க. பாலசுப்பிரமணியன்

 

சந்தமின்றிப்  பாட்டொன்று வந்திடுமே காற்றோடு

சேத்துமண்ணு வாசனையைக் கூட்டிவரும் நட்போடு

சலசலவென்றே தாளங்கள் தந்திடுமே தென்னங்கீற்றோடு

சருகாகி இலையெல்லாம் சுருதிசேர்க்கும் மண்ணோடு !

 

குட்டையிலே குளித்திருக்கும் எருமையெல்லாம் சுகத்தோடு

கும்மாளமிடும் குழந்தைகளே குதித்திடுமே கூட்டத்தோடு

குறைவில்லா மாக்கோலம் வாசலிலே செம்மண்ணோடு

குறைவின்றி வந்திடுமே சிற்றெறும்புகள் குலத்தோடு !

 

குலதேவன் கோயிலிலே விளக்கொன்று ஆற்றோரம்

கும்மிருட்டில் குவிந்திடுமே மின்மினிகள் தெருவோரம்

குறைவில்லா வாழ்வுகண்ட கிழமொன்று வாசலிலே

குழந்தையொன்று அழுகின்ற குரலோ வீட்டினிலே !

 

கூரையிலே அமர்ந்து கூவுகின்ற சேவலொன்று

குளிர்காற்று வந்ததுமே தோகைவிரித்த மயிலொன்று

கூட்டத்தையே சேர்க்கக் காத்திருக்கும் காகமொன்று

குரைத்து ஓய்ந்து உறங்குகின்ற நாயொன்று !

 

பசுவொன்று பால்சுரக்கும் பாவையவள் பாத்திரத்தில்

பசிதீர்க்கப் பதனிவரும் பனங்கள்ளின் தோற்றத்தில்

பனைவெல்லம் உருகிடும் வாசனையோ பக்கத்துவீட்டில்

பச்சிலையில் மருந்திடுவார் பாட்டியோ தேள்கொட்டில் !

 

வீடுதேடி வந்தோருக்கு விருந்துவைக்கும் நெஞ்சுண்டு

கூழ்குடித்து வாழ்ந்தாலும் குணம்காக்கும் மனிதருண்டு

குடிசையுள்ளே மண்விளக்கில் முகத்தினிலே சிரிப்புண்டு

குறையினிலும் நிறைகாணும் குடும்பத்தில் அமைதியுண்டு !

 

பட்டணத்து வாழ்க்கையிலே பதற்றமே மிஞ்சுதன்றோ

பாழடைந்த மனத்தினிலே பாசங்கள் மறைந்ததன்றோ

குதிரைவண்டி குலுங்கையிலே கொட்டுகின்ற பாசமெல்லாம்

கோடிப்பணம் கொடுத்தாலும் குறையாமல் கிடைத்திடுமோ ?

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *