Month: July 2014

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    “கண்ணா நடிக்கிறாய் கண்மை கசங்கிட
    அன்னை அதட்ட அவசரமாய் ; -மன்னவா
    சிந்தியது போதும் சிரிப்பினில் ஆழ்த்துகிறேன்
    வந்துயெம் நாடகத்தை வாழ்த்து”….கிரேசி மோகன் ….

    crazy sunday
    One of the most beautiful verses in Srimad Bhagavatha. Watercolour.
    Krishna pretends to shiver out of fear, like a plantain in the wind on Yashoda’s reprimand. Rubs his eyes while crying, spreading the Kajal in his eyes. Not for nothing he is called the Natavara vapuh– the king of actors.

     

     

    Share
  • காதலே நான்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (5)

     

    காதலே நான்

                                                                                                                    {கேட்டு மகிழ}

    spells-for-love

    ஒய்யாரியே! உட்கார்!

    ஓரக்கிளையின் லாகவம் போலே.

     

    உன்னிடம் கொஞ்சம்

    சொல்லித்தான் ஆகவேண்டும்

    கொஞ்சமேனும்…

     

    நெஞ்சு முழுக்கக் காதலோடுதான், இந்தப்

    பஞ்ச பூதங்கள்

    கும்மி அடித்தபடி, இந்தக்

    குருட்டு உலகில், என்னை

    இறக்கி விட்டன.

     

    நாலு வயதிலேயே

    வாலிபனாய்த்தான் உணர்ந்தேன்

    எல்லாப் பெண்களுமே இளையவர்களாய்

    எனக்காகவே பிறந்தவர்களாகத்தான்

    தெரிந்தார்கள்.

     

    தொடவே முடியாமல்

    விடவே முடியாமல்

    தொடரும் பயணம்.

     

    இன்றைக்கு என்னத்தை

    இப்படி வியந்து பார்க்கிறாய்?

     

    இந்த நானூறு வயதிலும்

    இம்மியும் மாறவில்லை நான்.

     

    எனக்குப்

    பெண்கள் வேண்டும்

    அதைவிடவும் அவர்களுடைய

    கண்கள் வேண்டும்

    கண்களையே நினைவுபடுத்தும்

    மலர்கள் வேண்டும்

    மலர்களையே பரிகசிக்கும்

    மழலை வேண்டும்

    மழலையின் துவக்கமான

    மர்மம் வேண்டும்

    மர்மத்தைப் புகுந்து பார்க்கக்

    கவிதை வேண்டும்

    கவிதையைச் சிரஞ்சீவியாக்க

    கானம் வேண்டும்

    கானத்தில் தற்செயல் சந்திப்பாய்க்

    கடவுள் வேண்டும்

    கடவுளைக் கட்டித் தழுவக்

    காதல் வேண்டும்!!

     

    வேண்டுமளவு காதலுடன்தான்

    விளைந்திருக்கிறேனே!

    வேண்டுமளவு காதலென்ன

    காதலே வேண்டுமளவு

    காதலுடன்தானே, இங்கே

    காலெடுத்து வைத்திருக்கிறேன்!

     

    இன்னொன்றும் உனக்கு

    இப்போதே சொல்லிவிட வேண்டும்

     

    என்

    எல்லா உறவுகளுக்கும்

    பிரிவுகளுக்கும் பரிவுகளுக்கும்

    பதைப்புகளுக்கும் மதர்ப்புகளுக்கும்

    தெளிவுக்கும் குழப்பத்திற்கும்

    துளியாய் வரும் கண்ணீருக்கும்

     

    இந்தப்

    பொல்லாத காதல்தான் காரணம் என்றால்

    புரிந்துகொள்ள முடிகிறதா?

     

    காதல் உயிரென்றால்

    காமம்தான் உடம்பென்று

    வாதிட்டு என்னை

    வசக்க நினைத்தார்கள்

     

    நானும் இந்தப்

    பஞ்ச பூதங்களின் மேல், வழக்கு

    பதிவு செய்யலாமென்று

    பத்திரங்களைத் தயார் செய்தேன்..

     

    என்ன தவறு செய்ய இருந்தேன்

    பறத்தலைக் கால்கொடுத்துக் கெடுத்த

    பாழும் உலகம் எப்படி வாழ்க்கையைப்

    பந்தாடுகிறது பார்!

     

    இதோ கேள்!

    எனக்கு..

    காதலே வாகனம்

    காதலே வாசகம்

    காதலே வாழ்க்கை

     

    காதல்தான்,

    என்

    கண்ணெதிரே நானே இறந்து

    கனலில் எரிந்து,

    என்மேல்

    காதலுற்ற தேவதையின்

    கண்ணீர்த் துளிபட்டுச்

    சின்ன மலரயாய்ச்

    சிரிக்கும் மயானம்.

     

    சந்தனக் கரங்களுடன்

    சண்பகக் கண்களுடன்

    வந்தென் மார்பில் சுவாசித்தபடி

     

    இந்த தரிசனத்தைத்

    தந்ததே

    நீதான் என்பதை

    நினைத்துப் பார்ப்பாயா?

     

    இல்லை,

    எப்போதும்போல் காத்திருப்பாயா

    இன்னொரு கவிதைக்காக?

    இன்னமும் பெறாத முத்தத்திற்காக?

     

    Share
  • செந்நிறக் கோளை நெருங்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்

    Mangalyan -1

     

    ​[An update of India’s Mars Orbiter Mission]

     

     

    July 25, 2014​

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    1.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BEFMHOS2Em0

    2.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pZqPNNOvHAA

    3.  http://www.bbc.co.uk/news/world-24826253

    [Video of Launching India’s Mars Mission]

    4.  http://www.isro.org/mars/updates.aspx 

    [Mars Orbiter Status Update] 

    5.  http://isro.gov.in/pslv-c25/c25-status.aspx 

    [Pre-Launch Updates]

    [NASA’s Future Manned Missions to Mars]

     

    செந்நிறக் கோள் செல்லும் ஆசியப்

    பந்தயம் வலுக்கிறது !

    முந்திச் சென்றது ரஷ்யா, நாசா !

    பிந்திச் சென்றது ஈசா !

    இந்தியச் சுற்றுளவி செப்டம்பரில்

    உந்தி அடுத்தாண்டும்

    செந்நிறக் கோள் சுற்றும்

    சைனா, ஜப்பானுக்கு முன்பாக !

    சந்திரனில் முற்றுகை இட்டது முன்பு

    இந்திய மூவர்ணக் கொடி !

    யந்திரத் திறமை காட்டும் நுணுக்கப்

    பந்தயம் தான் !

    விந்தை புரிந்தது இந்தியா !

    இரண்டாம் சந்திராயன்

    நிலவில் இறக்கி வைக்கும்

    தளவுளவி  எதிர்பாராது

    தாமத மானது !

    நாசாவின் நவீனத் தளவுளவி இப்போது

    தடம் வைத்துச் சோதிக்கும்  !

    செவ்வாய் ஈர்ப்பு வலையில்

    சீராய் இறங்குவது

    பேரளவு சிரமமானது !  ஆயினும்

    வெற்றி கிட்டுவது

    எட்டும் சாதனை தான் !

    +++++++++++

     

    “முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்வதாய் எண்ணி அழுத்த மான உறுதியுடன் இருக்கிறோம் !”

    டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

     

    Mars Mission 2014

     

    செந்நிறக் கோளைச் சுற்ற நெருங்கும் இந்தியாவின் முதல் விண்ணுளவி

    2014 செப்டம்பர் 24 ஆம் தேதி இந்தியாவின் முதல் விண்சுற்றி [India’s Mars Orbiter] மங்கல்யான் செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று  பெருத்த ஆர்வமுடன் எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற நவம்பர்  5, 2013 இல் இந்திய ஏவுகணைத் தளம் ஶ்ரீஹரிக் கோட்டாவி லிருந்து ஏவப் பட்ட PSLV  [Polar Satellite Launch Vehicle XL] பூத ஏவுகணையில் மங்கல்யான் விண்சுற்றி இணைப்பாகி இப்போது செவ்வாய்க் கோள் நோக்கிச்  சென்று கொண்டிருக்கிறது.  இதுவரை 80% பயண தூரத்தை எளிதாகக் கடந்து நல்ல உடல்நலமுடன் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்கிறது.   2014 ஜூன் 11 ஆம் தேதி 22 நியூட்டன் சிறிய உந்திகள் [22 Newton Thrusters] தூண்டப் பட்டு  இரண்டாவது பயணப் பாதைத் திருத்தம் சிறப்பாகச் செய்யப் பட்டது.  இன்னும் ஒருமுறை ஆகஸ்டில் இதுபோல் சிறிய ராக்கெட் உந்திகள் இயங்கிப் பயணப் பாதையைச் சீராக்கிக் கொள்ளும்.  திட்டமிட்டபடி சவாலான செந்நிறக் கோள் முதல் விண்சுற்று இந்தியாவுக்கு மகத்தானதோர்  ஆசிய வரலாற்று வெற்றியாகப் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.   இதுவரை செவ்வாய்க் கோளை வெற்றிகரமாகச் சுற்றிய விண்ணுளவிகள் / தளவுளவிகள் அமெரிக்காவின் நாசா, ரஷ்யா, ஐரோப்பியரின் ஈசா நிறுவனத்தைச் சேர்ந்தவை.

    இந்த செவ்வாய்க் கோள் பயணத் திட்டத்துக்கு நிதியொதுக்கு : 450 கோடி ரூபாய்.

    India's Mars Mission -1

     

    PSLV -XL Launch Rocket

    Mars Orbiter path

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    “ஏன் இந்தியா விண்வெளித் தேடல் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது  என்று, கடந்த 50 ஆண்டுகளாக ஒரு கேள்வி கேட்கப் படுகிறது.  இதற்கு நாங்கள் கூறும் பதில் இன்று, நாளை, எதிர்காலத்தில் இதுவாக இருக்கும் : ‘மனிதனின் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்  என்பதே அதற்கொரு காரணம்.’  தேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் மிகச் சொற்ப நிதிச் செலவில் விண்வெளித் திட்டங்களை நிறைவேற்ற ஒரு பெரும் புரட்சி எழுந்துள்ளது.   சைனாவோடு இந்தியா போட்டி இடுகிறது என்பது சரியல்ல.  வேறு யாருடனும் போட்டியிடப் போவதில்லை.  நாங்கள் எங்களுக்குள்தான்  பந்தயம் வைத்துக் கொள்கிறோம் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறேன்.  நாங்கள் மேன்மைப்பட வேண்டும்;  செம்மைப்பட வேண்டும்;  புதிய வினைப்பாடுகளை உருவாக்க வேண்டும். “

    டாக்டர் கே. ராதாகிருஷ்னன்  இந்திய விண்வெளி ஆய்வக அதிபர் [Chairman ISRO]

    Mars Earth Comparision

    செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய சுற்றுளவி மங்கல்யான் 

    2013 நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை, செந்நிறக் கோள் செவ்வாயை நோக்கிச் செல்லும் சுற்றுளவி மங்கல்யானை விண்வெளியில் ஏவி, அண்டவெளிச் சாதனையில் இந்தியா ஓர் புதிய மைல் கல்லை நாட்டியுள்ளது.  இந்த சுற்றுளவி 2013 நவம்பர் மாத இறுதி வரைப் [நவம்பர் 30 ஆம் தேதி] பன்முறைப் பூமியைச் சுற்றி, புவியீர்ப்பு சுழல் வீச்சில் [Gravitational Flyby Swing] தன் உந்து வேகத்தை விரைவாக்கி, பரிதி மையச் செவ்வாய் நோக்குச் சுழல்வீதியில் [நீள்வட்டச் சுழல்வீதி]  [Heliocentric Mars Transfer Orbit] நேராகச் செல்லும்.  இந்த 780 மில்லியன் கி. மீ.  [470 மில்லியன் மைல்] தூர நெடும் பயணத்துக்கு சுமார் 300 நாட்கள் ஆகும்.   சுற்றுளவி 2014 செப்டம்பர் 24 இல் செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறக்கப் பட்டு செந்நிறக் கோளைச் சுற்ற ஆரம்பிக்கும்.  மங்கல்யான் பணி  6 முதல் 10 மாதங்கள் நீடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.  இந்தச் சுற்றுளவியைத் தூக்கிச் சென்ற இந்திய ராக்கெட் PSLV-XL .   அதுவும், சுற்றுளவியும் முழுக்க முழுக்க இந்தியச் சாதனங்களில் இந்தியரால் அமைக்கப் பட்டவை.  மங்கல்யான் 2014 செப்டம்பரில் செந்நிறக் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி, வெற்றி கரமாகச் சுற்ற ஆரம்பித்தால், அது ஓர் அசுர விண்வெளிச் சாதனையாகப் போற்றப் படும்.   அப்போது செவ்வாய்க் கோளைச் சுற்றிய நான்காவது தேசமாக இந்திய ஓர் உயர்ந்த இடத்தைப் பெறும்.  ஆசிய பேராற்றல் நாடுகளான ஜப்பான், சைனா ஆகிய இரண்டும் முயன்று, அவற்றின் சுற்றுளவிகள்  செந்நிறக் கோளைச் சுற்ற முடியாமல் தோல்வி அடைந்தன.   இதுவரை உலக நாடுகளில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.

    மங்கல்யான் ஏவுத் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு :  454 கோடி ரூபாய் [US $ 69 million].  சுற்றுளவியின் விலை மதிப்பு மட்டும் அத்தொகையில் :  ரூபாய் 154 கோடி [[US $. 23 million].  இந்தப் பணி வெற்றி அடைய நேரடியாக உழைத்தவர் சுமார் : 2000 பேர்கள்.  மறைமுகமாக விண்வெளிப் பணி புரிந்தவர் : 16,000 பேர்கள்.

    Mars Program

     

    ராக்கெட் ஏவுவதற்கு ஆளுநராக மேற்பார்வை செய்தவர்: பி. குஞ்சி கிருஷ்ணன்;  சுற்றுளவி அனுப்ப ஆளுமை செய்த மேற்பார்வையாளர் : எஸ்.கே. சிவக்குமார்;   மங்கல்யான் பயண ஆளுநர் : மயிலசாமி அண்ணாத்துரை;  திட்ட ஆளுநர் :  எஸ். அருணன்.

    மங்கல்யான் சுற்றுளவியின் இப்போதைய [நவம்பர் 8, 2013] தகவல் :  பூமியை இரண்டாம் முறை வெற்றி கரமாகச் சுற்றி, சுற்றுளவியின் நீள்தூரம் [Apogee]  28,814 கி.மீ. லிருந்து 40, 186 கி.மீ. நீண்டுள்ளது.

    http://www.isro.org/mars/updates.aspx    [Mars Orbiter Status Update] 

    மங்கல்யான் சுற்றுளவியின் குறிக்கோள் என்ன ?

    1.  விண்வெளிப் பயணங்களுக்குத் துக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப் படுத்துவது;  விண்ணுளவி அமைப்பு, இயக்க நெறிகளைச் செயலாக்க முற்படுவது;  அண்டவெளித் தேடல் பணிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது.  விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது.

    2.  செவ்வாய்க் கோள் சுற்றுளவியை அமைப்பது;  அது நெடுந்தூரப் பயணத்துக்குத் தயார் செய்வது;  அது செந்நிறக் கோளில் இறங்கச் செய்வது.

    3.   செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது.   அங்கே மீதேன் வாயு இருப்பதைச் சோதிப்பது.

    4.  செந்நிறக் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ்வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது.

     

    Mangalyaan Orbit to Mars

     

    “இந்த ஆண்டு முடிவில் [2013 நவம்பர் 5] பரபரப்பூட்டும் அடுத்த விண்வெளிச் சவால் சாதனையாக, முதன் முறை இந்தியா செவ்வாய்க் கோளைச் சுற்றிவரத் துணிந்து செல்லப் போகிறது.   அதற்கு முன்பாக ஜூன் 2013 இல் இந்தியா தன் முதல் பயண வழிகாட்டி துணைக்கோள் [Navigational Satellite] ஒன்றை அனுப்பப் போகிறது.  பூமியைச் சுற்ற துணைக்கோள் ஒன்றை விண்வெளியில் பயணம் செய்ய இட்டுவர  சுமார் 2000 மேற்பட்ட நபர் கூட்டுழைக்கத் தேவைப்படுகிறார்.”

    டாக்டர் கே. ராதாகிருஷ்ணன்,  இந்திய விண்வெளி ஆய்வக அதிபர் [Chairman ISRO]

    “இந்தியா ஏழைகள் வாழும் ஒரு தேசம். அதே சமயத்தில் அது பொருளாதாரத் துறைகளில் முன்னேறி வரும் ஆசிய நாடு.  நடுத்தர ஊதியம் பெற்றுவரும் மக்கள் தேசம்.  அது G20 தேசங்களில் ஒன்று.  எங்கள் தேசம் பலர் கடுமையாய் உழைத்து வாழும் ஏழ்மைப் பூமியே.  ஆனால் பூகோளத்தில் ஆற்றல் பெற்று வரும் தேசம். நாங்கள் இரட்டைக் குறிக்கோள் உள்ள ஒற்றைத் தேசத்தவரே.  இரண்டையும் நாங்கள்  பூர்த்தி செய்ய வேண்டும்.  பூகோள அறிவைத் தேடி அளிப்பதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும்.  அதே சமயம் நாங்கள் மக்கள்  ஏழ்மையையும் நீக்க வேண்டும்.”

    நிஷா அகர்வால் [தலமை அதிகாரி, OXFAM in India]  

     

    jay

     

    “நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

    எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

    “சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

    மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர்  [நவம்பர் 13, 2008]

    “இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டுகிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

    ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

     

    Mars Mission Chief

     

    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப் பட்டு சந்திரனைச் சுற்றுவீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

    எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

    இந்தியாவின்  அடுத்த பரப்பரப்பான விண்வெளி ஆய்வுத் திட்டம் செவ்வாய்க் கோளை வட்டமிட்டு அறிவது.

    2013 ஆண்டு முடிவில் திட்டமிடப் பட்ட செவ்வாய்க் கோள் திட்டம் தாமதம் அடையாது என்று இந்திய விண்வெளி ஆய்வகத்தின் அதிபர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.  செவ்வாய்க் கோள் சுற்றுளவி [Mars Orbiter] ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிக் கோட்டாவில்  [PSLC – Polar Satellite Launch Vehicle, Satish Dhawan Space Centre] PSLC ராக்கெட்டில் ஏவப்பட்டும்.   2014 இல் விண்ணுளவும் சுற்றுளவி பயணப் பாதையில் ஒரு வால்மீன் போக்கு குறுக்கிட்டாலும், அதனால் பாதகம் ஏற்படாது என்று அவர் உறுதியாக நம்புகிறார்.  அந்த வால்மீன் 2013 A1 [Siding Spring] என்று குறிப்பிடப் படுகிறது.  வால்மீன் விண்ணுளவியோடு மோதும் வாய்ப்பு நிகழ்ச்சி 1 in 120,000 என்று கணக்கிடப் பட்டுள்ளது.  செவ்வாய்க் கோளிலிருந்து சுமார் 50,000 கி.மீ. [30,000 மைல்] தூரத்தில் வால்மீன் கடந்து செல்கிறது.   2013 நாணய மதிப்பீட்டில் 450 கோடி ரூபாய் நிதிச் செலவில் “மங்கல்யான்” [Mangalyaan] செந்நிறக் கோள் திட்டம் 2013 அக்டோபர்-நவம்பர்  மாத நடுவே துவங்கும் என்று தெரிகிறது.  சந்திரயான் திட்டம் நிலவைச் சார்ந்தது போல், மங்கல்யான் திட்டம் செவ்வாய்க் கோளைக் குறிவைப்பது.   திட்டத்தின் முக்கிய குறிக்கோள் நிலவுக்கு அப்பால் செய்யும் மனிதரற்ற துணைக்கோள் பயணப் பயிற்சி, மற்றும் செவ்வாய்த் தளத்தில் உயிரின மலர்ச்சி நேர்ந்ததா என்று அறிவதும், செவ்வாய்க் கோளில் ஏன் சூழ் மண்டலம் இல்லாது போனது என்றும் அறிவதே.  மேலும் செவ்வாய்க் கோள் எவ்விதம் நீர்வளம், கரியமில வாயுவை இழந்தது என்றும் அறிந்து கொள்வது முக்கிய ஆய்வுப் பணியாகும்.

     

    Fig 1G Indian Rockets

    மங்கல்யான் சுற்றுளவியின் எடை 30 பவுண்டு [14.5 கி.கிராம்].  அது மீதேன் உளவும் ஒரு கருவியைக் கொண்டு செல்லும்.  செவ்வாய்க் கோளில் மீதேன் உள்ளதா என்று அறியும்.  மீதேன் இருப்பு செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் உயிரின இம்மிகள் இருந்திருப்பதை உறுதிப் படுத்தும்.  2013 அக்டோபரில் ஏவப்படும் விண்ணுளவி, பூமியை விட்டு 2013 நவம்பர் 27 இல் நீங்கி 300 நாட்கள் [10 மாதம்] பயணம் செய்து செவ்வாய்க் கோளை நீள்வட்டத்தில் 300 மைல் நெருங்கிய தூரத்தில் [சிற்றாரம் : 500 கி.மீடர், நீளாரம் : 80,000 கி.மீ] சுற்ற ஆரம்பிக்கும்.     துணைக் கோளில் ஐந்து விதக் கருவிகள் அமைக்கப் பட்டு வேலை செய்யும். [ஒரு நிறக் காமிரா,  ஓர் உட்சிவப்பு வெப்பப் படமெடுப்பு ஏற்பாடு, [One Thermal Infrared Imaging System],  ஒரு லைமன் – ஆல்ஃபா ஒளிமானி,  [One Lyman-alpha Photometer], ஒரு வெளிக்கோள நடுத்துவக் கலவை அளவி  [One Exospheric Neutral Composition Analyser], ஒரு மீதேன் நுகர் உளவி  [One Methane Sensor].

    கடந்த சில ஆண்டுகளாக இந்தியா 35 வெளிநாட்டு துணைக் கோள்களை விண்வெளியில் ஏவி விட்டு  17.17 மில்லியன் டாலரும், 32.28 மில்லியன் ஈரோவும் [மொத்தம் : 58 மில்லியன் டாலர்] சம்பாத்தித்துள்ளது என்று பிரதம மந்திரியின் உள் நாட்டு அமைச்சர் வி. நாராயணசாமி சமீபத்தில்  அறிவித்துள்ளார்.

     

    Radar Tracking

    Mission Control ISRO

    செந்நிறக் கோளுக்குச் செல்வதில் உலக நாடுகள் பந்தயப் போட்டி

    2009 செப்டம்பரில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய இந்தியா 2013 ஆண்டில்  சிரமமான செந்நிறக் கோளைச் சுற்றி வரப் பேராசைத் திட்ட மிட்டுள்ளது.   20/21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரோப்பிய நாடுகள், ஜப்பான், சைனா ஆகிய நாடுகள் செவ்வாய்க் கோளில் இறங்கி ஆராய்ந்தும்,இனிமேல்  ஆராய விரும்பியும் வருவது போல் இப்போது இந்தியாவும் இந்தப் பந்தயத்தில் இறங்கியுள்ளது.   அடுத்த ஆண்டு (2013) மனிதரற்ற ஓர் தனி விண்ணுளவியை 320 டன் எடை கொண்ட,  துருவத் துணைக்கோள் அனுப்பும் ராக்கெட்டில் (Indian Polar Satellite Launch Vehicle) (PSLV Rocket)  ஏவப்படும் திட்டம் தயாராகி அரசாங்கத்தின் அனுமதிக்கு இந்திய விண்வெளி ஆய்வகம் காத்திருக்கிறது.  பெயர் குறிப்பிட விரும்பாத வேறோர் அரசாங்க அதிகாரி செவ்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற சுமார்  90 மில்லியன் டாலர் (5 பில்லியன் ரூ) நிதித் தொகை மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறினார்.   சென்ற ஆண்டில் இந்தத் திட்டத்துக்கு 1.25 பில்லிய ரூ ஒதுக்கி வைத்தாகவும் தெரிகிறது.   ஏவப்படும் துணைக்கோள் பூமியை 500 கி.மீ. குற்றாரம் [300  mile Perigee], 80,000 கி.மீ. நீளாரம் [48000 mile Apogee] உள்ள நீள் வட்டத்தில் சுற்றத் துவங்கும்.   செவ்வாய்க் கோளை நெருங்கியதும் 60 மைல் உயரத்தில் முடிவாக விண்ணுளவி சுற்றி ஆய்வு செய்து வரும் என்று தெரிகிறது. இந்திய விண்வெளி ஆய்வுத்துறை டாகர் விக்ரம் சாராபாய் தலைமையில் 1962 ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது.   அந்தப் பொறி நிபுணர்கள் வெற்றிகரமாகச் செய்து புகழ் பெற்றது 2009 இல் நிலவைச் சுற்றிவர அனுப்பிய சந்திரயான் -1 விண்ணுளவி.  தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் தாமத மானது.

    Mars Orbiter

    Mars Orbiter Launch

    சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகி இப்போது  2014 ஆண்டுக்கு அப்பால்  தள்ளி வைக்கப் பட்டது.  2010 டிசம்பரில் இந்தியாவின் துணைக்கோள் ஏவும் ஏவுகணை ஒன்று பழுதாகி வங்காள விரிகுடாவில் வெடித்து வீழ்ந்தது.  இவை எல்லாம் அடுத்து 2013 இல் அனுப்பப் போகும் பேராசைச் செவ்வாய்க் கோள் குறிப்பணிக்கு ஆதரவு அளிப்பதாய்த் தெரியவில்லை.

    செவ்வாய்க் கோளுக்கு விண்ணுளவி அனுப்புவதில் ஏற்பட்ட தோல்விகள்

    இதுவரை பெற்ற அனுபவத்தில் பூமியிலிருந்து சமிக்கை அனுப்பி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் திசைதிருப்பி விண்ணுளவியை  இறக்குவது, சிரமான இயக்கம்.  பலமுறை இடம் தடுமாறி, தருணம் கடந்து, வேகக் கட்டுப்பாடு முறிந்து விண்ணுளவிகள் பாதை தவறி நழுவிச் செல்வது பன்முறை நேர்ந்துள்ளது.  செவ்வாய்க் கோள் பயண வெற்றி 50/50 எதிர்பார்ப்பு வாய்ப்பு வழிகளே.   இம்முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா அடைந்த தோல்விகள் 1960 முதல் 2010 வரை (50 ஆண்டுகள்) மொத்தம் : 8.  இந்தியா இவற்றை எல்லாம் தெரிந்து தான் செந்நிறக்கோள் பயண முயற்சியில் துணிச்சலுடன் இறங்கி உள்ளது.

    பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

    GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் சுழல்வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.    இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

    2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.

     

    சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

    தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனை களில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும். சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.

    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.   ஆணைச் சிமிழ்  தளவுளவி இறக்கியையும்,  வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.   இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இன்னும் முழுமையாய் கிடைக்க வில்லை.    அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

    Fig 1E Chandrayaan-1 Mission

     

    சந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் !

    2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியனைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக் கோள்களைப் “புவியிணைப்புச் சுற்றுவீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

     

    Red Planet Mars

    இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

    இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) அடுத்த இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி ஏவிச் செல்வது தாமதமாகி வருகிறது.   அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது.  முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.  16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

     

    Fig 5 Dr Abdul Kalam

    2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது.  அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்).  மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும்.  இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது.  விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும். அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

     

    India’s Mars Orbiter Mission

    Mangalyaan 

    Mission type Mars  Orbiter
    Operator Indian Space Research Organization
    Website isro.org/mars/home.aspx
    Mission duration 300 days

    Spacecraft  Properties

    Bus I-1K
    Manufacturer ISAC
    Launch mass 1,350 kg (2,980 lb)
    Dry mass 500 kg (1,100 lb)
    Payload mass 15 kg (33 lb)
    Dimensions 1.5 metres (4 ft 11 in) cube
    Power 840 watts

    Start of mission

    Launch date 5 November 2013, 09:08 (2013-11-05UTC09:08Z) UTC
    Rocket PSLV-XL C25
    Launch site Satish Dhawan FLP
    Contractor ISRO

    Orbital parameters

    Reference system Areocentric
    Periareon 377 km (234 mi)
    Apoareon 80,000 km (50,000 mi)
    Inclination 17.864 degrees
    Epoch Planned

    Mars orbiter

    Orbital insertion 24 September 2014
    (Planned)

     

    The Mars Orbiter Mission (MOM), informally called Mangalyaan, (Mars-craft) is a Mars orbiter that was successfully launched into Earth orbit on 5 November 2013 by the Indian Space Research Organisation

    ++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits : The Hindu, ISRO, NASA, ESA & other Websites

    1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]

    1A Stars & Planets By : Duncan John [2006]

    1B. Astronomy Facts on File Dictionary (1986)

    2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad

    3. Indian Space Program By: Subhajit Ghosh

    4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]

    5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]

    6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]

    7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]

    9. Indian Space Program By: Wikipedia

    10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]

    11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [

    [Message clipped]  View entire message

    A special documentary film on Mars Orbiter Mission

    Preview YouTube video Mars Orbiter Mission- 25th Mission of PSLV-C25

    Mars Orbiter Mission- 25th Mission of PSLV-C25
    Share
  • கைகள் குவிக்கும்

    கே. ரவி

     

    கைகள் குவிக்கும்

    பாடல் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

    DSC02611 sRI lANKAN ....SHORT SWORD ON GOD
    கைகள் குவிக்கும் போதெல்லாம் வடிவேல் – விழிக்
    கமலம் திறக்கும் போதெல்லாம் கதிர்வேல்
    நினைவுத் திரை விலகிப் புலனடங்கி
    ஒரு முனைப்பில் மனம் திளைக்கும் தவம் கூர்வேல்

    முளைத்த நிலவுப் புன்முறுவல் – ஆறு
    முகங்கள் ஞானத் தீப்பொறிகள்
    பனித்த சடையன் பக்கம் அமர்ந்து
    பாடம் சொன்ன செவ்விதழ்கள் – கரை
    மோதித் திரும்பும் கடலலைகள் – தினம்
    ஓதித் துவளும் ப்ரணவத்தில் –
    ஆடிக் களிக்கும் பாதங்கள் – நுரை
    யாகித் தெறிக்கும் சதங்கைகள்

    கந்தா கடம்பா கதிர்வேலா – எனக்
    கதறி அழுதால் வழிபிறக்கும்
    கருணை மனமே மயில்வாகனமாய்க்
    கண்டால் ஞான விழிதிறக்கும்
    குருவாய் நினைவில் வருவாய் முருகா
    எனவே இதயம் குரல்கொடுக்கும்
    குழந்தை வடிவம் குலுங்கிச் சிரிக்கும்
    வேலாயுதமே நிழல்கொடுக்கும் – சக்தி
    வேலாயுதமே நிழல்கொடுக்கும்.

    கே.ரவி

    Share
  • இயற்கை அன்னை!

    சு. ரவி

     

     

    வானமென்னும் ஆற்றினிலே ஓடிவரும் ஓடம்
    தேனமுதைத் தேவரெல்லாம் பூட்டிவைக்கும் மாடம்
    அலைகள் எறியுமொரு
    கடலை அணையவரும்
    நிலவு இதனொளியில்
    உலவி உலவி மனச்
    சாந்திபெறச் சற்றினிது நான் நினைத்தபோது
    ஏந்திவந்தாள் எழிலதனை இயற்கைஎனும் மாது!

    AD8DF21D-65E8-47E1-8A06-25685358C1C1

    தென்றலிங்கு வந்து என்னைத் தொட்டுத் தொட்டுச் செல்லும்
    மென்மைசுகம் சேர்ந்தகதை மெல்ல வந்து சொல்லும்
    சலல சலலவென
    சலன உலகமிதில்
    அலையும் இதனொலியில்
    எனது மன மகிழ
    நானுலவி நல்லதமிழ் பாடிவரும் போது
    தான்வருவாள் தளிர் நடையில் இயற்கைஎனும் மாது!

    36DA191F-B8BF-423A-84FF-52AE27F61220

    நீலப்பட்டில் ஆடைகட்டி நீண்டிருக்கும் வானம்
    கோலப் போட்டு வைத்தாங்கே செய்திருக்கும் மோனம்
    கரிய பெரிய முகில்
    உரச உரச இடி
    சரிய வருமழையில்
    நனைய நனைய ஒரு
    மின்னல்வெட்டில் உள்ளம் தந்து நான் மறந்தேன் என்னை- அங்கே
    புன்னகைத்துப் புதுச் சிரிப்பு பூத்தாள் எங்கள் அன்னை!

    DDB517DC-692B-46BC-8FB4-F14E7A67399D (1)

    காட்டாற்று வெள்ளமெங்கும் கரை புரண்டு ஓடும்
    பாட்டாக என்மனத்தில் பரவசங்கள் சூழும்
    உடலில் உறையுமுயிர்
    அதனில் இயையும் இறை
    அடியை மனதிலெணி
    அருவி உருளுமொரு
    தன்னந்தனி வழியாக நான் நடந்தேன் என்னை
    இன்னருளால் காத்திடுவாள் இயற்கைஎனும் அன்னை!

    Share
  • இங்கே எப்படி நீ?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக – (4)

     இங்கே எப்படி நீ

                                                                                                                      ( கேட்டு மகிழ)

     

     

     

    இடிந்து கிடக்கிறது கோயில்download

    இறைவன் எழுந்து இறங்கிச் சென்று எத்தனையோ நாட்களாயின

     

    கடைசித் தருணத்து நிலைகுத்திய கண்கள் போலே

    காரை பெயர்ந்து, ஒரு

    கைதட்டலில் உதிர்வதற்காய்க் காத்திருக்கும் செங்கல்கள்

    அவற்றின் இடுக்கிலும் எப்படியோ கண்விழித்து

    அசையாமல் நிற்கிறது ஆலஞ்செடி

    பொருத்தமற்ற இடத்தில்

    பூவும் அருவருப்பு

     

    இது மெளனமல்ல

    இது வானத்தின் அடிவயிற்றையும் கலக்கும்

    வாழ்வில்லாத நிசப்தம்

     

    அது சந்நிதியல்ல

    அது கடவுள் காலி செய்துவிட்ட,

    ஒரு

    மாறுதலையாவது தரும்

    மரணமும் ஸ்தம்பித்துவிட்ட அவலம்

    ஆம்

    சிதைவுகளில்தான் அவலத்தின் குரூர வடிவங்கள்

    சித்திரிக்கப்படுகின்றன..

     

    அழுகை நின்றாலும் விசும்பல் தொடர்வதுபோல்

    வெளவால்களின்

    நாற்றங்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன

    நாராசத்தின் மாறாத பதிவுபோல்.

    சுவர்களெல்லாம் புற்றாகவும் புதர்களாகவும்

    சுருதிமாறிப் பேதலிக்கின்றன

     

    இங்கே..இங்கே!!

    எப்படி நீ? எதற்கு?

    சிதையில் விழுந்த மொட்டின் முகையவிழ்க்கச்

    சித்திர நிலவு சிங்காரித்துக்கொண்டு வந்ததுபோல்

    என்னத்தைத் துளிர்விக்க இங்கே போய்

    எழுந்தருளியிருக்கிறாய்?.

     

    சொச்சமாய் இன்னும்

    ஒரு முற்றுப்புள்ளியில் ரேகைபோல்

    தொக்கிக் கிடக்கலாம் கோயில் வாசனை..

     

    உறைந்தும் காய்ந்தும் கரைந்தும் போனாலும்

    உயிரே விம்மி உதிர்ந்த கண்ணீரின்

    ஒற்றைத் துளியின் உணர்வு

    கதைசொல்லக் காத்திருக்கலாம்…

     

    சாம்பலிலிருந்து தலைசிலுப்பிக்கொண்டு எழுவதற்காய்

    ஒரேயொரு மழைத்துளியின் முத்தத்திற்காக

    ஊசிமுனை விதையொன்று தவத்தில் இருக்கலாம்…

     

    என்றெல்லாமா நம்பி வந்தாய்!

    இத்தனை வெகுளித்தனம் தேவதைக்குப் பொருந்துமா?

     

    இல்லை, ஒருவேளை

    இன்னும் பதறாமல் இருக்கும் பலிபீடத்தில்

    அங்கும் இங்குமாய் மல்லாந்திருக்கும்

    காதல் என்னும் பேதைமையைப்

    பார்வையால் திரட்டிப் படையலிட வந்தாயா?

    யாருக்கு?!

     

    முடிவில்லாத ஒரு முறிவு

    முயற்சியின்றிக் கிடக்கிறது

    எதனாலோ தூண்டப்பட்டு, அல்லது

    எதையோ தூண்டுவதற்கு

    முதலொன்று வந்து

    முன்னே நிற்கிறது

     

    வெற்றிகாண முடியாத வெறுமையும்

    தோல்வியறியாத முழுமையும்

    எதிரெதிரே நிற்கின்றன

    என்ன நடக்கும் என்பது

    எழுந்து இறங்கிச் சென்ற இறைவன்

    ஏறிவந்தாலாவது தெரியுமா?

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    திவ்யப் பிரபந்தம் மாதிரி இது கேசவாழ்வாரின் திவ்ய BRUSH பந்தம்….அட்டகாசம்….கிரேசி மோகன் ….கேசவ் தொடரட்டும் உம் தூரிகைத் தவம்…ஒருநாள் கண்ணன் உம்வீட்டு காலிங் -பெல் அடிக்கப் போவது நிச்சயம் ….

    மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமிகள்
    —————————————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

    “விண்ணார்வம் வேண்டேன், வியனுலகும் வேண்டேனே,
    கண்ணாவுன் ஆர்வமதைக் கொண்டேனே, -மன்னார்
    குடிராஜ கோபாலா கேசவ் அகத்தில்
    குடிபோன கோகுலனே காப்பு”….கிரேசி மோகன்

    Share
  • கர்ணனுக்காக ஒரு கேள்வி !

     

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

     karna

    பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு

    துரோணர்

     

    ஏகலைவனிடம்

    கட்டைவிரல்வாங்கிய

    காரியவாதி

     

    நிழலைவணங்கி

    நேர்மையாய் வளர்ந்த

    ஏகலைவனுக்குத்

    துரோகம்செய்த

    துரோகி

     

    வேடம்போடத்தெரியாத

    வேடனுக்கு

    துரோணர் குரு துரோகி

    துரோகி குரு

     

    அவரிடம் கற்ற

    அரசகுமாரர்களில்

    தனித்தும்

    தினித்துவத்தோடும்

    விளங்கினான் அர்ச்சுனன்

     

    கற்றதில் கவனமும்karna-life

    குரு பக்தியும்

    நிறைந்தவன் அர்ச்சுனன்

     

    குருவிடம் கற்ற

    வித்தைகளை அரங்கேற்றும்

    நிகழ்வு நடந்தது

    மன்னர்கள்

    மன்னர்கள் அறிஞர்கள் ஆசிரியர்கள் சான்றோர்கள்

    படைக்கல வல்லவர்கள் வல்லுநர்கள் மற்றும்பலர்

    முன்னிலையில்

    அரங்கேற்றினர் வித்தைகளை

     

    அனைவரும் வியக்க

    அர்ச்சுனன்

    வித்தைகள் காட்டினான்

    வில்லால்

     

    துரோகத்தின் வடிவம்

    துரியோதனன்

    அர்ச்சுனனின் ஆற்றலைக்கண்டு துடித்தான்

    பொறாமையால்

    பொங்கிவழிந்தான்

     

    அர்ச்சுனனைக் கண்டு

    திடீர்மின்னலாய்

    கர்ஜித்தான் கர்ணன்

     

    வில்லெடுத்து என்னோடு

    வித்தைகாட்டென்றான்

     

    சபையில் சலசலப்பு

    துரியோதனனுக்கு

    உள்ளத்தினுள்ளே

    கிளுகிளுப்பு

     

    கரடிபோல் கர்ணன்

    வந்தாய் எண்ணி

    முகவரி கேட்டார்கள்

     

     

    மக்கள் முன்னிலையில்

    திறன்காட்டவிடாமல்

    தகுதிகேட்டும்

    குலம்கேட்டும்

    குற்றவாளியாக்கினார்கள்

     

    சூரியனுக்குப் பிறந்தவனை

    சூதகனுக்குப்பிறந்தவனா?

    ஏளனம் செய்தார்கள்

     

    தேரோட்டி மகனா?p13

    எங்கள்முன் நிற்பது?

    எங்களைப் போருக்கு அழைப்பது?

    துள்ளிக்குதித்தார்கள்

    எள்ளிநகைத்தார்கள்

    கர்ணனை

    மனம்குமையவைத்தார்கள்

     

    குலம்கேட்ட கொடுமையால்

    கர்ணன்

    முகவரி சொல்லமுடியாமல்

    முகம்வாடிப்போனான்

     

    காலம்கருதி

    ஞானமிகுக் கேள்விக்கணைகளைக்

    கேட்டான் துரியோதனன்

     

    பிறப்பில் இல்லை பெருமை

    செய்யும் செயலில்தான்

    உள்ளது பெருமை என்றான்

     

    அங்கதேசத்து அரசகுமாரனாக்கி

    அறிவித்தான்

    அரவணைத்தான் துரியோதனன்

     

     

    பகலவன் மறைந்ததால்

    அரங்கேற்றம் முடிந்தது

     

    எனினும்

    கர்ணனுக்காக

    தாய்க்குப்பிறக்காத குருவும்

    தந்தைக்குப்பிறக்காத

    தந்தைமுனிலையில்

    பாண்டுக்குப்பிறக்காத

    பாண்டவர்களுமா?

    கர்ணனைக் குலம்கேட்பது? என

    ஒருகேள்வி கேட்டிருந்தால்

    என்னபதில் கிடைத்திருக்கும்?

     

    (தமிழ்ப்பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன்,பேராசிரியர் தி.வேங்கடகிருஷ்ணயங்கார்,

    இலக்கியத்தென்றல் வ.ஜோதி எழுதிய ம்காபாரத உரைபடித்துக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட சிந்தனையில் விளைந்த கவிதை. 20.05.2014)

    Share
  • கால காலேசுவரர் சன்னதி

    பவள சங்கரி

    1

    நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல்
    பாயிற் கிடவாமல் பாவியன் காயத்தை
    ஓற்நொடிக்குள் நீக்கியெனை என் போரூரா
    நின் சீறடிக்கீழ் வைப்பாய் தெரிந்தே

    _ மத் சிதம்பர சுவாமிகள்

    2

    பூமாதேவி செய்த தவம்

     

     

    4

    3

    avRyBTlPmXDDsMri6FN1YlZC7b3aLOFuWSB8Ecs4uZE,af3F0NtqlJGUJMRoxBVR5Fi3re3dp0db8wrAoyrfJS4

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளதுதான், கால காலேசுவரர் சன்னதி. இன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் அற நிலையத்துறையின் பொறுப்பில் ரூ. 45 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்படுகிறது. ஆளுயர நடராசர் திருவுருவம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர் அல்லாத, தேசிகர் வகுப்பைச் சேர்ந்த ஒரு 90 வயது மூதாட்டியே இக்கோவிலுக்குத் தன்னால் இயன்ற வகையில், அவ்வப்போது வரும் பக்தர்களின் சிறு காணிக்கைகள் மூலம் பூசைகள் செய்து வந்திருக்கிறார். மழையும் பொய்த்துப்போனதால் ஊரில் விவசாயமும் நலிந்து போய், மக்கள் தங்கள் பாடே திண்டாட்டம் என்கிற நிலையில், சுவாமியை கவனிக்க முடியாமல் விட்டிருக்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரிலிருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் உள்ள, அனந்தமங்கலம் ஆஞ்சேநேயர் சுவாமி கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது கால காலேஸ்வரர் சன்னதி.

    என்றும் பதினாறு என்று வரம் பெற்ற மார்கண்டேயனைக் காக்கும் பொருட்டு, சிவபெருமான் எமனை வதம் செய்து காலசம்கார மூர்த்தியாக விளங்கும் திருத்தலமே, திருக்கடவூர். அப்படி வதம் செய்தபோது எமனின் தலை தெரித்து விழுந்த இடம்தான் எருக்கட்டாஞ்சேரி என்கிறார்கள். ஐயனின் திருவருளால் அந்தத் தலை மீண்டும் உயிர் பெற்று எழுந்த இத்தலம் ‘எழுப்பி விட்டான் சேரி’ எனப் பெயர் பெற்று பின்னர் மருவி ‘எருக்கட்டாஞ்சேரி’ என ஆகியுள்ளது.

    சிவபெருமானார் எமனை வதம் செய்ததால், மக்களுக்கு எமபயம் முற்றிலும் நீங்கிவிட்டது. அதனால் இறைபக்தி குறைந்ததோடு அதர்மங்கள் பெருகியுள்ளன. நாட்டில் அக்கிரமங்களும் அதிகரித்துள்ளன. பூமித்தாய் பாரம் தாங்காமல் மனம் நொந்து, சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற வரத்தின் மூலமாக மீண்டும் எமனுக்கு உயிர் பெற்றுத் தருகிறாள். சினம் தணிந்த சிவபெருமான் எமனுடைய தலையை இத்தலத்தில் பொருந்தச் செய்து உயிர் கொடுத்தார்.எமனுக்கே உயிர் கொடுத்த இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு, மரணபயம் நீங்கி, நோய், நொடியில்லாமல் வாழ்வார்கள் என்பது ஐதீகம். திருக்கடவூர் சென்று வழிபடும் பக்தர்கள் எருக்கட்டாஞ்சேரி கால காலேசுவரரையும் அன்னை கருத்தடக்கன்னியையும் வழிபட்டு வருவது வழக்கம். இதனால் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் தீர்க்காயுளுடனும் வாழலாம் என்ற நம்பிக்கையும் மக்களிடம் பரவலாக இருக்கிறது. விரைவில் இக்கோவிலின் திருப்பணி நிறைவேறி ஐயனின் அருளொலி பூரணமாக பிரகாசிக்க நம்மால் ஆனதையும் செய்யலாமே..

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 16

    –சு.கோதண்டராமன்

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 15

    அக்னி – பல வகை

    Agni
    வேதத்தில் அக்னி என்பது பூமியில் நாம் மூட்டும் தீயை மட்டும் குறிப்பதல்ல. எதிர்க்க முடியாத வலிமை, இருளைத் துரத்தும் ஒளி, பகைவரை வாட்டும் வெப்பம், மனிதருக்கு உதவும் குணம், மனிதரைத் தூண்டும் திறன் உடைய எல்லாமே அக்னி தான்.

    விண்ணில் உள்ள சூரியனும் அந்தரிக்ஷத்தில் தோன்றும் மின்னலும் கூட அக்னியாகத் தான் குறிப்பிடப்படுகின்றன. விண்ணில் சூரியனாகவும், அந்தரிக்ஷத்தில் மின்னலாகவும் பூமியில் தீயாகவும் இருப்பதால் த்ரிஷதஸ்த (மூவுலகிலும் இருப்பவர்) எனப்படுகிறார்.

    மூன்று அக்னிகள் இருந்தன. அவற்றில் மனிதர் மகிழ்ச்சிக்காக ஒன்று மட்டும் பூமியில் வைக்கப்பட்டது. மற்ற இரண்டும் விண்ணில் வைக்கப்பட்டன[1] என்று வேதம் கூறுகிறது. அவை முறையே தீ, சூரியன், மின்னல் எனப் பொருள் கொள்கிறோம்.

    கர்ப்பத்தில் இருந்தபோது தனூனபாத், பிறந்த பின் நராசம்ஸன், தாயின் மடியில் இருக்கும்போது மாதரிச்வான்  என்று அக்னியின் பெயர்கள் பலவாகும்.[2]

    அக்னி ஒன்று தான். அது பல வகையாக மூட்டப்படுகிறது.[3] அக்னியின் பிறப்பிடங்களைப் பொறுத்து பத்து வகை உண்டு,[4] என்று வேதம் சொல்கிறது. அவற்றில்

    1. விண்ணில் பிறந்த சூரியன்,

    2. அந்தரிக்ஷத்தில் தோன்றும் மின்னல் இவற்றைப் பார்த்தோம்.

    3. கடலுக்குள் மறைந்திருந்து அவ்வப்போது வெளிப்படும் வடவாக்னி என்று சொல்லப்படும் எரிமலைகளும் நீரில் தோன்றிய அக்னியாகக் கொள்ளப்படுகிறது. நீருக்குள் வாழும் அக்னி நீரால் மட்டுமே சூழப்பட்டிருப்பதால் ஆடை இல்லாதவராகவும், நீரையே ஆடையாக அணிந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.[5] தேவர்கள் உன்னை நீருக்குள் கண்டுபிடித்தார்கள், குகையினுள் சிங்கம் போல என்கிறது வேதம்.[6] அக்னியை நீருக்கு நண்பன் என்று போற்றுகின்றனர். சமுத்திரத்தை ஏழு ஆறுகளின் சங்கமம் என்று வர்ணித்த அவர்கள் அந்த ஏழு ஆறுகளையும் அக்னியை வளர்த்த ஏழு சகோதரிகளாகப் போற்றுகிறார்கள். சில இடங்களில், “ஒன்றாக வாழ்கின்ற ஏழு ஆறுகள் அவனை கருத் தாங்கின” என்றும் கூறுகிறார்கள். அபாம் நபாத் (நீரின் மைந்தன்) என்ற பெயரும் அவருக்கு அளிக்கப்படுகிறது. நபாத் என்ற சொல் பேரன் என்றும் பொருள் படும். நீரினால் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களால் அக்னி வளர்கிறது.[7] எனவே அவர் நீரின் பேரன்.

    4. பாறையில் தோன்றும் தீ கற்களை ஒன்றுடன் ஒன்று உரசி தீ மூட்டப்படுகிறது. எனவே அக்னி பாறையின் மகனாகக் கூறப்படுகிறார்.[8]

    5. மரத்தில் தோன்றும் தீ மரங்கள் உரசுவதாலும் அக்னி பிறக்கிறது. மரமும் அக்னியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அரணிக்கட்டை முதலியவற்றில் மறைந்திருக்கும் தீயைப் பற்றி, “அசையாப் பொருட்களிலும் அவன் இருக்கிறான்”. “கர்ப்பிணியின் கர்ப்பம் போல இரு குச்சிகளில் அவன் அடங்கியுள்ளான்”[9] என மொழிகின்றனர். “பல வருடங்கள் கர்ப்பத்தில் இருந்தான். தாய் அவனை தந்தைக்குத் தெரியாமல் அணைத்து வைத்துக் கொள்கிறாள்” என்றும், நீர், கல், காட்டு மரங்கள், செடிகள் ஆகியவற்றிலிருந்து அவன் பிறப்பிக்கப்பட்டான் என்றும் போற்றினர்.[10]

    6. காட்டுத் தீ இவர் காடுகளை அழிக்கும்போது தேவர்கள் இவரைப் போற்றுகிறார்கள். காட்டில் ஓரிடத்தில் அக்னி பற்றினால் காடு முழுவதும் அழிகிறது. “ஒரு வருடத்தில் அங்கு புதிதாகத் தாவரங்கள் வளர்கின்றன.” “பழையன கழிந்து புதியன பிறக்கக் காரணமாயிருப்பது அக்னி.”[11]  காட்டில் தீப் பிடித்தால் அதன் வலிமையின் முன்னே எவரும் நிற்க முடியாது. எனவே அவர் காட்டின் தலைவன் எனவும் காட்டின் புதல்வன் எனவும் வர்ணிக்கப்படுகிறார். காட்டுத் தீயை ரிஷி வர்ணிக்கிறார்.

    “காற்றால் தூண்டப்பட்டுக் காய்ந்த மரங்களில் பரவும் அக்னி வாளுக்குப் பதிலாக தன் நாக்குகளையே பயன்படுத்திப் பேரிரைச்சலோடு காளை போல் சீறிக் கொண்டு விரைகிறார். அவர் பாதை கறுப்பாக ஆகிவிடுகிறது.”[12]

    “தேரில் பூட்டப்பட்ட உன் சிவப்புக் குதிரைகள் காற்றைப் போல் விரைந்து செல்வன, காட்டு மரங்களைப் புகையால் மூடுகிறது.”[13]

    “காற்றினால் தூண்டப்பட்டுப் பல திசைகளிலும் பரவும் அக்னி கட்டுப்பாடற்றுப் பாம்பு போல் வளைந்து உலர்ந்த புற்களினூடே செல்கிறது.”[14 ]

    “பூமித் தாயின் ஆடையை நக்கிக் கொண்டு அவர் வயல்களில் நீண்டும் அகன்றும் அலையும்போது மிருகங்கள் விரைந்தோடுகின்றன. செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு கறுப்புப் பாதையை ஏற்படுத்திக் கொண்டு செல்கிறார்.”[15]

    அக்னி ஒரு தத்துவம்

    வேதத்தில் அக்னி என்பது நாம் வெளியில் காண்கின்ற ஒரு பொருளாக மட்டும் கருதப்படவில்லை. அது ஒரு தத்துவம். ஒளி, வெம்மை, எதிரியை அழிக்கும் திறன், நல்லோர்க்கு உதவும் மனம், இடைவிடாது செயல்பட ஊக்கப்படுத்தும் தன்மை இவை கொண்ட பொருள்கள் எல்லாம் அக்னியாகக் கருதப்பட்டுப் போற்றப்படுகின்றன.

    இன்னும் வேறு எங்கெல்லாம் அக்னி காணப்படுகிறான் என்று தேடிய ரிஷிகளுக்கு ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்’ என்பது நினைவுக்கு வருகிறது.

    7. உயிர்த் தீ

    வாழும் மனிதரின் உடல்களில் எல்லாம் சூடு காணப்படுவதை அறிந்து  நம்மிடத்திலும் அக்னி இருக்கிறானே என்று வியந்தனர். மனிதருடனே வாழ்பவன், வாழும்  மனிதருக்காகப் பல இடங்களில் தங்குபவன் என்று போற்றினர். மேலும் பார்க்கும் போது மனிதர் மட்டுமல்லாது பிற உயிர்களிடத்திலும், தாவரங்களிடத்திலும் இந்தச் சூடு காணப்படுவதை அறிந்து அவனை, எல்லா உயிர்களுக்கும் தலைவன் (விச்வாயு), இருப்பு முழுவதும் வியாபித்தவன், உயிருள்ளோரை எல்லாம் ஒன்றுபடுத்துபவன் என்கின்றனர். “ரிஷிகளும், விண்ணில் பறக்கும் பறவைகளும், போரில் தோற்ற வீரர்களும் அக்னியை அழைக்கின்றனர்” என்றும், “ஓஷதிகள் அவனைக் கர்ப்பமாகத் தாங்கின” என்றும் பாடுகின்றனர். பிறந்த எல்லாவற்றையும் அறிந்தவன் (ஜாதவேதஸ்) என்ற பெயர் உயிருள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் காணப்படும் இந்த உயிர்த் தீயையே குறிப்பதாக இருக்க வேண்டும்.

    எல்லா உயிர்களிடத்தும் வாழ்பவர் என்றால், தாவரங்களிலும் அவர் உள்ளார் என்று ஆகிறது. நீரினால் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களால் அக்னி வளர்கிறார். மனிதன் பல அக்னிகளால் மூட்டப்படுகிறான் என்பதிலிருந்து[16] மனிதருக்குள் இன்னும் வேறு வகையான அக்னிகள் இருப்பது அறியப்படுகிறது. கணவனையும் மனைவியையும் நீ ஒன்று பட்ட மனத்தினர் ஆக்கும்போது அவர்கள் உனக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர் என்பதிலும்[17] எங்கள் தாம்பத்தியத்தை இனிமையாக நெறிப்படுத்துகிறாய்[18] என்பதிலும் அவர் கருவறைக்குள் நுழைந்து உயிர்களைப் பிறப்பிக்கிறார் என்பதிலும்[19]  அக்னிக்குத் தனூக்ருத் (உடலை உருவாக்குபவர்) என்ற பெயர் அளிக்கப்படுவதிலிருந்தும் அக்னி என்பது காமத் தீயைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

    8. பசித் தீ

    வயிற்றிலுள்ள பசியும் அக்னிக்கு உரிய பண்புகளைப் பெற்றிருப்பது தெரிகிறது. மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகியவை பசிக்கும் உண்டு. நம்மை நடக்கவும் வாழவும் வைக்கிற பசித் தீ உணவின் தலைவன் எனப்படுகிறது. வைச்வானரன் என்பது வயிற்றுத் தீக்கு அளிக்கப்படும் பெயர். இது எல்லா உயிர்களிடத்திலும் காணப்படுகிறது. ஜடரேஷு ஜின்வதே என்று பசி வயிற்றினுள் இருந்து தூண்டுவதை ரிஷி போற்றுகிறார்.[20]

    9. அறிவுத் தீ

    அறியாமை இருளை அகற்றல், எல்லாத் திசைகளிலும் பார்த்தல், மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றிருப்பதால் அறிவுத் துணிவும் அக்னி போன்றதே. மனிதருக்குத் தூண்டுதல் தருபவர், வீரச் செயல்களில் உதவுபவர், தூண் போல் தாங்குபவர் என்றும் அறிவால் உருவாக்கப்பட்டவர் என்றும் போற்றப்படுகிறார். கவி, ரிஷி, அறிவாளி, வருங்காலம் உணர்ந்தவர் என்ற அடைமொழிகள் அக்னிக்கு அளிக்கப்படுகின்றன. வலிமைக்கும் புனித எண்ணங்களுக்கும் தூண்டுதல் தருகிறார். இந்திரனைப் போலவே அக்னியும் விருத்திரனைக் கொன்றவர் எனப் பெயர் பெறுகிறார். (விருத்திரன் என்பது அறியாமை என்பது பாரதியின் விளக்கம்.) அக்னியே, உன்னிடமிருந்து தான் இலக்கியம், எண்ணங்கள், பிரார்த்தனைகள் தோன்றுகின்றன.[21] தவறான வழியில் செல்வோரைத் திருத்துபவர், சிலரைக் கொண்டு பலரை வீழ்த்துபவர் என்ற சிறப்புகள் அறிவாகிய அக்னிக்குப் பொருந்துபவை. அக்னியைத் தேவர்கள் முதல் மனிதனாகவும் மனித குலத்தின் தலைவனாகவும் நியமித்தனர். இளா என்ற பேச்சை மனிதக் குழந்தையின் ஆசிரியராக ஆக்கினர்  என்று கூறுமிடத்திலும் அது அறிவாகிய அக்னியையே குறிப்பிடுகிறது.

    10. மனதின் ஊக்க சக்தி

    இதுவும் அக்னியே. இந்த ஊக்க சக்தி தான் மனிதனைத் தேவ நிலைக்கு உயர்த்துகிறது. தேவர்கள் அம்ருதத்வம் அடைவது அக்னியின் செயல் திறனால் தான் என்கிறார் ரிஷி.[22] அக்னி, அம்ருதத்தின் காப்பாளன் எனவும்[23] மனிதர்கள் தேவனாகப் பிறப்பதை அறிந்தவர் எனவும்[24] கூறப்படுகிறார்.

    தேவர்கள் அக்னியை மனத்தால் தோற்றுவிப்பதாகவும் முனிவர்கள் அதை எண்ணத்தால் வளர்ப்பதாகவும் கூறுகிறது வேதம். யக்ஞங்களின் அடையாளமான அக்னி தன் அறிவினால் எல்லாவற்றையும் அறிகிறார். கடந்து செல்வது தான் இவருடைய நோக்கம்.[25]

    “அக்னி பல பெயர், பல வடிவம் கொண்டவர் என்றும் மற்ற அக்னிகள் இவருடைய கிளைகள்” என்றும் பேசுகின்றனர். அக்னிக்குச் செய்யப்படும் துதிகளில் சில எல்லா வகை அக்னியையும் உள்ளடக்கியதாக இருப்பதைப் பார்க்கிறோம்.

    பல வகை அக்னிகளுக்கும் பிரதிநிதியாகத்தான் தீயில் நாம் நெய்யால் ஆகுதி செய்கிறோம்.[26]

    குறிப்புகள்:

    1     3.2.9.
    2    3.29.11.
    3    8.58.2
    4    10.51.3
    5    3.1.6.
    6    3.9.4.
    7    3.5.8.
    8     2.1.1, 10.20.7
    9    3.29.2.
    10    1.70.2.
    11    1.140.2.
    12    1.58.4.
    13    1.94.10.
    14    1.141.77.
    15    1.140.9.
    16    6.11.6.
    17    5.3.2.
    18    5.28.3
    19    1.149.2.
    20    3.2.11.
    21     4.11.3
    22    6.7.4.
    23    6.7.7.
    24    7.2.10.
    25    3.11.3.
    26    7.8.1.

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://thishollowearth.wordpress.com/2010/11/15/god-of-the-week-agni/

    Share
  • என் இனிய கண்ணதாசன்

    இசைக்கவி ரமணன்

     
    குடித்துச் சிவந்த கண்கள்download

    குப்புறக் கிடக்கும் உயிரை

    எடுத்துப் புரட்டித் தெம்பை

    ஏற்றும் கவிதையும் பாட்டும்

    கொடுத்துச் சிவந்த நெஞ்சம்

    கோலமயில் ஒருத்தியோடு

    கூடியே கிடந்து கொஞ்சி

    பாலமாய்ப் பஞ்சு மார்பில்

    படுத்துச் சிவந்த மேனி

    பட்டே அறிந்த ஞானி

    பரவசம் பருகும் தேனி

    பாதியில் பறந்த பாவி!

     

    கால்கடுக்க நான் நடந்து கண்ணிருண்ட போதிலெலாம்

    கன்னங்களை வருடவரும் தென்றல்! இவன்

    காற்றினிலே தலையசைக்கும் செந்நெல்! வந்து

    தோலுடுத்த என்மனதைத் தொல்லைவந்து சூழும்போது

    தோள்கொடுக்க ஓடிவந்த தோழன்! சும்மா

    சொல்லிச் சொல்லி வானைத்தொட்ட தேவன்!

     

    யாரெடுத்த தேகமோ! யாரிடத்தில் மோகமோ!

    யார்வசத்தில் தீருமோ! தெரியுமா? இந்த

    யாத்திரையின் இறுதியென்ன புரியுமா? இதில்

    தேரெங்கோ காத்திருக்க தெய்வமெங்கோ பார்த்திருக்க

    ஓரிடத்தும் நின்றிடாத கிள்ளை! அவள்

    ஒற்றையிதழ் பற்றிவாழ்ந்த பிள்ளை!

     

    காதலினால் போதையினால் கண்ணனையே வீழ்த்தியவன்

    ராதையினைக் கதிகலங்க வைத்தவன்! நெஞ்சில்

    ராத்திரியின் ரகசியமாய்த் தைத்தவன்! இவன்

    போதையிலே சொன்னதிலே போதிமரம் சிலிர்த்ததடி!

    பெளர்ணமியே வீதியுலா வந்ததே! அவன்

    புன்னகையில் புயலும் அடங்கி நின்றதே!

    தத்தைமகள் மெத்தையிதழ் முத்தமிட்டு முத்தமிட்டுத்

    தத்துவங்கள் சொன்னவனைக் கண்டேன்! அந்தச்

    சாயலிலே சற்று வெறி கொண்டேன்! இனி

    சத்தமில்லை சட்டமில்லை மொத்தமாகக் காதலிலே

    முப்பொழுதும் குப்புறநான் வீழ்ந்தேன்! அந்த

    மோகத்திலே முத்தெடுத்து வாழ்ந்தேன்!

     

    சோதனையும் வேதனையும் சொக்கட்டான் ஆடும்போது

    சொர்க்கம்விட்டுச் சொல்லாமல் வந்தான்! எல்லாம்

    சொல்லிவிட்டுத் தான் திரும்பிச் சென்றான்! இவன்

    காதலுக்கு தேவன்! இன்பக் கன்னியர்க்கு ராஜன், நமது

    கவலைகளைத் தீர்க்கவந்த நேசன்! அந்தக்

    கண்ணனுக்கு மட்டுமிவன் தாசன்!

     

     

    Share
  • ஒரு பயணத்தின் முடிவில்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (3)

     

    ஒரு பயணத்தின் முடிவில்

    (கேட்டு மகிழ)

     Melbourne-Daily-Photo-Blog-Beach-Dune-Harbour-Mornington-Peninsula-Pier-Sunset-MorningtonPeninsula_20120708_109_10_11-2

     

    இன்னும் சில நொடிகள்..

    இறங்கித்தான் ஆகவேண்டும்

    நீ நான் என்பார், அந்த

    நிலை மாறத்தான் வேண்டும்

     

    கன்னற் பேச்சுக்கள்

    காதினிலே குறுகுறுப்பு

    சின்ன விளையாட்டு

    சிலநேரக் கண்பனிப்பு

     

    என்று பலவாறாய்

    இன்புற் றிருந்ததெல்லாம்

    இன்னும் சிலநொடிக்குள்

    எங்கோ பறந்துவிடும்!

     

    உறவாகி விடுமென்றா

    உதடோரம் புன்னகைத்தோம்?

    மனமாரக் கண்ணிமைத்தோம்?

    மறைவாக ஸ்வப்பனித்தோம்?

     

    எந்தக் கூட்டத்தில்

    எங்கெங்கே பிறந்தோமோ

    அந்தக் கூட்டந்தான்

    அங்கங்கே சேரவந்தோம்!

     

    சேர்வது வேறு, இணைந்து

    செல்வது வேறு, என்றிந்தப்

    பார்வைக்குத் தெரிந்திருந்தால்

    படாதபாடு படுவோமா?

     

    நிலைய மிருப்பது

    நீ நான் இறங்கத்தான்

    நினைவொன் றிருப்பது

    நீ நான் துடிக்கத்தான்

     

    இருப்புப் பாதை

    இணைந்திடத்தான் போகிறது

    விருப்பேது வெறுப்பேது

    விவரமற்ற சூனியத்தில்…

     

    படத்திற்கு நன்றி:

    http://mel365.com/melbourne-daily-photo-a-never-ending-pier-into-port-phillips-bay/

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

     

    ருக்மணியும் கண்ணனும் நாவில் ஜலம் ஊறவைக்கும் நைவேத்ய ப்ரசாதம் போலிருக்கிறார்கள்….சூப்பர்….

     

    keshav

     

    “குலாப்ஜாமூன் ருக்மணி ,குல்கந்து கண்ணன்,
    பலாச்சுளையைத் தேனில் புதைத்த -கலாச்சுவைக்
    காரனவன் கேசவனின், கைமணம் வீசுது,
    சூரனவன் தஞ்சை சமைப்பு”.

    Share
  • அன்றும், இன்றும், என்றும் !!!

    — தேமொழி.
    thalaivan
    அன்று:
    தலைவன் (தனது நெஞ்சிற்குக் கூறியது):

    பெறுவ தியையா தாயினு முறுவதொன்
    றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
    கைவள் ளோரி கானந் தீண்டி
    எறிவளி கமழு நெறிபடு கூந்தல்     
    மையீ ரோதி மாஅ யோள்வயின்
    இன்றை யன்ன நட்பி னிந்நோய்
    இறுமுறை யெனவொன் றின்றி
    மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே.

    — பரணர், குறுந்தொகை பாடல் 199

    பின்புலம்:
    “தலைவா, இனி தலைவியை நீங்கள் காண்பது அரிது.  அவள் வீட்டை விட்டு வெளியேற வழியின்றி அவளது பெற்றோர் கட்டுப்பாடு விதித்துள்ளார்கள்”,  என்று  தலைவியின் தோழி தலைவனுக்குச் செய்தி சொல்லிச் செல்கிறாள்.  “இனி என் அன்புக்குரிய காதலியை இப்பிறவியில் காணவே முடியாதோ! ஆனாலும் இந்தச் சூழ்நிலையால் என் காதல் மாறாது எனது நெஞ்சே, ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து வருவது என் காதல் என்பதை அறிவாய்” என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான் அந்தத் தலைவன்.

    பாடலின் பொருள்:
    எனது நெஞ்சே, உறுதியான தேரையும், சிறந்த கைவண்மையும் பெற்ற ஓரியின் காட்டின் வழியே வீசும் மணம் கமழும் காற்றினைப் போல நறுமணம் கொண்ட, நெளி நெளியான முடியினால் ஆன மைபோன்ற கரிய கூந்தலை உடைய என் காதலியை நான் இப்பிறவியில் காண முடியாமல் போனாலும்  நான் அவளிடம் கொண்ட காதலுக்கு அழிவில்லை. அடுத்து வரும் பிறவிகளிலும் என் காதல் தொடர்ந்து வரும்.

    ***

    இன்று:
    தலைவன் (தனது தலைவியிடம் கூறியது):

    எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
    ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
    மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
    நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

    — கவிஞர் கண்ணதாசன்

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://www.dinamani.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(117)

    –சக்தி சக்திதாசன்.

    சக்தி சக்திதாசன்
    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மற்றொரு மடலில் மனந்திறந்து உங்களுடன் பேசும் ஒரு சந்தர்ப்பம்.

    2014ம் ஆண்டு பிறந்ததுதான் தெரியும். இதோ 7 மாதங்கள் ஓடி மறையும் வேளை. வாழ்க்கையை நாம் மாதங்களில் கணக்கிட்டால் கிடைப்பது எமக்கு அதிர்ச்சியே !

    இலண்டனில் பலவருடகாலமாக வசித்து வரும் எனது பால்ய நண்பன் ஒருவனுடன் அன்றொருநாள் தொலைபேசியில் உறவாடிக் கொண்டிருந்தேன். மிகவும் சுவையாக பேசக்கூடிய அவன் தந்த ஒரு தகவல் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியையே தந்தது.

    அப்படி அவன் என்னதான் கூறி விட்டான் என்கிறீர்களா?

    இந்த உலகில் வாழும் மனிதர்களின் சராசரி வயது 70 என்று எடுத்துக் கொள்வோம். அப்படியாயின் ஒரு மனிதனின் வாழ்க்கை ஏறக்குறைய 840 மாதங்கள் தானே !

    உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்வோம் வாழ்க்கையில் நான் 56 வருடங்களைக் கடந்து விட்டேன் அதாவது 672 மாதங்களை வாழ்ந்து முடித்து விட்டேன்.

    சரி மனிதனின் சராசரி வாழ்க்கையோ 840 மாதங்கள் அதிலே 672 போய்விட்டால் எஞ்சி இருப்பதோ 168 மாதங்களே !

    அடடா இனிக் கடக்கும் ஒவ்வொரு மாதமும் இந்த 168ல் ஒன்றை எடுத்துச் செல்லப்போகிறது . . . .

    எண்ணும் போது கொஞ்சம் அச்சமாக இருக்கிறது இல்லையா ?

    இன்னும் பார்க்க வேண்டியது, பழக வேண்டியது, சுவைக்க வேண்டியது வாழ்க்கையில் அநேகம் இருக்கிறதே. ஒருவேளை எனக்கு நேரம் கிடைக்காமல் போய்விடுமோ ? எனும் சந்தேகம் மனதை ஆக்கிரமிக்கிறது இல்லையா ?

    இவ்வுண்மையை அழகாக எடுத்துச் சொன்ன என் நண்பன் என் மெளனத்தைக் கண்டதும் பெரிதாகச் சிரித்துக் கொண்டே ” என்ன பயந்து விட்டாயா? “ என்று கேட்டான்.

    “இல்லேடா கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது ” என்றேன் சமாளித்துக் கொண்டே.

    அட இதைப்போய் ஏன் எமக்கு சொல்கிறான் என்கிறீர்களா? அன்பினியவர்களே ! வாழ்க்கையின் நீளத்தைக் கண்க்கிடும் போதுதான் அதன் உண்மையான அர்த்தம் விளங்குகிறது.

    எதையோ தேடி, எங்கோ ஓடி, யார் யாருடனோ தேவையற்ற சில்லறை விடயங்களுக்காக மனஸ்தாபப்பட்டு இதெல்லாம் எதற்காக மீதமிருக்கும் இந்த எஞ்சிய மாதங்களையும் மகிழ்வில்லாமல் ஆக்குவதற்காகவா ?

    மனித வாழ்க்கை எமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அதை மகிழ்வுடனும் அமைதியாகவும் வாழ வேண்டியது நம் ஒவ்வொருவருடைய தார்மீகக் கடமையாகிறது..

    எனது மகனின் திருமணத்திற்காக மூன்றுவார காலம் சென்னை சென்று கடந்தவாரம் திரும்பி வந்தேன்.

    சென்னையில் நான் தங்கி இருந்த சமயம் பல சமயங்களில் பல கால் டாக்ஸிகளில் பிரயாணம் பண்ண வேண்டிய தேவையிருந்தது.

    அப்படிப் பயணிக்கும் பொழுதுகளில் பல வித்தியாசமான கார்ச் சாரதிகளுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையும் எனக்குத் தந்தது புதுப்புது அனுபவங்களே !

    வாழ்க்கையை எத்தகைய நம்பிக்கையுடன் அவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்று எண்ணும் போது அவர்களின் மனத்திடம் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

    இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் ஒரு 75 சதவிகிதம், நான் 19 வயது இளைஞனாக இருந்தபோது எனக்கு இருந்திருந்தால் எத்தனையோ சாதனைகள் படைத்திருக்கலாமே. அடடா, இன்னும் சராசரி 168 மாதங்களே எஞ்சியிருக்கும் போது இத்தனை அனுபவப் பாடங்களா ? என்ற எண்ணம் ஏற்படுகிறது.

    அத்தோடு சேர்ந்து ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் அந்த எல்லாம் அறிந்த ஆதிமூலம் எனக்கு இப்பொழுது  இவைகளை அறியத் தருகிறான். அட எமக்குப் பயன்படாவிட்டால் என்ன எனது அடுத்த தலைமுறைக்குச் சொல்லி வைப்பது என் கடமை எனும் எண்ணம் எனக்கு பேரானந்தத்தை ஏற்படுத்துகிறது.

    சிலநேரங்களில் சில மனிதர்கள் சில வகையினில் எம்மைப் பாதிப்பார்கள் அந்தப் பாதிப்புகளில் இருக்கும் அனுகூலங்களை மட்டும் நாம் பொறுக்கி எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டால் எதிலுமே குறை காணும் சுபாவம் எம்மை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அகலத் தொடங்கும்.

    வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒவ்வொருவருக்காகவும் ஏதோ ஒரு சந்தர்ப்பம் காத்திருக்கிறது. அல்லாதவற்றை விலக்கி அவற்றைக் கண்டுகொள்ளும் ஆற்றலை நாம் வளர்த்துக் கொண்டுள்லோமா?

    இதுவே எம்முன்னால் இருக்கும் கேள்வி !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

     

     

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share