என் இனிய கண்ணதாசன்
இசைக்கவி ரமணன்
குப்புறக் கிடக்கும் உயிரை
எடுத்துப் புரட்டித் தெம்பை
ஏற்றும் கவிதையும் பாட்டும்
கொடுத்துச் சிவந்த நெஞ்சம்
கோலமயில் ஒருத்தியோடு
கூடியே கிடந்து கொஞ்சி
பாலமாய்ப் பஞ்சு மார்பில்
படுத்துச் சிவந்த மேனி
பட்டே அறிந்த ஞானி
பரவசம் பருகும் தேனி
பாதியில் பறந்த பாவி!
கால்கடுக்க நான் நடந்து கண்ணிருண்ட போதிலெலாம்
கன்னங்களை வருடவரும் தென்றல்! இவன்
காற்றினிலே தலையசைக்கும் செந்நெல்! வந்து
தோலுடுத்த என்மனதைத் தொல்லைவந்து சூழும்போது
தோள்கொடுக்க ஓடிவந்த தோழன்! சும்மா
சொல்லிச் சொல்லி வானைத்தொட்ட தேவன்!
யாரெடுத்த தேகமோ! யாரிடத்தில் மோகமோ!
யார்வசத்தில் தீருமோ! தெரியுமா? இந்த
யாத்திரையின் இறுதியென்ன புரியுமா? இதில்
தேரெங்கோ காத்திருக்க தெய்வமெங்கோ பார்த்திருக்க
ஓரிடத்தும் நின்றிடாத கிள்ளை! அவள்
ஒற்றையிதழ் பற்றிவாழ்ந்த பிள்ளை!
காதலினால் போதையினால் கண்ணனையே வீழ்த்தியவன்
ராதையினைக் கதிகலங்க வைத்தவன்! நெஞ்சில்
ராத்திரியின் ரகசியமாய்த் தைத்தவன்! இவன்
போதையிலே சொன்னதிலே போதிமரம் சிலிர்த்ததடி!
பெளர்ணமியே வீதியுலா வந்ததே! அவன்
புன்னகையில் புயலும் அடங்கி நின்றதே!
தத்தைமகள் மெத்தையிதழ் முத்தமிட்டு முத்தமிட்டுத்
தத்துவங்கள் சொன்னவனைக் கண்டேன்! அந்தச்
சாயலிலே சற்று வெறி கொண்டேன்! இனி
சத்தமில்லை சட்டமில்லை மொத்தமாகக் காதலிலே
முப்பொழுதும் குப்புறநான் வீழ்ந்தேன்! அந்த
மோகத்திலே முத்தெடுத்து வாழ்ந்தேன்!
சோதனையும் வேதனையும் சொக்கட்டான் ஆடும்போது
சொர்க்கம்விட்டுச் சொல்லாமல் வந்தான்! எல்லாம்
சொல்லிவிட்டுத் தான் திரும்பிச் சென்றான்! இவன்
காதலுக்கு தேவன்! இன்பக் கன்னியர்க்கு ராஜன், நமது
கவலைகளைத் தீர்க்கவந்த நேசன்! அந்தக்
கண்ணனுக்கு மட்டுமிவன் தாசன்!

