கவிஞர் சுரதாவின் கவிதைகளில் குமுகாயச் சிந்தனைகள்

0

முனைவர் ச.அருள்

முன்னுரை 

     மனிதன் சமுதாயம் என்ற அமைப்பில் இருந்து தனித்து வாழ்பவன் அல்லன். ஏனெனில் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள், உணர்வுகள் அனைத்தும் சமுதாயத்தின் வழியேதான் நிறைவு பெறுகின்றன. பரவிக்கிடக்கும் தேவைகளைப் பெறத் தனி மனிதன் இன்னொரு மனிதனை நாடுகின்றான். தன்னுடைய உணர்வுகளைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ளாமல், மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள எண்ணுவது மனித இயல்பு. இவ்வாறு தேவைகளும், எண்ணங்களும், தொடர்புகளும் பரிமாறப்படுவதால் சமுதாய அமைப்பு விரிவடைகிறது. கவிஞர்கள் சமுதாயத்தில் ஓர் அங்கமாகத் திகழக் கூடியவர்கள். படைப்பாளர்கள் வரிசையில் கவிஞர்களுக்கான இடம் முதன்மையானதாகும். சமுதாயத்தின் குரலைப் படியெடுத்து வெளியிடும் திறனில் கவிதைகள் தனியிடம் பெறத்தக்கன. அவ்வகையில் உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதைகள் வழிக் குமுகாயச் சிந்தனைகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குமுகாயம் 

     குமுகாயத்தில் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் கொள்ளவேண்டிய குமுகாயச் சிந்தனை தம் குமுகாயம் அறிவார்ந்த – நேர்மையான – நல்ல வழியில் சென்று முன்னேறிச் சிறப்பதற்கான வழிவகைகளைச் சிந்தித்து செயல்படுத்த முனைதலே குமுகாயச் சிந்தனையாகும்.

     எவர் ஒருவர் தம் அண்டை மக்களின் துன்பங்களைத் தம் துன்பமாக எண்ணித் துடித்து, அவற்றைப் போக்க முற்படுகிறாரோ அவரே குமுகாயச் சிந்தனையுள்ள மாந்தர் ஆவார். “குமுகாயவியலாரின் கோட்பாட்டின்படித் தனி மாந்தனின் செயல்பாடுகளிலிருந்து தான் குமுகம் உருவாகிறது என்பதை உணரமுடிகிறது. எனவே, நல்ல குமுகம் மலரவேண்டுமெனில் தனி மாந்தன் உயரவேண்டும். தனி மாந்தனின் நல்ல செயல்பாடுகளே குமுகத்தை உருவாக்குவன”1 “மனிதர்கள் பலர் சேர்ந்து வாழ்வது குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகம். சமூகத்தின் சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்கள், செயல் முறைகள், ஒருவருக்கொருவர் உதவுதல், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை நிர்ணயிப்பதே சமுதாயம் ஆகும்.”2 என்னும் கருத்தும் நோக்கத்தக்கதாகும். இவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட தனி இயல்பு கொண்ட மக்கள் கூட்டத்தைச் சமூகம் என்றும், சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்ட பொது ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டு வாழும் சமூகக் குழுக்களைச் குமுகாயம் என்றும் பிரித்து அறியமுடிகிறது.

சாதிப்பாகுபாடு 

     சமுதாயம் என்பது உணவு, உடை, மொழி, பண்பாடு முதலியவற்றின் அடிப்படையில் அமைவதாகும். இவற்றால் ஒன்றிணைந்திருந்த தமிழ்ச் சமுதாயம் சாதியாலும் சமயத்தாலும் பல பிரிவாகிப் போராடுவதைக் காணமுடிகிறது. இந்தியச் சமுதாயத்தையும் பெரிதாகப் பீடித்திருக்கும் நோய்களுள் ஒன்று சாதிப்பாகுபாடு. “இந்தியாவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் காணப்படுகின்றன. இச்சாதிகள் ஒவ்வொன்றும் மற்ற சாதிகளில் இருந்து தாங்கள் மேம்பாடுடையவையென நிலை நாட்ட விழைகின்றன”3 இக்கூற்றின் மூலம், இந்தியாவில் உள்ள சாதிப்பிரிவுகளையும், சாதியின் இயல்பையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

     தொடக்க காலத்தில் சமுதாயத்தில், பிறப்பால் வேற்றுமை பாராட்டும் சாதிமுறை இல்லை. பிற்காலத்தில் ஏற்பட்ட சமயப் பிரிவுகளே இச்சாதி முறையைப் புகுத்தியுள்ளன. இதனை, “ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ்நாட்டில்  சாதிமுறை என்பதே இல்லை”4  என்னும் கூற்றும், “மதமே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஆரியர் வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் சாதி தோன்றியது”5 என்னும் கூற்றும் உறுதி செய்கின்றன. “ஆரியர் வருகையால் வருணம், ஏற்றத்தாழ்வுகள் முதலியன வந்து புகுந்து தமிழ்ச் சமுதாயத்தைச் சிதறடித்தன.”6 ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய சமுதாயம் பிரிந்து பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இதனை, உவமைக் கவிஞர் சுரதா கடுமையாகச் சாடுவதுடன், சாதி அமைப்பால் சிலர் உயர்ந்தோர் எனக் கூறிக் கொள்வதையும் கண்டிக்கின்றார்.

           “செரிக்காத சோறாகும் மனித னுக்கே
தேவையற்ற சாதிமதம்…………….”7

     இதில், சாதி வேறுபாடுகளைப் புகுத்த சமயமும் துணைநிற்கிறது என்பதால் அதனையும் சேர்த்தே கண்டித்துள்ளார். பண்டைக் காலத்தில் வேதங்களைப் பின்பற்றி நடந்த பிராமணர்களை ’வேதியர்’ என்று அழைப்பது மரபாக இருந்துள்ளது. ஆனால், இன்று எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் வேதங்களையும் இந்துசமய சாத்திரங்களையும் தழுவி நடப்போரை வேதியர் என அழைக்கலாம். இதனை,

           “ஜாதி மதங்களைப் பாரோம்………………
வேதியர் ஆயினும் ஒன்றே, அன்றி
வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே”8

     என்று பாரதியார் பாடியுள்ளார். சமுதாயச் சீர்திருத்த எண்ணம் கொண்ட பாரதி, இந்தியாவில் காணப்பட்ட ஒற்றுமை இன்மைக்குக் காரணம் சாதி, சமய வேறுபாடுகள் என்று உணர்ந்து, அந்தணர், அந்தணர் அல்லாதவர் ஆகிய எல்லாரும் ஒன்றே என்னும் கருத்தில் சாதி, சமயம்அற்ற சமுதாயம் அமையக் குரல் கொடுத்துள்ளார். பாரதியின் தாசனுக்குத் தாசனான சுரதா,

           “சாதியென்பார், மதமென்பார், சங்க டத்தைச்
சடங்கென்பார், சாத்திரகோத் திரங்க ளென்பார்
நீதியென்பார், மனுநீதி சிறந்த தென்பார்
நிலையற்ற உடலென்பார் நெய்பால் உண்பார்
வேதியர்யாம் வீதியர்நீர் என்பார் எல்லாம்
விதியென்பார் வினையென்பார் வேத மென்பார்
ஓதுகலை ஒருசிலர்க்கே உரிய தென்பார்
ஊழ்வினையே வையத்தின் வரலா றென்பார்”9

     என்று பாடியுள்ளார். இதில், சாதி, மதம், சடங்கு முறை, சாத்திரம், மனுநீதி, விதி, வேதம், ஊழ்வினை ஆகியவை நையாண்டிக்கு உரியவை என எடுத்துரைத்துள்ளார்.

     இந்து சமயத்தில் பிறவியிலேயே, சாதியும் உடன் பிறக்கிறது. நிறத்தால் அழகாக இருப்பதாலேயே ஒருவரை உயர்ந்தோர் எனக் கூறிவிட முடியாது. ஒரு மனிதனை உயர்ந்தோன் ஆக்கிக் காட்டுவது அவனுடைய பண்பாடே ஆகும். இதனை,

         “நிறத்தாலே பிறப்பாலே சிறந்தோர் என்று
நினைப்பவ ரெல்லாங்கடையர் மடயர் மேனி
நிறத்தாலே அந்தணர்கள் சிறந்தா ரேனும்
நினைப்பாலே உயராதார் மேலோர் ஆகார்”10

என்று சுரதா சுட்டியுள்ளார்.

     பண்டைக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் இருந்ததில்லை. பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையே இப்பிரிவுகள். ஆனால், தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் தமிழர்கள் இதனை உணரவில்லை. எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியவில்லை. எனவே, இக்கருத்தினைத் தமிழர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதை,

           “………………………….. கலப்பை மூலம்
நிலத்தில்நாம் உண்டாகும் கலப்பை மாந்தர்
நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மாயின்
கலப்புமணம் உருவாக வழியுண் டாகும்
கலப்புமணத் தால்சாதி செத்தே போகும்”11

     என்னும் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். இதில், கலப்பு மணம் செய்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்கிறார்.

உடன்கட்டை ஏற்றுதல் 

     பெண்களுக்கு ஏதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்றுதான் உடன்கட்டை ஏற்றுதல். கணவன் இறந்தஉடன் உடன்கட்டை ஏறும் பெண்கள் குறித்து இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. தொல்காப்பியம்,

           “நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்
சொல்லிடை இட்ட பாலை நிலையும்”12

     என்று சுட்டியுள்ளது. அஃதாவது கணவனின் இறந்த உடலுடன் கூடவே எரிமூழ்கிய அவள் சமுதாயத்தில் முழுமையான நல்லபெண் ஆகிவிடுகிறாள். இதில், ‘நல்லோள்’ என்னும் சொல் கணவனுடன் எரிபுகும் பெண்ணைக் குறிக்கக் கையாளப்படிருக்கிறது.

     “தம்முடன் இறக்கும் மனைவி, வேலைக்காரர், குதிரை போன்றவை தம்முடன் மறுஉலகுக்குச் செல்கின்றன என நம்பப்பட்டு வந்தது. ஆகவே பிரதானி ஒருவன் இறந்தபோது அவன் மனைவி வேளையாள் முதலியோரும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் அல்லது புதைக்கப்பட்டார்கள்”13 மனைவியை உடன்கட்டை ஏற்றுவதற்கு வேறு காரணமும் இருந்தது எனலாம். கணவன் இறந்தபின் அவன் மனைவி பிற ஆடவனைக் கணவனாகக் கொண்டு வாழ்வாள் என்னும் பொறாமைக் குணம் அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்திருக்கலாம். கணவன் இறந்தபின் குழந்தை இல்லாத மனைவிக்குச் சொத்துரிமைச் சென்று விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். இதனால் பெண்களை உடன்கட்டை ஏற்றியிருக்கலாம்.

     நாட்டில் ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் வரையறுக்கப்பட்டுள்ளன. மனைவி இறந்தால், கணவன் கிழவனாக இருந்தாலும் மறுமணம் செய்து கொள்ளலாம். அவன், கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளை மணந்து கொள்ளலாம். ஆனால், கணவனை இழந்த பெண், இளமையுடன் இருந்தாலும் அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. கணவன் இறந்தஉடன் அவனுடன் உடன்கட்டை ஏறிவிட வேண்டும்.

இக்கொடுமையைக் கண்டு கொதித்துஎழும் கவிஞர் சுரதா,

“பால்நிலவுப் பத்தினியும் பாடைமீது
படுப்பானேன்? உடன்கட்டை ஏறு வானேன்?
வேல்தொடரும் விழியுடையாள் கணவ னோடு
வெந்துவிட வேண்டுமென்ப தென்ன நியாயம்”14

“புடம்போட்ட பசும்பொன்னைப் போன்ற பெண்கள்
பூவோடும் பொட்டோடும் மஞ்ச ளோடும்
உடன்கட்டை ஏறிவரும் வழக்க மிங்கே
உண்டென்ப தறிவீர்நீர் ஆய்ந்து பார்த்தால்
முடம்பட்ட நெஞ்சத்தார் புகுத்தி விட்ட
முழுமூடத் தனமென்ற முடிவே தோன்றும்”15

     என்னும் கவிதைகள் வழியாகச் சமுதாயத்திற்குச் சாட்டையடி கொடுத்துள்ளார். இவ்வாறு பெண் குலத்தைத் தீயிட்டுக் கொளுத்திய கொடுமைக்குக் காரணம் மக்களின் மூடத்தனமே எனக் கூறியுள்ளார். இம்மூடத்தனத்திற்குப் பலியான சிலரையும் எடுத்துக்காட்டுகின்றார். இதனை,

           “சித்திரப்பெண் பத்தினியும் காஷ்மீ ரத்தில்
சிற்சிலரும் செஞ்சியிலோர் பதுமைப் பெண்ணும்
கத்துகடல் முத்தரசன் ராச ராசன்
காலத்து மங்கையரும் தீயில் தூங்கிச்
செத்ததைநாம் வரலாற்றில் அறிவோம் அன்னார்
தேன்வாழ்வை ஏன்கெடுத்துக் கொண்டா ரென்றால்
பத்தினிமார் உடன்கட்டை ஏறிச் செத்தால்
பரலோகம் கிட்டிடுமாம் எனவே செத்தார்”16
     என்னும் கவிதை வழி அறியலாம். முடிவாகக் கவிஞர்,

“சித்திரத்தேர் தீப்பற்றி எரிதல் போன்ற
தீச்செயலைத் தடுப்பீரென் றெண்ணு கின்றேன்”17
     என்று எடுத்துரைக்கின்றார்.

குடும்பமும் கல்வியும்

     குடும்பம் என்னும் நிறுவனத்தின் நங்கூரமாகப் பெண்ணே கருதப்படுகிறாள். குடும்பத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமே உரியதாகிவிட்டது. பெண், தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளமிடுபவள் ஆகிறாள். குழந்தையின் மழலை மொழியினைத் திருவள்ளுவர்,

           “குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”18

     என்று எடுத்துரைப்பார். மனைவி இல்லாதவன் வாழ்க்கை கரும்பின் பூவைப் போன்றது. புத்தகம், முத்தமிடும் மனைவி, மழலைமொழி பேசும் மக்கள் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சிறப்பினைத் தருவதாகும். புத்தகம் வாசிப்பதால் மனிதன் முழுமையான அறிவு பெறுகிறான். இதனை,

           “புத்தகங்கள் முத்தமிடும் மனைவி சொற்கள்
புரியாத மழலைமொழி பேசும் மக்கள்
இத்தரைமீ தினில் ஒவ்வோர் மனிதனுக்கும்
இருப்பதுவே சிறப்பாகும் இருக்கு மாயின்
புத்தகத்தால் பேரறிவும் குழந்தைப் பேச்சால்
பூரிப்பும் மனைவி யினால் சுகமும் சேரும்
எத்தனைபேர் இருந்தென்ன? மனைவி யில்லான்
இல்வாழ்க்கைக் கரும்புக்கு வெறும்பூ வன்றோ?”19

     என்னும் கவிதை வரிகள் மெய்ப்பித்துக்காட்டுகின்றன. மனிதனின் நுகர்வுக்கு வேண்டியனவற்றையும் அவற்றை எந்தந்தத் தருணத்தில் பெற வேண்டும் என்பதையும் அறுதியிட்டுக் கூறுகிறார். இதனை,

           “திருமண வாழ்க்கையே சிறந்த பதிப்புரை
ஓரெட்டில் உணவும், ஈரெட்டில் கல்வியும்
மூவெட்டில் புதல்வனும் நாலெட்டில் பொருளும்
ஐயெட்டில் ஞானமும் அடைவதே சிறப்பாம்”20
     என்னும் கவிதைக் காட்சிப்படுத்தியுள்ளது.

பெண்மை

     பெண் உரிமையோடும் பெருமையோடும் கடமை உணர்வோடும் கண்ணியத்தோடும் இருக்க வேண்டும் எனக் கருதிக் கவிதைப் புனைந்தவர் சுரதா. காதலை மிகுதியாகப் பாடிப் பெண்ணின் அழகை நுட்பமாகப் பல்வேறு சொற்களால் புனைந்திருந்தாலும் பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். என் கடமை, என்னும் கவிதையில் ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை,

           “ஒளிவீசும் காலையில்நான் எழுந்திருந்து
நுரைசெய்யும் ஆற்றில்நீ ராடச் செல்வேன்
நுணுக்கமுள்ள ஆசாரக் கோவை கூறும்
வரிவெண்பா நீதியைப்பின் பற்றி வாழ்ந்து
வருவதனால் நீரில்நான் உமிழ மாட்டேன்
………………………………………………………………………..
ஊரறிந்த பேரறிஞர் மேடைப் பேச்சை
ஒருநாளும் நான்கேட்கத் தவற மாட்டேன்
பாரறிந்த பைந்தமிழை அழிக்க வேண்டிப்
படைவந்தே எதிர்த்தாலும் அஞ்ச மாட்டேன்”21

என்று விரிவாகப்பாடியுள்ளார்.

     மனைவிக்குக் கணவன்மேல் உண்மையான காதல் இருக்க வேண்டுமென்றால், அவளுடைய மனத்திற்குப் பிடித்தவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருத்தல் வேண்டும். எப்படிப்பட்டவனைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அவளே தீர்மானிக்க வேண்டும். யாரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விட யாரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தமிழ்ப் பெண் ஒருத்தி கூறுவதாக,

           “தேய்புரி பழங்க யிற்றைப்
போன்றானைச் சிறப்பில் லானை
வாய்மையும் சிறந்த வாக்கு
வன்மையும் இல்லா தானை
நோய்மத வெறிகொண் டானை
நுண்ணறி வில்லா தானைத்
தாய்மொழிப் பற்றில் லானைத்
தையல்நான் மணக்க மாட்டேன்                ………………………………………………………………………….
…………………… அறிவில் மூத்தோன்
வடித்தநூ லான முப்பால்
திருக்குறள் கல்லா தானைத்
திருமணம் செய்து கொள்ளேன்”22

என்று சுரதா கூறியுள்ளார். இந்தக் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சிந்திக்கத்தக்கனவாக அமைந்துள்ளன.

ஒழுக்கம்

     ஒழுக்கம் என்பது மக்களின் வாழ்வியலை முறைப்படுத்துவதில் முதன்மையானதாகத் திகழ்ந்து உயிரினும் மேலானதாகக் கருதப்படுகிறது. ஒழுக்கமுடைய வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பது பண்டையத் தமிழரின் கொள்கையாகும். மனிதனுக்கு புறத்தூய்மை, அகத்தூய்மை ஆகிய இரண்டும் வேண்டும். புறத்தூய்மை உடல் நோய்கள் வராமலும், அகத்தூய்மை அகநோய்கள் வராமலும் காக்கும். எனவே, அகமும் புறமும் தூய்மையாக இருத்தலே உயர்ந்த நாகரிகம். திருவள்ளுவர்,

           “புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்”23

     என்ற கூறுகின்றார். புறத்தூய்மையை உடனடியாகக் கண்டுகொள்ள முடியும். அகத்தூய்மையைப் படிப்படியாக, அவரவர் நடத்தையின் மூலமே அறிந்துகொள்ள இயலும். ஒருவன் சமுதாயத்தில் வகிக்கும் பதவியையோ, செய்யும் தொழிலையோ வைத்து அவனுடைய அகத்தூய்மையை உறுதிப்படுத்தி விடக்கூடாது. வெளிஉலகிற்கு நல்லவனாகக் காட்சியளிக்கும் ஒருவன் அகத்தில் அழுக்கு நிறைந்தவனாக இருக்கலாம். இதனை,

           “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவும்,
கதவுள்ள போதே சாத்திக் கொள்ளவும்,
நன்கு தெரிந்த நடிகை …… ……..
நித்தம் இருமுறை நீராடு வாராம்
விடிந்ததும் ஒருமுறை வெந்நீரில் குளியலாம்
எல்லாம் முடிந்தபின் இன்னொரு குளியலாம்
………………………………………………………………………………….
ஆடை பாதியும் அழகு பாதியும்
தெரியக் காட்டும் திரைப்பட நடிகையோ,
அறிஞனோ, கலைஞனோ, அரசியல் தலைவனோ,
மடாதி பதியோ, மக்கள் திலகமோ,
கோப்பைக் கவிஞனோ, கோயில் குருக்களோ,
மற்றிங்கு வாழும் மக்கள் கூட்டமோ,
ஆயிரம் தடவை அன்றாடம் குளிப்பினும்
மிகத்தூய்மை பெறுவது மேனியே யன்றி
அகத்தூய்மை நீரால் அமைவ தில்லையே”24

     என்னும் பாடல்களில் சுரதா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கவிதையில் பலரையும் குறிப்பிடும் கவிஞர், அறிஞனையும் சேர்த்துக் கூறுகின்றார். பண்பாட்டை அறிவு உருவாக்கும், ஆனால் சில சமயம் தீமையைக் கூர்மைபடுத்தி விடுவதும் உண்டு. உணர்ச்சியைச் செம்மைப்படுத்தத் தவறிவிடுவதும் உண்டு. எனவே, தான் ஆங்கிலத்தில் ‘Intellectual Giants are moral Pygmies’ என்னும் பழமொழி வழங்குகிறது. ‘அறிவில் வானளாவ உயர்ந்திருப்பவர்களும் ஒழுக்கத்தில் குள்ளராக இருப்பதுண்டு’.

குடும்பக்கட்டுப்பாடு 

     செல்வங்களில் சிறந்தது குழந்தைச் செல்வம். ஆனால் அளவில் மிஞ்சினால், அதுவே குடும்பத்திலும், பின்பு நாட்டிலும் வறுமையைத் தோற்றுவிக்கும். மக்கள்தொகைப் பெருக்கம் இன்று உலகை மிரட்டும் சிக்கலாக மாறி வருகிறது. 138 கோடி மக்களைக் கொண்டுள்ள சீனா, உலகிலேயே அதிகபட்ச மக்கள் தொகையைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக, சீனாவில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளத் தம்பதியருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டு விதி தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு, குடும்பக்கட்டுப்பாட்டு விதியைத் தளர்த்த சீன அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, மக்கள்தொகைப் பெருக்கத்தை உலக நாடுகள் கட்டுப்படுத்த வில்லையானால் உலகில் வறுமை, பஞ்சம், பட்டினி, நோய் போன்றவை பெருகும். இந்த எச்சரிக்கையை முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்திய அரசும் இதனை ஏற்று செயல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கையைப் பெரியார், “பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள், பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும், பிள்ளைகளின் தாட்டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும் குடும்பச் சொத்துக்கு அதிகப் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும், குலைந்தும் போகாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள்”25 என்று எடுத்துக் கூறியுள்ளார். பெரியாரின் சிந்தனையை அடியொற்றி கவிதைகள் படைத்து வந்த பாரதிதாசன்,

           “காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன
குற்றம்?”26
     என்று பாடியிருக்கிறார். இதே சிந்தனையை, அவருடைய மாணவரான உவமைக் கவிஞர் சுரதா,

“பெருக்கெடுக்கும் உணர்ச்சியினால் ஒன்று பத்தாய்ப்
பெற்றெடுக்கும் குழந்தையெனும் கொழுந்தின் கூட்டம்
நெருக்கடியின் அடையாள மன்றோ? அந்த
நெருக்கடிக்கிங் கிடங்கொடுத்தால் குடும்ப வாழ்வே
சருக்குநிலம் ஆகிவிடும் அதனால், பெற்றோர்
தயவுசெய்து குடும்பநலம் காக்க வேண்டும்”27

     என்று பாடுகிறார். மக்கள் செல்வம் மிகுதியானால், அறிவையும், கற்பனை வளத்தையும் குறைத்துவிடும் என்றும், அதனால் குடும்பத்தில் வறுமையும், நிம்மதியின்மையும் தோன்றும் என்றும் எடுத்துரைக்கின்றார்.

முடிவுரை

     சாதி, சமய வேறுபாடுகளைக் கண்டிக்கும் கவிஞர், அவை மானிட சமூகத்திற்குத் தேவையற்றது எனச் சாடியுள்ளார். நிறத்தாலும், பிறப்பாலும் உயர்ந்தோர் என்று எண்ணக் கூடியவர்களை மடையர்கள் எனக் கண்டித்துள்ளார். பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கண்டித்து,  இந்த மூடத்தனமான கொடுமையைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். குடும்பத் தலைவனுக்கு மனைவியும் மழலையும் தரும் மகிழ்வும், புத்தகங்கள் தரும் அறிவும் அலாதியானவை என்பதைக் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். இல்லாள் இல்லாதவனை இருந்தும் பயன் இல்லாதவன் என ஏளனமாகக் கூறியுள்ளார். தனக்குப் பிடித்தவனைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடிக்காதவனைத் தானே நிராகரிக்கும் உரிமையும் பெண்களுக்கு வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றார். மகளிர் தம் அன்றாட வாழ்வில் எவற்றை எல்லாம் கடைபிடித்து வாழ வேண்டும் எனப் பட்டியலிடுகின்றார். ஒழுக்கத்தினை உயிரினும் மேலாகக் கருதும் கவிஞர் சுரதா, ஒழுக்கம் இல்லாதவனை உள்ளத்தில் அழுக்கு நிறைந்தவனாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, தாய்மார்கள் குழந்தைச் செல்வங்களை அளவோடு பெற்றுக்கொள்ள அறிவுரை கூறும் கவிஞர், குடும்பக்கட்டுப்பாட்டுச் சிந்தனையையும் விதைத்துச் சென்றுள்ளார்.

***

குறிப்புகள்

  1. மு.அவையாம்பாள் (க.ஆ), ‘கவிராயரின் சமூகவியல் சிந்தனைகள்’ உடுமலை நாராயணகவி பன்முகப்பார்வை, இரா.சந்திரசேகரன், க.இந்திரசித்து (ப.ஆ), ப.237
  2. கி.முத்துக்கூரி (க.ஆ), பூமணியின் நல்ல நாளில் சமூகச் சித்திரிப்பு, இ.ப.த.ம. முப்பத்தோராம் கருத்தரங்கு ஆய்வுக்கோவை- தொகுதி-3, ப.1393.
  3. பி.யோகீஸ்வரன், தமிழ்க் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள், ப.128.
  4. “Before the arrival of Aryans there was no caste systems in the Tamil Country” Srinivasa Iyengar,M, Tamil Studies, P.61
  5. சி.என். அண்ணாதுரை, ஆரிய மாயை, ப.65
  6. சுப.கதிரேசன், கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயக் கூறுகள், பிஎச்.டி., ஆய்வேடு, ப.53
  7. சுரதா, தேன்மழை, ப.43.
  8. பாரதியார், வந்தே மாதரம், 1
  9. சுரதா, தேன்மழை, ப. 120
  10. மேலது, ப.37
  11. மேலது, ப.64
  12. தொல்.புறத்திணை, நூ.19
  13. ந.சி.கந்தையாபிள்ளை, பெண்கள் உலகம், ப. 70
  14. சுரதா, தேன்மழை, ப.123
  15. மேலது, ப.122
  16. மேலது, ப.124
  17. மேலது, ப.127
  18. திருக்குறள், 66
  19. சுரதா, சுரதா கவிதைகள், ப.79
  20. சுரதா, சுவரும் சுண்ணாம்பும், ப.6
  21. சுரதா, தேன்மழை, ப.112
  22. மேலது, ப.113
  23. திருக்குறள், 298
  24. சுரதா, சுவரும் சுண்ணாம்பும், பக்.17-18
  25. பெரியார், பெண் ஏன் அடிமையானாள்?, ப.57
  26. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-1, ப.40
  27. சுரதா, துறைமுகம், ப.142

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.