Month: June 2018

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180603 Radha Krishna -lr – A4

    “கீதை உரைக்கின்றார் ராதை உருப்பட,
    காதலென்று எண்ணினாள் கன்னியவள்,-மாதுவிடம்,
    கிஸ்ஸல்ல தாயே குவித்தூதல் பாரதம்:
    அஸ்வத்தா ஆனை ஹதம்’’….!கிரேசி மோகன்….!

    KRISHNA FOR TODAY…..!
    ——————————————-

    டீயே மதுரம் சொன்னது ‘’கல்கி’’(கண்ணனின் பத்தாவது அவதாரம்)….என்ன பொருத்தம்….!
    ——————————————————————————————————————————————————————-

    “கீதை உரைக்கின்றார் ராதை உருப்பட,
    காதலென்று எண்ணினாள் கன்னியவள்,-மாதுக்(கு)
    அதரம் காட்டி அடியேகேள் டீ.ஏ(T.A)
    மதுர(ம்)என்.(N) எஸ்.(S)கிருஷ்ணனின் மாது….!கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 163-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. கோபி சங்கரின் கேமரா வண்ணத்தில் உருவான படமிது. ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து, இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளர், தேர்வாளர் இருவரும் என் நன்றிக்கு உரியோர்.

    மழலையைத் தொட்டுமகிழும் இன்பத்துக்கு இணையான இன்பம் மன்பதையில் யாங்கணுமே இல்லை எனலாம். அதன் குதலை மொழிகளோ பெற்றோர்க்குக் குழலினும் யாழினும் இனிமை பயப்பவை.

    ”மழலையர் இல்லாத மன்னுலகம்,
    பூக்கள் இல்லாத சோலை!
    கதிரவன் இல்லாத காலை!”

    நேசக் கரங்களில் நிமிர்ந்து நிற்கும் இம்மழலையைப் பாசத்தோடு வாழ்த்த வருகின்றார்கள் கவிஞர்கள்!

    ”நஞ்சையும் அமுதாக்கிவிடும் பிஞ்சு மழலை; கெஞ்சினாலும் கிட்டாத வரமாய்க் கிடைத்த மழலையிடம் தஞ்சமடைவது சுகம்!” என்று குழந்தையின் வடிவில் காட்சிதரும் தெய்வத்தின் மாட்சியைப் போற்றுகிறார் திரு. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி.

    தெய்வதரிசனம்!!

    கொஞ்சும்பிஞ்சின் குமிழ்நகையில்
    நெஞ்சம் அமிழ்ந்துநெகிழ்கிறது!!
    வெஞ்சாமரமாய் வீசிடும் கரம்பட்டு
    பஞ்சாமிருதருசியாய் இனிக்கிறது!!
    அஞ்சாப்புப்படிச்ச நெனப்புலகிடந்து
    கஞ்சாடையால கலங்குது மனசு!
    வஞ்சிரம்போல வந்திங்குதித்திட்ட
    வஞ்சிக்கொடிதான்இனியெம்வாழ்வு!
    மிஞ்சி மிஞ்சிப்பணமிருந்தாலும்
    இஞ்சு இஞ்சா மகிழ்ச்சி தருஞ்சொத்து
    நஞ்சைக்கூடஅமுதமாக்கும் மருந்து –
    மஞ்சக்கிழங்காப்பிறந்த சிசு தானே!!
    கெஞ்சினாலும் கிட்டாத வரமெதுனா
    தஞ்சம்மழலையிடம்அடைவதொன்றே!
    எஞ்சியுள்ள எதிர்காலப்பலன் எதுனா
    சஞ்சீவியாய் சிறப்பாய் வளர்ப்பதுவே!
    ஆஞ்சு அறிஞ்சு உயர்ந்திருந்தாலும்
    சாஞ்சுபோனது உலகில் இல்லறம்!
    தேஞ்சு போன இகபர சுகங்களுக்குள்
    மீஞ்சிருப்பது பிள்ளைப்பேறுமட்டும்!
    ஈஞ்ச இலைகள் சித்திரை மாதத்தில்
    காஞ்சு சருகாய் விழுவது இயற்கை!!
    பாஞ்சு விழுகிற மழைத்துளிகளாக
    ஓஞ்சவர்களுக்குஉயிரோ குழந்தை!!

    *****

    பிஞ்சுக்காலால் நெஞ்சில் உதைத்துப் பரவசப்படுத்தும் வஞ்சிக்கொடியை அன்பைக் குழைத்துக் கொஞ்சி வாழ்த்துகிறார் திரு. ரா.பார்த்தசாரதி.

    பெண் பிள்ளை

    பெண் மனம் மகிழ பெண்ணைப் பெற்றாள்
    ஆண் மனம் மகிழ் ஆணைப் பெற்றாள்
    ஏனோ உலகில் பாசத்தைப் பிள்ளைகளிடம் வைத்தான்
    பெண்ணும், ஆணும் சமம் என உலகில் உணரவைத்தான்!
    மகளின் பாசம் என்றும் தந்தையிடத்திலே
    மகனின் பாசம் என்றும் தாயினிடத்திலே
    இதுவே இன்றைய பாசவலையாய்த் தொடர்கிறது
    தாய்தந்தையின் நேசக்கரங்கள் உதவுகிறது!
    மகளே, உன் பிஞ்சுக் கால்களால் என்னை உதைக்கின்றாய்
    என் நெஞ்சத்தையும், இதயத்தையும் நெகிழச்செய்கின்றாய்
    உன் பிஞ்சுக் கால்கள் என் மார்பில் நடனமாடுதே
    என் உள்ளம் மகிழ்ந்து திளைக்குதே!
    களைப்புடன் நான் வரும்போது உன் கண் என்னைத் தேடுதே
    உன்னை தூக்கச் சொல்லி என் கைகளை அழைக்கின்றதே
    உன் கைகள் சாமரம் வீசி, என் களைப்பினை நீக்குதே
    உன் கருவிழிக் கண்கள் என்னை அடிமையாக்குதே!
    உன்னை உயரே தூக்கும்போது சிரித்து என்மேல் உமிழ்கின்றாய்
    அதனை உமிழ்நீரை அமிர்தமாய் என்மேல் தெளிக்கின்றாய்
    உன் தண்டைக் கால்களை என் முகத்தின் மேல் பதிக்கின்றாய்
    என் வஞ்சிக் கொடியே, உன் பிஞ்சுக் காலால் மகிழ்வூட்டுகின்றாய்!
    பெண் மகள் என்றும் செல்ல மகள் ஆவாள்
    திருவிழாக் காலங்களில் மஹாலக்ஷ்மியாய் உலா வருவாள்
    தந்தைக்கு என்றும் தாதியாய் இருந்திடுவாள்
    தரணியிலே மகளே என்றும் போற்றப்படுவாள்!

    ***** 

    ”மண்ணில் கால்புதைய நீ ஓடும்போது அங்கே தெரிவது ஓவியமா? காவியமா? தாளால் (கால்) எனை உதைக்கும் கவிதையுனைக் கண்டபின்பு, தாளில் கவிவடிக்கும் எனதாசை போனதே!” என்று நெஞ்சு நெகிழ்கின்றார் திருமிகு. டி.திலகவதி.

    உன் வாய்மொழி
    வார்த்தைகள்…
    என்ன..
    புதுவித அகராதியா..?
    அர்த்தங்கள்
    இல்லையென்ற போதும்
    அதை ரசிக்காமல்
    இருக்க முடியவில்லை….
    இனி
    என் கண்ணீரைத்
    துடைக்கக்
    கைக்குட்டை
    தேவையில்லை…
    உன்
    கைகளே போதும்…
    அமைதி எனும்
    அற்புதத்தீவைக்
    கண்களில் கொண்டு அவதரித்தாயா…!
    உன்னை அணுகும்
    ஒவ்வொரு முறையும்
    வாஞ்சையுடன்
    பிடிபடுகிறது..
    என் மனம்…
    தொட்டுப் பேச
    வார்த்தைகள்
    இல்லை…
    விட்டு விலக
    மனமும் இல்லை…
    உன் ஈறுகள்
    பதித்து ஈரமாக…
    ஏங்குது என் கன்னம்…
    உன் இதழ் பதித்து
    நீ பேச
    தவிக்குது என் இதயம்…
    மண்ணில் கால்
    புதைய நீ ஓட…
    அங்கே..
    தெரிவது என்ன
    காவியம் பேசும்
    ஓவியமா..?
    ஒரே ஒரு முறை
    தான்..
    உன்னைத் தொட்டு
    தூக்கி இருப்பேன்…
    பிறகு ஏன்..?
    என் கரங்கள்
    கவி எழுதத்
    தயங்குகிறது…
    ஓ….
    நான் எழுதும்
    கவியை விட
    அரத்தமுள்ள கவிதையாய்
    உன்னைக்
    கண்டு கொண்டதா
    என் கரங்கள்…!!!

    *****

    ”கண்ணே உன் கனிமழலை கேட்டபின் காட்டுக்குயிலும் பாட்டை மறந்தது! பெண்ணைப் பெற்ற ஆண்களுக்கு மூன்று தாயடி! கொடுத்துவைத்தோர் எனைப்போல அவனியில் யாரடி?” என்று பெருமிதம் கொள்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

    தந்தையின் பெருமிதம்

    ஆண்டவன் அருளாலே நான் பெற்ற அஞ்சுகமே!
    அப்பா என்றழைத்து ஏற்றம் தந்தவளே!
    உன்னைச் சுமக்கையிலே சிந்தை மகிழுதடி!
    அன்னை சுமந்ததற்கு உள்ளம் நன்றி சொல்லுதடி!
    மகளாய் நீ பிறந்த பின்னே வாழ்க்கையின் அர்த்தம் புரிந்ததடி!
    நீ எட்டி உதைக்கையிலே கர்வம் தொலையுதடி!
    நீ முத்தம் தருகையிலே ஆயுள் கூடுதடி!
    உன் மழலை கேட்ட பின்,
    குயில் கூவ மறந்ததடி!
    உன்னைத் தழுவி மகிழ்ந்த பின்னே,
    மலரும் முள்ளாய்த் தோன்றுதடி!
    நீ நாக்கைக் காட்டையிலே
    உன் அன்னையின் தோற்றமடி!
    உன் மனதின் ஆசையெல்லாம்
    நிறைவேற்றும் உன் அன்புத் தந்தையடி!
    நான் துவண்டு விழும் போது
    உன் மடியே என் சொர்க்கமடி!
    என்னருகில் நீ இருந்தால்!
    மரணமும் மகிழ்ச்சியடி!
    பெண்ணைப் பெற்ற ஆண்களுக்கு மூன்று தாயடி!
    கொடுத்து வைத்தோர் எனைப் போல அவனியிலே யாரடி!
    எனைப் பெற்ற தாய் முதலானாள்!
    என் பெண்ணைப் பெற்ற மனையாளும் தாயானாள்!
    நான் பெற்ற என் பெண்ணே அன்பில், நீ மூன்றில் முதலானாய்!

    *****

    ”என் இரும்பெனும் இதயத்தை உன் மருந்துச் சிரிப்பால் நெகிழ்த்திய மலரே! நான் எத்தனை வெற்றிகள் பெறினும், பத்தரை மாற்றுத் தங்கமே உன்னிடம் மொத்தமாய்த் தோற்பதே இனிமை” என்று சந்தக் கவியில் சிந்தை தொடுகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    அரும்பு மலரே.. அருமை மகளே..

    அரும்பு மலரே.. அருமை மகளே..
    கரும்புச் சுவையே..கனிவாய் மொழியே.. நான்
    விரும்பும் தமிழே.. விண்ணுறை மதியே.. என்
    இரும்பினை யொத்த இதய மதனை.. நீ
    மருந்தெனும் சிரிப்பால் இளக்கி விட்டாயே…!

    தென்கடல் முத்தே.. தெவிட்டாத அமுதே
    கண்ணே மணியே.. கனவுப் பூவே.. என்
    விந்தை உலகே.. வியத்தகு அழகே.. நான்
    முன்னர்ச் செய்த தவப்பயன் விளைவோ..
    பொன்னே யுந்தன் தந்தை யானது…!

    இதந்தரும் தென்றலே.. இனித்திடும் கவிதையே..
    இதயத் துடிப்பே.. எந்தன் உயிரே.. நான்
    எத்தனை எத்தனை வெற்றிகள் பெறினும்..
    பத்தரை மாற்றுத் தங்கமே உன்னிடம்..
    மொத்தமாய் பணிந்து தோற்பதே இனிமை…!

    *****

    பேசும் பொற்சித்திரமாம் கனிமழலையைப் பாராட்டிக் கற்கண்டுக் கவிவடித்த கவிஞர் குழாம் வாழியவே!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    பெண்ணினத்தால் இம் மண்ணுலகம் சிறக்கும்…!

    திறத்தாலே உயர்வுற்று தாய்நாட்டுப் பற்றுடனே
    ……….தோன்றிய பெண்களால் நம்நாட்டுக்குப் பெருமை..!
    இறத்தலுக்கு அஞ்சா தாங்கிலேய ஆதிக்கத்திற்கு
    ……….எதிராக ஆயுதமேந்திப் போராடியவருமதில் உண்டு..!
    மறத்தியர்போல் வாழ்ந்த மறக்க முடியாதவரதில்
    ……….மங்கை வீர வேலுநாச்சியும் அஞ்சலையம்மாளும்..!
    அறத்தின் செல்வியெனச் சுதந்திரப் போராட்டத்தில்
    ……….ஆயிரமாயிரம் வீராங்கனைகள் இவர் போலுண்டு..!

    பெருமதிப்புக் கொண்டே அக்காலத்தில் கருத்துடன்
    ……….பெண்ணைக் கண்ணாகக் கருதியே காப்பாற்றினர்..!
    கருவிலேயே பெண்சிசுவை அழிக்கின்ற அடாத
    ……….காரியத்தைக் காணுகின்ற கொடுமை நிகழ்கிறது..!
    அருகிவரும் பாலினமாக இன்று பெண்ணினமே
    ……….சுருங்கிவிடுமோ என்கிற அச்சமும் எழுகின்றது..!
    அருங்கலம்போல் கிடைக்கின்ற அரிய உயிரை
    ……….அரும்புமுன் அழிப்பது கொடும்பாவச் செயலன்றோ..!

    பெண்ணாய்ப் பிறந்தாலே முழுதும் துன்பமெனப்
    ……….பெரிதே கவலையுறும் தாய்மார்கள் திருந்தவேணும்..!
    அண்டத்தில் பிறவி ஆணாயினும் பெண்ணாயினும்
    ……….அதிலரியது பெண்ணென்பதை அறிய வேண்டும்..!
    பெண்டாட்டி தாய்மகள் சகோதரியெனும் பலவாறு
    ……….பிறவியெடுக்கும் பிறப்புக்குப் பெண்ணே மூலமெனும்..
    கண்ணோட்டம் வந்துவிட்டால் கண்ணீர் அகலும்
    ……….காலமாற்றமும் இதற்கு நிச்சயமாய் உதவிசெய்யும்..!

    அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதனினும் அரிது பெண் மகவாய்ப் பிறப்பது என்பதை இவ் வையம் அறிய வேணும். பெண்ணவள் அன்னையாய் மாறி உயிர்க்குலத்தை வளர்க்காவிட்டால் மண்ணுலகில் மன்னுயிர்கள் ஏது?

    மறத்தோடு நம் மண் காத்த வீரமங்கையரை மறக்கவியலுமோ? பெண் குழந்தைகளை அருளின்றிக் கருவிலே கொல்லாமல், திருவெனக் காப்போம்! என நன்மொழி பகரும் இக்கவிதையின் படைப்பாளி பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமம், சத்ரு சம்ஹார ஆறுமுகஹோமம் நடைபெற்றது

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞனகுரு” டாக்டர் ஸ்ரீ முரளித ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 04.06.2018 திங்கட்க் கிழமை காலை 10.00 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் ஷஷ்டி திதியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஆறுமுக ஹோமமும் நடைபெற்றது. மேலும் இதில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சபூதங்களுக்கும், அஷ்டதிக்பாலகர்களுக்கும், வாஸ்து பகவானுக்கும், கார்த்திகை குமரனுக்கும் மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    இந்த யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. மேலும் நாளை 05.06.2018, 06.06.2018 நடைபெற உள்ள மங்கள சண்டி யாகத்தின் பூர்வாங்க பூஜைகள் இன்று நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
    அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….கிரேசி மோகன்…..!

    Share
  • அன்னையர் தினம்

    உன்னை ஈன்ற அன்னையைப் போற்று
    தன்னுயிர் போகும் ஆபத்து எனினும்
    உன்னுயிர் காத்தல் முக்கியமென்றெண்ணி
    எண்ணற்ற வேண்டுதல்கள் ,எத்தனை பத்தியங்கள்
    கண்மூடித் தூங்குகையிலும் கருத்தினிலே கருவிருக்கும்
    உண்ணும் உணவினிலும் உன்மேலதான் கவனமெல்லாம்.
    புரண்டு படுக்கையிலும் , பொறுப்பெல்லாம் கருவின்மேல்.
    வறண்ட மனதினிலே ,வண்ண மலர்ச்சோலையாக
    திரண்ட குழந்தைதான் திகட்டாத இன்பமன்றோ.
    மனைவி எனும் நிலைமாறி , அன்னையெனும் நிலைபெறுதல்
    நினைவினிலே சுகமளிக்கும்,நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும்.
    உதிரத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுக்கையிலும்
    உதிர்க்கும் வார்த்தைகளின் உன்னத மழலையிலும்
    தொட்டிலிலிட்டு தாலாட்டு இசைப் பதிலும்
    வட்டிலில் சோறுவைத்து வான் நிலா காட்டுவதிலும் ,
    மடியினில் சுமந்த பிள்ளை ,மண்மீது தவழ்கையிலும்
    அடிமேல் அடியெடுத்து ஆடி ஆடி நடக்கையிலும்
    பள்ளிப் பருவத்தில் பாடம் சொல்லிக்கொடுப்பதிலும்
    துள்ளி விளையாடுகையில் அள்ளி அணைப்பதிலும்,
    ஒவ்வொரு கட்டத்திலும் , உன் ஒவ்வொரு அசைவினிலும்
    ஒவ்வொரு முன்னேற்றத்தையும் , உவகையுடன் ரசிப்பதிலும்
    உற்றாரும் ,மற்றோரும் பாராட்டும்போதேல்லாம்
    சற்றே பெருமையுடன் , சந்தோஷப் படுவதிலும்.
    சுணக்கமும் இல்லாமல் , சுமையாகக் கருதாமல்
    தனக்கென்று வாழாமல் உனக்கென்று வாழ்வதிலும்
    பாசத்தின் பொருளாக , தியாகத்தின் உருவாக
    நேசத்தைப் பொழிகின்ற , அன்னையைப் போற்று.

    விண்ணகத் தேவர்கள் , தங்கள் பிரதிநிதியாய்
    மண்ணகத்தே படைத்த மாண்புக்கு அன்னையை
    என்ன துன்பம் வரினும் , என்ன விலை கொடுத்தும்
    கண் எனக் காப்பதுன் கடமைஎன்றுணர்ந்துகொள் .

    எத்தனை பிறவிகள் எடுத்தாலும் , எண்ணற்ற செல்வம் கொடுத்தாலும்
    அத்தனையும் போதாது , அன்னையின் கடன் தீர்க்க.
    வித்தகனாய் விளங்குவதில் பெருமையில்லை , அன்னைக்கு
    முத்தனைய பிள்ளையாய் வாழ்வதே பெருமையன்றோ.

    சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

    Share
  • போராட்டம்!

    எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா


    நீதிக்கும் போராட்டம் நியாயத்துக்கும் போராட்டம்
    சாதிக்கும் போராட்டம் சமயத்துக்கும் போராட்டம்
    போதிக்கும் குருமார்க்கும் போராட்டம் போராட்டம்
    போராட்டம் இப்போது போராடி நிற்கிறதே!

    கோவில்சிலை போகுதென்று போராட்டம் ஒருபக்கம்
    கோவிலையே தகர்ப்போமென்று போராட்டம் மறுபக்கம்
    சாமியில்லை சாமியில்லை என்றுசொல்லிப் போராட்டம்
    சன்மார்க்கம் காத்திடுவார் தம்பாட்டில் போராட்டம்!

    மருத்துவர்கள் வசதிக்காய் வகைவகையாய் போராட்டம்
    மருந்திலே கலப்படத்தை தடுத்துவிடப் போராட்டம்
    நோயாளி சுகம்பெற்று வருவதற்கும் போராட்டம்
    போராட்டம் மருத்துவத்தைப் பொறிவைத்தே நிற்கிறது!

    கற்றறிந்தார் காசுக்காய் போராட்டம் நடத்துகிறார்
    கல்விகற்கும் மாணவரும் போராட்டம் நடத்துகிறார்
    அற்பத்தனம் கொண்டுநிற்கும் அனைத்துக் கல்விமுதலைகளும்
    ஆதாயம் தேடுதற்கும் போராட்டம் நடத்துகிறார்!

    ஊழலென்னும் பேயதனை ஒழித்துவிடப் போராட்டம்
    உணர்வதனை இழக்கவைக்கும் மதுவொழிக்கப் போராட்டம்
    வாழ்வதற்குத் தொழில்தேடும் மக்களது போராட்டம்
    மாற்றுத் திறனாளிகளும் போராட்டம் நடத்துகிறார்!

    கதிரையினைப் பிடிப்பதற்கும் போராட்டம் நடக்கிறது
    கதிரையிலே இருப்பாரும் போராட்டம் நடத்துகிறார்
    போராட்டம் என்பதற்கே அர்த்தமின்றிப் போகிறது
    போராட்டம் தனையொழிக்கப் போராட்டம் தேவையன்றோ!

    Share
  • கருங்குயிலே!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

    காரிருளில் நள்ளிரவில்
    ஒளிந்து பாடிக் கொண்டிருக்கிறது
    ஓரிளம் கருங்குயில் !

    முறிந்து கிடக்கும் சிறகுகளைச்
    சேர்த்து நீ
    பறக்கப் பயின்றிடு !

    பிறந்த பின்பு
    இத்தருண வரவுக்குத் தான் நீ
    காத்திருந்தாய் !

    கருங்குயில்
    காரிருளில் பாடிக் கொண்டுள்ளது.
    கிடக்கும் விழிகளை
    எடுத்துக் கொள்,
    கூர்ந்து நோக்கப் பயின்றிடு !

    இத்துணைக் காலம்
    இந்த விடுதலைக் குத்தான் நீ
    காத்திருந்தாய் !

    பறந்து போ கருங்குயிலே !
    பறந்து போ !

    காரிருள் வழியே நடந்து
    வெளிச்சத் துக்குள்
    நுழைவோம் !

    இத்தருண விடுதலைக் குத்தான் நீ
    காத்திருந்தாய் !

    பறந்து போ கருங்குயிலே !
    பறந்து போ !

    ++++++++++++

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”வாழையடி வாழையாய் வீரமுற்ற வாரிசுனை
    கோழையென இவ்வுலகோர் கூறிடுவர் -தோழனே
    சாதலினும் தீதன்றோ சூழும் அவமானம்
    ஊதிடச் சங்கிருக்கே ஓய்”….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி (164)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

     வனிலா பாலாஜி எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு  ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 110

    நிர்மலா ராகவன்

     

    எழுதப்படாத விதிமுறைகள்

    ஒரு கணவனாக, மனைவியாக, பெற்றோராக, பொதுவாக, எந்த பொறுப்பான நிலையிலும் செய்யக்கூடாதவை பொய், பித்தலாட்டம், வன்முறை ஆகியவை. ஆனால், எத்தனை பேர் இதையெல்லாம் கடைப்பிடிக்கிறார்கள்?

    முப்பது ஆண்டுகளுக்குமுன்

    ஓயாமல் சண்டை பிடித்துக்கொண்டு, பின்பு விவாகரத்து பெற்றனர் அத்தம்பதி. மூத்தவளான டெய்ஸி தந்தையுடன் வளர, இளையவள் தாயின் பொறுப்பில் விடப்பட்டாள். அதற்கு முன்னர் பாசம் என்றால் என்னவென்றே அறியாது வளர்ந்திருந்தனர் இருவரும். பெற்றோர் மறுமணம் செய்துகொண்டார்கள்.

    டெய்ஸி காதல் வயப்பட்டு மணந்துகொண்டாள் — தன்னையும் அறியாது, தந்தை தாயை வதைத்ததுபோன்று வன்முறையைக் கைப்பிடிக்கும் ஒருவனை. சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவனது கொடுமை தாங்கமுடியாதுபோக, மீண்டும் தந்தையின் வீட்டில் சரண் புகுந்தாள். சிற்றன்னை அவளது நிலைமையைப் புரிந்துகொண்டு, அன்புடன் ஆதரவு அளித்தாள்.

    `இவள் வேறு எங்கு போயிருக்கப் போகிறாள்!’ என்று அவளைத் தேடி வருவதை வழக்கமாகக் கொண்டான் அவள் கணவன். வன்முறை தொடர்ந்தது.

    டெய்ஸியின் மனநிலை பெரிதும் பாதிப்படைய, எதைக் கண்டும் அஞ்ச ஆரம்பித்தாள். காற்றில் கதவோ, ஜன்னலோ ஆடினால்கூட, கணவன்தான் வருகிறான் என்ற படபடப்பு ஏற்பட்டது.

    அவளைப் பார்க்க வந்த தங்கை, “என் அக்காளுக்கு இங்கு போதிய பாதுகாப்பு இல்லை. நான் அவளை என் தாய் வீட்டுக்கே அழைத்துப் போகிறேன்,” என்று சிற்றன்னையுடன் வாதாடினாள்.

    சிற்றன்னை சம்மதிக்கவில்லை. இருவருக்கும் பலத்த வாக்குவாதம் நடக்க, ஏற்கெனவே குழம்பியிருந்த டெய்ஸிக்கு நடப்பது என்னவென்றே புரியவில்லை. ஒரு கத்தியால் சிற்றன்னையைக் குத்திக் குதறினாள் – இருபது தடவைக்குமேல். `கொலையாளி!’ என்று சட்டம் அவளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. (இக்கதையை எனக்குச் சொன்னவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்).

    இப்போது, `அன்பான சிற்றன்னையை நானே கொன்றுவிட்டேனே!’ என்று டெய்ஸி வருந்தாத நாளில்லை.

    இதில் யார் குற்றவாளி?

    சிறுவயதில் அன்போ, அரவணைப்போ அளிக்காது வளர்த்த பெற்றோரா?

    `மனைவி’ என்றால் தன் மனம் போனபடி அவளை நடத்தலாம் என்றெண்ணிய கயவனா?

    இவர்கள் தம் பொறுப்பிலிருந்து வழுவிவிட்டதால்தான் எத்தனை விபரீதம்!

    அலட்டல் ஏன்?

    அலுவலங்களில் அதிகமாக அலட்டிக்கொள்பவர்கள் பெரிய பதவிகளில் இருப்பவர்களாக இருக்காது. இவர்கள்தாம், `எனக்கும் அதிகாரம் இருக்கிறது!’ என்று தம்மையே ஏமாற்றிக்கொண்டு, அதைப் பிறருக்கும் உணர்த்த விரும்புகிறவர்கள்போல் நடப்பார்கள். தம்மைத் தாமே தாழ்வாக நினைப்பதால் வந்த வினை!

    கதை

    செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்கு வேலை செய்ய வந்தபோது, வேணி சிரித்தமுகமாய், சுறுசுறுப்பாக இருந்தாள். அவளை மிக மிக மரியாதையாக நடத்தியது அக்குடும்பத்தினர் செய்த பெரிய பிழை.

    `இவர்களுக்கு நம்மைவிட்டால் வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள்’ என்ற திமிர் ஏற்பட்டது வேணிக்கு. பத்து வருடங்களுக்குப்பின், தனக்குச் சம்பளம் கொடுப்பவர்களையே அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள். தன் கவனிப்பில் இருந்த முதியவளுடன் ஓயாமல் தொலைகாட்சி பார்த்ததில், கையையும், தலையையும் ஆட்டிக்கொண்டு, `வீராங்கனை’போல் பேசும் பழக்கம் வந்தது.

    விருந்தினர் ஒருவர் அந்த வீட்டுக்குப் போய் தங்கியபோது, `நான்தான் இந்த வீட்டு எஜமானி!’ என்பதுபோல் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டாள்.

    அவர் ஏன் பொறுப்பார்? “சும்மா வாயாடாதே! உள்ளே போய், வேலை இருந்தா பாரு!” என்று பதிலுக்குக் கத்த, பயந்து, உள்ளே ஓடினாள் வேணி.

    “அம்பது வயசுக்குமேல எனக்கு வாயாடிப் பட்டம்!” என்று முனகினாள், தன்னிரக்கத்துடன்.

    அக்குடும்பத்து இளைஞனும் துணிந்து அவளை எதிர்க்க, “நான் வேலையை விட்டுப் போயிடுவேன்..,” என்று மிரட்ட ஆரம்பித்தாள்.

    “நீ போனா, ரெண்டு நாள் கஷ்டப்படுவாங்க. அப்புறம் வேற ஒருத்தி கிடைக்காமலா போவா? யார் போனாலும், உலகம் நடக்காம போறதில்லே. வேண்டியவங்க போயிட்டா, நாம்ப சாப்பிடறதில்லையா, புதுத்துணி வாங்கறதில்லையா?” என்று யாரோ உணர்த்தினார்கள். (அது நானில்லை என்றால், நம்பவா போகிறீர்கள்?)

    வெகு காலத்திற்குப் பிறகு, வேணி தன் உண்மை நிலையைப் புரிந்துகொண்டாள். எண்ணையில் போட்டு எடுத்ததும் பூரி உப்பியிருக்கும். சிறிது நேரத்தில் அமுங்கிவிடும். அதுபோல் வேணியின் பூரித்திருந்த செருக்கு அடங்கியது. அதன் பின்னர், “நான் இந்த வீட்டிலே வேலை செய்யறவதான். எதுவா இருந்தாலும், ஐயாகிட்ட கேளுங்க,” என்று கம்மிய குரலில் கூறப் பழகிக்கொண்டாள்.

    மருத்துவர்கள்

    ஆரோக்கியக் குறைவால் அவதியுறும் நோயாளிகளைப் பார்த்து, `வேடிக்கை!’ என்று சிரிக்கும் டாக்டரைப் பார்த்திருக்கிறீர்களா?

    கோலாலம்பூரில் அப்படி ஒருவர் இருந்தார். பெயரா? கம்சன் என்று வைத்துக்கொள்ளலாம். `என்னால் எந்த வியாதியையும் குணப்படுத்திவிட முடியும்!’ என்ற செருக்குடன் செயல்பட்டார்.

    `தோளில் வலி,’ என்று அவரிடம் போனேன், யாரோ செய்த சிபாரிசை நம்பி. ஒருமாதக் குழந்தைக்கும் அவரிடம் ஒரே வகை வைத்தியம்தான். உடலில் பல பாகங்களில் மெல்லிய மின்சாரத்தைச் செலுத்துவார். அதிர்வு உண்டாகும்.

    வரிசையாக எட்டு பேரை உட்காரவைத்து, கம்சன் தனது `வைத்தியத்திறனை’ காட்டும்போது, `டாக்டர்! நான் பயந்தவள்!’ என்று சிலர் கெஞ்ச, பெரிதாகச் சிரிப்பார். மின்னதிர்ச்சி தாக்கியதும், சிரிப்பு இன்னும் பலக்கும்.

    ஒரு முறை, என் அனுமதியைப் பெறாது தலையில் சற்று அதிகமான மின்சாரத்தைச் செலுத்த, எதிர்பாராத அதிர்ச்சியாலும், வலியாலும் அலறித் துடித்தேன். எந்தச் சிறிய சிகிச்சைக்கு முன்னரும் நோயாளிக்கு அதன் தன்மையை விளக்கவேண்டும் என்பது விதி.

    இம்மாதிரி வைத்தியத்திற்கு இந்நாட்டில் அனுமதி கிடையாது என்று தெரிந்துபோனதும், மருத்துவத்துறையினரிடம் நான் புகார் செய்ய, ஐந்தாண்டுகள் வழக்கு நடந்தது. முதலில் இறுமாப்பாக நடந்துகொண்டார் கம்சன். அவர் சம்பாதித்திருந்த லட்சங்களெல்லாம் வக்கீல்களுக்குப் போயிற்று.

    `எனக்கு வக்கீல் கிடையாது!’ என்றுவிட்டேன். நான் உண்மையே பேசுகிறேன் என்று புரிந்து, அவருடைய வக்கீல், “என் தொழிலைத்தான் செய்கிறேன்,” என்று தனிமையில் என்னிடம் மன்னிப்பு கோரினாள்.

    போகப்போக, அவர் பிறருக்கு விளைவித்த அச்சம் அவரையே தாக்கியது. அந்த நடுக்கத்தைக் கண்டு எனக்குள் அலாதி திருப்தி பிறந்தது. இறுதியில், அவரது உரிமம் ஓராண்டு காலத்திற்கு பிடுங்கப்பட்டு, மருத்துவமனைக்கு `சீல்’ வைத்தார்கள்.

    `நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள்?’ என்று என்னை நன்கு அறிந்த சிநேகிதி ஒருத்தி ஆச்சரியப்பட்டு, பிறகு, `ஓ! உங்களால்தான் அவருடைய நாட்பட்ட, அடாத செயலுக்கு ஒரு முடிவுகட்ட முடியும் என்றே இப்படி நடந்திருக்கிறது!’ என்றாள். நன்மை விளைந்தாலும், எனக்கு ஏற்பட்ட தாக்கத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகள் வக்கீல், வழக்கு சம்பந்தப்பட்ட எந்த ஆங்கிலப் புதினங்களையும் படிக்க முடியவில்லை.

    இங்கு அரசாங்க மருத்துவமனைகளில் மிக நல்ல கவனிப்பு. ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களை மிக மரியாதையாக நடத்துவார்கள். ஏழையோ, பணக்காரரோ, எல்லாரும், `அங்கிள், ஆன்ட்டி’தான். எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும், `நாம் செய்யும் வேலை இழிவானது,’ என்ற தாழ்வு மனப்பான்மை இல்லாது, சிரித்த முகத்துடன் நம்முடன் பேசுவார்கள். அவர்களுடைய தலைவர் பொறுப்பானவராக இருக்கவேண்டும்.

    அந்த மனிதர் கம்சனின் போதாத காலம், நான் அங்கு சென்றிருக்கிறேன். இனி, தன்னிச்சைபோல் நடக்கத் துணியமாட்டார்.

    அரசியல்வாதிகள்

    அரசியலில் பெரிய பதவி வகித்து, `மக்கள் பணம் என் பணம்’ என்பதுபோல் நடந்துகொள்பவர்கள்… போதும், போதும். உங்களுக்குத் தெரியாததா!

    எந்த ஓர் உத்தியோகத்திலும், எந்நிலையிலும் செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என்று சில எழுதப்படாத விதிமுறைகள் இருக்கின்றன. அவைகளைக் கடைப்பிடித்தால்தான் நிம்மதியும் மரியாதையும் நிலைக்கும்.

    இது ஏன் பலருக்கும் புரிவதில்லை?

    பிறரைப் பார்த்தும் இவர்கள் ஏன் கற்பதில்லை?

    சரித்திரம் மீண்டும் மீண்டும் தலைதூக்கும் என்பது இதுதானோ?

    தொடருவோம்

    Share
  •   வாழ்ந்து பார்க்கலாமே  23

    க. பாலசுப்பிரமணியன்

    துணிவுக்கு வரும் சவால்கள்

    துணிவு முன்னேற்றத்திற்கான ஒரு  அறிகுறி. துணிவு இல்லாமல்  நம்மால் எதிலும் முன்னேற்றம் காணமுடியாது. துணிவுக்கு எதிர்மறையானதே பயம். துணிவு இருளில் ஒளியைத் தேடுகிறது. பயம் ஒளியில் இருளைக் காண்கிறது. துணிவு சாதனைக்கு வழியைத் தேடுகின்றது. பயம் சாதனைப் பாதையில் உள்ள தடைக்கற்களை கண்டு தயங்கி நிற்கிறது. துணிவு தோல்வியைக்கண்டு அஞ்சுவதில்லை. பயம் வெற்றிப்பாதையில் தோல்வியின் தடயங்களைக்கண்டு மலைக்கின்றது.

    துணிவால் கிடைக்கின்ற சிறிய வெற்றிகூட அடுத்த முயற்சிக்கு வேண்டிய துணிவை நமக்கு அள்ளித்  தருகின்றது.இந்திய கடற்படையைச் சார்ந்த ஆறு பெண்மணிகள் Lt  கமாண்டர் விருத்திகா ஜோஷி அவைர்கள் தலைமயில் உலகம் முழுவதையும் ஒரு இயந்திர படகின் மூலமாக சுற்றி வருவதற்கான துணிவான முயற்சியை மேற்கொண்டார்கள், உலகின் பல்வேறு கடலலைகளின் தாக்கங்ககளையம் தாக்கல்களையும் முறியடித்துக்கொண்டு எட்டு மாதங்கள் தங்களுடைய பின்னடைவுகளுக்கு இரையாகாமல் துணிவோடு பயணித்தார்கள். எட்டு மாதங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன் அவர்கள் இந்தியா திரும்பியபோது இந்தப் பெண் வீராங்கனைகளை இந்திய துணைக்கண்டம் மற்றுமின்றி உலகத்தின் பல்வேறு நாடுகளும் புகழ்ந்தன .”

    இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரர் திரு சத்யேந்திர வர்மா தனது பள்ளியில் படிக்கும் பொழுதே வாழ்க்கையில் ஏதாவது புதிய சாதனை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார். விமானப் படையில் சேர்ந்ததும் விமானத்திலிருந்து கீழே விமானக்குடைகள் (parachute) மூலமாக குதிப்பதில் வல்லமை பெற்றார். அவருடைய சாகசங்கள் அவருடைய துணிவை மேலும் வளர்த்தன. அதன் பின் உலகின் பல உயரமான கட்டிடங்களிருந்து எவ்வாறு பாதுகாப்பான முறையில் கீழே குதிப்பது என்பதற்கான முயற்சிகளைத் துணிவுடன் மேற்கொண்டு பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டினார். இந்தியாவிலேயே இந்த சாகச விளையாட்டுக்களில் மிகத் தேர்வு பெற்றவராக விளங்கி இந்திய அரசின் பாராட்டுதல்களையும் பட்டங்களையும் இந்திய ஜனாதிபதியிடமிருந்து  பெற்றார். இளைஞர்களுக்கு அவர் கொடுத்த ஒரு செய்தியில் “துணிவு என்பது மனதில் இருந்தால் மட்டும் போதாது. அதைத் தொடர்ந்து நாம் ஈடுபடும் செயல்களில் நமக்கு போதிய அறிவும் திறன்களும் அந்த சாகசங்களை போதுமான தற்காப்புக்களுடனும் செய்வதற்கான திட்டங்களும் தேவை. துணிவுடன் செயல் படுவது என்பது ஒரு கண்மூடித்தனமான செயல் அல்ல

    ஆழம்தெரிந்து .காலைவிடு என்பது பழமொழி மட்டுமல்ல ஒரு சிந்திக்கவைக்கும் அறிவுரை. பலபேர்கள் தொழில்களைத் தொடங்கும் பொழுது தங்களிடம் போதுமான பணம் இருக்கின்றது என்ற ஒரே ஆணவத்தில் தொழிலில் ஈடுபட்டு அதை முறையாகச்  செயல்படுத்துவதற்கோ அல்லது நடத்துவதற்க்கோ தேவைப்படும் திறன்கள் இல்லாமல் தோல்விகளில் தங்களை இழந்து விடுகின்றார்கள். மேலும் சில பேர் தங்களிடம் அறிவும் திறனும் இருப்பதால் மட்டும் தொழில்களில் மூலதனமின்றி ஈடுபட முடியும் என்ற ஒரு குருட்டு தைரியத்தில் தங்கள் பொன்னான நாட்களை இழந்து நிற்கின்றார்கள். இந்த இரண்டு வகையினரும் துணிவைத் தவறாக எடை போட்டவர்கள். அறிவு துணிவுக்குக் கண்கள். திறன்கள் துணிவுக்குக் கைகள். ,மூலதனமும் வளங்களும் துணிவுக்குக் கால்கள். இவை அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் துணிவுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

    அறிவும் திறனும் இருந்து விருப்பமில்லாத பாதையில் துணிவாகச் செல்ல முயல்வது முட்டாள்தனம். பல நேரங்களில் பல படித்த துணிவான இளைஞர்கள் தங்களுடைய முன்னோர்கள் செய்த தொழிலை குடும்ப நிர்பந்தங்கள் காரணமாக விருப்பமின்றிச் செய்து பின்னடைவு ஏற்படுத்திய நிகழ்வுகள் பலவற்றைக் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம். ஒரு முறை மருத்துவப் படிப்பிற்கான தேர்வுகள் நடந்துகொண்டிருந்த மையத்தில் தேர்வின் முடிவில் ஒரு மாணவனை நேர்கண்டபோது அவரிடம் எப்படி எழுதியிருக்கின்றீர்கள் என்று கேட்ட பொழுது “மிக நன்றாகத் தான் எழுதியிருக்கின்றேன். முதல் நூறு பேருக்குள் உறுதியாக வந்துவிடுவேன். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு மருத்துவத்தில் விருப்பமில்லை. என் தாய் தந்தை இருவரும் மருத்துவராக இருப்பதினால் நான் இந்தத் தொழிலில் தான் வரவேண்டும் என்று விருப்பப்படுகின்றார்கள். எனக்கோ இலக்கியத்தில் தான் விருப்பம்.” என்று சொன்னபோது சில சமுதாய பார்வைகள் நமது வருங்காலத்தோடு எவ்வாறு விளையாடிக்கொண்டிருக்கின்றன என்று நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

    துணிவோடு செயல் படுபவர்கள் தோல்விகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். அவர்கள் மாற்றங்களுக்கு வித்திடும் பொழுதும் புதிய சிந்தனைகளை முன்வைக்கும் பொழுதும் அதற்கான ஏற்புக்கள் குறைவாகவும் எதிர்புக்கள் அதிகமாகவும் இருக்கத்தான் செய்யும். இந்த எதிர்ப்புக்களை அவர்கள் தங்கள் ஆக்க சக்திக்கு உரமாக்கிக்கொண்டு முன்னேறுவதில் தங்கள் சாதனைகளுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பார்கள். முதல் முறையாக கிராமபோனை நியூட்டன் கண்டுபிடித்த பொழுது அமெரிக்காவின் ஒரு முன்னணிப் பத்திரிகை அவரை மிகவும் சாடியது மட்டுமின்றி தரக்குறைவாக விமர்சித்தது. அவரின் கண்டுபிடுப்பு பைத்தியக்காரத்தனத்தின் எல்லை என்றும் அது அமெரிக்காவின் நாகரீகத்தின் அடிப்படைகளைச் சிதைத்து விடுமென்றும் கூறியது.. ஆனால் நியூட்டன் துணிவும் விடாமுயற்சியும் இந்த விமர்சனங்களை புறக்கணித்து தன்னுடைய ஆராய்ச்சிகளின் வெற்றிகளின் பாதைகளை வகுத்துக்கொண்டிருந்ததன.

    உங்கள் துணிவு பலபேரின் பயத்திற்குக் காரணமாக இருக்கலாம். உங்கள் துணிவு மற்றவர்களின் கருத்து ஆதிக்கங்களுக்குச் சவாலாக இருக்கலாம் உங்கள் துணிவு பழக்கத்தில் உள்ள பல நெறிமுறைகளுக்கும் செயல்களுக்கும் முடிவுரையாக இருக்கலாம். ஆனால் துணிவுதான் சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கல். அதற்கு நீங்களும் நானும் ஏன் முன்னுரை எழுதக்கூடாது ?

    துணிந்து வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • குறளின் கதிர்களாய்…(216)

    -செண்பக ஜெகதீசன்

    நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்  
    சொற்பொருள் சோர்வு படும்.   (திருக்குறள் -1046: நல்குரவு)

     புதுக் கவிதையில்… 

    நல்ல பொருளை
    நன்கு அறிந்துணர்ந்து
    சொன்னாலும்,
    வறியவரின் வாய்ச்சொல்
    கருதப்படும்
    பொருளற்றதாகவே…! 

    குறும்பாவில்…

    உயர்ந்த நூற்களின் கருத்துக்களை
    ஆய்ந்தறிந்து சொன்னாலும், பொருளற்றதாகிவிடும்
    வறியோர்தம் வாய்ச்சொல்…! 

    மரபுக் கவிதையில்…

    நல்ல நூற்கள் கற்றுணர்ந்தே
         -நயமுடன் அவற்றின் பொருளதனைச்
    சொல்லும் வகையில் சொன்னாலும்
       -சேர்ப்ப தில்லை பொருளுளதாய்,
    நல்லதாய் அதையே ஏற்பதில்லை
    -நவில்வோர் தமையும் மதிப்பதில்லை,
    செல்வம் ஏதும் இல்லாத
    -சோர்ந்த வறியோர் சொன்னாலே…! 

    லிமரைக்கூ…

    நல்ல சொல்லும் தேறாது
    நற்பொருளை ஆய்ந்தறிந்து சொன்னாலும்,
    ஏழைசொல் அரங்கம் ஏறாது…! 

    கிராமிய பாணியில்… 

    கொடிது கொடிது வறும கொடிது
    ஒலக வாழ்க்கயில வறும,
    கொடிது கொடிது மிகக் கொடிது…
    நல்லாப்படிச்சி எல்லாந் தெரிஞ்சி
    எதச்சொன்னாலும் எடுபடாது…
    பொல்லாத வறுமயில
    இல்லாதவன் எடுத்துச்சொன்னாலும்
    எதச் சொன்னாலும் எடுபடாது,
    ஏறாது சபயினிலே… 

    தெரிஞ்சிக்கோ,
    கொடிது கொடிது வறும கொடிது
    ஒலக வாழ்க்கயில வறும,
    கொடிது கொடிது மிகக் கொடிது…!

     

     

    Share
  • கொடுத்த அல்வா போதும்!

    சேசாத்திரி பாஸ்கர்

    தமிழிசை பற்றி எழுதியதற்காக சூர்யா தேவி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டு உள்ளார் . ஜாமீன் மறுக்கப்பட்டும் எஸ் வீ சேகரை காவல்துறை நெருங்க முடியவில்லை .ஒன்று தமிழக அரசு இதில் ஞாயம் பார்த்து காவல் துறையை பணித்து கைது செய்து இருக்கலாம் .பா ஜ க வினர் அரசியல் நேர்மையை கருதி அவரை சரண் அடைய சொல்லியிருக்கலாம் .குறைந்த பட்சம் சட்டத்தின் மாண்பினை மதித்து சேகராவது நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கலாம் . இதை எல்லாம் தாண்டி அவர் பழைய மோடியுடன் ஆன சந்திப்பை- நிகழ்வை கணினியில் உலவ விட்டு தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்டிகொண்டு சிறையை தவிர்க்க நினைப்பது அவரை மேலும் குற்றவாளியாக்குகிறது .நேற்று கூட ஒரு வழக்கில் பிரியா என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து இருக்கிறது . ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் சரண் அடைய வேண்டும் என்று ஒரு விதியை நீதிபதி சொல்லிருக்கிறார்.–கடைசி வரை அவர் சிறைக்கு செல்லாமல் ஏதேனும் ஒரு வழியில் தன்னை விடுவித்து கொள்ள நினைப்பது பெரிய தவறு . ஒரு பிரபல நடிகர் , முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இப்படி செய்வது அடுத்தவர்க்கு முன் உதாரணமாகி விடும் சட்டத்தின் முன் பிரியா , சூர்யா , சேகர் எல்லாம் சமம்.சட்டம் அதை செய்யாமல் அவர் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறது .ஒரு சாமான்யனுக்கு இதை எல்லாம் பார்த்தால் ஏன் கோபம் வராது ?இது பற்றி அவருக்கு மூன்று முறை மின்னஞ்சல் அனுப்பினேன் . இரண்டு முறை பதில் சொன்ன அவர் மூன்றாம் முறை பதில் அளிக்கவில்லை — சட்டத்திற்கு பயந்து அல்ல , மதிப்பளித்து அவர் சரண் ஆகியிருந்தால் அவர் மேல் இருக்கும் மதிப்பு அதிகமாகி இருக்கும் .அவர் கொடுத்த அல்வா போதும் .அல்லது அவர் தனது அலுவலக இருக்கைக்கு பின் உள்ள “When God is with me why there should be fear” என்ற வாசகத்தை எடுத்து விட்டால் குறைந்த பட்சம் என்னை போன்ற அரை குறைகளுக்கு பிரயோஜனமாக இருக்கும் .

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180529 Hrishikesh-lord of the senses -icam

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….!

    “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”….!

    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவரிஷி கேசனை வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….!
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் -கிரேசி எண்ணம்

    180528 – Goverdhana -lr -watercolour – A4

    ”தாமரை நீரிலையில் தத்தளிக்கும் தத்துவமாய்
    ’’ஆ’’மருவி அப்பன் அதைக்காக்க -சோமழையில்
    கோவர்த் தனமேந்தி கோன்இந்த்ரன் கர்வபங்கம்(இதுபோல்)
    நீவர்த்த மானம் நிகழ்த்து’’….கிரேசி மோகன்….!

    Share