கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
——————————

நிகமாந்த தேசிகன் நாவில் அமர்ந்து
புகழ்வாய்ந்த பாதுகையைப் பாடி -அகமகிழ்ந்த,
எண்ணியதை நல்கும் ஏற்றம் தரும்செட்டிப்
புண்ணியத்தில் வாழும் பரி….
புண்ணியச் செட்டியில் புண்ணாக்(கு) அளித்தனரோ
நண்ணிய(து) ஏனங்கு நாலுகாலில் -கண்ணனே
பாரதப் போரில் பழகிய நன்றியோ
நீரதைப் போலின் நிலத்து….
கொள்ளுக்(கு) அடங்காய் கவிதே சிகன்கூறும்
சொல்லுக்குள் பாயுமுயர் ஜாதியே -கல்விக்கு
வாய்த்த கடவுளே வாணி அரிதாரா
போய்த்தவம் செய்யப் பழக்கு….
கட்டுக்(கு) அடங்காது செட்டிக்குப் புண்ணியத்தை
கொட்டுமருள் கல்விக் குதிரையே -குட்ட
குளம்பால் தலையில் குருவே வருக
தளும்பா அறிவைத் தர….
புல்லும், படிகநீரும், புண்ணாக்கும் கொள்ளும்நான்
அல்லும் பகலும் அளித்திடுவேன் -மெல்லும்
தலம்செட்டிப் புண்ணியத்தில் தங்கும் பரியே
பலனெட்டெட் ஆயகலை போடு….
ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
பெண்பால் பாரதியே பார்….
சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
வருவாய் அருகே குருவாகிக் காட்டு
பரிமேல் அழகா பரிவு….கிரேசி மோகன்….