-மேகலா இராமமூர்த்தி

திரு. கோபி சங்கரின் கேமரா வண்ணத்தில் உருவான படமிது. ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து, இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளர், தேர்வாளர் இருவரும் என் நன்றிக்கு உரியோர்.

மழலையைத் தொட்டுமகிழும் இன்பத்துக்கு இணையான இன்பம் மன்பதையில் யாங்கணுமே இல்லை எனலாம். அதன் குதலை மொழிகளோ பெற்றோர்க்குக் குழலினும் யாழினும் இனிமை பயப்பவை.

”மழலையர் இல்லாத மன்னுலகம்,
பூக்கள் இல்லாத சோலை!
கதிரவன் இல்லாத காலை!”

நேசக் கரங்களில் நிமிர்ந்து நிற்கும் இம்மழலையைப் பாசத்தோடு வாழ்த்த வருகின்றார்கள் கவிஞர்கள்!

”நஞ்சையும் அமுதாக்கிவிடும் பிஞ்சு மழலை; கெஞ்சினாலும் கிட்டாத வரமாய்க் கிடைத்த மழலையிடம் தஞ்சமடைவது சுகம்!” என்று குழந்தையின் வடிவில் காட்சிதரும் தெய்வத்தின் மாட்சியைப் போற்றுகிறார் திரு. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி.

தெய்வதரிசனம்!!

கொஞ்சும்பிஞ்சின் குமிழ்நகையில்
நெஞ்சம் அமிழ்ந்துநெகிழ்கிறது!!
வெஞ்சாமரமாய் வீசிடும் கரம்பட்டு
பஞ்சாமிருதருசியாய் இனிக்கிறது!!
அஞ்சாப்புப்படிச்ச நெனப்புலகிடந்து
கஞ்சாடையால கலங்குது மனசு!
வஞ்சிரம்போல வந்திங்குதித்திட்ட
வஞ்சிக்கொடிதான்இனியெம்வாழ்வு!
மிஞ்சி மிஞ்சிப்பணமிருந்தாலும்
இஞ்சு இஞ்சா மகிழ்ச்சி தருஞ்சொத்து
நஞ்சைக்கூடஅமுதமாக்கும் மருந்து –
மஞ்சக்கிழங்காப்பிறந்த சிசு தானே!!
கெஞ்சினாலும் கிட்டாத வரமெதுனா
தஞ்சம்மழலையிடம்அடைவதொன்றே!
எஞ்சியுள்ள எதிர்காலப்பலன் எதுனா
சஞ்சீவியாய் சிறப்பாய் வளர்ப்பதுவே!
ஆஞ்சு அறிஞ்சு உயர்ந்திருந்தாலும்
சாஞ்சுபோனது உலகில் இல்லறம்!
தேஞ்சு போன இகபர சுகங்களுக்குள்
மீஞ்சிருப்பது பிள்ளைப்பேறுமட்டும்!
ஈஞ்ச இலைகள் சித்திரை மாதத்தில்
காஞ்சு சருகாய் விழுவது இயற்கை!!
பாஞ்சு விழுகிற மழைத்துளிகளாக
ஓஞ்சவர்களுக்குஉயிரோ குழந்தை!!

*****

பிஞ்சுக்காலால் நெஞ்சில் உதைத்துப் பரவசப்படுத்தும் வஞ்சிக்கொடியை அன்பைக் குழைத்துக் கொஞ்சி வாழ்த்துகிறார் திரு. ரா.பார்த்தசாரதி.

பெண் பிள்ளை

பெண் மனம் மகிழ பெண்ணைப் பெற்றாள்
ஆண் மனம் மகிழ் ஆணைப் பெற்றாள்
ஏனோ உலகில் பாசத்தைப் பிள்ளைகளிடம் வைத்தான்
பெண்ணும், ஆணும் சமம் என உலகில் உணரவைத்தான்!
மகளின் பாசம் என்றும் தந்தையிடத்திலே
மகனின் பாசம் என்றும் தாயினிடத்திலே
இதுவே இன்றைய பாசவலையாய்த் தொடர்கிறது
தாய்தந்தையின் நேசக்கரங்கள் உதவுகிறது!
மகளே, உன் பிஞ்சுக் கால்களால் என்னை உதைக்கின்றாய்
என் நெஞ்சத்தையும், இதயத்தையும் நெகிழச்செய்கின்றாய்
உன் பிஞ்சுக் கால்கள் என் மார்பில் நடனமாடுதே
என் உள்ளம் மகிழ்ந்து திளைக்குதே!
களைப்புடன் நான் வரும்போது உன் கண் என்னைத் தேடுதே
உன்னை தூக்கச் சொல்லி என் கைகளை அழைக்கின்றதே
உன் கைகள் சாமரம் வீசி, என் களைப்பினை நீக்குதே
உன் கருவிழிக் கண்கள் என்னை அடிமையாக்குதே!
உன்னை உயரே தூக்கும்போது சிரித்து என்மேல் உமிழ்கின்றாய்
அதனை உமிழ்நீரை அமிர்தமாய் என்மேல் தெளிக்கின்றாய்
உன் தண்டைக் கால்களை என் முகத்தின் மேல் பதிக்கின்றாய்
என் வஞ்சிக் கொடியே, உன் பிஞ்சுக் காலால் மகிழ்வூட்டுகின்றாய்!
பெண் மகள் என்றும் செல்ல மகள் ஆவாள்
திருவிழாக் காலங்களில் மஹாலக்ஷ்மியாய் உலா வருவாள்
தந்தைக்கு என்றும் தாதியாய் இருந்திடுவாள்
தரணியிலே மகளே என்றும் போற்றப்படுவாள்!

***** 

”மண்ணில் கால்புதைய நீ ஓடும்போது அங்கே தெரிவது ஓவியமா? காவியமா? தாளால் (கால்) எனை உதைக்கும் கவிதையுனைக் கண்டபின்பு, தாளில் கவிவடிக்கும் எனதாசை போனதே!” என்று நெஞ்சு நெகிழ்கின்றார் திருமிகு. டி.திலகவதி.

உன் வாய்மொழி
வார்த்தைகள்…
என்ன..
புதுவித அகராதியா..?
அர்த்தங்கள்
இல்லையென்ற போதும்
அதை ரசிக்காமல்
இருக்க முடியவில்லை….
இனி
என் கண்ணீரைத்
துடைக்கக்
கைக்குட்டை
தேவையில்லை…
உன்
கைகளே போதும்…
அமைதி எனும்
அற்புதத்தீவைக்
கண்களில் கொண்டு அவதரித்தாயா…!
உன்னை அணுகும்
ஒவ்வொரு முறையும்
வாஞ்சையுடன்
பிடிபடுகிறது..
என் மனம்…
தொட்டுப் பேச
வார்த்தைகள்
இல்லை…
விட்டு விலக
மனமும் இல்லை…
உன் ஈறுகள்
பதித்து ஈரமாக…
ஏங்குது என் கன்னம்…
உன் இதழ் பதித்து
நீ பேச
தவிக்குது என் இதயம்…
மண்ணில் கால்
புதைய நீ ஓட…
அங்கே..
தெரிவது என்ன
காவியம் பேசும்
ஓவியமா..?
ஒரே ஒரு முறை
தான்..
உன்னைத் தொட்டு
தூக்கி இருப்பேன்…
பிறகு ஏன்..?
என் கரங்கள்
கவி எழுதத்
தயங்குகிறது…
ஓ….
நான் எழுதும்
கவியை விட
அரத்தமுள்ள கவிதையாய்
உன்னைக்
கண்டு கொண்டதா
என் கரங்கள்…!!!

*****

”கண்ணே உன் கனிமழலை கேட்டபின் காட்டுக்குயிலும் பாட்டை மறந்தது! பெண்ணைப் பெற்ற ஆண்களுக்கு மூன்று தாயடி! கொடுத்துவைத்தோர் எனைப்போல அவனியில் யாரடி?” என்று பெருமிதம் கொள்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

தந்தையின் பெருமிதம்

ஆண்டவன் அருளாலே நான் பெற்ற அஞ்சுகமே!
அப்பா என்றழைத்து ஏற்றம் தந்தவளே!
உன்னைச் சுமக்கையிலே சிந்தை மகிழுதடி!
அன்னை சுமந்ததற்கு உள்ளம் நன்றி சொல்லுதடி!
மகளாய் நீ பிறந்த பின்னே வாழ்க்கையின் அர்த்தம் புரிந்ததடி!
நீ எட்டி உதைக்கையிலே கர்வம் தொலையுதடி!
நீ முத்தம் தருகையிலே ஆயுள் கூடுதடி!
உன் மழலை கேட்ட பின்,
குயில் கூவ மறந்ததடி!
உன்னைத் தழுவி மகிழ்ந்த பின்னே,
மலரும் முள்ளாய்த் தோன்றுதடி!
நீ நாக்கைக் காட்டையிலே
உன் அன்னையின் தோற்றமடி!
உன் மனதின் ஆசையெல்லாம்
நிறைவேற்றும் உன் அன்புத் தந்தையடி!
நான் துவண்டு விழும் போது
உன் மடியே என் சொர்க்கமடி!
என்னருகில் நீ இருந்தால்!
மரணமும் மகிழ்ச்சியடி!
பெண்ணைப் பெற்ற ஆண்களுக்கு மூன்று தாயடி!
கொடுத்து வைத்தோர் எனைப் போல அவனியிலே யாரடி!
எனைப் பெற்ற தாய் முதலானாள்!
என் பெண்ணைப் பெற்ற மனையாளும் தாயானாள்!
நான் பெற்ற என் பெண்ணே அன்பில், நீ மூன்றில் முதலானாய்!

*****

”என் இரும்பெனும் இதயத்தை உன் மருந்துச் சிரிப்பால் நெகிழ்த்திய மலரே! நான் எத்தனை வெற்றிகள் பெறினும், பத்தரை மாற்றுத் தங்கமே உன்னிடம் மொத்தமாய்த் தோற்பதே இனிமை” என்று சந்தக் கவியில் சிந்தை தொடுகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

அரும்பு மலரே.. அருமை மகளே..

அரும்பு மலரே.. அருமை மகளே..
கரும்புச் சுவையே..கனிவாய் மொழியே.. நான்
விரும்பும் தமிழே.. விண்ணுறை மதியே.. என்
இரும்பினை யொத்த இதய மதனை.. நீ
மருந்தெனும் சிரிப்பால் இளக்கி விட்டாயே…!

தென்கடல் முத்தே.. தெவிட்டாத அமுதே
கண்ணே மணியே.. கனவுப் பூவே.. என்
விந்தை உலகே.. வியத்தகு அழகே.. நான்
முன்னர்ச் செய்த தவப்பயன் விளைவோ..
பொன்னே யுந்தன் தந்தை யானது…!

இதந்தரும் தென்றலே.. இனித்திடும் கவிதையே..
இதயத் துடிப்பே.. எந்தன் உயிரே.. நான்
எத்தனை எத்தனை வெற்றிகள் பெறினும்..
பத்தரை மாற்றுத் தங்கமே உன்னிடம்..
மொத்தமாய் பணிந்து தோற்பதே இனிமை…!

*****

பேசும் பொற்சித்திரமாம் கனிமழலையைப் பாராட்டிக் கற்கண்டுக் கவிவடித்த கவிஞர் குழாம் வாழியவே!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

பெண்ணினத்தால் இம் மண்ணுலகம் சிறக்கும்…!

திறத்தாலே உயர்வுற்று தாய்நாட்டுப் பற்றுடனே
……….தோன்றிய பெண்களால் நம்நாட்டுக்குப் பெருமை..!
இறத்தலுக்கு அஞ்சா தாங்கிலேய ஆதிக்கத்திற்கு
……….எதிராக ஆயுதமேந்திப் போராடியவருமதில் உண்டு..!
மறத்தியர்போல் வாழ்ந்த மறக்க முடியாதவரதில்
……….மங்கை வீர வேலுநாச்சியும் அஞ்சலையம்மாளும்..!
அறத்தின் செல்வியெனச் சுதந்திரப் போராட்டத்தில்
……….ஆயிரமாயிரம் வீராங்கனைகள் இவர் போலுண்டு..!

பெருமதிப்புக் கொண்டே அக்காலத்தில் கருத்துடன்
……….பெண்ணைக் கண்ணாகக் கருதியே காப்பாற்றினர்..!
கருவிலேயே பெண்சிசுவை அழிக்கின்ற அடாத
……….காரியத்தைக் காணுகின்ற கொடுமை நிகழ்கிறது..!
அருகிவரும் பாலினமாக இன்று பெண்ணினமே
……….சுருங்கிவிடுமோ என்கிற அச்சமும் எழுகின்றது..!
அருங்கலம்போல் கிடைக்கின்ற அரிய உயிரை
……….அரும்புமுன் அழிப்பது கொடும்பாவச் செயலன்றோ..!

பெண்ணாய்ப் பிறந்தாலே முழுதும் துன்பமெனப்
……….பெரிதே கவலையுறும் தாய்மார்கள் திருந்தவேணும்..!
அண்டத்தில் பிறவி ஆணாயினும் பெண்ணாயினும்
……….அதிலரியது பெண்ணென்பதை அறிய வேண்டும்..!
பெண்டாட்டி தாய்மகள் சகோதரியெனும் பலவாறு
……….பிறவியெடுக்கும் பிறப்புக்குப் பெண்ணே மூலமெனும்..
கண்ணோட்டம் வந்துவிட்டால் கண்ணீர் அகலும்
……….காலமாற்றமும் இதற்கு நிச்சயமாய் உதவிசெய்யும்..!

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதனினும் அரிது பெண் மகவாய்ப் பிறப்பது என்பதை இவ் வையம் அறிய வேணும். பெண்ணவள் அன்னையாய் மாறி உயிர்க்குலத்தை வளர்க்காவிட்டால் மண்ணுலகில் மன்னுயிர்கள் ஏது?

மறத்தோடு நம் மண் காத்த வீரமங்கையரை மறக்கவியலுமோ? பெண் குழந்தைகளை அருளின்றிக் கருவிலே கொல்லாமல், திருவெனக் காப்போம்! என நன்மொழி பகரும் இக்கவிதையின் படைப்பாளி பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 163-இன் முடிவுகள்

  1. இந்த வாரத்தின் (04-06-18 – 09-06-18) சிறந்த கவிதையாகவும், கவிஞராகவும் தேர்ந்தெடுத்த நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், கவிதைக்குப் படத்தைக் கொடுத்த கோபிசங்கருக்கும், படக்குழுமத்தின் ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பனுக்கும், ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பெண்குழந்தைக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலே, கவி புனைந்த ஏனைய கவிஞர்களுக்கும் என் அகமகிழ்ந்த பாராட்டுக்கள்..

    நடுவர் திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்கள்..

    “மறத்தோடு நம் மண் காத்த வீரமங்கையரை மறக்கவியலுமோ? பெண் குழந்தைகளை அருளின்றிக் கருவிலே கொல்லாமல், திருவெனக் காப்போம்!”

    என்கிற வாழ்த்துரையை மீண்டும் நினைவு கூறி, நன்றி சொல்கிறேன்.

    அன்புடன் பெருவை பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *