பாடல்தான்,

    சின்னச் சின்ன மூக்குத்தியாம்
    சிகப்புக் கல்லு மூக்குத்தியாம்
    கன்னிப் பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு
    கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்”

    இந்தப் பாடலை அவன் இப்பொழுதும் விரும்பிக் கேட்டுக் கொண்டிருப்பான்.

    கவிதை என் கைவாள் என்று சொன்னவரின் கவிதைத் தொகுப்பு “பாட்டு வராத குயில்”. நமது சமுதாயம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்ற அவரது நியாயமான எண்ணத்தை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு அது. உதாரணத்திற்கு ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.

    “சாதிவேறு பாடுகள்கூறி

    சண்டை நடக்கிறது – உங்கள்

    மண்டை உடைகிறது.

    சமய ஞானிகள் பேரைச் சொல்லி

    தலைகள் உருள்கிறது – நூறு

    கொலைகள் விழுகிறது”

    “நமக்குண்ணே ஒரு

    பொழுது விடியணும் – அது

    நம்மாலேதான் நடந்து முடியணும்

    சூரியன் கழுத்தில் துண்டைப் போட்டு

    சுண்டி யிழுக் கோணும்

    சும்மா நின்னா புண்ணியம் இல்லை இதை

    கண்டு நடக்கோணும்”

    1990ம் வருடம் செப்டம்பர் மாதத்தில், சென்னை தேனாம்பேட்டைப் பகுதியில் இருக்கும் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் ஒரு கவியரங்கம். கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்தான் தலைமை. சுமார் ஒரு பதினைந்து கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். அவன் உட்பட கவிமாமணி வ.வே.சு., கவிதாயினி நிர்மலா சுரேஷ் ஆகியோர்களும் இருந்தனர்.

    “கிணறு தோண்டுவோம் வா –தரையில்
    கீரல் வெடிப்பினில் ஒருநாள் தண்ணீர்
    பீறிட் டெழுவது திண்ணம் நம்பு
    கிணறு தோண்டுவோம் வா “

    என்ற கவிதையை வ.வே.சு. படித்தது இன்றும் அவரது குரலிலேயே அவனது செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அன்று அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

    1982ம் ஆண்டு கன்யாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மண்டைக்காடு என்ற பகுதியில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பகவதி அம்மன் கோவில் வழிபாட்டு விழாவின் போது நடந்த சண்டையில் ஏராளமானவர்கள் கொல்லப் பட்டனர். அந்தச் செய்தியை மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் பக்கத்தில் படங்களுடன் வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்து அவன் உறைந்து போனான். அப்பொழுது அவனுள் எழுந்த உணர்வின் வெளிப்பாடுதான் “மனித நேயம்” என்ற கவிதை. அதைத்தான் அவன் அன்றும் படித்தான்.

    “ஏசு நாதரும் விசுவ நாதரும்
    நேசம் வைத்தநம் நெஞ்சின் சிலைகள்தான்
    கன்னி மேரியோ கன்யா குமரியோ
    தன்னை உணர்ந்தவர் கண்ணில் ஒன்றுதான்
    பொய்யை மட்டுமே போற்றும் வாழ்க்கையில்
    தெய்வ உண்மைகள் தெரிவ தில்லைதான்
    மண்டைக் காட்டிலே மனித சக்திகள்
    சண்டை போடவா சமயம் வந்தது ?
    பெண்டு பிள்ளைகள் துண்டம் துண்டமாய்க்
    கொண்டு போகவா கோவில் வைத்தது?
    மதவ ளர்ச்சியா மனித நேயமா
    எதுஉ யர்ச்சியாய் இவர்க்குப் பட்டது?”

    இதை அவன் “மதவெறி ஏன்?” என்ற தலைப்பிட்டு 1982ம் ஆண்டே பாரதி கலைக்கழகக் கவியரங்கில் படித்தான். அவன் கவிதையைப் படித்து முடித்து அமர்ந்ததும் கவிமாமணி நா.சீ.வரதராஜன் அவர்கள் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து,” ரொம்ப நல்ல கவிதை விசு…” என்று பாராட்டி, இதன் தலைப்பை “மனித நேயம்” என்று மாற்றிக் கொள்” என்றார். அந்தக் கவிதையின் கருப்பொருள் இன்னும் மாறாது இருக்கும் வலியில்தான் எட்டு வருடங்கள் சென்ற பின்பும் அதை மீண்டும் அந்த அரங்கில் அவனைப் படிக்கத் தூண்டியது

    சிறுகதை எழுதத் தூண்டிய கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்

    அந்தக் கவியரங்கம் முடிந்தவுடன்,” தம்பி…உங்களது கவிதை என்னை உலுக்கி விட்டது. இதற்குள் ஒரு சமூகக் கதையே இருக்கிறது. நீங்கள் கவிதையும் எழுதுங்கள். அத்துடன் சிறுகதைகளும் எழுதுங்கள்” என்றார் கே.சி.எஸ். “எனக்கு சிறுகதை எழுதிப் பழக்க மில்லையே” என்றான். ” இல்லை தம்பி…உங்களால் நல்ல கதைகள் எழுத முடியும். நீங்கள் நாளையே ஒரு சிறுகதை எழுதி “தாமரை”க்குத் தாருங்கள்” என்று ஊக்கப் படுத்தினார். வீட்டிற்கு வரும் வழியில் அது பற்றியே அவன் சிந்தனை செய்து வந்தான். ஒரு பொறிதட்டியது. இரவில் பத்து மணிக்குமேல் அதை ஒரு சிறுகதையாக எழுதினான். “சிலேட்டு” என்று அதற்குத் தலைப்புத் தந்தான். மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து சில திருத்தங்கள் செய்து அந்தக் கதையை பிரதி எடுத்தான். இதைச் செய்து முடிக்கும் பொழுது இரவு இரண்டு மணியானது. தூக்கம் வராமல் படுத்தபடியே விடியலுக்காகக் காத்திருந்தான். காலையில் ஆறுமணிக்கு அந்தச் சிறுகதையை அவனுக்கு அப்பாவிடம் காட்டி,’ அப்பா இந்தக் கதையை இரவில் எழுதினேன். நீங்கள் படித்துப் பாருங்கள்” என்றான். அவருக்கு நல்ல வாசிப்புப் பழக்கம் இருந்தது. அப்பாவின் அருகிலேயே அவன் உட்கார்ந்து கொண்டான். கதையைப் படித்து முடித்தார். “நன்னா இருக்கு. இத “சீதா”விடமும் காட்டு” என்றார். அவன் அவனுக்கு மனைவியிடம் அந்தக் கதையைப் படிக்கக் கொடுத்தான். ” கதையின் கருவும், நடையும் நல்லாருக்கு” என்று அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் சொன்னாள். ஒரு இனம் புரியாத இன்பத்தில் அவன் திளைத்தான். அலுவலகம் சென்று அங்குள்ள தன் நண்பர்களுக்கு அதைப் படிக்கக் கொடுத்து அவர்களது கருத்தையும் கேட்டறிந்தான். அவர்கள் பாராட்டினார்கள் அவனது சிறுகதை முயற்சியை. அவன் அந்தக் கதையை எடுத்துக் கொண்டு தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் (இப்பொழுது அதன் பெயர் செவாலியே சிவாஜி கணேசன் சாலை) இருக்கும் “வலது கம்யூனிஸ்ட் கட்சியின்” அலுவலகமான “பாலன்” இல்லத்திற்கு அன்று மதியம் இரண்டு மணிக்குச் சென்றான். அங்குதான் “தாமரை” மாத இதழின் அலுவலகமும் இருந்தது.

    தோழர் ஆர். நல்லகண்ணு

    தாமரை இதழ் அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியரிடம் அவன் ஆசிரியர் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் இருக்கிறாரா ? என்று விசாரித்தான். அந்த ஊழியர் ஒரு கதர் வேட்டியும், சட்டை அணியாத திறந்த மார்புடன் தோளில் ஒரு துண்டையும் மடித்துப் போட்டிருந்தார். அவரைப் பார்க்க அவனது கிராமத்து ஒரு எளிய விவசாயியைப் போல இருந்தார். அவர் அவனிடம்,” என்ன விஷயமா அவரைப் பார்க்க வந்தீங்க?” என்றார். ” தாமரை இதழுக்காக ஒரு சிறுகதை கேட்டிருந்தார். அதை அவரிடம் கொடுக்க வேண்டும்” என்றான். ” என்னிடம் கொடுங்கள். இந்தக் கதையை தோழர் கே.சி.எஸ். வந்தவுடன் கொடுக்கிறேன்” என்றார். அவன் கொஞ்சம் தயங்கிய படியே நின்றான். “தம்பி..கவலைப் படடாதீர்கள். நான் அவரிடம் சேர்த்து விடுவேன். கதையை என்னிடம் தாருங்கள்” என்று வாங்கிக் கொண்டு, அங்கிருக்கும் ஒரு மரபெஞ்சைக் காட்டி ,” கொஞ்ச நேரம் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் வந்துவிடுகிறேன்” என்று உள்ளே சென்று விட்டார் அந்த எளிய மனிதர். இவர் யார் என்று தெரியாமலேயே கதையைக் கொடுத்து விட்டோமே என்ற நினைப்பில் அவன் அங்கே அமர்ந்திருந்தான். ஒரு பதினைந்து நிமிடங்கள் சென்ற பிறகு அந்த மனிதர் தன் கையில் அந்தச் சிறுகதையை வைத்துக் கொண்டு வெளியில் வந்து ,” தம்பி…இந்தக் கதை மிக நன்றாக இருக்கிறது. தொடர்ந்து நீங்கள் தாமரைக்கு உங்கள் படைப்புகளைத் தாருங்கள். ஆசிரியரிடம் இதைச் சேர்த்து விடுகிறேன்” என்று சொன்னார். அவன் மகிழ்ந்து போனான். அவரைப் பார்த்து,”ஐயா…நீங்கள் யார்?” என்று கேட்க, அவர் ,” தம்பி என்பெயர் ஆர்.நல்லகண்ணு” என்றார் ஒரு மெல்லிய புன்னகையோடு. அப்படிதான் அந்த எளிய மனிதர் அவனுக்கு அறிமுக மானார். அவனது முதல் சிறுகதை 1990ம் ஆண்டு அக்டோபர் மாத “தாமரை” இதழில் வெளியாகி அதன் ஒரு பிரதி அவனது வீட்டு முகவரிக்கே வந்து சேர்ந்தது.

    இதழைப் பிரித்து அவன் எழுதிய கதையைப் படிக்கும் பொழுதே ஒரு பரவசம் அவனுக்குள் பரவியிருந்தது. தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரவேண்டும் என்ற உந்துதல் அவனுக்குள் பிரகாசமாகத் தெரிந்தது.

    13.10.2017

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (12)

     

    மீ.விசுவநாதன்

    பகுதி: 12

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2

    காலையில் நதிக்கரையில்

    மங்கையரில் சிறந்தவளாம் கோசலையுன் அன்னை
    மடிபெற்ற புண்ணியத்தால் வந்துதித்த ராமா,
    செங்கதிரால் கோலமிட்டுச் சீர்கொண்டு உன்னை
    தெய்வீக ராகத்தில் எழுப்புகிறான் சூர்யன் !
    செங்கரும்பும் மஞ்சளுமாய் சேர்ந்தயிக் காட்டில்
    சிறகடிக்கும் பறவையெலாம் செயல்மறந்து உன்றன்
    செங்கமலப் பாதத்தை சிற்றலகால் தொட்டு
    ஸ்ரீராமன் நீவிழிக்கக் கீர்த்தனைகள் பாடும் ! (1)

    உதயகாலத்தில் கதிரவனை வணங்கினர்

    சந்தியிது காலத்தில் தவநீரை வார்த்து
    தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராம னோடு
    வந்திருக்கும் இலக்குவனும் மதியொன்றி நின்று
    மந்திரங்கள் சொல்லிப்பின் மாமுனியின் பாத
    வந்தனைகள் செய்தங்கு கைகட்டி நின்றார் !
    வழிகாட்டும் முனிவருடன் வழிநடந்து போக
    வந்தடைந்தார் அக்”காமா சிர”மத்தின் பக்கம் !
    மகத்தான முனிக்கூட்டம் வாசமிடும் கூடம் ! (2)

    காமாசிரமம் வந்தடைதல்

    ஆசார்யர் முகம்பார்த்து “அய்யனேநீர் சொல்வீர்
    அழகாமிவ் வாசிரமம் யாருடைய” தென்று
    லேசான தென்றல்போல் ஸ்ரீராமன் கேட்டார் !
    “சிவனொருநாள் இங்குவந்து தவம்செய்யும் வேளை
    பேசாமல் அவர்மீது ஏவிவிட்டான் அம்பை
    பிரியமுள காமனெனும் சிற்றின்பத் தேவன் !
    கூசாமல் விழித்தீயால் கொன்றிட்டார் காமக்
    கொற்றவனை மாதேவன் ஓர்நொடியி லங்கே ! (3)

    காமனை எரித்த இடம்

    உடலற்ற அனங்கனென உருமாறிப் போனான்
    உலகத்தில் காமத்தீ மூட்டுகிற தேவன் !
    இடமிதையே உய(ர்)”அங்க தேச”மென்று சொல்வர் !
    இன்றிரவு மட்டும்நாம் இங்குதங்கிப் போவோம்”
    தடையேதும் இங்கில்லை தவத்தோர்கள் சேர்க்கை
    சரியான பாதைக்கே சத்தியமாய்ச் சேர்க்கும்
    விடையிதுதான் என்றுவிசு வாமித்ரர் சொல்ல
    விநயமுடன் கேட்டார்கள் சீடரிரு வர்கள் ! (4)

     

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 23ம் பகுதி நிறைந்தது)

    Share
  • “அவன், அது , ஆத்மா” (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 50

    கவிமாமணி கு. தேவநாராயணன் அவர்களை சைதாப்பேட்டையில் கவிமாமணி ஐயாரப்பன் இல்லத்தில் ஒரு ஞாயிறு அன்று நடைபெற்ற பாரதி கலைக்கழகக் கவியரங்கத்தில் சந்தித்தான். அன்று அவர் பாரதி இரா. சுராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மஹாகவி பாரதியாரின் “மங்கியதோர் நிலவினிலே” கவிதையை உள்ளம் உருகும்படிப் பாடி அவையோர் அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தார். அப்படித்தான் அவனது உள்ளத்திலும் அன்று அவர் புகுந்தார். அவரது வெண்மையான கதர் சட்டையும், வேஷ்டியும், வெண்கலக்குரலில் அவர் பாடிய இனிமையும், மெல்லிய புன்னகை தவழும் முகமும் அவனை அவரின் பக்கம் செல்லத் தூண்டியது. கவியரங்கம் முடிந்து அவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். “அடடே..உனக்கும் கல்லிடைக்குறிச்சியா?..எனக்கும் அதுதான் பூர்வீகம். தொந்திவிளாகம் தெருவில்தான் இருந்தேன்.” என்று சொல்லி அவனைக் கட்டிக் கொண்டு, “நீ வாசித்த கவிதை நன்னா இருந்தது. தொடர்ந்து கவியரங்கத்துக்கு வா. நான் மந்தவெளிலதான் இருக்கேன். ஆத்துக்கு வா” என்று அழைத்தார். அதிலிருந்து அவருடன் அவனுக்கு நெருக்கம் அதிகமானது. அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. திரைப்படத்திற்கும், தொலைக்காட்சித் தொடருக்கும் வசனமும், பாடல்களும் எழுதிக் கொண்டிருந்தார்.

    அவனுக்கு அப்பாவின் சதாபிஷேகம் 20.04.2008 அன்று அவனது சென்னை இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அதற்கு அவரை அவன் அழைத்திருந்தான். அன்று அவருக்கு வேலை இருந்ததால் அவர் அவனிடம், ” விஸ்வநாதா….நான் சதாபிஷேகத்திற்கு முன்தினம் வந்து கலந்து கொள்கிறேன்” என்றார். ” ரொம்ப சந்தோஷம் மாமா. அன்று மாலை நீங்கள் உங்களுக்குப் பிடித்த தலைப்பில் உரையாற்ற வேண்டும். உங்களின் உரைக்கு முன்னால் கொல்கத்தா சகோதரிகள் “கலா-சித்ரா” (அவனுக்கு மனைவி சீதாலட்சுமியின் சகோதரிகள்) பாரதியாரின் பாடல்களை ஒரு மணிநேரம் பாடுவார்கள்” என்று அவன் சொன்னதுமே, ஒரு தனி குஷியுடன், “பலே..பலே” என்று சொன்னார்.

    முந்தியதினம் மாலை நான்கு மணிக்கே அவனுடைய இல்லத்திற்கு வந்து, அவனுக்கு அப்பா மற்றும் உறவினர்களுடன் தனது இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ” விஸ்வநாதா…இதுக்குத்தான் இன்னிக்கு நான் சீக்கிரமே வந்தேன். நம்ம மனுஷாளப் பார்த்துப் பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது” என்று சொல்லி மகிழ்ந்தார். அன்று அவர் இரவு எட்டு மணிமுதல் ஒன்பதரை மணிவரை உரையாற்றினார். தன் வாழ்வில் ஏற்பட்ட இறக்கம், மாற்றம், ஏற்றம் என்று மிகவும் அருமையாகப் பேசியும் பாடியும் அனைவரின் கவனத்தையும் தன்பக்கமே வைத்திருந்தார். தான் எம்.ஆர்.ராதாவைச் சந்தித்தது பற்றியும், தன்னிடம் இராமாயணக் கதையைச் சொல்ல அரைமணி நேரமே அவர் முதலில் ஒதுக்கியதாகவும், தான் கதை சொல்லிய விதத்தில் சுமார் மூன்று மணிநேரம் கேட்டு விட்டு,” தேவநாராயணன்…இப்படி ஒருத்தர் எனக்கு முன்பே கதை சொல்லி இருந்தால் நான் ஏன் நாத்திகனாகப் போகிறேன்” என்று பாராட்டியதாகவும் சொன்னார். காந்தியின் மீதும், நம் தேசத்தின் மீதும், மகாகவி பாரதியார் மீதும் தான் கொண்டிருந்த பக்தியினை மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். உரையின் முடிவில் அவர் மகாகவி பாரதியார் பற்றி எழுதிய,

    “பாரதியே ஒரு பாரதம் – அவன்
    பாட்டெல்லாம் தமிழ் மாருதம்
    பாரத மண்ணின் காவிய வளம்தான்
    பாரதி தோன்றக் காரணம்”

    என்ற கவிதையைத் தன் தேன்கலந்த குரலில் பாடி அனைவரையும் சொக்கவைத்தார். அந்தப் பாடலில் வரும் “ஏட்டில் எழுத்தில் இனிவரப்போகும், எழுச்சிகள் எல்லாம் பாரதி” என்ற வரிகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். எத்துணை பக்தி அவருக்கு பாரதியாரின் மீது என்று அவன் அவரைப் பற்றிப் பெருமிதங் கொள்வான்.

    பாரதி கலைகழகம் சார்பாக பாரதியாரின் “பாஞ்சாலி சபதம்” கவிதை நாடகத்தைப் பேராசிரியர் தி.வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் எழுதி இயக்கினார்கள். அதில் சகுனியின் வேடத்தில் தேவநாராயணன்தான் நடித்தார். அந்த நாடகத்தில் பங்குபெற்ற அத்தனை பேர்களுமே கவிஞர்கள். ஓரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு நடிப்புப் பயிற்சியை பேராசிரியர் சொல்லித்தரும் பொழுது,” தேவநாராயணன் சார் இந்த ஒத்திகைக்கு வல்லைன்னு கவலைப்பட வேண்டாம். அவர் நடிகர் சகஸ்ரநாமத்தின் நாடகக்குழு நடத்திய பாஞ்சாலி சபதத்தில் சகுனியாக நடித்துப் பழக்கப் பட்டவர். வசனமெல்லாம் அவருக்கு மனப்பாடம். மேடைல அவர் கைதட்டு வாங்கிண்டு போயிடுவார்” என்று பெருமையாகச் சொல்லுவார். அதேபோல நாடக அரங்கேற்றத்திற்கு முன்பு நடந்த இரண்டு மூன்று ஒத்திகைகளுக்குத்தான் அவருக்குக் கலந்துகொள்ள நேரம் இருந்தது. அனால் ஒத்திகைகளிலும் சிறப்பாக நடித்து, மேடையிலும் அமர்க்களம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தேவநாராயணன் அவர்களின் குரலினிமையைப் பற்றி பேராசிரியர் நாகநந்தி அவர்கள்,” தினமணியின் தலையங்கத்தைக் கொடுத்து இதை இசையமைத்துப் பாடுங்களேன் என்றால் கூட அற்புதமாகப் பாடக் கூடிய திறமை பெற்றவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், தேவநாராயணனும்” என்று சொல்லுவார்.

    ஒருமுறை அவர் அவனை அவரது மயிலாப்பூர் இல்லத்திற்கு அழைத்தார். தான் எழுதிக் கொண்டிருக்கும் சுயசரிதையை அவனுக்கு வாசித்துக் காட்டினார். “இத ஏன் ஓங்கிட்டப் படிச்சுக் காட்டறேன் தெரியுமா? ஒனக்கு என்னோடு குடும்பச் சூழல் தெரியும். அதனால் ஓங்கிட்டப் படிச்சுக் காட்டுறதுல எனக்கு ஒரு சந்தோஷம்” என்றார். அப்பொழுது அவர் ஒரு மூன்று அத்தியாயங்கள் எழுதி இருந்தார். அதற்குள் அவர் உடல்நலம் குன்றி நோயின் வாயில் விழுந்து விட்டார். அப்பொழுது அவரைப் பார்க்க அவரது இல்லம் சென்றிருந்தான். அவரது இளைய மகன் “ரவி” உடன் இருந்தார். அவரால் அதிகம் பேச முடியவில்லை. எண்பது வயதிற்கு மேலாக வாழ்ந்த அந்த அன்புக் கவிமாமணி கு. தேவநாராயணன் 07.09.2009 அன்று இறைவனுடன் கலந்துவிட்டார். செய்தி அறிந்து அவன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வந்தான்.

    அவரது படைப்புகளான, “அகல்யை”, “கைகேயின் கண்மணி ஸ்ரீராமன்”, “அமுதன் விரும்பிய ஸ்ரீராம பாதுகை” போன்ற கட்டுரைகளையும், கவிதைத் தொகுப்பையும் L.K.M. பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

    பாரதி கலைக்கழகத் தலைவர் திரு.பாரதி இரா.சுராஜ் அவர்கள் கவிமாமணி தேவநாராயணன் அவர்களைக் கவியரங்கங்களில் கவிதைகளைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார். அப்படி அவர் பாடும் பல கவிதைகள் அவனுக்குப் பிடிக்கும் என்றாலும் “இந்தியா எனது நாடு, இந்தியா எனது வீடு” என்ற கவிதையும்,

    “உழைக்கத் தெரிந்த என்னை ஒருநாள்
    உலகம் உணருமடா
    ஒவ்வொரு கல்லாய் அடுக்கி வைப்பேன்
    என்மாளிகை உயருமடா”

    என்ற அமர வரிகளைக் கொண்ட கவிதையும் என்றும் அவன் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    அவர் நிறைய மெல்லிசைப் பாடல்களும் எழுதி இருக்கிறார். இந்தப் பாடலும் அதன் வரிகளும், இசையும் அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

    “ஸ்ரீராமன் கதையே ராமாயணம்
    சீதையின் பெருமை ராமாயணம்
    ராமாயணம் தினம் பாராயணம்
    ராமனின் நாமமே ஷேமம்தரும்”

    கவிமாமணி கு.தேவநாராயணன் நல்ல கவிஞர் மாத்திரம் அல்ல, அன்பு நிறைந்த சிறந்த மனிதரும் கூட.

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • சிவபிரதோஷம் “வெண்பனித் தீயினன்”

     

    மீ.விசுவநாதன்

    10426154_905210982836868_8431022936108084725_n

    மேனியின் ஆசையை மெள்ளநான் விட்டிட
    மிகஆழ பக்தி வேண்டும்
    ஊனிலே ஓடுற உதிரமா சக்தியில்
    உமைபாகன் உறைய வேண்டும்
    மானிடன் என்னுரு மாதொரு பாகனாய்
    மனம்நன்கு காண வேண்டும்
    ஞானியர் பக்கமே நான்தின மிருந்திட
    நல்லசிவ னருள வேண்டும்
    தீநிற வண்ணனே நீரணி அழகனே
    தீரட்டும் பிறவிப் பிணியே
    நீயொரு தத்துவ தெய்வீக ஒளியெனத்
    தெளியட்டும் எந்தன் மனமே !

    meaning-of-deer-shiva-hand

    கந்தனும், முந்திய கணபதிப் பிள்ளையும்
    கைலாய பதியி னுறவே
    அந்தமும் ஆதியும் அற்புத வானமும்
    அனைத்துமாய் ஆன அமுதே
    விந்தைகள் செய்குவாய் வெண்பனித் தீயினை
    வேண்டித்தான் சூடு கின்றாய்
    சொந்தமும் நட்புமே நோய்நொடி வென்றிட
    சுந்தரனே கண்கள் திறவாய்
    தீநிற வண்ணனே நீரணி அழகனே
    தீரட்டும் பிறவிப் பிணியே
    நீயொரு தத்துவ தெய்வீக ஒளியெனத்
    தெளியட்டும் எந்தன் மனமே !

    (இன்று 03.10.2017 பிரதோஷம்)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (11)

     
    மீ.விசுவநாதன்
    பகுதி: பதினொன்று

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2

    விஸ்வாமித்திரர் தயரதனிடம் விடுத்த கோரிக்கை

     

    சொன்னசொலை மீறாத குலத்தினிலே வந்த
    கோவே! நற் குணக்குன்றே உன்வார்த்தை கேட்டு
    இன்னமுதைப் பெற்றுவிட்ட இன்பத்தைக் கொண்டேன் !
    என்னுள்ள எண்ணத்தைச் சொல்கின்றேன் ! எந்தன்
    இன்னலைநீ போக்கிடுவாய் என்றுன்னை நம்பி
    இப்போதே உரைக்கின்றேன் கேட்பாய்நீ ! வேள்வி
    முன்னிலையில் காவலுகுன் மூத்தமகன் தன்னை
    முகமலர்ந்து அனுப்பிடநீ முடிவெடுப்பாய் மன்னா ! (1)

    காரணத்தைச் சொல்கின்றேன் கவனித்துக் கேட்டால்
    கட்டாயம் என்சொல்லின் கருத்தினைநீ ஏற்பாய் !
    வாரணத்தை விழுங்கிவிடும் வலிமையைக் கொண்ட
    “மாரீசன், சுபாகு”வெனும் வல்லசுரர் வந்து
    காரணமே இல்லாமல் கணக்கில்லாத் துன்பம்
    காட்டிலுள முனிகளுக்கே செய்கின்றார் நித்தம் !
    பூரணமாய் ஒருயாகம் முடிப்பதற்கு மேலோர்
    பொழுதெல்லாம் தவிகின்றா(ர்) என்போலே என்றார் ! (2)

    அசுரரைநான் சாபமிட்டே அழித்திடலாம் ! ஆனால்
    அப்படியோர் கோபத்தால் தவவலிமை போகும்,
    நசுங்கிப் போய்விடுமே நாம்பெற்ற ஞான
    நலமெல்லாம் ஓர்நொடியில் என்றெண்ணி வந்தேன்
    விசும்புவரை ஓங்குபுகழ் வேந்தனுனைத் தேடி !
    வேதத்தைக் காப்பவரை வேந்தந்தான் காப்பான் !
    பசுக்களுக்கும் அந்தணர்க்கும் பார்மன்னன் தானே
    பக்கபலம்! அதனால்தான் வந்தேன்நான் என்றார். (3)

    தயரதன் மகன் இராமனை அனுப்ப மறுத்தல்

    தயரதனோ இதுகேட்டுத் தண்ணீரை விட்டுத்
    தரையினிலே தாவிவிட்ட மீன்போல வீழ்ந்தான்!
    வியர்த்தவுடல் நடுக்கமுற, “வேதவழி நிற்கும்
    விண்புகழ்சூழ் யோகியரே வேண்டாமென் பிள்ளை,
    தயவுசெய்வீர் நானேநேர் வந்துமக்கு யாகக்
    காவலாக இருக்கின்றேன், கண்மணியாம் ராமன்
    செயலறியாச் சிறுவனென்பேன்! சிந்தனையை மாற்றிச்
    செவிமடுப்பீர் என்வார்த்தை ! சேர்த்திடுவீர் என்னை !” (4)

    தயரதன் மறுப்பும் வீரமுனியின் கோபமும்

    என்றமொழி கேட்டவுடன் எரிதழலைக் கக்கும்
    இருவிழியால் தயரதனை ஏறிட்டுப் பார்த்து ,
    “கொன்றுவிட்டாய் உன்முன்னோர் குலத்தினது வாக்கின்
    குடிப்பெருமை ! குருவசிட்டன் பெருமைமிகு சீட(ன்)
    இன்றுமுதல் அப்பெருமை விட்டுவிட்டா(ன்)” என்றார் !
    இதுகேட்டு வசிட்டருடன் எழுதுவந்து, “மன்னா
    நன்றுசொல்வேன் இராமனைநீ நல்முனியின் யாக
    நலம்காக அனுப்பிடுதல் வேண்டுமெனச் சொன்னார் ! (5)

    குலகுரு வசிட்டரின் நல்லுபதேசம்

    மேலுமிவர் அஸ்திரங்கள் மேன்மையெலாம் நன்கு
    சேர்த்திருக்கும் வீரமுனி ! செய்தவத்தால் தேவர்
    மேலாக ஆனவர்தான் ! திடமாகச் சொல்வேன்
    இராமனுக்கு ஏற்றகுரு இவரென்பேன் !”என்று
    நூலறிந்த வசிட்டருமே நோய்தீர்க்கும் நல்ல
    மூலிகையின் குணம்போலக் குறிப்பறிந்து சொல்ல
    நாலுதிசை வென்றிட்ட தயரதனும் அங்கே
    ஞாயிறுவின் ஒளிவிஞ்சும் நல்மகனை இங்கே (6)

    தயரதன் ஆணைப்படி இராம, இலக்குவர்கள் சென்றனர்

    அழைத்துவர ஆளனுப்ப ஆணையும் தந்தார் !
    அப்பாவின் வார்த்தைக்கு அடிபிசகாப் பிள்ளை
    பிழையில்லா இராமனுடன் இலக்குவனும் வந்தான் !
    பெரியமுனி முன்செல்ல இருவருமே அந்த
    மழைக்கால மேகத்தின் வழியொற்றிக் கொண்டு
    மகத்தான அம்பு,வில் தோளுடனே சென்றார் !
    தழைத்துவரும் பூச்செடிக்குத் தண்ணீரைப் பாய்ச்சும்
    தகைமையெனத் தவமுனியும் இருவரையும் காத்தார் ! (7)

    பலா – அதிபலா மந்திர உபதேசம்

    மாலைவேளை சரையூவின் வடகரைக்கு வந்து
    மனத்தூய்மை கொள்வதற்கு மந்திரங்கள் சொல்ல
    சோலையின் இளங்காற்று பூக்கொய்து போட
    சுகமான வேளையிலே “பலாதிபலா” என்னும்
    மேலான மந்திரத்தை இராமனுக்குத் தந்து
    மிகையில்லை மேதினியில் இனியென்றும் மிக்க
    சீலமுடன் திகழ்வாய்நீ சத்தியமென் வாக்கு
    எப்பகையும் உன்முன்னே எரிந்துவிடு மென்றார் !

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 19, 20, 21, 22 பகுதிகள் நிறைந்தது)

    Share