படக்கவிதைப் போட்டி 51 இன் முடிவுகள்
மதுமிதா
வணக்கம். இம்முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட படமும், படத்துக்கான கவிதைகளும் சிறப்பாக இருக்கின்றன. முதல் பரிசு என்று தேர்வு செய்வது கடினமாக இருக்கும் வகையில் பங்கேற்பாளர்கள் எழுதுகின்றனர். ஒவ்வொரு முறையும் முன்பு நான் எழுதிய ஏதோ ஒரு கவிதையை நினைவு கூறச் செய்கின்றனர் படைப்பாளிகள்.
செண்பக ஜெகதீசன்
நடிப்பாய்…
நாட்டை யாழும் மன்னனென
நடையுடை பாவனை ஒப்பனையில்,
பாட்டும் நடிப்பும் ஓங்கிடவே
பலர்முன் கூத்தில் நடிப்பவனின்
வீட்டு ஏழ்மை நிலையினையே
வெளியே காட்ட முடிவதில்லை,
நாட்டில் பலரின் கதையிதுவே
நடிப்பாய்ப் போனது வாழ்வதுவே…!
-செண்பக ஜெகதீசன்…
செண்பக ஜெகதீசன் – கச்சிதம்
·
மதிபாலன்
தெருக்கூத்து
நிழல் திரைப்படம்
விழிகளில் நுழைந்து
நம்மை
சிறைப்படுத்தி விட்டது !
நிஜம் இங்கே
தெருவோரமாய்
கேட்பாரற்றுக் கிடக்கிறது !
கட்டை கட்டி ஆடும்
கலைஞனின் அரிதாரம்
கவர்ச்சியற்றுப் போனது !
எட்டுக்கட்டையில் பாடும்
அவனது பாடலை
ரசிக்க ஆளில்லை !
கணினி இசை
நம்மைக் களவாடிவிட்டது !
தெருக்கூத்தை
திரைக்கூத்து
தின்றுவிட்டது !
கண்ணீர்த் துளியோடு
காவியம் படைக்கிறான்
உண்மைக் கலைஞன் .
அவனைக்
கண்டுகொள்ளாமல்
படத்தில் லயிக்கிறான்
இனறைய இளைஞன் !
மதிபாலன் – உண்மை நிலையே இது.
·
சரஸ்வதி ராஜேந்திரன்
திரைக்கூத்தும் அரசியல் கூத்தும் இன்று
தெருக்கூத்தாய் பவனி வருகிறது பாரம்பரிய
தெருக்கூத்து பாதியிலேயே மறக்கடிக்கப்பட்டது
வேஷம் பலவிதம் மோசம் சாசுவதமாகிப்போனது
கோஷங்கள் போடுகிறார்சந்தடி சாக்கில் வருமானத்திற்கு
ஆனாலும் நாட்டிற்கு நல்லது செய்ய எண்ணி
ஆண் ஒருவர் ஓய்வு அடைந்தும் வேஷம் போடுகிறார்
நங்கைகள் கூடும் இடத்தில் தாய்ப்பால் அவசியத்தையும்
ஆடவர்கள் கூடும் இடத்தில் புகை பகை எனகூறி
சத்தான பேச்சால் விழிப்புணர்வு தூண்டுகிறார்
வித விதமான வேஷத்தால்,, ஏனெனில் ,மக்கள்
வேஷத்தில் பழகிவிட்டார்கள் என்று ஆம்
உலகமே ஒரு நாடக மேடை அதில்
உலவும் மக்கள் எல்லோரும் நடிகர்கள்தானே
தெருக்கூத்துப்போய் திருக்கூத்தாய் ஆனது கொடுமை
சரஸ்வதி ராஜேந்திரன் – கூத்தையும் வாழ்க்கை நாடகத்தையும் ஒன்றாக இணைத்து உவமை நன்று.
·
க.கமலகண்ணன்
நம் பாரம்பரியத்தின் அடையாளம்
பங்குபெற ஒருவருமில்லை தற்போது
ஒப்பில்லா கலைகள் பல காணவில்லை
கவிதையாய் அனைத்தையும் பார்த்து வளர்ந்த
அளவில்லா சிலர் கலைஞர்களாய் மாறிப்போன
சிலிர்ப்பு மட்டும் உண்மை உள்ளம் சுடுகிறது
மட்டற்ற கட்டபொம்மனும் சர்க்கரவர்த்திகளும் கெத்து
களம் காட்டியதல்ல நேரடியாக பார்த்தது போன்று
காணவில்லையே இப்போது இந்த தெருக்குகூத்து…
– க.கமலகண்ணன்
கமலகண்ணன் – இழப்பின் அவலத்தை பேசும் வரிகள்
வேதா. இலங்காதிலகம்
தமிழர்களின் பழங்கலை.
இரண்டாயிரம் வருடங்களின் முன்னரான கலை
புரண்டது கூத்தெனும் பெயரில் மாறுதலை-
நாட்டிய நாடகம், தெருக்கூத்து கதையில்
பாட்டு ஆடல், மேடையேற்றம் களரியில்.
வண்ண ஆடை, பின்னணி இசையிசைத்து
எண்ணும் விழிப்புணர்வுக் கருத்து, பக்தி
பரப்பும் சீர்திருத்தமாக. கோமாளியாதார யுக்தி.
உரப்பும் மனம் குரலின் சக்தி.
வாழ்வாதாரத்திற்குக் கூத்தாடும் வறுமை நிலை
தாழ்வு நிலைக்கின்று சினிமா கணனியலை.
கட்டாரி கையில் ஏந்தி ஆக்ரோசமோ!
கரடியை வனத்தில் கொல்லும் இராசாவோ!
சுவையாகப் பார்த்து இரசிக்குமொரு கூட்டம்
சபையாகத் தரையில் அமர்ந்தும் நின்றும்
ஒரு பொழுது போக்கும் உழைப்போர்
பெரும் ரசிகராய் ஆர்வமுடன் சுகிக்கிறார்.
வரியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20.2-2016.
வேதா – இவரின் பாணியே அலாதியானது. சிந்தையிலும் எழுத்திலும் ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கிறார்.
முதல் பரிசு – செண்பக ஜெகதீசன்
அன்புடன்
மதுமிதா
23.02.1016
படக்கவிதைப் போட்டி-51ல், எனது கவிதைக்கு முதல் பரிசு வழங்கிச் சிறப்பித்த ‘வல்லமை’ நிர்வாகம், தேர்வாளர் மதுமிதா மற்றும் நண்பர்களுக்கு நன்றி…!
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.