Year: 2015

  • மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 1

    — முனைவர்   துரை. குணசேகரன்.

     

    மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

    கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
    படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
    முடியாத முதலோனை மூவர் பெருமானை
    வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
    வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…

    என்னும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரிகளாலே முருகப்பெருமானைப்போற்றி, மகாவித்துவானின் இலக்கியப்பணிகள் குறித்த என்னுடைய பேருரையைத் தொடங்குகின்றேன்.

    கம்பனைப்போல்
    வள்ளுவர்போல்
    இளங்கோவைப்போல்
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

    எனும் பாரதத்தில் ‘பா’ரத்தால் பவனிவந்த சாரதியாம் பாரதியின் பாடலில் சேர்க்கப்படவேண்டிய இன்னொருவர் உண்டென்றால் அவர்தாம் சிற்றிலக்கியக்களஞ்சியக் கருவூலமாம் 199 ஆண்டுகளுக்கு முன் இம்மண்ணில்தோன்றி, மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மாமனிதர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.

    காலத்தொடு கற்பனை கடந்த
    கருவூலத்துப் பழம்பாடல்
    கலைமாச் செல்வர்

    என்னும் குமரகுருபரர் சொற்களுக்கு இலக்கியமாய் வாழ்ந்தவர்.

    செந்தமிழ் வளர்ந்த தென்பாண்டி நாட்டில் மானிடர்போற்றும் மதுரைமா நகரில் இல்லறத்தை நல்லறமாய் நடத்துகின்றார் சிதம்பரம் பிள்ளை – அன்னத்தாச்சி இணையர். வாழ்வின் வளம்வேண்டி திரிசிரபுரம் எனும் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே காவிரித்தென்கரையில் உள்ள எண்ணெயூருக்கும் அதனை அடுத்து அதவத்தூருக்கும் வந்து குடியமர்கின்றனர். இணையர் நடத்திய இல்லறப்பயனாய், செய்த பெருந்தவத்தால் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம்நாள் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிறந்தார்.

    கல்வியும் இல்வாழ்வும்:-
    ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’என்று பாடிய புறநானூற்றுப்புலவர் ‘சான்றோனாக்குதலை தந்தையின் கடனென்றார். அவரின் கூற்றை மெய்ப்பிக்கும்வகையில் சிதம்பரம்பிள்ளை, மகனை மற்றவர் போற்றும் மாண்புகள் மிகுந்தவனாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.

    ஆம், சிறுவயதிலேயே தந்தை கற்பிக்கும் பள்ளியில் பிள்ளைக்கும் பாடஞ்சொல்லித்தரப்படுகிறது. ஐந்து வயதில் தொடங்கிய கல்வியால் ஆத்திசூடி, நீதிநூல்கள் தொடங்கி, காலஞ்செல்லச்செல்ல அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், நிகண்டு, பிரபந்தம், சதகம், மாலை, நைடதம், நன்னூல் உள்ளிட்ட இன்றியமையா சிற்றிலக்கியவகைகள் மற்றும் இலக்கணங்களையும் பிழையறக்கற்றுக்கொண்டார். பள்ளியில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் உள்ள சட்டாம்பிள்ளையாக உயர்ந்தார்.

    பன்னிரண்டு வயதிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றலைப்பெற்றார். படிக்கும் நூல்களை ஏட்டில் எழுதும் பயிற்சியையும் பெறுகிறார். சூழலைக்கொடுத்து செய்யுள் செய்யும் பழக்கத்தையும் காலஞ்செல்லச்செல்ல திரிபு, யமகம், சிலேடை அமைத்து பாவியற்றும் கலையையும் கற்றுக்கொள்கிறார். விரைந்து, குறுகிய காலத்திலேயே பிந்தைய நிலையில் கற்க வேண்டியதனைத்தும் கற்றுக்கொள்வதுடன், தந்தைசென்று பாடஞ்சொல்லும் இடத்துக்கும் உடன் சென்றுவரலானார். தந்தை செல்லமுடியாத காலத்தில் மீனாட்சிசுந்தம் அவர்களே சென்று பாடம்நடத்தி வருகிறார். பிள்ளையின் திறமறிந்தோர் தந்தைக்கு அளிக்கும் மதிப்பையும் மரியாதையையும் அளிக்கின்றனர்.

    வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழிஉடைந்தாற்போல மீனாட்சிசுந்தரம் பிள்ளை நன்கு வளர்ந்துவரும் சூழலில், பதினைந்து வயதில் தந்தை சிதம்பரம்பிள்ளை மறைவெய்துகிறார். அதுவரை, தாம்பிறந்த அதவத்தூரில் வாழ்ந்துவந்த பிள்ளையவர்கள், திரிசிரபுரம் மலைக்கோட்டையில் உள்ள தெற்கு உள்தெருவில் வாடகை வீடொன்றில்வந்து குடியேறுகிறார். காவேரிஆச்சி என்னும் மங்கை நல்லாளை நண்பர்களும் உறவினர்களும் மணமுடித்து வைக்கின்றனர்.

    தந்தை மறைந்தாலும் கல்வி கற்பதை மறக்கவில்லை. உறையூர் முத்துவீரராகவே முதலியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார், வீரநாயக்கன்பாளையம் இருளாண்டிவாத்தியார் பாலக்கரை வீரராகவசெட்டியார், கோட்டடி ஆறுமுகம்பிள்ளை, கல்குடி மருதமுத்தப்பிள்ளை, வேலாயுதமுனிவர், கீழ்வேளுர் சுப்பையாபண்டாரம், திருநயம் அப்பாவையர், வேலாயுதமுதலியார், கீழ்வேளுர் சுப்பிரமணியதேசிகர், திரிசிரபுரம் கோவிந்தம்பிள்ளை போன்ற தலைசிறந்த கல்விமான்களிடம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்கு இலக்கணங்களை ஐயமறக்கற்றுக்கொண்டார்.

    ஐந்தாம் இலக்கணமாம் அணியிலக்கணத்தைக்கற்பிக்க, உரிய ஆசிரியர் கிடைக்காமையால் தண்டியலங்கார ஆசிரியரை எதிர்பார்த்துக்காத்திருந்தார். அவ்வயம் வீடுவீடாக சென்று பிச்சையேற்று வாழ்க்கைநடத்திவரும் பரதேசி ஒருவர், அணியிலக்கணம் அறிந்தவர் என்பதை அறிகிறார். ஆனால், அப்பரதேசி எவரையும் மதிக்கும் இயல்பு அற்றவர் என்பதும் தெரியவருகிறது.

    தானே தரக்கொளி னல்லது தன்பால்
    மேவிக் கொளக்கொடா விடத்து மடற்பனை

    என்பதனையொத்து, தம்மை நாடிவருவோருக்கு சிலதமிழ் நூற்கருத்துகளை உரைப்பார் என்பதனை அறிந்து, அவரிடம் சென்று எவ்வாறேனும் அணியிலக்கணம் கற்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார். பரதேசி பிச்கை ஏற்கும் காலமறிந்து கூடவேசென்று அவருக்குப்பிடிக்கும் பொருள் கீழ்த்தரமான ஒன்று என்று அறிந்தும், அவர்விரும்பும் போதைப்பொருளில் ஒன்றை வாங்கிச் சென்று காலமறிந்து கொடுக்கிறார். அணியிலக்கணம் மட்டுமன்றி வேறுசில நூல்களைப்பெற்றும் பிள்ளையவர்கள் தன்னை மேம்படுத்திக்கொண்டதாக உ.வே.சா. குறிப்பிடுகின்றார்.

    ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்றே’

    என்னும் புறப்பாடலின் பொருளை அறிந்தவர் அன்றோ. இவ்வகையில் ஐந்திலக்கணத்தில் பிள்ளையவர்கள் தேர்ச்சி பெற்றவராகிறார். மேலும்,
    நினைத்த மாத்திரத்தில் நினைத்த அளவு கவிதைபாடும் ஆசுகவி,
    இனிமையாக இசையுடன் கவிபாடும் மதுரகவி,
    சித்திரவடிவில் பாவியற்றும் சித்திரக்கவி,
    சுருங்கிய பொருளை விரித்துப்பாடும் வித்தாரக்கவி
    எனும் நால்வகையிலும் செய்யுளியற்றிப்பாடும் ஆற்றலை உரிய அறிஞர்களின்வழி கற்றுக்கொள்கிறார்.

    செய்யுள் இயற்றும் பயிற்சி:-
    பாடங்களை உரிய ஆசிரியர்களை நாடிக்கேட்டு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொண்ட பிள்ளையவர்கள், நல்லவாய்ப்புகள் வழி அவற்றைச்செயல்படுத்தும் பயிற்சியைப் பெறுகிறார். தந்தையார் காலத்தில் பாடஞ்சொல்லி முடித்தபின் பிள்ளையுடன் உடன் பயின்ற மாணவர்களையும் கடைக்கு அனுப்பி, வீட்டிற்குத்தேவையான பொருள்களை வாங்கிவரச்சொல்வது பழக்கம். அப்போது பிள்ளையவர்களும் மாணவர்களும் ஒருசெய்யுளை ஒருவர் சொல்ல, அதன் இறுதிச்சொல்லை முதலாகக்கொண்டு அந்தாதி முறையில் வேறொருவர் வேறாருசெய்யுளைக் கூறுவர். இவ்வகையில் அவரவர் அறிந்த செய்யுளை அனைவரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

    சங்கச்சாவடியைக்கடந்து பிள்ளைகள் செல்லும் பொழுது அங்குப்பணிபுரியும் அரங்கபிள்ளை என்பவர், சிதம்பரம் பிள்ளையின் மாணவர்கள் என்பதை அறிந்து அப்போது நடைபெற்றுவரும் பாடங்கள் குறித்தும் மனப்பாடம் செய்துள்ள பாடல்கள் குறித்தும் வினவுவார். செய்யுள் இயற்றும் வழியை அறிந்திருக்கிறீர்களா? என்ற வினவலுடன் ஒருமுறை விநாயகர் குறித்து ஒரு வெண்பாவைச்செய்யுங்கள் என்றாராம். அவ்வமயம் அனைவரும் அதுகுறித்து சிந்தனை செய்து கொண்டிருக்கையில் பிள்ளையவர்கள்,

    “பாரதத்தை மேருப்பருப் பதத்திலே எழுதி
    மாரதத்தைத் தந்தையிவர் வண்ணஞ்செய் சீருடையோய்
    நற்றழிழை யாங்கணயந்து கற்றுத் தேறமனத்
    துற்றருளை எங்கட் குதவு”

    எனும் வெண்பாவை விரைந்து எழுதித்தருகிறார். இதே போன்ற வழக்கத்தை ஒவ்வொருமுறையும் செய்யவைத்து, வெண்பாவிற்கு ஒரு பணமாகிய இரண்டு அணா கொடுத்து அனுப்புவாராம். இப்பயிற்சி பிள்ளையவர்கள் எதிர்காலத்தில் கடல்திறந்த மடையாக, பாக்களைக்கொட்டுவதற்குக்களனாக – பயிற்சிக்களமாக அமைந்தது.

    இதேபோன்று திரிசிரபுரம் மலையாண்டிப்பிள்ளை என்பவர் பிள்ளையவர்களின் ஆற்றலை அறிந்து, தம் ஊரிலுள்ள மிராசுதார் ஒருவரின் இல்லம் அழைத்துச்சென்று சிறப்பாக அறிமுகம் செய்தார். அருகில் இருந்த ஒருவர் ஒருபாடலைக்கூறி ‘இப்பாட்டுக்கு அர்த்தம் சொல்’ என்று கேட்க, உடனே பொருளுரைக்கிறார். இதனையே ஈற்றடியாகக்கொண்டு ஒருவெண்பாப்பாடு என்று சொல்ல, ‘சொல்’ என்பதற்கு ‘நெல்’ என்னும் பொருள் கொண்டு எழுத, அது பொருந்தாமையால் ‘தூய’ என்பதனை முன்னே வைத்து, உடனே பாடிமுடிக்கிறார். கேட்ட மிராசுதாரர் ஒருவண்டிநெல் கொடுத்தனுப்புகிறார். இது பிள்ளைக்கு மட்டுமன்றி, ‘தன் மகனைச்சான்றோன் எனக்கேட்கும் தந்தைக்கும்’ நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தன.

    தந்தையார் சோமரசம்பேட்டை எனும் ஊரில் மறைந்தார். மறைந்த ஆண்டு ‘விரோதி’ என்பதாகும். வேதனையின் விளிம்பிற்கே சென்ற பிள்ளையவர்கள்,

    “முந்தை அறிஞர் மொழிநூல் பலநவிற்றும்
    தந்தை எனைப்பிரியத் தான்செய்த – நிந்தைமிகும்
    ஆண்டே விரோதியெனும் அப்பெயர்நிற்கே தகுமால்
    ஈண்டேது செய்யாய் இனி”

    என்று வெண்பாப்பாடுகிறார். இப்பயிற்சிகள் பிற்காலத்தில் படைப்புலக அரிமாவாகத் தமிழகத்தில் பிள்ளையவர்கள் வலம்வர பேருதவியாய் இருந்தது.

    சென்னைப்பயணம்:-

    “நவில்தொறும் நூனயம் போன்று பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு”

    எனும் மொழிக்கேற்ப எண்ணற்ற நூல்களைப்பயின்று தமது அறிவெல்லையை விரிவுபடுத்திக்கொண்டார். தாம் வாழும் இடத்தைச்சுற்றியுள்ள தமிழறிஞர்களிடம் மட்டும் கற்றகல்வி போதாது என்று எண்ணினார். சென்னையில் கல்விச்சங்கம் ஒன்று நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் தமிழ் வித்துவான்களை வரவழைத்து மாணாக்கர்களுக்குப்பாடம் புகட்டுதல், பழைய தமிழ்நூல்களைப்புதிப்பித்தல், செய்யுள் வடிவிலான நூல்களை எழுதுவித்தல், கல்விநிலையங்களுக்கு ஏற்றவகையில் உரைநடையில் இலக்கணங்களையும் பாடங்களையும் இயற்றச்செய்தல், வடமொழி உள்ளிட்ட பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் முதலான பணிகளைச்செய்து வருவதை அறிந்துகொள்கிறார். சென்னை செல்லுவதற்கும் அங்கே தங்கித் தமிழறிஞர்களைச் சந்தித்து வருவதற்கும் பொருட்செலவு குறித்து சிந்தித்து வருகிறார்.

    இலக்குமணப்பிள்ளை மகாவித்துவானை ஆதரித்து வருபவர்களில் ஒருவராவார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவரின் வழக்கை நடத்துவதற்குரிய சரியான நபர் யார்’ என்பதை சிந்தித்து, மகாவித்துவானின் நினைவு வரவே, அவரை அனுப்பலாம் என்று முடிவுக்கு வருகிறார். காலம் கனிந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அது இதுதான் போலும் இதனை,

    நித்தியத் தரித்திரராய் உழைத்துழைத்துத்
    தினைத் துணையும் பயனின்றிப் பசித்தமக்கள்
    சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
    கணத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

    என்று புரட்சிக்கவியில் பாவேந்தர் பாடுவாரே அந்த இன்பத்தினை மகாவித்துவான் அடைந்திருப்பார்.

    சென்னையை அடைந்த பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஸ்ரீதாண்டவராயத்தம்பிரான், காஞ்சிபுரம் சபாபதிமுதலியார், எழும்பூர் திருவேங்கடாசலமுதலியார், திருத்தணிகை விசாகப்பெருமாளையர், திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை, சென்னையில் விநாயகப்புராணத்தை கச்சியப்ப முனிவர் அரங்கேற்றம்செய்தபொழுது அதற்குசிறப்புப்பாயிரம் அளித்த போரூர் வாத்தியார், அட்டாவதானம் வீராசாமி செட்டியார், புரசைஅட்டாவதானம் சபாபதி முதலியார் போன்றவர்களிடம் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், காஞ்சிபுராணம், சைவப்பிரபந்தங்கள், திருவாரூர்த்தலபுராணம் உள்ளிட்ட நூல்களில் ஏற்பட்ட ஐயங்களைத்தீர்த்துக்கொண்டார்.

    கல்லாடம், திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார், திருக்குறள் பரிமேலழகர் உரை, கம்பராமாயணம், பாகவதம், திவ்வியப்பிரபந்தம் போன்ற நூல்கள் தொடர்பான பாடங்களையும் தெளிவுபடுத்திக்கொண்டார். ஒவ்வொரு நாளையும் மூன்றாகப்படுத்திக்கொண்டு முற்பாகத்தில் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடத்தும், பிற்பகலில் எழும்பூர்த்திருவேங்கடாசல முதலியாரிடத்தும் கதிரவன் மறைவிற்குப் பின் மயிலை திருவண்ணாமலைமடத்துதிருவம்பலத்தின்னமுதம்பிள்ளையிடத்தும் சென்று அவர்களுக்கு ஆகவேண்டிய எழுதுதல், ஒப்புநோக்குதல் முதலான பணிகளைச் செய்துவிட்டு, தக்கநேரத்தில் பாடங்கேட்டுவருதலை வழக்கமாகிக்கொண்டிருந்தாராம். இவர்களில் எவருக்கேனும் பாடஞ்சொல்ல நேரமில்லையாயின் அதனை முன்பே தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் பிறஅறிஞர்களிடம் பாடம் கேட்கச்சென்று விடுவாராம்.

    பிள்ளையவர்கள் மேற்படிக்காலத்தை எவ்வாறு பொன்னான காலமாக எண்ணிச்செயல்பட்டுள்ளார் என்பதை உ.வே.சா. போன்ற மாணவர்களுக்குச் சொல்லுவாராம். திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் பொழுது அருள்மிகு கபாலீசுவரர்கோவில் வாயில் வழியாகத்தான் போவார்களாம். உள்ளே சென்று வழிபட விருப்பம் இருந்தும் நேரம்போய்விடுமே என்னும் கவலையால் வெளியில்நின்றே வழிபட்டுச் செல்வதாக உ.வே.சா பிள்ளையவர்கள் குறித்த வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.

    அறிஞர் பாராட்டு:-
    ‘அடக்கம் அமரருள் உயக்கும்’ என்பது வள்ளுவரின் வாக்கு அல்லவா? இது பிள்ளையவர்களுக்கு மிகவும் பொருந்தும். சென்னையில் இருந்தநேரம் சபாபதி முதலியார் அவர்கள் பிள்ளையவர்களை மகாலிங்கையர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். இருவரும் தமிழ்மலைகள். நீங்கள் எந்த நூலை வாசித்திருக்கின்றீர்? அவற்றில் ஒன்றிலிருந்து ஒரு பாடலைச்சொல்லுங்கள் என்றாராம். உடனே,

    இரசத வரையமர் பவள விலங்கல்
    இடம்படர் பைங்கொடியே
    இமையவர் மகிழ்வொடு புகழுஞ் சிமயத்
    திமயம் வரும்பிடியே….

    என்று தொடங்கி,

    மதுரித நவரசம் ஒழுகக் கனியும்
    வளத்த நறுங்கனியே
    தரணி மிசைப்பொலி தருமக்குயிலே
    தாலே தாலேலோ
    தழையும் தந்தி வனத்தமர் மயிலே
    தாலே தாலேலோ

    என்று நிறைவு செய்கிறார். பொருளையும் தக்கவாறு எடுத்துரைக்கிறார். கேட்ட மகாலிங்கயைர், ‘இப்பாடல் ஒரு பிள்ளைத்தமிழில் உள்ளது போலிருக்கிறது. சொற்களும் பொருளும் நயம்பட உள்ளன. இது திரிசிரபுரம் முதலிட இடங்களில் மட்டும்தான் வழங்குகிறது போலும். இதன்பெயரையாவது ஒருவரும் நம்மிடம் சொல்லவில்லையே’ என்று ஏக்கத்துடன், ‘இச்செய்யுள் எந்தநூலில் உள்ளது? இயற்றியவர் யார்?’ என்று வினவுகிறார்.

    மிகவும் அடக்கத்தோடு, ‘இது அடியேன் இயற்றிய அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழில் உள்ளது’ என்கிறார். ‘இவ்வளவு அருமையான நூலைப்படைத்தவர் அடங்கியிருப்பது வியப்பாக உள்ளது. இதைப்படைக்க எவ்வளவு நூல்பயிற்சியைப்பெற்றிருக்க வேண்டும் என்று பலவாறாகப்பராட்டி பலமுறை அச்செய்யுளைக்கூறச்சொல்லிக்கேட்டுமகிழ்ந்தாராம். இந்நூல் இதுவரை அச்சேறவில்லையென்றால் உடனே அம்முயற்சியில் இறங்குங்கள் என்று கூறியதுடன், ‘இந்த நகரில் எவ்வளவுநாள்; தங்கினாலும் என்னுடன்தான் தங்கவேண்டும். யோசிக்க வேண்டாம். ஆகவேண்டிய காரியம் எதுவாக இருப்பினும் முடித்துத்தர ஏற்பாடு செய்கிறேன்’ என்று அன்பொழுக வேண்டிக்கொண்டாராம். கற்றோருக்குச்சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்களே அது இதுதான் போலும்.

    பிறகு மகாலிங்கையருடன் பழகும் வாய்ப்பினை மிகுதிப்படுத்திக்கொண்டார். நன்னூல் விருத்தியுரை, காரிகையுரை தண்டியலங்காரவுரை நாற்கவிராச நம்பியகப்பொருளுரை முதலான நூல்களில் தமக்கிருந்த ஐயங்களைப்போக்கிக் கொண்டார். அதுவரை அவருக்குக்கிடைக்காமலிருந்த இலக்கணக்கொத்துரையையும் பெற்றுக்கொண்டார். அதனைக் கொடுக்கும்பொழுது, ‘இந்நூல் கிடைக்காமல் பலவிடங்களில் அலைந்தேன். திருவாவடுதுறை மடத்திலும் இல்லை. பின் தாண்டவராயத்தம் பிரானிடத்தே பெற்றேன். இதனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்’ என்று கொடுத்தாராம். அதனை உடனே படியெடுத்துக்கொண்டதாகக்குறிப்பு உள்ளது. மகாலிங்கையரின் வேண்டுகோளான அகிலாண்டநாயகிபிள்ளைத்தமிழ், திரிசிரபுரம் இலக்குமணப்பிள்ளையின் பொருளுதவியால் அச்சிடப்பெற்றது. இதுகுறித்து என் உரையில் பின்னால் சொல்லவிருக்கிறேன். இதேபோன்று பிள்ளையவர்களின் அச்சான படைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. உரையின் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.

    இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர் கற்றது
    உணர விரித்துரை யாதார்

    என்னும் குறள்நெறிக்கேற்ப, கற்ற கல்வியின் சிறப்பே எடுத்துரைக்கும் ஆற்றலில்தான் உள்ளது. அவ்வகையில் தந்தைஅளித்த பயிற்சியாலும் தாம் செய்த முயற்சியினாலும் பிள்ளையவர்கள் கல்விச்செல்வம் நிரம்பிய நிறைகுடமாய், ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்சான்றோராய் விளங்கினார். தான்பெற்ற இன்பம் இவ்வையகம் முழுதும் பெருக பாடம்சொல்லும் செயலில் இறங்கினார்.

    பெரியபுராண விரிவுரை:-
    பிள்ளையவர்கள் பெரியபுராணத்தின்மீது ஈடுபாடு கொண்டு அதனை ஐயமற அறிந்து கொண்டார்கள். அதனை விரிவுரையாக நிகழ்த்தினால் தமிழ்ச்சுவையையும் பக்தியின் மேன்மையையும் பலரறியக்கூடும் என்பதால் தக்காரை அணுகி விரிவுரையை நிகழ்த்திவருகிறார். சமயக்காழ்ப்புணர்ச்சியால் பொறாமைகொண்ட சிலரால் விரிவுரை தடைபடுகிறது. காரணம் பெரியபுராணத்தில் வரும் ஒவ்வோர் அடியவரின் புராணத்திலும் அவரின் மரணம் குறித்து செய்திவருவதால் அமங்கலமுடிவாயிருக்கின்ற இந்த நிகழ்வை ஒரு வீட்டில் நடத்தலாமா? என்று இல்லத்து உரிமயாளரை கலைத்துவிடுகிறார்கள். மொழிப்பற்று இல்லாதவரிடத்து இவ்விரிவுரை பயன்தராது என்று உரை நிறுத்தப்படுகிறது. சிலரின் வேண்டுகோளுக்கேற்ப பின்பு வேறொரு இடத்தில் எஞ்சிய பகுதி தொடங்கப்பெற்று நிறைவடைகிறது.

    இதேபோல பிள்ளையவர்களின் சீர்காழிக்கோவை உள்ளிட்ட ஒருசிலபடைப்புகளில் அரங்கேற்றத்தின்பொழுதும் இப்படிப்பட்ட இடர்பாடுகளைச் சந்தித்துள்ளார். காலப்போக்கில் அவையெல்லாம் நீங்கியது மட்டுமன்றி, ‘பிள்ளையவர்கள் நம்பகுதிக்கு வரமாட்டார்களா? நம்மூரைப்பற்றித்தலபுராணங்கள் பாடமாட்டார்களா’ என்று மக்கள் ஏங்கித்தவித்த காலம் உருவாயிற்று.

    (தொடரும்)

    குறிப்பு:-
    இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.

     

     

     

    முனைவர் துரை. குணசேகரன்
    தலைவர் தமிழாய்வுத்துறை
    அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
    மன்னன்பந்தல்,மயிலாடுதுறை

    *********************

    Share
  • குறளின் கதிர்களாய்…(100)

    செண்பக ஜெகதீசன் 

    படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
    உடல்சுவை உண்டார் மனம்.   (திருக்குறள் -253: புலால்மறுத்தல்) 

    புதுக் கவிதையில்… 

    கொலைக் கருவியைக்
    கொண்டவனிடத்தில்
    கொஞ்சமுமிருக்காது இரக்கம்! 

    அதுபோல்,
    மற்ற உயிரழித்து

    மாமிசம் உண்போர்
    மனத்திலும் இருக்காது
    நல்லதாம் அருள்! 

    குறும்பாவில்… 

    வாளுடையானிடம் இருக்காது இரக்கம்,
    உயிர்வதைத்து ஊனுண்போரிடம்

    உறையாது அருள்! 

    மரபுக் கவிதையில்… 

    கரத்தினில் ஆயுதம் எடுத்தேதான்
        –காவு கொள்ள நிற்போர்க்கே
    இரக்கம் என்றும் இருப்பதில்லை
        –இதயம் கல்லாய்ப் போய்விடுமே,
    தெரிந்திடு இதுதான் கதையாகும்

        –துடிக்கத் துடிக்க உயிர்வதைத்துத்
    தெரிந்தே மாமிசம் உண்போரிடம்
        தங்கா துண்மை அருளதுவே! 

    லிமரைக்கூ… 

    கொலைவாளன் மனமது ஈரமிலா இருளே,
    கொன்ற உடலை உண்போரிடம்

    என்றும் தங்காது மனதினில் அருளே! 

    கிராமிய பாணியில்… 

    கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,
    திங்காத திங்காத ஒடம்பத்திங்காத… 

    எரக்கமில்ல எரக்கமில்ல,
    அடுத்தவன அழிச்சிடவே

    ஆயிதத்த எடுத்தவங்கிட்ட
    எரக்கமில்ல எரக்கமில்ல
    மனசுலத்தான் எரக்கமில்ல… 

    அதுபோல
    உயிரக்கொன்னு ஒடம்பத்தின்னா
    அருளுயில்ல இருளேதான்… 

    அதால
    கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,
    திங்காத திங்காத ஒடம்பத்திங்காத! 

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 5 திருமலை (திருப்பதி) ஸ்ரீ வேங்கடாசலபதி  

     க.பாலசுப்பிரமணியன்

    96acbbf9-6813-401e-8ad1-f1f7968c3116

    விழித்தாலும் வேங்கடத்தில் விழிக்கவேண்டும்

    விழியிரண்டும் வேங்கடனைப்  பார்க்கவேண்டும்

    கோவிந்தாவெனக் குரல்கொடுக்க வேண்டும்

    குறைகளெல்லாம் அவனிடமே சொல்லவேண்டும் !

     

    ஆனந்த நிலையம் அவன் கோவில்

    ஆறுதல் அடைந்திட அவன் பாதம்

    அருள் வெள்ளம் அவன் திருமேனி

    அணைத்திடுமே அவன் அபயக்கரம் !

     

    ஏழுமலை ஏறிவந்தால் போதும்

    ஊழ்வினைகள் உருக்குலைந்து ஓடும்

    ஏழ்மையின் பொருளறிந்த வாசன்

    எழுபிறப்பும்  உயிர் காக்கும் நேசன் !

     

    பிரபந்தங்கள் பாடி வந்த பெரியோர்கள்

    பிரபஞ்சத்தில் வியந்து நின்ற தெய்வமன்றோ !

    தங்காத தங்கத்தை அவனுக்குத் தந்தாலும்

    தங்கி நின்று அருள் செய்யும் திருமாலன்றோ !

     

    திருமங்கை வாழ்கின்ற திருமார்பை

    தாளால் மிதித்திட்ட தவத்தோன்

    தாள் பிடித்த தெய்வமன்றோ நீ !

    தந்தருள்வாய் நின் தாளை நான் பிடிக்க !

     

    தானழித்து தலைமழித்துத்  தாள்தேடி வந்துவிட்டால்

    தந்தையாக நீயிருப்பாய் திருமாலே! தாமோதரா !

    மலையேறி வந்தோர் தம் மனம் கொள்வாய்

    மங்கையுடன் வந்தே நீ அருள் தருவாய் !

     

    அலர்மேல் மங்கையவள் அருள்பார்வை ஒரு பக்கம்

    அன்புடனே இலக்குமியும் இதயத்தின் ஒரு பக்கம்

    கண்மூடியே காதல் செய்யும் கள்வனவன் கண்ணன்

    கார்மேகன் கொடுப்பதிலே குறையில்லா குபேரன் !

     

    ஏழுமலைவாசன் இதயத்தில் இருந்தால்

    எழுகின்ற கதிரவனாய் ஒளி தருவான்

    ஏழு பிறப்பிற்கும் தருவான் செல்வம்

    ஏழ்மையால் வலிக்காத வாழ்வின் வண்ணம் !

     

    மலர்வாசம் கனிவாசம் மாதவன் பெயர்வாசம்

    மார்கழி வைகறை வாசலில் மண்வாசம்

    மனங்குளிரக் காலையில் பாவைக் குரல்வாசம்

    மனிதங்கள் காத்திடுமே திருமலை ஸ்ரீனிவாசம் !

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 191 

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

    படைத்துக்கோள் பெயர்

    குரல் நரம்பை
    மாயவன் என்று அழைத்தாள்;
    இளி நரம்பினை வீரம் மிக்க
    பலராமன் என்று அழைத்தாள்;
    துத்த நரம்பினை
    நப்பின்னை என்று அழைத்தாள்;
    மற்றைய நரம்புகள்
    முன்னர் இருந்த மரபுப்படியே
    ஏற்ற பெயர்களைப் பெறும் என்றாள்.

    மாயவன் என்றழைக்கப்பட்ட
    நரம்புக்கு அடுத்து,
    பின்னை என்றழைக்கப்படும்
    துத்தமும் தாரமும் நின்றன.

    பலதேவன் என்றழைக்கப்பட்ட
    இளி நரம்பினைச் சேர
    உளரியும் விழையும் நின்றன.

    கைக்கிளை நரம்பு பின்னைக்கு
    இடப்பக்கம் நின்றது.

    விளரி நரம்பு தாரத்துக்கு
    வலப்பக்கம் நின்றது.

    வளம்பொருந்திய துளப மாலையை
    மாயவன் எனும் கண்ணன் தோளில் சார்த்தி,
    கூத்து நூல் பகரும் இயல்பில் இருந்து நீங்காது
    குரவைக் கூத்தாடத் தொடங்கினாள்.

    உலகினை அளந்த திருமால் தன் மார்பில் இருக்கும்
    இலக்குமியை நோக்காததற்குக் காரணமான
    வளையணிந்த கைகளையுடைய
    நப்பின்னைதானே யாம் என்று மாதரி வியந்தாள்.

     

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (8)

    க. பாலசுப்பிரமணியன்

    ஒலியும் உணர்வும்

    education

    ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் பல படிகள் உள்ளன. இவற்றை நாம் வளர்ச்சியின் மைல் கற்கள் என்றே சொல்லலாம். உதாரணமாக ஒலிகளை அறிதலும் அந்த ஒலிகளுக்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்துதலும் முக்கியமான நிகழ்வு.  சில வாரங்களே ஆன ஒரு குழந்தை ஒரு ஒலியைக்கேட்டதும் அதன் கண்கள் அந்த ஒலி வரும் திசையை நோக்கிச் செல்கின்றன. (sensory Response). அந்த ஒலியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அந்தக் குழந்தைக்கு வருவதற்குமுன் அதைப் பற்றிய ஒரு பய உணர்வு அதன் மனத்தில் தோன்றுகிறது. இந்த நேரத்தில் அந்த பய உணர்வை நீக்கி ஒரு பாதுக்காப்பான செய்தியைத் தருதல் தாயின் முக்கிய கடமை. வரும் ஒலிகளுக்கு ஏற்றவாறு அந்தக் குழந்தையின் விழிகளின் நகர்வுகளைக் கவனித்து செயல் படுதல் அவசியம்.

    சில நேரங்களில் அந்த ஒலி அதிர்வுகள் குழந்தைக்குத் தாங்கமுடியாத பய உணர்வை ஏற்படுத்தும் பொழுது தன் துயரத்தை அழுகை மூலமாகமும் உடல் நகர்வுகளின் மூலமாகவும் வெளிப்படுத்தும். தாய் அந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு குழந்தையோடு உறவாட வேண்டும். குழந்தைகளை அணைத்தும் கொஞ்சியும் பேசியும் சிரித்தும் பயமான சூழ்நிலையிருந்து வெளிக் கொணர வேண்டும்.

    ஒரு குழந்தை ஒரு ஒலியைத் திரும்பத் திரும்பக் கேட்கும் பொழுது அந்த ஒலி அலைகளும் அதனைச் சார்ந்த உணர்வுகளும் குழந்தையின் மூளையில் அழுத்தமாகப் பதிவாகின்றன. அந்த நிலையில் குழந்தை முந்தைய பய உணர்வுகளிலிருந்து விடுபட்டு அந்த ஒலி அதிர்வுகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது, பொதுவாக குழந்தைகளோடு உறவாடும் பொழுது சத்தமாகப் பேசுதல், அலறுதல், கத்துதல் போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் இப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் நீண்ட காலம் வரை தொடரும் வாய்ப்புகள் உண்டு.

    முந்தைய நாட்களில் குழந்தைக்குத் தொட்டிலிட்டு தாயோ உறவினரோ பாடிய தாலாட்டுக்கள் குழந்தைகளின் மன நலத்தை வளர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தன. இசை, இனிய குரல், ஒலி வளம் மற்றும் சொல் நயங்கள் குழந்தையின் உணர்வுகளோடு நல்லுறவை ஏற்படுத்தி அன்பான அமைதியான பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. குழந்தையின் வளர்ச்சிப்பாதையில் இசைக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் இசையின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும் மற்றும் அதை வளர்ச்சிப் பாதையில் இணைக்க வேண்டும்.

    இசை என்று சொல்லும் பொழுது அது படங்களில்; வருகின்ற பாடல்களைக் குறிக்காது. ஆக்கப்பூர்வமான உணர்வுகளை மென்மைப்படுத்துகின்றவற்றை குறிக்கும். தற்போது நடந்து வரும் மன நலம் பற்றிய ஆராய்ச்சிகளில் எவ்வாறு ஒலியும் சொற்களும் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, எவ்வாறு அவை ஒரு தனி மனிதனின் சிந்தனையையும் உணர்வுகளையும் பாதித்து அவன் வாழ்க்கை முறைகள் மீது தங்கள் பாதச் சுவடுகளை விட்டுச் செல்கின்றன என்று வெளிப்பட்டிருக்கின்றது.

    ஆகவே வளரும் பருவத்தில் நல்ல மன நலத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான மன நலத்தை பேணக்கூடிய ஒலிகளையும் இசை வடிவில் அளித்தால் குழந்தைகள் பிற காலத்தில் சிறப்பான உணர்வுகளோடு வாழ வழி வகுக்கும்.

    தொடருவோம்

    Share
  • ஊமைச் சங்கிலிகள்

    சந்தர் சுப்பிரமணியன்

     

    உறவினரின் வீட்டில் விஷேசம்.

    ‘அடையாளமே தெரியலையே’
    ‘கண்டிப்பா வீட்டுக்கு வாப்பா’
    ‘உன்னையெல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சு’
    ‘மதுரைக்கு வந்த வாப்பா’
    ‘என் பையன் உன்னைப் பத்தித்தான் ரொம்ப பேசிட்டே இருப்பான்’
    ‘மீசையும் அதுவுமா, பெரிய ஆளாயிட்டியே’
    ‘ஏன்டா, எங்க முகமெல்லாம் மறந்தே போச்சா?’
    ‘உங்க மாமா போனபோதும் நீ வரலியா?’
    ‘அப்பப்போ வந்து பாத்துட்டுப் போப்பா’
    ‘கிருஷ்ணன் தெரு, அந்த முக்கு வீட்டுலேதான இன்னும் இருக்கே?’

    – மீண்டு, வீடுவந்துசேர மாலை ஆயிற்று.

    அவசர அவசரமாகக் கதவைத் திறந்து,
    தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினேன் –
    தொடர்கதை ஆரம்பித்துவிட்டிருப்பான்.

    Share
  • மக்களைப் பெற்ற மகராசி!

    -ரா. பார்த்தசாரதி

    வாழ்வின் ஏட்டினைத் திருப்பிப்  பார்த்தேன்
    வலிதாங்கா இளமைபருவத்தை  எண்ணிப் பார்த்தேன்
    எழுதுகோலைத்  துணிவுகொண்டு கையில் எடுத்தேன்
    அன்னை சரோஜாவின் அருமையினை எழுதத் துணிந்தேன்!

    மக்களைப் பெற்ற மகராசியே  தாய்தான்
    குடும்பத்தின் ஆணிவேராய் இருப்பதும் தாய்தான்
    ஞானியும், துறவியும் போற்றும் தெய்வம்
    ஞாலம்  புகழ்ந்திடும் சிறந்த தெய்வம்!

    ஏழு பிறவி எடுத்து ஏழு பிள்ளைகள் பெற்றாய்
    ஏழு ஏழு ஜென்மத்திற்கு ஓர்  தொடர்பு வைத்தாய்
    ஏழிலே ஒன்றே ஒன்று  பெண் ஆனாலும்
    எல்லோரிடத்திலும் மாறா அன்பும் பாசமும் வைத்தாய்!

    ஓய்வின்றி உறக்கம்மின்றி  உன்உயிரைக் கூட
    ஒவ்வோர்  பிறவிக்கும் பணயம் வைத்தாய்
    உன்னை வையகம் எந்நாளும் போற்றுமே
    உன்அருமை அறியாப் பிள்ளைகளைத்  தூற்றுமே!

    பாசமுள்ள வேளையிலே காசு பணம்  கூடலியே
    காசுவந்த   வேளையிலே பாசம் வந்து சேரலியே
    பருவத்திலே நாங்கள் பட்டவலி தாங்கலியே
    வார்த்தையிலே வடிப்பதற்கு வார்த்தைகள் இல்லையே!

    பாசத்தோடு வாழ்வதுதான் தாயின் குணமே
    பாசத்துடன்  இருப்பதுதன் பிள்ளைகளுக்கும்  நலமே
    எனக்கென்று துன்பம்வந்தால் உனக்கென்று வேறு பிள்ளையுண்டு
    உனக்கென்று துன்பம் வந்தால் எனக்கென்று வேறு தாயுண்டோ?

    தாயைவிடச்  சிறந்த தெய்வம் இல்லை
    திசை நான்கும்  அவள்போல் எவரும் இல்லை
    தாயின் பெருமையினைச் சொல்ல வார்த்தையில்லை
    தியாகச்சுடரே  தாயுருவம் மனதினின்றும் மறைவதில்லை!

    இளமையில் ஸ்பரிசம்  முதுமையில் பாசம்,
    என்றும் உறவின்  சிறந்த பந்தபாசம்
    இளமையில்  நான் உனக்கொரு குழந்தை
    முதுமையில் எனக்கு    நீயொரு   குழந்தை!

    வாழ்க்கைப்  படகினிலே  நீயொரு  துடுப்பு
    எங்கள்  பிறப்பே  உன் படைப்பு
    எங்கள்  வளமே உன் சிறப்பு
    எங்கள்  நினைவே  பாசத்தின் பிணைப்பு!

    பூமியைவிடச் சிறந்தவள் தாய்
    ஆகாயத்தைவிடச்  சிறந்தவர்  தந்தை
    பூவிலே சிறந்தது  மல்லிகை ரோஜா
    எங்கள் தாயின் பெயரோ சரோஜா!

     

    Share
  • அம்மாவின் மோதிரம்

    — எம்.ரிஷான் ஷெரீப்.

    அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை. அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிரவிரலில் மௌனமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது.

    அவனுக்கு ஆபரணங்கள் மேல் எவ்விதமான ஈர்ப்புமில்லை. அவனது தாய், பரம்பரைப் பொக்கிஷமாக வந்த அந்த மோதிரத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவனுக்கு இருபத்து மூன்றாம் வயது பிறந்தபொழுதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அதனை அவனது வலதுகை மோதிரவிரலில் அணிவித்து, பின் அவனுக்கு முதலாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு சரியாக இருபத்து மூன்று வயது பிறக்கும்போது அதனை அணிவித்து விடவேண்டுமென்றும் அதுவரையில் எக்காரணத்தைக் கொண்டும் அதனைக் கழற்றக் கூடாதென்றும் ஆணையிட்டு, நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு தூக்கக் கலக்கத்தில் எதுவும் புரியவில்லை. அடுத்தநாள் காலையிலும் அம்மா அதனையே சொன்னாள். காரணம் கேட்டதற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. அவளது அப்பா அப்படிச் சொல்லித்தான் அதனை அவளது இருபத்து மூன்றாவது வயதில் அவளுக்கு அணிவித்ததாகச் சொன்னாள்.

    velli mothiramஅவனும் அம்மோதிரத்தை இதற்கு முன்னால் அவளது விரல்களில் பார்த்திருக்கிறான். அவளுக்கென இருந்த ஒரே மோதிரமும் அவன் வசமானதில் கைவிரல்கள் மூளியாகிப் போனது அவளுக்கு.அது சற்று அகலமானதும் பாரமானதுமான வெள்ளி மோதிரம். நடுவில் ஒரே அளவான சற்றுப் பெரிய இரு கறுப்பு வைரங்களும் ஓரங்களில் எட்டு சிறு சிறு வெள்ளை வைரங்களும் பதிக்கப்பட்டிருந்த அழகிய மோதிரம். வெளிச்சம் படும் போதெல்லாம் பளீரென மின்னுமதன் பட்டையான இருபுறங்களிலும் கூட சின்னச் சின்னதாக அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதிலிருக்கும் கற்களை விற்றிருந்தால் கூட ஒரு நல்ல வீட்டை விலைக்கு வாங்குமளவிற்குப் பணம் கிடைத்திருக்கக் கூடும். இப்பொழுது வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வரும் அம்மாவுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் என்ன கஷ்டம் வந்தபோதிலும் அவள் அதனை விற்கவோ, அடகுவைக்கவோ ஒருபோதும் துணியவில்லை. அவனது இருபத்து மூன்று வயது வரும்வரையில் விரல்களிலிருந்து அவள் அதனைக் கழற்றக்கூட இல்லை.

    அம்மா அவனுக்குச் சரியான பொழுதில் இம் மோதிரத்தை அணிவித்துவிட்டுப் போகவென்றே மூன்று மணித்தியாலம் பஸ்ஸிலும் அரை மணித்தியாலம் நடையுமாகப் பிரயாணம் செய்து அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வந்த நோக்கம் கிஞ்சித்தேனும் அத்தைக்குத் தெரியாது. அத்தை எப்பொழுதும் அப்படித்தான். அம்மாவைப் போல எதையும் கேள்விகள் கேட்டு, தூண்டித் துருவி ஆராய்பவளில்லை. பார்க்கத்தான் கரடுமுரடாகத் தென்பட்டாளே ஒழிய மிகவும் அப்பாவியாக இருந்தாள். எதையும் விசாரித்து அறிந்துகொள்ளும் ஆவல் கூட அவளுக்கு இருக்கவில்லை. அம்மாவும் தானாக தான் வந்த விவரத்தைச் சொல்லவில்லை. மறைத்தாள் என்று இல்லை. மதினி கேட்கவில்லை. அதனால் சொல்லவில்லை என்று இருந்தாள். அன்றைய தினம் அம்மா உறங்கவில்லை. வழமையாக ஒன்பது மணியடிக்கும்போதே உறங்கிவிடும் அத்தைக்கு அருகிலேயே பாய்விரித்து அம்மாவும் படுத்திருந்தாளெனினும் சிறிதும் கண்மூடவில்லை. நடந்துவந்த அசதியை, மகனுக்கு மோதிரம் அணிவித்துவிட்டு உறங்கலாமென்று எங்கோ தூரத்துக்கு அனுப்பியிருந்தாள். கூரையின் கண்ணாடி ஓட்டுக்குள்ளால் நிலா வெளிச்சம் அறைக்குள் ஒரு பெரிய நட்சத்திர மீனைப்போலப் படுத்திருந்தது. பின்சுவரில் ஊசலாடும் பழங்காலக் கடிகாரத்தில் நகரும் முட்களை அவ்வப்போது வேலியோர ஓணானைப் போலத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறிருந்தாள்.

    அத்தைக்கு அவர்களை விட்டால் வேறு யாருமில்லை. அவளது கணவன் குடித்துக் குடித்து கல்லீரல் கெட்டு செத்துப்போயிருந்தான். அதன் பிறகு அவனது பென்ஷன் பணம் அவள் சீவிக்கப் போதுமானதாக இருந்தது. பிள்ளைகளேதுமற்றவள் கணவனின் இறப்புக்குப் பிறகு அவளது அண்ணனுடன் அதாவது அவனின் அப்பாவுடன் அவர்களது ஊருக்குப் போய்விடுவாளென்றே ஊரில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் அவனது அம்மா, அப்பா எவ்வளவோ அழைத்தும் கூட வர மறுத்துவிட்டாள். அவளைத் தனியே விட்டுப்போக அவர்களுக்கும் இஷ்டமில்லை. கொஞ்சநாளைக்கு அவன் அங்கே தங்கியிருக்கட்டுமெனச் சொல்லி அவனை மட்டும் விட்டுப் போனார்கள். பள்ளிப்படிப்பு முடித்திருந்தவன் அந்த ஊரிலேயே தங்கி, பிறகு அந்த ஊருக்கு அருகாமையிலிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டான். அப்பா அவ்வப்போது அவர்களது வயலில் விளைந்த நெல்லும் பயறும் ஊருக்குப் போகும் அவனிடம் அத்தைக்கென கொடுத்தனுப்புவார். அத்தையும் வீட்டில் சும்மா இல்லை. அருமையாக பனை ஓலையால் பாயும், கூடையும் பின்னுவாள். அதில் உழைத்த பணத்தில் ஒரு முறை அவனுக்கு புது ஆடை கூட வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.

    மோதிரம் அணிந்த நாளின் பகலில் அவன் ஏதோ பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது தான் அந்த முதல் செய்தி வந்தது. அவன் எழுதிக் கொண்டிருந்த தாளின் பாதிவரை முடித்திருந்தான். செய்திகொண்டு வந்த காவலாளி மேற்பார்வையாளரை வாசல்வரை அழைத்து மூன்று விரல்களை வாய் முன்வைத்து முன்னோக்கி லேசாக மடிந்து மிகவும் பவ்யமாகவும் இரகசியமாகவும் விடயத்தை அவரிடம் சொன்னான். மேற்பார்வையாளர் எழுதிக் கொண்டிருந்தவனை ஒருமுறை பார்த்தார். பரீட்சை முடிய இன்னும் முக்கால் மணி நேரம் இருப்பதை அவதானித்து காவலாளியை திருப்பி அனுப்பிவைத்து அமைதியாக இருந்தார். பரீட்சைத் தாளை அவன் ஒப்படைத்து வெளியேற முற்பட்டபோதுதான் அவர் அவனிடம் விடயத்தைச் சொன்னார். ஏதும் புரியாமல் முதலில் மௌனமாயிருந்து கேட்டவன் பின் கலவரப்பட்டு வீட்டுக்கு ஓடினான். அவனை பஸ்ஸுக்குக் காத்திருக்க வைக்காமல் நல்லவேளை பக்கத்துவீட்டுச் சின்னசாமியின் சைக்கிள் வந்திருந்தது.

    சின்னசாமிக்கு எப்பொழுதுமே சைக்கிளில் ஒரு ஆளை அருகிலமர்த்தி ஒழுங்காக மிதிக்கவராது. பாதையின் எல்லாத் திக்கிலும் சக்கரங்கள் அலைபாயும். எனவே கவலையை மனதுக்குள் புதைத்தபடி அவனே சின்னசாமியை அருகிலமர்த்தி அவசரமாகச் சைக்கிள் மிதித்து அத்தை வீடு போய்ச் சேர்ந்தான். வீடு போய்ச் சேரும்வரை மோதிரமும் வெள்ளிநிற சைக்கிளின் ஹேண்டில் பாரும் ஊர் பூராவும் பரவியிருந்த மதியவெயில் பட்டு மின்னிக்கொண்டே இருந்தது.

    அத்தையைக் குளிப்பாட்டி கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். நெற்றியில் போடப்பட்டிருந்த வெள்ளைத் துணிக் கட்டில் கருஞ்சிவப்பில் இரத்தம் உறைந்திருந்தாக ஞாபகம். அம்மாவும் இன்னும் ஊரின் சில வயதான பெண்களும் அருகிலிருந்து ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தனர். அம்மா இவனைக் கண்டதும் வெறிபிடித்தவள் போல அவிழ்ந்துகிடந்த கூந்தலோடு ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். சவமும் எரித்து எல்லாம் முடிந்தபிறகுதான் அவனுக்கு மரணத்தின் காரணம் புரிந்தது.

    காலையில் அவ்வூரில் தெரிந்தவர்கள் சிலரோடு பேசிவரவென அம்மா வெளியே புறப்பட்ட போது அத்தை தன் வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த பூனைக்குட்டியொன்றுக்கு கயிறு நீட்டியும், வாளி போட்டும் அதனைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அம்மா எல்லோரையும் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்து தேடிப்பார்த்த போது அத்தை கிணற்று நீரில் பிணமாக மிதந்திருக்கிறாள். பழங்காலக் கிணற்றின் உட்புற கருங்கல் சுவரில் தலை மோதி இரத்தம் கிணற்று நீரை நிறம் மாற்றியிருந்திருக்கிறது. வழுக்கி விழுந்திருப்பாளென்பது எல்லோரதும் ஊகம். பிணத்தை எடுத்தபின்னர் ஊரார் சிலர் அக்கிணற்றுக்குள் தென்னை மட்டைகளையும் கற்களையும் குப்பைகளையும் போட்டு பாவனைக்குதவா வண்ணம் ஆக்கிவிட்டிருந்தனர். ஊரின் சிறுவர்கள் அவ்வூரின் கிணற்றடிகளில் கூடி விளையாடும் வாய்ப்பு பெரியவர்களால் தடுக்கப்பட்டது. அத்தை ஆவியாக உருமாறி கிணற்றடிகளில் அலையக்கூடுமெனவும் சிறுவர்களை கிணற்றுக்குள் இழுத்துக்கொள்வாள் எனவும் அவர்களிடம் கதைகள் சொல்லப்பட்டன. எவ்வளவோ தேடியும் முதலில் விழுந்த பூனைக்குட்டியைத்தான் இறுதிவரை காணக் கிடைக்கவேயில்லை.

    அத்தையும் போனபின்னால் வீட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு அப்பா, அம்மாவோடு அவனும் சொந்த ஊருக்கே வந்துவிட்டான். அத்தை வீட்டிலிருந்து வந்த முதல் நாள் மதியவேளை, திண்ணையிலிருந்த கயிற்றுக்கட்டிலில் அவன் தூங்கிக்கொண்டிருந்தபோதுதான் அப்பா பஸ்ஸிலிருந்து தவறிவிழுந்து கால் எலும்பை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திவந்தது. அப்பாவும் அம்மாவும் பக்கத்து ஊர் வரைக்கும் ஏதோ வேலையொன்றுக்கெனப் போயிருந்தார்கள். அவன் அடுத்த பஸ்ஸில் ஆஸ்பத்திரிக்கு ஓடினான். பார்க்காத வைத்தியரில்லை. பண்ணாத வைத்தியமில்லை. கொஞ்ச நஞ்சமாகச் சேர்த்திருந்த பணத்தையும் கரைத்துக் குடித்த காலின் வலி குறைந்ததே தவிர காயமடைந்த கால் முழுவதுமாகக் குணமடையவில்லை. இறுதியாக ஓர் நாள் தாங்கி நடக்கவென்று இரு கட்டைகளைக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது ஆஸ்பத்திரி. வீட்டில் ஒரு நேரம் கூடத் தங்காமல் ஓடியாடி அலைந்தவர் தன்னை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டது அம்மாதான் என்று தினந்தோறும் புலம்பியவாறே ஒரு நத்தையைப் போல வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார். விவசாயத்தையும் குடும்பத்தையும் பார்த்துக் கவனிக்கும் பெரும் பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.

    பிறகோர் நாள் அவர்களது வயற்காடு எரிந்துகொண்டிருப்பதாகச் செய்திவந்த போது அவன் சந்திக்கடையில் கருப்பட்டி கடித்தபடி செஞ்சாயத் தேனீர் பருகிக்கொண்டிருந்தான். அன்று அம்மாவும் வயலைப் பார்த்து வருவதாகப் போயிருந்ததை அவன் அறிவான். கண்ணாடிக் குவளையை மேசையில் வைத்ததும் வைக்காததுமாக அவன் வயலை நோக்கி ஓடத் தொடங்கினான். ஓரத்தில் வைக்கப்பட்டது சாணி மெழுகிய தரையில் விழுந்து உடையாமல் உருண்டது. பாதி வைத்திருந்த பானத்தைத் தரை தாகத்தோடு உறிஞ்சிக்கொள்ளத் தொடங்கியது. இருட்டு வருவதற்குள் எல்லாக் கதிர்களையும் தின்றுமுடித்துவிட வேண்டுமென்ற பேராசையோடு தீ நாக்குகள் உக்கிரமாகவும் ஒருவித வன்மத்தோடும் வயல் முழுவதையும் விழுங்கிக் கொண்டிருந்ததை அவன் கண்டான். அம்மாவுக்கு ஏதுமாகியிருக்கவில்லை. நிழலுக்காக நடப்பட்டிருந்த பூவரச மரத்தடியில் முனகலுடன் வாடிக்கிடந்தவளுக்கு அருகிலிருந்த இருவர் காற்றடித்துக் கொண்டிருந்தனர். இவனைக் கண்டதும் அத்தையின் மரணவீட்டில் நிகழந்ததைப் போலவே நெஞ்சிலடித்துக்கொண்டு அம்மா சத்தமிட்டு அழத்தொடங்கினாள். வயல்வேலைக்கென வந்திருந்த எல்லோரும் போல தீயை அணைப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். பெரும் உஷ்ணம் கிளப்பி எரியும் நெருப்புக்கு உதவியாகக் காற்றும் அது இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தது.

    வயற்காடு எரிந்ததில் பெரும் நஷ்டமும் கடனும் அவர்களைச் சூழ்ந்தது. பலத்த யோசனையோடு சில நாட்களை வீட்டில் கழித்தவனிடம் நகரத்துக்கு வேலை தேடிப் போவது நன்றாக இருக்குமென அம்மா சொன்னாள். உழைக்கும் பணத்தை வீண்செலவு செய்யாமல் அவளுக்கு அனுப்பிவைக்கும் படியும், சீட்டுப்பிடித்துச் சேமித்து அவள் எப்படியாவது கடன்களையெல்லாம் அடைத்துவிடுவதாகவும் அவனுக்கு இரவு உணவிட்டபோது அவள் சொன்னாள். அவளது முடிவு அவனுக்கு எவ்வித வருத்தத்தையும் தரவில்லை. எப்படியாவது கடன் தொல்லைகளிலிருந்து மீண்டு, அவனது மாமா பெண் கோமதியை மணமுடிக்கும் ஆசை அவன் மனதுக்குள் ஒளிந்திருந்தது. அப்பாதான் முதன்முறையாக அவன் பார்க்க ஒரு குழந்தையைப் போல அழுதார். அம்மாவிடம் தன்னைத் தனியே விட்டுப்போகாதே என்பதுபோல மன்றாட்டமான பார்வையை அவனது விழிகளில் ஓட விட்டார். இறுதியாக அவன் நகரத்துக்கெனப் புறப்பட்ட நாளில் தலைதடவி, அவனது நெற்றியில் முத்தமிட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அம்மா வீட்டுப் படலை வரை கூட வந்தாள். அத்தை வீடு அங்கே அனாதையாகக் கிடக்கிறதெனவும் அதனை அவன் பெயருக்கு எப்படி மாற்றுவதெனவும் நகரத்தில் யாராவது தெரிந்த வக்கீல்களிடம் கேட்டுத் தெரிந்து வரும்படி அவளையும் அவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் கேட்காவண்ணம் மெதுவான குரலில் சொன்னாள். அவர்களிருவரையும் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழிகளையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த வெக்கை நிறைந்த மதியப்பொழுது வெயில் அவனது மோதிரத்தை வழமை போலவே மின்னச் செய்தபடி ஊர் முழுதும் திரிந்தது.

    நகரத்துக்குப் போய் அவனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பனிடம் சொல்லி எப்படியோ வேலை வாங்கிவிட்டான். அவனது அறையிலேயே தங்கிக்கொண்டான். அதன்பிறகும் மோதிரத்தை உற்றுக் கவனிக்கவோ, அதன் அழகினை ரசிக்கவோ அவனுக்கு நேரமே கொடுக்காதபடி ஏதேனும் தீய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருந்தன. ஒருநாள் வீட்டில் அவன் ஆசையாக வளர்த்த புறாக்களெல்லாம் கூண்டைவிட்டுப் பறந்துபோய்விட்டதாகத் தகவல் வந்தது. தொடர்ச்சியாக தினம் தினம் ஊரிலிருந்து இதுபோல ஏதேனுமொரு தீய செய்தி அவனுக்கு எட்டியபடி இருந்தபோதுதான் அவனது நண்பன் விரல்களில் மின்னிய புது மோதிரம் குறித்து வினவினான். அப்பொழுதுதான் அவனும் அதுபற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டான். ஒருவேளை எல்லா நிகழ்வுகளுக்கும் தான் அணிந்திருக்கும் மோதிரம்தான் காரணமாக இருக்கக் கூடுமோ என எண்ணத் தொடங்கினான். நடந்த நிகழ்வுகளைக் கோர்வையாக மனதிலே ஓட்டிப்பார்த்தான். ஊருக்குப் போய் ஒருநாள் அம்மாவிடம் இது குறித்து விசாரிக்கவேண்டுமென எண்ணி அப்படியே உறங்கிப்போனான். அன்று இரவுவேலைக்கெனப் போன நண்பன் விபத்தில் இறந்தசெய்தி விடியமுன்னர் வந்து சேர்ந்தது.

    பிணத்தை எடுத்துக்கொண்டு நண்பனின் ஊருக்குப்போய் அருகிலிருந்து எல்லாக் காரியங்களும் செய்து முடித்தான். நகரத்துக்கு தனது அறைக்குத் தனியாக வந்தபொழுது கொடியில் காய்ந்துகொண்டிருந்த நண்பனின் சட்டை கண்டு வெடித்தழுதான். சத்தமிட்டு அழுதான். அத்தையின் மரண வீட்டிலும் வயற்காடு பற்றியெரிகையிலும் சத்தமிட்டழுத அம்மாவைப் போலவே கண்ணீரும், திறந்திருந்த வாய்வழியே எச்சிலும் வடிய வடிய கதறிக்கதறி அழுதான். அழுகையெல்லாம் ஓய்ந்தபோது அறையினைப் பெரும் மௌனம் சூழ்ந்ததை உணர்ந்தான். வாழ்க்கை குறித்து முதன்முதலாக அச்சப்பட்டான். அடுத்தநாள் விடிகாலையிலேயே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து விபரம் சொல்லி தான் ஊருக்கே வந்துவிடுவதாக மீண்டும் அழுதான். கடனில் பாதி அடைக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் சில மாதங்கள் பொறுத்து ஊருக்கு வரும்படியும் அம்மா சொன்னாள். அப்பா திரும்பவும் இருமுறை வழுக்கிவிழுந்ததாகவும் கால் வீங்கி நடமாடவே முடியாமல் படுத்தே இருப்பதாகவும், தினந்தோறும் காலுக்கு எண்ணெய் தடவிவருவதாகவும் சொன்னாள். மறக்காமல் அன்றும் அத்தையின் வீடு பற்றி நினைவூட்டினாள். அவனுக்கு உடனே அப்பாவைப் பார்க்கவேண்டும் போலவும் கோமதியோடு ஏதேனும் பேசவேண்டும் போலவும் இருந்தது.

    கோமதிக்கும் அவன் மேல் காதலிருந்ததை அவன் அறிவான். இரு தங்கைகளோடும் அவள் தண்ணீர் எடுத்து வரும் வேளையில் இவன் தேனீர்க் கடையருகில் நின்றிருப்பான். அவள் ஓரக்கண்ணால் பார்த்து, பின்னலிலிருந்து தானாக உதிரும் ஒரு பூவைப் போல ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போவாள். சில அடித்தூரம் சென்று திரும்பிப்பார்த்து மீண்டும் ஒரு சிரிப்பைத் தருவாள். நேர்மோதும் பார்வைகளிலும் சிந்திய புன்னகைகளிலும் சொந்தக்காரர்களென்ற உறவையும் மீறி காதலின் தவிப்பு மிகைத்திருந்ததை இருவரும் அறிந்திருந்தனர். அவளுக்கு அவளது அப்பாவைப் போலவே சிரித்த முகம். எப்பொழுதும் சிரிப்பினை ஒரு உண்டியலைப்போல வாய்க்குள் அடக்கிவைத்திருப்பாள். அவன் அத்தை வீட்டிலிருந்து நிரந்தரமாக வீட்டுக்கு வந்தபோது துக்கம் விசாரிக்க வந்திருந்த அவளது அப்பா, அம்மா, தங்கைகளோடு அவளையும் கண்டான். அடையாளமே கண்டுகொள்ள முடியாத அளவுக்கு அழகாக வளர்ந்திருந்தாள். அவன் அவளுடன் சிறுவயதுகளில் ஒன்றாக விளையாடியதைத் தவிர பெரியவளானதும் எதுவும் பேசியதில்லை. அவன் அவளைப் பெண்கேட்டுப் போனால் மறுக்காமல் மாலை மாற்றிக் கூட அனுப்பிவைக்கும் அளவுக்கு மரியாதையும் அன்பும் நிறைந்த அவனது மாமா குடும்பம் வசதிகளேதுமற்றது.

    அவனது அறைநண்பர்களாக புதிதாக இருவர் வந்து சேர்ந்தனர். ஒரு சின்ன அறைக்குள் மூவராக அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அதிலொருவன் சற்று வயதானவன். ஓயாமல் வெற்றிலை மென்று ஒரு சொம்பு வைத்து அதில் துப்பிக் கொண்டே இருந்தான். துப்புகையில் தெறிக்கும் சிறு சிவப்புத் துளிகள் சுவரெல்லாம் நவீன ஓவியங்களை வரைந்திருந்தன. அவன் பேசும்போது மேலுதடும் கீழுதடும் வெற்றிலைச் சாற்றினை வழியவிடாமலிருக்கப் பல கோணங்களில் வளைந்தன. மற்றவன் கண்களின் கருமணிகளைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடி அணிந்திருந்தான். நகரும் ஒவ்வொரு கணமும் ஏதேனும் செய்துகொண்டே இருந்தான். அறையின் மூலையில் நன்றாக இருந்த ரேடியோவைக் கழற்றி மீண்டும் பூட்டி உடைத்து வைத்தான். தினமும் தவறாது டயறி எழுதினான். மாநகரக் குப்பைகளிலிருந்து ஏதேனும் உடைந்த பொருட்களை, பொம்மைகளை எடுத்துவந்து பொருத்த முயற்சித்தான். பத்திரிகைகள் வாங்கி அதில் ஒரு வரி கூட விடாமல் படித்து குறுக்கெழுத்து, சுடோகு நிரப்பினான். சிலவேளை தூங்கினான். தினமும் மறக்காமல் அவ் வயதானவனோடு சண்டை பிடித்தான். அவ் இருவரும் ஒருவரையொருவர் குற்றங்கள் கண்டு சத்தமாகச் சண்டை பிடித்துக்கொண்டார்கள். எல்லாம் ஓய்ந்தபின்னர் இருவரும் திரும்ப ஒற்றுமைப்பட்டு ஒன்றாகவே சாப்பிடவும் போனார்கள். இன்னும் சில மாதங்கள்தானே இவ்வறையில் இருக்கப்போகிறோமென அவன் மட்டும் இதையெல்லாம் அமைதியாக ஒதுங்கிப் பார்த்திருப்பான். இவ்வளவு நாளும் தீய செய்திகளாகக் கொண்டுவந்த மோதிரம் இப்பொழுது தனது நிம்மதிக்கே சாபமென ஒரு கண்ணாடிக்காரனையும் வயதானவனையும் அழைத்துவந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

    அன்றையநாள் அவனுக்கு வந்த செய்தி அவனை முழுவதுமாக உடைத்துப் போட்டுவிட்டது. யாரிடமோ அவனது தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி என்றுமே அவனுடன் பேசியிராத கோமதி அன்று அவனைத் தொலைபேசியில் அழைத்து அழுதழுது விடயம் சொன்னாள். அவளுக்கு சில தினங்களுக்கு முன்னர் அவசரமாகத் திருமணம் ஆகிவிட்டதாம். அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்தது அவனது அம்மாதானாம். இறுதியாக அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டுமெனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். கேட்டுக்கொண்டு நின்றிருந்தவனுக்குத் தரை பிளந்து, அப்பிளவு வழியே முடிவேதுமற்ற ஆழக்குழியொன்றுக்குள் தான் விழுவதைப் போல உடல் பதறியது. அவனால் நம்பமுடியவில்லை. செய்தி கொண்டுவந்தவள் அவனது நம்பிக்கைக்குரியவள்.

    அவனது ஊரிலிருந்து வந்து அங்கு ஹோட்டலொன்றில் வேலை செய்துவரும் குட்டியிடமும் இதுபற்றிக் கேட்டுப்பார்த்தான். குட்டி பொய் சொல்லமாட்டான். அதுவும் அவனதும் கோமதியினதும் காதலைக் குறித்து ஏதும் தெரியாதவன் மிகச் சாதாரணமாக, ஊரில் வெக்கை அதிகமெனச் சொல்வதைப் போலத்தான் இது குறித்தும் அவனிடம் சொன்னான். இவனுக்குள் இடி விழுந்ததைப் போல இருந்தது. இவனது காதலைப் பற்றி அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். கோமதியைப் பற்றி அவ்வப்போது அம்மாவிடம்தான் ஏதேனும் அவளுக்கு விளங்காவண்ணம் விசாரித்துக்கொள்வான். நம்பிக்கைத் துரோகம் செய்தது தனது அம்மாதானா என்பதனை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நாளைக் காலை தொலைபேசியிலழைத்து விசாரிக்கவேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டான்.

    அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சத்தமிட்டுப் பெரிதாக அழவேண்டும் போல இருந்தது. காதல் உடைந்து போன துயரம். மலைமலையாகச் சேர்த்து வைத்திருந்த நம்பிக்கைகள் மண்மேடெனச் சரிந்த அவலம். இருவருமாக எதிர்பார்த்திருந்த எதிர்கால வாழ்க்கையினை பெரிதாக வந்து அடித்துப்போன காட்டாற்றுப் பெருவெள்ளம். உழைக்கவும் கடனடைக்கவுமென அவனை ஊரிலிருந்து அகற்றிவிட்டு எல்லாமும் நடாத்திய அம்மாவின் துரோகம். எல்லாம் விழிநீரோடு சிந்தியும் கரைந்தும் போக வேண்டும். அவனுக்கு அழ வேண்டும். அதற்கு அந்த அறை சாத்தியப்படவில்லை.

    அந் நள்ளிரவில் எழுந்து கடற்கரைப்பக்கமாக நடக்கத் தொடங்கினான். கோமதியுடனான காதல் நினைவுகள் ஒரு பெரும் சுமையினைப் போல அழுத்த கால்கள் தள்ளாடத் தள்ளாட அலைகளருகில் வந்து நின்றான். கால் நனைத்த அலைகளோடு, அவற்றின் பெரும் ஓசையோடு, யாருமற்ற அவ் வெளியில் ஓவென்று கதறியழுதான். அத்தைக்காக, அப்பாவுக்காக, நண்பனுக்காக அழுத பல விழிகளைக் கண்டிருக்கிறான். அதுபோல தனது சோகங்களெல்லாம் இரு விழித் துவாரங்கள் வழியேயும் இறங்கிப் போய்விடாதாவென்ற ஏக்கத்தோடு அவன் அழுதான். திறந்திருந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. நாவில் உப்புச்சுவை வந்து மோதி ஒட்டிக்கொண்டது. அக் கடலையே விழுங்கிவிடும் அளவுக்கு பெரிதாக தாகமெடுத்தது. அப்படியே உட்கார்ந்தான். நழுவிவந்த அலைகள் அவனது இடைவரை நனைத்துச் சென்றன. கைக்கு அகப்பட்ட மணலை வாரியெடுத்து கடலைச் சபித்து எறிந்தான். அதுவரை அக்கடல் கண்டிருக்கும் அத்தனை கோமதிகளையும் அழைப்பதைப் போல கோமதீ… எனப் பெரிதாகச் சத்தமிட்டழுதான். மணலோடு விரலில் இடறிய மோதிரம் நீர்பட்டு நிலவொளியில் மின்னி அவனது பார்வையில் குவிந்தது. எல்லாம் உன்னால்தான் என்பதுபோல ஏதோ ஒரு வெறி உந்தித்தள்ள விரலில் இறுகியிருந்த மோதிரத்தை மணலுரசித் தோலில் இரத்தம் கசியக் கசியக் கழற்றி எடுத்து உள்ளங்கையில் வைத்து வெறுப்பாகப் பார்த்து அதற்குத் தூ எனத் துப்பினான். பின்னர் கடலுக்குள் வீசியெறிந்தான். அவனது மகனது அல்லது மகளது இருபத்து மூன்று வயது வரை காத்திருக்க முடியாமல் போன சோகத்தோடு கறுப்பும் வெள்ளையுமான வைரங்களும், அலங்காரங்களுடனுமான வெள்ளியும் உப்பு நீரின் ஆழத்துக்குள் புதைந்தது. முந்தைய நள்ளிரவில் அம்மா செத்துப் போனதாக அடுத்த நாள் காலையில் அவனுக்குச் செய்தி வந்தது.

    Share
  • படக்கவிதைப் போட்டி 43-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. யெஸ்மெக் எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிக்கான படமாகத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

     a man with two kids

    மழலைச் செல்வங்களை இடையில் இடுக்கிக்கொண்டு விரைந்தேகும் இந்த மனிதனின் மறுபக்கம் நம் பார்வைக்குப்படுகின்றது. பிஞ்சுக் குழந்தைகளின் கள்ளமற்ற கனிந்த முகம் கவனம் ஈர்க்கின்றது.

    எங்கே செல்லும் இந்தப் பாதை? என்ற வினாவோடு இதற்கான விடையை நம் கவிஞர்களிடம் தேடிக் கண்டடைவோம்!

    ***
    காட்டுவழி நோக்கிப் பயணிக்கும் இவர்களின் ’காடடைதல்’தான் (வாழ்வைக்) ’கண்டடைதல்’ என்று சுவையான புதிய விளக்கம் தருகின்றார் திரு. கவிஜி

    நகத்தின் கண்களில்
    இரவின் பிளிறல்
    இருந்தும் நுழைந்த
    நொடிவிரிந்தது
    கீற்று
    விலகியது திறப்பு,
    ஒளிர்ந்து மிளிர்ந்த
    காட்டுக்குள்
    பேய் பிடித்து மயங்கியது
    பயணம்….
    மீண்டும் தொடரும்
    காடடைதல்
    என்பது கண்டடைதல்….
    அது அப்படித்தான்,
    வென திறந்திருக்கும்
    அத்துமீறலின் சுரப்பு
    புரியாவண்ணம் நிறைந்த
    கிண்ணம்..
    அது ஏந்தும்
    பாத்திரத்தின் ஆத்திரம்,
    இருந்தும் இனிக்கும்
    இன்னிசை வலை..
    பின் அது கீறும்
    நகம் முழுக்க,
    கண்கள்
    மீண்டும் இரவின்
    பிளிறலில்
    நனையும் எதிர் வினையும்..!

    ***
    ’மழைவெள்ளத்தில் சிக்கித் துன்புற்று செய்வதறியாது நின்ற சின்னஞ்சிறு மழலையரை ’மனிதாபிமானம்’ எனும் பண்பு இந்தப் பெரியவர் உருக்கொண்டு காப்பாற்றியது’ என்று உருகுகின்றார் திரு. மெய்யன் நடராஜ். 

    சென்னை மழைக்குள்ளே சிக்குண்டு சீர்குழைந்த
    அன்னைதந்தைக் குற்ற  தறியாதச்சின்னக்
    குழந்தைகள் செய்வதற்று நின்றிருக்கக் கண்டு
    கிழவர் மனம்பதைத்து காப்பாற்றும் காட்சி
    மனிதாபி மானத்தின் சான்று.

    ***
    தன் வாழ்வுப்பாதையில் துணையாக வரும் உறவுகளைத் துவளாது காக்கும் மனிதரைத் தன் கவிதையில் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திருமிகு. பி. தமிழ்முகில்.

    மகிழ்வான தருணங்களில்
    தலையில்  தூக்கி வைத்து
    கொண்டாடி மகிழ்ந்து
    துவண்ட பொழுதுகளில்
    கைகொடுத்து தூக்கியே
    உற்சாகமூட்டி உறுதுணையாகி
    வாழ்வின் ஒவ்வொரு தருணமதிலும்
    சுமையாக ஓர்பொழுதும் எண்ணாது
    சுகமாக ஏற்றுக் கொண்டு
    எந்தன் வாழ்வின் பாதைதனில்
    துணையாக வரும் உறவுகள்
    அனைவரையும் சுமக்கிறேன்
    எந்தன் நெஞ்சமதில் சுகமாக !
    ஏற்றத் தாழ்வுகள்மேடு பள்ளங்கள்
    அனைத்தையும் கடக்கின்றேன்  – அந்த
    அன்பு உள்ளங்களின் துணையுடனே !

    ***
    இயற்கைப் பேரிடரின் கோரக்கரங்களில் தஞ்சமடைந்த இந்தப் பிஞ்சுகளை, இரக்கமெனும் இனியகுணத்தால் அணைத்துநிற்கும் ஏழைமனிதனிவன்!’ என்று மனம்பூரிக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    இயற்கை விதைத்த
    வஞ்சத்தில் பெற்றமகனின்
    உயிர் இழந்தான்
    உடமை இழந்தான்
    எஞ்சியதுஅவன்உயிர் மட்டுமே
    கஞ்சிக்கே வழியில்லாதபோது
    பிஞ்சுகள் இரண்டு வெள்ளத்தில்
    தஞ்சம் ஆகின அவனிடத்தில்
    பஞ்சப் பராரியான அவனோ
    அஞ்ச வில்லை அள்ளியெடுத்து
    கொஞ்சி மகிழ்ந்து நெஞ்சோடுஅணைத்து
    பிஞ்சுகள் இரண்டும்
    பஞ்சாகவும்
    நஞ்சாகவும் கீழ்மைபடாமல் வளர்க்க
    நெஞ்சு நிமிர்த்தி நடந்தான்
    ஈரமான ஏழை மனிதன்
    வெள்ளச்சேதத்தில் செழித்து வளர்ந்தது
    மனிதாபிமானம்.

    ***

    ’இயற்கைக்கு எதிரான எம் வாழ்க்கைக்கு மழையே நீ தந்த பரிசுதான் இந்த அழிவு என்பதை உணர்கின்றோம். ஆயினும், பெரியவர்கள் செய்த பிழைக்கு ஏதுமறியாத பிஞ்சுகளும் அல்லவோ பலியானார்கள்? தீமையிலும் ஓர் நன்மையாய், எம் வாழ்க்கை இருண்டபோது மனிதாபிமானம் மத்தாப்புக் கொளுத்தியதைக் கண்டோம்’ என்று நெகிழ்கின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    இருண்டு நீ
    திரண்டபோது
    இருளப்போகிறது
    எம் வாழ்க்கை யென
    எள்ளளவும் எண்ணவில்லை

    இருபதாண்டு உழைப்பினை
    இரண்டே நாட்களில்
    இல்லையெனச் செய்தாய்
    இதென்ன நியாயம்

    நீ ஓடுகின்ற வழியெல்லாம்
    வீடுகளை கட்டியது
    எங்கள் தவறுதான்
    அதற்காக
    எய்தவர்களை விடுத்து
    அம்புகளை ஏன் அழித்தாய்

    பாலுக்கு குழந்தைகள் அழுததையும்
    பச்சை நீர் வேண்டி
    முதியோரகள் கெஞ்சியதையும்
    பார்த்தப் பின்னரும்
    உன் பயங்கரவாத பயணத்தை
    ஏன் தொடர்ந்தாய்

    பித்தம் தலைக்கேறி
    நீ ஆடிய ஆட்டத்திலும்
    புத்தம்புது நம்பிக்கைகள்
    எங்களுக்குள் பூத்திருக்கிறது

    நீறு பூசிய நெருப்பாய்
    மறைந்திருந்த மனிதம்
    விஸ்வரூபம் காட்டி
    வியக்க வைக்கிறது

    இடருற்ற நேரத்தில்
    இளைஞர்களின் எழுச்சி
    நாளைய தேசத்தின் மீது
    நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது

    […]
    மறுபடியும்
    முகிழ்த்தெழுவோம்
    இம்முறை
    இயற்கை கூறுகளுக்கு
    இடையூறின்றி!

    ***
    புனர்வாழ்வை நோக்கிப் புதுப்பயணம் மேற்கொள்ளும் மனிதனை நம்முன் காட்சிப்படுத்தியுள்ளார் திருமிகு. வேதா இலங்காதிலகம். 

    மேட்டுக் காணி நோக்கியே
    காட்டு வழியென்று ஆண்டவனையே
    கேட்டுச் செல்கிறேன், எஞ்சிய
    பட்டுச் செல்வங்களுடன் புனர்வாழ்விற்கு!
    எட்டுவேன் என்னால் இயன்றவரை!

    எசமானின் பிள்ளையோடென் பேரனையும்
    நிசமாக உயிராய் வளர்ப்பேன்!
    உப்பிட்டவரை உள்ளளளவும் நினையென்று
    செப்பியது அன்று உண்மையோ!
    தப்பாத ஒரு தருணமிதோ!

    பிரளய வெள்ளம் ஊரோடென்னையும்
    புரட்டிப் போட்டது எதுவுமின்றி.
    இரண்டு செல்வங்களோடு என்னையும்
    அரங்கநாதன் வாழச் செய்கிறான்!
    இரட்சகனின் தீர்ப்போடு செல்கிறேன்!

    ***

    தைரியத்தை ஒருபுறமும் நம்பிக்கையை மறுபுறமும் சுமந்துகொண்டு வசந்தத்தைத் தேடி நடைபயிலும் மனிதனைப் பாடுபொருளாக்கியிருக்கின்றார் திரு. சத்தியமணி.

    வறண்ட காடு
    இருண்ட வானம்
    தளர்ந்த கால்கள்
    உலர்ந்த உதடு
    தவிக்கும் பார்வை
    நடுங்கும் தோள்கள்
    சுருங்கும் நெஞ்சம்
    சுவாசம் கெஞ்சும்
    சலித்த சொற்கள்
    தொலைத்த உறவு
    முதிர்ந்த வயது
    முடிந்த பாதை
    இருந்த போதும்
    என் அரவணைப்பில்
    நம்பிக்கை ஒருபக்கம்
    தைரியம் மறுபக்கம்
    ஏளனமாக்க பார்க்காதே என்னை
    இன்னும் என்வசம் வசந்தம்தான்

    ***

    சமீபத்திய மழைவெள்ளப் பாதிப்பைக் கவிஞர்களின் கவிதைகள் நெடுகிலும் காணமுடிகின்றது. மனிதவாழ்வோடு இரண்டறக் கலந்துசெல்லும்போது கவிதைகள் மேலும் கவித்துவம் பெறுகின்றன. பாராட்டுக்கள் கவிஞர்களே!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்து கவிஞரைக் கண்டுவருவோம்! 

    தேடிச் சோறுநிதந் தின்று – பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து – நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
    வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ? என்றார் மகாகவி. ஆம்! தேடிச் சோறு தின்பதும், வீண்கதைகள் பேசித் திரிவதுமன்று மானுட வாழ்வின் நோக்கம். வாடிய உயிர்களைக் கண்டு வாடுவதும், அவர்தம் இன்னல் நீக்கி இன்பம் சேர்ப்பதுமே அதன் உண்மை நோக்கம்!

    அவ்வகையில், தாயிழந்து தவித்து நிற்கும் மழலைகள் இருவருக்குத் தானே தாயுமான ஆண்மகன் ஒருவனின் தன்னலமற்ற சேவைகளை, “சுருண்ட வாழ்வின் சுருக்கம் நீக்கும் இழையுமானவன்;  மருண்ட கண்களின் மயக்கம் போக்கும் மருந்துமானவன்” போன்ற சிறந்த சொற்களால் செம்மையாய் விளக்கிச்செல்லும் கவிதையினைக் கண்டு உளம் நெகிழ்ந்தேன்.

    அக்கவிதை…

    தாயைத்தேடிப் பயணம் செல்லும்
    தாயுமானவன்……இரு
    சேய்களை இடுப்பில் ஏந்திச் செல்லும்
    நாயகனானவன்…..பசித்த
    வாயினுக்கமுதம் வழங்கச் செல்லும்
    தாய்மடியானவன்கிடைக்கும்
    காயினும் மேலாய்க் கனியச் செய்யும்
    காலம் ஆனவன்.

    இருண்ட மேகம் திரண்ட வான்பொழி
    மழையுமானவன்…..எழில்
    சுருண்ட வாழ்வின் சுருக்கம் நீக்கும்
    இழையுமானவன்.
    மருண்ட கண்களின் மயக்கம் போக்கும்
    மருந்துமானவன்….சுவை
    அருந்தும் அமுதம் வயிற்றுக்கீயும்
    விருந்துமானவன்.

    யாரும் இங்கே அனாதை யில்லை
    என்றே சொல்லுபவன்……பெற்றோர்
    பேரும் அறியாப் பிள்ளைகள் சொல்லும்
    பெயரும் ஆனவன்.
    வேரைத் தேடி விருட்சம் என்றும்
    வியர்த்துப் போகுமோ….மனம்
    சேரும் இடத்தைச் சிந்தனையின்றிச்
    சேர்தல் கூடுமோ

    வாழும் வரைக்கும் பூமி நமக்கு
    வாழ இடங்கொடுக்கும்….உணர்வு
    சூழும் வரைக்கும் சாமி இங்கு
    சுகத்தை நமக்களிக்கும்
    பாழும் எண்ணப் பாழ்கிணற்றினில்
    பார்வை விழவேண்டாம்….நாம்
    வாழ்வோம் என்னும் மந்திரச் சொல்லே
    வாழ்க்கைப் பாடம் ஆகட்டும்.

    பாதை நீளும் பயணம் தொடரும்
    என்றே காட்டுபவன்….அவன்
    பார்க்கும் பார்வையில் சோர்வை நீக்கிச்
    சுடரைக் கூட்டுபவன்.
    வாதை அழிக்கும் வாழ்வைக் காட்டும்
    வழியுமானவன்……எல்லோர்
    வேதனை ஒழிக்கும் வேதஞ் சொலுந்தாய்
    மொழியுமானவன்.

    இந்த இனிய கவிதையை வடித்துத் தந்திருக்கும் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிக்கின்றேன்.

    ***

    கிராம வாழ்வை வெறுத்து நகரமெனும் நரகம் சென்று வாழ்வைத் தொலைக்கும் இளைய சமுதாயத்தின் அவலம் பேசுகின்றது மற்றொரு கவிதை.

    ”ஒரு நாட்டின் இதயம் அதன் கிராமங்களில்தான் வாழ்கின்றது” என்றார் மகாத்மா காந்தியடிகள். நம் இளைஞர்கள் அதனை மறந்ததேனோ?

    பாடுபட்டுப்
    படிக்கவைத்தேன் மகனை..

    படித்த படிப்புக்கு வேலைதேடிய
    பட்டணத்தில் கிடைத்தது,
    வேலையுடன்
    வாழ்க்கைத்துணையும்..

    தாயில்லாப் பிள்ளையெனத்
    தன்போக்கில் விட்டதாலே,
    இன்று
    தாய்மண்ணையே மறந்துவிட்டான்..

    பட்டிக்காடு வேண்டாமாம்,
    பட்டணத்தில் வீடுகட்டி
    பகட்டாய் வாழ்ந்திடவே
    காடுமேடு நிலத்தைவிற்று
    காசுகொடு என்றுவந்தான்..

    கேட்டபடி
    கொடுத்துவிட்டேன்,
    குடிசையொன்று எனக்காக
    வைத்துக்கொண்டு
    கிராமத்திலே தங்கிவிட்டேன்..

    பட்டணத்தில் மழைவெள்ளம்
    பேரழிவு என்றார்கள்,
    பதறி ஓடினேன்..

    பார்த்ததங்கே
    எங்கும் ஓலம்,
    எல்லாம் அழிந்த கோலம்..

    எனக்கு,
    எல்லாம் போச்சு
    கிடைத்தது
    என்னிரு பேரப்பிள்ளைகள்தான்..

    இவர்களாவது
    என்பேச்சு கேட்பார்களா
    இனிய வாழ்வு வாழ்வார்களா..

    கண்ணீர்க் கடலில்
    நம்பிக்கைப் படகில்
    நான் போகிறேன்
    கிராமம் நோக்கி…!

    கிராம வாழ்வின் அருமை பேசும் திரு. செண்பக ஜெகதீசனின் இந்தக் கவிதையைப் பாராட்டுக்குரியது என்று தெரிவிக்கின்றேன்.

    பங்குபெற்ற அனைவருக்கும் என் நன்றி!

    Share
  • கண்ணீர் (கொரிய மொழிப்பெயர்ப்புக் கவிதை)

    பவள சங்கரி

     

    கொரிய மொழிபெயர்ப்பு கவிதை

     

    Photography by Hye Hyon
    Photography by Hye Hyon

    பல சமயங்களில்
    ஒரு சிறு விதையாய் இருக்கவே விளைகிறேன் நான்
    அஃது வளமானதொரு நிலத்தில் வீழவும் வேண்டும்.

    என்னிடம் உள்ளனவெலாம் இவைகளே-
    குறையிலாநிறை, களங்கமிலாதூய்மை,
    நெஞ்சுரம்!

    என்னைக் கொடுக்கச்சொல்லிக் கேட்டால்
    விலைமதிப்பில்லாத அதை,
    மீதமுள்ள அந்த ஒன்றேயொன்று இவைதான்!

    கவினுரு மரத்தின் மலர்களும்கூட உதிர்வதைக் கண்டாய்
    ஆயின் கனி ஈனச் செய்தது அது,

    இப்படித்தானே, எமக்குச் சிரிப்பை வழங்கியபின்,
    எம் கண்ணீரையும் புதுப்பித்துவிட்டாய் நீ.

     

    Tears by Kim Hyun-seung

    Often
    I wish to be a small seed
    falling to the fertile ground.

    These are all I have–
    flawless, spotless,
    unbroken!

    When I am asked to offer
    what is most precious,
    these are the only ones I have left!

    You saw the flowers of a beautiful tree withering
    and made it bear fruit,

    and, after giving me laughter,
    you have renewed my tears.

     

    눈물/김현승

    더러는
    옥토(沃土)에 떨어지는 작은 생명이고저.

    흠도 티도,
    금가지 않은
    나의 전체는 오직 이뿐!

    더욱 값진 것으로
    드리라 하올 제,
    나의 가장 나아종 지니인 것도 오직 이뿐!

    아름다운 나무의 꽃이 시듦을 보시고
    열매를 맺게 하신 당신은,

    나의 웃음을 만드신 후에
    새로이 나의 눈물을 지어 주시다.

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோள நீர்மய அமைப்பு பூர்வ பூமித் துவக்கத்திலே நேர்ந்துள்ளது

     

    ajay

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++

    https://youtu.be/BvrzM-BavDg

    https://youtu.be/PoV4qSwg7nc

    https://youtu.be/j1sFidXtKIU

    https://youtu.be/NAbcmtwyxgg

    https://youtu.be/t90lVO1JkGc

    https://youtu.be/W-gp5lapzi0

    https://youtu.be/vy6dj_ZWOos

    https://youtu.be/Idtk16T-cyY

    ++++++++++

    Origin of water -1

    பூமிக்குள் அதன் ஆழ் கடலுக்குள்
    கோளுக்குள்
    கோளின் குடலுக்குள்
    பாறைக்குள்,
    உறங்கும் படு பாதாள
    ஊற்றுக்குள் நெளிந்தோடும்
    ஆற்றுக்குள்,
    நிலையான ஏரிக்குள்
    நிரம்பியது எப்படி
    நீர் வெள்ளம் ?
    எப்போது தோன்றியது ?
    நூறு கோடி
    ஆண்டுகட்கு முன்பா ?
    பூர்வப் பிரபஞ்சத்தில் தோன்றியதா ?
    படிப்படி வளர்ச்சியில்
    வடித்ததா ?
    மூலகங்கள் இணைந்தா ?
    மூலக்கூறுகள் பிணைந்தா ?
    மின்னல் அடித்து இரசாயனங்கள்
    பின்னியதா ?
    தோல் அடியில் நீர்ப்பனி சுமக்கும்
    வால்மீன்கள் தாக்கி
    கோளில் கொட்டியதா ?
    ஆழ்ந்து உளவினும் இந்தக்
    கேள்விக்கு விடை
    கிடைப்பது எக்காலம் ?

    ++++++++++

    Earth's water -1

    கனடா வடதுருவப் பனித்தளத்தில் உள்ள பாஃபின் தீவின் [Baffin Island, Canada] பாறைகளுக்கிடையே உறைந்த நீர் வெள்ளம் பூமி தோன்றிய துவக்க காலத்துப் பூர்வீக நீர் என்பது முதன்முறையாக அறியப் பட்ட சான்றாகக் கருதப் படுகிறது. அந்தப் பாறை நீர் மாதிரிகள் 1985 ஆண்டில் சேமிக்கப்பட்டவை. அவற்றைப் பல்லாண்டுகளாய்த் துருவிச் சோதிக்க வாய்ப்புக்கள் இருந்தன.  அவை பூமியின் ஆழ்தட்டிலிருந்து [Earth’s Deep Mantle] வெளி வந்த பூமி அங்கமாய்க் கருதப்படும் உட்சாதனத்தைக் கொண்டிருந்தது.  அவை மேற்தளப் பாறையிலிருந்து [Crustal Rocks] உதிரும்  வண்டல் படிவுகளால் [Sediments] பாதிக்கப் படவில்லை. இதுவரை நாங்கள் பாராத பூர்வ படிவுப் பாறை [Primitive Rocks] என்பது எங்கள் முடிவு. அவற்றின் நீர் பூமியின் பூர்வீகத் துவக்க நிலை நீராகக் கருதுகிறோம். அவை பூமியின்  தோற்ற வரலாற்றையும், ஆரம்ப நீர்மயம் எங்கிருந்து எப்படி வந்தது என்று அறியவும் உதவுகிறது.

    டாக்டர் லிடியா ஹால்லிஸ் [Astrobiology Institute, University of Glasgow, Scotland] 

    cover-image-swas-probe-1

    கனடா வடதுருவப் பாறை நீரில் மிகச் சிறிதளவு டியூட்டிரியம் [Deuterium] உள்ளதை அறிந்தோம்.  அதனால் அழுத்தமாய்த் தெரிவது : அந்த நீர்மயம் பூமி தோன்றிக் குளிர்ந்த பிறகு புறத்திலிருந்து வீழ்ந்து நிரம்பிய தில்லை என்பதே. அதாவது கோள்கள் தோன்றி உருவாவதற்கு முன்பே, நமது சூரியனைச் சுற்றி இருந்த தூசி, துணுக்குகள் நீர் மூலக்கூற்றை ஏற்கனவே ஏந்தி வந்திருக்கலாம்.  பல யுகங்களாய் இந்த நீர்மயம் செழித்த தூசி, துணுக்குகள் மெதுவாகச் சேர்ந்து நீர்க்கோள் பூமி வடிவாகி இருக்க வேண்டும்.  ஆரம்ப காலத்தில் பேரளவு நீர் வெள்ளம் பூதள வெப்பத்தில் ஆவியாகி இழக்கப் பட்டாலும், மிஞ்சி இருந்தது போதுமான அளவு கடலில் நிரம்பியுள்ளது.

    டாக்டர் லிடியா ஹால்லிஸ் [Astrobiology Institute, University of Glasgow, Scotland] 

    பூமியின் உட்தட்டில் பூர்வக் கால நீர்த் தேக்கம் கண்டுபிடிப்பு

    2015 நவம்பர் 13 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில்  [Journal Science] காரி ஹூஸ், கஸுஹைடு நாகசீமா, ஜெஃப்ரி டெய்லர், மைக்கேல் மோட்டில், காரென் மீச் [NASA Astrobiology Institute, University of Hawaii] ஆகியோர் முதன்முதல் வெளியிட்ட ஆய்வறிக்கை :  கனடாவின் வடதுருவப் பகுதியில் உள்ள பாஃபின் தீவுப் பாறைகளில் பூர்வக் கால நீர்த் தேக்கம் இருந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.  அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் : அகிலவியல் இரசாயன விஞ்ஞானி, [Cosmochemist] டாக்டர் லிடியா ஹால்லிஸ் என்பவர். [Astrobiology Institute Fellow, University of Glasgow, Scotland]

    Deuterium content

    பூகோளப் பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி கடல் பரவியுள்ளது.  ஆனால் அந்தப் பேரளவு நீர்த் தேக்கம் எப்போது, எங்கிருந்து பூமியில் சேர்ந்தது என்பது இன்னும் புதிராகவே இருக்கிறது.  பூமி தோன்றிய போது சேர்ந்ததா, அல்லது தோன்றிய பிறகு நேர்ந்ததா என்பது இதுவரை விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை.  இப்போது கனடா பாறை மாதிரிகள் பூமியில் நீர்மயம் ஆரம்ப காலத்திலே உருவானது என்பதற்குச் சான்று தெரிவிக்கும். அதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்திய கருவி அயான் நுண்ணுளவி [Ion Michroprobe].  அந்த பாறைகளுக்கிடையே இருந்த பனிக்கட்டி நீர்த் துளிகள் ஒப்பு நோக்க எத்தனை பங்கு டியூடிரியம் [Deuterium] கொண்டது என்று ஆராய்ந்தனர்.

    டியூட்டிரியம் என்பது ஹைடிரஜனின் ஏகமூலம்.  [Deuterium is an Isotope of Hydrogen].  ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டான் பரமாணு உள்ள போது, டியூட்டிரியம் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்டிரானும் சேர்ந்துள்ளது.  அதாவது ஹைடிரஜனின் அணுநிறை : 1 டியூட்டிரியத்தின் அணுநிறை : 2.  சூரியக் கோள்களின் வெவ்வேறு நீர் மாதிரிகளைச் சோதித்ததில், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதத்தைக் கொண்டிருந்தன.  [Different Hydrogen / Deuterium Ratio] கொண்டிருந்தன. சமீபத்தில் இரசாயன ஆய்வு செய்த நமது சந்திரனின் பாறை மாதிரிகள் மூலம், பூமியானது நீர்த் தேக்கமுடன் ஆரம்பம் முதலே இருந்தது என்பது உறுதியானது. அப்பெல்லோ -15 & 17 நிலவுப் பயணங்களில் நாசா விண்வெளி விமானிகள் சேகரித்த பாறை மாதிரிகள் காட்டிய டியூட்டிரியம் / ஹைடிரஜன் விகிதம் [Deuterium to Hydrogen (D/H) Ratio] பூமியில் இருக்கும் நீரைப் போன்று இருந்தது.

    D-H Ratio in Mars water

    பூமியை நீர்ப்பனி கொண்ட வால்மீன்கள் தாக்கியதால் நீர்த் தேக்கம் உண்டானதா, நீர்ச் செழிப்புள்ள முரண்கோள்கள் [Water Rich Protoplanets, or Asteroids] மோதியதால் நீர்மய அமைப்பு தோன்றியதா என்னும் வினாக்கள் விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளன !  வான்மீன்களின் பனிநீர் மாதிரிகள் காட்டும் [D/H Ratio] நமது பூமியின் கடல் நீர் [D/H Ratio] போல் இரட்டிப் பானது.

    “வெகு தூரப் பிரபஞ்சத்தில் ஈர்ப்பாற்றல் பெரிது படுத்திய அண்டத்தில் (Gravitationally Magnified Object) நீர்மயத்தை நாங்கள் கண்டுபிடித்தது விந்தையான ஓர் நிகழ்ச்சியே.  நாம் முன்பு நினைத்தது போலின்றி நீர் மூலக்கூறுகள் பூர்வத் தோற்ற பிரபஞ்சத்தில் செழிப்புடன் இருந்ததை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.  மேலும் இதைப் பல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள பேரசுர நிறையுடைய கருந்துளைகள், ஒளிமந்தைகள் ஆகியவற்றின் படிப்படி வளர்ச்சியை (Supermassive Black Holes & Galaxy Evolution) அறிய அடுத்த கட்ட ஆய்வு நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”

    ஜான் மெக்லீன், மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம், ரேடியோ வானியல் [டிசம்பர் 29, 2008]

    fig-1a-water-life-in-universe

    “மற்றவர்கள் நீரைக் காண முயன்று தோற்றுப் போயினர்.  மிக மங்கலான சமிக்கையைக் காண்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.  ஆகவே வெகு வெகு தூர அண்டத்தை நோக்கவும், அழுத்தமாகப் பதியவும் அகிலப் பெரிதுபடுத்திக் கண்ணாடியாக (Cosmic Magnifying Lens) முன்னுள்ள காலாக்ஸியைப் பயன்படுத்தி நீர் ஆவி (Water Vapour) துள்ளி எழுவதைக் கண்டுபிடித்தோம்.”

    வயலட் இம்பெல்லிஸெரி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர் [டிசம்பர் 29, 2008]

    “நீர் மேஸர் (Water Maser) கதிர்கள் அண்டையில் உள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன !  காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.”

    ஜான் மெக்லீன்.

    “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது.  மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கி விடுகிறது.  அடுத்த பிறவி புது முறை ரேடியோ தொலைநோக்கிகள் மூலமும் தேட எமக்கு வழி திறந்துள்ளது.”

    வயலட் இம்பெல்லிஸெரி

    fig-1b-water-abundance-in-the-universe“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]

    “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    fig-1e-formation-of-watery-earth1

    பிரபஞ்சத்தின் வெகு வெகு தொலைவில் நீர்மயமா ?

    2008 டிசம்பரில் ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று 100 மீடர் எஃபெல்ஸ்பெர்க் ரேடியோ தொலைநோக்கியில் (Effelsberg Radio Telescope) இதுவரை காணாத பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் உள்ள ஓர் அண்டத்தில் நீர்மயம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.  11 பில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் நீர் ஆவி (Water Vapour) இருப்பதைக் கண்ட தளம் : குவஸார் (Quasar MG J0414 + 0534 at Redshift 2.64) (Redshift 2.64 means 11.1 Billion Light Years Distance).  அதாவது “சிவப்பு நகர்ச்சி 2.64” என்றால் அந்த தளம் பிரபஞ்சமானது ஐந்தில் ஒரு பங்கு வயதில் (13.7 பில்லியன்/5 =2.74 பில்லியன் ஆண்டு வயது) இருந்த போது உண்டான பூர்வத் தோற்ற அமைப்பு !  இந்த அரிய நிகழ்ச்சியைக் காண வானியல் விஞ்ஞானிகள் சுமார் 14 மணிநேரம் எடுத்தனர்.

    fig-1f-what-controls-the-abundance-of-water

    பூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர் இருந்த கண்டுபிடிப்பைக் காண முடிவதற்கு ஒரு நிபந்தனை : பல்லாயிரம் கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள குவஸாரும் (MG J0414 + 0534) அதற்கு முன்னால் அதை மறைக்கும் ஒளிமந்தை காலாக்ஸியும் நேர் கோட்டில் இணைந்திருக்க வாய்ப்பிருக்க வேண்டும் !  முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கியாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது !  காலாக்ஸி புரியும் அத்தகைய “ஈர்ப்பாற்றல் பெரிதுபடுத்தி” (Gravitational Lensing) இல்லை யென்றால் இந்த விந்தையான நிகழ்ச்சியைக் காண ஆய்வாளர்கள் 100 மீடர் ரேடியோ தொலைநோக்கி மூலம் தொடர்ந்து 580 நாட்கள் கண்காணித்து வந்திருக்க வேண்டும் !

    fig-2-molecular-clouds

    வெகு தொலைவில் நீர் ஆவி எழுச்சி எப்படிக் காணப்பட்டது ?

    நீர் ஆவி எழுச்சி லேஸர் ஒளிக்கதிர்போல் “மேஸர்” கதிரலையாக (Maser -Microwave Amplification by Simulated Emission of Radiation) நுண்ணலை அலைநீளத்தில் தெரிந்தது.  அந்த சமிக்கையானது பரிதியின் ஒளிக்காட்சி போல் (Luminosity) 10,000 மடங்கு வெளிச்சத்துக்கு ஒப்பானது.  அத்தகைய வானியல் பௌதிக மேஸர் கதிர்கள் அடர்த்தியான துகள், வாயு எழுகின்ற வெப்ப அரங்குகளைக் காட்டுகின்றன என்பது முன்பே அறியப் பட்டது.  அதாவது பெரு வெடிப்பு நேர்ந்து 2.5 பில்லியன் ஆண்டுகள் கடந்த பிரபஞ்சத்தின் பிள்ளைப் பிராயத்தில் இருந்த குவஸாரின் அடர்த்தி வாயுக்கள் அந்தச் சூழ் நிலையில் சேர்ந்து நீர் மூலக்கூறுகளை உண்டாக்கி உள்ளன என்பது அறியப்பட்டிருக்கிறது.

    Mars brine water flow

    நீர் மேஸர் கதிர்கள் நெருங்கியுள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன !  காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.  “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது.  மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கம் ஊட்டுகிறது.  அடுத்த பிறவி புதுயுக ரேடியோ தொலை நோக்கிகள் மூலமும் தேட வழி திறந்துள்ளது,” என்று மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர், வயலட் இம்பெல்லிஸெரி கூறினார்.

    fig-5-swas-space-probe-in-orbit

    பிரபஞ்சத்தில் நீர் மயத்தைத் தேடும் சுவாஸ் விண்ணுளவி

    வானியல் விஞ்ஞானிகள் ஊகிக்கும் பகுதிகளைத் தவிரப் பிரபஞ்சத்தில் எப்புறத்தில் நோக்கினாலும் அங்கே நீர் இருப்பது தெரிந்துள்ளது.  இந்த அறிவிப்பு 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நாசா ஆய்வகத்தார் ஏவிய சுவாஸ் விண்ணுளவி (SWAS – Submillimeter Wave Astronomy Satellite) கண்டுபிடித்த விளைவுகளில் அறியப்பட்டது.  பூமியைச் சுற்றிய சுவாஸ் விண்ணுளவியின் குறிக்கோள்: விண்மீன்களின் வாயு முகில்களில் உள்ள இரசாயனக் கூட்டுப் பண்டங்கள் (Chemical Composition of Intersteller Gas Clouds) யாவை என்று அறிவது.  சுவாஸின் பிரதான தேடல் நீர் !  பிறகு விண்மீன் தோன்றும் காலாக்ஸி அரங்குகளில் ஆக்ஸிஜன் மூலக்கூறு, கார்பன், ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு ஆகியவற்றின் இருப்பைக் காண்பது.

    fig-6-swas-instrumentation

    1998 டிசம்பர் 5 இல் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் பெகஸஸ் ராக்கெட் (Pegasus-XL Launch Vehicle) மூலம் 288 கி.கி. எடையுள்ள சுவாஸ் துணைக்கோள் ஏவப்பட்டது.  அதுமுதல் சுவாஸ் ஏது பழுதின்றி ஒழுங்காய் பூமிக்கு மேல் 600 கி.மீடர் (360 மைல்) உயரத்தில் இயங்கி வருகிறது.  சூரியத் தட்டுகள் உதவியால் வெப்ப சக்தியை இழுத்து 230 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறது.  அது கொண்டுள்ள கருவிகள் கீழ்க்காணும் மூலக்கூறுகளை காலாக்ஸிகளில் காணும் திறமையுடையவை :

    1.  நீர் (Water H2O at 556.936 GHz)

    2.  ஆக்ஸிஜன் மூலக்கூறு (Molecular Oxygen O2 at 487.249 GHz)

    3.  நடுநிலைக் கார்பன் (Neutral Carbon C at 491.161 GHz)

    4.  ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு (Isotopic Carbon Monoxide 13CO at 550.927 GHz)

    5.  ஏகமூல நீர் மூலக்கூறு (Isotopic Water 2H18O AT 548.676 GHz)

    fig-swas-space-probe-mission

    நீரைக் கண்டுபிடிப்பதுடன் விண்மீன்களின் மூலக்கூறு முகில்களில் சுவாஸ் விண்ணுளவி மற்ற மூலகங்களைக் (Elements) காணவும் டிசைன் செய்யப் பட்டுள்ளது.  சுவாஸ் ஐயமின்றி நமது சூரிய மண்டலத்தில் வால்மீன்கள் தாக்கிய வாயுக் கோள்களான வியாழன், சனிக் கோளை காட்டியுள்ளது.  மேலும் சுவாஸ் செவ்வாய்க் கோளின் வாயுக் கோள் மண்டலத்தில் 100% ஒப்பியல் நீர்மையைக் (Relative Humidity) காட்டியுள்ளது.  செவ்வாய் வாயுத் தளத்தில் நீர்ப் பரவல் 10 முதல் 45 கி.மீடர் உயரம் வரை 100% பூர்த்தி நிலையில் (100% Saturation) இருப்பதைக் காட்டியுள்ளது.

    சுவாஸ் விண்ணுளவி கண்டுபிடித்த விந்தைகள்

    மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் சுவாஸ் விண்ணுளவி இதுவரை அறிவித்துள்ளது.  அண்ட வெளி விண்மீன் பகுதிகளில் நீர்மயச் செழிப்பு பல்வேறு விதங்களில் மாறியுள்ளதைக் காட்டுகிறது.  அநேகப் பேரசுர மூலக்கூறு முகில்களில் காணப்பட்ட நீர்மயச் செழிப்பு அண்டக் கோள் விண்மீன் பகுதிகளை விட ஓரளவு குறைவாகவே உள்ளது என்று காட்டியிருக்கிறது.  மேலும் புதிதாக உருவாகும் விண்மீன்களிலும், செவ்வாய், வியாழன், சனிக் கோள்களின் வாயு மண்டலத்திலும், “வால்மீன் லீ” யிலிம் (Comet Lee) நீர் இருப்பதைச் சுவாஸ் காட்டியுள்ளது.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html(Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html  (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html  (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Scientific American – Secrets of Saturn’s Moon-Icy Enceladus Has Active Geysers & Perhaps a Hidden Sea that could Harbour Life [December 2008]
    25. NASA Exobiology & Terraforming By : Steven Lin
    26.  The Primate Diaries – Parsimony & the Origin of Life in the Universe (Sep 5, 2007)
    27. Water in the Universe : Abundant ? Yes – But Not Where We Thought it Would Be ! By : Keith Cowing (Aug 20, 2000)
    28. University of Honolulu Astrobiology Team Studies Water & Life in the Universe By : Karen Meech & Eric Gaidos (June 2003)
    29. BBC News Astronomers Should Look for Life in Nearby Planetary Systems Where Comets Swirl Aound Blazing Stars, Releasing Vast Amounts of Water. By : Dr. David Whitehouse (July 12, 2001]
    30 Highlights of the SWAS Mission By : Gary J. Melnick (2003)
    31. Daily Galaxy – New Discovery Shows Water Abundant in Early Universe By : Jason McManus [Dec 29, 2008]

    32.  http://science.nationalgeographic.com/science/space/solar-system/early-earth.html  [December  2006]

    33.  http://www.smithsonianmag.com/ist/?next=/science-nature/how-did-water-come-to-earth-72037248/  [May 2013]

    33(a)  http://www.titech.ac.jp/english/news/2013/024238.html  [November 12, 2013]

    34. http://regator.com/p/269926483/origin_of_earths_water_part_of_our_planet/

    35.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/11/-origin-of-earths-water-part-of-our-planet-from-the-beginning.html [November 13, 2015]

    36.  https://en.wikipedia.org/wiki/History_of_Earth  [December 15, 2015]

    37.  https://en.wikipedia.org/wiki/Origin_of_water_on_Earth

    38.  http://www.huffingtonpost.com/entry/earths-water-old_56460271e4b08cda348867ea [November 17, 2015]

    39.  http://karmaka.de/?p=6245  [November 13, 2015]

    40.  http://cnmnewz.com/water-has-been-on-earth-all-along-study-of-volcanic-rocks-reveals/

    41.  http://www.hngn.com/articles/150356/20151113/earths-water-probably-didnt-come-comet-here-beginning.htm  [November 13, 2015]

    42.   https://en.wikipedia.org/wiki/Deuterium  [December 12, 2015]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) ( December 19, 2015)

    Attachments area
    Share
  • மார்கழி மணாளன் 4  அழகர் கோயில்    

    க. பாலசுப்பிரமணியன்

    9312761a-f371-4a49-b924-148c711fdcae

    அழகுக்கு அழகு சேர்க்கும் கள்ளழகா !

    அலைமகளும் நிலமகளும் துணைசேர

    குதிரைமேல் பவனிவந்து குறைகேட்டுக்

    கூடலுக்கும் அழகு சேர்க்கும் கூடலழகா  !

     

    மண்டூகர் தவமேற்று மனமிரங்கி

    விண்ணுலகம் காட்டிய மாதவனே !

    மலை நடுவே நூபுரகங்கை தந்து

    கல்லிலும் நீர்சுரக்கும் கள்ளழகா !!

     

    சீர்கொண்டு வந்த தங்கைக்குச்

    சிவனோடு மணம் முடிந்ததென்று

    சினத்தோடு  சீரெல்லாம் வைகையிலே

    சிதறவிட்ட ஸ்ரீமன் நாராயணா !

     

    சுந்தரத் தமிழில் சுவையோடு நக்கீரன் பாட

    சுவைத்து அருளிட்ட  சுந்தரராஜா !

    சோலையிலே சுந்தரவல்லி கைபிடித்து

    சோகமெல்லாம் நீக்கிடும் ஸ்ரீதரனே !

     

    ஆழ்வார்கள் பலரோடு ஆண்டாள் குரல்கேட்டு

    ஆனந்தநிலையிலே அருள்தரும் அமரா !

    கருப்பண்ணசாமிக்குக்  கருணை காட்டிக்

    கள்ளர் குலம்காத்த கார்மேகப் பெருமானே !

     

    மயிலோடு விளையாடும் மருகன் அருகில்

    குயில்பாட்டுப் பாடும் குறத்தியர் மலையினில்

    குணக்குன்றாய் நீ நின்றாய் குறைதீர்க்க

    குரல்கேட்டு உடன் வருவாய் கோவிந்தா !

     

    தவமொன்றும் நானறியேன் தரணியில்

    தனதாக யாருமில்லை புவியினில் !

    தாயாகத் தனயனாக நீ!  தோழனாகத்

    தோள் கொடுப்பாய் தூயவனே  தாமோதரா !

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    f50c5b88-8c8b-4ddf-aca5-c0ca54fedf46

    ”ஓங்கி உலகளந்தோன், தாங்கினான் குன்றினை,
    ஏங்கிய கோகுல யாதவர்க்காய், -பாங்கியாய்
    ஆண்டாளை ஏற்றநம் அச்சுத நெய்யிருக்க,
    வேண்டேலோர் வேறெம்பா வாய்’’….கிரேசி மோகன்….

    Share
  • பாம்பைக் கண்டால்…. 3

    நடராஜன் கல்பட்டு

    உலகில் உள்ள சுமார் 3,000 வகையான பாம்புகளில் இந்தியாவில் இதுவரை கணக்கில் வந்தவை சுமார் 270.  இவற்றில் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சில பாம்புகளே.
    ஆன்மீக விசாரத்தில் உன்னத நால்வர் என்றழைக்கப் படும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்பது போல பாம்புகள் விசாரத்தில் ‘பெரிய நால்வர்’ என அழைக்கப் படும் நல்ல பாம்பு (The Indian Cobra), கட்டு விரியன் (Krait), கண்ணாடி விரியன் (Russell’s Viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன் (Saw-scaled Viper) மற்றும் இவற்றுடன் ராஜ நாகம் (King Cobra), பவழப் பாம்பு (Coral snake) என்பவையே இந்தியப் பாம்புகளில் மிகக் கொடிய விஷப் பாம்புகள்.  இவை மனிதனைக் கடித்தால் உடனே சரியான வைத்தியம் செய்யப்படா விட்டால் ஓரிரு மணி நேரத்திற்குள்  கடிபட்டவர் இறப்பது நிச்சயம்.
    பாம்புக் கடிக்கான வைத்தியம் பற்றிப் பார்க்குமுன் இந்தப் பாம்புகளைப் பார்க்கலாமா?
    நல்ல பாம்பு :  விஞ்ஞான ரீதியாக இந்தப் பாம்பிற்கு அளிக்கப் பட்ட பெயர் ‘நஜா நஜா’ என்பதாகும்.  ‘நஜா’ என்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல். நல்ல பாம்பிற்கு போர்சுகீசியப் பெயரா? எப்படி வந்திருக்கும்?  பல நூற்றாண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசிய மாலுமிகளும் அவர்களுடன் சென்றவர்களும் உலகெங்கிலும் அவர்கள் கண்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.  ‘நாகா நாகா’ என்று நம் மக்கள் கூறியதை ‘நஜா நஜா’ என்று எழுதிக் கொண்டனரோ அல்லது ஹிந்தி பேசுபவர்கள், “அது மிகக் கொடிய விஷப் பாம்பு.  அதன் அருகே போகாதே” என “ந…ஜா ந…ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் ‘நஜா நஜா’ என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.
    நல்ல பாம்பு மற்ற பாம்புகளைப் போலவே நல்ல பாம்புதான்.  தானாக வந்து மனிதனை கடிக்காது, அதனை மிதித்தாலோ அல்லது கொல்ல முயற்சித்தாலோ தான் தன் விஷப் பற்கள் கொண்டு மனிதனை அது தீண்டும்.
    நல்ல பாம்பின் தலை – முன்னும் பின்னும்
    நல்ல பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து வருகிறது என்று எண்ணினாலோ, அல்லது அதை நாம் சீண்டினாலோ, படமெடுக்கும்.  தன் உடலின் மூன்றில் ஒரு பகுதியை செங்குத்தாகத் தூக்கி நிறுத்திக் கொண்டு, கழுத்தின் தசைகளைப் பக்க வாட்டில் பட்டையாக விரித்துப் பெரு மூச்சு விட்டு எதிரிகளை, “கிட்டெ வராதே.  வந்தால் கொன்று விடுவேன்” என முன் எச்சரிக்கை செய்யும் ஒரு செய்கையாகும் படமெடுப்பது என்பது.
    நல்ல பாம்பு படமெடுக்கும் போது அதன் விரித்த படத்தின் பின் புறம் மூக்குக் கண்ணாடி போன்ற ஒரு குறியீடு தெரியும்.  இந்த மாதிரி குறியீடு கொண்ட நல்ல பாம்பினை ஆங்கிலத்தில் மூக்குக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Spectacled cobra) என்பார்கள்.
    ஒரு வகை நல்ல பாம்பின் தலையில் இது ஒற்றைக் கண்ணாடி வடிவில் இருக்கும்.  இந்த வகை நல்ல பாம்பினை ஒற்றைக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Monocled cobra) என்பார்கள்.
    கட்டு விரியன்:  நல்ல பாம்பினும் கொடிய விஷம் கொண்ட பாம்பு இது.  நல்ல வேளையாக பகலில் படுத்துறங்கி இரவில் மட்டும் வெளி வரும் பாம்பு இது.  இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்டமாயில்லாமல் ஒரு முக்கோண வடிவில் இருக்கும்.  உடலில் பட்டை அடித்தது போன்ற வண்ணம் கொண்டிருக்கும்.
    http://en.wikipedia.org/wiki/Bungarus
    மஞ்சளும் கருப்புமான பட்டைகள்
    கொண்ட கட்டு விரியன்.
    Photo Credit: Dr. Muhammad Sharif Khan
    கருமை நிறப் பட்டைகளுடன் ஒரு கட்டுவிரியன்.
    கண்ணாடி விரியன்:  இந்த வகைப் பாம்புகளுக்கு இப்பெயர் வரக் காரணம் இதன் உடல் பூராவுமே மூக்குக் கண்ணடிகள் போட்டாற் போன்ற வண்ணத் திட்டுகள் இருப்பது தான்.  கண்ணடி விரியன் களில் பல வகை உண்டு.  அவற்றில் இரண்டு “ரஸ்ஸல்’ஸ் விரியன்  (Russell’s viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன்  (Saw-scaled viper) என்பவை ஆகும்.
          http://en.wikipedia.org/wiki/File:Daboia_head.jpg                      http://en.wikipedia.org/wiki/File:Echis_carinatus_sal.jpg
    கண்ணாடி விரியன் பாம்பு                                          ரஸ்ஸல் கண்ணாடி விரியன்
    1972ல் விஜயவாடாவில் ஒரு நாள் எனது கிருஸ்துவ சக அதிகாரி ஒருவருடன் எங்கள் வீட்டு வாசல் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  வாசலில் இருந்த முசுக்கொட்டை செடியருகே (Mulberry tree) பத்துப் பதினைந்து கட்டெறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது போல என் கண்ணில் பட்டது.  சற்று கூர்ந்து கவனித்ததில் எனக்குப் புரிந்து விட்டது அது என்னவென்பது. அப்போது விஜயவாடாவில் நாகபஞ்சமி என்ற சினிமா ஓடிக் கொண்டிருந்தது.  நண்பர் திடீரெனக் கேட்டார், “உங்கள் மதத்தில் நல்ல பாம்பினை தெய்வமாகக் கொண்டாடுகிறீர்கள்.  இது உண்மையா? அல்லது கட்டுக் கதைகளா?” என்று.  “அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது.  இப்போது உங்களுக்கு ஒரு உண்மையான பாம்பினைக் காட்டவா?” என்றேன்.  “எங்கே? எங்கே” காட்டு” என்றார் அவர்.  நண்பர் மேத்யூ குட்டியை முசுக் கொட்டை செடியருகே அழைத்துச் சென்று அங்கு வளைந்து வளைந்து செல்லாமல் கிட்டத் தட்ட நேர் கொட்டில் சென்று கொண்டிருந்த ஒரு சின்ன பாம்பினைக் காட்டினேன்.  அதன் முன்னே ஒரு குச்சியை நீட்டினேன்.  குட்டிப் பாம்பு தன் உடலை விருட்டென வளைவுகளாக இழுத்துக் கொண்டு குச்சியினை பக்க வட்டாகத் தாக்கியது. பாம்புகளைப் பற்றி சிறிதளவு படித்திருந்த எனக்குப் புரிந்து விட்டது அந்தப் பாம்பு கண்ணாடி விரியனின் குட்டி என்று.  அடுத்த வினாடி ஒரு பெரிய கல்லை அதன் மேல் தூக்கிப் போட்டுப் பரலோகம் அனுப்பி விட்டார் மேத்யூ குட்டி.  ஏன் அவருக்கு நான் பாம்பைக் காட்டினேன் என வருந்தினேன் அன்று.
    ராஜ நாகம்:  (King cobra)  ராஜ நாகம் நல்ல பாம்பில் ஒரு வகை.  ஆனால் இரண்டு வித்தியாசங்கள்.  ஒன்று இதன் உணவுகளில் மிக முக்கியமானது மற்ற  பாம்புகள்  (அதனால் தான் ராஜ நாகம் என்ற பெயரோ?)   மற்றொன்று இது சிறு குச்சிகள் சரகுகளைத் தன் உடலால் நகர்த்தி நகர்த்தி இரண்டடுக்கு ‘வீடு’ (கூடு) கட்டி கீழ் தளத்தில் முட்டைகள் இட்டு, மேல் தளத்தில் படுத்துறங்கும்.  ராஜ நாகம் தன் ‘வீட்டினை’ மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாது காக்கும்.
    உலகில் உள்ள கொடிய விஷப் பாம்புகளில் மிகப் பெரிய பாம்பு ராஜ நாகம்.  இது சுமார் 18.5 அடி வரை வளரக் கூடும். நல்ல பாம்பினைப் போலவே இந்தப் பாம்பும் படமெடுக்கும்.
    இதன் கண் பார்வை மிக மிகக் கூர்மையானது. சுமார் 300 அடி தூரத்தில் நகரும் ஒரு இரையினை இது கண்டறியும் சக்தி படைத்தது என்கின்றனர் வல்லுனர்கள்.
    பவளப் பாம்பு : (Coral snake). பவளம் என்றதும் பலதேசப் பெண்களுக்கு ஆபரணமாக அணிய ஆசை வரும்.  மஞ்சள், சிவப்பு, கருப்பு வர்ணப் பட்டைகளைக் கொண்ட இந்தப் பாம்பு பார்க்க மிக அழகாக இருக்கும்.
     http://www.team-bhp.com/forum/attachments/4×4-off-roading/91469d1232383511-snakes-coral.jpg
    அழகாக இருக்கிறதே எடுத்து அணியலாமோ என்று எண்ண வேண்டாம்.  மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இதுவும் ஒன்று.
    சில விஷமற்ற பம்புகள்:  விஷமற்ற பாம்புகள் என்றவுடன் இவற்றுக்கு முற்றிலுமாக விஷம் இராது என எண்ணி விட வேண்டாம்,  இந்த வகையில் சிலவற்றிற்கு விஷம் இருந்தாலும் அது மிக மிகக் குறைந்த வீரியமுடையதாகத் தான் இருக்கும்.  இவ்வகைப் பாம்புகளில் மூன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.
    1. கொடி அல்லது சாட்டைப் பாம்பு (Vine or Whip snake):  நீண்டு மெலிந்து கொடி அல்லது சாட்டை போல் இருக்கும் இப் பாம்பில் பச்சை நிறத்தில் இருப்பவற்றை பச்சைப் பாம்பு என்றும், பழுப்பு நிறத்தில் உள்ளதை கொம்பேரி மூக்கன் என்றும் நிறத்தினை வைத்து அழைப்பார்கள் நம் தமிழ் நாட்டில்.  இதனை கண் கொத்திப் பாம்பு என்று அழைப்பவர்களும் உண்டு.
    இந்த இரு வகைப் பாம்புகளுமே மிக மிகக் குறைந்த வீரியம் கொண்ட விஷம் உள்ள பாம்புகளே.  அவை கடித்தால் கடித்த இடத்தினைச் சுற்றி சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும்.  மூன்று நாட்களில் வலி குறைந்து அல்லது மறைந்து விடும்.
    இந்தப் பாம்புகள் தாழ்வான மரக் கிளைகள் அல்லது செடிகளில் இருந்து கொக்கி போலத் தொங்கிக் கொண்டு இருக்கும்.  அவ்வாறு தொங்குவது தரையில் ஓடும் தன் இரையான ஓணான், பல்லி, சுண்டெலி இவற்றினைக் கண்டறிந்து தாக்கிப் பிடிப்பதற்கே.
    கொம்பேரி மூக்கனின் தலை மேலிருந்து பார்த்தாலும் சரி, பக்க வாட்டில் இருந்து பார்த்தாலும் சரி ஒரு நீண்ட முக்கோண வடிவில் காணப்படும்.
    http://en.wikipedia.org/wiki/Ahaetulla_nasuta
    பச்சைப் பாம்பில் இரு வகை
    .
    கொம்பேரி மூக்கன் பற்றி நம் நாட்டில் இரு செய்திகள் பரவலாக உலவி வரும்.
    1.  “கொம்பேரி மூக்கன் மனிதனின் கண்களைக் குத்துவதற்காகத் தான் மரக் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும்.”
    2.  “கொம்பேரி மூக்கனை ஒருவர் கொல்ல நினைத்து அடித்தால் அது அவரைத் தீண்டி விட்டு அவர் இறந்தாரா, இறந்தவரின் உடலை எரித்தார்களா இல்லையா எனப் பார்ப்பதற்காக அருகிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.  புகை கண்ட பின்னர்தான் அது அங்கிருந்து மறையும்.”
    இந்த இரண்டில் முன்னதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.  காரணம் இதுதான்.  மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பினை நாம் அணுகும் போது அது நம் கண்கள் அசைவதைத் தப்பாக தனது இரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றெண்ணி நம்மைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது.
    இரண்டாவது முற்றிலும் கட்டுக் கதையே.
    நான்கு வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இருவர் அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்து, “சார் ஒரு கழி கொடுங்க.  பாம்பு ஒண்ணு வந்துருக்கு” என்றனர்.  கழியைக் கொடுக்காமல் நான் வெளியெ வந்து பார்த்தேன்.  “பாம்பு எங்கே?” என்றேன்.  அவர்கள் ஒரு மல்லிகைச் செடியியைக் காட்டினர்.  அதில் ஒரு பச்சைப் பாம்பு.  அதன் வாலைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்துத் தூக்கிப் பிடித்தேன். அவர்கள், “சார் அது கண்ணெக் கொத்தீடும்” என அலற நான் சிறிதும் பதட்டப் படவில்லை.  அந்தப் பாம்பினை புதர் மண்டி இருந்த பக்கத்து காலி மனையில் கொண்டு விட்டேன்.  கண் இமைக்குமுன் தன்னுடலை சற்றும் அசைவின்றி புதருக்குள் இழுத்துச் சென்றது அது.  என்ன கொள்ளை அழகு தெரியுமா பச்சைப் பாம்பு?
    ஓலைப் பாம்பு :  ஓலைப் பாம்பு நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகைப் பாம்பு.  “ஓலைப் பாம்பு ஒன்றினை அடித்தால் ஒன்பது வரும்”, என்பார்கள்.  இது ஓரளவு உண்மையே.  சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது, நாற்பதுகளில் திருச்சி, பொன்மலையில் நான் வசித்து வந்தபோது எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு நிறைய பாம்புகள் வரும்.  அடிக்கடி அடிப்போம். ஒரு முறை புதராக மண்டிக் கிடந்த கொடி சம்பங்கியில் ஒரு பாம்பினை அடிக்கப் போய் அங்கிருந்து நாலா பக்கமும் பல பாம்புகள் சிதறி ஓடின.  எங்களுக்கு ஒரே ஆச்சரியம், திகில்.  அப்படி நடக்கக் காரணம் ஓலைப் பாம்புகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை என்பதுதான் எனப் பின் நாட்களில் அறிந்தேன்.
    சாரைப் பாம்பு :  இதன் ஆங்கிலப் பெயர் ‘Rat snake’.  இப் பெயர் ஒரு காரணப் பெயர்.  இந்தப் பாம்பின் பிரதான உணவு எலிகள்.
    http://en.wikipedia.org/wiki/File:Yellowratsnake-1-.jpg
    சாரைப் பாம்புகளில் சுமார் 32 வகையான பாம்புகள் உள்ளனவாம்.
    இப்பாம்பு பற்றிப் பரவலாக நிலவி வரும் எண்ணம் இது நல்ல பாம்பின் காதலன் என்பது.  தவறான ஒரு கருத்து இது.  இப்படி ஒரு தவறான எண்ணம் வரக் காரணம் இதன் உருவமும் நிறமும் நல்ல பாம்பினைப் போல இருப்பதுதான்.
    பாம்புகளைப் பற்றிப் பார்த்தோம்.  அடுத்த கடடுரையில் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம்.
    (தொடரும்)
    Share
  • பாம்பைக் கண்டால்…. 2

    நடராஜன் கல்பட்டு

    சில இந்தியப் பாம்புகளைப் பற்றி சொல்வதற்கு முன் பாம்பின் உடலமைப்பில் உள்ள சில விசேஷங்கள் பற்றிக் கூற விரும்புகிறேன்.
    உடலுருப்புகள்  பாம்பின் உடல் குறுகலாய் நீண்டு ஒரு கொடி போல இருப்பதால் அதன் உள் உருப்புகளும் மெலிந்து நீண்டு இருக்கும்.  மற்ற மிருகங்களைப் போல் அதன் நுரை ஈரல்கள் இராது.  ஒன்றுடன் ஒன்று இணைந்திராமல், வலது ஈரல் நீண்டு உடலின் பாதி தூரம் வரை செல்லும்.  இடது நுரை ஈரல் குட்டையானது.  சில பாம்புகளில் இது இல்லாமல் கூட இருக்கலாம்.  அல்லது மூன்றாவதாக மிகக் குட்டியான ஒரு நுரை ஈரலும் இருக்கலாம்.  இவ்வாறு நீண்ட நுரை ஈரலைக் கொண்டதால் தான் பாம்பு மூச்சு விடுவது மனிதனையோ மற்ற மிருகங்களையோ போல இரண்டு மூன்று வினாடிகளில் முடிந்து விடாமல் பெரியதோர் பலூனிலிருந்து காற்றை விடுவது போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….ஸென்று பல வினாடிகள் நீடிக்கின்றது.
    மூத்திரக் காய்கள் இரண்டு உண்டு.  ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய்.
    ருசி பார்த்தல் பாம்பினால் செய்ய முடியாத ஒரு காரியம்.  காரணம் அதன் நாக்கு மணம் நுகர்வதர்க்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஒன்று.  அதனால் என்ன?  கண்ணால் பார்த்து மணம் நுகர்ந்தால் போதுமே தனக்குப் பிடித்த உணவினைக் கண்டு கொள்ள.
    கீழ் வரும் படத்தினைப் பாருங்கள் பாம்பின் உடலுள் உருப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று.
    பாம்பின் வாய்  பாம்பின் தாடைகள், நம் தாடைகளைப் போல் ஒன்றோடொன்று நிரந்தரமாக இணைக்கப் பட்டவை அல்ல.  தேவைப் படும் போது தாடை மூட்டுகள் கழன்று தாடைகளை வேண்டுமளவுக்கு விரித்துக் கொள்ள முடியும்.  அதனால் தான் பாம்பு தன் தலையை விட அதிக பருமனான இரையை கவ்வி விழுங்க முடிகிறது.
    இனப் பெருக்கம்  மிருகங்களை முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, குட்டி போட்டு பால் கொடுப்பவை என இரு வகையாகப் பிரிப்பார்கள்.  ஆனால் பாம்புகளில் மூன்று வகை உண்டு.  முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, முட்டையை வயிற்றுக்குள் வைத்திருந்து அது குஞ்சாக வெளி வரும்போது வெளிக் கொணரும் பாம்புகள் மற்றும் வயிற்றுக் குள்ளேயே கருவினுக்கு முட்டையின் வெள்ளைக் கருவினாலும், தொப்புள் கொடி போன்றதொரு அமைப்பின் மூலம் தன் உடலிலிருந்தே உணவு கொடுத்தும் வளர்த்துப் பின் குட்டி வளர்ச்சி அடைந்ததும் வெளிக் கொணரும் பாம்புகள் என்பவை அவை.
    பாம்பின் முட்டைகள் கோழி முட்டை போல கெட்டியான ஓடுகள் கொண்டவை அல்ல.  மெல்லிய தோல் போன்ற ஒன்றுதான் முட்டையின் சட்டை.
    பல பாம்புகள், நல்ல பாம்பு உட்பட, முட்டை இட்டபின் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.  ராஜ நாகம் முட்டைகளை கூடு அமைத்து அதில் இடும்.  மலப்பாம்பு சுமார் முப்பது முதல் நூறு முட்டைகள் வரை இட்டு அவற்றை ஒன்றாகச் சேர்த்து தன் உடலால் சுருட்டி இறுக்க அணைத்துக் கொண்டு அடை காக்கும்.
    “உஸ்ஸ்ஸ்ஸ்………தொந்திரவு பண்ணாதீங்க. நான் அடை காத்துகிட்டு இருக்கேன்.”
    பாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகள் என்று சொல்வார்கள்.  அதாவது அவற்றின் உடல் உஷ்ணம் நம் உடல்கள் போல ஒரே நிலையில் இருக்காது.  வெளியெ என உஷ்ணமோ அதே நிலையில் இருக்கும்.  ஆனால் அடை காக்கும் மலைப் பாம்பு தன் உடலின் உஷ்ணத்தை முட்டைகள் குஞ்சுகளாக மாறத் தேவையான உஷ்ண நிலையான 88 முதல் 90 டிகிரி ஃபேரன்ஹீட் வரையான நிலையில் வைத்துக் கொள்கிறது.  எப்படித் தெரியுமா?  தன் உடலில் உள்ள தசைகளை இறுக்கி விரிப்பதன் மூலம் இந்த வேலையைச் செய்கிறது மலைப் பாம்பு.
    விரியன் பாம்புகள் குட்டி போடும் இனம்.
    தென் அமெரிக்கப்  பாம்புகளான பச்சை அனகொண்டாவும் போ கன்ஸ்ட்ரிக்டாரும் வயிற்றுக் குள்ளேயே முட்டையியனை வைத்து முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு, முட்டைக்குள் கருவினைச் சுற்றி இருக்கும் பதார்த்தம் மூலமாகவும், தன் உடலில் இருந்தே தொப்புள் கொடி போன்ற உருப்பின் வழியேயும் உணவளித்து பின் கரு குட்டியாக வளர்ச்சி அடைந்தவுடன் அதை வெளிக் கொணரும்.
    பச்சை அனகொண்டா
    போ கன்ஸ்ட்ரிக்டார்
    பாம்புகள் புணருதல்  நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் புணர்ந்துதான் பின் நல்ல பாம்புகள் முட்டை இடுகின்றன என்று சிலர் சொல்வார்கள்.  இது ஒரு தவறான கருத்து.  ஒரே இனப் பாம்புகள் தான் புணர்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன.
    கீரியும் பாம்பும் : பாம்பின் ஜன்ம விரோதி கீரிப் பிள்ளை.  கீரியின் உணவு பாம்பு.  கீரி பாம்புடன் இயற்கைச் சூழலில் சண்டை போடுவது பார்க்க வேண்டிய ஒன்று.  கீரி தன் அடர்ந்த ரோமங்களை சிலிர்த்துக் கொண்டு தன் உருவத்தினை இரு மடங்குக்குமேல் ஆக்கிக் கொள்ளும்.  பின் பாம்பின் பாதி உடலைப் பிடித்துக் கவ்வுவது போல் பாசாங்கு செய்யும்.  பாம்பு அதனைக் கொத்த வரும்போது தன் தலையைத் திருப்பிக் கொண்டு விடும்.  பாம்பு தன் கண்ணுக்கு உடலெனத் தெரியும் கீரியின் ரோமங்களைத் தாக்கும்.  ஆனால் அதன் விஷப் பற்கள் கீரியின் உடலைத் தாக்காது.  ரோமங்களைத் தான் தாக்கும்.  இப்படியே பல முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சுற்றிச் சுற்றி வந்து கீரி பாம்பினைக் களைப்படையச்செய்யும்.  பாம்பு முற்றிலுமாகக் களைத்திருக்கும் போது கீரி அதன் தலைக்கு சற்று கீழே கவ்விக் கடிக்கும்.  பாம்பின் உயிர் போனபின் மெல்ல மெல்லத் தலையைத் தவிற மற்ற பாகங்களைத் தின்று விடும்.
    பாம்பின் எதிரி கீரி
    பாம்பின் ஊணவு எலி, பல்லி, பறவைகள், சிறிய  விலங்குகள்.  அது சரி.  பாம்பு யாருக்கு உணவு?  கழுகு, கருடன், கீரி இவற்றுக்கு மட்டும் தானா?
    இல்லை.  பாம்பு மனிதனுக்கும் உணவு.  கிழக்காசிய நாடுகளில் பலருக்கு பாம்பு மிகப் பிடித்த உணவு.  தலையை வெட்டி விட்டால் பாம்பு ஒரு மாமிசப் புடலங்காய்தானே?
    பாம்பின் ரத்தத்தைக் குடித்தால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என நம்புவோரும் உள்ளனர் கிழக்காசியாவில், அதுவும் பாம்பு உயிருடன் இருக்கும்போதெ அதன் உடலில் இருந்து எடுக்கப் படும் ரத்தம்!
    “கொடிய விஷமுள்ள பாம்பு எது, விஷமற்ற பாம்பு எது என்று கண்டு பிடிக்க முடியுமா?” என்றால் முடியும் பாம்பின் தலையைப் பார்த்துக் கண்டு பிடிக்கலாம்.
    விஷப் பாம்பைக் கண்டறிதல்
    1. விஷமற்ற பாம்பின் கண்களின் பாப்பா வட்ட வடிவில் இருக்கும்.  விஷமுள்ள பாம்புகளின் கண்களில் இது நடுவில் சற்றே அகன்று மேலிருந்து கீழாக இரு கோடுகள் போலிருக்கும்.
    2.  விஷமற்ற பாம்பின் மேல் தாடையில் கண்களுக்குக் கீழாக செதிள்கள் ஒரு வரிசைதான் இருக்கும்.  விஷமுள்ள பாம்பிற்கு இங்கு இரண்டு மூன்று வரிசைகள் செதிள்கள் காணப்படும்.
    3.  விஷப் பாம்பின் மேல் தாடையில் நாசித் துவாரங்களின் பக்க வாட்டில் சிறிய பள்ளம் இருக்கும்.
    ஆனால் ஒன்று.  பாம்பு நாம் பார்ப்பதற்காக தலையைக் காட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்ய?
    பாம்பு ஒருவரைக் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாமா?
    (தொடரும்)
    Share