Month: July 2014

  • திருமால் திருப்புகழ் (132)

    கிரேசி மோகன்

    Udupi Krishna series. #krishnafortoday - Keshav
    Udupi Krishna series. #krishnafortoday – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————-

    Krishnapremi series. #krishnafortoday.  -Keshav
    Krishnapremi series. #krishnafortoday. -Keshav

    அறம்பாவம், பூமி சுரர்வானம், வாழும்,
    நரன்தாவும் மந்திமற்றும் நான்கு, -புரம்யாவும்,
    நாரா யணனனாய், நிற்கும் உணர்வினை,
    ஏராள மானவொன்றாய் ஏத்து….(308)

    இடுப்பில் ஒருகை, இணையவெண்ணை மத்தின்,
    பிடிப்பில் மறுகை பதிய -உடுப்பியில்,
    பின்னழகைக் காட்டிநிற்கும், பீலிமயிற் கண்ணனே
    முன்னழகைப் பார்ப்பதெந்த மாது….(309)

    அழைக்கும் குரலைக்கேட்(டு), ஆடா(து) அசங்கா(து),
    உழைக்க வருவானவன் ஓடி, -மழைக்கு
    குடையாய் மலையேந்தி, கோகுலம் காத்த
    இடையன் இணைப்பே இருப்பு….(310)

    மாதவன் கேசவன், மாலவன் மோகினி,
    மாதவன் சபரீசன் மாதாவாம், -ஆதலால்,
    அன்னையென்(று) எண்ணி, அணுகுவோரைக் காத்தருள்வான்,
    தன்னையே கன்னையன் தந்து….(311)

    ராவண காமத்தை, போவெனச் சொல்வீர்கள்,
    வாவென நாளை விளம்பாதீர், -ஆவன,
    செய்தோர் அகத்தினில், சாகேதன் ஸ்ரீகிருஷ்ணன்,
    வைதாலும் வாழ்வான் வலிந்து….(312)

    கருத்து டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
    ——————————————————————————————

    அங்கை படுக்கையாய், அதரம் தலையணையாய்,
    செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய், -தொங்குமெழில்,
    புல்லாக்கு மேல்குடையாய், வல்லா னுடன்வாழும்,
    புல்லாங் குழலுந்தன் பேறு….(313)

    ———————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html

     

    Share
  • அடுக்குமாடி குடியிருப்புகளும், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    சென்னையில் மீண்டும் ஒரு அவலம். நில அதிர்வாலோ அல்லது சுனாமியாலோ ஏற்பட்ட பேரழிவு அல்ல. அரசு அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலமே இது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பாதுகாப்புச் சட்டங்கள் பல இருக்கின்றன. அவைகள் சட்ட அளவில் மட்டும் இருக்கும் போல் உள்ளது. கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்பு முறையான மண் பரிசோதனை, நில ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை. அந்த இடத்தில் ஆறு மாடிகள் கட்டலாம் என்று வல்லுநர்களின் அத்தாட்சி பெற்ற பின்புதான் பதினொரு மாடி கட்டப்பட்டது என்றால் பதினொரு மாடி கட்டி முடிக்கும் வரை அரசு பொறியாளர் எங்கு சென்றுவிட்டார். அவருடைய கவனத்திற்கு இந்தச் செய்தி எப்படி எட்டாமல் இருந்திருக்கும்? அவருடைய அலட்சியப்போக்கின் விலையாக இன்று எத்தனை உயிர்களை பலி வாங்கிவிட்டது. இந்தக் கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கான தரச் சான்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட அவலம். குடியிருக்க ஒரு வீடு சொந்தமாக வேண்டும் என்ற ஆசையில் எங்கோ இருந்துகொண்டு சிரமப்பட்டு, வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி ஒரு வீட்டை வாங்குபவர்களும், இந்த கட்டுமானப் பணிகளுக்காக, வயிற்றுப்பாட்டிற்காக பீகார், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற இடங்களிலிருந்து குடும்பத்துடன் வேலைக்கு வந்தவர்கள் என இரு சாராரும் இன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டு வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். இறந்த பிறகு அவர்களுடைய பிணங்களை வந்துப் பார்த்து ஆறுதலளிப்பதைவிட, அமைச்சர் பெருமக்கள் தங்களுக்குக் கீழ் உள்ள நிர்வாக அதிகாரிகளை சரியான முறையில் பணியாற்றச் செய்திருந்தாலே இந்த கோர சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்யாமல், இனியாவது சென்னை மாநகரைச் சுற்றி கட்டிக்கொண்டிருக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்து, தரச் சான்றிதழ்கள் தருவார்களா மாநகராட்சி அலுவலர்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    10514583_1459257254331310_1997140068682654040_n

    தமிழக அரசும், கட்டுமான நிறுவனங்களும், கட்டிடங்கள் கட்டுவதற்காக தங்களுடைய வயிற்றுப்பாட்டிற்காக வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு, உயிர் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் உறுதி செய்ய மனதுவைக்க வேண்டும். பல லட்சம் மதிப்புள்ள இந்தக் கட்டிடங்களை வாங்குபவர்களின் பாதுகாப்பிற்காகவும் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு காப்பீடு செய்யப்பட வேண்டும். இதில் பயன்படுத்தப்படக்கூடிய சிமெண்ட், மின்பொருட்கள், இரும்புப் பொருட்கள் போன்றவைகளின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். இனியாவது இது போன்ற மோசமான அழிவுகள் ஏற்படாமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் ஆணையம் இதன் போக்கில் எந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாகச் செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share
  • மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

    –கார்த்திகேயன், விமலதாரணி.

     
     
     
     

    கேள்வி : 1
    எனக்கு வயது 24. என் அண்ணன், என் அக்காவின் மகளை முறைப்படி  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமான மூன்றாம் ஆண்டில் என் அண்ணன் ஒரு விபத்தில் காலமாகி விட்டார். இதனால் என் அக்கா பெண் 19 வயதில் விதவையாகி விட்டார்.

    இதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஆகையால் அந்த குழந்தையின் நலன் கருதியும் , என் அக்கா பெண்ணின் நலன் கருதியும் அவர்களை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தேன். அவர்களுக்கு என்னை மணந்து கொள்ள விருப்பம் தான். ஆனால் இதை சிலரிடம் சொன்னேன்.

    அவர்கள் அண்ணன் மனைவியை செய்து கொள்ளவது தவறு என்கிறார்கள். நான் அவர்களை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறேன், இதைப்பற்றி உங்களுடைய கருத்தினை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    பதில் :
    வட இந்தியாவில் சில குறிப்பிட்ட சமுதாயங்களில் அண்ணன் இறந்து போனால் அவரது விதவை மனைவியை கணவரின் தம்பிக்கே திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு 35 வயதாக இருந்து கணவரின் தம்பிக்கு அதை விட வயது குறைவாக  இருந்தாலும் மன ஒற்றுமை அடிப்படையில் திருமணம் செய்து வைக்கிறார்கள். அத்தகைய திருமணங்களில் நானே கலந்து கொண்டிருக்கிறேன்.

    கணவரை பறி கொடுத்த விதவை பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பாள். அவளுக்கு மறுமணம் தேவை. அதே நேரம் மறுமணம் செய்து புதிய வீட்டிற்கு புதிய குடும்பத்திற்கு அவள் செல்லும் போது அங்குள்ள சூழ்நிலைக்கு தக்கபடி அனுசரித்து செல்ல சிரமமாக இருக்கும். அந்த சிரமத்தை குறைக்கவே ஏற்கனவெ பழகிய வீட்டில் பழகிய மனிதருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். தென்னிந்தியாவை பொறுத்தவரையில்  விதவை பெண்ணை கணவரின் தம்பியே திருமணம் செய்யும் பழக்கம் இப்போது தான் தோன்றி வருகிறது.. இது ஒரு நல்ல பழக்கம் தான்.

    திருமணம் என்றாலும் மறுமணம் என்றாலும் அதில் கவனிக்கத்தக்க முதல் விஷயம் மணம் புரியபோகும் ஆண் – பெண் இருவருக்குமே பிடிக்க வேண்டும் என்பது தான். உங்களுக்கும் அந்த பெண்ணுக்கும் பிடிப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியாக இந்த மறுமண நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

    ➢➢➢இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் :

    அந்த பெண்ணுக்கு 19 வயது தான். ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் அந்த பெண் இன்னும் வாழ்க்கை புரிந்து கொள்ள முடியாதவளாக இருப்பாள் . நீங்கள் இதுவரை அண்ணி என்ற எண்ணத்தில் பழகி வந்து இருப்பீர்கள். அவரும் உங்களிடம் மைத்துனர் என்ற எண்ணத்தில் பழகி வந்திருப்பார். இனி இந்த சூழல் அடியோடு மாற வேண்டும். அண்ணி என்பதை மாற்றி மனைவி என்கிற அந்தஸ்தை முழுமையாகத் தர வேண்டும்.

    தொடக்கத்தில் குடும்பமும் சமுதாயமும் உற்றுப்பார்க்கும். அந்த பார்வையின் அர்த்ததை  புரிந்து கொண்டு ஒரு சில மாதங்கள் மிக பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த பக்குவம் உங்கள் இருவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். இதில் எந்த அவசரமும் காட்டாமல் மற்றவர்கள் உங்களையோ அந்தப் பெண்ணையோ தப்பாக பேச வாய்ப்பு கொடுத்து விடாமல் பெற்றோர் மூலமாக நிதானமாக மறு திருமண நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

    திருமண வாழ்க்கையை விட மறுமண வாழ்க்கை சிறப்பானது . இருவரும் இணைந்து விட்டுக் கொடுத்து கருத்தொருமித்து வாழ்ந்தாலே அந்த சிறப்பை அடைய முடியும். இல்லாவிட்டால் சிரமமானதாகி விடும்.

     
     
     
     

    கேள்வி : 2
    நான்  பிளஸ் – 2 மாணவி. வயதுக்கு ஏற்றபடி அழகாக இருக்கிறேன். ஆனால் என்னிடம் இருக்கும் ஒரு பழக்கம் என்னை பாடாய் படுத்துகிறது. நான் இப்போதும்  படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறேன். இதை நினைத்து என் மனம் சஞ்சலப்படுகிறது. இதனால் நான் உறவினர் வீடுகளில் இரவு தங்குவது இல்லை. என்னை நினைத்து என் அம்மா ரொம்ப வருந்துகிறார். என் திருமணத்திற்கு பிறகும் கணவர் வீட்டில் இப்படி ஆகி விடுமோ எனப் பயமாக இருக்கிறது.?

    பதில் :
    சகோதரி உங்கள் கடிதத்தின் பதிலுக்கு சற்று பொறுத்திருங்கள். இதே கேள்வியை ஒரு சில சிறுவர்களின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக கேட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முதலில் பதில் தருகிறேன்.

    படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களை ஆறு வயதிற்கு முன், ஆறு வயதுக்கு பின் என்று  இரண்டு வகையாக பிரிக்கலாம். 6 வயதுக்கு முன்பு என்பது இயல்பானது. பெற்றோர் சற்று சிரமம் எடுத்து கவனித்தால் நிறுத்தி விடலாம்.

    சிறுவர்கள் படுக்க போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு பால் கொடுக்க வேண்டும். பின்பு அவர்கள் தூங்க செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்க செய்யுங்கள். சிறுநீர் பை வற்றி விடும். அப்புறமாகத் துங்கட்டும். 15 நாட்கள் சிறுவர்களை தொடர்ச்சியாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுப்பி சிறுநீர் கழிக்க வையுங்கள். அவ்வாறு செய்தால் இயல்பாகவே சிறுநீர் கழிக்கும் மூட் வந்தால் சிறுவன் தானாக எழுந்து அம்மா ஒண்ணுக்கு என்று சொல்லி விடுவான்.

    சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து படுக்கையை நனைத்தால் attention seeking  இயல்பாகக் கூட இருக்கலாம். குழந்தைகள் மீது அதிக கவனம் எடுத்து கொள்ளாத பெற்றோரை தன் பக்கமாக ஈர்த்து என்னையும் கவனியுங்கள். இல்லாவிட்டால் இப்படித்தான் நடந்து கொள்வேன் என்பது போல் செயல்படுவார்கள். இது தான் அட்டென்ஷன் சீக்கிங்.   தாய் மீண்டும் கர்ப்பிணியாதும் முதல் குழந்தைக்கு ஒரு வித பாதுகாப்பு குறைவு ஏற்படும். அந்த பயத்தில் சிறுவர்கள் படுக்கையை நனைப்பார்கள். இப்படிப்பட்ட சிறுவர்களிடம் தாய் அதிக பாசத்தைக் காட்டி எப்போதும் நீ என் அன்பு குழந்தை என்று உணர்த்தினாலே போதும். 6 வயதுக்கு பிறகும் படுக்கையை நனைத்தால் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.

    17 வயது சகோதரியின் பெற்றோரே நீங்கள் அவளை திட்டவோ, மிரட்டவோ வேண்டாம் டாக்டரிடம் அழைத்து சென்று ஆலோசனை கேளுங்கள். இது மிகச் சாதாரண விஷயம்.

     

     

    படம் உதவிக்கு நன்றி:  www.123rf.com

    Share
  • இசைக்கவியின் காணொலிகள்

     

     

    திரு.இசைக்கவி ரமணன் அவர்களின் மேடை நிகழ்ச்சிகளின் காணொலித் தொகுப்பு:

     

    _13425035721
    https://www.youtube.com/watch?v=RPG44eLlXsQ (கண்ணதாசன் – கேபி)
    https://www.youtube.com/watch?v=u7MfHGLCM5g (கண்ணதாசன் – கேபி 2)
    https://www.youtube.com/watch?v=MwA4kTp-lkg (கண்ணதாசன் – கேபி 3)
    https://www.youtube.com/watch?v=HIWCumXT1Bs (ATN Interview – 2 Canada)
    https://www.youtube.com/watch?v=EGv0cdZu9HQ (சொற்களே வருக வருக)
    https://www.youtube.com/watch?v=oWjDKLBWWzE (மனச வாட்டுறது)
    https://www.youtube.com/watch?v=cymfj8DQO2I (ஓடம் கரையேறி)
    https://www.youtube.com/watch?v=j_iN-j1Fhtk (ஓலைக் குடிசையிலே)
    https://www.youtube.com/watch?v=mJHrd4Dv4fQ (கங்கா ஆரத்தி என் வீடியோ)
    katharnath 133
    https://www.youtube.com/watch?v=8HwX2RxM0Gc (Rishikesh-Jageshwar-VruddhaJageshwar)
    https://www.youtube.com/watch?v=paJlioG05nk (Amritsar Wagah Border my video)

     

     

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி முடிவுகள்!

    அன்பு நண்பர்களே,

    கண்ணதாசன்-பிறந்தநாள்-நக்கீரன்-படம்5

    இதோ நாமெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, நடுவர் திரு வ.வே.சு. அவர்கள் வழங்கியுள்ள  “என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி” முடிவுகள் இதோ 

    10247260_435875026549812_5280102860535261571_n

    போட்டியில் உற்சாகமாக பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைவருக்கும்M.-RAVI-KAVIRI1-150x150 பாராட்டுகள். போட்டியை முன்மொழிந்துள்ள கவிஞர் திரு காவிரி மைந்தன், தம்முடைய இடைவிடாத பணிச்சுமையிலும், நடுவர் பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று, வல்லமையுடன் தம் தீர்ப்பை சிறந்த முறையில் வழங்கியுள்ள கவிஞர் திரு வ.வே.சுப்பிரமணியம் அவர்களுக்கும் மற்றும் அனைத்து எழுத்தாளர்களையும், ஊக்குவித்தும், உற்சாகப்படுத்தியும், மென்மேலும் சிறப்பாக காவியம் படைக்க உந்து சக்தியாகத் திகழும் நம் வாசகப் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. பரிசு பெற்றவர்கள் தங்கள் உள்நாட்டு முகவரிகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்படும்.

     

    தீர்ப்புக் கட்டுரை- நடுவர் வ.வே.சு

    ஒரு முக்கியமான சேதியை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

    கவியரசரின் பெயரைச் சொல்லி எது கேட்டாலும் நான் மறுக்காமல் ஒத்துக் கொண்டு விடுவேன்.  இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பது, காவிரிமைந்தன் கேட்ட உடனேயே கட்டுரைகளைத் தேர்வு செய்யும் நடுவராக இருக்க நான் ஒத்துக் கொண்டதிலிருந்து நிரூபணமாகிவிட்டது..

    அப்புறம் கொஞ்சம் யோசித்துப் பார்த்த பிறகே நான் இந்தப் பணிக்குத் தகுதியானவனா என்ற ஐயம் வலுத்தது. இந்தத் தன்னிலை விளக்கத்திற்கும் தன்னடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை என்னை அறிந்தவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

    பிறகு என்னதான் பிரச்சனை? கவியரசரின் வரிகளுக்குள்ளேயே ஆழ்ந்துவிட்டதுதான் பிரச்சனை. ஒரு புறம் அவருடைய ஒற்றைச் சொல்லை ஒருவரியில் பாராட்டி எழுதினாலே எங்கள் சொத்தை எழுதி வைக்கும் கூட்டம் நாங்கள். இன்னொரு புறம் அவருடைய ஒருவரியைப் பத்து பக்கங்கள் எழுதிய பின்னாலும் இன்னும் நூறு பக்கங்கள் ஏன் எழுதவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் கூட்டம் நாங்கள். இதில் எப்படி நடுவராக இருந்து இது முதல் இது அடுத்தது என்று தேர்வு செய்ய..? கவியரசரின் இரசிகனாக, அனுப்பப்பட்ட அனைத்து கட்டுரைகளுக்கும் முதலிடம் என் நெஞ்சில் கொடுக்கப்பட்டுவிட்டதை அறிவிப்புச் செய்கிறேன்.

     கவியரசரை எழுத்தெண்ணிப் படித்தும் கேட்டும் இரசித்த என்னை போன்றவனுக்கு, பிறர் அவரை இரசிப்பதை அருகிருந்து பார்க்கக் கூடிய அரிய வாய்ப்பை வழங்கிய எனது இனிய நண்பர் காவிரி மைந்தனுக்கும், போட்டியை நடத்தும் வல்லமை குழுவுக்கும் ஆசிரியர் பவளசங்கரிக்கும் நிரம்ப நன்றி.

    இனி கட்டுரைப் போட்டியின் நடுவராக என் பணி முடிவுகள்:

    மொத்தம் வந்த கட்டுரைகள் முப்பது. அத்தனையும் முத்துக்கள்; இரத்தினங்கள். காரணம் அனைவருமே கண்ணதாசனென்னும் ஆழ்கடலுள் மூழ்கி முக்குளித்து எழுந்தவர்கள். யாரும் சோடை போகவில்லை. கவியரசரின் வரிகளை இடைகட்டித் தொடுத்த பிறகு எந்த மாலைதான் மணம் வீசாதிருக்கும்? எனில் தரம் பிரிப்பது எவ்விதம்? எல்லார் கைகளிலும் ஆணிப்பொன் தான். ஆனால் அதை எப்படிப்பட்ட ஆபரணமாக ஆக்கியிருக்கிறார்கள்? அங்குதான் கொஞ்சம் வேறுபாடு. அதற்குக் காரணம் அணுகுமுறை.

    சிலர் கவியரசரின் வாழ்க்கையை மட்டுமே எழுதியுள்ளனர்; சிலர் அதில் தம் வாழ்க்கை பிணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். சிலர் பொது வாழ்க்கைத் தத்துவமே அதில் அடங்கியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். சில கட்டுரைகளில் இலக்கிய ஊடாடல்களும் ஒப்புமைகளும் அதிகம் இருந்து சுவை கூட்டின; சிலவற்றுள் கவியரசரின் வரிகள் கண்ட வாழ்க்கை அனுபவங்கள் அருகு நெருங்கி அரவணைத்துக் கொண்டன. சிலவற்றில் கண்ணதாசன் மீது காதல்; சிலவற்றில் பக்தி; இன்னும் சில கட்டுரைகள், கவிதை வரிகளின் இடைபயிலும் மோனத்திற்குக் கூட மெட்டமைத்துப் பார்த்துள்ளன.

    அணுகுமுறை,.கருத்துத் தெளிவு, மொழி ஆளுமை, போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்ட கட்டுரை நீளம் ஆகிய துணை அலகுகளைக் கொண்டுதான் கட்டுரைகளை வரிசைப்படுத்தியுள்ளேன். ஆனால் இதையும் தாண்டி ஒரு பரவசத்தையும், துள்ளலையும் உயிரோட்டத்தையும் எந்தப் படைப்பில் பார்த்தேனோ அதைத்தான் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

     

    மூன்று முதலிடங்கள்

    1. 1.   விசாலம்” அற்புதமான கற்பனை நேர்காணல். இரவு எட்டு மணிக்குக் கவியரசரோடு பேசத் தொடங்கி அருகிலுள்ள கோயிலின் இரவு மணியோசை மறையும் வரை பேசியதைப் பதிவு செய்துள்ளார். எடுத்த உடனேயே கவிஞரின் அழகு முகத்தைப் படம் பிடித்து நம் நெஞ்சில் இடம்பிடிக்கிறார். வான்நிலா என்று தொடங்கி, கவிஞரின் வாழ்க்கைப் பாதையோடும் அவர் படைப்புகளோடும் நம்மைப் பயணிக்க வைக்கிறார். இதற்குக் கண்ணதாசனே சாட்சி.! தெரிந்தாலும் பலர் வெளிச்சம் போடாத சேதி. நடமாடும் தெய்வமாக வாழ்ந்த காஞ்சி முனிவரோடு கவிஞருக்கு நிகழ்ந்த சந்திப்பைச் சொல்லியிருக்கிறார். கண்ணதாசன் என்ற அந்த ஆளுமையைக் கற்பனையிலேனும் அருகே கண்டு பேசுவதுதான் கட்டுரைக்கு உயிர் கொடுக்கும் என்ற இவரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. பொதுவாக நேர்காண்பவர் குறைவாகவும் பதிலளிக்கும் பிரபலம் அதிகமாகப் பேசுவதும் மரபு. இங்கே அது தலைகீழ்; காரணம் கவிஞரின் மவுன சம்மதத்தில் இவரே அவர் சார்பில் பதில்களைக் கொடுத்துள்ளார். இந்த நெருக்கம் கட்டுரையின் உயிர்ப்புக்கு அடித்தளம் அமைக்கிறது.
    1. 2.   அருமையான இன்னொரு கட்டுரை; ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியுள்ளார். கண்ணதாசனை எப்போது நினைத்தாலும் இவர் பரவச உணர்வில் ஆழ்ந்துவிடுவார் என்ற அறிவிப்பினை அவர் எழுத்துக்களே செய்துள்ளன,, உதாரணம்: ”ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது” இனியும் மேம்படுத்த இயலாத எல்லைச் சொல் ஓவியம். “’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’

    இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.” எப்படி இரசித்திருக்கிறார் பாருங்கள். வாணி ஜெயராம் குரலில் இப்பாடலைக் கேட்டவர்கள் ஒரு கோப்பை அமுதக் குழம்பைக் குடித்தவர்கள்.

    1. 3.   அடுத்து பாண்டியன்.ஜி ( வில்லவன் கோதை) படைத்த கட்டுரை. அவரே இது வித்தியாசமான பார்வை எனக் குறிப்பிட்டிருக்கிறார். கவியரசரின் வாழ்க்கையை மிகச் சரியாக, ஓர் எழுத்தோவியமாகக் கொண்டு வந்துள்ளார். அநாவசிய மாலை சூட்டல்களும் , சிக்கித் திணறும் பாராட்டு மொழிகளும் இன்றி, ஒரு மாபெரும் கவிஞனை, அவன் வாழ்ந்த வாழ்க்கையின் போக்குகளைக் கொண்டும் எழுத்துகளைக் கொண்டும், கொண்ட கொள்கைகளை வைத்தும் தன்னுடைய அளவுகோலால் உண்மையாக எடை போட்டிருக்கிறார். உதாரணம் காட்டாமல் இருக்கமுடியாது.

     

    “ஐம்பத்தி நான்கு ஆண்டுகளே வாழ்ந்த கண்ணதாசன் எழுதிக்குவித்த கதை கவிதை கட்டுரைகள் ஏராளம். பத்தாயிரத்துக்கு அதிகமான கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதியவர் .முன்னூறுக்கு அதிகமான நூல்கள் விற்பனையில் வலம் வருகின்றன. கண்ணதாசன் தொடாத அரசியல் வாழ்வியல் துறைகள் அரிது .அவைகளெல்லாம் இன்றைய வாசகர் தொட்டுணராத பொக்கிஷங்கள். கவிஞர் பேசிய ஆத்தீகமும் நாத்திகமும் ஒதுக்கமுடியாதவை. பத்தாண்டு பகுத்தறிவு வாசத்துக்குப்பிறகு அவர் படைத்த மதம் சார்ந்த நூல்கள் இன்றும் விற்பனையில் முன்நிற்கின்றன.”வாசிப்பு திறன் மங்கிப்போன இந்நாளில் கவிஞரை நிரந்தரமாக வாழவைப்பது இசைக்கேற்ப அவர் எழுதிய திரைப்படபாடல்களே.

    ”கவிஞரது வாழ்க்கை ஒருசுவாரசியமான எவருக்கும் கிட்டாத அநுபவம். ஆனால் அது இன்னொருவர் வாழத்தக்கதல்ல. கவிஞரது எழுத்து எவருக்கும் கிடைக்காத வரம். அது காலமெல்லாம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு அதிசயம்.”

    ஆக (27)விசாலம், (1) ஜெயஸ்ரீ ஷங்கர், (13) பாண்டியன்.ஜி ஆகிய மூவரையும் முதல் பரிசுக்குரிய இடத்தில் வைக்கிறேன். மூவரும் சமமே.

    இரண்டாவது இடம்:  ஷைலஜா (6)

    ஆயிரம் சொற்களுக்குக் குறைந்திருந்தாலும் அர்த்தமுள்ள கண்ணதாசனைக் காட்டுவதில் எந்தக் குறையுமில்லாத கட்டுரை. இலக்கிய ஒப்புமைகளும் , கவியரசரின் கவிதைக் களங்களின் இடம் சுட்டிகளும் இவரது ஆழமான அணுகுமுறைக்குச் சான்றாகின்றது.

    “அழகான சிறிய வீடு அடுக்காகப் புத்த கங்கள்
    பழங்கால ஓவியங்கள் பஞ்சணை குளிர்ந்த காற்று
    தொழத்தக்க இளைய கன்னி தொண்டுக்கோர் சிறியபையன்
    எழிலான காகி தங்கள் எழுதுகோல் பழுதில் லாமல்!”

    என்கிறார் நம் கவிஞர்!

    “தொழத்தக்க இளைய கன்னி” என்பதில் வெறும் காமத்தைத் தாண்டிப் பெண்மையின் மீதான பெருமதிப்பையும் காட்டுவதை உணரமுடிகிறது” என்று திரையிசை தாண்டிய கவிதை வரிகளை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்திலுள்ள இட நெருக்கடியால் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

     

    மூன்றாவது இடம்:  கீதா மதிவாணன்(7)

    இலக்கியத் தரம் வாய்ந்த இனிய  கட்டுரை.” இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?” என ஒரு களம் அமைத்துக் கொண்டு சங்க காலம் தொடங்கி பல அழகிய இலக்கிய வரிகளை கவிஞரின் வரிகளோடு ஒப்பிட்டிருக்கிறார். “இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே.” என்று தனது எழுத்து அனுபவத்திற்கான பின்னணியையும் கொடுத்துள்ளார். முதல் தரமான இந்தக் கட்டுரையும் இடநெருக்கடியால்தான் மூன்றவதாக உள்ளது.

    கவியரசரின் கவிதை வரிகளினாலேயே கட்டப்பட்ட ஒரு கட்டுரை மண்டபத்தைக் காகிதத்தில் வரைந்து, முன்னுரையிலிருந்து முடிவுரைவரை பல உரைகளை உள்ளடக்கி  நம்மை இனிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள திரு சத்தியமணி (23) அவர்களுக்கும்

    ”அவரின் கவிதைகள், காலத்தின் சாத்திரங்கள்; அவரின் நான்காயிரம் கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஏழு தொகுதிகளையும் படித்த நான் எல்லாக் கவிதைகளுக்கு முத்தாய்ப்புக் கவிதையாக போற்றுவது கண்ணதாசன் எழுதிய:

    சுடுகாட்டு எலும்புகளை
    சோதித்து பார்த்ததிலே
    வடநாட் டெலும்பென்று
    வந்த எலும் பில்லையடி!
    தென்னாட் டெலும் பென்று
    தெரிந்த எலும் பில்லையடி
    எந்நாட் டெலும் பென்றும்
    எழுதிவைக்க வில்லையடி
    ஒரு நாட்டு மக்களுக்குள்
    ஓராயிரம் பிரிவை
    எரியூட்ட வில்லையெனில்
    எந்நாளும் துன்பமடி

    என்ற கவிதையைத்தான். இந்தக் கவிதையை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து ஒவ்வொரு இந்தியனின் இல்லத்திலும் அவன் உள்ளத்திலும் மாட்டி வைத்தால் போதும்! இனச் சண்டை சாதிச் சண்டை என்றும் வராது!”

    என்ற வைர வரிகளையும், கவியரசரின் வசனங்களைப் பற்றியும் சிறப்பாக எழுதி, நம் மனதில் இடம் பெறும் எஸ். கிருஷ்ணசாமி (24) அவர்களுக்கும்

    என் மனத்தில் ஒதுக்கப்பட்ட சிறப்பிடங்களைப் போட்டி அமைப்பார்களும் ஒதுக்க வேண்டுமென்று , பரிந்துரை செய்கிறேன்.

    இதைத் தவிர,

    சொந்த வாழ்க்கை அனுபவத்தையே கவிஞர் வரிகளோடு பிணைத்துவிட்ட ஞா.கலையரசி, (2)

    அறிவு பூர்வமாகக் கவியரசரை அணுகியுள்ள ஜெயராம் சர்மா,(3)

    இயல்பு வாழ்க்கையோடு இணைந்த கவிஞர் வரிகளின் நயம் பாராட்டியுள்ள ராஜலட்சுமி பரமசிவம், (11)

    “கடவுளின் செல்லப் பிள்ளையோ” ”என்ன தவம் செய்தனோ”, “கற்பனையில் முளைத்த காதலோ” என அற்புதமான துணைத்தலைப்புகள் கொடுத்து அசத்தியுள்ள ஸ்வேதா மீரா கோபால்,(12)

    கவிதைக்கும் கடலுக்கும் சிலேடை எழுதிக் கலக்கியுள்ள எஸ்.பழனிச்சாமி,(21)

    நான் போகுமிடமெங்கும் போற்றிப் பேசுகின்ற “பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்” என்ற அட்சர லட்சக் கவிதையைக் குறிப்பிட்டுள்ள மேகலா இராமமூர்த்தி,(20)

    கவியரசரின் கோடானுகோடி இரசிகர்களைக் கவர்ந்த  வாடாமலர்க் கவிதைகளை இரசனையோடு அளித்துள்ள தமிழ்முகில் நீலமேகம்(26)

    ஆகியோரின் கட்டுரைகள் பாராட்டுக்குரியவை.

    பங்கெடுத்துக் கொண்ட அனைவரும் கவியரசரை இதயத்தால் இரசிப்பவர்கள் என்ற உண்மையைக் கட்டுரையின் ஒவ்வொரு ஒற்றைச் சொல்லும் உறுதி செய்திருப்பதைக் காணும் போது

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை” என்ற வரிகளின் ஆழம் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகின்றன.

    வவேசு

    03/07/2014

    சென்னை-83

    இந்தப் போட்டியை அறிவித்த கவிஞர் திரு காவிரி மைந்தன் அவர்களுக்கும், சிறப்பான முறையில் வெற்றியாளர்களை   தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள கவிஞர் திரு வவேசு அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். 

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில் ? –13

    –சு.கோதண்டராமன்.   

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 12

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 14

    கற்பனை ரதம்

     

    fire1

    இந்தத் தொடர் சற்றேறக்குறைய 50 வாரங்களுக்கு வரும். சலிப்பைத் தவிர்ப்பதற்காக, இந்த வாரம் ஆராய்ச்சியிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு கொஞ்சம் கற்பனையில் திளைப்போம். நம்முடைய கற்பனை ரதத்தை பின்னோக்கி ஓட்டிச் சென்று மனித நாகரிகத்தின் துவக்க காலத்திலிருந்து வருவோம்.

    இங்கே மனித வாழ்க்கை மிருக வாழ்க்கையிலிருந்து சற்றும் வேறுபடாமல் இருக்கிறது. கல்லை ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது தான் மனித நாகரிக வளர்ச்சியின் முதல் படி. அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள்-

    வேட்டையாடக் கல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு மனிதன். பெரிதாகக் காற்று வீசியது. மரங்கள் இல்லாத பகுதியில் மண்ணை வாரிக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த மனிதன் கண்ணில் இரண்டு கற்கள் தென்பட்டன. அவை அவன் அதுவரை பார்த்திருந்த கற்களிலிருந்து வேறுபட்டு இருந்தன. இது எங்கிருந்து வந்தது, இந்த வழியாக நான் பலமுறை போயிருக்கிறேனே, இது வரை கண்ணில் பட்டதில்லையே, அடியில் புதைந்து கிடந்த இது காற்றினால் மேல் மண் பறந்து போன பின் வெளிப்பட்டிருக்கிறது போலும் என்று பலவாறாகச் சிந்தித்தான். அதை வெளிப்படுத்தும் மொழித் திறன் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் கிடைத்தது.

    fire2அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் ஒன்றைக் கையில் எடுத்தான். அது கை தவறிக் கீழே இருந்த மற்றொரு கல் மீது விழுந்தது. அதிலிருந்து தீப் பொறி வந்தது. காட்டுத் தீயையும் மின்னலையும் பார்த்து அஞ்சி வந்த இவனுக்கு மின்னல் போல் கண நேரம் ஒளிர்ந்து மறைந்தாலும் அச்சம் தராத இந்தச் சிறு தீப் பொறியைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. மறுபடியும் கல்லை எடுத்துக் கீழே போட்டான். மீண்டும் தீப் பொறி வந்தது. திரும்பத் திரும்ப இந்த விளையாட்டைச் செய்து கொண்டிருந்தவனுக்கு மற்ற மனிதருக்கும் இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. கிய்யா முய்யா என்று குரல் எழுப்பி அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டான். எல்லோரும் இந்த வித்தையைப் பார்த்து வியந்தனர். ஆளுக்கு ஆள் பிடுங்கிக் கொண்டு போய் செய்து பார்த்தனர். சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அவை தீப்பற்றி எரிந்தன. எல்லோரும் வியந்தனர், மகிழ்ந்தனர், கூத்தாடினர்.

    தீயைக் கண்டுபிடித்தவனுடைய பெயர் ப்ருகு. (தீ எரியும்போது ப்ருக் ப்ருக் என்ற ஒலி உண்டாவதாக அந்த மக்கள் நினைத்தார்கள். இந்த ஒலியிலிருந்து அந்த மனிதனின் பெயர் வந்திருக்கலாம். அல்லது ப்ருகு என்பவரின் பெயரைக் கொண்டு அந்த ஒலிக்குப் பெயரிட்டிருக்கலாம்). தீக் கல்லைத் தனக்கு வெளிப்படுத்திய காற்றை அவன் ‘மாதரிச்வான்’ (பூமித் தாயின் மடியில் கீறுபவன்) என அழைத்தான்.

    மனிதன் தீ மூட்டக் கற்றுக் கொண்டு விட்டான். அவனது நாகரிகம் துரித கதியில் நடை போடத் துவங்கியது. வேத விருட்சத்தின் முதல் விதை அங்கே தூவப்பட்டது.

    fire3காட்டு விலங்குகளுக்குப் பயந்து குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், குகைக்குள்ளும் வந்து தாக்கும் மிருகங்களிடமிருந்து தப்பும் வழி அறியாது தவித்த மனிதன், தான் இருக்குமிடத்தில் தீ மூட்டி விலங்குகள் கிட்டே வர முடியாதபடி செய்தான். எங்கேனும் செல்ல வேண்டி இருந்தால் ஒரு எரியும் மரக்கட்டையைக் கையில் ஏந்தியபடி சென்றான். (மின் வசதி ஏற்படாத காலத்தில் கிராமங்களில் ஒரு தென்னை மட்டையைச் சுருட்டிக் கட்டிக் கொளுத்திக் கொண்டு இரவில் பயணம் செய்வர். இதற்கு சுளுந்து என்று பெயர். இதை நான் கடைசியாகப் பார்த்தது 1960 இல்.) சருகுகளினிடையே கற்களை மோதித் தீ மூட்டுவது எளிதாக இல்லை. பல முயற்சிகளுக்குப் பின் தான் அதில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் மூட்டிய தீயை அணையாமல் பாதுகாப்பது அவனுக்கு எளிதாக இருந்தது.

    பிற்காலத்தில் மொழி அறிவு ஏற்பட்டபின், ‘முன்னால் சென்று வழிகாட்டிச் செல்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘அக்னி’ என்று பெயரிட்டான். அதுவே அதன் இயற்பெயராக நிலைத்தது. தீ அவனது உணவைச் சமைத்துச் சுவை கூட்டியது. இரவிலும் அவனால் பார்க்க முடிந்தது. கொழுந்து விட்டு எரியும் தீச்சுவாலையின் அழகை வியந்து அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தான். தனக்கு இத்தனை நன்மைகளைச் செய்யும் தீயை நன்றியுடனும் மரியாதையுடனும் நோக்கினான், அதை வழிபடத் தொடங்கினான்.

    கற்களை உரசுவதால் தீ உண்டாவது போல் பிற பொருள்களையும் அக் கூட்டத்தினர் உரசிப் பார்க்கத் தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரண்டு மரக்கட்டைகளை உரசியும் தீ மூட்ட முடியும் என்பதை ப்ருகுவின் கூட்டத்தினர் (ப்ருகவர்) கண்டுபிடித்தனர்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மொழியைச் செம்மை செய்து தன் மனக்கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் வல்லமை பெற்ற காலத்திலும் இந்த ஆச்சரிய, நன்றி, மரியாதை, பக்தி உணர்வுகள் குறையாமல் இருந்தன, வேத ரிஷிகளின் கவிதைகளில் அக்னியைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான பாடல்களில் வெளிப்பட்டன. அதில் மாதரிச்வானையும், ப்ருகுவையும், ப்ருகவர்களையும் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

    தீ மூட்டத் தேவையான பெரிய காய்ந்த மரங்களைத் தன் இருப்பிடத்துக்குக் கொண்டு வர பிற மனிதரின் உதவி தேவைப்பட்டது. அது வரை பால் உறவுக்காக மட்டுமே மற்றவரை நாடியவன் இன்று அதற்கு அப்பால் சென்று பல மனிதரிடமும் இணக்கமாக வாழத் தலைப்பட்டான். ஓரிடத்தில் தீ மூட்டி பல மனிதரும் பாதுகாப்பு கருதி அதற்குப் பின்னே சேர்ந்து இருக்கத் தொடங்கியதில் சமூக வாழ்க்கை துவங்கியது.

    தங்குமிடத்தில் தங்களுக்கு முன்னே தீ வளர்த்தார்கள், எனவே ‘முன்னால் வைக்கப்படுபவன்’ என்ற பொருளில் அக்னிக்குப் ‘புரோ-ஹிதன்’ என்றும் பெயரிட்டார்கள். கூட்டத்தைச் சார்ந்தவர் வெளியில் சென்றிருந்தால் அவருக்குக் கூட்டம் இருக்குமிடத்தைத் தெரிவித்து அழைக்க நெருப்பைப் பயன்படுத்தினர். எனவே ‘அழைப்பவன்’   என்ற பொருளில் தீக்கு ‘ஹோதா’ என்றும்  பெயரிட்டார்கள்.

    ஆபத்து வரும்போது ஒன்று கூடுவதும் அது நீங்கியபின் அடித்துக் கொள்வதும் மனித இயல்பு அல்லவா? அவ்வாறு நேரும்போது, மீண்டும் ஆபத்து வரும் என்பதைச் சுட்டிக் காட்டி ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி தவறு செய்தவரைத் தண்டித்துத் திருத்த ஒரு தலைவன் ஏற்பட்டான். மனிதனின் அரசியல் வாழ்க்கை துவங்கியது.

    தீயின் உதவியால் தனக்கு வசதியான இடத்தில் காட்டை அழித்து விவசாயம் செய்தான். உலோகங்களை உருக்கி கருவிகளும் ஆயுதங்களும் அணிகலன்களும் செய்தான். பொருளாதாரம் என்றொரு புதிய அத்தியாயம் அவன் வாழ்வில் ஏற்பட்டது.

    தத்தம் கூட்டத்திற்குள் அந்தந்தத் தலைவர்கள் அமைதி ஏற்படு்த்தினாலும் கூட்டங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. வலுத்தவன் வென்றான், தன் ஆட்சிப் பரப்பைப் பெரிதாக்கிக் கொண்டான். தன் வலிமைக்கும் அறிவுக்கும் செல்வத்துக்கும் அக்னியே காரணம் என்று கருதி அதை நன்றியுடன் வழிபட்டான்.

    விண்ணில் தோன்றும் சூரியனைப் பார்க்கிறான். வெப்பம், வெளிச்சம், வலிமை இவற்றில் அது தீயைப் போலவே உள்ளது. இதுவும் தீ தானோ?

    மின்னல் மின்னுகிறது. கண நேரமே ஆனாலும் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சுகிறது, மரங்களைத் தீப்பற்றி எரிய வைக்கிறது. இதுவும் அக்னி தானோ?

    கடலிலிருந்து அவ்வப்போது தீச்சுவாலைகள் கிளம்புகின்றன. நீருக்குள்ளும் அக்னி மறைந்து வாழ்கிறானோ?

    மரங்கள் உரசுவதால் காட்டுத் தீ உண்டாகிறது. மரங்களினூடேயும் அவன் மறைந்து வாழ்கிறானோ?

    தீயை மூட்டிவிட்டுக் கொஞ்சம் அசந்தால் அது அணைந்து விடலாம், வேறு எங்கேனும் பற்றிக் கொண்டு ஆபத்து விளைவிக்கலாம், தீ மேல் வைக்கப்பட்ட உணவு கருகிவிடலாம். தீ விஷயத்தில் மனிதன் எப்பொழுதும் விழிப்புடனும் செயல் துடிப்புடனும் இருப்பது அவசியமாகிறது. எனவே அக்னியை ‘செயலுக்குத் தூண்டுபவன்’ என்று பெயரிட்டான்.

    வெளி உலகில் பல வகையான அக்னிகளைப் பார்த்த அவன் தன் உடலுக்குள்ளே உற்று நோக்குகிறான். பசி எப்படி எரிக்கிறது? எப்படி செயலுக்குத் தூண்டுகிறது? பசி இல்லாவிட்டால் செயல்களே நின்று விடுமே? இதுவும் அக்னி தானோ?

    உயிருள்ள உடல்களில் எப்போதும் சூடு இருந்து கொண்டே இருக்கிறது. செத்த உடல் சில்லிட்டுப் போகிறது. குகைக்குள்ளே திருடன் போல உடலுக்குள்ளேயும் அக்னி ஒளிந்து வாழ்கிறானோ?

    இனப் பெருக்க வேட்கை தோன்றிவிட்டால் அது எப்படி உடலையும் உள்ளத்தையும் எரிக்கிறது? ஆக, அதுவும் அக்னி தானோ?

    ஒரு பொருளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுத் தாகம் எப்படி எல்லாம் மனிதனை நிலை கொள்ள விடாமல் இயக்கி வைக்கிறது? அதுவும் அக்னி தான்.

    இப்படியாக, மனிதனின் நாகரிக வளர்ச்சியின் வேகத்தை முடுக்கிவிட்ட அக்னியைப் புகழ்ந்து வேத ரிஷிகள் பாடிய பாடல்களைப் பற்றி அடுத்தடுத்த வாரங்களில் காண்போம்.

     

    படங்கள் உதவிக்கு நன்றி:
    www.smashinglists.com/top-ten-technology-advances-in-history/
    www.youtube.com/watch?v=i1YmKImHZl8
    http://www.dailymail.co.uk/news/article-2465933/Mans-greatest-invention-wheel-taming-twig-toothbrush-gave-longer-lives-invent-evolve.html

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 16

    கே.ரவி

    ramanathan 2657மாமா, அதாவது என் வளர்ப்புத் தந்தை, கல்யாணராமனிடம் மேலோங்கி இருந்த குணம் விருந்தோம்பல். வருவோர்க்கெல்லாம் வீட்டில் நல்ல சாப்பாடு போட வேண்டும் என்பதில் அவர் விடாப்பிடியாக இருந்தார். 1956-57, அவர் சென்னை, ஶ்ரீராம் நகரில் திரைப்படத் தயாரிப்பு அலுவலகம் திறந்த போதே அதில் தினமும் சிற்றுண்டி, சாப்பாடு செய்து போட ஆட்கள் அமர்த்தி விட்டார். அவருடைய குருநாதர் கே.சுப்பிரமணியத்திடம் இருந்து வந்த வழக்கம் அது. வெளியே எங்கேயும் எதுவும் சாப்பிடாத எம்.ஜி.ஆர் அவர்கள் கூட, இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், தஞ்சை ராமையாதாஸ் ஆகிய இருவருடனும் சேர்ந்து காலைச் சிற்றுண்டி அருந்த, அப்பொழுது தினமும் எங்கள் அலுவலகத்திற்கு வந்துவிடுவார். மற்ற தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்கள் படப்பாடல்களுக்கு ஜி.ராமநாதனின் இசையும், ராமையா தாஸின் வார்த்தைகளும் பெற வேண்டி அங்கேதான் வந்து சிற்றுண்டி அருந்தி விட்டுக் காத்திருப்பார்கள். நாலு வயதுச் சிறுவனான என்னைத் தம் மடியில் அமர்த்திக் கொண்டே ஜி.ராமநாதன் ஆர்மோனியத்தில் பல பாடல்களுக்கு மெட்டுப் போட்டிருக்கிறார். என் இசை ஈடுபாடு எப்படி வந்தது தெரிகிறதா? கருவில் வந்தது பாதி, ஜி.ராமநாதன் உருவில் வந்தது மீதி. பத்து விரல்களிலும் வைரக்கல் மோதிரங்கள் பளபளக்க அவர் ஆர்மோனியம் வாசித்த அழகை அருகிருந்து ரசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது.

    ஜி.ஆர் மடியில் அமர்ந்து இசையின் ஆரம்பப் பாடத்தைச் செவிவழியே வாங்கிக் கொண்ட நான், ஏறக்குறைய 1பத்தாண்டுகள் கழித்துக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும் கிடார் கற்றுக் கொள்ள ஒரு இசை மேதையிடம் சேர்ந்தேன். அவருக்கு வீடு கிடையாது. ஒண்டிக்கட்டை. சென்னை, லஸ் முனையில் இருந்த ஒரு லாட்ஜ் மாடியில் நிரந்தர அறை வாடகைக்கு எடுத்திருந்தார். அங்கேதான் குடியிருந்தார். மெய்யாகவே எப்போதும் குடியில் இருந்தார் என்று கூடச் சொல்லலாம். அவர் அறையில் ஒரு ப்யானோ இருந்தது. அது மூடியே இருக்கும். எப்பொழுதாவது அவர் அதைத் திறந்து வாசிப்பார். முதலில் எனக்கு ‘ட்விங்கிள், ட்வுங்கிள் லிட்டில் ஸ்டார்’, ‘ஜாக் அண்ட் ஜில்’ ஆகிய மழலைப் பாடல்களை கிடாரில் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தார். இரண்டு மாதங்கள் இந்த இரண்டு பாடல்களிலேயே கழிந்தன. எனக்குப் பொறுமை இல்லை. அத்துடன், ப்யானோ வாசிக்க வேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. ஒருநாள், என்னை ‘ஜாக் அண்ட் ஜில்’ வாசிக்கச் சொல்லி விட்டு, எப்பொழுதும் போல் வெளியே தனக்கு ஸ்ருதி ஏற்றிக் கொள்ள அவர் சென்ற சமயம் ப்யானோவைத் திறந்து தடவ ஆரம்பித்தேன். திடீரென்று அவர் வந்து விட்டார். ‘நீ கிடார் வாசிக்கும் லட்சணத்திற்குப் ப்யானோ ஆசையா’ என்று கோவமாக என்னைத் திட்டி விட்டு அனுப்பி விட்டார். அதோடு முடிந்தது என் கிடார் பயிற்சி. ஆனால், அந்த மாமேதையிடம் வந்து பல பிரபல இசையமைப்பாளர்கள் தாங்கள் மெட்டமைத்த பாடல்களுக்கான பின்னணி இசை முறைப்பாட்டை, ஆங்கிலத்தில் அரேஞ்மெண்ட் என்பார்கள், எழுதிக் கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன். அதை விட, அவரிடம்தான் இன்னொரு மாமேதை இசை கற்றுக் கொண்டு பின்னாளில் முன்னணி இசையமைப்பாளராக உருவானார். குருவான மாமேதை தன்ராஜ் மாஸ்டர். அவரிடம் உருவான மாமேதை இளையராஜா.

    தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் வகுப்புச் சடார் என்று ஒரு முடிவுக்கு வந்தும், இசையுடன் எனக்கிருந்த தொடர்பு விட்டுப் போகவில்லை. நான் இசையை விட்டாலும் அது என்னை விடுவதாகத் தெரியவில்லை.

    போன பகுதிகளில் குறிப்பிட்ட கவிஞர்களுக்கெல்லாம் காலத்தாலும், நாத யோகம் பயிலும் சீலத்தாலும் முற்பட்ட ஒருவருடைய பாடல்கள் என்னை ஆட்கொண்டன. அந்தக் கிழவரோடு நேரடியாக நான் பேசிப் பழகியதில்லை. மார்கழி மாதங்களில் மயிலைக் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி நாலு மாட வீதிகளிலும் அதிகாலைப் பொழுதில், வெடவெடக்கும் குளிரில் அவர் பஜனை செய்து கொண்டு வீதிவலம் போகும் போது நாலைந்து முறை நானும் அவர் திருக்கூட்டத்தில் ஒருவனாக, “நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான் நடுவே” என்று மணிவாசகப் பெருமான் பாடியது போல் சென்றிருக்கின்றேன். அவ்வளவுதான். என்றாலும் எனக்கு அந்த இளம் வயதில் (அப்போது புகுமுக வகுப்பில் பயின்று கொண்டிருந்தேன்) யாருக்கும் கிடைப்பதற்கு அரிய ஒரு வாய்ப்புக் கிட்டியது.

    என் தந்தை விஸ்வம் வித்யா சாகர் என்றொரு பள்ளி நடத்திக் கொண்டிருந்தார். அது சென்னை, மயிலை, சாயிபாபா கோயில் எதிரில் உள்ள கபாலி நகரில் இருந்தது. அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பள்ளிச் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடக்கும். என் மற்றொரு சகோதரி மாலினிதான் முழுப் பொறுப்பும். அதில், அந்தக் கவிதைத் தாத்தாவின் பாடல்களை வைத்து அந்தத் தாத்தாவின் மகள் ‘பாரிஜாதம்’ என்ற நாட்டிய நாடகம் உருவாக்கித் தந்திருந்தார். அதில் கதைப் போக்குக்குச் சில பாடல்கள் இல்லாத குறையைப் போக்கச் சில பாடல்களை என் சகோதரி என்னை எழுதச் சொல்லி உருவான அந்த நாட்டிய நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தச் சமயத்தில் வித்யா சாகர் என்ற அந்தப் பள்ளியில் உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பானுரேகா என்ற பெண்மணியுடன் எனக்கு நட்புண்டானதும், ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி மகளான அவர் பின்னாளில் ரேகா என்ற புகழ்பெற்ற ஹிந்தி நட்சத்திரமாக ஜொலித்ததும் நம் கவிதைச் சரிதைக்குத் தேவையில்லை என்பதால் விட்டு விடுகிறேன்.

    நான் குறிப்பிட்ட கவிதைத் தாத்தா பழம்பெறும் பாடலாசிரியர் பாபனாசம் சிவன் அவர்கள். அவருடைய பாடல்களோடு என் பாடல்கள் கலந்து ஒரு நாடகம் உருவானது என்று சொன்னால் அது தெய்வம் தந்த வரமாகத்தானே இருக்க முடியும்!

    பைந்தமிழ் மலர்ப்பா மாலை சூட்டியுன்PapanasamSivann
    பாதமலர் பணிந்து பாடவும் வேண்டும்
    சிந்தையும் என் நாவுமெந் நேரமும் – உன்
    திருப்பெயர்ப் புகழ் மறவாமையும் வேண்டும்
    வந்த உலகில் மதி மயங்கி
    அறு பகைவர் வசமாய் அழியாமல் உன்
    அருள்பெற வேண்டும்

    இப்படிக் காதலாகிக் கண்ணீர் மல்கச் செய்யும் பாபநாசம் சிவனின் பாடல்களை எம்.கே.தியாகராஜ பாகவதரின் தேன்குரலில் கேட்டு எத்தனை முறை நெகிழ்ந்திருக்கிறேன்!

    பாபநாசம் சிவனின் மகள் நீலா ராமமூர்த்தி அம்மையார்தான் மேலே நான் குறிப்பிட்ட பாரிஜாத நாடகத்தைத் தம் தந்தையின் பாடல்களை வைத்து உருவாக்கித் தந்தவர்.

    அடுத்த ஆண்டு அந்தப் பள்ளி, தேவடி தெரு என்ற இடத்துக்கு மாறியது. இடம் மாறினாலும் தடம் மாறாமல் ஆண்டு விழாவை மேலும் சிறப்பாகக் கொண்டாட மாலினி ஏற்பாடுகள் செய்தார். அவருடன், என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்ட ஒரு மங்கையும் சேர்ந்து ஒரு முழு நாட்டிய நாடகம் எழுதித் தரச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். நான் குறிப்பிட்ட மங்கை சங்கீத ஞானம் மிக்கவர்; டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் மூத்த சகோதரி; ‘நீலு அக்கா’ என்று நான் அழைத்த பாசம் மிக்க சகோதரி. நான் எழுத, அவர் மெட்டமைக்க, துர்க்கா மிஸ் என்ற ஆசிரியை பாடப் ‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற நாட்டிய நாடகம் உருவானது. அதற்கு ஆர்மோனியம் வாசித்தவர் ராமமூர்த்தி என்ற பெரியவர். தசரதன், கைகேயியிடம் பலவாறு வாதாடியும் அவள் தான் கேட்ட இரு வரங்களில் பிடிவாதமாக இருந்ததால், கடைசியில்,

    என்னுயிரைக் கேட்கின்றாய் என்ன செய்வேன்
    இருந்தாலும் நானுனக்குக் கட்டுப் பட்டேன்
    சொன்னசொல்லைக் காக்க இரு வரமும் தந்தேன்
    சுகமுறுவாய் நானெந்தன் உயிரைத் தந்தேன்

    என்று பாடிக் கொண்டே தசரதனாக நடித்த சுஜாதா என்ற சிறுமி மயங்கிவிழுந்த காட்சியில் பலர் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட காட்சியைக் கண்டேன். அட, மீண்டும் சுபபந்துவராளி ராகம் அப்பா!

    என் மனத்தில் இசையும், கவிதையும் எப்படிக் கைகோத்துக் கொண்டு வளர்ந்தன என்பதை இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.

    ‘இசையா, கவிதையா என்று பட்டிமன்றம் வைத்தால் நீ எந்தக் கட்சி?’ என்று என்னிடம் சிகாமணி, அதான் நம்ம பழைய புத்தி சிகாமணி, முன்பு ஒருமுறை கேட்டான். பட்டென்று பாட்டாக வந்தது பதில்:

    உனக்குத் தெரியும் கவிதை என்றால்
    உயரப் பறப்பதென்று
    எனக்குத் தெரியும் இசையென் றாலது
    என்னை இழப்பதென்று
    பறந்து கொண்டே இழந்தது பாதி
    இழக்க இழக்க வளர்ந்தது மீதி

    இவ்வாறு, 1969-70 களில், அதாவது என் பதினாறு வயதினிலே, இசையும், கவிதையுமாய் என் வாழ்க்கை இப்படிச் சென்று கொண்டிருந்த போதுதான் அதில், இல்லை என் நெஞ்சில், இல்லை இல்லை, என் உயிரில் இசைக்கவிதையாகவே அவள் நுழைந்தாள். அந்தக் கதை.. .. ! பிறகு சொல்கிறேன்.

    (தொடரும்)

    படங்களுக்கு நன்றி:

    http://movieraghas.blogspot.in/2008/06/blog-post_12.html

    http://malarum.com/

    Share
  • கண்கள் பார்க்கட்டும்…

    ஜெயஸ்ரீ ஷங்கர் 
    வையகமே ஒரு
    வண்ண வானம்
    கதிரொளி செய்யும்
    மாயாஜாலம்

    உயர்மலை பனியருவி
    நீள் நதி நீலக் கடல்
    வேடிக்கை காட்டும்
    பொன் மேகங்கள்

    பச்சயத் தட்டுக்கள் உயர்த்தும்
    வண்ண மலரினங்கள்
    கருவண்டுகள் சுற்றும்
    தாமரைக் குளங்கள்

    மலரிணை இறகு கொண்ட
    ஓவிய ஆடை கட்டி
    தேனுக்கு அலையும்
    பட்டான பூச்சிகள்

    உயர்ந்தும் படர்ந்தும்
    தென்றலோடு
    ஒய்யாரமாடும்
    தாவர சங்கமங்கள்

    விண்ணையும் மண்ணையும்
    வண்ணங்களால் மேகங்கள்
    அளக்கும் வானவில்லின்
    கம்பீர ஜாலங்கள்

    நாளெல்லாம் நடந்து
    களைத்த கதிரவன்
    கடல்குளிக்க சந்தியாகால
    வெட்கச் சிவப்புகள்

    பூமியெங்கும் கருமையை
    இறைத்த இருளரசனை
    விடியும்வரை எதிர்த்து நின்ற
    வெண்ணிலவின் சிரித்தமுகம்

    சோகம் சுமந்த மனங்கள்
    சுகம் பெறவே இயற்கை
    அன்னையென ஓடிவந்து
    அணைக்கும் பூமியிது

    கருவிழிகள் காணும் லோகம்
    ஏதுமறியா வெண்ணிலா விழிகள்
    பார்வை அறியா பரிதாப முகங்கள்
    இருளோடு அலைபாயும்
    மௌனப் பட்டாம்பூச்சிகள்….!

    தன்முகம் தானறியா முகம்
    பார்க்கும் கண்ணாடிகள்…!
    நொறுங்கும் இதயத்துள்
    இருளின் ரீங்காரங்கள்

    செவியும் குரலும்
    ஜீவனுக்கு ஒளியாக
    வழி சொல்லும்
    இரண்டு கண்கள்…!

    ஆதாரக் கண்கள்
    மூடிக் கிடந்தாலும்
    சேதாரம் ஏதுமில்லை
    ஆதரவுக் கரங்கள்
    திறந்து கொண்டால்
    ஆதரவு உத்திரவாதமுண்டு..

    வீழ்ந்த மரத்தின் விதையெடுத்து
    மீண்டும் மண் புதைத்து
    முளைவிடக் காத்திருக்கும்
    ஈர மனங்களே…!

    கண்களைச் சாம்பலாக்கிடாது
    சவாலாக்கி மீண்டும் காணவிடு ..!
    மறைந்த பின்னும் நீ பிறந்த
    அடையாளமாய் இன்னொரு
    முகத்தில் உனது அறிமுகம்!

    பார்வை பெற்ற புதியவன்
    காணும் உலகெங்கும்
    நிறைந்த இறைவனாய்
    உன்னையும் நினைப்பது …!

     

     

     

    Share
  • கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    என் சின்ன வயதில் நெஞ்சுக்குள் சுழன்று கொண்டிருந்த பாட்டு.. எம். எஸ். ராஜேஸ்வரி குரலில் ஒரு தென்றல் வந்து தவழும்..

    Nehruநேரு மாமா அங்கு ஒரு நாள் வந்திருந்தாராம் .. வார்த்தைகளில் கவிஞர் தஞ்சைவாணன் ஒரு பாடல் வழியாக ஒரு சரித்திரத்தை… எழுதி வைக்க..

    திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையும் நம்மை ஈர்க்க … இப்போதும் கேட்க வேண்டும் என்று துடிக்கிறது மனம்.

    பண்டிதர் ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்திய தேசம் கண்ணீர் வடித்தது.. அந்த சோகம் ஒவ்வொரு நெஞ்சிலும் அப்பியிருந்தது.

    அன்றைய நாளில் வெளியான பொன்னான வாழ்வு என்கிற திரைப்படத்திலும் இந்தப் பதிவு அழகாக .. நேர்த்தியாக.. இனிமையாக.. அமைத்திருந்தார்கள்

    என்பதுதான் சிறப்பு. ரோஜா மலருடன் நேருவின் பிணைப்பு.. அதனை கவிஞர் கையாண்டிருக்கிற விதம்.. பாருங்கள்…

    பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
    நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
    பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
    ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்

    குழந்தைக் குரலெடுத்து கூட்டும் இன்பத்தைத் தன் பாடல்களில் தரும் எம்.எஸ்.ராஜேஸ்வரி..

    ஒவ்வொரு வார்த்தையோடும் உள்ளத்தைப் பறிகொடுத்து.. பாவங்களுடன்.. பாடிய பாடலிது..

    சுகத்தையும் சோகத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்ள … இது போன்ற பாடல்களின் பங்களிப்பு அலாதி..

    அதுவும் காலத்தின் ஒரு பதிவாய் .. கவிஞர் தஞ்சைவாணன் இயற்றிய வரிகளுக்கும் இறப்பில்லையே…

    மதுரையில் ஒரு தியேட்டரில் சிறு வயதில் பார்த்தபோது.. இந்தப் பாடல் காட்சியில் என் கண்களில் மழை.. இன்னும் நெஞ்சத்தை ஈரமாக்கி வைத்திருக்கிறது.

    படம் : பொன்னான வாழ்வு
    குரல் : M.S.ராஜேஸ்வரி..

    கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்
    அதை வரிவரியா பாடிடுவேன் பாடிடுவேன்

    ( கதை)

    வண்ண வண்ண மலர்கள் பூத்த தோட்டத்திலே – ஒரு
    சின்ன அழகு ரோஜாச்செடி வளர்ந்திருந்ததாம்
    நேரு மாமா ஒரு நாள் அங்கு வந்திருந்தாராம்
    ரோஜா மலரை எடுத்து மார்பில் அணிந்து கொண்டாராம்
    நல்ல மணம் வீசுகின்ற ரோஜா மலருமே – தன்
    உள்ளத்திலே பெருமையோடு மகிழ்ச்சி அடைந்ததாம்

    ( கதை )

    மறுநாள் அவர் வருவார் என் பூத்திருந்ததாம்
    அவர் வரும் வழியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாம்
    தென்றல் காற்று புயலாக மாறி வீசியதாம்
    திடீர் என்று நேரு மறைந்த சேதி வந்ததாம்.

    அதனைக் கேட்டு ரோஜாமலரும் வாடிப் போனதுவாம்
    நேருஜியை அமர லோகம் தேடிப் போனதுவாம்..
    அவர் முன்னே சென்றதாம்..
    அன்பு நெஞ்சைத் தொட்டதாம்..
    கண்ணீர் விட்டதாம்..
    தேம்பித் தேம்பி அழுததாம்..

    பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
    நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
    பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
    ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்
    அப்படியோ ரோஜாமலர் திரும்பி வந்ததாம்
    அவர் நினைவாய் உலகில் மீண்டும் பிறந்து மலர்ந்ததாம்

    ( கதை )

    http://www.mediafire.com/?ujnkznzymyd

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(114)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்…

    ஊரெல்லாம் திருவிழா, காரெல்லாம் இங்கிலாந்துக் கொடி, பேச்செல்லாம் இங்கிலாந்து உதை பந்தாட்ட அணியைப் பற்றி, என்ன எதைபற்றிய அலசல் எனும் கேள்வி எழுகிறதா ?

    உலகக் கால்பந்தாட்டப் போட்டி பிரேஸில் நாட்டில் கோலாகலமாக ஆரம்பித்தது. மிகவும் எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்து அணி பிரேஸில் நாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்டது.

    நான் இங்கிலாந்து நாட்டிற்குள் காலடி வைத்தது முதல் எப்போதும் நான்கு வருடத்திற்கொருமுறை நடைபெறும் இவ்வுதைப் பந்தாட்டப் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் இரசிப்பதுண்டு.

    என்ன அதிலே விஷேசம் என்கிறீர்களா ?

    அடிப்படை வசதியற்ற ஏழ்மை சூழ்ந்த நாடுகள் செல்வச் செழிப்பு மிக்க நாடுகளுடன் சமதளத்தில் போட்டியிடும் ஒரே நிகழ்வு எனும் காரணமே !

    இதிலே போட்டியிடும் பல நாடுகள் பொருளாதர நிலையிலே பங்கு பெறும் பல நாடுகளை அண்மிக்கக் கூட முடியாது. இருப்பினும் இப்போட்டிக்குத் தமது அணிகளைத் தயார் செய்து மிகுந்த செலவுகளுடன் கூடிய பயிற்சிகளை அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி இப்போட்டிகளில் பங்கு கொள்ள வைக்கிறார்கள்.

    ஆனால் இப்போட்டிகளில் பங்கு பெற்றும் தமது நாடுகளை தெருவோரம் நின்று தொலைக்காட்சி விற்பனை நிலையங்களின் காட்சிக் கண்ணாடிகளின் முன் நின்று பார்த்துக் கைதட்டி ரசிக்கும் அவ்வேழை மக்கள் அதே உணவுக்குக் கூட வழியில்லா நிலையில் தான்.

    என்ன உலகமடா இது என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா ?

    சரி இனி எமது நாடான இங்கிலாந்து நாட்டின் நிலைமைக்கு வருவோம். 1966ம் ஆண்டு உலக உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று உலகச் சாம்பியன்களாக வலம் வந்த பின்பு இன்றுவரை உதைபந்தாட்டப் போட்டியை நாம் தான் கண்டுபிடித்தோம் ( அதுவேறு சர்ச்சை) என்று மார்தட்டிக் கொள்ளும் இங்கிலாந்து நாட்டிற்கு மீண்டும் அந்தச் சந்தர்ப்பம் இன்றுவரை எட்டாமலே போகிறது.

    இது ஒருவகை சாபமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது .

    உலக அளவிலேயே உதைபந்தாட்டம் முக்கியமான விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் நாடுகளில் நடக்கும் உள்நாட்டு கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்தில் நடப்பதே மிகவும் பிரசித்து பெற்றது.

    ஏனைய உதைபந்தாட்ட நாடுகளில் உள்ள திறமையான உதைபந்தாட்ட வீரர்கள் பலர் இங்கிலாந்தின் உள்நாட்டு உதைபந்தாட்ட அணிகளில் தம்மை இணைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள்.

    இதற்கு முக்கிய காரணமாக இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்டத்தின் தரத்தின் உயர்வைக் குறிப்பிடுகிறார்கள்.

    இத்தகைய உயர் அபிப்பிராயத்தினைக் கொண்ட உதைபந்தாட்டப்போட்டி நடைபெறும் நாடானது 1966ம் ஆண்டிற்குப் பின்னால் ஒரு தடவையாவது உலக உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் செல்லவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமே !

    இங்கிலாந்து உதைபந்தாட்ட நிர்வாகக் குழுவினரும் இதுவரை எத்தனையோ திறமையான வெளிநாட்டு பயிற்சியாளர்களைத் தமது அணிக்கு முதன்மைப் பயிற்சியாளர்களாக நியமித்தும் அவர்களது இலக்கை இதுவரை அவர்களால் அடைய முடியவில்லை.

    FIFA 2014 England2FIFA 2014 England

    இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்ட உலகக் கோப்பை எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமடைந்தவர்களில் நானும் ஒருவன் .

    என்ன செய்வது இனி 2018ம் ஆண்டை நோக்கி எமது ஆவலைத் திருப்ப வேண்டியதுதான்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    படம் உதவி: Getty Images, www.gettyimages.com

    Share
  • கிராண்ட் கேனியன் பயணக் கட்டுரை

    செம்பூர் நீலு

    நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆங்கிலத்தில் கைடு பெண்ணரசியின் நேர்முக வர்ணனை.

    grand canyon1

    லாஸ் விகாஸிலிருந்து தென் கிழக்கில் 30 மைல் தூரத்தில் ஓடும் கொலராடோ நதியின் மேல் கட்டப்பட்டிருக்கும் அணை. 1930 ஆண்டில் கட்டப்பட்டது. 1250 அடி நீளமும் 730 அடி உயரமும் உள்ள இந்த அணை கொலராடோ நதியின் வெள்ளப் பெருக்கை கட்டுபடுத்துவதற்கும் மின்சார உற்பத்திக்கும் வேண்டி கட்டப்பட்டது.

    முதலில் இந்த அணை “பௌல்டர் அணை” என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1947ம் ஆண்டு, 31 வது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த “ஹெர்பர்ட் ஹூவர்” என்பவரின் ஞாபகார்த்தமாக “ஹுவர் டாம்” என்று பெயர் சூட்டப்பட்டது

    மேலிருந்தவறே கொலராடொ நதியில் கட்டப்பட்டிருக்கும் “ஹூவர் அணை” யின் தரிசனம்.

                                                                                                                        ஹூவர் அணை
    grand canyon2

    அடுத்த இருபது நிமிடங்களில் விமானம் தறையிறங்கியது. வரிசையாக எல்லோரையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த ஷாப்பிங் செண்டர் கம் ரெஸ்டாரெண்டிற்கு அழைத்து சென்றார்.

    grand canyon3

    அடுத்த 15 நிமிடஙளில் ஹெலிகாப்டர் மூலமாக 3500 அடி கீழே ஒடிக் கொண்டிருக்கும் கொலராடொ நதிக்கரைக்கு பயணம். ஐவர்  அமரக்கூடிய ஹெலிகாப்டர். ஐந்து  நிமிடங்களில் நதிக்கரையில் ஹெலிகாப்டர் தறை இறங்கியது.

    எங்களுடன் வந்த மற்ற சுற்றுலா நண்பர்களும் 3 ஹெலிகாப்டர்களில் வந்து சேர்ந்ந்தனர். அடுத்தது கொலராடொ நதியில் படகுப்பயணம். இரண்டு விசைப்படகுகளில். கரை புரண்டு வேகத்துடன் ஒடும் நதி. அதை எதிர்த்து விசைப்படகு அமைதியாக சென்றது. இரு மருங்கிலும் உயரமான மலைப்பகுதி.

    grand canyon4

    30 நிமிடங்களில் பயணம் முடிந்தது. படகோட்டி ஸ்பானிஷ் மொழியில் மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டிருந்தார். அவரே புகைப்படம் எடுப்பதற்கும் உதவியாக இருந்தார். மறுபடியும் ஹெலிகாப்டரில் பயணித்து புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தோம். விமான பயணத்திற்கு முன்னால் எல்லொருக்கும் ஒரு டிஃபன் பொட்டலம் கொடுத்தார்கள் அதில் காய்கறிகளுடன் கூடிய இரு பன் ரொட்டி, இரண்டு தடிமனான பிஸ்கட், ஒரு கொககோலா கேன். அதை ஒரு பிடிபிடித்துவிட்டு எல்லொரும் ஒரு வால்வோ பஸ்ஸில் 15 மைல் தொலைவிலுள்ள “கிராண்ட் கேனியன் ஸ்கைவாக்கிற்கு” 20 நிமிட பயணம்.

    40 மில்லிய்ன டாலர் செலவில் இரும்பினாலும் கண்ணாடியாலும் உருவாக்கப்பட்ட இந்த ஸ்கை வாக்  (சுற்று சூழல் பாழாகிவிடும் என்ற பலமான எதிர்ப்புடன்) ஒரு எஞ்ஜினியரிங் அற்புதம். 2007ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. பிரபல அப்போலொ விண்வெளி ராக்கெட்டில் பயணித்து சந்திர மண்டலத்தை ஆராயிச்சி செய்த விஞ்ஞானி “பஸ் ஆல்டெரின்” 2007 மார்ச் மாதம் 20 ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன் இதில் நடந்து துவக்கிவைத்தார். இதன் முக்கியமான சிறப்பு அம்சங்கள்

    grand canyon5grand canyon6

    “ U ” வடிவமுள்ள கண்ணாடியாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட அமைப்பு மலை விளிம்பிலிருந்து 70 அடி முன்னாலும் மலை அடிவாரத்திலிருந்து 4000 அடி உயரத்தில் நிற்கிறது. அதன் எதிர்ப்பகுதி மலை மூன்று மைல் தொலைவிலிருக்கிறது.

    4 இன்ச் கடினமான கண்ணாடி படிமங்களை இதில் உபயோகபடுத்தியிருக்கிறார்கள், 70 டன் எடையை தாங்கும் சக்திகொண்ட்து. அதாவது சராசரி 175 பவுண்ட் எடையுள்ள 800 மனிதர்கள் ஒரே சமயத்தல் இதில் நடக்கலாம். இந்த அமைப்பு 8 மாக்னிட்யூட் பூகம்பத்தை தாங்கவும் 8 திசையிலிருந்து 80 முதல் 100 மைல் வேகத்தில் அடிக்கும் புயலை தாங்கும் சக்தியும் கொண்ட்து. ஆனாலும் ஸேஃப்டியை கணக்கில்கொண்டு ஒரு சமயத்தில் 120 மனிதர்களை மட்டும் இதில் நடக்க அனுமதிக்கின்றனர்..

    grand canyon0

    கண்ணாடி படிவங்களில் கீறல் மற்றும் சிராய்ப்பு வரமாலிருப்பதற்காக சுற்றுலா பயணிகள் செருப்பு / ஷூ அணிந்த கால்களில் ஸ்பெஷல் காலுறைகள் அணிந்து செல்லவேண்டும். காமிராக்கள் / மொபைல் போன்கள் அனுமதியில்லை.

    கிராண்ட் கேனியன் இலாக்காவை சேர்ந்த பழங்குடி மக்களான “ஹுஅலாபைஸ்” செவ்விந்தியர் இனத்தவரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக வேண்டி லாஸ் விகாஸை சேர்ந்த தொழிலதிபர் டேவிட் ஜின் என்பவர் லோக்ஸா எஞ்ஜினீரிங் கம்பெனியின் துணையுடன் இந்த “கிராண்ட் கேனியன் ஸ்கைவாக்கை” உருவாக்கினார்

    சுற்றுலா குழுவினருடன் செக்யூரிட்டி சோதனக்கு ப்பிறகு ஸ்கை வாக்கின் உள்ளே சென்றேன். ஆஹா!!!  என்ன ஒரு காட்சி. கண்ணாடி படிவங்கள் வழியாக 4000 அடி கீழேயுள்ள மலை பள்ளத்தாக்கை பார்கும்போது உடல் புல்லரிக்கிறது.  சுற்றி வந்து மூன்று பக்கஙளில் உள்ள மலை பள்ளத்தாக்கை காண கண் கோடி வேண்டும். என்ன ஒரு அருமையான காட்சி. மனத்தில் ஒரு பயம் தோன்றுகிற பயங்கரமான மலை பள்ளத்தாக்கு. ஒரு மணி நேரம் இருந்துவிட்டு அருகில் இருக்கும் செவ்விந்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அற்புதமாக சித்தரிக்கும் ஒரு கண்காட்சியும் பார்த்தோம். .

                                                                                           செவ்விந்தியர்கள் வாழ்ந்த குடிசைகள்
    grand canyon7
    இரண்டு மணி நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை. இதற்கிடையில் அமெரிக்க கைட் பெண் அவசரபடுத்தினாள். எல்லோரும் பஸ்ஸில் அமர்ந்து   ஷாப்பிங் செண்டர் கம் ரெஸ்டாரெண்டிற்கு வந்தோம். அடுத்த 15 நிமிடஙளில் காலையில் வந்த சிறிய விமானத்தில் பயணித்து லாஸ் விகாஸ் வந்து சேர்ந்தோம். இந்த கிராண்ட் கேனியன் சுற்றுலா பயணம் மறக்க முடியாத ஒன்று.

    செம்புர் நீலு ( நீலகண்டன்)
    ஃப்ரீமாண்ட் காலிஃபோர்னியா

    Share
  • திருமால் திருப்புகழ் (131)

    கிரேசி மோகன்

    Tulasi priyam - #Krishnafortoday - Keshav
    Tulasi priyam – #Krishnafortoday – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————-

    Experiments with Krishna series. #Krishnafortoday
    Experiments with Krishna series. #Krishnafortoday

    ரங்கா, அலர்மேல்வாழ் மங்கா, அரவணைக்கும்,
    அங்கா, அசுரர்க்(கு) அரியுருவில், -சிங்கா,
    பிரித்தாலும் மங்கா, பரிபூர்ண பங்கா,
    உரித்தாவாய் என்னை உவந்து….(302)

    சகஸ்ரமவன் நாமம், சகலமவன் ரூபம்,
    ரகஸ்யமவன் மாயை, ரசிப்போர், -அகஸ்மாத்தாய்,
    வானம் வசப்பட, நானவன் தானென்ற,
    ஞானத்தில் நிற்பார் நிலைத்து….(303)

    தீனர்க்(கு) அருளூற்றாய், ஈனர்க்(கு) இருள்கூற்றாய்,
    மீனமாய் ஏனசிம்ம வாமன, -மூணான,
    ராம, கிருஷ்ண, கலிபுருஷ னாய்வந்த,
    நாம சகஸ்ரனை நாடு….(304)

    எங்குநாம் சென்றாலும், அங்கவன் முன்னம்போய்,
    தங்கு தடைகள் தவிர்த்திடுவான், -செங்கண்மால்,
    தாளிரெண்டைப் பற்றித், துதிப்போர்தம் தீவினை,
    தாளிரெண் டாகும் தெறித்து….(305)

    இங்கிருப்ப தெல்லாம், இறப்பும் பிறப்புமாம்,
    எங்கெங்கும் என்றும் எதிலுமுள்ள, -செங்கண்மால்,
    இல்லா இடத்திலும், இல்லா(து) இருந்திடுவான்,
    பொல்லாப் பயலவனைப் பேணு….(306)

    உண்டா கடவுளென்றால், உண்டவன் கண்ணனென்பேன்,
    கண்டதுண்டா என்றால், கருத்தவனை, -விண்டுரைத்த,
    ஆழ்வார்கள் பாட்டில், அதிலொன்றுக்(கு) ஈடாக,
    பாழ்வாய் புகல்கையில் பார்….(307)

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2013_12_01_archive.html

     

    Share
  • திருமால் திருப்புகழ் (130)

    கிரேசி மோகன்

    Vaatsalyam series. #krishnafortoday - Keshav
    Vaatsalyam series. #krishnafortoday – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–

    Krithi drawings - Shambo, Shambo, Shivashambo Swayambo... Keshav
    Krithi drawings – Shambo, Shambo, Shivashambo Swayambo… Keshav

    பூவிருக்கும் உந்தியா, காவிருக்கும் வேங்கட,
    கோவிலுக்குள் வாழ்கின்ற கோவிந்தா, -பாவிருக்கும்,
    ஆழ்வார்கள் நாவிருக்கும், ஆண்டவா வாயிருக்க,
    தாழ்வான போதுமென்னுள் தாவு….(296)

    என்னத்தைக் கண்டேன்நான், உன்பித்தம் கொண்டதால்,
    கண்ணைத் திறந்துகேள் கார்முகிலே, -உன்னொத்த,
    தெய்வமிங்(கு) இல்லையென்ற, தற்பெருமை தேவையா,
    தொய்வுறுமுன் தற்பரமே தோன்று….(297)

    குன்றெடுத்த கோவிந்தன், கன்றணைக்கும் கோபாலன்,
    என்றுனக்கு கோலங்கள் ஏராளம், -இன்றெனக்கு,
    காட்சி அளித்திடுவாய், மோட்ச அரசாங்கம்,
    ஆட்சிசெய் சாட்சிபூதம் ஆய்….(298)

    வண்டரி யென்றரி, யாமலே வந்திரு,
    புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற, -பண்டரி,
    விட்டலா செங்கலை, விட்டுவா வெவ்வினை
    கொட்டுதே தேளாய்க் கடுத்து….(299)

    நித்திய சூரியாய், நூற்றியெட்டாம் தேசத்து,
    முத்தியை வேண்டேன் முளைக்கதிரே, -சத்தியம்,
    நன்குணர்ந்து பேத, நிலைகடந்து பூமியில்,
    நின்குணமாய் நிற்கவேண்டும் நான்….(300)

    வீசும் புயலில், விளையாடும் தென்றலில்,
    நாசிக்குள் சென்றுவரும் நம்மூச்சில், -ஓசை,
    இலாத பொழுதிலும் ஓமென்(று) ஒலிக்கும்
    கலாபக் கடவுளைக் காண்….(301)

    —————————————————————————————————————

    படத்திற்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_12_01_archive.html

     

     

    Share
  • கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? – கவிதை

    –தேமொழி.

    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ?

    Maya Angelou

    கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

     

    சுதந்திர பறவை வேகமெடுத்து
    காற்றில் பாய்ந்தது,
    காற்றோட்டத்தின் எல்லை வரை
    காற்றில் மிதந்தது,
    செங்கதிரின் வண்ணத்தில் தன்
    சிறகைத் தோய்த்து
    வானம் எனக்கே  சொந்தம்
    என எண்ணத் துணிந்தது

    கூண்டுப் பறவையோ குறுகிய
    கூண்டில் கொதிப்புடன் உலவியது,
    பொங்கி வரும் ஆத்திரம்
    அதன் கண்ணை மறைத்தது,
    சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
    குரலெடுத்துப்  பாட முனைந்தது

    கூண்டுப்பறவை பாடுகிறது
    அச்சத்துடன் நடுங்கும் குரலில்
    அனுபவிக்காதவற்றை  எண்ணி
    மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
    அந்தப் பாடல் எதிரொலித்தது
    தொலை தூரத்து  மலையில்
    கூண்டுப்பறவையின்  வேட்கை
    தொனிக்கும் விடுதலைப் பாடல்

    சுதந்திர பறவை மற்றொரு
    இளந் தென்றலை நினைந்தது
    அசையும் மரங்களின் பெருமூச்சாய்
    மெல்லத் தவழ்ந்து   செல்லும்
    பருவக் காற்றை நினைந்தது
    காலைக்கதிரொளியில்
    ஒளிர்ந்திடும் புல்வெளியில்
    ஊர்ந்திடும் கொழுத்தபுழு
    உணவை மனதினில்  நினைந்தது
    இந்த வானமே எனதென மகிழ்ந்தது

    கூண்டுப்பறவையோ கனவுகளின்
    கல்லறை மேடையில் நின்றது
    பயங்கரக் கனவின் அலறலாக
    அதன் நிழல்  ஓலமிட்டது
    சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
    குரலெடுத்துப்  பாட முனைந்தது

    கூண்டுப்பறவை பாடுகிறது
    அச்சத்துடன் நடுங்கும் குரலில்
    அனுபவிக்காதவற்றை  எண்ணி
    மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
    அந்தப் பாடல் எதிரொலித்தது
    தொலை தூரத்து  மலையில்
    கூண்டுப்பறவையின்  வேட்கை
    தொனிக்கும் விடுதலைப் பாடல்

     

    மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
    நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
    தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 15

    கே.ரவி

    என் வளர்ப்புத் தந்தை கவிராஜ காளமேகம் படம் தயாரிக்கத் தொடங்கிய போது எங்கள் இல்லம் மயிலை, பலாத்தோப்பில் இருந்தது. அங்கேதான் அவரை நான் முதன்முதலாகப் பார்த்தேன். கையை மடித்து விட்டிருந்த வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி, நெற்றியிலே குங்குமப் பொட்டு, மீசை. இந்தத் தோற்றத்துடன் அங்கே வந்தவர் கவிஞர் வாலி.

    images (1)

    மாமா படத்துக்குப் பாட்டெழுத ஏ.எல்.நாராயணன் அழைத்ததும் ‘ஹோட்டல் எல்லாம் வேண்டாம் நான் அவர் வீட்டுக்கே வந்து விடுகிறேன், அவா நம்ம ஊர்க்காரா’ என்று சொல்லி வந்து விட்டராம்.

    ஏற்கனவே இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும், ஏ.எல்.நாராயணனும் வந்து காத்திருந்தனர். எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரே வெற்றிலை மணம், ஆர்மோனியச் சத்தம்.

    ஶ்ரீரங்கம் கோவில் மடப் பள்ளியில் சமையல் செய்து கொண்டே பின்னாளில் காளமேகமாக மாற இருக்கும் கதாநாயகன் நையாண்டியாகப் பாடவேண்டிய பாடல் என்று நாராயணன் விளக்க, உடனே வாலி, நானும் அதே ஊர், ஶ்ரீரங்கம்தான் என்று சொல்லி விட்டு, 5 நிமிடங்களுக்குள் பாடலை அமர்க்களமாக எழுதிக் கொடுத்த காட்சியைக் கண்குளிரக் கண்டும், செவிகுளிரக் கேட்டும் ரசித்தேன்.

    ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
    ரெங்க நாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே

    சித்திரையில் தேரோட்டம் மாசியிலே படகோட்டம்
    இத்தனையும் காணவரும் எத்தனையோ ஜனக்கூட்டம்
    பக்தாளுக்குத் தெரியாதோ பெருமாளின் சங்கதி
    உள்ளூரில் ரெண்டிருக்க உறையூரில் இன்னொருத்தி

    கைவழியே நெய்வழியும் பொங்கலுண்டு காலையிலே
    சித்திரான்னம் படைப்பதுண்டு மத்தியான வேளையிலே
    ஊருக்கெல்லாம் சோறூட்டும் சாமியெங்க சாமிதான்
    நான்சமச்சுப் போடாட்டா நாள்முழுக்கப் பட்டினிதான்

    பாட்டு முடிவதற்குள் டி.எம்.செளந்தரராஜனும் வந்து சேர்கிறார். எஸ்.எம்.எஸ் மெட்டுச் சொல்லி வாசிக்க, அந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடிக் காட்ட, அடாடா, பெருமாளே கள்ளத்துயில் நீங்கி எழுந்து வந்து சிவதாண்டவம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது.

    maxresdefault

    இந்தப் பாட்டை கேட்கச் சொடுக்கலாமே,

    http://youtu.be/4XSsgperblo

    என்னையும் கவிஞன் என்று ஏ.எல்.நாராயணன் வாலிக்கு அறிமுகம் செய்து வைத்ததும், “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா, ஒழுங்காப் படி” என்றார் வாலி.

    அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் வாலியை நான் பல ஆண்டுகள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனாலும் அவருடைய பாடல் வரிகள் பல என்னை ஆட்கொண்ட வரிகள்.

    “மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா
    மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர வெறுத்திடுமா”

    எவ்வளவு அற்புதமான வரிகள்!

    “இடையோ இல்லை இருந்தால் முல்லைக் கொடிபோல் மெல்ல வளையும் – சின்னக்
    குடைபோல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும்”

    சொற்கள் எப்படி இயல்பாக ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு வருகின்றன!

    வாலியை அடுத்தமுறை நான் பார்த்தது 1997-ல் அவருடைய இல்லத்தில். வானவில் பண்பாட்டு மையம் எடுத்த இந்திய சுதந்திரப் பொன்விழாக் கவியரங்கத்துக்கு அவரை அழைக்கச் சென்றிருந்தேன். அப்போது என்ன சொன்னார் தெரியுமா? “ஏன்யா, நான் தப்பித் தவறி ஒரு நல்ல பாட்டு எழுதிட்டாப் போச்சு, அதையும் கண்ணதாசன் பாட்டுன்னு சொல்லிடுவீங்களே”. எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. அவரே விளக்கினார். நான் எழுதி வெளியிட்டு, அவருக்கும் அனுப்பி வைத்த ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற நூலில்,

    “ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்கா கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க”

    என்ற பாட்டின் எளிய நடையை நான் பாராட்டி விட்டு அதைக் கண்ணதாசன் பாடல் என்று குறிப்பிட்டு விட்டேனாம். சிரித்துக் கொண்டே கோபித்துக் கொண்டார். நான் மன்னிப்புக் கேட்டேன். அவர் என் நூலை முழுமையாகப் படித்திருந்தது குறித்து மகிழ்ச்சியடைந்தேன்.

    பின்னொரு சமயம் சபரிமலைக்கு என்னுடன் யாத்திரை போய்க்கொண்டிருந்த நண்பர் குழுவின் பக்திப் பாடல்கள் அடங்கிய ‘சந்தன மணம் கமழ் ஐய்யப்பன்’ என்ற பாட்டு நூலை வாலியைக் கொண்டு சென்னை ஆஸ்திக சமாஜத்தில் வெளியிட எங்கள் குருசாமி, என் மூத்த சகோதரர் ஶ்ரீதர், ஏற்பாடு செய்திருந்தார். அதை வெளியிட்டுப் பேசிய வாலி அவர்கள் அதில் இருந்த என் பாடல் ஒன்றை முழுக்கச் சொல்லிப் பாராட்டினார். அந்தப் பாடல்:

    நெய் அபிஷேகம் ஜமாய்க்கிறே – என்னை
    எத்தன நாளா டபாய்க்கிறே
    பொய்யில் அமுக்கிப் புழுதியிலே என்னைப்
    புரள விட்டு நீ ஏய்க்கிறே – விட்டுப்
    போவானான்னு பாக்குறே

    சங்கீதம் தெரிஞ்ச சாஸ்திரக் காரங்க
    சந்தோஷமா ஒன்னப் பாடுறாங்க
    சங்கோஜங் கொண்ட பேர்வழிங்க – சத்தம்
    போடாம ஒன்னத் தேடுறாங்க
    எல்லாரும் ஒண்ணாக் கூடுறாங்க
    வில்லாளி வீரன்னு கூவுறாங்க
    வாச்சாலம் நானும் பழகலே – ஓன்
    வீராப்பும் எனக்கு வெளங்கலே

    வெளிச்சமில்லாத சாலையிலே – ஆள்
    அரவமில்லாத மூலயிலே – வெத்துக்
    காயிதமா நான் கெடக்குறேன் – ஓன்
    கைபடத்தான் படபடக்குறேன்
    பளிச்சுனு என்ன நீவிப்புட்டு – ஒரு
    பாட்டெழுதிக் கைநாட்டுவை
    பத்துத் தலமொறைக் கதுபோதும் – மக்கள்
    பாடுவாங்க நீ கேட்டுவை

    காட்டுல போயி குந்திக்குற – கண்ண
    மூடிக்கிட் டேதோ சிந்திக்குற – நான்
    பாட்டுக்குப் படுத்துத் தூங்கையிலே – ஒரு
    பாட்டாக வந்து சந்திக்கிற

    நெய் அபிஷேகம் ஜமாய்க்கிறே – என்னை
    எத்தன நாளா டபாய்க்கிறே
    மெய்யும் பொய்யும் கலந்துவச்சு – நான்
    மெரள மெரள சதாய்க்கிறே.

    மனம்திறந்து பாராட்டி விட்டுப் பேசி முடித்த பிறகு என் காதருகே வந்து ரகசியமாக மிரட்டினார்: “ராஜகோபாலா ஒங்கம்மா தோச வாத்தாளான்னு நீ சினிமாவுக்காக ஒரு ஆபாசப் பாட்டு எழுதினேன்னு மைக்குல சொல்லட்டுமா?” சிரித்துக் கொண்டேன்.

    நானும் அவரும் சந்தித்துக் கொண்ட போதெல்லாம், ஏதாவது எடக்கு முடக்காகவோ, பொய்க்கோபத்துடனோ என்னிடம் அவர் பேசியிருந்தாலும் அவருக்கு என் மீது அன்பும், பற்றும் இருந்ததை நான் உணரத் தவறவில்லை.

    பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தும் அதிகம் பேசவில்லை. அவருக்கு வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விழாவில் ‘பாரதி விருது’ வழங்கிய போது, சாதரணமாக விருதுகள் பெறத் தாம் சம்மதிப்பதில்லை என்ற போதிலும், பாரதி பெயரால் தரப்படும் விருது என்பதாலும், நான் அழைத்த காரணத்தாலும் தாம் விருது பெற்றுக் கொள்ள வந்ததாகப் பேசி, என் மீது அவருக்கு இருந்த அன்பை உறுதிப் படுத்தினார்.

    அவர் இறைவனடி சேர்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன் அவருடன் நான் தொலைபேசியில் பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் சகோதரி மகள் ஸ்வர்ணமால்யா, “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்ற தன் நாட்டிய நாடகத்தை ஒளிப்பேழையாக , அதாவது, டி.வி.டி யாகக் கொண்டுவர இருப்பதால், அதற்கு வாலி அவர்களின் முன்னுரை பெற்றுத் தர வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டாள். அது குறித்துத்தான், நான் வாலி அவர்களைத் தொலைபேசியில் கேட்டேன். அவர் சொன்னார்: ” ரவி, இப்போதெல்லாம் நான் போகிற வழிக்குப் புண்ணியம் தரக்கூடிய கடவுள் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறெதையும் படிப்பதில்லை. சிலப்பதிகாரமெல்லாம் இப்பொழுது படித்துப் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை” என்றார். நான் சொன்னேன், ” நீங்கள் இப்படிச் சொல்லலாமா? உங்களுக்குத் தெரியாததா? நானறிந்தவரை சிலப்பதிகாரம் ஒரு சிறந்த பக்தி இலக்கியம். ஆய்ச்சியர் குரவையில் எப்படியெல்லாம் திருமாலைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்!” என்று கூறிவிட்டுத் தொலபேசியிலேயே, “சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே”, “நாராயணா என்னா நாவென்ன நாவே” ஆகிய வரிகளைச் சொல்லி, உங்கள் ஆழ்வார்களுக்கெல்லாம் முன்னோடி இளங்கோ சார்” என்று நான் சொன்னதும் சிறிது மெளனத்துக்குப் பிறகு அவர் சொன்னார்: ” சரி ரவி, நாளை நான் என் ஆச்சாரியன் அழகிய சிங்கர் மீது ஒரு காவியம் வெளியிடுகிறேன், ம்யூஸிக் அகடமியில், அங்கே வந்துவிடு பேசுவோம்” என்றார்.

    ஏதோ காரணம் மறுநாள் நான் அந்த விழாவுக்குப் போக முடியாமல் தடுத்து விட்டது. அதற்கு மறுநாளே அவருக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதையும் இரண்டு வாரங்களில் அவர் நம்மைப் பிரிந்ததையும் இன்னும் நினைத்து வருந்துகிறேன்.

    அவருடைய கள்ளம் கபடமற்ற கவிதையுள்ளம் நான் நன்கு அறிவேன். புன்னகை என்பது இதயத்தோடு தொடர்புடையது, காதலியின் கன்னமோ காதலனின் கையோடு தொடர்புடையது என்ற நுட்பத்தை மிக எளிமையாக அவர் பாடியுள்ளதை நினைவு கூர்ந்தால், திரைப்படப் பாடல்கள் இலக்கிய சம்பந்தம் அற்றவை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாடுவோமே:

    “இந்தப் புன்னகை என்ன விலை – என்
    இதயம் சொன்ன விலை – இவள்
    கன்னங்கள் என்ன விலை – இந்தக்
    கைகள் தந்த விலை”.

    தொடரும்.

    Share