Year: 2015

  • கழிவிலிருந்து செல்வம் கண்காட்சி

    கழிவிலிருந்து செல்வம் கண்காட்சி

    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் வீணாவதிலிருந்து செலவு எதுவும் இல்லாமல் நல்ல பொருள்கள் தயாரித்துப் பயன்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது.

    exhibition1

    கண்காட்சிக்கு வந்தவர்களை மாணவர் ஜெகதீஸ்வரன் வரவேற்றார். தேவகோட்டை சரக உதவித் தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி கண்காட்சியைத் தொடக்கி வைத்து தலைமை தாங்கிப் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் நமக்குத் தேவை இல்லாமல் உபயோகப்படாமல் உள்ள பொருள்களில் இருந்து நல்ல பொருள்களாக மாற்றி நன்றாகக் கொண்டு வந்துள்ளீர்கள். நமக்குத் தேவை இல்லை என நினைக்கும் பொருள்கள் நமக்குப் பல வழிகளில் பயன்படுவதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனப் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

    exhibition

    1ம் வகுப்பில் மாணவி திவ்யஸ்ரீ தென்னங்குச்சி, தெர்மோகோல் கொண்டு கிளிக்கூண்டு, சுத்தியல், துப்பாக்கி ஆகியவற்றையும்
    2ம் வகுப்பு மாணவன் வெங்கட்ராமன் தேங்காய் மூடி, பட்டன் கொண்டு ஆந்தையும்
    3ம் வகுப்பு மாணவி ஜனஸ்ரீ அரச இலை கொண்டு யானை உருவமும்
    4ம் வகுப்பு மாணவி வள்ளியம்மை தண்ணீர் டப்பாவில் தராசும்
    5ம் வகுப்பு மாணவி காயத்ரி முட்டைக் கூடு கொண்டு பூங்கொத்து, பொம்மை ஆகியவற்றையும்
    6ம் வகுப்பு மாணவன் சஞ்சய் தண்ணீர் டப்பாவில் பூங்கொத்தும்
    7ம் வகுப்பு மாணவி எழுதும் மேசையை காலண்டர் அட்டை கொண்டும்
    8ம் வகுப்பு மாணவி அட்டை, குச்சிகள் கொண்டு தபால் பெட்டியும்
    செய்து முதல் பரிசினை பெற்றனர். கண்காட்சிக்காக 100க்கும் மேற்பட்ட பொருட்களைச் செய்து கொண்டு வந்தனர்.
    ஆசிரியை முத்து லெட்சுமி, முத்து மீனாள், வாசுகி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

    நிறைவாக மாணவி சக்தி நன்றி கூறினார்.

    பட விளக்கம் :
    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கழிவிலிருந்து செல்வம் கண்காட்சியை தேவகோட்டை உதவித் தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    b5bdadf8-96bf-47dd-8f34-147decd5bd24

    ”சின்மயம் காட்டி, சுவேதாம் பரனனை
    தன்மயம் ஈர்த்தான்பீ தாம்பரன்: -நன்மையாய்,
    போக்கிட பூபாரம், பாரதம், செய்தந்த,
    சாக்கிலே சத்ருக்கள் சாவு’’….கிரேசி மோகன்….

    சுவேதாம்பரன் -வெள்ளை வண்ண அர்ஜுனன்….

    Share
  • ம. செ.வும் கிரேசியும்

    3d179fae-0c17-4261-93b7-13e9aee7160f

    அற்புதம் லோகு….இந்தக் காலத்தில் தந்தைகள் ‘’வ்யாதியை’’ பிள்ளைக்கு தாரை வார்க்கிறார்கள்….ஆனால் உங்க அப்பாவோ தன் ‘’க்யாதியை’’(கலையை) உனக்கு வழங்கி இருக்கிறார்….ம.செ. என் ‘’அடுத்த வீட்டுப் பையன்’’ என்பதில் எனக்கு ஏக கெளரவம்….நன்றி….பால்ய நண்பன் பள்ளித் தோழன் கிரேசி மோகன்….ஒவியத்தைப் பார்த்ததும் தோன்றிய வெண்பா….

    கருப்புச் சிவனை திருப்பிவைத்துப் பார்த்தால்,
    மருப்புடைசேய் காட்டும் முகத்தை, -அறுப்புதம்(அற்புதம் எதுகைக்காக poetic license)
    செல்வா , மணியத்தின் செல்வனே, கார்வண்ண
    வில்வத்தைக் கண்டேன் வியந்து …கிரேசி மோகன்….

    மருப்பு-தந்தம் உடைய பிள்ளையார்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 7, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு நிகிதா ஆசாத் அவர்கள்

    நிகிதா1

    சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை ஃபேஸ்புக்கில் துவக்கியுள்ள திருமிகு நிகிதா ஆசாத் (Nikita Azad) அவர்கள் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார். “மாதவிடாய் மகிழ்ச்சிக்குரியதே” (#Happy to Bleed) என்ற கவன ஈர்ப்பு வாசகத்தின் மூலம் பெண்களுக்குச் சமூகத்தில் நடத்தப்படும் அவமதிப்பை எதிர்க்கும் இவரது நோக்கம் பாராட்டப்படவேண்டிய முயற்சி.

    மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது இனப்பெருக்கப் பருவமடைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஓர் இயற்கை நிகழ்வு. கருத்தரித்த பெண்ணின் கரு வளர்ச்சியடைய உதவுவது கர்ப்பப்பையும் அதன் சுவர்களும். அவள் அந்த மாதம் கருத்தரிக்கத் தவறினால் பயனற்றத் திசுக்கள் கழிவாக உதிரப்போக்குடன் உடலில் இருந்து வெளியேற்றப்படும் இயற்கை நிகழ்வே மாதவிலக்கு. இதனைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலான ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமே கிடையாது. மேலும் சரியான கழிவறை வசதியற்ற நாடான இந்தியாவில் வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் துன்பம் அதிகம். இதனை வெளிப்படையாகப் பொதுவில் பேசவும் பெண்களுக்குத் தயக்கமும் கூச்சமும் அதிகமிருக்கும். அதனையும் இடக்கரடக்கல்லாக வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு, வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, தீட்டு என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், சோர்வு, வலி போன்றவற்றால் அவர்களே தினசரி நடவடிக்கைகளைக் கைவிடும் காலமும் முன்னர் இருந்தது. ஆனால் சுகாதார வளர்ச்சி, அறிவியல் கல்வியால் புரிந்துணர்வு, ஆயத்தப் பஞ்சுறைகள் (சானிட்டரி நாப்கின்) ஆகியவற்றின் பயன்பாடுகளால் தினசரி வாழ்க்கையை எந்தவித மாற்றமுமின்றிப் பெண்கள் எதிர்கொள்ளும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. நம்நாட்டில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் கூடத் தங்களை குடிகாரர் எனப் பிறர் எண்ணிவிடுவார்களே என்று கூச்சநாச்சமில்லாமல் வெளிப்படையாக வாங்கிச் செல்லலாம். ஆனால், ஆயத்தப் பஞ்சுறைகள் வாங்கக் கடைக்குச் சென்றால் அது என்ன என்று அடையாளமே தெரியாதவாறு (?) ஒரு செய்தித்தாளில் பொட்டலம் கட்டித்தரப்படும் நிலைமையும் உண்டு என்பது இன்றைய நாட்டு நடப்பைத் தெளிவாக்கும்.

    மாதவிலக்கின் போது பெண்களை அங்கே உட்காரக் கூடாது, இங்கே நிற்கக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இதைப் பார்க்கக்கூடாது போன்ற கட்டளைகள் இட்டு, நடவடிக்கைகள் முடக்கப்பட்டு அவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே ஒதுங்கி வாழ வேண்டிய நிலைமை எல்லாம் இருந்தது அக்காலம். இன்னமும் குக்கிராமங்களில் உள்ள பெண்கள் இதுபோன்ற அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். மாதவிலக்கு நாட்களில் பெண்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படுவது போலவே, இறைவழிபாட்டிலும் பெண்கள் கோவிலுக்குப் போகக் கூடாது, பூசை அறைக்குள் நுழையக்கூடாது, வழிபாட்டிற்குரிய பொருட்களையோ புனித நூல்களையோ தொடக்கூடாது என்பது போன்ற பெண்கள் மீதானக் கட்டுப்பாடுகள் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ’கலம் தொடா மகளிர்’ என்ற பெயரில் சங்க காலம் தொட்டுப் பெண்களுக்கு இக்கொடுமை நிகழ்ந்து வருவதற்கு இலக்கியச்சான்றுகளும் காட்டப்படுகிறது.

    இவ்வாறு மதத்தின் பெயரால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் சமீப காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விவாதங்களாக மாறிவருகின்றன. மகாராஷ்ட்ராவில் உள்ள சனி பகவான் கோவில் ஒன்றில், பெண் ஒருவர் சிலை அருகே சென்று வணங்கியதால் சனி பகவான் சிலையைக் கழுவிப் பரிகாரம் செய்துள்ளனர். மாதவிலக்கு, அதனால் தூய்மையில்லை என்பது போன்ற காரணம் கூறப்படவில்லை இந்த சனிபகவான் கோவில் நிகழ்வில். அது பெண்கள் எந்த நாளிலும் அந்தக் கோவிலில் சிலையருகில் சென்று வழிபட உரிமை மறுக்கப்பட்டுள்ள நிகழ்வு. பெண்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற பழமையான எண்ணத்தின் பிரதிபலிப்பாக அமைந்துள்ள மற்றுமொரு நிகழ்வு. பெண்களைமட்டுமல்ல சமூகத்தில் ஒருசில பிரிவினரே இவ்வாறு கோவிலுக்குள் நுழையவிடாமல் ஒதுக்கப்பட்ட காலத்தைக் கடந்து நாம் வெகு தூரம் வந்துவிடவில்லை.

    ஃபேஸ்புக்கில் நிகிதா கவனஈர்ப்பு கொண்டு வந்துள்ளது கேரளாவில் நடந்த மற்றொரு நிகழ்வு. கேரளாவின் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குள் பருவ வயதுப்பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனைக் குறித்து கொல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் செய்தியாளர் ஒருவர், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் எப்பொழுது பெண்களைச் சபரிமலையில் வழிபட அனுமதிப்பீர்கள் என்றக் கேள்வியை எழுப்பினார். அதற்குத் தேவஸ்தான தலைவர், ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பவர்களை அடையாளம் காணும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது போல, பெண்கள் மாதவிலக்கு நாட்கள் பற்றிக் கண்டறியவும், தூய்மையாகத்தான் இருக்கிறார்களா என உறுதி செய்ய உதவும் கருவி ஒன்றினைக் கண்டுபிடிக்கும் வரை பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க இயலாது. அந்தக் காலம் வந்த பின்னர் அதைப்பற்றிப் பேசலாம் என்று பதிலளித்தார். இக்கூற்றின் அடிப்படைக் கருத்து “மாதவிலக்கான அந்நாட்களில் பெண்கள் தூய்மையற்றவர்கள்” என்ற பண்டைய வழக்குதான். தேவஸ்தான தலைவரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய செய்தியானது. பிறகு எனது விளக்கம் தவறான முறையில் புரிந்து கொள்ளப்படுகிறது என்று பிறையார் கோபாலகிருஷ்ணன் மறுப்பும் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற கருத்துகள் பிறமதங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நிகிதா2

    இருப்பினும், இயற்கையாகப் பெண்களுக்கு நிகழும், தவிர்க்க இயலாத மாதவிலக்குக்காக அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது சரியல்ல என்பது நிகிதாவின் வாதம். இதற்காக நவம்பர் 21ஆம் தேதியில் இருந்து “ஹாப்பி டு ப்ளீட்” என்ற ஃபேஸ்புக் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நிகிதாவுடன் அவரது நண்ப திரு. சுக்ஜீத் சிங் என்பவரும், சுருதி உபாத்தியாய், சாம்பவி விக்ரம் என்ற தோழியரும் (Sukhjeet Singh, Suridhi Upadhyay, Shambhawi Vikram) இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் அவருக்குத் துணையாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பலரும் நிகிதாவை ஆதரித்து, ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளும் படங்களும் பதிவு செய்துள்ளனர். இந்தக் கவனஈர்ப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்த காரணத்தால் தினசரி நாளிதழ்களிலும் செய்தியாகப் பரவி வருகிறது. ஃபேஸ்புக் பிரச்சாரப் பக்கம் தரும் தகவலின்படி ஆண்களில் பலரும் நிகிதாவிற்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் இறங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய செயல்.

    நிகிதா2a

    இந்தப் பிரச்சாரம் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்காக மட்டும் அல்ல; பெண்களைப் பாலியல் ரீதியில் வேறுபடுத்தி, சிறுமைப்படுத்தும் நோக்கில் இன்றும் நிலவும் இதுபோன்ற சமூக வழக்குகளுக்கு எதிராக எழுப்பிய கண்டனம் என்று நிகிதா ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து, www.change.org லும் இந்தப் போராட்டத்தை எடுத்துச் சென்றுள்ளார். கோயிலுக்குள் நுழைய அனுமதி எதிர்பார்த்து இப்பிரசாரத்தைத் துவக்கவில்லை என்றும், பழமையான நம்பிக்கைகளை எதிர்க்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் என்று கூறும் பஞ்சாபி பல்கலைக்கழக மாணவியான, இருபது வயதாகும் நிகிதா ஆசாத் பாட்டியாலாவில் வசிக்கிறார். இந்தியா ரெசிஸ்ட்ஸ், யூத் கி ஆவாஸ், ஃபெமினிஸம் இன் இந்தியா (India Resists, Youth Ki Awaaz, Feminism in India) போன்ற பத்திரிக்கைகளிலும் எழுதி வருகிறார். காலங்காலமாகப் பெண்கள் எதிர்க்கத் தயங்கிய, மறுகிய, கூசிய, அஞ்சிய மாதவிலக்கைப் பற்றிய கருத்துக்களை; அதனால் பல சமூகக் கட்டுப்பாடுகளுக்குள் பெண்களை முடங்க வைத்த வழக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நிகிதாவின் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Contact Info:
    Nikita Azad
    https://www.facebook.com/archangelniks
    https://www.facebook.com/events/757746744337128/
    https://www.change.org/p/national-commission-for-women-happy-to-bleed-an-initiative-to-break-menstrual-taboos-and-myths

    Share
  • இயற்கை அன்னையே! போதுமம்மா உன் கண்ணீர்!!

    ஒரு அரிசோனன்

    tearddrops

    இயற்கையன்னையே!  போதுமம்மா உன் கண்ணீர்!

    தாங்கமுடியவில்லை சென்னையால்!

    நாங்கள் செய்தோம் பலதவறுகள்!

    அடைத்தோம் உன் ஊற்றுக்கண்களை!

    கட்டினோம் அதில் எங்கள் மண்கோட்டைகளை!

    கட்டினோம் மனக்கோட்டைகள் கோடிகோடி!

    உன் கண்ணீர்தான் பெருக்கெடுத்ததே எங்கள் நிலைகண்டு!

    நிறுத்தம்மா உன் கண்ணீரை!  போதுமம்மா உன்னழுகை!

    தாங்கமாட்டோம் நாங்கள் இனியுன் வேதனையை!

    திருந்துகிறோம், திருந்துகிறோமம்மா மதலைகள் நாங்கள்!

    வேண்டாமிவ் வழுகை உனக்கும்தான் இனிமேலும்,

    ஆனந்தக் கண்ணீரே போதுமம்மா எங்களுக்கு,

    அழிக்காதே எங்களைப்  பெருக்கிடுமிக் கண்ணீரால்!

    ***   ***   ***

    Share
  • படக்கவிதைப் போட்டி (42)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12351594_925174920870041_1161854140_o

    95475568@N05_rவெங்கட்சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • சுட்டி விகடனின் அழகிய தங்க மீன்

    சுட்டி கிரியேசன்ஸ் அழகிய தங்க மீன் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு

    sutti fish

    சுட்டி விகடன் 15/12/2015 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகிய தங்க மீன் வடிவத்தை உருவாக்கிக் காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

    sutti fish3

    சுட்டி கிரியேசன்ஸ் அழகிய தங்க மீன் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் . நேரடியாகப் புத்தகத்தை பார்த்துச் செய்தபோது எடுத்த படம்.

    sutti fish2

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • மனித வேர்கள்

    –தமிழ்த்தேனீ.

    வேரோடு பிடுங்கிய கரும்பு

    மிருகங்கள் வாழுமிடத்தை மனிதர் கைப்பற்றி அங்கே குடியேறிவிட்டு அந்த மிருகங்கள் வாழ வகையின்றி உண்ண உணவின்றி மனிதர்கள் வாழுகின்ற அவைகளுக்குச் சொந்தமான இடத்தை நாடி வரும் போது, ஐயோ! நாங்கள் வாழும் இடத்துக்கே வந்து எங்களைத் தாக்குகின்றனவே மிருகங்கள் என்று அபயக் குரல் எழுப்பும் மனிதர்களே!

    நீர்நிலைகளையெல்லாம் ஆக்ரமித்து வீடுகள் கட்டிவிட்டு அங்கே நீர் நிலைகள் வீடுகளை ஆக்ரமித்து சூழும்போது, ஐயோ! எங்கள் உடமைகளெல்லாம் நீரிலே போய்விட்டனவே, நாங்கள் என்ன செய்வோம் என்று பரிதவிக்கும் மனிதர்களே!

    “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது“

    என்று கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் மனதிலே வருகின்றன.

    “கரும்பு ருசி என்றால் வேரோடு பிடுங்கலாமா?“ என்றொரு சொல் வழக்கு உண்டு.

    சுதந்திரக் கரும்பு நமக்குக் கிடைத்தது. அந்தச் சுதந்திரக் கரும்பை அதாவது நம் நாட்டை நம் தேசத்தை ஒரு சில தவறுகள் நாம் செய்ததன் மூலமாக நம் கையிலிருந்து இழந்து அன்னியரிடம் ஒப்படைத்து அதனால் நாம் அடிமைகளாக அதுவும் நம் தேசத்திலேயே நாம் அடிமைகளாக வாழ்ந்த சரித்திரத்தை மறந்து அந்த இழந்து போன சுதந்திரத்தை மீண்டும் நாம் கைக்கொள்ள எத்துணைப் பெரியோர்கள் தாய்மார்கள், வாலிபர்கள், குமரிகள், குழந்தைகள் எல்லோரும் எத்தனை மகத்தான தியாங்களைச் செய்தனர், எப்படியெல்லாம் பாடுபட்டு இழந்த சுதந்திரத்தை மீட்டுக் கொடுத்தனர் எனும் வரலாற்றை மறந்து தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் எனும் இயற்கையின் கட்டளையை மறந்து நாம் எப்படிக் காலடிகளை எடுத்து வைக்கிறோமோ அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும் என்பதை மறந்து அடிமைப்பட்டிருந்த காலத்தையெல்லாம் மறந்து அகங்காரம் கொண்டு தலைவிரித்து ஆடத் தொடங்கினோமோ அன்று தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

    chennai-flood-wiki-picture2

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே

    எனும் பாடலில் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ என்று பாடியதை மறந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தலைதெறித்து வாழத் தொடங்கினோமோ அன்றே தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

    நாட்டில் மக்களுக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய வளங்களைச் சீரமைத்து மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து மக்கள் நலமாக மகிழ்ச்சியாக வாழத் தேவையானவற்றையெல்லாம் செய்து கொடுக்கத்தான் அரசாளும் பதவிகள் என்பதை அடியோடு மறந்து நம் நாட்டு மக்களையே அடிமைகளாக நடத்த என்று தொடங்கினோமோ அன்று தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

    மக்களை மனிதத் தன்மையோடு பாசத்தோடு, நேசத்தோடு, அன்போடு, ஆதரவாக மதிக்க வேண்டிய ஆளுவோர் எலும்புத் துண்டைப் போட்டால் கவ்விக்கொண்டு மற்றவற்றையெல்லாம் மறந்து ஓடும் நாயினைப் போல வேண்டாத இலவசங்களை அளித்து மக்களைத் திசை திருப்பி ஓடவிட்டுவிட்டுத் தனியாக வளங்களைக் கொள்ளையடிக்கும் குணத்தை அரசியல்வாதிகள் என்று கொண்டனரோ அன்று தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

    திறமை இருந்தால், ஏமாற்றும் திறமை இருந்தால் மாட்டிக் கொள்ளாத புத்திசாலித்தனமான கள்ளத்தனம் இருந்தால், அப்படியே மாட்டிக் கொண்டாலும் கொள்ளையடித்த பணத்தை அள்ளிவீசி தப்பிக்கத் தெரிந்தால், ஈவு இரக்கமின்றிக் கொலை செய்தாலும் கொள்ளை யடித்தாலும் மனசாட்சியே இல்லாமல் அந்தக் குற்றங்களிலிருந்து மீண்டு வந்து மக்களின் மனதைத் தவறான ப்ரசாரங்களால் வசியப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வரும் நரித்தனம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கொள்ளையடியுங்கள், ஆனால் கொள்ளையடித்த செல்வத்திலே எங்களுக்கும் பங்கு கொடுங்கள் அது போதும் எனும் மனநிலைக்கு கட்டிக் காக்கவேண்டியவர்களே என்று வந்தார்களோ அன்று தொடங்கின இந்த நாட்டின் அவலங்கள்.

    பயத்தால் ஆட்சியாளர்களின் அதிகார வன்முறையால் மக்கள் பொறுத்துக் கொண்டனர், தட்டிக் கேட்பவரைக் கொலை செய்யத் துணிந்தவர்கள் ஊழல்வாதிகள் என்பதை வெளிச்சம் போட்டுத் திரைப்படங்கள் காட்டியும் மக்கள் மனதிலும் ஊழல்வாதிகளின் உண்மையான தோற்றம் புரிந்து போனதாலும் நமக்கெதற்கு, நாம் கண்டும் காணாமலும்போய் நம் வீட்டாரைக் காப்பாற்றுவோம் எனும் மன நிலைக்கு மக்களை என்று திசை திருப்பினார்களோ கூழல்வாதிகள் அன்று தொடங்கின இந்த நாட்டின் அவலங்கள்.

    மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை நமக்கு அளித்து நம்மை ஆள விட்டிருக்கிறார்கள், இந்த தேசம், இந்த நாட்டில் வாழும் ஒட்டு மொத்த மக்களின் தேசம், அவர்களுக்குச் சொந்தமானது என்பதை மறந்து ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தேசம் என் தேசம், என் நாடு, என்னுடைய சொத்து, இதில் நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன். நான் ஆட்சிக்கு வந்து இருக்கும் இந்த ஐந்தாண்டுகள் இந்த தேசம் என்னுடையது எனக்கே சொந்தமானது, இந்த தேசத்திலிருக்கும் வளங்களெல்லாம் எனக்கே சொந்தமானவை. ஆகவே இதன் மூலமாக வரும் அனைத்துப் பயன்களும் எனக்கே சேர வேண்டும் என்று பேராசை கொண்டு மக்களை மறந்து, ஒட்டு மொத்த வளங்களையும் தனக்கே எடுத்துக் கொண்டு, வரும் வருவாயெல்லாம் தன் வீட்டிலே கொண்டு போய்ப் பதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கோ நாட்டுக்கோ ஒன்றுமே செய்யாமல் இருக்கும் ஊழல்வாதிகளின் விபரீதப் போக்கினால் விளைந்த நிலைதான் இந்த முறை இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட சேதாரத்தின் அளவு.

    இந்த சேதாரத்தின் அளவு கோல்தான் இனி வருங்காலங்களில் அரசாள்பவர்கள் எப்படி இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்கான அளவு கோல்.

    எந்த ஒரு சிறு பொருளை நாம் உரிமையாக்கிக் கொண்டாலும் அந்தப் பொருளைப் பராமரிப்பதிலேதான் இருக்கிறது அந்தப் பொருள் மூலமாகக் நமக்கு கிடைக்கும் வளங்கள் வசதிகள். குதிரையை வைத்துக் கொள்ளலாம், அதன் மேல் ஏறி சவாரி செய்யும் போது கிடைக்கும் சுகம் பயண அனுபவங்கள் அனைத்துமே மற்ற நாட்களில் அந்தக் குதிரையைப் பராமரிப்பதில்தான் அடங்கி உள்ளது.

    யானையை வைத்துக் கொண்டு இறைவனை அதன் மேலேற்றித் திருவீதிப் புறப்பாடு செய்து மக்களை மகிழ்விக்கலாம், மற்ற நாட்களில் அந்த யானையைப் பொதுமக்களிடம் வேடிக்கைப் பொருளாகக் காட்டிப் பணம் செய்யலாம் ஆனால் அந்த யானைக்குத் தேவையான உணவை அளித்து அந்த யானையின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதைப் பராமரித்தால்தான் அந்த யானையும் நலமாக இருக்கும் நமக்கும் உபயோகப்படும்.

    இல்லையேல் அது மிரண்டு பொதுமக்களையும் கடைகளையும் கண்ணில் படும் பொருட்களையும் தாக்கி அழிக்கும். அது போலத்தான் நாடும் இயற்கையும் மற்ற நேரங்களில் பராமரிக்காவிட்டால். ஆறு, குளம், ஏரிகள் போன்ற நீர் நிலைகளைத் தூர்வாரி சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் மழை பெய்யும் நாட்களில் அவை சுத்தமான தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு நமக்குத் தண்ணீர் தரும். அதை விடுத்து அவைகளை மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காக ஆக்ரமித்து அவற்றை அவதிப்படுத்தினால் அவை தங்கள் மேல் விழும் நீருடன் ஆக்ரமிப்பாளர்களைத் தாக்கி அழிக்கும் என்பது நமக்குப் பாடமாக இருக்க வேண்டும்.

    மக்களைத் தெளிவான கல்வி கொடுத்து அறிவாளிகளாக ஆக்குவதை விடுத்து, கல்விக்குப் பணம் பிடுங்கி சம்பாதிக்கக் கல்விக் கூடங்களைக் கட்டி அதன் மூலமாக மக்கள் பாடுபட்டு ஈட்டிய பொருளையெல்லாம் கொள்ளையடித்து அப்படியும் தரமான கல்வி அளிக்காமல் மக்களைத் தவறான திரைப்படங்கள், தொலைக் காட்சிகள் மற்றும் போதைப் பொருட்கள் மூலமாக திசைதிருப்பி அவர்களை எப்போதும் போதையிலேயே வைத்திருந்தால்தான் நாம் கொள்ளையடிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கொள்ளையடித்துக் கொண்டே இருந்தால் மக்கள் வேண்டுமானால் மழுங்கிக் கிடக்கலாம் ஆனால் இயற்கை சீறி எழும் என்பதற்கு அத்தாட்சிதான் இந்த முறை பெய்த மழை.

    இயற்கையை எப்படிப்பட்ட குறுக்குபுத்தி உள்ளவரும் அரசியல் சூழ்ச்சிகள் செய்வோரும் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்த்திய மழை.

    கடல் கொந்தளித்தால் சுனாமியாக உருவெடுத்து நாட்டின் உள்ளே சீறிப் பாய்ந்து அழிக்கும் என்று நினைத்திருந்தோமே,
    அப்படி அல்ல, கடலுக்குச் சென்று கலக்க வேண்டிய ஆறுகள், கழிவு நீர்க் குழாய்களின் கழிவு நீர் ஆகியவை கடலுக்குச் சென்று கலக்க முறையான பாதைகள் இல்லாவிட்டாலும் நாட்டின் உள்ளே இருக்கும் நீர் நிலைகளே நிரம்பி குடியிருப்புகள் வீடுகள் வழியாகவும் சாலைகளிலேயும் புகுந்து நாட்டை அழிக்கும் என்று உணர்த்திய மழை.

    சுயநலவாதிகள் தூண்டிவிடும் ஜாதி வெறி தேவையில்லாத ஒன்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய மழை.

    தவறு செய்வோரைத் தட்டிக் கேட்கும் உரிமை இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் உண்டு என்பதை உணர்த்திய மழை
    அப்படித் தட்டிக் கேட்காவிட்டால் நாடும் நாமும் எப்படி அவதிப்படுவோம் என்று உணர்த்திய மழை.

    இயற்கையின் முன்னால் அனைவரும் சமமே. பாதிப்பு எல்லோருக்கும் தான் வரும் என்று உணர்த்திய மழை.

    அண்டை மாநிலங்களும் ஒருவருக்கு ஒருவர் உதவித்தான் ஆக வேண்டும் மனிதாபிமானமே உயரிய உணர்வு என்று மக்களுக்கு உணர்த்திய மழை.

    நாம் அளிக்கும் வாக்குகளின் உயர்வை மதிப்பை உணர்ந்து அந்த வாக்குகளினால் ஆட்சிக்கு வருவோர் அவர்தம் கடமைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் இல்லையென்றால் நமக்குத்தான் அவதி என்று மக்களுக்கு உணர்த்திய மழை.

    ஆட்சிக்கு வந்தால் போதாது, மக்களுக்கு நலம் செய்யவே வந்திருக்கிறோம் என்பதை மறந்து ஊழலில் திளைத்தால் பேதம் பார்க்காமல் எல்லோரையுமே அவதிக்குள்ளாக்கும் என்று ஆளுவோருக்கு உணர்த்திய மழை.

    இப்படி இயற்கை மழை மூலமாக நமக்கெல்லாம் மனிதத்தை மழை இந்த முறை உணர்த்தியுள்ளது.

    ஆனாலும் இயற்கையின் சீற்றத்துக்கு ஆட்பட்டு உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றிப் பச்சிளங் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி, வயது முதிர்ந்தோர் நோயுற்றோர் மருந்துகளின்றி, மொட்டை மாடியிலும் மார்பு வரையில் சாக்கடை நீரிலும் சொத்துக்களையெல்லாம் இழந்து சாலைகளிலே நடுத்தெருவிலே நின்று சொந்த பந்தங்களின் நிலை என்ன என்றே அறியாமல் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் அகதிகளாக அவதிப்படும் இந்த நேரத்திலே என்னைப் போன்ற முதியவர்களும் நாம் சென்று உதவ முடியவில்லையே என்று ஏங்கி ஏதோ எங்களால் இயன்றவரை இறைவனை வேண்டிக்கொண்டு உதவ முயல்கிறோம். ஆனால் சில சுயநலவாதிகள் எரிகிற கூரையில் பிடுங்கின வரையில் லாபம் என்று பால் பாக்கெட்டை 100 ரூபாய்க்கும் காய்கறிகளை அநியாய விலைக்கும் விற்றுப் பொருள் ஈட்டுகிறார்கள். சில துரோகிகள் அதற்கும் மேலே பூட்டியிருக்கும் வீடுகளில் உள்ள பொருட்களைக் கொள்ளையடிக்கிறார்கள்.

    மனிதம் செத்துப் போனால் உலகம் இருந்தும் உபயோகமில்லை.

    ஆபத்துக் காலங்களில் பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான் ஆனால் பணமே வாழ்க்கையல்ல.

    எவ்வளவு பணம் இருந்தாலும் சென்ற உயிரை மீட்க முடியாது. போகும் உயிரை நிறுத்த முடியாது. இதை உணராமல் நடக்கும் மனித மிருகங்களை என்ன செய்வது?

    உணருங்கள் மனிதர்களே!

    இயற்கைதான் கடவுள். அவற்றைப் பராமரிக்காவிட்டால் அவற்றின் சீற்றத்தை நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை உணருங்கள். மனிதம் காக்கப்பட வேண்டுமானால் இயற்கையைக் காக்கப் பழகுங்கள். அப்போதுதான் இயற்கை நம்மைக் காக்கும்.

    இது இயற்கையின் விதி!

    அன்புடன் தமிழ்த்தேனீ

    படம் உதவி: விக்கி பீடியா

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 189

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

    தீங்கு நேரும் என மாதரி கூறக்கேட்டு
    மயங்கி நின்றாள் ஐயை;
    அவளிடம் மாதரி, “மகளே! மயங்காதே;
    இச்சகுனங்களுக்கு வருந்தாமல்
    அமைதி காணும் தீர்வும் உள்ளது;

    இவ்வுலகில் பிறந்த பெண்களுக்கெல்லாம்
    அணியாக விளங்குகின்ற
    கண்ணகி கண்டு மகிழும்படி
    யாம் இடைக்குலப் பெண்டிர்
    அனைவரும் ஒன்றுகூடி
    முன்னொருநாள் ஆயற்பாடியில்
    தன் தமையன் பலதேவனோடு
    கண்ணன் நிகழ்த்திய
    இளம்பருவத்தின் செயல்களைப் பற்றிய
    நாடகங்கள் பலவற்றுள்
    நப்பின்னையோடு அவர்கள் நிகழ்த்திய
    நாடகத்தை இப்போது ஆடுவோமாக;
    இத்தீய சகுனங்கள் காரணமாக
    நம் ஆநிரைகளுக்குத்
    துன்பம் நேராமல் காத்திடுக” என்று
    அத்தெய்வங்களிடம் வேண்டுவோமாக!

    கொளு

    கரிய நிறமுடைய ஆண் ஏற்றின்
    சினத்துக்கு அஞ்சாமல்
    அதன்மீது பாய்ந்து அடக்குகின்ற ஆயனை,
    தேன்நிறைந்த இந்த மலர்மாலையை
    ஏந்தியவள் விரும்புவாள்.

    சுட்டு

    நெற்றியின்கண் சிவந்த சுட்டியினை உடைய
    ஆண்ஏற்றை அடக்கிய அந்தத் தலைவனுக்கு,
    இப்பொன் வளையல்களை அணிந்த ஆயமகளின்
    தோள்கள் உரியனவாம்.

    வீரமும் இளமையும் உடைய இந்த ஏற்றினை அடக்கி
    அதன் முதுகின்மேல் ஏறி
    அதனைச் செலுத்திய ஆயனுக்கு
    முல்லைப்பூக்கள் சூடிய கூந்தலை உடைய
    இந்த ஆய்ச்சி வாழ்க்கைத் துணைவியாவாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

     

    Share
  • உன்னையறிந்தால் ….. (34)

    நிர்மலா ராகவன்

    முழுமையான கல்வி

    உனையறிந்தால்
    கேள்வி: பதின்ம வயதினருக்கு இயற்கையாகவே ஆண்-பெண் உறவு, கர்ப்பம், குழந்தைப்பேறு இவைகளைப்பற்றி இயல்பாகவே தெரியவேண்டுமே! தெரியாததுபோல் ஏதாவது கேட்டு, பெரியவர்களை ஆழம்பார்க்கிறார்களா?

    விளக்கம்: சிலருக்குத் தெரிந்திருக்கலாம். நண்பர்களிடமிருந்து அரைகுறையாக அறிவார்கள். ஆனால் அது பெற்றோரோ, ஆசிரியரோ தகுந்த முறையில் சொல்லிக்கொடுப்பதுபோல் ஆகாது.

    விஞ்ஞான பாடத்தை ஒட்டி, தொலைகாட்சியில் கர்ப்பத்தைப்பற்றிய ஒரு வீடியோ காண்பித்தேன் என் மாணவிகளுக்கு. அவர்கள் குழம்பிப்போனார்கள்.

    `கருவின் தலை மேலே இருக்கிறது. ஆனால், பிறக்கும்போது எப்படி தலை கீழே வருகிறது?’ என்று ஒருத்தி கேட்டாள். எனக்கு அவளைவிட ஆச்சரியம்.

    `உனக்குத் தம்பி, தங்கைகள் இருக்கிறார்களா?’ என்று கேட்டேன்.
    `ஆம்,’ என்றாள்.
    `அம்மா வயிற்றில் அவர்கள் இருந்தபோது, நீ தொட்டுப் பார்த்ததில்லை?’

    `அம்மா விடமாட்டார்கள். ஏன் தலை வேறு விதமாக வெளிவருகிறது என்று அவர்களுக்கே தெரியாது!’

    கரு வயிற்றில் உருளும், தாயின் தொப்புளுடன் அதன் தொப்புள் கொடி இணைந்திருக்கிறது, அதன்வழிதான் ஆகாரத்தின் சத்து கருவுக்குள் சென்று அது பெரிதாக வளரச் செய்கிறது என்றெல்லாம் விளக்கினேன்.

    எனக்கு இன்னொரு சந்தேகம் முளைத்தது. மாத விலக்குபற்றிதான். தவறான உணவை உட்கொள்ளுவதால், அல்லது பாவம் செய்ததால் என்று சிலர் நினைத்திருக்க, பிறர் அதைப்பற்றி எதுவும் தெரியாதென்றார்கள்.

    ஆண்களுடன் கைகுலுக்கினால் கர்ப்பம் அடைவோமா என்ற சந்தேகம் சிலருக்கு. ரகசியமாகக் கேட்டார்கள். மாணவர்களோ, பெண்களுடன் எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று கேட்டார்கள்.

    `கூடாது’ என்ற விஷயத்தில்தான் இளைஞர்களின் ஆர்வம் அதிகரிக்கும். உலகில் பாதி பேர் இன்னொரு பாலர் என்றிருக்க, ஒரு பெண் ஆண்களைப் பார்த்தாலே ஓடி ஒளிந்துகொள்ள முடியுமா, என்ன?

    என் வகுப்பறையில் பையன்கள் ஒரு புறமும், பெண்கள் இன்னொரு புறமும் உட்கார்ந்திருந்தார்கள். வகுப்பில் இருப்பவர்களுடன் மட்டும் பேசுவார்கள். `பிறரைப் பார்த்தால், ஹலோ என்று சொல்லுங்கள். மரியாதையாகப் பழகுங்கள். விசில் எல்லாம் அடிக்கக்கூடாது,’ என்றேன். அவரவர் மேசைக்கு ஏதாவது கனமான சாமானைத் தூக்கிப்போக வேண்டியிருந்தபோது, `டீச்சர்! பெண்களுக்கு உதவலாமா?’ என்று அனுமதி வேண்டுவார்கள் சில துணிச்சலான பையன்கள். புன்சிரிப்புடன் அனுமதி கொடுப்பேன்.

    `அனேகமாக எல்லாருக்கும் கல்யாணம் ஆகிறது. இப்போதே பெண்களைப்பற்றிப் பேசி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? முன்னுக்கு வருகிற வழியைப் பாருங்கள்!’ வளரும் பருவத்திலிருப்பவர்களுக்கு என் அறிவுரை.

    ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒருவரைப்பற்றி ஒருவர் அறிய இயற்கையான ஆர்வம் இருக்கிறது. அதைச் சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும். பெண்களுடன் பேசுவதே தவறு, வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று வளர்த்தால், நாற்பது வயதுக்கு மேலாகியும், பெண்களைப் பார்த்தால் விடலைப் பையன் மாதிரிதான் நடந்துகொள்வார்கள்.

    கதை: எனக்குப் பத்து வயதானபோது, எங்கள் வீட்டு மாடியில் சேஷாத்ரி என்று ஒரு பையன். என்னைவிட இரண்டு வயது பெரியவன். என் அண்ணனுடன் அவன் விளையாட வரும்போது, நானும் கலந்துகொள்வேன். (அவர்களுடன் மோதி, எந்த விளையாட்டிலும் நான் ஜெயித்ததில்லை. முதலில் தோற்பது நானாகத்தான் இருக்கும். இதனாலேயே பையன்களுக்கு என்னை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளப் பிடிக்கும்! `அழுகுண்ணி ஆட்டம்!’ என்று அழுதபடியே நானும் நாள்தவறாது விளையாடுவேன்).

    `இனிமே சேஷாத்ரியோட விளையாடாதே. பாவம், அவனோட அப்பா அடிக்கிறார், பொண்களோட என்ன விளையாட்டுன்னு!’ என்ற என் தாயார் கூறியபோது, எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏன் என்னுடன் விளையாடக் கூடாது?

    நான் வீட்டு வாசலில் நின்றிருந்தால், சேஷாத்ரி தலையைச் சற்று அதிகமாகவே குனிந்துகொண்டு விரைந்துவிடுவான். எனக்கு ரோஷமாக இருக்கும். அவன் பெயரைச் சொல்லிச் சொல்லிக் கூப்பிடுவேன். அவன் தலை இன்னும் அதிகமாகக் குனியும்.

    இப்போது நினைத்துப் பார்க்கிறேன்: விவரமறியாப் பருவத்திலேயே பெண்களைப் பார்ப்பதுகூட இழுக்கு என்பதுபோல் வளர்க்கப்பட்ட ஒருவன் பெண்களுடைய குணாதிசயங்களைப்பற்றி எதுவுமே அறிந்துகொள்ள முடியாதே! மனைவியுடன் நட்புடன் பழக முடியுமா? இதேபோல்தான் பல இல்லங்களில் பெண்களும் வளர்க்கப்படுகிறார்கள் — ஆண் என்றாலே பயந்து ஒதுங்க வேண்டும் என்பதுபோல். இப்படிப்பட்ட இருவர் திருமணத்தால் இணைந்தால், அறியாமையே அச்சத்தையோ, அதிகாரத்தையோ விதைக்கும்.

    பழகத் தெரியாததால்தான், `நான் ஆண்!’ என்று, பெருமிதத்துடன் மனைவியை அடக்கியாள நினைக்கிறார்களோ, பலர்?
    `என் பெண் கூடப்படிக்கும் பையன்களுடன் பழகுகிறாள். நம் காலம் போலில்லை. அவள் என்ன செய்துவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது!’ என்று ஒரு தாய் என்னிடம் கூற, `நாம் வளர்த்த பெண் தப்பு செய்வாளா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்!’ என்றேன். தாயின் முகம் தெளிந்தது.

    `ஆண்களுடன் எந்த அளவு பழகலாம்?’ என்று ஒரு பெண் அறியாமையுடன் கேட்கும்போது, எல்லையை வகுக்கலாம். தாய் தடுமாறி, தன் சங்கடத்தை மறைக்க கோபத்தை வெளிக்காட்டினால், பெண்ணின் குழப்பம் அதிகரிக்குமே! வெளிப்படையாகப் பேசுவது பூசி மெழுகுவதைக் காட்டிலும் சிறந்தது.

    தொடருவோம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(98)

    செண்பக ஜெகதீசன்

    நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு. 
    (திருக்குறள்-783: நட்பு)

    புதுக் கவிதையில்…

    படிக்கப் படிக்க,
    புதிதாய்ப் பொருள்தந்து
    புத்துணர்ச்சி தந்திடும்
    புத்தகம் போல்,
    பழகப் பழகப்
    பேரின்பம் தரும்
    பண்புடையோர் நட்பு…!

    குறும்பாவில்…

    படிக்கப் படிக்கப் புரியும்
    நூல்நயம்போல் இன்பந்தரும்,
    தொடரும் நல்லோர் நட்பு…!

    மரபுக் கவிதையில்…

    படிக்கும் நல்ல புத்தகத்தின்
      –பொருளும் நயமும் புரிந்திடவே
    அடிக்கடிப் படிக்கும் பழக்கமதை
      –அனுதினம் கொண்டால் நலந்தருமே,
    கிடைத்திடும் நல்லோர் நட்பினிலும்
      –கூடுதல் நேரம் பழகிவந்தால்,
    தடையிலா யின்பம் கிடைத்திடுமே,
         –தொடர்ந்திடு நல்லோர் நட்பினையே!

    லிமரைக்கூ…

    நயந்தெரிய நூலைப் படித்திடு நன்றாய்,
    நல்லாரொடு நட்பது சிறக்க
    பலமுறை பழகிடு அவருடன் ஒன்றாய்!

    கிராமிய பாணியில்…

    படிபடி நல்லாப்படி
    படிச்சதயே திரும்பப்படி,
    புத்தகத்துப் பெருமதெரிய
    பலமொறதான் நல்லாப்படி,
    படிக்கப்படிக்கப் பொருள்தெரியும்
    புத்தகத்துப் பெருமதெரியும்… 

    இதுபோல,
    பழகப்பழக வளந்துவரும்
    நல்லவுங்க நட்புதானே,
    அதால
    பழகுபழகு நல்லாப்பழகு
    நட்புபெருக நல்லாப்பழகு… 

    படிபடி நல்லாப்படி
    படிச்சதயே திரும்பப்படி,
    பழகுபழகு நல்லாப்பழகு
    நட்புபெருக நல்லாப்பழகு…!

     

     

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல்   (6)

    க. பாலசுப்பிரமணியன்

    குழந்தையின் அறிதல் பரிமாணங்கள்

     education4

    டாக்டர் அன் லாக்ஸ்டேன் என்ற ஒரு மனநல அறிவியல் ஆராய்ச்சியாளர் தனது “உங்கள் குழந்தையின் முதல் ஆறு மாதங்கள்” என்ற நூலில் கூறுகின்றார் ” குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் – உடல் வளர்ச்சி, பெரும் உடற்கூறுகளின் நகர்வுகள்,(Gross Motor Movement),  சிறிய உடற்கூறுகளின் அசைவுகள் (Fine Motor movement) , ஒலி -ஒளிக்கான எதிர் அசைவுகள், ( Response to  light  and sound ) மொழி மற்றும் உடல் அசைவுகள் மூலம் தெரியப்படுத்துதல் (Verbal and non -verbal communication), உறவாடுதல் (emotional interaction) ஆகியவை.”

    அதே போல் ஒரு குழந்தை அழும் போது அது மறைமுகமாக தன் தேவைகளை வெளிப்படுத்துகிறது. அதைக் கண்ட தாய் அந்தக் குறையை நீக்க முயற்சிக்கிறாள். அதை அறியும் குழந்தை தான் அழுதால் தன் குறை நிறைவேறி தாயின் கவனம் தன் பக்கம் ஈர்க்கப் படும் என்று உணர்கிறது, ,, கற்றுக்கொள்கிறது   ஒரு குழந்தை இன்புறும்போதும் துன்புறும்போதும் அந்த உணர்வுகள் நினைவுகளாக மூலையில் சில குறிப்பிட்ட இடங்களில் பதிவு செய்யப் படுகின்றன. இன்புறும் உணர்வுகளை குழதையின் உள்ளம் மீண்டும் மீண்டும் நாடுகின்றது. துன்புறும் செயல்களிலிருந்து விலகிட தன் எதிர்ப்புகளை அழுகை மூலமாக வெளிப்படுத்துகின்றது. எனவே குழந்தையோடு உறவாடும் தாய் மிகக் கவனமாக இந்த உணர்வுகளைக் கவனித்து  குழந்தை வளர்ப்பில் நாட்டம் காண வேண்டும்.

    குழந்தைகள் தலையைத் திருப்பிப் பார்க்கும் செயல், கை விரல்களை மூடித் திறக்கும் செயல், மற்றும் ஒலி, ஒளி கண்டு அந்த திசையை நோக்கி பார்த்தல் போன்ற பல செயல்கள் கற்றல் என்ற திறனை வளர்க்க அடிகோலுகின்றன. அறிந்துகொள்ள முயற்சி செய்தல் (knowledge  exploration ) மற்றும் அனுபம் மூலமாக அறிதல் (Experiential learning ) என்ற இரண்டு வகையான அறிதல் பயிற்சிகளுக்கு இவை அடிகோலுகின்றன,

    சிறு குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பொம்மைகள் பற்றிய ஆராய்ச்சி பல வெளி நாடுகளில் நடத்தப் பட்டு இருக்கின்றன. அந்த பொம்மைகள் எவ்வாறு ஒரு குழந்தையின் மனதைப் பாதிக்கிறது. அதனுடன் விளையாடும் பொழுது உடனடியான தாக்கம் என்ன, அதனுடைய பின் விளைவுகள் என்ன என்பது பற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.. மற்றும் சில பொம்மைகளால் குழந்தையின் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி (safety  of Toys) ஆராய்ச்சிகள் செய்யப் பட்டுள்ளன. வலைத்தளங்களுக்குச் சென்று இது பற்றி பெற்றோர்கள் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

    பெற்றோர்கள் குழந்தைகளுக்கான பொம்மைகள் வாங்கும் பொழுது அவை தங்களுக்குப் பிடித்திருக்கின்றதா என்பதை விட  அதனால் குழந்தைகளின் மன நிலையில் என்ன பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்து வாங்க வேண்டும். அவைகள் அந்தக் குழந்தையின் வயதுக்கு ஏற்றதா குழந்தையின் மனத்தில் உணர்வில் வன்முறையைத் தூண்டி விடுமா என்றெல்லாம் யோசித்து பின் வாங்க வேண்டும்.

    குழந்தைகளுடன் பழகும் பொழுது பொம்மைகள் மூலமாகவோ அல்லது படங்கள் அல்லது நிழல்கள் மூலமாகவோ குழந்தைகளை பய்முர்த்தும் போக்கை முற்றிலும் தவிர்க்கவேண்டும். சிறு குழந்தைகளை கண்டிக்க முயற்சிக்காமல் “இதைச் செய்யாதே” என்று சொல்வதை விட “இப்படிச் செய்யவேண்டும் ” என்று சொல்லி ஆக்கபூர்வமமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

     தொடருவோம்

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -5

     பாரசீக மூலம்உமர் கயாம் ​ரூபையாத்

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம்சி. ஜெயபாரதன், கனடா

    umar5   

    புகழுக் காகச் சிலர் இவ்வுலகில்; ஏங்குவர் சிலர்
    போதகரின் சொர்க்கபுரி வரவேண்டு மென்று;
    பணத்தைப் பெற்று, கைவிடு உறுதி வாக்கை,
    தூர முரசின் குமுற லுக்குக் கவனம் வேண்டாம்
    .

    13. Some for the Glories of This World; and some
           Sigh for the Prophet’s Paradise to come;
           Ah, take the Cash, and let the Promise go,
           Nor heed the rumble of a distant Drum!

    மடமை அல்லவா !  சிலந்தி போல் பின்னி
    நிகழ்கால வாழ்வு நூலறுத்து வெல்வதா,
    நாமிழுக்கும் காற்றை நாமே வெளி யேற்றி
    நமக்கே மூச்சு விடத் தெரியாத போது
    !

    14. Were it not Folly, Spider-like to spin
           The Thread of present Life away to win —
           What? for ourselves, who know not if we shall
           Breathe out the very Breath we now breathe in!

    நமது புகழ்பரப்பும் நறுமணப் பூவை நோக்கு;
    நவிலும் அது நகைத்து,“தரணிக்குள் வீசுவேன்;
    பட்டுக் குஞ்சப் பணப்பை கிழியும் எனக் குடனே,
    கொட்டும் பணக் களஞ்சியம் தோட்டத் திடலில்
    .”

    15.  Look to the Rose that blows about us — “Lo,
            Laughing,” she says, “into the World I blow:
            At once the silken Tassel of my Purse
            Tear, and its Treasure on the Garden throw.”

     

    ​         +++++++++++++++++++   ​

    ​   ​

    தகவல்: 

    1.  http://www.acole.com/novels/timuras/khayyam.html

    2.http://poetsgraves.co.uk/Classic%20Poems/FitzGerald/rubaiyat_of_omar_khayyam.htm

    1.  http://www.omarkhayyamrubaiyat.com/text.htm
    1.  https://en.wikipedia.org/wiki/Rubaiyat_of_Omar_Khayyam[November 17, 2015]

     

    Share
  • சென்னை மழை! 

    -மெய்யன் நடராஜ் 

    இல்லையில்லை இங்கு மழையில்லை என்றழுத
    தொல்லை தனைமாற்ற மண்மேலே – எல்லையற்றுப்
    பெய்யும் மழைதந்து மக்கள் மனம்கழுவி
    உய்விக்க விட்டான் இறை.

    உய்விக்க விட்ட உயர்மழை நீண்டதால்
    செய்வ தறியாது திண்டாடி – மெய்யுருகித்
    தெய்வமே போதும் நிறுத்தி விடுஎன்று
    பெய்தலில் சோர்ந்தார் பிணித்து.

    பார்க்கும் இடமெங்கும் தண்ணீர்மயம் கொட்டித்
    தீர்க்கும் மழையாலே திக்கற்று – நீர்க்குள்
    திசைதேடி நிற்கும் சனம்கண்டு நெஞ்சம்
    அசைவற்று நிற்கு ததிர்ந்து.

    அரியா சனமமர்ந்து ஆட்சி தனையே
    புரியும் அதிபதி  மார்க்கும் – சரியா
    சனம்கொடுத்து நீரால் சமத்துவம் காட்டச்
    சினம்கொண்ட வானின் சிதைப்பு.

    வீடுகள் தம்மை விரைவாக மூழ்கடித்துக்
    கேடு விளைவித்துத் துன்பத்தில் – போடும்
    அடைமழை  மக்கள் இயல்பு நிலையைப்
    புடைத்தெடுத்து  விட்டதுவே பார்.

    கையில் பணமும் கடல்போல் நிலமிருந்தும்
    மெய்யுறங்க மெத்தை மிருதிருந்தும்  –  வெய்யிலைச்
    செய்ய பணத்தால் வழியற்று வீதிநின்றுக்
    கையேந்த வைத்ததியற் கை.

    தொடர்மழை வெள்ளம் துடிதுடிக்க வைக்க
    இடர்ப்படும் மக்கள்  பலவாய் – இடம்பெயர்ந்
    தாங்காங்கே நிர்க்கதியாய் நின்று தவிக்கின்றார்
    தூங்குவதாய் இல்லை விசும்பு.

    ஊரெங்கும் நீரிரிந்து மள்ளிக் குடிப்பதற்கு
    நீரின்றித் நீர்மேலே தத்தளிக்கும் – பேர்கொண்ட
    போராட்டம் மாறிப் புனர்வாழ்வு காண்பதற்கு
    நீரோட்டம் சற்றே நிறுத்து.

    தூர இருந்து துடிக்கின்றோம் நாமிந்த
    நேரத்தில் நெஞ்சம்  பதைக்கிறோம் – சீரற்றக்
    காலநிலை சீக்கிரம் சீராக் கியற்கைநீ
    கோலமிடு வானின் சுடர்.

    உழைத்துண்போர் கேட்டுத் தவமிருந்த பொன்செய்
    மழைக்காலம் விட்டுவிட்டு வன்செய் – பிழைக்காலம்
    தந்தினி என்செய்வோ மென்றேங்க விட்டாயே
    நொந்தனர் நூலாய் நொடிந்து.

     

     

    Share
  • தாணுப் பாட்டியின் பிள்ளை   -சிறுகதை

    க.பாலசுப்ரமணியன்

    முடிச்சூரில் மூன்று வருடங்களுக்கு முன்னால்தான் பாஸ்கரன் அடுக்குமாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் ஓர் வீடு வாங்கியிருந்தான். அதை வாங்குவதற்காக ஓர் வங்கியிலிருந்து முப்பது லட்சம் கடன் கூட வாங்கியிருந்தான். இனிமேல் தனக்கு என்று ஒரு வீடு இருக்கும் அதில் மனைவி, குழந்தை மற்றும் வயதான தாயாரோடு வீட்டுக்காரர் தொந்தரவின்றி வாழலாம் என்ற ஒரு ஆசையில்தான். ஆனால் ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் இறைவன் இன்னொரு வகையில் அதைப் பிடுங்கிவிடுகிறார் என்ற உண்மை அவனுக்குத் தெரிய வில்லை !

    இதுதான் அன்று அவன் வீட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி. அவன் மனைவி ரம்யா தன் மூன்றாவது வகுப்பில் படிக்கின்ற மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க அமர்ந்தாள்  ” ஏண்டா சங்கர் இன்னிக்கி என்ன ஹோம் வொர்க் கொடுத்தாங்க?”

    “அம்மா டீச்சர் போர்டில எழுதிப் போட்டாங்க. நான் எழுதிக்க மறந்துட்டேன். சாரி “

    ” இடியட் . எவ்வளவு செலவழிச்சு உன்னை படிக்க வைக்கறோம். பொறுப்பில்லாம ..”என்று சொல்லிக்கொண்டே அவன் தலையில் ஓர் குட்டு வைத்தாள்

    “அம்மா “என்று அலறிக்கொண்டே எழுந்து ஓட அவனை தாய் ரம்யா பின் தொடர… ” ஏண்டி ரம்யா.. சின்னக் கொழந்தையை இப்படி கஷ்டப்படுத்தற.. ஒரு நாள் அவன் அதைப் பண்ணலேன்னா என்ன குடியா முழுகிப் போயிடும்?” என்று பாஸ்கரனின் தாயார் சொல்ல, அதன் பின் ஒரே அமர்க்களம்தான்.

    “அம்மா. நீங்க சும்மா இருங்கோ. குழந்தை படிப்பில எல்லாம் மூக்கை நுழைக்காதிங்கோ. எவ்வளவு கஷ்டப்பட்டு அவனுக்குப் பணம் கட்டறோம் தெரியுமா.. உங்க காலம் வேற.. இந்தக் காலம் வேற. சாப்பிட்டோமா.. ராமா கிருஷ்ணான்னு இருந்தோமா என்று இருங்கோ.”

    தாணுப் பாட்டியின் முகம் தொங்கியது.. இந்த நேரத்தில் நீங்கள் தாணுப் பாட்டியை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். சின்ன வயதில் தன்யா என்ற அழகான பெயருடனும் அதற்கேற்ற அழகுடனும் ஜொலித்த பெண்தான் இன்று தாணுப் பாட்டி. அந்தக் காலத்து  பொருளாதரப் பட்டதாரி. சரளமாக ஆங்கிலம் வரும். அவருடைய கணவர் மத்திய அரசில்; ஒரு பொறுப்பான வேலையில் இருந்தவர். காலமாகிப் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன.

    தன்னுடைய ஒரே மகனின் திருமணத்திற்குப் பிறகு அவர்களுடன் தங்கியிருக்கிறார். கணவருடைய பென்ஷன் பணம் கொஞ்சம் மாதம்தோறும் கிடைக்கிறது. அதை அப்படியே தன் மகன் பாஸ்கரனிடம் கொடுத்து விடுகிறார். இப்போது சில மாதங்களாக தன் மருமகளின் போக்கு பற்றி அவளுக்கு மனத்தில் கொஞ்சம் வருத்தம்.  ஆனால் வெளியே காட்டிகொள்வதில்லை.

    அன்று இரவு பாஸ்கரன் மெதுவாக அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான்

    “அம்மா. ரம்யா ஏதோ குழந்தைக்குப் பாடம் சொல்லிக்கொடுத்திட்டுப் போறா. அதிலே நீ ஏம்மா தலையிடறே .. உங்க ரெண்டு பேருக்கு நடுவில நான் மாட்டிக்கொண்டு..  ஒரே தலைவலி..” தன் மூக்குக்கண்ணாடியை சற்றே உயர்த்தி தாணுப் பாட்டி தன் மகனை ஒரு முறை உற்றுப் பார்த்தாள். ஆனால் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

    இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்னொரு காட்சி..

    பாஸ்கரன் தன்னுடைய ஆபீசிலிருந்து வீட்டில் நுழைந்து சோபாவில் அமர்ந்தான். ரம்யா உள்ளே இன்னொரு அறையில் வந்திருந்த தன் தோழியோடு பேசிக்கொண்டிருந்தாள்

    “ரம்யா.. ரம்யா. “தாணுப் பாட்டி குரலிட்டாள் . பதில் கிடைக்கவில்லை. பாஸ்கரன் அமைதியாகக் களைப்புடன் உட்கார்ந்திருந்தான் . மீண்டும் அவள் குரல் எழுப்பினாள் . “ரம்யா…”

    “என்னம்மா .. ஏன் அலறறேள் ? ஏதோ இடி விழுந்த மாதிரி.. நான் ரெண்டு நிமிஷம் யாரோடையாவது பேசிக்கொண்டிருந்தா உங்களுக்குப் பொறுக்காதே…”என்று சொல்லிக்கொண்டே ஹாலில் நுழைந்தாள் .

    ” பாஸ்கரன் வந்து எவ்வளவு நேரமாச்சு தெரியுமா.. ஒரு காப்பி கொடுக்க மாட்டியோ ?”

    “நான் மாட்டேன்னா சொன்னேன். ஏன் அவர் உள்ள வந்து காப்பி வேண்டும்னு கேட்கக் கூடாதா என்ன.?”

    “இல்லடி. அவன் ரொம்பக் களைப்பா உட்கார்ந்திருந்தானே .. என்று நினைத்துத் தான் நான் சொன்னேன்.”

    “நானும் ஆபீசிக்குத் தானே போறேன். எனக்கு மட்டும் களைப்பில்லையா? உங்க பிள்ளைக்கு மட்டும் தானா?”

    வாக்குவாதம் முற்றியது. முற்றுப் புள்ளியாக ரம்யா ஒரு பக்கம் அழ, தாணுப் பாட்டி ஒரு பக்கம், அழ…

    காட்சிகள் சில நாட்கள் தொடர்கதையாக, ….ஒரு நாள் ………….

    பாஸ்கரன் தன் தாயார் அருகில் அன்போடு அமர்ந்தான்,. ” அம்மா.. உன்னைப் பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வளவு நாள் சந்தோஷமா இருந்துட்டு இப்போ இவள் கிட்ட வேண்டாத வார்த்தையெல்லாம் கேட்டுக் கொண்டு… “

    தன் மகனைக் கூர்ந்து பார்த்த தாணுவிற்க்கு  அவன் வார்த்தைகளின் உள்ளர்த்தம் புரிந்தது .. “சொல்லுடா.. மேல..”

    தலையைக் குனிந்துகொண்டே ” இல்லே.. நீ வேற எங்கேயாவது சந்தோஷமா இருப்பியான்னு யோசிச்சுப் பார்க்கறேன். “

    “ம்…..”  பாஸ்கரன் மேலே பேச முடியாமல் அமர்ந்திருந்தான்.

    “சொல்லுடா.. முதியோர் விடுதிக்குப் போகணும்னு சொல்லறே .. அவ்வளவுதானே.. இதை சொல்லுவதற்கு என்னடா தயக்கம்? ” தைரியமாகப் பேசினாள் தாணு.

    தன் கண்களை உயர்த்தித் தன் தாயைப் பார்த்த பாஸ்கரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

    இரண்டு வருட காலமாக அதனால்தான் தாணுப் பாட்டி இந்த முதியோர் விடுதியில் “சந்தோஷமாக”இருக்கிறாள். மாதம் ஒரு முறை பாஸ்கரனும் ரம்யாவும் தங்கள் குழந்தையோடு வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள். போன மாதம் தீபாவளிக்குக் கூட அம்மாவிற்கு ஒரு புடவை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான் அன்பு மகன் பாஸ்கரன்.

    இன்று மாலையிலே அவள் தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் உட்கார்ந்து சென்னையை உலுக்கி எடுத்த மழையைப் பற்றிய செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்  முடிச்சூரில் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் அவளுக்கு ஒரே கவலை. தன் மகன் அவன் குடும்பத்தைப் பற்றித்தான்.. தொடர்புகொள்ள அவளுக்கு வழியில்லை. தொலைபேசிகளும் வேலை செய்ய வில்லை..

    திடீரென்று அவள் பார்த்த காட்சி அவளை உலுக்கியது..  பாஸ்கரன் அந்த வெள்ளத்தின் நடுவே ஒரு முதியவரை கைகளில் தூக்கிக்கொண்டு வந்த காட்சி.. செய்தியாளர் பாஸ்கரனை அறிமுகம் செய்து வைத்து வர்ணிக்கிறார். “இவர் பெயர் பாஸ்கரன். இது வரை இவர் இந்தப் பகுதியிலிருக்கும் பதினைந்து முதியவர்களையும் எட்டு குழந்தைகளையும் தன் கைகளிலும் தோள்களிலும் தூக்கி வந்து அவர்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றார். மனித நேயத்திற்கு இவர் ஒரு முன்னுதாரணம். அவருக்கு எங்கள் பாராட்டுக்கள். “

    “சார்.. இவ்வளவு முதியவர்களை நீங்கள் தனியாகக் கைகளிலும் தோள்களிலும் தூக்கி வந்து காப்பாற்றியிருக்கின்றீர்கள் . அவர்களைத் தூக்கி வரும் பொழுது உங்களுக்கு மனதில் என்ன தோன்றியது ?”

    ” ஒவ்வொருவரைத் தூக்கும் பொழுதும் என்னுடைய சொந்தத் தாயையோ அல்லது தந்தையையோ தூக்கி வருவது போன்ற எண்ணமே எனக்கு இருந்தது. “

    தாணுப் பாட்டியின் கண்களில் நீர் வழிந்தது. பக்கத்தில் அமர்ந்திருத்த இன்னொரு மூதாட்டி தாணுவிடம் சொன்னார். “யார் பெத்த பிள்ளையோ .. என்ன நல்ல மனசு பாருங்க.. எல்லோரையும் தன் அம்மா அப்பா போல நினைக்குது.. இந்தக் காலத்திலேயும் பிள்ளைங்க இருக்காங்களே… சொந்த அம்மா அப்பாவை நம்மளைப் போல் விடுதியிலே சேர்த்துட்டு… “

    தாணு என்ற தன்யாவிற்க்குத் தன் கல்லூரி நாட்களில் தான் பங்கெடுத்த ஒரு விவாத மேடையின் தலைப்பு நினைவில் வந்தது -“சூழ்நிலைகள் ஒரு மனிதனை உருவாக்குகின்றனவா அல்லது ஒரு மனிதன் தன் சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்கிறானா?”  அன்று சரியான வாதங்களை மேடையில் எடுத்து வைக்காததால் அவளுக்குப் பரிசு கிடைக்கவில்லை. இன்றும் அவளுக்கு இதற்கான பதில் சரியாகத் தெரியவில்லை.

    தாணுப் பாட்டி தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள் .. அவள் மனது சொன்னது.. “பாஸ்கரனும் நல்ல பிள்ளைதான் “

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share