Month: February 2017

  • ஆணேறு தழுவும் வீரனின் நடுகல்!

    பவள சங்கரி

    IMG_20170204_152451391

    சேலம் அரசு அருங்காட்சியகத்தில் கிடைத்த பண்டைய தமிழர் வீர விளையாட்டிற்கான மற்றுமொரு ஆதாரம் – ஆணேறு தழுவும் சிற்பம்.  தமி வீரன் ஒருவன் காளையின் இரு கொம்புகளையும் பிடித்து அடக்குவது போன்று அமைந்த அற்புதமான சிற்ப வேலைபாடுகள் கொண்ட நடுகல் இது! 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நடுகல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மற்றுமொரு தடைக்கல்?

    பவள சங்கரி

    சென்ற ஆண்டு 28 சணல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 48 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயப் பொருட்களிலிருந்து உற்பத்திப்பொருள் தயாரிப்புகளை நிறுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். மக்கிப்போகும் சணல் உற்பத்தியை நிறுத்திவிட்டு பெட்ரோலியப் பொருட்களான நெமிலிப் (பாலிதின் பைகள்) பைகளுக்கு அரசு ஆதரவு தெரிவித்து நீர் பிடிப்பு ஆதாரங்களில் பாதிப்பு உண்டாக்கிவிடுமோ என்று சமூக ஆர்வலர்களின் கவலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? விவசாய வேலை வாய்ப்புகளிலும் பாதிப்பு ஏற்படும் என்பதும் மறுக்கவியலாது. வங்க முதல்வர் சகோதரி மம்தா பானர்ஜி அவர்கள் இதில் தலையிட்டு தக்க நடவடிக்கைகள் எடுப்பார் என்று நம்புவோமாக!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”துடுப்பில்லாத் தோணியில் தூரத்தே தீயும்,
    அடுப்பில்லா பால்வெளியில் ஆறவைத்து-உடுப்பியில்
    கீதாவை மத்தால் ,கடைந்து வினியோகம்:
    மாதாவாய் கண்ணன்ந மக்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். 780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது

    aj
     
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
    +++++++++++++

    பூகோளப் பூகாந்த துருவங்கள்
    புதிராய்த் திசைமாறும் !
    ஆமை வேகத்தில் வட துருவம்
    தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் !
    பூமியின் சுழற்சி அப்போது
    எதிர்த்  திசையில் ஓடுமா ?
    பரிதியின்  உதய திசை அப்போது
    கிழக்கா ? மேற்கா ?
    உயிரினம்,  மனித  இனம்  என்ன வாகும் ?
    மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில்
    மனிதர் எறியப் படுவாரா ?
    சூழ்வெளி மண்டலம் முறிந்து
    பாழ்வெளி ஆகுமா ?
    நீர் மண்டலம் ஆவியாகி
    நிலம் பாலை ஆகுமா ? சூடேறி
    உயிரினங்கள் தவிக்குமா ?
    பயிரினங்கள்
    பசுமை இழக்குமா ?
    அரை மில்லியன் ஆண்டுகட்கு
    ஒருமுறை நேர்ந்திடும்
    துருவத் திருப்பம்,
    பிறகு மீளுமா ?
    இயற்கை நியதி முறை புரியும்
    திருவிளை யாடல் !
    பருவ காலம் தாறுமாறாகி
    வாழ்க்கைப் போக்கு பாழாகுமா ?
    துருவ மாற்றம்
    பிரளய நர்த்தனப் பயிற்சியை
    அரங்கேற்றுமா ?

    +++++++++++++

    Earth's Pole Reversal
    பூமியின் கடந்த காலக் காந்தத் துருவ மாற்றம்  எப்போது நேர்ந்தது ?
    புவியின் தொடர்ந்த பூகாந்த மாற்றம் கோளைச் சுற்றிக் கண்ணுக்குப் புலப்படாத விசையாய், சூரியத் தீக்கதிர்த் தாக்குதலைத் தணித்து மனிதரைப் பாதுகாத்து வருகிறது.  துருவத் திசை மாற்றம் ஓர் இயற்கை நியதி.  கடந்த 20 மில்லியன் ஆண்டுகளாய், துருவத் திசை மாற்றம் 200,000 முதல் 300,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு சீரிய நெறிப்படி நிகழ்ந்து வருகிறது. ஆயினும் கடந்து சென்ற பூகாந்தத் திசைமாற்றம் [Brunhes-Matuyama Reversal] 780,000 ஆண்டுக்கு முன்பு நேர்ந்துள்ளது.  இடையே தற்காலியமாக 41,000 ஆண்டுகளுக்கு முன்பு[Laschamp Event] ஒரு திசைமாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்தத் திசை மாற்றம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் நீடித்து, மெய்யாகத் துருவங்கள் 250 ஆண்டுகளாய் நிலைத்து வந்துள்ளன.

    Earth magnetic field

    வடதுருவம், தென்துருவம் இடம் மாறிப் பன்னூறு முறைகள் திசை மாற்றங்கள் நமது பூகோள வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.  அப்போது பூகாந்த விசை  குறைந்து, மிகச் சிக்கல் வடிவம் அடைந்து, துருவங்கள், புவி மையக் கோட்டுப் [Equator] பகுதியில் புலம் பெயர்ந்து, தற்போதைய பூகாந்த விசை வலுவில் 10% தணிந்து விட்டது.  அல்லது, ஒரே தருணத்தில் பன்முக வடதுருவ, தென் துருவ அமைப்புகள் [Multiple Poles] பூகோளத்தில் தோன்றியுள்ளன.

    இம்மாதிரிப் பூகோளத் திசைமாற்றங்கள் [Geomagnetic Reversals]  ஒவ்வோர் மில்லியன் ஆண்டுகளில் ஒருசில முறைகள் சராசரியாக நேர்துள்ளன. அப்படி நேர்ந்தாலும்,  திசைமாற்ற இடைவெளிகள் ஒழுங்கற்ற முறையில் தான் நிகழ்ந்திருக்கின்றன.  இடைவெளி பல மில்லியன் ஆண்டுகளாகவும் ஏற்பட்டிருக்கலாம்.  முழுமை பெறாமல் அரைகுறைத் திசைமாற்றங்கள், தற்காலிய நிலைபெறாத, திசை மாற்றங்கள் கூட நேர்திருக்கலாம்.  அந்தச் சமயங்களில் பூகாந்த துருவங்கள் [Magnetic Poles] பூகோளத் துருவ முனை களை [Geographic Poles] விட்டுப் புலம் பெயர்ந்து, புவி மையக் கோட்டைக் [Equator] கடந்து, மீண்டும் பழைய இடங்களுக்கே திரும்பலாம்.

    Image result for brunhes-matuyama reversal

    பிரளயக் கேடுகளை முன்கூறும் வேதியர் [Doomsday Theorists] இந்தப் பூகோளத் திசைமாற்ற நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு, இது உலகை அழிக்கப் போகிறது என்று அச்சம் ஊட்டுவார்.  ஆனால் அவ்விதம் பேரழிவுச் சீர்கேடுகள் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நேருமா ? பயிரினங்களுக்கு நேருமா ?  இவ்வினாக்களுக்கு நாசா கூறும் பதில் என்ன?  பூதளவியல், பூர்வ புதைபடிவப் பதிவுகளிலிருந்து, [Geologic & Fossil Records] கடந்த நூற்றுக் கணக்கான பூகாந்த திசைமாற்ற விளைவு களை ஆராய்ந்த போது, “சீர்கேடுகள்  இல்லை”  என்பதே தெரிகிறது. பூமியில் பூகாந்தத் திசை மாற்றம் மெதுவாக மாறும் போது,  பூகோளத்தின் சுழற்சி வேகம் [சுமார் : மணிக்கு 1000 மைல்] தளர்ந்து சுழற்சியின் திசை மாறுமா ? அப்போது பூமியில் உயிரினங்களுக்கு என்ன நேரிடும் ?  கிழக்கை விட்டுச் சூரியன் மேற்கே உதிக்குமா ?  இவை போன்ற குதர்க்க வினாக்களுக்குப் பதில் இதுவரைக் கிடைக்கவில்லை !

    இப்போது மெய்யாகத் [2017] துருவம் வடதிசை நோக்கி ஆண்டுக்கு 40 மைல் வேகத்தில் புலம் பெயர்வதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார். போன 20 ஆம் நூற்றாண்டின் துவக்க சமயத்தில் ஆண்டுக்கு 10 மைல் வேகத்தில் துருவ வடப் பெயர்ச்சி நேர்ந்திருக்கிறது.  இந்தப் பூகாந்தத் துருவங்கள் திசைமாற்றம் ஜப்பானிய விஞ்ஞானிகள் பெயரில் ” புருனெஸ் -மட்டுயமா திசைமாற்றம் ”  [Brunhes- Matuyama Reversal] என்று குறிப்பிடப் படுகிறது.   இத்திசை மாற்றத்தால் எந்த வித மாறுதல்கள், தீங்குகள் பயிரின- உயிரினப் பிறப்புகளுக்குத் தீவிரமாய் இல்லை என்று பூர்வப் புதைப்படிவப் பதிவுகள் [Fossil Records] மூலம் அறியப்படுகின்றன.

    இந்த ஆண்டுகளில் [2000 – 2016] ஆண்டுகளில் எடுத்துச் சோதித்த ஆழ்கடற் படிவுகள் உள்ளே [Sediments Cores], ஆக்சிஜென் ஏகமூலங்களில் [Oxygen Isotopes ] எந்த வித மாறுதலும் இல்லை.  பூகாந்தத் திசைமாற்றத்தால், புவிச் சுழற்சி அச்சுக்குப் [Earth’s Rotation Axis] பாதிப்பு இல்லை. காரணம் புவி அச்சுச் சரிவு காலப் பருவ நிலை, பனித்திரட்சிக்குப் [Climate & Glaciation] பாதிப்பை உண்டாக்குகிறது.  அவ்விதம் திசை மாற்றத்தால் பனித்திரட்சி பாதிக்கப் பட்டிருந்தால், பதிவுகளில் பதிவாகி யிருக்கும்.

    ஆயிரக்கணக்கான ஆண்டு காலத்தில் மெதுவாகப் பூமியில் பூகாந்தத் திசைமாற்றம் நேர்வதால், துருவ இடமாற்றம் ஒரு தாவலில் நேர்வ தில்லை.  கடந்த 3 பில்லியன் ஆண்டுகளில், குறைந்தது நூறு முறை பூகாந்தத் திசைமாற்றம்  நேர்திருப்பதைத் தெரிய வருகிறது.   பூகாந்தத் திசைமாற்றம் ஆழ்கடலடிப் புழுதிப் படிவுகளில் [Sediments] பதிவாகிறது. அவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்.

    ++++++++++

    “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !”

    பிராடு ஸிங்கர், பூதளவியல் பேராசிரியர் விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகம்

    Image result for brunhes-matuyama reversal

    பூகாந்த தளம் திருப்பிக் கொள்ள [Earth’s Magnetic Pole Reversal] 1000 முதல் 10,000 ஆண்டுகள் எடுக்கலாம்.  அந்த திருப்ப இயக்கத்தில் நேரிணைப்பாகும் [Realignment] முன்பு,  காந்த சக்தி மிகவும் தளர்ச்சி அடைகிறது.  அது திடீர்த் திருப்பம் ஆகினும், மெதுவாகவே [Sudden Flip; but a Slow Process] அது நிகழ்கிறது.  அத்தருணத்தில் பூகாந்த சக்தியின் ஆற்றல் பலவீனம் அடைகிறது.   காந்த தளம் சிக்கலாகிச் சில சமயம் இரு துருவங்களுக்கு மேலாகவும் காணப் பட்டு, மீண்டும் காந்த சக்தி வலுவேற்றிக் கொள்கிறது.   அந்த நிலையில் துருவங்கள் எதிராக மாற்றமாகி நேரிணைப்பு [Realigns in the Opposite Direction] செய்து கொள்ளும்

    மோனிகா கோர்ட்டே  [Scientific Director, Niemegk Geomagnetic Observatory, Germany]

    Iside the Earth

    கடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன.  சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது.  அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது.  பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்ப தாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன.  துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை.  அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம்.  அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    பூமி அடுத்து எப்போது துருவங்களை மாற்றிக் கொள்ளும் ?

    நமது பூகோளத்தின் ஆயுட் காலத்திற்குள் பன்முறைத் துருவ மாற்றங்கள் நேர்ந்துள்ளதாகப் பூதள விஞ்ஞானிகள் கருதுகிறார்.   அப்படிக் கூறுவதற்கு எரிமலை அடுக்குப் பாறைப் பதிவுகளே  தக்க நிரூபணம் தருகின்றன.   முந்தைய பூகாந்த மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த தாகப் பாறைப் பதிவுகள் மூலம் அறியப் படுகின்றது.   அப்போது தான் கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களைத் தட்டி  அக்கினி உண்டாக்கும் “கனல் சக்தி” [Fire Power] திறன் கண்டுபிடிக்கப் பட்டது.

    Earth's Core

    அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக் கழகத்தில் பூகோள உள்ளமைப்பைக் காட்டும்,  உலகிலேயே பெரிய சுழற்சி கோளம் அமைக்கப் பட்டுள்ளது.  துருப்பிடிக்கா இரும்பில் 10 அடி விட்டத்தில் வடிக்கப் பட்டிருக்கிறது.   அதற்குள் சிறு கோளம் ஒன்றும் உள்ளது.  இரு கோளங்களுக்கும் இடையில் 250 டிகிரி F உஷ்ணத்தில் சூடாக்கப் பட்ட , 12 டன் திரவ சோடியம் நிரப்பப் பட்டுள்ளது.  அதுவே திரவ உலோகமுள்ள பூமியின் உள்ளே இருக்கும் மேல் உட்கருவாகக் [Liquid Iron Outer Core] கருதப் படுகிறது.  மிக வேகமாய்ச் சுழலக் கூடிய அந்தக் கோளத்தில் பல்வேறு பூதளப் பௌதிகச் சோதனைகள் செய்து காட்ட முடியும்.   அச்சோதனை களில் ஒன்றுதான் பூதளப் பௌதிக விஞ்ஞானி, டானியல் லாத்திரப் [Geophysicist Daniel Lathrop] முன்னறி விக்க முயலும், அடுத்து எப்போது பூகோளத் துருவமாற்றம்  நிகழப் போகிறது எனப்படுவது.  இந்த முன்னறிப்பை வெளியிட்டது ரஷ்யக் குரல் எனப்படும் “வாய்ஸ் ஆஃப்  ரஷ்யா” [Voice of Russia].   அறிவித்த நாள் :  ஏப்ரல் 29, 2014.

    பூகோளத் துருவ மாற்றத்தால் என்ன கேடுகள் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.   அடுத்த துருவ மாற்றத்தில் மனித இனத்துக்கு தீங்கு எதுவும் நேராது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.  சென்ற துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்திருக்கிறது.   துருவ மாற்றம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது.  அது முடிய ஆயிரக் கணக்கான ஆண்டுகள் [1000 முதல் 10,000 வரை] ஆகலாம்.  துருவ மாற்றம் நிகழ்ந்தால் பூமியின் சுழற்சி நின்று எதிர்ப்புறம் சுற்றுமா ?  பரிதி உதயமாகும் கிழக்குத் திசை வேறுபடுமா ?  எதிர்ர்பாராத இந்த மாறுபாட்டுகளால் பருவ மாற்றங்கள் நேருமா ?  இவை போன்ற கேள்விகள் எழுகின்றன ! ஆனால் இவற்றுக்குச் செம்மையான பதில் இதுவரை கிடைக்க வில்லை.  அடுத்த பூகோளத் துருவ மாற்றம் 400,000 வருடங்கள் கடந்து நிகழும் என்று அனுமானிக்கப் படுகிறது.

    Fig 1 Polat Shift in Earth

    “பூமியின் காந்தத் தளம் நமக்கும், நமது சூழ்வெளிக்கும் பரிதியின் தீவிரப் புயலிலிருந்து (Solar Wind) கேடுகள் விளையாதபடிக் கவசமாய்ப் பாதுகாப்பாக இருக்கும் ஓர் இயற்கை ஆற்றல்.  பறவை இனத்துக்கும், மனித இனத்துக்கும் கடற் பயண முறைக்குத் திசைகாட்டும் (Navigational Direction) ஓர் அரிய ஆற்றல் அது !  பரிதிப் புயல்கள் தீவிரமாய் அடிக்கும் போது மின்சாரப் பரிமாற்றமும், தொலைத் தொடர்புச் சாதனங்களும் பழுதடைந்து போகும்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    “கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன !  ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன !  கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் !”

    டேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.

    Fig 1B Magnetic Pole Shift

    “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.”

    பேராசிரியர் பிராடு ஸிங்கர்.

    பூகோள வரலாற்றில் நேர்ந்துள்ள வடதென் துருவ மாற்றங்கள் !

    பூமியின் வடதென் காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல !  அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் [1000 – 10,000] ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன !  பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் !  அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக்கிறது !  பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் வியப்பூட்டும் வண்ணம் அப்போதையப் பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன !

    Fig 1C Structure of Earth

    பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப் பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது !  பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன !  கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Latitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது !  அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது !  மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது !

    Fig 1E Relative Size of Sunspots

    2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது.  அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது !  அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது !  தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளிலிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது.  ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை !

    Fig 1 Polat Shift in Earth

    பூமியின் துருவ மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன ?

    பூகோளத்தின் துருவ மாற்றங்கள் தாறுமாறான கால இடைவெளிகளில் இதுவரை நேர்ந்துள்ளன.  சமீபத்தில் உண்டான துருவ மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது.  ஆயினும் ஏன் அவ்விதம் நேர்கிறது என்று விஞ்ஞானிகள் வியப்புறுகிறார்கள்.  வெப்பக்கனல் திரவ இரும்புள்ள உட்கருவில் கொந்தளிக்கும் மின்னோட்டம் (Electric Current) உண்டாக்கும் பூமியின் பிரதமக் காந்தத் தளம் துருவ முனைத் திசையைத் திருப்புகிறது !  அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் !  பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றி வரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !” என்று விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகப் பூதளவியல் பேராசிரியர், பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Earth magnetic field -2

    பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறை களைக் (Patterns) கண்டறிந்தனர்.  வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Fig 4 Power of Geodynamo

    பரிதிக் காந்த முனைத் திருப்பத்தால் ஏற்படும் இயற்கைக் கேடுகள்

    2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் ! சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன !  பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை !  அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles).  துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன.  அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.

    11,500 ஆண்டுகளில் மீண்டும் வரப் போகும் பயங்கரப் பனியுகக் காலத்தின் மையத்தில் புவி மாந்தர் இருப்பதாகப் பூதளவியல் விஞ்ஞானிகள் நினைவூட்டி வருகிறார்.  அந்தச் சுழல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது துருவத் திருப்பமும், பூத எரிமலை வெடிப்புகளும், அசுரப் பூகம்பங்களும், சுனாமிகளும், தீவிர ஹர்ரிக்கேன்களும் மக்களைப் பாடுபடுத்திக் கொந்தளிப்பில் தவிக்க வைக்கலாம் !  2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன !  அவற்றைத் தூண்டும் மூல காரணங்களில் ஒன்றாகப் பூகாந்த முனை நகர்ச்சிகள் பங்கு பெறுமா என்பதைப் பூதள விஞ்ஞானிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    [தொடரும்]
    +++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
    11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)
    11 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    13 Pure Energy System News: Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton

    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 -2013 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)

    18.http://worldlywise.pbworks.com/w/page/26834992/The%20causes%20and%20effects%20of%20earthquakes%20and%20how%20people%20respond%20to%20them
    19. http://www.livescience.com/18426-earth-magnetic-poles-flip.html [February 10, 2012]
    20. http://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal [June 21, 2015]

    21.http://www.spacedaily.com/reports/When_next_Earths_magnetic_field_reverse_begins_and_what_consequences_for_mankind_will_it_have_999.html  [April 29, 2014]

    22. http://www.sciencedaily.com/releases/2015/07/150707101952.htm  [July 7, 2015]

    23. http://www.spacedaily.com/reports/Improved_age_for_Earths_latest_magnetic_field_reversal_using_radiometric_dating_999.html  [July 8, 2015]

    24.  https://www.ngdc.noaa.gov/geomag/faqgeom.shtml  [Frequently Asked Questions]

    24[a]  http://image.gsfc.nasa.gov/poetry/venus/RevScience.html  [NASA 2003]

    25. https://en.wikipedia.org/wiki/Brunhes%E2%80%93Matuyama_reversal  [December 25, 2016]

    26.  http://www.wow.com/wiki/Brunhes-Matuyama  [December 16, 2016]

    27.  https://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal  [January 30, 2017]

    28.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/nasa-earths-last-full-magnetic-pole-reversal-occured-700000-years-ago-are-we-due-the-earths-continuously-changing-ma.html  [February 1, 2017]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]   February 3,  2017  [R-1]

    https://jayabarathan.wordpress.com/

    Share
  • வானிடம் மானிடம்

     

    கவிஞர் ஜவஹர்லால்

    இரவு நேரம் வானைப் பார்த்தால்
    இதயம் பறக்கிறது;–அங்கே
    உறவு கொண்டே திளைத்து மகிழ
    உணர்வு துடிக்கிறது.

    கண்ணைச் சிமிட்டி அழைக்கும் மீன்கள்
    கனவு படைக்கிறது;–என்றன்
    எண்ணம் விண்ணில் இறக்கை யின்றி
    எங்கும் பறக்கிறது.

    நிலவின் தூய்மை என்னுள் பலவாய்
    நினைவை அசைக்கிறது;–மண்ணில்
    நிலவும் தூய்மை யற்ற தன்மை
    நெஞ்சை அலைக்கிறது.

    முழுமதி வானை ஆளும் காட்சி
    மனசை நிறைக்கிறது;– அந்த
    முழுமதி தேய்ந்து வளர்தல் ஏனோ ?
    வினாவும் பிறக்கிறது.

    திங்கள் முழுசாய் விண்ணில் தவழச்
    சிந்தை திகைக்கிறதோ ?—பூமி
    எங்கும் ராகு கேது கண்டே
    இளைத்து வளர்கிறதோ?.

    கொடுமை சிரிக்கக் கண்டே வான்தான்
    கொப்புளங் கொள்கிறது;–அந்த
    வடுவை மீன்கள் என்றே மண்தான்
    வாழ்த்தி மகிழ்கிறது.

    நேற்றைய வானம் இன்றைக் கில்லை
    விந்தை நிகழ்கிறது;–என்றும்
    மாற்றமே நிலையாம் என்னும் உண்மை
    வானில் திகழ்கிறது.

    வளர்ச்சி தேய்வு வாழ்க்கை இயல்பு
    வான்மதி சொல்கிறது;–உள்ளத்
    தளர்ச்சி நீக்கி வலம்வரின் வெற்றி
    கதிரவன் உரைக்கிறது.

    அடடா ! வானும் நிலவும் மீனும்
    தத்துவம் பொழிகிறது; –அதனை
    எடுத்துக் கொள்ள விரும்பா திங்கே
    இதயம் அலைகிறது.

    வானிடம் எத்தனை எத்தனை தத்துவம்
    வனப்பாய் விரிகிறது;–எதையும்
    மானிடம் கற்பதே இல்லை எங்கும்
    மயக்கமே தெரிகிறது.

    வானாய் நெஞ்சம் மாறி நிலவின்
    குளுமை கொஞ்சட்டும்! –இன்பத்
    தேனை வாரி வழங்கும் மீனாய்த்
    தினமும் விஞ்சட்டும்.

    ரவியின் கைகள் கவிஞர் நெஞ்சை
    இதமாய்த் தழுவட்டும்!—இந்தப்
    புவியில் கவிஞர் ரவியின் புகழைப்
    பாடித் திளைக்கட்டும்.
    ( 19-05-99 ல் கிழக்குக் கடற்கரைச் சாலையில்
    ஒரு பேரில்லத்தில் திரு, ரவி, பாரதி கலைக்
    கழகம் சார்பில் அமைத்து நடத்திய மறக்க
    முடியாத முழுநிலாக் கவியரங்கம். )

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    சினம்மிகுந்த மாமன் சிறைபிறந்து ஆயர்
    இனம்புகுந்து வாழ்ந்த இடையன் -மணம்குவிந்த
    மண்ணணைநீர் மேகத்து வண்ணனை மாற்றான்தாய்க்
    கண்ணனை நெஞ்சே கருது….
    சூழ்ச்சி யுடன்வந்த பேழ்ச்சி முலைபற்றி
    மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
    கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….(6)….24-03-2011

    பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
    ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
    எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
    கண்ணனை நெஞ்சே கருது….

    பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
    முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
    கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    அப்பண ஆதி அனந்தனில் தூங்குவோன்
    சொப்பனம் இவ்வுலக சாராம்சம் -அற்பநான்
    எண்ணம் தொலைத்து எழுவாய் விழிப்புடன்
    கண்ணனை நெஞ்சே கருது….
    இதுநிஜமாய் ஆகும் அது பொய்யாய்ப் போகும்
    விதவிதமாய் எண்ணல் விடுத்து -எதுவரினும்
    கண்ணணைந்த போதுதிக்கும் காரிருள் வண்ணத்து
    கண்ணனை நெஞ்சே கருது….

    எங்கரி என்றே இரணியன் கேளும்முன்
    அங்கொரு தூணில் அதிர்ந்தவன் -சங்கரி
    அண்ணனை ஆகாய வண்ணனை ஆனந்தக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
    கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
    திண்ணிய தோளில் துலங்கும் துவாபரக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    காரோத வண்ணனின் பேரோத ஆயிரம்
    நீரோடை போல்தெளிவு நம்வாழ்வில் -ஆராத
    இன்னமுதை தீந்திருக் கண்ணமுதைக் கற்கண்டைக்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • விவசாயிகளும் – விளைபொருட்களும்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    விவசாய விளைபொருட்கள் விவசாயிகளுக்கும் பொது மக்களும் உரிய விலை கிடைக்கிறதா? உதாரணத்திற்கு முட்டைகோஸ் மேட்டுப்பாளையம் சந்தையில் கிலோ  ₹ 4 க்கு விற்பனை ஆகிறது. இதுவே பொது மக்களைச் சென்றடையும்போது கிலோ ஒன்றிற்கு  ₹ 20 – 25 ஆகிறது. இதுவே சென்னை போன்ற பெரு நகரங்களுக்குச் செல்லும்போது  ₹ 30 ஐத் தொட்டுவிடுகிறது. விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைப்பதில்லை. பொது மக்களுக்கும் நியாய விலையில் கிடைப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை. இதற்கு அரசு குளிர்ப்பதனப்படுத்தும் கிடங்குகளை விவசாயிகள் எளிய முறையில் பயன்படுத்தும் வசதியும், விவசாயிகள் / பொதுமக்கள் நேரடி விற்பனை சந்தைகளை உருவாக்க வேண்டியது அவசியம். தற்போதுள்ள உழவர் சந்தைகளை உயர் தொழில்நுட்ப வசதிகளோடு விரிவுபடுத்தினாலே இந்தக் குறைகள் பெருமளவில் தீர்ந்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் வளமான வாழ்வு நிச்சயம்.

    Share
  • நிதிநிலை அறிக்கை

    பவள சங்கரி

    சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டத் தொகைகள் எத்தனை சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளன, மீதமுள்ள தொகைகள் இந்த ஆண்டுத் திட்டங்களோடு இணைக்கப்படுமா. மாதாந்திர வாரியாக இந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் அரசு பெறுகிறதா? பல திட்டங்கள் (நிர்பயா திட்டம் போன்று) தொகை அறிவிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாமலே பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதற்கு ஏதாவது நடவடிக்கை அரசு எடுக்குமா. இதைப்பற்றி எந்தத் தகவலும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    Share
  • BIT COIN – பிட் காயின்

    பவள சங்கரி

    மத்திய ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை!. – BIT COIN – பிட் காயினை நம்பாதீர்கள். பிட் காயின் என்பது உரூபாயோ, டாலரோ அல்ல. இது ஆன்லைனில் பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்தக்கூடியது. இன்று பெரும்பாலானவர்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருக்கிறோம்பிட் காயினை எந்த நாடும், ரிசர்வ் வங்கியும் அங்கீகாரம் செய்யவில்லை. நம் ரிசர்வ் வங்கி இரண்டாவது முறையாக எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. பல இலட்சம் கோடிகள் இழப்பதற்கு முன்பு விழித்துக்கொள்வது அவசியம்..

    Share
  • மாதச்செலவுத் திட்டம்

    பவள சங்கரி

    மாதச்செலவுத் திட்டம் போடும்போது செலவுக் கணக்கை மட்டும் எழுதாமல் எந்தப் பொருள் எங்கு எப்படி வாங்கப் போகிறோம் என்பதையும் திட்டமிடுதல் அவசியம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் உளுந்து பற்றி பார்ப்போம். 1 கிலோ உளுந்தின் விற்பனை விலை  ₹ 96. பர்மா உளுந்து ₹ 76. மொத்த விற்பனை மண்டியில் வாங்கினால் 1 கிலோ உளுந்து ₹ 120 க்கு வாங்கலாம். பெரிய மால், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என்று போனால் ₹ 140. சின்ன மளிகைக் கடையில் குறைந்தபட்சம் ₹ 150. அதுவும் நோட்டு போட்டு மாசக் கடனுக்கு வாங்குபவர்களுக்கு கடைக்காரர் போடுவதுதான் விலை.. ஆக கிட்டத்தட்ட இரண்டு பங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அரசு தலையிட்டு, தர நிர்ணயம், விலைக் கட்டுப்பாடு கொண்டுவந்தால் மத்தியதர மக்கள், ஏழை எளியவர்களுக்கு பயன்படும்.

    Share
  • குற்ற உணர்ச்சியே கருணையாக…

    நிர்மலா ராகவன்

    “சாப்பிட்டு முடி, செல்லம்! சமர்த்தில்லே!”

    ஞாயிறு தினசரியில் காளைமாட்டின் படத்தைப் பார்த்து, `நந்தி பகவானே! உனக்கு வந்த கதியைப் பாத்தியா?’ என்று, மானசீகமாக கைலாயத்திற்கே போய்விட்டிருந்த கமலநாதன் மனைவியின் குரலைக் கேட்டு நனவுலகிற்கு வந்தார்.

    இப்படியா பரிந்து, பரிந்து ஒரு பூனைக்குட்டிக்கு ஆகாரம் அளிப்பார்கள்?

    வீரம், பண்பாடு என்றெல்லாம் பேசுகிறவர்கள் `கருணை’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இவளிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிந்தனை போக, சிரிப்பு வந்தது க.நா.விற்கு.

    ஒரு வேளை, அவளுடைய குற்ற உணர்ச்சிதான் இப்படி இன்னொரு வழியில் வடிகால் காண்கிறதோ?

    அன்று அழுதபடி வீட்டுக்குள் வந்தாள் விமலி. தன்னுடன் போட்டி போட்டு சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்த மடிக்கணினி மீதிருந்து கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தார் க.நா.
    அவர் எதுவும் கேட்குமுன், “ஒரு பூனைக்குட்டிமேல காரை ஏத்திட்டேன். அது அப்படியே நசுங்கி..,” மேலே தொடரமுடியாது, விசும்பினாள்.

    `இதற்கா இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்!’ என்பதுபோல் புருவத்தைத் தூக்கினார் க.நா.

    அவர்கள் இருந்த பகுதியில் எப்போதும் ஏதாவது ஒரு பெரிய மாடி வீட்டை இடித்து, புதிதாக ஏதாவது கட்டிக் கொண்டிருப்பார்கள் சீனர்கள். `இவர்களுக்கெல்லாம் எங்கிருந்துதான் பணம் கொட்டுகிறதோ!’ என்று அதிசயித்திருக்கிறார் க.நா. ஒரு நண்பரை விசாரித்தபோது, `Feng Shui (ஃபெங் ஷ்வி — சீனர்களின் வாஸ்து) சரியாக இல்லை!’ என்றார்.

    கட்டுமானத் தொழிலாளிகள் வேலை செய்ய வரும்போது தமது உபகரணங்களுடன், எங்கிருந்தாவது ஒரு பூனைக்குட்டியையும் தூக்கி வருவது வழக்கமாக இருந்தது. சில மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகள் கழித்து, அங்கு வேலை முடிந்ததும், அவர்கள் போய்விடுவார்கள் — பூனையை விட்டுவிட்டு.
    இதனால், செல்வம் கொழித்த அந்த குடியிருப்புப் பகுதியில் இருந்த நான்கு தெருக்களிலும் கறுப்பு, வெள்ளை, பழுப்பு, சாம்பல் வண்ணங்களில் பூனைகள் உலவிக்கொண்டு, தங்கள் இனப்பெருக்கத்திற்குத் தம் கடமையைச் செம்மையாகச் செய்துகொண்டிருந்தன.

    `நீ நிதானமா பாத்து காரை ஓட்டியிருக்கணும், விமலி. நம்ப தெருவிலே எப்போ ஒரு பூனையோ, நாயோ குறுக்கே வரும்னு சொல்லவே முடியாது!’ என்றார், நிதானமாக.

    தன் துயரத்தில் பங்கு கொள்ளாது, புத்திவேறு சொல்கிறாரே! விமலியின் துக்கம் ஆத்திரமாக மாற, “ஒங்ககிட்ட போய் சொல்றேனே!” என்று இரைந்துவிட்டு, `இதயமே இல்லாத ஜன்மம்!’ என்று முணுமுணுத்தபடி அப்பால் போனாள்.

    “இங்கே வந்து பாருங்களேன்!” என்று வாசலிலிருந்தே உற்சாகமாகக் கூவிக்கொண்டு வந்தாள் விமலி.
    முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டார் க.நா. நிம்மதியாக ஆடுவோம் என்றால் விடுகிறாளா? கணினியை அருகிலிருந்த மேசைமேல் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

    மனைவி கையில் மூன்று நிறங்கள் கலந்த ஒரு பூனைக்குட்டி!

    “ஏது?”

    “பார்க்கிலே இருந்திச்சு. நடந்து போறப்போ பாத்தேனா! தூக்கிட்டு வந்துட்டேன்”.

    “திருடிக்கிட்டு வந்தேன்னு சொல்லு!” என்று திருத்தினார். “அதோட அம்மா தேடாதா?”

    அவள் முகம் இறுகியது. “ஒண்ணு காணாமப் போனா அம்மா பூனைக்குத் தெரியவா போகுது! மூணு, நாலு குட்டி போட்டிருக்கும்!” என்று தன் குற்ற உணர்ச்சியை மறைத்துக்கொள்ளப் பார்த்தாள்.

    பத்து குழந்தைகள் பெற்ற தாய்கூட ஒரு குழந்தை இறந்துவிட்டால், வாழ்நாளெல்லாம் துக்கத்தில் உழலுகிறாளே! பூனையும் தான் ஈன்றதைப் பால் கொடுத்து வளர்க்கும் ஜீவன்தானே? அதற்கு மட்டும் உணர்ச்சிகள் கிடையாதா? அல்லது, எத்தனை குட்டிகளை ஈன்றோம் என்பதுதான் தெரியாதா?

    இவளுக்கு ஏன் இந்த சின்ன விஷயம் புரியவில்லை?

    பெண்ணாக இருந்தால் மட்டும் போதாதோ? தாய்மை அடைந்தால்தான் இன்னொரு தாயின் வேதனை புரியுமோ?

    தான் ஏதாவது சொல்லப்போனால், அழுது ஆகாத்தியம் செய்வாள். அன்று சமையல் வாயில் வைக்க வழங்காது என்று வாயை மூடிக்கொண்டார் க.நா. எல்லாம் இருபது ஆண்டுகால இல்லற வாழ்க்கை கற்றுக்கொடுத்த விவேகம்தான்.

    பிள்ளை இல்லாவீட்டில் அந்த பூனைக்குட்டி துள்ளி விளையாடியது. தினசரியைக் குதறியது. சர்வசுதந்திரமாக சோபாவில் படுத்து, பகலெல்லாம் தூங்கியது. சாப்பாட்டு மேசையில் ஏறி, அதன்மேலிருந்தவற்றை முகர்ந்து பார்க்கவும் தவறவில்லை.

    `அடீ! அடீ!’ என்று அதன் பின்னாலேயே ஓடும் மனைவியைப் பார்த்தால் வேடிக்கையாக இருந்தது கமலநாதனுக்கு. பரிதாபமும் உடன் எழுந்தது.

    முன்பெல்லாம், பொழுதைப் போக்க வேறு வழி தெரியாமல், டி. வி. முன்னால் ஐக்கியமாகிவிடுவாள் விமலி.

    சும்மா கண்ணுக்கு மட்டும் வேலை கொடுத்துக்கொண்டு இருக்க முடியுமா? `நாங்களும் இருக்கிறோம்!’ என்பதுபோல, கையும், வாயும் தங்கள் பாட்டில் காலி செய்யும், கச்சாங் (மலாயில் கடலைக்காய்), மிக்ஸ்சர் போன்ற நொறுக்குத்தீனி அடங்கிய பிளாஸ்டிக் பைகளை.

    `உங்கள் உடம்பைக் கொஞ்சம் குறைக்கலாம். ஏதாவது உடற்பயிற்சி செய்யுங்கள்!’ என்று பல முறை மருத்துவர்கள் கூறியபின், அவ்வப்போது அருகிலிருந்த பூங்காவிற்கு உலாவச் செல்வாள்.

    அப்படித்தான் அந்தப் பூனைக்குட்டி அவளுடைய வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக வந்து சேர்ந்திருந்தது.

    “ஒன் பூனைக்குப் பேர் கிடையாதா?” என்று ஒரு நாள் மனைவியைச் சீண்ட, “குட்டின்னு பேர் வெச்சிருக்கேன். நல்லா இருக்கில்லே?” என்றாள் அப்பாவித்தனமாக. அவர் தன் செல்லப்பிராணியின்மேல் அக்கறை வைத்திருக்கிறாரே என்ற மகிழ்ச்சி பிறந்தது அவளுக்கு.

    “ஒரிஜினலா இருக்கு!” என்றவரின் கேலியைப் புரிந்துகொள்ள முடியவில்லை அவளால். இன்னும் பூரித்தாள்.

    வேளை தவறாது தனக்கு ஆகாரமும், குடிநீரும் கொடுத்துவந்த விமலிக்கு ஏதோ தன்னால் ஆன உதவியாக, தான் மிதித்துக் கொன்ற பல்லியையும், கரப்பான் பூச்சியையும் அவள் செருப்பின்மேல் கொண்டுவந்து போட்டது குட்டி.

    அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. “நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேண்டா, குஞ்சு!” என்று கொஞ்சினாள்.

    தன் ஆசாரத்தைக் கொஞ்சம் விட்டுக்கொடுத்து, பேரங்காடிகளில் பூனைகளுக்கென பிரத்தியேகமாக விற்கும் உணவை வாங்கிவந்தாள்.

    “நாத்தம்!” என்று முகத்தைச் சுளித்த கணவரைப் பார்த்துச் சீறினாள். “பின்னே என்ன, பூனை தயிர் சாதமா சாப்பிடும்? மீன் வாசனை அப்படித்தான் இருக்கும். நீங்க ஒண்ணும் அதுக்குப் போட வேண்டாம்! நான் பாத்துக்கறேன்!”

    குட்டியின்மேல் தனக்கிருந்த பிடிப்பை கணவன் புரிந்துகொள்ள மறுக்கிறாரே என்ற ஆதங்கம் சிறிது நேரத்தில் மறைந்தது — “இந்தக் குட்டி ரொம்ப அழகா இருக்கு, ஆன்ட்டி!” பக்கத்து வீட்டுக்கு வேலை நிமித்தம் வந்திருந்த தொழிலாளி கூறியபோது. வீட்டுக்கு வெளியே இருந்த செம்பருத்திச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த விமலிக்குப் பெருமை தாங்கவில்லை. “எந்த ஊரிலேருந்து வந்திருக்கீங்க?” என்று விசாரித்தாள், மலாயில்.

    “வியட்நாம்!” என்று பதில் வந்தது. பிறகு, அவளுடைய அடுத்த கேள்வியை எதிர்பார்த்தவன்போல், “என் பேரு டாவ்!” என்று தெரிவித்தான். சோனியாக இருந்தான். ஆனால், கடினமான உழைப்பால் பெற்ற வலு கைகளில் தெரிந்தது.

    ரப்பர் குழாயிலிருந்து வெளிவந்த தண்ணீர் தன்மேல் தெறித்துவிடாமல் ஜாக்கிரதையாக, சற்றுத் தொலைவில் நின்று, வைத்த விழி வாங்காமல் எஜமானியம்மாளைப் பார்த்துகொண்டிருந்தது குட்டி.
    அதைப் பார்த்ததும் சிகரெட்டால் கறுத்திருந்த அவன் உதடுகள் சிரிப்பில் விரிந்தன. அதைத் தூக்கி அணைத்து, அதன் மென்மையான உடலை அருமையாகத் தடவிக்கொடுத்தான். “புசு புசுன்னு அழகா இருக்கு!”

    சில வாரங்கள் கடந்தன. டாவும் குட்டியும் நண்பர்களாகிப்போனார்கள்.

    “குட்டியைப் பாத்தீங்களா? நேத்து சாயந்திரத்திலேருந்து காணோமே! சாப்பிடக்கூட வரலே!” மனைவியின் கவலை தோய்ந்த குரலைக் கேட்டு நிமிர்ந்தார் க.நா.

    “பெரிசாப் போச்சில்ல? பாம்பு, தவளை எதையாவது பிடிச்சுத் தின்னிருக்கும்!” என்று அசுவாரசியமாகப் பதிலளித்தார். “தானே நாளைக்கு அதிகாலையில வந்து..,” சட்டென்று தன்னை அடக்கிக்கொண்டார். `மியாவ் மியாவ்னு கத்தி பிராணனை எடுக்கும், பாரு!’ என்று சொல்ல நினைத்ததைச் சொல்ல அவருக்கென்ன புத்தி மாறாட்டமா!

    ஆனால் மறுநாள் குட்டி வரவில்லை.

    இரண்டு நாட்களாகின. விமலியின் துயரம் ஆத்திரமாக மாறியது.

    “அந்த வியட்நாம் தடியன் குட்டிகிட்ட பாசமா இருக்கிறமாதிரி நடிக்கிறபோதே எனக்குச் சந்தேகம்தான்!” என்று பொரிந்தாள்.

    கெட்டவனுடைய உடல் எப்படி இருந்தால் என்ன? அவனைத் `தடியன்’ என்று திட்டியதும் மனம் சற்று சமாதானம் அடைந்தது.

    “அவன் எதுக்காக நடிக்கணும்?”

    “தெரியாதமாதிரி கேக்கறீங்களே! பஞ்சம் பிழைக்க மலேசியாவுக்கு வந்திருக்கிறவன்! சிக்கனும் மட்டனும் வாங்கக் கட்டுப்படியாகுமா? குட்டியோ கொழுகொழுன்னு இருக்கு!”

    “சீச்சீ!”

    பரிவுடன் அவன் குட்டியை அணைப்பதைப் பார்த்திருந்தவருக்கு அவள் சொல்வது அபத்தம் என்று பட்டது.

    `ஒரு வேளை, இவள் சொல்வதில் உண்மை இருக்குமோ?’ என்ற சந்தேகமும் உடன் எழாமலில்லை.

    `இந்தப் பூனையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு இனாம் தரப்படும்!’ என்று கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு, தெருக்கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் துண்டுக் காகிதங்களின் ஒரே மாதிரியான வாசகம் நினைவில் எழுந்தது. சில சமயம், பூனை மட்டுமின்றி, அழகழகான நாய்களின் படங்களும் இருக்குமே!

    “விடு, போ! நாளைக்கு சனிக்கிழமை! லீவு! கடைக்குப் போய் அழகான பாரசீகப் பூனை வாங்கிக்கலாம்,” என்றார், சமாதானமாக.

    “எனக்கு குட்டிதான் வேணும்!”

    தாய்மை அடையாவிட்டால், ஒரு பெண் என்றுமே குழந்தைத்தனம் மாறாமல் இருந்துவிடுவாளோ என்று அவரது எண்ணம் ஓடியது.

    மறுநாள் காலை ஒன்பது மணிக்குச் சாவகாசமாகத் தூங்கி எழுந்த க.நா., பக்கத்து வீட்டிலிருந்து பெரிய இரைச்சல் கேட்க, வாசலுக்கு விரைந்தார்.

    சிறிது பொறுத்து, வீடு திரும்பியவர் முகத்தில் ஏதேதோ உணர்ச்சிகள். அவைகளை வெளியில் கொட்ட மனைவியைத் தேடி சமையலறைக்கு வந்தார். “ஒன்னோட குட்டியைத் தூக்கிவெச்சுட்டுக் கொஞ்சுவானே! அந்த வியட்நாம்காரன் அரைகுறையாக் கட்டியிருந்த மாடி பால்கனியிலேருந்து விழுந்துட்டான்!”

    நறுக்கிக்கொண்டிருந்த கீரையை அப்படியே வைத்தாள் விமலி. அவர் சொல்ல வந்தது இன்னும் சுவாரசியமாக இருக்கும்போலிருந்தது. “உசிரு போயிடுச்சா?” ஆவலுடன் கேட்டாள்.

    “சரியான அடி! வலி தாங்காம துடிக்கிறான், பாவம்! `ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போடா’ன்னு நான் மேஸ்திரிகிட்ட சொல்றேன், அவன், `அதெல்லாம் வேணாம், ஸார். சும்மா மசாஜ் செஞ்சா சரியாப்போயிடும்!’ அப்படிங்கிறான்”.

    கணவர் எவனோ ஒருவனுக்காக அவ்வளவு உணர்ச்சிவசப்படுவது அவளுக்கு அலுப்பாக இருந்தது.

    க.நா. தன்பாட்டில் பேசிக்கொண்டே போனார்: “அந்த ஆள் சட்டபூர்வமா இங்க வரலியாம். அதனால அவனை வேலைக்கு வெச்சிருந்த குத்தத்துக்காக இந்த மேஸ்திரியைத் தண்டிப்பாங்க. கொஞ்சமா கூலி குடுத்து, நிறைய வேலை வாங்கலாமேங்கிற பேராசை இவனுக்கு. சீனவங்க புத்தியைக் காட்டிட்டான்!” யார்மேலாவது குற்றம் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அவர்களுடைய இனத்தையே மொத்தமாகப் பழித்தால்தான் சிலருக்குத் திருப்தி.

    விமலிக்கும் திருப்தியாக இருந்தது. “என் குட்டியை வெட்டித் தின்னானே, படுபாவி! நான் எவ்வளவு துடிச்சிருப்பேன்! இப்போ அவனும் படட்டும்!” என்று சபித்தாள்.

    தன்னைப்போல ஓர் ஆணைப்பற்றி இவள் — என்னதான் மனைவியாக இருந்தாலும், ஒரு பெண் — தரக்குறைவாகப் பேசுவதா! க.நா.வின் ஆண்மை அவரை உசுப்பேற்றியது.

    “அவன் தின்னதைப் பார்த்தாப்போல பேசாதே, விமலி. சாப்பிட வழியில்லேன்னுதானே இப்படி சொந்தபந்தம் எல்லாரையும் விட்டுட்டு, நாடு விட்டு நாடு, இங்கே வந்திருக்கான்?” என்று கண்டித்தார். “இருபது முப்பது பேரோட ஒரே அறையிலே தங்கிக்கிட்டுத் திண்டாடறான், பாவம்!” மீண்டும் பரிதாபப்பட்டார்.

    அப்படியும் மனம் ஆறாது, “பூனைகிட்ட காட்டற பரிவில கொஞ்சமாவது இவங்கமேல இருக்கா ஒனக்கு?” என்று, அபூர்வமாக மனைவியை எதிர்த்தார், எதிர் விளைவுகளைப்பற்றி யோசிக்காது.

    இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை அற்ற நாட்கள் தொடர்ந்தன. அவரோ, அதைச் சற்றும் பொருட்படுத்தாது, மேஸ்திரியிடம் பேசிக்கொண்டிருந்தது அவள் காதிலும் விழாமல் போகவில்லை.
    அவனுடைய காலை வெட்டி எடுத்துவிட்டார்களாமே!

    `நன்றாக வேண்டும்!’ என்று கறுவினாள்.

    நள்ளிரவு.

    “மியாவ்!”

    விமலிக்கு உடனே விழிப்புக் கொடுத்தது. இந்த வேளையில் தனியாக வாசல் கதவைத் திறந்துகொண்டு வெளியே போவதா! தனது கோபத்தை மறந்தவளாக, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பினாள்.

    “வாசல்லே பூனை கத்துது. நம்ப குட்டியாத்தான் இருக்கும். வாங்க, பாக்கலாம்!” என்று பெரிய எதிர்ப்புடன் மாடிப்படியின் கீழ் இறங்கி ஓடினாள்.

    இரவு வேளைகளில் வாசலில் போட்டிருக்கும் காலணிகளைக் களவாடுபவர்களைத் தவிர்க்கவெனப் போடப்பட்டிருந்த விளக்கு வெளியில் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது.

    அங்கே குட்டி மட்டுமில்லை, அதனுடன் இன்னொரு குட்டி, சிறிய பந்துமாதிரி!

    “இங்கே பாருங்களேன்! குட்டி அம்மாவா ஆகிடுச்சு!” பூரிப்புடன் விமலி கத்தியது அந்த நிசப்தமான இரவில் நாலைந்து வீடுகளுக்குக் கேட்டிருக்கும்.

    `இனிமேல் நம்மை எங்கே கவனிக்கப்போகிறாள்!’ என்ற சிறுபிள்ளைத்தனமான பொறாமையும் எழ, “அந்த வியட்நாம்காரனைச் சபிச்சியே!” என்று குத்திக் காட்டாமல் இருக்க முடியவில்லை க.நா.வால்.

    அவள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பெரிய குட்டி, சின்ன குட்டி என்று பெயர் வைக்கலாமா என்ற யோசனையில் ஆழ்ந்துபோனாள்.

    Share
  • கவிஞர் சுரதாவின் கவிதைகளில் குமுகாயச் சிந்தனைகள்

    முனைவர் ச.அருள்

    முன்னுரை 

         மனிதன் சமுதாயம் என்ற அமைப்பில் இருந்து தனித்து வாழ்பவன் அல்லன். ஏனெனில் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள், உணர்வுகள் அனைத்தும் சமுதாயத்தின் வழியேதான் நிறைவு பெறுகின்றன. பரவிக்கிடக்கும் தேவைகளைப் பெறத் தனி மனிதன் இன்னொரு மனிதனை நாடுகின்றான். தன்னுடைய உணர்வுகளைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ளாமல், மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள எண்ணுவது மனித இயல்பு. இவ்வாறு தேவைகளும், எண்ணங்களும், தொடர்புகளும் பரிமாறப்படுவதால் சமுதாய அமைப்பு விரிவடைகிறது. கவிஞர்கள் சமுதாயத்தில் ஓர் அங்கமாகத் திகழக் கூடியவர்கள். படைப்பாளர்கள் வரிசையில் கவிஞர்களுக்கான இடம் முதன்மையானதாகும். சமுதாயத்தின் குரலைப் படியெடுத்து வெளியிடும் திறனில் கவிதைகள் தனியிடம் பெறத்தக்கன. அவ்வகையில் உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதைகள் வழிக் குமுகாயச் சிந்தனைகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    குமுகாயம் 

         குமுகாயத்தில் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் கொள்ளவேண்டிய குமுகாயச் சிந்தனை தம் குமுகாயம் அறிவார்ந்த – நேர்மையான – நல்ல வழியில் சென்று முன்னேறிச் சிறப்பதற்கான வழிவகைகளைச் சிந்தித்து செயல்படுத்த முனைதலே குமுகாயச் சிந்தனையாகும்.

         எவர் ஒருவர் தம் அண்டை மக்களின் துன்பங்களைத் தம் துன்பமாக எண்ணித் துடித்து, அவற்றைப் போக்க முற்படுகிறாரோ அவரே குமுகாயச் சிந்தனையுள்ள மாந்தர் ஆவார். “குமுகாயவியலாரின் கோட்பாட்டின்படித் தனி மாந்தனின் செயல்பாடுகளிலிருந்து தான் குமுகம் உருவாகிறது என்பதை உணரமுடிகிறது. எனவே, நல்ல குமுகம் மலரவேண்டுமெனில் தனி மாந்தன் உயரவேண்டும். தனி மாந்தனின் நல்ல செயல்பாடுகளே குமுகத்தை உருவாக்குவன”1 “மனிதர்கள் பலர் சேர்ந்து வாழ்வது குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகம். சமூகத்தின் சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்கள், செயல் முறைகள், ஒருவருக்கொருவர் உதவுதல், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை நிர்ணயிப்பதே சமுதாயம் ஆகும்.”2 என்னும் கருத்தும் நோக்கத்தக்கதாகும். இவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட தனி இயல்பு கொண்ட மக்கள் கூட்டத்தைச் சமூகம் என்றும், சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்ட பொது ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டு வாழும் சமூகக் குழுக்களைச் குமுகாயம் என்றும் பிரித்து அறியமுடிகிறது.

    சாதிப்பாகுபாடு 

         சமுதாயம் என்பது உணவு, உடை, மொழி, பண்பாடு முதலியவற்றின் அடிப்படையில் அமைவதாகும். இவற்றால் ஒன்றிணைந்திருந்த தமிழ்ச் சமுதாயம் சாதியாலும் சமயத்தாலும் பல பிரிவாகிப் போராடுவதைக் காணமுடிகிறது. இந்தியச் சமுதாயத்தையும் பெரிதாகப் பீடித்திருக்கும் நோய்களுள் ஒன்று சாதிப்பாகுபாடு. “இந்தியாவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் காணப்படுகின்றன. இச்சாதிகள் ஒவ்வொன்றும் மற்ற சாதிகளில் இருந்து தாங்கள் மேம்பாடுடையவையென நிலை நாட்ட விழைகின்றன”3 இக்கூற்றின் மூலம், இந்தியாவில் உள்ள சாதிப்பிரிவுகளையும், சாதியின் இயல்பையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

         தொடக்க காலத்தில் சமுதாயத்தில், பிறப்பால் வேற்றுமை பாராட்டும் சாதிமுறை இல்லை. பிற்காலத்தில் ஏற்பட்ட சமயப் பிரிவுகளே இச்சாதி முறையைப் புகுத்தியுள்ளன. இதனை, “ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ்நாட்டில்  சாதிமுறை என்பதே இல்லை”4  என்னும் கூற்றும், “மதமே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஆரியர் வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் சாதி தோன்றியது”5 என்னும் கூற்றும் உறுதி செய்கின்றன. “ஆரியர் வருகையால் வருணம், ஏற்றத்தாழ்வுகள் முதலியன வந்து புகுந்து தமிழ்ச் சமுதாயத்தைச் சிதறடித்தன.”6 ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய சமுதாயம் பிரிந்து பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இதனை, உவமைக் கவிஞர் சுரதா கடுமையாகச் சாடுவதுடன், சாதி அமைப்பால் சிலர் உயர்ந்தோர் எனக் கூறிக் கொள்வதையும் கண்டிக்கின்றார்.

               “செரிக்காத சோறாகும் மனித னுக்கே
    தேவையற்ற சாதிமதம்…………….”7

         இதில், சாதி வேறுபாடுகளைப் புகுத்த சமயமும் துணைநிற்கிறது என்பதால் அதனையும் சேர்த்தே கண்டித்துள்ளார். பண்டைக் காலத்தில் வேதங்களைப் பின்பற்றி நடந்த பிராமணர்களை ’வேதியர்’ என்று அழைப்பது மரபாக இருந்துள்ளது. ஆனால், இன்று எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் வேதங்களையும் இந்துசமய சாத்திரங்களையும் தழுவி நடப்போரை வேதியர் என அழைக்கலாம். இதனை,

               “ஜாதி மதங்களைப் பாரோம்………………
    வேதியர் ஆயினும் ஒன்றே, அன்றி
    வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே”8

         என்று பாரதியார் பாடியுள்ளார். சமுதாயச் சீர்திருத்த எண்ணம் கொண்ட பாரதி, இந்தியாவில் காணப்பட்ட ஒற்றுமை இன்மைக்குக் காரணம் சாதி, சமய வேறுபாடுகள் என்று உணர்ந்து, அந்தணர், அந்தணர் அல்லாதவர் ஆகிய எல்லாரும் ஒன்றே என்னும் கருத்தில் சாதி, சமயம்அற்ற சமுதாயம் அமையக் குரல் கொடுத்துள்ளார். பாரதியின் தாசனுக்குத் தாசனான சுரதா,

               “சாதியென்பார், மதமென்பார், சங்க டத்தைச்
    சடங்கென்பார், சாத்திரகோத் திரங்க ளென்பார்
    நீதியென்பார், மனுநீதி சிறந்த தென்பார்
    நிலையற்ற உடலென்பார் நெய்பால் உண்பார்
    வேதியர்யாம் வீதியர்நீர் என்பார் எல்லாம்
    விதியென்பார் வினையென்பார் வேத மென்பார்
    ஓதுகலை ஒருசிலர்க்கே உரிய தென்பார்
    ஊழ்வினையே வையத்தின் வரலா றென்பார்”9

         என்று பாடியுள்ளார். இதில், சாதி, மதம், சடங்கு முறை, சாத்திரம், மனுநீதி, விதி, வேதம், ஊழ்வினை ஆகியவை நையாண்டிக்கு உரியவை என எடுத்துரைத்துள்ளார்.

         இந்து சமயத்தில் பிறவியிலேயே, சாதியும் உடன் பிறக்கிறது. நிறத்தால் அழகாக இருப்பதாலேயே ஒருவரை உயர்ந்தோர் எனக் கூறிவிட முடியாது. ஒரு மனிதனை உயர்ந்தோன் ஆக்கிக் காட்டுவது அவனுடைய பண்பாடே ஆகும். இதனை,

             “நிறத்தாலே பிறப்பாலே சிறந்தோர் என்று
    நினைப்பவ ரெல்லாங்கடையர் மடயர் மேனி
    நிறத்தாலே அந்தணர்கள் சிறந்தா ரேனும்
    நினைப்பாலே உயராதார் மேலோர் ஆகார்”10

    என்று சுரதா சுட்டியுள்ளார்.

         பண்டைக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் இருந்ததில்லை. பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையே இப்பிரிவுகள். ஆனால், தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் தமிழர்கள் இதனை உணரவில்லை. எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியவில்லை. எனவே, இக்கருத்தினைத் தமிழர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதை,

               “………………………….. கலப்பை மூலம்
    நிலத்தில்நாம் உண்டாகும் கலப்பை மாந்தர்
    நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மாயின்
    கலப்புமணம் உருவாக வழியுண் டாகும்
    கலப்புமணத் தால்சாதி செத்தே போகும்”11

         என்னும் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். இதில், கலப்பு மணம் செய்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்கிறார்.

    உடன்கட்டை ஏற்றுதல் 

         பெண்களுக்கு ஏதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்றுதான் உடன்கட்டை ஏற்றுதல். கணவன் இறந்தஉடன் உடன்கட்டை ஏறும் பெண்கள் குறித்து இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. தொல்காப்பியம்,

               “நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்
    சொல்லிடை இட்ட பாலை நிலையும்”12

         என்று சுட்டியுள்ளது. அஃதாவது கணவனின் இறந்த உடலுடன் கூடவே எரிமூழ்கிய அவள் சமுதாயத்தில் முழுமையான நல்லபெண் ஆகிவிடுகிறாள். இதில், ‘நல்லோள்’ என்னும் சொல் கணவனுடன் எரிபுகும் பெண்ணைக் குறிக்கக் கையாளப்படிருக்கிறது.

         “தம்முடன் இறக்கும் மனைவி, வேலைக்காரர், குதிரை போன்றவை தம்முடன் மறுஉலகுக்குச் செல்கின்றன என நம்பப்பட்டு வந்தது. ஆகவே பிரதானி ஒருவன் இறந்தபோது அவன் மனைவி வேளையாள் முதலியோரும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் அல்லது புதைக்கப்பட்டார்கள்”13 மனைவியை உடன்கட்டை ஏற்றுவதற்கு வேறு காரணமும் இருந்தது எனலாம். கணவன் இறந்தபின் அவன் மனைவி பிற ஆடவனைக் கணவனாகக் கொண்டு வாழ்வாள் என்னும் பொறாமைக் குணம் அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்திருக்கலாம். கணவன் இறந்தபின் குழந்தை இல்லாத மனைவிக்குச் சொத்துரிமைச் சென்று விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். இதனால் பெண்களை உடன்கட்டை ஏற்றியிருக்கலாம்.

         நாட்டில் ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் வரையறுக்கப்பட்டுள்ளன. மனைவி இறந்தால், கணவன் கிழவனாக இருந்தாலும் மறுமணம் செய்து கொள்ளலாம். அவன், கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளை மணந்து கொள்ளலாம். ஆனால், கணவனை இழந்த பெண், இளமையுடன் இருந்தாலும் அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. கணவன் இறந்தஉடன் அவனுடன் உடன்கட்டை ஏறிவிட வேண்டும்.

    இக்கொடுமையைக் கண்டு கொதித்துஎழும் கவிஞர் சுரதா,

    “பால்நிலவுப் பத்தினியும் பாடைமீது
    படுப்பானேன்? உடன்கட்டை ஏறு வானேன்?
    வேல்தொடரும் விழியுடையாள் கணவ னோடு
    வெந்துவிட வேண்டுமென்ப தென்ன நியாயம்”14

    “புடம்போட்ட பசும்பொன்னைப் போன்ற பெண்கள்
    பூவோடும் பொட்டோடும் மஞ்ச ளோடும்
    உடன்கட்டை ஏறிவரும் வழக்க மிங்கே
    உண்டென்ப தறிவீர்நீர் ஆய்ந்து பார்த்தால்
    முடம்பட்ட நெஞ்சத்தார் புகுத்தி விட்ட
    முழுமூடத் தனமென்ற முடிவே தோன்றும்”15

         என்னும் கவிதைகள் வழியாகச் சமுதாயத்திற்குச் சாட்டையடி கொடுத்துள்ளார். இவ்வாறு பெண் குலத்தைத் தீயிட்டுக் கொளுத்திய கொடுமைக்குக் காரணம் மக்களின் மூடத்தனமே எனக் கூறியுள்ளார். இம்மூடத்தனத்திற்குப் பலியான சிலரையும் எடுத்துக்காட்டுகின்றார். இதனை,

               “சித்திரப்பெண் பத்தினியும் காஷ்மீ ரத்தில்
    சிற்சிலரும் செஞ்சியிலோர் பதுமைப் பெண்ணும்
    கத்துகடல் முத்தரசன் ராச ராசன்
    காலத்து மங்கையரும் தீயில் தூங்கிச்
    செத்ததைநாம் வரலாற்றில் அறிவோம் அன்னார்
    தேன்வாழ்வை ஏன்கெடுத்துக் கொண்டா ரென்றால்
    பத்தினிமார் உடன்கட்டை ஏறிச் செத்தால்
    பரலோகம் கிட்டிடுமாம் எனவே செத்தார்”16
         என்னும் கவிதை வழி அறியலாம். முடிவாகக் கவிஞர்,

    “சித்திரத்தேர் தீப்பற்றி எரிதல் போன்ற
    தீச்செயலைத் தடுப்பீரென் றெண்ணு கின்றேன்”17
         என்று எடுத்துரைக்கின்றார்.

    குடும்பமும் கல்வியும்

         குடும்பம் என்னும் நிறுவனத்தின் நங்கூரமாகப் பெண்ணே கருதப்படுகிறாள். குடும்பத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமே உரியதாகிவிட்டது. பெண், தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளமிடுபவள் ஆகிறாள். குழந்தையின் மழலை மொழியினைத் திருவள்ளுவர்,

               “குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்”18

         என்று எடுத்துரைப்பார். மனைவி இல்லாதவன் வாழ்க்கை கரும்பின் பூவைப் போன்றது. புத்தகம், முத்தமிடும் மனைவி, மழலைமொழி பேசும் மக்கள் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சிறப்பினைத் தருவதாகும். புத்தகம் வாசிப்பதால் மனிதன் முழுமையான அறிவு பெறுகிறான். இதனை,

               “புத்தகங்கள் முத்தமிடும் மனைவி சொற்கள்
    புரியாத மழலைமொழி பேசும் மக்கள்
    இத்தரைமீ தினில் ஒவ்வோர் மனிதனுக்கும்
    இருப்பதுவே சிறப்பாகும் இருக்கு மாயின்
    புத்தகத்தால் பேரறிவும் குழந்தைப் பேச்சால்
    பூரிப்பும் மனைவி யினால் சுகமும் சேரும்
    எத்தனைபேர் இருந்தென்ன? மனைவி யில்லான்
    இல்வாழ்க்கைக் கரும்புக்கு வெறும்பூ வன்றோ?”19

         என்னும் கவிதை வரிகள் மெய்ப்பித்துக்காட்டுகின்றன. மனிதனின் நுகர்வுக்கு வேண்டியனவற்றையும் அவற்றை எந்தந்தத் தருணத்தில் பெற வேண்டும் என்பதையும் அறுதியிட்டுக் கூறுகிறார். இதனை,

               “திருமண வாழ்க்கையே சிறந்த பதிப்புரை
    ஓரெட்டில் உணவும், ஈரெட்டில் கல்வியும்
    மூவெட்டில் புதல்வனும் நாலெட்டில் பொருளும்
    ஐயெட்டில் ஞானமும் அடைவதே சிறப்பாம்”20
         என்னும் கவிதைக் காட்சிப்படுத்தியுள்ளது.

    பெண்மை

         பெண் உரிமையோடும் பெருமையோடும் கடமை உணர்வோடும் கண்ணியத்தோடும் இருக்க வேண்டும் எனக் கருதிக் கவிதைப் புனைந்தவர் சுரதா. காதலை மிகுதியாகப் பாடிப் பெண்ணின் அழகை நுட்பமாகப் பல்வேறு சொற்களால் புனைந்திருந்தாலும் பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். என் கடமை, என்னும் கவிதையில் ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை,

               “ஒளிவீசும் காலையில்நான் எழுந்திருந்து
    நுரைசெய்யும் ஆற்றில்நீ ராடச் செல்வேன்
    நுணுக்கமுள்ள ஆசாரக் கோவை கூறும்
    வரிவெண்பா நீதியைப்பின் பற்றி வாழ்ந்து
    வருவதனால் நீரில்நான் உமிழ மாட்டேன்
    ………………………………………………………………………..
    ஊரறிந்த பேரறிஞர் மேடைப் பேச்சை
    ஒருநாளும் நான்கேட்கத் தவற மாட்டேன்
    பாரறிந்த பைந்தமிழை அழிக்க வேண்டிப்
    படைவந்தே எதிர்த்தாலும் அஞ்ச மாட்டேன்”21

    என்று விரிவாகப்பாடியுள்ளார்.

         மனைவிக்குக் கணவன்மேல் உண்மையான காதல் இருக்க வேண்டுமென்றால், அவளுடைய மனத்திற்குப் பிடித்தவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருத்தல் வேண்டும். எப்படிப்பட்டவனைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அவளே தீர்மானிக்க வேண்டும். யாரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விட யாரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தமிழ்ப் பெண் ஒருத்தி கூறுவதாக,

               “தேய்புரி பழங்க யிற்றைப்
    போன்றானைச் சிறப்பில் லானை
    வாய்மையும் சிறந்த வாக்கு
    வன்மையும் இல்லா தானை
    நோய்மத வெறிகொண் டானை
    நுண்ணறி வில்லா தானைத்
    தாய்மொழிப் பற்றில் லானைத்
    தையல்நான் மணக்க மாட்டேன்                ………………………………………………………………………….
    …………………… அறிவில் மூத்தோன்
    வடித்தநூ லான முப்பால்
    திருக்குறள் கல்லா தானைத்
    திருமணம் செய்து கொள்ளேன்”22

    என்று சுரதா கூறியுள்ளார். இந்தக் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சிந்திக்கத்தக்கனவாக அமைந்துள்ளன.

    ஒழுக்கம்

         ஒழுக்கம் என்பது மக்களின் வாழ்வியலை முறைப்படுத்துவதில் முதன்மையானதாகத் திகழ்ந்து உயிரினும் மேலானதாகக் கருதப்படுகிறது. ஒழுக்கமுடைய வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பது பண்டையத் தமிழரின் கொள்கையாகும். மனிதனுக்கு புறத்தூய்மை, அகத்தூய்மை ஆகிய இரண்டும் வேண்டும். புறத்தூய்மை உடல் நோய்கள் வராமலும், அகத்தூய்மை அகநோய்கள் வராமலும் காக்கும். எனவே, அகமும் புறமும் தூய்மையாக இருத்தலே உயர்ந்த நாகரிகம். திருவள்ளுவர்,

               “புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்”23

         என்ற கூறுகின்றார். புறத்தூய்மையை உடனடியாகக் கண்டுகொள்ள முடியும். அகத்தூய்மையைப் படிப்படியாக, அவரவர் நடத்தையின் மூலமே அறிந்துகொள்ள இயலும். ஒருவன் சமுதாயத்தில் வகிக்கும் பதவியையோ, செய்யும் தொழிலையோ வைத்து அவனுடைய அகத்தூய்மையை உறுதிப்படுத்தி விடக்கூடாது. வெளிஉலகிற்கு நல்லவனாகக் காட்சியளிக்கும் ஒருவன் அகத்தில் அழுக்கு நிறைந்தவனாக இருக்கலாம். இதனை,

               “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவும்,
    கதவுள்ள போதே சாத்திக் கொள்ளவும்,
    நன்கு தெரிந்த நடிகை …… ……..
    நித்தம் இருமுறை நீராடு வாராம்
    விடிந்ததும் ஒருமுறை வெந்நீரில் குளியலாம்
    எல்லாம் முடிந்தபின் இன்னொரு குளியலாம்
    ………………………………………………………………………………….
    ஆடை பாதியும் அழகு பாதியும்
    தெரியக் காட்டும் திரைப்பட நடிகையோ,
    அறிஞனோ, கலைஞனோ, அரசியல் தலைவனோ,
    மடாதி பதியோ, மக்கள் திலகமோ,
    கோப்பைக் கவிஞனோ, கோயில் குருக்களோ,
    மற்றிங்கு வாழும் மக்கள் கூட்டமோ,
    ஆயிரம் தடவை அன்றாடம் குளிப்பினும்
    மிகத்தூய்மை பெறுவது மேனியே யன்றி
    அகத்தூய்மை நீரால் அமைவ தில்லையே”24

         என்னும் பாடல்களில் சுரதா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கவிதையில் பலரையும் குறிப்பிடும் கவிஞர், அறிஞனையும் சேர்த்துக் கூறுகின்றார். பண்பாட்டை அறிவு உருவாக்கும், ஆனால் சில சமயம் தீமையைக் கூர்மைபடுத்தி விடுவதும் உண்டு. உணர்ச்சியைச் செம்மைப்படுத்தத் தவறிவிடுவதும் உண்டு. எனவே, தான் ஆங்கிலத்தில் ‘Intellectual Giants are moral Pygmies’ என்னும் பழமொழி வழங்குகிறது. ‘அறிவில் வானளாவ உயர்ந்திருப்பவர்களும் ஒழுக்கத்தில் குள்ளராக இருப்பதுண்டு’.

    குடும்பக்கட்டுப்பாடு 

         செல்வங்களில் சிறந்தது குழந்தைச் செல்வம். ஆனால் அளவில் மிஞ்சினால், அதுவே குடும்பத்திலும், பின்பு நாட்டிலும் வறுமையைத் தோற்றுவிக்கும். மக்கள்தொகைப் பெருக்கம் இன்று உலகை மிரட்டும் சிக்கலாக மாறி வருகிறது. 138 கோடி மக்களைக் கொண்டுள்ள சீனா, உலகிலேயே அதிகபட்ச மக்கள் தொகையைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக, சீனாவில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளத் தம்பதியருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டு விதி தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு, குடும்பக்கட்டுப்பாட்டு விதியைத் தளர்த்த சீன அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, மக்கள்தொகைப் பெருக்கத்தை உலக நாடுகள் கட்டுப்படுத்த வில்லையானால் உலகில் வறுமை, பஞ்சம், பட்டினி, நோய் போன்றவை பெருகும். இந்த எச்சரிக்கையை முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்திய அரசும் இதனை ஏற்று செயல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கையைப் பெரியார், “பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள், பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும், பிள்ளைகளின் தாட்டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும் குடும்பச் சொத்துக்கு அதிகப் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும், குலைந்தும் போகாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள்”25 என்று எடுத்துக் கூறியுள்ளார். பெரியாரின் சிந்தனையை அடியொற்றி கவிதைகள் படைத்து வந்த பாரதிதாசன்,

               “காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
    கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன
    குற்றம்?”26
         என்று பாடியிருக்கிறார். இதே சிந்தனையை, அவருடைய மாணவரான உவமைக் கவிஞர் சுரதா,

    “பெருக்கெடுக்கும் உணர்ச்சியினால் ஒன்று பத்தாய்ப்
    பெற்றெடுக்கும் குழந்தையெனும் கொழுந்தின் கூட்டம்
    நெருக்கடியின் அடையாள மன்றோ? அந்த
    நெருக்கடிக்கிங் கிடங்கொடுத்தால் குடும்ப வாழ்வே
    சருக்குநிலம் ஆகிவிடும் அதனால், பெற்றோர்
    தயவுசெய்து குடும்பநலம் காக்க வேண்டும்”27

         என்று பாடுகிறார். மக்கள் செல்வம் மிகுதியானால், அறிவையும், கற்பனை வளத்தையும் குறைத்துவிடும் என்றும், அதனால் குடும்பத்தில் வறுமையும், நிம்மதியின்மையும் தோன்றும் என்றும் எடுத்துரைக்கின்றார்.

    முடிவுரை

         சாதி, சமய வேறுபாடுகளைக் கண்டிக்கும் கவிஞர், அவை மானிட சமூகத்திற்குத் தேவையற்றது எனச் சாடியுள்ளார். நிறத்தாலும், பிறப்பாலும் உயர்ந்தோர் என்று எண்ணக் கூடியவர்களை மடையர்கள் எனக் கண்டித்துள்ளார். பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கண்டித்து,  இந்த மூடத்தனமான கொடுமையைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். குடும்பத் தலைவனுக்கு மனைவியும் மழலையும் தரும் மகிழ்வும், புத்தகங்கள் தரும் அறிவும் அலாதியானவை என்பதைக் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். இல்லாள் இல்லாதவனை இருந்தும் பயன் இல்லாதவன் என ஏளனமாகக் கூறியுள்ளார். தனக்குப் பிடித்தவனைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடிக்காதவனைத் தானே நிராகரிக்கும் உரிமையும் பெண்களுக்கு வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றார். மகளிர் தம் அன்றாட வாழ்வில் எவற்றை எல்லாம் கடைபிடித்து வாழ வேண்டும் எனப் பட்டியலிடுகின்றார். ஒழுக்கத்தினை உயிரினும் மேலாகக் கருதும் கவிஞர் சுரதா, ஒழுக்கம் இல்லாதவனை உள்ளத்தில் அழுக்கு நிறைந்தவனாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, தாய்மார்கள் குழந்தைச் செல்வங்களை அளவோடு பெற்றுக்கொள்ள அறிவுரை கூறும் கவிஞர், குடும்பக்கட்டுப்பாட்டுச் சிந்தனையையும் விதைத்துச் சென்றுள்ளார்.

    ***

    குறிப்புகள்

    1. மு.அவையாம்பாள் (க.ஆ), ‘கவிராயரின் சமூகவியல் சிந்தனைகள்’ உடுமலை நாராயணகவி பன்முகப்பார்வை, இரா.சந்திரசேகரன், க.இந்திரசித்து (ப.ஆ), ப.237
    2. கி.முத்துக்கூரி (க.ஆ), பூமணியின் நல்ல நாளில் சமூகச் சித்திரிப்பு, இ.ப.த.ம. முப்பத்தோராம் கருத்தரங்கு ஆய்வுக்கோவை- தொகுதி-3, ப.1393.
    3. பி.யோகீஸ்வரன், தமிழ்க் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள், ப.128.
    4. “Before the arrival of Aryans there was no caste systems in the Tamil Country” Srinivasa Iyengar,M, Tamil Studies, P.61
    5. சி.என். அண்ணாதுரை, ஆரிய மாயை, ப.65
    6. சுப.கதிரேசன், கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயக் கூறுகள், பிஎச்.டி., ஆய்வேடு, ப.53
    7. சுரதா, தேன்மழை, ப.43.
    8. பாரதியார், வந்தே மாதரம், 1
    9. சுரதா, தேன்மழை, ப. 120
    10. மேலது, ப.37
    11. மேலது, ப.64
    12. தொல்.புறத்திணை, நூ.19
    13. ந.சி.கந்தையாபிள்ளை, பெண்கள் உலகம், ப. 70
    14. சுரதா, தேன்மழை, ப.123
    15. மேலது, ப.122
    16. மேலது, ப.124
    17. மேலது, ப.127
    18. திருக்குறள், 66
    19. சுரதா, சுரதா கவிதைகள், ப.79
    20. சுரதா, சுவரும் சுண்ணாம்பும், ப.6
    21. சுரதா, தேன்மழை, ப.112
    22. மேலது, ப.113
    23. திருக்குறள், 298
    24. சுரதா, சுவரும் சுண்ணாம்பும், பக்.17-18
    25. பெரியார், பெண் ஏன் அடிமையானாள்?, ப.57
    26. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-1, ப.40
    27. சுரதா, துறைமுகம், ப.142

     

     

     

     

    Share
  • உலையிலே ஊதி உலகக்கனல் வளர்ப்பாள்!

     

     

    கவியோகிவேதம்

     

     

    நெஞ்ச உலைதனிலே- சொற்கள்

    …நின்று கனல்வதற்கு

    பஞ்சமே இன்றிஎன்- தாய்

    .பராசக்தி கைகொடுத்தாள்!

    .

    சந்தப் பெரும்நிலவில்- அவளின்

    …சந்நிதி கண்டுகொண்டேன்!

    இந்தக் கரங்களினால்- தொழுது

    … இனிய கவிபடைத்தேன்!

    .

    சிவனைத்தான் பாரதியும்—என்றும்

    ..சிறந்த ‘உலை’என்றான்!

    அவனைத்தான் விஞ்ஞானி—நல்ல

    .. அணுஉலை யாய்க்கண்டான்! .(Atomic Energy)

    ..

    .( கற்பனை செய்யுங்கள்—கவிகாள்!!

    ..கல்-மொத்தை அந்தஉலை!)

    சிவனுக்குள் சேமிப்புஉலை— அதைஊதி

    சக்தியும்– செகம்செய்தாள்!

    சுவைஊதி ஊதிஊதி- செகத்துள்

    ..சுவாரஸ்யம் கூட்டிநின்றாள்!

    .

    எப்பொருளும் தான்வளர- உள்ளே

    ..இனிய கனல்வைத்தாள்!

    செப்படி வித்தையைப்போல்—வித்துள்

    …. சிறந்த-உரு தேக்கிவைத்தாள்!

    .

    காய்க்குள் புளிப்புவைத்து- மரத்தில்

    ….கண்ணாகப் பாதுகாப்பாள்

    தாய்க்குள் அன்புவைத்து—அவளில்

    ….தன்னை ஒளித்துவைத்தாள்!

    .

    வயிற்றுள் கனல்வைத்தாள்—பண்டம்

    …. வசக்கும் திறன்கொடுத்தாள்!!..( ஜாடராக்னி)

    ஒயிலாய் விசிறுமந்தக்- கடல்(உ)ள்

    ….ஒப்பிலாத் தீயும்வைத்தாள்!….. (பாடவாக்னி)-

    ..

    கொடுக்கில் நெருப்புவைத்தாள்!—தப்பக்

    .. கொடுத்த கவசம்அது!

    வெடுக்கும் (சில?) மருமகளின்- வாயில்

    ..விஷக்கனல் ஏன்கொடுத்தாள்?

    .

    பனியில் கனல்உண்டே!—நம்மைப்

    ….பதைபதைக்க வைக்கிறதே!

    பனித்தூள் பட்டகிளை— காய்ந்தே

    …பாய்வெயிலில் நீள்கிறதே!

    ஆம்!

    முக்தி தரும்சிவனோ—சித்தனுள்

    …மோனம் தரும்குகைதான்!

    சக்தி, உலவும்அன்னை!—அவளைச்

    .. சார்ந்ததே இவ்வுலகம்!

    மொக்கையாய் உள்ளலிங்கம்—தவம்

    … மூட்டும் பெருத்தஉலை!

    சக்கையிலும் கைநனைத்தே—சாகசம்

    .. .தரும்சக்தி தாய்மைநிலை!

    ********************************************

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    அச்சுறுத்தும் பூதமா! , அன்றிமாத்ரு பூதமா! ,
    அச்சுதம் கேசவம் ஆனது! : -மெச்சிடும்
    வண்ணத்தில் கேசவ் வரைந்தாய், அவர்வெண்பா
    எண்ணத்திற்க்(கு) என்றும் இரை(றை)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”மந்திமனம் மண்ணிலே மண்டியிட்டுக் கண்ணனின்
    பந்திக்கு முந்தும் பரவசத்தை, -தந்தீர்(கேசவ்): –
    கிருஷ்ணப் பிரேமியென்றார் கோபுலு ஆசான்,
    பிரஷ்ணப்(BRUSH) பிரேமிவெண் பாக்கு”….கிரேசி மோகன்….!

    Share