Month: February 2016

  • காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச் மாதக் கூட்டம்

    காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச் மாதக் கூட்டம் எதிர்வரும் 5.3.2016 ஆம் நாளன்று நடைபெற உள்ளது.

    இந்நிகழ்வில் கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் இசைப் பட்டிமண்டபம் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற உள்ளது. கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே என்ற அணியில் மகா. சுந்தர் வாதாடுகிறார். அறவியல் பாடல்களிலே என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் வாதாடுகிறார். எப்பக்கம் என்று நடுவர் தீர்ப்புரைப்பார். இந்நிகழ்ச்சிக்கு காரைக்குடி முத்துப்பட்டணம் நா. வீர குடும்பத்தாரும் கம்பன் அன்பர் ஒருவரும் கொடை தந்து உதவியுள்ளனர். அனைவரும் வருக. எப்போதும் போல் சிற்றுண்டி உண்டு.

    கம்பர்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    0e68005e-b7be-4a30-a5db-09b498a83ad3

    நீல யமுனையில் நீந்திய கோபியர்
    சேலைப் புதையலை சேகரித்தோய் -நாளை
    சபையில் துரோபதை சோகம் களைந்து
    அபயம் அளிக்கத்தா னே….
    நிறத்துக்கு நீலம் நினைப்புக்கு லீலை
    கருத்துக்கு கொள்மனமே கீதை -சிரத்துக்குள்
    சீர்மல்கும் சீதரனை சிந்திக்க ஜீவன்கண்
    ணீர்மல்க ஆன்மாவா கும்….

    நீலம் அரவணைக்க நிர்மூலம் ஆகிடும்
    காலம் இடம்பொருள் ஏவல்கள் -கோல
    விடமுறங்கி ஆலில் விளையாடும் பிள்ளை
    உடனிருக்க உற்சாக ஊற்று….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல்

     

    எல்லாத் திறத்தும்இறப்பப் பெரியாரைக்
    கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின்
    நிறைந்தார் வளையினாய்! அஃதால் எருக்கு
    மறைந்துதியானை பாய்ச்சி விடல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரை,
    கல்லாத் துணையார் தாம் கைப்பித்தல் சொல்லின்,-
    நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு
    மறைந்து, யானை பாய்ச்சிவிடல்.

    பொருள் விளக்கம்:
    எல்லா வகைத் திறனும் கொண்ட மேன்மை பொருந்திய அறிஞர்களை, கல்லாமையைத் துணையாகக் கொண்ட கற்றறியாதோர், தங்கள் அறிவின்மையில் மூழ்கி மறைந்து கொண்டு, வெறுப்பேற்றும் சொற்களை உமிழ்வது, அழகு நிறைந்த ஒலிக்கும் வளையல்களை அணிந்தவரே; அத்தகைய செயல், எருக்கம் புதரின் பின் மறைந்து கொண்டு யானையைச் சீண்டி சினமூட்டும் செயல் போன்றது (சிறிய எருக்கம் புதரை பாதுகாப்பு என்று நினைத்து, அதன் பின் மறைந்து கொள்ளும் அறிவிலி, யானையைச் சினம் கொள்ளச் செய்தால் யானை மிதித்தே அழித்துவிடும், ஆதலால் அது துன்பம் வரவழைத்துக் கொள்ளும் செயலென அறிக)

    பழமொழி சொல்லும் பாடம்: மேன்மை மிகு அறிஞர்களை, அறிவிலிகள் துன்புறுத்த எத்தனித்தால் அது தங்கள் அழிவைத் தேடிக் கொள்ளும் செயலாக அமைந்துவிடும். இக்கருத்தை வள்ளுவர்,

    கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
    ஆற்றாதார் இன்னா செயல். (குறள்: 894)

    ஆற்றல் உள்ளோரிடம், அந்த ஆற்றல் இல்லாதவர் தீங்கு விளைவிக்க முயல்வது மரணத்தைக் கையசைத்து அழைத்து வலிந்து ஏற்றுக்கொள்வது போன்றதாகும் என்கிறார்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (185)

    – சக்தி சக்திதாசன்.

     

     

    daily-mail-graph

     

     

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.
    சென்றவாரம் இங்கிலாந்து அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு சிக்கலின் ஆரம்பத்திற்கான வாரம் என்று குறிப்பிட்டு எழுதியிருந்தேன். நான் மடலை வரைந்த அந்நாளே இங்கிலாந்துப் பிரதமர் திரு.டேவிட் கமரன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அங்கத்துவத்தை பிரித்தானிய அரசு நீடிப்பதற்குத் தேவையான அடிப்படை மாற்றங்களைக் கோரி அதற்கான உடன்படிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஏனைய ஐரோப்பியத் தலைவர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

    அவரது கோரிக்கைகளுக்கு ஏனைய 27 ஐரோப்பிய தலைவர்களும் உடன்படுவார்களா? இல்லையா? என்பதுவே கேள்விக்குறியாகவிருந்தது. இவ்வுடன்படிக்கையைப் பெற்றுக்கொள்வது பிரதமர் டேவிட் கமரனுக்கு ஒரு அத்தியாவசிய தேவையாகவிருந்தது. அவரது கோரிக்கைகளை ஏனைய ஐரோப்பிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டால்தான் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான ஆதரவைப் பிரதமர் நல்க முடியும் என்பதுதான் அவருக்கு முன்னாலிருந்த யதார்த்த நிலை.

    டேவிட் கமரன் எதிர்பார்த்தபடி போனவாரம் வியாழக்கிழமை அவரின் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் அவருக்கேற்றபடி அமையவில்லை. இரவோடிரவாக தொடர்ந்த பேச்சுவார்த்தை காலை 4.30 வரை நீடித்தும் அனைவரிடமும் இணக்கம் காணப்படவில்லை. ஆயினும் முடிவு டேவிட் கமரனுக்குச் சாதகமாக அமையும் எனும் ஓர் பொதுக்கருத்து நிலவியது. அதற்கான காரணம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் விரும்பவில்லை என்பதுவே.

    பேச்சுக்கள் மீண்டும் காலை 10 மணியளவில் தொடங்கி மாலைவரை நீடித்தது. வெள்ளிக்கிழமை மாலை டேவிட் கமரனது கோரிக்கைகள் ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளினதும் தலைவர்களினால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது எனும் அறிவித்தல் கிடைத்தது. நடைமுறைக்கு மாறாக அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை கூட்டப்பட்டு இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விட்டன என்பதை அறிவித்தார்.

    அதனை அடுத்து பிரதமரின் உத்தியோக வாசஸ்தலத்தில் நிருபர்களைச் சந்தித்த பிரதமர் தனது கோரிக்கைகளை பிரித்தானிய ஒன்றியத்தின் ஏனைய அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதால் தனது அமைச்சரவை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கூடாது என்று சிபாரிசு செய்வதாகவும், விலகுவதா, இல்லையா? என்பதற்கான மக்களின் சர்வஜன வாக்கெடுப்பு வருகிற ஜூன் மாதம் 23ம் திகதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.

    அதேநேரம் தனது அரசாங்கம், தனது கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தினர்கள் தமது கொள்கையான ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருப்பது என்பதைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தப் போவதில்லை என்றும் ஒவ்வொருவருக்கும் தாம் என்ன எண்ணுகிறார்களோ அதன் பிரகாரம் வாக்களிக்கும் சுதந்திரம் நல்குகிறோம் என்றும் அறிவித்தார். அரசாங்கத்தின் 29 அமைச்சர்களில் 6 பேர் பிரதமரின் கருத்துக்கு எதிரான கருத்துக்கு அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் எனும் கோரிக்கைக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

    மதின்மேற்பூனை போல இருந்த லண்டன் மேயர் திரு பொரிஸ் ஜான்சன் (கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர்) எந்தப் பக்கம் பாயப் போகிறார் என்பதுவே அனைத்து ஊடகவியாளார்களுக்கும் கேள்விக்குறியாக இருந்தது. அவரை நோக்கி வீசப்பட்ட வினாக்களிலிருந்து அதுவரை சாதுரியமாகத் தப்பி வந்த அவர் தானும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேற வேண்டும் என்று வாதிடும் சாரருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்து விட்டார்.

    இவரது இந்த முடிவு தனது சொந்த நலனை முன்வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது இந்தப் பாராளுமன்றத்தின் முடிவோடு தானும் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக டேவிட் கமரன் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் கட்சித் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலேயே பொரிஸ் ஜான்சன் இயங்குகிறார் என்பது அவர்களின் கருத்து. இதற்குக் காலம் தான் பதில் கூற வேண்டும்.

    அரசியல் அரங்கமே வரும் நான்கு மாதங்களும் ஒரு இடியப்பச் சிக்கல் போலத் தென்படுகிறது. ஏன் என்கிறீர்களா ? அரசாங்கத்துக்குள் இந்த ஐரோப்பிய அங்கத்துவத்தினால் பாரிய பிளவு, அதே சமயம் எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற அங்கத்தினர்கள் பிரதமரோடு இணைந்து பிரசாரம் செய்யும் ஒரு நிலை. இத்தகைய ஒரு சூழலில் பிரதமருக்கு சாதாரண நாளுக்கு நாள் நடைபெறும் அரசாங்க விடயங்களுடன், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ கொள்கையில் எதிர்த்துப் பிரசாரம் செய்யும் தன்னுடைய அமைச்சர்களுடன் சேர்ந்து இயக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை.

    எத்தகைய வடிவிலான பிரச்சாரமாக இருந்தாலும் அது நாகரீகமாக, கெளரவமாகத் தனிப்பட்ட தாக்குதல்கள் தவிர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அரசாங்கச் சார்பில் கருதப்படுகிறது. வெறும் வாயையே மெல்லுவதில் வல்லுநர்களான ஊடகவியலாளர்கள் அவல் கிடைத்தால் சும்மா விட்டு விடுவார்களா என்ன ?

    ஆரம்பிச்சுட்டாங்கய்யா ! பிரதமரின் கருத்துக்களைக் கேட்டு விட்டு, அவரை ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பில் எதிர்த்துப் பிரசாரம் செய்யும் அமைச்சர்களிடம் “என்ன பிரதமர் அப்படிச் சொல்லுகிறார் ? நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள். அப்படியானால் பிரதமர் எம்மை ஏமாற்றுகிறாரா என்ன ” என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு குளத்தினுள் கல்லை விட்டெறிந்து வலயங்களைத் தோற்றுவித்து அதில் மீன்பிடிக்க எண்ணுகிறார்கள்.

    அடிப்படைக் கொள்கைகளில் முற்றிலும் நேர்மாறான கொள்கை கொண்ட அரசியல்வாதிகள் இந்த ஒரு அம்சத்தில் மட்டும் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யும் வினோதங்கள் நிகழ்கின்றன. மற்றுமொரு சிக்கலையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. நடந்து முடிந்த ஸ்காட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பைப் பற்றிப் பலர் அறிந்திருக்கக்கூடும். ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் குறைந்த வித்தியாசத்தினால் ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைந்திருக்க வேண்டும் எனத் தீர்மானித்தது.

    வரப்போகும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? இல்லையா? எனும் சர்வஜன வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகள் விலக வேண்டுமெனத் தீர்மானிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதேநேரம் இதற்காக ஸ்காட்லாந்து நாட்டில் விழுந்த வாக்குகள் பெரும்பான்மையாக ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று விழுந்திருந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஸ்காட்லாந்தின் மாநில அரசாங்கம் விட்டு விடுமா என்ன? நமது மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க விரும்புகிறார்கள் ஆனால் முழுவதுமான ஐக்கிய இராச்சிய வாக்கெடுப்பு வெளியேறத் தீர்மானித்தால் எப்படி அது ஜனநாயகமாகும் ? இதனால் ஸ்காட்லாந்து தனித்து போவதுதான் முறை என்று மற்றொரு தமது தனிநாட்டுக்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவார்கள் அதில் அவர்கள் வெல்வதற்கான சாத்தியக் கூறுகளும் உண்டு.

    அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்ன ? என்பதனையும் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல இத்தகைய ஒரு அதிமுக்கிய தீர்மானத்தை ஜனநாயக அடிப்படையில் மக்களின் கையில் அரசாங்கம் கொடுத்திருக்கிறது. உணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிக்காமல் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையுமாகிறது.

    பொறுப்பான செயற்பாடுதான் ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படை.

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவி: http://www.dailymail.co.uk/news/article-2803377/Support-staying-European-Union-surges-23-year-high-thanks-rise-Ukip.html

    Share
  • இட ஒதுக்கீடுகளும், போராட்டங்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    குஜராத்தில் பட்டேல் இனத்தவரின் போராட்டங்களும், ஹரியானாவில் ஜெட் இனத்தவரின் போராட்டங்களும், அவை மேற்கு உத்திர பிரதேசத்தில் பரவக்கூடிய வாய்ப்புகளும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெட் இனத்தவரின் ராஜஸ்தான் போராட்டங்களும் அங்கு ஆட்சியாளர்களின் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளால் தீர்க்கப்பட்டோ அன்றி ஒடுக்கப்பட்டோ பிரச்சனைகளை அப்போதைக்கப்போது அல்லது தற்காலிகமாக மட்டுமே தீர்க்கப்படுகின்றன. நடுவண் அரசோ அல்லது மாநில அரசுகளோ மனித வள மேம்பாட்டுக் கொள்கைகளில் நிலையானதொரு முடிவை எடுப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. குறிப்பிட்ட சாரார்களுக்கான ஒதுக்கீடு என்பது முன்பெல்லாம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும், அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வித் துறையிலும் வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகியும் நமது மக்கள் வளர்ச்சியடையாமல் தாழ்ந்த நிலையில் உள்ளார்கள் என்பதை பறைசாற்றும் விதமாக அரசே இப்படி ஒதுக்கீடு வழங்குவது தேவையா என்று சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

    தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போன்ற நிலையே உருவாகிக் கொண்டிருப்பதும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடக்கூடியது. போராட்டம் என்ற பெயரில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக ஆயிரம் ரயில்கள் நிறுத்தப்பட்டன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக இராணுவத்தை வானவெளி மூலமாகவே கொண்டுவர வேண்டியுள்ளது வெட்கப்பட வேண்டிய நிலை அல்லவா. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதோ ஒரு வகுப்பினர் போராட்டங்களை நடத்தினால் அரசு நிலை குலையும் நிலை ஏற்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதற்கான தீர்வு என்ன என்பதை முறையாக சிந்தித்தால் மட்டுமே இதிலிருந்து முழுமையாக விடுபட முடியும். அதற்கு முதல் கட்டமாக , கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக அமர்ந்து பேசி பாரபட்சமற்ற முடிவை எடுக்க வேண்டியது அவசியம். இட ஒதுக்கீடு என்பது இனியும் தேவையா என்று முடிவெடுக்க வேண்டிய காலகட்டம் இது. திறமை உள்ளவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வெற்றி பெற வேண்டுமேயொழிய சமுதாயம், நாடு வளர்ச்சியடைவதற்கு பின்வழிகளை அரசு ஏற்கக்கூடாது. பல சமுதாயங்கள் இன்றளவிலும் வளர்ச்சியடையாமல் இருக்கும்பட்சத்தில் பொருளாதார உதவிகள் மூலம் இது போன்று போட்டியிடுவதற்குரிய திறமைகளை அதிகப்படுத்த வேண்டுமேயொழிய தேவையான திறமையற்றவர்கள் இந்த ஒதுக்கீடுகள் மூலமாக உயர்மட்ட பொறுப்புகளுக்கு வரும்பொழுது நாட்டு வளர்ச்சியும் பாதிக்கக்கூடும். உச்சக்கட்டத் தேர்வின்போது சம அளவிலான மதிப்பெண்களை தேர்வில் பங்குபெறும் நான்கு பேரும் பெற்றிருந்தால் அந்நிலையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கோ, மாற்று வளர்ச்சியடையாத சமுதாயத்தை சேர்ந்தவருக்கோ அந்த வாய்ப்பை அளித்தால் சமுதாயம் முன்னேறுவதோடு நாடும் வளர்ச்சியடையும். இதை விடுத்து அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ இட ஒதுக்கீடு என்ற திட்டத்தை நிறைவேற்றுவது என்பது தவறான வழி வகைகளை ஏற்படுத்தும் என்பதோடு இதனால் நாட்டின் வளர்ச்சியும் பாதிப்படையும் என்பதும் உறுதி.

    Share
  • நமக்கு நாமே எதிரிகள்

     சத்தியமணி

     

    நமக்கு நாமே எதிரிகள்

    நாம்தான் தேச துரோகிகள்

    உண்மையில் குற்றவாளிகள்

    உணர்ந்தால் இலை பிரதிவாதிகள்

     

    நிறங்களை இனங்களை கலக்க‌விடாது

    பிரித்து கலவரம் காட்டினோம்

    திறங்களை பார்த்து வாய்ப்பளிக்காது

    பள்ளியை சுடுகாட்டாக்கினோம்

    வகுப்பு என்பதன் பொருளதை மாற்றி

    வீதியில் வெறியுடன் ஆடினோம்

    சிறப்பு சொல்லிடும் பல்கலைகழகம்

    சிதைத்து சிறைகளாய் மாற்றினோம்

     

     

    பணமும் பகட்டும் வசதியும்காண‌

    விட்டு அயலகம் ஏகினோம்

    புழுங்கும் மனதை திருந்தவிடாது

    அங்கே குடிமகனாகினோம்

    கலங்கும் தாயகம் வதங்கிட கண்டும்

    காணா திருகுரு டாகினோம்

    கற்க கசடற கற்ற பின்னாலே

    விற்ற கலைபொருளாகினோம்

     

     

    அழுகிய காய்களை கறிகளில் சேர்த்து

    அமுதாய் உண்பவர்  ஆகினோம்

    அழுக்கினில் கிடைத்த அவலங்களோடு

    அணிவகுப்புகளை பாராட்டினோம்

    குலப்பட மெடுத்து கலப்படம் மாட்டி

    கும்பிடும் பக்தரும் ஆக்கினோம்

    செவிப்பட கதறிட செப்புகிறாள் தாய்

    மண்ணுக்கு ஏதுரை செய்யுவீர்

     

     

    லஞ்ச ஒழிப்போம் இன்றெனச் சொல்லி

    அஞ்சலுடன் கை அலம்பினோம்

    வஞ்சகம் அறுப்போம் என்றெனச் சொல்லி

    வயதினர் விடுதிகள்  காட்டினோம்

    தஞ்சம் என்றென வரும் அரவுகளை

    நஞ்சுடன் வாழக் காப்பாற்றினோம்

    மிஞ்சும்படி இனி மிச்சம் வைக்காது

    எல்லாம் கெட கொண்டாடினோம்

     

    தாயைப் பழித்து வாழ்ந்தாரென்ற‌

    சரித்திர முண்டோ சொல்லுவீர்

    தாய்மண் அழிக்க சிறந்தாரென்ற‌

    தகவலும் முண்டோ சொல்லுவீர்

    அடிமை அழித்து குடியரசாகியும்

    அவலப்பெண்ணா ? பாரதம்

    உரிமை கோரி உலையில் போட்டீர்

    பெருந்தகை யாளரே! வாழியே

    Share
  • தேவிதரிசனம்

    ஒரு அரிசோனன்

    என் கண்ணைப் பறித்தன அந்த பளபளக்கும் வான்நீலத் தாவணியும், கருநீலப் பட்டுப்பாவாடையும்.  அவற்றை அணிந்துவந்த அழகுதேவதை என் கண்களையும், கருத்தையும் தன்பால் கட்டிக் கவர்ந்திழுத்தாள்.  உடனே, என் கால்கள் தாமாகவே நின்றுபோயின.

    “டேய், கண்ணா, ஏண்டா சடன் பிரேக் போடறே?  இப்பவே பந்தி ஃபுல் ஆகறமாதிரி இருக்கு.  நீபாட்டு பராக்குப் பார்த்துக்கிட்டு நின்னா, சாப்பாட்டுக்கு ரெண்டாம் பந்திக்குக் காத்திருக்கவேண்டியதுதான்!” என்று என்னை இழுத்தான் என் வயதொத்த என் சின்னமாமன் ராஜு.

    “நீ போய் உக்கார்ந்து, எனக்கும் உன்பக்கத்துலே இடம் போட்டுடேண்டா, ராஜு!” என்று அவனை அனுப்பமுயன்றேன்.  ஒரே வயதொத்தவர்கள் என்பதால் ‘வாடா, போடா,’தான்;  மாமன், மருகன் என்ற பேதம் மறைந்து நட்பு நிறைந்துநின்றதே அதற்குக் காரணம்.

    “இங்கெ என்ன வெட்டிமுறிக்கற வேலை உனக்கு இருக்கு, கல்யாணச் சாப்பாட்டை ஒருகை பார்க்கறதைவிட?  சரி, இடம்போட்டுத் தொலைக்கறேன்.  நீ உன்னோட வெட்டிமுறிக்கற வேலையை முடிச்சுட்டே வந்துதொலை!” என்று பலவிதமான, எழுதக்கூடாத வார்த்தைகளால் என்னை அர்ச்சனை செய்து, எனக்கு ஆசிவழங்கியவாறே செல்லத்துவங்கியவனை மறுகணமே பின்தொடர்ந்தேன், “ராஜூ,  நில்லுடா, நானும் வரேன்,” என்றவாறே.

    என் நீலத்தேரும் பந்தியைநோக்கி நகர ஆரம்பித்ததே அதற்குக் காரணம்.

    அந்தத் தேர் அசைந்து அசைந்து செல்வதைப் பார்த்ததும் என் நினைவுக்கு வந்தது, சில நாள்கள்முன்பு தமிழாசிரியர் நடத்திய கவிதைகளின் வரிகள்தான்!

    “இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிக்க, வட்டில் சுமந்து மருங்கசைய…”

    அத்துடன், அம்பிகாபதி படத்தில் வந்த,

    “சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
    துற்றே அசையக் குழை ஊசலாடத் துவர்கொள் செவ்வாய்
    நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின்
    பொற்றேர் இருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே!”

    என்ற பாடலையும் என் உதடுகள் தானாகவே முணுமுணுத்தன.

    என்னைத் திரும்பிப்பார்த்த என் மாமன் ராஜு, “உனக்கு அரணைப் புத்திடா, கண்ணா!  சித்தம்போக்கு சிவன்போக்குடா உனக்கு!  ஒழுங்கா சாப்பிட வந்துதொலை!  சமையல் வாசனை மூக்கைத் துளைக்குது.  வெங்காய சாம்பார் மணம் என்னை அப்பிடியே தூக்குது!” என்று உண்ணவிருக்கும் திருமணவிருந்தையே எண்ணி மகிழ்ந்தவாறே முன்சென்றான்.

    எனது பாடல் அவன் காதுகளில் விழவேயில்லை.  பசியினால் அவனது காதுகள் அடைத்துப்போயினவா, அல்லது, “வயிற்றுக் குணவு இல்லாதபோது செவிக்கும் சிறிது ஈயப்படும்” என்ற அவனது சித்தாந்தமா என்று நானறியேன்.

    அந்த நீலத்தேரின் நடையழகை, துவளும் இடையழமை இரசித்தவாறே நடந்தேன்.

    அழகு, அழகு கொள்ளையழகு.  மனதிற்குள்ளும், உடலுக்குள்ளும் ஏதோ ஓர் இனம்புரியாத கிளர்ச்சி.  அவள் நடக்க நடக்க, நெளிந்தாடும் பாம்பையொத்த குஞ்சலம் வைத்த பின்னல் என்னைக் கட்டியிழுதத்தைச் சொல்லவா, பக்கவாட்டில் அசையும் பின்னழகில் நான் கிறங்கி அதற்கேற்ப என் தலையை என்னையும் அறியாமல் ஆட்டி மகிழ்ந்ததைச் சொல்லவா, அலையலையாக வளைந்திருந்த கருங்குழலில் என் இரும்பு மனம் பழுக்கச் சிவந்து வளைந்ததைச் சொல்லவா?  என் மனம் என்னை விட்டுவிட்டு அவளுடன் நடைபயின்றது.

    கருங்குழலி என்பது ஆகுபெயர் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை” என்று தமிழாசிரியர் கற்பித்த இலக்கணம் நினைக்காமலே என் நினைவுக்கு வந்து, இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டான அழகி இவள் என்ற எண்ணத்தை என் மனதில் இழையோடவிட்டது.

    அப்பொழுது எதிர்பாராவண்ணம் திரும்பிய நீலத்தேர் தன் முத்துப்பற்கள் தெரிய புன்னகை செய்தாள்.  நான் அங்கேயே ஏன் மயங்கிவிழவில்லை என்று எனக்கே தெரியவில்லை.

    நடுவில் சீரான, நேர்கோடான வகிடு, அதிலிருந்து இருபுறமும் வளைந்துவளைந்து செல்லும் கரிய கேசம் காதுகளைப் பாதி மூடியவண்ணம் பின்சென்று மறைந்தது.  மணிபதித்த நெற்றிச்சுட்டி, காதில் குண்டலங்கள் அவள் திரும்பியதால் ஆடிய ஆட்டத்தை இன்னும் நிறுத்தவில்லை.  அந்த ஆட்டத்தில் நான் அக்குண்டலங்களோடு ஊஞ்சலாடினேன்.

    சாயமே இல்லாமல் இலேசாகச் சிவந்திருந்த உதடுகளில் உள்ள ஈரப்பசையில் என் உள்ளம் அட்டையாக ஒட்டிக்கொண்டது.  இயற்கையாகவே சிவந்திருக்கும் உதடுகளை முதன்முறையாக அப்பொழுதுதான் பார்த்தேன்.  அதுவரை – உதடுகள் கடவுளால் உருவாக்கப்பட்டதற்குக் காரணம் – மண்டையோடுமாதிரி நமது பற்கள் மாதிரி வெளியே தெரியாமலிருக்கவும், பேசுவதற்காகவும், உண்ணுவதற்காகவும், நமது வாயைத் திறக்கவும், மூடவும் — அதற்குமேல் அவற்றைப்பற்றி சிந்திக்கவும் தேவையில்லாத உறுப்புகள் அவை என்பதைத்தவிர வேறெந்த எண்ணமும், என்னைப்பொருத்தவரை என் மனதில் தோன்றியதில்லை.

    ஆனால், முகத்திற்கு அழகுசேர்க்கும் — கண்களுக்கு இணையான — அவள் கண்களைப்பற்றி அடுத்தபடி சொல்லுகிறேன் – உள்ளத்தைக் கவ்வியிழுக்கும் உறுப்பு என்ற எண்ணம் முதன்முறையாக என்னிடம் எழுந்தது.

    அவள் என்னைப் பார்த்துத்தான் புன்னைகை செய்கிறாள், உடனே அவளருகில் செல்வோம் என்ற எனது ஆர்வத்திற்கு அணைபோட்டேன்.  அடுத்தகணம் அப்புன்னைகை எனக்கல்ல, என்னைத்தாண்டி ஓடி அவளருகில் சென்று அவள் தோளில் உரிமையுடன் கையைப்போட்டுக்கொண்ட அவளது தோழிக்குத்தான் என்றறிந்ததும், என் உற்சாகம் ஈரப்பட்டாசாகப் பிசுபிசுத்தது.

    உடனே என்னையும் அறியாமல் ஒருவிதமான பொறாமை உணர்வும் தோன்றுவதை என்னால் தடுக்கமுடியவில்லை.

    “சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை,” என்று எப்பொழுதும் என்னை உயர்த்திப்பேசும் என் பாட்டியின் சொற்கள் என்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தாலும், பெண்ணாகப் பிறந்திருந்தால், அந்த நீலத்தேரின் அருகில் சென்று பேசியிருக்கலாமே, அதிலும், அவளின் தோழியாகப் பிறந்திருந்தால், அவளின் தோளில் உரிமையாகக் கையைப்போட்டு, அவளுடன் சென்றிருக்கலாமே என்ற பொறாமைகலந்த நப்பாசை ஒருகணநேரம் என்னுள் தோன்றுவதையும் என்னால் தடுக்க இயலவில்லை.

    “இங்கே உட்காரலாமாடா, கண்ணா?  இங்கேதான் முதல்ல பரிமாறுவாங்க.  எதுவும் விட்டுப்போகாம கிடைக்கும். என்ன, சரியா நான் சொல்றது?” என்று தனது உணவுப்பந்தி நுணுக்கத்தை எடுத்துக்காட்ட முயன்றான் என் மாமன் ராஜு.

    “இருடா ராஜு, இங்கே வேண்டாம்.” என்று என்னையும் அறியாமல் என்னிடமிருந்து பதில் வந்ததும், என்னை வியப்புடன் பார்த்தான் ராஜு.

    “என்னடா ஆச்சு கண்ணா, உனக்கு?  பித்துப் பிடிச்சுடுச்சா?  இந்த இடத்துக்கு என்ன குறைச்சலாம்? கொஞ்சநேரமா உன் போக்கு சரியாவே இல்லே!” என்று தன் அதிருப்தியைக் தெரிவித்துக்கொண்டான்.

    “அங்கே வாடா, போகலாம்,” என்று நீலத்தேர் — வேண்டாம், நீலக்குயில் என்று சொல்லலாமே இனிமேல் – அவள் உட்கார்ந்த இடத்தைநோக்கி விரைந்தேன்.  அவளும், அவள் தோழியும் அமர்ந்த இடத்திற்கு எதிரில் அமர்ந்தேன், அங்கு அமரமுற்பட்ட ஒரு முதியவரை முந்தித் தள்ளிக்கொண்டு.

    “ஏண்டாப்பா தம்பி, நான்தான் இங்கே உட்கார வரேன்னு பார்த்தும், சினிமாக் கொட்டகைக்கு டிக்கெட் வாங்கப்போறவன்மாதிரி இடிச்சுதள்ளிண்டு உட்காரறியே?” என்று முதியவர் கேட்டது என் காதில் விழவேயில்லை.  அந்த நீலக்குயில்தான் என்னில் நிறைந்திருந்தாள்.

    “வரவர இந்தக்காலப் பசங்களுக்கு மரியாதை மட்டு எதுவும் இல்லாமப்போச்சு!” என்று குறைப்பட்டுக்கொண்டவாறே நகர்ந்தார் அம்முதியவர்.

    என்னை என் நீலத்தேரின், நீலக்குயிலின், நீலாயதாட்சி தேவியின் தரிசனத்திலிருந்து தடுத்தது ஓருருவம்.  அதை என் இடதுகையால் விலக்க முற்பட்டேன்.

    பட்டென்று என்முதுகில் ஒரு அடி விழுந்தது.  நிமிர்ந்துபார்த்தேன்.  என் மாமன் ராஜு.

    “உன்னை நம்பி வந்தால் நீ சுப்பிரமணியசாமி மயில்வாகனத்தில் உக்கார்ந்தமாதிரி இங்கேவந்து உக்காந்திருக்கே!  எங்கேயும் இடமில்லே, நகருடா கொஞ்சம்,” என்றபடி என்னை தம் பிடித்து நகர்த்தி, தானும் என்னருகில் அமர்ந்தான்.  அதையும் நான் உணரவேயில்லை. என் மனதைக் கவர்ந்த தேவியின் தரிசனத்தில் மீண்டும் ஆழ்ந்தேன்.

    அவள் தன் தோழியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.  எதையோ சொல்லிவிட்டு, மறுதலிப்பதுபோலத் தலையை இங்குமங்கும் ஆட்டினாள்.  உதட்டைச் சுழித்துக்கொண்டாள்.  அப்பொழுது அவள் காதில் சுழன்றாடிய குண்டலங்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன், நான் அவளது குண்டலங்களாக இல்லாதுபோனேனே என்று.

    அவளது கண்கள் – ஆகா, பால்கிண்ணத்தில் நீந்தும் கருவண்டுகளாக அவளது கருவிழிகள் இங்குமங்கும் அலைந்தன.  ஒருதரம் பார்த்தாலேபோதும், உடனே பார்த்தவரைத் தன்னிடம் ஈர்த்துக்கொண்டுவிடும் அகண்ட கருவிழிகள்! அவ்விழிகளைப் பார்த்து அக்கடைக்கண் அமுதைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று எண்ணச்செய்யும் கருணைததும்பும் விழிகள்.

    அப்படிப்பட்ட அவ்விழிகள், அவளையே அள்ளிப்பருகிக்கொண்டிருக்கும் என்மேல் வந்து ஒருகணம் நிலைத்தன.  அதில் ஒரு சிறுபகுதிநேரம் என் கண்களுடன் கலந்தன.  அப்பொழுது அக்கண்களில் தெரிந்தது நாணமா, அன்பா, பாசமா, எதிர்பாரா திடுக்கிட்ட உணர்வா – அந்த அரைக்கண நேரம் எனக்கு ஆயிரம் யுகங்களாக — அசையாமல் நின்றுவிட்ட காலத்தின் இறுதியாகவே என்னால் உணரப்பட்டது.  அந்த அரைக்கணம் என்வாழ்விலேயே மறக்க இயலாத அரைக்கணம்; என் நினைவைவிட்டே அகலாத அரைக்கணம்; என்றென்றும் என்னைவிட்டு நீங்காத அரைக்கணம்; என் துன்பம், இன்பம், கோபம், தாபம், மகிழ்வு, இகழ்வு இவையனைத்தையும் மறக்கடித்துப் பேரின்பத்தில் ஆழ்த்தி முழுகடிக்கும் அரைக்கணம்.

    அவளது இதழ்கள் பிரிந்து மலர்ந்தன.  உடனே நாணத்தில் அவள் தலைகவிழ்ந்தாள்.

    நான் இன்பவெள்ளத்தில் திளைத்துத் திக்குமுக்காடினேன்.

    சுர்ரென்று புறங்கையில் சூடுவைத்ததைப் போன்ற உணர்வு என்னை துன்பக்கரையில் கொண்டுசேர்த்தது.

    “ஏண்டா, கண்ணா!  இலையைக் கவனிக்காமல் என்ன பார்வை, இங்குமங்கும்?  இப்பவே, மனசை அலையவிட்டால், நீ எங்கே படிச்சு உருப்படறது?  கொதிக்கற சாம்பாரைக் கையில் ஊத்தினாலும் திரும்பாம என்ன பார்வை?  இலையைக் கவனிடா!  உன்னை வைத்து பாப்பா [என் அம்மா] எத்தனையோ மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறாள், அதை மண்கோட்டையாக்கிவிடாதே!” என்று எரிந்துவிழுந்தார். என் மூத்த மாமா முத்துராமலிங்கம்.  உறவினர் திருமணம் என்பதால், பரிமாறும் பொறுப்பையும் தானாக இழுத்துப் போட்டுக்கொண்டவர், தன்னைமறந்த என் நிலைமையைக் கவனித்திருக்கிறார்.

    திடுக்கிட்டு சுய உணர்வுக்கு வந்தேன்.  என் இனிய கனவை – பேரின்ப அனுபவத்தை –வித்தியாசமான என் முதல் உணர்வை – ஒருபெண்ணிடம் லயித்த எனது முதன்முதல் கன்னிக்காதல் உணர்வைக் கலைத்துவிட்ட பெரியமாமா அடுத்த இலைக்குமுன் அமர்ந்திருந்த என் சின்னமாமன் ராஜுவுக்கு பரிவுடன் சாம்பாரிலிருந்து காய்கறித்துண்டங்களை எடுத்துப்போட்டுக்கொண்டிருந்தார்.

    அதற்குமேல் எனக்கு உணவில் கவனம் செல்லவில்லை.  எழுந்துவிட்டேன்.

    அப்பொழுது அவள் என்னைப் பார்த்த பார்வை —  ஏன் எழுந்தாய் என்பது போலும் இருந்தது, இல்லாமலும் இருந்தது.  அந்த ஒருகணத்தில் “நானிருக்கப் பயமேன்?” என்று அருள்புரியும் தேவியின் கடைக்கண் பார்வையைபோலவும் இருந்தது.

    “ஏண்டா கண்ணா, எழுந்திட்டே?” என்று வினவிய என் சின்னமாமனிடம், “பசி தீந்து போயிட்டதுடா, ராஜு.  இனிமே எதுவும் வேணும்னு தோணலே!”  என்று என் நீலத்தேரை, நீலக்குயிலை, நீலாயதாட்சித் தேவியைத் திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்.

    உள்ளம் கனத்தது.  அவளைத் திரும்பிப்பார்க்க என்மனதில் திராணியில்லை.  அவளது உருவம் என் நெஞ்சில் கற்சிற்பமாக காலம்காலத்திற்கும் அழியாதவண்ணம் செதுக்கப்பட்டதைமட்டுமே என்னால் உணரமுடிந்தது.  அவளை என் இறுதிமூச்சு உள்ளவரை மறக்கமுடியாது என்பதும் தெரிந்தது.  அதுவொரு சுகமான அனுபவமாகவும், என்னைப்பொருத்தமட்டில் ஒருகணத்தில் உலகையே புறட்டிப்போடவைத்த புத்துணர்ச்சியாகவும் இருந்தது.

    காதல் பக்தியாகப் பரவசமெடுத்தது.

    ஆண்டுகள் பல கழிந்துவிட்டன.  எத்தனையோ அழகிகளைக் கண்டுவிட்டேன்.  அவர்களின் முகம் என் நினைவில் இருப்பதில்லை.  அந்த நீலத்தேரின், நீலக்குயிலின், நீலாயதாட்சியின் – அவள் பெயர்கூட எனக்குத் தெரியாது — அதற்குப்பிறகு அவளை என்வாழ்வில் நான் சந்திக்கவும் இல்லை.  ஆயினும், ஒருசில நிமிடங்களே பார்த்த அவளது முகம், அவளது  திருவுருவம் காதல் ஓவியமாக, காதல்தெய்வமாக, அருள்பாலிக்கும் தேவியாக என் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கிறது.  அவளைப் பார்த்த நிகழ்வு என்னைப்பொருத்தவரையில் ஒரு தேவிதரிசனமாகவே நெஞ்சில் குடியிருக்கிறது — அவள் என்னுள், என் உயிரில், என் உணர்வில் ஒன்றிவிட்டாள்.  அவளைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் எப்போதும் தோன்றியதே இல்லை.  ஏனெனில், என்னைப் பார்த்துப் புன்னகைசெய்த அரைக்கணத்தில் — என் கண்ணோடு கலந்த அந்த அரைக்கணத்தில் என்னுடன் ஒன்றாகிவிட்டாள்.

    என்னுடன், என்னுள்ளே இருப்பவளை நான் ஏன் வேறு இடத்தில் தேடவேண்டும்?

    நான் மனம்தளரும்போதெல்லாம் அவள் என்னுள் இருந்து என்னைத் தேற்றுகிறாள்.  என் மனவலிமை குன்றி நான் தடுமாறும் சமயத்தில் ஊன்றுகோலாக உருவெடுக்கிறாள்.  என்றுமே நான் தனிமையை உணராதவண்ணம் என் வாழ்க்கைத்தோழியாக வடிவெடுக்கிறாள்.  என் தாய் இறந்தவுடன் எனது தாயாகவேமாறி என்றும் தாயன்பு செலுத்துகிறாள்.

    சுருங்கச் சொன்னால் அவள் எனக்கு ஒரு தெய்வமாகவே தென்படுகிறாள்.

    அவள் எங்கு இருக்கிறாளோ எனக்குத் தெரியவில்லை.  அரைக்கணத்தில் என்னுள் ஒரு நிறைவை நிலைநிறுத்திய அவள் சென்றவிடமெல்லாம் சிறப்பித்துவருவாள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    என் காதல்தெய்வத்திற்கு, என் தேவிக்கு என் வணக்கங்கள்!

    ***   ***   ***

    Share
  • ‘இன்னம்பூரான் பக்கம்’- 1

    இன்னம்பூரான்

    சமுதாயமும், நீயும், நானும், அவரும்

    f956a23c-4711-4df9-ae1a-e4d27c8b84a4

    ‘உலகெங்கும் காணக்கிடைக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணமுடியவில்லையே; அவற்றின் சீற்றத்தைக் குறைக்கவும் கூட முடியவில்லையே’ என்று அங்கலாய்க்கும் தென்னாப்பிரிக்க சிந்தனையாளர் டாக்டர் தேவி ரஜப் அவர்கள் இளைய சமுதாயம் வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதை கண்டு வருந்துகிறார். அது, சமூக விரோதிகளின் நாசகார பன்முகங்களை கண்டுகொள்ளாததால் விளையும் அவலங்களை தடுப்பதை, குலைக்கிறது என்கிறார் (Confluence: Feb 2016). அத்தருணம் ஒரு ஹிந்து மெய்யறிஞர், ‘இந்த மதமோ, அந்த மதமோ, எந்த மதமாயினும், (நாத்திகத்தின் பல உட்பிரிவுகள் உட்பட) அதன் விசுவாசிகள் தங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மை என்று அடித்துக் கூறுவதால் அபாயம் ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சுகிறார். அவர் விடுத்த எச்சரிக்கை: மனிதம், சுதந்திர உலகம் ஆகியவற்றை காப்பாற்ற, எந்த விதமான மதாபிமானத்தையும் புறக்கணிக்காமல், ’ அப்பா! இதற்கு கடவுளின் துணை நாடாதே (Not in God’s name!) என்றதை வழிமொழிகிறார்.

    உலகசமுதாயம் பெரிது; கணக்கற்ற வாழ்வியல்கள். சற்றே சிறியதான தேசாபிமான சமுதாயமும் அப்படித்தான் என்றாலும், நாட்டுப்பற்று ஒரு தொப்பிள் கொடி. இந்தியா இதற்குரிய உதாரணம். அதன் பல பகுதிகள்- அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஆண்டிப்பட்டி வரை- இமாலயத்திலிருந்து திருவிதாங்கூர் வரை, தனது தனித்துவ சமுதாய பண்புகளையும், இந்திய கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் இயங்கி வருகின்றன. மனித இனம் என்பதால் முரண்களுக்கு பஞ்சம் இல்லை.

    உலகெங்கும் சமுதாய அநீதிகள் காலம் காலமாக கோலோச்சுவதும், அவை தோன்றி மறைவதும் கண்கூடு. ஆனால், மேல்மட்டம் கண்களை மூடிக்கொள்வார்கள். ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் தாழ்த்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், பழங்குடி சண்டைகளும் காணக்கிடைக்கின்றன. நான் பட்டியலிட்ட அவலங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏகபோக உரிமையல்ல. நான் மற்ற மாநிலங்களிலும் கண்டிருக்கிறேன். டில்லியின் மேல்மட்டத்தில், தலைக்கூத்தல், (முதியவர்களை 26 வகைகளில் ஒன்றில் கொன்று விடுவது) பெண்சிசுவதை, கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து ஆகிய நான்கு அவலங்களும், மற்றும் பல சமூகவிரோதங்களும் பரவலாகத்தான் இருந்தன, இருக்கின்றன. சொத்து களவாடவேண்டி, செல்வந்தர்கள் வீடுகளில் தலைக்கூத்தல் மாதிரி முதியவர்கள் குறி வைக்கப்பட்டது உண்டு. உசிலம்பட்டி சிசுக்கொலையை விட, டில்லியில் அதிகம். 1965 -1990களில் ரயிலில் வந்தால், இருபக்கமும் செக்ஸ் டெட்டர்மினிஷன் விளம்பரங்கள் . மெத்தப்படித்த கொலைகார டாக்டர்கள் தான், சட்டத்தை அவமதித்து, இன்றைக்கும் சேலத்தில் கூட சிசு வதை செய்திருக்கிறார்கள், அரசு விளம்பரங்கள் அலறும் போதும். இத்தனைக்கும் ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர்கள். சில மாநிலங்களில் கந்துவட்டி கொடுக்கமுடியமால் தற்கொலைகள் இன்று கூட நடக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு பிரபல செல்வந்தர் கூட தற்கொலை செய்து கொஞ்சம் பழைய செய்தி. பீஹார், உத்தர் பிரதேஷ் கட்டப்பஞ்சாயத்துக்கள் உயிர்க்கொல்லிகள். ஒடிஷாவின் நெற்களஞ்சியமான காலகண்டியில் ஏழை வயிற்றில் மண்.

    நான் பாலபருவத்தில் கண்டு கலங்கிய வறுமையின் பூதாகாரம் யாருக்கும் புரியவில்லை. அரைப்பட்டினியில் ஐம்பது நாட்களாவது வதங்கியவர்களுக்குத் தான் அதன் வலி புரியும். நான், சொந்த அனுபவத்தாலும், நாடு முழுதிலும் பணி புரிந்திருந்ததாலும், கிராமங்களுக்கு அடிக்கடி செல்லவேண்டி இருந்ததாலும், இவற்றை அறிவேன்.

    இந்தியாவில் ஒரு புரட்சி வந்தே தீரும் என்று, இந்தப் பின்னணியில் பலதடவை எழுதியிருக்கிறேன். எனது ஆசானாகிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும், நானும் பல கோணங்களில் மார்க்சிஸ்ட் தான். இதை படித்த பின் புரியும்.

    ‘…புரையோடிப்போன சமூகத்தை மொத்தமாய் புரட்டிப்போடுவதற்குப்பெயர் தான் புரட்சி…83 ஆயிரம் சதுரமைல் பரப்பளவு கொண்ட ஹைதராபாத் சமஸ்தானத்தில் மூன்று மாவட்டங்களின் நிலம் பத்துப்பதினைந்து சுவான்தார்களுக்குச் சொந்தம். விஷ்ணுப்பூர் தேஷ்முக்: 40 ஆயிரம் ஏக்கர்: சூர்யாபேட் தேஷ்முக்: 20 ஆயிரம்: கல்லூர் தேஷ்முக் ஒரு லக்ஷம்…இந்த பண்ணையாளர்கள் விவசாயத்தொழிலாளிகளை நாயினும் கேவலமாக நடத்தினர். கூலியே இல்லாமல் வேலை கட்டாயம். ஐந்து பேருக்குக் கொடுக்கும் கூலி ஒரு ஆள் சாப்பிடக்கூட காணாது. கூலி கேட்டால் கடன். மன்னிக்கவும் குட்டி வட்டி, கந்து வட்டி; பல்லக்குத்தூக்க வேண்டும்; குதிரை வண்டி முன்னால் ஓடவேண்டும்; சமையல், சலவை, நாவிதம் எல்லாம் இலவசம். பண்ணையாருக்கு கால் அமுக்கி விடவேண்டும்; விருப்ப நாயகிகள் தரவேண்டும், மனைவிகளை…அதில் பந்தாட்டம் உண்டு. வரதக்ஷிணையில் அடிமைப்பெண் உண்டு. (கொஞ்சம் சுருக்கினேன், பெரும்பாலோர் இத்தகைய கசப்பு செய்திகளை படிக்கமாட்டார்களே என்று.) (ஆதாரம்: ஜூனியர் விகடன்: 3.2.16)

    மேற்படி மனித உதாசீனங்கள் தஞ்சை டெல்டாவில்- வாண்டையார், வடபாதி மங்கலம், சாம்பசிவ அய்யர் (கொஞ்சம் நல்லவர் என்பார்கள் விவசாயிகள்), குருதி வெள்ளம் எல்லாவற்றிலும் உண்டு. நான் வாழ்ந்த மதுரை பக்கத்திலும் உண்டு, கொஞ்சம் டிஃஃபெரண்ட் பார்முலா. சொன்னால் பொல்லாப்பு. சாதியை சாடுகிறான் என்பார்கள். ஆனாலும் ஏழைக்கு சாவு மணி தான். ஏன் தலைக்கூத்தல் நடக்காது? முதலாளியை கொல்லமுடியாது. அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் போட ஒரு சோறு இல்லை. பொட்டுத்துணி இல்லை. பசங்க வள வள. எல்லாம் பட்டினி, அழுகை. மருத்துவம் கேள்விப்படாத உண்டு. ஏழ்மை இல்லை; வறுமை இல்லை; வரட்சி இல்லை; இல்லாமை, ஐயா.

    எழுபது வருடங்களுக்கு முன்னால் நான் கண்ட அவலங்கள் இன்றும் நடக்கின்றன, தமிழ்நாட்டில், நடத்தப்படுகின்றன. சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான். அதையெல்லாம் விட்டு விட்டு…இதற்கு மேல் எழுத இன்று சக்தியில்லை.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    http://fscomps.fotosearch.com/compc/CSP/CSP017/k20722685.jpg

    இன்னம்பூரான்

    Share
  • சுமைதாங்கி

    க. பாலசுப்பிரமணியன்

     

    பூவுக்குள் வாசம் தேடிப் புவியெல்லாம் வளைத்தேன்

    புன்னகையின் பொருள் தேடி நாளெல்லாம் விழித்தேன்  !!

    பூங்காற்றில் புலன் தொலைத்துப் பொசுக்கிடும் உறவில் துடித்தேன்,

    பொல்லாத மனத்திற்குள் பொழுதெல்லாம் நடித்தேன்!!

     

    பொருள் நாடி, புகழ்  நாடி

    பூவையர்தம் உளம் நாடி,

    கானல் நீராய் எதையெதையோ நாடி

    கனவுக் கானகத்தில் காலத்தை தொலைத்தேன்!!

     

    தேடுதலும், நாடுதலும், வாழ்வின் வாடுதலோ?

    கூட்டுதலும் கழிப்பதுவும் பொய்மையைப் போற்றுதலோ?

    அன்பைப் பெருக்குதலும், பண்பை வகுப்பதுவும்

    வாழ்வில் மேன்மையை நாடுதலோ?

     

    இருப்பது இருப்பதாய் இருப்பதுவே

    அமைதிக்குச் சான்றிதழோ?

    இல்லாத இருப்பையே இமைகளுக்குள்

    சுமப்பதுவே சோகத்தின் முன்னுரையோ?

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”செட்டிப் புண்ணியத்தில் எழுந்தருளியுள்ள ஹயக்ரீவர்”
    —————————————————————————————————
    c6dc75a0-f266-4de9-86b4-67b8b8699ef7
    நிகமாந்த தேசிகன் நாவில் அமர்ந்து
    புகழ்வாய்ந்த பாதுகையைப் பாடி -அகமகிழ்ந்த,
    எண்ணியதை நல்கும் ஏற்றம் தரும்செட்டிப்
    புண்ணியத்தில் வாழும் பரி….

    புண்ணியச் செட்டியில் புண்ணாக்(கு) அளித்தனரோ
    நண்ணிய(து) ஏனங்கு நாலுகாலில் -கண்ணனே
    பாரதப் போரில் பழகிய நன்றியோ
    நீரதைப் போலின் நிலத்து….

    கொள்ளுக்(கு) அடங்காய் கவிதே சிகன்கூறும்
    சொல்லுக்குள் பாயுமுயர் ஜாதியே -கல்விக்கு
    வாய்த்த கடவுளே வாணி அரிதாரா
    போய்த்தவம் செய்யப் பழக்கு….

    கட்டுக்(கு) அடங்காது செட்டிக்குப் புண்ணியத்தை
    கொட்டுமருள் கல்விக் குதிரையே -குட்ட
    குளம்பால் தலையில் குருவே வருக
    தளும்பா அறிவைத் தர….

    புல்லும், படிகநீரும், புண்ணாக்கும் கொள்ளும்நான்
    அல்லும் பகலும் அளித்திடுவேன் -மெல்லும்
    தலம்செட்டிப் புண்ணியத்தில் தங்கும் பரியே
    பலனெட்டெட் ஆயகலை போடு….

    ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
    மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
    வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
    பெண்பால் பாரதியே பார்….

    சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
    நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
    வருவாய் அருகே குருவாகிக் காட்டு
    பரிமேல் அழகா பரிவு….கிரேசி மோகன்….

    Share
  • கற்பித்தல் எளிது – ஆளுமை பயிற்சி முகாம்

    உயிர் விகாசம் அடைந்தால் உடல் நோயில்லாமல் இருக்கும்.
    நாம் துருப்பிடித்து அழிவதை விடத் தேய்ந்து அழிவது நன்று.
    நாம் அனைவரும் இப்போது இருக்கும் திறமையை போல் இன்னும் 14 மடங்கு அதிகமாக உழைக்கும் திறமையை பெற்றவர்கள்.
    வாழ்வியல் பயிற்றுநர் பேச்சு

    தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

     

    தேவகோட்டை

    பயிற்சிக்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திர மோகன், பேராசிரியர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை வாழ்வியல் பயிற்றுநர் விஸ்வநாதன் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துப் பேசும்போது ஆசிரியர்கள் அனைவரும் எப்போதும் எளிதாக நல்ல உடல் நலத்துடனும், மன நலத்துடனும் இருக்கலாம்.நீங்கள் முதலில் மாணவர்களுக்குப் புரிவது மாதிரி சொல்லி கொடுங்கள்.

    நாம் பிறந்தது முதல் கேட்க மட்டுமே பழகி உள்ளோம். வார்த்தைகளால் சொல்வதை காதால் மட்டும் கேட்காமல் வார்த்தைகளால் சொல்வதை தாண்டி கண்ணால், மூளையால், இதயத்தால் புரிந்துகொண்டால் சொல்வது நன்றாகப் புரியும். நாம் சொல்வது விரிவாக இருந்தால் கேட்பவர் மனம் சொல்வதை ஏற்கவில்லை என்றால் அடுத்தவர் சொல்லும் தகவல் நமக்குக் கேட்க கூடாது என்று தானாகவே கத்தியைக் காது எடுத்துக்கொள்ளும்.

    மூச்சுதான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.பிடிக்காத வேலையைச் செய்தால் மூச்சு ஈரமாக இருக்கும். உடல் பாதுகாப்பாக இருக்கிறது. உயிர் விகாசமாக இருந்தால் தான் வாழ்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.நாம் அனைவரும் நமது திறமையை போல் 14 மடங்கு அதிகமாக உழைக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள். அவ்வாறு நாம் உழைக்கவில்லை என்றால் நம் உடல் விடும்.அதனால் பல்வேறு நோய்கள் நமக்கு வந்துவிடும்.எனவே நாம் துருப்பிடித்து அழிவதை விடத் தேய்ந்து அழிவது நன்று.

    உடல் உறுப்புகளுக்குத் தேவையான 5 வகை சுவைகள்:
    நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு சுவையை விரும்பும்.மொத்தம் 5 வகையான சுவைகள் நமது உடம்பு நன்றாக இயங்குவதற்குத் தேவைப்படுகிறது. இவைதான் ஐந்து பூதங்கள் என்று அழைக்கப்படுபவை ஆகும். ஆசிரியர்களுக்கு நுரையீரல் நன்றாக இருக்க வேண்டும். நுரையீரல், பெருங்குடல், தோல் ஆகிய உடல் உறுப்புகள் நன்றாகச் செயல்பட காரம் சாப்பிட வேண்டும். காது, பல், நகம், சிறுநீரகம் , எலும்பு ஆகிய உடல் உறுப்புகள் உப்பு சாப்பிட்டால் நன்றாக இருக்கும். உப்பு என்றால் நாம் சாப்பிடும் உப்பு கிடையாது. இளநீர் போன்ற பொருள் சாப்பிடும்போது சுவை கொடுக்கும் உப்பு ஆகும். கல்லீரல், கண், பித்தப்பை போன்ற உடல் உறுப்புகள் ஆற்றலுடன் செயல்பட புளிப்பு சுவை சாப்பிட வேண்டும். இதயம், மூளை, நாக்கு,ந மது ஈகோ நன்றாகச் செயல்பட கசப்பு, துவர்ப்பு நன்றாகச் சாப்பிட வேண்டும். மண்ணீரல், இரைப்பை, வாய் போன்ற உடல் உறுப்புகள் நன்றாகச் செயல்பட இனிப்பு சுவை சாப்பிட வேண்டும். இவ்வாறு 5 சுவைகளையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப சாப்பிட்டாலே எந்த பாதிப்பும் வராது. இந்த 5 சுவைகள் காரம், உப்பு, புளிப்பு, நெருப்பு, இனிப்பு ஆகிய ஐந்தும் காற்று, நீர், ஆகாயம், நெருப்பு, மண் ஆகிய 5 பூதங்களைக் குறிக்கும்.

    ஆசிரியர்கள் அனைவரும் விதைகள் போன்றவர்கள்.விதைகளுக்குள் பல மரங்கள் இருப்பதைப் போல் ஆசிரியர்களும் பல மாணவர்களை வளர்க்கிறார்கள். ஆசிரியர்களால் தான் இந்தச் சமூகத்தை மாற்ற முடியும். எனவே நீங்கள் அனைவரும் உச்ச எல்லை திறனை வெளிப்படுத்திச் செழுமைப்படுத்தினால் உங்களின் வாழ்க்கை உயரத்தைக் கூட்டும் .உடலைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு சுவாச பயிற்சிகளையும் சொல்லி கொடுத்தார். ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வமுடன் பயிற்சியில் பங்குபெற்றனர். கண்ணங்குடி உதவித் தொடக்க கல்வி அலுவலர் அடைக்கலராஜ் உட்படப் பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்திருந்தார்.

    பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை பயிற்சி முகாமில் வாழ்வியல் பயிற்றுநர் மதுரை விஸ்வநாதன் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கினார்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ’’வெண்பாகவதம்’’….
    ————————————-
    கூர்மாவதாரம்
    ——————–

    d6a268dd-423c-4547-b53b-9d6ce5ad646b

    ’’துர்வாசர் இட்ட தொடையை எறிந்திட
    கர்வாதி கத்தில் களிறின்மேல் -சர்வாதி
    காரத்தால் பெற்ற கடுத்தமுனி சாபத்தின்
    பாரத்தால் வானத்தோன் பாழ்’’….

    ’’சாப விமோசனத்தை, சாகரப் பாற்கடலை
    மாபெரும் மந்தார மத்தினால், -நீபெருவாய்
    வாசுகி தாம்பால் வளைத்துக் கடைந்திட;
    வாசுதேவன் விண்ணுக்கு வாக்கு’’….

    ’’வாசுகி உச்சியை வானோர் பிடித்திழுக்க
    ஆசு அசுரர் அதன்வாலில் -கோஷமிட
    மந்தார வெற்பன்று மூழ்குதலைத் தாங்கிட
    வந்தாராம் ஆமையாய் விஷ்ணு’’….

    ’’அப்போது பீறிட்ட ஆலகால நெஞ்சினை
    துப்பாது உண்ணாது தொண்டையில் -எப்போதும்
    கொண்டனன் சம்பு; கிளர்ந்த இலக்குமியைக்
    கொண்டனன் கூர்மம் கரத்து’’….

    ’’தன்வந்த்ரி தந்த திருக்கண் அமுதருந்த
    முன்வந்த தானவரை மோகினிப் -பெண்வந்து
    ஆசையைக் காட்டியவர் மோசமுற, விண்ணோரை
    ஈஷியிட்டார் விஷ்ணு இலை’’….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: நெடும்பகை தன்செய்யத் தானே கெடும்

     

    உற்றதற் கெல்லா முரஞ்செய்ய வேண்டுமோ?
    கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
    நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை
    தற்செய்யத் தானே கெடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?
    கற்று அறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;
    நெல் செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,
    தன் செய்ய, தானே கெடும்.

    பொருள் விளக்கம்:
    எதிர்கொள்ளும் இடர் ஒவ்வொன்றுக்கும் தன்னை வலிமை படுத்திக் கொள்வது தேவையா? சான்றோர்களைச் சினம் கொள்ளச் செய்யாமல் நன்னெறி வழி நடப்பதே தற்காப்பாக அமைந்து பகையை அழித்துவிடும் (கற்றறிந்த சான்றோர் தமக்கு ஏற்படும் சினத்தைக் கட்டுக்குள் வைத்தாலே பகையை வென்றுவிடலாம் என்றும் பொருள் கொள்ளலாம்). உழவு செய்து நெல்பயிரிடும் வயலில் நெல் செறிந்து வளர்ந்தால் அங்குள்ள புல் தானே அழிந்துபடும் (களை நீக்கவென தனியான முயற்சி எதுவும் தேவையில்லை). அவ்வாறே தீராத பகையும், ஒருவர் தன்னை வலிமைப்படுத்திக் கொள்வாரானால் தானே அழிந்துவிடும் (பகை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்காமலே, எதிராளியின் வலிமையை அறிந்து கொண்ட பகைவர் தாமே ஒடுங்கிவிடுவர்).

    பழமொழி சொல்லும் பாடம்: கற்றோருக்கு சினமூட்டி பகைத்துக் கொள்ளாமல் நன்னெறி வழி நடப்பவர்க்குச் சான்றோர் பலர் ஆதரவாளராக இருப்பதன் காரணமாக வலிமை மிகுந்தவராகவும் இருப்பார். வலிமை மிகுந்த அவரை எதிரிகள் தாக்கத் துணிய மாட்டார்கள். கற்றோர்கள் தங்கள் சினத்தைக் கட்டுப்படுத்தி சீராகச் சிந்திக்கும் திறன்மூலம், பதற்ற மற்றவர்களாய் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ளும் வழி அறிவர். அந்த வலிமை பகையை அழித்துவிட உதவும் எனவும் பொருள் கொள்ளலாம். தன்னை வலிமைப் படுத்திக் கொள்ளும் வகை அறிந்தவரிடம் பகைமை பாராட்டுபவர் இருக்கமாட்டார் என்பதை விளக்க விரும்பும் வள்ளுவரும்,

    வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு. (குறள்: 878)

    வழிமுறைகளை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பை ஏற்படுத்திக் கொண்டவரை எதிர்கொள்ள இயலாமல் பகைவரின் ஆணவம் தானே அழியும், பகையும் ஒழியும் என்கிறார்.

    Share
  • படக்கவிதைப் போட்டி … (52)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12767778_963779777009555_639098695_n
    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.02.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், கவிஞர் மதுமிதா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 51 இன் முடிவுகள்

    மதுமிதா

    12736466_960121290708737_181381344_n

    வணக்கம். இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட படமும், படத்துக்கான கவிதைகளும் சிறப்பாக இருக்கின்றன. முதல் பரிசு என்று தேர்வு செய்வது கடினமாக இருக்கும் வகையில் பங்கேற்பாளர்கள் எழுதுகின்றனர். ஒவ்வொரு முறையும் முன்பு நான் எழுதிய ஏதோ ஒரு கவிதையை நினைவு கூறச் செய்கின்றனர் படைப்பாளிகள்.

    செண்பக ஜெகதீசன்

    நடிப்பாய்…

    நாட்டை யாழும் மன்னனென
    நடையுடை பாவனை ஒப்பனையில்,
    பாட்டும் நடிப்பும் ஓங்கிடவே
    பலர்முன் கூத்தில் நடிப்பவனின்
    வீட்டு ஏழ்மை நிலையினையே
    வெளியே காட்ட முடிவதில்லை,
    நாட்டில் பலரின் கதையிதுவே
    நடிப்பாய்ப் போனது வாழ்வதுவே…!
    -செண்பக ஜெகதீசன்…

    செண்பக ஜெகதீசன் – கச்சிதம்

    ·
    மதிபாலன்

    தெருக்கூத்து

    நிழல் திரைப்படம்
    விழிகளில் நுழைந்து
    நம்மை
    சிறைப்படுத்தி விட்டது !
    நிஜம் இங்கே
    தெருவோரமாய்
    கேட்பாரற்றுக் கிடக்கிறது !
    கட்டை கட்டி ஆடும்
    கலைஞனின் அரிதாரம்
    கவர்ச்சியற்றுப் போனது !
    எட்டுக்கட்டையில் பாடும்
    அவனது பாடலை
    ரசிக்க ஆளில்லை !
    கணினி இசை
    நம்மைக் களவாடிவிட்டது !
    தெருக்கூத்தை
    திரைக்கூத்து
    தின்றுவிட்டது !
    கண்ணீர்த் துளியோடு
    காவியம் படைக்கிறான்
    உண்மைக் கலைஞன் .
    அவனைக்
    கண்டுகொள்ளாமல்
    படத்தில் லயிக்கிறான்
    இனறைய இளைஞன் !

    மதிபாலன் – உண்மை நிலையே இது.

    ·
    சரஸ்வதி ராஜேந்திரன்

    திரைக்கூத்தும் அரசியல் கூத்தும் இன்று
    தெருக்கூத்தாய் பவனி வருகிறது பாரம்பரிய
    தெருக்கூத்து பாதியிலேயே மறக்கடிக்கப்பட்டது
    வேஷம் பலவிதம் மோசம் சாசுவதமாகிப்போனது
    கோஷங்கள் போடுகிறார்சந்தடி சாக்கில் வருமானத்திற்கு
    ஆனாலும் நாட்டிற்கு நல்லது செய்ய எண்ணி
    ஆண் ஒருவர் ஓய்வு அடைந்தும் வேஷம் போடுகிறார்
    நங்கைகள் கூடும் இடத்தில் தாய்ப்பால் அவசியத்தையும்
    ஆடவர்கள் கூடும் இடத்தில் புகை பகை எனகூறி
    சத்தான பேச்சால் விழிப்புணர்வு தூண்டுகிறார்
    வித விதமான வேஷத்தால்,, ஏனெனில் ,மக்கள்
    வேஷத்தில் பழகிவிட்டார்கள் என்று ஆம்
    உலகமே ஒரு நாடக மேடை அதில்
    உலவும் மக்கள் எல்லோரும் நடிகர்கள்தானே
    தெருக்கூத்துப்போய் திருக்கூத்தாய் ஆனது கொடுமை

    சரஸ்வதி ராஜேந்திரன் – கூத்தையும் வாழ்க்கை நாடகத்தையும் ஒன்றாக இணைத்து உவமை நன்று.

    ·
    க.கமலகண்ணன் 

    நம் பாரம்பரியத்தின் அடையாளம்
    பங்குபெற ஒருவருமில்லை தற்போது
    ஒப்பில்லா கலைகள் பல காணவில்லை
    கவிதையாய் அனைத்தையும் பார்த்து வளர்ந்த
    அளவில்லா சிலர் கலைஞர்களாய் மாறிப்போன
    சிலிர்ப்பு மட்டும் உண்மை உள்ளம் சுடுகிறது
    மட்டற்ற கட்டபொம்மனும் சர்க்கரவர்த்திகளும் கெத்து
    களம் காட்டியதல்ல நேரடியாக பார்த்தது போன்று
    காணவில்லையே இப்போது இந்த தெருக்குகூத்து…
    – க.கமலகண்ணன்

    கமலகண்ணன் – இழப்பின் அவலத்தை பேசும் வரிகள்

    வேதா. இலங்காதிலகம்

    தமிழர்களின் பழங்கலை.

    இரண்டாயிரம் வருடங்களின் முன்னரான கலை
    புரண்டது கூத்தெனும் பெயரில் மாறுதலை-
    நாட்டிய நாடகம், தெருக்கூத்து கதையில்
    பாட்டு ஆடல், மேடையேற்றம் களரியில்.
    வண்ண ஆடை, பின்னணி இசையிசைத்து
    எண்ணும் விழிப்புணர்வுக் கருத்து, பக்தி
    பரப்பும் சீர்திருத்தமாக. கோமாளியாதார யுக்தி.
    உரப்பும் மனம் குரலின் சக்தி.

    வாழ்வாதாரத்திற்குக் கூத்தாடும் வறுமை நிலை
    தாழ்வு நிலைக்கின்று சினிமா கணனியலை.
    கட்டாரி கையில் ஏந்தி ஆக்ரோசமோ!
    கரடியை வனத்தில் கொல்லும் இராசாவோ!
    சுவையாகப் பார்த்து இரசிக்குமொரு கூட்டம்
    சபையாகத் தரையில் அமர்ந்தும் நின்றும்
    ஒரு பொழுது போக்கும் உழைப்போர்
    பெரும் ரசிகராய் ஆர்வமுடன் சுகிக்கிறார்.

    வரியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    20.2-2016.

    வேதா – இவரின் பாணியே அலாதியானது. சிந்தையிலும் எழுத்திலும் ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கிறார்.

    முதல் பரிசு – செண்பக ஜெகதீசன்

    அன்புடன்

    மதுமிதா

    23.02.1016

    Share