Author: க. பாலசுப்பிரமணியன்

  • வாழ்ந்து பார்க்கலாமே 28

    க. பாலசுப்பிரமணியன்

     

    மாற்றங்களை சீரான மனநிலையோடு பார்க்கலாமே!

    மாற்றங்கள் உலகத்தில் புறத்தில் மட்டும் ஏற்படுவதில்லை. நம்முடைய உடலிலும் உள்ளத்திலும் நாம் வாழ்கின்ற வாழ்க்கையிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் சமாளிக்கவும் அவைகள் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து புரிந்து வாழ்க்கையை மேலும் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

    சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நிறுவனத்தில் அங்கிருந்த ஊழியர்கள் அனைவருக்குமான ஒரு பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது. பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த சொற்பொழிவாளர் தன்னுடைய உரையில் மிகவும் எளிதான முறையிலும் எல்லோரும் மகிழ்ந்து சிரிக்கும் வகையிலும் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சைக் கண்டு மகிழ்ந்து அந்த அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் பங்கேற்ற ஒருவர் மட்டும் எதிலுமே ஈடுபாடுயில்லாதவராய் ஏதோ பறிகொடுத்தவர் போல் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த சொற்பொழிவாளர் அவர் அருகில் சென்று எல்லோரும் சிரிக்கும் வகையில் ஒரு கதையைச் சொன்னார். அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. ஆனால் அந்த நபர் மட்டும் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தார். சொற்பொழிவாளர் நொந்து போய் ‘ஒருவேளை அவருக்கு காதுகொஞ்சம் மந்தமோ’  என நினைத்தார்.

    அந்த நிகழ்வு முடியும் நேரத்தில் அனைவருக்கும் அந்தப் பயிற்சி முகாம் பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்ய ஒரு விமர்சனக் குறிப்பேடு கொடுக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தபின் அந்த சொற்பொழிவாளர் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியின் அறையில் அமர்ந்து அந்தக் குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை படித்துக்கொண்டிருந்தார்.

    ஒரு பதிவினைப் பார்த்த அவருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. அந்தப் பதிவு கீழ்கண்டவாறு இருந்தது. ” இந்தப் பயிற்சியின் இடைவேளையில் கொடுக்கப்பட்ட சமோசா மிகச் சிறியதாக இருந்தது. அடுத்த முறை இதில் கவனம் செலுத்தவும்.”

    சொற்பொழிவாளருக்கு மிகுந்த அதிர்ச்சி. அந்த மூத்த அதிகாரியிடம் இதைக் காட்டி “யார் இப்படி எழுதியது?” என்று கேட்க, அவரோ “நீங்கள் கடைசியில் அமர்ந்து சிரிக்காமலேயே ஒருவர் இருந்தார் என்று சொன்னீர்களே அவர்தான்.” என்றார். தொடர்ந்து “அவர் இந்த நிறுவனத்தில் எனக்கு அடுத்தபடியாக உள்ள அதிகாரி. அவர் என்னோடு நான் தற்போது இருக்கும் இந்தப் பதவிக்கு முயற்சி செய்தார். நேர்காணலில் அவருக்குத் தேர்ச்சியாகவில்லை. நான் இந்த நிறுவனத்திற்கு வெளியே இருந்து முயற்சி செய்தவன். எனக்கு இந்தப் பதவி கிடைத்ததிலிருந்து அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் ஏதாவது தவறான அல்லது ஒத்துப்போகாத கருத்துக்களை பதிவு செய்வதே அவர் வழக்கமாகிவிட்டது. யாரைப் பார்த்தாலும் சிரிக்க மாட்டார். தோல்வி மனப்பான்மை அவரை வாட்டி வதைக்கின்றது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லி மாற்ற முயற்சித்தோம். முடியவில்லை.”

    பல நேரங்களில் தோல்விகள் நம்முடைய உறவு நிலைகளை மாற்றிவிடுகின்றன. வீடுகளிலும் சரி, வேலை பார்க்கும் இடங்களிலும் சரி எப்பொழுதுமே நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம். வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே சீராகப் பார்த்து முன்னேறிச் செல்வது வாழ்க்கையின் அமைதிக்கு இன்றியமையாதது.

    தோல்விகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் தவிர, சில சிறிய நிகழ்வுகளால் வாழ்க்கையின் முடிவுக்கே வந்துவிட்டோம் என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. சில நேரங்களில் நமக்கு ஏற்படும் தோல்விகளில் நாம் நம்மைவிடத் தகுதியில் குறைந்தவரையோ அல்லது நாம் செய்யும் தொழில்களில் சற்றும் அனுபவங்கள் இல்லாதவரிடமோ வேலை பார்க்க நேரிடும். அதனால் நமது திறமைகளோ அல்லது மதிப்போ குறைந்து விட்டது என்ற பொருள் கொள்ளுதல் தவறானது. “இதுவும் கடந்து போகும்” என்ற சிந்தனையை மனதில் கொண்டு தொழிலிலும், உறவுகளிலும், தொடர்புகளிலும் மேல்நோக்கான சிந்தனைகளைக் கொண்டு முன்னேற வேண்டும்.

    பல நேரங்களில் நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்களும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குச் சென்று விடுகின்றனர். இது மிகவும் துயரமானது மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானதும் கூட. சில நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையின் போக்கையும் வளத்தையும் வெற்றியையும் கட்டுப்படுத்துவதில்லை.

    தோல்விகளாலும் வெற்றிகளாலும் ஏற்படும் மாற்றங்களை நாம் ஒரு சீரான மனநிலையுடன் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். எவ்வாறு தோல்விகள் நம்மை பாதிக்கக்கூடாதோ அதே போல் வெற்றிகளும் நமக்கு தலைகனத்தையும் ஆணவத்தையும் ஏற்படுத்தக்கூடாது. வெற்றிகளின் மகிழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து செல்லுதல் அவசியம்.

    நாம் பக்குவப்பட்ட மனநிலையுடன் வாழப் பழகிவிட்டால் வெளிப்புற மாற்றங்களும் உள்ளுணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களும் நம்மை பாதிக்காது. ‘மனத்தளவே வாழ்வு’ என்பதை நாம் புரிந்துகொண்டால் மகிழ்வு என்றும் நிலைத்திருக்கும்.

    சீரான மனநிலையோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 27

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களின் வேகங்களும் மனித வாழ்க்கைத் திறன்களும்

    மாற்றங்களின் வேகம் நம்மைத் தடுமாற வைத்துக்கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இந்த மாற்றங்கள் நமது வாழ்க்கை முறைகளை மிகவும் பாதிக்கின்றன. மனித மூளையின் சிந்தனைத் திறன்களை போலவே கணினிகள் மூலமாக செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பதப்படுத்தி அதை எவ்வாறு இயந்திரச் சிந்தனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய உலகளாவிய ஆரய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக பல வித இயந்திரங்களும் கருவிகளும் செயற்கைச் சிந்தனை மூலம் மனித சிந்தனைகளுக்கு ஓய்வு கொடுப்பது மட்டுமின்றி, பல இடங்களிலும் பல திறன்களும் மனித சிந்தனைகளைத் தேவையற்றதாக ஆகிவிடுகின்றன. இதன் தாக்கத்தின் மூலமாக பல மனிதச் சிந்தனைத் தேவைகளும் அவை சார்ந்த திறன்களும் வாழ்க்கை நடைமுறைகளும் அழிந்து விடும் நிலையில் உள்ளன. இது சமுதாயத்திற்கு நல்லதா தீயதா என்ற விவாத மேடைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விவாதங்களை அர்த்தமற்றதாக ஆக்கும் வகையில் அந்தக் கருவிகளின் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் தாக்கங்களும் அமைந்து கொண்டிருக்கின்றன.

    உதாரணமாக சில நாட்களுக்கு முன் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் கூறினார் ”  ஒரு காலத்தில் ஒரு நிறுவனத்தின் இயக்குனராக நான் இருந்த பொழுது எனக்கு உதவி செய்ய ஒரு தனிப்பட்ட உதவியாளர் இருந்தார். இன்று அதுபோன்ற ஒரு உதவியாளருக்குத் தேவையே இல்லை. அதற்க்கு பதிலாக எனது அலைபேசியில் உள்ள கூகுள் உதவியாளர் எனக்குத் தேவையான பல வேலைகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றுகின்றது “

    “கூகுள், இன்று எனக்கு என்னென்ன வேலைகள் உள்ளன?”

    “கூகுள், இன்று மாலை எனக்கு எந்த விமானத்தை பிடிக்க வேண்டும். எத்தனை மணிக்கு விமான நிலையத்திற்கு எந்த வழியாகச் செல்லவேண்டும்?”

    “கூகிள், சென்னையிலிருந்து கும்பகோணத்திற்குச் செல்லும் பாதைகள் என்ன? அவைகளின் தூரங்கள் எவ்வளவு? அந்த தூரத்தை இந்தப் போக்குவரத்து நெரிசலில் கடக்க எவ்வளவு நேரம் ஆகும்?

    “கூகுள், இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா? அப்படிப் பெய்தால் எந்த நேரத்தில் மழை வரலாம் ?

    “கூகிள் அடுத்த ஒரு வாரத்திற்கு மதுரையின் வெப்ப நிலை என்ன?”

    இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலும் அதைத் தொடர்ந்து தேவைப் பட்ட தகவல்களும் கிடைக்கின்றன.

    அது மட்டுமா… உங்களுடைய மருத்துவரிடம் தொலைபேசியில் சந்திப்பதற்கான நேரத்தை கேட்டுவாங்கி அதை உறுதிப்படுத்தும் நுண்ணறிவும் இந்த அலைபேசிக்குள் அடக்கப்பட்டுவிட்டது.

    ஒரு பெண்மணி விளையாட்டாக தன்னிடம் உள்ள கூகுள், உதவியாளரிடம் “கூகிள், வத்தக்குழம்பு வைப்பதற்கான முறை என்ன?” என்று கேட்க சில நொடிகளில் அதைத் தயாரிக்கும் முறைகளை பதிவு செய்து விடுகின்றது.

    செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் நாம் செய்யும் பல வேலைகள் வழிமாறி முறைமாறி புதிதான பரிமாணங்களில் உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    உதாரணமாக, செயற்கை நுண்ணறிவில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், அவைகள் உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் அவர்களின் தரத்தையும், அவர்களின் வாழ்நாளையும் உங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கும் நிலையில் உள்ளன. நாம் ஒரு கடைக்குச் சென்று “எவ்வளவு பால் வாங்க வேண்டும். எவ்வளவு தக்காளி வாங்க வேண்டும்?’ என்று நினைத்தால் உடனே நமது அலைபேசி மூலமாக அதை அந்தக் குளிர் சாதனப் பெட்டியிலிருந்து தகவலாக மட்டுமின்றி அதை கண்கூடாகவும் பார்த்து முடிவு எடுத்துக்  கொள்ளலாம்.

    காலையில் நாம் பல் துலக்கும் பொழுது நமக்கு உதவி செய்து நமது பற்களில்  உள்ளோ வெளியிலோ கறைகள் உள்ளனவா, நாம் எவ்வாறு பல் துலக்கியுள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

    பல விதமான உடல் அறுவை சிகிச்சைகள் மனித இயந்திரங்களின் மூலமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

    மிசியோ காக்கூ என்ற ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் அறிவியல் நிபுணர் தன்னுடைய “மூளையின் சக்தி ” (The Power of Mind) என்ற புத்தகத்தில் மூளையின் வலிமையைப் பற்றியும் செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும் சேர்ந்து செயல்படும் சாத்தியக்கூறுகள் பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளது வியப்பை மட்டுமின்றி அதிர்ச்சியையும் அளிக்கின்றது. இதனால் நமது வாழ்வு முறைகள் எவ்வாறு மாற்றப்படும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

    இத்தனை மாற்றங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா அல்லது மறுக்க முடியுமா? இவைகளின் தாக்கங்கள் எத்தனை வேகமா வரும்? தற்போது நடைமுறையில் இருக்கின்ற வாழ்வாதாரங்கள் இடிக்கப்படும் பொழுது எவ்வளவு சீக்கிரத்தில் நாம் புதிய முறைகளோடு இணைந்து வாழ முடியும்? இவையெல்லாம் கேள்விக்குறிகளே !

    ற்றங்களை நாம் சந்தித்துத் தான் ஆகவேண்டும்.

    இந்த மாற்றங்கள் நன்மை பயக்குமா தீமை பயக்குமா, தேவையா அல்லது தேவையில்லையா என்பதைக் காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.

    ற்றங்களுக்குத் தக்க முறையில் நம்மை சிறிய அளவிலாவது மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம்.

    மாற்றங்கள் சந்தேகங்களை உண்டுபண்ணலாம் மாற்றங்கள் வியப்பை உண்டுபண்ணலாம். மாற்றங்கள் பயத்தையும் பீதியையும் உண்டுபண்ணலாம். மாற்றங்கள் மகிழ்வை உண்டுபண்ணலாம். மாற்றங்கள் இன்னும் பல புதிய சிந்தனைகளை உண்டுபண்ணலாம். அவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

    நாம் அவைகளோடு இணைந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடரும் )

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 26

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது?

    மாற்றங்கள் எப்படி ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன?  மாற்றங்களின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்ததால் பல உண்மைகள் நமக்கு வெளிப்படுகின்றன.

    கற்காலம் தொட்டே மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தவாறு மாற்றங்களும், மாற்றங்களுக்குத் தகுந்தவாறு அறிவின் வளர்ச்சியும் ஏற்பட்டுக்கொண்டேதான் இருந்திருக்கின்றன. முதலில் கற்களை உரசி நெருப்பினைக் கண்ட மனிதன் அந்த நெருப்பைப் பயன்படுத்தி வாழ்வின் முறைகளையும் வளத்தையும் காக பெருக்கக் கற்றுக்கொண்டான். பின்பு உலோகங்களைக் கண்டுபிடித்தபின் அவைகளை ஆயுதங்களுக்கும் மற்றும் மேம்பட்ட வாழ்விற்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று அறிந்துகொண்டான். பின்பு சக்கரத்தைக் கண்டுபிடித்த மனிதன் தன தொழிலுக்கும் வாழ்க்கைச் சாதனைகளுக்கும் அதன் மூலமாக புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டான். மேற்கண்ட மாற்றங்கள் மனித இனத்தின் வளர்ச்சிப்பாதைக்கு வித்திட்டது மட்டுமின்றி அதன் வேகத்தையும் சற்றே முடுக்கிவிட்டன.

    சில நூற்றாண்டுகளுக்குப் பின் இயந்திரங்களை படைக்கக் கற்றுக்கொண்டவன் சிந்தனையால் ஒரு தொழில் புரட்சியே நடந்தது.. இயந்திரங்கள் மூலமாக படைப்புத்திறன்களையும் தரத்தையும் வளர்க்கவும் சீர்படுத்தவும் கற்றுக்கொண்டு தரமான பொருட்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டான் தொழில்சார் சமுதாயத்தில் படைக்கப்பட்ட அச்சு இயந்திரம் மனிதனுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

    வாய்வழியாகவும் மனிதனின் நினைவுச்சக்தியை மட்டும் சார்ந்து வளர்ந்த அறிவு எழுத்துக்களில் வடிக்கப்பட்டு புத்தகங்களாகி கால நேரங்களுக்கு அப்பாற்பட்டு தேவைக்கேற்றவாறு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஆராய்ச்சி செய்வதற்கும் பயன்பட்டது. தனிப்பட்ட அறிவுசேர்க்கும் நிகழ்விலிருந்து சமுதாயம் கூட்டாக அறிவினைச் சேர்ப்பதற்கும் அலசுவதற்கும் மேம்படுத்திக்கொள்ளவும் இந்த புதிய கண்டுபிடிப்புக்கள் பயன்பட்டன.

    வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்ட அடுத்த மிகப் பெரிய மாற்றம் கணினி. கணினி முதன்முதலாக ஒரு கணக்கிடப்படும் இயந்திரமாகத் தோன்றினாலும் நாளடைவில் அதன் பரிமாணங்கள் பெருகி வளர்ந்து மலர்ந்து அது ஒரு பல்நோக்கு இயந்திரமாக மட்டுமின்றி மனித சிந்தனைக்குச் சவால் விடும் ஒரு இயந்திரமாக மாறிவிட்டது. இந்தக் கணினியின் மூலமாகவும் அது சார்ந்த மற்ற தொழில்நுட்பங்கள் மூலமாகவும் அறிவையும் கருத்துக்களையும் நிகழ்வுகளையும் மற்றும் பல வித அறிவுசால் முறைகளையும் வகைப்படுத்தி நுட்பப்படுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் நமக்கு தெரியப்படுத்த ஒரு வாய்ப்புக்க கிடைத்தது. இந்த கணினி சமுதாயத் சிந்தனையிலும் வாழ்க்கை முறைகளிலும், செயல் திறன்களிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் இந்த மனித இணைத்தல் சற்றும் எதிர்பார்க்கப்படாதவை. ஆயினும் மனித இனம், இந்த மாற்றங்களை மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் முற்போக்குச் சிந்தனையுடனும் ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கை முறைகளை தக்கவாறு மாற்றிக்கொண்டு வருகின்றது. இந்த கணினியுகத்தின் மிகப்பெரிய உண்மை: மாற்றங்களின் வேகம். மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி மாற்றங்களின் வேகம் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கணினிகளின் வளர்ச்சிவேகமும் அவைகளின் ஆதிக்கமும் ஊடுருவலும் மனித இனத்தை வியக்க வைத்தது மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கைக்கு கோட்பாடுகளின் அடித்தளத்தை ஆசைப்பதற்கும் வித்திட்டன. இந்த மாற்றத்தினால் உலக தூரங்கள் தகவல்களாலும் தொடர்புகளால் கருத்துக் பரிமாற்றங்கள் வளந்தினால் மிக அதிக அளவில் குறைக்கப்பட்டு சிந்தனிக் கூடாரங்கள் இணைத்தளங்களில் அமைக்கப்பட்டன. கருத்தால் ஒன்று பட்ட மனித இனம் வளங்களின் பரிமாற்றங்களால் தங்கள் தேவைகளையும் வியாபார வெறியையும் மிக எளிதில் நிறைவேற்றிக்கொண்டது. ஆனால், சிந்தனைக்கு கூடங்களின் வலிமையையும் ஆதிக்கமும் அடுத்த கட்ட மாற்றத்திற்கும் பரிமாண வளர்ச்சிக்கும் வழிவகுத்தன. நாம் “அறிவுசார்” சமுதாயத்தை  (KNOWLEDGE SOCIETY ) நோக்கி நம்முடை  போக்கை வழிப்படுத்திக்கொண்டோம் இதன் விளைவு? தொழிலைத் தேடி கடல் கடந்த மனித இனம் இப்போது தங்கள் அறிவின் ஆதிக்கத்தினால் இருக்கும் இடத்திலிருந்தே தொழில்களைக் கவர ஆரமிப்பித்தது. மனிதர்கள் இடம் பெயர்வதற்குப் பதிலாக திறன்களைத் தேடி தொழில்கள் இடம்பெயரத் தொடங்கின. இந்த புதிய மாற்றத்தில் ‘திறன்களே” வளத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆன்மாவாக மாறியது.

    “வருங்காலத்தில் அதிர்ச்சி” (THE FUTURE SHOCK) என்ற புத்தகத்தில் ஆல்வின் டாபிளேர் என்ற ஒரு ஆராய்ச்சியாளர் வெகு அழகாகச் ல்லுகின்றார்: ” நிலத்தை முதலாக வைத்து வாழ்ந்த மனித இனம் பின் இயந்திரங்களை மூலதனமாக வைத்து வாழ ஆரம்பித்தது. பின்பு இயந்திரங்களிலிருந்து விலகி தகவல் சார் சமுதாயமாக மாறி அறிவின் சேர்க்கைக்கும் வளத்திற்கும் மீட்புக்கும் துணையாக வளர்ந்தது. வெறும் தகவல் சார் சமுதாயத்திலிருந்து மனித இனம் “அறிவு சார் சமுதாய”மாக மாறி வந்துள்ளது. இந்தப் பயணத்தில் முதல் மாற்றம் ஏற்பட பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின. அடுத்த மாற்றம் சில நூற்றாண்டுகளுக்கும் நடந்தது. மூன்றாவது மாற்றம் சில பத்தாண்டுகளுக்குள் நடந்தது. தற்போது இருக்கின்ற அறிவுசார் சமுதாயத்தின் ஆயுட்காலம் மிகக் குறைவு. அறிவும் திறன்களும் மிக விரைவில் மிக எளிதாகவும் தங்கள் வாழ்வின் காலத்தை இழந்துகொண்டு இருக்கின்றன.”

    இந்த மாற்றங்களை நாம் எப்படி எதிகொள்ள வேண்டும்?

    1. இந்த மாற்றங்களை முற்றிலும் நாம் வெறுத்து ஒதுக்கலாம் .
    2. இந்த மாற்றங்களை விரும்பி ஏற்காமல் அவைகளுக்கு வழிவிட்டு நாம் ஒதுங்கி நிற்கலாம்.
    3. இந்த மாற்றங்களுக்கு அடிமையாகி நாம் அவைகள் அடித்துச் செல்லும் வெள்ளத்திற்கு இரையாகலாம்
    4. இந்த மாற்றங்களை அலசி ஆராய்ந்து தேவைக்குத் தக்கவாறு ஏற்றுக்கொள்ளலாம்.

    இந்த மாற்றங்களை முற்றிலும் வெறுத்து ஒதுக்குவது சாத்தியமானதல்ல. அந்த நிலையை நாம் இப்போது கடந்து விட்டோம்.

    அவைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றால், காலமும் வாழ்க்கை நடைமுறைகளும் நம்மை இருக்கும் இடத்திலே விட்டுவிட்டு முன்னே சென்று கொண்டிருக்கும். நாம் தனிமையில் ஏங்கி வேண்டப்படாதவர்களாக நிற்போம்.

    இந்த மாற்றங்களுக்கும் அடிமையாகி அந்தக் காட்டாற்று வெள்ளத்திற்கு இறையானால் இந்தப் பிறவியின் சீரிய பயனை இழந்து நிற்போம். வாழ்க்கை தொழில் நுட்பத்தாலும் அது சார்ந்த இயலிகளாலும் கட்டுப்படுத்தப்பட விடக்கூடாது.  அது நமக்குத் தோல்வியின் அறிகுறி.

    இந்த மாற்றங்களை அலசி ஆராய்ந்து அவற்றை நமக்குத் தேவைக்குத் தகுந்தவாறு ஏற்றுக்கொண்டால் நாம் அவற்றை நமது வாழ்க்கைப் பயணத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மகிழ்வுக்கும் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள முடியும்

    மாற்றங்களை அறிவோடும் தைரியோத்தோடும் எதிர்கொள்ளலாமே !

    மாற்றங்களோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடரும் )

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 25

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களை எப்படி சமாளிப்பது?

    மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் நாம் மாற்றங்களைச் சந்திக்க நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அது எப்படி முடியும்?

    1. மாற்றங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
    2. மாற்றங்களை எதிர் கொள்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
    3. மாற்றங்களின் வேகத்திற்கு நம்மை அடிமையாக்கிக் கொள்ளாமல் அவைகளை இடம் மற்றும் காலங்களுக்குத் தகுந்தவாறு ஏற்றுக்கொள்ள அறிந்துகொள்ள வேண்டும்.
    4. மாற்றங்கள் நமக்குத் தேவைதானா என்பதை அறிந்து அதை ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளுகின்றார்களே என்பதற்காக கண்மூடித்தனமாக அவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
    5. மாற்றங்கள் நம்முடைய சமுதாயப் பண்புகள், கலாச்சாரங்கள், மனித நேயம், வாழ்க்கை வளமை மற்றும் நேர்மை, பேராண்மை இவற்றுக்கு அதிக அளவில் தாக்கங்கள் ஏற்படுத்தாதவாறு அவற்றை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.

    மாற்றங்களைக் கண்மூடித்தனமாக நாம் ஏற்றுக்கொள்ளும் பொழுதும், அவைகள் நமக்குத் தேவையற்ற நிலையிலும் அவைகளைத் தவறாக நாம் பயன்படுத்தும் பொழுதும் துயரங்களையும் விரும்பாத தகாத சூழ்நிலைகளையும் அமைதியின்மையையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கும். உதாரணமாக, தற்போதைய தொழில் மற்றும் கணினி சார் வளர்ச்சியின் தாக்கங்கள் நம்முடைய வாழ்க்கைப் போக்குகளையும் வாழ்க்கை பற்றிய காலந்தொட்டு வளர்ந்துவந்த கோட்பாடுகளையும் அடியோடு சாய்த்து விட்டன. இதனால் தற்போதைய சமூகத்தில் பலர் தேவையற்ற துனபங்களுக்குத் தம்மை அடிமைகளாக்கிக் கொண்டு வருகின்றனர்.

    காலந்தொட்டு நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரு அறிவுரை.” சிறுகக் கட்டிப் பெருக வாழ்.”  நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டும் வைத்துக்கொண்டு அமைதியுடன் வாழ்தலே உடலுக்கும் மனதிற்கும் நல்லது., இருக்கிறது என்பதற்காக அளவின்றி உணவை உண்ணும் பொழுது அது நமக்கு பல நோய்களுக்கு வித்தாக அமைகின்றது. அதேபோல் நம்முடைய தேவைகளை அதிகரித்துக்கொள்ளும் பொழுது அதனைச் சார்ந்த பலவித மகிழ்வுகளோடு துயரங்களும் நமக்குக் கிடைக்கின்றன.

    ஒரு காலத்தில் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்குவது இழுக்காகக் கருதப்பட்டது. “கடன் வாங்கினார் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற வார்த்தைகளை முன்னுதாரணமாகக் காட்டி அதன் உணர்வுபூர்வ தாக்கங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஒருவனின் வளர்ச்சிக்கும் சில முக்கிய தேவைகளுக்கும் கடன் கொடுப்பதும் கடன் வாங்கிச் செலவு செய்வது பொறுப்பான செயல்களாகக் கருதப்பட்டன. குழந்தைகளின் படிப்பு, மகளின் திருமணம், குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகள் போன்ற பலவற்றிற்காக கடன் பெறுதலும் அவைகளை அடைத்தாலும் ஒரு பொறுப்புள்ள மனிதனுக்கு அடையாளமாகக் காட்டப்பட்டன. காலப்போக்கில் கடன் வாங்குவதைச் சார்ந்த பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பதற்காக வங்கிகள் மூலமாக பலருக்கும் இலவசத் தவணைமுறைகளில் கடன்கள் வழங்கப்பட்டன. காலப்போக்கில் கடன் வாங்குதலும், தேவையற்ற நிகழ்வுகளுக்கு கடன்களை அதிகரித்துக்கொள்ளுவதும், அவைகளைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதும் வழக்கமாகி விட்டன. மேலும் ஒரு கடனைத் திருப்பித்தர முடியாமல் அதற்காக இன்னொரு கடன் வாங்கி அதை சமாளிப்பதும் வழக்கத்தில் உள்ளன. இதற்காக மக்களின் மனங்களில் மாயைகளை ஏற்படுத்தும் பலவிதமான காணொளிக்  காட்சிகள் ஏராளமாக நடைமுறையில் உள்ளன. “எனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது ” என்று சொல்லி பெருமைப்படும் பலரையும் பார்த்திருக்கின்றோம்.

    தன் கையில் சல்லிக்காசு இல்லாமல் வாங்கிக்கடன்கள் மூலமாக தொழிலதிபர்களாகி அந்தக் கடன்களைக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. தங்களுடைய பணத்திற்கான வட்டி சீக்கிரத்தில் குட்டி போடவேண்டுமென்று தங்கள் சேமிப்புக்களைத் தகாதவர்கள் கைகளில் கொடுத்து தங்கள் வாழ்வின் சேமிப்புக்களை இழந்தவர்களைக் கண்கூடாக நாம் காண்கின்றோம்.

    இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

    நாம் நம்முடைய வாழ்வின் சூழ்நிலைகளையும் அடிப்படைகளையும் மறந்து மற்றவர்களுடைய வாழ்க்கை முறைகளை பின்பற்றத் துடித்துக்கொண்டிருப்பதே !’

    நாம் மற்றவர்களுக்காக நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுவது மட்டுமின்றி இல்லாத ஒரு மாயைக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றோம். நமக்கும் வளர்ச்சி தேவைதான். ஆனால் அது ஆரோக்கியமான அமைதியைக் கெடுக்காத வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

    சமீபத்தில் நான் கண்ட இரண்டு நிகழ்வுகள். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி தன்னிடம் வைத்திருந்த எட்டு வங்கிகளின் கடன் அட்டைகள் (Credit Cards) மூலமாக அதிக அளவில் செலவு செய்து விட்டு அந்த எட்டு வங்கிகளிடமும் பணம் செலுத்த முடியாமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தார். உண்மையில் அவருக்கு வாழ்க்கைச் சுமைகள் அதிகம் இல்லாமலும் இருப்பதற்கு அழகான ஒரு வீடு இருந்தாலும் தேவைற்ற பல பொருள்களைத் தன்னுடைய வளத்திற்கு மேல்பூச்சுப் பூசுவதற்க்காக வாங்கி வைத்ததே காரணம். பல நண்பர்கள் தங்களுக்குத் தேவையில்லாத பொருட்களையும் சமுதாயத்திலும் நண்பர்களிடமும் உறவுகளிடமும் தங்களுடைய போலி வளமையைக் காட்டிக்கொள்வதற்காக கடன் முறையில் வாங்கி அவதிப்படுவதைப் பார்த்தேன் ;பலபேர் இந்தமாதிரி போலி வாழ்க்கைக்குத் தங்களை அடிமையாக்கி கொள்கின்றார்கள்.   இது ஒரு சிந்திக்க வேண்டிய கருத்து.

    இதே போன்று ஒரு இளம் தம்பதியர் தங்களுக்காக ஒரு பன்மாடிக் கட்டிடத்தில் தவணை முறையில் வீடு வாங்கி அமைதியாக வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களிடையே மனக்குமுறல்களும்   அமைதியின்மையும் வந்தன. காரணம்? வங்கிக் கடன் மூலமாக இரண்டாவது வீடு ஒன்று வாங்கி இரண்டு வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய தவணைகளைச் சரியான முறையில் கொடுக்க முடியாமல் துன்புற்றதே. அது மட்டுமின்றி, அந்த நேரத்தில் அந்த நண்பரின் அலுவலகத்தில் ஆட்குறைப்பு ஏற்பட துயரத்தின் எல்லைகள் வளர்ந்தன. பலரும் தங்களுக்கு தேவைகள் நிறைவேறிவிட்டாலும் ஆசைகளுக்கு இடம் கொடுத்து துயரங்களைச் சமாளிக்கும் நிலைகளைக் காண்கிறோம்.

    எல்லோருக்கும் கடன் அட்டை நிச்சயம் தேவை. மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில் இது ஒரு ஆரோக்கியமான சிந்தனையே. ஆனால் அதை நாம் எவ்வாறு எதற்கு எப்போது பயன் படுத்த வேண்டும்?

    மாற்றங்கள் மகிழ்வுக்குத் தென்றலாக வேண்டும். அவைகளே வாழ்க்கையின் அமைதியைக் கெடுக்கும் புயலாக மாறிவிடக்கூடாது.

    கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப் படும் மாற்றங்களும் தேவையின்றி நாம் ஏற்றுக்கொள்ளும் மாற்றங்களும் நமக்குத் தேவைதானா என்பதை சற்றே சிந்திக்க வேண்டும்.

    புதுமையான வாழ்வை ஏற்றுக்கொள்ளும் பொழுது நாம் அமைதியை இழந்துவிடக்கூடாது. சரிதானே ?

    வாழ்க்கையை இன்னும் சற்று தெளிவோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்..

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 24

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களைக் கண்டு ஏன் பயப்படவேண்டும் ?

    கற்காலம் தொட்டே  மனிதனின் ஆர்வமும் தேடல்களும் அவனுடைய துணிவுக்கு வித்தாக அமைந்திருந்தன. கற்களைத் தட்டி நெருப்புப்பொறியைக் கண்ட மனிதன் நெருப்பின் உபயோகத்தை சிந்தனையின் மூலமாகவும் அனுபவத்தின் மூலமாகவும் உணர்ந்தான். உணவுகளைப் பக்குவப்படுத்தவும் குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் நெருப்பை உபயோகித்தான். அவன் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டது. கற்களை செதுக்கி ஆயுதங்களைப் படைத்தான். அவன் வேட்டையாடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.. தொடர்ந்து உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தான். கூட்டாக வாழ ஆரம்பித்தன. விவசாய முறைகளைத் தேர்ந்தெடுத்து உண்பதற்கு பல தானிய வகைகளை வளர்க்க ஆரம்பித்த்தான். மாற்றங்கள் தொடர்ந்தன. பல ஆயிரம் ஆண்டுகள் விவசாயம் சார்ந்த சமூகத்தில் தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தான். உடுக்கும் முறைகள் வாழும் முறைகள், தொழில் முறைகள், உறவு முறைகள், சிந்தனை முறைகள் மற்றும் திறன்கள் ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தன. இந்த மாற்றங்களின் பின்னால் என்ன நடந்து கொண்டிருந்தது ?

    மாற்றங்களைக் கண்டு வியந்து மனமுவந்து அவற்றை ஏற்றுக்கொண்டது ஒரு சார்பு. மாற்றங்களைக் கண்டு பயந்து அவைகளால் தங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுமோ என்று அவற்றை மறுத்தது மட்டுமின்றி அவற்றிற்குத் துணையாக இருந்தவர்களை தாக்கவும் அழிக்கவும் முற்பட்டது மற்றொரு சார்பு. மாற்றங்களுக்கு எதிரான போராட்டங்கள் சரித்திரத்தின் போக்கையும் சமுதாயங்களின் முற்போக்கு வளர்ச்சியையும் நிர்ணயித்தன. அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மாற்றங்களின் வேகத்தையும் திறன்களையும் தேவைகளையும் ஊக்குவித்தது மட்டுமின்றி அவற்றிற்குத் துணையாகவும் இருந்து வந்தன.

    மாற்றங்களை எதிர்த்தவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் உள்ள சில காரணங்கள்:

    1. மாற்றத்தினால் தற்போது இருக்கின்ற பாதுக்காகாப்பான நிலைக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்ற பய உணர்ச்சி.
    2. மாற்றங்கள் நம்மிடம் புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்துமே. அவைகளை நாம் எப்படி சமாளிப்பது என்ற தயக்க உணர்ச்சி.
    3. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் படச்சத்தில் புதிய கற்றலும் புதிய திறன்களும் நமக்குத் தேவைப் படுமே. அவைகளை நம்மால் கற்றுக்கொள்ளவோ சாதிக்கவோ முடியுமா என்ற இயலாமை உணர்ச்சி
    4. இருப்பது நன்றாகத்தானே இருக்கின்றது. இருந்துவிட்டுப் போகட்டுமே. மாற்றம் இப்பொழுது எதற்கு என்ற முயற்சியைத் தடுக்கும் துணிவின்மை.
    5. மாற்றங்கள் வரும்பொழுது அவைகளில் திறனுள்ளவர்களால் நாம் பின்தள்ளப்படுவோமே? அது ஏற்புடையதா ? அதை எப்படி சமாளிப்பது என்ற தாழ்வு மனப்பன்மை
    6. எனக்கு வயதாகி விட்டதே. இதற்கு மேல் இவைகளை எல்லாம் என்னால் எப்படிக் கற்க முடியும் ? எனவே மாற்றங்கள் எல்லாம் இளைய சமுதாயத்திற்குத் தான் நமக்குத் தேவையில்லை என்ற வளர்ச்சியை விட்டு விலகி நிற்கும் தட்டிக்கழிக்கும் மனப்பான்மை.

    இன்னும் இது போல பல காரணங்கள் நமது மாற்றங்களைக் கண்டு அஞ்சி நிற்பதற்கும் அதில் பங்குதாரர்களாக இல்லாததற்கு காரணமாக இருந்துள்ளது; இருக்கின்றது.

    மாற்றங்கள் – இயற்கையின் வரப்பிரசாதம்

    மாற்றங்கள் – வாழ்க்கைக்குப் பொருள் கொடுக்கும் விளக்கங்கள்

    மாற்றங்கள் – புதுமையின் சுயசரிதைக்கு முன்னுரை

    மாற்றங்கள் – மற்ற உயிருள்ள உயிரில்லாத வாழ்வினங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் சாராமல் இயற்கை எழுதும் புதுக்கவிதை.

    விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மாற்றங்களைத் தவிர வேறு எதுவும் மாறுவதில்லை !

    மாற்றங்கள் இயற்கையின் இயல்பென்றால் அவைகளை நாம் எப்படித் தடுக்க முடியும்? எனவே துணிவுடன் வாழ்வில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் அவைகளின் உதவியுடன் வாழ்வில் முன்னேற்றப்பாதையை வழிவகுத்துக்கொள்ளவும் அவைகளைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

    “நாம் எப்படி இருக்கவேண்டும் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நாம் இருக்கும் இடத்திலிருந்தே முடிவு செய்ய முடியாது. நம்முடைய மாற்றங்களே அவைகளுக்கு வழிவகுக்கும்” என்று பல தத்துவ மேதைகள் கூறியிருக்கின்றனர்.

    மாற்றங்கள் நமக்குத் தயக்கத்தை உருவாக்கலாம். மாற்றங்கள் நமக்கு பய உணர்ச்சியை உருவாக்கலாம். மாற்றங்கள் நமக்கு எதிர்ப்புகளை உருவாக்கலாம். மாற்றங்கள் நம்முடைய தற்போதைய நிகழ்வுகளின் அழிவுக்கு அடிக்கல்லாக அமையலாம். ஆனால் மாற்றங்களை நாம் ஏற்கப் பழகிக் கொள்ளவேண்டும். மாற்றங்களையும் அவற்றின் தேவைகளையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

    மாற்றங்களை ஏற்க மறுக்கின்றவர்கள் இருக்கும் இடத்திலேயே நிலைத்துவிடுகின்றனர். மாற்றங்கள் உயிர்ப்பிற்கும் துடிப்பிற்கும் ஒரு சாட்சி. மாற்றங்களை மறுத்து ஒதுங்குபவர்கள் தங்கள் தேக்கத்திற்கும் வளர்ச்சியின் முடிவிற்கும் ஒப்புதலை அளித்து விடுகின்றனர்.

    நான் படித்த ஒரு புத்தகத்தின் கதை நினைவுக்கு வருகின்றது. (The iceberg is melting  by John Kotter). இது அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளில் நடக்கும் ஒரு நிகழ்வு. அந்தப் பனிப்பாறையில் பென்குவின் பறவையினத்தைச் சார்ந்த பல பறவைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு பறவையும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டு வருகின்றது. ஆனால் ஒரே ஒரு பறவை மட்டும் அந்தப் பனிப்பாறையின் முகப்பில் அமர்ந்து அடுத்த பனிப்பாறையில் என்ன நடக்கின்றது என்பதை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. அது இரண்டு முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கின்றது.

    ஒன்று;  எதிரே உள்ள பனிப்பாறையின் உயரம் குறைந்துகொண்டே வருகின்றது.

    இரண்டு: பனிப்பாறையிலிருந்து உருகும் நீரின் வேகத்தின் சத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்குகின்றது.

    இந்தப் பார்வை அதனுடைய சிந்தனையைத் தூண்ட அதற்குப் புரிகின்றது – ” எதிரே உள்ள அந்த பனிப்பாறை உருகுகின்றது. அதனால் தான் நீரின் வேகமும் அதிகமாகின்றது. அந்தப் பனிப்பாறையின் உயரமும் குறைகின்றது.

    இந்தக் கருத்து மீண்டும் அதனுடைய சிந்தனையைத் தூண்ட எழுகின்ற சில கேள்விகள் :

    1. அந்த பனிப்பாறை உருகினால் அதில் உள்ள பறவைகளின் கதி என்ன? அவைகள் தங்களைக் காத்துக்கொள்ள வேறு ஏதாவது பனிப்பார்வைக்கு மாறிச் செல்ல வேண்டுமா ?
    2. அவை வேறொரு பனிப்பாறைக்கு மாறினாலும் அந்தப் பனிப்பாறை உருகாது என்பது என்ன நிச்சயம்? அவ்வாறென்றால் அதுவும் உருகினால் அவைகள் அங்கிருந்து இன்னொரு பனிப்பாறைக்கு மாறவேண்டிய நிலை ஏற்படுமா ?
    3. அந்த பனிப்பாறை உருகும்பொழுது நான் இருக்கின்ற பனிப்பாறை உருகாமல் இருக்குமா? நானும் எனது குடும்பமும் இன்னொரு பனிப்பாறைக்குச் செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டுமா ?
    4. இவ்வாறு பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருந்தால் நாம் மாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கவேண்டுமே! மாற்றங்களே வாழ்க்கையின் உண்மை நிலையென்றால் மாற்றங்களுக்கு நாம் எவ்வாறு நம்மைத் தயார் செய்துகொள்வது?

    இந்தக் கதை விடுக்கும் செய்தி: பனிப்பாறைகள் உருகிக்கொண்டுதான் இருக்கும். நாம் மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    நமது அறிவு, திறன்கள், வாழ்வு முறைகள், அறிவியல் கருத்துக்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் பனிப்பாறைகளே ! அவைகள் உருகிக் கொண்ட இருக்கும். நாம் மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டே இருத்தல் அவசியம்.

    மாற்றங்கள் புதுமைகளாக இருக்கலாம்; புதிர்களாக இருக்கலாம் ! ஆனால் மாற்றங்கள் இயற்கை அயராது நமது வாழ்விற்கும் சிந்தனைக்கும் கொடுத்துக்கொண்டிருக்கும் சவால்கள் .. அவைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாமே !

    மாற்றங்களுக்கு ஏற்றபடி வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்..

    Share
  •   வாழ்ந்து பார்க்கலாமே  23

    க. பாலசுப்பிரமணியன்

    துணிவுக்கு வரும் சவால்கள்

    துணிவு முன்னேற்றத்திற்கான ஒரு  அறிகுறி. துணிவு இல்லாமல்  நம்மால் எதிலும் முன்னேற்றம் காணமுடியாது. துணிவுக்கு எதிர்மறையானதே பயம். துணிவு இருளில் ஒளியைத் தேடுகிறது. பயம் ஒளியில் இருளைக் காண்கிறது. துணிவு சாதனைக்கு வழியைத் தேடுகின்றது. பயம் சாதனைப் பாதையில் உள்ள தடைக்கற்களை கண்டு தயங்கி நிற்கிறது. துணிவு தோல்வியைக்கண்டு அஞ்சுவதில்லை. பயம் வெற்றிப்பாதையில் தோல்வியின் தடயங்களைக்கண்டு மலைக்கின்றது.

    துணிவால் கிடைக்கின்ற சிறிய வெற்றிகூட அடுத்த முயற்சிக்கு வேண்டிய துணிவை நமக்கு அள்ளித்  தருகின்றது.இந்திய கடற்படையைச் சார்ந்த ஆறு பெண்மணிகள் Lt  கமாண்டர் விருத்திகா ஜோஷி அவைர்கள் தலைமயில் உலகம் முழுவதையும் ஒரு இயந்திர படகின் மூலமாக சுற்றி வருவதற்கான துணிவான முயற்சியை மேற்கொண்டார்கள், உலகின் பல்வேறு கடலலைகளின் தாக்கங்ககளையம் தாக்கல்களையும் முறியடித்துக்கொண்டு எட்டு மாதங்கள் தங்களுடைய பின்னடைவுகளுக்கு இரையாகாமல் துணிவோடு பயணித்தார்கள். எட்டு மாதங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன் அவர்கள் இந்தியா திரும்பியபோது இந்தப் பெண் வீராங்கனைகளை இந்திய துணைக்கண்டம் மற்றுமின்றி உலகத்தின் பல்வேறு நாடுகளும் புகழ்ந்தன .”

    இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரர் திரு சத்யேந்திர வர்மா தனது பள்ளியில் படிக்கும் பொழுதே வாழ்க்கையில் ஏதாவது புதிய சாதனை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார். விமானப் படையில் சேர்ந்ததும் விமானத்திலிருந்து கீழே விமானக்குடைகள் (parachute) மூலமாக குதிப்பதில் வல்லமை பெற்றார். அவருடைய சாகசங்கள் அவருடைய துணிவை மேலும் வளர்த்தன. அதன் பின் உலகின் பல உயரமான கட்டிடங்களிருந்து எவ்வாறு பாதுகாப்பான முறையில் கீழே குதிப்பது என்பதற்கான முயற்சிகளைத் துணிவுடன் மேற்கொண்டு பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டினார். இந்தியாவிலேயே இந்த சாகச விளையாட்டுக்களில் மிகத் தேர்வு பெற்றவராக விளங்கி இந்திய அரசின் பாராட்டுதல்களையும் பட்டங்களையும் இந்திய ஜனாதிபதியிடமிருந்து  பெற்றார். இளைஞர்களுக்கு அவர் கொடுத்த ஒரு செய்தியில் “துணிவு என்பது மனதில் இருந்தால் மட்டும் போதாது. அதைத் தொடர்ந்து நாம் ஈடுபடும் செயல்களில் நமக்கு போதிய அறிவும் திறன்களும் அந்த சாகசங்களை போதுமான தற்காப்புக்களுடனும் செய்வதற்கான திட்டங்களும் தேவை. துணிவுடன் செயல் படுவது என்பது ஒரு கண்மூடித்தனமான செயல் அல்ல

    ஆழம்தெரிந்து .காலைவிடு என்பது பழமொழி மட்டுமல்ல ஒரு சிந்திக்கவைக்கும் அறிவுரை. பலபேர்கள் தொழில்களைத் தொடங்கும் பொழுது தங்களிடம் போதுமான பணம் இருக்கின்றது என்ற ஒரே ஆணவத்தில் தொழிலில் ஈடுபட்டு அதை முறையாகச்  செயல்படுத்துவதற்கோ அல்லது நடத்துவதற்க்கோ தேவைப்படும் திறன்கள் இல்லாமல் தோல்விகளில் தங்களை இழந்து விடுகின்றார்கள். மேலும் சில பேர் தங்களிடம் அறிவும் திறனும் இருப்பதால் மட்டும் தொழில்களில் மூலதனமின்றி ஈடுபட முடியும் என்ற ஒரு குருட்டு தைரியத்தில் தங்கள் பொன்னான நாட்களை இழந்து நிற்கின்றார்கள். இந்த இரண்டு வகையினரும் துணிவைத் தவறாக எடை போட்டவர்கள். அறிவு துணிவுக்குக் கண்கள். திறன்கள் துணிவுக்குக் கைகள். ,மூலதனமும் வளங்களும் துணிவுக்குக் கால்கள். இவை அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் துணிவுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

    அறிவும் திறனும் இருந்து விருப்பமில்லாத பாதையில் துணிவாகச் செல்ல முயல்வது முட்டாள்தனம். பல நேரங்களில் பல படித்த துணிவான இளைஞர்கள் தங்களுடைய முன்னோர்கள் செய்த தொழிலை குடும்ப நிர்பந்தங்கள் காரணமாக விருப்பமின்றிச் செய்து பின்னடைவு ஏற்படுத்திய நிகழ்வுகள் பலவற்றைக் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம். ஒரு முறை மருத்துவப் படிப்பிற்கான தேர்வுகள் நடந்துகொண்டிருந்த மையத்தில் தேர்வின் முடிவில் ஒரு மாணவனை நேர்கண்டபோது அவரிடம் எப்படி எழுதியிருக்கின்றீர்கள் என்று கேட்ட பொழுது “மிக நன்றாகத் தான் எழுதியிருக்கின்றேன். முதல் நூறு பேருக்குள் உறுதியாக வந்துவிடுவேன். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு மருத்துவத்தில் விருப்பமில்லை. என் தாய் தந்தை இருவரும் மருத்துவராக இருப்பதினால் நான் இந்தத் தொழிலில் தான் வரவேண்டும் என்று விருப்பப்படுகின்றார்கள். எனக்கோ இலக்கியத்தில் தான் விருப்பம்.” என்று சொன்னபோது சில சமுதாய பார்வைகள் நமது வருங்காலத்தோடு எவ்வாறு விளையாடிக்கொண்டிருக்கின்றன என்று நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

    துணிவோடு செயல் படுபவர்கள் தோல்விகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். அவர்கள் மாற்றங்களுக்கு வித்திடும் பொழுதும் புதிய சிந்தனைகளை முன்வைக்கும் பொழுதும் அதற்கான ஏற்புக்கள் குறைவாகவும் எதிர்புக்கள் அதிகமாகவும் இருக்கத்தான் செய்யும். இந்த எதிர்ப்புக்களை அவர்கள் தங்கள் ஆக்க சக்திக்கு உரமாக்கிக்கொண்டு முன்னேறுவதில் தங்கள் சாதனைகளுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பார்கள். முதல் முறையாக கிராமபோனை நியூட்டன் கண்டுபிடித்த பொழுது அமெரிக்காவின் ஒரு முன்னணிப் பத்திரிகை அவரை மிகவும் சாடியது மட்டுமின்றி தரக்குறைவாக விமர்சித்தது. அவரின் கண்டுபிடுப்பு பைத்தியக்காரத்தனத்தின் எல்லை என்றும் அது அமெரிக்காவின் நாகரீகத்தின் அடிப்படைகளைச் சிதைத்து விடுமென்றும் கூறியது.. ஆனால் நியூட்டன் துணிவும் விடாமுயற்சியும் இந்த விமர்சனங்களை புறக்கணித்து தன்னுடைய ஆராய்ச்சிகளின் வெற்றிகளின் பாதைகளை வகுத்துக்கொண்டிருந்ததன.

    உங்கள் துணிவு பலபேரின் பயத்திற்குக் காரணமாக இருக்கலாம். உங்கள் துணிவு மற்றவர்களின் கருத்து ஆதிக்கங்களுக்குச் சவாலாக இருக்கலாம் உங்கள் துணிவு பழக்கத்தில் உள்ள பல நெறிமுறைகளுக்கும் செயல்களுக்கும் முடிவுரையாக இருக்கலாம். ஆனால் துணிவுதான் சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கல். அதற்கு நீங்களும் நானும் ஏன் முன்னுரை எழுதக்கூடாது ?

    துணிந்து வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • மண் வாசனை

    க. பாலசுப்பிரமணியன்

     

    சந்தமின்றிப்  பாட்டொன்று வந்திடுமே காற்றோடு

    சேத்துமண்ணு வாசனையைக் கூட்டிவரும் நட்போடு

    சலசலவென்றே தாளங்கள் தந்திடுமே தென்னங்கீற்றோடு

    சருகாகி இலையெல்லாம் சுருதிசேர்க்கும் மண்ணோடு !

     

    குட்டையிலே குளித்திருக்கும் எருமையெல்லாம் சுகத்தோடு

    கும்மாளமிடும் குழந்தைகளே குதித்திடுமே கூட்டத்தோடு

    குறைவில்லா மாக்கோலம் வாசலிலே செம்மண்ணோடு

    குறைவின்றி வந்திடுமே சிற்றெறும்புகள் குலத்தோடு !

     

    குலதேவன் கோயிலிலே விளக்கொன்று ஆற்றோரம்

    கும்மிருட்டில் குவிந்திடுமே மின்மினிகள் தெருவோரம்

    குறைவில்லா வாழ்வுகண்ட கிழமொன்று வாசலிலே

    குழந்தையொன்று அழுகின்ற குரலோ வீட்டினிலே !

     

    கூரையிலே அமர்ந்து கூவுகின்ற சேவலொன்று

    குளிர்காற்று வந்ததுமே தோகைவிரித்த மயிலொன்று

    கூட்டத்தையே சேர்க்கக் காத்திருக்கும் காகமொன்று

    குரைத்து ஓய்ந்து உறங்குகின்ற நாயொன்று !

     

    பசுவொன்று பால்சுரக்கும் பாவையவள் பாத்திரத்தில்

    பசிதீர்க்கப் பதனிவரும் பனங்கள்ளின் தோற்றத்தில்

    பனைவெல்லம் உருகிடும் வாசனையோ பக்கத்துவீட்டில்

    பச்சிலையில் மருந்திடுவார் பாட்டியோ தேள்கொட்டில் !

     

    வீடுதேடி வந்தோருக்கு விருந்துவைக்கும் நெஞ்சுண்டு

    கூழ்குடித்து வாழ்ந்தாலும் குணம்காக்கும் மனிதருண்டு

    குடிசையுள்ளே மண்விளக்கில் முகத்தினிலே சிரிப்புண்டு

    குறையினிலும் நிறைகாணும் குடும்பத்தில் அமைதியுண்டு !

     

    பட்டணத்து வாழ்க்கையிலே பதற்றமே மிஞ்சுதன்றோ

    பாழடைந்த மனத்தினிலே பாசங்கள் மறைந்ததன்றோ

    குதிரைவண்டி குலுங்கையிலே கொட்டுகின்ற பாசமெல்லாம்

    கோடிப்பணம் கொடுத்தாலும் குறையாமல் கிடைத்திடுமோ ?

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  -22

    க. பாலசுப்பிரமணியன்

    செயல்திறன்கள் இருந்தால் மட்டும் போதுமா ?

    “அறிவும் திறனும் உள்ள பலர் வாழ்க்கையில் முன்னேறாமல் எங்கேயோ முடங்கிக்கிடக்கிறார்களே” என்று சிலர் அங்கலாய்ப்பது காதுகளில் விழத்தான் செய்கிறது. அது உண்மையே !  அறிவும் திறனும் இருந்தால் மட்டும் போதாது. வளர்ச்சியும் முன்னேற்றமும் நமது வீடுகளைத் தேடி வந்து வாசல் கதவுகளைத் தட்டுவதில்லை. நாம்தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    “முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் ” என்பதுதானே முதுமொழி.

    “முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

    இன்மை புகுத்தி விடும்.”

    என்று திருவள்ளுவர் சொன்னதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டாமா?

    வாழ்க்கையில் பல பேர் வெற்றிகளை நோக்கிச் செல்ல முடியாமைக்குக் காரணம் அவர்கள் முயற்சிக்கான வழியில் நடைப்பயணத்தைத் துவக்காததுதான்.

    உண்மையின் பொருளை உணர்ந்து கொள்வதற்கான முயற்சிகளை இளைஞர் நரேந்திரன் எடுத்தார் . அவருக்கு வெற்றி கிட்டியது. மெய்யறிவின் தத்துவத்தை ஆழமாக உணர்ந்த அவர் விவேகாநந்தராக மாறினார். மனித நேயத்தை வளர்த்து சமூக சேவைக்குத் தன்னை அர்பணித்துக் கொண்டார்

    எத்தனையோ இன்னல்களுக்கிடையே ஏழ்மையால் வாடும்பொழுதும் தன்னுடைய முயற்சிகளை விடாமல் மேரி கியூரி (Marie Curie) தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவருக்கு பெயரும் புகழும் மட்டுமின்றி நோபல் பரிசும் கிடைத்தது.

    மிக ஏழ்மையான நிலையிலும் உண்பதற்குக் பொருளாதாரம் இல்லாத நிலையிலும் கணக்கில் தனது ஆர்வத்தையும் முயற்சிகளையும் விடாமல் தொடர்ந்த இராமானுஜம் கணித மேதையாக உலங்கெங்கும் பாராட்டுப் பெற்றார்.

    பல தடங்கல்களும் இன்னல்களுக்குமிடையே தனது மனிதநேய மனப்பான்மையை விட்டுக்கொடுக்காமல் முயற்சி செய்த இளம் பெண்மணி அன்னை தெரேசாவாக உலகெங்கும் போற்றுதலுக்குரியவராக மாறினார்.

    ஒரு சைக்கிளில் துணிகளை ஏற்றி வீடு வீடாக விற்று வந்த திருபாய்  அம்பானி (Dhirubai Ambani) தன்னுடைய விடா முயற்சியால் உலகம் வியக்கும் தொழிலதிபராக மாறினார்.

    இப்படி வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கை வரலாறுகள் நமக்கு வாழ்க்கையின் தத்துவத்திடை முன்மொழிகின்றன முயற்சி செய்து தோற்றவர்கள் மிகக் குறைவு. அவ்வாறு அவர்கள் தோல்வியைத் தழுவினால் அதற்கு அவர்களுடைய செயல்முறைகளில் இருக்கும் குறைபாடுகளே காரணமாக இருக்க வாய்ப்புண்டு.  “முயற்சி எப்பபோழுதும் நீங்கள் அதை விட்டுவிட மறுக்கும்பொழுதுதான் தன் பலனைக் கொடுக்கும் ” என்பது ஒரு மேலைநாட்டுப் பழமொழி. (Effort will release its reward only after you refuse to quit).

    முயற்சிகள் என்றுமே ஆரம்பத்திலேயே தங்கள் பலன்களை அள்ளிக் கொடுப்பதில்லை. முயற்சிகளை எடுக்கும் பொழுது சோதனைகள், தடங்கல்கள், போட்டிகள், தோல்விகள் ஆகியவை வரத்தான் செய்யும். ஆனால் அவைகளைத் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுதல் வேண்டும்.  ஆகவே முயற்சிகளின் பலன்களுக்குத் தேவை

    1. தன்னம்பிக்கை
    2. துணிவு

    தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை வெற்றிப்படிகளுக்கு அறிமுகம் செய்கின்றது. அது நம்முள் உறைந்துள்ள ஆக்க சக்தியை ஒருவழிப்படுத்தி தலை நிமிர்ந்து நிற்கச் செய்கின்றது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகராகக் கருதப்படும் அமிதாப் பச்சன் முதல் முறையாக குரல்வளத்திற்கான சோதனைக்குச் சென்ற பொழுது அவருக்குச் சரியான குரல்வளம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டார். அவருடைய தன்னம்பிக்கையும் துணிவுமே அவரைத் திரை உலகில் முன்னணியில் நிறுத்தியது.

    “தவறுகளே செய்யாத ஒரு மனிதன் வாழ்க்கையில் எதையுமே முயன்றதாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகின்றார். (Anyone who has never made a mistake has never tried anything new) “தன்னம்பிக்கையே ஒரு அழகான மனிதனுக்கு முகவரி.” என்று பல மனநல நிபுணர்கள் எடுத்துக்கூறியிருக்கின்றார்கள்.

    ஒரு ஏழை ஆட்டோ ஓட்டுபவரின் மகளும் ஒரு குடிசையில் போதிய மின் வசதியின்றி இருந்தும் படித்தவரும், கூலியாக இரயில் நிலையத்தில் உழைத்து கிடைத்த நேரத்தில் படித்தவரும் IAS தேர்வுகளில் வெற்றி பெறுவது அவர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் முயற்சிக்கும் முன்னுதாரணமாக அமைகின்றது.

    தன்னம்பிக்கை இல்லாத முயற்சி தடுமாற்றங்களை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை முயற்சிகளை முடுக்கிவிட்டு அதன் ஓட்டத்திற்கு வலிமையையும் சக்தியையும் கொடுக்கின்றது.

    சிலருக்கு தன்னம்பிக்கை இருந்தாலும் துணிவு இருப்பதில்லை. வாழ்க்கையில் வெற்றிபெற்றோர் சரித்திரங்களை அலசும்பொழுது அவர்களுடைய துணிவு அவர்களின் வெற்றிக்கு எவ்வாறு கைகொடுத்திருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

    “துணிவு என்பது பயமின்மை அல்ல. அது பயத்தை சந்தித்து அதன்மேல் கொள்ளும் ஆளுமையே ” என்று மிகச் சிறந்த மேதை மார்க் ட்வைன் (Mark Twain) என்பவர் கூறுகின்றார்.  (Courage is resistance to fear, mastery over fear and not absence of fear). இதே கருத்தை வலியுறுத்தி நெல்ஸன் மண்டேலா கூறுகின்றார் “நான் துணிவு என்பது பயமின்மை அல்ல, ஆனால் பயத்தின் மேல் கொள்ளும் வெற்றியே என்பதை அறிந்து கொண்டேன்” (I learnt that courage is not absence of fear, but the triumph over it)

    “துணிந்தவனுக்குத் தூக்குமேடை மெத்தை.” என்ற வசனம் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றதா?

    துணிவோடும் தன்னம்பிக்கையோடும் நமது முயற்சிகளை மேற்கொள்ளலாமே !

    Share
  • சொந்தங்கள் எத்தனையோ !

    பருவத்தில் பட்டாம்பூச்சிக் கனவுகள் சொந்தங்களே

    படுக்கையில் பசிக்கின்ற இன்பங்கள் சொந்தங்களே

    பாசத்தில் கருவாகி உருவாகும் சொந்தங்களே

    பாருள்ள உயிரெல்லாம் பார்வைக்குச் சொந்தங்களே !

     

    தோள்தூக்கி வளர்த்த உறவெல்லாம் சொந்தங்களே

    துயர்நீக்க கைகொடுக்கும் நட்பெல்லாம் சொந்தங்களே

    துள்ளியாடும் நேரத்தில் துணையிருந்தோர் சொந்தங்களே

    துணிவோடு வாழவைத்த துயரங்கள் சொந்தங்களே !

     

    நடுவழியில் நல்வணக்கம் சொல்லுபவர் சொந்தங்களே

    நாற்றோடு ஏர்பிடிக்கும் நல்நெஞ்சங்கள் சொந்தங்களே

    நாம்வாழ உழைக்கின்ற தோழமைகள் சொந்தங்களே

    நாலுபக்கம் தோள்தூக்கிக் கதைமுடிப்பார் சொந்தங்களே.

     

    நீர்வளமும் நிலவளமும் நாம்பெற்ற சொந்தங்களே

    நீலவானில் மின்மினிகள் காட்சிக்குச் சொந்தங்களே

    நிகழ்வோடு நேற்றும் நாளையும் சொந்தங்களே

    நிலையாத வாழ்வும் நித்தியமும் சொந்தங்களே

     

    பூமணமும் புலன்வளர்க்கும் காய்கனிகள் சொந்தங்களே

    புள்ளினமும் புவிவளரும் உயிரினங்கள் சொந்தங்களே

    புரியாத மொழிபேசும் பாரனைத்தும் சொந்தங்களே

    புரிந்துவிட்டால் சுமையில்லை சுகமான சொந்தங்களே !

    Share
  • புதிருக்குப் பதில்தேடி ..,,,

    க. பாலசுப்பிரமணியன்

     

    கல்லுக்குள் சிலையாய் கதிருக்குள் ஒளியாய்

    வில்லுக்குள் விசையாய் வித்துக்குள் சத்தாய்

    காற்றுக்குள் இசையாய் கற்பனையில் புதிராய்

    காலத்தின் அசைவாய் உருக்கொண்ட அருவே !

     

    சொல்லுக்குள் பொருளாய் சுவையெல்லாம் புதிதாய்

    வயிற்றுக்குள் பசியாய் வருகைக்குச் செலவாய்

    விடியலுக்கு முடிவாய் முடிவுக்குப்பின் முதலாய்

    குறைவுக்கு நிறைவாய் குடிகொண்ட திருவே !

     

    கோளெல்லாம் உனதோ கும்மிருட்டே முதலோ

    ஒளியாக வந்தாயோ ஒளிர்விட்டு நின்றாயோ

    வளிதன்னை வளர்த்தாயோ வானகத்தில் நின்றாயோ

    மெய்யென்ன யானறியேன் மேய்ப்பவனே நீதானோ?

     

    கற்பனைக்குள் நின்று கதைகள்பல சொல்லிட்டாய்

    கல்லுளிக்குள் மறைந்து கலைகள்பல படைத்திட்டாய்

    கலையாத மோனத்தில் கடவுளென்றே அமர்ந்திட்டாய்

    சிலையாக நான்நின்று சிந்தனையில் தவிக்கின்றேன் !

     

    ஒன்றோ இரண்டோ உருவங்கள் எத்தனையோ

    தாயோ தந்தையோ தனயனோ தூதுவனோ

    அன்றோ என்றோ எங்கிருந்துவந்த நன்றோ ?

    இன்றே வருவாய்அறிவாய் எனையாளும்புதிரே !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 21

    க. பாலசுப்பிரமணியன்

    சிந்தனைகளும் திறன்களும்

    சிந்தனைகள் வேண்டும். வளமான சிந்தனைகள் வேண்டும். பலன் தரக்கூடிய சிந்தனைகள் வேண்டும். ஆனால் வெறும் சிந்தனைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

    சிந்தனைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் தரலாம்

    சிந்தனைகள் தெறியாத கேள்விகளுக்குப் பதில்கள் தரலாம்.

    சிந்தனைகள் புதிய கருத்துக்களுக்கு உரமாக அமையலாம்

    சிந்தனைகள் கருத்துப் பரிமாற்றங்களுக்கு உதவி செய்யலாம்

    சிந்தனைகள், சில நேரங்களில், ஒரு மனிதனின் உள்ளுணர்வுகளுக்கும் காயங்களுக்கும் மருந்தாக அமையலாம்

    சிந்தனைகள் அறிவை வளர்க்கின்றன என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் வெறும் சிந்தைகளின் உலகத்தில் தங்களைத் தொலைத்துவிட்ட சிலர் அறிவுஜீவிகளாக மாறி நடைமுறை உலகத்திலிருந்து விலகி நிற்கின்றனர்.

    சிந்தனைகள் பல நேரங்களில் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. சிந்தனைகள் பல நேரங்களில் வளர்ச்சிக்கு வித்தாக அமைகின்றன.சமூக முன்னேற்றங்களிலும் வாழ்வியல் ஆதாரங்களை மாற்றி அமைப்பதற்கும் சிந்தனைகள் வழி வகுக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சிந்தனைகளே முன்னோடிகள்.

    ஆனால் எல்லாச் சிந்தனைகளும் பயனுள்ளதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் அமைவதில்லை. எனவே ஒரு தனி மனிதனுக்குத் தன் சிந்தனைகளின் பாதைகளை அறிந்து வழிப்படுத்தி இலக்குகள் நோக்கிச் செயல்படுத்துக்கொடிய திறன் தேவைப்படுகின்றது.

    சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் என்ன உறவு? கற்பனைகள் இலக்கற்ற சிந்தனைகள். அவைகள் கனவுகளாகவும் இருக்கலாம். நிறைவேறாத ஆசைகள் மற்றும் உணர்வுகளின் விழித்தெழுந்த வழிப்பயன்களாக இருக்கலாம். ஆயினும் கற்பனைகளும்

    சிந்தனைகளே. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு உளவியல் மேதை கூறுகின்றார் “கற்பனைகளனைத்தும் சிந்தனைகளே. ஆனால் சிந்தனைகள் அனைத்தும் கற்பனைகள் அல்ல.

    வளரும் பருவத்தில் பொதுவாகக் கற்பனைகளுக்கும்  சிந்தனைகளுக்கும் உள்ள தூரங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. அது மட்டுமல்ல,  கற்பனைகளை ஆக்க பூர்வமான சிந்தனைகளாக எண்ணித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுபவர்கள் சிலர் உண்டு. கனவுகளும் கற்பனைகளும் வாழ்க்கைக்கு மிக்க அவசியம். ஆனால் அவற்றின் பரிமாணங்களையும் அவற்றின் ஆக்கத்தையும் சாத்தியக்கூறுகளையும் அலசிப் பார்த்து அவைகளை வளர்ச்சிப் பாதைக்கு எவ்வாறு துணையாகக் கொள்ளலாம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    கற்பனைகளாக இருந்தாலும் சரி, சிந்தனைகளாக இருந்தாலும் சரி அவைகளைத் திறன்களாக மாற்றாதவரை அவைகளுக்கு உயிரோட்டம் கிடைப்பதில்லை. எனவே சிந்திக்காத தெரிந்த அனைவரும் தங்கள் சிந்தனைகளின் வடிவங்களை திறன்களாக வளர்க்கவும் மாற்றவும் கற்றுக்கொள்ளவேண்டும்.

    திறன்கள் சிந்தனைகளின் நடைப்பயணத்தை வலுவுள்ளதாகவும் வளமுள்ளதாகவும் ஆக்குகின்றன. வாழ்க்கையின் வெற்றிக்கு நேர்த்தியான வளமான திறன்கள் தேவை. “உங்களுடைய திறன்கள் இறைவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள். அவைகளை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்பது நீங்கள் உங்களுக்கு கொடுக்கக்கூடிய பரிசு.” என்பது மேலை நாட்டுப் பழமொழி

    திறன்கள் தாமாக நமக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு மட்டும் அவர்கள் மூதாதையர்களின் வழிவந்த மரபணுக்களின் தாக்கத்தில் சில திறன்களுக்கான வித்துக்கள் உள்ளுணர்வில் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. பொதுவாகத் திறன்களை நாம்தான் தேடி வளர்த்துக்கொள்ள வேண்டும். பட்டப்படிப்புக்களும் பாராட்டுக்களும் நமக்குத் திறன்களை வாரி வழங்குவதில்லை. திறன்களாலே தான் நாமக்குப் பாராட்டுக்களும் பெருமையும் கிடைக்கின்றன.

    திறன்களை எப்படி வளர்த்துக்கொள்ளுவது?

    1. முதலில் நம்முடைய ஆர்வங்கள் எந்தத் துறையில் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
    2. அத்தகைய ஆர்வங்களின் வளர்ச்சிப்பாதையில் என்னென்ன வாய்ப்புக்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
    3. அந்த வாய்ப்புக்களை அடைவதற்கான திறன்களும் அறிவாற்றல்களும் எப்படிப் பெற முடியும் என்பதைத் தேடி அறிய வேண்டும்.
    4. அந்தத் திறன்களை பெறுவதற்கான பயிற்சிகள் எங்கே எப்படிக் கிடைக்கும் என்பதை அறிய வேண்டும்.
    5. அந்தத் திறன்களைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தங்களால் செய்ய முடியுமா அல்லது அதை அடைவதில் உள்ள தடங்கல்களை வென்று சாதனையாளராக முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

    திறன்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு மனிதனுடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு மிகவே பயனுள்ளதாக இருக்கும். திறன்களில்லாத சிந்தனை திசைதெரியாத கப்பல் பயணம் போன்றது.

    ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது.

    ஒரு கப்பல் ஒரு துறைமுகத்தில் பயணத்திற்குத் தயாராக உள்ளது. அதனுடைய கேப்டன் அதை இயக்க முயற்சிக்கின்றார். ஆனால் அந்தக் கப்பல் இயங்கவில்லை. பல பொறியாளர்கள் வந்து அதைச் சோதனை செய்து காரணத்தைக் கண்டுபிடிக்க முயலுகின்றனர். அவர்களால் முடியவில்லை. அந்தநேரத்தில் அங்குள்ள உள்ளூர்வாசி அந்தக் கேப்டனிடம்  உள்ளூரில் ஒரு பழுதுபார்க்கும் தொழிலாளி இருப்பதாகவும் அவர் வயதானவராக இருந்தாலும் திறமை உள்ளவர் என்றும் கூறுகின்றார். உடனே அந்தத் தொழிலாளி அங்கே அழைக்கப்படுகின்றார்.

    அந்த வயதான தொழிலாளி அந்தக் கப்பலை ஒரு முறை வலம்வந்து பார்த்துவிட்டு ஒரு மூலைக்குச் சென்று அங்குள்ள ஒரு இயந்திரத்தை மெல்லத் தட்டுகின்றார். பின் அந்தக் கேப்டனிடம் “இப்பொழுது கப்பலை இயக்குங்கள் ” என்று கூற அந்தக் கப்பல் முயன்றவுடன் இயங்க ஆரம்பித்து விடுகின்றது.

    தன்னுடைய வேலைக்கான கூலியை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்க அந்தக் கேப்டனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

    “நீங்கள் ஒரே ஒரு இடத்தில் தட்டியதற்க்கா ஆயிரம் டாலர்கள் கேட்கின்றீர்கள்?”

    “இல்லை. நான் தட்டியதற்கான கூலி இரண்டு டாலர்கள்தான். ஆனால் எங்கே தட்ட வேண்டும் என்று கண்டுபிடித்தற்கான கூலி 998 டாலர்கள்.’

    திறன்கள் மலிவானவை அல்ல. திறன்களின் மதிப்புக்களை வெறும் பணத்தால் மட்டும் மதிப்பிட முடியாது..

    ஒரு பாடகருக்கு என்ன பணம் கிடைத்தாலும் அது அவர் பலருக்கு கொடுத்த மகிழ்வுக்கும் நிறைவுக்கு ஈடு அல்ல.

    ஒரு சிற்பியின் கலையை பணத்தால் மட்டும் மதிப்பிட முடியாது.

    ஒரு மருத்துவரின் நேர்மையான தொழிலையும் திறனையும் பணத்தால் ஈடு செய்ய இயலாது.

    ஒரு ஆசிரியரின் வாழ்க்கைப் பயணத்தில் வளர்ச்சி அடைந்தவர்களின் சரித்திரங்கள் அவருடைய சம்பளத்தை நிர்ணயிக்க முடியாது.

    திறன்கள் ஒரு மனிதனின் ஆன்மாவின் அறைகூவல்.. அதை உணர்ந்து நம்முடைய திறன்களை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாமே !

    தொடருவோம்

    Share
  • பந்தோடு பந்தாக….

    க.பாலசுப்பிரமணியன்

     

    கைப்பந்தாய் கால்பந்தாய் வண்ணமலர் கலைப்பந்தாய்

    வான்வெளியில் கோள்கள் எண்ணின்றி இருக்கையிலே

    கருப்பந்தில் எனைவைத்து வாழ்வொன்றில் விளையாட

    பூப்பந்தில் அழைத்ததேனோ யானறியேன் பூரணனே !

     

    புலன்தேடும் தேடலிலே வாழ்வெல்லாம் இரையாக்கிப்

    பார்முழுதும் பகலிரவாய் அலைந்தாலும் பயனேது

    ஊர்தேடிப் பேர்தேடி உறவுபலவும் தேடித்தேடி

    புகழ்தேடிப் பாதையிலே மாய்வதேனோ மாயவனே !

     

    கன்றாகிக் காளையாகிக் காமத்தில் வேடுவனாகிக்

    காலத்தின் தூதுவனாகிக்  கருமத்தின் சுமையாகிக்

    கற்பனையின் இரையாகிக் களைப்பின்றி விளையாடிக்

    கடைநிலையில் மூப்பினிலே முதிர்வதே னோ மூத்தவனே !

     

    விதிவிரட்ட  ஒருபக்கம் மதிதடுக்க மறுபக்கம்

    சதிராடும்  வாழ்வினிலே கதிதேடும் உயிரே

    விழிபிதுங்கி மதிமயங்கித் தன்னைத் தேடும்

    தேடலின் முடிவென்ன யானறியேன் வேதவனே !

     

    பருவங்கள் மாறிடவே பதறுகின்ற நெஞ்சமே

    உருவங்கள் மாறிடினும் உண்மைகள் உணராது

    தருணங்கள் வீணாக்கித்  தேடிட்ட திரவியத்தை

    நிலையென்று நினைத்தே தவிப்பதேனோ பராபரமே !

     

    கூவிட்ட சேவலுக்கோ கதிரவனே சொந்தமில்லை

    குயில்பாட்டு இனித்தாலும் குயிலுக்குச் சொந்தமில்லை

    நறுமணத்தைச் சுமந்தாலும் காற்றுக்குச் சொந்தமில்லை

    நானென்று அழைப்பதையே நாமறக்குமோ நாரணனே !

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 20

    வாழ்வின் வளத்திற்கு ஆக்கபூர்வமான சிந்தனைகள்

    சிந்தனை என்பது நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது மனதில் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு செயல். உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் சிந்திக்கும் திறன் மாறுபாட்ட அளவுகளிலும் மாறுபட்ட வகைகளிலும் இருப்பதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சிந்தனை ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான சக்தியையும் உணர்வாற்றல்களையும் அளிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சிந்தனை ஆக்கபூர்வமாக அமையும் பொழுது அது வாழ்வின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகின்றது. இதே சிந்தனை ஆக்க பூர்வமாக இல்லாதபொழுது அது வாழ்வின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் தேக்கமாக அமைவது மட்டுமின்றி பல வெற்றிப்படிகளுக்குத் தடைக்கல்லாகவும் அமைகின்றது. எனவே சிந்தனையை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அதன் வேகத்தையும் போக்கினையும் நடையையும் வழிப்படுத்துதல் அவசியமாகின்றது. பொதுவாக சிந்தனைகளில் நல்ல சிந்தனைகள் என்றும் தீய சிந்தனைகள் என்றும் ஏதும் இல்லை என்றும் ஒரு தனி மனிதனின் சமுதாய கலாச்சார பொருளாதார மற்றும் வாழ்வியல் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாரும் அவருடைய தனித்த சூழ்நிலைகள் வாழ்வாதாரங்கள் மற்றும் உணர்வு நிலைகளுக்கேற்றவாருமே அவைகள் நல்லவைகளாகவும் தீயவைகளாகவும் அமைகின்றன என்று பல ஆன்றோர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

    ஆங்கிலத்தின் மிகச் சிறந்த கவிஞரான செகப்பிரியர் (Shakespeare)கூறுகின்றார் “நல்லவை தீயவை என்று ஒற்றுமில்லை, நமது சிந்தனைகளே ஒன்றை நல்லதாகவும் தீயதாகவும் உருவகிக்கின்றன.” (“There is nothing either good or bad, only thinking makes it so”).  இதற்கு மாறுபட்ட கருத்துக்களும் வழக்கத்தில் இருக்கின்றன.

    இளம் பிரயாத்திலிருந்தே சிந்தனைகளை ஆக்க பூர்வமாக வளர்க்க பழகிக்கொள்ள வேண்டும். ஆக்க பூர்வமான சிந்தனைகள் ஒருவரின் ஆளுமை, மேலாண்மை மற்றும் சமுதாயப் பேராண்மை ஆகியவற்றிற்க்கு வழிவகுப்பது மட்டுமின்றி, அவர்களுடைய தனித்தன்மையை (individuality)போற்றுவித்து பேணிக்காக்கவும், அவர்களுடைய திறன்களை முறைப்படுத்தி ஊக்குவித்து படைப்பாற்றலை (Creativity)  வளர்த்து செம்மைப்படுத்தவும் உதவுகின்றது. மனநல உளவியல் வல்லுநர்கள் ஆக்க பூர்வமான சிந்தனைகள் மேலும் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கு அடிப்படையாகவும் சாரமாகவும் அமைவதாகக் கூறுகின்றனர். ஆக்கபூர்வமான சிந்தனைகள் நேர்மறையாகவும் இருத்தல் அவசியம். எதிர்மறையான இந்தச் சிந்தனைகள் குழப்பங்களையும் மனஅழுத்தங்களையும் வளர்ப்பது மட்டுமின்றி ஒருவரின் ஆளுமை மற்றும் மேலாண்மைத் திறன்களுக்குச் சவாலாக அமைகின்ற்ன.

    எனவே ஒருவரின் சிந்தனைகளின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கின்றது. அதன் வேகம், இயக்கவியல் மற்றும் வழிமுறைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதே அந்தச் சிந்தனைகளின்  எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.

    சிந்தனைகளை ஒரு கோப்புக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் வைப்பது சற்று கடினமான செயல். இவைகளே காலப்போக்கில் எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் குறிக்கோள்களாகவும் பல பரிமாணங்களில் வடிவெடுக்கின்றன.

    சிந்தனைத் திறன்களை பற்றி வெகுவாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியுள்ள டேனியல் கோலமான்(Daniel Golemaan) என்ற உளவியல் வல்லுநர் கூறுகின்றார் “சிந்தனைகள் உணர்வுகளோடு உறவாடுபவை. எனவே பல நேரங்களில் சிந்தனைகளின் மீது உணர்வுகளின் தாக்கம் ஏற்பட்டு அதனால் சிந்தனைகளின் போக்கு, வழித்தடங்கள் மற்றும் வேகப் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.” சிந்தனைகளின் பரிமாணங்களை பற்றி விளக்கும் பொழுது அவைகளை பக்கவாட்டுச் சிந்தனை, (Lateral Thinking) இணையான சிந்தனை, (Parallel Thinking) பகுத்தாய்வுச் சிந்தனை,(Analytical Thinking) படைப்பாற்றல் சிந்தனை,(Creative Thinking) மற்றும் விமர்சனச் சிந்தனை(Critical Thinking) என்று பல வகைகளாக எடுத்துரைக்கின்றார். இத்தகைய சிந்தனைத் திறன்கள் ஒருவருடைய வளர்ச்சிப் பாதையிலும் தொழில் முன்னேற்றத்திற்கும் பல விதங்களில் உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘சமுதாயத் சிந்தனை’ ஒரு தனி மனிதனின் சமுதாய உணர்வுகளை வளர்ப்பதற்கும் கூடி வாழ்வதற்கும் இன்றியமையாதது.

    இந்த மாதிரியான சிந்தனைத் திறன்கள் ஏதோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. காலந்தொட்டு இந்தச் சிந்தனைத் திறன்கள் நம்முடைய வாழ்வில் முக்கிய பங்கேற்றது மட்டுமின்றி நம்முடைய வாழ்வியலை முடுக்கிக் கொண்டிருந்தன. இந்தச் சிந்தனைத் திறன்களும் பள்ளி மற்றும் மேல் பட்டப்படிப்புகளுக்கும் தற்போது அதிகமான தொடர்பு இல்லாததே இந்தச் சமுதாயத்தின் மிகப் பெரிய சாபக்கேடு. பண்டைய காலத்தில் இந்தச் சிந்தனைகள் நடைமுறை வாழ்க்கையோடு இணைந்து ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தன. தற்போது வெறும் “நினைவாற்றலை’ மட்டும் வளர்க்கும் கல்விமுறையில் இந்தத் திறன்களை வளர்ப்பதற்கான வழிவகுத்தல் அவசியமாகின்றது. வெறும் மதிப்பெண்களால் மட்டும் ஒரு மாணவனின் திறனையும் தகுதியையும் மதிப்பீடு செய்வது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது.

    இளமைப் பருவத்தில் தெனாலி இராமன் கதைகள், மரியாதை இராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள் மற்றும் விடுகதைகள், புதிர்கள் போன்ற பல உள்ளீடுகள் கற்பவரின் சிந்தனைத் திறன்களை வளர்த்துக்கொண்டிருந்தன. தற்போது தொழில்நுட்பத் தாக்கத்தில் வருகை தந்துள்ள பல உள்ளீடுகள் இளைஞர்களின் உணர்வுகளின் ஊக்க நிலைகளை அளவுக்கு அதிகமாக வளர்த்து சிந்திக்கும் திறன்களோடு மன அழுத்தம், வெற்றியை நோக்கிய வெறித்தனம், ஆக்கிரமிப்பு மனப்பான்மை, பொறுமையின்மை, மற்றும் சுயநலத்தை அதிகமாக வளர்த்துக்கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியையும் அதன் தாக்கங்களையும், அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்களையும் நம்மால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாவிட்டாலும், ஒரு சமுதாய அளவில் நமக்குச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

    விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கும். அது இயற்கையின் விளையாட்டு. ஆனால் இந்த மாற்றங்களை நமது சமுதாயத்திற்கும் தனி மனிதனின் வாழ்வின் வளத்திற்கும் நல்லதொரு உள்ளீட்டாக அமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

    சற்று சிந்திக்கலாமே !

    (தொடரும்)

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 19

    க. பாலசுப்பிரமணியன்

     

    சிந்தனைகள் வாழ்வின் வளத்திற்கு அடிப்படை

    வாழ்க்கையின் வளம் என்பது எல்லோருக்கும் ஒன்றாக அமைவதில்லை. பிறக்கும் நாடு, ஊர், அங்குள்ள சமுதாய பழக்க வழக்கங்கள், இயற்கை வளங்கள் மற்றும் அதன் தாக்கங்கள், குடும்பச் சூழ்நிலைகள், போன்ற பல ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து அறிவாலும், முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேறித் தன்னுடை வாழ்க்கை வளத்தை மாற்றிக்கொண்டவர்கள் பலர். இவர்களின் அறிவு, உழைப்பு, செல்வம் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக அமைந்தது அவர்கள் சிந்தனைத் திறனே. வெறும் அதிர்ஷ்டத்தால் முன்னேறியவர்கள் என்று எண்ணப்படுவார்கள் மிகக் குறைவு. அவர்களுக்கும் வாழ்வில் சிந்தனை பல நேரங்களில் உதவியாக இருந்துள்ளது.

    உலகின் மிகப் பெரிய சிந்தனையாளரான பிளாட்டோ என்பவர் கூறுகின்றார் “சிந்தனை என்பது நீங்கள் உங்கள் ஆன்மாவோடு நடத்தும் ஒரு உரையாடல்.” (Thinking: Talking of the soul with itself -Plato) எனவே இளம் வயது முதல் நாம் குழந்தைகளுக்குச் சிந்தனைத் திறனை வளர்ப்பது மிக அவசியம். பல சமுதாயங்களில் முந்திய நாட்களின் கருத்துக்கள் அடுத்த சமுதாயத்தின் மீது புகுத்தப்படுகின்றன. இதனால் அந்தச் சமுதாயத்தின் வளர்ச்சி குன்றிவிடுகின்றது. அந்தச் சமுதாயத்தின் மக்கள் பெரும்பாலும் அடிமைகளாக வாழ்கின்றார்கள். அவர்களின் தன்னம்பிக்கை முன்னேற்ற உணர்ச்சி ஆகியவை பெருவாக பாதிக்கப்படுகின்றன

    சரித்திரத்தை திரும்பிப் பார்க்கும் பொழுது எவ்வாறு பல நாடுகளில் மக்களின் சிந்தனைத் திறன் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களைத் தங்கள் ஆட்சிக்கு அடிமைகளாக வைத்திருந்தனர் என்பதற்கான பல சான்றுகள் கிடைக்கின்றன. இதை மாற்றுவதற்கான ஒரே வழி சிந்தனையை வளர்க்கும் கல்வி முறையே. ஆனால் துரதிருஷ்டவசமாக நமது கல்வி முறை மாணவர்களின் சிந்திக்கும் திறனுக்குச் சவாலாக அமைந்துள்ளது. அவர்களை வெறும் ‘நினைவுப் பெட்டகங்களாக” மாற்றி ‘தொழில் சார் சமுதாயத்தில்’ இருந்தது போல் வெறும் இயந்திரங்களாக மாற்றிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலை ஒரு வளரும் மறுமலர்ச்சி தேடும் சமுதாயத்திற்கு ஏற்றதல்ல. .

    “நான் சொன்னதைச் செய்’ என்பதும் “உனக்கு கேள்விகேட்கும் உரிமையோ தகுதியோ அல்ல” என்ற அணுகுமுறையைக் கொள்வதும் ஒரு ஆதிக்க மனப்பான்மையை வளர்க்கும். இதனால் கருத்துக்கள் பரிமாற்றம் குறைந்து மூட நம்பிக்கைகளும் அறிவியல் சிந்தனையில் தேக்கங்களுமே ஏற்படும். “உங்கள் சிந்தனையின் ஆளுமை எப்படி இருக்கின்றதோ அப்படியே உங்கள் வாழ்க்கை அமையும்:” என்று பல பேரறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.

    பல நாட்டுக்கு கல்வி முறைகளில் ஆரம்பக்  கல்வி முதலே குழந்தைகளுக்கு சிந்திக்கும் திறனையும், கேள்விகள் உருவாக்கும் திறனையும் வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். “ஒரு மனிதனை அவன் அளிக்கும் பதில்களால் அல்லமால் அவன் கேட்கும் கேள்விகளால் எடைபோடு” (Judge a man by his questions rather than by his  answers) என்று வோல்டைர்(Voltaire) என்ற தத்துவ மேதை கூறுகின்றார். கேள்விகள் ஒரு மனிதனின் அறிவின் ஆரோக்கியமான

    வளர்ச்சிக்கு அடிப்படை. கேள்விகள் வளமான சிந்தனைக்கு அடிப்படை. இதே நேரத்தில் நாம் பல காலங்களால் போற்றப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் அவைகளைப் போற்றவும் அறிந்துகொள்ள வேண்டும்.

    நாம் சிந்திக்க விழைவதால் நம்முடைய முன்னோர்கள் கூறிய கருத்துக்களும் சிந்தனைகளும் தவறானது என்றோ ஆதிக்க உணர்வோடு உள்ளது என்ற கருத்தோ கொள்ளுதல் தவறாக இருக்க வாய்ப்புண்டு. காலத்திற்கு ஏற்ற முரண்பாடான சிந்தனைகளை மாற்றுதலும் பழமைக்கு எதிர்மறையல்ல.

    சில ஆண்டுகள் முன்னால் நான் ஒரு பள்ளியிலே பதினொன்றாவது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்த பொழுது ஒரு மாணவன் கேட்ட கேள்வி என்னை அதிர்ச்சி செய்தது. “அய்யா. நீங்கள் உங்கள் வீட்டிற்கு பால் எங்கே வாங்குகின்றீர்கள்?”  நான் சிறிது நேரம் அந்தக் கேள்வியின் உள்நோக்கம் அறியாமல் திகைத்தேன். அமைதியாக “அருகில் உள்ள ஆவின் பாலகத்தில் சென்று” என்று பதிலளித்தேன். அதைத் தொடர்ந்து அவன் கேட்டான் “உங்கள் வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் எங்கிருந்து வாங்குகின்றீர்கள்?”  தயக்கத்துடன் பதிலளித்தேன் “அருகில் உள்ள மளிகைக் கடையிலிருந்து”  தன் கேள்விக்கணைகளை நிறுத்தாமல் அவன் கேட்டான் “உங்கள் மருந்துகளை எங்கிருந்து வாங்குகின்றீர்கள்?”

    உடன் பதிலளித்தேன் “அருகில் உள்ள மருந்தகத்திலிருந்து”

    அவன் சிரித்துக்கொண்டே கேட்டான் “நீங்கள் பால் வாங்க ஒரு இடத்திற்கும் மளிகைப் பொருட்கள் வாங்க ஒரு இடத்திற்கும் மற்றும் மருந்து வாங்க இன்னொரு இடத்திற்கும் செல்கின்றீர்கள். நான் மட்டும் இயற்பியல், வேதியல் மற்றும் கணக்கு போன்ற எல்லா பாடங்கையும் ஏன் ஒரே பள்ளியில் படிக்க வேண்டும். நான் வெவ்வேறு பள்ளிகளில்  வெவ்வேறு பாடங்களை படிப்பதில் என்ன தவறு? முடியுமா?”  எனக் கேட்டான். நான் திகைத்து நின்றேன். கேள்வி சரியா தவறா என்பதே கருத்தல்ல. அந்த மாணவனின் சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது. ஒருக்கால் நாளைய பள்ளிகள் அப்படித்தான் அமையுமோ?”

    “ஒரு பிரச்சனையை அணுகுவதற்கு அதன் உள்வட்டத்தில் இருந்து சிந்தித்தால் அதற்கு விடை கிடைக்காது. அந்த வட்டத்திற்கு வெளியே சென்று சிந்திக்க வேண்டும்”  (You cannot solve the problems from the same leel of consciousness which created them) என்று மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) கூறுகின்றார்.

    சிந்தனைகள் இல்லாத வாழ்வு சிறக்காது. சிந்தனைத் திறன்களை நாமும் வளர்த்து நமது குழந்தைகளையும் வளர்க்க உதவி செய்யலாமே !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 18

    க. பாலசுப்பிரமணியன்

    வளமான வாழ்விற்கு வளமான சிந்தனைகள்

    உடல்நலமும் மனநலமும் இணைந்து சிறப்பாக இருந்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்க முடியும். உடல் நலத்திற்கு எவ்வாறு உடற்பயிற்சியும் சத்தான உணவும் தேவையோ அதேபோல் மனநலத்திற்கு நல்ல சிந்தனைப் பயிற்சியும் சத்தான சிந்தனைகளும் தேவை. ஒரு மனிதனின் சிந்தனையே அவனை உருவாக்குகிறது என்று அண்ணல் காந்தி அடிகள் கூறுகின்றார். வளமான தூய்மையான நேர்மறையான சிந்தனைகள் நமக்குத் தேவை. இவைகளை வளர்ப்பதற்கு நாம் அதைப் பேணும் சூழ்நிலைகளில் இருத்தல் அவசியம். எதிர்மறையான சிந்தனைகளைக் கொடுக்கும் மற்றும் வளர்க்கும் சூழ்நிலைகளில் நாம் இருந்தால் அதன் பாதிப்புக்கள் நம்மை உலுக்கும். அவைகளுக்கு இரையாகி நாம் வாழ்வில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்போம். இந்தக் கருத்தை பல மனநல வல்லுநர்கள் தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப் படுத்தியிருக்கின்றார்கள் நல்ல சிந்தனைகள் நம்முடைய வளர்ச்சிக்கு ஆணிவேர். நல்ல சிந்தனைகள் நம்முடைய மகிழ்ச்சிக்கு உத்திரவாதம். நல்ல சிந்தனைகள் நம்முடைய வருகாலத்திற்கு நாம் அளிக்கும் காப்பீடு. நல்ல சிந்தனைகளே நம்முடைய அன்பான உறவுகளை வளர்ப்பதற்கு  நாம் போடும் உரம்.. நல்ல சிந்தனைகளே நம்முடைய ஆளுமை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.

    ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு கிராமத்தின் எல்லையில் உள்ள ஒரு அரச மரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருந்தார். அவருடன் அவருடைய சீடர்கள் அமர்ந்திருந்தனர். அங்கே வந்த ஒரு வழிப்போக்கன் அந்த முனிவரிடம் “நான் பக்கத்துக்கு கிராமத்திருக்குச் செல்கின்றேன். அங்குள்ள மக்கள் எப்படிப் பட்டவர்கள்” என்று கேட்கின்றான். அந்த முனிவர் பதிலுக்கு அவனிடம் ‘நீ வருகின்ற கிராமத்தில் உள்ள மக்கள் எப்படி’ என்று கேட்கின்றார். அதற்கு அவனோ “அங்குள்ளவர்கள் மிக மோசமானவர்கள்” என்று பதிலளிக்கின்றான். உடனே முனிவரோ “அப்படியா, இந்த கிராமத்தில் உள்ளவர்களும் அதே போன்றவர்கள்தான்” என்று சொல்கின்றார். சிறிது நேரம் கழித்து இன்னொரு வழிப்போக்கன் அதே போல் இந்த முனிவரிடம் கேட்க முனிவரும் தன்னுடைய அதே கேள்வியை இந்த வழிப்போக்கனிடம் கேட்கின்றார். இதற்கு பதிலளிக்கும் அந்த வழிப்போக்கன் மகிழ்வுடன் “அவர்கள்  மிகவும் நல்லவர்கள்”என்று சொல்ல முனிவர் “இந்த ஊர் மக்களும் அதே போல் நல்லவர்கள் என்று பதிலளிக்கின்றார். அதிர்ச்சியடைந்த சீடர்கள் முனிவரிடம் ‘குருவே, ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமான பதில் கூறுகின்றீர்களே” எனக் கேட்க  முனிவரோ “உன் சிந்தனை எப்படியோ அப்படித்தான் உன் உறவுகள் அமையும் “என்று பதிலளிக்கின்றார்.

    சிந்தனைகள் நமது சக்திக்கு உயிரூட்டுபவை. சிந்தனைகளின் வளமும் தூய்மையும் உண்மையும் நம்முடைய செயல்களுக்கு வெளிச்சம் போட்டு வழிகாட்டும் தன்மையுடையவை

    ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்று அறிவுரை கூறும் வள்ளுவர் மேலும் கூறுகின்றார்

    “சென்ற விடத்தாற் செலவிடாது தீதொறி

    நன்றின் பால் உய்ப்பது அறிவு.”

    பல நேரங்களில் நமக்கு துயரத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் மனம் தன்னைத்தானே குறைவாக மதிப்பிட்டு நமது சிந்தனைகளின் வளத்தைப் பாதிக்க வாய்ப்புக்கள் வரும். அந்த நேரங்களில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மை இளக்காரமாகவோ அல்லது நமது இயலாமையை பெரிதுபடுத்தியோ நம்மைக் கொச்சைப்படுத்த வாய்ப்புகள் ஏற்படலாம். அந்த நேரங்களில் நாம் நம்முடைய சிந்தனைகளை மேலும் பலவீனமாக்கிக்கொள்ளாமல் நம்மீது வீசப்படும் கணைகளை எவ்வாறு நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று முற்போக்காகச் சிந்திக்க வேண்டும்.

    ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் கழுதையை வளர்த்துக்கொண்டிருந்தான்,. ஒரு நாள் உணவுக்காக அந்தக் கழுத்தை மேய்ந்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டது. எவ்வளவு முயன்றும் அதனால் மேலே ஏறி வர முடியவில்லை. அதன் ஊரிமையாளருடன் ஊர் மக்கள் அனைவரும் அந்தப் பள்ளத்தின் அருகே கூடிவிட்டனர். “இது இனிமேல் மேலே வந்து என்ன செய்யப்போகின்றது “ïஇதற்கு வயதாகி விட்டது. இதை வெளியே எடுத்து என்ன செய்யப்போகின்றாய்”  என்று பல அறிவுரைகளை வீசிவிட மக்கள் சொல்கேட்டு மனம்மாறிய உரிமையாளர் அந்தப் பள்ளத்திருக்குள்ளேயே அதைப் புதைத்துவிட எண்ணி  அருகில் இருந்த மணலைப்போட்டு மூடிவிட முயற்சி செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தில் மண்சேர அந்தக்கழுதை அதன் மீது கால் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வெளியே வந்து விட்டது. அதன் சிந்தனையையும் தன்னம்பிக்கையையும் பாராட்டாமல் இருக்க முடியுமா?

    எதிர்மறையான சூழ்நிலைகளிலும் வளமான முற்போக்கான நேர்மறையான சிந்தனை நமக்கு தன்னம்பிக்கையையும் வெற்றியையும் அளிக்கும் என்பதில் ஐயப்பாடு ஏதுமில்லை.

    நல்ல நேர்மறையான முற்போக்கான சிந்தனையுடனும் அதைத் தருகின்ற சூழ்நிலைகளிலும் வாழ்ந்து பார்க்கலாமே !

    Share