கற்றல் – ஒரு ஆற்றல் (6)
க. பாலசுப்பிரமணியன்
குழந்தையின் அறிதல் பரிமாணங்கள்
டாக்டர் அன் லாக்ஸ்டேன் என்ற ஒரு மனநல அறிவியல் ஆராய்ச்சியாளர் தனது “உங்கள் குழந்தையின் முதல் ஆறு மாதங்கள்” என்ற நூலில் கூறுகின்றார் ” குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் – உடல் வளர்ச்சி, பெரும் உடற்கூறுகளின் நகர்வுகள்,(Gross Motor Movement), சிறிய உடற்கூறுகளின் அசைவுகள் (Fine Motor movement) , ஒலி -ஒளிக்கான எதிர் அசைவுகள், ( Response to light and sound ) மொழி மற்றும் உடல் அசைவுகள் மூலம் தெரியப்படுத்துதல் (Verbal and non -verbal communication), உறவாடுதல் (emotional interaction) ஆகியவை.”
அதே போல் ஒரு குழந்தை அழும் போது அது மறைமுகமாக தன் தேவைகளை வெளிப்படுத்துகிறது. அதைக் கண்ட தாய் அந்தக் குறையை நீக்க முயற்சிக்கிறாள். அதை அறியும் குழந்தை தான் அழுதால் தன் குறை நிறைவேறி தாயின் கவனம் தன் பக்கம் ஈர்க்கப் படும் என்று உணர்கிறது, ,, கற்றுக்கொள்கிறது ஒரு குழந்தை இன்புறும்போதும் துன்புறும்போதும் அந்த உணர்வுகள் நினைவுகளாக மூலையில் சில குறிப்பிட்ட இடங்களில் பதிவு செய்யப் படுகின்றன. இன்புறும் உணர்வுகளை குழதையின் உள்ளம் மீண்டும் மீண்டும் நாடுகின்றது. துன்புறும் செயல்களிலிருந்து விலகிட தன் எதிர்ப்புகளை அழுகை மூலமாக வெளிப்படுத்துகின்றது. எனவே குழந்தையோடு உறவாடும் தாய் மிகக் கவனமாக இந்த உணர்வுகளைக் கவனித்து குழந்தை வளர்ப்பில் நாட்டம் காண வேண்டும்.
குழந்தைகள் தலையைத் திருப்பிப் பார்க்கும் செயல், கை விரல்களை மூடித் திறக்கும் செயல், மற்றும் ஒலி, ஒளி கண்டு அந்த திசையை நோக்கி பார்த்தல் போன்ற பல செயல்கள் கற்றல் என்ற திறனை வளர்க்க அடிகோலுகின்றன. அறிந்துகொள்ள முயற்சி செய்தல் (knowledge exploration ) மற்றும் அனுபம் மூலமாக அறிதல் (Experiential learning ) என்ற இரண்டு வகையான அறிதல் பயிற்சிகளுக்கு இவை அடிகோலுகின்றன,
சிறு குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பொம்மைகள் பற்றிய ஆராய்ச்சி பல வெளி நாடுகளில் நடத்தப் பட்டு இருக்கின்றன. அந்த பொம்மைகள் எவ்வாறு ஒரு குழந்தையின் மனதைப் பாதிக்கிறது. அதனுடன் விளையாடும் பொழுது உடனடியான தாக்கம் என்ன, அதனுடைய பின் விளைவுகள் என்ன என்பது பற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.. மற்றும் சில பொம்மைகளால் குழந்தையின் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி (safety of Toys) ஆராய்ச்சிகள் செய்யப் பட்டுள்ளன. வலைத்தளங்களுக்குச் சென்று இது பற்றி பெற்றோர்கள் அறிந்து கொள்ளுதல் அவசியம்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கான பொம்மைகள் வாங்கும் பொழுது அவை தங்களுக்குப் பிடித்திருக்கின்றதா என்பதை விட அதனால் குழந்தைகளின் மன நிலையில் என்ன பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்து வாங்க வேண்டும். அவைகள் அந்தக் குழந்தையின் வயதுக்கு ஏற்றதா குழந்தையின் மனத்தில் உணர்வில் வன்முறையைத் தூண்டி விடுமா என்றெல்லாம் யோசித்து பின் வாங்க வேண்டும்.
குழந்தைகளுடன் பழகும் பொழுது பொம்மைகள் மூலமாகவோ அல்லது படங்கள் அல்லது நிழல்கள் மூலமாகவோ குழந்தைகளை பய்முர்த்தும் போக்கை முற்றிலும் தவிர்க்கவேண்டும். சிறு குழந்தைகளை கண்டிக்க முயற்சிக்காமல் “இதைச் செய்யாதே” என்று சொல்வதை விட “இப்படிச் செய்யவேண்டும் ” என்று சொல்லி ஆக்கபூர்வமமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
தொடருவோம்
அருமையான கருத்துக்கள் – பாராட்டுக்கள் நன்றி வணக்கம்
தங்கள் கருத்துக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி..