— ஸிந்துஜா.

“உங்கள் பெயர்?”
“ராமசேஷன்”
“உங்கள் தகுதி?”
“சார்ட்டர்ட் அக்கௌண்டண்ட்”
“எவ்வளவு வருஷமாக தற்போதைய வேலையில் இருக்கிறீர்கள்?”
“ஆறு வருஷம்”
“தற்போது உள்ள கம்பனி அல்லது வேலை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”
“இல்லை. அப்படியொன்றும் சொல்ல முடியாது.
“அப்படியானால் எதற்காக இங்கே அப்ளை செய்திருக்கிறீர்கள்? ”
“பெட்டர் ப்ராஸ்பெக்ட்ஸ்”
“அங்கே அது இல்லையா?”
“ஆமாம்”

ராமசேஷனுக்கு எதிரில் உட்கார்ந்து கேள்விகளை இறைத்துக் கொண்டிருந்தவர், இந்தப் பதிலால் தாக்கப்பட்டவர் போல், ராமசேஷனை உற்றுப் பார்த்தார்.

ராமசேஷன் அவரைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

அப்போது அவரது கைபேசி ஒலித்தது. அதை எடுத்துப் பார்த்தவர் ராமசேஷனைப் பார்த்து “ஒரு நிமிஷம்” என்று எழுந்து வெளியே சென்றார்.

ராமசேஷன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். மறுபடியும், அவரது திடுக்கிடல் அவன் மனதில் நிழலாடிற்று. அவனுக்கு இப்போது அதிக சம்பளம் தரும் வேலை உடனடியாக வேண்டும். இரு மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலி என்று அவனது தாயாரை மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்ற பின், அவளுக்கு மார்பகப் புற்று நோய் என்று தெரிய வந்தது. அதைக் கேட்ட நொடியில் உலகம் ஏன் இப்படித் திடீரென்று தாறுமாறாகச் சுழன்று அவனைக் கீழே விழுத்தாட்டப் பார்க்கிறது என்று நிலை சாய்ந்தான். நல்ல வேலையாக, அருகில் நின்ற ஆஸ்பத்திரி சிப்பந்தி அவனைத் தாங்கிப் பிடித்து பக்கத்தில் இருந்த படுக்கையில் படுக்க வைத்தான். அம்மாவின் கூடவே அவன் இருந்து ஆக வேண்டிய கட்டாயமான இந்த சமயத்தில் அவன் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து கனடாவுக்குப் போகச் சொன்னார்கள். அதனால், அவன் வேறு வேலை தேட ஆரம்பித்தான். இப்போது அவன் கையில் ஒரு வேலைக்கான ஆர்டர் இருக்கிறது. ஆனால் அதற்கு அவன் தில்லிக்குச் செல்ல வேண்டும். இப்போது வாங்கும் சம்பளத்தை விட அதிகம் தருகிறார்கள். அந்த வேலையை அவன் ஒப்புக் கொள்வதாகக் கூறும் கடிதத்தை, கடைசி நாளான இன்று கொடுக்க வேண்டும். அதற்கு நடுவில், இந்த இன்டர்வியு.

இந்த வேலையிலும் நல்ல சம்பளம். ஆனால் மிக முக்கியமான விஷயம், இந்த ஊரிலேயே வேலை…

அப்போது அறைக்குள் ஒருவன் வந்தான். ராமசேஷன் அவனைப் பார்த்து “ஹலோ பாலா!” என்று புன்னகை செய்தான்.

அவன் “ஹலோ சார்” என்றான். பாலா பெர்சானால் டிபார்ட்மென்டைச் சேர்ந்தவன். அவன்தான் ராமசேஷன் அந்த அலுவலகத்துக்குள் வந்ததும் வரவேற்று, அவனுடைய பேப்பர்களைப் பரிசீலித்து உதவி செய்தான். அன்று நடக்கும் இன்டர்வியுவில், மார்கெட்டிங் பிரிவுக்கு ஒரு உயர் அதிகாரியும், அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு ஒரு உயர் அதிகாரியும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று சொன்னான். நேர்முகத் தேர்வுக்கு மொத்தம் ஆறு பேர்கள் அழைக்கப் பட்டிருப்பதாகவும், யார் நிர்வாக இயக்குனரால் தெரிவு செய்யப்படுகிறார்களோ, அந்த இருவரும் சேர்மனின் வரவேற்பறைக்கு அனுப்பப் பட்டு சேர்மனைப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னான் …

வெளியே சென்றவர் உள்ளே வந்தார். பாலாவைப் பார்த்ததும் “காஃபி சாப்பிடலாமா?” என்று ராமசேஷனைக் கேட்டு விட்டு அவன் பதிலை எதிர்பாராமல், பாலாவிடம் அனுப்பச் சொன்னார் …

பிறகு அவனைப் பார்த்து புன்னகை செய்தபடி மறுபடியும் பேச ஆரம்பித்தார் .

“நீங்கள் இது வரை வேலை பார்த்த கம்பனியில் உங்களுடையது என்று ஏதாவது குறிப்பிட்டுச் சொல்லும்படியான சாதனை உண்டா? “

“சாதனை என்றெல்லாம் கூற முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், கம்பனியின் லாபம் கூடுவதற்கான வழிமுறைகளை நிர்வாகத்துக்கு எடுத்துச் சொல்லி, அவைகளை மற்றவர்களின் உதவியுடன், ஒரு குழுவாக இயங்கி நடத்திக் காண்பித்தேன்”. ராமசேஷன், தன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் ஃபோல்டரில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். அதிலிருந்த வரைபடத்தில் கடந்த ஐந்து ஆண்டுக்கான விற்பனை விவரங்களும், அந்தந்த வருஷத்து இலாப நிலவரங்களும் கோடுகளாகப் பரிணமித்திருந்தன. விற்பனைகளை விட இலாபங்களின் சதவிகித உயர்வு, ஒவ்வொரு வருஷமும், பிரமிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உயர்ந்திருந்தது.

அவன் கொடுத்த பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தவர், ராமசேஷனைப் பார்த்து,”இது ஒரு மார்க்கெட்டிங் கம்பனி என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்போது வேலை பார்த்து வருவது ஒரு விளம்பரக் கம்பனியில். அப்படி ஒன்றுக் கொன்றும் நெருங்கிய தொடர்புடைய பணி சார்ந்தவை இவ்விரு நிறுவனங்களும் என்று சொல்லமுடியாத போது, வரவிருக்கும் மாற்றுப் பணியினால் உண்டாகும் சவால்களை நீங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக” என்றான் ராமசேஷன். “இந்த வயதில் சவால்களை ஏற்று என் அனுபவத்தைப் புடம் போட்டுக் கொள்ளா விட்டால், வேறு எப்போது நான் அம்மாதிரி வாய்ப்புக்களைப் பெறப் போகிறேன் ? ஐ’ம் ஃ பார் இட்!” என்று புன்னகை செய்தான்.

“உங்கள் ஆப்டிமிஸம் எனக்குப் பிடித்திருக்கிறது. மிஸ்டர் ராம், எங்கள் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கிரெடிட் தருகிறோம். இதற்கு ஒரு கால வரையறையும் உண்டு. ஆனால் கடந்த இரு வருஷங்களாக பணவரவு இந்தக் கால வரையறைக்குள் வர மாட்டேன் என்கிறது. ஒருவருக்கு ஒரு மாத கிரெடிட் என்றால், அவரிடமிருந்து நாங்கள் பணம் பெற்று முடிப்பதற்கு மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிடுகின்றன.”

ராமசேஷன் மேலும் விவரம் கேட்பதற்குக் காத்திருப்பவன் போல் ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான்.

“இது எங்கள் விற்பனை எதிர்பார்ப்புக்களை மிகவும் பாதிக்கின்றது. இந்த வருஷத்தில் ஏழு மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால் நாங்கள் நான்கு மாத விற்பனை இலக்கைக் கூட எட்ட முடியவில்லை.”

“கால வரையறைக்குள் பணம் கொடுக்காத வியாபாரிகளை நீங்கள் எப்படி ட்ரீட் பண்ணுகிறீர்கள்?” என்று ராமசேஷன் கேட்டான்.

“இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தக் கம்பனியுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள். அதனால், திரும்பத் திரும்ப வற்புறுத்தல் மூலமே பணத்தைப் பெற முயற்சிக்கிறோம்.”

“அதாவது, அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள். கோர்ட், வழக்கு என்றெல்லாம் போக வேண்டிய அவசியத்தை உண்டு பண்ணாதவர்கள் என்கிறீர்கள்.” என்றான் ராமசேஷன்.

எதிரில் இருந்தவர் தோள்களைக் குலுக்கினார்.

“கால வரையறைக்குள் வியாபாரிகள் பணம் தராததற்கு வியாபாரத்தில் காணப்படும் மந்த நிலைமை மட்டும் தானா?” என்று ராமசேஷன் கேட்டான்.

“இந்த வருஷ ஆரம்பத்திலிருந்தே ரீசெஷன் தலை தூக்கி நிற்கிறது. அயல் நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பியாவில் மித மிஞ்சிய மந்த நிலை நீடித்து வருகிறது. அதன் எதிரொலியாக, இங்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.”

ராமசேஷன் “நீங்கள் குறிப்பிட தேதியில் பணம் தராதவர்களுக்கு, சரக்குகள் தருவதை நிறுத்தி விட்டீர்களா? “

“ஆமாம். அதுதானே சரியான முறை?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“பொதுவாக அது சரியான முறை. பணத்தை வைத்துக் கொண்டு, நமக்குத் தராமல் இழுத்தடிக்கும் ஏஜன்ட்களுக்கு அது பொருந்தும். ஆனால் நீங்கள் கூறுவதைப் பார்த்தால், மொத்த மார்க்கெட்டே இழுபறியில் இருக்கிறது. இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் நாம் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். உங்கள் சரக்கு போவது மொத்த விற்பனையாளர்களிடம். அதை அவர்கள் சில்லறை வியாபாரிகளிடம் விற்கிறார்கள். பொதுவாக சில்லறை வியாபாரிகள் கடனுக்கு விற்பது குறைந்த அளவே. மார்க்கெட் நிலவரத்தால், அவர்களும் கடன் கொடுத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், பணப் புழக்கம் அதிகரிக்க வேண்டும். இதற்கு நடுவே, சப்ளை நின்று போனால், கடன் வசூலிப்பும் நின்று போகிறது. தொடர்ச்சியான சப்ளை ஒன்றுதான் இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்கும்.”

ராமசேஷனை இன்டர்வியு செய்து கொண்டிருந்தவர் அவனை வியப்புடன் நோக்கினார்.

“நீங்கள் அக்கவுண்ட்ஸ் ஆள். ஆனால் நீங்கள் பேசுவது மார்க்கெட்டிங் ஆட்கள் பேசுவது மாதிரி அல்லவா இருக்கிறது!”

“இல்லை, நான் மொத்தப் பிரச்சினையையும் பார்த்து, கம்பனிக்கு எப்படி உதவ வேண்டும் என்று யோசிக்கிறேன்” என்று ராமசேஷன் சிரித்தான் .

“குட்” என்றார் அவர்.

காப்பி வந்தது, குடித்தார்கள். அதற்குப் பிறகு அவனிடம் சம்பளத்தைப் பற்றிப் பேசினார். எவ்வளவு விரைவில் வேலைக்குச் சேர முடியும் என்று கேட்டார். இண்டர்காமில் பாலாவைக் கூப்பிட்டார்.

ராமசேஷனிடம் “நீங்கள் கொஞ்ச நேரம் காத்திருங்கள்” என்றவர், பாலாவிடம் “இவரை அழைத்துக் கொண்டு போ” என்றார்.

பாலா ராமசேஷனை சேர்மனின் வரவேற்பு அறையில் உட்கார வைத்து விட்டுப் போனான்.

உள்ளூர மகிழ்ச்சி பெருகி ஒடுவதை ராமசேஷன் உணர்ந்தான். இந்த வேலை கிடைப்பது நிச்சயம்தான். அறையைச் சுற்றி நோக்கினான். குளிர்ச்சியாக இதமாக இருந்தது. செல்வச் செழிப்பின் பிரகாசம், தரைகளிலும், ஜன்னல் திரைகளிலும் சுவர்களிலும், இருக்கைகளிலும் காணப் பட்டது. வலது கோடியில் இருந்த ஓர் இருக்கையில் கண்ணாடி அணிந்திருந்த இளைஞன் ஒருவன் உட்கார்ந்து கணினியைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தான். மார்க்கெட்டிங் பிரிவுக்குத் தெரிவு செய்யப் பட்டவனோ என்று சந்தேகம் மனதில் ஓடிற்று . அப்போது அவனுக்கு நேர்முகத் தேர்வு நடத்தியவர் சேர்மனின் அறைக்குள் நுழைவதை ராமசேஷன் பார்த்தான். சற்றுக் கழித்து சேர்மன் அறையிலிருந்து வெளி வந்த பணியாள் , வலது கோடியில் அமர்ந்திருந்தவனை நெருங்கி ஏதோ சொன்னான். அவன் உடன் எழுந்து சேர்மன் அறைக்குள் சென்றான்.

ராமசேஷன் இந்த வேலை தனக்குக் கிடைத்து விட்டால், அம்மாவை நன்றாகக் கவனித்துக் கொள்ளத் தோதுவாக இருக்கும் என்று ஆர்வத்துடன் நினைத்துக் கொண்டான். எல்லாம் கடவுள் செயல்! தில்லிக்குப் போகத்தான் வேண்டுமென்று முக்கால் வாசி முடிவு கட்டிவிட்டபோதுதான், இந்த நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. நிர்வாக இயக்குனர் அவனது பதில்களால் திருப்தியுற்றவர் போலத்தான் தெரிந்தார்…

அப்போது பாலா அங்கே வந்தான். ராமசேஷனின் அருகே வந்து உட்கார்ந்து கொண்டான். “இன்று மார்கெடிங் பிரிவு நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களில் யாரும் தேர்ந்தெடுக்கப் படவில்லை” என்றான் ராமசேஷனைப் பார்த்து.

ராமசேஷனுக்குத் ‘திக்’கென்றது

“அப்படியானால் உள்ளே சேர்மனுடன் உட்கார்ந்து கொண்டிருப்பது? ” என்று பாலாவைப் பார்த்துக் கேட்டான் .

“அவர் அக்கவுன்ட்சுக்கு வந்திருக்கிறவர்.”

அப்போது சேர்மனின் பணியாள் வந்து பாலாவைக் கூப்பிடுவதாகத் தெரிவித்தான்.

உள்ளே சென்ற பாலா, கண்ணாடி அணிந்திருந்தவனுடன் திரும்பி வந்தான். அந்த இளைஞன் முகத்தில் சந்தோஷம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவன் தன் கைப் பையை எடுத்துக் கொண்டு வரச் சென்ற போது, பாலா ராமசேஷனிடம் “டைரக்டர் உங்களைக் கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணச் சொன்னார்” என்றான்.

“அவருக்கு என்ன ஆயிற்று ?” என்று கண்ணாடி அணிந்தவனின் பக்கம் திரும்பிக் கேட்டான் ராமசேஷன் .

“அக்கவுண்ட்ஸ் பிரிவின் தலைமைப் பதவிக்கு செலக்ட் ஆகி விட்டார் என்றான் பாலா.” உங்களை இருக்கச் சொன்னதால் அனேகமாக அவருக்குக் கீழே காலியாக உள்ள உதவித் தலைமைப் பொறுப்பாளராக உங்களைக் கூப்பிடக்கூடும்” என்றான். பிறகு அந்த இளைஞனுடன் கிளம்பிச் சென்றான்.

ராமசேஷன் சுற்றிலும் ஒரு முறை நோக்கினான். மங்கலாகப் பிரகாசமற்று அந்த அறை தோற்றமளிப்பது போல இருந்தது அவனுக்கு. தலைமைப் பொறுப்புக்கு அடுத்த இடம் என்றால், அனேகமாக அவன் இப்போது பார்க்கும் வேலைக்குச் சமானமான பதவிதான், சம்பளமும் பெரிதாக ஒன்றும் வந்து விடாது. அவன் கைப்பையைத் திறந்து பார்த்தான். தில்லிக் கம்பனியின் நீல நிறக் கவர் தென்பட்டது. கைப் பையை மூடிவிட்டு எழுந்தான். வாசலை நோக்கிச் சென்றான். இன்று சனிக் கிழமை. அரை நாள்தான் அந்த அலுவலகம் இயங்கும் என்றார்கள். கால்மணி நேரத்துக்குள் போய் விடலாம். பார்க்கிங்கில் இருந்த காரை நோக்கி ‘விறு’ ‘விறு’ என்று நடந்தான் .

“உங்களை அவ்வளவு தூரம் கவர்ந்து விட்டானா இந்தப் பையன் ? ” என்று சேர்மன் கேட்டார்.

நிர்வாக இயக்குனர் புன்னகை செய்தார். “மிகவும் துடிப்புடன் இருக்கிறான். அவனிடம் ஸி.ஏ. இருக்கிறது. மார்க்கெடிங் பற்றிய விரிவான புரிதல் இருக்கிறது. மார்க்கெடிங் உடன் வெகுவாக ஒத்துப் போகும் அட்வர்ட்டைஸிங்கிலும் ரிச்சான அனுபவம் இருக்கிறது. ஆறு வருஷம் விளம்பரக் கம்பனியில் பணி புரிந்திருக்கிறான். இந்த மாதிரி காம்பிநேஷன் வேலை மார்க்கெட்டில் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை.அதனால்தான் சொல்கிறேன்”

“என்னவென்று?”

“ராமசேஷனை மார்க்கெடிங் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமித்து விடலாம். வழக்கமாகத் தரும் சம்பளத்தையும் இன்னும் சற்று அதிகப் படுத்திக் கொடுக்கலாம்.ஹீ வில் பீ ஆன் அஸட் டு அவர் கம்பனி ” என்றார் நிர்வாக இயக்குனர்.

“தென் இட்ஸ் ஓகே, கோ அஹெட் ” என்றார் சேர்மன் தலையை அசைத்தபடி.

“ராமசேஷனை நீங்கள் ஒரு முறை பார்த்து விடுங்கள். நானே கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்” என்று நிர்வாக இயக்குனர் சேர்மன் அறையை விட்டு வெளியே வந்தார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.