Year: 2015

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஆண்டாள் -7

    d555f8d6-dd64-4969-af43-c0d6f1142e4b

    ”கீச்சுக்கீச்(சு) என்றுஅதி காலையில் ஏந்திருந்து,(எழுந்திருந்து)
    கேச்சவனைக்(கேசவன் -உம்ம்மாச்சி) கோயிலில் காணுமாறு, -நாச்சியார்
    பாச்சுரம்(பாசுரம்) பாடுகிறாள், கேச்சவன்(ஓவியர் கேசவ்) காட்டுகிறார்
    நேச்சுரலாய், மார்கழி நோன்பு”….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் 6 சோளிங்கர் யோக நரசிம்மர்

    க. பாலசுப்பிரமணியன்

    bbd9c22f-1754-49df-9593-6c5846aa0993

    அரிபாதி நரன்பாதி சரிபாதி உருவாகி

    அருள்மாரி பொழிகின்ற அவதாரச் சிறப்பே!

    கல்பாதி மண்பாதி தூண்பாதி உடைய

    உள்பாதி வெளிபாதி அமர்ந்த  திருவே  !

     

    அகம்நாடி இகம்நாடி அருள்நாடா மதிமூடன்

    விதிமுடிக்க இடம்நாடி வந்த அருள்வடிவே !

    அரியன்றி வேறில்லையெனக் குறியுணர்ந்து

    கதிகேட்ட கோமகனை வாழ்வித்த கோவிந்தா  !

     

    விண்பாட மண்பாட வேதங்கள் புகழ்பாட

    பண்பாட சொல்லில்லா பாவலர் தடுமாற

    சொல்லுக்குள் சுவையாய் சுவைக்குள் சொல்லாய்

    கல்லுக்குள் கரும்பாய்  காட்சி தந்தாய் !

     

    கனலான கண்களிலே கருணைபொழிய

    கமலத்தில் அமர்ந்தாளும் வேண்டிடவே

    கனிவுடனே கால்தொடையில் அமர்த்தி

    களிப்புடனே காட்சி தந்த யோகேஸ்வரா !

     

    தீயோர்கள் மடிந்திடுவர் தீமைகள் விலகிவிடும்

    தீராத பிணியெல்லாம் தீர்த்தமொன்றே நீக்கிவிடும்

    தீண்டிய பயமெல்லாம் தீதின்றி மறைந்துவிடும்

    திருநாமம் சொல்லியுன் திருப்பதமே நாடிட்டால் !

     

    கடிகையிலே கண்திறக்கும் திருகடிகைவாசா !

    சோதனைகள் நீக்கிவிடும் சோழலிங்கநாதா !

    அருளுக்கு அழகுதரும் அன்பே,அழகியசிங்கா !

    ஆட்கொள்ள வந்திடுவாய் ஆழிவாழ் அமரேசா !

    Share
  • அகந்தையின்றி அரந்தை தீர்ப்போம்!

    -மேகலா இராமமூர்த்தி

    மானுட உயிர்கள் அனைத்திற்கும் பிறப்பு ஒத்தவகையில் அமைந்திருந்தபோதினும், பணம், பதவி, வசதிவாய்ப்புக்கள் இன்னபிறவற்றில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அனைத்து உயிர்களும் ஒரே வகையான சிறப்பையும், மதிப்பையும் சமுதாயத்தில் பெறுவதில்லை. இன்று நேற்றல்ல…வள்ளுவர் காலத்திலேயே நம் சமூகம் இப்படித்தான் இருந்திருக்கின்றது. அதனால்தான் அவர்,

    ”பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்”
    என்று குறள் எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

    வளமையும் வறுமையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்போல் சமூகத்தில் என்றுமிருப்பவை. வளமான வாழ்வுபெற்றோர் அனைவரும் எளியோர்க்குதவும் வளமான மனத்தையும் பெற்றிருப்பர் என்று கூறுவதற்கில்லை. அப்படியே உதவிசெய்யப் புகுவோரும் பெரும்பாலும் தம் பெயருக்குக் கிடைக்கப்போகும் விளம்பரத்தையும், தங்கள் கணக்கில் சேரப்போகும் புண்ணியத்தையும் எண்ணியுமே அறச்செயல்களும் தொண்டும் புரிவதாய்த் தோன்றுகின்றது.

    ”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
    பின்ன ருள்ள தருமங்கள் எல்லாம்
    பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்”
    என்று தருமவான்களின் உட்கிடையை வெளிப்படையாய்த் தன் பாட்டில் கூறுகின்ற பாரதி, இதுபோன்ற தருமங்கள் யாவும் அதைச் செய்வோரின் பெயரை ஒளியோடு நிறுத்த உதவுகின்றனவேயன்றி வேறுபயனில்லை என்று கூறுவதை நாம் எண்ணிப் பார்க்கலாம்.

    ஆலயம் கட்டுபவரை விடுங்கள்! ஆலயத்திற்குக் குழல்விளக்கு போட்டுத்தரும் இறைத்தொண்டர்கூட, அந்தக் குழல்விளக்கின் வெளிச்சம் தவறியும் வெளியில் கசிந்துவிடாதபடி அதில் தன்னுடைய ’பீடும் பெயரும்’ (நடுகல் போன்று) எழுதிவிடுகின்றார். இதனால், அத்தொண்டரின் புகழொளியின்முன் விளக்கின் ஒளியும் குன்றிப்போய்விடுகின்றது.

    அப்படியானால் உண்மையான இறைத்தொண்டு என்பது என்ன?

    இதற்கு விடைபகர்கின்றது தெய்வச்சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம். இறைபக்திச் செல்வர்களான தொண்டர்கள் எவ்வாறிருக்கவேண்டும் என்பதை இதன் வாயிலாய் நாமும் தெரிந்து தெளியலாம்.

    thiru”இறைவனின் உண்மைத் தொண்டர்கள் தமக்கு வரும் ஆக்கத்தையும், கேட்டையும் ஒன்றாகவே எண்ணும் இயல்பினர்; அவர்கள் (உலகியல் சார்ந்த) எந்தப்பொருள்மீதும் பற்றுவைப்பதில்லை; அவர்களுக்கு மண்ணாலான ஓடும், விலைமதிப்பில்லா செம்பொன்னும் ஒத்த தன்மையனவே. இத்தொண்டர்களின் பற்றும், பாசமும் பற்றுக்களை அறுக்கும் சிவபரம்பொருள்மீது மட்டுமே! அதைத்தாண்டி, வீடுபேற்றுக்கும் ஆசைப்படாத விறல்வீரர்கள் இவர்கள்” என்று தொண்டர்களின் நல்லியல்பை நமக்கு விண்டுரைக்கின்றார் தொண்டர்சீர் பரவுவார்.

    கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
    ஓடும்
    செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும்
    அன்பினில் கும்பிடலே அன்றி
    வீடும்
    வேண்டா விறலின் விளங்கினார் (திரு.தொ.புராணம்– திருக்கூட்டச்சிறப்பு)

    ’ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்’ தொண்டர் கூட்டமெல்லாம் கதைகளிலும் காவியங்களிலும் மட்டுமே காணக்கூடியவை; நிஜத்தில் அப்படி யாரேனும் இருப்பரோ? என்றொரு ஐயமும் நமக்கு எழுகின்றது அல்லவா?

    நம் ஐயம் நியாயமானதே! தொண்டர்களில் அநேகர் செம்பொன்னையும் ஓட்டையும் ஒன்றாய் நினைக்கும் அளவிற்கு வாழ்வியல் இன்பங்களை வெறுத்தவர்களில்லை; பொன்னாசையை ஒழித்தவர்களில்லை.

    பின், சேக்கிழார் தொண்டர்தம் இயல்பை இவ்வாறு வரையறுத்தது ஏன்?

    சற்றே சிந்தித்தால் இதற்கான விடை புலப்படுகின்றது. ஆம், சேக்கிழாரின் வரையறைக்கு முற்றாய்ப் பொருந்தக்கூடிய இறைத்தொண்டர் ஒருவர் அன்று இருக்கவே செய்தார். மங்கையர்குலதிலகமும், சிவநேசச் செல்வியுமான திலகவதியாரின் அருமைத் தம்பியான ’மருள்நீக்கியாராய்’ப் பிறந்து, சமண மதத்தைச் சிலகாலம் சார்ந்திருந்து, பின்பு தமக்கையின் வழிகாட்டுதலில்படிச் சைவநெறிக்குத் திரும்பிய அருள்நெறிச் செல்வரான திருநாவுக்கரசப் பெருமானே அந்த உண்மைத் தொண்டர்! 

    அந்த அருளாளர், தம் வாழ்வின் இறுதிப்பகுதியில் திருப்புகலூர் எனும் சிவத்தலத்தில் திருமடம் ஒன்றை நிறுவிச் சிவத்தொண்டும், உழவாரப்பணியும் (கோயிலையும் அதன் சுற்றுப்புறங்களையும் குப்பைகளின்றிச் சுத்தம் செய்தல்) புரிந்துவந்தார். தூவெண்மதிசூடிய பிரானின் பெருமையினை அருந்தமிழ்ப் பாக்களாய் இயற்றி, தேவாதி தேவனான அவனுக்கு ஆரமாய்ச் சூட்டி அழகுபார்த்திருந்த வாகீசரின் உலகாயதப் பற்றற்ற நிலையைக் குவலயத்துக்கு உணர்த்தவிரும்பிய இறையனார், நாவுக்கரசர் உழவாரப்பணி செய்துவந்த இடத்தில் மண்ணோடு பொன்னையும் நவமணிகளையும் கலந்திருக்கச்செய்தார்.

    உழவாரம் செய்துவந்த அப்பர்பெருமான், பொன்னும் விலையுயர்ந்த மணிகளும் மண்ணில் மின்னுவதைக் கண்டார். ஆன்மபலங் கொண்ட அந்த வீரர் அவற்றைக்கண்டு சற்றேனும் சித்தத்தில் சபலம் கொண்டாரில்லை. அவையும் அவர் கண்களுக்குக் கோயிலின் தூய்மையைக் கெடுக்கும் குப்பைகளாகவே தோன்றின. ஆதலால் மற்ற குப்பைகளோடு அவற்றையும் தன் உழவாரத்தில் வாரியெடுத்துத் தூரவீசினார்.

    செம்பொன்னும்  நவமணியுஞ் சேண்விளங்க ஆங்கெவையும்
    உம்பர்பிரான் திருமுன்றி ல் உருள்பருக்கை  உடனொக்க
    எம்பெருமான் வாகீச ர் உழவாரத் தினிலேந்தி
    வம்பலர்மென் பூங்கமல வாவியினில் புகவெறிந்தார். (திரு. தொ. புராணம் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்) என்று நாவுக்கரப்பெருமானின் தூய்மையான தொண்டுளத்தை நாவினிக்கப் பாடிய சேக்கிழார், உண்மைத் தொண்டரென்பவர் இவ்வாறு உயர்வு தாழ்வு பாராச் சமநோக்குச் சிந்தனையாளராகவே இருக்கவேண்டும் எனும் முடிவுக்கு வந்திருக்கவேண்டும்.

    இன்றைய இறைத்தொண்டர்களிடம் இத்துணைத் தியாகவுள்ளத்தையும், பற்றற்ற நிலையையும் நாம் எதிர்பார்க்கவியலாது. எனினும், சுயவிளம்பரமும், தம் தொண்டு குறித்த அகந்தையும் அவர்கள் மனத்தைவிட்டு அகலாதிருப்பதுதான் வியப்பையும் வேதனையையும் ஒருங்கே விளைக்கின்றது.

    அதற்கான சான்று ஒன்றும் சமீபத்தில் நமக்குக் கிடைத்தது. தமிழகத்தில் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடரில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிசெய்த சிலர், தங்களுடைய தொண்டு மனப்பான்மையை, தயாள குணத்தைத் தங்கள் மதத்தின் அடிப்படையில் விளம்பரப்படுத்திக்கொண்டது, அவர்கள் மனத்தில் மண்டியிருக்கும் ஆணவத்தை, அடங்காத மதவெறியை அவனிக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதாய் அமைந்திருந்தது!

    தொண்டு செய்யுமிடத்தில் மதத்திற்கு என்ன வேலை? அங்கே மனிதம் மட்டுமே அல்லவா மலர்ந்திருக்க வேண்டும்! அப்போதுதான் செய்திடும் அறச்செயல் புனிதமடையும். அதற்கு மனிதனை ஆட்டிப்படைக்கும் ’தான்’ எனும் அகந்தையும், அவனைப் பீடித்திருக்கும் அறியாமை இருளும் முழுமையாய் ஒழியவேண்டும். அவ்வாறு, அகந்தையின்றித் தொண்டுசெய்து ஏழை எளியோரின் அரந்தையைப் (துன்பத்தை) போக்குவோரின் உள்ளத்தில் இறைவன் வாழ்கின்றான்! அங்கே கோயில் கொள்கின்றான்!

    Share
  • பறந்து மறையும் கடல்நாகம்

    16d25475-ad51-4e4e-8040-51b937458cb5

     

    வெளியீடு: காவ்யா
    16, 2nd Cross Street,3rd floor,
    Trustpuram, Kodambakkam,
    Chennai 600 024

    பக்கம்: 1038
    விலை ; ரூ. 999

    Jayanthi Sankar / ஜெயந்தி சங்கர்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    05d87f8c-0310-48c8-b085-bd1aec1e0e5e
    ஆண்டாள் -4
    ————————-

    ‘’கோழி எழும்முன்னர் கூவித் திருப்பாவை,
    தோழியர் தம்மை துயிலெழுப்பி, -’’ஆழி
    மழைக்கண்ணா’’ பாடுகிறாள் மார்கழியாள், மாலை
    கழைத்தோளில் சூடிக் கொடுத்து’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    044d72ca-e716-46a3-9573-c48c5cd13567
    ”ஓங்கி உலகளந்தோன், தாங்கினான் குன்றினை,
    ஏங்கிய கோகுல யாதவர்க்காய், -பாங்கியாய்
    ஆண்டாளை ஏற்றநம் அச்சுத நெய்யிருக்க,
    வேண்டேலோர் வேறெம்பா வாய்’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – தமிழை ஆண்டாள்

    c2e37938-bb36-4ad5-96a0-f473aafd4cba
    ”ஆண்டாள்”
    ———————-

    ”பைகொண்ட பாம்பில் படுத்த பெருமாளை
    மைகொண்ட கண்ணாள் மலர்சூடி, -மெய்கொண்ட
    தைக்கண்ட தாமோ தரன்தாய்விட்(டு) ஓடிட,
    தைகண்டாள் மார்கழித் தாய்”….கிரேசி மோகன்….

    தைகண்டாள் -தை பிறந்தால் திருமண வழி பிறக்கும்….
    மார்கழித் தாய் -ஆண்டாள்

    “அழகாண்டாள் பாட்டு அழகாண்டாள் பக்தி
    பழகாண்டாள் போல்நீயும் பண்பு, -கழுகாண்டான்,
    கண்முன்னே தோன்றியுனைக் கல்யாணம் செய்திடுவான்
    பெண்கள்நாம் புருஷோத் தமர்க்கு” ….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ’’ஆண்டாள் -6’’….
    ———————————-

    2982fb3d-dbdc-4999-9828-9f4647981c66

    ‘’புள்ளும் சிலம்பின, புல்லும் தளும்பின,
    தெள்ளுதமிழ் ஆண்டாள் திருப்பாவை, -சொல்லிட:
    வெள்ளை மனத்தினள், வில்லிப்புத் தூர்வாழ்வு
    கொள்ளைத் தமிழமுதே காப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • தி லாஸ்ட் செல்ஃபி

    –கவிஜி.

    இந்தப் பயணத்தின் முடிவு எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது…. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடோ ஆசையோ இல்லை…

    போகி…………………….றே………………………..ன்…

    என் சொந்த ஊருக்கு, நான் பிறந்த மண்ணுக்கு… நீண்ட நாட்களுக்கு பின்.. இல்லையில்லை நீண்ட வருடங்களுக்கு பின்…போகிறேன்.. மனதுக்குள் ஏதேதோ மாற்றங்கள்.. நொடிக்கொரு தரம் மாறும் மனநிலைக்குள் நான் எந்த நொடி என்பதுதான் எனது பதிலாக இருக்கிறது, மாறாக கேள்வியும் கூட…கேள்விகளினூடாக நினைவுகளும் பயணிக்கத்தான் செய்கிறது….பயணங்களின் ஊடாக நினைவுகளும் நிலைக்கண்ணாடி சுமக்கத்தான் செய்கிறது….

    எங்கள் ஊருக்கு ஜீன்ஸ் பேண்டை அறிமுகப் படுத்தியவன் நானே.. கான்வாஸ் ஷூ.. குளிர் கண்ணாடி.. ஒற்றைக் காதுக் கடுக்கன் என்று 90களின் உலகத்தை ஊருக்குள் கொண்டு சென்றவன் நானே.. அதன் மூலமாக எனக்கு கிடைத்த பெண் தோழிகளின் எண்ணிக்கை அதிகம்.. அதே போல் அதைக் கண்டு பொறாமை கொண்டு எனை வாய்ப்பு கிடைத்தால் அடித்து துவைக்க காத்துக் கொண்டிருந்த ஆண் நண்பர்களுக்கும் பஞ்சமில்லை…ஆனாலும் நானே.. இளவரசன் என்பது போலதான்….. பைஜாமா போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதாக இருந்தாலும் சரி…தொடை ஒட்டிய ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு வீதி வலம் வருவதாக இருந்தாலும் சரி… நானே… நாகரிகத்தின் குறியீடாக இருப்பது போலக் காட்டிக் கொள்வேன்.. மற்றவர்களும் காண்பார்கள்….

    எல்லாரும் சாதாரண மிதி வண்டி ஓட்டியபோதே நான் பைக் மாதிரியான மிதி வண்டியை ஓட்டியவன்.. கொஞ்சம் ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் என்னை சுற்றி எப்போதும் படிப்பு தொடபான விஷயங்கள் மொய்த்துக் கொண்டிருக்கும்.. ஊருக்குள் பல பேருக்கு கடிதம் எழுதிக் கொடுத்தும், படித்தும், பேர் வாங்கிய கொஞ்சம் புத்திசாலியும் கூட…..ஊரில் இருக்கும் என்ன மாதிரி பசங்க எல்லாருமே பயந்து கொண்டிருந்த குடுகுடுப்புக் காரனை…. பேயை போல வேஷம் போட்டு ஊர்க்கோடி வரை விரட்டி கொண்டுபோய் விட்டு வந்த கில்லி என்று பெரியவர்கள் மெச்சுவார்கள்….

    அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.. நான் எங்களூருக்கு இப்போது போவது எதற்கென்றால்……?……

    சேப்டர் ஒன்
    அது உங்களில் பல பேருக்கு மொக்கையாக் கூட இருக்கலாம். என்ன செய்வது எனக்கு மொக்கையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கலாம். உங்களுக்கு மொக்கையா இருப்பது அவருக்கு பிடிக்கலாம்… எல்லாமே சமநிலை யதார்த்தம்தானே…அப்ப,டி அது எனக்கு ஹாபி… இந்த ஸ்டாம்ப்ஸ் எல்லாம் சேர்த்து வைப்பது போல… இந்த பழைய கால நாணயங்களையெல்லாம் சேகரிப்பது போல… சரி அப்படி என்ன ஹாபி என்று யோசிப்பவர்கள் பின் தொடருங்கள்…… சொல்கிறேன்..சொல்லுதல் எல்லாமே சொல்லி விட்டவைகளின் நீட்சி என்று நான் நம்புவதே இல்லை..நம்பியவைகளை எல்லாம் சொல்லிவிடுவதும் இல்லை… ஒரு புதிருக்குள் தலையை மட்டும் விட்டு விட்ட உடலின் வாலின் துடித்தலைப் போலதான் இங்கு வாழ்வின் இரண்டாம் பாகம் துடித்துக் கொண்டேயிருக்கிறது…..

    சுழற்சிகளின் தத்துவ சாரத்தோடு பேருந்தை விட்டு இறங்கிய நான், ஊர்க்கோடியில் இருந்த அந்த மரத்தை நோக்கித்தான் சென்றேன்…. என்னை தாண்டிய சிலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை… நானும் கண்டு கொள்ளவில்லை… என் மனம் முழுக்க அந்த மரமே வியாபித்திருந்தது…இந்த மரத்தின் யோசனை எத்தனை இரவுகளில் கிளை அசைத்திருக்கும்……மனம் அசைய அசைய மரத்தை பார்த்தும் விட்டேன்….பார்க்க பார்க்க பரவசம்… என் கண் முன்னால் விதைந்து… செடியாகி.. மரமாகி இத்தனை காலத்துக்கு அப்புறமும் இங்கு இப்படி நிற்கிறதே….. காலத்தின் கிளைகளை என்னவென்று வர்ணிப்பது…! அடுப்பில் சட்டினியை வைத்துக் கொண்டு…. “குட்டி…. ஓடிப் போய் கருவாபுல்ல புடிங்கிட்டு வா” ன்னு அத்தை சொல்ல சொல்ல, நான் பாதி மரம் ஏறி இருப்பேன்… அடுத்த கணம் பிடுங்கிய கறிவேப்பிலை சட்டினியில் மணக்க மணக்க வதக்கப் படும்… இன்றும் மணக்கும் நினைவுக்குள் மரம் இன்னும் பெரியதாகி இருந்தது…. இருக்கிறது….இருக்கும்……

    சுற்றும் முற்றும் பார்த்தேன்.. யாரும் இல்லை… பறந்து கிடந்த வெளி எங்கும் வெறும் கட்டடங்களால் சூழ்ந்த ஒரு வேறு பகுதி போல தோன்றினாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கொண்டது புதியதாக இருந்தது…இரவு பகல் பாராமல் வாசல் எங்கும் மக்களின் கூட்டமும்…அப்பத்தாவின் கதையும்…வெண்ணிலவின் குளிரும்.. அடர் வெயிலின் நிறமும்…. தங்கிக் கிடந்த நாட்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை…. தொலைக்காட்சியை முடக்கி வைத்துக் கொண்டார்கள் போல…. ஜன்னல்கள் கூட அடைபட்டே கிடந்தன……மள மளவென ஏற முடியவில்லை என்றாலும்.. பார்த்து பார்த்து ஏறினேன்… அப்பிடி இப்பிடி என்று கறிவேப்பிலை மரத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்… ஏனோ காலத்தில் பின்னோக்கி ஏறி நடந்து வந்து என் பால்யத்தை அடைந்தது போலவே ஒரு மிரட்சி… மனதுக்குள் மட்டும் கறிவேப்பிலையின் இலையில் தங்கிய நேற்று பெய்த மழையின் குளிர்ச்சி…

    எனக்கு புன்னகையை அடக்கவே முடியவில்லை…சிறு பிள்ளையின் இனிப்புத் தேடல் போல எனது மனம் அலைந்தது….எடுத்தேன் என் செல்போனை… முகத்துக்கு நேராக நீட்டினேன்.. கறிவேப்பிலை மரத்தின் உச்சியிலிருந்து கறிவேப்பிலை பழங்களினூடாக என் முகம் விழுவது போல ஒரு செல்பி எடுத்தேன்… நான் முன்னமே சொல்லாமல் சொன்னது போல என் ஹாபிக்கு என் நினைவுகளின் துளியை விதைக்கும் பயணம் இது என்பது போல… வாழ்வின் சாட்சியாய்…. ஒரு பால்ய நண்பனைப் போல நான் எடுத்துக் கொண்ட இந்த செல்பி… என்னை தாலாட்டியது போல இருந்தது….. தூரத்தில் இன்னுமும் ஏதோ ஒரு வீட்டில் “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது”…பாட்டு பாடிக் கொண்டிருந்தது….. மெய்மறந்த, என் பிடி விலக… சர சரவென கீழே………..

    சேப்டர் டூ
    நீண்டு கிடந்த தனிமைக்குள் மீண்டும் நான் தேடிக் கொண்ட தனிமையோடு அமர்ந்திருந்தேன்… இதே ரயிலடியில் எத்தனை நாள் விளையாடி இருப்பேன்.. எப்போதாவது வரும் அந்த ஒற்றை ரயிலைக் காண எத்தனை நேரம் காத்துக் கிடந்திருப்பேன்.. ரயில் மீது இனம் புரியாத அச்சம் கொண்ட ஆசை மனதுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும், இழுக்காத நிறுத்தல்களைக் கொண்ட குறியீட்டு சொப்பனமாய் நான் மீண்டும் மீண்டும் ஒரு ரயிலின் பாதையாய் இருப்பது போல இன்று அமர்ந்திருந்தேன்…..

    என் இடது பக்க விலா சதையில் இருந்து ரத்தம் கசிவதை துடைத்துக் கொண்டே அமர்ந்திருந்தேன்……கறிவேப்பிலை மரம் செல்பியில் கிடைத்த விழுதலில் இன்னும் கொஞ்சம் கீழே நகர்ந்திருந்தால் சதையை கிழித்த கூர் வாது.. வயிற்றுக்குள்ளும் சென்றிருக்கும்… கடைசி நேரத்தில் கிடைத்த இன்னொரு கிளை உயிர் காத்தது…நினைக்கவே உடல் வேர்த்தது….

    எத்தனை யோசித்தாலும்… என் சிறு வயது ரயிலுக்கு வண்ணம் பூசவே முடியவில்லை….. ஒரு கருப்பு வெள்ளை சினிமா படம் போலதான் ஓடி வந்து என்னைத் தாண்டி செல்லும் ரயிலை நினைக்க முடிகிறது…. ரயிலின் ஞாபகங்கள் எப்போதுமே தாலாட்டும் காலங்களைக் கொண்டவை… ஆனால் இன்று வரை நான் ரயிலில் பயணம் செய்ததே இல்லை என்பதை யோசிக்கும் போது, அன்று ரயிலைப் பார்க்க காத்திருந்த ஆசைக்கு கை கால் முளைத்து ஓட வைத்தது போலத்தான் நினைக்கிறேன்…..

    கண்களாய் நீண்டு விட்ட போதும் முழுக்க தண்டவாளத்தின் நீட்சியே….. ஒரு நதி போல திரும்பி பார்த்த பின்னும் வாலின் திரும்புதலாய் மீண்டும் நீண்டு கிடக்கும் இம் முனையை… இன்னும் கொஞ்சம் நீட்டித்துக் கொள்ளும் கற்பனையோடு இனம் புரியாத புள்ளிக்குள் அடைபட்டவனாக மிதந்தேன்…. தூரத்தில் கேட்கும் ரயிலின் ஓசையை துல்லியமாக இதயம் உள் வாங்கி எதிரொலிப்பதாக நினைத்த மாத்திரத்தில் ஒரு சதுர புள்ளியாக வரத் தொடங்கி இருந்தது ரயில்….

    ‘அதே ரயிலா’- என்று கேட்ட மனதோடு எழுந்து நின்றேன்……. தண்டாவாளத்தில் நடுவில் நின்ற போது மனதுக்குள் ஏதேதோ கிளிக்கியது….. ‘இது என் ரயில்’- என்ற ஒரு வகை இருள் மாப்புடன் என் செல்போனை எடுத்து என் முகத்துக்கு நேராக நீட்டி செல்பி எடுக்கத் தயாராக இருந்தேன்… ரயில் என் அருகே வரும் போது செல்பி எடுத்து விட்டு எட்டிக் குதிப்பதுதான் திட்டம்….

    ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது… நன்றாகவே சத்தத்தையும்.. வேகத்தையும் உள் வாங்க முடிந்தது…… ஏனோ கை நடுங்கத் தொடங்கியது… காதோரம் வியர்வை கொப்புளங்கள் உடைந்து வழிந்தன……. கால்கள் பலம் இழப்பது போல ஒரு நிஜம் என்னை சுற்றி அலையடித்தது…ரயிலின் பெரும் ஓலம் மிக அருகில் கேட்டது… என் பெரு விரல் வேலை செய்யாமல் இருப்பது போல தோன்ற, நொடியில் ஒரு முறை கிளிக் செய்தேன்… தொடுதிரையில் விரல் படாமலே வேகமாக தன் தலையை எடுத்துக் கொண்டது போல இருந்தது… என்ன செய்வதென்றே தெரியவில்லை.. எதற்கு நிற்கிறேன் என்றே மறந்து போனது…இன்னும் ரயிலின் நேரக்கத்தின் தூரம் குறைந்தது ….மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு சதுரத்தில் குவித்து… கண்களை கூர்மையாக்கி…கிளிக்கி விட்டேன்…. ஆனால் என் உடல் நடுக்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆடி விட.. மீண்டும் மீண்டும் முயற்சிகளில் கிளிக்கிக் கொண்டேயிருக்க…………… இருக்க…………………. க்க……………………. ரயில் என் முதுகுக்கு அருகே வந்து…வந்து……ந்து…………து…. வந்து விட்டதை செல் போன அப்படியொரு பயங்கர சத்தத்தோடு பிரதிபலித்தது……. இதோ.. இதோ.. அடுத்த நொடி….

    சேப்டர் 3
    எல்லா கிராமத்திலும்.. ஒரு கதை சொல்லி இருப்பார்கள்…. கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கும்… இந்த வீடு.. எங்கள் ஊர் கதை சொல்லியின் வீடு.. இந்த திண்ணையில்தான் கதை சொல்லியான எங்கள் எல்லாருக்கும் சொந்தமான, பொதுவான அப்பத்தா உட்கார்ந்திருக்கும்… விடிய விடிய சுவற்றைப் பார்த்து விட்டு விடிந்த பின், “இன்னுமா படம் போடறானுங்க.. நான் போறேன்”- என்று எழுந்த போதுதான்.. தான் திரையைப் பார்க்காமல் திரும்பி அமர்ந்திருந்ததை உள் வாங்கி கொள்ளும் அளவுக்கு ஏதோ ஒரு கதையின் ஓட்டத்தை மனதுக்குள் ஓட விட்டுக் கொண்டேயிருக்கும், ஒரு சுவாரஷ்யமான கதாபாத்திரம் எங்கள் அப்பத்தா………

    வெள்ளிக்கிழமை இரவென்றால் அது பேய் கதைக்கான நாள்.. அதுவும் அடுத்த இரண்டு நாட்கள் பள்ளிகள் விடுமுறை என்பதால் பள்ளி விட்டதுமே வீட்டுக்கு சென்று துணி மாற்றிக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று என்னைப் போல உள்ள பசங்களையும், பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு ஏதோ திருவிழாவுக்கு போவது போல படை திரட்டிக்கொண்டு வரும் நான் ஒரு கதாநாயகனாகவேதான் தோன்றுவேன்.. அப்படி ஒரு நினைப்பு….. அப்பத்தாவும்.. கதை சொல்லும் போதெல்லாம் அதிகமாக, என்னையேதான் பார்த்து பேசும்.. அடிக்கடி உதாரணதுக்கு.. “இப்போ இவன் இருக்கானே…” என்று என்னைத்தான் கை காட்டி பேசும்… ரயிலில் அடி பட்டு இறந்த யானை பேயின் கதையை சொன்ன நாளில்தான்.. ஊருக்குள் முதன் முதலாக ஒரு முக்கியமான நபர் வந்தார்… நாங்கள் அவரை கண்டு கொள்ளாமல் யானைப் பேயின் கதைக்குள் மூழ்கிக் கிடந்தோம்……

    அப்பத்தா கதை சொல்ல சொல்ல கதாபாத்திரங்கள் நம் அருகே செல்வதைப் போலவே இருக்கும்…. நம்மோடு கலந்து உரையாடுவது போல இருக்கும்… பேய்க் கதைகளின் பேய்கள் நம்மை ஊடுருவி பார்ப்பது போலவே இருக்கும்…… அப்படி ஒரு ஆளுமை.. வார்த்தை பிரயோகம்… கதைகள், காடு மலைகளைத் தாண்டி ஒரு தேவதையைத் தேடி ஓட வைக்கும்… இரவெல்லாம் விரட்டிய பேயிடம் மாட்டிக் கொள்ளாமல்… கிராமம் கிராமமாக ஓடிக் கொண்டேயிருக்கும் கதை நாயகன் பேயிடம் மாட்டிக் கொண்ட கதையைக் கூட காப்பாற்றியபடியே ஓடிக் கொண்டிருப்பான்……. அவன் ஓட்டம் தடை படும் நேரத்தில் எல்லாம்.. எங்களின் வாய் பிதுங்கும்…… விட்டால் அழுகையே வந்து விடும்…. எங்களின் முக குறிப்பை புரிந்து கொண்டு கதையை சாமர்த்தியமாக நீட்டிக் கொண்டு செல்லும் அப்பத்தா…. புதிர்களின் முடிச்சாகவேதான் தெரிந்தது…..

    ஒரு கதையில்கூட கெட்டவன் வெற்றி பெற்றது போல அப்பத்தா, கதையை முடிக்காது…..

    “தர்மம்தான் ஜெயிக்கணும்..”- என்று அடிக்கடி சொல்லும்.. “தீமை அழியத்தான் வேணும்….. நல்லவனா இருக்கத்தானே இந்த பொறப்பு.. அது கதையா இருந்தா என்ன… நிஜமா இருந்தா என்ன…?.. ரெண்டும் ஒன்னுதான்”- என்று அடிக்கடி அடிக் கோடிட்டு கதையை துவக்கும்… அல்லது முடிக்கும்…..

    அப்பத்தாவுக்கென்று யாரும் சொந்த பந்தங்கள் கிடையாது.. எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இந்த வீட்டில்தான், அதுவும் இந்த திண்ணையில் தான் உட்காந்திருக்கும்.. தூங்கும்.. பெரும்பாலும் பகலில் தூங்கிக் கொண்டேயிருக்கும்…இரவில் விழித்துக் கொண்டே கதை தேடிக் கொண்டிருக்கும்….கேட்டால் சொல்லும்…. “கதைங்கறது கதையில்ல, அது நிசம்…. அதை தேடிட்டே இருக்கனும்…. விட்டா உசுரு மாதிரி ஓடிப் போய்டும்…”- என்று தொடர்ந்து பேசும்.. பேச பேச பேசிக் கொண்டே இருக்கும் சொற்களின் கூட்டாஞ்சோறுக் குவியலாய் எங்களுக்கு மட்டும் ருசி சேர்ந்து கொண்டேயிருக்கும்……

    சிறுகதை… குறுங்கதை.. தொடர்கதை.. ஒப்பாரிபாட்டு.. பிறந்த நாள் பாட்டு… நாற்று நட பாட்டு… சமைந்த பெண்ணுக்கு பாட்டு…இறப்புக்கு பாட்டு என்று எப்போதும்.. கதைகளும் பாட்டுகளும்தான்….. இவை அனைத்தும் இலக்கியங்கள் என்று தெரியாமலே இங்கேயே வாழ்ந்து இங்கேயே முடிந்தும் போன அப்பத்தாவை நினைக்க நினைக்க மனதுக்குள், விட்ட கதை தொட்ட கதை விடாமலும், தொடாமலும்.. துரத்துவதை உணர முடிந்தது….எத்தனையோ அப்பத்தாக்கள் சொல்ல முடியாத கதைகளோடு, கதைகளாய் ஆகி விடுவதை கோடிட்டுக் கொண்டே இருந்த மனதோடு……ஊருக்குள் தனித்துக் கிடந்த வீட்டில் யாருமில்லாமல் இடிந்து பாழடைந்து கிடந்த திண்ணையின் ஓரத்தில் அமர்ந்தேன்….மனக் கண் முன்னால் அப்பத்தா திண்ணையில் அமர்ந்திருப்பது போலவும் நாங்கள் கீழே அமர்ந்து அப்பத்தாவையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் காட்சிகள் முன் பின்னாக ஓடின..அடித் தொண்டையில் அடிக்கடி சிரிக்கும் அப்பத்தாவின் குரல் கூட கேட்பது போலதான் இருந்தது அந்த நிமிடம்…

    அப்பத்தாவின் ஆன்மா எனக்குள் ஏதோ ஒரு கதையை சொல்ல முயற்சிப்பதாக நினைக்கத் தூண்டியது.. அங்கு சட்டென வீச ஆரம்பித்த கறிவேப்பிலை வாசம்…. கறிவேப்பிலை துவையல் மீதிருந்த அப்பத்தாவின் ஆசையை ஞாபகமூட்டியது…

    கதைசொல்லிகளின் மனதில்தான் கதைகளின் ஆரம்பவும் முடிவும் கணக் கச்சிதமாக அமர்ந்து விடுகின்றன……. மனம் கனத்த மௌனத்துக்குள் செல்ல செல்ல.. நான் என் செல்போனை எடுத்தேன்.. ஏற்கனவே எடுத்த செல்பிகளை மீண்டும் தொடுதிரை நகர்த்தி நகர்த்தி பார்த்தேன்….மனம் ஒரு வித அலைக்குள் தடுமாறி ஆழ்ந்த மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டது போல உணர்ந்தேன்….. … கறிவேப்பிலை மர உச்சியில் எடுத்த செல்பி.. என்னை ஒரு சிறு பிள்ளையாக காட்டியது போல இருந்தது….. அடுத்து…………. நகர்த்தினேன்…..அடுத்து…………. நகர்த்தினேன்…. ரயிலின் முன்னால் நொடிகளில் உயிர் தப்பிய செல்பி…. பட படக்கும் காற்றில் மிதந்து செல்லும் ஒரு போர் வீரனைப் போல காட்டியது….. புன்னகைக்க தோன்றியது…. திக் திக் நொடிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பின் ஒரு சமயம் பார்க்கும் போது… கிடைக்கும் திர்லிங்… கைகளின் மயிர்கால்கள் நட்டுக் கொண்டன……. மைக்ரோ நொடிகளில் உயிர் தப்பிய ….செல்பியல்லவா…!

    சிரித்துக் கொண்டே … மெல்ல தலையை சாய்த்து.. அப்பத்தா அமர்ந்திருக்கும் இடத்தோடு தலையைக் காட்டி ஒரு செல்பி எடுத்தேன்.. எடுக்க எடுக்கவே உடலை வளைத்து நின்ற கால்கள்… தடுமாறி…திரும்பி..

    “என் கண்கள்… என் கண்கள்… அப்பத்தா……”………………………… கத்தினேன்…..

    சேப்டர் 4
    “நான் வந்த ரயிலில் தான் அந்த யானை அடி பட்டு செத்து போச்சு”- என்றுதான் எங்களிடம் பேசவே ஆரம்பித்தது ஷைலஜா… எனக்கு ஷைலஜாவைப் பார்க்க பார்க்க ஒரு புது மாதிரியாக இருந்தது…..

    சைலஜா…. எப்டி இருக்கும் என்று எப்படி சொல்வது……?…!….

    இந்த சினிமாக்களில் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு படித்த பெண், தாவணி பாவாடையில் வெல வெலவென ஒல்லியாக, வளர்ந்து ஜடையை தூக்கி முன்னால் போட்டுக் கொண்டு, மாலை நேரங்களில் சிறுவர்களுக்கு பாடம் எடுப்பார்களே.. அந்த மாதிரி ஒரு பெண்… அந்த மாதிரி எங்கள் ஊரில் எந்த பெண்ணும் இருந்ததில்லை. எப்போதும் குளித்து, தலை முடியை காற்றில் அலைய விட்டு… உதட்டு சாயம் பூசி… பள பளக்கும் குட்டிகுரா பவ்டர் போட்டு… அதுவும் அவ்ளோ உயரத்தில் பார்க்கவே, பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும் அழகு….

    தூரத்தில் வந்தாலும் மினுங்கும் ஒற்றை மூக்குத்தி… முகத்தை இன்னும் அழகாக்கி காட்டும்.. நான் நிறைய தடவை நேராகவே, “அக்கா நீங்க ரெம்ப அழகு” என்று கூறி இருக்கிறேன்… ஷைலஜா என்னை பிடித்து இழுத்து என் கன்னத்தில் ஆழமாக ஒரு முத்தம் பதித்து…. “என்ன அக்கானு எல்லாம் கூப்ட வேண்டாம்… ஷைலுனு கூப்டு, அதான்.. அழகா இருக்கும்” என்று கண்ணடித்தது..

    நானும்.. முதலில் தயங்கி தயங்கி ‘ஷை…ல் …லு….” என்று மெல்ல முணங்கிக் கொண்டே அழைத்தேன்…. வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் “ஷைலுலுலுலுலுலுலுலு……………..” என்று சத்தமாக கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன்… மெல்ல பழகியது…… பல நாள் இரவுகளில் வெண்ணிலா முகம் பிரகாசிக்கும் மொட்டைமாடியில்… நான் அப்பத்தா கூறிய பேய்க் கதைகளை கூறுவேன்… கண்கள் அகல விரிந்து… பின் மெல்ல சுருக்கி … உதடு குவித்து… பின், கதையின் போக்குக்கு தகுந்தார் போல முகம் மற்றும் உடல் விரியும் ஒரு மோகினியைப் போல மாற்றிக் கொள்ளும் ஷைலுவின் பாவங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே செய்யாது…

    “அப்பத்தா கதை சொன்ன அந்த வெள்ளிக் கிழமையில் வந்த அந்த முக்கியமான ஆள் இந்த ஷைலுதான்…” என்று குழந்தையின் கன்னத்தை பிடித்து இழுப்பது போல நான் அவ்வப் போது செய்வது ஷைலுவுக்கு ரெம்ப பிடிக்கும்…

    “அது ஏன் ஷைலு…….தினமும்.. நம்மூர் ஆம்பளைங்க எல்லாம் தெரியாம தெரியாம இங்க வராங்க.. அப்போ மட்டும் நீ என்னை வீட்டுக்கு போக சொல்லிர்ற….. ஏன்?…..” என்று கேட்ட போது.. என்னை சற்று நேரம் முறைத்து பார்த்து விட்டு,……. ‘வா’…… என்று அருகே அழைத்து இறுகக் கட்டிக் கொண்டது…. அதன் பிறகு நான் கேட்பது இல்லை…….

    ஒரு நாள் நீண்ட நேரம் அழுது கொண்டிருக்கும் போல…. முகம் வீங்கி கண்கள் சிவந்திருந்தது….

    “ஏன் சைலு அழுதிருக்க…. என்னாச்சு….?”- என்று கேட்டேன்..

    என்னைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்தபடி “சீக்கிரம்… தம்பி பாப்பா பொறக்க போறான்.. எனக்கு பயமா இருக்கு…. இன்னைக்கு என் கூடயே படுத்துக்கோ”- என்று என்னை அணைத்து என் வயிற்றில் முகம் புதைத்து தூங்கிப் போனது…. நான் தூக்கம் வராமல்.. வெகு நேரம் விழித்துக் கிடந்தேன்…

    காலையில், “ஆமா உனக்கு வயசென்னடா.. உன் உயரத்தை வச்சு சொல்லவே முடியல” என்று கேட்டது…

    நான் ’13’ என்றேன்.. மெல்ல திறந்த புன்னகையோடு.

    சிரித்துக் கொண்டே கன்னம் பிடித்து கிள்ளியது ஷைலு…

    அதன் பிறகு…. நான் ஊரை விட்டு போக வேண்டியதாய் இருக்க, எல்லாவற்றையும் விட்டு சென்றது போல ஷைலுவையும் விட்டு சென்றேன்.. காலத்தின் ஓட்டத்தில் மறதி என்பதை விட.. ஞாபகம் என்பதே அதிகம் இருந்தாலும்… தூரம் அதிகமானது போலதான் இருந்தது… என்று யோசித்துக் கொண்டே ஷைலுவைப் பார்க்க சைலுவின் வீட்டு பக்கம் போய்க் கொண்டிருக்கும் போதுதான்.. ஆங்காங்கே சிலர் நிற்பதும், குனிந்து கொண்டு போவதும் வருவதுமாக இருந்தார்கள்….

    கண்களில் பட்டாம் பூச்சிகள் சிறகில்லாமல் பறப்பது போல ஒரு பிரமை…என் கண்ணுக்கருகே வலித்த கன்னப்பரப்பை கையால் தேய்த்துக் கொண்டே முன்னேறினேன்….. அப்பத்தாவை திண்ணையில் கட்டி வைத்திருந்த கம்பி வளையத்தின் முனையில் என் பேண்ட் மாட்டவில்லை என்றால் அப்பத்தாவின் திண்ணையை செல்பி எடுத்த போது உடல் வளைந்த நொடிகளில் தடுமாறி சரிந்து.. பின் சரி செய்து கொள்ள திமிறியதில் அப்பத்தாவின் திண்ணையில், மேல் சட்டத்தில் அடித்திருந்த ஆணி என் தடுமாற்ற விழுதலில் என் கண்ணுக்குள் போயிருக்கும்… கால் தடுமாறியதில் காலம் மெல்ல நகர ஆணிக்குள் போக வேண்டிய கண்ணுக்கு பதில் கன்னம் உரசிப் போனது…

    நினைக்கும் போதே கண்ணுக்குள் ஊசி குத்துவது போல இருந்தது… ஒரு முறை கண்ணை தடவிக் கொண்டே, அப்பத்தாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே நடந்தேன்…. யாரும் என்னை கண்டு கொள்ளாமல் வேலையைப் பார்த்தபடி இருந்தார்கள்… சொல்லப்போனால் யாருமே யாரையுமே கண்டு கொள்ளவில்லை…ஒரு வேளை என் முகம் மறந்திருக்கலாம்… ஷைலுவின் வீட்டு முன் ஒரு துக்க வீட்டைப் போல, நின்றவர்களின் பாவனை இருந்தது…..

    ஆம்.. அது துக்க வீடுதான்..

    ஷைலு இறந்து விட்டதாம்…. கேட்ட நொடி திக் என்று நின்று யோசித்து… அழுகை, முடியாத மன நிலையில் நான் மெல்ல வீட்டுக்குள் சென்றேன்… வயதான ஷைலுவின் முகம் இன்னும் பழைய முகமாகவே இருந்தது…. கூட்டம், என்னை யாரோ ஒரு வாடிக்கையாளன் என்று கூட நினைத்திருக்கலாம்…. நினைப்பது தானே… நினைப்புக்கு ஏது தொடக்கம் அல்லது முடிவு… யாரும் கண்டு கொள்ளவில்லை.. எனக்கு ஷைலுவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது…கண்டிப்பாக ஆசை தீர அழுகை தீர கட்டிக் கொள்ள வேண்டும்…எப்படி கட்டிக் கொள்வது…? ஆனால் கட்டிக் கொள்ள வேண்டும்… ஆன்மாவுக்குள் கேட்கும் அலறல் சத்தம் ஷைலுவுக்கு கேட்டிருக்கும்….. நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் பதிக்க வேண்டும்… எத்தனை கதைகளை சொல்ல நினைத்து வந்தேன்… சொல்லவும் முடியாமல்.. சொன்னாலும் கேட்க முடியாத இடத்தில் நான் ஷைலுவைப் ஆழமாய் பார்க்க ஷைலுவும் என்னை மட்டுமே பார்ப்பது போல இருந்தது….

    “என்னதான் இருந்தாலும் அவ பையன் வராம, பொணத்தை எடுக்கறது நியாயம் இல்ல.. அவன் வந்த பின்னால எடுத்துக்கலாம்..வந்துட்டு இருக்கானாம்”- என்ற கூட்டம் மெல்ல கலையத் துவங்கியது…ஏனோ பிணம் காக்கும் இரவில்தான் அதிகமாக பசிக்கிறது….. எனக்கு ஒப்பாரி வைத்து அழ வேண்டும் போல தோன்றியது ….சில பாட்டிகள் ஆங்கங்கே சிணுங்கிக் கொண்டிருந்தார்கள்…

    இரவை துளைத்த நேரத்தில் பிணம் இருந்த அறைக்குள் யாருமே இல்லை… நான் உள்ளே போனதையும் வெளிய தூங்கிக் கொண்டிருந்த சில பெருசுகள் கண்டு கொள்ளவில்லை… நான் உள்ளே சென்று கதவை நன்றாக சாத்தி விட்டு ஓடிச் சென்று ஷைலுவை வாரி அணைத்துக் கொண்டேன்…… கனமாக இருந்து ஷைலுவின் …. காதுக்குள் ரகசியமாய் கூறினேன்..

    “நான் தான் நான்தான் என்று..”

    ம்ஹும்.. அசைவே இல்லை…. எத்தனை அன்பும் அரவணைப்பும் இறந்த உடலை ஒன்றுமே செய்வது இல்லை… கன்னம் பிடித்து கிள்ளிப் பார்த்தேன்….. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல கிடந்தது ஷைலு…. நன்றாக அணைத்து என் மார்போடு ஷைலுவின் தலை இருக்கும்படி வைத்துக்கொண்டேன்.. காலம் முழுக்க யார் யார் தலையையோ தாங்கிய மார்பு இது….. இன்று துக்கப் பட்டு விசனப் பட்டு நொந்து சுருங்கிக் கிடந்தது…. எனக்கு நண்பர் ஒருவர் எழுதிய ஒரு கவிதைதான் ஞாபகம் வந்தது…….

    மென் முலைகள்
    பருத்து, நின்று
    வசீகரித்து,
    செவ்வரிகளாகி, சிவந்து
    காலை மாலை எவ்வேளையும்
    கண் நிரப்பும்
    சிறு மலையாகி
    பின், மெல்ல மெல்ல
    சரிந்து, விழுந்து
    மறந்து போகும்
    நாளில்
    மாராப்பு சரி செய்ய
    தோன்றாத
    மென் நடையோடு
    எங்கள் வீதி அழகி ஒருத்தியின்
    கதையை
    முடித்து வைக்கிறோம்….

    ஷைலுவை சாய்த்துக் கொண்டு தாலாட்டினேன்…ஒரு குழந்தையைப் போல முகத்தை ஏந்திக் கொண்டேன்…தலையின் கனம் நேரம் கூட கூட அதிகமாகிக் கொண்டேயிருக்க தலையை நேராக சாய்க்க நான் சற்று என் உடலைத் திருப்பினேன்… யாரோ என் தலையை இன்னும் சற்று ஷைலுவின் முகத்தைப் பார்த்து வேகமாக இழுத்தது போல இருந்தது ….

    “ஷைலுலுலுலுலுலு” என்று சத்தமே வராமல் கத்தினேன்…

    சேப்டர் 5
    இறுதிச் சடங்குக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்க, நான் பிணம் போல அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன் … சட சடவென எல்லாம் நடந்தது.. ஷைலுவின் பையன்… வேண்டா வெறுப்பாக தீ மூட்டி விட்டு வேகமாக போய்க் கொண்டிருந்தான்…..ஊரும் அவன் பின்னால் ஒழுக்கத்தின் வரிசையைப் போல போய்க் கொண்டிருந்தது….நான் ஷைலு எரிவதைப் பார்த்துக் கொண்டு கரைந்து கொண்டிருந்தேன்…..கரைதலில் நேற்றைய இரவு மூளைக்குள் கொட்டியது….. நேற்று ஷைலுவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு செல்பி எடுத்த போதுதான் அந்த செந்தேள், மேலே சிதிலமடைந்த கரும்புகை அப்பிய ஓட்டில் இருந்து நேராக என் முகத்தை நோக்கி விழுந்தது….. கண நேரத்துக்குள் யாரோ இழுத்தது போல நான் என் தலையை இடம் மாற்றியதில் அந்த செந்தேள் என் தலை இருந்த இடத்தில் விழுந்தது….என் தலை தப்பியது…

    அடிக்க எதுவும் கிடைக்காத போது… ஷைலுவின் கையைக் கொண்டே செந்தேளை நசுக்கினேன்…. மனதுக்குள் பெரும் புயல் ஓயாமல் வீசிக் கொண்டே யிருப்பது போல என் செல்பி ஆசையும்..உச்சி மழைக் காற்றாய் வந்து போனது…. நினைக்க நினைக்க என் மனநிலை மேல் எனக்கு சந்தேகம் வரத்தான் செய்தது….. எரிய எரிய மெல்ல எழுந்து அமர்ந்த ஷைலுவின் நெஞ்சில் ஒருவன் ஓங்கி ஓங்கி தடியால் அடித்தான்..

    “அட …பாவி…மார்புகளின் சுமையை இறக்கி வைக்கவே விரும்பியவள் ஷைலு…. இன்று இறுகிப் போன பின் இத்தனை அடி எப்படி தாங்குகிறாள்…”-என்னால் அங்கு அமர முடியவில்லை…. எழுந்து நடந்தேன்…. வேகமாக நடந்தேன் ….

    சற்று தூரம் தள்ளி ஒரு தம்பதி ஒரு குழந்தையை அழுதுகொண்டே குழிக்குள் போட்டு மண்ணை தள்ளத் தொடங்கியிருந்தார்கள்…. மரணங்களிலேயே குழந்தையின் மரணம் மிக கொடுமை ஆனது என்று மனம் வேறு திசையில் பயணிக்க தொடங்குகையில் சட்டென உள்ளே இருந்த பிசாசு விழிக்கத் தொடங்கியது…என் செல்போனை எடுத்துக் கொண்டு அந்த குழந்தையின் அருகே செல்பி எடுக்க சென்றேன்…”செல்பி எடுக்காவிட்டால் அந்தக் குழந்தை உயிர் பெற்று விடுமா என்ன?” என்று சமாதானம் வேறு சொல்லிக் கொண்டது மனம்…. அப்போதுதான் ஒன்றை …கவனித்தேன்… அந்த குழந்தை மிகக் குறைவாக மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை நன்றாகவே பார்க்க முடிந்தது……. அது தெரியாமல் கணவனும் மனைவியும் மண்ணை அள்ளி அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்……

    நான் கத்தினேன்..

    “டேய்… குழந்தை இன்னும் சாகலடா… இன்னும் சாகலடா……..ஏம்மா…. நிறுத்துமா.. குழந்தை சாகல.. உயிர் இருக்கு…”

    யாருக்குமே நான் கத்துவதோ அங்கு நான் இருப்பதோ, கேட்கவில்லை…………… தெரியவில்லை…………………

    சேப்டர் ?
    நேற்றிரவு ஷைலு வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு (அதுவும் பாழடைந்த பழைய வீடுதான் ) சென்று இருட்டுக்குள் வெகுநேரம் அமர்ந்திருந்தேன் ,…. ஒரு கரப்பான் பூச்சி என் கன்னத்தில் உரசுவதும்….பறப்பதுமாக இருக்க ஜன்னலோரம் மெல்ல நகர்ந்து சென்று திறந்திருந்த சாளரத்தின் விளிம்பில் சாய்ந்து நின்றேன்.. அப்போதுதான் நிலா தன்னை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்ததோ என்னவோ… பளிச்சென ஒரு இரவைக் கண்டேன்…

    வந்து வந்து போய்க் கொண்டும்.. கன்னம் காது மூக்கு நெற்றி என்று பட்டும் படாமல் சிறகடிப்பதுமாக இருந்த கரப்பான் பூச்சியியோடு ஒரு செல்பி எடுக்க சட்டென்று ஒரு குரங்கு மனதுக்குள் தாவியது… கரப்பான் பூச்சி கன்னம் உரசியவுடன் செல்பி எடுப்பதுதான் எனது திட்டம்… திட்டதை தாண்டியும் கரப்பான் பூச்சி என் மூக்கின் நுனியிலே அமைந்தது.. நிலா வெளிச்ச நேரத்தில் சிலு சிலு காற்றில்… தனிமை இருளுக்குள் மௌன சாட்சியாக அந்த கரப்பான் பூச்சி என்னிடம் கொண்ட நட்பின் சாட்சியை செல்பியாய் எடுத்த மறுகணம்… நான் சற்றும் எதிர்பார்க்காத நொடியில் கரப்பான் பூச்சி என் மூக்கினுள் நுழைந்தது, படு வேகமாக….. அவ்ளோ தான்… தலைக்குள் பம்பரம் சுழல்வுது போல நான் கிறுகிறுத்து தடுமாறி…… திரும்பியதில் சுவற்றில் அடித்திருந்த ஆணியில் என் நெற்றியைக் கொண்டு சொருகினேன்……..

    சூடாக என் மூக்கில், கன்னத்தில் வழிந்த குருதியை தொட, தொடவே நெற்றியை வேகமாக வெளியே உருவின சற்று நொடியில் கிறுகிறுத்த தலை சாளரத்தை தாண்டி கீழே சரிய, முழு உடம்பும்…….கீழே சரிந்தது…மாடியில் இருந்து சரிந்த நான் கீழே இருந்த ஒரு கறிவேப்பிலை மரத்தின் நடுவே விழ, குத்தி கிழிக்கப்பட்ட வயிற்றோடு வலி தாங்காமல் மாட்டிக் கொண்ட மரத்திலிருந்து எட்டிக் குதிக்க, நான் எகிறி இப்போது விழுந்தது என் வீட்டுக்கு பின்புறமுள்ள கறிவேப்பில்லை மரத்தை ஓட்டிப் போய்க் கொண்டிருக்கும் தண்டவாளத்தில்…….

    கண நேரத்தில் வந்து போன ரயிலுக்குள் நான் வெறும் சதைகளாகக் கிடந்தேன்.. என்னோடு சில தேள்களும் செத்துக் கிடந்தன….

    இந்த சேப்டர்க்கு நீங்களே எண் கொடுத்துக் கொள்ளுங்கள்…

    Share
  • உன்னையறிந்தால் ………. (35)

    நிர்மலா ராகவன்

    குடும்பத்துள் ஏன் போட்டி?

    உனையறிந்தால்

    கேள்வி: `நீ அப்பா பிள்ளையா, அம்மா பிள்ளையா?’ என்று யார் கேட்டாலும், என் இரண்டு வயது மகள், `அப்பா பிள்ளை!’ என்று பளிச்சென்று சொல்கிறாள். அப்படியானால், அம்மா முக்கியமில்லையா?

    விளக்கம்: அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குழந்தையின் அன்பில் போட்டியா, இப்படி ஒரு கேள்வி எழ! இருவருடைய பராமரிப்பு, அன்பு, அறிவுரை — இவை எல்லாமே குழந்தைகளுக்கு அவசியம்தானே!

    சிறு வயதிலேயே குழந்தை புரிந்து கொள்கிறது, அப்பா தூக்கிக் கொண்டிருந்தால், `அப்பா பிள்ளை,’ என்றும், அம்மா வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தால், `அம்மா பிள்ளை,’ என்றும் சொல்ல வேண்டும் என்று. (அப்போதுதானே தன்னையும் வெளியே அழைத்துச் செல்வார்கள்!)

    அம்மா வேலையாக இருக்கும்போது விஷமம் செய்தால், திட்டுகிறாள். அதனால், அப்பாவின் பக்கம் சாய்கிறது. தானே இன்னும் இரண்டு வயது போனால், அம்மாவைப்போல் தானும் ஒரு பெண்தான் என்று புரிய, அவளைப்போல் நடக்க முயலும். விடுங்கள். குழந்தைகள் செய்வது, சொல்வது எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் சுயமாகவா சிந்திக்கிறார்கள்!

    சிறு வயதில், உடன்பிறந்தாருடன் போட்டி போடுவது பிறவிக்குணம். அது வேறு விஷயம். ஆனால், போட்டி மனப்பான்மை இருந்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணத்துடன், தம்மையுமறியாது, சிறு வயதிலிருந்தே அக்குணத்தை வளர்க்க முற்படுகிறார்கள் பலரும்.

    `தம்பி பாத்தியா, எவ்வளவு சமர்த்தா சாப்பிடறான்! இத்தனைக்கும் ஒன்னைவிடச் சின்னவன்!’ என்று நான்கு வயதான பையனிடம் சொல்லிப் பாருங்கள்.

    அவனால் தன் போக்கை மாற்றிக்கொள்ள முடியாது. பதிலுக்கு, தம்பியின் முதுகில் ஒன்று வைக்கிறான், `நீ ஏன் சமத்தா இருக்கே? என்னை மாதிரி இரேன்!’ என்று!

    போட்டி மனப்பான்மையால் விளையும் தீமை — பொறாமை. எல்லாக் குழந்தைகளையும் சமமாகப் பாவிக்காது, பாரபட்சத்துடன் நடத்துவதால் வரும் வினை இது.

    தான் எப்படியாவது எல்லாரையும்விட, எப்போதும், உயர்த்தியாகவே இருக்க வேண்டும் என்ற வெறியாலும் போட்டி வருகிறது.

    இதுவே பழக்கமாகப் போய்விட, பெரியவர்களான பின்பும், பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் பொறாமை கொண்டு, அவர்களை வார்த்தைகளால் தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள் இப்படிப்பட்டவர்கள். இவர்களுக்குத் தங்களுடைய வெற்றிகளால் திருப்தி அடைந்துவிட முடிவதில்லை. பிறரைத் தாழ்த்தினால்தான் சிறுபிள்ளைத்தனமான மகிழ்ச்சி.

    ஒரு குடும்பத் தலைவன் இப்படி போட்டி மனப்பான்மையோடு வளர்ந்திருந்தால், தன் மனைவி, குழந்தைகளுடன் எப்போதும் போட்டி. சிலர் அவனது குணம் புரிந்து விட்டுக்கொடுக்கலாம். அனேகமாக, குடும்பத்தில் பிளவுதான் வரும்.

    எனக்குத் தெரிந்த ஒருவர் அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க உத்தியோகத்தில் இருந்தார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் மனைவியை, `முட்டாள்’ என்று பழிப்பார். அவள் பட்டதாரி. முதல் வகுப்பில் தேறியவள். ஆனால், அவரைப்போன்று மூன்று பட்டங்கள் பெற்றிருக்கவில்லை. தான் அவரைவிடத் தாழ்ந்தவள்தான் என்று அவர் எவ்வளவு மட்டம் தட்டியபோதும் பொறுத்துப்போனாள். இம்மாதிரியானவர்களின் தாம்பத்திய உறவு எவ்வளவு லட்சணமாக இருக்கும்!

    இன்னொரு குடும்பத்தில் மனைவி ஏதோ சிறப்புப் பெற்றிருக்கிறாள். `இவன் நம்மைவிட மேலானவன் என்று நினைத்துவிடப் போகிறானே!’ என்று கணவனின் நண்பர்கள் அச்சம் கொண்டு, காரியத்தில் இறங்குவர்:

    `இனிமேல், நீதான் அவள் பெயரை உன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ள வேண்டும்!’

    `எப்படித்தான் இப்படி ஒரு மனைவியை பொறுத்துப் போகிறாயோ! இப்படியே விட்டால், உன்னை மதிக்க மாட்டாள், பார்!’
    `நம் மனைவியைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்ள முடியவில்லையே!’ என்ற பொறாமையால் அப்படிப் பேசுகிறார்கள் என்று அவன் புரிந்துகொண்டால் போயிற்று. இல்லையேல், தாழ்வு மனப்பான்மையுடன் மனைவியை எதிர்த்துக்கொண்டே இருப்பான்.

    கணவனது பக்கபலம் இல்லாது, அவனுடைய எதிர்ப்பையும், ஏளனத்தையும் தாங்க வேண்டியிருந்தால், ஒரு பெண் ஆக்ககரமாக ஏதாவது செய்யவே துணியாது, யோசிக்கும் நிலை வந்துவிடக்கூடும். பல பெண்கள், `கல்யாணத்துக்குமுன் நிறைய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது நேரமில்லை,’ என்று சொன்னாலும், உண்மைக் காரணம் அதுவாக இருக்காது. உள்ளுக்குள் புழுங்குவாள்.

    ஆக, கணவன் தான் மனைவியைவிட உயர்வு, அல்லது தாழ்வு என்று நினைப்பதால் குடும்பத்தில் கண்ணுக்குப் புலனாகாத விரிசல்தான் உண்டாகும்.

    பேரும், புகழும் கொண்ட ஒருவனிடம், `உங்கள் மனைவியின் ஊக்குவிப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று யாரும் கேட்பதில்லை. ஏனெனில், அவன் ஆண். அவனுடைய திறமை, உழைப்பு போன்றவை இயல்பானது என்று கருதப்படுகிறது.

    என்னை ஒரு வானொலி பேட்டியின்போது, `உங்கள் கணவரின் ஒத்துழைப்பால்தான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்களா?’ என்று கேட்டபோது, `நான் இதற்குப் பதில் சொல்ல மாட்டேன். எந்த ஆணையாவது நீங்கள் இப்படிக் கேட்டிருக்கிறீர்களா?’ என்று திருப்பிக் கேட்டேன்.

    `யாருமே ஊக்குவிக்காம நீங்க இந்த அளவுக்கு மேலே வந்தீங்களா?’ என்று இரைந்தார் பேட்டி எடுத்தவர். (ஒரு பெண்ணின் வெற்றியைக் கண்டு அச்சம் அடைகிறவரோ? )

    `உங்கள் கேள்வியைச் சற்று மாற்றி,` யார் உங்களை ஊக்குவித்தது?’ என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்,’ என்றேன்.

    பிறர் மகிழ்ச்சியடைவார், பாராட்டுவார் என்று ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கினால், தொடர்ந்து அதைச் செய்யும் ஆர்வம் குன்றிவிடும். நம் திருப்திக்காக, மனநிறைவுக்காகச் செய்யும்போதுதான் முழுப்பலன் கிடைக்கிறது.

    `என் மனைவி வாழ்வில் உயர்ந்தால், அது எனக்கும் பெருமைதானே! இதில் என்ன போட்டி!’ என்று ஒருவர் எண்ணி நடந்தால், அக்குடும்பத்தில் பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலவும். அவர்களது குழந்தைகள் பெற்றோரைவிட இன்னும் மேலான நிலைக்குப் போவார்கள். இவர்களுக்கு, `அம்மாவா, அப்பாவா?’ என்ற பாகுபாடு, அதனால் விளையும் குழப்பங்கள் இராது.

    மனித உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்கே உரிய பயன்பாடு உண்டு.
    கண் முக்கியமா, கால் முக்கியமா?
    எது உயர்வு, எது மட்டம்?

    இதேபோல், தாய், தந்தை, மகன், மகள் எல்லாரும் குடும்பத்தின் வெவ்வேறு அங்கங்கள். அனைவரும் இணைந்து செயல்பட்டால், ஒவ்வொருவரின் தனித்தன்மையும், பலமும் மற்றவருடையதுடன் இணைந்து, மேலும் வலுப்படும்.

    சில குடும்பங்களில் எல்லா உறுப்பினர்களுமே பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்று விளங்குவதன் ரகசியம்: போட்டியின்மை, ஒத்துழைப்பு.

    தொடருவோம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 21, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு ஆக்சாத் பிரகாஷ் அவர்கள்

    Akshat Prakash-Photo by PTI profile

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், விபத்தில் உயிர் காக்கும் கருவி ஒன்றை வடிவமைத்தவரும், மேல்நிலைப்பள்ளி மாணவருமான திரு. ஆக்சாத் பிரகாஷ் அவர்கள். மருத்துவ அறிவியலில் மிகுந்த ஆர்வமிக்க ஆக்சாத் பிரகாஷ் உத்தரப் பிரதேசம் காஜியாபாதை சேர்ந்தவர். டெல்லி இந்திராபுரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும், 17 வயதாகும் இந்த இளைஞர், கைக்கடிகாரம் போல கையில் அணிந்து கொள்ளும் முதலுதவி சிகிச்சை தரும் ‘தொழில்நுட்ப அணிகலன்’ (wearable technology device) ஒன்றினை வடிவமைத்து, தைவானில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சி – 2015 (Taiwan International Science Fair, 2015) இல் அறிமுகப்படுத்தினார். இக்கருவி செயல்படும்விதத்தைப் பற்றி அறிவியல் கண்காட்சியில் செயல்முறை விளக்கமும் அளித்துள்ளார். ஆக்சாத் பிரகாஷ், ‘ஹெலிக்ஸ்சேஃப்’ (HelixSafe – #HelixSafe on twitter.com) என்று பெயரிட்டுள்ள தனது மருத்துவ கருவிக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார். காப்புரிமை பெற 2013 இல் இவர் விண்ணப்பித்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வமான காப்புரிமை தகவல் இதழில் (Official Patent Journal, 2015) இச்செய்தி வெளியாகியுள்ளது.

    Akshat Prakash-Photo by PTI

    விபத்துகள் நிகழும் பொழுது, உயிருக்கு ஊசலாடுபவர்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்கத் துரித கதியில் இயங்கத் தேவை. வீணாக்கும் ஒவ்வொரு பொன்னான வினாடியும் வாழ்வா, சாவா என்ற முறையில் ஒருவரது வாழ்க்கையையே நிர்ணயிக்கும். நகரப்பகுதியில் விபத்து நிகழ்ந்தாலே அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதில் பெருமளவு காலம் விரயமாவதைத் தடுக்க வழி இருப்பதில்லை. ஆளரவமற்ற அத்துவானக்காட்டின் சாலையொன்றில் வாகன விபத்து நிகழ்ந்தால், அதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குள் விபத்திற்குள்ளானவர் உடனடி மருத்துவ உதவியின்றி அவரது வாழ்வே முடிந்துவிடலாம்.

    இது போன்ற வாகன விபத்து நிகழ்வுகளில் கைகொடுத்து உதவக் கூடியது, விபத்தினால் பாதிக்கப்பட்டவர் கையில் அணிந்திருக்கும் கடிகாரம் போன்ற ஹெலிக்ஸ்சேஃப்-தொழில்நுட்ப அணிகலன். இக்கருவியின் சென்சார் என்ற உணரும் பகுதி விபத்து நிகழ்ந்த நேரத்தில், இக்கருவி அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பைக் கணக்கிட்டு அவரது உடல்நிலையைக் கண்காணிக்கும். அது இயல்புக்கு மாறாக இருந்தால், தானே தேவையான முதலுதவிக்கான மருந்தினை கருவியில் இருக்கும் சிறிய ஊசி உடலுக்குள் செலுத்துவதுடன், அருகாமையில் உள்ள மருத்துவ அவசர சிகிச்சை மையத்திற்கு உடனடித் தகவலும் அனுப்பும்.

    இந்த மருத்துவக் கருவியின் மாதிரி வடிவம் ‘அர்டுயினோ டெவெலப்மென்ட் என்விரான்மெண்ட்’, மற்றும் ‘எம்பெடெட் சி’, ‘விஷுவல் பேசிக்’ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது (The prototype has been created with Arduino Development Environment, Heart Rate Sensor and accessories and programmed in Embedded C and Visual Basic). இந்த ‘ஹெலிக்ஸ்சேஃப்’ மருத்துவக் கருவி கண்டுபிடிப்பிற்காக, “சிறந்த கண்டுபிடிப்பை வழங்கிய இந்தியாவின் முதன்மை திறமைசாலிக் குழந்தை” (‘India’s First Whiz Kid’ award for Best Innovation, 2013), என்ற விருதினையும் ஆக்சாத் பிரகாஷ் பெற்றுள்ளார். இந்த விருதினை 2013 ஆண்டு ‘நர்ச்சர் டேலண்ட் அண்ட் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ (Nurture Talent & Computer Society of India) இவருக்கு வழங்கிப் பாராட்டியது. இந்த மருத்துவக் கருவி செயல்படும் முறையைப் பற்றி , ஐ.ஐ.டி. டெல்லி, ஐ.ஐ.டி. மும்பை ஆகிய இந்திய தொழில்நுட்பக் கல்வி பல்கலைக் கழகங்களிலும் ஆக்சாத் பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.

    Akshat Prakash-Photo by PTI-3

    ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ துறை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை. தற்பொழுது பெரும்பாலும் ஆரோக்கிய வாழ்வினை முன்னிறுத்தும் நோக்கில் உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றின் அளவுகளைக் கண்காணிக்க மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்ற ஆண்டு கலிஃபோர்னியா நிலநடுக்கத்தின் பொழுது, தொழில்நுட்ப அணிகலன் அணிந்திருந்தவர்கள் உறக்கம் தடைப்பட்டு விழிக்க நேர்ந்ததையும், மீண்டும் உறங்கச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது என்பது போன்ற தகவல்களை, தானே சேகரித்து தரவுகளை அனுப்பியது.

    Akshat Prakash-Photo by PTI-4

    இந்தத் தொழில் நுட்பத்தை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்துவதில் உள்ள ஆதாயம் பற்றி இத்துறை வல்லுநர்கள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். குறிப்பாக மாரடைப்பு, வலிப்பு போன்ற நேரங்களில் உடலில் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ப விரைந்து செயலாற்றி சிகிச்சையைத் துவக்க விரும்பி மருத்துவத் துறையும் இதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகளில் 2 பில்லியனில் இருந்து 40 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இத்துறை வளரும் என்றும், சிறு கணினிசார் நிறுவனங்கள் இதன் வளர்ச்சியில் அதிகம் பங்கு பெற்றுப் பலனடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு, உடற்பருமன், இதயநோய் எனப் பல்வேறு வகையிலும் உடல்நலம் கண்காணிக்க ‘தொழில்நுட்ப அணிகலன்கள்’ உதவக்கூடும் எனவும் தெரிகிறது.

    முன்னேறும் இத்துறையில் ஒரு பதின்ம வயது பள்ளி மாணவன் இந்தியாவில் முன்மாதிரியாக இருப்பது இந்தியத் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கிறது. கணினி அறிவியலில் தனக்கு மிகவும் ஆர்வம் இருப்பதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் அத்துறையில் ஓர் ஆய்வாளராகப் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் செல்வன் ஆக்சாத் பிரகாஷ்; தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு, சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு நிறைந்த சமுதாயம் உருவாக, மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நல்ல பல கருவிகளைத் தயாரிக்க விரும்புவதாகவும் ‘பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ (PTI-Press Trust of India)விற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். செல்வன் ஆக்சாத் பிரகாஷின் விருப்பங்கள் நிறைவேறி, மக்களுக்குப் பயன்தரும் கருவிகள் பல வடிவமைக்க வல்லமை இதழ் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    மேலும் தொடர்புள்ள தகவலுக்கு:
    விபத்தில் உயிர் காக்கும் கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்
    http://tamil.thehindu.com/india/விபத்தில்-உயிர்-காக்கும்-கருவியை-கண்டுபிடித்த-பள்ளி-மாணவர்/article8004063.ece
    Published: December 18, 2015

     

    Beyond Fitbit: The quest to develop medical-grade wearables
    http://www.reuters.com/article/us-usa-health-wearables-insight-idUSKBN0U10G120151218
    Published: December 18, 2015

     

    Wearable Technology is Here: Interoperability will be an issue for this technology, just as it is today for communications and data.
    http://www.emergencymgmt.com/emergency-blogs/disaster-zone/wearable-technology-is-here.html
    Published: December 18, 2015

     

    How The Napa Earthquake Affected Bay Area Sleepers
    https://jawbone.com/blog/napa-earthquake-effect-on-sleep/
    Published: Aug 25, 2014

     

    Share
  • தோற்றங்கள்

    — ஸிந்துஜா.

    “உங்கள் பெயர்?”
    “ராமசேஷன்”
    “உங்கள் தகுதி?”
    “சார்ட்டர்ட் அக்கௌண்டண்ட்”
    “எவ்வளவு வருஷமாக தற்போதைய வேலையில் இருக்கிறீர்கள்?”
    “ஆறு வருஷம்”
    “தற்போது உள்ள கம்பனி அல்லது வேலை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”
    “இல்லை. அப்படியொன்றும் சொல்ல முடியாது.
    “அப்படியானால் எதற்காக இங்கே அப்ளை செய்திருக்கிறீர்கள்? ”
    “பெட்டர் ப்ராஸ்பெக்ட்ஸ்”
    “அங்கே அது இல்லையா?”
    “ஆமாம்”

    ராமசேஷனுக்கு எதிரில் உட்கார்ந்து கேள்விகளை இறைத்துக் கொண்டிருந்தவர், இந்தப் பதிலால் தாக்கப்பட்டவர் போல், ராமசேஷனை உற்றுப் பார்த்தார்.

    ராமசேஷன் அவரைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

    அப்போது அவரது கைபேசி ஒலித்தது. அதை எடுத்துப் பார்த்தவர் ராமசேஷனைப் பார்த்து “ஒரு நிமிஷம்” என்று எழுந்து வெளியே சென்றார்.

    ராமசேஷன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். மறுபடியும், அவரது திடுக்கிடல் அவன் மனதில் நிழலாடிற்று. அவனுக்கு இப்போது அதிக சம்பளம் தரும் வேலை உடனடியாக வேண்டும். இரு மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலி என்று அவனது தாயாரை மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்ற பின், அவளுக்கு மார்பகப் புற்று நோய் என்று தெரிய வந்தது. அதைக் கேட்ட நொடியில் உலகம் ஏன் இப்படித் திடீரென்று தாறுமாறாகச் சுழன்று அவனைக் கீழே விழுத்தாட்டப் பார்க்கிறது என்று நிலை சாய்ந்தான். நல்ல வேலையாக, அருகில் நின்ற ஆஸ்பத்திரி சிப்பந்தி அவனைத் தாங்கிப் பிடித்து பக்கத்தில் இருந்த படுக்கையில் படுக்க வைத்தான். அம்மாவின் கூடவே அவன் இருந்து ஆக வேண்டிய கட்டாயமான இந்த சமயத்தில் அவன் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து கனடாவுக்குப் போகச் சொன்னார்கள். அதனால், அவன் வேறு வேலை தேட ஆரம்பித்தான். இப்போது அவன் கையில் ஒரு வேலைக்கான ஆர்டர் இருக்கிறது. ஆனால் அதற்கு அவன் தில்லிக்குச் செல்ல வேண்டும். இப்போது வாங்கும் சம்பளத்தை விட அதிகம் தருகிறார்கள். அந்த வேலையை அவன் ஒப்புக் கொள்வதாகக் கூறும் கடிதத்தை, கடைசி நாளான இன்று கொடுக்க வேண்டும். அதற்கு நடுவில், இந்த இன்டர்வியு.

    இந்த வேலையிலும் நல்ல சம்பளம். ஆனால் மிக முக்கியமான விஷயம், இந்த ஊரிலேயே வேலை…

    அப்போது அறைக்குள் ஒருவன் வந்தான். ராமசேஷன் அவனைப் பார்த்து “ஹலோ பாலா!” என்று புன்னகை செய்தான்.

    அவன் “ஹலோ சார்” என்றான். பாலா பெர்சானால் டிபார்ட்மென்டைச் சேர்ந்தவன். அவன்தான் ராமசேஷன் அந்த அலுவலகத்துக்குள் வந்ததும் வரவேற்று, அவனுடைய பேப்பர்களைப் பரிசீலித்து உதவி செய்தான். அன்று நடக்கும் இன்டர்வியுவில், மார்கெட்டிங் பிரிவுக்கு ஒரு உயர் அதிகாரியும், அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு ஒரு உயர் அதிகாரியும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று சொன்னான். நேர்முகத் தேர்வுக்கு மொத்தம் ஆறு பேர்கள் அழைக்கப் பட்டிருப்பதாகவும், யார் நிர்வாக இயக்குனரால் தெரிவு செய்யப்படுகிறார்களோ, அந்த இருவரும் சேர்மனின் வரவேற்பறைக்கு அனுப்பப் பட்டு சேர்மனைப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னான் …

    வெளியே சென்றவர் உள்ளே வந்தார். பாலாவைப் பார்த்ததும் “காஃபி சாப்பிடலாமா?” என்று ராமசேஷனைக் கேட்டு விட்டு அவன் பதிலை எதிர்பாராமல், பாலாவிடம் அனுப்பச் சொன்னார் …

    பிறகு அவனைப் பார்த்து புன்னகை செய்தபடி மறுபடியும் பேச ஆரம்பித்தார் .

    “நீங்கள் இது வரை வேலை பார்த்த கம்பனியில் உங்களுடையது என்று ஏதாவது குறிப்பிட்டுச் சொல்லும்படியான சாதனை உண்டா? “

    “சாதனை என்றெல்லாம் கூற முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், கம்பனியின் லாபம் கூடுவதற்கான வழிமுறைகளை நிர்வாகத்துக்கு எடுத்துச் சொல்லி, அவைகளை மற்றவர்களின் உதவியுடன், ஒரு குழுவாக இயங்கி நடத்திக் காண்பித்தேன்”. ராமசேஷன், தன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் ஃபோல்டரில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். அதிலிருந்த வரைபடத்தில் கடந்த ஐந்து ஆண்டுக்கான விற்பனை விவரங்களும், அந்தந்த வருஷத்து இலாப நிலவரங்களும் கோடுகளாகப் பரிணமித்திருந்தன. விற்பனைகளை விட இலாபங்களின் சதவிகித உயர்வு, ஒவ்வொரு வருஷமும், பிரமிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உயர்ந்திருந்தது.

    அவன் கொடுத்த பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தவர், ராமசேஷனைப் பார்த்து,”இது ஒரு மார்க்கெட்டிங் கம்பனி என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்போது வேலை பார்த்து வருவது ஒரு விளம்பரக் கம்பனியில். அப்படி ஒன்றுக் கொன்றும் நெருங்கிய தொடர்புடைய பணி சார்ந்தவை இவ்விரு நிறுவனங்களும் என்று சொல்லமுடியாத போது, வரவிருக்கும் மாற்றுப் பணியினால் உண்டாகும் சவால்களை நீங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

    “நிச்சயமாக” என்றான் ராமசேஷன். “இந்த வயதில் சவால்களை ஏற்று என் அனுபவத்தைப் புடம் போட்டுக் கொள்ளா விட்டால், வேறு எப்போது நான் அம்மாதிரி வாய்ப்புக்களைப் பெறப் போகிறேன் ? ஐ’ம் ஃ பார் இட்!” என்று புன்னகை செய்தான்.

    “உங்கள் ஆப்டிமிஸம் எனக்குப் பிடித்திருக்கிறது. மிஸ்டர் ராம், எங்கள் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கிரெடிட் தருகிறோம். இதற்கு ஒரு கால வரையறையும் உண்டு. ஆனால் கடந்த இரு வருஷங்களாக பணவரவு இந்தக் கால வரையறைக்குள் வர மாட்டேன் என்கிறது. ஒருவருக்கு ஒரு மாத கிரெடிட் என்றால், அவரிடமிருந்து நாங்கள் பணம் பெற்று முடிப்பதற்கு மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிடுகின்றன.”

    ராமசேஷன் மேலும் விவரம் கேட்பதற்குக் காத்திருப்பவன் போல் ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான்.

    “இது எங்கள் விற்பனை எதிர்பார்ப்புக்களை மிகவும் பாதிக்கின்றது. இந்த வருஷத்தில் ஏழு மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால் நாங்கள் நான்கு மாத விற்பனை இலக்கைக் கூட எட்ட முடியவில்லை.”

    “கால வரையறைக்குள் பணம் கொடுக்காத வியாபாரிகளை நீங்கள் எப்படி ட்ரீட் பண்ணுகிறீர்கள்?” என்று ராமசேஷன் கேட்டான்.

    “இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தக் கம்பனியுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள். அதனால், திரும்பத் திரும்ப வற்புறுத்தல் மூலமே பணத்தைப் பெற முயற்சிக்கிறோம்.”

    “அதாவது, அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். கோர்ட், வழக்கு என்றெல்லாம் போக வேண்டிய அவசியத்தை உண்டு பண்ணாதவர்கள் என்கிறீர்கள்.” என்றான் ராமசேஷன்.

    எதிரில் இருந்தவர் தோள்களைக் குலுக்கினார்.

    “கால வரையறைக்குள் வியாபாரிகள் பணம் தராததற்கு வியாபாரத்தில் காணப்படும் மந்த நிலைமை மட்டும் தானா?” என்று ராமசேஷன் கேட்டான்.

    “இந்த வருஷ ஆரம்பத்திலிருந்தே ரீசெஷன் தலை தூக்கி நிற்கிறது. அயல் நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பியாவில் மித மிஞ்சிய மந்த நிலை நீடித்து வருகிறது. அதன் எதிரொலியாக, இங்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.”

    ராமசேஷன் “நீங்கள் குறிப்பிட தேதியில் பணம் தராதவர்களுக்கு, சரக்குகள் தருவதை நிறுத்தி விட்டீர்களா? “

    “ஆமாம். அதுதானே சரியான முறை?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

    “பொதுவாக அது சரியான முறை. பணத்தை வைத்துக் கொண்டு, நமக்குத் தராமல் இழுத்தடிக்கும் ஏஜன்ட்களுக்கு அது பொருந்தும். ஆனால் நீங்கள் கூறுவதைப் பார்த்தால், மொத்த மார்க்கெட்டே இழுபறியில் இருக்கிறது. இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் நாம் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். உங்கள் சரக்கு போவது மொத்த விற்பனையாளர்களிடம். அதை அவர்கள் சில்லறை வியாபாரிகளிடம் விற்கிறார்கள். பொதுவாக சில்லறை வியாபாரிகள் கடனுக்கு விற்பது குறைந்த அளவே. மார்க்கெட் நிலவரத்தால், அவர்களும் கடன் கொடுத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், பணப் புழக்கம் அதிகரிக்க வேண்டும். இதற்கு நடுவே, சப்ளை நின்று போனால், கடன் வசூலிப்பும் நின்று போகிறது. தொடர்ச்சியான சப்ளை ஒன்றுதான் இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்கும்.”

    ராமசேஷனை இன்டர்வியு செய்து கொண்டிருந்தவர் அவனை வியப்புடன் நோக்கினார்.

    “நீங்கள் அக்கவுண்ட்ஸ் ஆள். ஆனால் நீங்கள் பேசுவது மார்க்கெட்டிங் ஆட்கள் பேசுவது மாதிரி அல்லவா இருக்கிறது!”

    “இல்லை, நான் மொத்தப் பிரச்சினையையும் பார்த்து, கம்பனிக்கு எப்படி உதவ வேண்டும் என்று யோசிக்கிறேன்” என்று ராமசேஷன் சிரித்தான் .

    “குட்” என்றார் அவர்.

    காப்பி வந்தது, குடித்தார்கள். அதற்குப் பிறகு அவனிடம் சம்பளத்தைப் பற்றிப் பேசினார். எவ்வளவு விரைவில் வேலைக்குச் சேர முடியும் என்று கேட்டார். இண்டர்காமில் பாலாவைக் கூப்பிட்டார்.

    ராமசேஷனிடம் “நீங்கள் கொஞ்ச நேரம் காத்திருங்கள்” என்றவர், பாலாவிடம் “இவரை அழைத்துக் கொண்டு போ” என்றார்.

    பாலா ராமசேஷனை சேர்மனின் வரவேற்பு அறையில் உட்கார வைத்து விட்டுப் போனான்.

    உள்ளூர மகிழ்ச்சி பெருகி ஒடுவதை ராமசேஷன் உணர்ந்தான். இந்த வேலை கிடைப்பது நிச்சயம்தான். அறையைச் சுற்றி நோக்கினான். குளிர்ச்சியாக இதமாக இருந்தது. செல்வச் செழிப்பின் பிரகாசம், தரைகளிலும், ஜன்னல் திரைகளிலும் சுவர்களிலும், இருக்கைகளிலும் காணப் பட்டது. வலது கோடியில் இருந்த ஓர் இருக்கையில் கண்ணாடி அணிந்திருந்த இளைஞன் ஒருவன் உட்கார்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தான். மார்க்கெட்டிங் பிரிவுக்குத் தெரிவு செய்யப் பட்டவனோ என்று சந்தேகம் மனதில் ஓடிற்று . அப்போது அவனுக்கு நேர்முகத் தேர்வு நடத்தியவர் சேர்மனின் அறைக்குள் நுழைவதை ராமசேஷன் பார்த்தான். சற்றுக் கழித்து சேர்மன் அறையிலிருந்து வெளி வந்த பணியாள் , வலது கோடியில் அமர்ந்திருந்தவனை நெருங்கி ஏதோ சொன்னான். அவன் உடன் எழுந்து சேர்மன் அறைக்குள் சென்றான்.

    ராமசேஷன் இந்த வேலை தனக்குக் கிடைத்து விட்டால், அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொள்ளத் தோதுவாக இருக்கும் என்று ஆர்வத்துடன் நினைத்துக் கொண்டான். எல்லாம் கடவுள் செயல்! தில்லிக்குப் போகத்தான் வேண்டுமென்று முக்கால் வாசி முடிவு கட்டிவிட்டபோதுதான், இந்த நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நிர்வாக இயக்குனர் அவனது பதில்களால் திருப்தியுற்றவர் போலத்தான் தெரிந்தார்…

    அப்போது பாலா அங்கே வந்தான். ராமசேஷனின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டான். “இன்று மார்கெடிங் பிரிவு நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களில் யாரும் தேர்ந்தெடுக்கப் படவில்லை” என்றான் ராமசேஷனைப் பார்த்து.

    ராமசேஷனுக்குத் ‘திக்’கென்றது

    “அப்படியானால் உள்ளே சேர்மனுடன் உட்கார்ந்து கொண்டிருப்பது? ” என்று பாலாவைப் பார்த்துக் கேட்டான் .

    “அவர் அக்கவுன்ட்சுக்கு வந்திருக்கிறவர்.”

    அப்போது சேர்மனின் பணியாள் வந்து பாலாவைக் கூப்பிடுவதாகத் தெரிவித்தான்.

    உள்ளே சென்ற பாலா, கண்ணாடி அணிந்திருந்தவனுடன் திரும்பி வந்தான். அந்த இளைஞன் முகத்தில் சந்தோஷம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவன் தன் கைப் பையை எடுத்துக் கொண்டு வரச் சென்ற போது, பாலா ராமசேஷனிடம் “டைரக்டர் உங்களைக் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணச் சொன்னார்” என்றான்.

    “அவருக்கு என்ன ஆயிற்று ?” என்று கண்ணாடி அணிந்தவனின் பக்கம் திரும்பிக் கேட்டான் ராமசேஷன் .

    “அக்கவுண்ட்ஸ் பிரிவின் தலைமைப் பதவிக்கு செலக்ட் ஆகி விட்டார் என்றான் பாலா.” உங்களை இருக்கச் சொன்னதால் அனேகமாக அவருக்குக் கீழே காலியாக உள்ள உதவித் தலைமைப் பொறுப்பாளராக உங்களைக் கூப்பிடக்கூடும்” என்றான். பிறகு அந்த இளைஞனுடன் கிளம்பிச் சென்றான்.

    ராமசேஷன் சுற்றிலும் ஒரு முறை நோக்கினான். மங்கலாகப் பிரகாசமற்று அந்த அறை தோற்றமளிப்பது போல இருந்தது அவனுக்கு. தலைமைப் பொறுப்புக்கு அடுத்த இடம் என்றால், அனேகமாக அவன் இப்போது பார்க்கும் வேலைக்குச் சமானமான பதவிதான், சம்பளமும் பெரிதாக ஒன்றும் வந்து விடாது. அவன் கைப்பையைத் திறந்து பார்த்தான். தில்லிக் கம்பனியின் நீல நிறக் கவர் தென்பட்டது. கைப் பையை மூடிவிட்டு எழுந்தான். வாசலை நோக்கிச் சென்றான். இன்று சனிக் கிழமை. அரை நாள்தான் அந்த அலுவலகம் இயங்கும் என்றார்கள். கால்மணி நேரத்துக்குள் போய் விடலாம். பார்க்கிங்கில் இருந்த காரை நோக்கி ‘விறு’ ‘விறு’ என்று நடந்தான் .

    “உங்களை அவ்வளவு தூரம் கவர்ந்து விட்டானா இந்தப் பையன் ? ” என்று சேர்மன் கேட்டார்.

    நிர்வாக இயக்குனர் புன்னகை செய்தார். “மிகவும் துடிப்புடன் இருக்கிறான். அவனிடம் ஸி.ஏ. இருக்கிறது. மார்க்கெடிங் பற்றிய விரிவான புரிதல் இருக்கிறது. மார்க்கெடிங் உடன் வெகுவாக ஒத்துப் போகும் அட்வர்ட்டைஸிங்கிலும் ரிச்சான அனுபவம் இருக்கிறது. ஆறு வருஷம் விளம்பரக் கம்பனியில் பணி புரிந்திருக்கிறான். இந்த மாதிரி காம்பிநேஷன் வேலை மார்க்கெட்டில் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை.அதனால்தான் சொல்கிறேன்”

    “என்னவென்று?”

    “ராமசேஷனை மார்க்கெடிங் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமித்து விடலாம். வழக்கமாகத் தரும் சம்பளத்தையும் இன்னும் சற்று அதிகப் படுத்திக் கொடுக்கலாம்.ஹீ வில் பீ ஆன் அஸட் டு அவர் கம்பனி ” என்றார் நிர்வாக இயக்குனர்.

    “தென் இட்ஸ் ஓகே, கோ அஹெட் ” என்றார் சேர்மன் தலையை அசைத்தபடி.

    “ராமசேஷனை நீங்கள் ஒரு முறை பார்த்து விடுங்கள். நானே கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்” என்று நிர்வாக இயக்குனர் சேர்மன் அறையை விட்டு வெளியே வந்தார்.

    Share
  • பிறகும் தொடரும் தீவின் மழை

    எம்.ரிஷான் ஷெரீப்

    1437820074-4948

    மழை வெளி நிலத்தின் பட்சிகள்

    ஈர இறகை  உலர்த்தும் புற்பாதையில்

    மீதமிருக்கும்  நம் பாதச்சுவடுகள் இன்னும்

     

    எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை

    மென்குளிரைப் பரப்பியிருக்க

    நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்

    நடந்து வந்த பாதையது

     

    தீவின் எல்லாத் திசைகளிலும்

    கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்

    அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட

    கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்

    ‘கருமேகக் கூட்டங்களற்ற வானை

    ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்

    சிரட்டைகளால் செதுக்கப்பட்ட

    அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்

    இவ்வாறாக

    கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு

    உன் சேமிப்பில் வந்தது

    மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்

     

    புனித ஸ்தல மரமொன்றில்

    கடவுளுக்காகத் தொங்க விடப்பட்டிருந்த ஏவல் பொம்மைகள்

    வெயிலை வேண்டும் அவர்களது பிரார்த்தனைகளை

    பொய்ப்பித்தே வந்தன

     

    சூரியனையும் நிலவையும் நட்சத்திரங்களையும்

    நேரில் பார்த்திரா அந்த ஊர்வாசிகள்

    நம்மிடம் அவை பற்றிக் கேட்டார்கள் இல்லையா

    ஆனாலும் அப் பிரதேசத்துக்கும்

    அவை தினந்தோறும் வந்தன

    மழைத் திரை ஒரு நீர்க்கோடாய்

    அவற்றை அவர்களிடமிருந்து மறைத்தது

     

    ‘விதியில் எழுதப்பட்டவர்கள்,

    சமுத்திரத்தில் வழி தவறி

    திசைகாட்டி நட்சத்திரத்தைத் தேடித் தொலைந்தவர்கள்

    முன்பெல்லாம் அத் தனித் தீவில் கரையொதுங்கினர்’

    என்றவர்கள் கூறியதை

    நீ குறித்து வைத்துக் கொண்டாய்

     

    தொலைதூரம் பறந்து சென்ற

    வலசைப் பறவைகள் மட்டுமே கண்டிருந்த வெயிலை

    ஒருபோதும் அறிந்திரா அத் தீவின் சிறார்கள்

    அதன் நிறத்தை, வாசனையை

    அது நம்மைத் தொடும்போது எழும் உணர்வைப் பற்றி

    மழை கண்டு ஆனந்தித்திருந்த நம்மிடம் வினவியதும்

    ‘எவ்வாறு உரைத்தல் இயலும்’ என்றாய்

    சிறிதும் கருணையேயற்று

     

    ஆவி பறக்கும் உஷ்ணப் பானங்களை அருந்தியபடி

    பிரயாணிகள் அனைவரும் சுற்றிப் பார்த்த பின்

    அத் தீவை மழையிடம் தனியே விட்டுவிட்டு

    கப்பலில் நமது தேசம் வந்து சேர்ந்தோம்

     

    ஆனாலும் அன்றிலிருந்து எப்போதும்

    நமது மர வீட்டின் தாழ்வாரத்தில்

    ஈரத் துளி விழும் சப்தம்

    கேட்டுக் கொண்டேயிருக்கிறது இரவிரவாக

     

     

    Share
  • தொல்காப்பியத்தின் காலம்

    –முனைவர் மா.சியாமளாதேவி.

    tholkaapiyar
    தொல்காப்பியம் தமிழில் இன்று கிடைக்கப்பெறும் நூல்களுள் மிகவும் பழமையானது. அதில் காணப்பெறும் சில வழக்காறுகள், இலக்கணக்கூறுகள், வாழ்க்கை மரபுகள் சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டன என்பது, இன்று பலரும் ஒப்ப அறிந்த முடிபாகும். இதனால் அது ‘தமிழின் முதனூல்’ என்று போற்றப்படுகின்றது. மூவாயிரம் ஆண்டு பழமையுடையதாயினும், இன்றும் அதன் ஆளுமைத் தமிழ் மொழியில் பெரும்பகுதி நிலைத்து நிற்கிறது.

    நூலின் காலம்:
    எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பது போல, இந்நூல் தோன்றுவதற்கு முன்பே இலக்கியங்கள் பல இருந்திருத்தல் வேண்டும். அவை காலப்போக்கில் இறந்துபட்டிருக்கலாம். இத்தகைய நூல்களில் பெயர்களையும், பகுதிகளையும் பிற்கால உரையாசிரியர்கள் மேற்கோளாகக் குறிப்பிடுவது, மேற்கூறிய கருத்தையே வலியுறுத்தும் சான்றாக உள்ளது. தொல்காப்பியர் தமக்கு முன் விளங்கிய ஆசிரியர்களின் நெறியையே தாம் எடுத்துரைப்பதாகக் கூறுகிறார். தொல்காப்பியர் தம் நூலில், சற்றொப்ப 260 இடங்களில் தமக்கு முன்பு இருந்த அல்லது தம் காலத்தில் வாழ்ந்த இலக்கண ஆசிரியர்கள் பலரைப் பலவாறு குறிப்பிட்டுள்ளார். நூலின் இடையே,
    ‘என்ப’- ‘என்மனார்’- ‘மொழிப’-
    ‘யாப்பென மொழிப யாப்பறி புலவர்’-
    ‘தோலென மொழிப தொன்மொழிப் புலவர்’

    என ஆங்காங்கு கூறிச்செல்வதாலும், ‘ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ என்றும் தமக்கு முற்பட்ட இலக்கிய மரபைக் குறிப்பிடுவதாலும், அவருக்கு முன்பே பற்பல இலக்கண நூல்களும் இருந்திருக்க வேண்டுமெனத் துணிந்துரைக்க முடிகிறது.

    “தொல்காப்பியப் பாயிரத்தில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற தொடர் வடமொழியின் இலக்கணத்தில் வல்லுநரான பாணினியைக் குறிப்பிடாமல் அதற்கும் முந்தைய இந்திர வியாகரணத்தைப் பற்றிக் குறிப்பதால் பாணினிக்கும் (கி.மு.4ஆம் நூற்.) முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது புலப்படுகின்றது”1

    “மறைமலையடிகள், வெள்ளைவாரணார் போன்றோர் இறையனார் களவியல் உரைவழி நின்றும் அகச்சான்று, புறச்சான்று வழி நின்றும் தொக்காப்பியர் காலம் கி.மு.5000 ஆண்டுகட்கு முற்பட்டது என்றும் கூறுகின்றார்”2

    தொல்காப்பியம் தோன்றிய காலத்தைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் பலவுண்டு. ஆண்டிலே முற்பட்டதென்று கூறுவோர் பலர். பிற்பட்டதென்று கூறுவோர் சிலர்.

    1. “வேதவியாசர் காலத்திற்கு முன்னே தொல்காப்பியம் செய்யப்பட்டது. இன்றுள்ள இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் எழுதப்படுவதற்கு முன்னே தொல்காப்பியம் எழுதப்பட்டது.”

    2. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. இந்த முத்தமிழ்ச்சங்க வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றைக் கொண்டு கணக்கிட்டால் சற்றொப்ப 1300 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது தொல்காப்பியம் என்று முடிவு கட்டலாம்.

    3. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று கூறுவோர் உள்ளனர். தொல்காப்பியத்தில் கார்காலம் முதலில் கூறப்பட்டிருகின்றது. ஆதலால் இந்நூல் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக வழங்கிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுவே தொல்காப்பியம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொன்றியது என்போர் காட்டும் காரணமாகும்.

    4. மக்கள் இரும்பு, பொன் முதலிய உலோக வகைகளைக் கண்டுபிடித்தகாலம் கி.மு.5000 க்குப்பின் என்பர். தொல்காப்பியத்திலே உலோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதலால் அதன் காலம் கி.மு. 5000த்திற்கும் பிற்பட்டதுதான் என்பதில் ஐயம் இல்லை என்பர்.

    5. தொல்காப்பிய காலம் 2400 ஆண்டுகளுக்கு முன்னென்று மொழிவோரும் உள்ளனர். பாணினி இலக்கணத்திற்கு முன்னேயிருந்த ஐந்திர இலக்கணத்தைப் படித்தவர் தொல்காப்பியர். ஆகவே, தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முன்னே வாழ்ந்தவர். பாணினியின் காலம் கி.பி.4ஆம் நூற்றாண்டு, தொல்காப்பியர் கி.பி.4ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தவர். இந்தக் கணக்கு உண்மையானால் தொல்காப்பியம் 2400 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியதாகும்.

    6. தொல்காப்பியம் கி.பி.2ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது.1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்தான் தொல்காப்பியம்; இதற்கு ஆதரவு உண்டு என்போரும் உள்ளனர். இவ்வாறு கூறுவோர் சிறுபான்மையினர்.

    7. எந்த வகையில் பார்த்தாலும் தொல்காப்பியம் கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும். ஆகையால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலேயன்றி பிற்பட்ட நூலில்லை என்போரும் பலர். இது தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிடும் பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதோர் முடிவு என்பர் சாமி. சிதம்பரனார்.”3 மேலும்,

    “சுந்தரமூர்த்தி தொல்காப்பியக் காலத்தைப் பற்றி, சங்க இலக்கிய மொழி நிலையையும் தொல்காப்பிய மொழி நிலையையும் வைத்துப் பார்க்கின் இது சங்க இலக்கியங்களுக்கு முன்னர் எழுந்திருக்க வேண்டும் என்று கி.மு.மூன்றாவது நூற்றாண்டுப் பகுதியை ஒட்டிய காலப் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்றும் எண்ணுவர். சங்க இலக்கியங்கள் கி.மு. இரண்டாவது நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் பல நிலைகளில் தோன்றியுள்ளன அவர் எண்ணம்” என்று கூறுகிறார்.

    சான்றெண்:
    1.சண்முக.செல்வகணபதி. மொழி வரலாறும் மொழி இயலும்.,ப.1
    2.சி.பாலசுப்பிரமணியன்., தமிழ் இலக்கிய வரலாறு.,ப.18
    3.சாமி.சிதம்பரனார். தொல்காப்பியத்தமிழர்., பக்.6-10
    4. Sundaramurthi, Early Literary Theories inTamil., pg.3-7

    துணை நூற்பட்டியல்:
    1.செல்வகணபதி.சண்முக.,
    மொழிவரலாறும் மொழி இயலும்.,
    பழனி; சிட்டிப்பதிப்பகம்
    மு.பதி.2002

    2.சிதம்பரனார்.சாமி.,
    தொல்காப்பியத் தமிழர்.,
    சென்னை; நியூசெஞ்சூரி புக் ஹவுஸ்.,
    மு.பதி.2002

    3.பாலசுப்பிரமணியன்.சி.
    தமிழ் இலக்கிய வரலாறு.,
    சென்னை; மனமலர்ப் பதிப்பகம்.,
    மு.பதி.2003.

    4.Sundaramurthy.G.,
    Early Literary theories in Tamil.,
    Chennai; sarvoday ilakkiya pannai.,
    F.E.1947

    முனைவர் மா.சியாமளாதேவி,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை, அ.வ.அ. கல்லூரி,
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை

    Share
  • படக்கவிதைப் போட்டி – 44

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12395466_930420910345442_335089823_n
    32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.12.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share