செண்பக ஜெகதீசன்

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. 
(திருக்குறள்-783: நட்பு)

புதுக் கவிதையில்…

படிக்கப் படிக்க,
புதிதாய்ப் பொருள்தந்து
புத்துணர்ச்சி தந்திடும்
புத்தகம் போல்,
பழகப் பழகப்
பேரின்பம் தரும்
பண்புடையோர் நட்பு…!

குறும்பாவில்…

படிக்கப் படிக்கப் புரியும்
நூல்நயம்போல் இன்பந்தரும்,
தொடரும் நல்லோர் நட்பு…!

மரபுக் கவிதையில்…

படிக்கும் நல்ல புத்தகத்தின்
  –பொருளும் நயமும் புரிந்திடவே
அடிக்கடிப் படிக்கும் பழக்கமதை
  –அனுதினம் கொண்டால் நலந்தருமே,
கிடைத்திடும் நல்லோர் நட்பினிலும்
  –கூடுதல் நேரம் பழகிவந்தால்,
தடையிலா யின்பம் கிடைத்திடுமே,
     –தொடர்ந்திடு நல்லோர் நட்பினையே!

லிமரைக்கூ…

நயந்தெரிய நூலைப் படித்திடு நன்றாய்,
நல்லாரொடு நட்பது சிறக்க
பலமுறை பழகிடு அவருடன் ஒன்றாய்!

கிராமிய பாணியில்…

படிபடி நல்லாப்படி
படிச்சதயே திரும்பப்படி,
புத்தகத்துப் பெருமதெரிய
பலமொறதான் நல்லாப்படி,
படிக்கப்படிக்கப் பொருள்தெரியும்
புத்தகத்துப் பெருமதெரியும்… 

இதுபோல,
பழகப்பழக வளந்துவரும்
நல்லவுங்க நட்புதானே,
அதால
பழகுபழகு நல்லாப்பழகு
நட்புபெருக நல்லாப்பழகு… 

படிபடி நல்லாப்படி
படிச்சதயே திரும்பப்படி,
பழகுபழகு நல்லாப்பழகு
நட்புபெருக நல்லாப்பழகு…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.